Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 817

செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!

17

செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்தகுற்றத்திற்காகஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

நான் விடுதலையடைந்து விட்டேன்.
ஆனால், எனது நாடு இன்னமும்
போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது.
செயல் குறித்தும்,
செயல்பட்டவர் குறித்தும்,
நாயகனைக் குறித்தும்,
நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும்,
குறியீடு குறித்தும்,
குறியீடான செயல் குறித்தும்
நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஆனால், எனது எளிமையான பதில் இதுதான்.

என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்,
எனது தாயகத்தை
ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால்
நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான்,
என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில்,
ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள்
தமது இன்னுயிரை இழந்தார்கள்.
கணவனை இழந்த பத்து இலட்சம் பெண்களும்,
ஐம்பது லட்சம் அனாதைகளும்,
உடல் உறுப்புகளை இழந்த லட்சக்கணக்கான மக்களும்
நிறைந்து கிடக்கும் தேசம்தான்
இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள்
அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித்
அனைவரோடும் தனது அன்றாட உணவை
அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக
நாங்கள் வாழ்ந்திருந்தோம்.

சன்னியுடன் ஷியா
ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது.
கிறிஸ்துவின் பிறந்தநாளை
கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை.
இவையனைத்தும்
பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே,
பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட
நீடித்திருந்தன.

எமது பொறுமையும், ஒற்றுமையும்
ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.
ஆனால்,
ஆக்கிரமிப்போ
சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும்
பிரித்துத் துண்டாடியது.
எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல.
ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு.
ஒரு நிலைப்பாடு உண்டு.
எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது,
எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது,
எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது,
நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன்.
ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள்
எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.
என்னை போரிடத் தூண்டின.

இழிவுபடுத்தப்பட்ட
அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம்,
பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர்
என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்…
ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு…
எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து,
நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக்
கண்ணால் கண்டேன்.

துயருற்றவர்களின் ஓலத்தை,
அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.
ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது.
நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும்
ஒரு தொலைக்காட்சி நிருபராக,
எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால்,
தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின்
இடிபாடுகளின்
தூசியையோ
அல்லது
ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ,
நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில்,
பற்கள் நெறுநெறுக்க,
பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால்
பழிக்குப் பழி வாங்குவேனென
நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது.
நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.

ஆக்கிரமிப்பினூடாகவும்,
ஆக்கிரமிப்பின் விளைவாகவும்
சிந்தப்பட்ட அப்பாவிகளின்
ஒவ்வொரு இரத்தத் துளிக்கும்,
வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும்,
துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும்,
பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும்,
நான் செய்ய வேண்டிய கடமையாகக்  கருதியதனால்தான்
அச்செயலை செய்தேன்.

என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது:
நான் வீசியெறிந்த காலணி,
உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று

உங்களுக்குத் தெரியுமா
?
பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து
வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா
?
எல்லா மதிப்பீடுகளும்
மீறப்படும்பொழுது
செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது
செருப்பை வீசியெறிந்த பொழுது,
எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை,
எனது மக்களைப் படுகொலை செய்ததை,
எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை,
அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை,
அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை,
நான் ஏற்க மறுக்கிறேன்
என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக,
நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும்,
ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும்
ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால்,
அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும்,
எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒட்டுமொத்தத்தில்,
ஒவ்வொரு நாளும்
தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக்
காணச் சகியாத ஒரு குடிமகனின்
அணையாத மனசாட்சியை
வெளிப்படுத்தவே நான் விரும்பினேன்.

ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து
தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல்
நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது.
நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது,
அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ,
காசு, பணம் கிடைக்குமென்றோ,
இதனைச் செய்யவில்லை.
நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

-நன்றி, போராட்டம்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் தோழர் ‘நாத்திகம்’ இராமசாமி மறைவு !!

39

பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் தோழர் 'நாத்திகம்' இராமசாமி மறைவு !!

நாத்திகம் இராமசாமி மறைந்து விட்டார். தோழர் இராமசாமி, வயது 77 சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்து 24.09.2009 அன்று சென்னையில் காலமானார்.

இன்று காலை (25.09.2009) தினமணியில் அவருடைய மறைவுச் செய்தியை படித்த போது துயருற்றோம்; துணுக்குற்றோம். அவரை நேரில் சந்தித்து அவருடைய இயக்க அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கேட்டறிந்து தொகுக்க வேண்டும் என்று எங்களுக்குள் அவ்வப்போது பேசிக்கொண்டதுண்டு. தவற விட்டுவிட்டோம். அவருடைய முதுமை எங்களுக்கு தெரியாமலில்லை. ஒருவேளை அவருடைய எழுத்தின் இளமை துடிப்பு காரணமாக அவருடைய வயதை நாங்கள் மறந்து விட்டோம் போலும்.

நாத்திகம் வார இதழ் தொடர்ந்தும் வெளிவரக்கூடுமா தெரியவில்லை. வந்தாலும் இனி அதில் அவருடைய தனித்தன்மை வாய்ந்த எள்ளலும் உண்மையான கோபமும் நிறைந்த எழுத்துக்களை இனி நாம் வாசிக்க முடியாது. இந்தப் பிரிவின் துயரம் கனமானது.

மறைந்தார் என்ற செய்தியை அறிந்தவுடன் இப்பதிவை எழுதுவதற்காக அவரது மூத்த மகன் இரா. பன்னீர் செல்வம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்க்கை குறிப்புக்களை கூச்சத்துடன் கேட்டறிந்தோம். ஒரிரு நிமிடங்களில் தொலைபேசியில் விவரிக்க கூடியது அல்ல இத்தகைய தோழர்களது வாழ்க்கை என்பது எங்களுக்கு புரியாமலில்லை. இருந்தும் எங்களுக்கு வேறு வழியில்லை.

1932ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த மேல்ஆழ்வார் தோப்பில் பிச்சைக்கனி – பூவம்மாள் தம்பதியின் முதல் மகனாகப் பிறந்தவர் இராமசாமி. 17 வயதில் சென்னைக்கு வந்த இராமசாமி பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது இயக்கத்தில் சேர்ந்தார். பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றிருக்கிறார்.

கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் இறுதி ஊர்வலம் ஆதிக்கசாதியினரின் தெரு வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சாதி வெறியர்கள் தடுத்த போது அந்த அநீதிக்கு எதிராக களத்தில் நின்று போராடி வென்று காட்டினார். இதை பெரியார் மனதாராப் பாராட்டினார்.

இராமாயணத்தின் பாத்திரங்களை அம்பலப்படுத்தி எழுதியதற்காக அன்றைய காங்கிரசு அரசால் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இராமசாமிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தது. இதை பெரியாரே நீதிமன்றத்தில் கட்டினார்.

நாத்திகம் இராமசாமிக்கு ஆறு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். இதில் இரண்டு திருமணங்கள் சாதி மறுப்பு திருமணமும் கூட.

1958 செப்டம்பர் 18ஆம் தேதியன்று பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்காக நாத்திகம் பத்திரிகையை துவங்கினார். இவ்விதழ் அவர் சாகும் வரை கடந்த 51 ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது. ஆரம்பத்தில் தினசரியாக இருந்து, பின்னர் பத்திரிகை வார இதழாக தொடர்ந்து வெளிவந்திருக்கிறது. எனவே நாத்திகம் இராமசாமி என்பது  தன் செயல்பாட்டால் அவர் ஈட்டிக்கொண்ட காரணப்பெயர்.

பார்ப்பனரல்லாதார் ஆட்சியை ஆதரிப்பது என்ற பெரியாரின் அணுகுமுறைக்கேற்ப காமராஜர் ஆட்சியை ஆதரித்தார். அதன் பின்னர் இதே பார்வையின் அடிப்படியில் 70களின் துவக்கத்தில் இருந்த கருணாநிதியின் ஆட்சியையும் ஆதரித்தார்.

பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்பதை முதன்மைப்படுத்திப் பார்க்கும் பலவீனம் காரணமாக காங்கிரஸ் என்ற மக்கள் விரோத இயக்கத்தின் ஒரு தூண்தான் காமராசர் என்பதை உணரமுடியாத விமரிசனமற்ற பார்வைக்கு இவர் பலியாகி இருந்தார்.

கருணாநிதி ஆட்சியில் பாராட்டத்தக்கவை என அவர் கருதியவற்றை தொடர்ந்து பாராட்டியிருக்கிறார். கருணாநிதிக்கெதிராக பார்ப்பன ஊடகங்கள் சாதிய வன்மத்துடன் நஞ்சை கக்கியபோதெல்லாம் அதை அம்பலப்படுத்தி சாடியிருக்கிறார். அதே நேரத்தில் அதிகார நாற்காலி பதவி சுகம், சொத்து ஆகியவற்றுக்காக கருணாநிதி மேற்கொள்ளும் சமரசங்களையும், அருவெறுக்கத்தக்க குடும்ப ஆட்சியையும் கடுமையாக விமரிசிப்பதற்கும் அவர் தவறியதில்லை.

பா.ஜ.க வுடன் கூட்டு சேர்ந்தது, ஈழப்போராட்டத்திற்கு துரோகம் இழைத்தது முதலிய பிரச்சினைகளை வைத்து இராமசாமி தன் பத்திரிகையில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்தார். கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் சன் தொலைக்காட்சியின் ஆபாச மற்றும் மூடநம்பிக்கை பரப்பும் நிகழ்ச்சிகளால் தமிழ்ச்சமூகம் நாசமாக்கப்படுவதை கண்டு எந்த அளவிற்கு அவர் குமுறியிருக்கிறார் என்பதை அவரது எழுத்தின் கடுமையிலிருந்து புரிந்து கொள்ளமுடியும்.

ஒரு பொதுவுடைமைவாதிக்குரிய வர்க்கப் பார்வை நாத்திகம் இராமசாமியிடம் இல்லை என்பதுதான் உண்மைதான். எனினும் மக்கள் நலன் என்ற நோக்கிலிருந்து எதார்த்தமாக பரிசீலித்து அநீதிகளை கடுமையாக சாடும் நேர்மை அவரிடம் இருந்தது.

பதவியில் உள்ளவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி பல்லிளித்து ஆதாயம் தேடும் பிழைப்புவாதம் அவரிடம் இல்லாமலிருந்ததுதான் இதற்குக் காரணம். வீரமணி மட்டுமின்றி திராவிட இயக்கத்தின் பல பிதாமகர்களிடம் நீக்கமற நிறைந்திருந்த இந்த பிழைப்புவாத நடைமுறை நாத்திகம் இராமசாமியிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியாரின் மறைவுக்குப்பிறகு வீரமணி – மணியம்மை கும்பல் திராவிடர் கழகத்தை கைப்பற்றியதையும், இக் கும்பலின் முறைகேடுகளையும் ஆதாரப்பூர்வமாக தனது இதழில் இராமசாமி அம்பலப்படுத்தினார். வீரமணி பார்ப்பன ஜெயாவின் வீட்டுப்பூசாரியானதையும், சுயமரியாதை இயக்கம் சீட்டுக் கம்பெனியாக மாற்றப்பட்டுவிட்டதையும் பெரியாரின் எழுத்துக்கள் தனிச்சொத்துடைமையால் முடக்கப்பட்டதையும் ஒரு பெரியார் தொண்டனுக்கே உரிய கோபத்தோடு தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார்.

அவருடைய எழுத்து நடை அலாதியானது. அலங்காரங்களற்ற உண்மையான கோபம், மேட்டிமைத்தனங்களற்ற ஒரு சாதாரண மனிதனின் பார்வை, அநீதியால் பாதிக்கப்பட்ட மனிதனின் இயல்பான ஆவேசம், அந்த கோபத்துக்கு சுவை கூட்டும் எள்ளல் இவை அனைத்தும் கலந்த, ஒரு பெரியார் தொண்டனுக்கே உரிய மொழி நடையை அவர் பெற்றிருந்தார். வெறும் எட்டு பக்கங்களே கொண்ட, லேஅவுட், அழகியல் போன்ற ஏதுமின்றி எழுத்துக்களாலும் நிறைந்த அந்த பத்திரிகையை, படி படி என்று நம்மை தூண்டியது அவரது எழுத்து மட்டும்தான் என்றால் அது மிகையல்ல.

51 வருடங்களாக நாத்திகம் பத்திரிகையை அவர் பல நட்டங்களுக்கிடையில் விடாது நடத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அனைத்து மதங்களையும் விடாது அம்பலப்படுத்துதல், சினிமா, டி.வி, பண்பாட்டு சீரழிவுகளை சாடுதல்  போன்றவற்றை உள்ளடக்கிய அவரது இந்த எழுத்துப்பணி இறக்கும் வரை வரை இடைவெளியில்லாமல் நிறைவேறியது.

நாத்திகச் சிங்கம் பகத்சிங், ஆர்.எஸ்.எஸ் இந்து பாசிசம், சங்கரமடம் பற்றிய உண்மைகள், மடாதிபதிலீலை, இயேசு அழைக்கிறார் டி.ஜி.எஸ் தினகரன் மோசடிகள் முதலான அவருடைய பிரபலமான நூல்கள் மலிவு விலையில் மக்களிடையில் கொண்டு செல்லப்பட்டன. இது போக பெரியாரிய நூல்கள் பலவற்றையும் வாங்கி தனது பத்திரிகை அலுவலகத்தில் வைத்து விற்பனை செய்தார்.

பார்ப்பனிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ம.க.இ.க முதன்மைப்பாத்திரம் ஆற்றிய போதும் அதை அங்கீகரிக்கும் மனோபாவம் பல பெரியார் தொண்டர்களிடம் இருப்பதில்லை. இதிலும் நாத்திகம் இராமசாமி ஒரு விதிவிலக்கு. புதிய கலாச்சாரம் மற்றும் ம.க.இ.கவின் பிற வெளியீடுகளை பார்த்த உடன் அவரே அலுவலகத்தை தொடர்புகொள்வார். ஒவ்வொரு வெளியீட்டிலும் 400, 500 பிரதிகள் கேட்டு வாங்கிக்கொள்வார். அதற்குரிய தொகையை பொறுப்புடன் உடனே செலுத்துவார். பல வெளியீடுகளை இலவசமாக தனது நண்பர்களுக்கும், அறிமுகம் ஆனோருக்கும் அவரே அனுப்பி வைப்பார். கொள்கையின்பால் உண்மையான பற்றும், அது வெற்றிபெறவேண்டும் என்று இதயத்திலிருந்து பீரிட்டெழும் ஆர்வமும் அவரின் இயல்பாகவே இருந்தன. “அதெல்லாம் பெரியாரின் காலம்” என்று அந்த பொற்காலத்தை எண்ணி ஏக்கப்பெருமூச்சு மட்டும் விடுகின்ற பல முதிய பெரியார் தொண்டர்களுக்கு மத்தியில் நாத்திகம் இராமசாமி முதுமையே எய்தாத ஒரு இளைஞர்.

எனினும் அவர் மறைந்து விட்டார். சில மாதங்களுக்கு முன் அவர் எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. தனது சொந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரு கோவிலைக் கட்டி அதன் குடமுழுக்கிற்கு பார்ப்பானை தேடிக்கொண்டிருந்த சம்பவத்தை குறிப்பிட்டு, “இத்தனை நாள் பெரியாரின் கொள்கைகளை நான் பிரச்சாரம் செய்திருந்த போதும் என் சொந்த ஊரில் என் சொந்தக்காரர்களையேகூட பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து என்னால் மீட்க முடியவில்லையே” என்று அக்கட்டுரையில் மனம் வெதும்பியிருந்தார்.

சாதி ஒழிப்பிற்காகவும், சுயமரியாதைக்காகவும், மனித குல மேன்மைக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட அந்த மனிதர் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். வாழ்நாள் முழுதும் பாடுபட்டும் தான் கண்ட கனவை நனவாக்க முடியாமல் வெதும்பிப்போன அந்த மனம் நம்மிடமிருந்து இன்று விடைபெறுகிறது. விடை கொடுப்பதா, கொஞ்சம் பொறுத்திருங்கள் நாங்கள் நிறைவேற்றிக் காட்டுகிறோம் என்று தடுப்பதா?

*******************

அறிவிப்பு:

பொதுமக்களின் மரியாதைக்காக அவரது உடல் நாத்திகம் கட்டிடம், எண் 97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை (ஆற்காடு சாலை), கோடம்பாக்கம், சென்னை – 600024 முகவரியில் வெள்ளிக்கிழமை இரவு வரை வைக்கப்பட்டிருக்கும். (டிரஸ்ட்புரம் பேருந்து நிறுத்தம் அருகில்) பின்னர் ஞாயிறன்று அவரது சொந்த கிராமத்தில்  அடக்கம் செய்யப்படும்.

(தொடர்புக்கு 99625 44024)

ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தோழர்கள் இன்று மாலை மூன்று மணிக்கு பு.ஜ.தொ.மு அலுவலகத்திலிருந்து (கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில்) அஞ்சலி செலுத்த செல்கின்றனர். வாய்ப்புள்ள அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்குத் தாரைவார்ப்பு - பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

திருநெல்வேலி மாவட்டம், ஆலம்பட்டினம் பஞ்சாயத்து யூனியனின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணகுமார் என்ற இரண்டு வயது குழந்தை காச்சலுடன் கீழ்தாடை இறுக்கமாகி அசைக்க முடியாமல், ஜன்னி நோய்க்கு ஆளான நிலையில் அனுமதிக்கப்பட்டான். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு ஒவ்வாத நிலையில் உடல் மெலிந்து காணப்படுவதாகவும்; அவன் பிழைப்பதற்கான வாப்புகள் குறைவு என்றும் குடும்பத்தாரிடம் கூறிவிட்டனர். 6 மாதங்களுக்கு முன்பு சரவணகுமார் காலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு உள்ளூரில் உள்ள கிளை சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி (ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி) போடுவதற்கான மருந்து இல்லாமல் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. சரவணக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் அன்பு மகனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

இது ஏதோ சரவணகுமார் என்ற குழந்தைக்கு மட்டும் விதிவிலக்காக நடந்த சம்பவம் அல்ல. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் எதிர்காலம் இதை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை அரசே உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2008-இல் 13 மாநிலங்களை ஆய்வு செய்த சுகாதார துறை அதிகாரிகள் பீகார், சட்டிஸ்கர், அஸ்ஸாம், கேரளா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் தொண்டை அழற்சி, ஜன்னி, காசநோய், கக்குவான் இருமல் மற்றும் அம்மை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

இதேபோல் ஒரிசா, மேற்குவங்கம், திரிபுரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கான பல்வேறு தடுப்பூசிகள் மிகவும் அற்பமான அளவில் மட்டுமே அரசு மருத்துவமனையில் இருப்பு உள்ளதாக செய்தி ஊடகங்களும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கூறுகின்றன. மேற்கு வங்கத்தில் தொண்டை அழற்சி மற்றும் ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி அறவே இல்லை. கையிருப்பாக, ஒட்டுமொத்த தேவையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இத்தகைய பற்றாக்குறையால் நாடு முழுவதும் 10 முதல் 30 சதம் வரை குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுதல் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் உடல் நலன் மற்றும் ஆயுட்காலம் கேள்விக்குள்ளாகி விட்டது. ஏன் இந்த அவலநிலை? இதற்கான பின்னணி என்ன?

2001-ஆம் ஆண்டு இந்திய அரசு, மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் உலக தரத்தை எட்ட “மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள்” சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தமானது, மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையான, “உற்பத்திக்கான சிறந்த முறைகள்” பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும். தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் என்ற அமைப்பு, மேற்குறிப்பிட்ட பரிந்துரையைச் செயற்படுத்தவும், அவ்வப்பொழுது மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களை ஆய்வு செய்து பரிந்துரைகள் பின்பற்றப்படுகிறதா, இல்லையா என்பதைச் சோதித்து அறிவதும், அதன் அடிப்படையில் உரிமம் கொடுப்பது அல்லது நிராகரிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இவ்விசயங்கள் நடைமுறையில் இருந்தால் மட்டுமே, ஒரு நாட்டின் நிறுவனங்கள் உலக சந்தையில் மருந்தையோ அல்லது தடுப்பூசிகளையோ விற்பனை செய்ய முடியும்.

கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கி கட்டளைக்கிணங்க அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியார்மயம், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அண்மைக் காலம் வரை மத்திய சுகாதார துறையின் தடுப்பூசி போடும் திட்டங்களுக்குத் தேவையான 80 சதவீத தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்களே உற்பத்தி செய்து கொடுத்தன. குறிப்பாக நாய்க்கடிக்கான ரேபீஸ் தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து வந்த குன்னூரில் அமைந்துள்ள பாஸ்டர் ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள பி.சி.ஜி. தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் கிங் ஆராய்ச்சி மையம், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியிலுள்ள பாம்புக் கடிக்கான தடுப்பூசி ஆராய்ச்சி மையம் ஆகியவை தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து கொடுத்து வந்தன.

இப்படி குழந்தைகளின் நலன்களுக்கு அடித்தளமாக இருந்த மூன்று நிறுவனங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் சொல்லி கொள்ளும் அளவில் அரசு நிதி ஒதுக்கீடோ அல்லது ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. எந்த ஒரு நவீன வசதியும் இன்றி சுமார் 30 சதவீத விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையின் ஊடாகவே இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தருணங்களில் அரசு இந்நிறுவனங்களை மூட முயற்சி செய்தது. ஆனால் தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்தை தயாரித்து வந்த குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்தை பலத்த எதிர்ப்புடன் அரசு மூடியாது.

உலக சந்தையில் விற்பனைக்கு வரும் ஒட்டுமொத்த தடுப்பூசியில் 60 சதம் இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைத்தவிர, கணிசமான அளவில் மருந்துகளும் ஏற்றுமதி ஆகிறது. இவ்விரண்டின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 24,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த ஏற்றுமதி வியாபாரத்தில் பெரும்பான்மையாக தனியார் நிறுவனங்களே ஈடுபடுகின்றன. இந்த ஏற்றுமதி எந்த ஒரு தொய்வுமின்றி நீடிக்க வேண்டும் என்றால், ஆரம்பத்தில் கூறப்பட்ட உலக சுகாதார அமைப்பின் “உற்பத்திக்கான சிறந்த முறைகள்” நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பரிந்துரைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த பின்னணியில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் பெறாமலும் ஆட்கள் பற்றாக்குறையிலும் செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்திக்கான உரிமத்தை, அன்புமணி இராமதாஸ் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த சுகாதாரத் துறை இரத்து செய்தது. இந்த பொதுத்துறை நிறுவனங்களை மாற்று வேலையில் ஈடுபடுத்தப் போவதாகவும் அறிவித்தது.

குழந்தைகளுக்குத் தேவையான 80 சதவீத தடுப்பூசிகளை நிறைவு செய்து அவர்களின் நலனைக் காப்பாற்றுவதைவிட, தனியார் நிறுவனங்கள் உலகச் சந்தையில் மருந்து மற்றும் தடுப்பூசிகள் விற்பதையே முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் அரசு கருதுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு லைசென்சு இரத்து செய்த பிறகு, சுகாதார துறையின் செயலாளர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் “பொதுத்துறை நிறுவனங்களை உற்பத்தி செய்ய அனுமதித்தால் 24,000 கோடி ரூபா மதிப்புடைய ஏற்றுமதியானது கேள்விக்குள்ளாகிவிடும்” எனக் கூறினார். அப்பட்டமாக, மக்களின் நலனை விட முதலாளிகளின் நலனே அதிமுக்கியம் என அரசு கருதுவதன் வெளிப்பாடுதான் இது.

பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை மூடியபின், சுகாதார துறை தனது தடுப்பூசி திட்டங்களுக்குத் தேவையானவற்றை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா.  பயாலாஜிக்கல் இவான்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களிடமும் மற்றும் இந்திய இம்யுனாலஜிக்கல் லிமிடெட் என்ற அரசு நிறுவனத்திடமும் கொள்முதல் செய்தது. இதில் “பயாலசிக்கல் இவான்ஸ்” என்ற நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதில் சந்தேகம் இருப்பதாக இந்நிறுவனத்தை ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு அறிவித்துள்ளது. இருப்பினும் அரசு, தடுப்பூசி கொள்முதலைத் தொடர்ந்தது.

2007-08-இல் ஒட்டு மொத்தமாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 32.2. கோடி ரூபாய் விலையில் மைய அரசின் சுகாதாரத் துறை கொள்முதல் செய்தது. 2008-09-இல் அதைவிடக் குறைவான அளவிலான மருந்துகளை ரூ. 64.29 கோடிக்குக் கொள்முதல் செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடித்ததற்கும், அரசு இத்தனியார்மயக் கொள்ளைக்கு உடந்தையாக நிற்பதற்கும் இப்புள்ளி விவரமே சாட்சியமாக உள்ளது.

தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு தேவை பற்றியோ, அரசின் தேவை பற்றியோ கண்டுகொள்வதில்லை. அவர்களின் கவனம் முழுவதும் உலகச் சந்தையில் விற்று கோடிக்கணக்கான இலாபத்தை கல்லா கட்டுவதுதான். அதையும் மீறி அரசின் தேவையை நிறைவேற்ற, தடுப்பூசிகளுக்கு யானை விலை கேட்டு நிர்ப்பந்தித்தார்கள். இந்த உண்மையை மனசாட்சியுள்ள அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்துகிறார்கள். சுகாதார துறையே கூட ஓர் அறிக்கையில் “ஒட்டு மொத்த நாடும் தடுப்பூசி பற்றாக்குறையில் தவிக்கும் போது, தனியார் நிறுவனங்கள் கை கொடுக்கவில்லை” என்று கூறுகிறது. இந்தப் பின்னணியில்தான், நாடு முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

தனியார்மய கொள்கை மற்றும் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக அரசு எந்த ஒரு முதலீடுமின்றி பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து கலாவதியாக்கியது. இரண்டாவதாக, தனியார் மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றுவதற்கு ஏதுவாக பொதுத் துறை நிறுவனங்களின் உற்பத்தியை முடக்கி நாட்டு மக்களின் நலனை பறிகொடுத்தது. இதன் மூலம் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் நலனும் இதர மக்கள் பிரிவினரின் நலனும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டு தட்டம்மைக்கும், கக்குவான் இருமலுக்கும், வெறிநாய்க் கடிக்கும் நமது அன்புக் குழந்தைகளைப் பறிகொடுக்கப் போகிறோமா? அல்லது நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வையே பறித்து வரும் தனியார்மயக் கொள்ளையர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் எதிராக வீதியில் இறங்கிப் போராடப் போகிறோமா?

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஏழையின் கண்கள் என்ன விலை?

கோயபல்சை விஞ்சிய இந்து என்.ராம்

கோயாபல்சை விஞ்சிய இந்து என்.ராம்

இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது. அவ்வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், ஈழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் ராஜபக்சேவின் இனவெறி அரசு, தமிழர்களை முகாம்களில் அடைத்து வதைத்துக் கொன்று கொண்டிருக்கிறது.
ஈழ இன அழிப்புப் போரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வவுனியாக் காட்டுப் பகுதியில் முட்கம்பி வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களில் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம்களுக்கு பொன்னம்பலம், ஆனந்த குமாரசாமி, தமிழ்த்துரோகி கதிர்காமர் போன்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இம்முகாம்களைப் பார்வையிட ஐ.நா. பணியாளர்களையோ, ஊடகங்களையோ, மனித உரிமை அமைப்புகளையோ அரசு அனுமதிப்பதில்லை அகதிகள் முகாமில் பணியாற்றித் திரும்பிய மருத்துவர்கள், செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள், முகாமை பார்வையிட்ட இலங்கை அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் வாக்குமூலங்களே அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் அவலநிலையைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த சில வாரங்களில் மட்டும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு அம்மை நோய் தாக்கியிருப்பதாகவும், இலட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் செய்வதற்கு அங்கு மொத்தமே 50 மருத்துவர்கள்தான் உள்ளனர் என்றும், 300 தாதியர்கள் தேவைப்படுகின்ற இடத்தில் மொத்தமே 5 முதல் 10 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், அரசு மருத்துவர் சங்கச் செய்தித் தொடர்பாளரான மருத்துவர் உபுல் குணசேகரா தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை வசதிகள் இல்லை.

ஐ.நா.வின் ஆயுத மோதல் மற்றும் குழந்தைகள் பிரிவு, பி.பி.சி.யின் சிங்கள வானொலிச் சேவையில் “அரசு சிறார்களுக்கு சிறப்பு ஊட்டத் திட்டத்தை உடனடியாக யல்படுத்த வேண்டும்” என்று எச்சரித்துள்ளது. முகாம்களில் அடைபட்டுள்ள 5 ஆயிரம் சிறுவர்கள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 90 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்டச் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இருக்கும் மாணிக் ஃபார்ம் முகாமில் 70 பேருக்கு ஒரு கழிப்பறைதான் உள்ளது. சர்வதேச நெறிமுறைப்படி அது 20 பேருக்கு ஒன்று என இருக்க வேண்டும். தண்ணீர் மூலம் பரவும் தொற்றுநோயான வயிற்றுப் போக்கு பல உயிர்களைப் பறித்துள்ளது.

மாணிக் ஃபார்ம் முகாமைச் சேர்ந்த வயதான தமிழர் ஒருவர் “இளைஞர்களும் நடுத்தர வயதை எட்டியவர்களும் இங்கு நடத்தப்படும் விதமும், கேட்கச் சகிக்காத வசவுகளும் போர்முனையிலேயே பட்டினி கிடந்தாவது செத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது” என்கிறார். இதற்கு முன் வனாந்திரமாக இருந்த இடத்தில் தகரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முகாம்களில் வெயிலின் உக்கிரம் அதிகமிருப்பதால், கிடைக்கும் இடைவெளிகளில் எல்லோரும் தூங்குகிறார்கள். சிறுகுழந்தைகளை உறங்க வைத்திருக்கும் பெற்றோர்கள் ‘சிங்கள ராணுவத்தினர் எவரேனும் பிள்ளைகளைத் தூக்கிச் ன்று விடுவரோ’ எனும் பீதியில் தூக்கம் வராது இரவெல்லாம் விழித்திருக்கும் கொடுமை தாங்கமுடியாத ஒன்று. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் அப்பகுதியின் களிமண் தரையில் கால் வைக்கக் கூட முடியாது. கூடவே எக்கச்சக்கமாக பூச்சிகள் கிளம்பி வரும். அது இன்னும் கொடுமையானது.

கிளிநொச்சியைச் சேர்ந்த 60 வயது முதியவர் போரில் காணாமல் போன தனது மகளின் குடும்பத்தைத் தேடி முகாம்கள் தோறும் அலைகிறார். வவுனியாவில் இருக்கும் பெரியகாட்டு முகாமில் இராணுவத்தினர் பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என்பதால், அவரால் அந்த முகாமிற்குள் ன்று தேடமுடியாது தவிக்கிறார்.

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் முகாமில் நோயினால் சிறுவர்கள் பலியாகிக் கொண்டுள்ளனர். நோயாளிகளுக்குத் தேவையான அளவு மருத்துவர்களில்லை. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களை ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ பரிசோதனை செய்யும்போதும் இராணுவ புலனாவுத்துறையைச் சேர்ந்தவர்களும் அவ்விடத்தில் உள்ளனர். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களைப் பரிசோதித்த இராணுவ மருத்துவர்கள், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் தேவை இல்லை என முகாமுக்கு திருப்பி அனுப்பினர். முகாமில் அச்சிறுவர்கள் பிணமாயினர்.

வந்தனா சந்திரசேகர் எனும் 28 வயதுப் பெண், 9 மாதக் கர்ப்பிணி. ஏற்கெனவே இவருக்கு 5 பிள்ளைகள். இவர் தண்ணீருக்காக 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கிறார். நீண்ட நேரம் காத்திருந்த பின்னர், ஒவ்வொரு குடும்பமும் தலா 10 லிட்டர் தண்ணீரைக் குடிக்க, குளிக்க, உடுப்புக் கழுவப் பெற்றுக்கொள்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் அங்கு நடைபெற்ற தாக்குதலால் கால் ஊனமாகி குடும்பத்துடன் ராமேஸ்வரம் – அரிச்சமுனைக்குத் தப்பிவந்துள்ளார். தொற்றுநோகள் பரவி முகாம்களில் தமிழர்கள் அதிகமான எண்ணிக்கையில் இறந்து வருவதாகவும் வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்றவற்றால் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் ஆண்களும் பெண்களும் இறந்துள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கல்மனம் கொண்டோரையும் உருகிட வைக்கும் மனிதக் கொடுமைகளை அரங்கேற்றிவரும் இந்த வதை முகாம்களுக்கு சிங்கள இனவெறியன் ராஜபக்சே வைத்துள்ள பெயரோ ‘நலன்புரி கிராமங்கள்’.
இந்த நலன்புரி கிராமங்களைப் பற்றி, பிரிட்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிக்கை “மூன்று லட்சம் மக்கள் இலங்கை அரசின் சாவு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஆண்கள் சித்திரவதைக்கு உட்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகிறார்கள். சிறுவர்கள் மனரீதியாக பாதிப்புக்கு உட்படுகிறார்கள். உணவு, மருந்து தண்ணீர் இல்லாமல் மக்கள் ஈக்களைப் போல த்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களும் சரி, முதியவர்களும் சரி உணவுக்காக சுடும் வெயிலில் காத்திருக்க, இறந்தவர்களின் உடல்களோ வெளியில் போடப்பட்டு அழுகவிடப்பட்டுள்ளன” என்று எழுதியுள்ளது.

வவுனியாவில் உள்ள முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 1400 பேர் இறப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மூளைக் காச்சலால் மட்டும் 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த வீதத்தில் இறப்பு தொடருமானால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் முகாம்களில் மக்களே இல்லாத நிலை ஏற்படும் என்றும் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி 200 பேர் த்துக் கொண்டிருக்கின்றனர்.

வதைமுகாம்களின் நிலைமையைப் பற்றிப் பேசும்போது பத்மினி சிதம்பரநாதன் எனும் தமிழ் எம்.பி. இலங்கை நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கூட “இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களைக் கூட சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை” எனக் கண்டித்துள்ளது. “முட்கம்பி வேலிக்குள் 3 லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பது அப்பட்டமான உரிமை மீறல். எமது நாட்டுப் பிரஜைகளான 3 லட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் அடைத்து வைத்துள்ளீர்கள்?” என்றும், “உடனடியாக அந்த மக்களை அவர்களின் சோந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுங்கள்” என்றும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பேசியிருக்கிறார்.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா கூட ‘‘அகதி முகாம்களைப் பார்வையிட்டபோது அதிர்ச்சியடைந்தேன். காலைக்கடன்களைக் கழிப்பதற்குக் கூட மக்கள் மணிக்கணக்கில் கியூவில் நிற்கிறார்கள். 5 பேர் மட்டும் இருக்கக் கூடிய கூடாரத்தில் 30-க்கும் அதிகம் பேர் உள்ளனர். கூடாரத்தில் எழுந்து நின்றால், இடுப்பு எலும்பே முறிந்துவிடும்; இந்த மக்களுக்கு நாம் மிகப் பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தென்னாசியாவிலேயே பெரிய பத்திரிக்கை என்றும் பாரம்பரியம் மிக்க நம்பத்தகுந்த பத்திரிக்கை என்றும் நடுத்தர வர்க்கத்தாலும் அறிவுஜீவிகளாலும் போற்றப்படும் “இந்து” நாளேட்டின் ஆசிரியர் என்.ராம் மட்டும் இந்த அகதி முகாம்களை “இந்தியாவில் இருக்கும் முகாம்களை விட மேம்பட்டிருக்கிறது” என்றும், “சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை. தண்ணீருக்கும் பிரச்சினை இல்லை” என்றும் சோல்லியிருக்கிறார். முட்கம்பி வேலிகளில் மின்சாரத்தைப் பாச்சி மக்களைக் கொல்லாத ராஜபக்சேவின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறார், இந்த மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு. அங்கு உற்றார்-உறவினர்களையும் சோந்த ஊரையும் விட்டு ஏதிலிகளாகக் கொடும் வலிகளோடு வந்த தமிழர்களை “வீடுவாசலை விட்டுவிட்டு ஓடிவந்த போதுகூட, தாங்கள் சேமித்து வைத்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள்” என்றும் வக்கிரத்தோடு சோல்லியிருக்கிறார்.

“இந்து’’ராமின் தனிப்பட்ட குரல் அல்ல இது. இந்திய மேலாதிக்கம், இலங்கை அரசின் யல்பாட்டுக்கு ராமின் மூலம் தரும் பாராட்டுப் பத்திரம்தான் இது.  யாருமே நுழைய முடியாத அம்முகாம்களுக்கு ஹெலிகாப்டரில் “இந்து” ராம் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ராஜபக்சே நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைத்து, கொலைக்கரங்கள் வழங்கிய “லங்கா ரத்னா” எனும் பதக்கத்துடன் சிங்கள இனவெறிக்கும், இந்திய மேலாதிக்கத்தின் நலனுக்கும் ஊதுகுழலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, ‘பாரம்பரியம்’ மிக்க “இந்து” பத்திரிக்கை.

இலங்கை மீதான மேலாதிக்கப் போட்டாபோட்டியின் காரணமாகவும், சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடாமல் இழுப்பதற்காகவும், மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் மிரட்டிப் பணியவைக்கும் நோக்கத்துடன் அகதிமுகாம் அவலங்களை அம்பலப்படுத்துகின்றன. இந்திய மேலாதிக்கவாதிகளோ, ராஜபக்சே கும்பலுக்கு நற்சான்றிதழ் அளித்து தாஜா செய்து தம்பக்கம் இழுக்க, அகதிமுகாம் அவலங்களை மூடிமறைக்கின்றனர். போர்க்குற்றவாளியான ராஜபக்சே மட்டுமல்ல; இக்குற்றங்களுக்குப் பக்கபலமாகப் பிரச்சாரம் செய்துவரும் இந்திய மேலாதிக்கத்தின் ஊதுகுழலான “இந்து” ராம் போன்ற கோயபல்சுகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்!

N.Ramஆயணம் – வீதி நாடகம்

10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்?

17

10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஞானபிரகாசத்தின் 10 வயது மகன் பிரதீஷ் ஒரு நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். காலாண்டு தேர்வில் தமிழ் பாடத்தை சரியாக எழுதவில்லை என ஆசிரியை விஜயலட்சுமி அவனை கண்டித்தார். இனி சரியாக எழுதவில்லை என்றால் அவனை 4ஆம் வகுப்பு அனுப்பி விடப்போவதாகவும் எச்சரித்தார்.

மதியம் மனமுடைந்த அந்த சிறுவன் அழுது கொண்டே வீடு வந்தான். ஆறுதல் கூறிய தாயார் மேரி லதா இது பற்றி ஆசிரியையிடம் பேசுவதாக தேற்றி அவனுக்கு உணவு வாங்குவதற்காக அருகாமை கடைக்குச் சென்றார்.

அந்நேரத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்த பிரதீஷின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவனோ வழியிலேயே இறந்து போனான். பின்னர் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் ஆசிரியை விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

இது 19.09.2009 தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி.

ஆசிரியையை உண்மையிலேயே குற்றவாளியா?

அந்த மாணவன் படித்த பள்ளி அநேகமாக அரசுபள்ளியாக இருக்க வாய்ப்பு உண்டு. லாரி ஓட்டுநர் குடும்பத்தில், மண்ணெண்ணை வைத்து சமையல் செய்யும் வீட்டில் அந்த சிறுவனுக்காக சில ஆயிரங்கள் செலவழிக்கப்பட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்திருப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் பிரச்சினையே அந்த மாணவன் தமிழ் பாடத்தேர்வு சரியாக எழுதவில்லை என்பதே. தமிழுக்காக மெட்ரிகுலேஷன் பள்ளியில் திட்டு வருவதற்கும் வாய்ப்பில்லை.

ஆங்கிலக் கான்வென்டுகள் காளான்களைப் போல முளைத்து வளர்ந்திருக்கும் இந்த 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் அநேகர் அரசு பள்ளியில்தான் படித்திருக்கக்கூடும். அரசு பள்ளிகளில் கண்டிப்பும், தண்டிப்பும் அங்கு படித்த எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அப்போது நாம் அடைந்த பள்ளி தண்டனைகளை மீட்டுப் பார்ப்போம். அதிலென்ன பிரச்சினையை அன்று கண்டோம்?

அரசு பள்ளிகளில் அடிவாங்கி வளர்ந்த முந்தைய தலைமுறை மாணவர்கள் இது போல மனமுடைந்து போவதில்லை. வீட்டிலும், பள்ளியிலும் இப்போதை விட அப்போது கட்டுப்பாடு அதிகம். இந்த தண்டனைகளை கடந்துதான் அநேகம் பேர் வந்திருக்கிறோம்.

அதிலும் ஆரம்ப வகுப்பு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியப் பணியாற்றுவது இன்னும் சிக்கலானது. ஏழைப்பின்னணியிலும், உதிரியான குடும்ப வாழ்க்கையிலிருந்தும் வரும் இந்த சிறுவர்களை படிக்க வைப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் சேவை மனப்பான்மையோடு பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தேவை கருதி மாணவர்களை தண்டிப்பது, அடிப்பது உண்டு. ஆசிரியர்களை விடுங்கள் வீட்டில் சிறுவயது குழந்தைகளின் சேட்டை எல்லை மீறும்போது பெற்றோரே அடிப்பதில்லையா?

இங்கு விஜயலட்சுமி அடித்ததாக செய்தில்லை. சும்மா 4ஆம் வகுப்பிற்கு அனுப்புவதாக மிரட்டியிருக்கிறார். இதை ஒரு பெரிய குற்றமாக கருத முடியாது. மேலும் அவன் இனி நன்றாக எழுதவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அந்த ஆசிரியை குற்றவாளியில்லை.

இப்போதும் தனியார் பள்ளிகளில் கூட 100 சதவீத வெற்றி ரிசல்ட்டுக்காக மாணவர்களை எந்திரங்கள் போல அடிமைகளாகத்தான் நடத்துகின்றனர். பெற்றோரும் அதை எதிர்மறையாக புரிந்து கொள்வதில்லை. சில சமயம் எல்லை மீறும் தனியார் ஆசிரியர்களால் கூட பல விபரீதங்கள் உடல் காயங்கள் நடந்திருக்கின்றன. பள்ளி நிர்வாகத்தின் வெற்றி விருப்பத்தை நிறைவேற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம். இதன்படி இவர்களும் இங்கே  அடிமைகளாகத்தான் பணிபுரிகின்றனர். இப்படி ஆசிரியர்களும் அடிமை, மாணவர்களும் அடிமை என்றால் ஜனநாயகம் எங்கிருந்து பூக்கும்?

இறுதியில் தோல்வியுறும் மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முக்கியமாக 10,12 பொதுத்தேர்வுகளின்போது நடக்கிறது.

தேர்வு முடிவு வெளியாகும் காலத்தில் மனமுடைந்த மாணவர்களை பெற்றோர்கள் மருத்துவத்திற்காக அழைத்து வருவது ஆண்டுதோறும் நடப்பதாக மருத்துவர் ருத்ரனும் தெரிவிக்கிறார்.

தனியார் பள்ளிகளின் கல்வி தரத்திற்கு ஈடு கொடுக்கா விட்டால் ஒவ்வொரு அரசு பள்ளிகளும் அதை சாக்கிட்டு மூடப்படலாம், அல்லது வேறு பள்ளியுடன் இணைக்கப்படலாம், அல்லது அந்த ஆசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். இத்தகைய நிர்ப்பந்தங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கின்றது.

குறிப்பாக இன்னும் நிலவுடமை பண்பாடு கோலேச்சும் இந்த சமூகத்தில் பெற்றோரும், ஆசிரியரும் வளரும் வாரிசுகளை தமக்கு விதிக்கப்பட்ட அடிமைகளாகத்தான் கருதுகின்றனர். இளையோருக்கு தேவைப்படும் சுதந்திரமும், அரவணைப்பும் இங்கு இல்லை. பயந்து கொண்டு வாழ்வதே சிறுவர்களின் பொது போக்கு. முக்கியமாக கீழ் மட்ட வர்க்கங்களில் இந்த போக்கு அதிகம். மேல் நோக்கிய வர்க்கங்களில் செல்லமும், ஆடம்பரமும் இருப்பதால் அங்கே சிறுவர்களைக் கண்டுதான் மற்றவர் பயப்படவேண்டும்.

இதனால் ஒரு மாணவனை நண்பனைப் போல மதிப்பு கொடுத்து கற்றுக் கொடுக்கும் பார்வையெல்லாம் நமது ஆசிரியர்களிடம் இருக்காது. அப்படியே ஒரு சிலர் முயன்றாலும் மாணவர்களின் சமூகச் சூழல் அதை மறுப்பதாகி விடுகிறது. பெரிதாகி வரும் வர்க்க முரண்பாடுகளுக்கேற்ப மாணவர்களும் தமது வர்க்கங்களைத் தாண்டி இப்போது இணைய முடிவதில்லை. முந்தயை தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இருந்தது. தனிமைப்படும் மாணவர்களின் பண்புகள் பிரச்சினை வரும்போது அதீதமாக வெளிப்படுவதும், அதை கட்டுப்படுத்த பெற்றோரும், ஆசிரியர்களும் திணறுவதும் இப்போது முகத்திலடிக்கும் உண்மை.

5ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் ஒரு ஆசிரியையின் நடத்தையால் தற்கொலை செய்து கொண்டான் என்ற அதிர்ச்சியும், வேதனையும் நம்மை தாக்குகிறது என்றாலும் ஆய்ந்து பார்த்தால் அந்தப் பெண்மணி அப்படி ஒன்றும் பெரிதாக தவறிழைக்கவில்லை.

பத்தாம் வகுப்பிலும், +2விலும் வருடந்தோறும் நடக்கும் தற்கொலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்கே வந்து விட்டது என்பதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

முழுக்குடும்பமும் வேலைக்கு போனால்தான் வாழ முடியுமென்ற நிலையில் மேற்படிப்பில் ஏதாவது தேறினால்தான் உருப்படியாக ஏதும் ஒரு வேலை கிடைக்கும் என்ற சூழலில் குறிப்பாக தோல்வியுறும் பள்ளி இறுதியாண்டு மாணவிகளின் தற்கொலைகளைக்கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் பிரதீஷின் தற்கொலையை என்னவென்று சொல்வது?

பத்து வயதிலேயே அவன் வாழ்க்கை குறித்த அச்சத்தை அடையும் அளவுக்கு முதிர்ந்த சிந்தனை அவனிடம் வர வாய்ப்பில்லையே? பின் ஏன்? அறுபது வயது ரஜினியின் சேட்டைகளையோ, விரகதாபத்துடன் ஆடும் ஒரு குத்தாட்ட நடிகையையோ பார்த்து ஆடும் நடிக்கும் குழந்தைகளைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்வர். பள்ளி ஆண்டு விழாக்களிலும் இவை சாதாரணம். தனது உலகிற்கு எது அதிகம் தெரிகிறதோ அதைப் போலச்செய்யும் இந்த பாவனை பொருளறிந்து செய்யப்படுவதில்லை. உலகை, சமூகத்தை எளிமையாக அறியும் குழந்தைகள் உலகில் பெரியவர்களின் பாவனைகளே முக்கியமானதொன்றாக மாறிவிட்டால் பிஞ்சு பழுப்பதால் வரும் பிரச்சினைகளை நாம் எதிர் கொள்ளவேண்டும்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் விலங்கு நிலையிலிருந்து பின்னர் படிப்படியாக மனித நிலைக்கு வளருகிறது. இன்று இந்த மாற்றத்தை கையில் வைத்திருப்பவர்கள் பெற்றோர்களா, இல்லை மற்றவர்களா?

சக்திமான்/பவர் ரேஞ்சர் சாகசங்களைப் பார்த்து அப்படியே செய்தும் சில சிறுவர்கள் இறந்திருக்கிறார்கள். இதுவும் போலச்செய்தல்தான். நிழலை நிஜமென்று நம்பி உண்மையை மறுக்கும் சிந்தனை இத்தகைய தொடர்களைப் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படுகிறது. ஆனால் இவையெல்லாவற்றையும் விட அதிக வேறுபாடு கொண்டது பிரதீஷின் தற்கொலை. இங்கே போலச்செய்தல் மட்டுமல்ல, கருத்து ரீதியாகவும் பல அலைக்கழிப்பிற்கு ஆளாகி அந்த சிறுவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான். இது எப்படி சாத்தியம்?

இங்கே குற்றவாளிக் கூண்டில் அந்த ஆசிரியை மட்டுமல்ல தமிழும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆங்கிலப்பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் என்பது நவீனபாணியாக ஏற்கப்பட்ட காலத்தில், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், மக்கள் உரையாடல்களிலும் தமிங்கிலீஷே அதிகராப்பூர்வமான மொழியாக மாறிவிட்ட நேரத்தில் அந்த சிறுவன் தமிழை நல்லமுறையில் எப்படி எழுத முடியும்? விரைந்து சாகும் தமிழை ஒரு பிஞ்சு மனதில் துளிர வைக்கமுடியுமா என்ன? சுற்றியுள்ள உலகில் தமிழ் வழக்கழிந்து வரும் நேரத்தில் ஒரு மாணவனை அதுவும் ஐந்தாம் வகுப்பு மாணவனை தமிழ் பாடத்தில் தேற வைப்பது எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். எனில் தமிழை தின்று வரும் ஆங்கிலம்தான் இங்கே வில்லனா? இல்லை ஆங்கிலம்தான் இனி வாழ்க்கை மொழி என தீர்மானித்திருக்கும் சமூக சக்திகள் காரணமா?

இயற்கை உலகை தமிழாலும், செயற்கை உலகை ஆங்கிலத்தாலும் அறிய நேரும் சூழலில் ஆங்கிலத்தை அறிய முடியவில்லையே என குற்ற உணர்வு கொண்ட தமிழக இளைஞர்கள்தான் ஆகப்பெரும்பான்மையினர். தாய் மொழியால் வாழ முடியாது என்பது விதியாகி சகலத்திலும் கோலேச்சும் அன்னிய மொழியை கற்க முடியாமலும் திக்கி திணறியபடிதான் வாழ்க்கை நகர்ந்து வருகிறது. இதையெல்லாம் விஜயலட்சுமி போன்ற ஆசிரியப் பெண்கள் அறிய வேண்டும். அப்போதுதான் தமிழை ஒழுங்காக எழுத முடியாத சூழலைப் புரிந்து கொண்டு வேறு முயற்சிகளை எடுப்பதற்கு அறிவு ஆயத்தப்படும். இன்றைய சமூகத்தின் நவீன சூழல் குறித்து எந்த ஆசிரியருக்கும் அப்படி ஒரு புரிதல் இல்லை என்பதும் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பாடத் திட்டம் என்ற அளவுகோலின்படி கற்றுக் கொடுப்பதே என்பதும்தான் யதார்த்தம்.

விவரம் புரியாத குழந்தைகளை விட்டுவிடுவோம். விவரம் தெரியவேண்டிய இந்த ஆசிரியர்களுக்கு இதை யார் கற்றுக் கொடுப்பது?

ஐந்தாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு அனுப்பப்படுவோமோ என்பது அந்த சிறுவனை அப்படி ஏன் பாதித்திருக்கிறது? அந்த வகுப்பில் தமிழை சரியாக அதுவும் பாடத்திட்டத்தின்படி எழுதாமல் இருப்பதில் வேறு சில மாணவர்களும் இருந்திருக்கக்கூடுமே? எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் என்பதே இல்லை என்பது கூட இந்த சிறுவர்களுக்கு தெரியாமல் போயிருக்கிறது. எல்லாம் ஆசிரியர் தீர்மானிப்பதே பள்ளி வாழ்க்கை என்பதே இந்த மாணவர்களின் பொது அறிவாக இருக்கிறது.

தந்தையின் கடின வாழ்க்கையை அந்த சிறுவனும் அறிந்திருக்க வேண்டும். லாரி ஏறினால் இறங்குவதற்கு சில நாட்கள் ஆகிவிடும். குடும்பத் தொடர்பே மாதத்தில் சில நாட்கள்தான். இத்தகைய கடின வாழ்வுதான் நமக்கும் இறுதியில் கிட்டிவிடுமோ என அவன் எண்ணியிருப்பானோ? தேவாலயத்தில் பளீர் உடைகளுடன் வரும் மற்ற சிறுவர்கள் போல தானும் வாழமுடியாமல் போய்விடுமோ என்றும் அவன் சிந்தித்திருப்பானோ?

இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழமைகள் அவன் வாழ்க்கையில் ஒரு வேளை சில விசேட காரணங்களினால் இல்லாமல் போயிருக்குமோ? நட்பு வட்டத்தில் வளைய வரும் சிறுவர்கள் இப்படி எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார்கள். நட்பு வட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை டி.வி எடுத்துக்கொண்டிருக்குமோ? ஏழைக் குடும்பமென்றாலும் டி.விதான் தமிழகத்தின் தேசியப் பொருளாகிவிட்டதே. கனாக்காணும் காலங்களும், சன் டி.வியின் தொடர்களும் எல்லா வகை வாழ்க்கை சதிகளையும், சம்பவங்களையும், திட்டமிடுதலையும் கற்றுத்தருகின்றன. பருவத்திற்கு வராத வயதிலேயே பாலியல் வேட்கை, பணத்திற்காக கொலை செய்ய திட்டமிடுதல், சக மாணவனை பணையக் கைதியாக்கி கொல்லுதல் போன்றவையெல்லாம் சமீபத்திய சிறுவரது வன்முறைகளில் சேர்ந்திருக்கின்றன. அப்படித்தான் தீக்குளிப்பையும் அந்த டி.வி பெட்டியைப்பார்த்து பிரதீஷ் பயின்றிருப்பானோ?

பிஞ்சிலே பழுக்கவைக்கும் முயற்சிகளில் தொலைக்காட்சி ஊடகம் பாரிய பங்களிப்பதன் மூலம் இன்றைய சிறுவர்களது ஆளுமை கூட டி.விதான் கட்டியமைக்கிறதா?

இல்லை அவனது தாய் மற்ற சிறுவர்களோடு பழகுவதை கண்டிப்புடன் நிறுத்தியிருப்பாரோ? இதெல்லாம் ஒரு நடுத்தர வர்க்கத்தில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சமூகமாக வாழ்வது அத்தியாவசியமாகத்தானே இன்றும் இருக்கிறது? இல்லை அதுவும் மாறி வருகிறதா?

இந்தப் பிரச்சினையை தாய் தனது ஆசிரியையிடம் பேசுவாதக கூறினாலும் அதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இந்த உலகில் தனது பிரச்சினையை தாயால் கூட தீர்க்க முடியாது என்ற தனிமைச் சிந்தனை அந்தச் சிறுவனுக்கு எப்படி வந்தது? யார் அதைக் கற்றுக் கொடுத்தது?

அந்த மாணவனது பெற்றோர் தனது மகனது யாரும் எதிர்பார்த்திராத சாவு குறித்து இன்னமும் அழுது கொண்டிருப்பார்கள். அந்த செய்தியைப்படித்தவர்கள் அதை மறக்க முயற்சித்திருப்பார்கள். என்றாலும் குழந்தைகளும், சிறார்களும் ஏதோ ஒரு வீட்டில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அதனால் அடுத்த அதிர்ச்சிக்கு நாம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

வெடி விபத்தல்ல பச்சைப் படுகொலை!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7-ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஒன்றரை வயது குழந்தையோடு பெண்களும் பள்ளிச் சிறுவர்களும் கோரமாகக் கொல்லப்பட்ட துயரம் தாளாமல் மரண ஓலத்தில் துவண்டு கிடக்கிறது வடக்குப்பட்டி.

இறந்தவர்களில் 4 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு வெந்து கரிக்கட்டையாகி கிடந்தனர். மாண்டவர்களைக் கட்டிப்பிடித்து அழுவதற்குக் கூட முடியாமல், உறவினர்கள் கதறியழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் செங்கற்சுவரும் வெடித்துச் சிதறி தப்பியோடிவர்களைத் தாக்கியதால் தலை, கை-கால்கள் என பித்தெறியப்பட்டு பலர் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

துரைப்பாண்டியன் என்பவருக்குச் சோந்தமான இந்த வி.பி.எம். பட்டாசுத் தொழிற்சாலை, சிவகாசி பட்டாசுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பிரபலம் அடைந்துள்ளது. சாதாரண திருவிழா பட்டாசு மருந்துகளுக்குப் பதிலாக, வீரியமிக்க அதிக ஒலியெழுப்பும் மருந்துகளைக் கொண்ட பட்டாசுகள் விதிமுறைகளை மீறி இங்கு தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி நெருங்குவதால், குறுகிய இடத்தில் இரவு-பகலாக இங்கு பெருமளவுக்குப் பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாமல், குடிசைத் தொழில் போல பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், விவசாயிகள் வறுமை-வேலையின்மையால் தத்தளிப்பதாலும் வடக்குப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வாழ்வளிப்பது இந்தப் பட்டாசு ஆலைதான். மக்களின் வறுமையைச் சாதகமாக்கிக் கொண்டு, எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி, இலாபவெறியோடு பட்டாசுகளை உற்பத்தி செய்து வந்துள்ளார், இந்த ஆலை முதலாளி. இதற்கு அதிகார வர்க்கமும் போலீசும் உரிய கப்பம் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளன. எட்டு பெண்கள் மட்டுமின்றி, கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பள்ளிக்கூட மாணவர்கள் என்பதும், படுகாயமடைந்தவர்களில் கணிசமானோர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், சட்டமும் விதிகளும் எந்த அளவிற்கு இங்கே அப்பட்டமான மீறப்பட்டுள்ளன என்பதற்குச் சாட்சியங்கள்.

வடக்குப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோரமான விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நடந்துள்ளது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியிலுள்ள கிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் கொல்லப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சிவகாசியில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் 22 பேர் கொல்லப்பட்டு, 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்குப்பட்டி போலவே இங்கேயும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பரபரப்புச் செய்திகளும் விசாரணை நாடகங்களும் குறையவுமில்லை.

இப்பகுதிகளில், பாடுபட்டுப் பயிரிட்டாலும் உரியவிலை கிடைக்காமல் விவசாயிகள் போண்டியாவதால், வறுமையிலுள்ள விவசாயிகள், குழந்தைகள் உள்ளிட்டு தமது குடும்பத்தோடு வேறுவழியின்றி உயிருக்கே ஆபத்தான இத்தகைய தொழில்களில் ஈடுபடுகின்றனர். விபத்தும் உயிரிழப்புகளும் நடந்த பிறகும்கூட, ஊருக்கே சோறுபோடும் பட்டாசு ஆலையை மூடிவிடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர். விவசாயம் செய்ய வாய்ப்பு-வசதிகளும் அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தால், இத்தகைய ஆபத்தான தொழில்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் அரசோ, ஏற்கெனவே விவசாயத்தைப் புறக்கணித்து வருவது போதாதென்று, விவசாயத்தை விட்டே விவசாயிகளை விரட்டியடிக்கும் தனியார்மயம் – தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, பிழைக்க வழியின்றி விவசாயிகள் நாடோடிகளாக அலைவதும், பட்டாசு தயாரிப்பு, கல்குவாரி, பாதாள சாக்கடையில் மூழ்கி அடைப்புகளை நீக்குதல் முதலான பல ஆபத்தான வேலைகளை எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி செய்யுமாறு தள்ளப்படுவதும், விபத்துகளும் மரணங்களும் பெருகுவதும் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.

இந்த அடிப்படையான உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தொடரும் இத்தகைய விபத்துக்களைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதும், விதிமுறைகள் – பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கூப்பாடு போடுவதும், விசாரணை நாடகமாடுவதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமேயாகும். பிழைக்க வழியின்றி விவசாயிகளை வறுமைக்கும், ஆபத்தான தொழில்களுக்கும் தள்ளி உயிர்ப்பலி கேட்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதுதான், இத்தகைய கொடுமைகளுக்கு முடிவுகட்டக் கூடிய உண்மையான அரசியல் பணியாக, உண்மையான நிவாரணப் பணியாக இருக்க முடியும்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

169

தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

ஜெயலலிதா, சுப.தங்கவேலன், ரித்திஸ், விஜயகாந்த் போன்றோரின் அருகிலேயும், மு.க.ஸ்டாலின் அழகிரிக்கு நடுவிலேயும் தியாகி இமானுவேல் சேகரனின் உருவப் படம் பிளக்ஸ் பேனர்களில் பளபளக்க அவரின் நினைவு நாள் முளைப்பாரி, பால்குடம், வேல்குத்துதல், மொட்டையடித்தல் போன்ற சடங்குகளுடன் ஒடுக்கப்படுவோரின் விழாவாகவும் கோலகாலமாகவும் கடந்த மூன்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய போலிச் சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது இராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத்  தொடங்கினார்.

அன்றைய நாளில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். காமராஜர் இவரைச் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். ஓட்டுக் கட்சிகளுக்கேயுள்ள பார்பனியத் தன்மை இவரை இதிலிருந்து வெளியேறச்செய்து விடுகிறது. 1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில்  தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த முத்துராமலிங்கத் தேவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.

இக்கொலைக்காக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வார்டு பிளாக் என்ற கட்சிக்குத் தாவி அக்கட்சியையும் தேவர் சாதிக் கட்சியாக மாற்றியவர் இந்த முத்துராமலிங்கத் தேவர். நான்கு வர்ணங்களைக் கூறி தனது பிறப்பையும் தன் சாதி மீது திணிக்கப்பட்டுள்ள பார்பனியத்தின் தீண்டாமையையும் எதிர்த்து போராடியவர் அல்ல இவர். அதனை தனது முதுகில் சுமந்துகொண்டே பிறசாதிகளின் மீது தீண்டாமையை திணித்தவர்.  இவரின் சாதிய ஆதிக்கத்திமிரை புதுப்பிக்கவே தேவர் குரு பூசை நடத்தப்படுகிறது.  ஒடுக்கப்படுவதற்கு எதிராக போராடுவதும் ஆதிக்கத்திமிரை நிலைநாட்டப் போராடுவதும் ஒன்றாக முடியுமா? தேவர் பூசை நடத்தப்படும் 3 நாட்களும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்ன நடக்குமோ என்று பயபீதியுடன் இருக்கும்படியான சூழ்நிலையை   உருவாக்கித் தேவர் பூசை நடத்தப்படுகிறது. போக்குவரத்தை தடை செய்தல், திறந்திருக்கும் கடைகளை உடைத்தல், செல்லும் வழியெல்லாம் தாழ்த்தப்பட்டோரை தரம் தாழ்ந்த சொற்களால் வம்புக்கிழுத்து கலவரம் செய்தல் ஆகியன இப்பூசைக்கான பொருள்களாக உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகையா பாண்டியன் இராமநாதபுரத்தில் நடத்திய தனது தேவர் சாதிய மாநாட்டிற்கு வாகனங்களில் வந்தவர்கள், வரும் வழியில் பரமக்குடிக்கருகில் உள்ள சரசுவதி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு வயதான மூதாட்டி, ஒரு குழந்தை மற்றும் சில பசுமாடுகளை வெட்டிக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்வினையாக மாநாட்டுக்கு வந்த வாகனங்களை மறித்து  தேவர் சமூகத்தினர் சிலரை கொலை செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகுதான் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்டு அஞ்சினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.

“நாய், பன்றிகளுக்குக்கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதுகளுடன் உறவு வைத்துக்கொள்ளவா முடியும்” என்று தேவர் சாதியத் திமிரைக் கக்கியவன் இந்த சண்முகையா பாண்டியன். இன்றும் அவரது பொதுக்கூட்டங்களிலும் கிராம நிகழ்ச்சிகளிலும் இது ஒலிபெருக்கியில் ஒலிபரப்படுகிறது. காமம் தலைக்கேறி தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும்போது (வன் புனர்வு)மட்டும்  நாயும் பன்னியும் புனிதமடைந்த மனிதப் பிறவியாகத் தெரியுதாமோ?

இமானுவேல் சேகரனின் கொலைக்குப் பிறகு உடன் நடந்த கலவரத்தில் தேவர் சாதியினர் 8 பேர் காமராஜர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவிடமான தூவல் என்ற ஊரில், கொல்லப்பட்டவர்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும் தேவர் சாதி வெறியனுமான பி.டி.குமார் கடந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியப் பின் “இதற்குப் பழிக்குப் பழிவாங்கியேத் தீருவோம்” என்று உறுதி மொழி எடுத்தான். அதற்கான திட்டமிடலும் செய்து வந்தான். அதனாலேயே அவனை தேவர்குரு பூசைக்கு செல்லும் வழியில் தாக்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் திட்டமிட்டனர். ஆனால் அவன் சற்று பின் தங்கியதால் முன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி அடையாளமறியப்படாமல் தாக்கப்பட்டுவிட்டார்.

ஆனாலும் இதற்குப் பழிவாங்க சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் வின்சென்ட் என்பவர் பேரூந்து நிறுத்தத்தில் தேவர் சாதி வெறியர்களால்  ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளையன், கணேசபாண்டியன், செல்லத்துரை மைக் செட் ஊழியரான அறிவழகன்  என்று கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கொலைப்பட்டியல் நீண்டு கொண்டேதான் உள்ளது.  இதற்கு எதிர் வினையாகத்தான் பள்ளர் அல்லது தேவேந்திர குல தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை மற்றும் கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

தான் கைகாட்டிய இடத்தில் ஓட்டுப் போட்டது, தானே ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக ஓட்டுப் பெட்டியை நிரப்பியது, காலில் உள்ள செருப்பையும் தோளில் உள்ள துண்டையும் கையில் எடுத்துக் கொண்டு “அய்யா” என்று கைகட்டி கூலியற்ற சேவகம்  செய்யவைத்தது இன்னும் பிற பிற ஒடுக்குமுறைக்கெல்லாம் உட்பட்டிருந்தவர்கள் அதனை மறுத்தால் சும்மா விட்டுவிட முடியுமா?

திருவாடானைக்கருகில் உள்ள கப்பலூர் கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த தேவர் சாதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் என்பவர் காலத்தில் ஓட்டுச் சாவடி எப்படியிருந்தது என்றுகூடப் பார்த்ததில்லை. இன்று அவரது மகன் இராமசாமி எம்.எல்.ஏ. காலத்தில் சற்று முன்னேறி ஓட்டுச்சாவடி உள்ளே சென்று பார்க்கும் அறிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் ஓட்டுக்களைப் பதிவு செய்வது இராமசாமி அவர்களின் அடியாட்கள். “நானும் இந்நாட்டின் ஒரு குடிமகன்” என்ற உணர்வை ஒடுக்கப்பட்டோர் புதுப்பித்துக் கொள்ள ஆடடித்து, பட்டைச் சாராயம் கொடுத்து கருணைமிக்க விருந்து கொடுக்கப்பட்டுவிடும். தேர்தல் அதிகாரிகளின் சூட்கேசுகளும் பூத் ஏஜென்ட்டுகளின் பைகளும் நிரப்பப் பட்டுவிடும்.

சாதிய ஏற்றத் தாழ்வற்ற சகோதரத்துவ கொள்கையுடைவர்கள் நாங்கள் என்று கூறும் இசுலாமியர்களும் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடுவைத்து அரசாளும் இவர்களுக்கு துணைபோவதும் நாட்டுநடப்பாகத்தான் உள்ளது.

அம்மாவிற்காக ஒரு பேரூந்தை எரித்ததால் தேர்தலிலே சீட்டுக் கிடைத்து இளையான்குடித் தொகுதியில் வ.து.நடராஜன் வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா? ஆனந்தூர் மற்றும் இராதானூர் பகுதியைச் சுற்றியுள்ள ஒடுக்கப் பட்டோர்களுக்கெல்லாம் வெறும் மிச்சர் பொட்டலம் கொடுத்து “உங்கள் ஓட்டுக்களை எல்லாம் நாங்கள் போட்டுக் கொள்கிறோம்” என்று திருப்பி அனுப்பப் பட்டதால்தான்

இவ்வாறெல்லாம் ஜனநாயகம் செழிப்பாக இருந்த இடத்தில் இன்று எதிர்த்து போராடினால் கையைக் கட்டிக்கொண்டு அவர்களால் வேடிக்கைப் பார்க்க முடியுமா?  அதனால்தான் தேவர் குரு பூசை அவரின் நினைவிடமான, பசும்பொன் பகுதி மக்களால் மட்டும் கொண்டாடபட்டு வந்த நிலையில் அரசியல் கட்சிகளில் உள்ள தேவர் சாதியத் தலைவர்களாலும் தேவர் சாதிய அமைப்புகளாலும் தனது ஆதிக்கம் பறிபோவைதைச் சகிக்க  முடியாமால் அதனைத் தடுக்க தமிழகம் தழுவிய விழாவாக மாற்றி சாதிய உணர்வை கடந்த பத்தாண்டுகளாக நெருப்பு மூட்டி வளர்க்கின்றனர்.

ஜெயலலிதா, கருணாநிதி,மு.க. ஸ்டாலின், புதிய அரசியல் அவதாரம்  விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னணி நடிகை நடிகர் பட்டாளம் என விதி விலக்கின்றி அனைவரும் தேவர் பூசையில் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஆனால் இமானுவேலின் நினைவு நாளைப்பற்றி வாயைக்கூட திறப்பதில்லை.

ஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது “நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது சாதிய அரசியலை பகிரங்கமாக கூறுவதற்கு ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை.

போலீசின் மாட்சிமையையும் அறிந்துக் கொள்ளாமல் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ள முடியாது. “நாயுடனும் பன்னியுடனும் உறவு கொள்ள முடியுமா” என்ற தேவர்சாதி வெறியன் சண்முகையா பாண்டியனின் பேச்சு ஒலி நாடா அவரது பொதுக்கூட்டங்கள் தோறும் ஒலிபரப்பப்படுகிறது. இராமநாதபுரத்தில் இவர் நடத்திய மாநாட்டிற்கான  சுவர் விளம்பரத்தில் ஒரு மனிதனின் தலையை வீச்சரிவாளால் வெட்டுவது போலவும் அதிலிருந்து இரத்தம் சொட்டுவது போலவும் வரைந்திருந்தனர். ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்ற கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் முழக்கத்தை எழுதினாலே பயங்கரவாதம், தீவிரவாதி என்று வழக்குப் போட்டுச் சித்திரவதை செய்யும் போலிசிற்கு இச்சுவரெழுத்தும் பேச்சும் வன்முறையைத் தூண்டுவதாகத் தெரியவில்லை. கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர்.

தேவர் பூசைக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அவர்களின் வெறிக்கூச்சலையும் கடை உடைப்புக் கலவரங்களையும் கைகட்டி வேடிக்கையும் பார்க்கும் போலீசு, இமானுவேல் சேகரனின் நினைவு நாளன்று நினைவிடத்துக்கு வருபவர்களை வழிமறித்து “சோதனை” என்ற பெயரில் பயபீதியூட்டி முடிந்தவரை தடுக்கப்பார்க்கிறது. இவ்வாண்டு இவ்வாறு பார்திபனூரில் போலீசு தடுத்ததால் கண்ணீர் புகைக் குண்டு வீசுமளவுக்கு கலவரம் ஏற்பட்டது. அவ்வாறு ஆதிக்க சாதியினர் தடுத்து கலவரம் செய்யும் பொழுதும் பாதுகாப்புத் தராமலும் கலவரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுக்கிறது.

ஜனநாயக அரசாங்கங்களும் தேவர் பூசையை அரசு விழாவாகக் கொண்டாடி மகிழ்சியடைகிறது. அரசு எந்திரமான போலீசு தனது அறிவிக்கப்படாத கொள்கையாக் கொண்டு ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.

ஆனால் “காலச் சக்கரம்” இதனை தொடராக அனுமதிக்க முடியாததல்லவா! முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் தடுத்துவிட முடியாது!  பல ஆண்டுகளாக சிறு அளவில் நடத்தப்பட்டு வந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவும் கடந்த 3 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தேவர் பூசைக்கு எதிராக அதே பார்பனியச் சடங்குகளுடன் நடத்தப்பட்டாலும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவே இவ்விழா உள்ளது. இவர்களிடையேயுள்ள பார்பனியக் கலாச்சார பழக்கமும், சொத்துடைத்த பணக்கார வர்க்கமும் பார்பனியக் கலாச்சாரப் பாதையில் இழுத்துச் செல்லும் சமூகச் சூழ்நிலையாக உள்ளது.

அதனால் இன்று ஓட்டுக்கட்சிகள் பலவும் தலைவர்கள் செல்லாமல் பகுதியிலுள்ள எம்.எல்.ஏக்களையோ அல்லது இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைவர்களையோ இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பங்கேற்கச் செய்கின்றனர். ஆனால் தங்களுடைய தலைவர்களின் படத்துடன் இமானுவேல் சேகரனின் படத்தையும் அச்சிட்டு பேனர்களாக நிறுத்தியுள்ளனர். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக வேடமிடுகின்றனர்.

தம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை செய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது! சாதிய ஒடுக்குமுறைக்குக் கட்டுப்பட்டு ஓட்டுப்போட்டது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் பரிமாணத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாலும், அனைத்து கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசுவதாலும் இப்படிப்பட்ட செண்டிமென்டல் கபட நாடமும் ஓட்டுக் கட்சிகளுக்குத் தேவையாக உள்ளது.

ஓட்டுக் கட்சிகளின் கபட நாடகங்களையும் தன் ஜாதிக்குள்ளேயே உள்ள நவீன பணக்கார வர்கத்தின் சூழ்ச்சியையும் உணர்ந்து கொள்ளாது “ஆட்டை பலி கொடுத்தவன் அதனையே சாமிக்கும் படைப்பதுபோல்” ஒடுக்கப்பட்ட மக்கள், முளைப்பாரி எடுப்பது வேல் குத்துவது போன்ற பார்பனிய கலாச்சாரதிலும், சீரழிவுக்குக் கலாச்சாரத்திலும் மூழ்கடிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான அரசியல் போராட்ட உணர்வுகளை இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியாக வெளிப்படுத்துகின்றனர். இமானுவேல் சேகரனின் தியாகம் பார்பனியத்தின் காலடியில் அடகு வைக்கப்படுகிறது.DECORAM போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தம் பங்கிற்கு களமிறங்கி சோறு தருகிறோம் பால் தருகிறோம் என்று அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுகிறது.

சாதிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட பசும்போன் தேவரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது என்னவகை நியாயம்? இது ஜனநாயக அரசாங்கமா? அல்லது மனு தர்ம அரசாங்கமா? இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதும் தேவர் பூசையை அரசு விழாவிலிருந்து நீக்குவதுமே ஜனநாயக நடவடிக்கையாக இருக்கமுடியும். சும்மா அம்பேத்காரைப் போற்றுவதும் பெரியாரின் வாரிசுகள் என்று வாய் கிழிய கத்துவதும் கதைக்குதவாது.

பன்னெடுங்காலமாக சாதிய ஒழிப்பைத்தான் ஒடுக்கப்பட்டோர் வேண்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறையை நிலைநாட்டுபவர்கள் ஆதிக்க சாதியினரே.  ஓட்டுக் கட்சிகளின் புதிய அவதாரமான சமரசப் போக்கெல்லாம் சாதிய ஒழிப்பைத் தராது. அதனால் ஒடுக்கப்பட்டோர் தம்மிடமும் உள்ள பார்பனியக் கலாச்சாரங்களைக் களைந்து பிற சாதிய உழைக்கும் மக்களுடன் சாதியம் பாராமல் ஒன்றிணைந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையின் கீழ் ஆதிக்க சாதிய வெறியர்களுக்கெதிராகப் போர்குணமிக்க அரசியல் போராட்டங்களை நடத்தாமல் முளைப்பாரி எடுப்பதும் மொட்டை அடிப்பதும் சாதி ஒழிப்புக்கு தீர்வாகாது.

-கட்டுரையாளர்கள் தோழர்கள் சாகித், ஆனந்த்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

இந்து மதம் கேட்ட நரபலி !

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

சென்னையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி பொலிட்பீரோ தோழர் சிறப்புரை!

நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்!

அரங்கக் கூட்டம்

செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி

இடம்: தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர்

தலைமை: தோழர் அ. முகுந்தன்
தலைவர்: பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை: தோழர் பசந்தா
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
நேபாள ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

  • மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் மன்னராட்சியை அகற்றிய நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஆட்சியிலிருந்து விலகியது ஏன்?
  • புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான தடைகள் என்ன?

கூட்ட ஏற்பாடு: இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்

தொடர்புக்கு: அ.முகுந்தன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24 தொலைபேசி: 94448 34519

புதிய கலாச்சாரம் – 99411 75876

வினவு – 97100 82506

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

ஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்!

46

ழத்தில் உள்ள அநேகமான தடுப்பு முகாங்களுக்கு சென்ற பிறகு தந்த அனுபவங்களை பெரும் மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். சில தடுப்பு முகாங்களுக்குள் சில நாள்கள் வாழ நேர்ந்ததும் அவ்வப்போது அவற்றுக்கு சென்று வரும்பொழுதும் பல விடங்கள் அதிர்ச்சியளிக்கிறவிதமாக இருக்கிறது. அண்மையில் உன்னதம் ஜூலை இதழில் கௌதம சித்தார்த்தனுடன் நடத்திய நேர்காணலில் இந்த தடுப்பு முகாங்கள் பற்றி சுருக்காமாக பேசியிருந்தேன். அண்மையில் வவுனியா தடுப்பு முகாங்களை பார்வையிட்ட பிறகு ஏற்பட்ட அனுபவங்கள் பயங்கரமாக ‘பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள் பற்றிய துயரங்களை பெரியளவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பயங்கரமாக பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள்

000

இப்பொழுது ஈழத்தில் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் பற்றிய துயரம் எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. ஈழத்தின் வடக்குப் பகுதி முழுவதும் பல தடுப்பு முகாம்கள் அமைக்ப்பட்டு வன்னியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 முகாம்கள் இருக்கின்றன. மொத்தமாக எழுபதாயிரம் பேர் வரையாவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லாரை தடுப்பு முகாம் மண்மேடுகாளாலும் முட்பம்பிகளாலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றுடன் கைதடி தடுப்பு முகாம், நாவற்குழி தடுப்பு முகாம், மிருசுவில் தடுப்பு முகாம், கொடிகாமம் தடுப்பு முகாம் என்று பல முகாங்கள் இருக்கின்றன. முகாம்களுக்கு முகாம் இராணுவத்தினா; வெவ்வேறு விதிகளை ஏற்படுத்திக்கொண்டு, வெவ்வேறு நடைமுறைகளைக் கையாண்டு கொண்டு தமது அதிகாரத்தை பல வடிவங்களில் பல கோணங்களில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தடுப்பு முகாங்கள் வெறும் சிறைச்சாலைகளாக மட்டும் இல்லை அவை மனதளவில் பாரிய விளைவுகளையும் உளைச்சல்களையும் மாற்றங்களையும் உண்டு பண்ணுகிற திறந்த தண்டனைக் களங்களாகவும் இருக்கின்றன. போர் வடுக்களை மேலும் வதைப்புக்குள்ளாக்கிற காலத்தின் சிறையாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்து தடுப்பு முகாங்களையே பார்த்து ஜீரணிக்க முடியாத எனக்கு வவுனியா தடுப்பு முகாங்களுக்கு செல்ல நேர்ந்தபோது மனதில் மேலும் பெரு அவலம் விளைந்தது.

வவுனியா நகரத்திலிருந்து செட்டிக்குளத்தில் இருக்கும் தடுப்பு முகாம் நோக்கி பயணத்தை தொடங்கினேன். வவுனியா நகரத்திற்குள் வைத்தியசாலைக்கு பின்பக்கமாக ஒரு தடுப்பு முகாம் இருக்கிறது. மன்னார் வீதியில் வவுனியா காமினி மகா வித்தியாலயம் என்ற சிங்கள பாடசாலையில் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்ட ஆண் மாணவர்கள் உள்ளடங்களான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் முட்கம்பிகளுக்கால் எப்பொழுதும் தெருவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கும் காமினி மகாவித்தியாலய வேலிக்குள் இடையில் கிடட்டத்தட்ட ஐந்து முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேப்பங்குளத்தில் இருக்கிற முஸ்லீம் பாடசாலையிலும் அப்படித்தான் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். நெளுக்குளம் கல்வியல் கல்லூரியில் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்க பம்பமடு பல்கலைக்கழக கட்டிடத்தில் பெண்களும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். அவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும். அதுவும் அவர்களது பெற்றோர்கள் மட்டுமே பார்க்க முடியும். கட்டாய ஆட்சோர்ப்புக்குள்ளானவர்களை தடுத்து வைப்பதற்கு பம்பமடுவை சூழ உள்ள பகுதியிலுள்ள காடுகளை வெட்டி அதில் நீல மற்றும் வெள்ளை நிறமான இறப்பர் கூடாரங்களை அமைத்து முட்கம்பி வேலிகளை படையினர் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் கல்வி கற்ற மற்றும் தொழில் புரிந்த இளைஞர்களை பலவந்தமாக கொண்டு சென்று ஆயுதப் பயிச்சி அளித்தும் அளிக்காதும் அவர்களிடம் துப்பாக்கியை கொடுத்து கள முனைகளில் நிறுத்தினார்கள். அவர்களில் அநேகமானவர்கள் படையினரிடம் சரணடைந்திருக்கிறார்கள். அவர்களை இப்பொழுதுக்கு அவர்களின் குடும்பங்களுடன் இணைத்து விடும் எண்ணம் அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை. கட்டாய போருக்கு கொணடு சென்று மனதளவில் பாதிக்கப்படட அவர்கள் தற்போது இராணுவத்தின் வதைச்சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பொழுதே செத்துப்போயிருக்கலாம் என்பதைத்தான் பார்க்க போகும்பொழுதெல்லாம் தனது மகன் சொல்லுவதாக ஒரு தாய் பேருந்தில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்களில் பலர் மொட்டை அடிக்கப்பட்டிருந்தார்கள். தொடர்ந்து அவர்களுக்கு மொட்டை அடிப்பதுடன் இரவு நேரங்களில் கொடுமையான சித்திரவதைகளையும் படையினர் செய்கிறார்கள். அவர்கள் வரிசையாக நின்று உணவினை பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

முழுக்க முழுக்க வன்னிப்போருடன் தொடர்பு பட்ட இந்த மக்கள் அவற்றைப் பற்றி வைத்திருக்கிற நினைவுகள் சொல்லுகிற கசப்பான அனுபவங்கள் அவர்களை தொடர்ந்து மன வதைப்பிற்கு உள்ளாக்குவதுடன் தொடர்ந்து இந்தச் சூழல்  வதைப்பிற்குள்ளும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். யாரிடம் போனாலும் யாரைப் பார்த்தாலும் நடந்தவைகளை சொல்லத் தொடங்குகிறார்கள். உண்மைக்கு எதிரான புனைவுகள் சிதறுகின்றன. இராணுவத்தின் போர் வெறிக்குள்ளும் புலிகள் அரணாக நிறுத்திய துயரத்தையும் துப்பாக்கிகளை தமக்கு எதிராக திருப்பி நீட்டிய புலிகள் பற்றியும் கதைகளையும் அவர்கள் சொல்லுகிறார்கள்.

வன்னிப்போர் விளைவித்திருக்கிற இந்த முகாம்கள் அந்தச் சனங்கள் அனுபவித்த போர் துயரத்தின் நீட்சியாக  அவர்கள் மீதே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

000

வவுனியா ‘மெனிக்பாம்’ தடுப்பு முகாம் எனறுதான் எல்லோராலும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களும் வவுனியாவிற்கு வெளியிலிருப்பவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மெனிக்பாம் என்பது 1996ஆம் ஆண்டு வன்னியிலிருந்து இடம்பெயாத்ந்தவர்களை செட்டிக்குளத்தில் குடியிருத்திய கிராமம். மதவாச்சியிலிருந்து மன்னாருக்குச் செல்லும்பொழுது வலது பக்கமாக இருக்கிறது அந்தக் குடியிருப்பு. இடது பக்கமாக இருந்த பெருங் காடுகளை அழித்து அப்பகுதியில் ஆறு தடுப்பு முகாங்கள் தொடர்ச்சியாக அமைக்பப்பட்டிருக்கின்றன. பிரமாண்டமான முட்கம்பிகளால் அமைக்கப்பட்ட இந்த தடுப்பு முகாங்கள் கிட்டத்தட்ட ஏழு-ஏழு கிலோமீற்றர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து மதவாச்சி மன்னார் வீதியில் இடது பக்கமாக முதலில் ‘வலயம் ஆறு’ தடுப்பு முகாம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கதிர்காமர் முகாம், ஆனந்தகுமாரசாமி முகாம், இராநாதன் முகாம், அருணாச்சலம் முகாம், வலயம் நான்கு, வலயம் ஐந்து முதலிய முகாம்கள் பக்கம் பக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முகாமிற்கும் கிராம அலுவர், மாவட்ட செயல அலுவலகம் என்பன காணப்படுகிறது. இந்த சிவில் அலுவலகங்கள் எதையும் தீர்மானிக்க முடியாது. ஓவ்வொரு வலயத்திற்கும் “ஷோன் கொமாண்டர்” எனப்படுகிற இராணுவ பொறுப்பதிகாரிகள்தான் எல்லா விடயத்தையும் தீர்மானிக்கிறார்கள்.

காடுகள் வெட்டி ஒதுக்கப்பட்ட பெரும் வெளியில் சிவப்பு மண்ணின் புழுதியையும் தூசுகளையும் காற்று முகங்களில் அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. கடுமையான வெப்பத்தில் உடல் எரிவுடன் வியர்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு தடுப்பு முகாமின் முன்னாலும் அவர்களை சந்திப்பதற்கு உறவுகள் வந்து போய் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பிரிக்கப்பட்ட முட்கம்பிகளுக்குள் நின்றுகொண்டு தூரத்தில் தங்கள் உறவுகள் வந்து நிற்பதாக கைகளை காட்டிகொண்டிருப்பதும் வேறு எவரையோ தங்கள் உறவு என கைகாட்டி ஏமாறுவதுமாக இருந்தது முன்பக்கம். கடுமையான வெயிலிலும் மழையிலும் துணிகளை தலையில் போட்டுக்கொண்டு யாராவது வருவார்கள் என்று அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

சந்திக்கும் இடத்திற்கு தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது என இராணுவம் சுலோகங்களை எழுதி விட்டிருந்தது. சிம் காட்டுகளையும் சார்ஜ்யர்களையும் கொண்டு போனால் கடுமையான தண்டனை என்றும் மிரட்டிக்கொண்டிருந்து. சில தடுப்பு முகாங்களில் அதனை வாங்கி வைத்துவிட்டு டோக்கன்களை கொடுக்கும் இராணுவம் சில முகாங்களில் அவற்றை வாங்கி வைத்திருக்காமல் கொண்டு போகவும் கூடாது என சொல்லிக்கொண்டிருந்தது. வந்தவர்கள் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். சில முகாங்களில் சந்திக்கும் இடத்திலேயே சாப்பிட்டு செல்லுவதற்கான உணவு முதல் எந்தப்பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள் இல்லை. ‘கோமரசன் குளம்’ என்ற இடத்தில் இருக்கிற தடுபபு முகாமில் கொண்டு சென்ற உணவுப் பொருட்களை தூரத்தில் வைத்து விட்டு உள்ளே வந்து சந்திக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் படையினர். பணியில் நிற்கிற இராணுவத்தினர் ஆளுக்கொரு சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். பொறுப்பிலிருக்கிற ‘கொமாண்டோக்கள்’ வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

இங்கு பணிபுரிகிற தொண்டு நிறுவனப் பணியாளார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் தமது பணிகளை சரியாக செய்ய முடியாதிருக்கிறார்கள். எனினும் சில தொண்டு நிறுவனங்களின் உதவிகள் மக்களுக்கு கிடைக்கிறது. அவார்கள் அதனை வைத்தே காலத்தை கடத்துகிறார்கள். ஆடை, சவற்காரம், பற்பசை, சில சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை அவர்கள் வழங்குகிறார்கள். மக்கள்மீதும் தொண்டு மீதும் ஆர்வமுள்ள பல உள்ளுர் இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் படையினரது கடுமையான சோதனை நடவடிக்கைகளை எதிர் கொண்டே அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

சிலவேளை சந்திக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு 4 தொடக்கம் 5 மணிநேரங்கள் கால் கடுக்க நிற்க வேண்டியிருக்கிறது. செட்டிக்குளத்தில் உள்ள முகாங்களில் உறவுகளை சந்திப்பதற்கு எப்பொழுதும் சனங்கள் திரண்டபடியிருக்கிறார்கள். வந்ததும் உறவுகளின் பெயர் அவர்களது கூடார இலக்கம்; கூடாரம் அமைந்திருக்கிற பிரிவு இலக்கம் என்பவற்றை கொடுத்து ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வருவதற்கு ஒன்று தொடக்கம் இரண்டு மணிநேரங்கள் கூட எடுக்கிறது. மிகவும் தூரத்திலிருந்தும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வர வேண்டும். சிலவேளை அவர்களது கூடாரம் அமைந்திருக்கும் பகுதிக்கு அந்த அறிவிப்பு கேட்காமல் விட்டால் அவர்கள் உறவினரை சந்திக்காமலே திரும்பிச் செல்லவும் நேரிடுகிறதையும் காண முடிந்தது.

உறவுகளை சந்திப்பதற்கு அரை மணிநேரம் முதல் இருபது நிமிடம் பத்து நிமிடம் ஐந்து நிமிடம் என்று வழங்கப்படுகிறது. இதுவும் முகாங்களுக்கு முகாம் வித்தியாசப்படுவதுடன் நிற்கும் படையினர் நாளுக்கு நாள் வித்தியாசமாக நேர சூசிகையை வைத்திருக்கிறார்கள். வரிசையில் நின்று அந்த நேரத்தில் அறிவிப்பதற்கு விபரத்தை கொடுத்து விட்டு மீளவும் வரிசையில் நின்று சென்று சந்தித்துக்கொண்டிருந்தார்கள் சனங்கள். சந்திக்கும் இடமோ மிகவும் பிரமாண்டமாக முட்கம்பிகளால் பின்னப்பட்டிருந்தது. இரண்டு முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் நின்று ஒருவரை ஒருவர் தழுவும் முடியாமல் பிள்ளைகள் ஒரு பக்கம் தாய்மார் ஒரு பக்கம் என்றும் அதுபோல ஏனைய பிரிந்த உறவுகள் அழுதுகொண்டு நின்றார்கள். துயரத்தின் சொற்களும் கண்ணீரும்தான் சந்திக்கிற கொட்டில்களினுள் நிறைந்து கிடந்தன. உலுக்குளத்திலிருக்கிற தடுப்பு முகாமில் இரண்டு வேலிகளுக்கு இடையில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் போட்டு அடுக்கப்பட்டிருந்தன. தமது குழந்தைகளை உறவினரிடம் கொடுத்து விடுவதனால்தான் இப்படி விரிசலான வேலிகளை போட்டிருப்பதாக இராணுவம் சொல்லுகிறது. சந்திக்க வருபவர்கள் முகாங்களுக்கு முகாம் அவைகளின் வாசல்கள் தோறும் அலைந்து கொண்ருப்பதைத்தான் எங்கும் பார்க்க முடிந்தது.

000

இந்த பிரமாண்டமான தடுப்புக் முகாம்களின் ‘உள்ளே’ செல்ல முடிந்தபோது மனம் கனத்து மனதில் பெரும் துயரம் பரவிக்கொண்டிருந்தது. ஒரு பெரிய சனக்கூட்டம் தடுத்து துப்பாக்கிகளாலும் இராணுவ காவலிலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்து ஏமாற்றப்பட்ட மக்களாக அவர்கள் நிற்கிறார்கள். அந்தரம் ஏக்கம் தவிப்பு என்பவற்றுடன் இந்த முட்கம்பிச் சுருள்களுக்குள் அவர்களது வாழ்க்கை நசிந்துகொண்டிருந்தது.

அருகருகாக தகரங்களாலும் இறப்பர் கூடாரங்களிலும் மக்கள் இருந்தனர் ஒரு கூடாரத்தில் இரண்டு குடும்பங்கள் நான்கு குடும்பங்கள் என்று தங்க வைக்கப்பட்டிருந்தன. தலைமுடியில்லாத பெண்கள் மற்றும் சிறுமிகள் அநேகமான கூடாரங்களின் முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழுகிக்கொண்டிருக்கும் குழாய் தண்ணீரில் வெறும் வெளியில் நின்று குளித்துக்கொண்டிருந்தார்கள். பெண்களும் குழந்தைகளும் தண்ணீருக்காக காத்துக்கொண்டு நின்றார்கள். சில இடங்களில் தண்ணீர் குழாய்கள் கிடங்கில் தாழ்த்து வைக்கப்பட்டிருக்க அதற்குள் இறங்கி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாh;கள். தண்ணீருக்கான ‘டோக்கன்கள’; கயிறுகளில் கொழுவப்பட்டிருந்தன. மதியம் கொலுவிய டோக்கனுக்கு இரவு 12 மணிக்குத்தான் தண்ணீர் பெற முடிகிறது.

கடைகள் தடுப்பு முகாங்களின் உள்ளே இருக்கின்றன. கூட்டறவு கடைகள், பலபொருள் விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. கூடாரங்களோ நிமிரமுடியாதவையாக இருந்தன. வெம்மையை மழைபோல அவை பொழிந்துகொண்டிருந்தன. அவைகளுக்குள் நோய் வாய்ப்பட்ட மெலிந்த சனங்கள் கொடுமையான வெயில் எரித்துக்கொண்டிருக்கும் பொழுதிலும் படுத்திருந்தார்கள். மலசலகூடங்கள் ஆபத்து நிறைந்த கிடங்குகளாக இருந்தன. கூடாரங்களுக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருப்பதுடன் அவை எப்பொழுதும் நாற்றம் வீசிக்கொண்டிருந்தன. இலையான்கள் நிறைந்து கிடந்தன. அதிகாலை விடிய முதலே மலசலகூடத்திற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

இப்படி தண்ணீருக்கும் மலசலகூடத்திற்கும் கடையில் பொருட்களை வாங்குவதற்கும் பக்கத்து முகாமில் உள்ள உறவுகளிடம் செல்ல வரிசையில் நிற்பதுடன் அவர்களின் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. பக்கத்தில் உள்ள முகாமிற்கு செல்லுவதற்குகூட பல அனுமதிகளை பெற்று பல மணிநேரம் காத்து சிலவேளை வெறுமையுடன் திரும்புவர்களை பார்த்திருக்கிறேன். அங்கு நிற்கிற படையினர் மக்களை கடுமையாக கேவலமாக நடத்திக்கொண்டிருந்தார்கள். மிகவும் காட்டு மிராண்டித்தனத்துடன் தடிகளுடன் நிற்கும் மிகவும் இளம்வயது படையினர் எல்லோரையும் தாக்கிக்கொண்டு நின்றார்கள். சிவப்பு புழுதியால் படிந்து கிடக்கின்றன இந்த கிரராமங்களும் கூடாரங்களும். ஒவ்வொரு துண்டு நிலத்தையும் கழிவு வாய்க்கால் பிரித்து கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

அங்கு சமைத்து கொடுக்கும் சாப்பாட்டினால் வயிற்றுளைச்சல் போன்ற நோய்கள் வருவதாக சொல்லுகிறார்கள். அங்கு குழுக்குழுவாக சேர்ந்து சமைக்கிறார்கள். உணவினை பெறுவதற்கு சிலவேளை மாலை மூன்றுமணிகூட எடுக்கிறது. சிலர் தங்கள் கூடாரங்களில் முன்பாக சிறிய அடுப்புக்களை வைத்து அதில் முடியுமான உணவினை சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சைவமத குருமார்கள் வேறு ஒரு பகுதியில் பிரத்தியேகமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். காலையில பெரும்பாலும் கஞ்சிதான் கிடைக்கிறது என்று ஒரு சிறுமி வெறுத்தபடி சொல்லுகிறாள். அந்தச் சாப்பட்டை சாப்பிட்ட பிறகு எப்பொழுது உணவினை தூக்கினாலும் எனக்கு அந்த சாப்பாடும் அழுகையும்தான் வந்து முன்னுக்கு நிற்கின்றன.

பள்ளி செல்லும் பிள்ளளைகள் கலார் சட்டைகளுடன் பள்ளிக்குடம் சென்றுகொண்டிருந்தார்கள். சிறுமிகள், பெண்கள் பாலியல் வதைப்புக்குளுக்கம் மீறல்களுக்கம் உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் கொண்ருக்கிற பெற்றோர்கள் அது பற்றி விழிப்புடன் இருக்கிறார்கள். சில இடங்களில் அப்படி நடந்ததாக சொல்லும் ஒரு தாய் தனது பிள்ளைகளை தனியாக கடைக்கும் பாடசாலைக்கும் அனுப்புவதில்லை என்று கூறினாள். அங்கிருக்கும் சிறிய மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டவர்கள் நிறைந்திருந்தாhக்ள். கறுத்து மெலிந்து போனவர்களின் அப்படியேயிருக்கிற பிள்ளைகள் எங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். யுத்த களங்களின் வெம்மையால் அவர்களது தோல் ஒரு விதமாக கறுத்துப்போய் பழுதடைந்த மாதிரி இருக்கிறது. அந்த நிலத்து புழுதி சேறு என்பன பிறண்ட ஆடைகளுடன் வெம்மை தோய்ந்த உருவங்களுடன் இருக்கிறார்கள்.

மழை பெய்யப்போகிறது என்றவுடன் அச்சமடைந்தார்கள் சனங்கள். சில கூடாரங்களின் கீழாக வெறும் நிலத்தில் தரப்பால் விரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றால் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மழையோ திரும்பத் திருப்ப பெய்து கொண்டிருந்தது. சில கூடாரங்கள் தண்ணீரில் மிதக்கத் தொடங்கின. சேறும் சகதியுமாக மாறிக்கொண்டிருந்தது தடுப்புமுகாங்கள். வெம்மை அடங்கி குளிர் அதிகரிக்க குழந்தைகளை தூங்க வைக்க நிற்க இடமில்லாமல் தாய்மார்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சனங்களின் முகங்கள் ஊறிப்போயிருந்தன. இப்படியே நிலமையிருந்தால் பருவ மழையின்போது அவர்கள் பெரும் அழிவுகளையும் அவலத்தையும் சந்திக்கப் போகிறார்கள். ஏனென்றால் முக்காவாசி கூடாரங்கள் மிகவும் தாழ்வான பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

000

இந்த அனுபவங்கள் நிலைகுழையச்செய்து விட்டன. இவற்றை எழுதவும் முடியாத நிலைக்கு கொண்டு வந்தது. முன்பு வருகிற யுத்தக் கனவுகள் அற்று அந்த தடுப்பு முகாம் பற்றிய கனவே வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் விடுவிக்கப்படுகிறபோதும் மீள குடியமர்த்துவதன் வாயிலாகத்ததான் இடப்பெயர்வின் பேரவலத்தை தடுத்து நிறுத்தலாம். யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்படுவதாக அரசு சொன்னதும் பலரும் தாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று பதிந்து வெளியேறிவிட திட்டமிடுகிறார்கள். வெளியேறி உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருக்கிறார்கள். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் இப்படி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் வன்னி மக்களில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பேரே இதுவரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகரசபைத் தேர்தலுக்காக  சில மக்களை விடுவிப்பதன் முலம் அரசாங்கம் வாக்குகளை பெற திட்டமிட்டிருந்தது. சில அழுத்தங்கள் ஊடக பதற்றங்களை தவிர்ப்பதற்கு குறிப்பிட்டளவு மக்களை விடுவிக்கிறது.

சாம்பலாகிப்போயிருக்கிற வன்னி மண்ணை தனது கையிற்குள் வைத்திருக்கிறது அரசு. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற படைகளையும் பார்த்தேன். அவர்களிடம் இப்பொழுதுக்கு வன்னி மக்களை மீள் குடியமர்த்தும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. சிங்கள பெயர் பலகைகளையும் புத்தர் சிலைகளையும் இராணுவ பிரிவு தளங்களையும் நிறுவுகிறார்கள். பெருங் காயங்களுடன் பேரமைதியுடன் பெருந்துயரத்தை பிரதிபலித்தபடியிருக்கிறது வன்னி நிலம். வீழ்த்தி எடுத்த நிலத்தில் படையினர் மட்டும் விரும்பியடி வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். வன்னி நிலத்தின் அடையாளம், வளங்கள், சேமிப்புக்கள் சுரண்டப்படுகின்றன.

மேலும் மேலும் நம்மை பதற்றத்தில் உள்ளாக்கிற வித்தில் மிக நுட்பமாக வன்னி நிலம் அழிக்கப்பட மறுபுறத்தில் அதன் சனங்கள் மிகக்கொடூரமாக சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்பு முகாங்களின் வாசல்களிலும் அதற்கு உள்ளாக எங்கும் ஜனாதிபதி மற்றும் அவரின் சகோதர்ர்களின் புகைப்படங்களை பெரிய அளவில் நிறுவியுள்ளார்கள். சனங்களின் நிலத்தை வென்ற யுத்த வெற்றியின் களிப்பு ஏறிய அந்த முகங்கள் துயர் மிகுந்த அந்தப் பகுதியில் அவருவருப்பான முகங்களாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. சிங்களத் தேசியகீதம், சிங்களக் கொடி, சிங்கள ஜனாதிபதி என்பவைகளின் முன்னால் பிணங்களாக எமது சனங்கள் அடுக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களால் இலங்கை- சிங்கள தேசியத் திணிப்பை ஏற்றக்கொள்ள முடியாதிருக்கிறது. வேற்று நாட்டில் வாழ்வதைப்போலவும் வேற்று நாட்டுப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதைப்போலவும் இருக்கிறார்கள் இந்தச் சனங்கள்.

வவுனியாவில் இருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிற செட்டிக்குளம் பகுதியில் வாழ்வு மீது நிகழ்த்தப்படும் இந்த துயரை பார்க்கும்பொழுது இன்னும் கொடுமையாயிருக்கிறது. மக்கள் வெளியேற்றப்ப்ட வன்னி நிலம் தவிர்ந்த வடக்கு பகுதி முழுக்க இப்படி தடுப்பு முகாங்கள்தான் நிறைந்து கிடக்கின்றன. எங்கும் பார்க்க முடியாத அறிய முடியாத துயரங்கள் நிகழ்ந்தேறுகின்றன என்பதைத்தான் ஒவ்வொரு நாளும் உணர முடிந்தது. சில நாட்களுக்குள் முகாங்களுக்குள் வாழ்ந்து அவ்வப்போது போய் வருகிற எனக்கே இப்படி பதற்றமாக இருக்கிறபோது அவைகளுக்குள் வாழ்கிறவர்களின் அனுபவங்களை சொற்களில் நிரப்ப முடியாததாகவே இருக்கிறது.

மீறப்பட்ட போர் விதிகளையும் இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்களின் அகதி விதிகளையும் மனிதாபிமான அமைப்பு எனறு சொல்லுகிறவையும் அதிகார நாடுகளும் அறிந்திருந்தும் கொஞ்சமேனும் மாற்ற முடியாத அதிகாரமற்ற தன்மையிலும் அக்கறையற்ற தன்மையாலும் இருக்கின்றன. அகதிகளுக்கானதாக சொல்லுகிற அய்.நாவால் என்ன செய்ய முடியும்? அது இந்த அகதிப்பேரவலத்திற்கு காரணமானதாக இருக்கிறது. இப்படி இந்த குற்ற நாடுகளின் குற்ற அதிகார அமைப்புக்களை அடுக்கிக்கொண்டே போக முடியும். தங்கள் சின்னங்களை அவர்கள் அகதிகளாக எமது சனங்கள்மீது மிக ஆழமாக பொறித்திருக்கிறார்கள். எமது மக்கள் இந்த அகதிச் சின்னங்களிலிருந்து எப்பொழுது விடுபடுவார்கள் என்ற ஏக்கம் அந்த மக்களைப்போல எங்கள் பலருக்கு இருக்கிறது.

எமது சனங்களை நிரந்தர அகதிகளாக்கி இந்த வெம்மை மிகுந்த வனங்களில் நிரந்தரமாக தடுத்து வைக்கப்பட்டாலும் அதனை யாராலும் கேட்க முடியயாது. இலங்கை அரசு நினைத்தால்தான் மீள சனங்களை நிலத்தில் குடியிருத்தும். அது நினைத்தால் எமது மக்களின் மண்ணை நிரந்தரமாகவே பறித்து விடும். இலங்கை அரசு என்பது அதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அவரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபாயராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்பியுமான பசில் ராஜபக்ஷ முதலியவர்களின் அதிகாரத்திற்குள் இருக்கிறது இந்த விவகாரம். இந்த மூன்று தனிநபர்களாலும் மூன்று லட்சத்திற்கு மேற்பாட்ட சனங்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு கொள்ளப்பட வைத்த சனங்கள்; தாய் நிலத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள. கொடுமையாக உலகம் நடத்திய ஒரு யுத்ததின் விளைவாகத்தான் இப்படி அதிகாரத்தின் முட்கம்பிகள் மக்கள் மீது பிரமாண்ணடமாகவும் குறுக்கும் மறுக்குமாகவும் பயங்கரமாகவும் பின்னப்பட்டுள்ளன.

-தீபச்செல்வன், உன்னதம்’2009

தீபச்செல்வன் ஈழத்தை சேர்ந்தவர், கவிஞர். இவரது கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளன. தமிழக சிறுபத்திரிகைகளில் இவரது எழுத்து காணக்கிடைக்கும். கிளிநொச்சியை பூர்விகமாகக் கொண்ட தீபச்செல்வனது தங்கையும், தாயும் வவுனியா தடுப்பு முகாமில் உள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அவர்களை சந்தித்திருக்கிறார்.

இங்கே வன்னியின் தடுப்பு முகாம்களின் இரத்தமும், சதையுமான அவல வாழ்வை நேரில் கண்டு மனமுடைந்து இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஏதோ அகதி முகாம் என்று ஈழத்தைப் பற்றி கவலைப்படுபவர்களது மனதில் இந்த வதை முகாம்களின் நிஜங்களை ஒரு நெஞ்சை உலுக்கும் திரைப்படம் போல காண்பிக்கிறார். உன்னதம் இதழில் வெளியான இந்தக் கட்டுரையை இங்கு அனுமதியுடன் மீள்பதிவு செய்கிறோம். தீபச்செல்வனின் வலை முகவரி http://deebam.blogspot.com/

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்



அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960-களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்” பதவி சுகம் கண்டு பொறுக்கித் தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி”களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலே, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழிந்தது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு” என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.

தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். “ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன்” என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்க விட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.

சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.

இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963-ம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு” நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.

மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25-ம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9-ம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமாகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.

இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு” எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.

ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957-ல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்” என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.

தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957-ல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.

கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்” ராஜாஜியை “குல்லுகப் பட்டர்” எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

1967-ல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.

நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி”யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.

“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்” என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” எனும் தத்துவம்(!)தான்.

அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக் காட்டினால் ஐம்பதாயிரம் கூடும். முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.

கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.

அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.

வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்” எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த ‘உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.

கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்” விளக்கம் வேறு தந்தார்.

எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்” பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70-களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90-களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்”, “தளபதி” என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.

பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.

கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.

___________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2008
___________________________________

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!

134

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் நடத்திய வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. National Aviators’ Guld தேசிய விமானிகள் அமைப்பு என்ற தொழிற்சங்கத்தை ஜெட் ஏர்வேசின் விமானிகள் ஆரம்பித்ததை ஒட்டி நிர்வாகம் இரண்டு விமானிகளை வேலைநீக்கம் செய்தது. மொத்தம் 750 விமானிகளில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விமானிகள் இந்த சங்கத்தில் இணைந்திருந்தனர். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக இரண்டு சக ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது விமானிகளுக்கு கடும் ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி இந்த விமானிகள் சங்கம் கடந்த வாரத்தில் நோய்விடுப்பு என்ற பெயரில் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது. சாதாரணமாக தொழிற்சங்கம் என்பது தொழிற்சாலைகளில்தான் இருக்கும் விமானிகளுக்கெல்லாம் எதற்கு சங்கம் என்று வெகுண்ட நிர்வாகமும் முதலாளியும் மேலும் இரண்டு விமானிகளை வேலை நீக்கம் செய்தனர். இதைக் கண்டு அஞ்சாத விமானிகள் தங்களது வேலை நிறுத்தத்தை காலவரம்பின்றி நீட்டித்தனர்.

வேலைநீக்கம் செய்த விமானிகளை பயங்கரவாதிகள் என்று தூற்றினார் ஜெட்ஏர்வேசின் முதலாளி நரேஷ் கோயல். தினமும் நாற்பது கோடி நட்டம் ஏற்படுவதோடு (ஐந்து நாள் நட்டம் 200 கோடியாம்), விமான நிறுவனத்தில் தொழிற்சங்கமெல்லாம் வந்து விட்டால் முதலிட்டாளர்கள் அச்சமடைவார்கள், என்றெல்லம் கணக்குப்பார்த்து கோயல் விமானிகளை புழுதிவாரித் தூற்றினார். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்த ‘குற்றத்திற்காக’ விமானிகள் பயங்கரவாதிகளானார்கள். விமானங்களை வைத்து இரட்டைக் கோபுரத்தை தகர்த்தாகக் கூறப்படும் பின்லேடனுடன் இப்போது ஜெட் ஏர்வேசின் விமானிகளும் சேர்க்கப்பட்டனர்.

ஊடகங்களும் ரத்தான விமான சேவைகளால் பாதிக்கப்பட்ட மேட்டுக்குடியின் சொந்தக் கதை சோகக்கதைகளை சென்டிமெண்டாக போட்டுத் தாக்கி விமானிகளை வில்லன்களாக்க முயன்றனர்.

ஆனால் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் விமானிகள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவேண்டுமென தொடர்ந்து போராடினார்கள். இந்த போராட்டத்தால் ஜெட்ஏர்வேசின் ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மாற்று பைலட்டுகளை வைத்து, அல்லது வெளிநாட்டு பைலட்டுகளை வைத்தாவது சர்வீசை தொடரலாம் என கணக்கு போட்ட கோயலின் முயற்சி பலிக்க வில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கும் அரசு மற்றும் மற்ற தனியார் விமானிகளும் இந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளித்தனர்.

முதலாளிகளிடம் கோடி கோடியாய் பணமிருந்தாலும் தொழிலாளிகள் இன்றி ஒரு தொழிற்சாலை இயங்க முடியாது என்ற உண்மை இங்கேயும் வேலைசெய்தது. நான்கைந்து நாட்களுக்கு பின்னர் பணிந்து வந்த நிர்வாகம் தொழிலாளர்கள் ஆணையத்தின் தலையீட்டின் பெயரில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இரண்டு நாட்கள் நெடுநேரம் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு விமானிகளையும் மீண்டும் வேலையில் சேர்க்க முதலாளிகள் ஒத்துக் கொண்டனர். தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை அதை அங்கீகரிக்கும் முடிவை தொழிற்சங்கங்களை பதிவு செய்யும் அரசுப் பதிவாளரிடம் விடலாமென முடிவு செய்யப்பட்டது.

ஜெட்ஏர்வேசின் நிர்வாக இயக்குநர் சரோஜ் தத்தா ” சில தவறான புரிதலால் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அன்பில் விரிசல் வந்துவிட்டது.இனிமேல் எந்தப் பிரச்சினை வந்தாலும் நிர்வாக தரப்பில் ஐவரும், விமானிகள் தரப்பில் ஐவரும் அடங்கிய கமிட்டி பரீசீலிக்கும் இனி ஜெட் ஏர்வேசின் ஊழியர்கள் அனைவரும் அன்பான ஒரே குடும்பமாக செயல்படுவோமென” திருவாய் அருளியிருக்கிறார். வேறு வழியின்றி ‘பயங்கரவாதிகளை’ குடும்பத்தில் ‘அன்பாக’ சேர்த்த கருமத்தைப் பற்றி அவரோ கோயலோ மனதிற்குள் எப்படி புழுங்கியிருப்பார்கள் என்பதை நாம்தான் மெனக்கெட்டு ஊகிக்க வேண்டும்.

விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் கிரீஷ் கவுசிக் தங்களால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், நீக்கம் செய்யப்பட்ட நால்வரை மீண்டும் பணியில் சேர்த்தமைக்காகவும் நிர்வாகத்திற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

தாராளமயம், தனியார்மயத்தை அமல்படுத்திய உலகமயத்தின் முக்கிய விதியே தொழிலாளர் உரிமைகள், சலுகைகளை ஒட்டப் பறிப்பதே. இதற்குத்தான் பல சங்க உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டப் பிரிவுகள் மாற்றப்படுகின்றன அல்லது மாற்றுமாறு எல்லா தனியார் முதலாளிகளும் அரசை மிரட்டுகின்றனர். எல்லா நீதிமன்றங்களும் இத்தகைய வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கின்றன. சாதாரணமாக அரசு மற்றும் பொதுத்துறையில்தான் சோம்பேறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து அதுவும் தங்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதால் போராடுவார்கள் என தனியார்மய தாசர்கள் அவதூறு செய்வார்கள்.

ஆனால் தனியார் முதலாளிகளிடம்தான் தொழிலாளிகள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ஹரியாணாவில் நடந்த ஹீரோ தொழிற்சாலை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தையும் அதை போலீசு கொடூரமாக ஒடுக்கியதையும் நாம் அறிவோம். இங்கு சென்னையில் கூட ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்காமல் நிர்வாகம் சிலரை வேலைநீக்கம் செய்ததையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் அந்த தொழிலாளிகள் தமது தொழிற்சங்க உரிமைக்காக போராடி வருகிறார்கள்.

அரசு, பொதுத்துறையில் இருக்கும்  பணிப் பாதுகாப்பு இதர சலுகைகள்  என்பது தனியார் நிறுவனங்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. அப்படி சட்டப்படி கூட கோரக்கூடாது என்பதே முதலாளிகளின் உத்தரவு. பல பன்னாட்டு நிறுவனங்கள் கேட்பார் கேள்வியின்றி தமது ஊழியர்களை கொத்துக் கொத்தாய் வீட்டுக்கு அனுப்புவதும் அதை சட்டப்படி கூட தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலைதான் இந்தியாவில் நிலவுகிறது.

இந்நிலையில் முதலாளிகளின் அதி முக்கிய கேந்திரமான விமான நிறுவனத்தில் விமானிகள் ஒன்று சேர்ந்து தமது போராட்டத்தில் பாதி வெற்றியை ஈட்டியிருப்பது வரலாற்று சிறப்பு மிக்கதுதான். இவ்வளவிற்கும் இலட்சங்களில் ஊதியம் வாங்கும் மேட்டுக்குடி தொழிலாளிகள் என்றாலும் அவர்கள் தமது போராட்டத்தில் காட்டிய உறுதியும், கோரிக்கைகளை வென்றதையும் சாதரணாமாக பார்க்க இயலாது. மேலும் விமானிகள் ஸ்டரைக் என்பதால் போலீசைக் கொண்டெல்லாம் ஒடுக்க முடியாது என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். இதே வேலைநிறுத்தம் சாதாரண தொழிற்சாலை ஒன்றில் நடந்திருந்தால் முதலாளி வீசும் பணத்தை அள்ளிவிட்டு அரசின் ஆசியோடு போலீசு தொழிலாளிகளை பந்தாடியிருக்கும்.

ஆனால் ஆளும் வர்க்கத்தின் அடிமடியில் இருக்கும் முக்கிய துறைகளில் இப்படிப்பட்ட போராட்டங்கள் வந்தால் அது இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதாக இருக்கும்.

இந்த வேலைநிறுத்தத்தை வைத்து மற்ற தனியார் விமான முதலாளிகள் பயணிகள் கட்டணத்தை பலமடங்கு ஏற்றி பிளாக்கில் விற்று சுருட்டியது தனிக்கதை. இது அப்பட்டமாக வெளிப்படையாக நடந்தாலும் அரசு சும்மா கையக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடமைக்காக ஒரு விளக்க கடிதத்தை மட்டும் அனுப்பி முடித்துக் கொண்டது. ஏர் இந்தியாவில் மட்டும் இந்த காலத்தில் டிக்கெட்டுகள் பழைய கட்டணத்திலேயே விற்கப்பட்டன என்பதை வைத்துப் பார்த்தால் இந்தியாவிற்கு தேவை தனியார் துறையா, பொதுத்துறையா என்பது புரிய வரும்.

இந்த வேலைநிறுத்தத்தில் விமானிகள் பாதி கோரிக்கையைத்தான் வென்றிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமையை பதிவாளர் முடிவு செய்வார் என்று விட்டுக்கொடுத்திருப்பது சரியல்ல. அதேசமயம் தொழிற்சங்கங்களின் பதிவாளர் சட்டப்படி இந்த விமானிகள் சங்கத்தை அங்கீகரித்தே தீர வேண்டும். இருப்பினும் அரசும், முதலாளிகளும் கொல்லைப்புற வழியாக இந்த சங்கத்தை கருவறுப்பதை நிச்சயம் செய்வார்கள். மேலும் மற்ற தனியார் விமான முதலாளிகளும் இதனால் கதி கலங்கியிருப்பதால் அவர்களும் இந்த சங்கத்தை கருவிலேயே ஒழிக்க முயல்வார்கள்.

எது எப்படியிருந்தாலும் தங்களது ஒன்று பட்ட போராட்டமே முதலாளிகளை பணிய வைத்திருக்கிறது என்பதையும் வேலைநிறுத்தம் செய்ததற்காகவே தங்களை பயங்கரவாதிகள் என்று தூற்றிய கோயலையும் அவர்கள் எப்போதும் மறக்கக் கூடாது. முதலாளிகள் என்ற முழுப்பானைக்கு இந்த கோயல் என்ற ஒரு பருக்கை என்ன பதமென்பதை நாமும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

இளித்தவாய் சுயநலவான்கள்!

16

இளித்தவாய் சுயநலவான்கள்!

இந்தியாவில் வறட்சியே இல்லாத ஒரு விசயமென்னவென்றால் தகுதி தராதரத்துக்கேற்ப ஏமாறுவது. ஆயிரம் பெறாத மெத்தையை காந்தப் படுக்கை என இரண்டு இலட்சத்திற்கு வாங்கியவர்களும், அனுபவ் தேக்குமரத்தின் இலாபத்தை பளபளப்பு காகிதத்தில் பார்த்து இலட்சக்கணக்கில் ஏமாந்தவர்களும், பாலுஜூவல்லர்ஸ் துவங்கி ராயப்பேட்டை பெனிஃபிட் ஃபண்ட் வரை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஓய்வூதியத்தை பறிகொடுத்துவிட்டு பனகல் பார்க்கில் ஞாயிறு தோறும் சந்தித்து பொறுமுவர்களும், வளைகுடாவிற்கும், மலேசியாவிற்கும் பசையான வேலை கிடைக்குமென கந்து வட்டிக்கு கடன்வாங்கி பரிதாபமாக திரும்பி வருபவர்களும், குழந்தையின்மைப் பிரச்சனையை சிட்டுக் குருவி லேகியம் தீர்க்குமென சில ஆயிரங்களை விட்டெறிந்துவிட்டு பேந்தப் பேந்த விழிப்பவர்களும், மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் மனக் கோட்டை கட்டி பின்பு மண்கோட்டையென முழிப்பவர்களும் இப்படி முடிவேயில்லாத வழிகளில் ஏமாந்தவர்களை பட்டியலிட்டு மாளாது.

இந்த ஏமாறுதலில் கோடிசுவரன் முதல் தெருக்கோடி பாமரன் வரைக்கும் வேறுபாடில்லை. முந்தியவன் பங்கு சந்தையில் விட்டால் பிந்தியவன் மூனூ சீட்டில் விடுவான். விரலுக்கேற்ற வீக்கம், காசுக்கேற்ற தோசை!

பாண்டிச்சேரியில்  ராமலிங்கம் என்ற மெக்கானிக், வீரமணி என்ற பொதுப்பணித்துறை மஸ்தூர், மற்றும் முருகன் என்ற புரோக்கர் பேர்வழியும் இன்னும் வழக்கில் சிக்காத சில சிகாமணிகளும் சேர்ந்து புதுவை முழுக்க மூன்று வருடங்களாக அரசு வேலை வாங்கித் தருவதாக 80,000 முதல் 2.00.000 வரை பல இளைஞர்களிடம் சுருட்டியிருக்கிறார்கள். இதற்கு அரசு லெட்டர்பேடில் வேலை கிடைத்தது போன்ற போலி சான்றிதழ் கூட வழங்கியிருக்கிறார்கள். எல்லாருக்கும் கிடைத்த வேலை என்னவென்றால் பொதுப்பணித்துறை நீர் ஊழியர், (public water workers) என்பதாகும். மேலும் இவர்கள் புறநகரில் உள்ள நீர் தொட்டிகளை பராமரிக்க வேண்டுமென்றும், தற்போது அங்கு செல்ல வேண்டாமென்றும், ஆனால் அவர்கள் அங்கு வேலை பார்ப்பதாக சோதித்தறியும் அரசு ரிஜிஸ்டரில் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.

சிகாமணிகள் இத்தோடு விடவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் தலா 3,300ரூபாய் தினசரி 110 வீதம் என சம்பளமும் கொடுத்து அதற்கு அரசுச்சான்றிதழ் போல ஒன்றில் கையொப்பமும் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் எங்கு வைத்து நடந்தது என்றால் காந்தி சிலை அருகேயோ இல்லை கடற்கரையிலோ கன ஜோராக நடந்திருக்கிறது. பணத்தை கொடுத்த அறிவாளிகள் எவருக்கும் இப்படி அரசு அலுவலகம் தெருவும் திண்ணையுமாக நடக்கிறதே, வேலையே இல்லாமல் சம்பளம் வருகிறதே என்றெல்லாம் யோசிக்கவில்லை.

என்ன இருந்தாலும் அரசு வேலையென்றால் இன்னமும் ஒரு மதிப்பிருக்கிறதல்லவா? குறைந்த பட்சம் செமத்தியான வரதட்சணையுடன் பெண் கிடைத்து பேஷாக திருமணத்துடன் வாழ்வில் செட்டிலாகிவிடலாமே?

தலைக்கு இரண்டு இலட்சத்தை சுருட்டியவர்கள் அதில் சில ஆயிரங்களை விட்டெறிந்து விட்டு அப்புறம் கமுக்கமாக மறைய ஆரம்பித்தார்கள். பணத்தை அழுத கனவான்களோ நமக்காக எப்படியெல்லாம் இந்த சிகாமணிகள் கஷ்டப்படுகிறார்கள் எப்படியும் நமக்கு புதுவை அரசில் நிரந்தர வேலை கிடைக்கும் என விட்டுப் பார்த்திருக்கிறார்கள். வாழ்வை பாசிட்டாவாக பார்க்க வேண்டுமென அப்துல்கலாம் முதல் தலப்பாகட்டு தாடி ஜக்கி வாசுதேவ் வரை உபதேசத்தை யானைச்சாணி போல டன்கணக்கில் கழிக்கும் மண்ணில் இந்த இளைஞர்களும் நல்லதே நடக்கும் என நம்பியதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஆயிற்று. ஒரு மாதம் இரண்டு நான்கு என பெருக்கல் வீதத்தில் சம்பளம் வராமல் இருக்க ஒரு வழியாக கனவான்களுக்கு கனவில் சுருக்கென்று கும்மாங்குத்து குடைய ஆரம்பித்திருக்கிறது. இரண்டு இலட்சத்தை அரசு பதவிக்காக எப்படியெல்லாம் புரட்டியிருப்பார்களோ “அது போல நாமும் ஏமாற்றப்பட்டிருப்போமோ” என்று யதார்த்தம் வயிற்றைப் புரட்ட ஆரம்பித்திருக்கிறது. இப்படி அக்மார்க் பச்சையாக ஏமாந்ததை எப்படி வெளியில் விடுவது என்று குழப்பம். இறுதியில் பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டுமென சில ஏமாளிகள் வேறுவழியின்றி போலீசுக்கு போக அப்புறம் தைரியம் பெற்ற மற்ற சுண்டெலிகள் வரிசையாக புகார் தர காவல்நிலையத்திற்கு படை எடுத்திருக்கிறார்கள். இதுவரை 150 பேர் இந்த அரசு வேலை மோசடியில் பலியாகியிருப்பதாக தினசரிகள் குறிப்பிடுகின்றன.

மோசடிக் கும்பலில் ராமலிங்கம் மட்டும் தலைமறைவாக மற்ற இருவரும் போலீசிடம் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் பல சிகாமணிகள் இருக்கலாம் என விசாரணை தொடர்கிறது. மொத்தத்தில் இரண்டு கோடி ரூபாயை இந்த சிகாமணிகள் சுருட்டியிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

நமது மக்களை ஏமாற்ற ரூம் போட்டெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை போலும். சும்மா டாஸ்மார்க்கில் ஒரு குவார்ட்டரை நீர் கலந்து அடிக்கும் நேரத்தில் யோசித்தால் போதுமானது. அடுத்த நாளே பேஷாக அரங்கேற்றலாம். ஏமாறுவதற்கு குறைவில்லாத நாடிது. டாஸ்மார்க் என்றதும் கொசுறு செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு பீர் 70 ரூபாயாம். புதுவையில் அதுவே 40 ரூபாய்க்கு விற்கிறதாம். தற்போது ஐந்து ரூபாய் விலையேறி 45க்கு கிடைக்கப் போகிறதென குடிமகன்களுக்கு கவலை தரும் செய்தியையும் இதே நாளேடுகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. ஆக ஊரை மலிவான மதுவில் மூழ்கி ஏமாற்றுவதற்கு பாண்டிச்சேரிக்கு ஒரு நடை போய்வந்தால் இத்தகைய சிகாமணிகள் விதம் விதமாக ஏமாற்றலாம்.

இன்றைய கல்வி முறையும், சமூக அமைப்பும், காரியவாதம் மேலோங்கி இருக்கும் தனிநபர்வாதமும் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இப்படி குறுக்குப் பாதையில் முன்னேறுவதற்கு வழி சமைக்கிறது. உண்மையான அரசு வேலையே இலட்சங்களில் பேசப்பட்டே கிடைக்கும் போது அதாவது “எழுத்து தேர்வு வரை உங்கள் சாமர்த்தியம், நேர்காணலில் வெல்ல வேண்டுமென்றால் அது பணம்தான் தீர்மானிக்கும்” என்ற நிலையில் இந்த இளைஞர்கள் ஏமாந்தது பெரிய விசயமே இல்லை. ஆசிரியப் பயிற்சி முடித்து விட்டு எம்.எல்.ஏக்களின் அல்லக் கைகளுக்கு பணத்தை அளித்து விட்டு காத்திருக்கும் பட்டியலில் எப்போது நம் பெயர் வருமென்று எத்தனை ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? இந்த ஏமாறுதலில் ஏதோ தமிழ்நாடு மட்டும்தான் என்றில்லை. அறிவாளிகளுக்கு பெயர்போன அமெரிக்காவிலேயே சமீபத்தில் ஒரு பிளேடு பக்கிரி முதலீடு செய்த பணத்தை குறுகிய நாட்களில் மும்மடங்காக தருவதாக மில்லியன் டாலர் சேர்த்து விட்டு இப்போது கம்பி எண்ணுகிறான். அது கூடப் பரவாயில்லை, சிறையில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த போது “இப்படியெல்லாம் மக்கள் ஏமாறுவார்கள் என நான் முதலில் நம்பவில்லை, எப்போதோ பிடிபட்டிருப்பேன் இவ்வளவு தாமதம் ஏனென்று தெரியவில்லை” என தெனாவெட்டாக பேட்டி கூட அளித்திருக்கிறான். அந்த கஸ்மாலத்தின் பெயர் நினைவில் இல்லை. முடிந்தால் பின்னூட்டத்தில் அவனது ஜாதகத்தை தருகிறோம். இது போக பல அமெரிக்க நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கள்ளக் கணக்கு காண்பித்து அது முடியாத போது திவாலென அறிவித்து விட்டு எஸ்ஸானது பெரிய கதை.

தான் மட்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று அதையே தன்னம்பிக்கை நெறியாக கொண்டிருப்பதே இன்றைய சமூகத்தின் உணர்வாக இருக்கும்போது இத்தகைய சுயநல இளித்தவாய கனவான்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். இனி அடுத்த சிகாமணிகளிடம் சிக்கும் சுயநல கனவான்கள் யார் என்ற செய்திக்கு நாம் காத்திருப்போம். இதில் மட்டும் நாம் ஏமாறப்போவதில்லை.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

28

ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

ஈழத்தமிழர்கள் மீது உள்ளூர் முதல் உலக அளவில் விதிக்கப்படாத தடைகளே இல்லையென்று சொன்னால், அது மிகையில்லை. ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி தடை விதித்தது வரை உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தடைகள் மூலம் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை முதற்கொண்டு வாழ்வுரிமை வரை திட்டமிட்டே பறிக்கப்பட்டது, இன்றுவரை பறிக்கப்படுகிறது. எத்தனையோ தடைகளை நாங்கள் தாண்டி வந்திருந்தாலும், எங்களை மிகவும் வாட்டியதும், வாட்டிக்கொண்டிருப்பதும் பொருளாதாரத்தடை தான்.

ஒரு தனியினமாக எங்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்அனைத்திற்கும் பொருளாதார தடை மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அரசவர்த்தமானியில் வார்த்தையளவிலேனும் கூட வடபகுதிக்கு நல்ல செய்தி வந்து நான் அறிந்ததில்லை. நான் ஈழத்தில் இருந்த காலங்களில் பொருளாதார தடை, அதன் தாக்கங்களை பற்றி மட்டுமே சிந்தித்ததால், அது எங்கள் மீது ஏவிவிடப்பட்ட காரணங்களோ சிங்கள அரசின் அரசியல் உள்நோக்கங்களோ எனக்கு அவ்வளவாக புரிபடவில்லை. அதாவது, சீனிக்கு பதில் பனங்கட்டி, உருளைகிழங்கிற்கு பதில் மரவள்ளி இதையெல்லாம் மாற்றீடாக எப்படி பாவிப்பது, Wonderlight (சோப்) இல்லாமல் எப்படி துணி துவைப்பது என்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையில் தான் இருந்தேன். இப்போது அதை மீட்டிப்பார்த்தால், அது எங்களின் மீது தொடுக்கப்பட்ட ஓர் உளவியல் மற்றும் பொருளாதார அடக்குமுறை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என் அறிவுக்கு எட்டியவரையில் நாடுகள் (ஈராக், கியுபா, ஹெய்ட்டி மற்றும் பல) மீது தான் பொருளாதார தடை விதித்ததை படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாடு அதன் சொந்தநாட்டு மக்கள் மீதே, அதுவும் அறிவிக்காமலேயே இப்படி ஓர் தடையை விதிப்பது பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. பொருளாதாரத்தடைக்கு பொதுவாகவே மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள், மற்றும் சிறுவர் நலம் பேணும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றன. காரணம், அதன் மூலம் “மனித உரிமைகள்” பாதிக்கப்படுவதுதான்.

எனக்கு எப்பொழுதுமே மனித உரிமைகள் அது தொடர்பான சட்டங்கள் மீதான ஓர் ஆர்வத்தால் இந்த தடை மூலம் பாதிக்கப்படும் எங்களின் உரிமைகள் என்னென்னவென்று தேடித்தெரிந்துகொண்டேன். ஐ. நா. மற்றும் சர்வதேச சட்டங்களின் படி பார்த்தால் அது வெறும் உணவுக்கும் மருந்துக்குமான தடையாக மேலோட்டமாக எனக்கு தோன்றவில்லை. என்னுடைய அனுபவத்தில், என்னைச்சுற்றி நடந்தவைகளைப் பார்த்ததில் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை பொருளாதார தடை ஓர் கருவியாக, ஆயுதமாக எங்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் மட்டுமே பிரயோகிக்கப்பட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

நான் ஏன் அடிக்கடி சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் பற்றி பேசுகிறேன் என்று சிலர் நினைக்கலாம். சிலர் எரிச்சலடையலாம். இலங்கையில் எங்களின் அடிப்படை உரிமைகள் சட்டரீதியாக பாதுகாக்கப்படாததால் தான், சர்வதேச சட்டங்களின் சந்து, பொந்துகளில் எல்லாம் நுழைந்தாவது நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றிப்பேசவேண்டியுள்ளது. இது ஓர் துர்ப்பாக்கிய நிலைதான். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights-UDHR), பன்னாட்டு பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைகள் ஒப்பந்தம் ( International Covenant of Economic, Social, and Cultural Rights-ICESCR-1996), பன்னாட்டு குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (International Covenant of Civil and Political Rights-ICCPR), சிறுவர் உரிமைகள் (Convention on the Rights of the Child-CRC) போன்ற ஆவணங்களின் படி பொதுவாக அடிப்படை மனித உரிமைகள் பொருளாதார தடை மூலம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறான அடிப்படை உரிமைகளில் சில முக்கியமானவை: வாழ்வுரிமை (Right to Life), பேச்சு மற்றும் கருத்துரிமை (Right to Freedom and Expression), சுகாதாரம், கல்வி, போதிய உணவு இன்றி பசி பட்டினி, போதிய இருப்பிட வசதிப்பிரச்சனை என பட்டியலிடப்படுகின்றன.

அவர்களுக்கு அவை ஆவணங்கள் மட்டுமே. எங்களுக்கு அவை வாழ்நாளில் மறக்கமுடியாத வலிகள், அனுபவங்கள். நான் இங்கே சட்டங்கள் பற்றிப் பேசப்போவதில்லை. பொருளாதாரத்தடை மூலம் மறுக்கப்பட்ட என் உரிமைகள் பற்றியே பேசப்போகிறேன்.  இது பிழையென்றால் யாராவது என்னை திருத்துங்கள். இதையெல்லாம் படித்தபிறகு நான் நினைத்துக்கொண்டேன், வழக்கம் போல் ஐ. நா. பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கிறார்களோ இல்லையோ எல்லாவற்றையும் நன்றாகவே வரையறுத்தும், பட்டியலிட்டும் வைத்திருக்கிறார்கள். பொருளாதார தடை என்றவுடன் ஏதோ அரிசி, பருப்பு, மருந்து மட்டும் தான் பிரச்னை என்று அன்று அந்த சூழலில் அப்பாவித்தனமாக நினைக்கத் தோன்றியது. ஆனால், ஈழத்தில் எனக்கு, (ஒரு தனி மனிதனுக்கு) பொருளாதார தடை மூலம் மறுக்கப்பட்டதும், பறிக்கப்பட்டதும் என் அடிப்படை உரிமைகள் தான் என்று இப்போதுதான் புரிகிறது. இந்த பொரளாதார தடை மூலம் வாழ்வுரிமை பறிக்கப்படுமா என்றெலாம் யாராவது நினைக்கலாம். ஆம், ஈழத்தில் அப்படியும் பறிக்கப்பட்டது.

சிங்களப் படைகள் குண்டுகளை எங்கள் தலைகள் மீது போட்டு எங்களை கொன்றார்கள். அதோடு சேர்த்து, பொருளாதார தடை கூட ஓர் கருவியாக, ஆயுதமாக எங்களின் உயிரை குடித்தது. அரிசி, பருப்பு, முக்கியமாக தடுப்பூசி மருந்துகள், Antibiotics, வலிநிவாரணிகள் இதெல்லாம் ஒரு மனிதனின் உயிரைக்காக்க அத்தியாவசியமான பொருட்கள். இவற்றையெல்லாம் இலங்கை அரசு பொருளாதார தடை என்ற போர்வையில் வடபகுதிக்கு வரவிடாமல் தடுத்தது. உள்ளூர் உற்பத்திகள் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட நிலையில் இதையெல்லாம் எங்கிருந்து பெறுவது. வாழ்வுரிமை என்பது வேறொரு விதமாகக் கூட மறுக்கப்பட்டது.

போர், பொருளாதாரத்தடை இவற்றின் காரணமாக உள்ளககட்டுமானப்பணிகள் என்பது முற்றுமுழுதாக தடைப்பட்டு இருந்தது. இவ்வாறான கட்டுமானப்பணிகள் என்பதற்குள் தொழில்வாய்ப்புகள், போக்குவரத்து (எரிபொருள்) போன்ற முக்கியமான விடயங்களும் அடங்கும். தொழில்வாய்ப்புகள் என்பது வாழ்வாதாரங்கள் என்பதைக் குறிக்கும். வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டால் மனிதன் எப்படி உயிர்வாழ முடியும்?

குறிப்பாக மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை போன்ற தொழில்வாய்ப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.  என் ஊரில் வசதியாக வாழ்ந்தவர்களும் இருந்தார்கள். அதே நேரம் அன்றாடம் உழைத்துப்பிழைப்பவர்களும் இருந்தார்கள். பொருளாதார தடையின் பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அது அன்றாடம் உழைத்துப்பிழைப்பவர்களுக்கு ஓர் வலி தானே. அவ்வாறான குடும்பங்களுக்கு பங்கீட்டு முறையில் அவர்களுக்கு கிடைத்த உணவு அவர்கள் பசியை போக்க போதுமானதாக இருந்ததில்லை. அவ்வாறான குடும்பங்களில் உள்ள குழந்தைகள் சிலர் காலை சாப்பாட்டிற்கு அந்த நாட்களில் பனம்பழம் சாப்பிட்டுவிட்டு பள்ளி சென்ற பரிதாபக்கதைகளும் உண்டு. அவர்கள் வீட்டில் பனைமரம் கிடையாது. வேறு இடங்களுக்கு சென்று பொறுக்கி வருவார்கள்.

நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், ஈழத்தில் ஏற்கனவே இடப்பெயர்வு, சாவு, காணாமல் போனவர்கள், வாழ்விடங்களை இழந்தது என்று நிறைய கஷ்டங்களுக்கு பிறகு பொருளாதார தடை என்பதும் சேர்ந்து எங்களை வாட்டியதானால் பல பிரச்சனைகளுக்கு முகம் ொடுக்கவேண்டியிருந்தது. பொருள் வசதி இல்லாத குடும்பங்களில் பிரச்சனைகள் என்பதும் சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்றே நினைக்கிறேன். குறிப்பாக வாழ்வாதரங்களை இழந்ததால் வந்த மன உளைச்சலால் தான் குடும்பம்களுக்கிடையே இவ்வாறான பிரச்சனைகள் தோன்றின. இது மன உளைச்சல் என்றோ, அதற்கு ஏதாவது மன ஆறுதல் தரும் விடயங்களில் மனதை செலுத்த வேண்டுமென்பதோ பாதிக்கப்பட்ட யாரும் அறியாத ஓர் விடயம். சரி, ஒருவேளை அதை புரிந்துகொண்டாலும், எந்த வழியில் மனதை ஆற்றுவது? அதனால் அது முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது.

சாதாரணமாக இரண்டு பேர் சந்தித்தால் அந்நாட்களில் தங்களுடைய குடும்பங்கள் இலங்கை ராணுவத்தாலும் (Operation Liberation), இந்திய ராணுவத்தாலும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்றே பேசிக்கொண்டார்கள். உங்கள் வீட்டில் எத்தனை பேர் இறந்தார்கள், ராணுவம் உங்கள் வீட்டை நாசப்படுத்தியதா இப்படியான விசாரணைகளும், இந்த துன்பங்களிலிருந்து எப்போது விடுதலை என்ற வேதனையும் வலியும் கலந்த அங்கலாய்ப்புகளும் தான் எங்களின் அன்றாட குசலம் விசாரிப்பாக இருந்தது. குடும்பத்தலைவர்கள் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன குடும்பத்தில் அந்த பொறுப்பு குடும்பத்தலைவி மீது, குருவி தலையில் பனம்பழம் போலானது.

அவ்வாறான குடும்பங்களின் கஷ்டங்களை நான் கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.  மீன்பிடித்தொழில் செய்து அன்றாடம் பிழைத்தவர்கள் வாழ்வும் கஷ்டங்கள் நிறைந்ததுதான். ஆழக்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாது, “தடை”. அதனால், கரையோரப்பகுதிகளில் மாலைவேளைகளில் போய் ஏதோ கிடைக்கும் சிறிய மீன்களை பிடித்து அன்றாடம் வயிற்றுப்பிழைப்பை பார்த்துக்கொண்டவர்களும் உண்டு. இரவு நேரங்களில் வீதியோரம் மீனை சிறிய கூறுகளாக போட்டு விற்பவர்களை பார்த்திருக்கிறேன். இது தவிர மீன்பிடித்தொழில் தடை, விவசாய நிலங்கள் ராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது போன்ற காரணங்களால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மக்களை வாட்டியது. ஏற்கனவே இருந்த தொழிலை இழந்தவன் பொருளாதார தடை இருக்கும் இன்னோர் இடத்திற்கு சென்று புதிதாக எந்த தொழிலை செய்யமுடியும்?

இப்படி இடப்பெயர்வும், வயிற்றுப்பிழைப்புமே அன்றாட பிரச்சனைகள் என்றான பின் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற ஓர் பிடிப்பு இயல்பாகவே மக்கள் மனதில் இல்லாது போனது என்றுதான் நினைக்கிறேன்.  அந்த நாட்களில் யாருமே வாழ்க்கையில் ஓர் குறிக்கோளோடு இருந்தார்களா என்பது சந்தேகமே? எப்போது பட்டினியால் சாகப்போகிறேன் என்று நினைப்பவனுக்கு எங்கிருந்து குறிக்கோள் வரும்? ஒரு நாடு உண்மையாகவே தன் குடிமக்களின் உயிரை காப்பாற்ற நினைத்தால், பொருளாதார தடை என்ற பெயரில் எங்களை வாட்டியிருக்குமா? எங்களின் உயிரை தடை என்ற பெயரில் குடித்திருக்குமா?  வன்னியிலும் என் மக்களை சிங்கள அரசு இப்படித்தானே பட்டினிபோட்டும் கொன்றார்கள். இப்போது இதையெல்லாம் நான் மீட்டிப்பார்க்கும் போது எம் வாழ்வுரிமை பொருளாதார தடை மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. எங்களை பட்டினி சாவிற்குள் தள்ளி எங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

ஏற்கனவே, பொருளாதார தடை என்பதால் பொருட்களுக்கு தட்டுப்பாடு. அதனால் உள்ளூர் உற்பத்திகளுக்கும் விலையேற்றம், பொருட்களுக்கான போட்டி என்று வழக்கமான அக்கப்போரும் இருந்தது. இருந்தாலும் இலங்கை அரசு வீசியெறிந்த அரிசிப்பருக்கைகளை ரேஷன் என்ற முறையில் பொறுக்கி, பொங்கித்தின்றுதான் உயிர் வளர்க்க வேண்டிய சூழ்நிலையிலிருந்தோம்.

விதானையார் (கிராமசேவகர்-அரசாங்கஊழியர்) மூலம் முறையாகப் பதிந்து எங்கள் வீட்டில், ஆடு, மாடு, கோழி, போரில் செத்தவர்கள்-குறிப்பாக குடும்பத்தலைவர்கள், செத்துக்கொண்டிருப்பவர்கள், சாகாதவர்கள், கணக்கெல்லாம் காட்டினால்தான் அந்த ரேஷன் அட்டையும் (ஈழத்தில் அதை கூப்பன் என்று சொல்வார்கள்) கிடைக்கும். சரி, விதானையோடு மல்லுக்கட்டி ரேஷன் அட்டை எடுத்து பங்கீட்டு முறையில் அரிசி, சீனி வாங்க கடையில் போய் கால்கடுக்க, வெயில் குளித்து செத்து, சுண்ணாம்பாகி நிற்கும்போது….. சிங்களப்படைகள் தங்கள் பங்கிற்கு ஹெலிகாப்டர் இல் வந்து சில சமயங்களில் சுட்டுவிட்டும் போவார்கள். என்னே மனித நேயம்?  நான் சாகும் வரையிலும் மறக்கமுடியாத இன்னொரு அனுபவமும் உண்டு.

என் மைத்துனர் (என் தாயாரின் சகோதரரின் மகன்) பத்து வயதில் சிங்களப்படையின் குண்டுவீச்சில் அங்கவீனமாக்கப்படதுதான். அது எப்படி நடந்தது என்று பின்னொரு பதிவில் சொல்கிறேன். ஆனால் அவர் குண்டடிபட்டு Antibiotics கிடைக்காததால் தான் அங்கவீனராக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த உருப்படியான ஒரேயொரு வைத்தியசாலை மந்திகை வைத்தியசாலை. பெரும்பாலான காயமடைந்தவர்கள் அங்கேதான் கொண்டுசெல்லப்பட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் அங்கே வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் வந்து பணியாற்றிய வைத்தியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதுதான். என் மைத்துனருக்கு முழங்காலுக்கு பின்னால் தான் காயம்பட்டது. அதை அப்போது பார்க்க ஏதோ ஓர் சிறுகாயம் போல்தான் எனக்கு தெரிந்தது. ஆனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் அவர் முழங்காலுக்கு மேல் ஓர் காலை இழக்க நேரிட்டது.

வலியில் முனகும் அந்த குழந்தையை சைக்கிளில் வைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால், அங்கே சொன்னார்கள் இப்போது இதற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் யாருமில்லை. பிரான்ஸ் இலிருந்து வரும் வைத்தியருக்காக காத்திருக்க வேண்டும் என்று. வைத்தியசாலையில் அனுமதிக்க மறுத்து வலிநிவாரணி மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அந்த வலிநிவாரணி பலனில்லாமல் குழந்தை வலியில் துடித்தது வேறுவிடயம். வைத்தியர்களுக்காக காத்திருந்ததில் என் மைத்துனரின் காயம் சிதழ் பிடித்து, மெல்ல மெல்ல அழுகத்தொடங்கிவிட்டது (Necrotic). சிதழ் ஒருபுறமும், புண்ணின் துர்நாற்றம் ஒருபுறம், அந்த குழந்தையின் வலி ஒருபுறம் என்று பார்க்கவே வேதனையாகவும் கொடுமையாகவும் இருந்தது. ஒருவாறாக பிரான்சிலிருந்து வைத்தியர்கள் வந்து சொன்னார்கள், இது காலம் கடந்துவிட்டது. முன்பே Antibiotics கொடுத்திருக்கவேண்டும் என்றும் அப்படி கொடுக்காததால் தான் infection ஆகிவிட்டது என்றும் சொன்னார்கள். காலை முழங்காலுக்கு மேல் வெட்டவேண்டும் என்றும் சொன்னார்கள்.

இப்பொது நினைத்துப்பார்க்கிறேன், ஒருவேளை அந்த வைத்தியர்கள் வராமலே விட்டிருந்தால் என் மைத்துனர் செப்டிக் ஷாக் வந்து உயிர் விட்டிருப்பார். என் மைத்துனர் இப்போது கனடாவில் தான் இருக்கிறார். அவரை பார்க்கும் போதெல்லாம், அவர் செயற்கை கால் மூலம் தாண்டித்தாண்டி நடக்கமுடியாமல் நடக்கும் போது ஏனோ என்னால் வன்னியில் காயம் பட்ட குழந்தைகளை நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. நான் வாழும் நாட்டில் ஒரு குழந்தை சிறுவயதில் ஓர் பல்லை இழந்தாலும், அதற்கு ஓர் தேவதை (Tooth Fairy) வந்து மீண்டும் ஓர் புதிய பல் ஒன்றை தரும் என்று எத்தனையோ கதைகள் சொல்கிறார்கள். அந்த குழந்தையை தேற்றுகிறார்கள். ஆனால், ஈழத்தில் ஆயிரக்கணக்கில் அங்கவீனர்களாக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை எந்த தேவதையும் வந்து தேற்ற வேண்டாம். அவர்களை முட்கம்பி வேலிகளுக்கு வெளியே விடுங்கள் என்றுதானே கேட்கிறோம். இப்படித்தான், ஈழம் பற்றி நான் எழுதத்தொடங்கினால் நினைவுகள் எங்கெங்கோ சுழன்று கடைசியில் வன்னியில் வந்து நிற்கிறது.

நான் மேலே சொன்ன என் மைத்துனரின் சிறிய தாயார் அதாவது என் தாய்மாமனின் மனைவியாரின் சகோதரி கூட அண்மையில் வன்னியில் சிங்களப்படையின் குண்டுவீச்சில் இடுப்பருகே குண்டடிபட்டு ஓர் சிறுநீரகத்தை இழந்து ICRC யினால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர். தற்போது சிகிச்சைக்காக, அவரது சகோதரரால் அழைத்துச் செல்லப்பட்டு தமிழ்நாட்டில் தான் இருக்கிறார். ஆனால், அவருடைய கணவரும் பதிமூன்று வயது மகளும் ஒரு முகாமிலும், பதினாறு வயது மகன் ராணுவத்தால் தனியாகப் பிரிக்கப்பட்டு வேறோர் முகாமிலும் இலங்கையில் தான் இருக்கிறார்கள். என்னுடைய இன்னொரு உறவினர் தடுப்பு முகாமில் சில வாரங்களுக்கு முன் பிரசவ நேரத்தில் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவருடைய குழந்தை பிறக்கும் போதே இறந்துவிட்டது. குழந்தையை பறிகொடுத்தவரின் தாயாரும் இன்னுமோர் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். இருவரும் இருமுறை முகாமிற்கு சென்று குழந்தையை பறிகொடுத்தவரை தங்களோடு யாழ்பாணம் கூட்டிச்செல்ல அனுமதி கேட்டால் அது மறுக்கப்படுவதாக தொலைபேசியில் அழுகிறார்.

இவர்களின் கதைக்கும் பொருளாதார தடைக்கும் சம்பந்தம் உண்டா எனக்கு தெரியவில்லை. ஆனால், என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. இப்படி என்னென்னவோ தடைகள் மூலம் எங்களுக்கு குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைகளின் படியோ அல்லது சர்வதேச தராதரங்களின் அளவிலோ எந்தவொரு சிக்கிச்சையையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடிப்படையான, குறைந்தபட்ச வைத்தியமும் ஏன் எங்களுக்கு மறுக்கப்பட்டது? அதுவும் போர்ச்சூழலில்? நாங்கள் தமிழர்கள் என்பதாலா?

உணவும் மருத்துவமும் என் உறவுகளின் வாழ்வுரிமையை பறிக்கும் ஆயுதங்களாகவே பொருளாதார தடை மூலம் மாற்றப்பட்டிருந்தன என்பது தான் என் புரிதல். பொருளாதார தடை என்ற பெயரில் வடக்கில் எங்கள் உரிமைகளும் உணர்வுகளும் மறுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் ஏதோ ஓர் இனம்புரியாத சூனியத்திற்குள் தள்ளப்பட்டோம். வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வெளியுலக தொடர்பு இல்லாமல் எங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் ஓர் கசப்பும் வெறுப்புமே என் மனதில் மிஞ்சியிருந்தது.

வானொலி கேட்க முடியாது, காரணம் மின்சாரமோ அல்லது பாட்டரிகளோ கிடையாது. பாட்டரிகள் வடக்கிற்கு வருவது சுத்தமாக தடைசெய்யப்பட்டிருந்தது. மின்சாரமும் கிடையாது ஆதலால் நிலாவெளிச்சம் இருக்கும் நாட்களில் அதில் தான் இரவுச்சாப்பாடு. அது இல்லாத நாட்களில் கிடைக்கும் மண்ணெண்ணையில் ஓர் சிறிய விளக்கொளியில் தான் சாப்பாடு, மாணவர்களின் படிப்பு எல்லாமே. செய்தித்தாள்கள் கிடையாது. எங்களின் அவலங்கள் வெளியுலகிற்கு தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம் அறிய எனக்கு எந்த ஊடக வசதியும் தொடர்பும் இருக்கவில்லை. வேலை வெட்டியும் கிடையாது. பங்கீட்டு உணவில் தான் உயிரை தக்கவைக்கவேண்டிய அவலம்.  பொதுப் போக்குவரத்து வடக்கில் ஏற்கனவே செயலிழந்து விட்டிருந்தது.

ஒருசில தனியார் வாகனங்களும் எரிபொருள் தடையினால் ஓடாமலே போனது. காயம் பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல வடமராட்சியில் நான் இருக்கும் வரை எந்தவொரு வசதியும் இருக்கவில்லை. போக்குவரத்து வசதியின்றி உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்தவர்கள் பலர். அங்கு ஆம்புலன்ஸ் இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நான் வடமராட்சியில் காயம்பட்ட எவரையுமே ஆம்புலன்ஸ் ஏற்றிச்சென்றதை என் கண்களால் பார்த்ததில்லை. பாடசாலைகள் ராணுவமுகாம்கள் ஆனதால் பல மாணவர்கள் நீண்டதூரம் சென்று கல்வி கற்க போதிய போக்குவரத்து வசதி கூட இருக்கவில்லை.

போக்குவரத்துக்கு உரிய ஒரேயொரு ஊடகம் “சைக்கிள்” தான்.  ஈழத்தமிழர் வாழ்வில் சைக்கிளின் பயன் சொல்லிமாளாது. போக்குவரத்திற்கு சைக்கிளை மாற்றீடாக பயன்படுத்தலாம். உணவுக்கும் மருந்துக்கும் எதை மாற்றீடாக பாவிப்பது? இப்படி வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு பொருளாதார தடை என்ற பெயரில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டால் வாழ்க்கையில் எதில்தான் பிடிப்பு வரும்? வாழ்க்கையே கேள்விக்குறியாய், சூனியமாய் இருந்தது. இதுதான் பலபேரை என் ஊரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் தமிழ்நாடு நோக்கி இடம்பெயர வைத்தது.

தொடரும்

ரதி

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! – வெளியீடு – PDF டவுன்லோட்

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் !

இந்த வெளியீட்டை மென்நூலாக (PDF) தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து.

எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு  தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி.

ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்த ஈழ ஆதரவாளர்களுக்கும் இந்த முடிவுகள் நிச்சயமாக பலத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மத்தியில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்திவிட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது.

தமிழக மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொய்த்து விட்டது. ஈழத் தமிழர்க்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் ஒரு எழுச்சி நிலவுவதாகவும், இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் எழுச்சியை விடவும் வலிமையான எழுச்சியை மக்கள் மத்தியில் காண்பதாகவும் அவர்கள் கூறி வந்ததையும் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை.

இந்த வெற்றியை கருணாநிதியால் விலைக்கு வாங்க முடிந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டு அழிந்தாலும், தனது வாரிசுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்த கிழட்டு நரி கருணாநிதி, பரிதாபத்துக்குரிய ஏழைத் தமிழர்களை 200, 300க்கு விலைக்கு வாங்கிவிட்டார். தமிழ் இனத்துக்குத் தான் ஏற்கெனவே செய்த துரோகம் போதாதென்று மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் மக்களையே விலைக்கு வாங்கியிருக்கிறார் கருணாநிதி எனும் கொடூரன்.

இருப்பினும், தமது தோல்விக்குப் பணபலம், கள்ள ஓட்டு என்பன போன்ற காரணங்களைக் கூறும் அருகதை ஜெயலலிதா, பா.ம.க., ம.தி.மு.க. போலி கம்யூனிஸ்டுகள் போன்றோருக்குக் கிடையாது. இவர்கள் அனைவரும் தம் சக்திக்கேற்ப இத்தகைய முறைகேடுகள் அனைத்தையும் செய்பவர்கள்தான். மேலும், இவையெல்லாம் இல்லாத தேர்தல் எப்போதும் இருந்ததில்லை. இவை தேர்தல் எனும் ஆட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட முறைகேடுகளாக மாற்றப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்ட ஈழ ஆதரவாளர்களை இத்தகைய சமாதானங்கள் திருப்தி அடைய வைக்கின்றன என்றால், இதை ஒரு வசதியான சுயமோசடி என்றுதான் சொல்ல @வண்டும்.

ஈழ ஆதரவாளர்களின் தீவிரப் பிரச்சாரம், வலிமையான கூட்டணி, ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் மக்களின் மனோபாவம் என்பன போன்ற காரணிகளையெல்லாம் தாண்டி காங்கிரசு  தி.மு.க. கூட்டணிக்குத் தமிழக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், தமிழக மக்களின் இன உணர்வை எப்படி மதிப்பிடுவது? ஒரு ரூபாய் அரிசி, வண்ணத் தொலைக்காட்சி, பணம், சாதி, நலத்திட்டங்கள் போன்ற எந்தக் காரணத்துக்காக தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று கொண்டாலும், அதிலிருந்து கிடைக்கும் விடை ஒன்றுதான்  தமிழனுக்கு இன உணர்வில்லை, சொரணையில்லை. இந்த விடை புதியதல்ல. தமிழுணர்வாளர்கள் எனப்படுவோர் தமிழக மக்கள் மீது தேவைப்படும் போதெல்லாம் வைக்கும் குற்றச்சாட்டுதான் இது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றிருந்தால், “தமிழன் ஏமாளியல்ல என்பதை நிரூபித்து விட்டான்” என்பன போன்ற வீரவசனங்களை நாம் கேட்க நேர்ந்திருக்கும்.

ஆனால் உண்மை இந்த இரண்டு முனைகளிலிருந்தும் நெடுந்தூரத்தில் இருக்கிறது. ஜெயலலிதாவையும் ராமதாசையும் தாங்கள் நம்பியதைப் போலவே தமிழர்களும் நம்பவில்லை என்ற காரணத்துக்காக அவர்களை சொரணையற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தனி ஈழப் பிரகடனத்தை வெளியிட்ட ஜெயலலிதா, போரை நிறுத்துவதற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்கும், அறிக்கை விடுவதற்கு மேல் இனி வேறு ஏதாவது செய்யப்போகிறாரா என்ற கேள்விக்கு ஈழ ஆதரவாளர்கள் விடை சொல்ல வேண்டும்.

போயஸ் தோட்டத்தின் நெடுங்கதவுகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சொர்க்கவாசல் திறந்து தரிசனம் எப்போது கிடைக்கும் என்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கே தெரியாதபோது அவர்களை நம்பியிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு எப்படித் தெரியும்?

அடுத்து அமெரிக்கத் தூதரகத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கி விட்டார் நெடுமாறன். உலக மக்களின் எதிரியும் ஈராக், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பல இலட்சம் மக்களைப் படுகொலை செய்துவரும் ஆக்கிரமிப்பாளனுமான அமெரிக்க வல்லரசின் அதிபர் ஒபாமாவுக்குப் பூங்கொத்து கொடுப்பதற்கு! ஒபாமாவால் ஒப்புக்கு விடப்பட்ட ஒரு அறிக்கைக்கு இத்தகைய அடிமைத்தனமான மரியாதை!

கருணாநிதி, சோனியா, அத்வானி, ஜெயலலிதா… கடைசியாக ஒபாமா! இந்திய மேலாதிக்கத்தையோ, அமெரிக்க வல்லரசையோ அம்பலப்படுத்தாமல், அவர்களை எதிர்த்துப் போராடாமல், அவர்களுடைய தயவில் விமோசனம் பெற்றுவிடலாம் என்று நம்புகிறவர்கள், மக்கள் மீது நம்பிக்கை வைக்காததில் வியப்பில்லை.

பிழைப்புவாதிகளையும் பாசிஸ்டுகளையும் தாங்கள் நம்பியது மட்டுமின்றி, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். உள்ளூர் பிரச்சினைகள், சாதி, ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி முதலான பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சிகள் மீது மக்களுக்குத் தோன்றியிருக்கக் கூடிய அதிருப்தியை, ஈழ ஆதரவாக அப்படியே மடைமாற்றி விட முடியும் என்று கணக்கு போட்டார்கள். அந்தக் கணக்கு பொய்த்து விட்டது.

இன்று கருணாநிதி அணி பெற்றிருக்கும் வெற்றியை, காங்கிரசின் ஈழக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்வது எந்த அளவுக்குத் தவறானதோ, அதேபோல, ஜெயலலிதா அணி வென்றிருந்தால், அந்த வெற்றியை ‘ஈழ ஆதரவு அலை’ என்று வியாக்கியானம் செய்வதும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருந்திருக்கும்.

தாங்கள் அளித்த வாக்குகள் தந்த அதிகாரத்தையும், தாங்கள் வழங்கிய வரிப்பணத்தையும் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகப் பயன்படுத்தும்போது, அது குறித்த உணர்வின்றி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய உண்மை. இந்த உண்மை தெரிந்திருந்தும் அதனை ஈழ ஆதரவாளர்கள் அங்கீகரிக்கவில்லை. தமிழகமே பொங்கி எழுந்து நிற்பதாகப் புனைத்துரைத்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அந்தப் புனைவை உண்மையாக்கிவிடலாமென முனைந்தார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

ஈழப் பிரச்சினையின்பால் அனுதாபம் கொண்டிருந்த மக்களும்கூட ஜெயலலிதா அணியினர் மீது கடுகளவும் நம்பிக்கை கொள்ளவில்லை. ‘இலட்சக்கணக்கில் கூட்டம் கூட்டி, மாநாடு நடத்தும் இந்தக் கட்சிகளுக்கு ஈழப் பிரச்சினையில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் தமது போராட்டம் மூலம் கருணாநிதி அரசை நிலைகுலைய வைத்திருக்க முடியும். பிணத்தைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதைத் தவிர இவர்களுக்கு வேறு நோக்கமில்லை’ என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். மக்களிடம் இருந்த இந்தத் தெளிவுகூட, மார்க்சிய லெனினியவாதிகள் என்றும் பெரியாரிஸ்டுகள் என்றும் கூறிக் கொண்டோரிடம் இல்லை என்பதே உண்மை.

இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அரசியல் முழக்கங்களின் கீழ் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமல், ஈழப் படுகொலை தமிழக மக்களிடம் தோற்றுவித்த அனுதாப உணர்வை, அப்படியே குறுக்கு வழியில் இனவுணர்வாக உருமாற்றி விடலாமென ஈழ ஆதரவாளர்கள் முயன்றார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

சாகச வழிபாடும் சரி, இத்தகைய சந்தர்ப்பவாத வழிமுறைகளும் சரி, அவை மக்களுடைய அரசியல் பங்கேற்பையும், முன்முயற்சியையும் மறுப்பதுடன் அவர்களை வெறும் பகடைக்காய்களாகவே கருதுகின்றன. சூதாட்டத்தின் தோல்விக்குப் பகடைக்காய்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?

இந்தத் தேர்தலில் பல வகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்கு சேகரித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அணி வென்றிருக்கும் பட்சத்தில் இவ்வெளியீடு அதிகம் பயனுள்ளதாக இருந்திருக்கக் கூடும். தற்போது ஜெயலலிதா தோற்றுவிட்டாரெனினும், சந்தர்ப்பவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதுதான் இந்த வெளியீட்டின் இலக்கு.

இந்த வெளியீட்டை மென்நூலாக (PDF) தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

N.Ramஆயணம் – வீதி நாடகம்

30

என்.ராமாயணம் – வீதி நாடகம்!

சூத்திரதாரி:
பெரியோர்களே,தாய்மார்களே! கூடி நிற்கும் பொதுமக்களே! வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே! இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது! என்.ராமாயணம்! என் ஃபார் நாரதர்! அதாவது நாரதர் ராமாயணம்! அதாகப்பட்டது என்னவெனில், பன்னெடுங்காலாமாய் பரந்து விரிந்த ஆரியப் பண்பாட்டை சீரும் சிறப்புமாய் விந்திய மலைக்கு அப்பால் வளர்த்தெடுத்த பெருமகனாரும், சாட்சாத் மகா விஷ்ணுவின் மவுண்ட்ரோடு கொ.ப.செ-வாக கொடி நாட்டிய கோமானும், நல்லதை தீயதாகவும், தீயதை நல்லதாகவும் மாற்றும் மகா வல்லமை பொருந்திய முனிவரும், ஒரே நேரத்தில் ஒன்பது குரலில் பேசும் பேராற்றல் படைத்த சித்தரும், பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பத்திரிக்கைப் பெருமானும், தமது கேடு கெட்ட நோக்கங்களுக்கு பரிசுத்தமான சொற்களையே பதமாய் பயன்படுத்தும் மனிதருள் மாணிக்கமும், தி பொந்து நாளேட்டின் ஆசிரியப் பெருந்தகையுமான நாரத மகாமுனி வருகிறார், வருகிறார்!பராக்!பராக்!

காட்சி 1
இடம்: தி பொந்து அலுவலகம், சென்னை
பாத்திரங்கள்: நாரதர், நிருபர், உதவியாளர்

நிருபர்: சார், ஒரு முக்கியமான விசயம். கடந்த ஆறு மாசத்துல 20 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டிருக்காங்க. நேத்திக்கு மூணு பேர சுட்டுக் கொன்னுருக்காங்க! இதப் பத்தி ஒரு ஸ்டோரி போடணும் சார்!

நாரதர்: (சிரித்தபடி) ஒகோ அதுக்கென்ன, பேஷா போட்டுரலாமே, அதுக்கு முன்னாடி கடந்த ஆறு மாசமா அந்த மீனவர்கள்லாம் எத்தனை மீன்களை கொன்றுக்கா தெரியுமோ?

நிருபர்: (அதிர்ச்சியாகி) சார், மீனும் மனுசனும் ஒண்ணா சார்? நீங்க வெஜிடேரியனா இருக்கலாம், அதுக்காக இப்டியா சார்?

நாரதர்: (மெதுவாக எழுந்து நடந்து நிருபரின் தோளைத் தட்டுகிறார்) தம்பி, நோக்கு விசயமே புரியலியே, நான் வெஜிடேரியன்னு யார் சொன்னா? சிவபெருமான் தன் தொண்டைல நஞ்ச நிறுத்திண்ட மாதிரி நிதம் ரத்தமும், சதையுமான உண்மையைத்தான் நான் விழுங்கிண்டிருக்கேண்டா அம்பி! இதோ பார்ரா அசமஞ்சம், சில சமயம் மனுஷாள விட மீன் முக்கியம், சில சமயம் யானைகள விட மனுஷா முக்கியம்! எல்லாம் ஒரு கணக்குதான்! கணக்க சரி பண்ணணும்னா, சில சமயம் கணக்கையே மாத்த வேண்டியிருக்கும்! நம்ம முன்னோர்கள்லாம் இப்படி கணக்குப்பிள்ளைகளா கணக்கு பாத்து வளந்தவாதான், தெரிஞ்சுக்கோ!

நிருபர்: (பணிவாக) ஆனா, உண்மைன்னு ஒண்ணு இருக்கே சார்! ஜனங்களுக்கு உண்மைய சொல்றதுக்குதானே நீங்க இவ்ளோ பெரிய நியூஸ் பேப்பர நடத்துறீங்க?

நாரதர்: (சிரிக்கிறார்) ஹா..ஹா..கண்ணா, உன் வேலைய நீ சரியா புரிஞ்சுக்கல, ஒன்ன எதுக்கு சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சிருக்கிறோம்? உண்மையத் தெரிஞ்சுக்கிறதுக்குத்தான். ஆனா, உண்மைய எல்லார்கிட்டயும், சொல்லணும், பத்திரிக்கைல எழுதணும்கிறதெல்லாம் கிடையாது. அதெல்லாம் இங்க, (தொண்டையை தொட்டுக் காட்டுகிறார்) என் தொண்டைல பாதுகாப்பா இருக்கும்.. (இருக்கைக்கு சென்று மீண்டும் அமர்ந்து கொண்டே) ம்… சரி விடு, நீ சின்ன பையன், போகப் போக புரியும், இந்த மாசம் நீ சம்பளம் வாங்கிட்டியோ?

நிருபர்: (கசப்போடு)..ம்.. வாங்கிட்டேன் சார்!

நாரதர்: சரி, இப்போ டெஸ்குக்கு போ! சாயங்காலம் நாரத கான சபாவுல நம்ம பரளி ஒரு எக்செலண்ட் ஸ்பீச் குடுக்கப் போறார், அதப் போயி கவர் பண்ணிடு! ஆத்துக்காரியையும் அழைச்சிண்டு போ, நல்ல ப்ரோக்ராம்! நானும் வருவேன்!

நிருபர்: (கசப்போடு)சரி சார்..

(நிருபர் நகர்ந்து செல்கிறார். இதனூடாக உதவியாளர் மொபைல் போனோடு ஓடி வருகிறார்)

உதவியாளர்: சார், சார், பிரைம் மினிஸ்டர் ஆபிஸ்லருந்து போன்!

நாரதர்: (போனை வாங்கி காதில் வைத்து பதட்டமாக எழுந்து நிற்கிறார். முகத்தில் வழிசலோடு) , குட் ஆஃப்டெர்னூன் சார்! சாரி, குட்மார்னிங் சார்! சொல்லுங்க சார்! (சிறு இடைவெளி) ராமாயணம்தானே, மனப்பாடமாத் தெரியும் சார்! என்னது, சீதா பிராட்டிய அனுமார் கடத்திட்டு போனார்னு நியூஸ் போடணுமா? ஒகே, ஓகே, கோர்டுவேர்டு புரியுது சார்! நீங்க சொல்லவே வேண்டாம் சார், பேஷா செஞ்சிடலாம்! நேத்திக்கு போராளின்னு சொன்னேள், இன்னிக்கு தீவிரவாதின்னு எழுதனும்கறேள். கரும்பு தின்ன கூலியா? (சிறு இடைவெளி) சார், இலங்கை அரசர் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவா! இவர் மாத்திரமல்ல, இவருக்கு முன்னாடி இருந்த ராணியும் நம்ம மேல ரொம்ப பிரியமா இருப்பா! இந்த மாதிரி நேரத்துல அவாளுக்கு நாம உதவலன்னா வேற யார் உதவுவா? நம்ம பத்திரிக்கை பத்தி நானே சொல்லப்படாது.. நந்திகிராம், சிங்கூர் விசயத்துலயே பாத்திருப்பேள். சந்தேகமே வராத அளவுக்கு உல்டாவா எழுதிருவோம் சார். அந்த அளவுக்கு ஒரு தொழில் சுத்தம். ஒரு சின்ன விண்ணப்பம், சிறிலங்கா ரத்னா விருதெல்லாம் குடுத்து அவா பெருமைப்படுத்தினா. நீங்க நம்மவா, நான் சொல்லணும் இல்ல, நீங்களே செய்வேள், இருந்தாலும் ஒரு பத்ம பூஷணும், கொஞ்சம் விளம்பரங்களும் கொடுத்தேள்னா அடியேன் மனசு சந்தோசப்படும்.

(சிறு இடைவெளி) ஒகே சார், ஒகே ஒகே, நாளைக்கு காலைல பாருங்கோ, ஜமாய்ச்சுடலாம்! (சிரித்தபடியே போனை வைக்கிறார்)

(உதவியாளரை நோக்கி) நம்ம பரணீதரன் ரொட்டிகிட்ட மேட்டர சொல்லிடு, மேட்டர் நல்லா ஸ்டிராங்கா இருக்கணும்!

உதவியாளர்: சரி சார். (வெளியேறுகிறார்)

காட்சி 2
இடம்: மவுண்ட்ரோடு, சென்னை
பாத்திரங்கள்: செய்தித்தாள் விற்கும் சிறுவன், பொதுமக்கள் மூவர்

செய்தித்தாள் விற்கும் சிறுவன்: சூடான செய்தி, சூடான செய்தி! சீதாபிராட்டியை அனுமான் கடத்தினார், சீதாபிராட்டியை அனுமான் கடத்தினார்!

(மூவரும் செய்தித்தாள்களை வாங்கி வாசிக்கத் துவங்குகிறார்கள்)

முதலாமவர்: சீதாபிராட்டியை அனுமான் கடத்திச் சென்று பணயக் கைதியாக வைத்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில், இலங்கை ராணுவம் சீதா பிராட்டியை மீட்கும் முயற்சியில் அனுமனையும், அவரது சக தீவிரவாதிகளையும் சுற்றி வளைத்துப் போரிட்டு வருகிறது.

இரண்டாமவர்: கடுமையான மீட்பு நடவடிக்கையில் பலர் உயிரிழக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றும், எப்பாடுபட்டேனும் அனுமனின் தீவிரவாதத்திற்கு முடிவு கட்டியே தீர வேண்டுமென கண்துஞ்சாது இலங்கை ராணுவம் போராடி வருகிறது.

மூன்றாமவர்: (மற்றவர்களை நோக்கி) இங்க பாருங்க! இலங்கை அரசரிடம் பொந்துவின் ஆசிரியர் நாரதர் எடுத்த சிறப்பு பேட்டி வெளி வந்துருக்கு! நாரதர் எல்லா ஆதாரங்களையும் தன் கண்ணாலேயே பாத்தாராம்! அனுமன்தான் குற்றவாளியாம்!

(முதலாமவர் செய்தித்தாள் விற்கும் சிறுவனின் சட்டையைப் பிடிக்கிறார்)

முதலாமவர்: டாய், இது என்ன பேப்பர்டா இது? சீதாவ அனுமார் கடத்திகிட்டு போனாரா? அயோக்கியப் பயல்களா, பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்ல? இலங்கை அரசாங்கமும், இந்திய உளவுத்துறையும் சேந்துகிட்டு அனுமான குற்றவாளியாக்குறிங்களா?

செய்தித்தாள் விற்கும் சிறுவன்: (திமிறியபடி) சார், சார், இன்னா சார் இது அநியாயமா இருக்கு? என்ன இன்னாத்துக்கு அடிக்க வர்றீங்க? ஒனக்கு மெய்யாலுமே அடிக்கணும்னா, பொந்து எடிட்டரப் போயி அடி! நான் இன்னா தப்பு பண்ணேன்?

இரண்டாமவர்: (விலக்கி விட்டு) அவன் சொல்றதும் சரிதான். அந்த பொந்து எடிட்டர நேரடியா கவனிப்போம். வாங்க போவோம்!

(மூவரும் முழக்கமிட்டவாறு நடக்கத் துவங்குகின்றனர்.)

மூவரும்: மறைக்காதே, மறைக்காதே, சிங்கள இனவெறிப் பாசிசத்தை மறைக்காதே, மறைக்காதே! இரத்தம் படிநத இனவெறியை பொய்களால் குளிப்பாட்டாதே! மறைக்காதே, மறைக்காதே, சிங்கள இனவெறிப் பாசிசத்தை மறைக்காதே, மறைக்காதே!

காட்சி 3
இடம்: தி பொந்து அலுவலகம், சென்னை
பாத்திரங்கள்: நாரதர், பொதுமக்கள் மூவர், கூசாமி, காவல்துறை உயர் அதிகாரி, காவல்துறை துணை அதிகாரி,காவலர்கள்,செய்தித்தாள் விற்கும் சிறுவன்

(மூவரும் முழக்கமிட்டவாறு உள்ளே வருகின்றனர்.)

மூவரும்: பொந்து ஒழிக! பொந்து ஒழிக! பொய் சொல்லும் பொந்துவே, மறைக்காதே, மறைக்காதே, சிங்கள இனவெறிப் பாசிசத்தை மறைக்காதே, மறைக்காதே! இரத்தம் படித்த இனவெறியை பொய்களால் குளிப்பாட்டாதே!

(நாரதர் இருக்கையிலிருந்து எழுந்து ஒளிய முயல்கிறார். அவரை மூவரும் பிடிக்கின்றனர். அவர் தன்னை விலக்கிக் கொண்டவாறு)

நாரதர்: இருங்க, இருங்க, இருங்க! என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க? பேச்சு பேச்சாதான் இருக்கணும்!

முதலாமவர்: நீயும் ஒன் பேப்பரும்தாண்டா பிரச்சினை! நீ தினமும் எழுதுற பொய்கள படிச்சி படிச்சி வெறுப்பாயிட்டம்டா!

இரண்டாமவர்: ஒன்னோட பேப்பர் இலங்கைல நடக்குற இனப்படுகொலைய ஆதரிக்குதுடா!

மூன்றாமவர்: நீ சிங்கள அரசுக்கு வேலை செய்ற இந்திய ஏஜெண்டுடா!

நாரதர்: இவ்ளோதானா, நான் என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டேன்! இதோ பாருங்கோ! இது தொழில் பண்ற இடம்! இப்படி சத்தம் போட்டா நன்னாவா இருக்கு? நீங்க ஏன் பொந்துவ சீரியசா எடுத்துக்குறேள்? ஓப்பனா சொல்லட்டுமா, மூணு மணி நேர சினிமா மாதிரி, இது ஒரு டைம் பாஸ், அவ்ளோதான். உண்மை மட்டும்தான் பேசணும்னா பொழைக்க முடியுமோ?

முதலாமவர்: ஒனக்கு சினிமாக்காரனே பரவா இல்லடா. அவன் சொல்றதாவது பொய்ன்னு எல்லாருக்கும் தெரியும். நீதான பொய்ய உண்மைன்னு அடிச்சி சொல்றவன்.

நாரதர்: என்னண்ணா நீங்க, திரும்ப திரும்ப பொய், பொய்ங்கறேள். இதோ பாருங்கோ, அனுமன் சீதைய கடத்தினதா நான் என் கண்ணால பாத்தேன். எல்லா ஆதாரமும் இருக்கு.

இரண்டாமவர்: எங்க ஆதாரத்த காட்டு, பாப்போம்!

நாரதர்: (தடுமாற்றத்துடன்) அது… அது வந்து.. இலங்கை அரசர்கிட்ட இருக்கு! அவர் கண்ணாலேயே பாத்திருக்காரு.

முதலாமவர்: டேய் கேப்மாறி, முதல்ல நீ ஒன் கண்ணால பாத்தேன்னு சொன்ன, இப்ப அவர் கண்ணால பாத்தாருங்குற? இவன.. ஒதைச்சாதான் சரிப்படுவான்!

(எல்லோரும் அடிக்க கை ஓங்குகிறார்கள்)

நாரதர்: (பயத்துடன்) இருங்கோ, இருங்கோ, நீங்க தப்பா புரிஞ்சிண்டேள்! நான் என்ன சொல்ல வர்றேன்னா, இலங்கை அதிபரும் நானும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, அவரு பாத்தா நான் பாத்த மாதிரி, ஈருடல், ஓருயிர்ன்னு சொல்ற மாதிரி!

இரண்டாமவர்: அதத்தாண்டா நாங்களும் சொல்றோம், ஒனக்கும் இலங்கை அரசருக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. நீயும் முக்கிய குற்றவாளிடா.

நாரதர்: (நமுட்டுச் சிரிப்புடன்) மறுபடியும் தப்பா புரிஞ்சிண்டேளே! எங்க உயிர் எங்களுக்கே சொந்தமில்லை. நாங்க வெறும் பொம்மை. எங்கள ஆட்டுவிக்கிறது அந்தப் பரந்தாமன். யாருன்னு கேக்குறேளா, அவர்தான் க்ளோபல் பிசினஸ் என்டர்பிரைசஸ் முதலாளி. இலங்கைல உள்ள தொல்லைகள ஒழிச்சுட்டு, நாலு காசு பாக்கணும்னு நெனக்குற நல்ல மனுஷா.

முதலாமவர்: ஓகோ, வேற யாரு, யாரெல்லாம் ஒன் கம்பெனில இருக்காங்க? இந்திய அரசாங்கமுமா இருக்கு?

நாரதர்: பின்னே, அவா இல்லாமலா? சீனா, பாகிஸ்தான், ரசியா, இஸ்ரேல் இப்டி எல்லா நாட்டு அரசாங்கமும் சேந்துதான்னா இலங்கை அரசருக்கு உதவி பண்றா. டாட்டா, பிர்லா, அம்பானின்னு நாம் நாட்டு பெரிய மனுஷா எல்லாரும் இலங்கைல தொழில் பண்ணி முன்னேறனும்கறதுக்காகத்தான் இவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு.

இரண்டாமவர்: ச்சீ..வாய மூடுறா.. ஈழப் பெண்கள் தாலியறுத்துதான் நீங்க தொழில் பண்ணணுமா? (ஆவேசமாக கை ஓங்குகிறார்)

நாரதர்: இப்ப நீங்க ஏன் டென்ஷனாகுறேள்? ஃப்ரீயா விடுங்கோ… இப்ப என்ன ஆகிப் போச்சு, என்ன சாப்பிடறேள்? ஹாட்டா, கோல்டா சொல்லுங்கோ?

முதலாமவர்: இவனெல்லாம் திருந்துற ஜென்மமில்ல, நாலு சாத்து சாத்தினாத்தான் சரிப்படுவான்!

(கழுத்தை பிடித்து அடிக்க முனைகிறார்கள். இதற்குள் கூசாமி பேசியபடி உள்ளே வருகிறார்.)

கூசாமி: எக்ஸ்கியூஸ் மீ! இந்த கேஸ்ல நான் ஆஜராகலாமா?

(மூவரும் அடிப்பதை நிறுத்தி விடுகின்றனர்.)

மூன்றாமவர்: இவன் யார்ரா இவன்?

முதலாமவர்: இவனத் தெர்ல? இவன்தான்யா கூசாமி! சம்பந்தமில்லாத கேஸ்ல எல்லாம் வாண்ட்டடா வந்து ஆஜராவானே, அந்த லூசு!(கூசாமியை நோக்கி) யோவ், இங்க கேஸெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ வேற வீட்டப் பாரு!

கூசாமி: என்ன சொல்றேள் நீங்க? ஒரு national daily owner மேல violence பண்ணின்டுருக்கேள். a dispute is under progress-ன்னுனேன்.. ஒரு dispute-ல நான் பங்கெடுக்கக் கூடாதுன்னா, அப்றம் எனக்கு என்னதான் வேல இருக்கு? i am a Harvard professor you know…

இரண்டாமவர்: இவன் அடுத்த நாரதராச்சே, சரி நீங்க இந்த நாரதர கவனிங்க, நான் இந்த நாரதர கவனிக்குறேன். இவன் பேசுற தமிழுக்கே இவன நாலு சாத்து சாத்தணும்!(என்றவாறு கூசாமி சட்டையை பிடித்து அடிக்கத் துவங்குகிறார்)

கூசாமி: அய்யயோ, சட்டம் ஒழுங்கு குலைஞ்சு போச்சு, 356 pass பண்ணுங்கோ, மைனாரிட்டி ஆட்சியை கலைங்கோ, அய்யயோ!

முதலாமவர்: யோவ், ஒன் ஒருத்தன அடிச்சா சட்டம் ஒழுங்கு குலைஞ்சு போச்சுன்னு அர்த்தமா? அந்த வாயிலேயே போடு!

(போலிசார் திபுதிபுவென உள்ளே நுழைகின்றனர். உயர் அதிகாரி துணை அதிகாரிக்கு ஆணையிடுகிறார்)

காவல்துறை உயர் அதிகாரி: சார்ஜ்! ஒருத்தர் விடாம் அரஸ்ட் பண்ணுங்க! அரெஸ்ட் தெம் இமீடியட்லி!

காவல்துறை துணை அதிகாரி: நாள பின்ன பிரச்சினை ஆயிடாதே சார்?

காவல்துறை உயர் அதிகாரி: யோவ், அப்புறமா கோர்ட்ல மன்னிப்புக் கேட்டுக்கலாம்யா, இப்ப அடிச்சு நொறுக்கு!

காவல்துறை துணை அதிகாரி: ஒகே சார்!

(போலிசார் மூவரையும் அடித்து துவைக்கின்றனர். அவர்களை விலங்கிட்டு இழுத்துச் செல்கின்றனர். மூவரும் முழக்கமிட்டவாறு செல்கின்றனர்.)

முதலாமவர்: டேய் பொந்து எடிட்டர், நீ இதிலிருந்து தப்பிக்க முடியாதுடா!

இரண்டாமவர்: இன்னிக்கு தப்பிச்சாலும், ஒரு நாள் நீ மாட்டுவடா! நீ சொன்ன பொய்க்கெல்லாம், ஈழ மக்கள் இரத்ததுக்கெல்லாம் நீ பதில் சொல்லித்தாண்டா ஆகணும்!

மூவரும்: வென்றதில்லை, வென்றதில்லை, இனவெறி ஆதிக்கம் வென்றதில்லை, வென்றதில்லை, வென்றதில்லை பொய்கள் என்றும் வென்றதில்லை! அடங்காது அடங்காது உரிமைத் தாகம் அடங்காது!

(மூவரும் இழுத்துச் செல்லப்படுகின்றனர்)

காவல்துறை உயர் அதிகாரி: கூசாமி சார கைத்தாங்கலா கூட்டிட்டு போங்க! (கூசாமி வணக்கம் சொல்லியவாறே போலிசார் தோள்கள் மீது கைபோட்டவாறு செல்கிறார்.) (நாரதரை நோக்கி) சார், அப்ப நான் உத்தரவு வாங்கிக்கட்டுமா?

நாரதர்: (சட்டையை சரி செய்தவாறு கைகுலுக்குகிறார்) ரொம்ப தாங்க்ஸ் சார். நம்ம நாட்ல வர வர டீசென்டனவால்லாம் நிம்மதியா இருக்கவே முடியல. தாங்க்யூ.

(காவல்துறை உயர் அதிகாரி வெளியே செல்கிறார். நாரதர் அறையில் தனியாக இருக்கிறார். கண்ணாடியை நோக்கி செல்கிறார்.தனியாகப் பேசத் துவங்குகிறார்)

நாரதர்: உண்மை, உண்மை, உண்மை..! அப்பப்பா! நான்சென்ஸ்! ம்… பச்சைத் தமிழர்கள்…அதான் கோவம் பொத்துண்டு வர்றது. நான் கூடத் தமிழன்தான், பச்சைத் தமிழன்.(”இல்லை, நீ பச்சோந்தித் தமிழன்” என முதலாமவர் குரல் கேட்கிறது. அதிர்ச்சியுற்று சுற்றும் முற்றும் தேடுகிறார். யாரும் இல்லையென சமாதானமாகி சிரிக்கிறார்.) ஆமாண்டா, பச்சோந்தித் தமிழன்தான்.. இப்ப என்ன ஆகிப் போச்சு? நான் கலர மாத்துவேன், கருத்த மாத்துவேன்,அளவ மாத்துவேன், விவரத்தை மாத்துவேன்,அத விவரமா மாத்துவேன்.. என்ன எவனும் அசைக்க முடியாது! நான் பத்திரிக்கை முதலாளி.. தொழிலாளிங்களோட கூட்டாளி.. ஆமா, நான் மார்க்சிஸ்டுனு நானே சொல்லல, மத்தவன் சொல்றான். இராக், பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், சோமாலியா, எத்தியோப்பியா எல்லா நாட்டுத் தொழிலாளிங்களுக்கும் நான் குரல் கொடுப்பேன், (நமுட்டுச் சிரிப்புடன் சன்னமாக) இந்தியத் தொழிலாளிங்களத் தவிர… ஆமாண்டா, நான் கம்யூனிஸ்டுக்கு கம்யூனிஸ்ட், முதலாளிக்கு முதலாளி, பண்ணையாருக்கு பண்ணையார்! என்னால பகல இராத்திரியாக்க முடியும், இராத்திரியப் பகலாக்க முடியும்! அகம் பிரம்மாஸ்மி! நான் கடவுள், மகா விஷ்ணு, மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு!

(காட்சி உறைகிறது. நாரதர் காட்சியளிப்பது போல உறைந்து நிற்கிறார். செய்தித்தாள் விற்கும் சிறுவன் கூவியடி குறுக்கே ஓடுகிறான்.)

செய்தித்தாள் விற்கும் சிறுவன்: தீவிரவாதி அனுமன் கொல்லப்பட்டார்! தீவிரவாதி அனுமன் கொல்லப்பட்டார்! சீதாவை இலங்கை அரசர் மீட்டு விட்டார்! சீதாவை இலங்கை அரசர் மீட்டு விட்டார்! இலங்கையில் மாதம் மும்மாரி மழை பொழிகிறது! இலங்கையில் மாதம் மும்மாரி மழை பொழிகிறது!(கொஞ்சம் கொஞ்சமாக அழத் துவங்குகிறான்) மின்கம்பி வேலிகளுக்குள் இரத்தம் கசிகிறது!மின்கம்பி வேலிகளுக்குள் இரத்தம் கசிகிறது! மின்கம்பி வேலிகளுக்குள் இரத்தம் கசிகிறது!(மேடை நடுவே துவண்டு முழங்காலிடுகிறான். சிறிது மெளனத்திற்கு பின், பார்வையாளர்களை நோக்கி) அந்த இரத்தத்தை நீங்கள் உணர்கிறீர்களா? அந்த ஓலம் உங்களுக்கு கேட்கிறதா?

(காட்சி உறைகிறது.)

புதுதில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் திரு. சத்யா சாகர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நாடகத்தை தழுவி எழுதப்பட்டது.

நன்றி : போராட்டம்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க