நீட் தேர்வை ரத்து செய்! சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
“நீட் தேர்வை ரத்து செய்” என்று மாணவர்களின் போர்க்குரல் தமிழகமெங்கும் பற்றிப் பரவுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக -வின் அடிமை எடப்பாடி அரசு திணறி வரும் சூழலில் தமிழகக் கல்லூரி வாயில்களில் போலிசைக் குவித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சென்னை கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நேற்று ( 11.09.2017) காலை 9.00 மணிக்கு கோவூர் துணை மின் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நயவஞ்சகமான முறையில் “இங்கே போராட்டம் நடத்த கூடாது. கல்லூரிக்குள் சென்று போராட்டம் நடத்துங்கள்” என்று மாணவர்களிடம் கூறியது போலிசு.
“எங்கள் கல்லூரி பிரச்சனை என்றால் நாங்கள் கல்லூரிக்குள் போராடுவோம். இது பொதுப்பிரச்சனை. நாங்கள் இங்கே தான் போராடுவோம்” என்று மாணவர்கள் கூறியதால், உங்களை கைது செய்து FIR போட்டுவிடுவேன் என்று போலீசு மிரட்டியது.
கடந்த 4 -ம் தேதி திங்கட்கிழமையன்று இக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் முன்னணியாக இருந்த மாணவி பவித்ராவை நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. இன்று நடந்த போராட்டத்தில் முன்னணியாக இருந்த மகாலிங்கம் என்ற மாணவரைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றியது போலிசு.
இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களை அச்சுறுத்தி கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து சென்ற போலிசு, “நீங்கள் போராடுவது தவறு. உங்களுக்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் போராடியதற்காக உங்களை கைது செய்ய முடியும். ஆனால் உங்கள் வாழ்க்கை பாழாகி விடக் கூடாது என்று விடுகிறேன்” என அறிவுரை கூறி ”இனிமேல் போராடினால் கைது செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளது.
கல்லூரி நிர்வாகமோ, “நீங்கள் போராட வேண்டும் என்றால் அனிதாவிற்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரேயர் பண்ணுங்கள்” என்று கூறி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் செல்லும் வழியெங்கும் போலிசை அனுப்பியது.
மாணவர்களோ, “நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாங்கள் போராடுவோம்” மீண்டும் போராட்டம் நடத்துவது சம்பந்தமாக நாளை கல்லூரி வந்தவுடன் பேசி முடிவு எடுப்போம் என்கிறார்கள்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
-வினவு செய்தியாளர்
***
விருதை திரு.கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும்! நீட் தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கப்பட வேண்டும்! என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றும் (11.09.2017) வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும், உள்ளிருப்பு போராட்டமும் நடைப்பெற்றது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருதை.
***
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ! மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும் !! என்றும் தொடர்ந்து 6 – வது நாளாக (11.09.2017) விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் (RSYF) ஒருங்கிணைப்பில் வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
நீட்டினால் உயிரிழப்பு!
எளியவர்கள் தங்கள் தலைகளை மேலே நீட்டினாலே உயிரிழப்பு ஏற்படுத்தப்படும் இது எழுப்படாத விதிதானே? இதற்கு ஏன் இவ்வளவு குரல்கள் பல கோணங்களிலிருந்தும் ஒலிக்கின்றன? இதற்கு காரணம் ,இப்பொழுது பாதிப்புக்குள்ளானது தலித்துகள் மட்டுமல்ல ; ஒட்டுமொத்த தமிழகமும்!
இக்குரல்களில் சில திரைநடிகர்களின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் காணும்பொழுது வெறுப்பும் , அயர்ச்சியும் ஏற்படுகிறது.
தன்னிடமுள்ள கலைத்திறமையை மட்டும் நம்பாமல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெரும்பான்மை சாதிகளை சார்ந்த நாயகனாக தன்னைக் காட்டி காலம் காலமாக பிழைப்பு நடத்தும் கமல், ரஜினி உள்ளிட்ட இன்றைய கதாநாயகர்கள் வரை, சாதி ஒழிப்பைப் பற்றி பேசுவதை சகிக்கமுடியவில்லை. இதன் விளைவு, உண்மையான சமூக அக்கரையோடு தங்கள் படங்களில் சாதியைத் தவிர்த்து, நாயகனை ஒரு பொது மனிதனாகக்காட்டி படங்கள் எடுக்கும் திரு.சேரன்,திரு.பார்த்திபன்,திரு.ராம்,திரு.நாசர்,திரு.மிஷ்கின்,திரு.சீமான் மற்றும் இன்னும் பல இளம் திரைக்கலைஞர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்காமல் போய்விடுகிறது.
அனிதாவின் கனவு நனவாகாமல் மரிக்கப்பட்டது. ஆனால் ரோஹித் வெமூலாவின் நனவாகிய கனவு மரிக்கப்பட்டது. உங்கள் குரல்கள் அப்பொழுதே ஓங்கி ஒலித்திருக்க வேண்டும். ஆனால் ஒலிக்கவில்லை. காரணம் ரோஹித்தின் மரணத்தை நீங்கள் தலித் பிரச்சினை என்று அணுகியததால்தான்!
நாங்கள் நிஜத்திலும் நாயகனாக முடியாது; திரையிலாவது நாயகனோடு பொருத்திப்பார்த்து மகிழலாம் என்றால் அவரோ மீசையை முருக்கிக்கொண்டு சாதிப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்!
கற்பனையில் கூட நாங்கள் நாயகர்கள் ஆக முடியாது எனும்பொழுது கோபமும், விரக்தியுமே மிஞ்சுகின்றன!
முடிவாக ஒன்று,ஆகச்சிறந்த கலைஞன் சிவாஜிகணேசன் என்று தன் திரைப்படங்களில் தன் சாதியைத் தூக்கிப்பிடித்தாரோ அன்றே அவரின் அரசியல் வாழ்வு முடிந்துபோனது. இதனை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் பேசவோ,எழுதவோ வேண்டும் என்றால் முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள், முடியவில்லை என்றால் உண்மையான சமூக அக்கறையுடன் செயல்படும் மேற்சொன்னவர்கள் போன்ற மனிதர்களின் பின்னால் நில்லுங்கள்!
துரை.அனந்தகிரி, இலால்குடி,திருச்சி.