Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 442

மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையேற்று நடத்தினார். இதில் தோழர் மருதையன் உரையாற்றினார்.

அவரது உரையில், “ உண்மையிலேயே மோடியைக் கொல்ல சதி இருக்கிறதா? உள்துறை அமைச்சகம் மோடியை பாதுகாக்க ஒரு தனி படை அமைத்து இருக்கிறது. அமைச்சர்கள் கூட அனுமதி இல்லாமல் மோடியை பார்க்க போக முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு. தமிழிசையை பார்த்து ஒரு பெண் ”பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்றால் உடனே கொலை செய்து விடுவார்கள் என்று கூவுகின்றனர். நாயை தெருவில் பார்த்தால் கடித்து விடுமோ என்று அஞ்சுவோம். அதுவே திருடனாக இருந்தால் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சுவான். அந்த 2-வது பயம்தான் இவர்களுக்கு. சோஃபியா முழக்கமிட்ட நேரத்திலே அதை வாங்கி பின் இருந்தவர்களும் முழக்கம் போட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

உச்சநீதிமன்றம் இந்த 5 பேரை முதலில் 6 நாள் வீட்டுக் காவலில் வைத்தார்கள். முதலில் இவர்களுக்கும் பீமா கோரேகானில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவர்கள் மீது வழக்கும் இல்லை. ஆனால் இதை நீதிபதி கேட்டால் போலீசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

காவல் நிலையத்திற்கு போனாலே எப்படி பொய் வழக்குகளை ஜோடிப்பது என்று தெரியும். அது போலத்தான் முற்போக்காள‌ர்கள் மீது பல பொய் வழக்குகளை இவர்கள் போட்டு உள்ளனர். பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த 4 ½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சிறு தொழில்கள் அழிவு, கொலை ஆகியவையெல்லாம் முதலில் அதிர்ச்சியூட்டும் செய்திகளாக இருந்தன. பின்னர் அதுவே நமக்குப் பழகிவிட்டது. அவசர நிலை காலகட்ட நடைமுறைகள் அனைத்தும் நமக்கு பழக்கமாக்கப்படுகின்றன. தமிழிசையை அச்சுறுத்திய சோஃபியாவின் குரல், பகத் சிங் நாடாளுமன்றத்தில் குண்டு போட்டு முழங்கினானே, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று, அதே குரல்தான் இதுவும்.

இந்த பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட உடனடியாக களத்தில் இறங்குவோம். இல்லையென்றால் நாம் 1000 ஆண்டு அடிமைத்தனத்திற்கு மீண்டும் செல்ல நேரிடும்” என்று கூறினார்.

**********

க்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும், பத்திரிகையாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பீமா கோரெகான் சம்பவத்தைக் காரணமாக வைத்து, பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், மோடியைக் கொல்ல சதி செய்தனர் என்றும் பொய்க்கதைகளை கட்டியுள்ளது.

மோடி ஆட்சியிலமர்ந்து இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு வந்த மேக் இன் இந்தியா, சுவச்சு பாரத், பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, என அனைத்து திட்டங்களும் தோற்றுப்போய் விட்டன. இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான‌ கூலிப்படைகளை ஆர்.எஸ்.எஸ் இறக்கி உள்ளது. இவர்கள் மூலம்தான் முற்போக்காளர்கள் மீதான் தாக்குதல்களும் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. கட்ந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், அதற்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தபோல்கரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் ஒன்றுதான் என கர்நாடக புலனாய்வு துறை கண்டுபிடித்துச் சொன்னது.

கொலை செய்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வட இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதை மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

உணர்வு பூர்வமாக போராடும் மக்களுக்கு மத்தியில் நாம் விசயங்களை அறிவியல்பூர்வமாக எடுத்துச் சொல்லும்போது போராட்டம் தீவிரமடைகிறது. தூத்துக்குடி போராட்டம் 99 நாள் நடந்த போராட்டம் 100-வது நாள் மட்டும் எப்படி கலவரமாகும் என்று கேள்வி கேட்கிறார்கள். 100-வது நாள் கலவரத்தை அரசுதான் திட்டமிட்டு செய்தது. தமிழிசையை பார்த்து பி.ஜே.பி பாசிச ஆட்சி ஒழிக என்று தூத்துகுடி சோஃபியா முழக்கமிட்டார். அது மிகப்பெரிய குற்றம் போல் கூவுகின்றனர். யார் அந்த தமிழிசை? என்ன நடக்கிறது தமிழகத்தில்? பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, கருத்துரிமைக்கு தடை – இது போன்ற பாசிச ஆட்சி நடைபெறுவதைப் பொறுக்க முடியாமல்தான் விமர்சிக்கிறார். இது தவறா?

மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சியில் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் கேட்டால் உங்கள் மீது ஒவ்வோரு மாவட்டத்திலும் பல வழக்குகள் உள்ளன. மேலும் உங்களைக் குறித்து அலசி ஆராய்ந்ததில் பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. எனவே உங்கள் கூட்டத்திற்கு அனுமது மறுக்கப்படுகிறது. அடக்குமுறை, பாசிசம், அச்சுறுத்தல் என்று  ஜனநாயகமே இல்லாமல் செய்கின்றனர். இதைதான் நாம் விவாதிக்க வேண்டும். அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.” என்று கூறினார்.

  • வினவு களச் செய்தியாளர்

சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ? ஆழி செந்தில்நாதன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை.

ஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு.

தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்றோ இந்தியாவில் ராணுவ ஆட்சி வரவேண்டும் என்றோ இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்றோ கூறுவதுகூட அரசியல்சாசன ரீதியில் குற்றம்தான். இந்தியா என்பது இறையாண்மையுள்ள, ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்றக் குடியரசு. இந்த நாட்டில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு எந்த அடிப்படையில் இயங்கமுடியும்? அல்லது வேறு எந்த மதவாத அமைப்பாவது இயங்கமுடியுமா?

உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் சுயநிர்ணய உரிமையைக் கோருவதே குற்றமாகக் கருதப்படுவதில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளில் இதுபோன்ற முழக்கங்கள் எழுகின்றன. அதற்கென கட்சிகள் இருக்கின்றன. அத்தகையக் கட்சிகள் தேர்தலில்கூட நின்று வெல்கின்றன, ஏன், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்பது குறித்து வெகுசன கருத்தறியும் தேர்தல்களையேகூட நடத்தியிருக்கிறதே? அந்தக் கட்சியை தடைசெய்ததா பிரிட்டன்?

சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இயல்பான உரிமை (natural right). அதைத்தான் இந்திய அரசுமே ஏற்றுக்கொண்ட ஐநா அவையின் விதிமுறைகளும் கூறுகின்றன. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்று தனி அரசு நடத்துவதற்கான உரிமை. ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேரு இத்தகைய உரிமையை இந்தியாவிலுள்ள மாகாணங்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் தரவேண்டும் என்று பேசியவர்தான்.

சுயநிர்ணய உரிமை என்பது விவாகரத்து உரிமையைப் போன்றது என்பார்கள். திருமணமானவர்களுக்கு விவாகரத்து உரிமை இருக்கவேண்டும். அந்த உரிமை இருப்பதானாலேயே அவர்கள் விவாகரத்து செய்துவிடுவதில்லை. மாறாக, சேர்ந்து வாழமுடியாது என்கிற நிலைமையில்தான் விவாகரத்தைப் பற்றி யோசிப்பார்கள். உண்மையில் விவாகரத்து நடந்தால் அதன் பிறகு என்ன ஆகும் என்ற அச்சத்தில், தங்களுடைய போக்குகளை மாற்றிக்கொள்கிற தம்பதிகள் மிகவும் அதிகம்.

சுயநிர்ணய உரிமையின் எளிமையான வெளிப்பாடுதான் தனிநாடு கேட்பது. இணையத்தில் தேடிப்பாருங்கள். உலகில் நூற்றுக்கும் குறைவில்லாத அளவுக்கு தனிநாட்டுக் கோரிக்கைகள் உலவுகின்றன.

திராவிட நாடு கோரிக்கையை கைவிடாவிட்டால் திமுக தடைசெய்யப்படும் என்கிற நிலை ஏற்பட்டது. அப்போது அறிஞர் அண்ணா. 1963 இல் மாநிலங்களவையில் பேசியபோது அண்ணா இரண்டு கருத்துகளை முன்வைத்தார்.

சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாட்டு உரிமை வேண்டும் என்று பேசுவதையே தடைசெய்வது என்பது இந்தியா அரசியல்சாசனம் கூறும் அடிப்படை உரிமைகள் (fundamental rights) என்கிற கோட்பாட்டுக்கே விரோதமானது.

இதைப்பற்றி பேசினாலே அல்லது கோரினாலே இறையாண்மை கெடும் என்கிற வாதம் அடிப்படையிலேயே தவறானது. இந்திய அரசியல்சாசனத்தின் படி இந்தியாவின் அரசியல் இறையாண்மை என்பது இந்தியாவிலுள்ள மக்களிடமே தங்கியிருக்கிறது. அதன் சட்ட இறையாண்மை ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை தில்லியில் மட்டுமே குவிந்திருக்கவில்லை. (Why do you think that our demand endangers

Before answering that we should be very clear about what we mean by sovereignty. The preamble to the Constitution says that the political sovereignty rests with the people. Then legal sovereignty is divided between the Federal Union and the constituent units. Why don’t you take it that our scheme is to make the states still more effective sovereign units? Why don’t you take it in that light? Why do you think that the moment we demand Dravidastan, we are cutting at the root of sovereignty? Sovereignty does not reside entirely in one particular place. – ‘Carry On, But Remember!’ speech by Anna).

திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிற முடிவுக்கு வருகிறார் அண்ணா. ஆனால் அதைப் பற்றி பேசுவதற்குக்கூடத் தடை என்பதை ஏற்க மறுக்கிறார். இறையாண்மை என்பதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்கிறார். இந்த அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கும் கட்சிதான் கண்ணதாசனைக் கைதுசெய்கிறது.

இன்று இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை குறித்து “கவலைக்கொண்டிருக்கிற” எல்லோருமே தனிநாடு கோரும் விஷயத்தை ஒரே விதமாக கைகொள்வதில்லை. சிலரைப் பொறுத்தவரை, தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள்தான் தனிநாடு கோருவது தவறு. மற்றபடி, ஜனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு, ஆயுதம் ஏந்தியப் பாதைக்கு போகாத வரை, தனிநாடு பற்றி பேசுவதோ எழுதுவதோ பரப்புபரைசெய்வதோ பெரிய குற்றமல்ல என்றே நினைக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் குறைந்தது அந்தந்த தேசிய இனங்களில் நூற்றுக்கணக்கான சிறு அமைப்புகள், தனிநபர்கள் இது குறித்து பேசியும் எழுதியும் வருகின்றன. கல்வி மையங்களில்கூட இத்தகைய கருத்துகளை முன்வைப்பவர்கள் செயல்படுகிறார்கள். புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக, ஆசாதி முழக்கம் எழுப்பபட்டது என்று கூறி வலதுசாரிகள் கொந்தளித்தது நினைவிலிருக்கும். அப்போது அது குறித்து கருத்துத்தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, நான் ஆசாதி முழக்கத்தை ஏற்கவில்லை என்றாலும், அதைப் பற்றி பேசுவதே குற்றமல்ல என்றார். (Although I personally disapprove of the slogan for azadi, in my opinion the shouting of such slogans per se, is no crime. So many people in India often shout such slogans. In the past, the advocates of Khalistan did so, as did Nagas and Mizos. In Kashmir today, tens of thousands of people are raising this slogan. In Scotland, many people demand separation from Great Britain, and many people in the French-speaking province of Quebec demand freedom from the rest of Canada. In a democracy, people should be allowed to let out steam, and the government should learn to not over-react.- Markandey Katju, thewire.in, Aug 20, 2016). கட்ஜூ தன் கட்டுரையில் வேறு ஒரு தீர்ப்பையும் குறிப்பிட்டிருந்தார். அது அமெரிக்காவில் நடந்தது.

கம்யூனிஸ்ட்கள் என்றாலே நரவேட்டை ஆடும் அமெரிக்காவில்கூட, கம்யூனிசம் பற்றி பேசுவதே ராஜதுரோகம் என்று கருதப்பட்ட காலத்தில், அதுவும் பனிப்போர் காலத்தில், நீதியரசர் ஹார்லன் பின்வருமாறு ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டார்: “The mere teaching of communist theory, including the teaching of the moral propriety or even moral necessity for a resort to force and violence, is not the same as preparing a group for violent action and steeling it to such action. There must be some substantial direct or circumstantial evidence of a call to violence now or in the future which is both sufficiently strong and sufficiently pervasive to lend colour to the otherwise ambiguous theoretical material regarding communist party teaching.’ (NOTO vs. US (1961).

ஆக, விடுதலை என்றோ புரட்சி என்றோ பேசுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் ஒரு ஜனநாயக நாட்டில் குற்றமாகாது. வன்முறை மூலம் ஆட்சியை அகற்றுவோம் என்று பேசுவது கூட குற்றமில்லை என்கிறார் ஹார்லன். அதற்காக உண்மையிலேயே வன்முறையில் இறங்கினால்தான் குற்றம் என்கிறார். ஆனால் அந்த நாட்டின் விடுதலையின்போது, மக்கள் ஆயுதமேந்தி போராடுவதுகூட உரிமைதான் என்று அமெரிக்க விடுதலையின் தலைமக்கள் பேசியிருக்கிறார்கள். Right to revolt பற்றியெல்லாம் நிறைய எழுதப்பட்டிருக்கிறது.

நம்மைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இன்றைய நிலையில், இது தன்னாட்சி கோரும் காலமே தவிர தனியாட்சி கோரும் காலம் அல்ல என்றே நினைக்கிறோம். ஆனால் தனியாட்சி கோரும் கருத்துரிமையை, அமைப்பு நடத்தும் உரிமையை நாம் காப்பாற்றவே வேண்டும். கருத்துரிமை, கூட்டும்கூடும் உரிமை, சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் எந்த சமரசமும் செய்யமுடியாது. இல்லையென்றால் பாரதிதாசனையும் பெருஞ்சித்திரனாரையும்கூட குற்றவாளிகளாக ஏற்கவேண்டியிருக்கும். அவர்கள் சாகும்வரை விடுதலையைப் பாடினார்கள். பெரியார் கடைசிவரை விடுதலையைப் பேசினார்.

அதைப் போலவே “இந்தப் பிரிவினைவாதிகளை தூக்கில்போடுங்கள்” என்று ஒரு சங்கப் பரிவார நபர் எழுதுகிறார் என்றால் அவருக்கும் அப்படி எழுத உரிமை உண்டு என்றே நாம் கருதவேண்டும். இங்கே ஆர்.எஸ்.எஸ். சட்டபூர்வமாக செயல்படமுடியுமானால், தமிழ்நாடு விடுதலை கோரும் பல்வேறு அமைப்புகளும் சட்டப்படி செயல்பட முடியவேண்டும்.

பிரிவினைக்கு எதிராக பேசும் பா.ஜ.க., வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரும் பல இயக்கங்களோடு இப்போது கூட்டுவைத்திருக்கிறது. அசாமில் இவர்கள் செய்யும் என்ஆர்சி விவகாரங்கள் அனைத்துமே உல்ஃபா போன்ற ‘பிரிவினைவாத’ அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள்தான்.

தேர்தல் ஆவணத்தில்தான் காஷ்மீரின் மக்கள் மாநாட்டுக் கட்சியும் பஞ்சாபின் அகாலி தளமும் பிரிவினையைப் பேசவில்லை. ஆனால் காஷ்மீரியத்தையும் பஞ்சாபியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், பஞ்சாப் விடுதலை கோரும் அல்லது விடுதலைக்காக ஏங்கும் எத்தனையோ பேர் இந்தக் கட்சிகளில் இருக்கிறார்கள். தலைமைகள் அப்படி இல்லையென்றாலும், தொண்டர்களில் பலர் அதே விடுதலைக்கனவுகளோடு இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அவர்களோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டுவைக்கவில்லையா? அப்போது இந்திய தேசிய ஒற்றுமை குலைந்து போய்விடவில்லையா? அப்படித்தானே அகாலிதளத்துக்கு எதிராக, தனிநாடு கோருபவர் எனத்தெரிந்தும் பிந்தரன்வாலேவுக்கு இரகசிய ஆதரவளித்து வளர்த்தார் இந்திரா காந்தி?

தனித்தமிழ்நாடு வேண்டும், அதில் சோஷலிச சமூகத்தை அமைக்கவேண்டும் என்றெல்லாம் கருதுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் எந்த விதத்திலும் குற்றமல்ல, சட்டவிரோதமும் அல்ல.

அது சமூகத்தின் ஒரு பிரிவினரின் விழைவு. அதை இந்த அரசு ஏற்கமறுத்தால் எதிர்த்து பிரச்சாரம் செய்யலாம். அந்த விழைவை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவது என்பதே தவறு என்று பாய்வது முட்டாள்தனம். பாசிசம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்கத்தைப் பார்த்தோம்: “மாடு வேண்டும், மாடு வேண்டும் இல்லையென்றால் நாடு வேண்டும்”. காவிரி பிரச்சினையின்போது இப்படி ஒரு முழக்கம் வந்தது: “தண்ணியக் கொடு, இல்லேன்னா தனியா விடு”. இதெல்லாம் யாரும் சொல்லிக்கொடுத்து வந்தது அல்ல. அப்படி வந்திருந்தாலும் இந்த முழக்கங்கள் லட்சக்கணக்கானவர்களிடம் பரவியவதற்கு யார் காரணம்? வேறு எப்போதையும்விட தமிழ்நாட்டில் இப்போது “பிரிவினைவாதம்” பரவியிருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? – தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசும் அதன் எடுபிடி அரசும்தான் காரணம்.

“நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைத்தான் கைவிட்டோம், ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார் அண்ணா.

“இல்லை, இல்லை, அந்தக் காரணங்களை இப்போது நாங்கள் பல மடங்காக அதிகரித்திருக்கிறோம்” என்கிறது மோடி அரசு.

எது குற்றம்? யார் குற்றவாளி?

– ஆழி செந்தில்நாதன்   

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

10
வில்லவன்

குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.

மனிதகுல வரலாற்றில் திருமணத்துக்கு வெளியேயான காதலும் பாலுறவும் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. ”கணவனே கண்கண்ட தெய்வம்” போன்ற அறிவுரைகள் ”விட்டுட்டு போயிடாதடீ” எனும் மன்றாடலாகவும் இருந்திருக்கக்கூடும். சில சமூகங்களில் மாதவிலக்கின்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே தனி குடிசையில் அமர வேண்டும் என்பது கட்டாயம். அது அவர்களது மாதவிலக்கை மற்றவர்கள் கண்காணிக்கும் ஒரு ஏற்பாடு. விதவைக்கு மொட்டையடிப்பதும், வெள்ளை சீலை உடுத்துவதும் அவர்களை தனித்து அடையாளப்படுத்தத்தான். அழகை குலைத்து வீட்டைவிட்டு ஓடாமல் காப்பாற்ற அல்லது ஓடினால் எளிதாக கண்டுபிடிக்கவும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம். அரசர்கள் போருக்கு செல்கையில் ராணிகளுக்கு பூட்டு போட்ட இரும்பு உள்ளாடை அணிவித்த கதைகள் உண்டு. சுரங்கம் தோண்டி இரகசியக் காதலரை சந்தித்த ராணி வடநாட்டில் இருந்திருக்கிறார். கள்ளக்காதல் எனும் பொருள்கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லை, அங்கே அதனை எக்ஸ்ட்ரா மெரைட்டல் அஃபேர் எனும் அதிர்ச்சியூட்டாத வார்த்தையால்தான் குறிப்பிடுகிறார்கள்.

குன்றத்தூர் அபிராமி, அவரது  குழந்தைகள்.

அம்மாவோ அப்பாவோ பிள்ளைகளைக் கொன்றுவிடும் செய்தியும் நமக்கு புதிதல்ல. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளுக்குப் பிறகு அவை வாரம் இரு முறையேனும் கேள்விப்படும் செய்தியாகிவிட்டது. வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வோர், மனைவியோடு சண்டைபோட்டு அந்த ஆத்திரத்தில் பிள்ளைகளைக் கொன்ற அப்பாக்கள், காதலுக்கு இடையூறாக உள்ள குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்கள் அல்லது கணவனையோ மனைவியையோ கொன்றவர்கள் என எல்லா வகைமாதிரி குடும்பத்துக்குள்ளேயான கொலைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் கொலைகள்தான் அதிகம் நடக்கும். இப்போது உறவுகளுக்குள் நடக்கும் கொலைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன.

பிறகு ஏன் அபிராமி பற்றிய செய்தி பற்றியெரியும் பிரச்சினையானது?

அதன் பின்னிருக்கும் முக்கியமான காரணி, அபிராமியின் செயலில் உள்ள சுவாரஸ்யம். வெகுமக்கள் மனதில் இருக்கும் கலாச்சார நீதிபதியை அச்செய்தி உசுப்புகிறது. வறுமையில் பிள்ளைகளை கொன்றவள் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை. உங்கள் மன நீதிபதியால் அதற்கு ஒரு எளிய தீர்ப்பு சொல்ல முடியாது (அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள முடியாதில்லையா?) சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் தன்னை தேவையின்றி சந்தேகிப்பது பற்றி தோழி ஒருவர் சங்கடப்பட்டுக் கொண்டார். அவர் கணவர் இவரது சம்பளத்தை பெரிதும் நம்பியிருப்பவர்.

”சந்தேகப்பட்டு என்ன செய்கிறார்?” என்று கேட்டேன். ”அடிக்கவோ திட்டவோ மாட்டாரு. ஆனா யாருக்கோ சொல்ற மாதிரி பேஸ்புக்ல எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. மத்த பொம்பளைங்கள திட்டுறமாதிரி என்னை குத்திக்காட்டுவார்” என்றார். (அவரது ஆடைத்தெரிவு ஏனைய ஊழியர்களுடன் சிரித்து பேசுவது மாதிரியான செயல்களை – “தேவடியாளுங்க அடுத்தவங்களை பார்க்க வைக்குற மாதிரி மேக்கப் போடுவாங்க, வேலைக்கு போற பொம்பளைங்க ஏன் அப்படி போகனும்?” இது அவரது வசனங்களின் ஒரு சாம்பிள்).

இந்த வகை வாட்சப்தாசர்கள், சமூகம் சமீபத்தில்தான் கெட்டழிந்துவிட்டது எனத் தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமது கருத்து சரி என நிரூபிக்கும் ஆதாரம் தேவைப்படுகிறது. அபிராமி செய்தி அவர்களது தீர்மானங்களை உரத்து சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது.

மேலும் நமக்கு தினசரி வாழ்வில் சுவாரஸ்யம் மிக்க பொழுதுபோக்குகள் குறைவாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டி.வி. சீரியல்கள் அதனை நிறைவேற்றின. அதில் கள்ளக்காதல், கொலை, கடத்தல் என எல்லாமே வந்தன (சித்தி தொடர் உச்சத்தில் இருந்த போது சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாக குறைந்திருக்கும்). பிறகு நெடுந்தொடர்கள் போரடிக்க ஆரம்பித்த வேளையில் சொல்வதெல்லாம் உண்மை வகையறா நிஜவாழ்வு கள்ளக்காதல், கொலை போன்றவை அவ்விடத்தை ஆக்கிரமித்தன. சும்மா கதை சொல்வது எத்தனை நாள் தாங்கும்? அடுத்து 10 பேரை ஒன்றாக அடைத்து அவர்களது பலவீனங்கள், சண்டைகளை ஒளிபரப்பி வாழ்வை சுவை மிக்கதாக்கினார்கள். ஆனால் அந்த பிக்பாஸும் இப்போது சலிப்புதட்டுவதாக தகவல்.

ஊடகங்களுக்கோ முக்கியமான அரசியல் சமூக பிரச்சினைகள் பொதுவிவாதமாகாமல் தடுக்க வேண்டிய நிர்பந்தம். ரஃபேல் ஊழலையும் பெட்ரோல் விலையேற்றத்தையும் பெரிதாக்கக்கூடாது. ஆனால் தொழில் ஓடியாக வேண்டும். ஆகவே அபிராமியின் செய்தி அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. அதில் பொருந்தாக்காதல் எனும் கிளுகிளுப்பு இருக்கிறது.

நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் நம்மை பாலியல் ரீதியாக கிளர்ச்சியூட்டும்படி வடிவமைக்கப்பட்டவையே. இளைஞர்கள்/ மாணவர்கள் பலர் முதலில் சன்னி லியோனி போன்றோரது ஆபாச வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து அடுத்தகட்டமாக திருட்டுத்தனமான ஸ்கேண்டல் வீடியோக்களையே அதிகம் நாடுகிறார்கள். அது பாலியல் நாட்டத்தில் ஒரு திரில்லை கூடுதலாக சேர்க்கிறது. அதுதான் அபிராமி பற்றிய செய்திகளை பெரிதாக விற்பனையாகவல்ல சரக்காக மாற்றுகிறது. இந்த திரில்தான் திருமணத்துக்கு வெளியேயான காதலின் உடலுறவு நேரத்தை நீட்டிக்கிறது எனவும் அதுவே அந்த உறவின் மீது கூடுதல் போதையேற்படுத்துகிறது என ஒரு உளவியல் பார்வை இருக்கிறது.

காதல் வயப்படுதல் என்பது ஒரு மிதமான கோகைன் அடிமைத்தனத்துக்கு நிகரானது (குறிப்பு : மூளை பாகமான அமிக்டலாவுக்கு நல்ல – மீடியமான – கள்ளக் காதல் என்றெல்லாம் வகைப்படுத்தத் தெரியாது). கிளுகிளுப்பு, திரில், கடைசியில் ஒரு கலாச்சார பாடம் என பெருந்தொகையான மக்களை வசீகரிக்கும் அம்சங்கள் பல இருப்பதால் அபிராமி பாணி செய்திகள் என்பது காட்சி ஊடகங்களுக்கு ஒரு ஜாக்பாட். அதனால்தான் பல கோணங்களில் தக்க பிண்ணனி இசையோடு அச்செய்தியை இறக்குகிறார்கள்.

ஊடகங்களின் ‘எக்ஸ்ரே’ ரிப்போட்டுகள்.

ஆகவே இத்தகைய செய்திகளுக்கு அதிகம் அதிர்ச்சியடைந்து ஆற்றலை வீணாக்காதீர்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். இது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும் என கருதினால், அதற்கான வேறு நியாமான காரணிகள் இருக்கின்றன.

சமூகம் முழுக்க மனிதர்கள் கடுமையான பதற்றத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உணவு, காதல் – காமம் மற்றும் பதட்டம் (ஸ்ட்ரெஸ்) ஆகியவை நமது நடத்தை மற்றும் முடிவுகளின்மீது பெரும் செல்வாக்கு செலுத்தவல்லவை. பெரும்பான்மை குடும்பங்கள் போதுமான அளவு நேர்மறையான சமூகத் தொடர்புகள் அற்றதாக இருக்கின்றன (நமது சமூக ஊடக அடிமைத்தனத்துக்கு அதுவும் ஒரு காரணம்). அரசியல் காரணங்களால் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. நவீனத்தை வலியுறுத்தும் விளம்பரங்கள் பழைய கலாச்சாரமே சிறந்தது எனும் வாட்சப் அறிவுரைகள் என முற்றிலும் வேறான இருதுருவ குழப்பங்கள் நம்மை அலைகழிக்கின்றன. இவை எல்லாமே நம் எல்லோரது இயல்பையும் கடுமையாக சிதைக்கின்றன.

தாங்க இயலாத ஆத்திரத்தில் அல்லது மன அழுத்தத்தில் தமது பிள்ளைகளை கடுமையாக அடித்துவிடுவதாக பல அம்மாக்கள் எங்களிடம் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெல்ட்டால் மகனை / மகளை அடிக்கும் அம்மா, மகனை சுடுதண்ணீரில் தள்ளிவிட முயன்ற அம்மா, நான்கு வயது மகளை சுவற்றில் தள்ளிவிட்டு பிறகு அதற்காக அழுத அம்மா என ஏராளமான உதாரணங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாரும் கொடுமைக்காரி அம்மாக்கள் இல்லை. அது அவர்களை நெருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளின் ஒரு விளைவு. அதனை வெறுமனே அப்பெண்களின் நடத்தைப் பிரச்சினை என கருதினால் நம்மால் ஒரு குழந்தையைக்கூட அடி வாங்குவதில் இருந்து காப்பாற்ற முடியாது.

திடீரென எழுச்சி பெறும் பக்தி, அதீத சோதிட நம்பிக்கை, தற்கொலைகள், மனநல பிரச்சினைகள் என எழுதி மாளாத அளவுக்கு பிரச்சினைகள் இதனால் உருவாகின்றன. உறவுச்சிக்கல்கள் அந்தப் பட்டியலில் கடைசியாக வரும். ஆனால் அதன் நியூஸ் வேல்யூ ஏனையவற்றைவிட மிக அதிகம் (மனநலம் சார் தேடல்கள் கூகுளில் அதிகம் இருப்பதாக கேள்வி ஆனால் அதன் செய்தி முக்கியத்துவம் குறைவு). ஆகவே அத்தகைய செய்திகள் விரைவாகவும் முழு வீச்சோடும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வெறும் கலாச்சார மதிப்பீடுகளைக்கொண்டு பார்ப்பதால் எந்த பலனும் வரப்போவதில்லை.

மேற்கத்திய கலாச்சாரம் நம்மை கெடுத்துவிட்டது என்பது பச்சை அயோக்கியத்தனம்.  புதிய தொழில்நுட்பங்கள் பொருந்தாக் காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கிறது என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். ஒருகாலத்தில் இருந்ததாக நம்பிக்கொண்டிருக்கிற ஒழுக்கமான கலாச்சாரம் இங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பெண்களை ஜாக்கெட்கூட அணியவிடாத கலாச்சாரம் இங்கே இருந்தது. லட்சக்கணக்கான விதவைகளை அனாதையாக காசியில் விட்டுவிட்டு வந்து  கூச்சமில்லாமல் வீட்டில் வம்சவிருத்தி செய்த கலாச்சாரம் இங்கிருந்தது. கணவன் செத்தால் மனைவிக்கு கஞ்சா கொடுத்து நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இங்கிருந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் சோ கால்டு கள்ளக்காதல் எல்லாம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவதற்கான செய்தியே அல்ல.

கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு. யார் கண்டது, அந்த செயல்பாடுகள் கலாச்சார காவலர்களின் கடைசி சமரசமான ஸீரோ கேஷுவாலிட்டி எனும் நிலையை கள்ளக்காதல்களிலும் கொண்டுவரக்கூடும்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

ந்தியா டுடேவின் 2018 செப்டம்பர் 10ஆம் தேதியிட்ட ஆங்கிலப் பதிப்பு “An Inconvenient Truth” என்ற பெயரில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கமான தமிழாக்கத்தை ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் முரளிதரன் விஸ்வநாதன் வெளியிட்டிருக்கிறார். அத்தொடரின் முதல் இரண்டு பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.

புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.

ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி.

ராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.

கேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா ?
பதில்: இல்லை.

கே. அவர்களது மரபணு, ஆரியர்திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது ?
பதில்: திராவிடர்கள்.

கே. தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?
பதில்: தென்னிந்தியர்கள்.

எல்லாமே மிகச் சிக்கலான கேள்விகள், பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் Science இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.

2015லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.

ஆனால், ஹரப்பா நாகரீகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது சிக்கலானது. 1924ல் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் சிதைவுகளை காலனீய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோதே, அது வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் என்பது தெளிவாகிவிட்டது. அந்த நாகரீகம் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்த ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்ற கருதுகோளை அவர்கள் முன்வைத்தனர். பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஆனால், சிந்துச் சமவெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தையது என்ற கருத்தை ஏற்றனர்.

மகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் !

நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

இந்துத்துவ தேசியவாதிகளைப் பொறுத்தவரை இந்த ஆரிய ஆக்கிரமிப்பு கருத்தாக்கம் பெரும் எரிச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை சிந்துச் சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் எனக் கருதினர்.

ஆனால், உண்மையில் சிந்துச் சமவெளியில் வசித்தவர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்தது. ராக்கிகடியில் கிடைத்திருக்கும் 4500 ஆண்டு பழமையான இந்த எலும்புக்கூடு இதில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடும். இந்த எலும்புக்கூட்டுக்கு ‘I4411’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ராகிகடிதான் இந்தியாவின் மிகப் பெரிய ஹரப்பாசிந்துச்சமவெளி நாகரீக பகுதி. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1920-களில் அகழ்வாய்வுசெய்யப்பட்ட மொஹெஞ்ஜோதாரோவைவிட மிகப் பெரிய ஆகழ்வாய்வுத் தளம் இது.

1960-களில் இருந்தே இங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்திருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இன்றைக்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு ஹரப்பா நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய நகரமாக இருந்து, பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான் இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.

இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதில் மிகத் தீவிரமாக இருக்கும் இந்தக் காலத்தில், அறிவியல் அதற்கு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதாவது, ராகிகடி எலும்புக்கூட்டின் மரபணுவில் மரபணுக் குறியீடு ‘R1a1’ இல்லை. இந்த ‘R1a1’ குறியீடுதான் ஆரிய மரபணுக் குறியீடு என குறிக்கப்படுகிறது. இந்த மரபணுவானது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட ஸ்டெப்பி புல் வெளி பகுதியிலிருந்து வெண்கல காலத்தில் இந்தியாவுக்கு வந்த மக்களிடம் இருக்கும் மரபணுக் குறியீடு இதுதான். இந்த மரபணுக் குறியீடு வட இந்தியர்களிடமும் வடக்கு ஐரோப்பியர்களிடமும் வலுவாகக் காணப்படுகிறது.

இன்றைக்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு ஹரப்பா நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான் இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.

சிந்துச்சமவெளிப் பகுதியில் கிடைத்த ஒரே எலும்புக்கூட்டில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், ‘R1a1’ மரபணு குறியீடு இல்லை என்பதை வைத்து சில முடிவுகளை எட்டலாம். அதாவது சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேத கால நாகரீகத்திற்கு முந்தையது. ஆரம்பகால சமஸ்கிருதத்தைப் பேசியவர்களின் மரபணுவிலிருந்து மாறுபட்டது. இந்த ஆரம்பகால சமஸ்கிருதத்தைப் பேசியவர்களின் மரபணு குறியீடுகள் தற்போதைய வட இந்தியர்களிடம் பொதுவாகக் காணப்படுகின்றன.

அந்த காலகட்டத்தில், மத்திய ஆசியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்தவர்கள், தெற்காசியாவின் மரபணு சித்திரத்தை மாற்றி அமைத்தார்கள் என்றாலும் பழங்கால ராகிகடியில் வசித்தவர்கள், இந்த மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இன்றி இருந்திருக்கக்கூடும். அதாவது சிந்துவெளி மக்களின் மூதாதையர்களுக்கும் இந்த மத்திய ஆசிய மனிதர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களது மரபணுவில் 17.5 சதவீதம் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்தவர்களுடையது.

நாம் பொதுவாக இஸ்லாமிய, ஐரோப்பிய நாட்டவர்கள் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்தினார்கள், நம் கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று அரசியல் முழக்கங்களை எழுப்பபவர்கள் இங்கே உண்டு. ஆனால், அவர்களது மரபணுப் பதிவுகளைவிட, ஸ்டெப்பி புல்வெளிக்காரர்களின் மரபணுப் பதிவு நம்மிடம் அதிகம் உள்ளது.

சரி, இந்த 4500 ஆண்டு பழமையான ‘I 4411’ என்பவர் யார்? “இந்த மனிதருக்கும் தென்னிந்தியாவின் பழங்குடியின மக்களுக்கும் கூடுதல் தொடர்பிருக்கிறதுஎன்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் ராய். அதாவது, தற்போதைய நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களின் மரபணுவோடு இது கூடுதலாக ஒத்துப்போகிறது. இந்த மனிதர்கள் ஆரம்பகால திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்!!

இந்த ஆய்வு முடிவுகள் வேறு சில அதிரவைக்கும் உண்மைகளையும் சொல்கின்றன. அவை என்ன?

பகுதி – 2

சிந்துச் சமவெளி வரலாற்றை மாற்றி எழுத
இந்துத்துவ சக்திகள் செய்த முயற்சி

இந்த ஆய்வுகளில் இன்னொரு விஷயமும் தெரியவந்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் ஏற்கனவே வசித்தவர்களின் மரபணுக்களுடன் இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களின் கலப்பும் ஏற்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து வந்த இவர்கள் இரானிய விவசாயிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்பாக பழங்கால டி.என்.ஏ.க்கள் பரிசோதனை செய்யப்பட்டபோதும் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் விவசாயத்தில் புதிய யுத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மேற்காசியாவுடன் ஏற்பட்ட தொடர்பாலேயே சாத்தியமாயின என்ற முந்தைய கருத்தாக்கத்திற்கும் இது வலுச்சேர்க்கிறது.
சிந்துச் சமவெளி நாகரீகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில், யுரேசிய ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளிலிருந்து பெரும் தொகையான மக்கள் திரள் இந்தியாவில் குடியேறியது என்ற முந்தைய ஆய்வு முடிவை அஸ்திவாரமாக வைத்தே ராகிகடி ஆய்வு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து தெற்காசியாவுக்கு மட்டுமல்ல வட ஐரோப்பாவுக்கும் மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவ்வகையான மக்கள் தொகை கலப்பே ஐரோப்பிய மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் இடையிலான உறவை விளக்கப் போதுமானது.

ஹரப்பாவில் நிலவிவந்த திராவிட நாகரீகம் முடிவை எட்டிய காலத்தில் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வேதகால மக்கள் குதிரைகளில் வந்தேறினர் என பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஆச்சரியமளிக்காது.
ராகிகடி ஆய்வுகள் முடிந்த பிறகு, அந்த ஆய்வில் என்ன கிடைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி வழக்கம்போல பொய்க் கதைகளும் பரப்பப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆய்வின் மரபணு ஆராய்ச்சியில் பங்கேற்ற ராய் என்பவரைப் பேட்டியெடுத்ததாகவும் அவர், ராகிகடி மரபணுவுக்கும் வடஇந்திய பிராமணர்களின் மரபணுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியதாகவும் ஒரு இந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆக, இந்தோ – யுரேப்பியன் மொழிக் குடும்பம் என்பது இந்தியாவிலிருந்து தோன்றியது என்றது அந்த நாளிதழ். ஆனால், அப்படி ஏதும் இல்லை. அது ஒரு பொய்ச் செய்தி.

ராகிகடியிலிருந்து கிடைத்த ஜீன்களில் R1a1 – அதாவது ஆரிய மரபணு இல்லை என்பதுதான் இந்த ஒட்டுமொத்த ஆய்வும் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம். ஆனால், இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது இல்லவேயில்லை, அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியது.
இந்துத்துவவாதிகள் சமீப காலமாக, சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேதகால நாகரீகம் என்று நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். 2014ல் பா.ஜ.க. அரசு பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகு, இந்த இந்துத்துவ வரலாற்று முயற்சிகளுக்கு ஆதரவும் பணமும் கிடைப்பதும் எளிதாகியிருக்கிறது.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரான மகேஷ் சர்மா இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றுக் கமிட்டிக் கூட்டம் ஒன்றை ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில் கூட்டினார். இந்தக் கமிட்டியின் தலைவர் கே.என். தீக்ஷித். அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின் நோக்கம், இந்தியாவின் பழங்கால வரலாற்றின் சில பகுதிகளைத் திருத்தி எழுத ஏதுவாக ஒரு அறிக்கையை அளிக்கச் சொல்வதுதான்.

அந்தக் கூட்டத்தின் குறிப்புகளில் பின்வரும் வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன: “அகழாய்வு முடிவுகள், மரபணு ஆய்வுகள் போன்றவற்றை பயன்படுத்தி தற்கால இந்துக்கள் என்பவர்கள், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்தவர்களிலிருந்து வந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். பழங்கால இந்து கதைகள் உண்மையானவை, அவை வெறும் தொன்மங்கள் அல்ல என்று கூற வேண்டும்”.

ஆனால், உண்மையான அறிவியல் ஆராய்ச்சி இதற்கு எதிரான திசையிலேயே ஆய்வுகளை எடுத்துச் சென்றது. இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவது என்பது, அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.

ஹார்வர்டில் மக்கள் தொகை மரபணு ஆய்வாளரான டேவிட் ரெய்க் Who We Are and How We Got Here என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலிருந்து யுரேசியர்கள் குடியேறினார்கள் என்பதைச் சொல்வதே எவ்வளவு சிக்கலான காரியமாக இருந்தது என்று வியக்கிறார்.

இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது இல்லவேயில்லை, அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியது.

பிறகு ஒரு வழியாக, டெக்னிகலான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டதாம். அதாவது தென்னிந்தியர்களைக் குறிக்க ‘Ancestral South Indian’ (ASI) என்ற வார்த்தையும் வட இந்தியர்களைக் குறிக்க ‘Ancestral North Indian’ (ANI) வார்த்தையும் பயன்படுத்தப்பட்டது. பிறகு ஏஎன்ஐயிடம், இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களின் மரபணுக்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டது. ஏ.என்.ஐ. என்பதற்குப் பதிலாக பழங்கால வட இந்தியர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் சிக்கலாகியிருக்கும்.
இதே பிரச்சனை தற்போதைய ஆய்வுக்கும் வந்தது. ரெய்க், அவரது அணியினர், ராகிகடியில் ஆய்வுசெய்தவர்கள் இணைந்து The Genomic Formation of South and Central Asia-இல் ஒரு ஆய்வுக் கட்டுரையை பதிப்பித்தனர். இந்தக் கட்டுரையில் தெற்காசியாவிற்கு வெளியிலிருந்து புலம்பெயர்ந்து மக்கள் வந்தார்கள் என்ற வாக்கியம் வரக்கூடாது என ராகிகடியின் ஆய்வாளர்களில் ஒருவரான ஷிண்டே ரெய்க்கிடம் கூறினார். பதிலாக, இந்த இரு மக்கள் தொகைக்கும் (வட இந்தியர் – யுரேசியர்) இடையில் கலப்பு இருந்தது என்று வேண்டுமானால் கூறலாம் என்றார்.

ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே தேவையில்லாத கவனம் இந்த ஆய்வுக்குக் கிடைப்பது இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. அப்படி மூடுமந்திரமாக இருந்ததால்தான், ஹரப்பா நாகரீகம் அழிந்த பிறகு, மத்திய வெண்கல காலத்திலிருந்து பிற்கால வெண்கல காலம் வரையில் ஸ்டெப்பி புல்வெளிகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவினுள் வந்தார்கள் என்ற முடிவை தற்போது சொல்ல முடிந்திருக்கிறது.
ஆனால், இந்த ஆய்வு முடிவு ஏன் இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது. தாங்கள் சேகரித்த ஒரு மாதிரி மாசுபட்டதால் இந்தத் தாமதம் என அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், அரசியல் ரீதியாக அசௌகர்யமான உண்மைகளை இந்த ஆய்வு முடிவு சொல்லும் என்பதாலேயே தாமதம் ஆனதாக ஆய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஹார்வர்ட் அணியினர் பொறுமையிழந்து தங்கள் pre-printஐ வெளியிட்டுவிட்டனர். இதற்குப் பிறகு, ஷிண்டே தன் ஆய்வின் முடிவுகளை சற்று அடக்கிவாசிக்க ஆரம்பித்தார். ராகிகடியில் இருந்தவர்கள் உள்ளூர்காரர்களைப் போலத்தான் இருந்திருப்பார்கள். என்ன, தென்னிந்திய பழங்குடியின மக்களோடு சற்று தொடர்பிருந்திருக்கும் என்று பேச ஆரம்பித்தார்.

ஆனால், ஷிண்டே மட்டுமே இந்த முடிவுக்கு வர முடியுமா?

(தொடரும்)

13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு !

ரியானா மாநிலத்தின் பா.ஜ.க. அரசு, மாருதி தொழிலாளர்கள் 13 பேரைத் தூக்கிலிடவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தீவிரமாக வாதாடியிருக்கிறது. தொழிலாளிகளை ஒரு அரசாங்கம் தூக்கில் போடுவதைக் காலனி ஆட்சிக் காலத்தில் நாம் கண்டிருக்கிறோம். இன்று மோடியின் ஆட்சியில் அதைக் காண்கிறோம்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் மாருதி சுசுகி ஆலையில் நடைபெற்ற வன்முறை அந்த ஆலை நிர்வாகமே திட்டமிட்டு அரங்கேற்றிய ஒரு நாடகம். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கேட்ட தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகக் கூலிப்படையை வைத்து ஒரு கலவரத்தை நடத்தியது மட்டுமின்றி, சங்கம் அமைப்பதற்குத் தொழிலாளிகளுக்கு உதவிய மனிதவளத்துறை அதிகாரி அவினாஷ் தேவையும் கொலை செய்து, கொலைப்பழியைத் தொழிலாளர்கள் மீது போட்டது.

148 தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எந்த சாட்சியமுமில்லை என்று 117 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்களிலும் தொழிற்சங்க நிர்வாகிகளான 13 பேருக்கு ஆயுள்தண்டனை. இந்த 13 பேரைத்தான் தூக்கிலிடச் சொல்கிறது, அரியானா அரசு.

மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்குகளில், மிகக் கொடிய கிரிமினல் குற்றமிழைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று பல தீர்ப்புகள் கூறுகின்றன. அவினாஷ் தேவின் மரணம் என்பது நிர்வாகமே செய்த கொலை என்பது ஒருபுறமிருக்க, தண்டிக்கப்பட்டிருக்கும் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள்தான் இதனைச் செய்தார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில்தான் இந்த ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டது.

அவ்வாறிருக்க, இந்த வழக்கில் மாருதி தொழிலாளிகளைத் தூக்கில்போட்டுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க. அரசு ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது? ‘‘இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வீழ்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் வருவதில்லை. மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி அறைகூவல் விட்டு வரும் இன்றைய சூழலில், மாருதி சம்பவம் நமது தேசத்திற்கே இழுக்காக அமைந்து விட்டது.

அதனால்தான் தூக்குதண்டனை கோருகிறோம் என்று விசாரணை நீதிமன்றத்தில் காரணத்தை விளக்கியிருக்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
இங்கே மரணதண்டனைக்குரிய குற்றமாக அரசால் கூறப்படுவது தீவைப்போ, கொலையோ அல்ல. தொழிற்சங்க உரிமைக்காகத் தொழிலாளிகள் நடத்திய போராட்டம் மோடியின் மேக் இன் இந்தியாவுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் எதிராக இருப்பதால், அது தேசவிரோதமாம்; எனவே, தூக்குதண்டனை!

மாருதி தொழிலாளிகளுக்கு என்ன காரணத்துக்காக தூக்கு தண்டனை கேட்கப்படுகிறதோ, அதே காரணத்துக்காகத்தான் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த அரசு. அங்கே தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக. இங்கே, ‘‘நீரையும் நிலத்தையும் காற்றையும் நஞ்சாக்காதே” என்று உயிர்வாழும் உரிமை கேட்டதற்காக.

மாருதி கலவரம் போலவே தூத்துக்குடி கலவரமும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்றுதான். மாருதியைப் போன்றே இங்கும் கூலிப்படைகள் உண்டு, தீவைப்பு உண்டு, இறுதியில் துப்பாக்கிச் சூடு. வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்; பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் சுட்டுக் கொல்லப்படவேண்டியவர்களே என்பதுதான் பொன்னார் பரிவாரம் இதற்கு அளிக்கும் விளக்கம்.

*****

டுவண் மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்வதென்பது புதிய விசயமல்ல. மாருதி சம்பவம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது. ஸ்டெர்லைட்டுக்கான அனுமதியும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் முதலில் வழங்கப்பட்டது.

எனினும், முதலாளித்துவ அரசுகள் எவையும் பொதுவாகத் தங்களை முதலாளி வர்க்கத்தின் சேவகர்கள் என வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை. மக்கள் நல அரசு, அனைத்து மக்களுக்குமான நடுநிலை அரசு என்ற முகமூடிகளைப் பராமரிக்கவே அவை முயற்சிக்கின்றன.

தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த முகமூடிகள் கழன்று விழத்தொடங்கி விட்டன. மக்களுக்கு அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்த ஆளும் வர்க்க அறிவுத்துறையினரின் விளக்கங்களும் மாறத் தொடங்கிவிட்டன. அரசு என்ற அடக்குமுறை எந்திரத்தை பராமரிப்பது, அந்த பராமரிப்புச் செலவை வரியாக மக்களிடமிருந்து வசூலிப்பது என்ற இரு பணிகளைத் தவிர, மற்ற கடமைகள் ஏதுமற்ற நிர்வாண நிலையை நோக்கி முதலாளித்துவ அரசுகள் சென்று கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில், அந்த நிர்வாணத்தை சற்றேனும் மறைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஆள்வதற்கான நியாய உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிர்ப்பந்தத்தை ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் உணர்ந்தே இருக்கின்றன.

முதலாளி வர்க்கத்திடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கான பணிகளை செய்து கொடுத்துவிட்டு, மக்கள் நலனுக்காக செய்வதைப் போலக் காட்டுவது; தனக்குச் சாதகமான முதலாளிகளுக்குச் சலுகை காட்டிக் கொண்டே மொத்த முதலாளித்துவ வர்க்கத்துக்கும் நடுநிலையாக நடந்து கொள்வது போன்ற தோற்றத்தைக் காட்டுவது இவை பொதுவில் முதலாளித்துவக் கட்சிகள் கடைபிடிக்கும் அணுகுமுறைகள்.

அதேபோல, முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, மோதிக் கொள்ளும் அரசியல் கட்சிகளில் யார் ஒருவருடனும் தனியே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், கூடிய வரை விலகி நின்று கொண்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் போலக் காட்டிக் கொண்டு, எந்தக் கட்சியின் ஆட்சி வந்தாலும் தனது வர்க்கத்தின் நலனைக் காப்பாற்றிக் கொள்வதென்பது பொதுவில் அவர்கள் கடைபிடிக்கும் அணுகுமுறை.

*****

மூலதனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பராமரிக்கப்படும் இந்த நாசூக்கான, இலைமறை காய்மறையான உறவு இப்போது வேறு விதமாக மாறிவருகிறது. தன்னை முதலாளிகளின் நண்பனாக வெளிப்படையாகவே காட்டிக்கொள்வதற்கும், குறிப்பிட்ட குஜராத்தி பனியா, மார்வாரி தரகு முதலாளிகளைச் சலுகை பெற்ற முதலாளி வர்க்கமாக (crony capitalists) நடத்துவதற்கும் மோடி அரசு சிறிதும் தயங்கவில்லை.

விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி போன்ற வங்கிக் கொள்ளையர்கள் தப்பிச்செல்ல அனுமதித்தது இருக்கட்டும். வாராக்கடன்களை வசூலிப்பதில் முதலாளிகளுக்குச் சலுகை காட்டாத ரகுராம் ராஜனை வெளியேற்றவும் மோடி தயங்கவில்லை. அதன் பின், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்ப்பது (Bankruptcy and Insolvency Bill) என்ற பெயரில் அம்பானிகளும் அகர்வால்களும் வங்கிகளைக் கொள்ளையிடுவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறார், மோடி.

அலோக் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் பொதுத்துறை வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் ரூ. 30,000 கோடி. வங்கிகளுக்கு 5,000 கோடியைக் கட்டிவிட்டு, அந்த நிறுவனத்தை கையகப்படுத்திக் கொண்டார் முகேஷ் அம்பானி. வங்கிக்கு நட்டம் 25,000 கோடி. பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் கடன் 52,500 கோடி. அது 31,500 கோடிக்கு டாடாவுக்கு விற்கப்பட்டது. வங்கிக்கு நட்டம் 21,000 கோடி. எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் 14,000 கோடி கடனுக்கு 5,600 கோடியைக் கட்டி விட்டு, அந்நிறுவனத்தை விழுங்கிக் கொண்டார் வேதாந்தாவின் அனில் அகர்வால்.

வாராக்கடனைக் கறாராக வசூல் செய்வதாகக் கூறிக்கொண்டு மோடி கொண்டுவந்திருக்கும் திவால் சட்டம், பொதுத்துறை வங்கிகளைத் திவாலாக்குவது மட்டுமல்ல, இந்தியாவின் இரும்பு மற்றும் கனிமத்துறை முழுவதையும் ஒரு சில முதலாளிகளின் ஏகபோகமாக மாற்றுகிறது. மின்சாரம், உள் கட்டுமானம், சுரங்கம், இரும்பு நிறுவன முதலாளிகளான இவர்கள்தான் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் பெரும்பகுதியைச் செலுத்த வேண்டியவர்கள்.

‘‘வெளிநாட்டுப் பயணங்களில் தன்னுடன் அழைத்துச் செல்லும் தொழிலதிபர்களின் பெயர்களை இரகசியமாக வைத்திருக்கும் ஒரே பிரதமர் மோடிதான்” என்று குற்றம் சாட்டுகிறார் கபில் சிபல். ‘‘இடைத்தரகர்களை ஒழித்துவிட்டதாக மோடி சொல்வது ஒருவகையில் உண்மைதான். தன்னைத் தவிர, மற்றெல்லா இடைத்தரகர்களையும் அவர் ஒழித்து விட்டார்” என்கிறார் யெச்சூரி.

அமைச்சரவையின் அதிகாரத்தை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரமாகவும், கட்சியின் அதிகாரத்தை மோடி – அமித் ஷா கும்பலின் அதிகாரமாகவும் மையப்படுத்திவிட்டதன் காரணமாக, மற்ற மட்டங்களிலான அதிகாரங்கள் அநேகமாக முடக்கப்பட்டுவிட்டன. காங்கிரசு ஆட்சியில் தனித்தனியே நடந்த ஊழல்களைக் காட்டித் தேர்தலில் வென்ற மோடி, அந்த ‘வருமானத்தையெல்லாம்’ மையப்படுத்தியிருப்பதுடன் சட்டபூர்வமாகவும் மாற்றியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பிரதாப் பானு மேத்தா.

பா.ஜ.க., காங்கிரசு ஆகிய இரு கட்சிகளுமே அந்நிய நிதி வரவுச் சட்டத்தை (FCRA) மீறிப் பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிடம் நன்கொடை வாங்கியிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் 2014 – இல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக இரு கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இதற்கிடையில் பன்னாட்டு நிறுவனங்களும் மோடி அரசிடம் முறையீடு செய்தன. தற்போதைய அந்நிய நிதி வரவுச் சட்டம், 50% -க்கு மேல் வெளிநாட்டவரின் முதலீடு உள்ள நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களாக கருதுவதால், ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு’ என்ற தலைப்பில் தாங்கள் செலவிடவேண்டிய 10,000 கோடி ரூபாய் தேங்கிக் கிடப்பதாக மோடியிடம் முறையிட்டன.

‘‘உடனே 100% அந்நிய முதலீடாக இருந்தாலும், அது இந்திய நிறுவனமே” என்று அந்நிய நிதி வரவுச் சட்டத்தை முன் தேதியிட்டு (2010 ஆண்டு முதல்) திருத்தியது மோடி அரசு. இதன் காரணமாக வேதாந்தாவிடம் பணம் வாங்கிய குற்றம் ரத்து செய்யப்பட்டு விட்டது. 100% அந்நிய நிறுவனங்கள் அந்நிய நிதி வரவுச் சட்டத்தைப் பொருத்தவரை இந்திய நிறுவனங்களாக மாறிவிட்டன.

மோடி அரசின் முறைகேடு இத்தோடு முடியவில்லை. நன்கொடைப் பத்திரங்கள் (Electoral bonds) என்ற புதிய முறையின் மூலம் கட்சிகளுக்குப் பணம் கொடுக்கும் முதலாளிகள், யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பதை இரகசியமாக வைத்துக் கொள்வதையும் சட்டபூர்வமாக்கிவிட்டது.

2016 – 17 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 90% பாரதிய ஜனதாவுக்குத்தான் சென்றிருக்கிறது (the hindu businessline, Aug 30, 2017). இந்தப் புள்ளிவிவரத்தை மேற்சொன்ன பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் சலுகை பெற்ற முதலாளி வர்க்கத்தினருக்கும் மோடி அரசுக்கும் இடையில் உருவாகியிருக்கும் புதிய வகைப் பிணைப்பைப் புரிந்து கொள்ளவியலும்.

தொழில் போட்டியை விரும்பாத, பொதுச்சொத்தைக் கொள்ளையிடுவதையே ஒரு தொழிலாக நடத்த விரும்புகின்ற, ‘சலுகை பெற்ற முதலாளித்துவமும்’ ஜனநாயகத்தை விரும்பாத பாசிசக் கும்பலும் ஒருவர் தேவையை மற்றவர் நிறைவு செய்கின்றனர்.

தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் ஊடகங்களையே சந்திக்காத மோடியை கார்ப்பரேட் ஊடகங்கள் விழுந்து தொழுவதைப் பார்க்கிறோம். ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோடி அரசின் அரசியல் தோல்விகளை நியாயப்படுத்துகின்றன. பொய்களையும் மதவெறியையும் கூச்சமின்றிப் பிரச்சாரம் செய்கின்றன.

பா.ஜ.க. எதிர்ப்பாளர்களைக் கொச்சைப்படுத்தி மதிப்பிழக்கச் செய்கின்றன. இவையெல்லாம் இந்த உறவின் அபாயகரமான பரிமாணத்துக்குச் சான்றுகள். பசுக் குண்டர்களும், கலாச்சாரக் காவலர்களும் பார்ப்பன பாசிசத்தின் காலாட்படைகள்தான். ஆயின், அதன் புரவலர் ஆளும் வர்க்கம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

-சூரியன்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

ஏன் என்றால் சிறைவாசமா ? | தோழர் தியாகு – பி.யூ.சி.எல். முரளி உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “மோடி மட்டும் பிரதமர் ஆகாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பார். கொலை என்பது இவர்கள் பணி. அதனால்தான் யாரைப் பார்த்தாலும் இவர்களுக்கு கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். மோடி ஒரு RSS வேட்பாளர், மோடி பணியை சரியாக செய்யவில்லை என்றால் மோடியையும் கூட இவர்கள் கொலை செய்வார்கள். கல்புர்கி, கெளரி லங்கேஷ் வரை இவர்கள்தான் கொலை செய்தார்கள். இதுகுறித்து மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும்.

வாஞ்சிநாதன், அரிராகவன் மீது பொய் வழக்கு. மக்களை அச்சுறுத்த இது போன்ற வேலைகளைச் செய்கிறது மோடி அரசு. அந்த வகையில்தான் முற்போக்காளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 5 பேர் மட்டும் இல்லை 5,000 பேர் இருக்கிறோம். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும். மோடி ஆட்சியை எதிர்த்து சிறை செல்வது நமக்குப் பெருமை. மோடி ஆட்சியினால் நமக்கு நிறைய பாதிப்பு. முதலாளிகளுக்கு எதிராக நாம் களமிறங்க வேண்டும். மக்கள் அதிகாரம் முன்னெடுக்கும் அனைத்து போராட்டத்திற்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முழுமையாக நிற்கும்.” என்று கூறினார்.

முழுமையான உரையைக் காண

 

ந்நிகழ்ச்சியில் பி.யூ.சி.எல் அமைப்பின் மாநில செயலாளர் முரளி பேசுகையில், ”ஏன் இது போன்ற கைதுகள்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஜனநாயகக் குரல்களை நெறிப்பதற்கு விதவிதமாக கற்றுத் தேர்ந்து உள்ளனர். பீமா கோரெகான் வன்முறையை உருவாக்கியது இந்துத் தீவிரவாதம்தான். 3 மாதங்களில் மட்டும் 22 பேர் UAPA-வில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் என்ன செய்தனர்? ஆனால் அவர்கள் மீதும் தேசதுரோக வழக்கு, அடக்குமுறை. என் வீட்டில் விடியற்காலை 3 மணிக்கு வந்து காவல் துறையினர் உனக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்க்கும் என்ன தொடர்பு, வாஞ்சிநாதனை எப்படித் தெரியும் என்று கேட்கின்றனர். நான் அவர் ஒரு வழக்கறிஞர், பார்த்துள்ளேன் பேசுவேன் என்றதற்கு என் மீது வழக்கு. RSS-ன் அடாவடித்தனம் மிகவும் அதிகமாகி வருகிறது. திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்பட்ட கொலைகாரர்களைக் கொண்டுதான் அவர்கள் கொலை செய்கிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எல்லாவற்றின் மீதும் அடக்குமுறை. ஒவ்வொரு மாநிலத்திலும் அடக்குமுறைக்கு புதிய உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர். நீதிமன்றமும் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. சட்டத்திற்கு புறம்பாகத்தான் அவர்கள் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறார்கள். ஒடுக்குவது, நசுக்குவது, இதற்காக சட்டங்களை அதிகமாக போட்டு உள்ளனர். மக்களின் குரல் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மாற்றி எழுத வைக்கும். போராட்டங்களுக்குத் தயங்கக் கூடாது” என்று பேசினார்

முழுமையான உரையைக் காண

– வினவு களச் செய்தியாளர்

நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்

நவீன மருத்துவம்

யற்கை மருத்துவம் என்ற பெயரில் தனது கணவருக்காக வீட்டிலேயே பிரசவிக்க முடிவெடுத்த திருப்பூர் பெண் கிருத்திகா இறந்து போனார். அதனை ஒட்டி நவீன மருத்துவம், மரபு வழி மருத்துவம், இலுமினாட்டி கோட்பாடுகள் ஆகியவை விவாதத்திற்கு வந்திருக்கின்றன.

தொற்று நோய் தடுப்பு, ஆயுள் சராசரி கூடியது, குழந்தை – பிரசவகால மரணங்கள் வெகுவாக குறைந்திருப்பது, ஆட்கொல்லி நோய்களுக்கு மருத்துவம், சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாக்கியிருப்பது… என அறிவியலால் வழிநடத்தப்படும் நவீன மருத்துவம் பல சாதனைகளைச் செய்து வருகின்றது.

இன்னொருபுறம் வாழ்க்கை முறை – உணவுப் பழக்கம் மாற்றம், நுகர்வுக் கலாச்சார போதை காரணமாக மக்கள் நோய்வாய்ப்படுவதும், மருத்துவமனைகளை நாடுவதும் அதிகரித்திருக்கிறது. முந்தைய காலத்தில் இத்தகைய நவீன மருத்துவம் இல்லாததால் சாதாரண நோய்களுக்கே மக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்தனர்.

உலகமயத்தின் காலத்தில் சுகாதாரம் என்பது அரசின் சேவைப் பட்டியலில் இருந்து தூக்கி எறியப்பட்டு வணிக சேவையாக மாற்றப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. மறுபுறம் அரசு மருத்துவமனைகளை திட்டமிட்டே நலிவடையச் செய்கிறார்கள். அரசின் கொள்கை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை ஆகிய இப்பிரச்சினைகளை ஆங்கில மருத்துவத்தின் தவறாக சித்தரித்து பல்வேறு போலி வைத்தியர்கள் பெருகிவிட்டனர். இவர்களும் மக்களிடம் முடிந்த மட்டும் கொள்ளையடிக்கின்றனர்.

இத்துடன் கூடவே சிலர் நவீன மருத்துவத்தை இலுமினாட்டிகளின் சதி என்று கதைகள் பல உருவாக்கி உலாவ விட்டிருக்கின்றனர். அதில் பெரியார் கொள்கைகள் மற்றும் திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்போடு சேர்த்து, வல்லரசு நாடுகளின் சுரண்டலை ஏதோ சில தனிக் குடும்பங்கள் – அதுவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே – செய்துவரும் சுரண்டலாக புரளி கிளப்புகின்றனர்.

இவை எல்லாம் சேர்ந்துதான் இன்று திருப்பூர் கிருத்திகாவை கொன்றிருக்கிறது.

நவீன மருத்துவமும், அரசு மருத்துவமனைகளை நலமாக வைத்திருப்பதும்தான் நமது நலத்தைக் காப்பாற்றும் என்பதையும் இலுமினாட்டி சதிக் கோட்பாட்டாளர்களின் பின்னணியையும் அறியத் தருகின்றது இத்தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரிசாலனையும் கைது செய் !
  • பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை !
  • பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
  • அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி
  • பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
  • பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?
  • பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
  • இந்தியாவின் பழங்கால பிரசவ கொடுமைகள்
  • ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?
  • மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
  • ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார் செந்தமிழன் !
  • ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
  • மருத்துவத் துறையை சீரழிக்கும் தனியார்மய வைரஸ் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 இதயத்தை மீட்பது எப்படி ?
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

  • சென்னை ஆதம்பாக்கம் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்.
  • வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தற்காலிகக் கடைகள் அகற்றம் – வியாபாரிகளுடன் தள்ளுமுள்ளு.
  • வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்.
  • ஆரணியில் பரபரப்பு ! டி.எஸ்.பி.யை கண்டித்து வியாபாரிகள்
  • சாலை மறியல் – ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
  • ஊட்டி : நடைபாதைக் கடைகள் அகற்றம் – சிறு வியாபாரிகள் புலம்பல்!
  • புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே சாலையோரக் கடைகள் அகற்றம்.
  • மார்த்தாண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

இவை, சென்னை முதல் கன்யாகுமரி வரை சாலையோர சிறு வணிகர்கள் மீது சமீபத்தில் தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் ஒரு சில. சாலையோரக் கடைகள் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லிதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மற்றும் வட்ட – மாவட்ட நிர்வாக அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர் என ஒரு பெரும்படையே இந்தத் தாக்குதல்களை சாலையோர அப்பாவி சிறுவணிகர்கள் மீது நடத்தி வருகிறது.

வேலூர், அடுக்கம்பாறையில் அகற்றப்படும் சாலையோரக் கடைகள்.

இந்தச் சாலையோரக் கடைகளால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதாகவும், அதன் அடிப்படையில்தான் இந்தக் கடைகள் அகற்றப்படுவதாகவும் காரணம் சொல்கின்றனர் அரசு அதிகாரிகள். மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு சாலையோரக் கடைகள் இடையூறாக இருப்பதாக மருத்துவமனை வளாகங்களையொட்டி கடை வைத்துள்ள சாலையோர சிறு வணிகர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

சாலையோர சிறு வணிகர்களின் கடைகளை அகற்றுவது ஏதோ பொது நலனுக்கானது போல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் உருகி உருகி செய்திகள் வெளியிடுகின்றன. இதைப் பார்க்கின்ற பொது மக்களும், தங்களுக்கு அரசு நல்லது செய்வதாகக் கருதுகின்றனர்.

அச்சத்தில் சாலையோர வணிகர்கள்

அன்றைய வருவாய்க்கு முதலீடாகப் போட்டுள்ள சிறு வணிகர்களின் அற்ப சொற்ப பொருட்களை பொக்கலைன் இயந்திரங்கள் கொண்டு நாசம் செய்து லாரிகளில் ஏற்றும் அட்டூழியம் குறித்தோ, எதிர்ப்புக் குரல் எழுப்பும் சாலையோர சிறு வணிகர்களை காவல் துறையினர் வரைமுறையின்றி காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்துவது குறித்தோ, சாலையோர வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை காவல் துறையினர் மிகக் கேவலமாகத் திட்டுவது குறித்தோ இந்த ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

பல இடங்களில் உள்ளூராட்சி அலுவலர்களும், காவல் துறையினரும் சாலையோர சிறு வணிகர்களிடம் அன்றாடம் மாமுல் வாங்கிக் கொண்டு கடைகளை நடத்துவதற்கு அனுமதிக்கின்றனர். அப்பொமுது மட்டும் இந்தக் கையூட்டுக்காரர்களுக்கு பொது மக்களின் நலன் கண்ணுக்குத் தெரியாது போலும்.

எந்த நேரத்தில் பொக்கலைன் வண்டி வரும் அல்லது லத்தியொடு காக்கிச்  சட்டைகள் வரும் என்கிற அச்சத்தோடுதான் சாலையோர சிறு வணிகர்களின் அன்றாடப் பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றல்ல, நேற்றல்ல. இது நீண்ட நெடியப் பிரச்சனை.

சாலையோர வணிகம் குறித்து நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன? 

சாலையோரங்களில் சிறு வணிகம் செய்வதன் மூலம் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு கௌரவத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு  முயற்சி செய்யும் சாலையோர சிறு வணிகர்கள் தங்களது தொழிலை இந்தியாவெங்கும் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகளில் மும்பை உயர்நீதி மன்றம், டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சாலையோர சிறு வணிகர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

காவல் துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களது கூடுதல் வருவாய்க்காக சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்துவதையும் அவர்களது பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்துவதையும் நீதிமன்றங்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன.

தான் விரும்பிய ஒரு தொழிலையோ அல்லது வணிகத்தையோ மேற்கொள்வது இந்தியக் குடிமகனுக்கு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)(g) வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தலாமே ஒழிய, சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை மறுக்கக் கூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்த வழிகாட்டுதலுக்குப் பிறகுதான் சாலையோர சிறு வணிகர்களை பாதுகாப்பதற்கான “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டத்தை நடுவண் அரசு கொண்டு வந்தது. The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act 2014.   இதைத் தொடர்ந்து இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டம் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு 2015-ஆம் ஆண்டு வகுத்துள்ளது.

சட்டமும் திட்டமும், நடைமுறை விதிகளும் கொண்டு வந்து ஆண்டுகள் சில உருண்டோடிவிட்டன. ஆனாலும், காவல் ஆய்வாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை இப்படி ஒரு சட்டம் இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. உண்மையிலேயே இப்படி ஒரு சட்டம் இருப்பது அவர்களுக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அடுக்கம்பாறை என்ற இடத்தில் வேலூர் மாவட்ட மருத்துமனை 2004-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அப்பொழுது முதலே, அப்பகுதியில் சாலையோர சிறு வணிகர்கள், சாலையோரங்களில் சிறு வணிகம் செய்து வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் பழங்களை இச்சிறு வணிகர்களிடமிருந்தே பெற்று வருகின்றனர். இச்சிறு வணிகர்கள் அப்பகுதியில் கடைகள் வைக்கக்கூடாது என பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம், கனியம்பாடி காவல்துறை உதவியுடன் அடிக்கடி கடைகளை அகற்றுவதும், சிறுவணிகர்கள் அதற்கு எதிராகப் போராடுவதும் ஒரு தொடர்கதையாகவே நீடிக்கிறது. 

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ஐ சுட்டிக்காட்டி தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை காலி செய்யச்சொல்லி ஏழு நாள் அவகாசம் கொடுத்து பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சாலையோர வணிகர்களுக்கு 14.08.2018 அன்று அறிவிப்பு ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறது.

சாலையோர வணிகம் என்பது ஆக்கிரமிப்பு அல்ல, இதற்குத் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பொருந்தாது; மாறாக “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டம்தான் இதற்குப் பொருந்தும். எனவே இச்சட்டப் பிரிவு 22-ன் படி நகர வணிகக் குழு (Town Vending Committee) ஒன்றை அமைக்க வேண்டும். அதன் பிறகு, இந்தக் குழு, சட்டப் பிரிவு 3-ன் படி அங்குள்ள சாலையோர வணிகர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவரை யாரையும் கடை நடத்தும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது; மேலும் எங்கே விற்பனை செய்யலாம் (Vending Zone), எங்கே விற்பனை செய்யக் கூடாது (Non Vending Zone) என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப சாலையோர வணிகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் “தாய்-சேய்” திட்டம். “நெடுஞ்சாலை விரிவாக்கம்”, “மருத்துவமனை வளாகம்” என பொருத்தமற்ற காரணங்களைக் கூறிக்கொண்டு காவல் துறை உதவியுடன் அதிரடியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் அடுக்கம்பாறையில் செயல்பட்டு வந்த சாலையோரக் கடைகள் ஆகஸ்டு மாத இறுதியில் அப்புறப்படுத்தப்பட்டன.

தொடரும் அரச பயங்கரவாதம்

காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் எவரும் சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்தவோ அல்லது அவர்களது கடைகளை அப்புறப்படுத்தவோ கூடாது என இச்சட்டம் (பிரிவு 27) அவர்களுக்கு கடிவாளம் போட்டாலும் அதை மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பதுதான் நடைமுறை.

அன்றாட பிழைப்பு நடத்தும் சாலையோர வணிகர்கள் பத்து நாட்களாக எந்தத் தொழிலும் இல்லாமல் வறுமையில் வாடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட பிறகு, சாலையோர வணிகர்கள் குழு ஒன்றை அமைத்து முறைப்படுத்தும்வரை பழைய நிலையையே தொடரலாம் என கோரிக்கை முன்வைத்ததையொட்டி மீண்டும் சாலையோர சிறு வணிகர்கள் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தங்களது கடைகளை நடத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் 08.09.2018 அன்று காலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி, மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியுமின்றி, கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி சாலையோர வணிகர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளார். இரு வணிகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெண்களைத் தகாத சொற்களால் வசைபாடியுள்ளார். சட்டத்துக்குப் புறம்பாக, ஒரு ரௌடியைப் போல நடந்து கொண்ட கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜனை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் (DIG)  சாலையோர வணிகர்கள் சங்கம் சார்பில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் நாகராஜனின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், சாலையோர சிறு வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 11.09.2018 அன்று வேலூர் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதே போன்று, 03.05.2018 அன்று அடுக்கம்பாறை சாலையோர சிறு வணிகர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய அப்போதைய கனியம்பாடி காவல் ஆய்வாளர் பாண்டியனின் அடாவடித்தனத்தை சாலையோர சிறு வணிகர்கள் தங்களது வீரமிக்கப் போராட்டத்தால் முறியடித்துள்ளனர்.

தெருவோரம் கடை விரிக்கும் இவர்கள் யார்? இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள்? நீரின்றி வெடித்துக் கிடக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். ஆலைக்கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள். நம்பியிருந்த நெசவும், கைத்தொழிலும் கைவிட்டதால் கால்வயிற்றுக் கஞ்சிக்காக நகரத்திற்குத் துரத்தப்பட்டவர்கள். உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஓர் அங்கமே!

இவர்கள் தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

“சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” அமுல்படுத்தப்பட்டாலொழிய அடுக்கம்பாறை மட்டுமல்ல இந்தியாவெங்கும் உள்ள சாலையோர சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமில்லை.

இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கான களப் போராட்டத்தில், சாலையோர சிறு வணிகர்களுக்கு தோள் கொடுப்பதே பொது மக்கள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !

“உங்களிடம் 1971-ம் ஆண்டுக்கு முந்தைய பிறப்பு சான்றிதழ் இருக்க வேண்டும். அல்லது 1971-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். இல்லை என்றால், உங்கள் அப்பா, அல்லது தாத்தாவுக்கு அத்தகைய தகுதி இருக்க வேண்டும். இது இல்லாதவர்கள் அல்லது இப்படி ஆதாரம் காட்ட முடியாதவர்கள் எல்லோரும் அன்னியர்கள்.”

ஜூலை மாத இறுதியில் அரசு வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், அஸ்ஸாமில் வசிக்கும் சுமார் 3.3 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். அரசின் கூற்றுப்படி இவர்கள் அனைவரும் தங்களது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கத் தவறியுள்ளனர் அல்லது “வந்தேறிகள்”.

அசாம் மாநிலத்தில் 40 லட்சம் உழைக்கும் மக்களை சட்டவிரோத குடியேறிகளாக நிறுத்தியிருப்பது பா.ஜ.க-வின் நாடு தழுவிய அரசின் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி. ஆதார், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உழைக்கும் மக்களை பிரித்து தேசவெறி, இனவெறியை தூண்டி விடுகிறது இந்த பாசிச கும்பல்.

இவ்வாறு இந்திய அரசால் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வரும் அசாமில் தேசிய வெறியை தூண்டி விடும் பணியை பா.ஜ.க கும்பல் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. பன்முகத்தன்மை என்பது பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் அகண்ட பாரதக் கனவுக்கு தடையாக இருக்கிறது.

பெரும்பாலும் மலைவாழ் இனக்குழு சமூகங்கள் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய சமவெளி பகுதி வங்காளம் ஆகும். வங்காளத்திலிருந்து உழைக்கும் மக்களும், வியாபாரிகளும் வேலை வாய்ப்புகள் தேடியும், வணிக ஆதாயங்களுக்காகவும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. வங்காளம் 1947-ல் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் பகுதியானது, 1971-ல் அது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற தனிநாடாக ஆனது. இதைத் தொடர்ந்து அன்னியர்களின் வருகையால் அசாமிய மொழியும், கலாச்சாரமும் அழிக்கப்படுகின்றன என்ற போராட்டம் தொடங்கியது.

1950-களில் இருந்தே அசாமில் குடியேறியுள்ள வெளியூர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்துள்ளது. அதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முறை கொண்டு வரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகளோ இந்த குடியேற்ற பிரச்சனைக்கு மதச்சாயம் பூச ஆரம்பித்தன. அதன்படி வங்கதேச முஸ்லீம்களின் குடியேற்றத்தால் அசாமின் இந்து கலாச்சாரம் அச்சுறுத்தப்படுவதாக பீதியை கிளப்பினர். 1971-க்குப் பிறகு இது தொடர்பாக நடைபெற்ற கலவரங்களில் 2000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோனோர் முஸ்லிம்கள். 2016-ல் அசாமில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பித்து அன்னியர்களை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டது.

மோடி இந்தியாவின் ராஜபக்சே

உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வெறியை தூண்டி விடுவது ஆர்.எஸ்.எஸ் அரசியலின் அடிநாதம். குஜராத்தில் 2002-ல் படுகொலைகள், மும்பையில் கலவரம், காஷ்மீரில் இராணுவ அடக்குமுறை, நாடு முழுவதும் மதக் கலவரங்கள் என்ற வரிசையில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் இசுலாமியர்களை தனிமைப்படுத்தி துன்புறுத்துவது ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி.

அதன்படி இப்போதைய தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் யூதர்களை தனிமைப்படுத்தி, அடையாள முத்திரை குத்தி, தனி முகாம்களில் அடைத்து, கொன்று குவித்தது போன்ற கொடூர திட்டத்துக்கான அச்சாரம். இலங்கையில் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாள அட்டையின் அடிப்படையில் போலீசால் துன்புறுத்தப்படுவது இன்றுவரை தொடர்கிறது. 1972-ல் உருவாக்கப்பட்ட அந்த திட்டத்தின் இறுதி விளைவாக முள்ளி வாய்க்கால் இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், முள் வேலி முகாம்களில் வதைக்கப்பட்டதும் சமகாலத்தில் நாம் கண்ட வரலாறு.

‘வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கோடிக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக இடம் பெயர்கிறார்கள். அவர்களால்தான் அசாமின் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகள் பறி போகின்றன.’ என்று நச்சு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வருகிறது பா.ஜ.க. இந்த நாடு தழுவிய வெறுப்பு அரசியலின் உள்ளூர் வடிவமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான ‘வந்தேறி’ குரல்கள் ஒலித்து வருகின்றன.

மேற்கு வங்கத்திலும் இது போன்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தெலுங்கானாவில் அன்னியர்களை அடையாளம் காண வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர் பா.ஜ.க-வினர். தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், “சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் வங்கதேசத்தவர்களும் ரொஹிங்கியாக்களும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் குடியேற்ற பிரச்சனையை முஸ்லீம் விரோத ஒடுக்குமுறையாக மாற்றுவதை மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தில் இசுலாமிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் இந்தியாவில் குடியேறும்போது அவர்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

ரோஹிங்கிய அகதிகள் (கோப்புப் படம்)

அதாவது, பாகிஸ்தானிலிருந்தோ வங்க தேசத்திலிருந்தோ சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர் இந்துவாக இருந்தால் ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசே அவருக்கு குடியுரிமை கொடுத்துவிடும். இந்த சட்டத்தில் முஸ்லீம்கள் மட்டும் கவனமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் சரி, பொருளாதார தேவைகளுக்காக இந்தியாவுக்குள் இடம் பெயரும் கோடிக்கணக்கான வங்கதேச முஸ்லீம்களுக்கும் இது பொருந்தாது.

இத்தகைய குறுகிய தேசிய வெறி திட்டங்களை தொழிலாளி வர்க்கம் கடுமையாக எதிர்க்கிறது. உழைக்கும் மக்களை இடம் பெயர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளுவதே முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குதான். நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர். கோடிக்கணக்கான இந்தி பேசும் தொழிலாளர்கள் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து கூலி வேலை செய்கின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கூட உழைக்கும் மக்களின் இடம் பெயர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் அனைத்து சவடால்களும் தோற்றுப் போய் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்ட நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க கும்பல். இதனை முறியடிக்கும் பொறுப்பு பாட்டாளி வர்க்கத்துக்கே இருக்கிறது.

பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைக்க முதலாளிகள் இன, சாதி, மத அடையாளங்களை பயன்படுத்தினாலும், தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தூக்கிப் பிடிக்கிறது. அனைத்து தொழிலாளர்களும் சுதந்திரமாக இடம் பெயரும் உரிமையையும், குடியேறும் இடத்தில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற வேண்டும் என்று கோருகிறது. இதற்காக சமரசமின்றி போராடவும் செய்கிறது.

– செல்வன்
புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018
நன்றி : new-democrats.com

இந்துத்துவ பயங்கரவாத இயக்கம் சனாதன் சன்ஸ்தா – அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர் !

‘இஸ்லாமிய தீவிரவாதம்’; ‘இடதுசாரி தீவிரவாதம்’ என ஓயாமல் அலறும் ஊடகங்கள் கடந்த சில வாரங்களாக வெளிவரும் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா குறித்த செய்திகளை அடக்கியே வாசிக்கின்றன. இந்த செய்திகளை அடக்கி வாசிப்பதற்காகவே ‘நகர நக்ஸல்’ கைதுகள் இந்து தீவிரவாதத்தை ஊட்டி வளர்க்கும் அரசு தரப்பிலிருந்து அரங்கேற்றப்படுகின்றன.

சனாதன் சன்ஸ்தாவின் பின்னணி என்ன?

‘இந்துராஷ்டிரம் அமைக்க யுத்தத்தில் போராடுகிறவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். அவர்களை இந்த உலகம் என்றென்றும் நினைவுகொள்ளும்’ சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இப்படி சொல்கிறது.

ஜெயந்த் அத்வாலே, குந்தா அத்வாலே என்ற மருத்துவம் படித்த தம்பதி 1995-ஆம் ஆண்டில் தொடங்கியதே சனாதன் சன்ஸ்தா. இந்த அமைப்பு கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மையமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘இந்து ராஷ்டிரம்’ என்பதே இலட்சியம் என தன்னுடைய இணைய பக்கத்தில் அறிவிக்கிறது சனாதன் சன்ஸ்தா. சமூக விரோதிகளை அழிக்க மூன்றாம் உலகப் போரை 2016லிருந்து 2018 வரை நடத்தும் என்றும் 2019-2022 வரை கடவுளின் இராஜ்ஜியத்தை அமைப்பது குறித்து ஒத்திகைகள் நடத்தப்படும் என்றும் 2023-ஆம் ஆண்டு இந்து ராஜ்யம் அமையும் என்று உறுதியாக அறிவிக்கிறது.

சனாதன் சன்ஸ்தா வெளியீடுகளைப் படிப்பவர்கள் யார் தங்களுடைய எதிரிகள் என்று அறிவார்கள் என்றும் கூறுகிறது. தன்னுடைய எதிரிகள் என இவர்கள் கைகாட்டுவது கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள், சிறுபான்மையினர் மற்றும் இடதுசாரிகளை.  கோவா, மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளதாகக் கூறி 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பைத் தடை செய்ய பரிந்துரைத்தது காங்கிரஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு. ஆனால், அப்போது உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.கே.சிங் இதை நிராகரித்தார். அரசு பணியில் இருந்த ஆர்.கே.சிங், தற்போது பாஜக எம்பி.

‘இந்துத்துவ’ தீவிரவாத அமைப்பை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அரசு

2013-ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் ‘சனாதன் சன்ஸ்தா’வுக்கு தொடர்புள்ளதாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை விசாரிக்கத் தொடங்கியது. காவல்துறையையும் இராணுவத்தையும் தோற்கடிக்காமல் இந்து ராஷ்டிர கனவு நிறைவேற வாய்ப்பில்லை என பகிரங்கமாக வெளிப்படையாக தன்னுடைய வெளியீடுகளில் எழுதியது இவ்வமைப்பு. ஆனால், ‘ஆதாரங்க’ளைத் தேடிக்கொண்டிருந்த தீவிரவாத தடுப்புப் படையால், இடதுசாரி செயல்பாட்டாளர் கோவிந்த் பன்சாரே (2015), எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி (2015), பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (2017) ஆகியோரின் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. இந்த நான்கு படுகொலைகளும் திட்டமிட்டு, ஒரே மாதிரியான செயல்முறைகளுடன் அரங்கேற்றப்பட்டிருந்த போதிலும் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ அரசின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியவில்லை.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கடந்த ஜூன் மாதம் முதல் நிகழ்ந்த அடுத்தடுத்த கைதுகளும் கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் வெளிவந்த உண்மைகளும் சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டிய தீவிரவாத அமைப்பு என்பதற்குப் போதுமான ஆதாரங்களாக இருந்தன.

கடந்த ஆகஸ்டு 10-ஆம் தேதி மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப்படை  வைபவ் ராட், சரத் கலாஸ்கர், சுதன்வா கொண்ட்லேகர் என்ற மூன்று இந்து தீவிரவாதிகளை கைது செய்தது. சனாதன் சன்ஸ்தா அமைப்பின் துணை அமைப்பான இந்து ஜன் ஜக்ருதி அமைப்பைச் சேர்ந்த வைபவ் ராட்டுக்கு சொந்தமான இடத்தில் வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், பேட்டரிகள், விஷ மருந்துகள், சர்க்யூட்டுகள், வயர்கள் என வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருட்களை தீவிரவாத தடுப்புப் படை கைப்பற்றியது. சுதன்வா கொண்ட்லேகர் என்ற தீவிரவாதிக்கு சொந்தமான இடத்தில் நாட்டு துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள்  உள்ளிட்டவற்றை கைப்பற்றியது.  கலாஸ்கர் என்பவர் தபோல்கரின் படுகொலையில் நேரடியாக தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், புனேயில் நடக்கவிருக்கும் சன்பர்ன் இசைத்திருவிழாவில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இந்துத்துவ தீவிரவாதத்தின் அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர்!

சனாதன் சன்ஸ்தா அமைப்பு தன்னுடைய அறைகூவலாக முன்வைக்கும் முழக்கங்களில் ‘சத்ரபதி சிவாஜி வழியில் இந்து ராஜ்ஜியம் அமைப்போம்’ என்பதும் ஒன்று. மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு படை வெளியிட்ட தகவலில் சிவாஜி குறித்து நூல் எழுதியதற்காக வரலாற்றாசிரியர் ஸ்ரீமாண்ட் கோகடே  இந்து தீவிரவாதிகளின் ‘தர்மவிரோதிகள்’ ஹிட் லிஸ்டில் இடம்பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்தப் பட்டியலில் காவல் அதிகாரிகள் இருவருடைய பெயரும் இருந்தது.

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ‘சம்போஜி படை’ என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கோகடே, ஏன் இந்து தீவிரவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்?

“இந்துத்துவ அமைப்புகள் சொல்லிக் கொள்வதைப் போல சத்ரபதி சிவாஜி இந்துக்களுக்காக முசுலீம் அரசுகளை எதிர்த்து போரிட்ட மன்னர் இல்லை. அவர் மதச்சார்பற்றவராக இருந்தார் அனைத்து மக்களுக்கானவராகவும் இருந்தார். சாதியைக் கடந்தவராக அவர் இருந்தார். இந்த விஷயங்களை தீவிர ஆய்வின் வழியாகக் கொண்டு வந்தேன். சிவாஜியின் குருவாக தாதோஜி கொண்ட்தேவ் என்ற பார்ப்பனர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. சத்ரபதி சிவாஜி முற்போக்காளராக அறிவியலை ஏற்றுக் கொள்ளும் தன்மையுள்ளவராகவும் இருந்தார். சனாதன் சன்ஸ்தா, சிவாஜி இப்படி காட்டப்படுவதை விரும்பவில்லை. சிவாஜியை தவறான முறையில் காட்டவே அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் ஸ்ரீமாண்ட் கோகடே.

இந்து தீவிரவாதிகளால் குறிவைக்கப்படும், கோகடே.

அதாவது சிவாஜி, பார்ப்பனர்களை காப்பதற்காகவே முசுலீம் மன்னர்களை எதிர்த்து போரிட்டதாக இந்துத்துவ அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. மராட்டியத்தில் கடவுளைப் போல வணங்கப்படும் சிவாஜி மீதான காவி சாயம் பூசும் வேலையை நீண்ட காலமாக செய்துவரும் காவிகளுக்கு கோகடே போன்ற வரலாற்றாசிரியர்கள் பிரச்சினைக்குரியவர்களாக தெரிவதில் வியப்பில்லை.

“கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார கும்பலால் எழுதப்பட்ட சிவாஜியின் தவறான வரலாற்றை அடித்தளத்திலிருந்து மாற்ற போராடி வருகிறேன். ராமதாஸ், தாதோஜி கொண்ட்தேவ் என்ற பார்ப்பனர்தான் சிவாஜிக்கு குருவாக இருந்து வழிகாட்டியதாக கூறுகிறார்கள். அதாவது சிவாஜி சுய அறிவு அற்றவராக, பார்ப்பனர்களின் அறிவு பலத்தால் வெற்றிகளைச் சூடியவராக வரலாற்றைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  பகுஜன்கள், பார்ப்பனர்களைக் காட்டிலும் கீழானவர்கள் என்பதைக் காட்டவே இந்தத் திருத்தல், செருகல்களை செய்தார்கள்.

பரிவார் கும்பலால் சொல்லப்படும் சிவாஜி முசுலீம்களுக்கு எதிரானவர் என்கிற பிம்பமும் முற்றிலும் தவறானது. சிவாஜி அதிகார மையங்களை எதிர்த்து போரிட்டாரே தவிர, குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக அல்ல! அவருடைய படையில் முசுலீம்கள் இருந்தார்கள். அவருடைய மெய்க்காப்பாளர்களாக முசுலீம்கள் இருந்தார்கள் என்பது வரலாறு” என்கிறார் கோகடே.

சத்ரபதி சிவாஜி யார்?

சிவாஜியின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்கும் முயற்சி கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மராட்டியத்தின் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலே, 1870-களில் ‘சிவாஜி – சூத்திரர்களின் தலைவர்’ என எழுதியிருக்கிறார். சிவாஜி, ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலராக இருந்தார் எனவும் புலே எழுதினார்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மராட்டியத்தில் உருவான பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான பார்ப்பனர் எதிர்ப்பியக்கம் வரலாற்றில் முக்கியமானது.  19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துத்துவத்தை உள்ளூர தூக்கிப் பிடித்த, அப்போது காங்கிரசில் இருந்த பால கங்காதர திலகர் முன்னெடுத்த சிவாஜி விழாக்கள், பார்ப்பனர்களுக்கு எதிரான மராத்திகளின் போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் முயற்சி என புலே அச்சப்பட்டார். 1895-ஆம் ஆண்டு தன்னுடைய இதழில் ஒரு கவிதை ஒன்றை எழுதினார்…

“நம்பிக்கையற்ற இவர்கள் எப்படி சிவாஜி கொண்டாட முடியும்?
இவர்கள் அறிவை மற்றவர்களுக்கு பரிசாக அளிப்பதை விரும்பாதவர்கள்
இவர்கள் சத்ரபதியை மறைத்து வைத்திருந்தார்கள்
இவர்கள் சிவாஜியின் வழிதோன்றல்களை அழித்தவர்கள்…
சிவாஜி குறித்து பெருமை கொள்ள வேண்டியவர்கள் சத்திரியர்களே
பார்ப்பனர்கள் பேஷ்வாக்களின் புகழை பாடட்டும்”

இடதுசாரி செயல்பாட்டாளரான கோவிந்த் பன்சாரே, மன்னர் சிவாஜி மறைக்கப்பட்ட வரலாற்றை ‘சிவாஜி யார்?’ என்கிற பெயரில் நூலாக  எழுதியிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் பன்சாரே. இவருடைய கொலையிலும் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

சிவாஜி யாருக்கு சொந்தமானவர்கள் என்கிற போராட்டத்தில் இப்படி தொடர்ச்சியாக வரலாற்று திரிபுகளை பலர் அம்பலப்படுத்தி வந்துள்ளனர் . 2004-ஆம் ஆண்டு அமெரிக்க கல்வியாளர் ஜேம்ஸ் லெயின் என்பர் எழுதிய ‘சிவாஜி – இஸ்லாமிய இந்தியாவில் ஒரு இந்து மன்னர்’ என்ற நூல் வெளியீடு, புனே பண்டார்க்கர் ஆய்வு மையத்தில்  நடந்தது. அந்த நூல் வெளியீட்டுக்கு எதிராக சம்பாஜி படை என்கிற அமைப்பு போராடியது. அதன் பின்பே, சிவாஜியின் உண்மையான வரலாற்றை நிறுவும் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதாக சொல்கிறார் இந்த அமைப்பில் செயல்படும் வராலாற்றாசிரியர் கோகடே.

சிவாஜி குறித்த உண்மையை காக்கும் சம்போஜி படை!

சிவாஜியின் குருவாக சொல்லப்பட்ட பார்ப்பனர் தாதோஜி கொண்ட்தேவ் – இன் சிலை புனேயின் வரலாற்று சிறப்பு மிக்க லால் மஹாலிலிருந்து 2010-ஆம் ஆண்டு இவர்களின் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டது. 2015-ஆம் ஆண்டு    மராட்டிய மாநிலத்தின் மதிப்பிற்குரிய விருதான மகாராஷ்டிர பூஷன் என்கிற விருது வலதுசாரி வரலாற்றாசிரியரான பாபாசாகேப் புரந்தாரிக்கு வழங்கப்படும் என பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தது. இதை இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்திருக்கிறது. சிவாஜியின் மகனான சம்போஜியை அவமதித்த ராம் கணேஷ் கட்காரி என்கிற எழுத்தாளரின் சிலையை  புனே பூங்காவிலிருந்து அகற்றியது இவ்வமைப்பு.  மராட்டிய மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் அமைப்புகளில் சம்பாஜி படைக்கு முக்கியமான இடம் உண்டு.

சூரத்தில் நடைபெற்ற சிவாஜி ஜெயந்தி விழாவில்…

“மராத்திகளின் அடையாளம் சிவாஜி. அவரை பயன்படுத்தாமல் யாரும் அரசியல் செய்துவிட முடியாது. அவருக்கு எதிராக எது சொன்னாலும் அது பெரும் பிரச்சினையை கிளப்பிவிடும். எனவே, அவரை பலர் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். இப்போதைய அரசியல் போராட்டம் மராத்திகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையே நடக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் காங்கிரசுக்கும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையே நடக்கும் அரசியலைப் போன்றது.” என்கிறார் மராட்டிய வரலாற்றாசிரியர் பலாண்டே தாதர்.

எனவேதான் பார்ப்பன சங்பரிவாரங்களுக்கு எதிராக மராத்திகளை திரட்டிக்கொண்டிருக்கும் கோகடே, படுகொலை செய்யப்படவேண்டியவர் பட்டியலில் ‘முன்னுரிமை’ பெற்றிருக்கிறார்.

சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டும்.

“சத்ரபதி சிவாஜி குறித்த என்னுடைய கருத்துக்களுக்காக பல முறை இந்துத்துவ அமைப்புகளால தாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முறை எனக்கு பார்சல் குண்டுகூட வந்தது. ஆனால், இதுவரை எந்தவொரு பாதுகாப்பும் எனக்கு வழங்கப்படவில்லை. மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள ஹிட் லிஸ்டின் அடிப்படையிலாவது எனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறேன்” என்கிறார் கோகடே.

மராட்டியத்தின் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பின் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து சுமார் ஆயிரம் பக்கங்களில் அனுப்பப்பட்ட அறிக்கைக்கு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தொடர்ச்சியாக பகுத்தறிவாளர்கள், செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்கிற கோகடே, இப்போதாவது சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் இன்னும் பல அப்பாவி உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார்.

– கலைமதி

உதவிய கட்டுரைகள்:

நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்

ன்றைய இந்தியச் சமூகத்தில் மத உணர்வு ஆழமாக வேர் விட்டுள்ளது. தனிப்பட்டவர்களின் உள் விவகாரமாக மட்டுமின்றி சமூகத்தின் விவகாரமாகவும் மதம் மாறிவிட்டது. மத உணர்வு, வகுப்பு வாதமாக மாற்றப்பட்டு வருகிறது.

வழிபாட்டுத் தலங்களிலும் வீடுகளிலும் மட்டுமே இருக்க வேண்டிய மதம் வீதிக்கு வந்துவிட்டது. சமய விழாக்கள், ஊர்வல அரசியலாக மாறிவிட்டன. கொழுக்கட்டையும் நோன்புக் கஞ்சியும் மத வட்டத்தைத் தாண்டி அரசியலுக்குள் நுழைந்து விட்டன……

– நூலின் முன்னுரையில் ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

மிழ்நாட்டில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள மிக பிள்ளையார் கோவிலாகப் பிள்ளையார் பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலை தொ.பரமசிவம் (1997: 46-48) கருதுகிறார்.

வணிகர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் பிள்ளையார் பரவியதாகக் கூறும் அவர் பிள்ளையார்பட்டிக் சாத்தினரால் உருவாக்கப்பட்டதைச் சான்றாகக் காட்டுகிறார். பிள்ளையாரின் தொடக்க கால உருவம் இரண்டு கை உடையதாகவும், பூணூல், அணிகலன், ஆயுதங்கள் இல்லாமலும் காட்சியளித்தது. காலப்போக்கில் பிள்ளையாருக்குப் பூணூலும் அணிகலனும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. பிள்ளையார்பட்டி கோவிலிலுள்ள பிள்ளையார் உருவம் இரண்டு கைகளை மட்டும் உடையதாயும் பூணூல், அணிகலன்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றிக் காட்சியளிப்பதாலும் இதுவே தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பிள்ளையார் உருவம் என்று நிறுவுகிறார். இதன் பின்னரே தாமரை மலரில் வீற்றிருப்பவராகவும் நான்கு கரங்களையுடையவராகவும் யானைக் கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் போன்றவற்றை ஏந்தியவராகவும் உருப்பெற்றார்.

எந்த இடத்திலும் எழுந்தருளச் செய்து எளிய முறையில் அனைவரும் வணங்கும் பிள்ளையாருக்கு, பிள்ளையார் சதுர்த்தி அல்லது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆண்டுதோரும் தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தென்மாவட்டங்களில் வீடுகளில் பிள்ளையார் உருவத்தின் முன் மோதகம், சுண்டல் கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்றவற்றைப் படைத்து வழிபாடு செய்வதுடன் பிள்ளையார் சதுர்த்தி நிறைவடைகிறது. பிள்ளையாரின் உருவத்தை நீர் நிலையில் கொண்டு போடும் வழக்கம் தென்மாவட்டங்களில் பாவலாகக் கிடையாது. வட மாவட்டங்களில் கோவில் அல்லது ஊர்ப் பொது நீர் நிலையில் பிள்ளையாரைப் போடும் வழக்கம் உண்டு. ஆயினும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலையில் பிள்ளையார் உருவத்தைப் போடும் வழக்கம் தமிழ்நாட்டில் பரவலாக இல்லாத ஒன்று.

1981 பிப்ரவரி 19 இல் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 180 தேவேந்திர குல வேளாளர் குடும்பங்கள் இசுலாமியச் சமுதாயத்தைத் தழுவின. அதே ஆண்டு மே 23 இல் மேலும் 27 குடும்பங்கள் இசுலாத்தைத் தழுவின. இதன் தொடர்ச்சியாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் தேவேந்திர குல வேளாளர்கள் சிறுசிறு குழுக்களாக இசுலாமியச் சமயத்தைத் தழுவினர். இதனை யொட்டி “மறு மதமாற்றம்’, மதமாற்றத்திற்கு எதிரான “தாய்மதம் திரும்பச் செய்தல்’ என்ற குரல் இந்து மத அடிப்படைவாதிகளால் எழுப்பப்பட்டது. வடபுலத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் துறவியர்கள் மீனாட்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதனையொட்டி ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் இந்து மத அடிப்படைவாத இயக்கம் ஒன்று தமிழ்நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இதன் பின்னர் 01.03.1982 முதல் 15.03.1982 வரை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்ற கடற்கரைக் கிராமத்திலும் வேறு பகுதிகளிலும் மதக்கலவரங்கள் உருவாயின.

இக்கலவரத்தை உருவாக்குவதில் பிள்ளையாரைத் துணைக்கு அழைத்தனர். 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை என்ற ஊரில் உள்ள போக்குவரத்துத் தீவில், பிள்ளையார் சிலை ஒன்றைத் திடீரென்று நிறுவினர். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையால் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது என்ற வதந்தியைத் திட்டமிட்டு உருவாக்கினர். இதனால் பதட்ட நிலை உருவானது. இவ்வாறு குமரி மாவட்ட மதக் கலவரத்திற்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது.

1983-84 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை என்ற பெயரில் இந்துமத அடிப்படைவாதம் மிக எளிய சாமானியர்களைச் சென்றடைந்தது. ஞானாரதம், புனித கங்கை தீர்த்தம் அடங்கிய ரதம், சக்தி ரதம் என்ற பெயர்களில் ரதயாத்திரைகள் நடந்தன.

1989 ஆம் ஆண்டில் பாபர் மசூதியை இடித்து அங்கு இராமர் கோவில் கட்டப் போவதாக இந்துமத இயக்கங்கள் அறிவித்தன. இதன் அடிப்படையில் இராமர் கோவில் கட்டுவதற்கான செங்கற்களை இந்தியா முழுவதிலுமிருந்து அயோத்திக்கு எடுத்துச் செல்லும் செங்கல் ஊர்வலம் 1984 இல் நிகழ்ந்தது. இவ் ஊர்வலங்கள் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டு பிள்ளையார் ஊர்வலத்தை இந்து முன்னணியினர் உருவாக்கி இன்று வரை தொடர்கின்றனர்.

சமய விழாக்களும் அவை தொடர்பான ஊர்வலங்களும் தமிழ்நாட்டிற்குப் புதியனவல்ல. சைவ, வைணவ கோவில் விழாக்களை ஒட்டியும் நாட்டார் கோவில் விழாக்களை ஒட்டியும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் இச்சமயக் கடவுளர்கள் வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி இவ்விழாக்களின் முக்கிய அம்சமாகும்.

– நூலின் பக்க எண் 56-58-ல் ஆசிரியர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்.

இத்தகைய ஊர்வலங்களிலிருந்து இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எவ்வாறு வேறுபட்டது என்பதை பல்வேறு சான்றாதாரங்களிலிருந்து விளக்குகிறார் நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

நூலின் தலைப்பில் உள்ளபடி வெறுமனே பிள்ளையார் என்ற வரம்போடு இந்நூல் நின்றுவிட வில்லை. சமபந்தி – ஓர் எதிர்ப்பண்பாடு; பூசாரிகளுக்கு வலை விரிக்கும் இந்துத்துவ அரசியல்; சாதிய முரண்பாடுகளும் மதமாற்றமும்; தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும் என்பது உள்ளிட்டு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதி பல்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இடம்பெற்றிருக்கிறது.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துகொண்டு பா.ஜ.க. பார்ப்பன பாசிசக்கும்பல் நாட்டையே காவிமயமாக்கத்துடிக்கும் இன்றைய காலகட்டத்தில் வரலாற்றாசிரியர் பேரா.ஆ.சிவசுப்பிரமணியனின் இந்நூல் ஜனநாயக சக்திகளுக்கும், வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் பயன்படும் அரிய நூலாகும்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: பிள்ளையார் அரசியல்
(மத அடிப்படை வாதம் பற்றிய கட்டுரைகள்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
# 16, (142) ஜானி ஜான் கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600 014.
பேச: 044 – 28482441, 42155309.
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

பக்கங்கள்: 204
விலை: ரூ.75.00 (மலிவு விலை பதிப்பு)

இணையத்தில் வாங்க: மெரினா புக்ஸ் (இங்கு ஆறு டாலர் என்று போட்டிருக்கிறார்கள்)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகலாயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று நடைபெற்ற மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமைதாங்கினார். இக்கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் காணொளியில் முதலில் பேரா. ஆனந்த் தெல்தும்டே குறித்து தோழர் மருதையனின் அறிமுக உரையும், அடுத்ததாக ஆனந்த் தெல்தும்டேவின் ஆங்கில உரையும், இறுதியாக அவ்வுரைக்கு தோழர் தியாகு செய்த மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது. அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு..

”நாம் வலியுறுத்தும் செய்தி நாம் ஆபத்தான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். காங்கிரசுக்கும் பி.ஜே,பி-கும் முக்கிய வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் சந்தர்ப்பத்தின் தேவையை ஒட்டி செயல்படுகிறது. ஆனால் பாஜக ஒரு சித்தாந்தத்தோடு, இந்துத்துவா – இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது.

பீமா கோரெகான் கலவரத்தில் முக்கியக் குற்றவாளியான சம்பாஜி பீடே, மோடியால் தனது குருநாதர் எனப் புகழப்பட்டவர். இந்தக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டது இந்துத்துவக் கும்பல். மராத்திய அரசன் சிவாஜியின் மகனின் சமாதியிலிருந்து கலவரத்தை தூண்ட நினைத்தது இந்துத்துவக் கும்பல். அது உள்ளூர் மக்களால் முறியடிக்கப்பட்டது.

பீமா கோரெகான் கலவரத்துக்கு முன்னால் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டில் வன்முறை வெறியேற்றும் விதத்தில் எதுவும் பேசப்படவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எல்கார் பரிஷத் ஏற்பாட்டாளர்களை மாவோயிஸ்டுகள் என திட்டமிட்டு குறிப்பிட்டது அரசு. அதன் ஏற்பாட்டாளர்களின் வீடுகளில் சென்று அவர்களது கணிணிகளைக் கைப்பற்றி அதில் பல்வேறு கடிதங்களை அவர்களே உருவாக்கி அதனடிப்படையில் பொய் வழக்கு புனைந்தார்கள்.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் போலியானவை என பலரும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மோதல் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் சஹானி அவர்கள் இதை விரிவாக விளக்கியுள்ளார். கடிதம் போலி என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். ஆனால் விசயம் என்னவென்றால், இந்த ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள்தான் இங்கு பிரச்சினை.

மோடியின் ஆட்சியில் அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கின்றன. எதிர்கட்சிகள் கடுமையாக சிதைந்திருக்கின்றன. மக்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  அடுத்த தேர்தலுக்கு நேரம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், நாம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்”

– வினவு களச் செய்தியாளர்

நமது நரிக்குறவர் மக்கள் பிரசவம் பார்ப்பது வீட்டிலா மருத்துவமனையிலா ?

பெண்களின் பேறுகால நேரத்தை வீட்டில் இயற்கை பிரசவம் எனும் பேரில் அபாயகரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் ஹீலர் பாஸ்கர். அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துவிட்டார். திருப்பூரில் நடந்த கிருத்திகாவின் உயிர்பலியும் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் மக்களிடம் இன்னும் ஓயவில்லை. பிரசவம் குறித்தான பல தலைப்புகளின் கீழ் ஊடகங்களில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பிரசவம் குறித்த நவீன மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வில் கிராமப்புறம் தான் பின்தங்கி உள்ளது. பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதமும் கிராமத்தில் தான் அதிகம் உள்ளது. இருந்த போதிலும் கிராமத்து மக்களும் மருத்துவமனை சென்று பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டும் என விழிப்படைந்து வருகின்றனர்.

இன்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பிரசவம் குறித்த விழிப்புணர்வு எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தது. ஹீலர் பாஸ்கரையோ அவர் பிரச்சாரம் செய்யும் ’வீட்டில் இயற்கை பிரசவ’ உரைகளை கேட்டிராத நரிக்குறவர் மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் நுழைந்தோம்.

பெரும்பாலான ஆண்கள், பெண்கள் வேலைக்கு சென்றிருந்தனர். மீதமுள்ள சில பேர் இரண்டு குழுவாக பிரிந்து பணம் வைத்து சீட்டுக் கட்டு விளையாடினர். இவர்களுக்கான சாப்பாட்டை வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் பையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். ஒருவர் அணில் கறியை உறித்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் பசியோடு விளையாடிக் கொண்டிருந்தனர். எங்களை கண்டு கொள்வார் யாருமில்லை.

அவர்களிடம் பேசிப் பார்த்த வரையில் பிரசவத்தோடு தாய் மரணமோ, பிள்ளைகளின் மரணமோ எதனையும் சகஜமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. முன்பு இருந்த சத்துணவு, ஆரோக்கியம், அதிக வேலை போன்ற பொதுவான பொதுப்புத்தி நம்பிக்கைகள் குறவர் இன மக்களிடம் மட்டுமல்ல, நாங்கள் சந்தித்த செவிலியரிடம் கூட இருந்தது. இதுதான் ஹீலர் பாஸ்கர் போன்றோரது உரைகள் மக்களிடம் எடுபடுவதற்கான அடிப்படை.

தற்போது மருத்தவமனைகள் இல்லையென்றால் அதிக மரணம் என்று கூறும் குறவர் இன மக்கள், முந்தைய அதிக மரணங்களை இயற்கையானது என்று கருதுகிறார்கள். இன்றும் கூட வேறுவழியில்லை என்றால் வீட்டிலேயே பிரசவம் என்பது கூட சிறு எண்ணிக்கையில் உண்டு. பொதுவில் மருத்துவ முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், அரசு உதவிகள் என்பவையே குறவர் இன மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை உணரலாம். எனினும் இன்றும் கூட இந்த மக்கள் தமக்கென்று சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பற்ற பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அரசு மருத்தவமனைகள் இல்லை என்றால் நாம், நமது குறவர் இன மக்களையே முற்றிலும் இழக்க வேண்டியிருக்கும்.

ரம்யா

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னோட பிரசவத்த பத்தி வேணுன்னா செல்றேன். எனக்கு வயசு 17. கர்பமாயி நாலு மாசத்துக்கு பிறகு நர்சம்மா வந்து கணக்கெடுத்தாங்க. சத்து குறைவா இருக்குன்னு ஆஸ்பத்திரி போக சொன்னாங்க. அங்க போனதும் ரத்தம் குறைவா இருக்குன்னு ரத்தமெல்லாம் ஏத்துனாங்க. ஊசி போட்டாங்க. நர்சக்கா வந்து மாசா மாசம் சத்துமாவு தருவாங்க, பிரசவத்துக்கு பணம் வாங்கி கொடுத்தாங்க.

நாங்க ஆஸ்பத்திரி போகாம இருந்தா இதெல்லாம் கெடைச்சிருக்குமா. நாங்க என்னத்த பெரிசா வீட்டுல சாப்புட்ற போறோம். மிஞ்சி மிஞ்சி போனா எங்க வீட்டுக்காரு எலி புடிச்சாந்து கறி ஆக்கி தருவாரு. பெரும்பாலும் சோறு ஆக்க மாட்டோம் கடையில டீ பன்னு வாங்கி திம்போம் ஒரு நேரம் சோறோ, டிபனோ வாங்கி திம்போம்.

சங்கீதா

எங்க அம்மாவெல்லாம் வீட்டுலதான் கொழந்த பெத்துகிட்டாங்க. இப்ப நானும் எங்க அக்கால்லாம் ஆஸ்பத்திரியில போயிதான் கொழந்த பெத்துகிட்டோம். ஒரு வருசத்துக்குள்ள எனக்கு ரெண்டு பிள்ள கலைச்சி போச்சு. மொதல்ல பிள்ள உருவானப்பையும் ஆஸ்பத்திரி போகல, கலைஞ்சப்பையும் போகல. ரெண்டாவதா கலைஞ்சப்ப வீடு முழுக்க ரத்தம், உடம்பு முடியாமெ ஆஸ்பத்திரி போனோம். பிள்ள உருவான ஆரம்பத்துல புருச பொஞ்சாதி சேத்துருக்க கூடாது அதனாலதான் கொழந்த கலைஞ்சு போச்சுன்னு டாக்டருங்க சொன்னாங்க. அவங்க சொன்னத கேட்டுதான் மூணாவதா இந்தக் கொழந்த.

மலர்

முன்னெல்லாம் எங்க ஆளுங்க வீட்டுலதான் கொழந்த பெத்துக்குவோம். இப்ப கொஞ்ச வருசமாதான் ஆஸ்பத்திரி போராங்க. எங்க ஆளுங்கள்ள யாரு தைரியமான பொம்பளையோ அவங்கதான் பிரசவம் பாப்பாங்க. தானா வெளிய வருதான்னு கொஞ்ச நேரம் பொருத்துருந்து பாப்பாங்க. இல்லன்னா கையி ரெண்டையும் கயித்தால மேல தூக்கி கட்டிட்டு மேல் வயித்துல கைய வச்சு கீழ அமுக்குவாங்க. பலதடவ செத்துக்கூட போயிடும். எண்ணிக்க இல்லாமெ பெத்துக்கறதால எறந்தே பொறந்துருச்சுன்னாலும் பெருசா கவலப்பட மாட்டோம்.

ஆத்தாளும் மகளும் ஒன்னா கொழந்த பெத்துப்போம். குடும்ப கட்டுப்பாடே பண்ணிக்க மாட்டோம். இப்ப அதெல்லாம் மாறி போச்சு. எச்சி எலை எடுத்துகிட்டு காடு மேடு சுத்திகிட்டு ஊசி, பாசிமணிய பழய கஞ்சிக்கி குடுத்துட்டு ஊருக்குள்ளேயே இருந்தப்பதான் வீட்டுலேயே பிரசவமெல்லாம். இப்ப அரசு ஆஸ்பத்திரியிலதான் நாங்க யாவரமே பாக்குறோம். ஊசி, பாசியோட சேத்து வேற சில சாமானும் வாங்கி வச்சு டவுனுப்பக்கம் போயி விக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லாத்துக்கும் ஆஸ்பத்திரிக்கு போவோம்.

மஞ்சுளா

நாங்களும் நாகரிகமா மாறிட்டு வர்ரோம். எச்சிலல எடுக்குறது இல்லை, நெதமும் குளிப்போம், வெளியூரு போன மாராப்பு போட்டு சேல கட்டுவோம். எங்க பசங்க ஐஸ்கூலுல படிக்கிறாங்க. முன்னல்லாம் நாகரிகமா இல்லன்னு சொல்லி ஆஸ்பத்திரியில டாக்டருங்க திட்டுவாங்க. குளிச்சுட்டு வாங்கன்னு சொல்லுவாங்க. இப்ப மாறிட்டதால எல்லா வைத்தியத்துக்கும் ஆஸ்பத்திரிதான் போறோம்.

முன்ன காடை, கவுதாரி, நரிக்கறி, முயல் கறின்னு தின்னுட்டு ஒடம்பு தெடமா வச்சுருப்போம். காட்டு மூலிகை, விலங்கோட எழும்பு, ரெக்க எல்லாத்தையும் கலந்து எரிச்சு எந்த நோயா இருந்தாலும் நாங்களே மருந்து, தைலம் தயாரிப்போம். அதே மாறி பிரசவமும் நாங்களே பாத்துப்போம். இப்ப எங்க வாழ்க்கையே மாறி போச்சு. ஓசிக்காக யாருட்டையும் கையேந்தாம ஒழைக்க ஆரம்பிச்சுட்டோம். நாங்களும் ஒங்களப் போல படிச்சவங்க கிட்டதான் வைத்தியம் பாத்துக்குறோம்.

வனிதா (நரிக்குறவர்களுக்கு சாப்பாடு விற்பவர்.)

அந்த காலம் இந்த காலமுன்னு இல்லிங்க எந்த காலத்துலயும் பிரசவமுன்னாலே பொம்பளைக்கி மறு பொறப்புதான். கெவுருமெண்டு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுல போயி பாருங்க பொம்பளையாவே பொறக்க கூடாதுன்னு தோணும். வலி தாங்க முடியாத பொம்பளைங்க அல்லாகு அக்பர் அல்லாகு அக்பர், ஏசப்பா ஏசப்பா, மகமாயி, அய்யனாரப்பா, ஏழுமலையானே, கருமாரின்னு தினுசு தினுசா கத்துராங்க. பிள்ள வெளிய வரப்போர நேரத்துல உயிரு பிரிஞ்சுருமுன்னுதான் நெனப்போம். அந்த நேரத்துல தாயும் பிள்ளையும் நல்லபடியாக்குற டாக்டருங்கதான் தெய்வம்.

பத்மா (நர்ஸ் புகைப்படம் தவிர்தார்.)

அந்த காலத்துல கலப்புள்ள(12) பெத்தவங்கள்ளாம் இருக்காங்க. பெத்ததுல பாதிக்கு மேல மண்ணுக்குதான் குடுத்துருப்பாங்க. இருக்குமோ செத்துருமோன்னு பயத்துலதான் அந்த காலத்துல சனங்க பத்து பிள்ளைங்களுக்கு மேல பெத்துகிட்டாங்க. பொறந்தது எல்லாம் முழுசா உயிரோட யாருக்கும் இருந்தது கெடையாது. இன்னைக்கி அப்புடி இல்லையே கணக்கா ரெண்டு பெத்துக்குறாங்க. ஏன்னா டாக்டருங்க எப்பேர்பட்ட பிரச்சனையையும் கண்டுபுடிச்சு காவந்து பன்றாங்க. பிள்ளையே பொறக்காதவங்களுக்கு கூட பிள்ளைய பொறக்க வக்கிராங்க.

அந்த காலத்துல வீட்டுலேயே அத்தன புள்ளையும் அசால்டா பெத்துகிட்டாங்கன்னா அப்ப நெலமெ வேற. அந்த காலத்துல கம்பு, கேப்பன்னு தின்னுட்டு மாங்கு மாங்குன்னு வேல செய்வாங்களாம். ஒரு நாளைக்கி பத்து மரக்கா நெல்லு குந்துவாங்களாம். பத்து புள்ளகுட்டி இருந்தாலும் கம்பு, கேப்பன்னு கல்லு திருவையுல மாவு அறைப்பாங்களாம். கெனத்துல தண்ணி எடுப்பாங்க, வயலுக்கு பாரம் சுமப்பாங்க. அன்னைக்கி சாப்புட்ட சாப்பாட்டுல சத்து கெடச்சது செஞ்ச வேலையில பிரசவத்துக்கான வழி முறையும் இருந்துச்சு. இன்னைக்கி அப்படியா வாழ்ரோம்.

சாப்புற சாப்பாடுல இருந்த சுவாசிக்கிற காத்து வரைக்கும் எதுவும் தரமானது கெடையாது. எல்லாத்துலயும் கெடுதல் கலந்துடுச்சு. சாப்பாட்டுல கெடைக்க வேண்டிய சத்தெல்லாம் மாத்தர வடிவத்துல தரவேண்டிருக்கு. ஆத்துல வர்ர மீனுல கூட ருசியில்ல. எல்லாம் செயற்கையா மாறிப் போச்சு. ஆஸ்பத்திரியில போயி பாருங்க சுகப்பிரசவம் நடக்குற பல பொம்பளைக்கி முக்கக் கூட தெம்பு இல்ல. குளுக்கோச ஏத்தி ஏத்தி முக்க சொல்ல வேண்டிருக்க. இந்த நெலையில மருத்துவம் இல்லாமெ மகப்பேறு கெடையாதுங்க.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !

ஸ்ஸார் ஸ்டீல் (Essar Steel) என்ற நிறுவனம் நாம் கேள்விப்பட்ட நிறுவனம் தான். எஸ்ஸார் பெட்ரோல் பங்குகளை நாம் பார்த்துள்ளோம். இவை இரண்டும் எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனங்கள் தான். ஒரே குழுமத்தின் நிறுவனங்களாக இருந்தாலும், சட்டப்படி இவை தனித்தனி நிறுவனங்கள்.

எஸ்ஸார் ஸ்டீல், மற்ற பல ஸ்டீல் நிறுவனங்களைப் போல, வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை. செலுத்தாததால், அது திவாலான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

எஸ்ஸார் ஸ்டீல் கடன் தரவில்லை என்றால் வங்கிகள் எஸ்ஸார் பெட்ரோல் பங்கிடம் போய் கேட்க முடியாது, ஏனென்றால், சட்டப்படி அவை தனித்தனி நிறுவனங்கள். ஒரே முதலாளி, ஒரே நிர்வாகம் எல்லாம் இருந்தாலும் அவை தனித்தனியாக பதியப்பட்ட நிறுவனங்கள். இந்த ‘தனித்தனி’ விவகாரம் இந்த கட்டுரைக்கு அவ்வளவு சம்மந்தம் இல்லாத விடயம் என்பதால் இப்போது இதை விட்டுவிடுவோம், வேறொரு கட்டுரையில் இதை பற்றி பார்ப்போம், மீண்டும் வாராக்கடனுக்கு செல்வோம்.

எஸ்ஸார் ஸ்டீல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், திவாலான கம்பெனி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. திவாலான கம்பெனிகளை ஏலம் விட்டு கடனை திரும்பப்பெற 2016-இல் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தான் Insolvency and Bankruptcy Code, சுருக்கமாக IBC. இந்த IBC-படி திவாலான கம்பெனிகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் வரும் பணம் கடன் தந்த வங்கிகளுக்கு பிரித்து தரப்படும். (இந்த IBC இந்திய சொத்துக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று விமர்சனங்கள் உள்ளன).

ஏலத்தின் முதல் சுற்றில், ரஷ்யாவை சேர்ந்த நியூமெட்டல் (Numetal), வேதாந்தா (Vedanta – ஸ்டெர்லையிட் கம்பனியின் ஓனர்), மற்றும், ஆர்ஸலர்-மிட்டல் (ArcelorMittal) ஆகிய மூன்று நிறுவனங்கள் போட்டியிட்டன.

ஆர்ஸலர்-மிட்டல் மற்றும் நியூமெட்டல் நிறுவனங்கள் முதல் சுற்று ஏலத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டன.

ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு. ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி CEO திரு.மிட்டல், KSS Patron – கே.எஸ்.எஸ். பேட்ரான் மற்றும் Uttam Galva Steel – உத்தம் கால்வா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் promotor- துவக்கிய முதலாளியாக இருந்தார். KSS Patron மற்றும் Uttam Galva Steel என்ற இரண்டு நிறுவனங்களுமே கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள். IBC-படி ஏற்கனவே வாராக்கடன் இருக்கும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் எந்த வாராக்கடன் ஏலத்திலும் பங்கு பெற முடியாது. இது மிட்டலுக்கும் தெரியும், அதனால் தான் ஏலத்தில் பங்குபெறுவதற்கு முன்பே அவருக்கு KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களில் இருந்த பங்குகளை விற்றுவிட்டு ஏலத்தில் பங்கு கொண்டார்.

IBC இதில் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறது. வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்ட கம்பெனியில் இருந்து ஒருவர் வெளியேறினாலும், அந்த கம்பெனி வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் அந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்திருந்தால், அவரால் IBC நடத்தும் ஏலத்தில் கலந்து கொள்ளும் தகுதியை இழக்கிறார்.

எஸ்ஸார் இரும்பு தொழிற்சாலை.

அதனால் தான் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களில் இருந்து வெளியேறி இருந்தாலும் கூட ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

நியூமெட்டல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு. நியூமெட்டல் என்பது ஒரு கூட்டமைப்பு, VTB என்ற ரஷ்யா வங்கி கூட்டிய கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பில் ரேவந் ருயா என்பவரும் இருந்தார். ரேவந் ருயா யாரென்றால், ஏலத்தில் இருக்கிறதே எஸ்ஸார் ஸ்டீல் அந்த நிறுவனத்தின் promotor ரவி ருயாவின் மகன். அப்பா கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த மாட்டார். அந்த சொத்து ஏலத்தில் வரும்போது குறைந்த விலையில் மகனே அதை வாங்குவார்! அப்படி ஒரு விளையாட்டு இவர்களுக்கு!

IBC-படி இப்படி இருப்பவர்களும் தகுதி இழக்கின்றனர். அதனால் நியூமெட்டலும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது.

ஆர்ஸலர்-மிட்டல் மற்றும் நியூமெட்டல் நிறுவனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டவுடன் நீதிமன்றம் சென்றன. நியூமெட்டல் ரேவந் ருயாவை தனது கூட்டமைப்பில் இருந்து நீக்கிவிடுவதாக நீதி மன்றத்திடம் சொன்னது. நீங்கியதால் ஏலத்துக்கு தகுதி பெற்று இரண்டாம் ஏலத்தில் பங்கு பெற்றது.

ஆர்ஸலர்-மிட்டலுக்கு நீதி மன்றம் ஒரு உத்தரவு போட்டது. KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன்களை செலுத்திவிட்டால் ஆர்ஸலர்-மிட்டலும் ஏலத்தில் பங்கு பெறலாம் என்று நீதி மன்றம் சொன்னது.

இரண்டாம் கட்ட ஏலத்தில் ஆர்ஸலர்-மிட்டலும் ஏலத்தொகை கூறியது, அதாவது ஏலத்தில் பங்கு பெற்றது. நாம் என்ன நினைப்போம், ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடனை செலுத்திவிட்டு ஏலத்தில் பங்கு பெறுகிறது என்று தானே, அது தான் இல்லை. அது சாதாரண மனிதர்கள் செய்வது. இது ஆர்ஸலர்-மிட்டல், பல நாடுகளில் நலிவடைந்த நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி பலரை ஏமாற்றி அதில் லாபம் சேர்த்து வளர்ந்த நிறுவனம். அவர்களிடம் இருந்து லேசில் பணம் வாங்கிவிட முடியாது!

ஆர்ஸலர்-மிட்டல் என்ன சொன்னது தெரியுமா? – ‘நாங்கள் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை ஒரு Escrow கணக்கில் செலுத்தி விடுகிறோம், நாங்கள் ஏலத்தில் வெற்றி பெற்றால், அந்த escrow கணக்கில் இருக்கும் பணம் இந்த நிறுவனங்களின் கடனை செலுத்த சென்றுவிடும்’. Escrow கணக்கு என்பது வங்கிகள் ஒரு நோக்கத்துக்கு என்று திறப்பது, அந்த நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்துக்கும் அந்த பணத்தை உபயோகப்படுத்த முடியாது. ஆர்ஸலர்-மிட்டல் திறந்த escrow கணக்கின் நோக்கம் என்னவாக இருக்குமென்றால், ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் ஏலத்தில் வென்றால் escrow கணக்கில் இருக்கும் பணம் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களின் கடனை செலுத்த பயன்படும், வெற்றி பெறாவிட்டால் அந்த கணக்கில் இருக்கும் பணம் திரும்ப ஆர்ஸலர்-மிட்டலுக்கே போய்விடும். வெற்றி பெற்றுவிட்டு அந்த கணக்கில் இருக்கும் பணத்தை செலுத்த மாட்டேன் என்று ஆர்ஸலர்-மிட்டலும் சொல்ல முடியாது, வெற்றி பெறாவிட்டால் கடன் தந்த வங்கிகள் அந்த பணம் எங்களுக்கு சொந்தம் என்றும் சொல்ல முடியாது.

IBC மற்றும் நீதி மன்றம் சொல்வதற்கும், ஆர்ஸலர்-மிட்டல் சொல்வதற்கும் உள்ள முரண் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் எளிய மொழியில் சொல்கிறேன்.

நீதி மன்றம்: ‘நீ முதலாளியாக இருந்த இரண்டு நிறுவனங்களின் கடனை செலுத்திவிட்டு இந்த ஏலத்தில் பங்கு எடுக்கலாம்’

ஆர்ஸலர்-மிட்டல்: ‘ஏலத்தில் பங்கு எடுத்து வெற்றி பெற்றால் அந்த இரண்டு நிறுவனங்களின் கடனை செலுத்தி விடுகிறேன்’.

ஆர்ஸலர்-மிட்டல் எவ்வளவு தந்திரமாக வேலை செய்கிறது என்று புரிந்திருக்கும்.

இதில் இன்னொன்றும் இருக்கிறது, ஆர்ஸலர்-மிட்டல் முதலாளியாக இருந்த நிறுவனங்கள் கடனை செலுத்தாமல் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது கொஞ்சம் நெருக்கியதும் ஆர்ஸலர்-மிட்டல் கடனை செலுத்துகிறேன் என்று சொல்கிறது. இதன் அர்த்தம் என்ன? முன்பு கடனை செலுத்த முடிந்தும் செலுத்தாமல் இருந்திருக்கிறது ஆர்ஸலர்-மிட்டல்.

ஆர்ஸலர்-மிட்டல் ஏமாற்றுகிறது என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட புரியும், ஆனால் நமது சட்டங்கள் நீதிமன்றங்கள் ஆர்ஸலர்-மிட்டலை எதுவும் செய்ய முடியாது செய்ய மாட்டார்கள்.

இதுவே ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்திலோ அல்லது விவசாய குடும்பத்திலோ நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வங்கிகள் எவ்வாறு வசூல் செய்திருப்பார்கள்?! சம்மந்தப்பட்டார் வீட்டுக்கு போய் கேவலமாக திட்டி அந்த வீட்டாரை தற்கொலை செய்ய வைத்திருப்பார்கள். இதிலும் சட்டப்படி அவ்வாறு எல்லாம் போய் திட்டக்கூடாது. ஆனால், இதில் எல்லாம் சட்டத்தை யாரும் பார்ப்பதும் இல்லை, சட்டமும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை.

சரி இந்த நிறுவனங்களின் கடன் எவ்வளவு? ஏலம் கூறும் தொகை எவ்வளவு? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

எஸ்ஸார் ஸ்டீல் (ஏலம் விடப்படும் நிறுவனம்) வாங்கி கட்டாத கடன் – ரூ. 49 ஆயிரம் கோடி.

ஆர்ஸலர்-மிட்டல் promotor-ஆக இருக்கும் KSS Patron மற்றும் Uttam Galva Steel மொத்தமாக செலுத்தாமல் இருக்கும் கடன் – ரூ. 7 ஆயிரம் கோடி.
வேதாந்தா ஏலம் கோரும் தொகை – ரூ. 34 ஆயிரம் கோடி.
நியூமெட்டல் ஏலம் கோரும் தொகை – ரூ. 37 ஆயிரம் கோடி.
ஆர்ஸலர்-மிட்டல் ஏலம் கோரும் தொகை – ரூ. 42 ஆயிரம் கோடி.

இதில் வெற்றி பெரும் நிறுவனமும் ஏலத்தொகையை உடனே கொடுத்துவிட மாட்டார்கள், தவணை முறையில் சில ஆண்டுகளில் தருவார்கள். அதனால் இந்த ஏலம் விட்ட பணமும் ஏப்பம் விடப்படலாம்.

இருந்தாலும், அதிகபட்ச ஏலத்தொகையான ரூ. 42 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளலாம். அப்படி கிடைத்தாலும் வங்கிகள் இழக்கும் தொகை ரூ. 9 ஆயிரம் கோடி.

IBC முறையில் ஏலம் நடைபெறும் நிறுவனங்களில் இது சின்ன ஏலம், அதனால் வெறும் 9 ஆயிரம் கோடி, மற்ற ஏலங்களில் பல 10 ஆயிரம் கோடிகளில் தான் வங்கிகள் பணத்தை இழக்கின்றன.

இப்படி வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut, அதாவது முடி வெட்டிக்கொள்வது. வங்கிகள் முடி வெட்டிக்கொள்கின்றன என்று பொருள் கொள்ளலாம்.

கேரளா வெள்ளத்துக்கு கேட்கும் நிவாரணம் எவ்வளவு?

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை – ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ. 600 கோடி, வேலையில் இருப்பவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி.

செவிலியர்கள் போராடியதும் அவர்களை நீதிமன்றம் தரக்குறைவாக நடத்தியதும் நமக்கு ஞாபகம் இருக்கும். அந்த போராட்டத்தின் சில தகவல்கள். 2015இல் தமிழக அரசு 11 ஆயிரம் செவிலியர்களை பணியில் அமர்த்தியது. இவர்கள் ஊதிய உயர்வு கேட்டு தான் போராடினார்கள். இவர்களின் இப்போதைய மாத சம்பளம் சுமார் ரூ. 8 ஆயிரம். மொத்தம் வருடத்திற்கு ரூ. 108 கோடி இருந்தால் அனைவருக்கும் சம்பளம் தரலாம். சம்பளத்தை இரண்டுமடங்காக்க ரூ. 200 கோடி சொச்சம் இருந்தால் போதும். எஸ்ஸார் ஸ்டீல்க்கு வங்கிகள் ‘முடிவெட்டி’கொள்ளும் தொகை ரூ. 9 ஆயிரம் கோடி.

அர்பன் நக்சல்கள் தான் நமது நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்!
ஜெயா சாவில் பெரும் மர்மம் உள்ளது!
மோடி நாட்டுக்காக 18 மணி நேரம் உழைக்கிறார்!
போலோ பாரத் மாத்தா கி ஜெய்!

முகநூலில்: Arun Karthik

மூலம்: ArcelorMittal raises bid for Essar Steel

நாம் ஒரு ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம் ! அச்சுறுத்தும் பாசிசம் அரங்கக் கூட்ட உரைகள் !

பீமே கோரேகான் சம்பவத்தை சாக்கிட்டு அறிவுத்துறையினர் மீது அடுத்தடுத்த அடக்குமுறைகள் ஏவப்படும் இந்தச் சூழலில், ”அச்சுறுத்தும் பாசிசம் : செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற முழக்கத்தினை முன்வைத்து, சென்னையில் அரங்கக் கூட்டத்தினை நடத்தியது, மக்கள் அதிகாரம்.

செப்டம்பர் – 08 அன்று மாலை, சென்னை நிருபர்கள் சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவாவைச் சேர்ந்த, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் பொதுச்செயலர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே, பி.யு.சி.எல். தமிழ்நாடு – புதுவை மாநிலத்தின் பொதுச்செயலர் பேராசிரியர் முரளி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையன், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டு சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தினர்களின் உரையின் இறுதியில், கேள்வி பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ஆனந்த் தெல்தும்டே, தோழர் மருதையன், தோழர் தியாகு, தோழர் ராஜூ ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்த அரங்கக்கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகளை கீழே தொகுத்தளிக்கிறோம். உரைகள் வீடியோ பதிவாக விரைவில் வினவு தளத்திலேயே வெளியிடப்படும்.

தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

இந்தியா முழுக்க பத்திரிகையாளர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான அடக்குமுறை என்பது மிகவும் அதிகமாகி வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி தான் பல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேடல் தொடங்கப்பட்டது. அதில் ஒன்று தான்  ஆனந்த் தெல்தும்டே வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மதிக்கப்படக்கூடிய பல நபர்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டினார்கள்.

மோடி இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு வந்த, மேக் இன் இந்தியா, சுவட்ச் பாரத்,  பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., என அனைத்து திட்டங்களும் தோற்றுப் போய் விட்டன. நூற்றுக்கணக்கான‌ கூலிப்படைகளை ஆர்.எஸ்.எஸ். இறக்கி உள்ளது. இவர்கள் மூலம் தான் கொலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கெளரி லங்கேஷ், தபோல்கர் போன்றவர்கள் ஒரே துப்பாக்கியால் தான் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையும் கர்நாடக புலனாய்வு துறை தான் கண்டு பிடித்து சொன்னது. வட இந்தியாவில் செயல்பாட்டாளர்கள் அனைவருமே ஒடுக்கப்படுகிறார்கள். உணர்வுப் பூர்வமாக போராடும் மக்கள் மத்தியில் நாம் அறிவு பூர்வமாக, அறிவியல் பூர்வமாக எடுத்துச் சொல்லும் போது போராட்டம் தீவிரமடைகிறது. வரலாற்றுப் பூர்வமான தகவல்களை சொல்லும் போது மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தூத்துக்குடி போராட்டம் 99 நாள் நடந்த போராட்டம் 100 வது நாள் மட்டும் எப்படி கலவரமாகும் என்று கேள்வி கேட்கிறார்கள். அந்த 99 நாளும் அரசு எப்படி கலவரத்தை போராட்டத்தில் உருவாக்கலாம் என்று சிந்தித்து திட்டமிட்டு 100 வது நாள் கலவரத்தை அரசுதான் திட்டமிட்டு செய்தது. தமிழிசையை பார்த்து பி.ஜே.பி. பாசிச ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி சோஃபியா முழக்கமிட்டார். அது மிகப்பெரிய குற்றம் போல் கூவுகின்றனர். என்ன நடக்கிறது தமிழகத்தில்? பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு. கருத்துரிமைக்கு தடை.

மக்கள் அதிகார பொதுக்கூட்டத்திற்கு திருச்சியில் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் கேட்டால் உங்கள் மீது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல வழக்கு உள்ளது  மேலும் உங்களை அலசி ஆராய்ந்ததில் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிகிறது எனவே உங்கள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அடக்குமுறை, பாசிசம், அச்சுறுத்தல் என்று  ஜனநாயகமே இல்லாமல் செய்கின்றனர். இதைத் தான் நாம் விவாதிக்க வேண்டும். அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

பேராசிரியர் முரளி, பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை.

இது ஒரு அர்த்தமுள்ள நிகழ்வு. ஏன் இது போன்ற கைது என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஜனநாயகக் குரல்களை நெறிப்பதற்கு விதவிதமாக கற்றுத் தேர்ந்து உள்ளனர். பீமா கோரேகான் நிகழ்ச்சியில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்தப் பிரச்சனையை உருவாக்கியது இந்து தீவிரவாதம் தான். 3 மாதங்களுக்கு மட்டும் 22 பேர் UAPA-உபாவில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் என்ன செய்தனர். அவர்கள் மீதும் தேசதுரோக வழக்கு, அடக்குமுறை. என் வீட்டில் விடியற் காலை 3 மணிக்கு வந்து காவல் துறையினர் உனக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்கும் என்ன தொடர்பு, வாஞ்சிநாதனை எப்படித் தெரியும் என்று கேட்கின்றனர். நான் அவர் ஒரு வழக்கறிஞர், பார்த்துள்ளேன்; பேசுவேன்; என்றதற்கு என் மீது வழக்கு. ஆர்.எஸ்.எஸ் – இன் அடாவடித்தனம் மிகவும் அதிகமாகி வருகிறது. திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்பட்ட கொலைகாரர்களை கொண்டுதான் கொலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடக்குமுறைக்கு புதிய உத்திகளை கடைபிடிக்கின்றனர். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எல்லாவற்றின் மீதும் அடக்குமுறை. நீதிமன்றத்திலும் நமக்கு கழுத்தறுப்பு. சட்டத்திற்கு புறம்பாகத்தான் அவர்கள் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறார்கள். ஒடுக்குவது, நசுக்குவது, இதற்காக சட்டங்களை அதிகமாக போட்டு உள்ளனர். மக்களின் குரல் என்பது நீதி மன்றத்தின் தீர்ப்பையும் மாற்றி எழுத வைக்கும். சிறைச்சாலைகளை நாம் நிரப்ப வேண்டும்.

தோழர் தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

சொற்களுக்கு பொருள் தேடுவதுதான் அழகான உரை. சிறைச்சாலையில் எனக்கும் ஒருவருக்கும்  நடைபெற்ற ஒரு உரைடாலில், கைதி என்றால் அதற்கான பொருள் தப்பித்து செல்பவன். அதனால் தான் பெரிய பெரிய காம்பவுண்ட் சுவர். சுற்றி காவலர்கள். அதே போல் நாட்டின் பிரதமர் என்றால் கொலை முயற்சி மிரட்டல் எல்லாம் இருக்கும். அதற்கு தான் பூனைப் படை, புலிப் படை எல்லாம் இருக்கிறது. ஆனாலும் கொலை செய்து விடுவார்கள் என்றால் எப்படி நடக்கும்? மோடி மட்டும் பிரதமர் ஆகாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்பட்டு இருப்பார். கொலை என்பது இவர்கள் பணி. அதனால் தான் யாரை பார்த்தாலும் இவர்களுக்கு கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். மோடி ஒரு RSS வேட்பாளர். மோடி பணியை சரியாக செய்யவில்லை என்றால் மோடியையும் கூட இவர்கள் கொலை செய்வார்கள். கல்புர்கி, கெளரி லங்கேஷ் வரை இவர்கள் தான் கொலை செய்தார்கள். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும்.

வாஞ்சிநாதன், அரிராகவன் மீது பொய் வழக்கு. மக்களை அச்சுறுத்த இது போன்ற வேலைகள். அந்த வகையில் தான் முற்போக்காளர்கள் 5 பேர் கைது. இந்தியாவில் 5 பேர் இல்லப்பா 5,000 பேர் இருக்கிறோம். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும். மோடி ஆட்சியை எதிர்த்து சிறை செல்வது நமக்கு பெருமை. மக்கள் அதிகாரம் முன் எடுக்கும் அனைத்து போராட்டத்திற்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முழுமையாக ஆதரவாக நிற்கும்.

தோழர் மருதையன், மாநில பொது செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்.

உண்மையிலேயே மோடியைக் கொல்ல சதி இருக்கிறதா? உள்துறை அமைச்சகம் மோடியை பாதுகாக்க ஒரு தனி படை அமைத்து இருக்கிறது. அமைச்சர்கள் கூட அனுமதி இல்லாமல் மோடியை பார்க்க போக முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு. தமிழிசையை பார்த்து ஒரு பெண் பா.ஜ.க. ஆட்சி ஒழிக என்றால் உடனே கொலை செய்து விடுவார்கள் என்று கூவுகின்றனர். நாயை தெருவில் பார்த்தால் கடித்து விடுமோ என்று அஞ்சுவோம். அதுவே திருடனாக இருந்தால் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சுவான். அந்த 2 வது பயம் தான் இவர்களுக்கு. சோஃபியா முழக்கமிட்ட நேரத்திலே அதை வாங்கி பின் இருந்தவர்களும் போட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

உச்சநீதிமன்றம் இந்த 5 பேரை முதலில் 6 நாள் காவலில் வைத்தார்கள். முதலில் இவர்களுக்கும் பீமா கோரேகானில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவர்கள் மீது  வழக்கும் இல்லை. ஆனால் இதை நீதிபதி கேட்டால் பதிலும் இல்லை. பல பொய் வழக்குகளை இவர்கள் போட்டு உள்ளனர். இவர்களுக்கு மரண அடி நாம் கொடுக்க வேண்டும். காவல் நிலையத்திற்கு போனாலே தெரியும் எப்படி பொய் வழக்குகள் ஜோடிப்பது என்று அது போல் தான் முற்போக்காள‌ர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு இவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த 4 ½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சிறு தொழில்கள் அழிவு, கொலை இவையெல்லாம் முதலில் அதிர்ச்சியூட்டும் செய்திகள். பின்னர் அதுவே பழகிவிட்டது. இதனால் தான் போர்க்குணமிக்க போராட்டம் இல்லை.

அவசர நிலை என்பது இந்திரா ஆட்சி காலத்தில் கட்டாயமாக திணிக்கப்பட்டது. அனால், அந்த அவசர நிலையே இன்று நமக்கு பழக்கமாக்கப்படுகிறது. தமிழிசையை அச்சுறுத்தியது கேளாத செவிகள் கேட்கட்டும் என்பதுதான். இது தான் சோஃபியாவின் குரல். இல்லையென்றால் நாம் 1000 ஆண்டு அடிமைத் தனத்திற்கு செல்வோம். அனைவரின் குரலும் ஓங்க வேண்டும்” என்று எளிமையாக புரிய வைத்தார்.

ஆனந்த் தெல்தும்டே, பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா.

நாம் வலியுறுத்தும் செய்தி நாம் ஆபத்தான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். காங்கிரசுக்கும் பி.ஜே,பி.-க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் காலத்தின் கட்டாயத்தில் செய்தார்கள். இவர்கள் திட்டமிட்டு இந்துமயம் ஆக்க வேண்டும் என்று  செய்கிறார்கள். பீமா கோரேகானிலும் இவர்கள் தான் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டினார்கள். சிவாஜி சமாதியில் இருந்து தொடங்கினார்கள். உள்ளூர் மக்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த நினைத்தார்கள். ஆனால், ஊர் மக்கள் கூடிப் பேசி இதற்கு இவர்கள் தான் காரணம் என்று தெரிந்த உடன், மக்கள் இந்துத்துவா சக்திகளை எதிர்க்க ஆரம்பித்தனர்.  அங்கு இவர்களால் திட்டமிட்டு கலவரம் ஆக்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு பணம் தருவது என்று பொய் சொல்லி கைது செய்கிறார்கள். அவர்களின் கணினிகளை கைப்பற்றுவதுதான் இவர்களின் முதல் நோக்கம். அதன் மூலமே பொய்யான கடிதங்களை தயாரித்து இவர்களே வெளியிட்டு கைது செய்வார்கள். இதை எங்கு வந்து வேண்டுமானாலும் நான் சொல்லத் தயார். முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் இதை கண்டித்து உள்ளனர். நாம் தனித்தனியாக போராடாமல் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்” என்று கூறினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.