Thursday, January 16, 2025
முகப்புசெய்திஇந்தியாமும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !

மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !

-

பிறந்து சில நாட்களே ஆன தனது கைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அந்த தாய். மார்ச் 6 -ம் தேதி கிளம்பியது அந்த நீண்ட நடைபயணம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் துவங்கிய பயணம் ஐந்து நாட்களில் சுமார் 180 கிலோ மீட்டர்களைக் கடந்து மார்ச் 11 -ம் தேதி மும்பை நகரை அடைந்துள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பெரும்பாலானோர் வயதான விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள். ஒவ்வொருவரின் பின்னும் ஏதோவொரு கதை இருக்கத்தான் செய்கிறது.

வற்றிய மார்பில் பாலைத் தேடி ஏமாந்து போய்க் கதறியழுத தனது குழந்தையை நினைத்துப் பார்க்கிறார் அந்த இளம் தாய். கடந்த சில நாட்களாக கூலி வேலைக்குச் செல்லாததால் சில நூறு ரூபாய்கள் இழப்பு. எனினும், குழந்தையைத் தெரிந்தவர்களின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு பேரணியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். “உங்களுக்கென்று நிலம் ஏதுமில்லையே பிறகு ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தீர்கள்?” என்ற கேள்விக்கு “ஆம் நிலம் இல்லை தான். நான் கூலி வேலை தான் செய்கிறேன். ஆனால், விவசாயம் அழிந்து போனால் எனது வாழ்க்கையும் அழிந்து போகும் என்பதாலேயே பேரணியில் கலந்து கொள்ளக் கிளம்பினேன்” என பதிலளித்துள்ளார்.

கோலி மகாதேவ் எனும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர் வாகெரே. விவசாயிகள் பேரணியைக் குறித்துக் கேள்விப்பட்ட இவர் நாசிக்கில் உள்ள நாலேகாவ்ன் எனும் தனது கிராமத்தில் இருந்து சுமார் 28 கிலோ மீட்டர் நடந்து வந்து பேரணியில் இணைந்துள்ளார். பல தலைமுறைகளாக வனத்தில் உள்ள நிலத்தில் பயிர் செய்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அந்த நிலங்களின் மேல் எந்த உரிமையும் இல்லை. வன உரிமைச் சட்டம் 2006 -ன் படி பழங்குடி விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனினும், அந்தச் சட்டம் காகிதத்தில் மட்டும் இருப்பதால் மக்களுக்கு இதுவரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

கோலி மகாதேவ் எனும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த 65 வயது விவசாயி சங்கர் வாகெரே

வாகெரேவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நெல் பயிரிடுகின்றனர். பருவ மழை பொய்க்காத காலங்களில் ஒரு ஏக்கருக்கு 15 குவிண்டால் நெல் விளையும். அரசு ஒரு குவிண்டாலுக்கு 1000 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது எனக் குறிப்பிட்ட வாகெரே, ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதற்கே 12 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்கிறார். பருவ மழை பொய்த்துப் போகும் சமயங்களில் உற்பத்தியாகும் அளவு குறையும், அதே சமயம் நெல்லுக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்பட மாட்டாது. பெரும்பாலான விவசாயிகள் கடன் வலையில் வீழ்வதும், திருப்பிக் கட்ட வழியின்றித் தற்கொலை செய்து கொள்வதற்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. உலகிலேயே தனது உற்பத்திப் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையில்லாத ஒரே உற்பத்தியாளர் விவசாயி தானென்கிறார் பேரணியில் கலந்து கொண்ட இன்னொரு விவசாயி.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் செங்கொடி ஏந்திக் கிளம்பியிருக்கும் இந்தப் பேரணி உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் இரவு உறக்கத்திற்காகவும் மட்டுமே நின்று பின் துவங்குகின்றது. விவசாயிகளும் பழங்குடியினரும் உணவுக்கென கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பழைய செய்தித்தாள்களில் சுற்றிக் கொண்டு வரப்பட்ட வறண்ட சப்பாத்தியை உண்கின்றனர்; சில முதியவர்கள் தங்கள் மூதாதைகளை நினைவூட்டும் நாட்டுப்புற பாடல்களைப் பாடுகின்றனர்.

மார்ச் 11 -ம் தேதி மும்பையின் எல்லையைத் தொட்ட பேரணியினர் காலை நேரப் போக்குவரத்து நெரிசல் தீரும் வரை காத்திருந்து விட்டு மதிய வேளையில் ஆசாத் மைதானத்தை நோக்கிச் சென்றுள்ளனர். “நான் பள்ளிக்கூடத்திற்கே சென்றதில்லை. ஆனால், கல்வியின் முக்கியத்துவம் எனக்கும் தெரியும். பிள்ளைகளுக்கு இது பரீட்சை நேரம். அவர்கள் படிக்கச் செல்லும் நேரத்தில் எங்களது பேரணி நகருக்குள் புகுந்து போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி விடக்கூடாதே என்பதற்காகத் தான் காத்திருந்தோம்” என்கிறார் ஆசாத் மைதானத்தை வந்தடைந்த விவசாயி ஒருவர்.

முதலாளித்துவ பத்திரிகைகள் இந்தப் பேரணியை “செங்கடல்” (Sea or Red) என வருணிக்கின்றன. சிபிஎம் கட்சி சார்புடைய விவசாய சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பேரணி விவசாயக் கடன் ரத்து, பழங்குடியினருக்கு நில உரிமை, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் மும்பையைச் சூழ்ந்துள்ளது “செங்கடல்”. மார்ச் 12 -ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக பேரணியின் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மார்க்சிஸ்டு கட்சியின் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் அதன் பாராளுமன்ற சட்டமன்ற “புரட்சியின்” வரம்புகள் விவசாயிகளின் இந்தப் பேரெழுச்சியை சிதைத்து விடும் அபாயம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும், மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணியானது அடிப்படையில் விவசாயிகளின் பொருளாதாய வாழ்க்கையின் சீரழிவில் இருந்து தோன்றி இருப்பதால் மார்சிஸ்டுகள் விவசாயிகளைத் தொடரும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

விவசாயிகளின் பேரணியை மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவரே நேரில் சென்று வரவேற்று இருக்கிறார். சிவசேனா, தேசியவாத காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்துப் பேசி வருகின்றன. இந்தச் சூழலில் ஒருசில தற்காலிக கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு இப்போராட்டம் முடித்துக் கொள்ளப்படக் கூடாது.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை அடையும் வரை விடாப்பிடியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே பேரணியில் பல்வேறு துன்பங்களுக்கு இடையில் கலந்து கொண்டிருக்கும் விவசாயிகள் பழங்குடியினரின் தியாகங்களுக்கு நியாயம் சேர்ப்பதாக இருக்கும்.

மேலும் :

  1. வறட்சியை தவிர்க்க நதிகளை இணைக்க அரசு முயற்சி செய்தால் அதை கூடாது என்று தடுப்பது

    விவசாயிகளுக்கு கடன் வேண்டும் ஆனால் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்க கூடாது அதை தள்ளுபடி செய்ய வேண்டும். கேட்டால் அம்பானி அதானி என்று அளந்து விட வேண்டியது… அவன் தப்பு செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன், தப்பு செய்வது தான் கம்யூனிஸ்ட்களுக்கு அழகு என்று பிரச்சாரம் செய்வது.

    கம்யூனிஸ்ட்களின் நோக்கம் பிரச்சனையை தீர்ப்பது அல்ல, அவர்களின் நோக்கம் பிரச்சனையை மேலும் மேலும் தூண்டி நாட்டை நாசம் செய்வது

  2. மஹாராஷ்ட்ரா அரசு பணிந்தது. மகிழ்ச்சி.

    இந்த போராட்டம், பேரணி தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டத்தின் தொடர்ச்சியாக கருதலாம். அவர்களுக்கும் விரைவில் வெற்றி கிடைக்கும்.

    எப்படி…?

    அவர்கள் தனியாக போராடாமல் மற்ற மாநில விவசாயிகளையும் மற்றும் கம்யூனிஸ்ட்களையும் எதிர் அரசியல் கட்சிகளையும் தமக்கு ஆதரவாக களத்தில் நிற்கச் செய்யனும்.

    ஆமாம்…! ஏன் எந்த கம்யூனிஸ்ட்களும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை.

  3. ஏம்பா மணிகண்டா ! உனக்கு ஏன் இவ்வளவு குரூரம் ?. மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும், மானங்கெட்ட அம்பானி, அதானி திருடர்களும் ஒன்றா ? நீங்கள் கட்டிய நர்மதா அணையினால் தண்ணீர் பிரச்சனை விவசாயிகளுக்கு தீர்ந்ததா? அல்லது கரும்பு மற்றும் மது முதலாளிகளுக்கு தண்ணீர் கிடைத்தா ?. விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட போராடும் போது, தண்ணீர் இல்லை – நான் சிறுநீர் கழித்துதான் தண்ணீர் தரவேண்டும் என்று திமிராக பேசிய அமைச்சர்கள் இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா ?

  4. ஆதவன் நான் திரும்ப வாங்கிய கடனை கட்டிவிடுகிறேன் என்று சொல்லி தான் ஒவ்வொருவரும் கடன் வாங்குகிறார்கள், இதில் அம்பானி, விவசாயி என்று எந்த வித்தியாசமும் கிடையாது.

    ஒரு பகுதியில் ஒரு வருடம் விவசாயம் சரியாக நடக்கவில்லை என்றால் மத்திய அரசும் மாநில அரசும் அதற்கான இழப்பீடுகள் மானியங்கள் வழங்குகின்றன, மத்திய அரசு நேரடியாக நம் வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறார்கள் மாநில அரசு கையில் பணமாக கொடுக்கிறார்கள். இது தவிர பயிர் காப்பீடும் இருக்கிறது.

    ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் எங்கள் கிராமத்தில் எங்களுக்கு பூர்விகமாக ஒரு வேலி (21.5 மா) நிலம் இருக்கிறது சென்ற வருடம் நான் சனி ஞாயிறு ஊருக்கு சென்று விவசாயம் செய்ததில் எனக்கு கிடைத்த விவசாயம் வருமானம் (செலவுகள் போக) வெறும் எட்டாயிரம் ரூபாய். இதற்காக நான் யாரையும் குறை சொல்லவில்லை, எனக்கு அடிப்படையில் விவசாயம் பார்க்க தெரியவில்லை.

    நீங்கள் சொல்வது போல் நான் வெறும் விவசாயம் மட்டுமே பார்த்து வேறு வருமானம் இல்லையென்றால் நிச்சயம் நீங்கள் சொல்வது போல் கடன் வாங்கி தற்கொலை செய்து கொண்டு இருப்பேன். ஆனால் அரசாங்கம் (மத்திய மாநில அரசுகள்) எனக்கு கொடுத்த பணமே கிட்டத்தட்ட 45,000 ரூபாய்க்கு மேல்.

    ஒரு விவசாயி என்னை போல் மிக மிக மோசமாக (கேவலமாக) விவசாயம் பார்த்து இருந்தால் கூட அவர்களுக்கான அடிப்படை தேவைகளுக்கான வருமானம் நிச்சயம் கிடைக்கிறது.

    அதனால் விவசாயி இதனால் தற்கொலை செய்துகொள்கிறான் என்பதை ஏற்க முடியவில்லை அதற்கான கரணம் வேறாக இருக்கும், தனது வருமானத்திற்கும் மேலாக செலவு செய்து கடன்படுவது இன்னொனன்று விவசாயிகளிடம் இருக்கும் குடி பழக்கம், பலர் வீட்டில் சாப்பாட்டிற்கு வழியில்லை என்றால் கூட கடன் வாங்கி (அல்லது ஏமாற்றி) குடிக்கிறார்கள். இல்லை என்று சொல்ல வேண்டாம் என்னிடமே பலர் இவ்வாறு பணம் வாங்கி இருக்கிறார்கள்.

    விவசாய கடன் வாங்கினால் கட்ட தேவையில்லை என்ற நிலையை தான் கம்யூனிஸ்ட்கள் உருவாக்குகிறார்கள். நிச்சயம் இது தவறு.

    அடுத்தவன் தப்பு செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன் என்று தான் உங்களை போன்றவர்கள் தப்பை நியாயப்படுத்துகிறார்கள்.

  5. //ஒரு பகுதியில் ஒரு வருடம் விவசாயம் சரியாக நடக்கவில்லை என்றால் மத்திய அரசும் மாநில அரசும் அதற்கான இழப்பீடுகள் மானியங்கள் வழங்குகின்றன, மத்திய அரசு நேரடியாக நம் வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறார்கள் மாநில அரசு கையில் பணமாக கொடுக்கிறார்கள். இது தவிர பயிர் காப்பீடும் இருக்கிறது.//

    அய்யா மணிகண்டன் ! எங்களுக்கும் விவசாய மானாவாரி நிலம் இருக்கின்றது. இத்தனை வருடத்தில் ஒரே ஒரு ரூபாய் கூட அரசிடமிருந்து வாங்கியது இல்லை. ஆட்டு லோன் போட்டு அதையும் வட்டியுடன் கட்டினோம். உங்களுக்கு மட்டும் எப்படி?

    //இதில் அம்பானி, விவசாயி என்று எந்த வித்தியாசமும் கிடையாது.// அப்படியா வாராக் கடனில் முதலில் இருக்கும் அம்பானியிடம் பணிந்து நடக்கும் அரசு, விவசாயிகளை போலிசை வைத்து அடிக்கிறதே !! தஞ்சாவூர் மகிந்திரா டிராக்டர் பிரச்சனை தெரியுமா உங்களுக்கு ? ஆனால் அம்பானிகும் அதானிக்கும் கடனை அடைக்க கடன் கொடுக்கிறார்கள்.

    // அதனால் விவசாயி இதனால் தற்கொலை செய்துகொள்கிறான் என்பதை ஏற்க முடியவில்லை //

    உங்களுக்கு இது கொடுரமாக தெரியவில்லை. ஒவ்வொரு விவசாயியும் கடிதம் எழுதி வைத்து விட்டு, ஏன் – தனது மரணத்திற்கு பின்னால் கடனை அடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து விட்டு குடும்பத்தை நிராதரவாக விட்டு விட்டு இறந்து போகிறார்கள். தமிழக அரசு சொல்வது மாதிரி – விவசாயிகள் குடும்ப பிரச்சனைக்கு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கூசாமல் சொல்கிறீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க