privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் - ஆர்ப்பாட்டம்

சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்

-

தேவர் சாதி ஆதிக்க வெறி
உசிலம்பட்டி அருகே பூதிப்புரத்தில் பெண்கவுரவக் கொலை!

கதிரவன் எம்.எல்.ஏ., பாரதிய பார்வர்டு பிளாக் முருகன்ஜி ஆகியோரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

துரை அருகே பூதிப்புரம் கிராமத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி விமலாதேவி என்ற பெண் உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார். தேவர் சாதி ஆதிக்க வெறியர்கள் சாதி கவுரவத்தைப் பாதுகாப்பதாகக் கூறி இந்தப் பச்சைப் படுகொலையை நடத்தியுள்ளனர்.

இந்தப் படுகொலையை மறைத்து அது தற்கொலை என்று கொலைக்குத் தூண்டியதாக பெண்ணின் பெற்றோர், உறவினர் வெட்டியான் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஊரே இது படுகொலைதான் என்று கூறியபின்பும், ஊடகங்களும் அதனை உறுதி செய்தபின்பும் காவல்துறை அதைக் கொலை வழக்காக மாற்றவில்லை. உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் சாதிப் பாசத்தின் காரணமாகக் கொலையை தற்கொலை என்று சாதிக்கிறார்.

மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ வுமான பி.வி. கதிரவன் மற்றும் பாரதீய பார்வட்டு பிளாக் என்ற கட்டைப்பஞ்சாயத்து சாதிவெறிக் கூட்டத்தின் தலைவரான முருகன் ஜி ஆகியோர் இந்தக் கொலைக்கு மூலகாரணமாக இருந்துள்ளனர். இவர்கள் கொலையான பெண்ணின் பெற்றோருக்குச் கொடுத்த நெருக்கடியே கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் இவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நகர்வலம் வந்து கொண்டிருக்கின்றனர். காவல் துறை இவர்கள் தோள் மீது கைபோட்டுக்கொண்டு சிரிக்கிறது.

இந்த அநியாயத்திற்கு எதிராக, மேற்படி “கதிரவன் எம்.எல்.ஏ., முருகன் ஜி ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். டி.எஸ்.பி. சரவணக்குமாரை பணிநீக்கம் செய்யவேண்டும்” எனக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை தேனிமாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் ம.உ.பா.மையத்தின் மதுரை துணைச் செயலாளருமான தோழர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்பகத்தின் சென்னைத்தலைவரும் ம.உ.பா. மையத்தின் உறுப்பினருமாகிய தோழர் மு.திருநாவுக்கரசு, விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் உசிலை பகுதி அமைப்பாளர் தோழர் தென்னரசு, வி.வி.மு. செயலாளர் தோழர் பி.மோகன், ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

முதலாவது பேசிய வி.சி.கட்சியின் தென்னரசு,

“பிரமலைக்கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி – தலித் இளைஞர் திலீப்குமாரைக் காதலித்து அவர்கள் இருவரும் கடந்த ஜுன் மாதம் விருத்தாச்சலத்தில் திருமணம் செய்து கொண்டனர். கேரளமாநிலம் பாலக்காட்டில் குடியிருந்த அவர்களைக் கண்டு பிடித்து போலீசு மற்றும் சாதித் தலைவர்கள் நைசாகப் பேசிக் கூட்டி வந்து டி.எஸ்.பி அலுவலகத்தில் வைத்து திலீப்குமாரை மிரட்டி விரட்டிவிட்டு பெண்னை பெற்றோருடன் அனுப்பிவிட்டனர். கடைசிவரை விமலா திலீப்குமாருடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்ததால் அவருடைய பெற்றோரை அவரைக் கொன்று எரித்துவிட்டனர். மேலும் தலித்துகளை மிரட்டி வருகின்றனர். எனக்கும் தொலை பேசி மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்” என்றார்.

உசிலம்பட்டியில் நடந்த இந்தப்படுகொலை என்பது புதிதல்ல. நாடுமுழுவதும் இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 30 கௌரவ கொலைகள் நடந்துள்ளன. பல கணக்கில் வரவில்லை. கௌரவக் கொலை என்று சொல்கின்றனர். இதில் என்ன கௌரவம் இருக்கிறது. இது கௌரவக் கொலை அல்ல காட்டுமிராண்டி கொலை. காதல் என்பது இயல்பானது. இது எப்படி குற்றமாகும்.

இந்தக் கொலை ஒரே நாளில் நடக்கவில்லை. திலீப்குமார் தொடர்ந்து புகார் அளித்தும் காவல் துறை அலட்சியம் காட்டியது. இந்தக் கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டியவர்கள் கதிரவன் எம்.எல்.ஏ மற்றும் முருகன் ஜி. ஆனால் அவர்கள் மீது இதுவரை வழக்கு கூட பதிவு செய்யவில்லை. கொலை செய்தவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிகின்றனர்.

இந்தக் கொலையைக் கண்டித்து போஸ்டர் ஒட்டினால் சாதி வெறியர்களும், காவல்துறையும் கிழித்து விடுகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக உலவ விடும் காவல் துறை, கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று கூறி அனுமதி மறுக்கின்றனர்.

உசிலை வட்டாரத்தில் சாதி வெறி தலை விரித்தாடுகிறது. கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கத்தடை. செருப்புப் போடத் தடை. சைக்கிளில் செல்லத் தடை. தனிக் குவளை, தனி சுடுகாடு இன்னமும் தொடர்கிறது. இவற்றிற்கு எதிராக காவல் துறை என்றாவது நடவடிக்கை எடுத்தது உண்டா. பிறகு எதற்கு காக்கிச் சட்டை, கையிலே துப்பாக்கி, கௌரவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காமல் தடுக்க தேவர் சமூகத்தில் இருப்போரும் போராட முன் வரவேண்டும்.

வழக்கறிஞர் திருநாவுக்கரசு, ம.உ.பா. மையம், மதுரை

இந்தியா முழுவதும் ஆதிக்க சாதியினரின் ஆட்சிதான் நடைபெறுகிறது. பிற்பட்டோரில் 700 உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்களே மாறி மாறி ஆட்சி செய்து செய்து தலித்துகளை ஒடுக்கின்றனர். தமிழகத்தில் 7000 கிராமங்களில் இன்னமும் தீண்டாமை இருக்கிறது. அனைவருக்கும் ரத்தம் ஒன்றுதானே. பின் ஏன் இந்த சாதி வெறி? இந்த சாதி வெறியால் பாதிக்கப்படுவோர் தலித்துகள் தான். காதல் திருமணம் செய்து கொண்டால் யாருக்கும் தெரியாமல் தூக்கு மாட்டி கொலை செய்து விடுகின்றனர். இதுதான் ஜனநாயகமா? இதுதான் ஜனநாயக நாடா?

இப்படிப்பட்ட படுகொலைகள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. இல்லையென்றால் எல்லாமே ஆதிக்க சாதியினரால் மறைத்தப்பட்டிருக்கும். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்னமும் கோவிலுக்குள் போகமுடியவில்லை. ஆண்டான் அடிமைச் சமூகமும் மாறவில்லை. இந்த அநீதிகள் தொடருமானால் தமிழகம் முழுவதிலுமுள்ள வழக்கறிஞர்களைத் திரட்டிப் போராடுவோம்.

குருசாமி, செயலர், வி.வி.மு, உசிலை

வன்னியர்களை விட, கவுண்டர்களை விட நாங்கள் என்ன குறைந்தவர்கள என்ற திமிரில் திட்டமிட்டு கள்ளர் சாதி வெறியர்கள் இந்தக் கொலையை செய்துள்ளனர். விமலாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை அல்ல. காவல் நிலையத்திலும், நீதி மன்றத்திலும், சாதி வெறியர்களிடத்திலும் துணிவாக பேசிய பெண். பாரதிய ஃபார்வெட் பிளாக் முருகன் ஜி அவரது தாலியைக் கழட்டச் சொன்ன போது, “முதலில் காதல் திருமணம் செய்து கொண்டு ஓடிப்போன உன் பெண்ணின் தாலியை அறுத்துவிட்டு அதன்பின் இங்கே வா” என்றும், கதிரவன் எம்.எல்.ஏ. விடம் “உன் வேலையைப் பார்த்து விட்டுப்போ” என்றும் பேசிய வீரப்பெண்மணி விமலாதேவி. அவர் காதலுக்காக போராடி செத்திருக்கிறார். அவரை தமிழக அரசு கௌரவப்படுத்த வேண்டும். கதிரவன் எம்.எல்.ஏ., முருகன் ஜி, உசிலை சாதி சங்க வழக்கறிஞர்கள் மீது வழக்கு நடத்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று சொல்லி காவல்துறை அனுமதி மறுக்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுப்பதே காவல்துறைதான். சட்டத்தை காவல்துறை மயிர் அளவிற்கு மதிப்பதில்லை.

மோகன், செயலர், வி.வி.மு, தேனி

இந்தக் கொலை நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. வட மாநிலத்தில் ரூப்கன்வர் உயிரோடு கொளுத்திய அந்த உடன் கட்டை ஏறும் கொடுமை தமிழ்நாட்டில் இல்லை என்று பெருமை பேசிக் கொண்டனர். ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் கௌரவக்கொலைகள் நடக்கின்றன. கொலையை செய்துவிட்டு அப்படித்தான் செய்வோம் என்று நெஞ்சை நிமிர்த்தி திரிகின்றனர், சாதிவெறியர்கள். அவர்களை காவல்துறை கண்டு கொள்வதில்லை. விமலா தேவியின் காதல் திருமணத்தில் சாதி வெறியோடு கட்டப்பஞ்சாயத்து செய்ய சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வருகிறார். இவர் உசிலைப் பகுதியிலுள்ள கள்ளர் சமூகத்து பிரச்சனையெல்லாம் தீர்த்துவிட்டாரா?! நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறதே, அதைத் தடுத்துவிட்டாரா? காதல் பற்றி படம் எடுப்பவன் எல்லாம் உன் சாதிக்காரன் தானே. அதைத் தடுக்கவேண்டியது தானே?

ஒரு காலத்தில் கள்ளர்கள் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் போய் கையெழுத்துப்போட வேண்டும், கள்ளர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. உரிமைகள் மறுக்கப்பட்டன. கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளிகளும் போராடித்தானே அவர்களுக்கு உரிமை பெற்றுத்தந்தனர். அன்றைக்கு இந்த சாதித் திமிர் எங்கே போனது. தாழ்த்தப்பட்ட நீதிபதியின் முன் கைகட்டி நிற்கிறாயே அப்போது உன் சாதித்திமிர் எங்கே போனது. ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசும் உனக்கு எதற்கு இட ஒதுக்கீடு, சலுகைகள் தூக்கி எறிய வேண்டியது தானே.

கண்டதற்கெல்லாம் கவிதை எழுதும் கலைஞர் கருணாநிதி விமாலாதேவி பற்றி ஏன் கவிதை எழுத வில்லை. எழுதினால் தேர்தலில் வாக்கு கிடைக்காது. இங்கே கொளுந்து விட்டு எரியும் சாதிக் கொட்டத்தை நாங்கள் அடக்குவோம்.

லயணல், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம்

கேவலமான ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை கவுரவக் கொலை என்று கூறுகிறார்கள். சாதி என்பது கவுரவமா? சாதி என்பது இழுக்கு. சாதிகளிலே உயர்ந்தவன் பிராமணன் (பார்ப்பான்) என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறவன் மற்ற சாதிகளை எல்லாம் தனக்குக் கீழானது என்று சொல்கிறான். இதிலே சூத்திர சாதிதான் கீழானது.

சூத்திரர்களை மனுதர்மம் வேசியின் மக்கள் என்று சொல்கிறது. இன்றைக்கு பெரும்பான்மை சாதியினர் சூத்திரர்கள் தான். தேவடியாமகன்கள் என்ற மிகப்பெரிய இழிவு சூத்திர சாதிகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் தங்களுக்குக் கீழான சாதிவரம்புக்குள்ளே வராத, மனிதர்களாகவே மனுதர்மத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதிலே பெருமை கொள்கிறார்கள்.

இது பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி. இதைத்தான், ஜெயலலிதா, சு.சாமி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., ராமதாசு இன்னும் பல சாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துகிறவர்கள். பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆகி கருவறைக்குள்ளே போக முடிய வில்லை. தீண்டாமை நிலவுகிறது. தாய்த்தமிழ் மொழியை நீசபாசை என்று சொல்கிறான். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு சாதிப் பெருமை பேசுவது மிகக் கேவலமானது.

வேறுவேறு சாதி மதம் இனம் மொழியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கழுதைக் குட்டியா பிறக்கும். மனிதக்குழந்தை தானே பிறக்கும். சாதி எங்கே தடையாக வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத கேவலம் பார்ப்பனீயத்தால் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றான் வள்ளுவர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றன். இதையெல்லாம் பேசுகிறவர்கள் சாதியை பேசி பிரித்து வைக்கிறார்கள். எனவே சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணம், காதல் திருமணங்களை நாம் ஆதரிக்க வேண்டும். சாதியை இழிவாகக் கருதி சாதி மறுப்பு திருமணத்தை நம்முடைய குடும்பங்களிலே நடைமுறைப்படுத்த வேண்டும். சாதியின் பெயரால் மக்களிடம் வறட்டுப் பெருமையைப் பாதுகாத்து ஆதாயம் தேடிவரும் கதிரவன் எம்.எல்.ஏ முருகன் ஜி இன்றைய சாதித் தலைவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

  • தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளது. ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் சாதிப் பெருமைக்காகச் செய்கிற இந்தக் கொலைகளைத் தடுக்க தண்டிக்க தனிச் சட்டம் இல்லை. எனவே இதற்கென தனிச்சட்டம் உருவாக்க வேண்டும்.
  • சட்டங்களால் பெரிய பலன்கள் நடைமுறையில் இல்லை என்பதால் சமூக நீதியாக மக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப் படுகிறவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும்.
  • இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விமலாதேவியைத் திருமணம் செய்த திலீப்குமார் மற்றும் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

மதுரையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்கச்சென்ற வழக்கறிஞர் நடராஜனிடம் பல்வேறு நிபந்தனைகளைச் சொன்னதோடு 1 மணிநேரம் மட்டும் அனுமதி வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல், “எதிரித் தரப்பினரும் தங்களை எதிர்த்து பலர் அவதூறு செய்வதாகவும், சாதிப்பகையைத் தூண்டி கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். எனவே எந்த தனிநபரையும் தாக்கிப் பேசக் கூடாது. பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்டத்துக்கான துண்டறிக்கை மாவட்ட நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டது. அதை விநியோகிக்கக் கூடாது என்று தேவர்சாதி வழக்கறிஞர்கள் சிலர் சங்கச் செயலரிடம் புகார் அளித்துள்ளார். சாதிப்பெயரைப் போட்டு கோர்ட்டுக்குள் விநியோகிக்கக் கூடாது என்று செயலாளர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன் மொத்த நோட்டீசும் விநியோகிப்பட்டது.

சில இளம் சாதி வழக்கறிஞர்கள், “தேவர்சாதி என்று எப்படி போடுவாய். நீ எப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகிறாய்” என்று பார்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

நீதிமன்ற வாளாகத்துக்குள் சுவரொட்டி ஒட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக மழை ஊற்றிய போதிலும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் பலர் வந்து பாராட்டிச் சென்றனர்.

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை