அதிகரித்து வரும் பாலியல் வன்முறைக்கு எதிராக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் ஜனவரி 24ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
டெல்லியில் கும்பல் வல்லுறவுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன் இறந்து போனார். இந்த செய்தி யாவரும் அறிந்ததே. ஆனால், இதற்குப் பின் ஒட்டுமொத்த நாட்டிலும் குறிப்பாக குஜராத், மும்பை, ஆந்திரா, தமிழகம் மற்றும் பல்வேறு இடங்களில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன. ஆனால், இதைப் பற்றி வெளியில் பேசக் கூடிய நபர்கள், தீர்வு சொல்லக் கூடிய நபர்கள், இயக்கங்களின் வாதங்கள் எந்த வகையில் உள்ளது என்றால் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகளை பொதுமக்கள் மத்தியில் வைத்து தூக்கில் போட வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் குற்றங்கள் குறைந்து விடும் என்றும் இந்த அரசமைப்பிற்குள்ளேயே தீர்வை தேடுகிறார்கள். இது ஒரு போதும் தீர்வை தேடித் தராது. ஏனென்றால் இதற்கு குற்றவாளிகள் மட்டுமே காரணம் என்ற கோணத்தில் பார்க்கிறார்கள்.
ஆனால் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நம் அரசின் கொள்கைகளான புதிய பொருளாதார கொள்கைதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் பரப்பக் கூடிய கலாச்சார சீரழிவுகள்தான் இதற்கு அடிப்படை காரணமாக உள்ளன. ஏனென்றால், சினிமா, விளம்பரங்கள், இணையம் ஆகியவை திட்டமிட்டே இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்க வேண்டும் என்ற முறையில் பரப்பப் படுகிறது. அவர்கள் சமூகரீதியாக எதையும் சிந்திக்கக் கூடாது என்ற வகையில் முதலாளிகள் இலாபவெறிக்காக ஒட்டு மொத்த மக்களையும் பலிகடா ஆக்குகிறார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணம். பெண்கள் காரணம், பெண்கள்தான் இதற்குப் போராட வேண்டும் என்று பார்க்காமல் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் எதிரியான புதிய பொருளாதாரக் கொள்கையை வீழ்த்தும் வகையில் அனைவரும் களமிறங்கி போராட வேண்டும்.
அந்த வகையில், இந்தப் பிரச்சனையை ஒட்டி புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறோம். இதனை ஒட்டி பிப்ரவரி மாதம் பேரணி-பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தவுள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தை பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி கிளைச் செயலர் ம. சங்கத் தமிழன் தொடங்கி வைத்தார். மேலும் சட்டக் கல்லூரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி கிளை