privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

-

திவாலான நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து மீட்டிருப்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டத்தில் வேலை, வருமானம், சேமிப்பு, வாழ்க்கை அத்தனையும் இழந்த மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் அமெரிக்க அரசு வழங்கவில்லை. இந்தப் பொருளாதாரச் சுனாமியில் சிக்குண்ட மக்களில் பலர் தற்கொலையின் மூலம் ‘விடுதலையை’த் தேடிக்கொள்கிறார்கள்.

அக்டோபர் நான்காம் தேதி லாஸ் ஏஞ்செல்சில் வாழ்ந்து வந்த கார்த்திக் ராஜாராம் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் தனது சேமிப்பு முழுமையும் இழந்து, மனமொடிந்து மனைவி, மாமியார், மூன்று மகன்களைச் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.   அமெரிக்காவெங்கும் கடந்த சில மாதங்களில் இத்தகைய தற்கொலைகள் நிறைய நடந்திருக்கின்றன. பங்குச் சந்தையில் குறியீட்டு எண் ஏறினால் அதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் ஊடகங்கள் எவையும் முதலாளிகள் நடத்தியிருக்கும் இந்தக் கொலைகள் குறித்து புலனாய்வு செய்வதில்லை.

அமெரிக்காவின் சன்னிதியில் திவாலான மக்கள், தங்களைப் பலியிட்டுக்கொள்ளும் இந்தப் பலிதான நிகழ்ச்சி அமெரிக்காவோடு மட்டும் முடிந்து விடாமல் கடல் கடந்து இந்தியாவையும் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் 21,000 புள்ளிகளைத் தொட்டவுடன் முதலாளித்துவ வெறிகொண்ட இந்தியா டுடே முதலான பத்திரிகைகளெல்லாம் அதை மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடின. குமுதம், விகடன் தொடங்கி எல்லாக் குப்பைகளும் எம்.பி.ஏ படித்த, படிக்காத மேதைகளை வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து பாடம் நடத்தின.

பங்குகளின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இருவரில் ஒருவர் நட்டமடைய மற்றொருவர் இலாபமடைகிறார் என்ற ஆரம்ப வகுப்பு அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடுத்தர வர்க்கம் இந்தச் சூதாட்டத்தில் இறக்கிவிடப்பட்டது. எல்லோரும் இலாபமடைய வேண்டுமானால், அந்த இலாபத்தை அளித்து நட்டமடைவதற்கு ஆட்கள் வேண்டாமா? ஆனால் இலாபமடையமுடியும் என்று நம்பவைப்பதற்கு முதலாளிகளும், அன்னிய நிதி நிறுவனங்களும் பெரும் முதலீட்டை வைத்து சூதாடின. ஏறிய பங்குகளின் விலையைப் பார்த்து வியப்புடன் பலரும் பங்குகளை வாங்கிப் போட்டனர். எல்லாம் சில மாதங்கள்தான்.

சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த இரண்டு செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம். இந்த இரண்டினூடாக மற்றவர்களின் கதியைப் புரிந்து கொள்ளலாம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த முப்பது வயது அருள்ராஜ் பதினெட்டு மாதங்களுக்கு முன்புதான் ரேவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் தனக்கொரு வாழ்வைத் தேடிக்கொண்டவர் முதலில்  கணினி மென்பொருள் துறையில் தொழில் செய்து அதில் நட்டமடைகிறார். அதிலிருந்து மீள பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு நண்பர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். உடனே வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்கிறார். வங்கி நடைமுறைகளால் கடன் கிடைப்பது தாமதமாவதைப் பொறுக்க முடியாமல் கந்து வட்டி நபர்களிடம் பணம் பெறுகிறார். பெற்ற பணத்தை அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது குறியீட்டு எண் 14,000த்தில் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு அந்த எண் 10,000த்தைத் தொட்டபோது அருள்ராஜ் பலத்த நட்டமடைகிறார். கந்து வட்டிக்காரர்கள் அவரைப் பணம் கொடுக்குமாறு நெருக்குகின்றனர். வேறு வழியில்லாமல் 22.10.08 அன்று  சென்னை எழும்பூரில் ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து  வாழ்வை முடித்துக் கொள்கிறார். மரணக்குறிப்பில் தான் பங்குச் சந்தையில் மீளவே முடியாத அளவுக்கு இழந்திருப்பதனால் இந்த விபரீதமான முடிவுக்கு வந்ததாக எழுதியிருக்கிறார்.

இதற்கு அடுத்த நாள் மும்பை இரானிவாடிப் பகுதியைச் சேர்ந்த 34 வயது பாரக் டானா, தனது எட்டு மாதக் கர்ப்பிணி மனைவி நேஹாவைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். கர்ப்பிணி மனைவியையே கொல்லுமளவு விரக்தியும், வெறுப்பும் அடைந்திருப்பதாலோ என்னமோ அவர் மரணக் குறிப்பு எதையும் எழுதவில்லை. போலீசாரின் விசாரணையில் அவரது உறவினர்களும், நண்பர்களும் அவர் பங்குச் சந்தையில் பெரும் பணத்தை இழந்ததைத் தெரிவிக்கின்றனர்.

அருள்ராஜ் இறந்த அதே செவ்வாய்க் கிழமையன்று மும்பையில் 26 வயது ஜெயந்த சஹாவும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். காரணம் பங்குச் சந்தை இழப்புதான் என்றாலும் அது வெளிப்பட்ட விதம் யாரும் எதிர்பார்க்க முடியாத ஒன்று. அமெரிக்க நோயால் தாக்கப்பட்ட மும்பை பங்குச் சந்தையில் இந்த இளைஞரும் இழந்திருக்கிறார். அதை ஈடுகட்ட அன்று தனது டீமாட் கணக்கிலிருந்து 700 பங்குகளை வாங்குவதற்கு ஆன்லைனில் உத்தரவு கொடுக்கிறார். பதட்டத்தில் 700 என்பதை 7000 என்று ஒரு சைபரை அதிகம் போட்டு விடுகிறார். இதனால் பதினெட்டு இலட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டி வருகிறது. தனது தவறை அவர் பின்னர் உணர்ந்தாலும் காலம் கடந்து விட்ட படியால் வேறுவழியின்றி அறையைப் பூட்டிக் கொண்டு தூக்கு மாட்டிக் கொள்கிறார். வணிகவியலில் முதுகலை பட்டம் படித்திருக்கும் ஜெயந்த சஹாவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து வாழ்வதுதான் தொழில்.

வங்கக் கடற்கரையிலிருக்கும் தூத்துக்குடியிலும், அரபிக் கடலோரமிருக்கும் மும்பையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு நான்கு உயிர்கள் பலியாயிருக்கின்றன. அட்லாண்டிக் கடல் தாண்டி வந்து தாக்கியிருக்கும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தால் இன்னும் எத்தனை பேர் பலியாவார்கள்?

  1. கொடுமைதான்.. முதலாளித்துவம் சரியான வழி அல்ல என அமெரிக்கர்கள் உணர வேண்டும்

  2. When people wish to earn money in huge quantity and with out a limit they prefer any extreme steps. Some years back a stock broker swindled money in Mumbai and I forgot his name, but I think it is some Harshad Mehta . when people don’t want to work and earn quick money, they steal the ideas from others and patent them on their name. I feel the Indian or Tamilian verb” Live let others live” is the best way for us. When in the stock market earns high profit they don’t reveal the money they earned and profit they earned. But in loss they cry and commits suicide. If the culture of Amerca changes in to the policy of live and let others live, will improve the earth.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க