
ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே அவை குறித்து ஒரு நீண்ட பொதுவான விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது. இது ஒரு சிக்கலான தத்துவப் பிரச்சினையாக இருப்பதால் இலக்கியத்தை மேம்போக்காக சொறிபவர்கள் மேலே படிக்க வேண்டாமென்று அன்புடன் ஆணையிடுகிறேன். லுக்கி லக், பாரு நிவேதிதா போன்ற பதிவுலகின் கஞ்சா காக்டெயில் வழிந்தோடும் வஸ்துக்களை வெறியுடன் குடிக்கும் அடிமைகள் தயவு செய்து கன்ட்ரோல் பிளஸ் டபிள்யு அழுத்தி டாப்பை மூடிவிட்டு சென்று விடுங்கள். இதையே எத்தனை தடவை எழுதுவது, சலிப்பாக இருக்கிறது. ஒரு வேளை நான் எழுத்தை வெறுத்துவிட்டு ரஜினியுடன் இமயமலை சென்று செட்டிலாகிவிட்டேன் என்றால் அதற்கு இதுவே காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது.
அதே நேரம் வார்த்தைகளால் விளங்கிக் கொள்ள முடியாத, சூக்குமம் சூல் கொண்டுள்ள, குழப்பத்திற்கும் – தெளிவிற்கும் நடுவே நாட்டியமாடும் நன்னெறிக் கருத்துக்களை அபிநயிக்கும் பதிவுகளை பொறுமையாக, விடாப்பிடியாக, தலைவலியோடு, தம்மத்தின் பெருமிதத்தோடு படிக்கும் வாசகர்கள் நிமிர்ந்த நடையுடன் மேலே படிப்பதற்கு தடையொன்றும் இல்லை.
ஊட்டி சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்தபின் ஆயிரக்கணக்கனோர் இதுவரை வருவதாக மின்னஞ்சல், தொலைபெசி மூலம் தெரிவித்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா முதல் ஜப்பான் வரை என்னெழுத்துக்களை விடாது படிப்பவர்கள் அவர்களில் அடக்கம். இருப்பினும் அவர்களில் தகுதியானவர்களை பரிசீலித்து ஐம்பது பேரை மட்டுமே நான் அழைத்திருக்கிறேன். அதற்கு மேல் குருகுலத்தில் தங்க வழியில்லை என்பதால் இந்த முடிவு. சாமியார் மடமென்றாலும் அங்கே பன்றிக்குட்டிகள் போல வதவதவென்று யாரும் தங்க முடியாது. சிங்கிளாக காட்டையாளும் சிங்கங்கள் போன்றோரே எங்களுக்குத் தேவை. மற்றவர்கள் ஏமாற வேண்டாம். சந்திப்பு முடிந்து எப்படியும் ஒரு பத்து பதிவு அதைப் பற்றி இருக்குமென்பதால் யாரும் மிஸ் செய்ததாக வருந்தத் தேவையில்லை.
தமிழகம் மட்டுமல்ல அகில உலகமே கண்டிராத இந்த காப்பியச் சிறப்புள்ள இலக்கியச் சந்திப்பிற்கு வருவதாகச் சொன்ன சிங்கங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் உறுதி செய்ய வேண்டும். ஏதோ தொலைபேசி, மின்னஞ்சலில் தெரிவித்து விட்டோம் என்று அசால்ட்டாக இருத்தல் கூடாது. உங்களுக்காக குருகுலத்தில் பல ஏற்பாடுகள், கொசுவத்தி சுருள் வாங்குதல், தலையணை உறை துவைத்தல், நாற்காலிகளை துடைத்தல், தயிர் சாதத்திற்கு பால் சேகரித்தல், நொறுக்குத் தீனியாக ஊட்டி பொறையை வாங்கிவைத்தல் முதலானவற்றை பெரும் சிரமத்துக்கிடையில் செய்ய வேண்டியிருப்பதை சிங்கங்கள் உணரவேண்டும்.
வருவதாகச் சொல்லிவிட்டு வராமலிருந்தால் நீங்கள் மிகப்பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமென்பதை ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறேன். மேற்கத்திய நாடுகளில் இப்படி நடந்து கொள்வதை மிகவும் இழிவாக கருதுகிறார்கள். இந்தியாவில் இத்தகைய நாகரீகம் என்னைப் போன்ற ஒரு சில உன்னத இலக்கியவாதிகளால் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. அந்த சத்திய ஆவேசத்திலிருந்து இதை எழுதுகிறேன். இதையும் மீறி நீங்கள் வராமலிருந்தால் அப்புறம் பேச்சு பேச்சாக இருக்காது. மேலும் அதன் பிறகு நீங்கள் எந்த இலக்கிய சந்திப்புகளிலும் அழைக்கப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றிய விவரங்கள் புகைப்படத்தோடு எல்லா இலக்கிய பத்திரிகைகள், நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு கருப்பு பட்டியிலில் ரவுடி போல சேர்க்கப்படுவீர்கள்.
அப்படி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் உங்கள் இலக்கிய வாழ்க்கை அதோகதிதான். இப்போது கூட அப்படி பழைய கருப்புப் பட்டியலிலிருந்து சிலர் ஊட்டிக்கு வரவா என்று நைசாக கேட்டிருப்பது எனது கவனத்திற்கு வராமலில்லை. என் வாழ்வில் ஒருவன் ஒருமுறை என்னிடம் மாட்டிக் கொண்டால் அந்த நினைப்பு எப்போதும் அழியாது. உலகமே அழிந்தாலும் எனது மென்பொருள் மெமரி சர்வரை ஆண்டவனே வந்தாலும் பிடுங்க முடியாது. ஆகவே கருப்பு ரவுடிகள் ஒழுங்கு மரியாதையாக அடக்க ஒடுக்கமாக கிடப்பது ஒன்றே நல்லது. இதற்கு மேலும் நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். என்ன செய்வேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் உண்மை என்பதையும் சேர்த்து இங்கே வன்மையாக எச்சரிக்கிறேன்.
ஏதோ விஜய் பட காட்சி போல இலக்கிய கூட்டங்களை கருதும் சில்லறை மனநிலை தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. கழுதைக்கு கற்பூற வாசனை தெரியாது என்றாலும் அந்தக் கழுதைகள் எங்களைப் போன்ற கற்பூரங்களையே நாடி வருகின்றன என்பது ஆச்சரியமான ஒன்று. காசிக்குப் போனால் பாவம் போகும் போல சுயமோகனை தரிசித்தால் அறிவு ஜீவியாகலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ? இலக்கியம்தான் வாழ்வின் முக்கியமான அங்கம். அத்தகைய தவங்களை யாகம் போல மிகுந்த எத்தனிப்புகளுடன் செய்கிறோம். யாகத்திற்கு முடிந்தால் போகலாம் என்ற மனநிலை இருப்பதிலேயே மிகவும் ஆபாசமானது.
இலக்கிய வேள்வியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் நிறைய இழக்கவும், உழைக்கவும் தயாராக வேண்டும். சென்னை டீக்கடைகளில் ஏனோ தானோவென்று சாயா போடும் மாஸ்டர்களின் உழைப்பல்ல இது. தஞ்சை வயல்களில் குனிந்த இடுப்போடு நாத்து நடும் பெண்களின் ஜாலியான வேலையல்ல இது. நமது தலையில் உள்ள மூளையின் மெல்லிய நரம்புகளை பின்னிப் பினைத்துக் கொண்டு காலவெளியில் கருத்துக்களால் நாட்டியமாடுவது என்பது என்ன சாதாரணமா? ஆகவே இத்தகைய மனிதகுலம் கண்டிராத பேருழைப்புக்கு வணங்காத ஜன்மங்கள் தயவு செய்து எங்களிடமிருந்து விலகிப் போங்கள். இல்லையேல் இனியும் நாங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் காந்தியை போல அமைதியாக வீற்றிருக்க முடியாது. நான்கூட இலக்கிய வேள்விக்காக எனது பி.எஸ்.என்.எல் வேலையை தூக்கி எறிந்திருக்கிறேன். எனது தியாகத்தோடு மற்றவர்கள் நெருங்க முடியாது என்றாலும் அதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நீங்களும் செய்ய வேண்டும் என்று நான் கோரினால் அது பாவமா? புண்ணியமே செய்திராத புண்ணியவான்களே பதில் சொல்லுங்கள்!
இந்தக் கூட்டத்திற்காக எனது நண்பர்கள் அமெரிக்கா முதல் ஆலங்குடி வரை பலநாட்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஊட்டி குருகுலத்தில் மூன்று நாட்கள் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்துவது என்றால் அது லேசானது அல்ல. எவ்வளவு வேலைகள்! நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. செம்மொழி மாநாட்டுக்கு பணபலமும், ஆள்பலமும் இருந்தன. எங்களுக்கு பணபலம் மட்டுமே இருக்கிறது. அந்தப் பின்னணியில் இந்த கூட்டத்திற்காக எனது நண்பர்கள் படும் உழைப்பை கேலி செய்யும் செயலை நான் ஒருபோதும் மன்னிக் மாட்டேன். அனுமதிக்கவும் மாட்டேன்.
இந்தக் கூட்டத்திற்காக நான் விதித்திருக்கும் நிபந்தனைகள் பற்றி பாருவின் சில்லறை அடியாட்படை ட்விட்டரிலும், கூகிள் பஸ்ஸிலும் ஒரு விசமப் பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்த உலகம் கண்ட எதனையும் ஒரு அடியில் கவிழ்த்துப் போடும் என்னிடமே இந்த வாண்டுகள் அதுவும் அரைக்கால் டிராயரை மட்டும் அவிழ்த்து போட்டுவிட்டு அதையே கலகம் என்று ஊதிப்பெருக்கும் மொக்கைகள் விளையாடுகின்றன. வார்த்தைகளின் சித்தனான என்னிடமே டிவிட்டரின் 140 எழுத்துகளில் விளையாடுகிறீர்களா? நொடிக்கு நூறு எழுத்துக்களை தும்மும் என்னிடமே மோதுகிறீர்களா? எனினும் இதையெல்லாம் நிறைய பார்த்துவிட்டேன், பிழைத்துப் போங்கள்.
இந்த சந்திப்பிற்கு குடிக்காமல் இருங்கள் என்று சொன்னதினாலேயே சிலர் எங்களை ஆச்சார ஒழுக்கர்கள் போல சித்தரிக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காக நானும் எல்லா வாதங்களையும் – அதாவது பிழைப்புவாதம், காரியவாதம், மிதவாதம், தீவிரவாதம், மதவாதம், சாதிவாதம், பொறுக்கிவாதம், கிரிமினல்வாதம், சதிவாதம், நயவஞ்சக வாதம், நரிவாதம் முதலானவற்றை செய்திருக்கிறேன். அத்தனையும் இலக்கியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுக்காக. இதை நான் மட்டுமே தனியொருவனாக நெடுங்காலம் செய்து வந்திருக்கிறேன் என்பதால் நானும் ரவுடிதான், ஜீப்பில் ஏறியவன்தான் என்பதை அந்த வாண்டுக் கலக குட்டிகள் உணரவேண்டும்.
ஆனால் ஒரு இலக்கிய சந்திப்பில் வாழ்வின் மற்ற கலக நடவடிக்கைகளை இணைப்பது அபத்தத்திலும் அபத்தம். குற்றாலத்தில் எனக்குத் தெரிந்த சில இலக்கியவாதிகள் நடத்திய கூட்டங்கள் ஏன் தோல்வியுற்றன? குடி ஒன்றே காரணம். குடிக்காத போது நமது கருத்து உண்மையென்றாலும் எதிரில் இருப்பவரின் முஷ்டிகளை நினைவில் கொண்டு கொஞ்சம் நாசுக்காக பேசுவது சிற்றிதழ் மரபு. ஆனால் குடிக்கும் போது இந்த சபை நாகரீகம் குலைந்து உண்மையான கருத்துக்கள் வெளிவருகின்றன. உண்மை வெளிவந்ததும் உடல் பலம் எழுகிறது.
வார்தைகளின் மயக்கமான இலக்கியத்தை மப்பு பார்ட்டிகள் லௌகீக விசயமாக மாற்றி பார்ப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? நேர்பேச்சில் என்னிடம் குழைபவர்கள் கூட குடிப்பேச்சில் உண்மையை போட்டு உடைத்தால் எப்படி தாங்கமுடியும்? ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்’ என்று பொழுது போக்கும் இலக்கியவாதிகளை திட்டாமல் வீடு, நாடு, காடு, ஆடு, மாடு என அனைத்திலும் இலக்கியத்தையே சுவாசித்து வாழும் என்னையல்லவா திட்டுகிறார்கள்? இதுதான் குற்றால சந்திப்புக்களின் தோல்வி. அதிலிருந்து பெற்ற அனுபவத்திலிருந்தே குடியை நிராகரிக்க வேண்டுமென்று கூறுகிறேன்.
நானும் கூட குடித்திருக்கிறேன். சுந்தர ராமசாமி இறந்த போது இழப்பின் துக்கத்தை கொண்டாட்டமாக மாற்ற எத்தனித்து குடித்தேன். எத்தனை பெக் அடித்தும் போதை என்னிடம் எழவில்லை. வார்த்தைகளின் பின்னிப் பிணைந்த ராக, ஆலாபனைகளில் களித்திருக்கும் என் மூளையின் மடல்களை இந்த குடிபோதை நெருங்க முடியுமா? எனினும் எல்லோரும் என்னைப் போன்று இல்லை என்பதாலேயே குடிக்குத் தடை வேண்டும் என்கிறேன். தாமிரபரணி ஆற்றின் நெல் சோற்றை உண்டு நல் கவிதைகளாக வெளியிட்ட அண்ணாச்சி விக்கிரமாதித்யன் எத்தனை கூட்டங்களை கலைத்திருக்கிறார்? மற்றவர்களைக்கூட சமாளிக்கலாம். ஆனால் அண்ணாச்சி வந்தால் விஷ்ணுபுரத்து பரப்பிரம்மம் கூட ஓடவேண்டியதுதான். ஒருவேளை ஊட்டி சந்திப்பிற்கு அண்ணாச்சி வந்து விட்டால் என்ன ஆகும் என்று யோசித்தே இந்த தடையை மிகுந்த வலியுடன் அமல்படுத்துகிறேன்.
பதிவுலகில் சில ஷோக்குப் பேர்வழிகள் டீக்கடைக்கு செல்வது போல நட்சத்திர விடுதிகளில் குடிப்பதைப்பற்றி ஏதோ உலக சாதனை போல எழுதுகிறார்கள். சீமைச் சாராயத்தை குடித்த இவர்கள் எவரும் கனவிலும், நனவிலும் கலந்துகட்டி அடிக்கும் பெருவாழ்வு தருணங்களை கண்டவரில்லை. கொண்டவருமில்லை. ஆகவேதான் சாராயத்தை உண்டியாக்கி மண்டூ போல தெண்டமாய் கண்டதையும் விண்டு வைக்கிறார்கள். மதிகெட்டவர்களின் கூட்டம் ஊட்டிக்கு வந்து காரியத்தை கெடுத்து விடக்கூடாதல்லவா? அதனால்தான் இது என்பதை என்னுள் துடிக்கும் சத்திய ஆவேசத்தை தரிசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
குடிப்பவர்களை தடுத்துவிட்டாலும், குடிக்காமல் வந்து காரியத்தை கெடுப்பவர்களையும் பற்றி நான் நெடுங்காலமாய் யோசித்து வந்திருக்கிறேன். நான் மையமாக வீற்றிருக்கும் இலக்கிய கொலுவரங்கில் ஒரு மொக்கை நபர் அவையடக்கமிழந்தால் என்ன நடக்கும்? சான்றாக, பாரதீய ஆன்மீகத்தின் குகைக்குள் அவையோரை சிரமப்பட்டு கை கூட்டிச் செல்லும் போது ஆன்மீகம் என்று சொன்னதை வைத்து நீயும் இந்துத்வாவா என்று மலிவாகக் கேட்டால் என்ன செய்வது? திரும்பவும் முதல்ல இருந்தா ஆரம்பிக்க முடியும்? அப்படியே பொறுமையாக விளக்கினாலும் எனது விஷ்ணுபரத்தை ஆர்.எஸ்.எஸ் விற்பனை செய்கிறதே என்று கேட்டால் என்ன செய்வது? ஒரு வாசிப்பின் பரந்துபட்ட தளங்களை அறியாத சில்லுண்டிகளை என்ன பேசியும் புரிய வைத்துவிட முடியாதே? அதற்குத்தான் கீழ்க்கண்ட நிபந்தனைகளை இலக்கியத்தின் உன்னதத்தை தனியொருவனாக காப்பாற்றும் சுமையின் பொருட்டு உங்கள் முன்வைக்கின்றேன்.
இலக்கிய சந்திப்பில் பங்கு பெறுவோர் கடைபிடித்தே ஆகவேண்டிய நிபந்தனைகள்:
1. வருபவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். தமிழ் சினிமாக்களில் பாட்டு வரும்போது சகிக்கவில்லை என்று தம்மடிக்க போவது போல இங்கே நடப்பதற்கு அனுமதி இல்லை. முக்கியமாக குருகுலத்திற்குள் புகை பிடிக்க அனுமதி இல்லை. ஊட்டி குளிருக்கு இதமாக இருக்குமென்ற காரணத்திற்காக சிகரெட்டை நாடாதீர்கள். இலக்கியபுகை தராததையா நிக்கோடின் புகை தரப்போகிறது?
அடுத்து சிறுநீர் கழிக்க வேண்டிகூட இடையில் எழுந்து போக அனுமதி இல்லை. ஊட்டி குளிருக்கு அடிக்கடி இந்த உபத்திரம் மூத்திரத்தால் வருமென்றாலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை குறைத்துக் கொண்டால் இது பெரிய பிரச்சினை இல்லை. அமர்வுகள் ஆரம்பிக்கும் போது அனைவரும் அரங்கினுள் இருக்க வேண்டும். தாமதமாக வருபவர்கள் உடனடியாக குருகுலத்தை விட்டு நீக்கப்படுவார்கள். எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, தரம்தான் முக்கியம். பன்றிகளல்ல, சிங்கங்களே வேண்டும். அதே நேரம் பல்லும், நகமும் பிடுங்கப்பட்ட சிங்கங்களாக இருத்தல் நலம்.
2. தனிப்பட்ட விமர்சனங்களும், கடுமையான நேரடி விமரிசனங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எது தனிப்பட்ட விமரிசனம், எது கடுமையான விமரிசனம் என்று தெரிய நினைப்போர் பத்தாயிரம் ரூபாய் டி.டி அல்லது ஆன்லைனில் செலுத்தினால் அதற்கான யூசர் மேனுவல் அனுப்பித் தரப்படும். எடுத்துக் காட்டாக ஊழல் மந்திரி டத்தோ சாமிவேலு பணத்தில் நான் மலேசியா சென்றதை யாராவது கேட்டால் அது தனிப்பட்ட மற்றும் கடும் விமரிசனமாக கருதப்படும். நாம் பேச இருப்பது சங்க காலப்பாடல்கள் குறித்து. அதை விடுத்து என் சொந்த வாழ்க்கை சமாச்சாங்களை பேசுவது தடைசெய்யப்படும். இதற்காகவே எனது அமெரிக்க நண்பர் வார்லஸ் சில வாட்டசாட்டமான வெள்ளைக்கார பவுன்சர்களை அவரது செலவில் அழைத்து வருகிறார். அவர்கள் சண்டை போட்ட காட்சிகளை டென் சானலில் பார்க்கலாம். பார்த்து விட்டு வந்தால் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
ஒருவேளை கூட்டத்தில் விமரிசனம் பேசிவிட்டு பவுன்சர்களால் வெளியேற்றப்பட்டு அரங்கின் வெளியே சென்று பேசிவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். குருகுலம் முழுவதும் சி.சி.டி.வி சர்வைவலன்ஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. என்னையறியாமல் ஒரு எழுத்து கூட நாவிலிருந்து விழாது. இதற்கான தொழில் நுட்ப பணிகளை என்னுடைய ரசிகர் அரவிந்தன், பெங்களூர் இன்போசிஸ் செய்கிறார்.
3. சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக் கூடாது. இது குறித்து மேலே விரிவாக பேசியிருக்கிறேன். ஒருவேளை திருட்டுத்தனமாக குடிக்கலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். இதற்காக எனது சென்னை நண்பரும் போலீசு அதிகாரியுமான கயவாரம் வருகிறார். ஒவ்வொரு அமர்வின் போதும் என்னைத் தவிர்த்த அனைவரும் இவர் முன் ஊதிக்காட்ட வேண்டும். ஒரு மில்லி அடித்தால் கூட இவரது மூக்கை ஏமாற்ற முடியாது.
4. விவாதங்களின் போது மையப்பொருளுக்கு வெளியே சென்று பேசுவதற்கு அனுமதி இல்லை. எது மையம், எது வெளியே என்பது என்னால் தீர்மானிக்கப்படும். எனது படைப்புக்களை பலமுறை உருப்போட்டு வாசித்திருப்பவர்கள் இந்த மைய, எல்லை வரைபடங்களை சுலபமாக அறிவார்கள். அறியாதவர்கள் அடக்கமாக இருக்க வேண்டும். மீறினால் பவுன்சர்கள் அடக்குவார்கள். சங்ககாலப் பாடல்கள் விவாதத்தின் போது இது தொடர்பாக கோழிப்பண்ணை பொ.மாலுசாமி எனக்கு உதவுவார். அவர் உதவுவதா, கூடாதா என்பதையும் நான் தீர்மானிப்பேன்.
5. நான் உறுதி செய்தவர்களை தவிர வேறு வெளியாட்கள் வர அனுமதி இல்லை. அதே போல அனுமதி பெற்று வருபவர்கள் கூட வேறு யாரையும் கூட்டி வரக்கூடாது. அவர்களது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாரையும் அழைத்துவர அனுமதி இல்லை. ஒரு வேளை அந்தக் குழந்தை எனது இலக்கிய தேர்வில் வெற்றிபெறும் பட்சத்தில் அதை நானே முன் கூட்டி தெரிவிக்கும் பட்சத்தில் அழைத்து வரலாம். இலக்கியத் தகுதிக்கு பால், வயது, இனம் வேறுபாடு இல்லை. இந்த விதி எனது குடும்பத்திற்கு மட்டும் பொருந்தாது. கம்பன் வீட்டுத்தறியும் கவிபாடும், இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசையமைக்கும் என்பதுபோல சுயமோகன் வீட்டு நாய் கூட இலக்கியம் பேசும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.
வெளியாட்கள் யாரும் வருகிறார்களா என்பதை டெல்லியிலிருந்து வரும் எனது நண்பரும் மத்திய உளவுத்துறை அதிகாரியுமான பங்கட் சாமிநாதன் கண்காணிப்பார். இவரது திறமையை இங்குள்ளவர்களை விட பாக்கின் ஐ.எஸ்.ஐ நன்கு அறியும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
6. அமர்வு நடக்கும் மூன்று நாட்களிலும் வெளியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அதை அனுமதித்தால் மது குடிப்பதை தடுக்கமுடியாது. மேலும் அமர்வு இல்லாத நேரங்களில் இடைவிடாமல் சாப்பாட்டு நேரத்திலும் கூட நான் பேசும் சொல்லாடல்களை கேட்டுப் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த நிபந்தனையை விதித்திருக்கிறேன்.
7. அமர்வு நடக்கும் நேரங்களில் அனைவருக்கும் சைவச்சாப்பாடுதான் வழங்கப்படும். சிக்கன் 65, சில்லி பீஃப், ஜிஞ்சர் மட்டன் என்ற நினைவுகளை நாக்கில் வைத்து வாழும் ருசியர்கள் இந்த இலக்கியக் கூட்டத்திற்கு வரத் தேவையில்லை. குருகுலம் முற்றிலும் சைவச்சாப்பாட்டையே கடைபிடிக்கும் என்பதையும் நீங்கள் ஏற்க வேண்டும். முற்றும் துறந்தவன் சைவத்தை மட்டும் ஏன் துறக்கவில்லை என்று கேட்பவர்கள் எங்களுக்கு தேவையில்லை.
இலக்கியம் என்று வந்துவிட்டால் ஒரு மூன்று நாட்களுக்கு நாக்கை கட்டிப் போட்டால் என்ன குடிமுழுகும்? மேலும் அசைவ உணவு உண்டு, அசுர குணத்தை பெற்று விவாதத்தில் என்னை மீறி சென்று விட்டால் என்ன செய்வது? தயிர் சாதமும், சாம்பார் வடையும் உண்பவனே எனது பேச்சை எதிர் கேள்வியின்றி பின் தொடருவான். நீங்கள் குருகுலத்தை விட்டு வெளியே சென்றால் எனது உளவாளிகள் அசைவம் சாப்பிடுகீறீர்களா என்று பின்தொடர்வார்கள். எச்சரிக்கை.
நிகழ்ச்சி விவரங்கள்:
வெள்ளியன்று காலை எனது நண்பர் வார்லஸ் ஏசுநாதர் அப்பம் பங்கிட்ட கதையை மெய்யியலாக பேசுவார். அதுவும் அரை மணிநேரம் மட்டுமே அனுமதி. பின்னர் நீங்கள் அந்த அப்பம் எப்படி சுட்டார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.
இரண்டாவது அமர்வாக நான் பேசுகிறேன். இந்த சந்திப்பின் மையமான நிகழ்வாக இது இருக்கும். பாரத தத்துவ மரபை பற்றி நேர அளவுகோல் இல்லாமல் பேசுவேன். நசிகேதனது உயிர் தேடல் முதல் நல்லி சில்க்ஸ் குப்புசாமி வரைக்கும் உள்ள தொன்மத்தின் தொடர் இழையை எவரும் வியப்பூட்டும் வண்ணம் பேசுவேன். அது குறித்து என்னளவு யாருக்கும் தெரியாது என்பதால் நிறைய கேள்விகள் வராது. வந்தாலும் அந்தக் கேள்விகளின் பாமரத்தனத்தை புரிய வைத்து விட்டால் பதிலுக்கு தேவையுமில்லை.
மதிய அமர்வில் இந்திய சிந்தனை மரபு குறித்து கேள்விகள் என்னிடம் கேட்கலாம். மாலை ஐந்து மணி வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன். எனது பதில்கள் மணிக்கணக்கில் இருக்குமென்பதால் கேள்விகள் விநாடிக்கணக்கில் மட்டுமே கேட்கவேண்டும். என்னைத்தவிர வேறுயாரும் பதில் சொல்ல முன்வரமாட்டார்கள் என்பதால் எனக்குச் சுமை அதிகம் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பட்டியில் அடைபட்டிருக்கும் எருமைமாடு அசைபோட தயங்காது. கற்றார் அவையில் பேசுவதற்கு சுயமோகன் அஞ்சமாட்டான்.
இரவில் சங்க காலப்பாடல்களை வாசித்து இன்புறலாம். தலைவன் தலைவியின் ஊடல், கூடல், காதல், ஈதல் எல்லாம் நுண்ணோக்கிய இரசனையில் கேட்டு இன்புறலாம். அந்த நுண்ணோக்கி பற்றி அறிய விரும்புவர்கள் எனது உரையைக் கேட்டால் போதுமானது.
மறுநாள் அமர்வில் சிக்ஸ்பேஸ் தமிழன் காப்பிய காலத்து பாடல்களை என் அனுமதி பெற்று முன்வைத்து இரசிக்க வைப்பார். அப்போது ஆஹா, ஓஹோ என்று இரசிக்காதவர்கள் கருப்பு ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். பிறகு நாஞ்சில் வேடன் கம்பனது பாடல்களை எனது இரசனைக்கேற்ப அறிமுகம் மட்டும் செய்வார். விவாதத்தை நான் பார்த்துக் கொள்வேன். இராம சரிதத்தின் பரிணாமமாக அயோத்தி ராமன் கோவில் இனி கட்டப்படும் இனிய வேளைக்கு இந்த அமர்வு பொருத்தமாக இருக்கும்.
இப்படி பல நிகழ்வுகள் இருக்கின்றன. முக்கியமாக பாடல்கள், கவிதைகள் குறித்த விவாதம் நான் கூறுகிறபடி மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது கவிதையின் இரசனையே முக்கியமன்றி உள்ளடக்கம் இல்லை. ஒரு கவிதையில் ஓத்தா, ஙொம்மா என்று வருவது பிரச்சினையல்ல. அது எவ்வளவு ரைமிங்காக வருகிறது என்பதே இரசனை. இதற்கும் நீங்கள் நான் எழுதிய கவிதை இரசனை என்ற பத்தாயிரத்து பக்க நூலை வாசித்து மனப்பாடம் செய்து வருவது நல்லது.
6 Response to “ஊட்டி சந்திப்பு குறித்து”
1. சுமோ,
நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகள் எப்படி இலக்கியத்திற்கு தேவையோனதோ அதுபோன்றுதான் நமது வருணாசிரம தர்மமும் சமூகம் இயங்குவதற்காக சில நிபந்தனைளை விதித்திருக்க்கிறது. அதை சொன்னால் உடனே பாப்பான், வெறி என்று கிளப்புகிறார்கள். உங்களைப் போன்ற ஞானிகள் இருப்பது இந்து மதம் செய்த புண்ணியம் என்று என் நெஞ்சம் விம்முகிறது.
– ஹாய்ராம், சென்னை.
2. சுயமோகன்,
மேற்கத்திய நாடுகளில் நிபந்தனை இல்லாமலே மக்கள் நாகரீகமாக வாழ்கிறார்கள். முதலீட்டியம் அல்லது உண்மையான முதலாளித்துவம் செய்திருக்கும் சாதனை அது. இங்கே ஏழ்மை என்ற பெயரில் பன்னாடைகள் வசிக்கும் நாட்டில் இத்தகைய நிபந்தனைகளை வேறுவழியின்றி விதிக்க நேரிடுகின்றது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இதற்காக கடுமுழைப்பு கோரும் நூறு லிங்குகளை இங்கு இணைத்திருக்கிறேன்
– கே.ஆர். பதியமான், கல்லுக்கனி ப்ளாக் ஸ்பாட், திருப்பூர்.
3. சுயமோகன்,
சிறுநீர் கழிப்பதற்கு கூட அனுமதி இல்லை என்பது தவிர மற்ற நிபந்தனைகளுடன் உடன்படுகிறேன். இங்கே அமெரிக்கா வந்தபோது உங்கள் நேர்ப்பேச்சில் கண்ட அதே இனிய திமிர் இங்கும் இருக்கிறது. எனக்கும் பிடித்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் என்ற மருத்துவ உண்மையை மட்டும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!
– கார்.வி, அமெரிக்கா.
4. ஸ்ரீமான் சுயமோகன்,
அவா அவா மல்டிபிளக்ஸ், டிஸ்னி லேண்ட், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று கலிமுத்திய காலத்துல சுத்துறா. நீங்க மட்டும் இலக்கியத்துக்காச்சே வாழரேள். நம்மவா அந்தக்காலத்துல பூணூல பிடிச்சுண்டு இந்த லோகத்தை என்னமா ஆண்டா. உங்க எழுத்த பாக்கறச்சே அது நினைவுக்கு வர்ரது. நன்னா இருங்கோ, நானும் ஊட்டி வாரேன்…
-அன்புடன்
காண்டு கஜேந்திரன்
5. சுயமோகன் சார்,
உங்க நிபந்தனைகள் எனக்கும் ஓகே. ஆனா பான்பாராக், ஹன்சா பொகையிலை முதலான லாகிரி வஸ்துக்களையும் சேர்த்து தடை செய்யனும். இது பத்தி விக்கியில் வந்த கட்டுரைகளை லிங்கு குடுத்திருக்கேன். படிச்சுப் பாருங்கோ.
-கிருஸ்ணமூர்த்தி சர்மா, புது தில்லி.
6. dear suyamohan
இங்கே மைக்கேல் ஜாக்சன் தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுக்கும் போது கூட நிறைய டிரஸ் கோடு, ஆட்டிட்டியூடு கோடு, டேபிள் மேனர் கோடு, வாக்கிங் கோடு, ஈட்டிங் கோடு போன்றவை உண்டாம். சீமான்களது உலகத்தில் இவையும் புகழ் பெற்றவை. சமீபத்தில் கிளிண்டன் டாட்டர் மேரேஜ்ல கூட இது மாதிரி நிறைய இருந்துச்சு. ஐ லைக் யூ வெரி மச். பை
– சாம்ஜி யாஹூ, ஹைதராபாத்.
______________________________________________________________________
தொடர்புடைய பதிவுகள்