privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பூனா இளைஞர் கொலை - பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !

பூனா இளைஞர் கொலை – பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !

-

மோசின் ஷேக்
தாடியும், குல்லாவும் போட்ட காரணத்திற்காகவே கொல்லப்பட்ட மோசின் ஷேக்

மாராட்டிய மாநிலம் பூனா மாநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மோசின் ஷேக், இந்து ராஷ்டிர சேனா எனும் மதவெறி இயக்கத்தால், திங்கள் கிழமை 2.6.14 இரவு கொடூரமாக கொல்லப்பட்டார். பாஜக ஆட்சியின் முதல் ரத்தப் பலி துவங்கி விட்டது.

மராட்டிய அரசன் சிவாஜி, சிவசேனாவின் செத்துப் போன தலைவன் பால் தாக்கரே குறித்து கேலி செய்யும் படங்கள், கடந்த வாரம் பேஸ்புக்கில் உலா வந்தன. அதிகமும் பூனா மாநகரப் பகுதியிலேதான் இந்த படங்கள் பரவியிருக்கிறது. இதை எதிர்த்து, இந்துமதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரங்கள் பூனா மாநகரையே மையம் கொண்டிருந்தன.

முதலில் சிவாஜி, பால்தாக்கரே குறித்த படங்கள், அவை கேலிக்குரியதாகவோ இல்லை ஆட்சபணைக்குரியதாகவோ இருந்தால் என்ன பிரச்சினை? கலவரங்களுக்கு தலைமை ஏற்று, சிறுபான்மை மக்களை கொன்ற பாசிஸ்டுகளாத்தான் மோடி, தாக்கரேவை, நாங்கள் உள்ளிட்டு பல்வேறு ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள், சிறுபான்மை இயக்கங்களும் பார்க்கின்றோம்.

மும்பை கலவரம் உள்ளிட்டு பல்வேறு பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள்ள பால் தாக்கரே எனும் ரவுடியை மகானென்று அவர்கள் அழைக்கட்டும்! நாம் ஏன் அழைக்க வேண்டும்? ஒருவேளை அந்த படங்கள் ஆட்சேபணைக்குரியது அல்லது சமூக நல்லிணக்கத்தை பிளவுபடுத்துகிறது என்று கருதினால் அவர்களே சொல்லுகின்ற கருத்து சுதந்திரத்தை கடாசிவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?

ஏற்கனவே பெங்களூருவிலும், கோவாவிலும், மும்பையிலும் கூட ஃபேஸ்புக் பதிவுகளுக்காக இந்துமதவெறியர்களை குளிர்விக்கும் பொருட்டு, சிலர் கைது செய்யப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். தற்போது அந்த சட்டப்பூர்வ அடக்குமுறையையும் மீறி கொலை நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியிருக்கின்றனர்.

அடுத்து இந்த ஃபேஸ்புக் படங்களுக்கும், கொலை செய்யப்பட்ட பூனா இளைஞருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது அவர் இந்த படங்களை வெளியிடவில்லை. இந்த படங்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வெகுவேகமாக பரவியிருக்கின்றது. அதன் மூலம் பலர் அந்த படங்களை பார்த்திருக்கலாம். இவற்றினை வைத்து பார்க்கும் போது இந்த படங்களை யார் வெளியிட்டிருந்தாலும் அது இந்துமதவெறியர்களுக்கே பயன்பட்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அதன்படி இந்துமதவெறியர்களே கூட இந்தப்படங்களை புனைபெயரில் வெளியிட்டிருக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஃபேஸ்புக்கின் அமெரிக்க தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கும் மராட்டிய போலீசு, பதில் கிடைக்க ஒரு மாதம் ஆகும் என்பதால் அந்த படங்களை போட்டவர்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டு தப்பித்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறது.

இதன் மூலம் சுற்றி வளைத்து அந்த படங்கள் வெளியிடப்பட்டதே கொலைக்கு காரணம் என்று நியாயப்படுத்துவது போல இருக்கிறது. நம்முடைய கேள்வி படங்கள் வெளியிட்டதால் கலவரம், கொலை என்று பேசுவதே தவறு.

இல்லையென்றால் கஜினி முகமது படையடுப்பு குறித்து நாம் வரலாற்று உண்மைகளை பேசுவது கூட இந்துமதவெறியர்களுக்கு சினத்தை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் கலவரம் செய்யலாம், தாக்கவும் செய்யலாம் என்றால் இது ஜனநாயக நாடா இல்லை ஹிந்து ராஷ்டிரத்தின் பாசிசமா?

மோசின் ஷேக் திங்களன்று மசூதியில் தொழுகை முடித்து விட்டு, தனது நண்பர் ரியாசோடு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஹிந்து ராஷ்டிர சேனையின் பயங்கரவாதிகள், ஹாக்கி மட்டைகள் மற்றும் கம்பிகளால் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். உதவி கேட்டு ஓடியவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்த ஷேக் பிறகு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போனார்.

அவரது நண்பர் ரியாஸ் இந்த கொலைவெறித் தாக்குதலில் தப்பிப்பதற்கு காரணம், அவர் தாடியும், குல்லாயும் வைத்திருக்கவில்லை. இவை இரண்டும் இருந்ததால் மோசின் ஷேக், அவர் ஒரு ஐடி துறை ஊழியர் என்றாலும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். தாடியும், குல்லாவும் வைத்திருந்தால் அவன் பயங்கரவாதி என்று இந்த நாட்டின் அரசுகளும், ஊடகங்களும் சொல்லும்போது, இந்து பயங்கரவாதிகள் அந்த அடையாளங்களோடு வரும் முசுலீம் மக்களை வேட்டையாடுவதில் என்ன ஆச்சரியம்?

நடந்து முடிந்த தேர்தலில், பூனா தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்பி, அனில் ஷிரோல், இந்த கொலையை நியாயப்படுத்தியிருக்கிறார். “பேஸ்புக்கில் என்ன வெளியிட்டார்களோ அதற்கு எதிர் விளைவு இருக்கத்தானே செய்யும்” என்று பேசியிருக்கிறான் அந்த பன்னாடை! இதைத்தானே கோத்ரா ரயில் எரிப்பின் போது மோடியும் பேசியிருக்கிறார். தலைவன் எவ்வழியோ அவ்வழிதானே தொண்டனும்?

ஹிந்து ராஷ்டிர சேனா
கோட்சே, சாவர்க்கரின் வாரிசனா ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவன் தனஞ்செய் தேசாய் – (நீண்ட தலைமுடி உள்ளவன்)

ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவனான தனஞ்செய் தேசாய் மற்றும் சில நபர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்த சேனாவும், இதன் தலைவனும் கோட்சே மற்றும் சாவர்க்கரின் நேரடி மற்றும் உண்மை வாரிசுகளோடு தொடர்பு கொண்டிருப்பதாக ஊடக செய்திகளிலிருந்து புரிகிறது. சாவர்க்கரை ஆதரித்து கட்சி நடத்துவர்கள் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் தீவிரம் போதாது என்று கருத்துள்ளவர்கள். மோஷினை கொலை செய்து விட்டு இந்த கோட்சே கூட்டம், “முதல் விக்கெட் சாய்ந்து விட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டாடியிருக்கிறது.

பிரதமரான பிறகு, சாவர்க்கரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலத்திய மோடி இந்த உண்மையான சாவர்க்கரின் சீடர்களையும் அரவணைப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்மவா ஆட்சி மலர்ந்து விட்டது என்ற உளவியலே இந்த கொடூரமான கொலைக்கு முக்கியமான அடிப்படை.

இந்து ராஷ்டிரத்தின் பயங்கரவாதம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது! இதை மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியா கண்டித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்துமதவெறியர்களால் வாழ்க்கை இழக்கும் இசுலாமிய இளைஞர்களிடமிருந்து நிறைய தீவிரவாதிகள் வருவார்கள். தனக்கு நியாயம் கிடைக்கவில்லை, கிடைக்காது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவனை பயங்கரவாதம் சுலபமாக வென்றெடுக்கும்.

ஆனால் இந்துமதவெறிக் கூட்டத்திற்கு அந்த பிரச்சினை இல்லை. அவர்களுக்கு இந்த நாட்டின் அரசு, போலீசு, நீதிமன்றம், ஊடகம் அனைத்தும் கையில் இருக்கிறது. இது போக மோடி ஜெயித்து விட்டதால் அவர்கள் தமது பயங்கரவாதங்களை சட்டப்படியே கூட செய்வார்கள்.

அதாவது பால்தாக்கரே குறித்து தவறான படம் போட்டார்கள், கஜினி முகமதுவின் நடவடிக்கையை ஆதரித்தார்கள் என்று சில காரணங்களை சொன்னால் போதும்.

பார்ப்பனிய இந்துமதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்காமல் இந்தியா ஒருபோதும நிம்மதியாக இருக்கமுடியாது.

நிம்மதி வேண்டுவோர் போராடுவோம், பார்ப்பனியத்தை பாடை கட்டி அனுப்புவதற்கு!