privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!

நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!

-

நரோடா பாட்டியா
நரோடா பாட்டியா முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பொழுது ஈவிரக்கமின்றி எரித்துக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள்

குஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளுள், ஒன்பது வழக்குகளை மட்டும் உச்ச நீதிமன்றம் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் புலன் விசாரணையைச் சிறப்புப் புலனாவுக் குழுவிடம் ஒப்படைத்திருந்தது.  அவ்வழக்குகளில் ஒன்றான நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் 32 பேரைத் தண்டித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது, சிறப்பு விரைவு நீதிமன்றம்.

அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முசுலீம்களின் காலனியான நரோடா பாட்டியாவில் நடந்த இத்தாக்குதலின்பொழுது 97 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த 97 பேரில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியர்.  இப்படுகொலையின்பொழுது கொல்லப்பட்டோரில் பெரும்பாலோர் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, குற்றுயிராகக் கிடந்த அவர்களின் மேல் மண்ணெண்ணெ ஊற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர்; பெண்கள் கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் தீவைத்துக் கொல்லப்பட்டனர்; இப்படி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர்களுள் 20 நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தையும், ஒன்பது மாத நிறை கர்ப்பிணியான கவுசர் பானுவும் அடக்கம்.

இப்படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள 32 பேரில், அப்படுகொலை நடந்த சமயத்திலும் தற்பொழுதும் நரோடா பாட்டியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவுள்ள மாயாபென் கோட்னானி; குஜராத் மாநில பஜ்ரங் தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கி; பா.ஜ.க.வைச் சேர்ந்த அகமதாபாத் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிஷன் கோரானி ஆகியோரோடு, விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த  பிபின் பாஞ்சால், அசோக் சிந்தி, சுரேஷ் சாரா உள்ளிட்டு, அவ்வமைப்பைச் சேர்ந்த ஏழு உள்ளூர் தலைவர்களும் அடக்கம்.

கோத்ரா ரயில் தீ விபத்து நடந்த மறுநாளே 10,000-க்கும் அதிகமான இந்து மதவெறிக் குண்டர்கள் நரோடா பாட்டியைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திய சமயத்தில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த கோட்னானி கைத்துப்பாக்கியோடு அப்பகுதியைச் சுற்றிசுற்றி வந்ததோடு, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்களையும், மண்ணெண்ணெயையும் சப்ளை செய்தார். பெண்களையும் குழந்தைகளையும் தீயில் போட்டுத் துடிதுடிக்கக் கொன்ற வெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கோட்னானி ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது முரண்நகைக்கு எடுத்துக்காட்டு; அப்படிபட்ட ஈவிரக்கமற்ற கொலைகாரியை, மோடி தனது அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் துறையின் துணை அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்பது அவரது குரூரப் புத்திக்கு எடுத்துக்காட்டு.  இப்படுகொலையின் இன்னொரு தளகர்த்தாவான பாபு பஜ்ரங்கி, தான் எப்படியெல்லாம் முசுலீம் பெண்களையும், குழந்தைகளையும் துடிதுடிக்கக் கொன்றேன் என்பதை தெகல்கா இதழின் நிருபர் ஆஷிஷ் கேதான் எடுத்த இரகசிய பேட்டியில் எகத்தாளத்தோடு பட்டியலிட்டிருக்கிறான்.

நரோடா பாட்டியா
நரோடா பாட்டியா படுகொலைக்காகத் தண்டிக்கப்பட்டுள்ள இந்து மதவெறி பயங்கரவாதிகள் மாயாபென் போட்னானி (இடது) மற்றும் பாபு பஜ்ரங்கி

மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் தலைமையில் வந்த இந்து மதவெறி பயங்கரவாதக் கும்பல்தான் நரோடா பாட்டியா படுகொலையைத் தூண்டிவிட்டு நடத்தியது என்பதற்கு இப்படி அநேக ஆதாரங்களும், நேரடி சாட்சியங்களும் இருந்தபோதும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட இப்படுகொலையை, கோத்ராவில் இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாகவும், இந்துக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய தாக்குதலாகவும் கூறிவந்தார்.  ஆனால், சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் பெண் நீதிபதி ஜோஸ்னா யாக்னிக், இத்தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சதிச் செயல்; இதனை கோத்ராவின் எதிர்வினை எனக்கூறி, தாக்குதலின் கொடூரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிட்டு, மோடியின் வஞ்சகமும் திமிரும் நிறைந்த புளுகு மூட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மாயாபென் கோட்னானியை நரோடா பாட்டியா படுகொலையின் சூத்திரதாரியெனக் குறிப்பிட்டுள்ள  நீதிபதி ஜோஸ்னா யாக்னிக், அவருக்குச் சதி, கொலை, முசுலீம்களுக்கு எதிரான மதவெறியைத் தூண்டிவிடுதல் உள்ளிட்டப் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தமாக 28 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறார்; பாபு பஜ்ரங்கிக்குச் சாகும் வரையில் சிறை தண்டனையும், சுரேஷ் சாரா உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலைச் சேர்ந்த ஏழு உள்ளூர் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 31 ஆண்டுகள் சிறை தண்டனையும்; மற்ற 22 குற்றவாளிகளுக்கு 14 ஆண்டு கால ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

கோட்னானி உள்ளிட்டுக் குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தை ஏககாலத்தில் இன்றி, முழுமையாகவும் மொத்தமாகவும் சிறையில் கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் தலைமறைவாக இருப்பதால், அவருக்கான தண்டனை தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.  அதேசமயம், இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த போலீசு ஆவாளர் மைசூர்வாலா உள்ளிட்ட 29 பேருக்கு எதிரான சாட்சியம் வலுவாக இல்லையெனக் கூறப்பட்டுச் சந்தேகத்தின் பலனின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Ž Ž”இத்தீர்ப்பு இந்திய அரசின் மதச்சார்பின்மையை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்திருப்பதாகவும் பொதுமக்களின் உரிமையைக் காப்பதில் அரசின் உறுதியை வெளிப்படுத்தியிருப்பதாகவும்” குறிப்பிட்டு, நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளில் ஒரு சாரர் இத்தீர்ப்பை வானளாவப் புகழ்ந்து வருகின்றனர். அதாவது, தற்பொழுதுள்ள அரசியல் அமைப்பு, சட்டதிட்டங்களின்படியே இந்து மதவெறி பயங்கரவாதிகளை, அவர்கள் அதிகாரப்பீடத்தின் உச்சியில் இருந்தாலும் தண்டித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட இத்தீர்ப்பை உதாரணமாகக் காட்டிவருகின்றனர்.

இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதெனினும், அப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதியை வழங்கவில்லை. குறிப்பாக, இப்படுகொலைக்குத் துணையாக நின்ற எந்தவொரு போலீசுக்காரனையும் இத்தீர்ப்பு தண்டிக்கத் துணியவில்லை. நரோடா பாட்டியா படுகொலை நடந்தபொழுது அந்தப் பகுதியின் போலீசு ஆவாளராக இருந்த கே.கே. மைசூர்வாலா, இவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளியான பின் பாஞ்சாலுடனும், நரோடா காவ் என்ற பகுதியில் முசுலீம்களை வேட்டையாடிக் கொண்டிருந்த விசுவ இந்து பரிசத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜெதீப் படேலுடனும்; அகமதாபாத் நகரத் துணை போலீசு கமிசனர் பி.பி. கோந்தியா, மாயாபென் கோட்னானி மற்றும் ஜெதீப் படேலுடனும்; படுகொலையை நடத்திவந்த மாயாபென் கோட்னானி முதலமைச்சர் அலுவலகத்துடனும், உள்துறையின் துணை அமைச்சராக இருந்த  கோர்தன் ஜடாபியாவுடனும் கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்களை, குறிப்பாக படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்களை ராகுல் சர்மா என்ற போலீசு அதிகாரி சி.டி.யில் பதிவு செது, அதனை நானாவதி கமிசனிடம் சாட்சியமாக அளித்தார்.

ராகுல் சர்மா நானாவதி கமிசனிடம் அளித்த சி.டி.யைப் பரிசீலனை செய்த வழக்குரைஞர் முகுல் சின்ஹா அதனை நரோடா பாட்டியா வழக்கிலும் சாட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடினார்.  இதனையடுத்து அந்த சி.டி.யின் உண்மைத்தன்மையைப் பரிசீலித்து, அறிக்கை அளிக்குமாறு சிறப்புப் புலனாவுக் குழுவிற்கு நீதிபதி யாக்னிக் உத்தரவிட்டார். ஆனால், சிறப்புப் புலனாவுக் குழு நீதிமன்றம் கோரிய அறிக்கையை உரிய காலத்தில் அளிக்காமல், தீய உள்நோக்கத்தோடு காலம் கடத்தியது.  வழக்கை விசாரித்த சிறப்பு விரைவு நீதிமன்றமும் இத்தாமதத்தையே காரணமாகக் காட்டி, கொலைகாரர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்ட போலீசு அதிகாரிகளைத் தண்டிக்காமல் விடுவித்துவிட்டது.  அதனால்தான், இப்படுகொலையின்பொழுது தனது 19 உறவினர்களை இழந்து நிற்கும் இம்ரான் அக்தர் ஷேக்,  இத்தீர்ப்பை 50% நீதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

நரோடா-பாட்டியா
நரேந்திர மோடி அரசு நடத்திய முஸ்லீம் படுகொலைக்கு நீதி கேட்டு நெடியதொரு போராட்டம் நடத்திவரும் தீஸ்தா சேதல்வாத், வழக்குரைஞர் முகுல் சின்கா மற்றும் தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான்.

இரண்டாவதாக, இத்தீர்ப்பு நீதிமன்றத்தின் முனைப்பு காரணமாகவோ, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாவுக் குழுவின் நீதி வழுவாத் தன்மையின் காரணமாகவோ கிடைத்துவிடவில்லை.  இப்படிபட்ட தீர்ப்பினைப் பெறுவதற்கு, இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலின்பொழுது தப்பிப் பிழைத்தவர்களும், நேரடி சாட்சிகளும் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற தீஸ்தா சேதல்வாத், வழக்குரைஞர் முகுல் சின்கா உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்களும் உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை ஒரு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.  அப்போராட்டம் சட்டவரம்புகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டதுதான் என்றபோதும், அதற்காக அவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தது.

தெகல்கா ஆங்கில வார இதழின் நிருபர் ஆஷிஷ் கேதான் இப்படுகொலைகள் பற்றி இரகசியமாகப் புலனாவு செய்து வெளியிட்ட கொலைகாரர்களின் வாக்குமூலங்கள், நரோடா பாட்டியா வழக்கில் மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தலைவர்களைத் தண்டிக்க முக்கிய சாட்சியங்களாகப் பயன்பட்டுள்ளன.  ஆஷிஷ் கேதான் இந்த இரகசியப் புலனாவை ஆறு மாதங்களாக நடத்தி வந்ததைப் பற்றி இப்படிக் கூறிகிறார் – “இந்தப் பயணத்தில் பயமும் நம்பிக்கையும்தான் என் தோழர்கள்.  உண்மையைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும், அதனாலேயே விழுங்கப்படுவோம் என்ற பயமும்; கொலைகாரர்களை வேட்டையாட முடியும் என்ற நம்பிக்கையும் நான் வேட்டையாடப்படலாம் என்ற பயமும்; பயம் நிரந்தர நிழலாகத் தாக்குவதற்குத் தயாராகத் தோளில் அமர்ந்துள்ளது.”

இப்படி உயிரைப் பயணம் வைத்து எடுக்கப்பட்ட இந்தப் புலனாய்வின் உண்மைத்தன்மையை நரோடா பாட்டியா வழக்கைக் கண்காணித்து வந்த உச்ச நீதிமன்றம்கூட உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.  தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள சாட்சியங்களை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி தீஸ்தா சேதல்வாத் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், “நாங்கள் உடனடியாக இதில் தலையிட மாட்டோம்; காலம் வரும்பொழுது தெகல்காவின் டேப் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என அலட்சியமாகத் தீர்ப்பளித்தார்கள், நீதிபதிகள்.  இதன் பின் இது குறித்து தேசிய மனித உரிமை கமிசனிடம் தீஸ்தா முறையிட்டார்.  அப்பொழுது அக்கமிசனின் தலைவராக இருந்த நீதிபதி ராஜேந்திர பாபு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி  இந்த டேப்பின் உண்மைத்தன்மை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்திரவிட்டார்.

‘‘சி.பி.ஐ.-க்குப் பதிலாக, இந்த டேப்பின் உண்மைத்தன்மையை விசாரிக்கும் பொறுப்பு ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாவுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இந்த சாட்சியங்களை அவர்கள் குழிதோண்டி புதைத்திருப்பார்கள்” எனக் குறிப்பிடுகிறார், தீஸ்தா சேதல்வாத்.   இது மட்டுமின்றி, நரோடா பாட்டியா படுகொலை வழக்கு விசாரணை சிறப்புப் புலனாவுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும்கூட, அக்குழு மாயாபென் கோத்னானியைக் குற்றவாளியாக வழக்கில் சேர்க்காமல் இழுத்தடித்து வந்தது. இதற்கு எதிராகவும் நாங்கள் போராடிய பிறகுதான் அவரது பெயர் சேர்க்கப்பட்டது எனச் சிறப்புப் புலனாவுக் குழுவின் யோக்கியதையை அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர் (தெகல்கா, இதழ் எண்.36, பக்.42-43).  .

உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாவுக் குழுவின் விசாரணை என்பது உண்மையில் நயமாகவும், வஞ்சகமாகவும் நடந்த குஜராத் போலீசு விசாரணைதான் எனக் குற்றஞ்சுமத்துகிறார், ஆஷிஷ் கேதான் (தெகல்கா, இதழ் எண்.36, பக்.37).  இச்சிறப்புப் புலனாவுக் குழு மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி போன்ற சில முதலைகளை மட்டும் பலிகொடுத்துவிட்டு,  படுகொலை குற்றச்சாட்டிலிருந்து மோடி என்ற திமிங்கலத்தையும், உயர் போலீசு அதிகாரிகள், துணை அமைச்சர்கள் உள்ளிட்ட பல சுறாமீன்களையும் தந்திரமாகத் தப்பவைத்துவிட்டது.

‘‘இவை போன்ற பல ஓட்டைகளை நீதிமன்றத்திடமும், சிறப்புப் புலனாவுக் குழுவிடமும் காணமுடியும்.  இவற்றுக்கு எதிராகவெல்லாம் நாங்கள் போராட வேண்டியிருந்தது; இப்படிப் போராட வேண்டியிருந்த ஒவ்வொரு முறையும் நாங்கள் பல அச்சுறுத்தல்களை, மோசடியான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” எனக் குறிப்பிடுகிறார், தீஸ்தா.

நரோடா-பாட்டியா
இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிராகக் துணிந்து சாட்சியமளித்த (இடமிருந்து) மெஹ்முதா பீபி, ஷாஜஹான் மிஸ்ரா, சையத் ரூபினா உள்ளிட்டோர்

நரோடா பாட்டியா வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தவர்களுள் பெரும்பாலோர் பெண்கள்.  இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் அவர்கள் காட்டிய துணிவு அசாத்தியமானது எனக் குறிப்பிடுகிறார், தீஸ்தா.  ஏனென்றால், இவ்வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபொழுதே, முக்கிய குற்றவாளிகளான மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட இந்து மதவெறிக் குண்டர்களை, அவர்கள் கைது செயப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட இரண்டே மாதங்களுக்குள் பிணையில் வெளியே அனுப்பிவிட்டது, சிறப்பு விரைவு நீதிமன்றம்.  அரசியல் பலத்தோடு வெளியே சுதந்திரமாகச் சுற்றி வந்த இந்தக் கும்பல் சாட்சிகளைப் பணம் கொடுத்துக் கலைக்கவும், மிரட்டிப் பிறழ் சாட்சியாக மாற்றவும் தீவிரமாக முயன்று வந்தது.

இதனால், இப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியம் அளித்தவர்களுக்கும் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் போராடிப் பெற வேண்டிய கட்டாயத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டோம்;  சாட்சியம் அளித்தவர்களுக்குத் தேவைப்படும் அனைத்துவிதமான சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் நாங்கள் தினந்தோறும் அளித்து வந்தோம்; சாட்சியங்கள் ஒவ்வொருவரும் தமக்கான வழக்குரைஞரை வைத்துக் கொள்ளும் சட்ட உரிமையைப் பயன்படுத்தி, வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து கொண்டோம். இவை போன்ற பல முன்னேற்பாடுகளை, பாதுகாப்புகளை ஏற்படுத்தியதால்தான், நீதியைப் பெற முடிந்திருக்கிறது” எனத் தாங்கள் நடத்திய போராட்டத்தை விவரிக்கிறார், தீஸ்தா சேதல்வாத்.

குஜராத் படுகொலைகளுக்கு இணையாக நடந்த மும்பைப் படுகொலையில் தொடர்புடைய இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவர்கூட, அப்படுகொலை நடந்து இருபது ஆண்டுகள் கடந்த பின்னும் ஏன் தண்டிக்கப்படவில்லை என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், அப்பொழுதுதான் தீஸ்தா உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்.  இப்படிபட்ட போராட்டம் இல்லையென்றால், இந்திய நீதித்துறை இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை ஊறப் போடவும் தயங்கியிருக்காது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

நரோடா பாட்டியா சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கோட்னானி தண்டிக்கப்பட்டிருப்பது; களத்தில் நின்று முசுலீம்களை வேட்டையாடிய இந்து மதவெறிக் கும்பலுக்கும், உயர் போலீசு அதிகாரிகள், முதலமைச்சர் அலுவலகம், துணை அமைச்சர்கள் ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அம்பலமாகியிருப்பது; ஐ.பி.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ் பட், சீறிகுமார் ஆகியோர் இப்படுகொலைக்கும் மோடி அரசுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆதாரங்களோடு உச்ச நீதிமன்றத்திடமும், நானாவதி கமிசனிடமும் அளித்திருப்பது ஆகிய இவையனைத்தும் இப்படுகொலையை மோடி அரசுதான் திட்டமிட்டு, தூண்டிவிட்டு நடத்தியது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

எனினும், உச்ச நீதிமன்றம்கூட இந்தக் கோணத்தில் இப்படுகொலையைப் பார்க்காமல், தனித்தனி வழக்குகளாக விசாரணை நடத்துவதை அனுமதித்து வருகிறது.  சங்கப் பரிவார அமைப்புகள்தான் இந்தப் படுகொலையை நடத்தியிருக்கின்றன என்பது அம்பலமான பிறகும், அவ்வமைப்புகளைத் தடைசெயச் சோல்லி எந்தவொரு நீதிமன்றமும் உத்தரவிட மறுக்கின்றன.  இடதுசாரிகள் உள்ளிட்டு, மதச்சார்பற்ற கட்சிகள் என்று பீற்றிக் கொள்ளும் எந்தவொரு ஓட்டுக்கட்சியும்கூட இந்தக் கோரிக்கையை முன் வைக்க மறுக்கின்றன.  இந்த நாட்டின் கிரிமினல் சட்டங்களும், நீதித்துறையும், அரசியலமைப்பும் குஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகக் காட்டிவரும் இந்தச் சலுகைதான் கொலைகாரன் மோடிக்கு, தன்னை வளர்ச்சியின் நாயகனாக மக்கள் முன் காட்டிக் கொள்ளுவதற்கும்; நான் குற்றவாளி எனில், என்னைத் தூக்கிலிடுங்கள்” எனச் சவால் விடுவதற்குமான துணிவைத் தந்திருக்கிறது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________