சென்ற மாதம் 22-ம் தேதி இங்கிலாந்தின் பெர்க்-ஷயரில் உள்ள அவரது முன்னாள் மனைவிக்கு சொந்தமான 20 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ 160 கோடி) மதிப்பிலான பங்களாவின் குளியலறையில் பிணமாக கண்டறியப்பட்டார் ரஷ்யாவின் பெரு முதலாளிகளில் ஒருவரான போரிஸ் பெரிசோவ்ஸ்கி. அவர் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அவரது அரசியல்/வணிக எதிரிகள் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பல விதமான ஊகங்கள் உலவுகின்றன.
67 வயதான போரிஸ் பெரிசோவ்ஸ்கி சாதாரணமான மனிதர் இல்லை; 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவில் ‘ஜனநாயக’த்தை வழி நடத்திய பெருந்தலைகளில் ஒருவர். ரஷ்ய பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ அமைப்பில் இணைக்கும் முக்கியமான கடமையை ஆற்றியவர்.
1970களின் சோவியத் யூனியனில் போரிஸ் ஒரு கணித பேராசிரியராக பணி புரிந்தார். அவரது ‘திறமை’யையும், ‘அறிவுக் கூர்மை’யையும் பயன்படுத்த வாய்ப்புகள் தராத அன்றைய சமூக அமைப்பிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தார். சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் ‘ஏங்கி’க் கொண்டிருந்தார்.
1980களில் சோவியத் யூனியனின் (சமூக ஏகாதிபத்தியம் – சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம்) சரிவு ஆரம்பித்து 1990ல் தனித் தனி நாடுகளாக உடைந்த பிறகு ரஷ்யாவில் முக்கிய புள்ளியாக உருவெடுத்தார் போரிஸ்; நாடு முழுவதும் வீசத் தொடங்கியிருந்த முதலாளித்துவ ஜனநாயக காற்றில் வாய்ப்புகளை தேடிக் கொள்வதற்கான ‘சுதந்திர’த்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்.
அவரளவுக்கு ‘திறமை’ இல்லாத கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் அன்றாட உணவுக்குக் கூட போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அதே கால கட்டத்தில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை குவித்தார் போரிஸ். அரசுத் துறைகளான எரிசக்தித் துறை, ஊடகத் துறை, விமான போக்குவரத்துத் துறைகளை தனியார் மயப்படுத்தும் மோசடி திட்டங்களில் பெரும் லாபம் ஈட்டினார். ரோமன் அப்ரமோவிச் என்பவருடன் கூட்டாக சிப்நெப்ட் என்ற எண்ணெய் நிறுவனத்தை கைப்பற்றினார்.
இவரைப் போன்று பெருமுதலாளியாக உருவெடுத்தவர் விளாடிமிர் குசின்ஸ்கி. அவர் டாக்சி ஓட்டுனராக இருந்தவர். ரஷ்யாவின் ரூபர்ட் முர்டோச் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ரியல் எஸ்டேட் பேரங்கள், வங்கித் துறை நிதி பரிமாற்றங்கள் போன்ற சூதாட்டங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவில் தொலைக்காட்சி, செய்தித் தாள்கள், வானொலிகள் அடங்கிய பெருநிறுவனத்தின் அதிபதியானார்.
மிகயில் கோடர்கோவ்ஸ்கி என்பவர் ஒரு உணவகம் நடத்தி வந்தவர். ‘ஜனநாயகமும் சுதந்திரமும்’ ரஷ்யாவை வந்தடைந்த பிறகு ஒரு வங்கியை நிறுவினார். நாட்டின் எரிசக்தி துறை அமைச்சரானார். யுகோஸ் என்ற பெட்ரோலிய நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கினார். 10 பில்லியன் பவுண்டுக்கும் (ரூ 82,000 கோடி) அதிக மதிப்பிலான சொத்துக்களை குவித்து ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
1996-ல் ஜனநாய முறைப்படி இரண்டாவது தேர்தல் நடக்க வேண்டிய காலம் நெருங்கியது. ஆனால், நாடு நெருக்கடியில் சிக்கியிருந்தது. கிரெம்ளினில் இரவு நேரங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைக்கவில்லை. பள்ளிகளுக்கும், தீயணைப்பு நிலையங்களுக்கும் அரசு ஆதரவு நின்று போயிருந்தது. 40 சதவீத மக்கள் ஏழ்மையில் வாடினார்கள். மக்களின் மன உளைச்சல்களுக்கு மருந்தாக தொலைக்காட்சிகளில் போலி ஆன்மீக வாதிகள் தோன்றி உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நெருக்கடியிலிருந்து விடுபட மேற்கத்திய நாடுகளில் சில கம்யூனிஸ்ட் கட்சி (போலி கம்யூனிஸ்டு கட்சி)யைச் சேர்ந்த கென்னடி ஜூயுகானோவ் ஜனாதிபதி ஆவதை ஆதரிக்க ஆரம்பித்தன. ‘யெல்ட்சின் தோற்று விட்டால் ரஷ்யாவின் பல சிக்கல்கள் ஏற்படும். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்’ என்று ரஷ்யாவின் பெருமுதலாளிகள் பயந்தார்கள்.
1996-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் புகழ் பெற்ற சுகவாசஸ்தலமான டாவோஸில் நடந்த அரசியல், தொழில் துறை தலைவர்களின் கூட்டத்தின் போது போரிஸ் பெரிசோவ்ஸ்கியும், குசின்ஸ்கியும், கோடர்கோவ்ஸ்கியும் ‘1996 தேர்தலில் யெல்ட்சினை காப்பாற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக வேண்டும்’ என்று முடிவு செய்தார்கள்.
யெல்ட்சினின் போட்டியாளர் ஜூயுகானோவுக்கு சாதகமான செய்திகள் தமது ஊடகங்களில் வெளியாவதை தடை செய்தார்கள். யெல்ட்சினுக்கு ஆதரவாக தொலைக்காட்சி விளம்பரங்களை கட்டவிழ்த்து விட்டார்கள். ‘ஜூயுகானோவ் வெற்றி பெற்றால் உள்நாட்டுப் போர் மூளும்’ என்று வதந்திகள் பரப்பப்பட்டன. ‘இதுதான் உணவு வாங்க கடைசி வாய்ப்பு. இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்ட 10 லட்சம் போஸ்டர்கள் கடைகளில் ஒட்டப்பட்டன.
தேர்தல் அன்று வாக்குகளை எண்ணும் போது தேர்தலில் யெல்ட்சினுக்கு சாதகமாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பதிவு செய்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. ரஷ்ய ஜனநாயகத்தின் காவலர்கள் யெல்ட்சினை வெற்றி பெறச் செய்து விட்டார்கள். அதற்கு கைமாறாக ரஷ்யாவின் இயற்கை வளங்களை அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள பிரித்துக் கொடுத்தார் போரிஸ் யெல்ட்சின். சைபீரியன் ஆயில் நிறுனம் உள்ளிட்ட நாட்டின் தொழில்வளங்களில் சுமார் 60 சதவீதம் இந்த முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெறும் $300 மில்லியன் (சுமார் ரூ 1,600 கோடி) விலைக்கு நார்வேயின் எண்ணெய் வளங்களை விட அதிகமான வளங்களை கோடோர்கோவ்ஸ்கி கைப்பற்றினார். தொலைக்காட்சி அதிபர் விளாடிமிர் குசின்ஸ்கி, அரசு நிறுவனமான கேஸ்ப்ரோமிடமிருந்து $2.5 பில்லியனுக்கு (சுமார் ரூ 14,000 கோடி) அதிகமான மதிப்புக்கு கடன்களை பெற்றார்.
பெரிசோவ்ஸ்கி ரஷ்யாவின் பிரதான தொலைக்காட்சி சேனலையும் 1.9 பில்லியன் பவுண்ட் (சுமார் 16,000 கோடி) மதிப்பிலான சொத்துக்களையும் கைப்பற்றினார். அவர் உள்ளிட்ட 6 பெரும் பணக்காரர்கள் ரஷ்ய உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அவரது செல்வாக்கின் உச்சியில் இருந்த போது போரிஸின் வணிக நிறுவனங்களின் மதிப்பு $4.6 பில்லியன் (சுமார் ரூ 25,000 கோடி). ஆனால் தமது வாழ்வாதாரங்களை இழந்து உணவுக்குக் கூட போராடிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைப் பொறுத்த வரையில் அவை வணிக நிறுவனங்கள் அல்ல கொள்ளைக் கூட்டங்கள்.
இந்த கொள்ளைக்கார முதலாளிகள் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன்களுடையவை போன்ற தீவுக் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். ஜார் காலத்து பங்களாக்களை சொகுசு ஓய்விடங்களாக மாற்றினார்கள். நெப்போலியன் காலத்து அறை அலங்காரங்கள், பிரெஞ்ச் சாம்பெய்ன் ஒயின் வழியும் செயற்கை ஊற்றுகள், பிக்காசோவின் ஓவியங்கள் என்று தமது பணத்தை வாரி இறைத்தார்கள். இளம் பெண்களை ஏவலுக்கு வைத்துக் கொண்டார்கள்.
குடிகாரரான ஜனாதிபதி யெல்ட்சின் பல நாட்கள் தொடர்ச்சியாக போதையில் நினைவற்று, தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தார். ரஷ்ய பொருளாதாரம் 1998-ல் திவால் ஆகும் நிலை ஏற்பட்டது. ரஷ்ய அரசு பெரிசோவ்ஸ்கிக்கும் அவரது சக முதலாளிகளுக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லி விட அவர்கள் தமது பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தி பாதுகாத்துக் கொண்டார்கள். சாதாரண ரஷ்ய உழைக்கும் மக்கள் மேலும் கொடிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டார்கள்.
புத்தாயிரமாண்டு பிறப்பதற்கு முதல் நாள் கைகால்களும் உடம்பும் நரம்புத் தளர்ச்சியால் நடுங்கிக் கொண்டே யெல்ட்சின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் ஜனாதிபதியாக இருந்த 10 ஆண்டுகளில் 1.5 லட்சம் பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சந்தைப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு யெல்ட்சினுக்கு அடுத்து ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க ஒரு இளம் தலைவரை தேடினார்கள், ரஷ்யாவின் பாதுகாவலர்களான முதலாளிகள். செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் அரசு அதிகாரியாக பணி புரிந்து வந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரி விளாடிமிர் புடினை ஆதரிக்க முடிவு செய்தார் போரிஸ் பெரிசோவ்ஸ்கி.
விளாடிமிர் புடின் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க பெரிசோவ்ஸ்கி பண உதவி செய்தார். 2001-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் ரஷ்ய ஜனாதிபதி ஆனார். ஆனால், ஜனாதிபதி ஆன உடனேயே புடின் அவருக்கு உதவிய முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். இது வளர்ந்து விட்ட முதலாளிகளை அரசின் குறைந்தபட்ச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாகும். முதலாளிகளின் நலனுக்காகத்தான் ரசிய அரசு செயல்பட்டாலும் பொதுவில் அது பலவீனமாக இருந்தது. அதை ஒரு வல்லரசுக்குரிய பலத்துடன் உருவாக்கினால்தான் நீண்டகால நோக்கில் ரசிய முதலாளிகளுக்கு சேவை செய்யும். புடினின் நடவடிக்கைகளை இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரிசோவ்ஸ்கி ரஷ்யாவை விட்டு தப்பி இங்கிலாந்துக்கு ஓடினார். புடினுடன் பகைத்துக் கொண்ட குசின்ஸ்கி கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து ஏற்கனவே தப்பி விட்டிருந்தார். புடினை எதிர்த்த கொடோர்கோவ்ஸ்கி 2003-ல் கைது செய்யப்பட்டு சைபீரிய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
பெரிசோவ்ஸ்கி லண்டனின் மேட்டுக் குடியினர் வசிக்கும் மே்பேர் பகுதியில் குடியேறினார். புடினுக்கு எதிராக புரட்சி நடத்தி ரஷ்யாவுக்குத் திரும்பிப் போவதைப் பற்றி கனவு கண்டார். அவரது முன்னாள் கூட்டாளியான அப்ரமோவிச்சின் சொத்துக்களில் 3 பில்லியன் பவுண்ட் தனக்குரியது என்று லண்டன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது முன்னாள் காதலி எலனா கோர்புனோவா, 200 மில்லியன் பவுண்ட் சொத்துக்களை முடக்குமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இறுதி நாட்களில் மனச் சோர்வடைந்திருந்த பெரிசோவ்ஸ்கி கொலை செய்யப்பட்டோ தற்கொலை செய்து கொண்டோ உயிரிழந்தார்.
முதலாளித்துவம் ரஷ்ய மக்களுக்கு கொண்டு வந்த சொர்க்கத்தின் யோக்கியதை இதுதான்.
மேற்கு ஐரோப்பாவில் 17,18-ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த முதலாளித்துவம் உள்நாட்டு உழைக்கும் மக்களை சுரண்டியும் வெளிநாடுகளை காலனிய ஆதிக்கத்தின் மூலம் கொள்ளை அடித்தும் வளர்ந்தது. அமெரிக்காவில் இயற்கை வளங்களை வளைத்துப் போடுவது, அரசு எந்திரத்தின் மீது பெருமளவு ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, குறைந்த கூலி கொடுப்பது, போட்டியாளர்களை ஒழித்து விட்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பது, நிறுவனத்தின் பங்குகளை உயர் விலைக்கு விற்று சிறு முதலீட்டாளர்களை மோசடி செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் தமது மூலதனத்தை வளர்த்துக் கொண்ட 19-ம் நூற்றாண்டின் ராக்பெல்லர் போன்ற முதலாளிகள் கொள்ளைக்கார பிரபுக்கள் (robber barons) என்று அழைக்கப்பட்டனர்.
20-ம் நூற்றாண்டிலும் 21-ம் நூற்றாண்டிலும் புதுப் புது உத்திகளையும் நிதித் துறை கருவிகளையும் உருவாக்கி உலகையும் உழைக்கும் மக்களையும் சுரண்டி கொழுக்கின்றனர் பெருமுதலாளிகள்.
எங்கெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகம் நிலவுகிறதோ அங்கெல்லாம் பெயரளவில் அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் என்று பேசப்பட்டாலும் நடைமுறையில் கொள்ளைக்கார பிரபுக்களின் ஆட்சி என்பதாகத்தான் இருக்கும் என்பதற்கு துலக்கமான உதாரணம்தான் போரிஸ் பெரிசோவ்ஸ்கியின் வரலாறு.
படங்கள் உதவி : டெய்லி மெயில்
மேலும் படிக்க
Confessions of an Oligarch
கம்யுனிஸ்டுகளைவிட கொள்ளைக்காரர்கள் எவ்வளவோ மேல்.
எப்படி என்று விளக்க முடியுமா?
(ஒரு விடயத்தை சரி என்று ஏற்றுக்கொள்வதை விட தவறு என்று மறுபதற்கு தான் நிறைய அறிவுகூர்மை வேண்டும், அதனால் தான் கேட்கிறேன்)
because Communist shoots,Capitalist loots.
Second,both the ism assume an ideal,good,ego less behaviour from its leaders but the flip side is that a guy with no morals and good behaviour can exploit both isms and cause innocent people to suffer.
so,in a messed communism u lose ur life and in capitalism,u lose ur money.
’முதலாளித்துவம்’ என்ற சொல்லை நீங்க சகுட்டு மேனிக்கு பிரோயோகிப்பதை எதிர்க்கிறேன். ரஸ்ஸியாவில் இன்று இருப்பது ‘முதலாளித்துவம்’ அல்ல. கனடா, ஃபின்லாந்த் போன்ற நாடுகளில் ஓரளவு இருப்பாதாக சொல்லாம். ஓரளவு தான்.
சோவியத் ரஸ்ஸியாவில் கம்யூனிசமே எட்டப்படவில்லை என்றும், ஸ்டாலினுக்கு பின் அது ‘சமூக ஏகாதிபத்தியமாக’ திரிந்துவிட்டதாகவும் ‘விளக்கம்’ சொல்லி தப்பிக்கிறீர்கள் அல்லவா ? அதே பாணியில், உலகில் பல நாடுகளின் உண்மையான முதலாளித்துவம் உருவாகவெ இல்லை. அவை ‘திரிபுவாத, போலி முதலாளித்துவம்’ தான். மாஃபியாக்களின் ஆட்சி, ஃபாசிச வடிவில்.
இன்றைய ரஸ்ஸியாவும், கிழக்கு அய்ரோப்பிய நாடுகளும், சீனாவும் ஊழல் மயமாக, பல சீர்கேடுகளை அடைந்தர்க்கு மூலக்காரணம் அவர்களின் கடந்த 60 ஆண்டுகால வரலாறு தான். அதே காலங்களில் ஃப்ரான்ஸ், மே.ஜெர்மனி போன்ற மெ.அய்ரோப்பிய நாடுகள் மாற்று பாதையில் சென்றதால், இன்று அவை சீரழியாமால், முக்கியமாக மாஃபியா பாணி ஊழல் ஆட்சிகளில் சிக்காமல் லிபரல் ஜனனாயக நாடுகளுகாக திகழ்வதை ஒப்பிடவும். காரணம் கடந்த கால வரலாறு தான்.
அதியமான்
கம்யூனிசம், கேபிடலிசம் இரண்டையும் நீங்க எப்படி பார்க்கிறீங்க பாஸ்? எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள் பாஸ்?
அதியமான் அண்ணே,
அமெரிக்கா என்ன பாதையில் செல்கிறது என நல்லா இருக்கும்…
இவ்வளவு மேற்கு, கிழக்கு ஐரோப்பா பக்கம் பாயும் நீங்கள், உங்க சொந்த நாட்டில் என்ன நிலைமை என விளக்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்…
முதலாளித்துவ அறிஞரின் கமென்டை இங்க ஒரு தடவ படிச்சிருங்க.
https://www.vinavu.com/2011/05/09/mikemohanism/#comment-41486
அந்த பிஎச்டி புரொபசர்தான் திரும்பவும் ஒண்ணாம் கிளாஸ் பசங்க கிட்ட விவாதிக்க வந்திருக்காரு!
இவரோட மேற்கு அய்ரோப்பியா, ஸ்காண்டிநேவியா புளுகுகளை இந்த பதிவில உரிச்சு தொங்க விட்டிருக்கு. https://www.vinavu.com/2011/05/09/mikemohanism/
இதில வர்ற மைக்மோகனோட முதலாளித்துவம் பத்தின பதிவுகள அவரு தூக்கிட்டாரு போலிருக்கு. ஆனா எல்லோரோட படிக்கும் இன்பத்துக்காக இதோ:
==========
http://www.jeyamohan.in/?p=14717
அன்புள்ள ஜெ,
அருமையான கட்டுரைகள். பல விசயங்களை தெளிவுபடுத்தின.
முக்கியமாக இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி. மிக்க நன்றி.
ஆனால் அய்ரோப்பாவில் 50 ஆண்டுகளுக்கு முன் ஊழல் மிகுந்த அரசுகள் இருந்தன என்பதை ஏற்க முடியவில்லை. நாசியிசம், ஃபாசிசம் இருந்த ஜெர்மனி, இடாலி, ஸ்பெயின் போன்றவை சர்வாதிகாரரங்களாக இருந்தன.அங்கு ஊழல் crony capitalism என்ற வகையில் இருந்தன.
ஆனால் இதர அய்ரோப்பிய நாடுகள், முக்கியமாக பிரிட்டன், ஃப்ரான்ஸ்,ஸ்காண்டினேவிய நாடுகள், பெல்ஜியம், நெதர்லாந், சுவிஸர்லாந் போன்ற நாடுகளின் ஊழல் அன்று பெரிய அளவில் இருந்ததாகத் தெரியவில்லை.
லிபரல் ஜனனாயகம் படிப்படியாக மலர்ந்து, காலனியாதிக்கம் அழிந்த காலங்கள் அவை. இங்கிலாந்தில் ஊழல் அன்று இருந்ததை விட இன்று தான்சற்று அதிகம் என்றே படுகிறது. (MP’s scandals, Tony Blair, etc) சோசியலிசத்தை நோக்கி நகரும் நாடுகளில், அதிகாரம் அரசு வசம் குவிந்து,அது ஊழலுக்கு வழி வகை செய்யும். Power corrupts, absolute power corrupts absolutely. இந்தியா இதற்கு நல்ல உதாரணம். 1965இல் ராஜாஜி இதை பற்றிஎழுதிய முக்கிய கட்டுரை இது :
http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html
பொருளாதார சுதந்திரத்திற்க்கும் ஊழலுக்கும் இருக்கும் நேரடி தொடர்பைப்பற்றிய பதிவு இது :
http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html
’ஊழலின் ஊற்றுகண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய பதிவுகள் :
http://nellikkani.blogspot.com/2011/03/blog-post.html
http://nellikkani.blogspot.com/2011/03/2.html
–
Regards / அன்புடன்
K.R.Athiyaman / K.R.அதியமான்
அன்புள்ள அதியமான்,
பொதுவாக நான் வாதங்களை தவிர்க்க விரும்புகிறவன். முன்முடிவுள்ள ஒருவரிடம் விரோதம் வரை விவாதித்துச்செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை. அதே கரணத்தால்தான் அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.
மன்னிக்கவும் அதியமான், நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மதநம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள். நீங்கள் நம்புவதை நிறுவியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
நான் கருத்துச் சொல்வது ஒரு விரிந்த வரலாற்றுப்புலத்தில். அது சார்ந்த தரவுகள் பலவும் நினைவில் இருந்தே சொல்லப்படுகின்றன. சிலசமயம் முப்பதாண்டுகளுக்கு முன்பு வாசித்தவற்றைக்கொண்டுகூட பேசுவதுண்டு. ஆகவே ஒரு விஷயத்தை தகவல் சார்ந்து நிறுவவேண்டுமென்றால் நான் மீண்டும் தேடவேண்டும். அது ஆய்வுவேலை, அந்த வேலையைச்செய்யப்போனால் என்னால் மேற்கொண்டு எதையும் எழுதமுடியாது. என் கூற்றுக்களில் சிறு தகவல்பிழைகள் இருக்கலாம். நான் என் வாதகதிகளை என் கோணங்களை பரிசீலனை செய்பவர்களுக்காகவே எழுதுகிறேன்.
மேலும் நான் அபூர்வமான தகவல்களை சொல்வதில்லை, பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்த தகவல்கள்தான். ஒரு குறிப்பிட்ட வாதத்தை நிறுவக்கூடிய முக்கியமான தகவல் என்றால் மட்டுமே ஆதாரங்களை முன்வைக்க முயல்வேன். காரணம் இவை ஆய்வுக்கட்டுரைகள். அல்ல.
ஆகவே நான் எழுதும் தகவல்களை தாங்களே சரிபார்த்துக்கொள்ளக்கூடிய வாசகர்களுக்காகவே நான் எழுதுகிறேன். அவர்கள் சுட்டும்பிழைகளைச் சரிசெய்துகொள்கிறேன். இந்நிலையில் ஒவ்வொரு தகவலுக்கும் ஆதாரம் கேட்பதென்பது என்னை செயலிழகக்ச்செய்துவிடும்.ல் மேலதிக விவாதமென்பது என் கோணங்கள், தர்க்கங்களை மறுப்பவர்களிடம் மட்டுமே எனக்கு சாத்தியம். என் தரப்பை நான் வளர்த்துச்செல்ல அல்லது தாண்டிச்செல்ல அவை உதவ வேண்டும்
இன்று பல முதலாளித்துவ நாடுகளில் மக்கள்நலப்பணிகளில் ஊழல் இருப்பதில்லை. அரசியல்நிர்வாகம் ஊழலின் அடிப்படையில் நடப்பதில்லை. அங்கே ஜனநாயகம் வேரூன்றாத நாட்களில் ஊழலரசுகள் இருந்தன, படிப்படியாக உருவாகி வந்த ஜனநாயகப்பிரக்ஞை மூலம் அவை மக்கள்நலப்பணிகளிலும் நிர்வாகத்திலும் நேரடியாக ஊழல் நடப்பதை தடுத்துக்கொண்டன என்று எழுதியிருந்தேன்.
இதை நீங்கள் மறுக்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன், சரியா? முதலாளித்துவநாடுகளில் ஊழலே இல்லை, இருந்ததும் இல்லை என்பது உங்கள் தரப்பு. சோஷலிசம் இருந்த நாடுகளில் மட்டுமே ஊழல் இருக்கும் என்கிறீர்கள்.
முதல் விஷயம் , இன்றுள்ள முக்கியமான முதலாளித்துவ நாடுகள் எல்லாமே உயர்மட்ட ஊழல்கள் மலிந்தவைதான். பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் நிதிநிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள ரகசிய உடன்பாடுகள் மூலம் நிகழும் ஊழல்கள் அவை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சென்ற பத்தாண்டுகளில் அவ்வாறு வெளிவந்த ஊழல்களைப்பற்றி அறிந்துகொள்ள சும்மா நாளிதழ்களைப் புரட்டினாலே போதும் .கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த ஜப்பானிய ஊழல்களின் தொகைகள் இங்கே இந்தியாவில் நாம் சாதித்துள்ள தொகைகளை விட அதிகம்.
கட்டுமானவேலைகளில் பத்து சதவீதம், ஆயுதபேரங்களில் இருபது சதவிதம் வரை ’கிக்பேக்’ அளிக்கப்படுவது ஒரு சர்வதேச மரபாகவே உள்ளது. இங்கே நாம் ஊழல் என நினைப்பவை பலவும் முதலாளித்துவ நாடுகளில் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டுள்ளன. இன்று நாம் ஊழல் என நினைப்பவை சென்ற மன்னராட்சிக் காலத்தில் மரபாக கடைப்பிடிக்கப்பட்டன என்பதுபோலத்தான் இதுவும்.
நியூயார்க்கில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தின் பிரம்மாண்டமான கட்டிடம் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொன்னார் நண்பர். அதன் சமீபத்திய மாபெரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளையும் அவை அமெரிக்க பொருளியலுக்கு உருவாக்கிய அடிகளையும் நினைவில் கொண்டு ’இந்த நிறுவனம் தடைசெய்யப்பட்டிருக்கிறதல்லவா?’ என்றேன். ‘விளையாடுகிரீர்களா? அமெரிக்காவில் பெரிய ஊழல்களைத் தண்டிக்க முடியாது என்பது ஊருக்கே தெரியும்’ என்றார் நண்பர்.
முதலாளித்துவம் ஊழல்கள் வழியாகவே செயல்பட்டுவருகிறது, அதற்கான மாற்று ஏதும் இன்றுவரை இல்லை. அரசாங்கத்தை நிர்வகிக்கும் மனிதர்களை வணிகநிறுவனங்கள் தவறான முறையில் கவர்ந்து அரசின் திட்டங்களைத் தங்களுக்குச் சாதகமான முறையில் அமைத்துக்கொள்ளுதல், மக்களின் வரிப்பணத்தைத் தங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுதல், அரசின் வெளியுறவுக்கொள்கைகளைத் திரித்துக்கொள்ளுதல் ஆகியவை இன்றைய உலக முதலாளித்துவ நாடுகளின் அன்றாட ஆட்சிமுறையாக இருந்து வருகின்றன.
ஆனால் அங்கே நிகழ்வதற்கும் இங்கே நிகழ்வதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு அங்கே மக்கள் நலத்திட்டங்களில் ஊழல் இல்லை, அன்றாட வாழ்க்கையை நிர்ணயிக்கும் கீழ்மட்ட நிர்வாகத்தில் ஊழல் இல்லை, நேரடி அரசியல்நிர்வாகத்தில் ஊழல் குறைவு என்பதே. ஆனால் அங்கே ஜனநாயகம் உருவாகி படிப்படியாக வலுபெற்ற பின்னரே இந்த மாற்றம் உருவானது.
இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்கிறீர்கள். சும்மா போகிற போக்கில் இணையத்தில் தட்டியிருந்தாலே ஆதாரங்களை நீங்கள் பெற்றிருக்க முடியும். அமெரிக்க வரலாற்றில் இரண்டு ரூஸ்வெல்டுகளும் ஊழலுக்கு எதிரான மக்களியக்கத்தின் நாயகர்களாக கருதப்படுகிறார்கள்.
தியோடர் ரூஸ்வெல்ட் [1901-1909] ஊழலுக்கு எதிரான அவரது ஜீரோ டாலரன்ஸ் அணுகுமுறைக்காக இன்று நினைவுகூரப்படுபவர். அமெரிக்க வரலாற்றில் ஊழல் ஒரு பெருங்கொண்டாட்டமாக இருந்த நாட்கள் அவை. அமெரிக்க நிலம் முழுக்க பல்வேறு கம்பெனிகளால் கையடக்கப்பட்டிருந்தது அன்று. அவை அரசுகளை ஊழலில் முக்கி வைத்திருந்தன. 1869ல் அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தன் அரசின் அமைச்சர் பதவிகளையே நிறுவனங்களுக்கு ஏலம்போட்டு விற்றுவிட்டார் .அன்று தேர்தலில் நிற்பதென்றாலே ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதுதான் என்று அமெரிக்காவே நம்பியது. அந்த நிலைக்கு எதிராக போராடி மக்கள் கருத்தை திரட்டி வென்று வந்து அன்று அரசை ஊழல்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்த டிரஸ்ட்கள் என்றழைக்கப்பட்ட ஏகபோக நிறுவனங்களை அடக்கி வென்றவர் ரூஸ்வெல்ட்.
ஃப்ராங்கிலின் ரூஸ்வெல்ட் [1933–1945 ] பெரும்பணவீக்க காலகட்டத்தில் தன் ‘புதிய வழிமுறை’ [New deal] மூலம் அன்றைய நிர்வாக ஊழல்களுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கைகளும், அன்று உருவாக்கிய சட்டங்களும்தான் இன்றும் அமெரிக்காவின் பொது ஒழுக்கமாக நீடிக்கின்றன. இவை எந்த ஒரு அமெரிக்க வரலாற்று நூலிலும் வாசிக்கக்கூடியவையே.
எந்த ஐரோப்பிய வரலாற்று நூலையும் எடுத்து வாசித்துப்பார்த்தாலும் ஐரோப்பிய நாடுகளின் குடியரசுகள் உருவாகி வந்த ஆரம்ப வருடங்களில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்காலம் ஊழலும், பாரபட்சமும் அந்நாடுகளை சுழற்றியடித்த கதையை நீங்கள் வாசிக்கமுடியும். பிரான்ஸின் குடியரசுகள் ஊழலால்தான் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி அழிந்தன. 1871ல் உருவான மூன்றாம் பிரெஞ்சு குடியரசு ஊழல் மிக்க அரசுகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. மேலெழுந்தவாரியாக பார்த்தாலே நம்பமுடியாத அரசியல் பகடையாட்டங்களும் ஊழல்களும் நிறைந்த காலகட்டம்.
முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையிலான பிரான்ஸின் வரலாறு பைத்தியக்கார காலகட்டம் [Les années folles] எனப்படுகிறது. அதிகாரமட்டத்தில் வணிகர்களின் செல்வாக்கால் ஊழல் மலிந்திருந்த காலம். வெளியுறவுக்கொள்கைகளே லஞ்சம் வாங்கிக்கொண்டு வகுக்கப்பட்டது.
குறிப்பாக 1930 -36 வரை பிரெஞ்சு வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டம். ஊழல்நிறைந்த அரசுக்கு எதிரான கட்டுபாடற்ற மக்கள்போராட்டங்களை வலதுசாரிகள் முன்னெடுத்தனர். தொடர்ச்சியாக ஊழல்கள் வெளிவந்து நடுத்தர வர்க்கத்தை அரசுக்கு எதிராக திருப்பியதனால் ஒவ்வொருநாளும் தெருக்கள் கிளர்ச்சியாளர்களால் நிறைந்திருந்தன. ஊழல்கள் காரணமாக ஜனநாயகம் மீதே மக்கள் நம்பிக்கையிழந்தார்கள். மேலோட்டமாக தகவல்கள் வேண்டுமென்றால் விக்கிபீடியாவையே பார்க்கலாம். http://en.wikipedia.org/wiki/6_February_1934_crisis
இக்காலகட்டங்கள் முழுக்க நிர்வாகத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் ஊடுருவியிருந்த ஊழல் பற்றி இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பிய வரலாற்று நூலிலேயே வாசிக்கலாம். கூகிளில் தேடினாலே பல நூல்கள் கிடைக்கும். தமிழிலேயே முப்பதாண்டுகளுக்கு முன்பு விரிவான ஒரு நூல்வந்துள்ளது தமிழ்நாட்டு பாடநூல் நிறுவன வெளியீடு, மொழியாக்க நூல்.
அந்த ஊழலுக்கு ஜனநாயகம் வழியாக அரசுக்குள் நுழைந்த மன்னராட்சி ஆதரவாளர்களும் பிரபுக்களும் காரணம் என ஒரு தரப்பு உண்டு. அதேயளவு காரணம் அன்று உருவான தொழிற்புரட்சியை பயன்படுத்தி செல்வம்சேர்த்த புதியமுதலாளிகள். ஊழல் நான்கு தளங்களில் நிறைந்திருந்தது. நீதித்துறையில் பிரபுக்களுக்கு கிடைத்த பாரபட்சமான முன்னுரிமை, நில உடைமைகள் தவறான முறையில் அங்கீகரிக்கப்பட்டமை, ராணுவச்செலவுகளின் பிரம்மாண்டமானமுறைகேடுகள், வரிமுறைகேடுகள்.
1870கள் முதல் ஊழலுக்கு எதிரான ஃபிரெஞ்சு கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரிட்டனில் அன்றைய கம்பெனிகள் ஆட்சியதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திமைக்கு எதிராக மக்கள் கோபத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டன. எமிலி ஜோலாவின் கட்டுரைகளில் ஒருபகுதியை நான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். பிரான்ஸின் ஊழல்களுக்கு எதிரான கோபப்பாய்ச்சல்கள் அவை. 1870கள் முதல் ஜெ.எஸ்.மில், ஜான்.ரஸ்கின் போன்றோரின் எழுத்துக்களில் பிரிட்டனின் ஊழல்களுக்கு எதிரான கோபத்தைக் காணமுடியும்.
பிரான்சில் ஊழலுக்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரைகள் வழியாகவே பொது தள ஊழல்களுக்கு எதிராக இன்று வரை ஐரோப்பாவில் நிலவும் பொதுமக்கள் மனநிலை உருவாக்கப்பட்டது. இந்தவிழுமியங்கள் ஐரோப்பியநாடுகளில், பிரான்ஸிலும் பிரிட்டனிலும் ஒரு மக்கள்சக்தியாக ஆனது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் என்பது வரலாறு. தோராயமாக நான் குறிப்பிட்ட காலம் இதுவே.
கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளின் வரலாறுகளும் இதே பரிணாம கதி கொண்டவைதான். மன்னராட்சியில் இருந்து குடியரசு உருவாகிறது. குடியரசில் இருக்கும் பணமும் செல்வாக்கும் பெற்றவர்கள், இவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரபுக்களும் வணிகர்களும்தான், அரசதிகாரத்தைப்பயன்படுத்தி ஊழலில் திளைக்கிறார்கள். விளைவாக ஊழலுக்கு எதிரான மக்களியக்கம் உருவாகிறது. அந்த இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஊழலை எதிர்க்கும் சக்திகள் ஆட்சிக்கு வருகின்றன. அவை பொதுத்தள ஊழலை இல்லாமலாக்குகின்றன.
அந்த விழுமியங்கள் இன்று இல்லாமலாகிவிட்டன என்றும் அவற்றை மீட்டெடுக்கவேண்டும் என்றும் , அதற்கு இன்னொரு மக்களியக்கம் தேவை என்றும் அறைகூவும் இணைய எழுத்துக்களைக் கடந்த சில வருடங்களாக, குறிப்பாக இந்த பொருளியல் நெருக்கடிக்குப் பின், கண்டுகொண்டிருக்கிறேன்.
ஜெ
பெரிசோவ்ஸ்கி-க்கு ஏற்பட்ட முடிவைப் போன்று அம்பானிக்கும், வேதாந்தாவிற்கும் ஏற்படட்டும் என்று கொல்லங்குடிக்காளிக்கு காசு வெட்டிப்போடப்போகிறாராம் ஒரு நண்பர்.
இவனுக்கு ஏற்பட்ட முடிவு அம்பானிக்கும்,வேதாந்தாவிற்கும் உண்டாக என் வாழ்த்துக்கள்!