Skip to content

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

பிரெட்ரிக் ஏங்கல்ஸ்

vote-012உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட  விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு ‘உயிர்’ என்பதற்கு எங்கெலஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் இது.

“புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்…. இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்…”
“.. மனது – பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின பொருளற்ற இயற்கைக்கு முரணான கருத்து மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும்.”

“புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக் கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.”

1886 இல் எதனை மந்திர வித்தை என்று எங்கலெஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

000

சிந்தடிகா செல்

சிந்தடிகா – Synthetica  . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.

ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக்  குறியீடுகளுக்குரிய  (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.

சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல;  ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.

வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது.  அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.

மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து  உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.

செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்;  அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.

உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் கூறப்படும் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோயிந்சாமியை நுழைத்து, இனி கோயிந்சாமியாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் செல் (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.

தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கிறது சிந்தடிகா.

குரோமோசோம் என்பது மரபணுக்களால் அனது; மரபணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் பரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், இயற்கை தன் போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, “இது நான் உருவாக்கியது” என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற வகையிலான ‘போலச்செய்தலில்’ தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி.

இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள  ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையசும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை’ நாம் மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்.

கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

000

விஞ்ஞானி கிரெய்க் வென்டர்

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, “ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட  உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?” கேள்வி எழுப்பினர். “ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகிறது” என்று அன்றிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.

25 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும்  படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, “என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்” என்று கூறி போலித் தன்னடகத்துடன் ஏளனப் புன்னகை சிந்துகிறார்கள்.

எனினும், செயற்கை உயிரியல் (synthetic biology) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும் சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும்,  விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகிறார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிர் செல்களையும் அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கிறார்கள்.

“நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக் கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிர்கள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்து விடக்கூடிய  சூழல்களில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிர்கள் இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது” என்றார் எங்கெல்ஸ்.

மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். “தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்” என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.

“தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்வதும் கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே – அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது” என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெள்வந்தவுடனே, ‘அழித்தல்’ தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட ‘ஆக்கல்’ தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகிறதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் இன்னமும் உயிரோடிருக்க துணை செய்கிறது.

தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகிறார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கிறது அறிவியல்.

அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறது.  இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா – இதற்கு விலக்கல்ல.

000

புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் (BioBrick parts)  பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை வேண்டியவாறு இணைத்து ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம்.  சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.

தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.

அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.

எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது; இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு உணவுக் கழகங்களும் (Agri business corporations)  உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள்,  பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ளின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக் களமாக ஏழைநாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நம் கண் முன் தெரிகின்ற சான்று.
ஆனால் இந்த அழிவைக்கூட “சொல்லி அழக்கூடாது, சொல்லாமல்தான் அழவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்” என்று கூறும் சட்டமுன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.

செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் – பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும் தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.

விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும்.  இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும் கொரியாவிலம் ரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விசவாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.

இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (TRIPS), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கிறது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களை மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிராட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக்கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிராட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கு அறிவு சார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்குத் மிரியாட் தடை பெற்றிருந்தது.

கிராட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் “உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல” என்று வாதிட்டன. மார்ச் 2010 இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் கிராட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.

மிரியாட் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் ‘பயனை’ ‘அறுவடை’ செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் காழ்க்கண்டவாறு எச்சிரித்திருக்கிறார்: “சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகிறது. இது நிராகரிக்கப்படவில்லையென்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டுவிடும்”

சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கின்றோம்.
இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவு சார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.

உயிரின் வேதியல் மூலத்தை க் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமையாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கிறது.

இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி.  இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.

____________________________________________

- மருதையன், புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

____________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

Print

152 Comments

  1. //“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது”//

    எவ்வளவு வியாபகமான, அருமையான பார்வை…

    Posted on 08-Jul-10 at 12:48 pm | Permalink
  2. மிக மிக முக்கியமான பகிர்வு!

    உயிர்காக்க விஞ்ஞானிகள் உயிரை கொடுத்து கண்டுபிடிக்கும் மருந்துகள் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாரிக்க பயன்படுத்துவது கொலை குற்றத்திற்கு சமம்!

    Posted on 08-Jul-10 at 12:51 pm | Permalink
  3. Wonderful artcile Vinavu! Thanks for sharing!

    Posted on 08-Jul-10 at 12:59 pm | Permalink
  4. அற்புதமான கண்டுபிடிப்பு ………..நல்ல பதிவு தோழர்

    Posted on 08-Jul-10 at 1:13 pm | Permalink
  5. ஒரு கை தேர்ந்த உயிரித் தொழில்நுட்ப வல்லுனர் கூட இவ்வகையான செய்திகளை இவ்வளவு எளிதாக புரிய வைத்திருக்க மாட்டார்…..

    தோழர் மருதையனின் பல படைப்புகளில் மற்றுமொரு சிறந்த படைப்பு இது….கட்டுரைக்காக அவரின் தயாரிப்பு/ தரவுகள் பாராட்டப்பட வேண்டியவை.

    செயற்கை உயிரியின் படைப்பை மார்ஸியக் கண்ணோட்டத்துடன்
    விளக்கியது மட்டுமல்லாமல் இன்றைய அறிவியல் மேலும் வளராததற்கு தற்போதுள்ள முதலாளித்துவ சமூகமே காரணம் என்பதை விளக்கியதும் அருமை.

    ///இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
    மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி. இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.///

    வரிகள் புரட்சி என்கிற இன்றய தேவையை நச்சென சொல்கிறது.

    சில

    Posted on 08-Jul-10 at 1:57 pm | Permalink
  6. கையேடு

    மிகச் செறிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி.

    Posted on 08-Jul-10 at 4:02 pm | Permalink
  7. மிக நன்றாகத் தமிழில் விளக்கியுள்ளார்.

    Posted on 08-Jul-10 at 4:10 pm | Permalink
  8. K.Jayadeva Das

    //வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. // ஏன் அந்த வேர்க்கடலைத் தோலையும் நீங்களே செய்ய வேண்டியதுதானே? செயற்கையா படிச்சேன் என்று மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் ஏன் ஏற்கனவே படைக்கப் பட்டிருக்கும் ஒரு உயிரை உபயோகிப்பதன் மூலம் அதைப் படைத்தவனிடம் பிச்சைக்காரர்களாக நிற்கிறீர்கள்? //இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. // ஏற்கனவே ஊருபட்ட பாக்டீரியாக்கள் இருக்குதே, இதைச் செய்யவா இவ்வளவு பணத்தை வீனடித்தீர்கள்? ஒருத்தன் நாய் மாதிரி குறைக்கிறான் என்றால் அதை காசு கொடுத்து பார்ப்பார்கள், ஆனால் ஊரிலே எக்கச் சக்கமாக நாய்கள் வீதியெல்லாம் குறைக்கும், அதை யாரும் பொருட் படுத்துவதில்லை. அட அதை விடு, செயற்கை முறையில் முதலில் அமீப, அப்புறம், கொசு, நாய் பூனை என்று மனிதன் வரைக்கும் வந்து விடலாம். மனிதனின்
    உடல் விலை நூற்றி ஐம்பது ரூபாய் தானாம், இதைப் போட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒருத்தியை செய்து [இரவோடு இரவாகச் செய்ய கம்பியூட்டர் புரோகிராம் வந்திடுமில்ல!] அவளோடு வாழ்ந்திட்டு அடுத்த நாள் அதே வேதிப் பொருளாக மூட்டை கட்டி வச்சிடலாம், அப்புறம் ஒவ்வொருத்திக்கும் புராடக்ட் கோட் இணையத்தில் கிடைக்கும், அதைக்கொண்டு நாட்டில் எந்த பெண் வேண்டுமோ அவைளை உருவாக்கி ஆனந்தம் அடையலாம். அடுத்த நாள் இன்னொருத்தியை அதே மாதிரி செய்து பார்க்கலாம். உங்க கண்டுபிடிப்பு எங்கே போகுது பாத்தீங்களா? ஆண்டவன் என்ன அவ்வளவு இளிச்சவாயனா? உங்களால தன்னைத் தானே விருத்தி செய்து கொள்ளும், சுயமாகச் சிந்திக்கும் ஒரு உயிரை ஒருபோதும் உருவாக்க முடியவே முடியாது, இன்றைக்கு எழுதிவைத்துக்கொள்.

    Posted on 08-Jul-10 at 5:08 pm | Permalink
    • Anonymous

      :)

      Posted on 08-Jul-10 at 6:49 pm | Permalink
    • வினவு

      இந்தக் கட்டுரை படைப்புத் தொழிலிலிருந்து கடவுள் காலி செய்யப்பட்டதை மட்டுமல்ல அந்த இடத்தை முதலாளிகள் எடுத்துக் கொள்வதைப் பற்றியும் விமரிசனம் செய்திருக்கிறது. முதலில் கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு சண்டைக்கு வரலாமே?

      Posted on 08-Jul-10 at 8:55 pm | Permalink
      • கடவுளை திட்டறதுங்கிறது நம்ம ஆட்கள்கிட்டெ இருக்கிற fashion. முழுசா செயற்கை உயிரை முதலில் உருவாக்கட்டும். இது ஏறக்குறைய இருதய மாற்று சிகிச்சை மாதிரிதானே

        Posted on 20-Jul-10 at 5:50 pm | Permalink
    • K.Jayadeva Das,

      Your comments are hilarious! :)

      Posted on 09-Jul-10 at 2:16 am | Permalink
    • செயற்கை உயிரியைப்பற்றி சரியாக தெளிவாக அறீந்து கொள்ள ஒரு கட்டுரை, வழக்கம் போலவே தோழர் மருதையன்ன் இக்கட்டுரை ஒரு ஆவணக்கட்டுரை. மேலே ஒருவர் இதற்காக இக்கட்டுரைக்காக கோபத்திலிருக்கிறார். கடவுளின் வேலையை முதலாளிகள் எடுத்துக்கொள்ளும் செயலை அவர் எதிர்ப்பாரா என்பது சந்தேகமே

      கலகம்

      Posted on 09-Jul-10 at 6:20 pm | Permalink
  9. like to read this article in english. is it possible

    Posted on 08-Jul-10 at 5:11 pm | Permalink
    • வினவு

      ராகவன், இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. தமிழில் மட்டுமே வெளியாகி உள்ளது.

      Posted on 08-Jul-10 at 8:53 pm | Permalink
  10. அருமையான அவசியமான பதிவு
    தோழர் மருதையனுக்கு நன்றிகள்

    Posted on 08-Jul-10 at 8:03 pm | Permalink
  11. karma

    ஏப்பா வினவு,

    இப்புடி ஆரமிக்கர எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் ஒருநாள் எதோ ஒரு கார்ப்பொரேஷனோட கல்லா நிறைக்கறதுக்குதான் பயன்படும்.

    அப்புடி என்னாதான் நீங்க ப்ரூவ் பண்றேன்னு துடிக்கறீங்க ??? இயற்கல வாழனும்ன்றீங்க…

    அப்பொறம் லேப்-ல ஆட்டுகுட்டிய பண்ணியாச்சு, பாதிரி மூஞ்சில கரியபூசியாச்சு……இந்த எழவெல்லாம் எதுக்கு…????

    இந்த அ(றி)வியல் இப்பொ உலகத்தெ அழிக்கற வழில ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு, இது இன்னும் புரியலேனா – நீங்களும் “ALL NATURAL ” – அப்ப்டின்னு போட்டிருக்கற கெமிக்கல கடைல வாங்கி தின்னுங்க….

    Posted on 08-Jul-10 at 8:56 pm | Permalink
  12. அற்புதமான பதிவு. இந்த நூற்றாண்டுக்குள் உயிரின் ரகசியம் கண்டுபிடிக்கப்படும் என நம்புவோம்.

    Posted on 08-Jul-10 at 9:28 pm | Permalink
  13. மோகன்

    மிக அருமையான கட்டுரை

    கடினமான செய்தியை வழக்கம் போல எளிமையாக கூறும் தோழர்..மருதையனுக்கு வாழ்த்துக்கள்
    வினவில் கட்டுரைகள் மருதையன் எழுத வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
    வினவு தோழர்கள் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.

    Posted on 08-Jul-10 at 9:38 pm | Permalink
  14. வித்தகன்

    Excellent article. Thanks to Mr. Maruthaiyan.

    Posted on 08-Jul-10 at 10:11 pm | Permalink
  15. தமிழில் எளிமையாகக் கொடுத்துள்ள மருதையனுக்கு நன்றி

    மேலும் அதிக தகவல்கள் வேண்டுவோருக்கும் துறை சார்ந்த பதிவர்களுக்காகவும்….

    —————-
    FIRST SELF-REPLICATING SYNTHETIC BACTERIAL CELL
    http://www.jcvi.org/cms/research/projects/first-self-replicating-synthetic-bacterial-cell/overview/

    look for ..

    Press Release (Web | PDF)
    Frequently Asked Questions (Web | PDF)
    Fact Sheet: Ethical and Societal Implications/Policy Discussions about Synthetic Genomics Research (PDF)
    Fact Sheet: Background/ Rationale for Creation of a Synthetic Bacterial Cell (PDF)

    ——————-

    Dr Craig Venter Announces First Synthetic Living Cell
    http://www.youtube.com/watch?v=eoqBSNmYJYI

    Synthetic cell – groundbreaking science or unethical?
    http://open.salon.com/blog/aliquot/2010/05/26/synthetic_cell_-_groundbreaking_science_or_unethical

    Synthetic Genome Brings New Life to Bacterium
    http://www.sciencemag.org/cgi/reprint/328/5981/958.pdf

    Craig Venter unveils “synthetic life”
    http://www.ted.com/talks/craig_venter_unveils_synthetic_life.html

    .

    காப்புரிமை என்பது தவிர்க்க முடியாதது. ஆராய்சிக்காக செலவழித்த பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பது அதை மேலும் புதிய ஆராய்ச்சிக்கும் பயன்படுத்துவது. இது ஒரு இடியாப்பச் சிக்கல்.

    *
    ஆனால் மென்பொருள் உலகில் வந்துள்ள ஓப்பன் சோர்ஸ் முறை மற்ற அறிவியல் ஆராய்ச்சித் துறைகளிலும் வருங்காலத்தில் வளர்த்தெடுக்கப்படலாம்.

    .

    Posted on 08-Jul-10 at 10:29 pm | Permalink
  16. buruhani

    miga nalla pathivu miga nalla visayam somberigalin maththiyil ibbadipattavarkalaal than ulagukke vidivu

    Posted on 09-Jul-10 at 1:03 am | Permalink
  17. MamboNo8

    superb

    Posted on 09-Jul-10 at 2:00 am | Permalink
  18. sam

    Let me ask you this.

    Can a scientist create a peanut from scratch? What I mean by “from scratch” is without using any materials provided by nature or God. Man can not even create a peanut. we can claim I created this and that. from what? from where? man needs a base product to create anything.

    I always believe Creator is always few notches greater than what is being created. In simple way, I can not create something far greater than me. Anything I create is lower than me. Same thing applies to every aspect of life. If human being is a super talented thing in the universe, then its creator is also much greater than human. You and I can call that as God or some Super Natural Power. We can not deny the existence of that. Period.

    Posted on 09-Jul-10 at 9:20 am | Permalink
    • வித்தகன்

      Sam…. you have not come up with an intelligent argument as you may like to assume… it is the age old scream of brain washed believers which might gain the approval of similar brain washed losers but not create a stir in the rational sphere…

      but do not fret. all hope is not lost yet. you may still become a rational human being. all you have to do is extend your own so called argument to its logical conclusion and you will come to question the existence of that super natural power yourself.

      simply put, if such a power exists even it could not have come into existence on its own, as you have so eloquently expressed, “a base product is needed to create anything”. now, this supernatural power should also have been created out of something if it exists at all. aand where did that base product come from? the cycle will become endless. if you want to stop it by saying that power always remained there on its own and it didnt have to be created, then all you have to do is open your eyes istead and understand that the universe existed on its own instead of your imaginarry power. once that minor tweaking is done to your basic understanding then everything else is consistent with scientific thought processs. you dont need god to explain anything at all.

      Posted on 09-Jul-10 at 10:21 am | Permalink
      • அறிவாளன்.

        அருமையான விளக்கம் வித்தகன் !
        (once that minor tweaking is done to your basic understanding then everything else is consistent with scientific thought processs. you dont need god to explain anything at all.)
        தெளிவான கட்டுரை மருதையன்.
        திறந்தமனம் இருந்தால் புரிந்துகொள்வது எளிது.
        நன்றி.

        Posted on 09-Jul-10 at 8:55 pm | Permalink
      • K.Jayadeva Das

        திரு வித்தகன் அவர்களே,
        you have not come up with an intelligent argument as you may like to assume-என்பது உங்களுக்கும் பொருந்தும். இன்றைக்கு நம்பப் படும் Big Bang Theory-படி சில பில்லியன் வருடங்களுக்கு முன்னாள் Matter, Space, Time எதுவுமே இல்லை. அப்புறம் எப்படி //if you want to stop it by saying that power always remained there on its own and it didn’t have to be created, then all you have to do is open your eyes instead and understand that the universe existed on its own instead of your imaginary power// என்று வாதம் வைக்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இல்லை, அப்புறம் பெருவெடிப்பு [Big Bang] மூலம் தோன்றியது என்று விஞ்ஞானமே கூறுகிறது, அனால் நீங்கள், “அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். இது முரண்பாடானது. “கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சருன்னா, அந்தக் கடவுளைப் படைச்சது யார்?” என்பது ஒன்னும் புத்திசாலித் தனமான கேள்வி இல்லை. இங்க கண்ணில் படும் ஒவ்வொன்னும் இன்னொன்னுல இருந்து தான் வருது, அதே விதி இதற்கெல்லாம் காரணமாக விளங்கும் மூலத்துக்கும் பொருந்தும் என்று கட்டாயம் இல்லை. நியூட்டனின் விதிகள் அணு உலகிற்குப் பொருந்த வில்லை, அதற்க்கு குவாண்டம் இயக்கவியல் வந்தது. மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது. காலம், மெதுவாகச் செல்லும், பின்னோக்கியும் செல்லும் என்பது போன்றவை கண்கூடாக நிரூபிக்கப் பட்டவை. ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அவையெல்லாம் Experiments மூலம் நிரூபிக்கப் பட்டவை.அதுபோல இங்கு காணும் விதிகள் படைத்தவனுக்கும் பொருந்தும் என்று கேட்பது எப்படி நியாயம்? ஒன்று உருவாக இன்னொன்று காரணமாக இருக்கும், அது இவ்வுலக விதி, படைத்தவனை பார்த்து நீயும் இவ்விதிக்கு கீழ் படிந்து நட என்று யாரும் சொல்ல முடியாது. If you find some cause which is the cause of everything but is not caused by anything else that is God, until you reach that cause keep searching.

        Posted on 17-Jul-10 at 10:47 pm | Permalink
        • வித்தகன்

          //இந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இல்லை, அப்புறம் பெருவெடிப்பு [Big Bang] மூலம் தோன்றியது என்று விஞ்ஞானமே கூறுகிறது, அனால் நீங்கள், “அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். //

          Big bang தான் பிரபஞ்சத்தின் தொடக்கமே. அது மட்டுமல்ல. காலத்தின் துவக்கமும் அதுதான். “Big bang” க்கு பத்து வருஷம் முன்னாடி…. என்றெல்லாம் சொல்ல எதுவுமே இல்லை. Big bang நடந்த அந்த மணித்தியாலம் மட்டுமே அனைத்து விதிகளும் காலமும் null and void. Big bang நடந்த உடனேயே ஒளியின் வேகம் 3 லட்சம் கி.மீ/ வினாடி. எல்லா இயற்பியல் விதிகளும் இப்போதும் எப்போதும் இருப்பது போல் அமுலுக்கு வந்தன. அதனால் பிரபஞ்சம் அறிவியல் விதிகளைப் பொருத்தவரை தானாகவே இருந்தது என்று வைத்துக் கொள்வது சரிதான். காரணம் அறிவியல் விதிகளும் பிரபஞ்சமும் சேர்ந்தே பிறந்தன.

          //நியூட்டனின் விதிகள் அணு உலகிற்குப் பொருந்த வில்லை//

          எந்தெந்த விதிகள் பொருந்தவில்லை? குவாண்டம் விதிகள் நியூட்டனின் எந்த சிந்தாந்தத்திற்கு முரண்படுகின்றன? சும்மா சொல்லாதீங்க. கணுக்காம விட்டுட மாட்டேன்.

          //ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அவையெல்லாம் Experiments மூலம் நிரூபிக்கப் பட்டவை.//

          அரைகுறையாக அறிவியலைப் படித்தால் இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமாகப் புரிந்து கொள்வீர்கள். வண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கவே ஒரு திறமையான ஓட்டுனர் தேவைப் படும் போது theory of relativity ஐ எல்லாம் நீங்களாகவே படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்தால் அதுவும் புராணக் கதை அளவில்தான் மனதில் பதியும். நீங்கள் சொல்வது போல ஒரு experiment-உம் எங்கும் நடக்கவில்லை.அதனால் மனதை வருத்திக் கொள்ளாதீர்கள். இப்படியெல்லாம் பொய் சொல்லி ஒரு அறிவியல் கொள்கையை சிதைப்பதற்குப் பதில் பேசாமல் வேர்க்கடலைத் தோல் அளவிலேயே நீங்கள் பேசலாம். உலகிற்கு ஒரு இழப்பும் வராது.

          Posted on 18-Jul-10 at 8:32 am | Permalink
        • வித்தகன்

          //மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது//

          சரியான காமெடிங்க!

          Posted on 18-Jul-10 at 8:34 am | Permalink
        • வித்தகன்

          //“அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். //

          தப்பு ஜெயதேவ தாஸ். தானாகவே உருவாகியது என்றுதான் சொல்கிறேன். உங்கள் வசதிக்கேற்றபடி வளைக்காமல் சொல்லி இருப்பதைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

          Posted on 18-Jul-10 at 8:42 am | Permalink
      • K.Jayadeva Das

        //Big bang நடந்த உடனேயே ஒளியின் வேகம் 3 லட்சம் கி.மீ/ வினாடி. எல்லா இயற்பியல் விதிகளும் இப்போதும் எப்போதும் இருப்பது போல் அமுலுக்கு வந்தன. // See Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer? A dust particle has million of electrons. Science says not even a single electron originate on it own, it has to be taken from somewhere “as it is” OR is to be created by some energy [electron, positron pair production]. You can’t even create an insignificant particle which is one of millions of particles that reside in a dust without accountability, then how do you claim this universe itself came from nothing? [Universe: big Earth in a Big solar system, and sun itself is an insignificant star in a galaxy that contains millions and trillions of bigger stars and has a width of hundred of light years, and the universe contains millions and billions of such galaxies!]. You atheist guys are so intellligent, what is the logic by which you say all these came from nothing? Haa.. Ha.. Ha.. What created the laws of four forces of nature? [Gravitational, Electrostatic, weak & strong Nuclear forces]. Science says the Entropy will always go increasing. It means, the universe was ordered in the beginning and goes chaotic as times goes on but never in the reverse. Who kept things in the ordered manner in the beginning? All questions you guys never think about, just come out and abuse the drawbacks of regious systems and think yourself to be intelligent. Start finding answeres to all these questions, you will know God is there.

        Posted on 19-Jul-10 at 4:06 pm | Permalink
        • அப்பாவி

          //Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer?//

          Excellent question. This is the question the ‘so called’ athiest afraid to ask and explore. Instead, they are hiding behind some ‘intelligent looking’ statements such as “அமுலுக்கு வந்தன”. If they are really keen to find the answers, they will never boast as “பழைய கடவுள் காலி!”. Sorry to say guys. You have to go a long way! You are too far off from the truch!

          Posted on 19-Jul-10 at 4:39 pm | Permalink
        • Viththakan

          //See Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer? //

          Sigh!!!! I am tired Das. We are back to square one. If you want to assume someone switched on the computer, then the question of how that “someone” came into existence should also be addressed. If that someone/something should be assumed to have come into existence on its own, then universe could also be assumed to have come into existence on its own. Once universe is in existence then there is no need for that imaginary someone to explain any subsequent event. I promise you I wont take the bait anymore to continue this line of argument because you have forced me to say the same point four times.

          Posted on 20-Jul-10 at 2:28 am | Permalink
      • K.Jayadeva Das

        ஹாய் வித்தகன், என்ன இது விடிய விடிய ராமாயணம் கேட்ட கதையா இருக்கு. கிழவன் குமாரனானது, இரட்டையரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இதெல்லாம் நம்மள மாதிரி பாமரப் பசங்களுக்கு புரியணுமேன்னு விஞ்ஞானிகள் சொல்லும் கதை. என்னோட பதிலில் பை-மீசான் பற்றி சொல்லியிருந்தேனே? அது தான் இரட்டையர் கதை. காலம் பின்னோக்கிச் செல்லுவதற்கும் இதே போல சோதனை முடிவுகள் உள்ளன. இவையெல்லாம் குவாண்டம் உலகில் மட்டுமே காண முடியும், அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடியாது. இயற்பியலில் MSc PhD பண்ணியிருந்தாலும் குவாண்டம் இயக்கவியல், ரிலேடிவிட்டி பத்தி நல்லா தெரிஞ்சவங்க கம்மி. ஐ.ஐ.டி, Institute of Mathematical Sciences, தரமணி, சென்னை IISc, Bangalore போன்ற இடங்களில் உள்ள பெரிய ஆட்களுக்கு மட்டுமே முழு விவரமும் தெரியும். மத்த எல்லா பயல்களும் பாமரர்கள்தான். ஆனா நான் சொன்னது அத்தனையும் நிஜம் நீங்க யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கலாம். முழுசா படிக்காம சும்மா புருடா விடுறேன்னு சொல்லி என்னை மட்டம் தட்ட வேண்டாம். இன்னொன்னு, நீங்க எப்ப பாத்தாலும் கடவுள யாரு படைச்சாங்கன்னு கேக்குறீங்க. ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சுக்குங்க. ஜடப் பொருள் இருக்கு [கல்லு, மண்ணு, காத்து எல்லாம்], பிரஞை உள்ளதும் இருக்கு [ பாக்ட்டேரியா, செடி கொடி, நாய், பூனை, மனுஷன் எல்லாம்]. இப்போ ஒவ்வொன்னுக்கும் ஒரு காரணம் இருக்கு. அந்த காரணத்துக்கு இன்னொரு காரணம் இருக்கு. கடைசியா எல்லாத்துக்கும் காரணம், [Ultimate Cause of all causes, which has no other cause] எதுவா இருக்க முடியும்ன்னு ஒரு கேள்வி வருது. அதுக்கு நீங்க சொல்வது முதலாவது என்று [ஜடம்]. அது சரியா? தப்பா? அத புரிஞ்சுக்க ஒரு விஷயத்தை யோசிங்க. ஒரு களிமண்ணு பொம்மை கூட ஒருத்தன் செஞ்சு வச்சாதான் வரும். தானா வராது. அதே மாதிரி, எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் ஜடப் பொருளில் இருந்து செய்யணும்னா அதுக்கு பிரக்ஞை உள்ள ஒன்றால் தான் முடியுமே தவிர தானா ஜடப் பொருளால மாறிக் கொள்ள முடியாது. [கம்பியூட்டர், தொலைபேசி, படப்பிடிப்புக் கருவி என்று எதுவுமே தானா வராது, யாராவது சென்ச்சாத்தான் வரும்]. இப்போ நம்ம கண்ணு பக்க கேமரா மாதிரி வேலை பண்ணுது, இதயம் மாதிரி ஒரு பம்ப் மனுஷனாலயே செய்வது கஷ்டம், நம்ம மூளை மாதிரி கணினி எங்கே இருக்கு. விமானத்தை செய்தவங்க முதலில பறவையை பாத்துதானே செய்தாங்க? ஆக, ஜடத்தை அற்புதமாக மாற்ற பிரக்ஞை உள்ள ஒரு [Conscious Entity] உள்ளத்தால மட்டும் தான் முடியும். அதனால தான் சொல்லுறோம், இந்த பிரபஞ்சம் என்ற ஜடத்தை பின்னால் இருந்து முடுக்க, இயக்க ஒரு பிரக்ஞை உள்ளவர் ஒருத்தர் இருக்க வேண்டும் என்று. இப்போ கேட்பீங்க அவருக்கு என்ன மூலமுன்னு. சரி கேட்டுகிட்டே போங்க. கடைசியா நீங்க இதுதாண்டா கடைசி, இதுக்கு மேல எதுவுமே இல்லை என்று நிற்கப் போவது ஒரு பிரக்ஞை உள்ளவரோடத்தான் இருக்க முடியும், [Conscious Entity] ஜடப் பொருளா இருக்க முடியாது.

        Posted on 20-Jul-10 at 11:53 am | Permalink
        • Zaam

          எல்லாத்துக்கும் பின்னால ஒன்னு இருக்கனும் என்றாலும் அந்த ஒன்னை மதங்கள் விவரிக்கும் விதம் சரியானதா? அது மனிதனாகவூம் அல்லது மனிதக் குனங்களைக் கொண்டதாகவூம் தானா இருக்கவேண்டும் பின்னால் இருப்பதை என்னென்று தெரியாத என்பதற்காக அதனை மடத்தனமாக விவரிக்க முடியூமா?

          Posted on 30-Aug-10 at 1:14 pm | Permalink
    • அறிவாளன்.

      ///In simple way, I can not create something far greater than me.///
      There are parents who create sons and daughters who are more intelligent, more lovable and more talented than themselves.

      Posted on 09-Jul-10 at 9:10 pm | Permalink
      • K.Jayadeva Das

        Hi Viththagan,

        Do you think I am just bluffing? Ha… Haa..Ha.. If you wish you can take any Physics fundamental book and verify everything I have told. According to Newton a system can have any energy, but in the quantum world the system can have not any energy but only allowed discrete energies. This is one deviation. Next, according to Newtonian mechanics, Force = Mass * Acceleration. But, when you accelerate an electron in a combined field of Electric & Magnetic in a double D shaped particle accelerator, after a certain speed this relationship was not found obeying. Newton assumed that the mass will remain same irrespective of the speed. But this not true, mass increases with speed. For a given strength of Electric and Magnetic field the electron gets accelerated in a circular path of predictable radius. The radius was more than predicted, because of the increase in mass of electron when it speeds up. This was solved by Einstein by his theory of Relativity. Next, the twin Paradox. [Two brothers, one who goes on a space journey is younger than one who stayed on earth: Imaginary story, but explains time dilatation]. The experimental proof is as follows: A particle called Pi-Meson which disintegerates into a Mu Meson and a Nutrino. On Earth this particle disintegerates so fast that it can travel only few meters of distance. Never beyond that. But the same Pi-Meson created in the upper atmosphere by cosmic radiation is able to reach earth safely travelling hundred of kilometeres. This was because Pi-Meson created by cosmic radiation that travels almost near speed of light lives longer, like a twin who goes at high speed living longer and hence survives the journey of hundreds of kilometers! Next about times reversal, I can not give any easy examples, you have to ask some of your friends who are good at theoretical Physics.

        Posted on 19-Jul-10 at 3:46 pm | Permalink
        • Viththakan

          Jayadeva Das.

          //ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா?//

          Who came back from dead and grew younger? After he got married, did he end up turning into a kid and finish inside his dad’s testicles?

          //மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது//

          Believe me. You haven’t understood Theory of Relativity at all. Otherwise you would never have written the above.

          Posted on 20-Jul-10 at 2:21 am | Permalink
  19. மிக அருமையான கட்டுரை,,,,,,,,,,,,,,,,,,…

    Posted on 09-Jul-10 at 11:27 am | Permalink
  20. இலகு நடையில் புரியக்கூடியதாக எழுதிய‌ இக்கட்டுரையாசிரருக்கு நன்றிகள். புதிய பல தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

    Posted on 09-Jul-10 at 12:28 pm | Permalink
  21. வணக்கம். ஒரு எளிமையான, ஆழமான, தெளிவான அறிவியல் கட்டுரையை தந்தமைக்கு முதலில் திரு.மருதையன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும். விஞ்ஞான கண்டுபிடிப்பான சிந்த்தியாவை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகி, சிந்த்தியாவும் அதனை உருவாக்கிய வென்டரும் இவ்வுலகை எங்ஙனம் பாதிக்கிறார்கள் என்றும், தொடர்பான விஞ்ஞான காப்புரிமை அரசியலையும் தோலுரித்துக்காட்டுகிறது உங்கள் கட்டுரை!

    சிந்த்தியா குறித்த ஒரு சிறு கட்டுரையை, அறிவியல் ஆய்வுச் செய்திகளை தொகுத்துக்கொண்டிருக்கும் என் வலையில் பதிவு செய்திருந்தேன்.
    சுட்டி இங்கே: http://wp.me/pxVdN-17K

    அதே சிந்த்தியாவைப் பற்றி தமிழிஷில் மற்றுமொரு பதிவைப் பார்த்து வாசிக்க வந்தேன். உங்களின் சொல்லாடல் அருமை. ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளை மொழிபெயற்க்க என் தமிழறிவு போதவில்லை. இப்பதிவின்மூலம் நிறைய தமிழ் சொல்லாடல்களை கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி.

    மறுமொழிகளில் சில சிந்த்தியாவை அறவே வெறுப்பது போன்று இருப்பதுதான் வருத்தத்திற்க்குரியது! வித்தகன் அவர்களது மறுமொழி/எதிர்வினை தெளிவாகவும், என் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பது கண்டு மகிழ்ச்சி (இப்படி பலர் நம்மிடையே இருக்கிறார்களே என்று!)

    மேலும் இது போன்ற பல அறிவியல் கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். தங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

    Posted on 09-Jul-10 at 2:09 pm | Permalink
  22. anbu

    very good article.very simple in narration.

    Posted on 09-Jul-10 at 4:17 pm | Permalink
  23. பாலமுருகன்

    Very good and highly informative article ! Good !

    Posted on 09-Jul-10 at 9:01 pm | Permalink
  24. சேலம்ஆனந்த்

    @வித்தகன்
    sam ஆங்கிலத்தில் கேட்டிருந்தாலும் நீங்கள் தமிழிலேயே கருத்தை சொல்லலாமே.

    Posted on 09-Jul-10 at 9:07 pm | Permalink
    • வித்தகன்

      ஆண்டவன் கொடுத்த ஆதாரப் பருப் பொருள் இல்லாமல் மனிதனால் எதைப் படைக்க முடியும் என்ற அதீத அறிவு தோய்ந்த கேள்வியை சாம் எழுப்பியிருக்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரப் பொருட்களை அடுக்கிக் கொண்டே சென்று விடை தெரியாத இடத்தில் “இங்குதான் கடவுள் எல்லாவற்றையும் தோற்றுவித்தார்” என்று சொல்ல்ல விழைகிறார்.

      அதே வழியிலேயே சென்று, எந்த ஆற்றலுக்கும் ஆதாரப் பொருள் உண்டென்பதால் ஆண்டவன் என்ற ஆற்றல் உருவாக ஆதாரப் பருப் பொருள் என்ன என்ற கேள்வியை அவரே கேட்டுக் கொள்ளலாம். ஆண்டவனைப் படைத்தது யார்?

      அந்தமும் ஆதியும் இல்லாத ஜோதியாக ஆண்டவன் என்ற ஆற்றல் தானாகவே உருவாகியிருக்கும், யாரும் படைக்கவில்லை என்று அவர் (இன்னும் பல கோடி மூளைச் சலவை செய்யப் பட்ட மானுடர்களைப் போல) நம்புவாரேயானால், அதே நம்பிக்கையைக் கொஞ்சம் வளைத்து, அண்டப் பெருவெளியில் பிரபஞ்சம் தானாகவே உருவாகியது என்று நினைத்தால் போதும். பிரபஞ்சம் உருவானது முதல் இன்று வரை நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் ரீதியான விளக்கம் தர முடியும். ஆண்டவன் என்ற புனை கதாபாத்திரம் தேவையே இல்லை.

      Posted on 10-Jul-10 at 12:57 pm | Permalink
  25. சேலம்ஆனந்த்

    புரட்சிக்கு பிறகான (இந்திய) சமூகம் எப்படி இருக்கும்? எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருக்காது? என்பது பற்றியெல்லாம் உங்களின் கருத்துகள்,விவாதங்கள் குறித்து அறிய ஆவல்.

    Posted on 09-Jul-10 at 11:44 pm | Permalink
  26. vallavan

    migavum arumai, nanaraga puriyumapdi sollirunkeenga.

    Posted on 10-Jul-10 at 12:55 pm | Permalink
  27. ///தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.//// but without the help and support from private financial capital (which is considered evil and villain), this experiment and brilliant invention would not have been possible in the first place. and anything wrong in the collabaration with Exon Mobil for develop new and cheap bio fuels ? and this old parrot cry of ‘monopoly’ has so far not materialised in many sectors and industries (but this shrill cry was sounded at all new inventions during the course of industrial capitalism). and what alternative does the author prescribe for development of cheap and new forms of bio – fuels ?

    Posted on 10-Jul-10 at 3:27 pm | Permalink
  28. ///இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்./// nonsense. they are more freer than any ‘scientist’ in the former USSR days. and don’t forget that Vender, the inventor of this new ‘life form’ comes under the same category. Can Comrades explain the phenomenon called ‘Lysenkovism’ which was the ‘marxist’ method followed in scientific research under Stalin. Can you write in detail about the life and times of Lysenko of USSR and what happened to him finally and why ? and what exactly happened then ? do you have the intellectual honesty for this ?

    Posted on 10-Jul-10 at 3:35 pm | Permalink
    • அசுரன்

      லைசன்கோ பற்றி கதையடிக்கும் அதியமான் அவர்களுக்கு, இந்த விசயம் உள்ளிட்டு பல்வேறு ஆர்எஸஎஸ் அவதூறுகளை இவரது நண்பரும் பயங்கரவாதியுமான் நீலகண்டன் என்பவன் எழுப்பியதற்கு பதில் அளித்து முன்பு எழுதப்பட்ட கட்டுரை பற்றி அவருக்கும் தெரிந்திருக்கும். (நீலகண்டனது தலைமறைவை துரிதப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று இது)

      அந்தக் கட்டுரையின் சுட்டி இங்கு. இதில் லைசன்கோவை வைத்து கம்யூனிசத்தின் மீது இன்று அதியமான் சுமத்த முயலும் அதே அவதூறுகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

      சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
      http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html

      Posted on 10-Jul-10 at 7:52 pm | Permalink
      • first try to explain what Lysnekovism means and what happened to the scientists in USSR who differed with Lysneko and Stalin. if you have the intellectual honesty to explain this, then we can continue. and let the readers decide who is lying and covering up the truth. anyone can google for Lysneko and find the truth for himself. The world knows who the liars are and what truth is.

        Posted on 11-Jul-10 at 10:19 pm | Permalink
        • அசுரன்

          Athiyamaan,

          first try to read the link given:

          http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html

          I am not hear to teach you lessons on Science….

          Posted on 12-Jul-10 at 11:16 am | Permalink
        • ///இது நடந்தது கிட்டத்தட்ட திட்டமிட்ட படுகொலை – அபாயம் குறித்து பல முறை பலர் எச்சரித்தும், 33 பேராபயங்களை ஆய்வு குழு கண்டுபிடித்த பிறகு அவை அமெரிக்க கம்பனியில் சரி செய்யப்பட்டன் ஆனால் இங்கு இந்தியாவில் காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பும் பிடுங்கி விடப்பட்டது, சிறு சிறு கொள்கலன்களில் சேமிகக் வேண்டிய அதி அபயாமனா எம் சி எல் ரசாயனம் மொத்தமாக 40 டன் டேங்கில் சேமிக்கப்பட்டது, அதன் குளிர் சாதன வசதி காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டது, நச்சுவாயு பில்டர்(ஸ்கரப்) பிடுங்கிவிடப்பட்டது, சிறு விபத்துக்கள் பல முறை நிகழ்ந்த பிறகும் எதுவும் செய்யாதது, போபால் படுகொலை நடந்து இன்ன தேதி வரை அதன் ரசாயன கூட்டு என்னவென்று ரகசியம் காப்பது, மாற்று மருந்து குறித்து ரகசியம் காப்பது, உலக அளவில் அன்றே நிராகரிக்கப்பட்ட அறிவியல் முறையில் சோதித்தறியாத பேரபாயகரமான தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தியது. இவையெல்லாம் யூனியன் கார்பைடு அமெரிக்க தலைமையே செய்தது. /// true enough. and as i had clearly stated earlier, the management is the first accused and no justification for that. ok.
          there was no exit policy in those license raaj days and UCIL was forced to maintain that plant. unlike US, where a loosing factory can be closed and liqudated. that was one of the factors. still regulations in US are very tough in safety aspects. nothing prevented Indians to follow the same. Why the hell were the procedures so lax here ? whom to blame for this ?

          Posted on 21-Jul-10 at 4:02 pm | Permalink
      • அதிகாரம் ஒரு முனையில் குவியும் போது (அது எந்த ‘சித்தாந்த’ அடிப்படையிலானாலும்), அது அதிகார துஸ்பிரயொகத்திற்க்கு வழிவகுக்கிறது என்பதே வரலாற்று பாடம். சோவியத் ரஸ்ஸியாவில், அனைத்து அதிகாரங்களும் ஒரு சிறு குழுவான பொலிட் பீரோவில் இருந்தது. ‘பாட்டாளி வர்க சர்வாதிகாரம்’ என்பது தியரி. உண்மையில் சர்வ அதிகாரங்களும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தான் இருந்தது. (மிக முக்கியமாக ‘தூய’ கம்யூனிசம் நோக்கி செல்ல, இந்த ‘தற்காலிக’ சர்வாதிகாரம் ஒரு ‘பாதைதான்’ என்பது மாயை/கதை. நடைமுறையில் அதிகார மையங்கள் கரையாமல், இறுகும் என்பதே யாதார்த்தம்).

        லைசென்கோ என்னும் விஞ்ஞானியின் வழிமுறைகள் மிக தவறானவை என்று பல ஆண்டுகள் கழித்து நிருபனமான. ஸ்டாலின் காலத்தில் அவற்றை மறுத்த / முரண்பட்ட இதர விஞ்ஞானிகள் பலரும் தண்டிக்கப்பட்டனர் / அழிக்கப்பட்டனர். நிகலோய் வாவிலோவ் பற்றி அசுரன் எழுதியாதை படித்தேன். மிக முக்கிய விஞ்ஞானியான அவர், ஸ்டாலினை கொல்ல ‘சதி’ செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, பட்டினியால இறந்தார். 20 வருட காலம் மிக முக்கிய விஞ்ஞானியாக திகழ்ந்த அவர், ஸ்டாலினை கொலை செய்ய ‘சதி’ செய்த்தாக குற்றச்சாடு. பொய் குற்றச்சாட்டு என்பது மேலோட்டமாக பார்பவர்களுக்கே புரியும். சோவியத் ரஸ்ஸியாவில் ஸ்டாலினை கொல்ல சதி செய்ய ஒரு விஞ்ஞானி முயல்வது மிக பைத்தியக்காரத்தனம். மூடப்பட்ட நாடான சோவியத் ரஸ்ஸியாவில் அப்படி சதி செய்தால் என்ன கதியாவர் என்பதை அனைவரும் அறிவர். இதே போல பல பொய் குற்றசாட்டுகளை சுமத்தி பல விஞ்ஞானிகளும் நசுக்கப்பட்டனர்.

        ஜெனிச்டிக்க்ஸ் என்ற விஞ்ஞானம் ‘பூஸ்வா’ முறை விஞ்ஞானம். அதனால் மக்களுக்கு பயன் இல்லை என்று பல ஆண்டுகள் ஜெனிட்டிக்க்ஸ் சோவியத் ரஸ்ஸியாவில் தடை செய்யப்பட்டது. பின்னாட்களில் தான் தடை விலக்கப்பட்டது. லைசென்கோ பின்னாட்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரின் ‘விஞ்ஞானம்’ போலியானது என்றும் நிருபனமானது.

        In 1964, physicist Andrei Sakharov spoke out against Lysenko in the General Assembly of the Academy of Sciences:

        He is responsible for the shameful backwardness of Soviet biology and of genetics in particular, for the dissemination of pseudo-scientific views, for adventurism, for the degradation of learning, and for the defamation, firing, arrest, even death, of many genuine scientists. [2]
        லைசென்கோ என்னும் தனிமனிதனின் குறைகளை பற்றி பேசுவதை விட, அவரின் ‘வழிமுறைகள்’ தான் மிக சரியானவை என்று ஒரு நாடு ஏற்று, அவருடன் முரண்பட்டவர்களை, பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, சிறையில் அடைத்து நசுக்கிய
        முறை / அமைப்பு பற்றி பேசுவதுதான் சரி. ஜனனாயகம், மாற்று கருத்துகள், கருத்து சுதந்திரம் : இவற்றின் முக்கியம் பற்றி உணர இதுவே சரியான தருணம். விஞ்ஞான முறை என்பதை சர்வ அதிகாரம் கொண்ட ஒரு குழுவோ அல்லது ‘தலைவனோ’ முடிவு செய்வது எத்தகைய விபரீத விளைவை ஏற்படுத்தும் என்பதை நிருபிக்கிறது.

        செஞ்சீனாவில், மாவோவின் ‘பரிசோதனைகள்’ இன்னும் கொடுமை. பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் நம்பாமல், தாந்தோன்றித்தனமாக, முட்டாள்தனமா, மாவோ வழிகாட்டிய படி, இரும்பு உருக்காலைகள் சிறிய அளவில் கிராமம் தோரும் உருவாக்கபாடு, மிக மட்டமான, பயனில்லாத எக்கு உருவாக்கபட்டது. அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. ஏன் கைவிடப்பட்டது என்பதை மாவோயிஸ்டுகளும், வினவு தோழர்களும் ‘விளக்கு’வார்களா ?

        With no personal knowledge of metallurgy, Mao encouraged the establishment of small backyard steel furnaces in every commune and in each urban neighborhood. Huge efforts on the part of peasants and other workers were made to produce steel out of scrap metal. To fuel the furnaces the local environment was denuded of trees and wood taken from the doors and furniture of peasants’ houses. Pots, pans, and other metal artifacts were requisitioned to supply the “scrap” for the furnaces so that the wildly optimistic production targets could be met. Many of the male agricultural workers were diverted from the harvest to help the iron production as were the workers at many factories, schools and even hospitals. Although the output consisted of low quality lumps of pig iron which was of negligible economic worth, Mao had a deep distrust of intellectuals and faith in the power of the mass mobilization of the peasants. Moreover, the experience of the intellectual classes following the Hundred Flowers Campaign silenced those aware of the folly of such a plan. According to his private doctor, Li Zhisui, Mao and his entourage visited traditional steel works in Manchuria in January 1959 where he found out that high quality steel could only be produced in large scale factories using reliable fuel such as coal. However, he decided not to order a halt to the backyard steel furnaces so as not to dampen the revolutionary enthusiasm of the masses. The program was only quietly abandoned much later in that year.
        Substantial effort was expended during the Great Leap Forward on large-scale, but often on poorly planned capital construction projects, such as irrigation works often built without input from trained engineers.

        Posted on 20-Jul-10 at 3:15 pm | Permalink
        • no answers from Asuran or Vinavu or their comrades for this comment ? why not ?

          Posted on 21-Jul-10 at 11:11 am | Permalink
        • கேள்விக்குறி

          அதியமான்.. மாவோவின் இரும்பு கண்டு புடிக்க செஞ்ச முயற்சியும் அதன் விளைவுகளை பத்தி பேசுற நீங்க நியாயப்படி இங்க போபால பத்தி பேசனும் அதுவும் இந்த நேரத்துல…

          தவிரவும் 100 ஜோடி காலுக்காக 1லட்சம் ஜோடி செருப்பு உற்பத்தி செய்கிற முதலாளித்துவம் இந்த உலகத்தை, இயற்கையை, உழைப்ப்பை, மனிதனை அழிப்பதை விட அதிகமாக யாரும் அழித்துவிடமுடியாது. இந்த அராஜக உற்பத்தியை முதலாளித்துவத்திலிருந்து பிடுங்கி விட்டால் அது அரை சோசலிசம் என்பது உங்களுக்கு புரியாத என்ன?

          Posted on 21-Jul-10 at 11:27 am | Permalink
        • Kelvikuri,

          This is my old post about Bhopal disaster :

          http://athiyaman.blogspot.com/2007/05/question-about-economic-polices-in.html

          and getting fair compensation for the victims is more important than hanging Anderson. in 1989, nearly 480 million USD was given as compensation. (it was a huge sum in those days). our tragedy is that nearly 10 lac cases for claims were filed in the courts out of which nearly 50 % were found to be false claims and had to be rejected. it took nearly 15 years to dipose the false claims. such is the cynical nature of Indians..

          No doubt Union Carbide is the first accused. but our officers from Industrial Inspection department are eqaully culpable. how the hell did they perform their safety audits ?

          Posted on 21-Jul-10 at 11:54 am | Permalink
        • அசுரன்

          //லைசென்கோ என்னும் விஞ்ஞானியின் வழிமுறைகள் மிக தவறானவை என்று பல ஆண்டுகள் கழித்து நிருபனமான. ஸ்டாலின் காலத்தில் அவற்றை மறுத்த / முரண்பட்ட இதர விஞ்ஞானிகள் பலரும் தண்டிக்கப்பட்டனர் / அழிக்கப்பட்டனர்.//

          இந்த வெண்ணை வெட்டி கருத்துக்குத்தான் முதல் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் டேப்ரிக்காடர் இன்னும் ஆப் ஆகவில்லை.

          அடுத்த கட்டமாக கிரேட் லீப் பார்வெர்ட் பற்றி ஒரு வெண்ணை வெட்டி கருத்து. அதுக்கும் இதோ கீழே லிங்க் உள்ளது படிக்கவும்.

          மாவோவின் பாய்ச்சல் பொருளாதாரமும், சீனாவின் சாதனையும்
          http://www.monthlyreview.org/0906ball.htm

          மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
          http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_22.html

          Posted on 21-Jul-10 at 3:26 pm | Permalink
        • அசுரன்

          //No doubt Union Carbide is the first accused. but our officers from Industrial Inspection department are eqaully culpable. how the hell did they perform their safety audits ?//

          யுனியன் கார்பைடில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கூட தெரியாமல் அதன் வரலாறு தெரியாமால் வழக்கம் போல சல்லி அடிக்கிறார் அதியமான்.

          அங்கு பயனபடுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்து பேசினால் இந்தியாவுக்கு இதுவே அதிகம் இதையெல்லாம்பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்டேண்டர்ட் கருத்தை உதிர்ப்பார். இதைத்தானே மன்னுமோகனும் சொல்கிறான். ‘போபால்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் அதுக்கெல்லாம் நாம நிக்க முடியாது கட்ந்து போயிக்கிட்டே இருக்கனும்’ என்று.

          Posted on 21-Jul-10 at 3:29 pm | Permalink
        • அசுரன், யார் வெண்ணை வெட்டி என்று நீரே முழங்க வேண்டாமே ? என்னை கேட்டால், நீர் தான் வெண்ணை வெட்டி என்பேன். சரியா. முதலில், அன்று ரஸ்ஸியாவில் கொல்லப்பட்ட விஞ்ஞானிகள் பற்றி நேர்மையாக பதில் சொல்ல முயல்க. உமது லின்க்கில், நான் இங்கு எழுதிய விசியங்களுக்கு பதில் இல்லை. 1964இல் சார்க்வோவ் என்று ரஸ்ஸிய இயற்பிய விஞ்ஞானி (நஸ்ஸிய அணுகுண்டு தயாரிப்பில் முக்கிய பங்காற்றியவர். பல முறை விருதுகள் பெற்றாவர்) வெளிப்படையாக பேசியதை இங்கு கோட் செய்திருந்தேன். அதை விட என்ன ஆதாரம் வேண்டும் ?

          மாவோவின் சாதனைகளை நீர் தான் மெச்சிக்க வேண்டும். Great Leap
          Forward : அதன் விளைவாக கொல்லப்பட்ட பல கோடி மக்களை பற்றி இன்றைய சீனர் என்ன கருதுகின்றனர் என்று பேசலாமா ? முதலில் இரும்பு உருக்காலை விசியத்தில் இங்கு எழுதப்பட்டதற்ற்கு விளக்கம் அளிக்க முடியாமால், லிங்க் அளித்து கொல்றீக (இதே லிங்க் குற்றச்சாட்டு என்னை பற்றி மட்டும் சொல்வீக !!)

          Ok. then try this link about the Great Leap Forward :
          http://en.wikipedia.org/wiki/Great_Leap_Forward

          and if you try to say anything about wiki, then i can say similar nasty things about you quoting wiki for povery levels in India. ok.

          no doubt China developed economically during Mao’s long regime. but at what cost ? esp the terrible human cost ? and why all historians and marxists outside your tiny group differ from your views ? Esp the Chinese themselves. (don’t try to give me the bull about the present Chinese as revisionists and pseudos. they knew their past better than anyone.)

          Posted on 21-Jul-10 at 3:45 pm | Permalink
        • அசுரன்

          //and getting fair compensation for the victims is more important than hanging Anderson. in 1989, nearly 480 million USD was given as compensation. (it was a huge sum in those days). our tragedy is that nearly 10 lac cases for claims were filed in the courts out of which nearly 50 % were found to be false claims and had to be rejected. it took nearly 15 years to dipose the false claims. such is the cynical nature of Indians..//

          நிவாரணம் முக்கியம்….. முதலக் கண்ணீருன்னு சொல்வாய்ங்க தெரியுமா அது இதுதான். உலகில் இது போல ஒரு விபத்து இது வரை நடந்ததே இல்லையென்ற அளவில் மிகக் கோரமான படுகொலை போபால் படுகொலை.

          இது நடந்தது கிட்டத்தட்ட திட்டமிட்ட படுகொலை – அபாயம் குறித்து பல முறை பலர் எச்சரித்தும், 33 பேராபயங்களை ஆய்வு குழு கண்டுபிடித்த பிறகு அவை அமெரிக்க கம்பனியில் சரி செய்யப்பட்டன் ஆனால் இங்கு இந்தியாவில் காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பும் பிடுங்கி விடப்பட்டது, சிறு சிறு கொள்கலன்களில் சேமிகக் வேண்டிய அதி அபயாமனா எம் சி எல் ரசாயனம் மொத்தமாக 40 டன் டேங்கில் சேமிக்கப்பட்டது, அதன் குளிர் சாதன வசதி காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டது, நச்சுவாயு பில்டர்(ஸ்கரப்) பிடுங்கிவிடப்பட்டது, சிறு விபத்துக்கள் பல முறை நிகழ்ந்த பிறகும் எதுவும் செய்யாதது, போபால் படுகொலை நடந்து இன்ன தேதி வரை அதன் ரசாயன கூட்டு என்னவென்று ரகசியம் காப்பது, மாற்று மருந்து குறித்து ரகசியம் காப்பது, உலக அளவில் அன்றே நிராகரிக்கப்பட்ட அறிவியல் முறையில் சோதித்தறியாத பேரபாயகரமான தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தியது. இவையெல்லாம் யூனியன் கார்பைடு அமெரிக்க தலைமையே செய்தது.

          ஆனால், இவரோ இந்திய அதிகாரிகள்தான் முதன்மை குற்றவாளிகளாம்.

          மேலும், ஆண்டர்சனை தண்டிப்பதை விட நிவாரணம் முக்கியமாம். ச்சோ. ச்சோ.. என்னே மனிதாபிமானம். இன்னொரு போபால் இனி நடக்க விடமாட்டோம் என்று தமது எதிர்காலம், நிகழ்காலத்தை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட போபால் மக்கள் போராடி வரும் போது அதியமானும், பாசி-மன்மோகன் கும்பலும் மட்டும் நிவாரணம் முக்கியம் அமைச்சரே என்று கூவுவதில் சில சொந்த அணுகூலங்கள் உண்டு.

          அடுத்த அடி என்னவென்றால் 480மில்லியன் டாலர் அன்று அதிகத் தொகையாம். உண்மையில் கேட்க்கப்பட்ட தொகை 3 பில்லியன் இதை வெளியே கட்டப்பஞ்சாயத்து செய்து அடிமாட்டுக்கு குறைத்தது ராஜீவ் அரசு. இதன்படி ஒரு தலைக்கு அன்றைக்கு கிடைக்கும் தொகை வெறும் 48,000 ரூபாய். இந்தத் தொகை இழிப்புடன் ஒப்பிடுகையில் அன்றைக்கும் கொசுறுத் தொகைத்தான். நான் இங்கு வெறும் 10,000 பேரை மட்டுமே கணக்கில் எடுத்து பேசுகிறேன். உண்மையில் செத்து போன 20,000 பேர் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பேர், நிலம், நீர், காற்று மாசுபாடு, நச்சு அகற்றுவது என்று இதற்கு தேவைப்படும் நிவாரணத் தொகையுடன் ஒப்பிடுகையில் 480 மில்லியன் டாலர் ஒரு டீச் செலவுக்குகூட காணாது.

          Posted on 21-Jul-10 at 3:48 pm | Permalink
        • //யுனியன் கார்பைடில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கூட தெரியாமல் அதன் வரலாறு தெரியாமால் வழக்கம் போல சல்லி அடிக்கிறார் அதியமான்./// யார் ஜல்லி அடிக்கிறார் என்ற விளையாட்டு வேண்டாமே. (இது போன்ற தனிமனித விமர்சனங்களை தவிர்பது நம் இருவருக்கும் நல்லது.) Union Carbide management till date maintains that it was caused by saboutage by some employee. read the link given as the first comment about Bhopal disaster in Vinavu recently. it is not clear how water got into the tanks of MIS. it is impossible normally. an experiment later proved it so. i am not sure of it, but doubts remain and full truth has not emerged till date.

          and FACT fertisliser company was establised before WW 2. and you still harp on your pet theories of Americans trying to sell their outdated technology (which was used for ammunition manufacture for WW2). Our simple question is : how in the hell would you people have enabled dramatic increase in food production in India thru green revolution ? until then in the 60s, we were importing food grains from US. we lived from ship to mouth. read about that and first tell us a better method to INCREASE food production. or may be you prefer starvation and famine to Green reveloution. like the Ukranian Holdomor in 1930s.

          Posted on 21-Jul-10 at 3:54 pm | Permalink
    • வக்கிரா பஞ்சர்

      அதியமான்…intellectual honesty எல்லாம் கம்மீக்களிடன் இன்னுமா நீங்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் ?

      அதெல்லாம் இல்லாதவர்கள் தான் கம்மீக்கள் ஆகிறார்கள்….

      Posted on 18-Jul-10 at 7:54 pm | Permalink
      • அசுரன்

        //மாவோவின் சாதனைகளை நீர் தான் மெச்சிக்க வேண்டும். Great Leap//

        ஆமாம். உங்களிடம் யாரும் அடை எதிர்பார்க்கவில்லையே? நீங்கள் டௌ கெமிக்கல்ஸின் சாதனைகளை மெச்சுங்கள். அதுவே பொருத்தம்

        Posted on 21-Jul-10 at 3:57 pm | Permalink
        • அசுரன்

          //it is not clear how water got into the tanks of MIS. it is impossible normally. //

          இதுதான் அதியமானின் சார்பு வெளிப்படும் இடம். ரஸ்யா, சீனாவை தோண்டி தோண்டி கண்டுபிடிக்கும் அதியமான் சொந்த நாட்டு அவலத்துக்கு என்னான்னு தெரியலையே என்று அப்பாவியாக கேட்கிறார்.

          இது ஒன்றும் ரகசியமல்ல. அங்கிருந்து வால்வுகள் துருப்பிடித்துள்ளன பராமரிப்பு, கண்காணிப்புக்கான முறைமைகள்(ஒரு மணீநேரத்துக்கு ஒரு முறை கண்காணிப்பது, கால அளவில் வால்வ்களை சுத்தம் செய்து மாற்றுவ்து) போன்றவை கைவிடப்பட்டன.

          இதனை சுட்டிக் காட்டி ஒரு அதிகாரி வேலையை விட்டு நின்று கொண்டார். தொழிலாளர்களும் எதிர்த்துள்ளனர்.

          குறிப்பிட்டட் அந்த வால்வு துருப்பிடித்து செயலிழந்ததால் த்ண்ணீர் உள்ளே நுழைந்தது.

          Posted on 21-Jul-10 at 4:02 pm | Permalink
        • அசுரன்

          //how in the hell would you people have enabled dramatic increase in food production in India thru green revolution ? until then in the 60s, //

          இவரோட மன்னார் அண்ட் மன்னார் பசுமை புரட்சி வியாக்கியானத்துக்கும் பலமுற பதில் சொல்லியாகிவிட்டது. அவருக்கு அலுக்கவே அலுக்காது மூனு மாசம் கழிச்சி திரும்ப வந்து செத்து செத்து விளையாடலாமா என்று கூச்சமே இல்லாமல் கேட்பார்.

          அமெரிக்கா, ஐரோப்பா, சினா இந்த இடங்களில் தானிய புரடக்டிவிட்டி மற்றும் இந்தியாவின் நிலைமையைக் கூட அவர் ஒப்பிடமாட்டார் ஏனென்றால் அது நம்ம வேலை.

          Posted on 21-Jul-10 at 4:14 pm | Permalink
        • //இவரோட மன்னார் அண்ட் மன்னார் பசுமை புரட்சி வியாக்கியானத்துக்கும் பலமுற பதில் சொல்லியாகிவிட்டது. அவருக்கு அலுக்கவே அலுக்காது மூனு மாசம் கழிச்சி திரும்ப வந்து செத்து செத்து விளையாடலாமா என்று கூச்சமே இல்லாமல் கேட்பார்.///

          that is your version. but so far, you and your comrades have not given any viable and pragmatic alternative method to achive food security in the 60s. all you people were harping was “US imperialism” ; Green revolution had many negative effects, no doubt. but we had no alternative then, except starvation. first try to give a honest answer the basic question of alternative way. ok.

          ///அமெரிக்கா, ஐரோப்பா, சினா இந்த இடங்களில் தானிய புரடக்டிவிட்டி மற்றும் இந்தியாவின் நிலைமையைக் கூட அவர் ஒப்பிடமாட்டார் ஏனென்றால் அது நம்ம வேலை.
          ///

          sure, farm productivity is very low in India when compared to Europe, US or China. primary reason is tiny farm size here when compared to mega and modern farms there. ok. and that was due to the stupid land ceiling acts till date. and many other issues. and pray what solution do you comrades offer ? reverse this liberalisation and get back to the good old days of “hindu rate of growth” and imports of grains from US ? closed economy and the import subsititution model which crippled us and whose cumulative effects are still with us ?

          Posted on 21-Jul-10 at 4:24 pm | Permalink
        • அசுரன்

          //இதுதான் அதியமானின் சார்பு வெளிப்படும் இடம். ரஸ்யா, சீனாவை தோண்டி தோண்டி கண்டுபிடிக்கும் அதியமான் சொந்த நாட்டு அவலத்துக்கு என்னான்னு தெரியலையே என்று அப்பாவியாக கேட்கிறார்.//

          இதுக்கெல்லாம் அதியமான் பதில் சொல்லமாட்டார். இது மாதிரி அவர் ஓடிப் போன கேள்விகளின் லிஸ்டு ரொம்ப பெரிசு

          Posted on 21-Jul-10 at 4:37 pm | Permalink
        • அசுரன்

          //they knew their past better than anyone//

          இந்திய முதலாளி அதியமானுக்கு போபால் கோடூரத்தின் வரலாறு தெரியாமல் யூனியன் கார்பைடிற்கு சப்பைக் கட்டும் போது சீன் முதலாளி அவன் சொந்த நாட்டு அவலம் குறித்தும், சாதனை குறித்தும் இதே போன்ற சார்பு பார்வையே கொண்டிருப்பான்.

          Posted on 21-Jul-10 at 4:40 pm | Permalink
      • அசுரன்

        //மாவோவின் சாதனைகளை நீர் தான் மெச்சிக்க வேண்டும். Great Leap//

        ஆமாம் நாந்தான் மெச்சுவேன். உங்களிடம் யாரும் அதை எதிர்பார்க்கவில்லையே? நீங்கள் டௌ கெமிக்கல்ஸின் சாதனைகளை மெச்சுங்கள். அதுவே பொருத்தம்

        Posted on 21-Jul-10 at 3:58 pm | Permalink
        • Asuran, here is more ‘dough’ for you (about Mao’s ‘acheivements’) :
          http://en.wikipedia.org/wiki/Great_Chinese_Famine

          Posted on 21-Jul-10 at 4:06 pm | Permalink
        • அசுரன்

          //Asuran, here is more ‘dough’ for you (about Mao’s ‘acheivements’) :
          http://en.wikipedia.org/wiki/Great_Chinese_Famine//

          ரொம்ப டப்தான்… இதுக்கும் சேத்துதான் நான் கொடுத்த லிங்கில் பதில் இருக்கு. முதலில் படியுங்கள்

          Posted on 21-Jul-10 at 4:17 pm | Permalink
        • அசுரன்

          //that is your version. but so far, you and your comrades have not given any viable and pragmatic alternative method to achive food security in the 60s.//

          இது இவரது இன்னொரு பொய். இந்திய விவசாயத்தின் பிரச்சினை குறித்து விவசாயிகாவே இருந்த ஸ்ரி என்பவர் உள்ளிட்டு அசுரன் தளம் முதற்கொண்டு பலமுறை எழுதப்பட்டுள்ளன. இவர்ருடனான விவதத்திலும் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் எல்லா இடத்திலும் வந்து ரஸ்யா, சீனா, விவசாயம் சீரழிவுக்கு உங்களிடம் தீர்வு இல்லை எனவே நாங்கள் சீரழிப்பது நியாயம் என்று டேப்ரிக்காட்ரை ஓட விட்டு விடுவார்.

          சரி 60 வருசத்துல உங்க தீர்வு இப்படி இளிக்குதே ஏன் என்று கேட்டால் திருமப் முதல்ல இருந்ததுவருவார். வடிவேலு காமேடி பார்க்க விருபபமுள்ளவர்கள் இங்கு வரலாம்

          Posted on 21-Jul-10 at 4:43 pm | Permalink
      • ////Asuran, here is more ‘dough’ for you (about Mao’s ‘acheivements’) :

        http://en.wikipedia.org/wiki/Great_Chinese_Famine//

        ரொம்ப டப்தான்… இதுக்கும் சேத்துதான் நான் கொடுத்த லிங்கில் பதில் இருக்கு. முதலில் படியுங்கள்
        ////

        First you read thru this first. and readers can conclude for themselves about the facts of history themselves. Many of them are totally ignorant of the Chinese Famines of the 50s and 60s caused by the Great Leap Forward programs of Chairman Mao. this link will be useful for them and for ignorant comrades..

        Posted on 21-Jul-10 at 4:27 pm | Permalink
        • அசுரன்

          அதியாமான் உங்களது அபிமான உலக வங்கி உள்ளிட்டவை கொடுக்கும் இந்தியாவின் வறுமை குறித்து புள்ளிவிவரங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள் மாட்டீர்கள் எனில் எங்களது எதிரிகள் கொடுக்கும் புள்ளிவிவரங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளா வேண்டும்?

          ஓவ்வொரு முறை இந்தியாவில் நடக்கும் அநியாயங்களைப் பேசும் போது அது குறித்து வாய் முடி இருந்துவிட்டு சீனா, ரஸ்யா என்று திசை திருப்பும் உங்களின் நோக்கம் என்ன?

          Posted on 21-Jul-10 at 4:36 pm | Permalink
        • அசுரன்

          //readers can conclude for themselves about the facts of history themselves. Many of them are totally ignorant of the Chinese //

          இந்தியாவுல போபால் பத்தி, விவசாய சீரழிவுபத்தி, உணவு இறக்குமதி செய்கிறோம் என்பதை பற்றி இவருக்கே தெரியல் இதுல சீனா, ரஸ்யான்னு அப்படியே ஹைஜாக் பன்னிட்டு ஓடுறாரு…. உங்களது அக்கறை அப்படியே புல்லரிக்க வைக்குது….

          Posted on 21-Jul-10 at 4:45 pm | Permalink
        • கலை

          அதியமான்,
          செம்புரட்சி கம்யூனிஸ்டுகள் தங்களுடைய ஆட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள், மக்களுக்கான அதிகாரங்கள் ஆகியவைகளைப் பற்றி வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். அதுபோன்று உங்களுடைய கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் பற்றி முதலில் கூறுங்கள். முக்கியமாக தமிழில்.

          Posted on 23-Jul-10 at 3:20 pm | Permalink
        • கலை,

          வெளிபடையாக கம்யூனிஸ்ட்டுகள் அப்படி தங்கள் செயல் திட்டங்களை என்று அறிவித்துள்ளனர் ? வெறும் தியரி பேசுவார்கள், ஆனால் அவற்றை நடைமுறைபடுத்தும் போது ஏற்படும் பக்கவிளைவுகள், மீறல்கள் பற்றி மழுப்புவார்கள்.

          மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளை பற்றி மழுப்பவே செய்கிறார்கள். இந்திய அரசு செய்யும் மீறல்களை எதிர்க்கும் வழி இதுதானா என்ன ? தங்கள் பெயரில் கொண்டிருக்கும் மாவோ என்ன கொடுஞ்செயல்க்ள் புரிந்தார் என்ற உண்மைகளை பற்றி என்ன ‘விளக்கம்’ தருகிறீர்கள் ? பிரச்சனைகளுகு தீர்வு, வேறு மாதுரியான பயங்கரவாதம் என்பது தானா ?

          சரி, யாம் ஆதாரிக்கும் செயல் திட்டங்களை சுருக்கமாக அவற்றின் தலைப்பை சொன்னால் :

          அடிப்படை மனித உரிமைகள், லிபரல் ஜனனாயகம், சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகள். இன்றைய மேற்க்கு அய்ரோப்பா, கனடா போன்ற நாடுகளின் இருக்கும் அரசியல் / பொருளாதார அமைப்பை தான் வழிமொழிகிறேன். (இந்தியாவில் நிலவுவது : ” அரை முதலாளித்துவம், அரை ஜனனயாகம்” – உங்க பாசைல சொன்னா !).

          மனித உரிமைகளை மீறுவது சர்வாதிகாரம் / பாசிசம். அது என்ன சித்தாந்தத்தின் பெயரில் நடந்தாலும் சரி. அவ்வளவு தான்.

          Posted on 23-Jul-10 at 4:21 pm | Permalink
  29. damodhar

    for comments

    Posted on 10-Jul-10 at 3:36 pm | Permalink
  30. அப்பாவி

    //அந்தமும் ஆதியும் இல்லாத ஜோதியாக ஆண்டவன் என்ற ஆற்றல் தானாகவே உருவாகியிருக்கும், யாரும் படைக்கவில்லை என்று அவர் (இன்னும் பல கோடி மூளைச் சலவை செய்யப் பட்ட மானுடர்களைப் போல) நம்புவாரேயானால், அதே நம்பிக்கையைக் கொஞ்சம் வளைத்து, அண்டப் பெருவெளியில் பிரபஞ்சம் தானாகவே உருவாகியது என்று நினைத்தால் போதும்.//

    அடக்கொடுமையே! ஆண்டவன் என்ற ஆற்றல் always remained there on its own and it didnt have to be created என்பது மூளைச்சலவை செய்யப்பட்ட மானுடர்களின் நம்பிக்கையாம். பிரபஞ்சம் தானாகவே தோன்றியது என்ற இவர்களின் நம்பிக்கை அறிவியல் ரீதியானதாம்!!!!! ஆதாரமற்ற உங்கள் குருட்டு நம்பிக்கைகளுக்கெல்லாம் ஏனய்யா அறிவியல் என்ற பெயரை உபயோகிக்கிறீர்கள்? K.Jayadeva Das சொன்னாமாதிரி வேர்க்கடலைத் தோலையும் செயற்கையாகவே கண்டுபிடித்து, அதுபோலவே எல்லா உயிரினங்களையும் செயற்கையாகவே கண்டுபிடிக்கமுடியும் என்று நிருபித்துவிட்டு அப்புறமா அறைகூவுங்கள் யார் காலி என்று!

    Posted on 10-Jul-10 at 3:38 pm | Permalink
    • வித்தகன்

      அப்பாவி… உங்களுக்காகவே தமிழிலிருந்து தமிழுக்கே மொழிபெயர்த்து சொல்கிறேன்… ஒரு குறிப்பிட்ட ஆற்றலால் இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று நீங்கள் நினைத்தால் அந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்தபடியே இருக்கும். அதற்கு கடவுள் என்று நீங்கள் பெயர் வைத்தாலும் கடவுளின் பிறப்பு எப்படி எங்கிருந்து வந்தது என்ற எல்லையில்லாக் கேள்விகள் வந்த படியே இருக்கும். கடைசியாக நீங்கள் சொல்லப் போகும் பதில் கடவுளை யாரும் படைக்கவில்லை கடவுள் தானாகவே உருவானார் என்பதுதான். அப்படி இருக்கிறதா இல்லையா என்று நிரூபிக்க முடியாத ஒரு ஆற்றல் தானாகத் தோன்றியிருக்கும் என்று எண்ணுவதற்கு பதில், பிரபஞ்சம் தானாக உருவானது என்ற தெளிவு மட்டும் – இன்னும் குறிப்பாக big bang event நடக்க வேறு காரணம் தேவையில்லை என்ற புரிதல் – பிறந்து விட்டால் போதும். அதற்குப் பிறகு மழை பெய்வதை விளக்கவோ, பிறப்பு இறப்பை புரிந்து கொள்ளவோ, எதற்குமே கடவுள் என்ற கருத்தே தேவை இல்லை. நீங்களும் அப்பாவியாக மொட்டையடித்து அலகு குத்தும் விளையாட்டையெல்லாம் விட்டு விடலாம்.

      Posted on 10-Jul-10 at 4:51 pm | Permalink
  31. sankari

    //வேர்க்கடலைத் தோலையும் செயற்கையாகவே கண்டுபிடித்து, அதுபோலவே எல்லா உயிரினங்களையும் செயற்கையாகவே கண்டுபிடிக்கமுடியும் என்று நிருபித்துவிட்டு அப்புறமா அறைகூவுங்கள் யார் காலி என்று!//
    வேர்க்கடலைத் தோலைக் கண்டுபிடித்து, மத்த எல்லாத்தையும் கண்டு பிடித்து, அதுக்கப்புறமும் “ஓகேயா” ன்னு உங்க்கிட்டயும் கடவுள் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கணுமோ? அதுனாலதான் சொல்றாங்க போலருக்கு .. god is greatனு!

    Posted on 10-Jul-10 at 8:29 pm | Permalink
  32. sankari

    //but without the help and support from private financial capital (which is considered evil and villain), this experiment and brilliant invention would not have been possible in the first place.//

    Whose capital helped and supported the not so brilliant inventors of “fire, wheel and zero” Mr.Athiyaman?

    By the way, “to the best of my knowledge and belief”, finance capital is different from industrial capital or entrpreneurial capitalism. People curse the finance capital as casino capital in U.S nowadays.

    anyway, long live the “intellectual” property right of the casino!

    Posted on 10-Jul-10 at 8:42 pm | Permalink
  33. கலை

    இவ்வுலகில் இருபெரும் துன்பங்களுக்கு இடையில் மானுட நாகரிகம் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது. ஒன்று அறிவியலை மறுத்து மக்களை மடைமையில் ஆழ்த்தி அகோரமாக வளர்ந்து நிற்கின்றது. மற்றொன்று அறிவியலை தனது அகோரப்பசிக்கு ஏற்ப வளர்த்து,வளைத்து நயவஞ்சமாக வளர்ந்து நிற்கின்றது. ஒன்று வறுமையை உற்பத்தி செய்கிறது மற்றொன்று வறுமையை சகித்துக்கொள்ளச் சொல்கிறது. இரண்டுமே மனித இனத்தின் எதிரிகள்தாம். இவையிரண்டையும் ஒழித்துக்கட்ட வேண்டிய தேவையினையும் அதற்கான வழியினையும் தோழர் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். இனி நம்முன் இருக்கும் ஒரேயொரு வழி போராடுவது ஒன்றுதான். அது செம்புரட்சியாகவே இருக்கும்.

    Posted on 10-Jul-10 at 9:31 pm | Permalink
  34. கிருஷ் டி.வி

    காப்புரிமை என்பதே ஒரு கலவாணித்தனம்.அதனை எதிர்த்து போர் புரிதல் இன்றைய மானிட சமுதாயத்தின் கடமை.

    Posted on 11-Jul-10 at 7:52 am | Permalink
  35. s.k

    superb,

    Posted on 11-Jul-10 at 7:06 pm | Permalink
  36. ரீடர்ஸ்

    K.R.அதியமான்,

    தோழர்கள் தெளிவாக விளக்கிய பின்னரும் ஒவ்வொரு முறையும் நீங்கள் சைபிரியாவுக்கும் லைசென்கொவிசத்திற்க்கும் இன்னும் பிற முதலாளிகளின் கழிவுகளுக்கும் எங்களை இழுத்துச்செல்வது ஏன்? அசுரன் கொடுத்த லிங்க்-ஐ கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன். Sainath -இன் (78 % பேர் இருபது ரூபாயில் வாழ்கிற) புள்ளிவிவரத்தை நம்பாத நீங்கள் கூகிள், விக்கிபீடியா, ஜெயமோகன் – இவற்றை ஆதாரமாகக் கொண்டு வந்து முதலாளிகளுக்காக ஆஜராகும் பொது ரீடர்ஸ் எரிச்சலாகிறோம். கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்.

    இப்படிதான் ஜார்ஜ் ஆர்வெல்-இன் Animal Farm -ஐயும் அவரது spanish civil war கதைகளையும் எடுத்துக்காட்டிக் கூறுபவர்கள் இருந்தார்கள். பிரிட்டிஷ் ‘Archive ‘ – கள் பூட்டுடைக்கப்பட்ட பின்னர் தான் ஆர்வெல்லின் ‘informer ‘ வேடம் கலைந்தது

    Posted on 12-Jul-10 at 9:47 pm | Permalink
    • ரீடர்ஸ்

      திருத்தம்:
      //ஆர்வெல்லின் ‘informer ‘ வேடம் கலைந்தது//
      சோஷலிஸ்ட் வேடம் கலைந்து ‘informer ‘ முகம் தெரிய ஆரம்பித்தது.

      Posted on 13-Jul-10 at 7:50 pm | Permalink
    • ///Sainath -இன் (78 % பேர் இருபது ரூபாயில் வாழ்கிற) புள்ளிவிவரத்தை நம்பாத நீங்கள் ////
      முழு பொய். இது உண்மையென்றால், கடந்த 50 வருடங்களில் இந்தியாவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல். வறுமை அளவு மிக மிக அதிகமாகிவிட்டது என்று அர்த்தம். சாய்னாத் சொன்னால் அது தான் சரியானது என்று அர்த்தமல்ல. அவர் மீது மரியாதை உண்டு. ஆனால் அவரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எகனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி என்ற ஒரு பக்கா இடதுசாரி பத்திர்க்கையில் சில மாதங்கள் முன்பு இந்திய வறுமை அளவை பற்றிய மிக விரிவான ஆய்வு கட்டுரை வந்தது. அதன் லிங்க் இல்லை. ஆனால அதன் பிரதி என்னிடம் உள்ளது. தேவையென்றால் அனுப்புகிறேன். ஏழ்மை அளவு மற்றும் விகிதம் 1991க்கு பிறகு மிக வேகமாக குறைந்துள்ளதை அவர்களே நிருபிக்கிறார்கள். பல் வகையான விரிவான தரவுகள். லைனென்கோ பற்றி எழுதுகிறேன். சிறு குழுவான உங்க குழுமம் சொல்வது தான் சரி. உலகில் அனைத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும், ஏனையா மார்க்சியர்களும் ஸ்டாலின், லசென்கோ பற்றி கருதுவது தவறு மற்றும் பொய் என்று நீங்களே சொல்லிக்கலாம். ஆனால்..

      Posted on 20-Jul-10 at 11:51 am | Permalink
      • அசுரன்

        தெற்கு ஆசியாவில் வறுமை நிலை 1980களின் இறுதியை விட மோசமாகிவிட்டது. உலகமயம் தோல்வியா என்று பரிசீலனை நடக்கும் வேளையிலே அதியமான் தனது பழைய டேப்ரிக்கார்டரை தொடர்ந்து ஓட விட்டுக் கொண்டுள்ளார். கேட்க்கத்தான் யாருமில்லை….

        Posted on 20-Jul-10 at 5:04 pm | Permalink
        • வினவு

          என்ன செய்வது அசுரன், கீறல் விழுந்த ரிக்கார்டுகள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரிதான் ஒலிக்கும். எனினும் அதியமானது ஆறுதலுக்காக ஒன்று சொல்ல்லாம். அவர் கீறல் விழுந்த ரிக்கார்டு என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும் என்று. ஆனால் வாசகர்களின் கருத்தை ஒரு கீறல் விழுந்த ரிக்கார்டு புரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு அதியமான் என்ன சொல்வார்?

          Posted on 20-Jul-10 at 5:16 pm | Permalink
        • அசுரன்

          புதிய வறுமை அளவீட்டு முறைமைகளின் படி முன்பு ஒரு டாலர் என்று இருந்ததை ஜெஸ்ட் சில 1.25 டாலர்னு மாத்தினாங்க, இன்னும் சில நுணுக்கமான அளவைக் வரையறைகளைச் சேர்த்தார்கள். பார்த்தால் ஓட்டை பெரிதாகிவிட்டது. அதாவது //ஜஸ்ட் 0.25டாலர்// அதிகப்படுத்தினால் இந்தியாவின் வறுமை எண்ணீக்கை சில மில்லியன்கள் அதிகமாகிறது.

          இதில் இவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகளும் உள்ளன.

          அதாவது 1981லிருந்து இன்ன வரைக்கும் நகரப் பகுதியில் 538 ரூவாய்க்கு மேல சம்பாரிச்சாக்க அவன் ஏழை கிடையாதாம். இதே அளவு கிராமத்துல 356 ரூவா. டேய் முடிச்சவுக்கிங்களா, கடந்த 20 வருசத்துல விலைவாசி எவ்வளவு ஏறியிருக்கு இன்னமும் அதே பழைய அளவுகோலை வைத்துக் கொண்டு வறுமை குறைஞ்சிடுச்சின்னு கத வுட்டுன்னு கீறீங்க… (இத எத்தனையோ முறை சொல்லியாச்சி ஆனா அதியமான் தான் தனது விடா முயற்சியிலிருந்து இன்னும் பின் வாங்கக் காணோம்)

          //However, this also represents a significant decline in poverty from the 60 percent level in 1981 to 42 percent in 2005, although the rupee has decreased in value since then, while the official standard of 538/356 rupees per month has remained the same.[5][6] Income inequality in India (Gini coefficient: 32.5 in year 1999- 2000)[7] is increasing. On the other hand, the Planning Commission of India uses its own criteria and has estimated that 27.5% of the population was living below the poverty line in 2004–2005, down from 51.3% in 1977–1978, and 36% in 1993-1994[2]. The source for this was the 61st round of the National Sample Survey (NSS) and the criterion used was monthly per capita consumption expenditure below Rs. 356.35 for rural areas and Rs. 538.60 for urban areas. 75% of the poor are in rural areas, most of them are daily wagers, self-employed householders and landless labourers.//

          http://en.wikipedia.org/wiki/Poverty_in_India

          Posted on 20-Jul-10 at 5:29 pm | Permalink
      • அசுரன்

        //எகனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி என்ற ஒரு பக்கா இடதுசாரி பத்திர்க்கையில் //

        இதுதான் காமெடியின் உச்ச கட்டம். இவரது அளவுகோலின் படி, 1990க்கு முன்பு இந்தியா எப்படி ஒரு சோசலிச நாடோ அதே போல இ பி ட்பிள்யூ ஒரு இடதுசாரி ஏடு.

        மறந்துவிட்டேனே… தெஹல்கா ஒரு மாவோயிஸ்டு ஏடு

        Posted on 20-Jul-10 at 5:05 pm | Permalink
        • வினவு

          அப்படி என்றால் அதியமானும் ஒரு கம்யூனிஸ்ட்டா? ஏன் கொர்பச்சேவ் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருக்கும் போது அதியமானும் இருக்கலாமே?

          Posted on 20-Jul-10 at 5:18 pm | Permalink
        • Asuran, EPW is not Tehelka and you ar totally ignorant about EPW and its reputation. It was founded in the 40s and still going strong with a strong leftist bent. and since the article i quoted is only for paid subscrbers, i am sending the PDF copy to you at asuran@gamil.com and to vinavu too.

          that article contains all the surveys and their limitations and the controversies in identifying the poverty line.

          first read that fully and then argue. You have nerve to quote wiki now while you and your comrades continiously deride me for quoting wiki.

          and if this liberalisatiion is indeed causing negative results, then i have no objection in reversing it and getting back to the good old license raaj and controls. and we have already agreed about the term ‘socialism’ as used in India. it is of course not the same one as followed under Lenin or Stalin. so don’t get into all that again.

          And Vinavu : let the readers decide who is a keeral vizuntha record and who is denying reality. ok.

          and by the way, this post is about the correct methods for science and my points regarding scientific methods under a ‘dictatorship’.

          Posted on 21-Jul-10 at 11:04 am | Permalink
    • ///பிரிட்டிஷ் ‘Archive ‘ – கள் பூட்டுடைக்கப்பட்ட பின்னர் தான் ஆர்வெல்லின் ‘informer ‘ வேடம் கலைந்தது//// சரி. ரஸ்ஸிய ஆர்க்கைவஸ் (தேசிய ஆவண காப்பகம்)இல் உள்ள ஸ்டாலின் கால ஆவணங்களை சமீம்ப காலங்களை வெளிபடுத்தி, ஆய்வுகள் நடந்தன. அவற்றை ஏற்க்கமாட்டீர்கள். அவை அனைத்தும் கட்டுக்கதை. அப்படிதானே ?

      Posted on 20-Jul-10 at 11:54 am | Permalink
      • அசுரன்

        //irst read that fully and then argue. You have nerve to quote wiki now while you and your comrades continiously deride me for quoting wiki.//

        விக்கிய கட்டிக்க்கிட்டு நாங்க அழுவல. உங்களுக்கு பிடிக்குமேனு அங்கருந்து எடுத்துப் போட்டேன். அவ்வளவுதான். மேலும் விக்கியில சொல்லிருக்கிறது பொய்யினு சொல்லுங்க மேல பேசலாம்.

        உங்களுக்கு வசதின்னாக்க ரஸ்யாவுல அத்தன லட்சம் டெத்து, சீனாவுல மாவோ காலத்துல எல்லாருமே பிச்சைக்காரங்கன்னு ஆதாரம் புள்ளி விவரம்னு சல்லி அடிப்பீங்க அத நாங்க நம்பனும். ஆனா அதே நாங்க உங்களோட சொந்த புள்ளி விவரத்த தந்தாக்க லிமிட்டேசன், அது உண்மையில்ல அப்படின்னு சல்லிய திருப்பி அடிப்பீங்க அதையும் நாங்க நம்பனும்…

        வேற எவனவாது இனா வானா இருப்பான் அவண்ட போயி உங்க டாமால் டூமில் கதைய வுடுங்க

        Posted on 21-Jul-10 at 3:38 pm | Permalink
        • you still refuse to answer about the EPW article. why don’t you enquire with any economcis professor anywhere in India about EPW and about poverty level trends in India ?

          Posted on 21-Jul-10 at 4:09 pm | Permalink
        • ///வேற எவனவாது இனா வானா இருப்பான் அவண்ட போயி உங்க டாமால் டூமில் கதைய வுடுங்க//// நீர் தான் டமால் டுமீல் கதையளப்பவர் என்கிறேன். நீர் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். திறந்த மனமும், பண்பும் உடைய ‘வேறு எவனுடனாவது’ விவாதிப்பதுதான் சிறந்தது.

          Posted on 21-Jul-10 at 4:12 pm | Permalink
        • அசுரன்

          //உங்களுக்கு வசதின்னாக்க ரஸ்யாவுல அத்தன லட்சம் டெத்து, சீனாவுல மாவோ காலத்துல எல்லாருமே பிச்சைக்காரங்கன்னு ஆதாரம் புள்ளி விவரம்னு சல்லி அடிப்பீங்க அத நாங்க நம்பனும். ஆனா அதே நாங்க உங்களோட சொந்த புள்ளி விவரத்த தந்தாக்க லிமிட்டேசன், அது உண்மையில்ல அப்படின்னு சல்லிய திருப்பி அடிப்பீங்க அதையும் நாங்க நம்பனும்…//

          மேலே சொல்லியுள்ள உண்மை அதியமானுக்கு கசக்கிறது அதனால் அதிய’மானா’க மாறி இப்படி கூறுகிறார்.

          //மனமும், பண்பும் உடைய ‘வேறு எவனுடனாவது’ விவாதிப்பதுதான் சிறந்தது.//

          இதைத்தானே அவர் செய்கிறார்? எத்தனியோ முறை அவரது கருத்துக்களில் உள்ள ஓட்டைகள் அவற்றின் பின்னே உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய பிறகும் அவரோட மருமக செஞ்சா சூப்பரு மாமியாரு செஞ்சா நொல்லை என்கிற அனுகுமுறைதானே வெளிப்படுகிறது அவரிடம்?

          அவர் கொடுக்கின்ற புள்ளிவிவ்ரங்களை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவர் மறுக்க இயலாத அளவு வைக்கின்ற எமது புள்ளிவிவரங்களை ஜஸ்ட் லைக் தேட் செல்லாது செல்லாது என்றுதானே கடந்து செல்கிறார்?

          Posted on 21-Jul-10 at 4:52 pm | Permalink
        • அசுரன்

          //you still refuse to answer about the EPW article. why don’t you enquire with any economcis professor anywhere in India about EPW and about poverty level trends in India ?//

          இ பி டபிள்யு வ நான் என்யா மறுக்கனும்? வேனுமின்னாக்க உங்க அரசாங்கம் மற்றும் உலக வங்கி புள்ளிவிவரங்கள மறுத்து பாருங்க.

          நாங்க ஒன்னும் உங்கள மாதிரி பொய்யா புள்ளிவிவரம் கொடுக்கல. நீங்க கொடுத்துள்ல புள்ளிவிவ்ரத்ததான் திரும்ப உங்களுக்கே காட்டுறோம்

          Posted on 21-Jul-10 at 4:58 pm | Permalink
        • அசுரன்

          ஒருவேளை 1949-லிருந்து இந்தியாவின் சராசரி வாழ்நாள் வளர்ச்சியை சீனாவினுடையதுடன் ஒப்பிட்டால் பல மில்லியன் கணக்கானவர்களை இந்தியா கொன்று விட்டது என்று குற்றம் சாட்டலாம். இந்தியா சீனாவைப் போல மாவோவின் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இது போன்ற பல கோடிக்கணக்கானவர்களின் சாவை தடுத்திருக்கலாம் என்று இந்தியா மீது குற்றம் சாட்டலாம். உலகின் ஆகக் கொடூரமான அரசு இந்தியா என்று கட்டுரைகள் எழுதலாம். என்ன செய்ய துரதிருஷ்டவசமாக இந்தியா ஏகாதிபத்தியத்தின் அல்லக்கையாக இருப்பதால் இது போல குழந்தைத்தனமாக எழுதும் தேவை அடிவருடிகளுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ இன்னும் ஏற்ப்படவில்லை போலும். பார்ப்போம் நேபாளத்தின் வெற்றி என்னவிதமான கதைகளை இந்த உலகுக்கு கொடுக்கிறது என்பதை.

          Posted on 21-Jul-10 at 5:14 pm | Permalink
        • //நாங்க ஒன்னும் உங்கள மாதிரி பொய்யா புள்ளிவிவரம் கொடுக்கல. நீங்க கொடுத்துள்ல புள்ளிவிவ்ரத்ததான் திரும்ப உங்களுக்கே காட்டுறோம்/// this shows your total disregard for neutral analysis and rejection of hard core analysis which incorporates the controverises in the various NSS sample surveys. moreover, you have not given any soild and logical refuttal for your blind assertations that poverty has INCREASED in India in the recent decades. Why don’t you try all these with your professors who awarded you a Ph.D or with anyone outside your closed group. First prove with facts what ‘lies’ that EPW report gives. you are incapable of arguing to the point with facts and figures while being only hysterical in calling anyone who disagrees with you.

          Posted on 22-Jul-10 at 11:01 am | Permalink
        • ////உங்கள் அறச்சீற்றம், இங்கு இப்போதிருப்பதை பற்றி பேசும் போது டைம் மெசின் பிடித்து, ரசியாவிற்க்கும் சீனாவிற்க்கும் உக்ரைன்னுக்கும் பறக்கிறதே? அதன் மர்மம் என்ன?/////

          போலி அய்டிகளில் தனி மனித தாக்குதல் நடத்துவதை தவிர , உருப்படியா எழுத வக்கில்லாத பொறம்போக்குகளுக்கு நான் பதில் சொல்ல முயன்றதுதான் தவறு.

          சரி, சைனா, ரஸ்ஸிய பற்றி திரும்ப திரும்ப பேச வேண்டியதன் அவசியம் : ஒரு காலத்தில் அவை தானே உமது ரோல் மாடல்கள். அங்கு முயலபட்ட கொள்கைகளை தானே (அதாவது மாவோ, ஸ்டாலின் காலங்கள் வரை) மீண்டும் உலகெங்கும் அமல்க்கும் கனவு உமக்கு. அன்று அங்கு நடந்த விசியங்களின் முழு பரிமாணம் பற்றி பெரும் பாலானோர் அறியாமைய்யில் உள்ளனர். அதை பற்றி பொய் பிரச்சாரம் மட்டும் உமகு குழு தொடர்ந்து செய்கிறது.இன்று இந்தியாவில் நடக்கும் மீறல்களை அவற்றை ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. பல கோடி அப்பாவி மக்களை கொடூரமாக நசுக்கிய ஒரு சர்வாதிகார அமைபை பற்றி அறச்சீற்றம் கொள்ளாமல், ஆனால் அதே அமைப்பை/ கொள்கைகளை சர்வரோக நிவாரணியாக தொடர்ந்து முழுங்கம் உமது பிரச்சாரத்திற்கு பதில் தான் எமது பதிவுகள். வேறு பொரிய ரகசியம் எதுவும் இல்லை.

          ஆனாலும் இதே வெட்டி வேலை தான் என்று தோன்றுகிறது. உலகில் பெரும்பாலானோ மார்க்சியர்கள், சித்தாந்தத்தை தான் ஏற்கிறார்களே ஒழிய, உம்மை போல வரலாற்று உண்மைகளை/ மீறல்களை மறுப்பதில்லை.

          Posted on 23-Jul-10 at 3:07 pm | Permalink
      • அசுரன்

        //அவற்றை ஏற்க்கமாட்டீர்கள். அவை அனைத்தும் கட்டுக்கதை. அப்படிதானே ?//

        ஆமாம் இதிலென்ன சந்தேகம்

        Posted on 21-Jul-10 at 4:59 pm | Permalink
        • அசுரன்

          http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_22.html

          மாவோவின் காலத்தில் சீன குடிமக்களின் வாழ்க்கைத் தரம் பல மடங்கு உயர்ந்தது. இந்தியாவை விட பல மடங்கு மோசமான நிலையிலிருந்த சீனா குறுகிய காலத்தில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, வேலை நிரந்தரம்., பணி பாதுகாப்பு, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ததுடன், பெரும் தொழிற்சாலைகளையும், சிறு தொழிற்சாலைகளையும், கிராம அளவில் புறக்கடை பட்டறைகளையும் கட்டியமைத்து சீனாவை ‘முற்றிலும் விவசாய நாடு’ என்ற நிலையிலிருந்து தொழில் சார்ந்த நாடாக படு வேகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்த காலகட்டம்தான் சீனாவில் முதலாளித்துவ வளர்ச்சியை நிறைவு செய்து சோசலிசத்தை கட்டியமைத்த சோசலிச புரட்சி கட்டம் ஆகும். இதுதான் வரலாற்றில் மாவோ மீது அவதூறு செய்ய எதிரிகள் பயன்படுத்தும் கிரேட் லீப் ஃபார்வேர்டு என்ற காலம் ஆகும்.

          Posted on 21-Jul-10 at 5:03 pm | Permalink
        • அசுரன்

          சீனாவில் பஞ்சம் – ஏகாதிபத்திய புரளிகளின் சுயமுரன்பாடு:

          அமெரிக்க ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் 3 கோடி பேர் இறந்தார்கள் என்று, இன்னொரு கும்பல் 7 கோடி பேர் இறந்ததாக சொல்கிறது. பல தரவுகள் சீனாவில் அந்த குறிப்பிட்ட காலத்தில் பஞ்சம் ஏற்ப்பட்டதையே காட்டுகின்றன. ஆனால் இவர்கள் சொல்லுவது போல அதிதமாக உப்பிப் பெருக்க வைக்கப்பட்ட நிலையில் அல்ல. இதனை பிறகு பார்ப்போம் முதலில் இந்த புள்ளிவிவரங்களிலேயே புதைந்துள்ள பொய்களை பார்ப்போம்.

          உலகின் மிக பெரிய பஞ்சம் சீனாவில் ஏற்ப்பட்டதாம், நாமும் கூட தினமும் செய்தித் தாள்களில் பார்க்கிறோம், ஆப்பிரிக்காவில் மில்லியன் கணக்கில் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்று. ஆனால் மில்லியன் கணக்கில் இறந்ததாக எங்கும் நாம் பார்க்கவில்லை. ஆனால் சீனாவில் நடந்தது என்று நாம் நம்ப வேண்டும். ஏனேனில் அவ்வாறு சொல்லுவது ஈராக் யுத்தத்தை நியாயப்படுத்திய கனவான்கள் அல்லவா?

          Posted on 21-Jul-10 at 5:04 pm | Permalink
        • அசுரன்

          பங்களாதேசத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான பஞ்சம் 1974-75ல் ஏற்பட்டது இறந்தவர்கள் அரசு கணக்கின் படி 30,000 பேர். ஆனால் சீனாவில் 3 கோடி பேர் இறந்ததாக நாம் நம்ப வேண்டும். இதனை மீறி சீனா வல்லரசாகிய ரகசியத்தை மட்டும் இந்த நக்கிக் குடிப்பவர்கள் சொல்வதில்லை.

          Posted on 21-Jul-10 at 5:04 pm | Permalink
        • அசுரன்

          இந்த கும்பல்கள் யாருமே இவர்களது புள்ளிவிவரங்களில் உள்ள படு முட்டாள்தனமான முரன்பாடுகளூக்கு பதில் சொல்லியதேயில்லை(பார்க்க இணைப்பிலுள்ள ஆங்கில கட்டுரை). ஒரு உதாரணத்திற்க்கு1949-ல் சராசரி வாழ்க்கை காலம் 35 வயதாக இருந்து 1970-ல் அது 65ஆக உயர்ந்த மர்மம் குறித்து இவர்கள் பதில் சொல்லுவதில்லை. உலகின் ஆக மோசமான பஞ்சம் நிலவியதாக கதை எழுதும் இவர்கள் அதே காலகட்டத்தில் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன அமெரிக்க நாடுகளை விட சீனாவில் சராசரி மனித வாழ் நாள் காலம் அதிகமாக இருந்த மர்மம் குறித்து எதுவும் சொல்வதில்லை. இந்த விசயங்களையெல்லாம் சீனாவில் பஞ்சம் குறித்து அதீதமாக எழுதிய ஜூடித் பானிஸ்டர் என்பவரே ஒத்துக் கொள்கிறார். இதே பஞ்ச சாவு புரளி எழுத்தாளர்தான் 1984-ல் எழுதும் பொழுது சீனா தனது வருடாந்திர சாவு எண்ணிக்கையை குறைத்ததில் சிறப்பு சாதனை படைத்துள்ளது என்கிறார். சுயமுரன்பாட்டு முத்தண்ணாக்கள். சீனாவில் பஞ்சம் மிக மோசமாக இருந்ததாக சொல்லப்படும் பகுதியில் வாழ்ந்தவர்களை பேட்டி கண்ட ஒரு நிருபரும் அங்கு இவர்கள் சொல்லுவது போல எதுவும் நிகழவில்லை. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் அந்த காலத்தில் இருந்ததாக உறுதிப்படுத்துகிறார்.

          Posted on 21-Jul-10 at 5:05 pm | Permalink
        • ///இந்த கும்பல்கள் யாருமே இவர்களது புள்ளிவிவரங்களில் உள்ள படு முட்டாள்தனமான முரன்பாடுகளூக்கு பதில் சொல்லியதேயில்லை(பார்க்க ////

          Currect life expectancy in China is certainly higher in China when compared to 1949. the controversy over the actual figures of people who starved to death in the famines during Mao’s regime is due to the Chinese govt not publishing correct data in a transparent manner. there is exaggaration / wrong data ; but no one denies that there were huge famines. the Chinese now admit that these famines are mainly due to the diastarous polices of Mao (under Great Leap Forward) than due to natural causes.

          ////Despite the harmful agricultural innovations, the weather in 1958 was very favorable and the harvest promised to be good. Unfortunately, the amount of labour diverted to steel production and construction projects meant that much of the harvest was left to rot uncollected in some areas. This problem was exacerbated by a devastating locust swarm, which was caused when their natural predators were killed as part of the Great Sparrow Campaign. Although actual harvests were reduced, local officials, under tremendous pressure from central authorities to report record harvests in response to the new innovations, competed with each other to announce increasingly exaggerated results. These were used as a basis for determining the amount of grain to be taken by the State to supply the towns and cities, and to export. This left barely enough for the peasants, and in some areas, starvation set in. During 1958–1960 China continued to be a substantial net exporter of grain, despite the widespread famine experienced in the countryside, as Mao sought to maintain face and convince the outside world of the success of his plans.

          In 1959 and 1960 the weather was less favorable, and the situation got considerably worse, with many of China’s provinces experiencing severe famine. Droughts, floods, and general bad weather caught China completely by surprise. In July 1959, the Yellow River flooded in East China. According to the Disaster Center,[10] it directly killed, either through starvation from crop failure or drowning, an estimated 2 million people.

          In 1960, at least some degree of drought and other bad weather affected 55 percent of cultivated land, while an estimated 60 percent of northern agricultural land received no rain at all.[11]

          With dramatically reduced yields, even urban areas suffered much reduced rations; however, mass starvation was largely confined to the countryside, where, as a result of drastically inflated production statistics, very little grain was left for the peasants to eat. Food shortages were bad throughout the country; however, the provinces which had adopted Mao’s reforms with the most vigor, such as Anhui, Gansu and Henan, tended to suffer disproportionately. Sichuan, one of China’s most populous provinces, known in China as “Heaven’s Granary” because of its fertility, is thought to have suffered the greatest absolute numbers of deaths from starvation due to the vigor with which provincial leader Li Jinquan undertook Mao’s reforms. During the Great Leap Forward, cases of cannibalism also occurred in the parts of China that were severely affected by drought and famine.[12]

          The agricultural policies of the Great Leap Forward and the associated famine would then continue until January 1961, where, at the Ninth Plenum of the Eighth Central Committee, the restoration of agricultural production through a reversal of the Great Leap policies was started. Grain exports were stopped, and imports from Canada and Australia helped to reduce the impact of the food shortages, at least in the coastal cities.
          /////

          Posted on 22-Jul-10 at 11:09 am | Permalink
        • Asuran,

          I wish that you were born in china under mao and had lived thru the famine stricken areas. only then you and your gang would have understood the terrile reality.

          the point here is whether those terrible famines were man made or due to natural causes. the current Chinese estimates (which had reviewd the lies and falsifactions of data and info by petty officials under Mao’s regime) that 30 % of the effects were due to natural causes while the rest of the 70 % was caused by Mao’s crazy polices. You may lable this as propoganda and lie in your usual hysterical manner. but 1.5 billion Chinese and thousands of neutral researchers do not agree with your
          blind assertations.

          Posted on 22-Jul-10 at 11:16 am | Permalink
        • Until the early 1980s, the Chinese government’s stance, reflected by the name “Three Years of Natural Disasters”, was that the famine was largely a result of a series of natural disasters compounded by some planning errors. Researchers outside China, however, generally agree that massive institutional and policy changes which accompanied the Great Leap Forward were the key factors in the famine.[3] Since the 1980s there has been greater official Chinese recognition of the importance of policy mistakes in causing the disaster, claiming that the disaster was 30% due to natural causes and 70% by mismanagement.[citation needed]

          During the Great Leap Forward, farming was organized into communes and the cultivation of private plots forbidden. This forced collectivisation substantially reduced the incentives for peasants to work well. Iron and steel production was identified as a key requirement for economic advancement. Millions of peasants were ordered away from agricultural work to join the iron and steel production workforce.

          Yang Jisheng would summarize the effect of the focus on production targets in 2008:

          In Xinyang, people starved at the doors of the grain warehouses. As they died, they shouted, “Communist Party, Chairman Mao, save us”. If the granaries of Henan and Hebei had been opened, no one need have died. As people were dying in large numbers around them, officials did not think to save them. Their only concern was how to fulfill the delivery of grain. [4]

          Along with collectivisation, the central Government decreed several changes in agricultural techniques based on the ideas of Ukrainian pseudo-scientist Trofim Lysenko.[5] One of these ideas was close planting, whereby the density of seedlings was at first tripled and then doubled again. The theory was that plants of the same species would not compete with each other. In practice they did, which stunted growth and resulted in lower yields. Another policy was based on the ideas of Lysenko’s colleague Teventy Maltsev, who encouraged peasants across China to plow deeply into the soil (up to 1 or 2 meters). They believed the most fertile soil was deep in the earth, allowing extra strong root growth. However, useless rocks, soil, and sand were driven up instead, burying the topsoil.

          Posted on 22-Jul-10 at 11:18 am | Permalink
        • The Famine of 1959-1961 in China
          http://www.sacu.org/greatleapfamine.html

          try this for a change.

          and you still have not answered my comments and points about Lysnekov of USSR and his effects ; about the reversal of Mao;s stupid experiments with domestic steel making in China.

          Posted on 22-Jul-10 at 11:20 am | Permalink
        • இந்தியாவின் மையபகுதிகளில், மாவோயிஸ்டுகளை வேட்டையடும் முயற்சியில், இந்திய அரசு புரியும் கொடூரங்கள், அத்துமீறல்கள் பற்றி உங்கள் அறச்சீற்றங்கள் நியாயமானவை. மறுக்கவில்லை. (மாவோயிஸ்டுகளின் கொடூரங்கள் வேறு விசியம்).

          உலகில் எந்த நாட்டிலும், எந்த காலகட்டத்திலும், எந்த சித்தாந்தந்தத்தில் அடிப்படையிலும், இதே போன்ற அடக்குமுறைகள், வன்கொடுமைகள், மீறல்கள் நடந்த்தால், அவற்றை பாரபட்சமில்லாமல் கண்டித்து, அறச்சீற்றம் கொண்டால் உங்களை பாராட்டுவேன்.

          சோவியத் ரஸ்ஸியாவிலும், மாவோவின் சீனாவிலும், பல கோடி மக்கள் கடும் அடக்குமுறையகளால் நசுக்கப்பட்டு, சொல்ல முடியாத துன்பம், பட்டினி, சிறைவாசங்களை அனுபவித்த வரலாற்றை மறுத்து, அதை பற்றி எந்த அறச்சீற்றம் கொல்ல இயலாத உமது பாரபட்டசம் பற்றிதான் எமது கேள்விகள்.

          அமெரிக்கா செய்த / செய்யும் வன்கொடுமைகளை யாம் நியாயப்படுத்தவில்லை. எமக்கு புனித பசுக்கள் / புனித பிம்பங்கள் என்று எதுவும் இல்லை. மனித உரிமைகளை யார் எப்போது மீறினாலும் அவற்றை கண்டு அறச்சீற்றம் கொள்வதுதான் உண்மையான மனிதனேயம்.

          முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்ஸியர்கள் பெரும்பாலோர், வரலாற்று உண்மைகளை (மாவோ, ஸ்டாலின் பற்றிய உண்மைகளை) மறுக்கவில்லை. உலகில் இன்று அனைத்து ஆய்வாளர்களும், பலகலைகழகங்களும், ரஸ்ஸிய. சீன மக்களும் ஏற்க்கும் அடிப்படை உண்மைகளை மறுத்து, அவை கட்டுகதைகள் என்று ஒதுக்கித் தள்ளும், உமது ‘அறச்சீற்றங்களை’ என்னவென்பது ? அவர்கள் அனைவரும் மடையர்கள், நீங்கள் மட்டும்தான் புத்திசாலிகள் என்று நீங்களே சொல்லிக்கொண்டு திரிவது பற்றி என்ன சொல்வது ?

          Posted on 22-Jul-10 at 11:32 am | Permalink
        • அக்காகி

          ///திருப்பூரில் என்ன செய்கிறீர் என்று அறிவேன்/////

          செம காமடி பீஸாய்யா நீர்??

          நான் எதுக்கு திருப்பூர் போகனும்?
          நான் சென்னையில், உங்க ஏரியாவின் (பெருங்குடி) பக்கத்து ஏரியாவில் தான் இருக்கீறேன்!

          போலி முகவரி, உண்மை முகவரி என்பதெல்லாம் இருக்கடும்!
          கருத்து உண்மையாக இருக்கும் போது முகவரி பற்றிய பேச்செதுக்கு…. :) ?

          நான் தனிப்பட்ட முறையில் சாதித்தது ஒன்றுமில்லை தான்!! அமைப்பு சாதித்தவைகளை, அமைப்பின் ஆதரவாளர் என்கிற முறையில், சில போராட்டங்களில் கலந்த்திருக்கிறேன் என்ற வகையில் பெருமையாக கருதுகிறேன்.

          உங்கள் அறச்சீற்றம், இங்கு இப்போதிருப்பதை பற்றி பேசும் போது டைம் மெசின் பிடித்து, ரசியாவிற்க்கும் சீனாவிற்க்கும் உக்ரைன்னுக்கும் பறக்கிறதே? அதன் மர்மம் என்ன?

          இங்கு இப்போதிருக்கும் பிரச்சனைக்கு ஒடுக்குமுறைக்கு போராடவில்லை! சரி தான்.
          ஒங்க அறமே சீறக்கூடிய ரசியா, சீனா, உக்ரைன்-னுக்காகவாவது போராட்டம் நடத்துங்களேன் அதியமான்! :) :)

          தெருவில் இறங்கி மக்களிடம் `உங்க வயித்துக்கு கஞ்சி இல்லியா? பரவாயில்லை, அதை விடுங்க! அன்று உக்ரைனில், சீனாவில் பஞ்சம்! அதற்காக போராடுவோம்!’ என்று சொல்லிப்பாருங்களேன்! வேடிக்கை பார்க்க நாங்களும் வருகிறோம்!!!! :)

          Posted on 23-Jul-10 at 2:08 pm | Permalink
      • அக்காகி

        ////மனித உரிமைகளை யார் எப்போது மீறினாலும் அவற்றை கண்டு அறச்சீற்றம் கொள்வதுதான் உண்மையான மனிதனேயம்.///

        பாத்துங்க அதியமான்… பாத்து!
        உங்க அறச்சீற்றம் தண்டகாரன்யாவில் அரச படைகளை, மனிப்பூர், காஷ்மீர், அட்டூழியம் செய்யும் இந்திய ராணுவம். ஈழத்தில் தமிழ் மக்கள் ரத்தம் முடித்த சிங்கள-இந்திய கூட்டுப்படையை, ஈரக்கில், ஆப்கானில், உலக மக்கள் ரத்தம் குடிக்கும் அமெரிக்க ராணுவத்தையும் பூண்டோடு அழித்துவிடப்போகிறது!

        உங்கள் அறச்சீற்றம், குறைந்த பட்சம் உங்கள் மனைவிக்கு, பூண்டு உரிக்கவாவது உதவி இருக்கிறதா???

        Posted on 23-Jul-10 at 12:18 pm | Permalink
        • உம்மை போன்ற போலி பெயர்களில் வீரம் பேசும் வெத்து வேட்டுகளை விட எமது பங்களிப்பு அதிகமாக இருக்கு என்றே சொல்கிறேன். ஆமா, முதல்ல இதுவரை நீர் என்ன சாதித்து உள்ளீர் என்று விளக்க முடியுமா ? நீர் யார், திருப்பூரில் என்ன செய்கிறீர் என்று அறிவேன். முதல்லை வெளிப்படையாக, நேர்மையாக மோத முயலவும். போலி அய்டிகளில் வீரம் பேசும் நீர், அறச்சீற்றம் பற்றி பேசுவம்து தான் முரண்நகை.

          Posted on 23-Jul-10 at 12:24 pm | Permalink
  37. அகாகி அக்காகியோவிச்

    ///பிரிட்டிஷ் ‘Archive ‘ – கள் பூட்டுடைக்கப்பட்ட பின்னர் தான் ஆர்வெல்லின் ‘informer ‘ வேடம் கலைந்தது/////

    எந்த பானை உடைந்தால் மான் வேசம் கலையும் ன்னு யாராச்சும் அதியமான் சோசியக்கார அண்ணாச்சி கிட்ட கேட்டு சொல்லுங்கப்பு!

    Posted on 13-Jul-10 at 9:21 pm | Permalink
  38. AKILA

    “மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.” – it seems they have copied so many existing things and (u r saying) done a new (artificial) thing ? am i right?

    Posted on 14-Jul-10 at 7:46 pm | Permalink
    • அகாகி அக்காகியோவிச்

      ஆமா, இருக்குறதுல இருந்து தான் உருவாக்கி இருக்காங்க! அது தான் முடியும்!

      ஒன்றும் இல்லாத இடத்தில் எல்லாத்தையும் கடவுள் உருவாக்கினார் என்ற வாதம் எப்படி சரி? அப்ப கடவுளை உருவாக்கியது யார்?
      ஒன்றுமே இல்லாத இடத்தில் தான் கடவுள் தானாக உருவாகினாரா?

      ஒரு சில அதிமேதாவிகள், அண்டம் – பூமி ஆகியவற்றின் தோற்றத்திலிருந்து, உயிர் தோன்றியது வரை விளக்கினால், உயிர் எப்படி உயிரற்றதிலிருந்து தோன்றியது, கடவுள் தான் அதை உருவாக்கினார் என்பார்கள்!

      உயிரற்றதிலிருந்து உயிர் தோன்ற முடியும் என்பதின் முதல் படி சிந்தடிகா என்றால், அது பழைய கடவுளின் படைப்புரிமையை உரிமையை பறிக்கும் முதல் படி தானே??

      Posted on 16-Jul-10 at 2:21 pm | Permalink
      • வக்ரா பஞ்சர்

        யூரே மில்லர் experiment பற்றி படித்ததில்லையா ?

        அமினோ அமிலங்கள் வேதியல் மாற்றத்தால் உருவாகக்கூடும். ரைபோ நூக்கிளியக் அமிலங்களும் வேதியல் மாற்றத்தால் உருவாகக்கூடும் என்பதை நிரூபித்த சோதனை அது.

        கேள்வி என்னவென்றால்…

        இத்தகய உயிரற்ற வேதிப்பொருட்கள் எப்படி ஒன்றுக்கொன்று சேர்ந்து கூட்டு முயற்சி செய்து உயிர் என்பதை உருவாக்குகிறது என்பது தான்.

        ஆர்கானிக் வேதிப்பொருளானாலும், மான், மயில், மனிதன் என்ற உயிரினமானாலும் கூடி வாழும் தன்மையே இயற்கையானது. நாம் மற்றும் அவர்கள் என்று எதிரியை உருவாக்கி கூட்டம் சேர்க்கும் தன்மை இயற்கைக்கு விரோதமான செயல். அதன் பெயர், கிருத்துவம், யூதம், இஸ்லாம் மற்றும் கம்யூனிசம்.

        Posted on 16-Jul-10 at 9:06 pm | Permalink
        • அக்காகி

          சேர்ந்து வாழ்வது இயற்கையானது என்றால், அப்புறம் ஏன்டா இந்து மதத்தின் பெயரால் இயற்க்கைக்கு விரோதமாக சூத்திரன், பஞ்சமன் என்று பிரித்து வைத்து ஒடுக்குகிறீர்கள்???

          நீ சம்பந்தமில்லாமல் உளரினாலும், நான் சம்பந்தப்படுத்தியே கேட்க்கிறேன்..

          Posted on 19-Jul-10 at 9:04 pm | Permalink
    • இருப்பதிலிருந்து உருவாக்கியதை இல்லததிலிருந்தே உருவாக்கியது போன்ற மாயையை உருவாக்கி இருக்கின்றனர், இதனால் வினவிற்கு என்ன பயன். உயிர்கள் தானாக வரவில்லை ஒரு புத்திசாலிதனமான ஒரு சக்தி உருவாக்கியது என்பதை என்னுடைய பதிவில் எழுதி வருகிறேன்,

      நண்பர் மருதையன் அவர்களையும் படித்து தெளிவுருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      Posted on 18-Aug-10 at 7:25 pm | Permalink
  39. வக்ரா பஞ்சர்

    //
    வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு.
    //

    வேர்க்கடலைத் தோலையோ முந்திரிப்பருப்பையோ அவர்கள் உருவாக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும் கம்யூனிஸ்டு கம்மினாட்டி வினவு கும்பலே.

    Posted on 16-Jul-10 at 3:17 pm | Permalink
    • பறையோசை

      நீ தோலை சாப்பிடுவியா! பருப்பை சாப்பிடுவியா!

      Posted on 16-Jul-10 at 3:27 pm | Permalink
  40. Eswaran

    Good message
    but after reading the comments from different friends here above. I felt very bad.
    every one has the rights to say their opinion but we have to keep some disipline. who ever write this article – he has no wrong intention instead he has the good feelings about our human society.

    There are some friends, wrote about communism – first of all I would like to say that communism is a science – with out read the (real authors book) communism books please dont critisise.
    Communism is the only social science which talks about real democracy, freedom for the people, society, nature, animals and for all.
    Have you ever read what is dilectical? dialectical materialsm?
    Communism never taught any unwanted, falls message. Please friend, read the books then talk about it.
    Communism social science is for us – they gave their life for the human society.

    Posted on 17-Jul-10 at 12:27 am | Permalink
  41. கேள்விக்குறி

    அதியமான் நான் குறிப்பிட்டுள்ள இன்னொரு விசயத்துக்கு உங்கள் பதில்?
    @@@100 ஜோடி காலுக்காக 1லட்சம் ஜோடி செருப்பு உற்பத்தி செய்கிற முதலாளித்துவம் இந்த உலகத்தை, இயற்கையை, உழைப்ப்பை, மனிதனை அழிப்பதை விட அதிகமாக யாரும் அழித்துவிடமுடியாது.@@@

    Posted on 21-Jul-10 at 7:14 pm | Permalink
  42. NOGOD7

    உயிர்! காற்றில் இருத்து மனிதனுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும் மென்பொருள் அட அட என்ன “பொருள்”வாதி ஐயா நீங்க. வாழ்த்துக்கள்

    Posted on 28-Jul-10 at 1:17 pm | Permalink
  43. ஷாஜஹான்

    செயற்கை செல் (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?

    http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html

    இந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது?, இறை நம்பிக்கையாளர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா?, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன?, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம்.

    Posted on 18-Aug-10 at 12:51 pm | Permalink
    • கேள்விக்குறி

      ஷாஜூ, வெல்கம் பேக்.. எப்படி இருக்கீங்க? நீங்க வராத இந்த வினவு தளம் எனக்கு என்னமோ போல இருக்கு.. வந்ததுதான் வந்துடீங்க.. அப்படியே சௌதி பதிவுக்கெல்லாம் கருத்து சொல்லிட்டு போங்களேன்… அருமை சகோதரர் நெத்தியடியையும் வரச்சொல்லவும் :-)

      Posted on 18-Aug-10 at 2:34 pm | Permalink
  44. தங்கள் கட்டுரையில் முதலில் உருவான உயிர் தானாக உருவானது என்பதற்கோ அல்லது கடவுள் இல்லை என்று மறுப்பதற்கோ எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

    40 மில்லியன் டாலர் செலவில் அதி நவீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட இந்த மரபுகோடான்கள் தானாக உருவானது என்பதை எந்த ஆதாரத்தில் நம்புகிறீர்கள்.

    Posted on 18-Aug-10 at 7:14 pm | Permalink
  45. Aashiq Ahamed

    சகோதரர் மருதையன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களிடம் சில கேள்விகள்…

    1. “தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று கிரேக் வென்டர் கருத்து சொன்னது மே மாதம். உங்களுடைய இந்த கட்டுரை வெளிவந்தது ஜூலை மாதம். கிரேக் வென்டர் மறுப்பு தெரிவித்தது உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைத்து விட்டீர்களா?

    2. உயிரியலைப் பொறுத்தவரை ஒரு செல்லை உருவாக்கினால் தான் உயிரை உருவாக்கியதாக அர்த்தம். இவர்கள் உருவாக்கியதோ செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? இந்த விசயமும் உங்களுக்கு தெரியாதா?

    அதுவும் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு ஏற்கனவே உள்ள செல்கள் தான் தேவைப்பட்டிருக்கின்றன. இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

    3. பதினைந்து வருடங்களாக பாடுபட்டு, பலருடைய உதவியைக் கொண்டு செயற்கை மரபணுத் தொகுப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் உங்களை போன்றவர்களோ ஒரு செல் ஆதி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று சொல்கின்றீர்கள், இது அறிவுக்கு ஒத்து வரும் வாதமா?

    4. விஞ்ஞானிகளோ “ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ, ஒரு நல்ல அறிவியல் முன்னேற்றத்தை உங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

    இந்த செயற்கை செல் ஆய்வு, இறை நம்பிக்கையாளர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளதா, அல்லது உங்களைப் போன்றவர்கள் முகத்திலா?

    உங்களுக்கு நேரம் இருப்பின் என்னுடைய இந்த பதிவை சற்று பாருங்கள்…

    http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html

    நன்றி…

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    Posted on 18-Aug-10 at 9:31 pm | Permalink
    • காட்டரபி

      கட்டுரையாளர்கூட “கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லை” என்றும், இது அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றுமே கூறியிருக்கிறார்.

      கர்ப்பப்பையிலுள்ளதை என்று மனிதனால் அறிந்துகொள்ள முடிந்ததோ அன்றே உங்கள் கடவுள் காலியாகிவிட்டார்.
      ”நிச்சயமாக அவனிடம்தான் மறுமைநாளின் ஞானம் இருக்கிறது.அவன் மழையை இறக்கி வைக்கிறான், கர்ப்பங்களில் உள்ளவற்றையும் நன்கு அறிகிறான்…….”

      Posted on 19-Aug-10 at 11:05 am | Permalink
      • Zaam

        அறிவூபூh;மாக எழுதப்பட்ட ஒன்றுக்கு அறிபூh;வமாக விடையளிக்கப் முயற்சி செய்யலாமே…

        Posted on 29-Aug-10 at 11:10 pm | Permalink
    • நண்பர் ஆஷிக்,

      உங்கள் கட்டுரையை படித்துப்பார்த்தேன். உங்கள் கட்டுரையின் திசையும், இந்தக் கட்டுரையின் திசையும் வேறு வேறானது. செயற்கை உயிர் என்று கட்டுரைக்கு தலைப்பிட்டிருப்பது தவறானது. அது தோழர் மருதையனுக்கு தெரியவில்லை. மெய்யில் செல்லின் மரபணுத்தொகுப்பைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். இதை மறைத்து தோழர் மருதையன் நாத்தீகத்துக்கு ஆதரவாக பொய் சொல்லிவிட்டார், என்பது உங்கள் குற்றச்சாட்டு. அதற்காக ஆங்கில இணைய தளங்களைத் தேடிப்படித்து விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

      அதேநேரம் இந்தக் கட்டுரையை நீங்கள் நிதானமாக படித்திருந்தீர்களென்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் தோழர் மருதையன் அவ்வாறு கூறவில்லை என்பது.

      \\ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா//

      \\செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்//

      \\கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது//

      இவைகள் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகளில் சில. ஆதாவது நீங்கள் உங்கள் கட்டுரையில் என்ன குறிப்பிட்டிருக்கிறீர்களோ அது தான் இந்தக் கட்டுரையிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தலைப்பில் செயற்கை உயிர் எனக் குறிப்பிட்டதை மட்டும் வைத்துக்கொண்டு தோழர் பொய் சொல்லிவிட்டார் என்கிறீர்களே, சரிதானா அது?

      சரி ஏன் செயற்கைசெல் என குறிப்பிட வேண்டும்? அது ஒரு குறியீடு. செயற்கை செல் என்பது அந்த ஆராய்சியை குறிக்கும் குறியீடு. இந்தப் பெயரைத்தான் அறிவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள், அது முழுவதும் செயற்கையான செல் அல்ல என்றபோதிலும். இதையே நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், \\வென்டர் தன்னுடைய ஆய்வை “synthetic cell ” என்று தான் குறிப்பிடுகின்றார். பலருக்கும் இது synthetic cell என்றுதான் மனதில் உள்ளது. நான் செயற்கை மரபுரேகை என்று பெயர் வைத்தால் அது பலருக்கும் புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆய்வு எப்படி பலருக்கும் அறிமுகமாகி இருக்கின்றோதோ அந்த பெயரிலேயே தலைப்பை வைத்து விடுவோம் என்று எண்ணி தான் அப்படி பெயரிட்டேன்// ஆக நீங்கள் தலைப்பிட்டதன் நியாயம் தோழரின் தலைப்பிடலுக்கு பொருந்தமுடியாது என்று எப்படி அவ்வளவு தீவிரமாக நம்புகிறீர்கள்.

      எனவே அது செயற்கைசெல் இல்லையென்றாலும் செயற்கைச் செல் என்றே குறிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். பின் உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன? அது நாத்தீகரால், கம்யூனிஸ்டால் சுட்டப்படுகிறது என்பதைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு காரணமாக இல்லை. அது உங்கள் கட்டுரையிலேயே வெளிப்படுகிறது. \\மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?// அதாவது உங்கள் கட்டுரையின் ஆகப் பெரும்பகுதியை அது செயற்கை உயிரல்ல என்பதை விளக்குவதற்காக செலவிட்ட நீங்கள் பரிந்துரைத்த தலைப்பு என்ன? செயற்கை உயிரை விட்டுவிட்டு காலியானது நாத்தீகம் தான் ஆத்தீகமல்ல என்று தந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கட்டுரையை ஆத்தீகமா நாத்தீகமா என்ற கேழ்வியை எழுப்பி அதற்கான பதிலாக அமைக்காமல் இயற்கையா? செயற்கையா? என்று அமைத்திருக்கிறீர்கள். தலைப்புக்கு தோதுவாக கடைசியில் “என்னைப் பொருத்தவரை” என்ற சொல்லடையோடு உங்கள் கருத்தை வைத்திருக்கிறீர்கள். ஏன் இந்தக் குழப்பம் உங்களுக்கு?

      ஒரு மரபணுத் தொகுப்பை உருவாக்கவே பல ஆண்டுகள் முயன்று பல கோடி ரூபாய் செலவில் பலருடைய பங்களிப்பினால் தானே முடிந்திருக்கிறது. அப்படியிருக்க நீங்கள் ஆதியில் ஒரு செல் தானாகவே உருவானது என கூறுகிறீர்களே இது எப்படி அறிவாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?

      ஒரு அறிவியலாளரின் தன்னடக்கத்திற்கும் ஆன்மீகவாதியின் தன்னடக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கட்டுரையிலேயே குறிக்கப்படுள்ளது ஒருமுறை படித்துப்பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு உயிரை உருவாக்கும் அளவுக்கு அறிவியலாளர்களுக்கு உயிரியல் தெரியாது என்று அவர்கள் கூறினால் அது உண்மை. இன்றைய அறிவியலில் அதற்கு வழியில்லை, அதை நோக்கி முனைந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இது நியாயத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் ‘குன்’ என்று சொன்னதும் ஆகிவிட்டது என்று நம்புபவர்களிடம்தான் இது எந்த விதத்தில் நியாயம் எனும் கேள்வியை எழுப்ப வேண்டும்.

      படைப்பு என்பது ஆண்டவனின் தனித்துறை. அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத்தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது. அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை.

      தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன. பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி. பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?

      இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்.

      செங்கொடி

      Posted on 19-Aug-10 at 11:51 pm | Permalink
      • Aashiq Ahamed

        அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,

        அஸ்ஸலாமு அலைக்கும்,

        நீங்கள் நான் எழுதியதை முழுமையாக புரிந்து கொண்டீர்களா? அல்லது வேண்டுமென்றே இப்படி எழுதுகின்றீர்களா? புரியவில்லை. நீங்கள் எழுதியதில் தான் எவ்வளவு குழப்பங்கள்…

        1. செயற்கை உயிர் என்று தலைப்பில் வந்ததா பிரச்சனை?. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் “செயற்கை செல்” என்றுதான் இதனை குறிப்பிடுகின்றார்கள், அதனால் நாமும் அதனை அப்படிதான் குறிக்க வேண்டும், அது தவறாக இருந்தாலும் கூட. இல்லையென்றால் படிப்பவர்களுக்கு நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்று துவக்கத்தில் புரியாமல் போக வாய்ப்புள்ளது. இப்போது இதுவா பிரச்சனை? மருதையன் தலைப்பில் செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது….

        பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி…” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்.

        கடவுள் எப்போது காலியாவார்?, அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே? இவர்கள் உயிரை உருவாக்கினார்களா?, வென்டர் ஒப்புக்கொண்டார் “நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று. பின்னர் எங்கிருந்து வந்தது “பழைய கடவுள் காலி” என்பது போன்ற வார்த்தைகள்?

        தலைப்பில் ஒன்று வைத்து விட்டு பின்னர் பதிவில் வேறுவிதமாக எழுதியது (நீங்களே பட்டியலிட்டு இருக்கின்றீர்கள்) படிப்பவர்களை முட்டாளாக்கும் செயலில்லையா? தலைப்பை justify பண்ணி மருதையன் எழுதினார் என்கின்றீர்களா?

        இந்த பதிவை படித்த ஒரு சிலராவது நிச்சயம் குழம்பி இருப்பார்கள், “என்ன இது தலைப்பு இப்படி இருக்கிறது, பதிவு வேறு மாதிரி இருக்கிறதே” என்று

        இப்போது நீங்கள் இது தெரியாதது போன்று எழுதி மறுபடியும் அவர் செய்த தவறை நீங்களும் செய்கின்றீர்கள்…நியாயமா?

        2. //இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது//

        இப்படியெல்லாம் நீங்கள் எழுதினால் பின்னர் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தான் கேட்போம்…

        சரி விடுங்கள். ஒரு செல் உருவாகுவதற்கு நிறைய காலம் ஆகின்றது என்றே வைத்து கொள்வோம். இங்கு அதுவும் அல்ல பிரச்சனை…என்ன தெரியுமா பிரச்சனை?

        //தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?//

        இது தான் பிரச்சனை. இன்று 15 ஆண்டுகள் அயராது உழைத்து ஒன்றை உருவாக்கியவர்கள் நாளை ஒரே நாளில் இதனை உருவாக்கலாம்.

        ஆனால் இதுவெல்லாம் தற்செயலாக உருவாகியது என்று கூறுகின்றீர்களே அதுதான் பிரச்சனை. இந்த மரபுரேகை 1.08 base pairs கொண்டது. இப்போது இவர்கள் என்ன செய்யவேண்டுமென்றால் இந்த மில்லியன் வார்த்தைகளை (அதாவது அதற்குண்டான வேதிப்பொருட்களை) பக்கத்து பக்கத்தில் வைத்து விட்டு தூர சென்று விட்டு நோட்டம் விடட்டும். இவையெல்லாம் தற்செயலாக ஒன்று சேர்ந்து மரபுரேகை உருவாகுகிறதா என்று பார்ப்போம்.

        எடிசன் உருவாக்கிய கரியிழை குமிழ் விளக்குக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் அது தற்செயலாக ஒன்று சேர்ந்து விளக்காக ஆகிறாதா என்று பார்த்து சொல்லுங்கள்.

        இந்த கருத்தை என்னுடைய பதிவில் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கின்றேனே…நீங்கள் படித்து மறந்திருந்தால் உங்களுக்கு ஞாபகமூட்ட இன்னொருமுறை…

        //ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?//

        புரிகிறதா?

        3. //அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத்தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது//

        அப்படியா சேதி? இதற்கும் வென்டர் பதில் சொல்லியிருக்கின்றாரே, பார்க்கவில்லையா?

        //நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை//

        பிறகு நான் எழுதியது, //இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது//

        இப்போது அவர்கள் கடவுளின் எல்லைக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்… ஒரு நிமிஷம், அதற்கு முன்னர் உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்.

        4. //அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை//

        relax please….ஒரு விஷயம் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது என்று அதற்கு மறுப்பு தெரிவித்தால் இப்படி ஒரு பதிலா? உணர்ச்சிவசப்பட வேண்டாம் சகோதரரே…

        இந்த செயற்கை செல் ஆய்வை விமர்சித்து ஆய்வாளர்கள் (in Nature, in The Sceintist etc) கருத்து சொல்லியிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன வலி இருக்கமுடியும்? என்னவோ போங்க…

        கரியை பூசியிருக்கா? யார் மேல்? நாத்திகத்தின் மேல் தானே?

        5. //தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன//

        வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்…

        வேண்டாம் வேண்டாம். ஒரு செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதற்கும் மட்டும் ஆதாரங்கள் கொடுங்கள் போதும். அது தான் விவாதப் பொருள்….

        6. //பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி//

        நல்ல வேலை பரிணாமத்தையும், அறிவியலையும் கமா போட்டு பிரித்தீர்கள். அறிவியல் என்று எழுதி பிராக்கெட்டில் பரிணாமம் உட்பட என்று எழுதாமல் போனீர்களே, அதுவரை மகிழ்ச்சி. அப்படி எழுதியிருந்தால் பரிணாமத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டியிருக்கும்.

        ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே, “இது பொய் அதனால் அது உண்மை” என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. அப்படி சொல்வதில் லாஜிக்கும் இல்லை. இது பொய் என்றால் அது உண்மை என்றாகாது. அது உண்மை என்பதற்கு வலுவான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும்.

        //பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?//

        நியாயமான நல்ல கேள்வி…ஆனால் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லையே…என்னுடைய தளத்தில் இதற்கான ஒரு உரையாடல் உள்ளது. இது பற்றி பிறகு பேசுவோம்…இன்ஷா அல்லாஹ்…

        இப்போது என்ன விஷயம் என்றால், மருதையன் அப்படி தலைப்பு வைத்தது சரியா தவறா என்பதுதான்…அதனை தீர்த்து கொள்வோம் முதலில்…

        மறுபடியும் சொல்கின்றேன், உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

        7. //இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்//

        அப்படி போடுங்க அருவாள…நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?

        நான் உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம், முதலில் நான் என்ன சொல்ல வந்திருக்கின்றேன் என்று தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள். அது உங்களது நேரத்தையும் சரி, என்னுடைய நேரத்தையும் சரி அதிகமாக்வே மிச்சப்படுத்தும்…

        நன்றி…

        இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக…ஆமின்

        உங்கள் சகோதரன்,
        ஆஷிக் அஹ்மத் அ

        Posted on 20-Aug-10 at 7:10 am | Permalink
        • சேரிக்காரன்

          நம்ம நாட்டுல இஸ்லாமிய பெருமக்கள் மட்டுந் தான் கட்வுள ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்திருக்காங்களா?

          கடவுள்ன்னா வரிஞ்சுகிட்டு வர்ராங்களே?

          ஏண்ணே கேள்வில லாஜிக் இருக்குன்னு நானே சொல்லிகிட்டு திரியலாமா?

          ஒன்னும் ஒன்னும் ரெண்டு லாஜிக் ன்னு சொன்னா?
          ஒன்னோட பேர ரெண்டுன்னும், ரெண்டோட பேர ஒன்னுன்னும் வைச்சது நாம தானே ன்னு கேட்டா, என்ன சொல்றது?
          அப்பவும், 1+1 = 2 தான்! 3 இல்லையே…..

          என்ன ஒரே குயப்பமா இருக்கா? இதான் ஒங்க லாஜிக், மேஜிக் ’அல்லா’ம் !

          Posted on 25-Aug-10 at 10:19 am | Permalink
        • Zaam

          வானம் தட்டு அல்ல என்று விஞ்ஞானம் சொன்னபோது எதிர்த்த நாம் வளிமண்டலப் படைகள்தான் வானம் என்று சமரசமாகவில்லையா.. அதுபோல் இன்னும் பத்துவருடங்களுக்குப்பிறகு இதையூம் ஏற்றுக்கொண்டு ஆதாரம் காட்டினால் சரி கவலைப் படாதிங்க சகோதரரே…

          Posted on 29-Aug-10 at 11:57 pm | Permalink
    • நண்பர் ஆஷிக்,

      முதலில் மருதையன் பொய் சொல்கிறார் என்றீர்கள், இப்போது \\செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது….பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி…” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்// என்கிறீர்கள். ஆக செயற்கை உயிர் என்பது பிரச்சனைக்குறியதல்ல அதன் பின்னதான கடவுள் குறித்தது தான் பிரச்சனையானது எனின் உங்களின் கட்டுரை கடவுளை மையமாக எடுத்துக்கொள்ளாமல் அந்த ஆய்வை மையமாக எடுத்துக்கொண்டிருந்தது என்பதை உங்கள் கட்டுரைக்கான கரு மயக்கம் எனக் கொள்ளலாமா?

      போகட்டும் தோழர் மருதையனின் அந்தத் தலைப்பு கடவுளை முக்கியமாக கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா? பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார்? இந்தத்தலைப்பில் கடவுள் எனும் சொல் வருகிறது அதன் பொருள் முதலாளித்துவத்தைக் குறிக்கிறது. அதாவது படைத்தல் எனது தொழில் என தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த பழைய கடவுளை நகர்த்திவிட்டு அந்த இடத்தை முதலாளித்துவம் பிடித்துக்கொண்டுள்ளது என்பது தான் அந்தத் தலைப்பு கொண்டிருக்கும் பொருள். கட்டுரையின் பேசு பொருளும் அதுவே. உங்கள் பின்னூட்டத்தின் கடைசியில் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள் \\அப்படி போடுங்க அருவாள…நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?// நீங்கள் போட விரும்பும் அருவாளை உங்கள் மூளையில் போட்டுக்கொள்ளுங்கள், அதுவாவது உங்கள் புரிதலை கூர் தீட்டட்டும்.

      கடவுளை கண்ணால் பார்த்தால் தான் நம்புவோம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இப்போது அது போல் ஒரு செல்லை உருவாக்கிக் காட்டுங்கள் என்பது. டி.என்.ஏ மரபணு செய்திகளில் ஏற்படும் தவறுகள் மூலம் புதிய கூறுகள் உயிர்களுக்கு ஏற்படுவதையும், சூழலியல் தாக்கங்கள் உயினினங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் அடிப்படையிலான பின்னோக்கிய யூகித்தல் தான் தற்செயல் தோற்றம் என்பது. ஒரு அணுவின் உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் வேறொரு அணுவாக மாற்ற முடியும் என்பது வேதியல். அறிவியலாளர்கள் அப்படி மாற்றியும் காட்டியிருக்கிறார்கள். என்றால் இன்றைய அதி நவீன கருவிகளும் அறிவியலாளர்களின் திறமையும் அணுக்கட்டமைப்பை மாற்றுவதற்கு தேவைப்படுகிறது எனும் போது தொடக்க நாட்களில் அது எப்படி மாறியிருக்க முடியும் என்று கேள்வியெழுப்புவது புத்திசாலித்தனம் அல்லவே. இன்றைக்கு அதி நவீன கருவிகளும், அறிவியலாளர்களும் ஆற்றும் பங்களிப்பை அற்றை நாட்களில் தட்ப வெப்பமும் சூழலும் செய்திருக்கும். உயிர் என்பதற்கு அளவுக்கு மீறி மிகை மதிப்பை ஏற்றியதால் தான் முதல் செல் எப்படி உருவாகியது என்பது உங்களுக்குள் மிகைத்த ஒன்றாக நிற்கிறது. நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள், அது உயிரற்றதிலிருந்து உயிர் எனும் உங்களில் மிகை மதிப்புக்கு சற்று விளக்கமளிக்கும். http://senkodi.wordpress.com/2008/12/11/darvin-tenthara/

      \\அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா?// இது தான் நான் கேட்டிருப்பது, ஆனால் பதிலாக நீங்கள் \\இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது// உங்களுடைய கூற்றின் படியே இறைவனுடைய(!) படைப்பைக்கொண்டே தான் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். அவன் செய்த மாறுதல்களுக்கு இறைவனுடைய(!) படைப்பினங்கள் தான் பயன்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?

      அறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சி குறித்து எதிர்க்கருத்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதான். அனைத்து அறிவியல் ஆய்வுகளுக்குமே எதிர்க்கருத்துகளும் உண்டு. அவை குறித்த ஆய்வை மேம்படுத்த செழுமைப்படுத்தவுமே உதவும். அந்த எதிர்க்கருத்தும் உங்களிஅப் போன்றவர்களின் எதிர்க்கருத்தும் ஒன்றல்ல.

      அறிவியல் கண்டு பிடிப்புகளை நாத்திகத்திற்கு பயன் படுத்தலாமா? இந்தக் கேள்வி அடிப்படையிலேயே தவறானது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆத்தீகத்திற்கு ஆதரவாக பயன்படுத்தலாமா என்றுதான் கேள்வி எழுப்பமுடியும். ஏனென்றால் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் தன் இயல்பிலேயே மூட நம்பிக்கைகளை தகர்ப்பதாக இருக்கிறது.

      மீண்டும் உங்களைக் கேட்கிறேன் \\பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// நியாயமான கேள்வி என ஒத்துக்கொண்ட நீங்கள் பதிலையும் கூறினீர்கள் என்றால் வசதியாக இருக்கும்.

      செங்கொடி

      Posted on 23-Aug-10 at 2:46 am | Permalink
      • Aashiq Ahamed

        அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,

        அஸ்ஸலாமு அலைக்கும்,

        மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

        //ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?//

        இதற்கு தான் //உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்// என்று கூறினேன். படித்தீர்களா?

        ஒரு மரபுத்தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான் என்ற உங்களுடைய பழைய கேள்விக்கான பதில் தான் இது. இப்போது மறுபடியும் கேட்டு, நான் பதில் சொல்லிய பிறகும் என்னுடைய நேரத்தை வீணாக்குகிறீர்களே, இது நியாயமா?

        “…the ability to synthesize DNA sequences chemically and insert them into already living cells has existed for decades, the JCVI achievement simply changes the scale…” – Christina Agapakis, What synthia means to me, Oscillator, Science Blogs, dated 21st May 2010.

        கிறிஸ்டினா அவர்கள் கூறியிருப்பது புரிகிறதா?….வென்டர் கழகம் செய்தது போன்று பல காலங்களாக நடந்து வருகிறதாம். இப்போது நடந்துள்ளது தான் அளவுக்கோளில் பெரியதாம்.

        நான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், தாங்கள் தயவுக்கூர்ந்து இது குறித்து நன்கு படித்து விட்டு வாருங்கள் என்பதுதான். “ஒரு மரபுத்தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான்” என்பது போன்ற வாதங்கள் உங்களுக்கு அறிவியலில் உள்ள தவறான புரிதலையே காட்டுகின்றன.

        உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்…

        நன்றி,

        உங்கள் சகோதரன்,
        ஆஷிக் அஹ்மத் அ

        Posted on 25-Aug-10 at 5:56 am | Permalink
        • நண்பர் ஆஷிக்,

          முதலில் தோழர் பொய் சொல்லி விட்டார் என்றீர்கள், இல்லை என காட்டப்பட்டது. தலைப்பில்தான் பிரச்சனை என்றீர்கள், தலைப்பு சரியானது தான் என விளக்கப்பட்டது. இந்த இரண்டையும் உங்களின் தற்போதைய பின்னூட்டத்தில் விட்டு விட்டீர்கள் என்பதே உங்களின் கேள்விகளை நான் சரியாக உள்வாங்கி பதிலளித்திருக்கிறேன் என்பதையும் நீங்களும் அதை விளங்கிக் கொண்டீர்கள் என்பதையும் உணர்த்துகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் \\மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது// என எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்க முடியுமா? என்னுடைய எந்த பதில் உங்களுக்கு என்ன விதத்தில் குழப்பமாக இருக்கிறது எனக்கூறுங்கள்.

          நடந்த ஆய்வு எங்கு நடந்தது என்பதற்கு மட்டும் இப்போது பதில் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டவிதமே வருவோம். அந்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த பெரிய வெற்றியெல்லாம் அடைந்துவிடவில்லை என்றே கொள்வோம். கடுகினும் சிறிய வெற்றியாகவே அது இருக்கட்டும். கேட்பதெல்லாம் ஒன்றுதான். அத்தனை சிறிய வெற்றி எந்தத் துறையில் நடந்திருக்கிறது? அது கடவுளின் துறையா? இல்லையா? இதற்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லுங்கள். பின்னர் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

          \\உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்// இல்லை போதுமானது என நான் நினைக்கவில்லை.

          கடவுளின் வாசலை தட்டியிருக்கும் ஆய்வின் நுணுக்கங்களை நுணுகி ஆராயும் நீங்கள் \\பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// எனும் கேள்வியை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது சரியில்லையே.

          தோழமையுடன்

          செங்கொடி

          Posted on 31-Aug-10 at 2:29 am | Permalink
      • schoolboyயின் கிழிஞ்ச டவுடரின் நடுவே

        தோழர் செங்கொடி,

        RAM ல் தூசி படிந்திருக்கலாம், அதை எடுத்து ஊதி, scratch விழாமல் துடைத்து பின்னர் போட்டுப்பாருங்கள்…
        தோழமையுடன்
        கேள்விக்குறி

        Posted on 27-Aug-10 at 5:52 am | Permalink
        • நன்றி தோழர் கேள்விக்குறி,

          தற்போது சரி செய்யப்பட்டு விட்டது

          செங்கொடி

          Posted on 31-Aug-10 at 2:52 am | Permalink
  46. சகோதரர் மருதையன் அவர்களுக்கு,

    ஒரு செல் என்பதில் மரபுகோடன் மட்டும் தான் இருக்கும் என தாங்கள் தவறாக நினைத்துகொண்டீர் போல, அதை தாண்டி செல்லில் Ribosome, Lysosome, Mitochadria, Golgi body, Centrosome, Cytoplasm etc.. போன்றவைகள் இருப்பது தெரியாதோ. இந்த ஆராய்ச்சிக்கு பிரகாவது தெரிந்து கொள்ளுங்கள் இவைகள் அனைத்தும் தானாக உருவானவை அல்ல உருவாக்கப்பட்டவை என்று.

    Posted on 18-Aug-10 at 9:52 pm | Permalink
  47. Aashiq Ahamed

    “நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று திருத்தி வாசிக்கவும்…நன்றி

    Posted on 18-Aug-10 at 10:03 pm | Permalink
  48. Aashiq Ahamed

    சகோதரர் மருதையன் அவர்களுக்கு,

    சலாம்,

    உங்களது கட்டுரையில் மற்றொரு பிழை. கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

    //சிந்தடிகா – Synthetica . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர்.//

    இது தவறு. ஆய்வு முடிவுகள் வெளிவந்தது தான் மே 20 ஆம் தேதி. இந்த ஆய்வின் முடிவுப்பகுதியான, செயற்கை மரபுரேகை புகுத்தப்பட்ட பாக்டீரியா வெற்றிகரமாக பிரதி எடுக்க ஆரம்பித்தது மார்ச் 26 ஆம் தேதி.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    Posted on 25-Aug-10 at 6:08 am | Permalink
  49. எப்போதும் வென்றான்

    கட்டுரை ஆசிரியர் தோழர் மருதையன் அவர்களே…

    சிந்தடிக்கா(Synthetica) என்பது சரியா? சிந்தியா(Synthia) என்பது சரியா?

    http://en.wikipedia.org/wiki/Synthia

    Synthia என்றுதானே சொகிறார்கள்?

    உயிர் என்பது இயற்கையாக தோன்றுவது என்றால், எதற்கு அதை செயற்கையாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்? அது பாட்டுக்கு இயற்கையாக உருவாவதை வேடிக்கை பார்க்க மட்டும் குந்த வச்சு சும்மா உக்காந்து இருந்திருக்க வேண்டியதுதானே?

    ஆக இயற்கையாக ஒரு உயிர் தோன்ற வாய்ப்பே இல்லை என்று நன்றாக –உண்மையாக விளங்கித்தானே, இன்று இந்த முயற்சியில் கிரேக் வேன்ட்டர் குழு இறங்கி இருகிறது?

    இது எதை காட்டுகிறது?

    ‘உயிர் என்ற ஒன்று தானாக உருவாகாது, யாராவது அதை உருவாக்க வேண்டும்’ என்பதைத்தானே?

    எனில், நாத்திகம் தானே செத்து விட்டது?

    இன்று கிரேக் வேன்ட்டர் குழுவை கடவுளாக சுட்டும் நீங்கள், தானாக உருவாக வாய்ப்பில்லாத – கிரேக் வேன்ட்டர் குழு என்ற எதோ ஒன்று தேவைப்படும் அந்த முதல் உயிரை உருவாக்கியது எந்த கிரேக் வேன்ட்டர் குழு ?

    ஆத்திகர்கள் அந்த ‘குழுவை’ கடவுள் என்கிறார்கள்… நாத்திகர்கள் ‘இயற்கை’ என்கிறார்கள்… எனில் அந்த இயற்கை எதற்கு இன்று கைகொடுக்க வில்லை?

    செயற்கையாகத்தான் ஒரு உயிர் உருவாக்கப்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உயிர் என்பது யார் முயற்சியும் இல்லாமல் தானாவே உருவாவது என்ற நாத்திக வாதம் செத்து விட்டது என்று தானே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது?

    ஒருமுறை படைத்த கடவுள் மீண்டும் படைக்கவில்லை. ஏனெனில் இனப்பெருக்கம் நடப்பதால். ஆனால், அது தெரியுமா இயற்கைக்கு? ஏன் அது மீண்டும் மீண்டும் பலமுறை… அட்லீஸ்ட் ஒரு முறையாவது வேறு ஒரு உயிரை இயற்கையாக படைக்கவில்லை? அவ்வாறேனில் நீங்கள் கடவுளுக்கு வைத்திருக்கும் மறு பெயர்தான் ‘இயற்கையா’? நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் ஆத்திகரா?

    உண்மையில் தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்…

    ” செயற்கை உயிர்: நாத்திகம் காலி! புதிய நாத்திக கொள்கை என்ன? “

    Posted on 26-Aug-10 at 8:13 am | Permalink
    • திரு எப்போதும் வென்றான் அவர்களுக்கு :
      ******************************************************************************

      தோழர். மருதையன் அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளீர்கள்.. அவருக்கு இருக்கும் வேலைப் பழுவில் கட்டுரையை சரியாகப் புரிந்து கொண்டு கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லுவதற்கு நேரம் ஒதுக்கலாம். உங்களைப் போல ”எப்போதும் வென்றான்” என்று அவசர அவசரமாக கட்டுரையை படித்து விட்டு அரைகுறை கேள்வி கேட்பவர்களுக்கு கட்டுரையை தெளிவாக படித்த என்னைப் போன்றவர்கள் பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.. சரி .. கேள்வி கேட்டீர்கள் .. பதில் சொல்லுகிறேன் ..
      கேட்க்கவும் ..
      **********************************************************************************

      சிந்தடிக்கா(Synthetica) என்பது சரியா? சிந்தியா(Synthia) என்பது சரியா?

      http://en.wikipedia.org/wiki/Synthia

      Synthia என்றுதானே சொகிறார்கள்?

      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

      அந்த உயிரின் முழுப்பெயர் சிந்தெடிக் ஜினோம் . அதைத் தான் சிந்தெடிகா என்று குறிப்பிட்டுள்ளார்கள் .. நீங்கள் கூறிய லின்க் கில் பார்க்கவும் .. நீங்கள் கூறியது பட்டைப் பெயர். சுருக்கமாக சிந்தெடிகா என்றும் அதனை அழைக்கிறார்கள் .. வெளக்கம் போதுமா ?..

      **************************************************************************
      உயிர் என்பது இயற்கையாக தோன்றுவது என்றால், எதற்கு அதை செயற்கையாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்? அது பாட்டுக்கு இயற்கையாக உருவாவதை வேடிக்கை பார்க்க மட்டும் குந்த வச்சு சும்மா உக்காந்து இருந்திருக்க வேண்டியதுதானே?
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      உயிர் என்றால் அது இயற்கையாக போக வேண்டும்.. காலரா கிருமிகள் , மலேரியா கிருமிகள் என்றால் அது இயற்கையாக சாக வேண்டும் .. நீங்களும் அது பாட்டுக்கு இருண்டுட்டு போகட்டும்னு போய் குத்த வச்சிக்க வேண்டியது தானே ?.. எதுக்கு நைனா நீங்கள் மருத்துவமனைக்குப் போய் செயற்கையாக கண்டுபிடித்த மருந்து வாங்கி அந்த கிருமிகளை அழிக்கிறீர்கள் ?..

      இயற்கையாக வரும் வெள்ளப் பெருக்கை செயற்கையாக அனை கட்டி தடுப்பதா ?.. ஐயோ .. அரசாங்கம் பேசாமல் வாயை மூடிக் கொண்டு குத்த வச்சிக்க வேண்டியது தானே ?.
      என்ன பாஸ் .. உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா ?.
      ************************************************************************************************************
      ஆக இயற்கையாக ஒரு உயிர் தோன்ற வாய்ப்பே இல்லை என்று நன்றாக –உண்மையாக விளங்கித்தானே, இன்று இந்த முயற்சியில் கிரேக் வேன்ட்டர் குழு இறங்கி இருகிறது?.. இது எதை காட்டுகிறது?
      ‘உயிர் என்ற ஒன்று தானாக உருவாகாது, யாராவது அதை உருவாக்க வேண்டும்’ என்பதைத்தானே?.. எனில், நாத்திகம் தானே செத்து விட்டது?
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      அடாடாடா … என்னமா புள்ள யோசிக்கிது?..
      அது கண்ணு மூக்கு கொஞம் பொடப்பா இருந்தா அப்படித்தான் யோசிக்கத் தோணுமாம் ?..

      இயற்கையாக உயிர் இருக்க முடியாது என்று நிரூபிக்க கிரேக் வெண்டாருக்கும் அவர் குழுவினருக்கும் யாரும் காசு கொடுத்து ஆராய்ச்சி பண்ன சொல்லலை …

      ஆத்திகம் பேசும் முட்டாள்களுக்கு அதை இன்னொரு முறை நிருபிக்க வேண்டிய அவசியமும் இங்கு யாருக்கும் இல்லை.

      செல்களின் ஒருங்கிணைப்பே மனிதனாக இருந்தாலும் சிற்றுயிர்களானாலும் அவர்களை இயக்குவது. இது அறிவியல்.
      அடுத்ததாக இந்த செல்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சியை தொடர்ந்த அறிவியலாளர்கள் அந்த செல்லைப் பகுத்தாய்ந்து அதில் இருக்கும் இரசாயனங்களின் கலவையை பகுத்தாய்ந்து அதே போன்ற இரசாயன கலவையை உருவாக்கி அதை அந்த செல்லுக்குள் உட்செலுத்தி அந்த பாக்டீரியாவின் உயிரை உருவாக்கியிருக்கிறார்கள்.
      இந்த உலகம் உங்கள் முட்டாக் கடவுளால் ஒற்றைக் கையில் ஜொய்ங் னு மந்திரம் போட்டு உருவாக்கப் படவில்லை. இணையத்தில் உலகில் உயிர்களின் உருவாக்கம் பற்றி நல்லா படியுங்கள் ..
      அறிவியலைப் படித்து விட்டு வந்து விவாதிக்கவும். எனர்ஜி என்பதையாவது அறிவியலில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்புறம் இன்னொரு விசயத்தையும் மொட்டை மனப்பாடம் செய்தாவது படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . எனர்ஜி கேன் நெய்தர் பீ கிரியேட்டட் நார் பீ டெஸ்ட்ராய்ட். அதாவது இந்த எனர்ஜியை உருவாக்க முடியாது அழிக்கவும் முடியாது. உலகம் உருவான பிறகு இங்கு ஏற்பட்ட பௌதீக மாற்றத்தாலும் இங்கு இருந்த இரசாயனப் பொருட்களின் கலப்பால் அவைகளுக்கு நடுவே ஏற்பட்ட இயக்கம் தொடர்ச்சியாக தனது இயக்கத்தை தொடரக்கூடிய தன்மையை நாளடைவில் அதிகரித்துக் கொண்டே வந்து அதன் புவியியல், சுழ்னிலை காரணமாக வெவ்வேறு உயிரினமாக உருமாறியது.

      இதை செயற்கையாக உருவாக்கத் தான் கிரேக் வெண்டார் குழு தனது முயற்சியில் ஈடுபட்டுள்ளது .

      உங்கள் கடவுள் இயற்கையாக எதையும் நகட்டவில்லை . அப்படி எதையாவது உரூப்படியாக கிழித்திருந்தால் தானே அதை கிரேக் வெண்டார் குழு மறுபடியும் செய்வதற்கு.

      நீ இன்னும் வளரனும் தம்பி … காம்பிளான் சாப்பிடு …
      சூ .. மந்திர காளி போட்டு … எல்லாரையும் எப்போதும் வென்றானாக முடியாது..

      அறிவியல் படிக்கனும் தம்பி.. போய் படி ..

      ****************************************
      ****************************************

      இன்று கிரேக் வேன்ட்டர் குழுவை கடவுளாக சுட்டும் நீங்கள், தானாக உருவாக வாய்ப்பில்லாத – கிரேக் வேன்ட்டர் குழு என்ற எதோ ஒன்று தேவைப்படும் அந்த முதல் உயிரை உருவாக்கியது எந்த கிரேக் வேன்ட்டர் குழு ?
      ***********************************************************************************************************

      உயிரை எந்த குழுவும் உருவாக்கவில்லை. அது காலப் போக்கில் இயற்கையில் இயங்கியல் விதிப்படி ஏற்படும் மாற்றத்தால் உருவான ஒன்று என்று போன பத்தியில் பதில் சொல்லியிருக்கிறேன் படிக்கவும் ..
      *****************************************************************************************************

      ஆத்திகர்கள் அந்த ‘குழுவை’ கடவுள் என்கிறார்கள்… நாத்திகர்கள் ‘இயற்கை’ என்கிறார்கள்… எனில் அந்த இயற்கை எதற்கு இன்று கைகொடுக்க வில்லை?
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

      இயற்கை கை கொடுக்கவில்லை என்று எதைக் குறிப்பிடுகிறீர் ?.. இயற்கைக்கு என்ன உயிரா இருக்கிறது .. இல்லை நீங்கள் சொல்வது போல எதாவது ஆத்துமா இருக்கிறதா ?.. அது வந்து கையை கொடுப்பதற்கு?..

      சிரிப்பு காட்டாதிங்க சிரிப்பு போலீஸ்…
      *******************************************************************************************

      செயற்கையாகத்தான் ஒரு உயிர் உருவாக்கப்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உயிர் என்பது யார் முயற்சியும் இல்லாமல் தானாவே உருவாவது என்ற நாத்திக வாதம் செத்து விட்டது என்று தானே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது?

      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      இது எப்படி தெரியுமா இருக்கு ?..

      மாவுக் கடையில் காற்றில் கோதுமை மாவு மூட்டையும் மைதா மாவு மூட்டையும் அரிசி மாவு மூட்டையும் பிரிந்து கொட்டி ஒன்றோடு ஒன்று கலந்து
      விட்ட பிறகு அதை விரயம் செய்ய வேண்டாம்னு எடுத்து ரொட்டி சுட்டு சாப்பிட்டானாம் அந்த கடைக்காரன். ரொம்ப நல்லா இருக்கேனு போய் எந்த எந்த மூட்டை உடைந்து கொட்டி இந்த மாவு கலந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணி அப்புறம் அரிசி மாவு , கோதுமை மாவு , மைதா மாவு எவ்வளவு கொட்டிருக்கோ அதில் இருந்து விகித அளவு தெரிஞ்சிகிட்டு தனிதனியா அந்த மூட்டையில இருந்து மாவு எடுத்து அதே விகித்ததுல கலந்து ரொட்டி சாப்பிட்டானாம்..

      இப்போ .. கடைக்காரன் அந்த விகிததுல கலந்தது அந்த மாவைப் மீண்டும் உருவாக்கியதன் காரணமாக அவ்வாறு அந்த மூட்டைகள் பிரிந்து மாவு கொட்டியதற்கு வாய்ப்பில்லை என்று அந்த கடைக்காரனை நம்பச் சொல்வது போல இருக்கிறது உங்கள் விளங்காத வாதம் ..

      இயற்கையாக கலந்தது உண்மை .. அவன் செயற்கையாக செய்த்தும் உண்மை. நீங்கள் என்ன சொல்லுறீங்க?.. “ ஏதோ ஆவி(கடவுள்) நடமாட்டம் தான் இந்த மூட்டைகள் பிரிந்ததற்கு காரணம்னு”

      மறுபடியும் சிரிப்பு காட்டாதிங்க பாஸு ..
      ************************************************************************

      ***********************************************************
      ஒருமுறை படைத்த கடவுள் மீண்டும் படைக்கவில்லை. ஏனெனில் இனப்பெருக்கம் நடப்பதால். ஆனால், அது தெரியுமா இயற்கைக்கு? ஏன் அது மீண்டும் மீண்டும் பலமுறை… அட்லீஸ்ட் ஒரு முறையாவது வேறு ஒரு உயிரை இயற்கையாக படைக்கவில்லை?
      ****************************^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      என்ன நண்பா ?.. .. இயற்கைக்கு உயிரா இருக்கு ?.. அது இனப்பெருக்கம் பற்றி தெரிஞ்சிக்கிறதுக்கும் தெரியாம போகிறதுக்கும் ?.. சின்ன புள்ளைகிட்ட போய் கேட்டா கூட சொல்லும் ”மலைக்கு(உங்க பாசையில் அதுவும் இயற்கை தானே) உயிர் இருக்கா பா?..”னு கேட்டா இல்லைனு சொல்லும். உங்களுக்கு அது கூட தெரியலையே நண்பா ?..
      மேலே எடுத்துப் போட்டுள்ள உங்கள் கேள்வியை நீங்களே ஒரு முறை படித்துப் பாருங்கள் .. பிறகு நீங்கள் சொல்லுங்கள் ..
      உங்களுக்கே உங்கள் கேள்வி முன்னுக்குபின் முரணாக தெரியவில்லையா ?..
      கேள்வியை தெளிவாக கேட்கவும் ..
      **************************************************************
      ************************************
      அவ்வாறேனில் நீங்கள் கடவுளுக்கு வைத்திருக்கும் மறு பெயர்தான் ‘இயற்கையா’? நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் ஆத்திகரா?
      உண்மையில் தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்…
      ” செயற்கை உயிர்: நாத்திகம் காலி! புதிய நாத்திக கொள்கை என்ன?
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      ஹா ஹா… ஹா .. ஹா.. ஹா.. ஹாஅ …

      ஐயோ ஐயோ … இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கீங்க போங்க ..

      நாங்களா சொன்னோம் .. கடவுளுக்கு மறு பெயர் இயற்கைனு. நீங்களா கற்பனை பண்ணிட்டு .. இப்படி நீங்களா முடிவு பண்ணிட்டு .. கடைசியா பகுத்த்றிவாளர்கள் மேல பழிய தூக்கி போடுறீங்களே ..
      எனக்கு உங்க கிட்ட இந்த குழந்தை உள்ளம் தான் ரொம்ப பிடிச்ச்சிருக்கு .. ஏன்னா சின்னப் பிள்ளைங்க தான் இப்படி எல்லாம் தான் செஞ்சதை அடுத்தவன் தலைல தூக்கிப் போடும்ங்க …

      உங்களுக்கு ஒரு கட்டுரை எழுதலாம் ..
      “ எப்பொதும் வெற்றி காலி அடுத்த வெற்றி ஒழுங்கா அறிவியல் படித்தால் தான்”….

      Posted on 26-Aug-10 at 6:50 pm | Permalink
      • வழிமறிச்சான்பட்டி பக்கி

        விஞ்ஞானி செங்கொடி மருது, ஒங்க பார்வைக்கி இங்கே கிழே உள்ள வாரிகள் படவில்லை அதுக்கும் சேத்து பதில் சொல்லுங்க நல்லாயிருப்பீக /////////இன்று கிரேக் வேன்ட்டர் குழுவை கடவுளாக சுட்டும் நீங்கள், தானாக உருவாக வாய்ப்பில்லாத – கிரேக் வேன்ட்டர் குழு என்ற எதோ ஒன்று தேவைப்படும் அந்த முதல் உயிரை உருவாக்கியது எந்த கிரேக் வேன்ட்டர் குழு ?
        ஆத்திகர்கள் அந்த ‘குழுவை’ கடவுள் என்கிறார்கள்… நாத்திகர்கள் ‘இயற்கை’ என்கிறார்கள்… எனில் அந்த இயற்கை எதற்கு இன்று கைகொடுக்க வில்லை?////// கோவிச்சுகீராதீக நீங்க விட்டத எடுத்து கொடுத்தேன் அம்புட்டுத்தே

        Posted on 26-Aug-10 at 8:00 pm | Permalink
    • Mohamed

      இயற்கையாக உயிர் தற்செயல் நிகழ்வால் உருவாகும். அதனை இருந்து பார்ப்பதற்கு 100 கோடி வருடம் காத்திருக்கத் தயார் என்றால் ஆளின்றிச் செய்யலாம் அல்லது உயிர் தோன்ற ஏற்ற சூழ்நிலை காணப்படும் கோள்களைக் கண்டுபிடித்து அங்கெல்லாம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள் இயற்கையாக உயிர் தோன்றச் சாத்தியம் என்பதை காட்டுகின்றேன்

      உயிரை உருவாக்கிப் பார்க்கும் மனிதனின் அவசரம்தான் கிரேக் வென்டரைத் தேர்ந்தெடுத்ததது.

      ஆறுகள்கூட தானே உருவாகும். தானே உருவாக வேண்டுமென்றால் என்றால் பல்லாயிரம் வருடங்கள் செல்லும் . நாம் சில வருடத்தில் உருவாக்க வேண்டும் என்றால் ஆள் வேண்டும்

      Posted on 30-Aug-10 at 2:06 pm | Permalink
  50. neenga oru vuyira padashuteenga ok. antha vuyirukana udambayum padashuta romba nalla erukume . ethuku solrena nama than kadavula namba matome,seekram udambayum padashunga

    Posted on 26-Aug-10 at 11:33 am | Permalink
  51. Zaam

    அல்லா மட்டும் தப்பிக் கொள்வாh;. எங்கள் இசுலாமிய விஞ்ஞானிகள் எப்படியூம் குரானில் சொற்கள் வசனங்கள் தேடி 1400 வருடங்களுக்கு முன்னரே எப்போதோ சொல்லிவிட்டோம் என்று கூறத்தொடங்கி விடுவாh;கள் விசயத்தை புரியூம்படியா எழுதிவைத்துள்ள ஏனைய கடவூள்கள்தான் மாட்டிக் கொள்வாh;கள்

    Posted on 29-Aug-10 at 11:36 pm | Permalink

One Trackback/Pingback

  1. [...] This post was mentioned on Twitter by vinavu, vinavu, vinavu, vinavu and others. vinavu said: செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்? http://wp.me/pvMZE-28i RT Pls. [...]

Post a Comment

Your email is never published nor shared.