privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பாக் + பா.ஜ.க கூட்டு, தினமணி புரட்டு, வறுமை

பாக் + பா.ஜ.க கூட்டு, தினமணி புரட்டு, வறுமை

-

பாக் பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க கூட்டு – முன்னாள் “ரா” தலைவர்!

காஷ்மீர் - வாஜ்பாயி ஆண்டுகள்
புத்தகம் பா.ஜ.கவின் நடிப்பு தேசபக்தியை சாயம் போகுமளவு வெளுத்திருக்கிறது.

ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் எனப்படும் இந்திய அரசின் உயர் வகை உளவுத் துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் காஷ்மீர் பிரச்சனையை விவரிக்கும் அந்த புத்தகம் பா.ஜ.கவின் நடிப்பு தேசபக்தியை சாயம் போகுமளவு வெளுத்திருக்கிறது.

1999-ம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி-814 கடத்தப்பட்ட போது துலாத் ரா அமைப்பின் தலைவராக இருக்கிறார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு இந்தப் பிரச்சனை குறித்து ஜிலேபி, சம்சா சாப்பிட்டு விவாதித்துக் கொண்டிருக்கும் போதே அமிர்தசரஸில் இறங்கிய விமானம் பறந்து ஆப்கானிஸ்தான் போய்விட்டது.

இறுதியில் அமைச்சர் ஜஸ்வந் சிங் விமானத்தில் பறந்து கூடவே மூன்று தீவிரவாதிகளை அழைத்து சென்று விடுவித்துத்தான் பயணிகளை மீட்க முடிந்தது. அப்போது இப்படி விடுவிப்பது தவறு என்று ஃபரூக் அப்துல்லா வாதாடியிருக்கிறார். பா.ஜ.க அரசோ அவரை சமாதானப்படுத்துமாறு துலாத்தை அனுப்பியிருக்கிறது. இதற்காகவே ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவர் சையத் சலாவுதீனுடன் பாரதிய ஜனதா அரசாங்கம் நெருக்கமான உறவையும் ஏற்படுத்தியிருந்தது. அதில் ஒரு அம்சமாக சலாவுதீனின் மகனுக்கெல்லாம் உதவியிருக்கிறார்கள்.

ஆக ‘பாய்’ ஒருவர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டாம் என்று கேட்க, பா.ஜ.க ‘ஹிந்துக்கள்’ மட்டும் விடுவித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர். ஒருக்கால் மோடி இருந்தால் “சூப்பர் மேன்” போல காந்தகார் பறந்து விமான பயணிகளை மீட்டு வந்திருப்பார் என்று சொன்னாலும் சொல்வார்கள். உத்தரகாண்ட் வெள்ளத்திலேயே இனோவா காரின் மூலம் 10,000 பேரை காப்பாற்றியவராயிற்றே!

மும்பையில் கசாப் தலைமையிலான தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற போது பாக் சதி என்றும் பாக் நீதிமன்றத்தால் சலாவுதீன் விடுவிக்கப்ப்ட்ட போதும் முதல் ஆளாக கண்டித்த பா.ஜ.கவின் யோக்கியதை இதுதான்.

இனி பா.ஜ.க அம்பிகள் பாக் பூச்சாண்டியை பேசினால், “அம்பிகளே அந்த பூச்சாண்டிகளோடு நீங்கள் கொண்டிருக்கும் கள்ள உறவையும் சேர்த்து சொல்லுங்கள்” என்று கேளுங்கள்!

பா.ஜ.க தேசபக்தி பல்லிளிக்குது!

___________________________

land-grab-arun-jaitleyசெய்தி – 1: “சமூக பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிராமங்களில் வாழும் குடும்பங்களில் மூன்றில் ஒரு குடும்பம் நிலமில்லாமல் கூலி தொழிலாளர்களாக வறுமையில் வாடுகின்றனர்.”

செய்தி – 2: “நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும்.” – மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

_____________________________

தினமணி தலையங்கம்: புராணப் புரட்டால் மிரட்டும் வைத்தி!

ந்தி ஓய்ந்த நேரத்தில் புத்தி மயங்கி உளறும் டாஸ்மாக் அடிமைகளின் பேச்சில் கூட கொஞ்சம் நிதானம் இருக்கும். தினமணி தலையங்கத்தில் என்ன இருக்கும்?

தினமணி வைத்தியின் புரட்டு
வீடுகளை மலிவு விலைக்கு வாங்க ரியல் எஸ்டேட் மாமாக்கள் செய்யும் அதே உத்தியை ஒரு தலையங்கத்தில் ஆன்மீக எஸ்டேட் மாமா செய்திருக்கிறார்.

கோவில் கருவறைக்குள் கலியுக மின்சாரம், நவயுக செல்பேசி வித் கேமரா வசதி, மேட்டுக்குடி மார்பிள் இன்னபிற வஸ்த்துகள் வந்தாலும் சில ஆச்சாரங்களை மாற்றவே கூடாது என்று வக்கணையாக ஆச்சாரம் பேசும் வகையறாக்களில் வைத்தியும் ஒருவர். அதன்படி ஒரிசா பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் நடந்த ஒரு அபகீர்த்தி குறித்து கடிந்து கொள்கிறார்.

பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்மாவாசை நள்ளிரவில் கருவறையில் உள்ள மூர்த்தங்கள் அல்லது சில வேப்பமரக் கட்டைகளை மாற்றுவார்களாம். அப்போது யாருக்கும் தெரியாத ஒரு ரகசியப் பொருளை பட்டாடை பொத்தி பழைய கட்டையிலிருந்து புதிய கட்டையில் வைப்பார்களாம். தலைமை குருவே கண்கட்டி இந்த “நவகளேபர நிகழ்வில்“ வித்தையை செய்வாராம்.

இந்த ஆண்டு அந்தச் சடங்கு சிலமணிநேரம் கடந்து அதிகாலையில் வெளிச்சத்தில் நடந்ததாம். அந்த இருட்டுப் பொருளை – பிரம்ம பதார்த்தம் – தூக்கி வைத்தவர், அது ஏதோ முயல் குட்டி போல அசைவதை உணர்ந்தேன் என்று சொன்னாராம். “இப்படி முக்கியமான சடங்கை அதற்குரிய நேரத்தை விடுத்து செய்வது பாரிய தீங்கு” என்று எச்சரிக்கிறார் வைத்தி.

“அந்த ரகசிய பொருள், அணு உலைக் கழிவு போல முக்கியமான ஒன்றாக இருக்கும் அதே நேரம் அது நன்மை தரக்கூடிய கதிர்வீச்சுப் பொருளாகவும் இருக்கலாம், ஒளிபட்டால் அதன் தன்மை மாறிவிடும்” என்றெல்லாம் நோபல் அறிவியலாளர்களே நொந்து போகும் வண்ணம் அறிவியலுக்கு சவால் விடுகிறார் வைத்தி.

கோவில் கருவறை நிலவறைகளில் ஐந்து தலை நாகம், பத்து தலை பூதம், பதினைந்து கை காஞ்சனா காத்து வருகிறது என்பதெல்லாம் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலில் பார்த்து விட்டோம். இப்படி பயமுறுத்தியே ராஜபரம்பரை பல பல மில்லியன் நகைகளை ஸ்வாகா செய்துவிட்டது. இப்போது பூரியில் இருக்கும் அந்த பிரம்ம பதார்த்தத்தை யாரும் பார்க்கவில்லை என்றாலே போதும், அந்த பொக்கிசத்தை யார் வேண்டுமானலும் சுடலாம் இல்லை ஏற்கனவே சுட்டிருக்கலாம்.

வீடுகளை மலிவு விலைக்கு வாங்க ரியல் எஸ்டேட் மாமாக்கள் செய்யும் அதே உத்தியை ஒரு தலையங்கத்தில் ஆன்மீக எஸ்டேட் மாமா செய்திருக்கிறார். இதுதான் நான்காவது தூணின் வேலை என்றால் நமக்கு தூணும் வேண்டாம் துரும்பும் வேண்டாம்.

____________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்