மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் ஆ.மேலப்பட்டியில் சென்ற 05.09.2017- அன்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் உசிலம்பட்டி கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் அ.சந்திரபோஸ் அவர்களுக்கு உசிலம்பட்டியில் கடந்த 28.09.2017 அன்று மாலை 6 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் நடந்த இந்த நினைவஞ்சலி பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன், மக்கள் அதிகாரம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், மக்கள் அதிகாரம் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன், செக்காணூரனி மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர் ஆசை, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர் வழக்கறிஞர் பா.நடராஜன், பு.மா.இ.மு. தோழர் ராஜ்குமார், மற்றும் 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் திரு.பெருமாள், உசிலம்பட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் திரு இ.சுதந்தரம் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினர்.
தோழர் குருசாமி தனது தலைமை உரையில் “சிறு வயதில் தன்னை அமைப்பில் இணைத்துக் கொண்டு, தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் அமைப்பை உயர்த்திப் பிடித்து செயல்பட்டு மறைந்த தோழர் சந்தரபோஸ், அமைப்பு போராட்டங்கள் அனைத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இன்றுவரை விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி வந்தார். இந்த அரசு அனைத்து போரட்டங்களையும் ஹிட்லர் போல ஒடுக்கி வரும் இந்த சூழ்நிலையில் தோழர் சந்திரபோஸ் அவர்விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த உறுதி ஏற்போம்!” என்று கூறினார்.
இரங்கல் உரை நிகழ்த்திய தோழர் ஆசை தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் உடன் நான் நெருக்கமாக இருந்தவன். அவர் நினைவுகளைப் பற்றி பேச ஒரு நாள் போதாது. உசிலை பகுதியில் இவரை தெரியாதவர்கள் இல்லை. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழுவில் 1000 பேருக்கு மேல் உறுப்பினர் சேர்த்துள்ளார். இவருடைய முழக்கங்கள் தீப்பொறி போல இருக்கும். தவறு செய்யும் போது கடுமையாகக் கடிந்து கொள்வார், மாலையில் தட்டிக்கொடுத்து தவறுகளை திருத்துவார். சிறுவர்களிடம் அன்பாய் பழகுவார். பகத்சிங் பிறந்தநாளில் அவரது நினைவஞ்சலி கூட்டம் நடந்தது சிறப்பு.” என்று கூறினார்
58 கிராம கால்வாய் பாசன செயலாளர் ஐயா பெருமாள் தனது உரையில் “தோழர் சந்திரபோஸ் இந்த பகுதிக்கு சோசலிச டிரான்ஸ்பார்மராக செயல்பட்டு வந்தார். தோழரது ஊக்கமும் ஆக்கமும் எங்களை தொடர்ந்து போராட தூண்டும் விதமாக இருக்கும். நக்சல்பாரிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்” என்று கூறினார்.
பு.மா.இ.மு. மதுரை தோழர் ராஜ்குமார் தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் இறந்த செய்தி எங்கள் பகுதிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எங்களால் நம்ப முடியவில்லை. போராட்ட தருணங்கள்தான் மகிழ்ச்சி என்று மார்க்ஸ் கூறுவதுபோல் தோழர் போராட்டங்களோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மறைந்துவிட்டார். தோழரின் அர்ப்பணிப்பு குணங்களை நெஞ்சிலேந்துவோம்” என்று கூறினார்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை வழக்கறிஞர் நடராஜன் தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் 15 வயதில் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக மாற்றத்திலும், குடும்பத்தை அரசியல்படுத்துவதிலும் முழுமையாக செயல்பட்டு வந்தவர். அவருடைய இந்த மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறினார்
தி.மு.க. உசிலை ஒன்றிய செயலாளர் திரு இ.சுதந்தரம் தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் எனக்கு தோழராகவும் உறவினராகவும் நெருக்கமாக இருந்தவர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவருடைய துடிப்பான செயல்பாட்டை என்னால் மறக்க முடியாது. நகராட்சி ஆணையாளரிடம், ’நாங்கள் முதலாளி, நீ வேலைக்காரன், பதில்சொல்’ என்று சமசரமின்றி துணிச்சலாக பேசுவார் அவருடைய மறைவு உசிலை பகுதிக்கு பெரும் இழப்பாக உள்ளது” என்று கூறினார்.
சிவகங்கை தோழர் நாகராஜ் தனது இரங்கல் உரையில் “தோழர் சந்திரபோஸ் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக பம்பரமாக செயல்படுபவர். முல்லை பெரியாறு பிரச்சனையில் நான் இந்தப் பகுதிகளில் 3 நாள் பிரச்சாரத்தில் இருந்தபோது நேரடியாக பார்த்து பழகிய அனுபவம் உள்ளது. வாழ்க்கை என்பது உயிரோடு இருத்தல், மக்களுக்காக வாழ்தல் இந்த மக்கள் நாம் இறந்த பின்பும் நம்மைப் பற்றி பேசவேண்டும், சமூக மாற்றத்திற்காக நம்முடைய அர்ப்பணிப்பு தியாகம் இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனைகள் இருந்தும் பகுதி பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தவர். போராட்டத் தருணங்களில் அவர் நம்முடன் எப்போதும் இருப்பார்” என்று கூறினார்.
தோழர் கதிரவன் தனது உரையில் “போஸ் சாகவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கு இந்த அரசும் ஆளும் வர்க்கமும்தான் காரணம். போஸ் ஒரு போர்வீரன் போல செயல்பட்டவர். சுகாதாரத்தைப் பற்றி பேசும் மோடி ஒரு செப்டிக் டேங்க், அவனை பி.ஜே.பி தூக்கி சுமந்து கொண்டிருக்கிறது முதலில் மோடியை சுத்தம் செய்யுங்கள், மோடியை அம்பலப்படுத்திய போஸ் காட்டிய வழியில் நடப்போம்” என்று கூறினார்.
தோழர் மோகன் தனது உரையில் தோழர் சந்திரபோஸ் தனக்காக வாழவில்லை. நல்ல பண்புகளோடு வாழ்வது உலகத்திலேயே பெருமையானது. பொது வாழ்க்கையில் ஈடுபடுவதே சந்திரபோஸ் சிறப்பு. எப்போதும் நாட்டைப் பற்றி சிந்திப்பது அவரது பண்பு. ஒரு தோழருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்துவது நமது கடமை அந்த அடிப்படையில் நாம் இங்கு தோழர் சந்திரபோஸ் -க்கு கூட்டம் நடத்துகிறோம்.
போஸ் இறந்தவுடன் அவருக்கு இறுணி சடங்கு நடத்த வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தபோது தோழர் சந்திரபோஸ் மனைவி துணிச்சலோடு அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டாம் அவர் சார்ந்த அமைப்பு விதிகளின்படிதான் அவரை அடக்கம் செய்ய வேண்டும். அதுதான் என் கணவரின் விருப்பம் என்று கூறும் அளவுக்கு தனது மனைவியை அரசியல் கண்ணோட்டத்தில் வளர்த்துள்ளார் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. தோழர் சாகவில்லை அவரின் நினைவுகளை நமது இதயத்தில் வைத்து தொடர்ந்து போராடுவோம், அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம்” என்று கூறினார்.
வழக்கறிஞர் தோழர் ராஜூ தனது இரங்கல் உரையில் “புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் சென்று போராடிய நம் தோழர் சந்திரபோஸ் இறந்து தியாகி ஆனார். அவர் தனக்கு இப்படி ஒரு வியாதி இருக்கிறது என்று தெரிந்திருக்கலாம், நோயை குணப்படுத்த மருத்துவ கொள்ளைக்குப் பயந்து நோயை மறைத்திருக்கலாம். மக்கள் அதிகார அமைப்பிற்கு தெரிந்திருந்தால் அவரது நோயைக் குணப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.
ஒவ்வொரு தோழரும் அமைப்பில் வந்து செயல்பட நீண்ட காலம் தேவைப்படுகிறது. வளர்ந்த தோழரை இழக்கும் போது அது அவர் குடும்பத்திற்கு மட்டுமன்றி இந்த பகுதிக்கு மட்டுமன்றி இந்த நாட்டிற்கே மிகுந்த இழப்பாகிறது. இறந்த தோழர் சந்திரபோஸ் அவர்களின் குடும்பத்தை எங்கள் அமைப்பு பார்த்துக் கொள்ளும்” என்று பேசினார். அது மறைந்த தோழர் சந்திரபோஸ் அவர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
ஒவ்வொரு தோழரும் வைரம் போன்று உறுதியானவர்கள் அவர்களை பட்டை தீட்டி மேலும் உறுதியானவர்களாக வளர்ப்பது நமது அமைப்பு. உசிலை பகுதியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டார் போஸ் அதை நிரப்ப இன்னொருத்தர் வருவார். இருந்தபோதிலும் தோழர் சந்திரபோஸ் நம்மை விட்டுச் சென்றதற்கு யார் காரணம்?. இந்த அரசுதான். போஸ் இறப்பில் நாம் சபதம் ஏற்போம் மருத்துவ சிகிச்சை இல்லாமல் இனிமேல் ஒரு தொழிலாளி கூட சாகக்கூடாது என்று.
அரசு மருத்துவமனைகளுக்கு நூறு பேரைத் திரட்டி மொத்தமாகச் சென்று நவீன மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் கொண்டு வந்தால்தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தால் இந்த அரசு உடனே பணியும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், நீட் தேர்வில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி வர்க்கம் தமிழகத்திற்குச் சொந்தமான அனைத்து மருத்துவ சீட்களையும் அள்ளிக்கொண்டு நமது வரிப்பணத்தில் படித்துவிட்டு யாருக்கு சேவை செய்யப்போகிறார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளையும் மூடிவிட்டு தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் கையில் மருத்துவத்துறையை ஒப்படைக்கும் நோக்கம் தான் இந்த நீட் தேர்வு.
அனைத்து இடங்களிலும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அனைத்து தொழிலாளிகளும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மத்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் போராட்டத்தை ஒடுக்கும் யுத்திகளை மேற்கொண்டு வருகிறது. தோழர் சந்திரபோஸ் போன்ற தோழர்கள் இந்த மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் தோழர் சந்திரபோஸ் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம்.
இறுதியாக தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினார்கள்.
தோழர் சந்திரபோஸ்-க்கு செவ்வணக்கம் !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலம்பட்டி.
—————————————————————
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி