உள்ளூர் திருவிழாக்களின் போது, காப்பு கட்டப்பட்ட பின்னர் எல்லோரும் சுத்தபத்தமாக இருக்க வேண்டுமென்று போடப்படும் கட்டுப்பாடுகள் கேலிக்கூத்தாக முடிவதைப் போலவே, ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அதிகாரிகள் விதிக்கும் கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் கோமாளிக் கூத்தாகிப் போகின்றன.
வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் – எனத் தேர்தல் அதிகாரிகள் ஆரவாரம் செய்தாலும், வாகனச் சோதனைகள் நடத்தி கெடுபிடிகளைத் தீவிரமாக்கினாலும் இதுவரை எந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியோ, அவர்களது பணமோ சிக்கவில்லை. மாறாக, சேலம் மாவட்டம் குப்பனூர் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்த ரூ.35 இலட்சத்தில் 8.25 இலட்சத்தை போலீசாரே சுருட்டிக் கொண்ட விவகாரம் வெளிவந்து நாறியது. இலஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் இத்தகைய அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டுதான், தம்மை மேலான அதிகாரமாகக் காட்டிக் கொள்ளும் தேர்தல் அதிகாரிகள் பணப் பட்டுவாடாவைத் தடுக்கப் போவதாகச் சதிராடுகிறார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் செல்லாக்காசாகிப் போனதையும், மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இயங்கியதையும் நாடறியும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் விசுவாசியான தமிழக போலீசுத்துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி. ராமானுஜம், பதவியிலிருந்து ஓவு பெற்ற பின்னரும் அப்பதவியில் தொடரும் நிலையில், அவர் தலைமையிலான போலீசைக் கொண்டு தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த வாய்ப்பேயில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் பிரம்மாவிடம் தி.மு.க. மனு கொடுத்துள்ள போதிலும் இது வரை நடவடிக்கை ஏதுமில்லை.
தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் ஒரு தொகுதியில்கூட போட்டியிட முடியாத நிலையில், டான்சி ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இவ்வுண்மையை மறைத்து நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஜெயாவின் மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அவ்வாறு தாக்கல் செய்ய வில்லை எனப் பொய்யான வாக்குறுதி அளித்து மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட மனு செய்த குற்றத்திற்காக அவர் மீது குற்றவழக்கு தொடரக்கோரி மத்திய தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் கொடுத்து, வழக்கு தொடுத்துள்ள போதிலும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர்கள் உள்ளிட்டு ஓட்டுக்குப் பணம் கொடுத்தோர் மீது ஒப்புக்காக வழக்கு பதிவானாலும், தேர்தல் முடிந்த பின்னர் அவை அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன. இதற்காக யாரும் தண்டிக்கப்படுவதோ, பதவி பறிக்கப்படுவதோ நடப்பதில்லை. இப்படி தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் கழிப்பறைக் காகிதமாகிவிட்ட நிலையில், ஏதோ சாதிக்கப் போவதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழக வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ. 5 ஆயிரம் கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கப்பல்கள் மூலம் கடத்தி வருவதாக தேர்தல் ஆணையருக்கு இரகசியத் தகவல் வந்துள்ளதாகக் கூறி, தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பல்களில் தொடர்ந்து 3 நாட்களுக்குத் தேடுதல் வேட்டை எனும் கோமாளிக் கூத்தை அடிமுட்டாள்தனத்துடன் அரங்கேற்றி தேர்தல் அதிகாரிகள் பரபரப்பூட்டினர்.
ஓட்டுக்கட்சிகளுக்கிடையே கொள்கை வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்டதாலும், வாக்களிப்பதைத் தவிர வேறு பங்கேற்பு ஏதுமின்றி அரசியலிலிருந்தே படிப்படியாக மக்கள் விலக்கப்பட்டு வருவதாலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும் ஓட்டுக்கட்சிகள் மீதும் அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் மக்களிடம் பரவி வருகிறது. இந்த அதிருப்திக்கு வடிகால் வெட்டி, நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் மீதும் இன்றைய அரசியலமைப்பு முறை மீதும் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் இத்தகைய சூரத்தனங்களுடன் சாமியாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு உடுக்கையடித்துக் கொண்டிருக்கின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.
– தலையங்கம்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________
தோ்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் நன்றதுதான் என்பதை உணர பழகுங்கள். காரணம் நீதிமன்றம் போல் தன்னாட்சி பெற்ற அமைப்புதான் இது. கடந்த தோ்தலில் அனைத்து அரசியல்வாதிகளும் இலவசங்களை தோ்தல் அறிக்கை வி்டடனா் ஆனால் இந்த தோ்தலில் தடைசெய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் சென்றுதான் நோட்டோ என்ற தோ்தலில் நிற்கும் கட்சியையும் வேட்பாளரையும் மறுக்கும் உாிமை இந்த தோ்தலில்தான் வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன் அனைவருக்கும் தொியும் வண்ணம் 49ஓ என்ற தாளில்தான் விண்ணப்பமாக புா்த்தி செய்யும் போது புத்தில் உள்ள அனைத்து நபருக்கும் தொிந்துவிடும் என்ற பயத்தில் நிறையபோ் 49ஓ-வை பயன்படுத்த தவறிவிட்டனா். இந்த முறை நம் பலத்தை நோட்டோ என்ற பட்டனை அழுத்தி அரசியல்வாதிகளுக்கு எதிா்ப்பு தொிவித்தால் நம் மக்களின் பலத்தை உணா்ந்து திருந்துவாா்கள். இந்த செய்தியை அனைவருக்கும் உணா்த்துங்கள்.
1.அனனவரும் வாக்களிக்கவேண்டும்
2. தகுதியற்ற வேட்பாளரையும் மற்றும் கட்சியையும் சாா்ந்தவரை தகுதியிழப்பு செய்யவேண்டும்
3. தகுதியுள்ளவா்கள் வேட்பாளராக வெற்றி பெற்று நமக்கு ஏதாவது செய்யவில்லை என்றால் அதனை திரும்பபெறும் வாய்ப்பு உள்ளது. (இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
நன்றி
பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்போர், சாதி-மத அடிப்படையில் தகுதியில்லதோருக்கு வாக்களிப்போர் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தேர்தல் ஆணையம் பற்றி விமர்சித்து பயனில்லை. தேர்தல் ஆணையம் சுயமாகச் செயற்படுவது வரவேற்கத்தக்கது. ஒரு மாநில முதல்வரே தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் பற்றிக்குறைபட்டுக்கொள்வது என்பது தேர்தல் ஆணையம் சுயமாக செயற்படுவதனையே காட்டுகிறது. மிகுதி மக்களின் கைகளில்.
/தேர்தல் ஆணையம் சுயமாகச் செயற்படுவது வரவேற்கத்தக்கது/… எந்த அதிகார அமைப்பும் சுயமாக செயல்பட வாய்ப்பில்லை! ஒவ்வொரு யோக்கியர்களின் தலைக்கு மேலேயும் ஒரு கத்தியோ, கயிறோ அல்லது காரட்டோ இருக்கிறது! ஓய்வு பெற்ற அதிகாரிகளின் இப்போதைய செல்வாக்கைப்பார்த்தாலே அவர்கள் எந்த யோக்கியதையில் செயல்பட்டிருப்பார்கள் என்பது புரியும்! இரவு பத்து மணிக்கு மேலும், வீடு வீடாக சென்று பிரச்சாரம் (பணப்பட்டுவாடா?) இப்போது என்ன அவசரம்? யார் கோரிக்கை வைதது? இதைபற்றி அரசியல் கட்சிகளின் கருத்து கோரப்பட்டதா? புதிய டிஜிபி வந்தபின்னரும், பழைய டிஜிபி தொடருவது ஏன்? இது தான் பார்ப்பனநீதி! தனக்கு என்றால் பதக்கு!
புரட்சி சரிதான். ஆனால் எங்கே, எப்படி ஆரம்பிப்பது?
உழைக்கும் மக்களைத் திரட்டலாம். சரிதான்.
ஆனால் தமிழக உழைக்கும் மக்களுக்காக தெலுகு உழைக்கும் மக்கள் குரல் கொடுப்பதில்லை.
தெலுகு உழைக்கும் மக்களுக்காக பீகாரி உழைக்கும் மக்கள் குரல் கொடுப்பதில்லை.
பின்னர் எப்படி இந்தியாவில் புரட்சி சாத்தியமாகும்?
கம்யூனிஸ்டுகளின் கொள்கைகள் கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுகிறது. பின்னர் எப்படி சாதாரண மக்கள் புரட்சியை நோக்கி நகர்வார்கள்?
அதைவிடுங்க.
காஷ்மிருக்காக குமுறும் நீங்கள் ஈழத்தை மறுக்குறீர்கள். உங்களை எப்படி நம்புவது?
காஷ்மீரிகளை போராளிகள் என்கிறீர்கள். புலிகளை தீவிரவாதிகள் என்கிறீர்கள்..
ஜிண்டால், கெயில், வேதாந்தா, கோக் என பல கார்ப்பரேட்டுகள் தமிழகத்தை சுரண்டுகிறார்கள். இதனை தமிழர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் மலையாளியோ, பீகாரியோ கண்டுகொள்கிறார்களா?? இல்லையே!! அப்ப்புறம் என்ன இந்திய புரட்சி வெங்காயம்?
இந்திய ஏகாதிபத்தியத்தில் எந்த புரட்சியும் சாத்தியமில்லை.
இடதுசாரி தமிழ்த்தேசியம் நோக்கி புரட்சியை நகர்த்துவோம்.
‘ஐயோ, தமிழினவாதம்’ என்று குமுறுவீர்கள்.
இனவாதமோ, பக்கவாதமோ, குறைந்த பட்சம் தமிழகத்தை காத்திட தமிழ்த்தேசியப் புரட்சி அவசியம்.
நீங்க சொல்லுற புரட்சிக்கு காத்திருந்தால் தமிழன் கட்டிருக்கிற கோவணமும் பறிபோகும்.
அனைத்தையும் இழந்தபின்னர் யாருக்காக புரட்சி??
[தயவுசெய்து இந்த பின்னூட்டத்தை பிரசுரியுங்கள். நன்றி]