Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 443

மே தினம் : வாகன ஓட்டுநர்கள் – டெக்னீஷியன்கள் சங்கத் தொழிலாளர்களின் சூளுரை !

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் சார்பில், சென்னையில் சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தோழர் இல.தெய்வீகன் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் இல.பழனி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மே தின வரலாறு குறித்தும் அதன் தேவை இன்றுவரை உலகம் முழுவதும் இருந்து வருவதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசிய தோழர் இல.பழனி, மேலும், தொழிலாளர் பிரச்சினைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் துறைசார்ந்த விசயங்களிலிருந்து முதலாளி, போலீசு, தொழிலாளர் துறை, நீதிமன்றம் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை பல்வேறு ஆதாரங்களிலிருந்து அம்பலப்படுத்தினார். மேலும், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல; மாணவர்கள், விவசாயிகள், என உழைக்கும் மக்கள் அனைவருக்குமே இந்த அரசமைப்பு எதிரானதாக அமைந்திருப்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அனைவரும் தனியார் சுயநிதி பள்ளிக் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்கள். வரம்பற்ற வேலை நேரம்; உரிமைகள் ஏதுமற்ற நவீன கொத்தடிமைகளாக நிர்வாகத்தால் நடத்தப்படுவதற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பியவர்கள். சங்கம் அமைத்ததற்காக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள்; வேலை பறிக்கப்பட்டவர்கள்.

வேலை பறிப்பு மற்றும் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், நிர்வாகம் நடத்திய உள்துறை விசாரணைகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைகள், நிர்வாகத்தின் கையாளாகவே நின்று அவர்கள் வழங்கிய தொழிலாளர் விரோத தீர்ப்புகள்… உரிமைக்காகத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் போது போலீசும், நீதித்துறையும் தொழிலாளர்களை கையாண்ட விதம் என நுனி முதல் அடிவரை அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதை தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்தவர்கள்.

தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்கி, புதிய ஜனநாயகத்தைப் படைக்க மே நாளில் சூளுரைத்தனர் இத்தொழிலாளர்கள்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்.

காவிரி உரிமை : சீர்காழி – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது !

பொதுக்கூட்டம்

நாள் : 08.05.2018, மாலை 5:30 மணி.
இடம் : திருமுல்லைவாசல், சீர்காழி.

தலைமை

  • தோழர் இரவி வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், சீர்காழி.

உரையாற்றுவோர்

  • திரு. சிவப்பிரகாசம்,  செயலாளர், கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கம், ஆச்சாள்புரம்.
  • திரு. வில்வநாதன், விவசாயிகள் சங்கம். வேட்டங்குடி.
  • திருமதி. மணிமேகலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், பூம்புகார்.
  • திரு. விஷ்ணு, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம்.
  • தோழர். பெரியார் செல்வம், மாவட்டச் செயலாளர், த.பெ.தி.க, சீர்காழி.
  • திரு. அங்குதன், மாவட்டப் பிரதி நிதி, தி.மு.க., கூழையார். தலைவர், பஞ்சாயத்தார், மீனவ கிராமம் திருமுல்லை வாசல்.
  • பொறியாளர் திருநாவுக்கரசு, தாளாண்மை உழவர் இயக்கம், திருவாரூர்.
  • திரு. வேலு குபேந்திரன், தலைவர், வழக்கறிஞர் சங்கம் மயிலாடுதுறை.
  • திரு. நந்தகுமார், விருத்தாசலம். கடலூர் மா.செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம்.
  • தோழர். முசாகுதீன், வடகால். ம.ம.க. மாநில விசாய அணிச் செயலாளர். சீர்காழி.
  • தோழர்.குணசேகரன், தலைவர், திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.
  • தோழர். இராஜராஜன்,  மாவட்டச் செயலாளர், தமிழர் தேசிய முன்னணி, காத்திருப்பு.
  • தோழர். இரணியன், நில நீர் பாதுகாப்பு இயக்கம்.
  • திரு. இளங்கீரன், தலைவர், காவிரி டெல்டா பா.வி.ச. கூட்டமைப்பு, காட்டுமன்னார்கோவில்.
  • திரு. ஜி.வரதராஜன், மாநில இணைச்செயலாளர், தமிழக காவிரி விவசாய சங்கம், திருவாரூர்.
  • தோழர். காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.
  • தோழர். சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

நன்றியுரை

  • தோழர்.வீரசோழன், மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெறும்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, தொடர்புக்கு : 98434 80587.

ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

1

மார்க்ஸ் பிறந்தார் – 12
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

5. “தத்துவஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது” (தொடர்ச்சி)

டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலும் அதற்கென்று தயாரிக்கப்பட்ட ஆரம்பக் கட்டுரைகளிலும் மார்க்ஸ் டெமாக்கிரீடஸ், எபிகூரஸ் மற்றும் ப்ளுடார்கை எவ்விதமாக வர்ணிக்கிறார் என்பது இக்கண்ணோட்டத்தின்படி சுவாரசியமானதாகும். இத்தத்துவ ஞானிகளைப் பற்றி அவருடைய அணுகுமுறையில், அவர்களிடம் அவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்பதில் இளம் மார்க்சின் ஆளுமையின் கூறுகள் வெளிப்படுகின்றன.

டெமாக்கிரீடஸ், எபிகூரஸ் என்ற இரண்டு தத்துவஞானிகளின் தத்துவங்களும் ஒரே படித்தானவை அல்லது அநேகமாக ஒரே படித்தானவை என்று எப்பொழுதுமே கருதப்பட்டிருக்கின்றன. இக்கருத்து சரியல்ல என்று மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார். அவர்களிருவரும் அணுவாதக் கொள்கையை உருவாக்கி ஒரே விதமாக அதை வளர்த்திருந்த போதிலும் இத்தத்துவத்தின் உண்மை, நம்பத்தக்க நிலை, கையாளுதல் ஆகியன பற்றிய ஒவ்வொன்றிலும் அவர்கள் எதிரும் புதிருமான நிலையில் இருக்கிறார்கள். விஞ்ஞானத்தைப் பற்றி அவர்களுடைய அணுகுமுறை கூட எதிராகவே இருந்தது.

டெமாக்கிரீடஸ்

டெமாக்கிரீடஸ் தன்னுடைய வாழ்க்கை மற்றும் தேடல்களின் கோட்பாட்டைப் பின்வருமாறு உரைத்தார்: “பாரசீகத்தின் மகுடத்தை அடைவதைக் காட்டிலும் ஒரு புதிய காரண காரியத்தைக் கண்டுபிடிப்பது எனக்கு மேலானது!”(1) அவர் எல்லாவற்றிலும் தர்க்கவியலைத் தேடுகிறார், தற்செயலான நிகழ்வு என்பதை நிராகரிக்கிறார்; ஏனென்றால் அது “முழு நிறைவான சிந்தனையுடன் பொருந்தாது”, தான் திரட்டியிருக்கின்ற அறிவைப் பற்றி அவருக்கு எப்பொழுதும் அதிருப்தியே. அவர் வடிவகணிதத்தைக் கற்பதற்காக எகிப்துக்கும் பாரசீகத்திலுள்ள ஹால்டியர்களுக்குச் சென்றார். அவர் இந்தியாவுக்குச் சென்று யோகிகளிடமிருந்து அறிவைச் சேகரித்தார் என்றும் சிலர் கூறுவதுண்டு.

அவருடைய சகாப்தத்தின் கலைக்களஞ்சியப் பரப்பைக் கொண்ட அறிவு பிரபஞ்சத்தைப் பற்றி மிகவும் உருப்படியான, ஊகத் தத்துவத்தை, அணுவாதத் தத்துவத்தை உருவாக்கியது. அத்தத்துவத்தின் முக்கியமான கூறுகளைப் பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி நிரூபித்திருக்கிறது. எனினும் அவர் அதிருப்தியோடிருந்தார். தன்னுடைய கண்ணின் புலனுணர்வு அறிவின் கூர்மையைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக அவர் தன்னைக் குருடாக்கிக் கொண்டார்.

எபிகூரஸ் முற்றிலும் வேறுவிதமான மனிதர், தத்துவஞானத்தைப் பற்றி அவருடைய அணுகுமுறையும் வேறு. டெமாக்கிரீடஸ் எல்லோரிடமிருந்தும் அறிவைத் திரட்ட விரும்பினாரென்றால் எபிகூரஸ் தனக்கு ஆசிரியர் இல்லாததைப் பற்றி, சுயமாகவே கற்றதைப் பற்றி, எந்த உதவியும் இல்லாமல் உண்மையை நோக்கிச் செல்கின்ற வழியை அடைந்ததைப் பற்றிப் பெருமைப்படுபவர்.

டெமாக்கிரீடசின் நிம்மதியற்ற மனம் அவரை உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் துரத்தியது, அவர் வெளிநாடுகளில் எண்பது வருடங்களைக் கழித்தார், ஆனால் எபிகூரஸ் ஏதன்சிலிருந்த தன்னுடைய தோட்டத்தை விட்டு வெளியே இரண்டு அல்லது மூன்று தடவைகள்தான் போயிருக்கிறார், அதுவும் கூட நண்பர்களைச் சந்திப்பதற்காகவே. அவர் தத்துவஞானத்தில் அமைதியையும் இன்பத்தையும் அடைந்தார்; டெமாக்கிரீடசுக்கு எதிரிடையான முறையில் துல்லியமான விஞ்ஞானங்களை நிராகரித்தார்.

எபிகூரஸ்

எல்லாப் பொருட்களைப் பற்றியும் முழுமையான அறிவைத் திரட்ட முடியவில்லையே என்ற வேதனையில் டெமாக்கிரீடஸ் கண்களைக் குருடாக்கிக் கொண்டார்; ஆனால் எபிகூரஸ் மரணம் நெருங்குவதை உணர்ந்தவுடன் வெந்நீரில் குளித்தார், ஒயினைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார், தத்துவஞானத்துக்கு விசுவாசமாக இருக்கும்படி நண்பர்களைக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வுகளைப் புலன்களினால் அறிய முடியும் என்பதில் எபிகூரஸ் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே சூரியன் மிகவும் பெரியது என்று டெமாக்கிரீடஸ் கருதிய பொழுது எபிகூரசுக்கு அது இரண்டடி அளவை அதாவது நம் பார்வைக்குத் தோன்றுகின்ற அளவைக் கொண்டதாக இருந்தது. டெமாக்கிரீடஸ் எல்லாவற்றிலும் பார்க்க முடியும் என்று நம்பிய அவசியத்தை எபிகூரஸ் நிராகரித்தார். அவசியம் என்பது மனிதனை ஒடுக்குகின்ற தவிர்க்க முடியாத விதியாகிய ஊழ் என்று அவர் கருதினார். மனிதனுடைய எல்லா நடவடிக்கைகளையும் முன்பே நிர்ணயிக்கின்ற மதத்துடனும் கடவுள்களுடனும் அவர் அதை இணைக்கிறார். மனிதனுடைய நடத்தை அவனேயே, சந்தர்ப்பத்தையே சார்ந்திருக்க வேண்டும், அவசியத்தை அல்ல.

அவசியத்தில் வாழ்க்கை நடத்துவது துரதிர்ஷ்டம், ஆனால் அத்தகைய வாழ்க்கை எவ்விதத்திலும் அவசியமல்ல என்பார் எபிகூரஸ். சுதந்திரத்துக்கான பாதைகள் எல்லாப் பக்கங்களிலும் திறந்தே இருக்கின்றன; அவை பல, சுருக்கமானவை, சுலபமானவை. ஒரு நபர் அவசியத்தை மட்டுமே “அடக்கிவிட” வேண்டும். ஒரு நபர் அங்கீகரிக்க வேண்டியது “சந்தர்ப்பம், கடவுள் அல்ல”. இதற்கு முற்றிலும் பொருத்தமான முறையில் எபிகூரஸ் தன்னுடைய அணுவாதத் தத்துவத்தில் அணுக்களின் தற்செயலான கீழ்நோக்கிச் சரிதலைக் கொண்டு வருகிறார்; இவ்விஷயத்தில் அவர் டெமாக்கிரீடசிடமிருந்து வேறுபடுகிறார்.

அணுக்கள் தற்செயலாகக் கீழ்நோக்கிச் சரிதல் நகைப்புக்குரியது என்று பலர் கருதினார்கள், அது அணுவாதத் தத்துவத்தைச் செழுமைப்படுத்திய புதுமை, அது அத்தத்துவம் வளர்ச்சியடைவதற்கு உதவியது என்று மார்க்சே முதலில் நிரூபித்தார் (அவருடைய டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையின் நிரந்தரமான முக்கியத்துவம் இதில் அடங்கியிருக்கிறது). மார்க்ஸ் தன்னுடைய இயக்கவியல் உள்ளுணர்ச்சியின் விளைவாக இம்முடிவுக்கு வந்தார்; நவீன அணுவியல் பெளதிகம் நிச்சயமற்ற கோட்பாட்டை முன்வைத்திருப்பதன் மூலம் இதைப் பரிசோதனை முறையில் நிரூபித்திருக்கிறது என்று கூறலாம்.

தத்துவஞானம் தன்னுடைய பொருளாயத ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மிக ஆயுதங்களைத் தத்துவஞானத்தில் காண்கிறது.

நாத்திக மற்றும் பண்டைக்கால கிரேக்க அறிவொளித் தத்துவஞானமாகிய எபிகூரியத் தத்துவஞானம் வாழ்க்கையின் எளிமையான, இயற்கையான மகிழ்ச்சியில் திளைக்கின்ற சுதந்திரமான மனிதனைப் போற்றியது. போலியான தத்துவஞானிகளும் அற்பவாதிகளும் அதைத் தங்களுடைய எரிச்சலான விமர்சனத்துக்கு உட்படுத்தினார்கள்.

இந்த விமர்சகர்களின் முன்னணியில் புகழ் மிகுந்த ப்ளுடார்க் இருந்தார்; அவர் சுயதிருப்தியடைகின்ற முட்டாள்தனத்தின், தன்னை புத்திசாலி என்று நினைக்கின்ற பகட்டான கெளரவத்தின் உருவகம் என்று மார்க்ஸ் கருதினார்.

எபிசுரசின் வாதத்தின் ஒத்திசைவான, நேர்மையான, துணிவான தர்க்க முறையை அதன் முடிவுகள் மதத்தை நிராகரிப்பதற்கு இட்டுச் சென்றாலும் அதைக் கண்டு அஞ்சாத தர்க்க முறையை – ப்ளுடார்கின் கோழைத் தனமான, அரை மனதுடைய, கதம்பவாத நிலையுடன், அவரது கடவுளுக்குப் பயப்படுகின்ற, நன்னெறி சார்ந்த பேச்சுடன், அவருடைய போலித்தனமான குழைவுடன் மார்க்ஸ் வேறுபடுத்திக் காட்டினார்.

தன்னுடைய சொந்தக் “கடமையுணர்ச்சியில்”, “நற்பண்புகளில்”, தன்னுடைய உடல் நலத்தைப் பற்றிய அக்கறையில், மறு உலகத்தில் “நிரந்தரமான இன்பத்தை” அடைய வேண்டும் என்ற அக்கறையில் திருப்தியடைகின்ற சாதாரணமான அறிவின் மலிவான “தத்துவஞானத்துக்கு”, தன்னுடைய சொந்த, அற்பமான “நானின்” வறுமையையும் அவமானத்தையும் நல்லொழுக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் மறைத்துக் கொள்கின்ற “தத்துவஞானத்துக்கு” ப்ளுடார்கின் வாதம் சிறந்த உதாரணமாகும்.

ப்ளுடார்க்

மார்க்சின் மனதில் ப்ளுடார்கின் உருவம் பயத்தினுல் சுருங்கிய, அடிமைத்தனமாகக் கெஞ்சுகின்ற, “நல்லவர்கள் தமது வாழ்க்கையின் பலன்களை வாழ்க்கையோடு இழக்க வேண்டுவது எவ்வளவு அநீதியானது” என்று போதிக்கின்ற மனிதருடன் இணைந்திருந்தது. சிந்தனைத் துறையில் “கண்ணியம்” இல்லாத அனைத்தையும் ப்ளுடார்க் மறுப்பது இயற்கையே. ப்ளுடார்கைப் படிக்கும் பொழுது புழுக்கமான “வகுப்பு அறையில்” உட்கார்ந்திருப்பதைப் போல நாம் உணர்கிறோம். எபிசுரசையும் “உலகத்தின் புத்தம் புதிய, கூருணர்ச்சி உடைய கவிமன்னனாகிய லுக்ரெத்சியசையும் படிக்கின்ற பொழுது கவர்ச்சியான உடையணிந்திருக்கும் துணிச்சலான கழைக் கூத்தாடியைப் பார்க்கிறோம்; நாம் நம்மை மறக்கிறோம், நம்மைக் காட்டிலும் மேலே உயர்கிறோம், வெகு தூரத்துக்கு அப்பால் பார்க்கிறோம், மேலும் சுதந்திரமாக மூச்சு விடுகிறோம்.

சரி, ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற நபரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். “தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் தன்னுடைய சொந்த வளங்களைக் கொண்டு முழுமையான உலகத்தை நிர்மாணிக்க, உலகத்தைப் படைப்போனாக முன்வராத நபர் ஏற்கெனவே ஆன்மாவினால் சாபமிடப்பட்டிருக்கிறார், அவர் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் -ஆனால் அது எதிரான அர்த்தத்தில்: அவர் ஆலயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு ஆன்மாவின் நிரந்தரமான ஆனந்தத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார், தன்னுடைய சொந்தமான, தனிப்பட்ட ஆனந்தத்தைப் பற்றிப் பாட்டுப் பாடியும் இரவு நேரத்தில் தன்னைப் பற்றிக் கனவு காணும்படியும் விதிக்கப்பட்டிருக்கிறார்.”(2)

தத்துவஞானத்தில் ப்ளுடார்கின் ஆன்மிக வாரிசுகள் எப்பொழுதுமே அதிகமாக இருந்தார்கள். மார்க்ஸ் ப்ளுடார்குடன் செய்த வாதம் அவருடைய எல்லா ஆன்மிக வாரிசுகளோடும் வாதம் புரிவதாகவும் இருந்தது என்பது மெய்யே.

ஜீவனுள்ள, உயிர்த்துடிப்புள்ள சிந்தனையைச் சிறைப்படுத்தி உறங்க வைப்பதற்காக நன்னெறி சார்ந்த தடைகளையும் தேசபக்த உரைகளையும் கொண்ட சிலந்தி வலையை நெய்த ப்ளுடார்க் மரபினருடைய அலங்காரமான சொற்கூளம் மார்க்சிடம் தீவிரமான எரிச்சலை ஏற்படுத்தியது. ப்ளுடார்கின் “நன்னெறி சார்ந்த விமர்சனம் மற்றும் விமர்சன நன்னெறியின்” அனைத்து வெளிப்பாடுகளையும் மார்க்ஸ் தன் பேனா முனையினால் வரலாற்றின் ஏளனத்துக்கு உள்ளாக்கினார்.

19 -ம் நூற்றாண்டில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதியான கார்ல் ஹைன்ஸென் எங்கெல்சுடன் செய்த வாதத்தில் இந்த “விமர்சனத்தை” சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ப்ளுடார்க் எபிகூரசுடன் செய்த வாதத்தைப் போலவே தத்ரூபமாக விளக்கினார்.

எங்கெல்ஸ்

ஹைன்ஸென் வடிவத்தில் “விமர்சகராக வருகின்ற அற்பவாதியை”, என்னுடைய மரபு தத்துவஞானமோ அல்லது கல்வியறிவோ அல்ல, அது “வாழ்க்கையின் முழுமையே” என்று அகம்பாவத்தோடு கூறுகின்ற, “முழுநிறைவான பொது அறிவை” போதிக்கின்ற, “தன்னுடைய சொந்த நற்பண்புகளைப் பற்றித் தானே திருப்தியடைகின்ற அற்பவாதியின் உணர்வை” விளக்கிக்காட்டுகின்ற, ஒரு சில “குறைவான, சதையில்லாத உண்மைகளை அசைக்க முடியாத வறட்டுக் கோட்பாடுகளாக மாற்றி “இத்தகைய நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசுபவர்களின் குருட்டுத்தனம்”, “முட்டாள்தனம்” அல்லது “போக்கிரித்தனத்தைப் பற்றித் தன்னுடைய தார்மிக ஆவேசத்தைக் கொட்டுகின்ற”(3) அற்பவாதியை மார்க்ஸ் இரக்கமற்ற நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் தாக்கினார்.

ப்ளுடார்கின் ஆதரவாளர்கள் எல்லோரையும் பற்றி மார்க்சின் இந்தத் தீவிரமான, எதிர்மறையான மதிப்பீடு விஞ்ஞானத்தைப் பற்றி அவருடைய ஆக்கபூர்வமான அணுகு முறையையும் உண்மையான தத்துவஞானச் சிந்தனையின் கடமைகளையும் பாத்திரத்தையும் பற்றி அவருடைய கருத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தத்துவஞானம் வறட்டுக் கோட்பாட்டுடன், நிர்ணயிக்கப்பட்ட, கெட்டிப்பட்டுவிட்ட ஆய்வுரையுடன் பொருந்தாது. ஹெகலிய அமைப்பின் முடிவான, முழுமையான, தனிமுதலான மற்றும் “ஊகமான” தன்மையே மார்க்சுக்கு அதிருப்தியளித்தது. அவர் தன்னுடைய டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலேயே ஹெகலியத் தத்துவஞானம் “உலகத்துடன்”, யதார்த்தத்துடன் முறித்துக் கொண்டிருப்பதைப் பற்றி மிகவும் வன்மையாக விமர்சனம் செய்தார் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.

மார்க்சின் தொடக்க காலத் தத்துவஞான நிலை வெடிகுண்டுத் திரியைக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் மார்க்ஸ் தத்துவஞானத்தைப் பற்றி பரந்த செயல் விளைவுடைய முடிவுகளுக்கு வந்தார்.

இயற்கை விஞ்ஞானங்கள் போதிய வளர்ச்சி அடையாமலிருந்தபடியால் துல்லியமான விஞ்ஞானங்களுக்கு மாற்றீடாக இருக்கும்படி தத்துவஞானம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அது உலகத்தின் சர்வாம்சத் தத்துவஞானம், விஞ்ஞானங்களின் அரசி நானே என்று கோரியது. இக்கோரிக்கை அதன் முழு அளவுக்கு ஹெகலியத் தத்துவஞானத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அதனால் தான் ஹெகலிய அமைப்பு பழைய கருத்தில் புரிந்து கொள்ளப்பட்ட தத்துவஞானத்தின் பரிபூரண வடிவமாக, அதன் மகுடமாக, ஆகவே அதன் முடிவு நிலையாகக் கருதப்பட்டது.

எளிதில் நுழைய முடியாத ஆன்ம உலகங்களில் ஆட்சி செய்கின்ற “விஞ்ஞானங்களின் அரசியான’’ தத்துவஞானம் பூமிக்கு வர வேண்டிய அவசியத்தைச் சந்திக்கும் என்பதை மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்தின் பிற்காலத்தில் கூட முழுமையாக உணர்ந்திருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் அவர் இன்னும் ஒரு கம்யூனிஸ்டு அல்லது புரட்சிகரமான ஜனநாயகவாதியாகக் கூட இருக்கவில்லை, அரசியலில் தன்னுடைய நிலையை அவர் தெளிவாக வரையறுத்துக் கொள்ளவில்லை. “உலகத்தைப்” பற்றியும் தத்துவஞானத்தை “உலகத்துடன்” இணைக்கின்ற வடிவங்களைப் பற்றியும் அவருடைய கருத்துக்கள் இன்னும் சூக்குமமாகவே இருந்தது இயற்கையே.

இதற்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் முகவுரை என்ற நூலை எழுதினார். அதில் “உலகத்துடன்” தத்துவஞானத்தின் உறவைப் பற்றிய ஆய்வுரையை உலகத்தைப் பற்றிய புரட்சிகரக் கண்ணோட்டத்தின் அனைத்து முழுமையோடும் உறுதியோடும் அவர் வகுத்துக் தந்தார்.

புரட்சி “தத்துவஞானியின் மூளையில் ஆரம்பமாகிறது”, அது முதிர்ச்சியடைகின்ற முரண்பாடுகளைப் பிரதிபலிக்கிறது என்கிறார் மார்க்ஸ். ஆனால் தத்துவ விமர்சனம் என்னும் ஆயுதம் “ஆயுதங்களின் விமர்சனத்துக்கு” மாற்றீடாக முடியாது. தத்துவம் பெருந்திரளான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பொருளாயதச் சக்தியாக மாறுகிறது.(4) ஆகவே தத்துவஞானம் பொருளாயதச் சக்தியாக மாற வேண்டுமென்றால் அது புரட்சிகரமான வர்க்கத்தின், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தத்துவஞானமாகச் செயலாற்ற வேண்டும்.

“தத்துவஞானம் தன்னுடைய பொருளாயத ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மிக ஆயுதங்களைத் தத்துவஞானத்தில் காண்கிறது. கூர்மதியுடையவரிடம் இந்த மண்ணில் சிந்தனையின் மின்னல் தாக்கிவிட்டால் ஜெர்மானியர்கள் மனிதப் பிறவிகளாக விடுதலை பெறுவது நடக்கும்.”(5)

எனினும், “அன்றைக்கிருந்த தத்துவஞானம், அதாவது ஹெகலியத் தத்துவஞானம் அகற்றப்பட வேண்டிய யதார்த்தத்தின் குறைகளைத் தன்னிடம் கொண்டிருக்கிறது. எனவே “அதை அகற்றாமல் தத்துவஞானத்தை யதார்த்தமாக்க முடியாது”(6) முந்திய தத்துவஞானம் உண்மையில் மார்க்ஸ், எங்கெல்சினால் அகற்றப்பட்டது. இந்த “அகற்றுதல்” சாதாரணமான நிராகரிப்பாக இருக்கவில்லை. அது ஒரு புரட்சியாக இருந்தது; மூலச்சிறப்பான தத்துவஞானத்தின் மொத்த அடிப்படையிலும் முதலாவதாகவும் முதன்மையாகவும் ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹின் பாரம்பரியத்தைக் கொண்டும் பொருள்முதல்வாத இயக்கவியல் முறை என்ற “நிபெலுங்குகளின் வாள்” தயாரிக்கப்பட்டது.

இம்முறை விஞ்ஞானக் கம்யூனிசத் தத்துவத்தில் அதன் மிகச் சிறப்பான பண்புருவத்தைப் பெற்றது. அந்த விஞ்ஞானக் கம்யூனிசம் பாட்டாளி வர்க்கத்தின் “உண்மையான போர் முழக்கமாக” மனிதகுலத்தை விடுவிப்பதற்கும் மனிதனுக்குத் தகுதியான சமூகத்தை நிர்மாணிப்பதற்கும் அது நடத்தும் போராட்டத்தில் வலிமையான ஆயுதமாக இருக்கிறது.

மார்க்சின் முன்னறிவிப்புக்கு முற்றிலும் பொருத்தமான முறையில் இருபதாம் நூற்றாண்டுப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்டிருக்கின்ற, நலிவுற்ற வர்க்கம் என்ற அதன் நிலையை அகற்றிக் கொண்டிருக்கிறது, மார்க்சியத் தத்துவஞானத்தை எதார்த்தமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

*****

நாம் இளம் மார்க்சுக்குத் திரும்பி பெர்லின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுகின்ற வரை அவருடைய ஆன்மிக வளர்ச்சியைச் சுருக்கமாகக் கூறுவோம்.

டாக்டர் பட்டத்துக்காக மார்க்ஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரை அவருடைய நாத்திகவாதத்தை நிரூபிக்கிறது. முரணற்ற நாத்திகவாதம் கருத்து முதல்வாதத்துடன் பொருந்தாது என்பது நமக்குத் தெரிந்ததே. அது தவிர்க்க தனது ஆய்வுக் கட்டுரையில் இன்னும் கருத்துமுதல்வாதத் தத்துவஞானப் பாரம்பரியத்துடன் முறித்துக் கொள்ளவில்லை, ஆனால் அவர் ஏற்கெனவே பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானத்தின் பொருள்முதல்வாதத்தையும் அறிவியக்க மனிதாபிமானத்தையும் நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்.

ஹெகல்

மார்க்ஸ் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையைப் பிரசுரிக்கின்ற உத்தேசத்தைக் கொண்டிருந்தார், எனவே அன்றைய தணிக்கை முறையின் விளைவாக அவர் பல பிரச்சினைகளைப் பற்றி முற்றிலும் திறந்த மனத்துடன் தன் கருத்துக்களை எழுத முடியவில்லை என்பதை நினைவிலிறுத்த வேண்டும்.

மார்க்சின் ஆன்மிக வளர்ச்சி இளம் ஹெகலியவாதிகளை விஞ்சிவிட்டது. அவர் ஒரு இளம் அறிஞர், ஒரு ஆராய்ச்சி நூலைக் கூட இன்னும் வெளியிடாதவர்; எனினும் அவருடைய அறிவின் சிறப்பை இளம் ஹெகலியவாத இயக்கத்தின் மிகவும் தலைசிறந்த அறிவாளிகள் கூட அங்கீகரித்தார்கள்.

பிற்காலத்தில் “இயக்கத்திலிருந்த மோஸஸ் ஹேஸின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்க அக்கறையைக் கொண்டிருக்கிறது. 1841-ம் வருடத்திலேயே மோஸஸ் ஹேஸ் கட்டுரையாளராகவும் தத்துவஞானியாகவும் பிரபலமடைந்திருந்தார். அக்காலத்திலேயே அவர் ஹெகலியத் தத்துவஞானத்தைப் பிரெஞ்சு சோஷலிசத்துடன் இணைப்பதற்கு முற்றிலும் ஒத்திசைவாக இல்லாத, ஆனால் முற்றிலும் உறுதியான முயற்சியைச் செய்திருந்தார். இயேசுநாதரின் வருகையைப் போல கம்யூனிஸ்ட் புரட்சி வரப் போகிறது என்று தெளிவில்லாத, அரை மாயாவாத முறையில் பிரகடனம் செய்திருந்தார். எனினும் மோஸஸ் ஹேஸ் சமீபத்தில் பட்டம் பெற்றிருந்த கார்ல் மார்க்ஸ் தத்துவஞான வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர் என்று கருதினார், மார்க்சுக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று மதிநுட்பத்துடன் ஆரூடம் கூறினார்.

மோஸஸ் ஹேஸ் தன்னுடைய நண்பர் ஆவு யெர்பாஹுக்கு 1841 செப்டெம்பர் 2-ந் தேதியன்று எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: “நம்முடைய நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் பழகுவது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவர் பானில் வசிக்கிறார், சீக்கிரத்தில் அங்கேயே ஆசிரியராகப் போகிறார்….. இது ஒரு அசாதாரணமான நிகழ்வு என்பேன்; நானும் அதே துறையில்தான் ஈடுபட்டிருக்கிறேன் என்ற போதிலும் அவர் என்னிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சுருக்கமாகச் சொல்வதென்றால் மிகச் சிறந்த, ஒருவேளை தற்பொழுது வாழ்கின்ற தத்துவஞானிகளில் ஒரே ஒரு மெய்யான தத்துவஞானியைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சீக்கிரத்தில் அவர் பொது அரங்கத்தில் (புத்தகத்தின் மூலம் அல்லது மேடைச் சொற்பொழிவின் மூலம்) தோன்றும் பொழுது ஜெர்மனியின் கவனம் முழுவதையும் தன்னிடத்தில் திருப்பப் போகிறார், அவர் தன்னுடைய தத்துவஞானப் போக்கு, கல்வி இரண்டிலுமே ஷ்டிராவுசை மட்டுமின்றி ஃபாயர்பாஹையும் விட உயர்ந்தவராக இருக்கிறார் – இரண்டாவது எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்கே தெரியும் அவர் தர்க்க வியலைப் பற்றிச் சொற்பொழிவாற்றுகின்ற பொழுது நான் பானில் இருக்க முடியுமானுல் அவர் சொற்பொழிவை மிகவும் கவனமாகக் கேட்பேன்.

தற்பொழுது வாழ்கின்ற தத்துவஞானிகளில் ஒரே ஒரு மெய்யான தத்துவஞானியைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நபர் என் தத்துவஞான ஆசிரியராக இருக்க வேண்டு மென்று நான் எப்பொழுதுமே விரும்பியிருக்கிறேன். மெய்யான தத்துவஞானத் துறையில் நான் எவ்வளவு சிறுதிறமாகச் செயலாற்றினேன் என்பதை இப்பொழுது உணர்கிறேன்! பொறுமை! நான் இனியும் எதையேனும் கற்றுக் கொள்ள வேண்டும் நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ் என்ற பெயருடையவர்; அவர் மிகவும் இளைஞராகவே இன்னும் இருக்கிருர் (அதிக மாகப் போனல் இருபத்து நான்கு வயதே இருக்கும்);

மத்திய கால தத்துவஞானத்துக்கும் அரசியலுக்கும் அவர் இறுதியான அடியைக் கொடுப்பார்; அவர் மிகக் கூர்மையான நகைச் சுவையை மிகவும் ஆழமான தத்துவஞானச் செறிவுடன் இணைக்கிருர் ரூஸோ, வொல்தேர், ஹோல்பாஹ், லேஸ்ஸிங், ஹேய்னெ, ஹெகல் ஆகியோர் ஒரே நபராக இணைந்திருப்பதை – இணேந்திருப்பது என்று நான் கூறினேன், கலந்திருப்பதாகச் சொல்லவில்லை – கற்பனை செய்யுங்கள். அவர்தான் டாக்டர் மார்க்ஸ்.

ஒருவேளை இன்று நமக்குக் கிடைத்திராத இளம் மார்க்சின் எழுத்துக்களை ஹேஸ் படித்திருக்கலாம் அல்லது மார்க்சுடன் நடத்திய உரையாடல்களின் அடிப்படையில் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனல் அவருடைய முன்னறிவிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்குத் துல்லியமாக இருந்தது. மார்க்ஸ் புரட்சிகரமான உலகக் கண்ணுேட்டத்தைப் படைப்பதற்காகத் தன்னை உள்முகமாகத் தயாரித்துக் கொண்டிருந்தார். தத்துவச் சிந்தனையின் மேதாவிலாசம் அவரிடம் வேகமாக வளர்ச்சியடைந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

குறிப்புகள்:

  • (1) Ibid., p. 44. கிரேக்கர்கள் மத்தியில் கலைக்களஞ்சியப் பரப்பைக் கொண்ட முதல் அறிவாளி டெமாக்கிரிடசே. அவர் அணுவாதத் தத்துவஞானத்தை நிறுவியவர்களில் ஒருவர். அணுக்கள், சூனியம் என்ற இரண்டு மூலத் தொடக்கங்கள் உள்ளன என்பது டெமாக்கிரீடசினுடைய கருத்தாகும். அறிதலுக்கான எல்லாப் பொருட்களையும் புலன்கள் கொடுத்த போதிலும் அவை பொருள்களைப் பற்றி “மங்கலான’ அறிவை மட்டுமே தருகின்றன. இது வேறொரு அறிவினால், “ஒளிமிக்க”, அதிக நுட்பமான அறிவினால், பகுத்தாராயும் அறிவினால் கடக்கப்படுகிறது. இந்த அறிவு அதன் ஆராய்ச்சியின் மூலம் அணுக்களையும் சூனியத்தையும் கண்டுபிடிக்கிறது.
  • (2) Ibid., pp. 468-69.
  • (3)Marx, Engels, Collected Works, Vol. 6, pp. 313, 317, 321.
  • (4)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 182.
  • (5)Ibid., p. 187.
  • (6) Ibid., p. 181.

* Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband, 2, S. 260-61.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

படக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி !

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளை வேட்டையாடும் ” வேட்டை அரசி”

யிஷா பகாரி கோம்பி ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் வாழ்கிறார். இல்லையில்லை சண்டை போடுகிறார். போகோ ஹராமுக்கு எதிரான சண்டையில் போர்க்களத் தீரத்திற்காக நிஜ உலகின் அதிநாயகி (super Hero)  என்ற நிலையை அடைந்துள்ளார்.

மனிதகுலம் துவங்கிய ஆதி காலத்திலிருந்தே ஆப்பிரிக்க காடுகளிலும் புல்வெளிகளிலும் வேட்டைக்கார இனக்குழுக்கள் சுற்றி வந்துள்ளனர். பாய்ச்சல் வேகத்தில் 21-ம் நூற்றாண்டிற்கு வந்தோமானால், இன்று வடகிழக்கு நைஜீரியாவில் வேட்டைக்காரர்களின் வேட்டைக்கு எதுவுமில்லை. போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் நைஜீரிய இராணுவத்திற்கும் இடையிலான துப்பாக்கி சண்டை காட்டு விலங்குகளை அச்சுறுத்தித் துரத்தியுள்ளது.

தற்போது வேட்டைக்காரர்கள் தீவிரவாதிகளை துரத்திப் பிடிக்கின்றனர். அவர்களது அதீத சக்தியும் மேம்பட்ட பின்தொடரும் திறனும் வடகிழக்கு நைஜீரியாவில் அச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் போகோ ஹராம் தீவிரவாதிகளை இராணுவம் வேட்டையாடுவதற்கு உதவுகின்றனர்.

அதிகாரிகள் மிகக் குறைவான நிதியையே ஒதுக்குவதால் வேட்டைக்காரர்கள் கனரக நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ள எதிரிகளிடம் போரிடுவதற்கு உள்ளூர் தயாரிப்பு ஆயுதங்களையே சார்ந்திருக்கின்றனர்.

“மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இது வடகிழக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாதக் குழு பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்றும் 23 இலட்சம் மக்களை தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியும் உலகின் மிகக் கொடூரமான ஆயுதமேந்திய குழுக்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

இத்தீவிரவாதிகளை துரத்திப் பிடிக்கும் வேட்டைக்காரர்களுக்கு தலைமை வகிக்கிறார் ஆயிஷா பகாரி கோம்பி. அவருடைய போர்க்கள வீரத்திற்காக “ராணி வேட்டைக்காரர்” என்று அழைக்கப்படுகிறார். ஆயிஷாவும் அவரது வேட்டைக்குழுவினரும் அவர்களது சமூகத்தைப் பாதுகாக்கின்றனர்.

ஆயிஷா தனது குழந்தைப் பருவத்தில் அவரது தந்தையுடன் வேட்டைக்குச் சென்ற காடுகள், மலைகளில் இன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் தங்களது முகாம்களை அமைத்துள்ளனர். சம்பிஸா காடு வேட்டைக்காரர்களுக்கான புனிதமான இடம். எனவே அதை போகோ ஹராம் போராளிகளிடமிருந்து விடுவிப்பது சிறப்பு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது.

இந்த வேட்டைக்காரர்கள் போகோ ஹராம் பிடியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்களை விடுவித்துள்ளனர். குழந்தைகளை மீட்பது ஆயிஷாவிற்கு உந்து சக்தியாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் 39 வயதில் முதல் முறையாக ஆயிஷா கருவுற்றார். அதுநாள் வரை தாம் கருத்தரிக்க முடியாதென்றே நினைத்திருந்தார். குழந்தைகளை விடுவித்தபோது அவர்கள் தமக்கு மறுபிறப்பாக பிறப்பதைப் போல் உணர்ந்து கொண்டார்.

ஆயிஷா போகோ ஹராமிற்கு எதிராக போராடாதபோது, அவரது கணவருடன் கிராமத்து விதிமுறைகளுக்கு இணங்கி வாழ்கிறார். வட- நைஜீரியாவில் பெண்களுக்கான களம் வீட்டிலும், குழந்தைகள் வளர்ப்புடனும் வரம்பிடப்பட்டுள்ளது.

ஆயிஷாவின் அசாதாரண வாழ்க்கை சமீப ஆண்டுகளில் மிகதீரமுள்ள ஆண், பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளது. அவரது கதை வடக்கு நைஜீரியாவில் நாட்டுப்புற கதையாகியுள்ளது. ”வேட்டை அரசி (Queen Hunter)” தான் அந்த உண்மைக்கதைகளின் அதிநாயகி. ஆயிஷாவைப் பற்றிய ஆவணப்படத்தை இங்கு காணலாம்.

வேட்டைக்காரரும் பல்கலைக்கழக மாணவருமான பாமங்கா,ஆயிஷாவிற்கு புதிய கைபேசியை பயன்படுத்த கற்றுத் தருகிறார்.

சம்பிஸா காட்டின் நடுவில் ஆயிஷாவும் அவரது தலைமையிலான வேட்டைகாரர்களும் போகோ ஹராமை துரத்துவதற்கு நடுவில் ஓய்வெடுக்கிறார்கள்.

ஆயிஷா போகோ ஹராமிற்கு எதிராகப் போராடும் வரை பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருந்தார். அவரது போராட்டம் கணவர் முகமதுவின் இயத்தை கொள்ளை கொண்டு விட்டது.

ஆயிஷா தனது தந்தையுடன் மான் மற்றும் நீர் எருமைகளை வேட்டையாடும் சூழலில் வளர்ந்தார்.இப்போது போகோ ஹராம் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார்.

வேட்டைக்காரர்கள் சாம்பிஸா காட்டைமற்ற யாரையும் விட  நன்கு அறிந்திருக்கிறார்கள. எனவே அங்கு மறைந்திருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாட இராணுவம்  அவர்களைப் பயன்படுத்துகிறது.

பின்னால் நின்றுகொண்டிருக்கும் காலித் என்ற வேட்டைக்காரர் ஆயிஷாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். வேட்டையின் போது எப்போதும் ஆயிஷாவின் அருகாமையில் இருக்கிறார்.

ஆயிஷா வேட்டைக்கு போகாத போதும் கூட, தீவிரவாதிகளால்கடத்தப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் பற்றியே அவர் கவலைப்படுகிறார்.

வேட்டைக்காரர்கள் நாட்டுத் துப்பாகிகளையே போகோ ஹராமிற்கு எதிரான போரில் பயன்படுத்துகின்றனர்.

ஆயிஷா தனது தந்தையிடமிருந்து மூலிகைகளைப் பற்றியும் அறிந்திருக்கிறார்.  ஒரு மருத்துவச்சியாக அவரது நிபுணத்துவம், சக வேட்டைக்காரர்களிடம் அவருக்கு மரியாதையை பெற்றுத்தந்துள்ளது.

தீவிரவாதிகள் பதுங்கியுள்ள சம்பிஸா காடுகளில் பயணிக்க  மோட்டர் சைக்கிள்கள் உகந்தவை.

புகார் ஜிமேதா முன்னர் ஆயிஷாவின் படைத் தலைவராக இருந்தார்.  மிக மரியாதைக்குரிய வேட்டைக்காரரான அவர் 2017-ம் ஆண்டு போகோ ஹராம் தீவிரவாதிகளால் கொல்லப்படும் வரை கடந்த முப்பதாண்டுகளாக சம்பிஸா காட்டில் குற்றவாளிகள் மற்றும் போராளிகளை பிடிக்க உதவி வந்தார்.

புகார் ஜிமேதா ஒரு இறைபற்று மிக்க முஸ்லீம். அவர் ஆப்பிரிக்க வேட்டையினக் குழுக்களின் இயற்கை மற்றும் போர் கடவுள்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆயிஷா கருவுற்றிருந்த போதும் கூட வேட்டையாடினார். அவரது கதை வடக்கு நைஜீரியாவில் நாட்டுப்புறக் கதையாகியுள்ளது. இந்த ”வேட்டை அரசி” நைஜீரியர்களுக்குநிஜ உலகின் அதிநாயகியாகி (super Hero) உள்ளார்.

– வினவு செய்திப் பிரிவு

நன்றி : அல்ஜசீரா

கருத்துக் கணிப்பு : தமிழகத்தின் மீது எச்சில் துப்பும் மோடி அரசு – உச்சநீதிமன்றம் !

த்திய அரசும் உச்சநீதிமன்றமும் சேர்ந்து மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் மீது காறித் துப்பியுள்ளன. ஒரு நதியின் கீழ்ப்பகுதிக்கும் அதன் டெல்டா பகுதிகளும் அந்நதியின் நீரில் உள்ள நியாயமான பங்கை தனது இறுதித் தீர்ப்பில் மறுத்ததன் மூலம் ஏற்கனவே தமிழகத்தின் மீது எச்சில் துப்பியது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கான நீர் அளவையும் தனது இறுதித் தீர்ப்பில் குறைத்து அறிவித்தது.

அவ்வாறு குறைக்கப்பட்ட அளவிலான நீரைத் தமிழகத்திற்கு வழங்குவதற்கான முறையையும் தெளிவாக விளக்கவில்லை. மேலாண்மை வாரியம் என நேரடியாக குறிப்பிடாமல் “ஸ்கீம்” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி மத்திய அரசு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதற்கான கதவைத் திறந்து வைத்த உச்ச நீதிமன்றம், பற்றாக்குறை காலத்தில் தண்ணீர்ப் பகிர்வு குறித்தும் தனது தீர்ப்பில் விளக்கவில்லை.

அநீதியான அந்தத் தீர்ப்பாவது அமல்படுத்தப்பட்டால் தாகத்தைத் தீர்க்க முடியா விட்டாலும் தொண்டையையாவது நனைத்துக் கொள்ளலாம் என தமிழகம் எதிர்பார்த்தது. காவிரி நீர்ப் பகிர்வுக்கான வரைவுத் திட்டமொன்றை மத்திய அரசு சமர்பிப்பதற்கு வழங்கப்பட்ட 6 வார கால அவகாசத்தில் ஏதும் செய்யாமல் இறுதி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடிய மோடி அரசு, “ஸ்கீம்” என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு மீண்டுமொரு முறை தமிழகத்தின் மேல் எச்சில் துப்பியது.

இதை எதிர்த்து மத்திய அரசின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது தமிழக அரசு. அப்போது மத்திய அரசைச் செல்லமாக கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம், உரிய விளக்கம் ஏதும் அளிக்காமல் நாங்கள் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த ஒருவரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கிடையே வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணி முடியவில்லை, மேலும் கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு ஒரு கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அம்மனுவும் தள்ளுபடியானது. இன்று மே 4-ம் தேதி. வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த கெடு நேற்றோடு முடிந்தது . இந்நிலையில் வரைவு அறிக்கை தயாராகவே இல்லை என்று சொன்ன மத்திய அரசு, கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.. ஆகையால் வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைப் பெற முடியவில்லை என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறது.

மத்திய அரசின் பச்சைப் பொய்யை அப்படியே விழுங்கிக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவது பற்றி எங்களுக்குக் கவலையில்லை என மயிலிறகால் அடித்துள்ளனர். கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.

ஏனினும் ”கோபம்” அடைந்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். இந்த உத்தரவை மீறினால், கர்நாடக அரசு கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பமும், போக்குவரத்து வசதிகளும் இந்தளவுக்கு முன்னேறிய காலத்தில் ’பிரதமர் ஊரில் இல்லை’ என்று நொண்டிச் சாக்கு சொன்னதற்கோ, தயாராகவில்லை என்று சொல்லி விட்டு இப்போது எல்லாம் தயார் ஆனால் கையெழுத்து போட ஆளில்லை என்று பொய் சொன்னதற்கோ மோடி அரசை உச்சநீதிமன்றம் எந்தவகையிலும் தண்டிக்கப் போவதில்லை. ஏற்கனவே இதே உச்சநீதிமன்றம் வழங்கிய எந்த இடைக்காலத் தீர்ப்பையும் கர்நாடகம் மதித்ததில்லை – அதற்காக தண்டிக்கப்பட்டதும் இல்லை.

மொத்தத்தில்,
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி ஏன்?

அ) அநீதியில்லை, எல்லாம் சரியாகவே நடக்கிறது.
ஆ) தமிழர்கள் தாகத்துக்கு மூத்திரத்தைக் குடித்து வாழ வேண்டிய இரண்டாந்தரக் குடிமக்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் கருத்து.
இ) உச்சநீதிமன்றம் என்பது நீதி வழங்கப்படும் இடமல்ல – அது அநீதிகளின் கருவறை
ஈ) இந்தச் சட்டங்களும், நீதிமன்றங்களும், மத்திய மாநில அரசுகளும் நமக்கானவை அல்ல.
உ) எதிர்க்கட்சிகள்தான் பிரச்சினையை தோற்றுவிக்கின்றன, மத்திய அரசு அல்ல!
(பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)

சிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்

சென்னை ஆவடி.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

“கட்சிகளை மாற்றுவதால் தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!” என்ற முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் சென்னைப் புறநகரான ஆவடியில் நடைபெற்றது. இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கிளை – இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் என 450-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் பேரணியை துவங்கி வைத்தார். தனது தலைமையுரையில் 1886-ல் மேதின தியாகிகளுடைய போராட்டத்தையும், சிகாகோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நினைவு கூர்ந்து பேசினார். சிறுநகர் பறையிசை குழுவினரின் பறையிசை முழங்க காமராஜர் நகர் மற்றும் TNHB குடியிருப்பு பகுதி வழியாக ஆவடி நகராட்சி அலுவலகம் வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்ற பேரணியை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பேரணியின் முடிவில் நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமை தாங்கி நடத்தினார். பு.ஜ.தொ.மு-வின், மாநில பொருளாளர் தோழர் பா. விஜயகுமார் உரையாற்றினார்.

கார்ப்பரேட் அதிகார அமைப்பு முறையின் மீது நம்பிக்கை இழந்த மக்கள் தங்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளுக்கான போராட்டங்களை தமிழகம் எங்கும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடத்தி வருகிறார்கள். இந்த கார்ப்பரேட் கட்டமைப்பை அப்படியே பாதுகாக்க ஆளும் வர்க்கம் ரஜினி, கமல், போன்ற நடிகர்களையும் சகாயம் போன்ற அதிகாரிகளையும் களமிறக்குகின்றனர். கட்சிகளை மாற்றுவதால் தீர்வு இல்லை என்றும், தோற்றுப் போய், திவாலான, ஆளத்தகுதி இழந்த இந்த கார்ப்பரேட் கட்டமைப்பை தூக்கியெறிந்து, தொழிலாளர், விவசாயி, மாணவர், இளைஞர், சிறுவணிகர், சிறு – குறு தொழில் முனைவோரின் கூட்டு அதிகாரத்தை கட்டியமைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என உரையாற்றினார்.

ஆர்ப்பாட்ட பகுதியை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்து ஆர்ப்பரித்தனர். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

இவன்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

*****************************************

திருச்சியில் மே தினம்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மே தினத்தை முன்னிட்டு திருச்சி காந்திபுரத்தில் காலை 9 மணியளவில் ம.க.இ.க சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. ம.க.இ.க-வின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் கொடியை ஏற்றி பேசுகையில் “கார்ப்பரேட் முதலாளிகளின் பெட்ரோலிய மண்டல கொள்ளைக்காக, காவிரியை தடுத்ததுடன், டெல்டா விவசாய தொழிலாளர்களை இராணுவத்தில் பிடியில் அச்சுறுத்தி சிறை வைத்து விட்டு தமிழக முதல்வர் எடப்பாடியும், பிரதமர் மோடியும் மே நாள் வாழ்த்தை கூறுவது எவ்வளவு பெரிய துரோகம் என உரையாற்றினார். தோழர் லதா நன்றி கூறி முடித்து வைத்தார்.

பின்னர் மாலை 6 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மரக்கடை ராமகிருஸ்ணா பாலம் அருகே மே தின ஆர்ப்பாட்டம் விண்ணதிரும் முழக்கத்துடன் தொடங்கியது.

பு.ஜ.தொ.மு வின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமைதாங்கி பேசினார். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க செயலாளர். தோழர்:மணலிதாசன் கண்டன உரையாற்றி பேசினார். இன்று மே தினம், பேரணி, ஊர்வலம், பொதுகூட்டம் எல்லாம் முடக்கப்பட்டு சாதாரண ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதி கேட்டு போலீசிடம் போராட வேண்டியிருக்கிறது. இது முதலாளிகளின் ஆட்சி. OPS,EPS மோடி ஆளவில்லை. மென்னு போட்ட முருங்ககாய திரும்ப குழம்பு சட்டில போட்டு கொதிக்கவுட்டு தரமாதிரி கமலும், ரஜினியும் இந்த கட்டமைப்புக்குள்ளயே நம்மள சுத்த வக்கிராங்க. இது கெட்டுப்போச்சு இழப்பதற்கு ஏதுமில்லை பெறுவதற்கு பொன்னுலகம் உண்டு அதை படைக்கப் போராடுவோம். இரவு பகலாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளின் வாழ்வாதாரம் பாதிப்பதற்கு காரணமான  OLA வை தடை செய்ய வேண்டும் அப்போதுதான் ஆட்டோ தொழிலை பாதுகாக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.

அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க செயலாளர், தோழர் பழனிச்சாமி பேசுகையில், மாநகராட்சி தரைக்கடைகளை எடுக்க புதுசு புதுசா திட்டம் போடுரான். ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தாம காச வாங்கிக்கிட்டு மாநகராட்சி அதிகாரிகள் தரைக்கடைகளை அப்புறப்படுத்துறான். வியாபாரிகளை போட்டோ எடுக்குறான். அவனே 2 பேர தேர்ந்தெடுப்போம் வியாபரிகளுடைய பிரச்சனையை அவங்க கிட்டதான் இனி பேசுவோம் என தொழிற்சங்கங்களை புறக்கணிக்கிறான். கக்கூசுக்கு கூட சாதாரண மக்கள் அழைந்து திரிவதை கண்டுக்காத மாநகராட்சி மலைக்கோட்டையை சுத்தி 60 இலட்சம் செலவு பண்ணி சாரதாசுக்காக (கடை) பாறைகளை வெட்டி பாதை அமைச்சு கொடுத்தான். எல்லை கல்லுக்கெல்லாம் கோயில் சொத்துன்னு சொந்தம் கொண்டாடுர இந்து முன்னணி BJP கும்பல்களெல்லாம் சாரதாஸ்கடை முதலாளி கால்ல விழுந்து கிடக்கிறீங்களா? என என்று கேள்வி எழுப்பினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர், தோழர் பிரிதீவ் பேசுகையில், நகர்புறத்துல “ஓவர் டைம்” வேல செஞ்சாத்தான் பொழப்பு நடத்த முடியும் என்ற நிலைமையில் இளைஞர்களுக்கு ‘கட்டமைப்பு’ என்றால் என்னன்னு தெரியுமா? தெரியக்கூடாதுன்னுதான் அரசு விரும்புது. அதுக்கு தகுந்த மாதிரி தல(ஆஜீத்) பர்த்துடே தான் ஸ்டூடண்டுக்கு தெரியும். அரசு கல்லூரியெல்லாம் தனியாருக்கு போகப்போது அரசாங்க வேலையே இனி கிடைக்க போறதில்லை. ஆளெடுப்பான் அரசாங்கம், எதுக்குன்னா அடையாள் படை போலீசுக்கு மட்டும், ஏன்னா போராட்டக்களை ஒடுக்கனும்ல. புரோக்கர் வேலை பார்த்து மாணவிகளை சீரழிக்க துணிந்த நிர்மலா தேவிக்காக 6 மணி நேரம் கை கட்டி வேடிக்கை பார்த்த போலீசு மக்கள் பாடகர் கோவன் தோழரை வழக்கு போட்ட மறுகனமே கதவ ஒடச்சு தரதரன்னு ‘குற்றவாளி’ போல இழுத்துச் சென்றதை மறக்க முடியுமா? இந்த அரசுக் கெதிராக மாணவர்கள் மக்களோடு இணைந்து ஜல்லிக்கட்டு போல மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா பேசுகையில், ஆலைகளில் சூரியன் உதிக்கும் முன்னே செல்ல வேண்டும், சூரியன் மறைந்த பின்னே வர வேண்டும் என்ற நிலையை மாற்றி 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர பொழுது போக்கு 8 மணி நேரம் நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் சிந்திப்பதற்கும் பெறப்பட்ட உரிமை. இன்று மவுனமாக இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சுடுகாடுதான். நெய்வேலி அழிந்தது போல் டெல்டா மாவட்டங்கள் நிலக்கரி, மீத்தேனுக்காக அழியப் போகிறது. தமிழகத்தை காப்பாற்ற BJP,RSS ன் நாசகர திட்டங்களுக்கு எதிராக உறுதியான போரை துவங்குவோம் என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் சத்யா சிறப்புரையாற்றுகையில், 1886 ல் தனது இரத்தத்தால் இந்த தினத்தை பெற்று கொடுத்தது தொழிலாளி வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை மார்க்சும், ஏங்கல்சும் 8 மணி நேர வேலை என்ற தீர்மானத்தை கொண்டு வந்ததை நடைமுறையாக்கியது தொழிலாளி வர்க்கம். தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் ஏன்? 70% பேருந்துகள் ஓட்டுவதற்கு தகுதியற்றவை. இதோடுதான் நமது தொழிலாளர்கள் மல்லுகட்டுகின்றனர். அது மட்டுமல்ல செவிலியர் போராட்டத்தில் நீதிமன்றம் பேசிய திமிரை மறக்க முடியுமா? மக்களை வதைக்காதீர்கள் என உத்தரவு போடும் நீதிபதிகள் மருத்துவர்களே இல்லாமல் GH மருத்துவமனையில் நடக்கும் அவலத்திற்கு வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எத்தனை வழக்குகள் போட்டும் நீதி கிடைக்கவில்லையே ஏன்?

காவிரிக்காக திருச்சியில் போராடிய  மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க பொதுச்சொத்தை சேதம் விளைவித்ததாக பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அதே போல் ம.க.இ.க ரதயாத்திரை பாடலைக் கண்டு மிரண்டு போன BJP காவி கும்பல்களை திருப்தி படுத்த தோழர் கோவனை கைது செய்ய அவர் வீடு புகுந்து காலித்தனம் செய்ததை மக்கள் மறக்க முடியுமா? மக்களை ஒடுக்கும் இந்த நீதி மன்றங்கள், காவல் நிலையங்கள் அனைத்தையும் அதே மக்கள் எழுச்சியின் மூலம் அருங்காட்சியகத்தில் வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கரூர் மாவட்ட தோழர் சுரேந்தர் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்.கோவன் மற்றும் திருச்சி ம.க.இ.க கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்களை பாடினர்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

பயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் !

“காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி  விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

ஏதாவது விருது.. கிருது.. பாத்து போட்டுக்குடுங்கண்ணே !

காவிரியை பிடிச்சு வச்ச கட்டப்பஞ்சாயத்துத் தலைவரும் காவிரியை அங்கேயே வச்சிக்கன்னு சொன்ன கையாலாகாதவரும் சந்தித்த போது..

எடப்பாடி: அண்ணே.. காந்தி பேருல பசுமைபுவி விருதுன்னு ஏதாவது போட்டுக் கொடுங்கண்ணே..

(செய்தி: நோபல் பரிசு போல காந்தியின் பெயரால் ‘காந்தி பசுமைபுவி’ என்ற விருதை ஏற்படுத்த வேண்டும் என மோடியிடன் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைத்துள்ளார்.)

கருத்துப்படம் : வேலன்

ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு !

மெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள், மனிதர்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 1,23,000 தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ ஆவணங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை குறித்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டு வாழ்நாளை நீட்டிப்பதில் ஐந்து அடிப்படையான ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வு செய்திருக்கின்றனர்.

  • 1. புகைபிடிக்காமல் இருப்பது,
  • 2. உடல் நிறை குறியீட்டை (BMI) 18.5-க்கும் 25க்கும் இடையில் வைத்துக் கொள்வது,
  • 3. குறைந்தது 30 நிமிடத்திற்காவது மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது,
  • 4. குறைவான மது உட்கொள்வது,
  • 5. இறைச்சி, பூரண கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைக் கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது

– ஆகிய ஐந்தும்தான் அவர்கள் குறிப்பிடும் ஆரோக்கியமான பழக்கங்கள்.

இந்த ஆய்வின் அடிப்படையில் வாழ்நாள் நீட்சியில் ஆரோக்கியமான பழக்கங்களின் வியத்தகு பங்களிப்பை அறிக்கையாக தந்துள்ளனர் . ஆரோக்கியமான பழக்கங்கள் எதையும் கடைபிடிக்காத ஆண்களைவிட  ஆரோக்கியமான இந்த பழக்கங்களை கடைபிடிக்கும் ஆண்கள் சராசரியாக 12 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதுவே பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சராசரியாக 14 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர்.

”இந்த 5 ஆரோக்கியமான பழக்கங்களையும் கடைபிடிப்பவர்கள் அதிக காலம் வாழ்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான காலத்திற்கு வாழ்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர்களுள் ஒருவரும், ஹார்வர்ட் பொது சுகாதாரப் பயிலகத்தின் நோய்த் தொற்றியல் மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியருமான மியர் ஸ்டாம்ப்ஃபர்.

இங்கிலாந்தில் அதிகபட்ச சராசரி வயது ஆண்களுக்கு 79.4-ஆகவும், பெண்களுக்கு 83-ஆகவும் இருக்கும் நிலையில், இங்கிலாந்தை விட சுகாதாரத்துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்காவில் அது முறையே 76.9-ஆகவும், 81.6 வயதாகவும் இருப்பதன் காரணத்தை அறியவே இத்தகைய ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.

புகை – மது ஆரோக்கியத்தின் எதிரிகள்

இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் அனைத்தையும் கடைபிடிக்கக் கூடிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஜனத்தொகையில் வெறும் 8% மட்டுமே. இந்த ஆய்வு அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது, இங்கிலாந்து மற்றும் மேற்குலகம் அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறுகிறார் ஆய்வாளர் ஸ்டாம்ப்ஃபர்.

இப்பழக்கங்களை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில், கடைபிடித்து வாழும் ஆண், பெண் இருபாலருக்கும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் மரணம் 82% வரை குறைவதாகவும், புற்றுநோயால் ஏற்படும் மரணம் 65% வரை குறைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

”ஆரோக்கியமான பழக்கங்கள் உடலுக்கு நல்லதுதான் என்பது தெரிந்திருந்தும், அதனைப் பின்பற்றுவதில் நமது மக்கள் கவனம் செலுத்துவதில்லை. புகைக்கும் பழக்கத்தை கைவிட இயலாமை, சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதபடிக்கான மோசமான நகர்ப்புற கட்டமைப்பு போன்றவைகளே இப்பழக்கங்களை பின்பற்ற முடியாமல் போவதற்கு அடிப்படையான காரணமாக அமைகின்றன” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.

மேலும், “இதில் மக்கள் தாமாக முன்வந்து தனிப்பட்டரீதியில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் மக்கள் இப்பழக்கங்களை மேற்கொள்வதற்கு ஒரு சமூகமாக நாம் ஆவண செய்து தர வேண்டும். மக்கள் பழைய வழிகளிலேயே சுழன்று கொண்டு இனி வேறு வழியேதும் கிடையாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் போது மட்டுமே குறிப்பிடத்தக்க பயனை அடைகிறார்கள்”  என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.

இந்த ஆய்வு வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்றாலும் இந்தியாவிற்கு பொருத்திப் பார்க்கலாம். நமது ஆயுள் சராசரி என்பது 68 வருடங்கள் ஆகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், சத்துணவு குறைபாடு அனைத்தும் இங்கே அதிகம்.
இந்த ஆய்வில் கூறப்பட்ட 5 ஆரோக்கியமான பழக்கங்கள் போக, உணவு, குடிநீர்,  சுகாதாரம், கல்வியறிவு முதலான அனைத்து அடிப்படைகளும் இங்கே மக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. மேலதிகமாக நகர்ப்புற வாழ்வின் துன்பங்கள்… இருப்பிடம் இல்லாமை, அதிக பணிநேரம், உடல்வலியை ஏற்படுத்தும் உடலுழைப்பு, பின் தங்கிய சமூக நிலைமை, சாதி – மத சடங்குகளால் பெண்கள் ஒதுக்கப்படுதல், என அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் அந்த ஐந்தையும் பின்பற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
டாஸ்மாக் மதுவை எடுத்துக் கொண்டால் அதுதான் நமது ஆண்களை சர்வரோக நிவாரணியாக ‘அமைதிப்’ படுத்துகிறது. அதனாலேயே விரைவில் மரணம், குடும்ப வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. புகை, பான்பராக் போன்றவற்றுக்கும் வேலை சூழல் முக்கியமான காரணம். உணவைப் பொறுத்த வரை அத்தியாவசிய வாழ்க்கைக்கான கலோரிகளே கிடைக்காத சூழலில் சமச்சீர் உணவெல்லாம் நம் கைகளுக்கு எட்டாமல் இருக்கிறது.
நடுத்தர வர்க்கமோ மேற்கண்ட பிரச்சினைகளுக்கு வழியும் தீர்வும் வைத்திருந்தாலும் இடையில் நின்று தத்தளிக்கிறது. அதுவும் உணவு கட்டுப்பாடு முறைகள், மாற்று மருத்துவம் என்று ஏமாறும் வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது.
இருப்பினும் மேற்கண்ட ஐந்து பழக்கங்களை பி்ன்பற்றும் முயற்சியினை நாம் முடிந்த மட்டும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களை இப்போதே இது குறித்த விழிப்புணர்வோடு வளர்த்தாக வேண்டும். கிடைத்திருக்கும் வாய்ப்பில் நாம் ஆரோக்கியத்திற்காக போராடுவது என்பது, அரசியல் ரீதியாக போராடுவதற்கு அவசியம் என்பதாலும் இந்த முயற்சிகளை  செய்ய வேண்டும். நீங்கள் தயாரா?

– வினவு செய்திப் பிரிவு

குதிரைச் சவாரி கூடாது – சிறுநீரைக் குடி – கோவிலில் நுழையாதே !

வன்கொடுமை சட்டத்தை ‘பழி தீர்க்கும் வழியில்’ தலித் மக்கள் பயன்படுத்துவதாக கூறி அதன் அடிப்படையில் இனி குற்ற வழக்குகள் பதியக்கூடாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. புள்ளிவிவரங்களை பார்க்கும் போது நாடு முழுதும் தொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாதி வன்கொடுமை வழக்குகளில் ஒரு சில விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுகின்றனர். உண்மையில் அந்த சட்டமே இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? தலித் மக்கள் மீது வடக்கு தெற்கு என்று பேதமில்லாமல் சாதிய வன்கொடுமைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. மோடியின் ஆட்சியில பார்ப்பனிய ஆதிக்கம் என்பது முன்னிலும் வலுவாக மக்களை ஒடுக்கி வருகிறது. கீழ்க்கண்ட மூன்று சம்பவங்களும் அதை உறுதி படுத்துகின்றன.

தலித்துக்கள் குதிரையில் ஏறத் தடை – இராஜஸ்தானில் ஆதிக்க சாதியினர் வெறிச்செயல்!

தலித் ஒருவர் குதிரையில் ஏறிச் செல்வது ஆதிக்கச்சாதியினருக்கு பொறுப்பதில்லை

குதிரையில் ஏறிச்சென்ற ஒரே காரணத்திற்காக இராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த தலித் மணமகன் ஒருவர் குர்ஜார் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டிருக்கிறார். திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறும் பிந்துலி எனும் சடங்கின் போது தான் இத்தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

“என்னுடைய இளைய சகோதரன் உதய் லாலின் திருமணச்சடங்கிற்காக குதிரையை வரவழைக்க முடிவு செய்த போது கிராமத்திலிருந்த ஆதிக்க சாதியினரிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வந்தன. நாங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தப்பிறகு அவர்கள் எங்களது பாதுகாப்பிற்காக வந்தார்கள். ஆனாலும் தாக்குதல் நடக்கும் போது அவர்கள் எதுவும் செய்யவில்லை” என்று மணமகனின் மூத்த சகோதரர் பன்வார் லால் ரேகர் கூறினார்.

ரேகரை பொருத்தமட்டில் இது ஒன்றும் புதிய நிகழ்ச்சி அல்ல. ஏற்கனவே 2010-ம் ஆண்டில் அவரது சகோதரரின் திருமண நிகழ்வில் இதே போலவே கடுமையாக எதிர்த்து கல்லால் ஆதிக்க சாதியினர் அவர்களை அடித்தனர்.

மகராஷ்டிரா, ரட்லமில் 2015-ம் ஆண்டு இதே போன்றதொரு நிகழ்வில் கல்லெறிந்த ஆதிக்ககச்சாதியினர் சடங்கு குதிரையைத் திருடி சென்று விட்டனர். பின்னர் மற்றொரு குதிரையில் மணமகனுக்கு தலைக்கவசம் அணிந்து சடங்கை நடத்தினர் தலித் மக்கள். அதே போல ஹரியானாவை சேர்ந்த தலித் மணமகன் ஒருவர் குர்சாரி எனும் சடங்கை செய்த போது இராஜபுத்திர ஆதிக்க சாதியினரால் கல்லால் அடித்து தாக்கப்பட்டார்.

உத்திரப்பிரதேசத்தில் தலித் ஒருவரை மூத்திரத்தை குடிக்க செய்த ஆதிக்க சாதிவெறி!

இராம் குலாம், அதிக்கசாதியினரால் தாக்கப்பட்ட சீதாராமின் தந்தை

ங்களுடைய நிலத்தில் வேலை செய்ய மறுத்த ஒரே காரணத்திற்காக உத்திரப்பிரதேசம், பதானை சேர்ந்த தலித் விவசாயக்கூலித் தொழிலாளி ஒருவரை தாக்கூர் ஆதிக்கச்சாதியினர் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

வால்மீகி சமூகத்தை சேர்ந்த சீதாராம் தன்னுடைய 10 பிகா நிலத்தில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த விஜய் சிங், பிங்கு சிங், ஷைலேந்திர சிங் மற்றும் விக்ரம் சிங் முதலான தாக்கூர் சாதி வெறியினர் தங்களுடைய 20  பிகா வயலில் முதலில் அறுவடை செய்யுமாறு கூறினர். ஆனால் தன்னால் முடியாது என்று சீதாராம் கூறினார்.

சீதாராம் அப்படி கூறியதை தாங்க முடியாத  ஆத்திரத்தில் நால்வரும் அவரை அடித்து உதைத்ததுடன் சாதிப்பெயரை சொல்லியும் திட்டியுள்ளனர். பின்னர் கிராமத்தின் பொது இடத்திற்கு இழுத்து வந்து அங்கிருந்த ஒரு வேப்பமரத்தில் கட்டி வைத்து அவரது மீசையை எடுத்ததுடன் மூத்திரத்தையும் குடிக்க வைத்தததாக சீதாராமின் மனைவி ஜெய்மாலா கூறினார்.

இதுப்பற்றிய புகாரை காவல்துறையினரிடம் ஜெய்மாலா கொடுத்ததால் அன்று இரவு அவரது வீடு ஆதிக்கச்சாதியினரால் தாக்கப்பட்டது. காவல்துறைக்கு மீண்டும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையோ விஜய் சிங்குடன் சீதாராமையும் சேர்த்து கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது.

இதுப்பற்றி வெளியே செய்தி கசிந்தவுடம் சீதாராமைத் தாக்கிய மீதி ஆதிக்க சாதியினரையும் கைது செய்தது காவல்துறை. மேலும் ஆதிக்கச்சாதியினருக்கு உடந்தையாய் இருந்த அப்பகுதி காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரியை இடைநீக்கம் செய்திருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.

“இதுபோன்ற அவமானங்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இளைஞர்கள் இதை அப்படியே விட்டு விட தயாராக இல்லை” என்றார் கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஜதுலால்.

தலித் பெண்ணை கோவிலுக்குள் நுழைய விடாத புதுச்சேரி ஆதிக்கசாதியினர்!

தலித் பெண் இராதா

புதுச்சேரி அருகே குனிச்சம்பேட்டை தலித் காலனியை சேர்ந்த பெண்ணான இராதா கோவிலுக்குள் நுழைய விடாமல் வெளியேற்றப்பட்டது பற்றிய காணொளி ஒன்று டிவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீ காமாட்சி சமதா பூதண்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 20 நாள் திரௌபதியம்மன் திருமண விழாவில் தான் இக்கொடுமை அரங்கேறியுள்ளது.

அக்காணொளியின் படி, வழிபாடு முடிந்தவுடன் சென்று விடுகிறேன் என்று கூறுகிறார் அப்பெண். ஆனால் “இங்கே வருவதற்கு உனக்கு அனுமதி கிடயாது. உங்களது கோவிலுக்கு நாங்கள் வரமாட்டோம் அதே போல எங்களது கோவிலுக்கும் நீங்கள் வரக்கூடாது” என்று கூறி வெளியேற சொன்னார்கள்.

“உங்க சாமி எங்க சாமி என்றும் ஒன்னும் கிடையாது” என்று அப்பெண் வாதிடுகிறார். மேலும் “எல்லோரும் ஒன்று தான். சாமி கும்பிட்டுவிட்டு சென்றுவிடுகிறேன். சாமி கும்பிட மட்டும் விடுங்கள்” என்று அவர் கூறினார். ஆயினும் அக்கோவிலில் இருந்தவர்கள் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர்.

அக்கோவிலில் ரெட்டியார், வன்னியர், முதலியார் உள்ளிட்ட சாதி இந்துக்கள் மட்டுமே சடங்குகள் செய்கிறார்கள்.  தலித் மக்களுக்கு அக்கோவிலில் உரிமை இருந்தாலும் அவர்களை உள்ளே விடுவதில்லை என்று தலித் காலனியை சேர்ந்த ஒருவர் கூறினார்.

– வினவு செய்திப்பிரிவு.

மேலும் படிக்க…

சென்னை பல்லாவரம் வாரச் சந்தை – ஏழைகளின் சூப்பர் மார்கெட் !

சென்னை பல்லாவரத்தில் வெள்ளி தோறும் நடைபெறும் வார சந்தை மிகவும் புகழ்பெற்றது. இங்கே கணினி முதல் கருவாடு வரை விற்கப்படாத பொருட்களே இல்லை! இந்த பழைய பொருட்கள் சந்தை ஏழைகளின் பிரம்மாண்டமான “சூப்பர் மார்கெட்டாக” உள்ளது. பழைய பொருட்களைத் தாண்டி புதிய பொருட்களும், காய்கறிகள், பூச்செடிகள், பனியன்கள் உட்பட பல பொருட்களை இங்கு  குறைந்த விலைக்கு வாங்கலாம்.

தமிழகத்தில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் பிழைப்பிற்காக சென்னை வந்துள்ள ஏழைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இந்த சந்தை முக்கியமானது. அதி நவீன சூப்பர் மார்கெட்டுகளில் வாங்கும் பலருக்கும் இந்த பல்லாவரம் சந்தை தெரியாது.

பல்லாவரம் பழைய பொருட்கள் விற்கும் சந்தையில் மக்களும், வணிகர்களும்.

முகமது அலி, ஆடைகள் மற்றும் காலணி விற்பவர்.

வாரந்தோறும் ஏதாவது ஒரு சந்தையில தான் வியாபாரம் பண்ணுவோம். பாண்டிச்சேரி – சண்டே மார்க்கெட், வெள்ளிக்கிழமை சென்னை மின்ட் அப்புறம் பல்லாவரம் சந்தை, புதன் கிழமை ஈரோடு சந்தை என்று ஒவ்வொரு நாளும் சுத்திக்கிட்டே இருப்போம். பனியனை நாங்க திருப்பூர்ல இருந்து பர்ச்சேஸ் பண்ணிட்டு வரோம். இருபது நாளைக்கு ஒருமுறை ரெண்டு லட்சத்துக்கு பனியன் வாங்கிட்டு வந்துடுவேன். பிராண்டட்,  சாதா எல்லாம் கலந்து கட்டி விக்கிறேன். ஆனா எது எடுத்தாலும் நூறு ரூபாதான்.

டி சர்ட்டை ஆர்வமாகத் தேடும் வடமாநில இளைஞர்.

அதே போல ஷு நாங்க ஆக்ரா போயிட்டு வாங்கி வருவோம். அங்க ஒவ்வொரு வீட்டுலயும் குடிசை தொழில் மாதிரி செய்துட்டு இருக்காங்க. நாம சொன்னா கொரியர்ல போடுவாங்க. அதுல டேமாஜ் பீசு இருக்கும். நானே நேர்ல போயிட்டு பாத்துபாத்து வாங்கிட்டு வந்து குறைந்த விலைக்கு தருகிறோம். எங்க கிட்ட எல்லாரும் நம்பி வந்து வாங்குறாங்க. அதுல எங்களுக்கு திருப்தி தான். ஷோ ரூம்ல விக்கிறவங்களுக்கும் எங்களுக்குமான வித்தியாசம், அவன் ஏசி, கரண்ட் பில் எல்லாத்துக்கும் சேர்த்து பணம் வாங்குவான். நாங்க வாங்குறது பொருளுக்கு மட்டும் தான்.

லட்சுமி, திண்டுக்கல், குழந்தைகளுக்கான செய்முறை பொருட்கள் விற்பவர்.

எங்களால இந்த சந்தையில வாடகை கொடுத்து கடை போடகூட முடியல. ஒரு ஓரமா ஒதுங்கியிருக்கோம். எங்க சந்தை போட்டாலும் போயிடுவோம். நானும் எங்க வீட்டுக்காரரும் மாசம் ஒரு முறை தான் வீட்டுக்கே போவோம். அதுவரைக்கு எங்கயாவது தங்கி இதயெல்லாம் விப்போம். புள்ளங்க எல்லாம் என்னோட மாமனார் பார்த்துப்பார். நாங்க படிப்பு வாசனையே அறியாதவங்க. ஆனா நாங்க விக்குற பொருள் கொழந்தங்களோட அறிவ வளர்க்க இது உதவுது, பசங்க ஸ்கூல் புராஜெக்டுக்கு வாங்கிட்டு போவாங்க..

திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பட்டி விக்கும் பாட்டி.

பேர, ஊர கேட்டு நீங்க இன்னா பண்ண போறீங்க..எங்களுக்கு இதான் வயித்து பொழப்பு. இருபத்தி அஞ்சி வருசமா இந்த வேலைய செய்துகிட்டு இருக்கேன். எனக்கு படிக்க தெரியாது. ஆனா கணக்கு நல்லா போடுவேன். லட்ச ரூபா கொடுத்தாக் கூட எண்ணிடுவேன்.

சுரேஷ், பூச்செடிகள் மற்றும் வீட்டுத் தோட்டத்துகான செடிகள் விற்பவர்.

முப்பது ரூபாயில இருந்து முன்னூறு ரூபா வரைக்கும் செடிகள் இருக்கு. ரோஸ் அயிட்டம் தொட்டியோட விக்கிறதால விலை அதிகம். முன்பெல்லாம் சொந்த வீடு வச்சிருக்கவங்கதான் செடி வாங்க வருவாங்க. இப்ப வாடகை வீட்டில் இருக்குறவங்களும் வாங்கிட்டு போறாங்க.

வீட்டுத் தோட்டத்துக்கான பொருட்கள் விற்பவர்.

மாடித் தோட்டங்களுக்கு தேவையான பூவாளி மற்றும் பூச்சி மருந்து ஸ்பிரே அடிக்கும் உபகரணங்கள் விற்பவர். எங்களோட பெரும் பிரச்சனை போலீஸ் தான். பூவாளிய அய்யாவுக்கு வேணும், அம்மாவுக்கு வேணும்னு போலிஸ் அதிகாரிங்களுக்கு எடுத்திட்டு போயிடுறாங்க. ஆனா பொருள் வாங்க வரும் மக்கள் எங்களை கவுரவமா தான் பார்க்கிறாங்க.

கோழியை சந்தையில் விற்க வந்துள்ள நபர்.

சார் இது வீட்டுக்கோழிதான். ஊர்ல எல்லாக்கோழியையும் வம்புக்கிழுத்து சாவடிச்சிடுது. தெனமும் பக்கத்து வீட்டுக்காரங்களோட சண்டை. அதான் விக்க வந்திருக்கோம். இதுக்கு பேரே கொலைகாரக் கோழி. உங்களுக்கு வேணுமா?

தேவா, தூத்துக்குடி மாவட்டம், எலுமிச்சை சாறு விற்பவர்.

சென்னைக்கே இன்னைக்கு தான் வந்தேன். எங்க ஊர் பையன் கூட்டி வந்து இந்த வேலையில சேர்த்தான். மெட்ராச சுத்தி பாக்கனும்ன்ற ஆசை இருக்கு. முதல்ல வேலையில நல்லா பிக்கப் ஆக்கிட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு இருக்கேன்.

தாங்கள் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்க வந்துள்ள விவசாயிகள்.

அரக்கோணம் விவசாயிகள். எங்க ஊர்ல இருந்து இருபது பேர் ஆளுக்கு ரெண்டு மூட்டை காய் கொண்டு வந்திருக்கோம். தோட்டத்துல வியாபாரிங்க கிலோ 5 -லிருந்து 8 ரூபாக்குள்ள தான் எடுக்கிறாங்க. அது கட்டுபடியாகல. அதனாலதான் நாங்களே எடுத்திட்டு வந்து விற்பனை செய்யுறோம். சந்தையை நம்பிதான் விவசாயம் பண்றோம். பல்லாவரம், பாலூர், காஞ்சிபுரம், குருவிமலை என்று எல்லா சந்தைக்கும் போவோம். விவசாயிகள் வியாபாரியா அவதாரம் எடுத்திருக்கோம்…

அம்மிக்கல் விற்கும் பெரியவர்.

நடுத்தர வர்க்கம் மின்சாதனப் பொருட்களுக்கு மாறிவிட்ட நிலையில் இன்றும் ஏழைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் அம்மிக்கல்லை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் பெரியவர்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

கட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் !

ராசுவின் சடலத்தை அலைபேசியில் பார்க்கின்றனர் கட்டெபள்ளி கிராம மக்கள்

ராட்டிய மாநிலம், கட்ச்ரோலி மாவட்டத்தின் ஒரு குக்கிராமம் கட்டெப்பள்ளி. அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடக்கவிருந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏப்ரல் 21 அன்று இரவு கிளம்பிய 8 பதின்வயதினரின் கதி என்ன எனத் தெரியாமல் அக்கிராமமே தவித்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக ஒரு துயரச் செய்தி அவர்களை வந்தடைகிறது.

கட்ச்ரோலி பகுதியில் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளின்’ புகைப்படங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை நகோடி என்ற வழக்கறிஞரின் அலைபேசியில் கடந்த ஏப்ரல் 27 அன்று கட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தற்செயலாகப் பார்க்கையில்தான் அப்பதின்வயதினர் போலீசு துப்பாக்கிச்சூட்டில் பலியாகியிருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

அந்தப் புகைப்படத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ராசு சக்கொ மாதவி என்ற சிறுமி கொல்லப்பட்ட 16 ‘மாவோயிஸ்டுகளில்’ ஒருவராக அப்புகைப்படத்தில் காட்டப்பட்டிருந்தார்.

ராசுவின் சகோதரிகளான வஞ்சி (இடமிருந்து இரண்டாமவர்) மற்றும் ஜனோ (இடமிருந்து மூன்றாமவர்)

இவ்விசயத்தைக் கேட்டு ராசு மாதவியின் சகோதரிகளான வஞ்சி, ஜனோ இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏப்ரல் 22 அன்று இந்திராவதி ஆற்றங்கரையில் நடத்தப்பட்ட மோதலில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத நபர் என ராசு மாதவியைக் குறிப்பிட்டிருந்தது போலீசு.

ராசுவின் முகம் ஆழமான வெட்டுகளோடு வீங்கியிருந்தது. இடது கண் பெரிதாக வீங்கியிருந்தது. அவளது முகமே விகாரமாக மாறியிருந்தது. அடையாளம் காண சிரமம் இருந்தாலும், அது அவள்தான் என்பதை கிராம மக்கள் உறுதி செய்தனர்.

நகோடியின் அலைபேசியில் உள்ள அந்தக் கோப்பில் சவ எண் 10 என அடையாளமிடப்பட்ட உடல், அதே நாளில் காணாமல் போன மற்றொரு பதின்வயது சிறுவனான நுஸ்ஸேவின் உடலாக இருக்குமோ என சந்தேகம் தெரிவித்தனர் அக்கிராம மக்கள். கடுமையாகத் தாக்கப்பட்டதன் காரணமாக முகம் வீங்கியிருப்பதால் அது நுஸ்ஸேதானா என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

போலீசில் புகாரளித்தாலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட C-60 கமாண்டோக்களின் விசாரணையைத் தாண்டி, அச்சிறுவர், சிறுமியரின் இருப்பிடம் குறித்தோ, மரணம் குறித்தோ அரசுத ரப்பில் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

000

ட்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமம் கட்டெபள்ளி. இங்கு வாழும் 35 குடும்பங்களுக்கு காட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பீடி சுற்றும் ‘தெண்டு’ இலை சேகரிப்பு ஆகியவைதான் வாழ்க்கை ஆதாரமாக இருக்கின்றது.

இக்கிராமத்திலிருந்து சுமார் 66 கிமீ தொலைவில் இருக்கும் எடப்பள்ளி வரைதான் அரசு, தனியார் பேருந்துகளின் சேவை கிடைக்கப் பெறுகிறது. அங்கிருந்து இக்கிராமம் வரை தனிப்பட்ட இருசக்கர மோட்டார் வண்டிகளில் மட்டும்தான் சென்றடைய முடியும். அதுவும் இரவு நேரப் பயணம் என்பது சவாலானது. இக்காரணத்தினாலேயே இக்கிராமத்தினர் வெளியூருக்கு எப்போதாவது தான் பயணிக்கிறார்கள்.

கட்சிரோலி, எடப்பள்ளி, கசன்சூர்

ஏப்ரல் 21 அன்று பதின்வயது சிறுமியான ராசுவும் அவளது வயதை ஒத்த வேறு ஏழு பேரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள காசனூர் கிராமத்திற்கு ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றனர். கட்ச்ரோலி சிலா பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் நகோடி கூறுகையில், ”இவர்கள் திருமண நிகழ்விற்கு சென்று சேரவில்லை. ஒன்று மாவோயிஸ்டுகளின் இருப்பிடத்திற்கு அவர்கள் சென்றிருக்க வேண்டும்  அல்லது அவர்கள் போலீசால் கடத்திச் செல்லப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

ஏப்ரல் 21 அன்று சென்ற தமது பிள்ளைகள் திரும்புவதற்கு ஏப்ரல் 22 இரவு வரை காத்திருந்தனர் கிராம மக்கள். போலீசு மோதலில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் அவர்களுக்கு எவ்விவரமும் தெரியவில்லை.  பின்னர் மறுநாள் பகுதி முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு, ஏப்ரல் 24 அன்று, 140 கி,மீ தொலைவில் உள்ள கட்ச்ரோலி மாவட்ட தலைமை போலீசு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

அதற்கு முன்னரே சுட்டுக் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளின்’ படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது போலீசு. ஆனால் அந்த பட்டியலை குழந்தைகளை இழந்த கிராமத்தினருக்குக் காட்டாமல், அவர்களை நேராக பிணவறைக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறது.

”குளிரூட்டப்படாத, அதிக வெப்பத்தில் வைக்கப்பட்ட உடல்களில் இருந்து அழுகல் வாடை வந்த்து. முகங்கள் சிதைந்து அழுகத் தொடங்கியிருந்த நிலையில் யாருடைய முகத்தையும் எங்களால் அடையாளம் காட்ட இயலவில்லை” என்கிறார் பிஜ்ஜா.

பிஜ்ஜாவின் 16 வயது சகோதரன் மங்கேஷும் ராசுவுடன் அன்று வெளியூர் சென்ற ஒருவன். மங்கேஷ் எட்டப்பள்ளியில் உள்ள கல்வி நிலையத்தில் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

இக்கிராமத்தைச் சேர்ந்த 8 பதின்வயதினர் கொல்லப்பட்டது குறித்து பலவகையான செய்திகள் உள்ளூர் செய்தித்தாள்களில் வர ஆரம்பித்தன. வெவ்வேறு போலீசு அதிகாரிகள், ஒவ்வொருவரும்  ஒவ்வொருவிதமாக கூறிய தகவல்களை செய்தித் தாள்கள் வெளியிட்டன.

முதலில் பெயர், ஊர் எதுவும் குறிப்பிடாமல் “பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்த போராளிகள்” என குறிப்பிட்டன. பின்னர் மாவட்ட போலீசு அவர்களுக்கு வேறு விதமான ‘கதையைச்’ சொல்லியது. அவர்கள் 8 பேரும் அக்கிராமத்திலிருந்து மாவோயிஸ்டுகளின் படைக்குத் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், முதல் முறையாக அவர்கள் தங்களது கமாண்டரை பார்க்கச் சென்றிருந்தனர் என்றும் கூறியது போலீசு.

பெர்மெல்லி தளம் என்ற பகுதியின் மாவோயிஸ்ட் படைப்பிரிவின் கமாண்டரான தோலேஷ் மதி அட்ராம் (சாய்நாத்) என்பவர் குட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதையும், தற்போது இந்த 8 சிறுவர்கள் குறித்து போலீசு கூறும் ‘கதையையும்’ சேர்த்துக் கோர்த்து எழுதத் தொடங்கிவிட்டன உள்ளூர் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள்.

ஒரு பச்சைப் படுகொலையை நடத்திவிட்டு, அதனை மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலாக சித்தரிக்கவும், அச்சிறுவர்களின் குடும்பத்தினரை மிரட்டவும் பல்வேறு முயற்சிகளை செய்திருக்கிறது போலீசு.

பழங்குடியின மக்கள் தங்களை போலீசு தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள அவர்களுக்கு அடிப்படையான, அவசியமான தேவையாக இருப்பது அடையாள அட்டைகளே. தற்போது புகார் அளித்துள்ள குடும்பத்தினரின் ஆதார் அட்டைகளை விசாரணைக்குத் தேவை என பிடுங்கி எடுத்துச் சென்றிருக்கிறது போலீசு. இது தங்களை மிரட்டுவதற்காகவே போலீசு செய்திருக்கிறது என்கின்றனர் கட்டெபள்ளி  கிராமத்தினர்.

மாவோயிஸ்ட் கமாண்டர் சாய்நாத் அக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு, சாய்நாத்தின் தொடர்பில் அந்த  8 சிறுவர்களும் இருந்தனர் எனக் கூறுகிறது போலீசு. ஆனால் அக்கிராம மக்கள் இதனை தெளிவாக மறுக்கின்றனர்.

“சாய்நாத் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரைவிட்டு வெளியேறிய போது, திரும்பவர மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். போராளிகளோடு போய் சேர்வதாக இருந்தால் அவர்கள் அனைவரும் கும்பலாக போயிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார் கட்டெபள்ளி ஊர்ப் பெரியவர் ஒருவர்.

மாவோயிஸ்டுகளோடு ஏற்கனவே தொடர்பு கொண்டிருப்பார்களோ என சந்தேகிக்க கூட வாய்ப்பில்லாதபடிக்கு அச்சிறுவர்கள் இதற்கு முன்னாள் ஒருமுறை கூட காணாமல் போனதில்லை, என்கின்றனர் அக்கிராம மக்கள்.

மேலும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவர்கள் அனைவரும் மதிப்புமிக்க உடைகள் மற்றும் அணிகலன்களை தங்களுடன் கொண்டு சென்றிருக்கின்றனர். மாவோயிஸ்டுகளோடு இணைந்து போர் புரியச் செல்பவர்கள் அணிகலன்களையும் எடுத்துச் செல்வார்களா என்ன ?

அப்பதின்வயதினரின் முகத்தில் இருக்கும் ஆழமான வெட்டும், முகம் மற்றும் கண்கள் வீங்கியிருப்பதும், போலீசு அவர்களை சுட்டுக் கொல்வதற்கு முன்னால் கடுமையாக தாக்கியிருப்பதையே காட்டுகிறது.

போலீசு வெறியாட்டத்திற்கு தமது உறவுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் கொல்லப்பட்டது நியாயமென சித்தரிக்கும் ஊடகங்ளின் கொடுமையைுயும் அனுபவித்து வருகிறது கட்டெபள்ளி கிராமம். இறுதியில் மாவோயிஸ்டுகளை விட அதிகம் கொல்லப்பட்டது பழங்குடி மக்களே என்பது இந்த என்கவுண்டரிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் சிறுவர்களை இப்படி ஈவிரக்கமின்றி கொன்றிருக்கிறார்கள். குழந்தைகளுக்காக அதுவும் ஓநாயக் கண்ணீர் விடும் குரலைக்கூட இங்கே நாம் காண முடியவில்லை.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி மூலம்:
One of 40 ‘Naxals’ Killed in ‘Encounter’ Was Child, Say Villagers, 7 More Missing

மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் தொழிலாளிகள் ! தொழிற்சங்க தலைவர்கள் நேர்காணல் !

தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற ஒவ்வொரு உரிமையும் மோடி அரசால் பறிக்கப்பட்டு வருகிறது. இன்றையை அரசியல் சூழலில் மே தினத்தின் பொருள் என்ன? தொழிலாளர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்களை சங்கமாக்கி அணி திரட்டுவதில் என்ன சிக்கல்?  தொலைபேசி மூலம் சில தொழிற்சங்க தலைவர்களிடம் வினவு செய்தியாளர் பேசினார்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

ற்போது பாசிச ஆட்சி நடக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றத்தை செய்கிறது மோடி அரசு. மருத்துவம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கி வருகிறது. மக்கள் மீதான தாக்குதல் பலமுனைகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பொருளாதார தாக்குதல், மதவாத தாக்குதல் அதிகமாக உள்ளது. மூலதனத்தில் இருந்து விடுதலை, உழைப்பு சுரண்டலில் இருந்து விடுதலையடைய உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அதற்குரிய உறுதியேற்பு நாள் தான் மே தினம்.

தோழர் சீனுவாசலு,
பொதுச் செயலர்,சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்
.

புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாநகராட்சியில் ஒப்பந்த முறை அதிகரித்து வருகிறது. அதற்கெதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.  அரசாணை 62-ன் படி, குறைந்த பட்ச ஊதியம் 15,725 ரூபாய் என்று அறிவித்தார்கள். அதனை கொடுக்காமல் இருக்கிறார்கள்.

தோழர் சீனுவாசலு,
பொதுச் செயலர்,சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்
.

சைதை துரைசாமி மேயராக இருக்கும் பொழுதே தெருக்களை கூட்ட “ஒரு மணி நேரத்திற்கு இருபது ரூபாய் என்ற முறையில் எட்டு மணி நேரத்திற்கு இருபத்தி ஆறு நாட்கள் வேலை வழங்க வேண்டும்” என்ற முறையில் குத்தகைக்கு விட முயற்சி செய்தார்கள். அதனை எதிர்த்து போராடியதால் தற்காலிகமாக  கைவிட்டார்கள். தற்போது அரசாணை 63 ஒன்றை போட்டு மணிக்கணக்கில் வேலை செய்வதற்கான ஒப்பந்தத்தை அமுல்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தொழிலாளர்களும் ஒற்றுமையாக இருப்பதில்லை. கட்சிகள் பின்னாடி செல்வது, கேக் வெட்டுவது, கொண்டாடுவது என்றே இருக்கிறார்கள். மோசமமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை தொழிலாளி வர்க்கம் உணரவில்லை. அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறோம்.

தோழர் பாபு , சிறப்புத்தலைவர்,
காஞ்சி காமகோடி மருத்துவமனை ஊழியர்கள் சங்கம்
.

தோழர் பாபு , சிறப்புத்தலைவர்,
காஞ்சி காமகோடி மருத்துவமனை ஊழியர்கள் சங்கம்
.

த்தியில் ஆளக்கூடிய மோடி அரசு தொழிலாளர் விரோதமாக செயல்படுகிறது. கார்ப்பரேட்டுக்களின் ஆதிக்கம் தான் ஆட்சி செய்கிறது. எங்கும் காண்ட்ராக்ட்மயமாகிறது. மே தினத்தில் காண்ட்ராக்ட் முறையை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களுடைய சூளுரை.

தோழர் திருச்செல்வன், பொதுச் செயலர்,
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
, சிஐடியு.

132 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை மீண்டும் திரும்புகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. உலகம் முழுவதிலும் வேலைப்பறிப்பு அதிகரித்து வருகிறது.  சம்பள வெட்டு , சமூக பாதுகாப்பின்மை என்று கொடிய நாட்களை சந்திக்கின்றோம். நிதி மூலதனமும், முதலாளித்துவமும் ஆட்டுவிக்கும் பாதையில் செல்கிறது அரசு.

தோழர் திருச்செல்வன், பொதுச் செயலர்,
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
, சிஐடியு.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் துவங்குவது, தனக்கு பிடித்த சங்கத்தில் உறுப்பினராக சேர்வது கூட மறுக்கப்படுகிறது. மீறி சங்கம் துவங்கினால் நிர்வாகத்தால் பழிவாங்கப்படுகிறார்கள். சங்கத்தை பதிவு செய்வது கூட பெரும்பாடாக உள்ளது. அரசு – தனியார் என்று எல்லாத் துறையிலும் நவீன தாக்குதல் அதிகரித்து உள்ளது.  தொழிலாளர்களின் கடுங்கோபத்துக்கு ஆளாகி வருகிறது மோடி அரசு. அந்தக் கோபம் பெரும்போராட்டமாக வெடித்து சிதறும் நாள் நெருங்கி வருகிறது.

தோழர் பாலகிருஷ்ணன், தலைவர்,
சிஐடியு- அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்.

ற்கனவே இருக்கக்கூடிய தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டுவிட்டன. தற்போது  குறிப்பிட்ட கால ஒப்பந்த ஊழியர் (Fixed Time Employs) என்ற முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது நிரந்தரம் என்பது எங்கும் கிடையாது.  சமூகப் பாதுகாப்பு, ESI,PF, விடுப்பு எதுவும் கிடையாது. தொழிலாளர்களை கூலி அடிமைகளாக மாற்றுவது என்பதுதான் நடக்கிறது.

தோழர் பாலகிருஷ்ணன், தலைவர், 
சிஐடியு- அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்.

தேர்தல் நேரத்தில் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் மோடி. ஆனால் இருக்கின்ற வேலைகளை பறித்து வீட்டுக்கு அனுப்புகிறார். துப்பாக்கி தொழிற்சாலை. ஊட்டியில் உள்ள பிலிம் பேக்டரி மூடுவிழா, மோட்டார் வாகன தொழிலை கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்தல், ராணுவ உடை தயாரிப்பு தொழிற்சாலை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு தொழிலாளர்களை விரட்டியிருக்கிறது.

அரசு பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது, நிரந்த வேலையை உத்திரவாதப்படுத்துவது, மக்கள் நலன் என்ற கொள்கை எல்லாம் இப்பொழுது அரசுக்கு இல்லை.

தோழர் பழனிச்சாமி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

தொழிலாளர் உரிமை என்பதே இல்லை. ஏற்கனவே அடிமையாக இருந்தார்கள். இப்பொழுது கொத்தடிமையாக இருக்கிறார்கள். எழுத்தளவில் இருந்த சட்டங்கள் எல்லாம் இன்று மோடி அரசு முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி விட்டது. மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தொழில்துறை துறை அமைச்சர், “முதலாளிக்கு தொழிலாளியை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கவும், எடுக்கவும் உரிமை உண்டு” என்கிறார்.

தொழிலாளர்கள் உயிர்நீத்து பெறப்பட்ட உரிமை என்னவென்பதே தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. அந்த உரிமை பறிபோவது பற்றியும் கவலைப்படுவதில்லை. ஏற்கனவே ஓட்டுக்கட்சிகள் தொழிலாளியை மழுங்கடிக்கும் வேலையை செய்தன. இன்று முதலாளியே அந்த வேலையில் இறங்கியுள்ளார்கள். புதுவையில் ரானே பிரேக் லைனிங் லிமிடெட் நிறுவனத்தில் ஆண்டு சுற்றுலா என்கிற பெயரில்  தொழிலாளர் தினத்தில் குடும்பத்துடன் டூர் அழைத்து செல்கின்றார்கள். எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற அனைத்து தொழிலாளர்களும் இத்தினத்தில் செல்கிறார்கள்.  போராட்ட குணம் முற்றிலும் மழுங்கடிக்கப்படுகிறது.

தோழர் ராஜேந்திரன்,
மாநில பொதுச்செயலர்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்.

மே தினம் என்பது கொண்டாடக்கூடிய தினமாக இல்லை. எட்டு மணி நேரம் வேலை, உறக்கம், ஓய்வு என்பது எல்லாம் இல்லை. சமூகத்தை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. உயிர் நீத்து பெறப்பட்ட உரிமை ஒன்று கூட இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் எங்கள் வேலையை எடுத்துக்கொள்ளலாம். மற்ற துறைகளிலும் உள்ளது என்றாலும் நான் சார்ந்த துறையை பற்றி சொல்கிறேன். ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்கிகிறார்கள். அதற்கு மேலும் வேலை செய்கிறார்கள். போதிய ஆட்கள் பற்றாக்குறையால் நாங்களே செய்ய வேண்டியுள்ளது. மலைப்பிரதேசங்களில் பணியாற்றக்கூடியவர்களுக்கு ஓய்வு என்பது சுத்தமாக இல்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் பணியில் இருக்கிறார்கள். பணிப் பாதுகாப்பும் இல்லை. ஊதியமும் இல்லை. மோடி அரசு எல்லா சட்ட திட்டங்களையும் ஒழித்து கட்டி வருகிறது.

இன்றைய தினத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சொல்லக்கூடியது, தொழிலாளர் சட்டம் உளுத்துப்போன, உதவாக்கரை சட்டமாக உள்ளது.  மற்ற நாடுகளில் எட்டு மணி நேர வேலையை ஆறுமணி நேரமாக குறைப்பது பற்றி  யோசித்து வருகிறார்கள். ஆனால் இங்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று மோடி கூறுகிறார். கார்ப்பரேட்டுகளின் மனம் குளிர அவர்களுக்கு சேவை புரிகிறார். எனவே முதலாளித்துவத்துக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் வால்மார்ட், பிரான்சு, இந்தியாவில் கேரளா தேயிலை தோட்ட போராட்டம், குஜராத்தில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போராட்டம் என்று வீரியமாக நடந்து வருகிறது. இதனை ஒருங்கிணைக்க ஒரு சரியான தலைமை இல்லை என்பது நம் நாட்டிற்கு சாபக்கேடு. விரைவில் இந்த நிலைமாற தொழிலாலார்கள் வர்க்கமாக திரள வேண்டும். பகத்சிங் வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தோழர் சுதேஷ்குமார்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

டந்த இருபது வருடமாக சங்கம் வைக்கும் உரிமை இருந்தது.  மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, “முதலாளிகளுக்கு தகுந்தாற் போல் தொழிலாளிகள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று சாதுர்யமாக சொல்கிறார்..  இந்த அறிவிப்பை சொல்லி முடிப்பதற்குள் முதலாளிகள் பல்வேறு விஷயங்களை அமல்படுத்திவிட்டனர். இது நுட்பமான முறை.  ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் சேரும் உரிமை உண்டு. ஆனால் முதலாளிகள் “சங்கமாக சேராதே, ஐவர் குழுவாக சேர்” பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்கிறது.

தோழர் சுதேஷ்குமார்

கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கம் துவங்க முடியாமல் உள்ளது.   தொழிலாளர்கள் பிரச்சனை என்று தொழிலாளர் துறைக்கு சென்றால், நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்புகிறார்கள். மூன்று முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் நிர்வாகம் வரவில்லை என்றால், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் தொழிலாளர் துறை அதிகாரி. தொழிலாளி பல் பிடுங்கபட்ட பாம்பாக இருப்பதால் முதலாளிகள் ஏறி அடிக்கிறார்கள். இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்ந்தால் போதும் என்றே இருக்கிறார். தொழிலாளர் சங்கங்களும் வலுவாக இல்லை. இதில் மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது. அசோக் லைலான்ட் நிறுவனத்தில் பயிற்சித் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி நிரந்தர வேலைகளைப் பறிக்கும் அரசின் NEEM திட்டத்தை  நடைமுறைபடுத்தியிருகிறார்கள். அதேபோல் குறிப்பிட்ட கால ஒப்பந்த ஊழியர் (fixed time employs) என்ற முறையை கொண்டுவந்திருக்கிறார்கள்.நிரந்தர தொழிலாளி என்ற பேச்சுக்கே இடமில்லை.  இனி வருகின்ற காலம் தொழிலாளர்களுக்கு இருண்ட காலமாக இருக்கின்றது. இதனை பொற்காலமாக மாற்ற வேண்டும் என்றால் சிகாகோ போராட்ட வழியில் செல்ல வேண்டும்.

– வினவு களச் செய்தியாளர்.

வங்கி தனியார்மயம் : கார்ப்பரேட் திருட்டுக்குத் தரப்படும் லைசன்ஸ் !

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் குறித்து மக்களவையில் பதிலளித்த மைய அரசு, தற்போது பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு 7.77 இலட்சம் கோடி ரூபாயாகும் எனத் தெரிவித்திருக்கிறது. இதில் 5.27 லட்சம் கோடி ரூபாயை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருப்பதாகவும், கடந்த 2015-இல் இந்தத் தொகை 1.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும் அப்பதிலில் மைய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக் கடன் அதிகரித்திருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்திலோ கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடன்களை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. எனில், கார்ப்பரேட் முதலாளிகள் கடன் வாங்கி ஏப்பம் விட்டுள்ள பொதுப்பணத்தின் மதிப்பு என்ன என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணி

இந்நிலையில் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தெபராய் வாராக் கடன் தொகையில் மேலும் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார். இந்தத் தள்ளுபடியை அவர்கள் விவசாயிகளுக்கோ, கல்விக்கடன் வாங்கிய ஏழை மாணவர்களுக்கோ தரப்போவதில்லை. கார்ப்பரேட் முதலாளிகள்தான் இந்தச் சலுகையையும் அனுபவிக்கப் போகிறவர்கள்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டால் வங்கிகள் திவாலாகிவிடும் எனப் பதறித் துடிப்பவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் விசயத்தில் இந்த செண்டிமென்டெல்லாம் பார்ப்பதில்லை. பொதுத்துறை வங்கிகளை அழித்தாவது கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தைக் கைதூக்கிவிடத் தயாராகவே இருக்கிறார்கள் அவர்கள்.

பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்க 2.11 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு மறுமுதலீடு செய்யப்போவதாக மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. வாராக் கடனால் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவதற்கு இந்த முதலீடு அவசியம் என நியாயப்படுத்தியிருக்கிறார், தெபராய்.

வங்கிப் பணத்தை ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடமிருந்து அந்தப் பணத்தை மீட்பதற்குத் தயாராக இல்லாத மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து, பிறகு அவ்வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடம் கைமாற்றிவிடத் திட்டம் தீட்டுவது, வல்லுறவு குற்றவாளியைத் தண்டிக்காமல், அவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டி வைக்கச் சொல்லும் சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புக்குச் சமமானது. ஆனால், ஆளுங்கும்பலோ இந்த அயோக்கியத்தனத்தை வங்கி சீர்திருத்தம் எனப் பெயரிட்டு அழைக்கிறது. புரோக்கர்களை பி.ஆர்.ஓ.க்கள் என நயமாக அழைப்பதில்லையா, அதுபோலத்தான் இதுவும்!

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மே தினம் : புதுவை – மதுரை ஆர்ப்பாட்டங்கள் !

0

புதுச்சேரி

மே நாள் சூளுரை!

  • கட்சிகளை மாற்றுவது தீர்வாகாது! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!
  • தோற்றுப் போய், ஆள அருகதையற்றுப் போன கார்ப்பரேட் அதிகாரத்தை அகற்றுவோம்!
  • தொழிலாளர்கள் – விவசாயிகள் – மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் – சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!

மே நாள்! நமக்கு மேற்கண்ட சூளுரையுடன் தான் துவங்கியது. ஆனால், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், ஓட்டுக் கட்சி தலைவர்களது அறிக்கைகளிலும் வாழ்த்துச் செய்திகளால் நிரம்பி வழிந்தது. ஓட்டுக் கட்சிகள் மற்றும் தனிநபர் தொழிற்சங்கங்களும், இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

8 மணி நேர உரிமைகளைப் பெற்றுத் தந்து கொத்தடிமைத்தனத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற்ற மாபெரும் போராட்ட நாள்தான் மே நாள் என்றாலும் அதைக் கொண்டாடுவதற்கான சூழ்நிலை தற்போது நிலவுகிறதா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி. அடக்குமுறைகள், சிறை, சித்திரவதைகள் என ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் உயிர்த் தியாகத்தால் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு செல்ல முடியாமல், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் கூட தொழிலாளி வர்க்கம் இல்லை. மாறாக, அந்த வெற்றிகளை இழந்து வருகிறோம். 12 மணிநேர வேலை கட்டாயமாகி விட்டது. சங்கம் சேரும் உரிமையைக் கூட இழந்து நிற்கிறோம். இன்றைய இந்த சூழ்நிலையில் மீண்டும் நமக்கான விடுதலையை மே தினத் தியாகிகளின் வழியிலே மாபெரும் போராட்டமாக நடத்த வேண்டியது நம்முன் உள்ள கடமையாகும்.

தொழிலாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தங்களது உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். மக்களின் சொத்துக்களைப் பறித்தெடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கி முதலாளித்துவத்திற்குச் சேவை செய்யும் அரசாக மாறிவிட்டது. இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும் தோற்றுப்போய் மக்களுக்கு எதிர்சக்தியாக மாறி விட்டது.

எனவே, இந்த கட்டமைப்பில் ஓட்டுக் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்தும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால், கட்சிகளை மாற்றுவதால் பிரச்சினைகள் தீராது. மாற்றாக, இந்த அரசுக் கட்டமைப்பை மாற்றி, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசுக் கட்டமைப்பை மக்களாகிய நாமே நிறுவிக் கொள்வதன் மூலமே நமக்கான பிரச்சினைகள் தீர்க்க முடியும்.

அன்றுதான் 8 மணிநேர வேலை உரிமை மட்டுமல்ல, நாம் இழந்து நிற்கும் அனைத்து உரிமைகளையும் வெல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மே நாள் போராட்டத்தை மீண்டும் நடத்த அறைகூவல் விடுக்கும் விதமாகவும் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேரணியை, புதுச்சேரி புஜதொமு மாநில இணைச் செயலாளர் தோழர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், மே நாளை கொண்டாட்ட நாளாக அல்லாமல் போராட்ட நாளாக நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியத்தை விளக்கினார். இன்று பெற்ற உரிமைகளை இழந்து நிற்கிறோம். இதை மீட்டெடுக்க வேண்டுமென்றால், தொழிலாளர்களாகிய நாம் மட்டுமே களத்தில் நின்றால் போதாது. குடும்பம் குடும்பமாய் போராட்டங்களில் பங்கு பெற வேண்டும். பிற உழைக்கும் வர்க்கங்களும் இணைய வேண்டும் என்ற அறைகூவலுடன் பேரணியைத் துவங்கி வைத்தார்.

மே நாள் வாழ்கவே! என்று பறை முழக்கத்துடன், மே நாள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கம்பீரமாக துவங்கி, நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக வரிசையாகவும், ஒழுக்கம், கட்டுப்பாடுடன் நகர்ந்த பேரணி, வழிநெடுகிலும் உள்ள வியாபாரிகள், மக்களின் கவனத்தை ஈர்த்தது. கொளுத்தும் வெயிலையும் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் வீறுநடை போட்டனர். தொடர்ச்சியான முழக்கங்களுடன் நிறைவு பெற்ற பேரணியைத் தொடர்ந்து, நகரின் முக்கிய இடமான சாரம் அவ்வை திடலில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி புஜதொமு மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை ஏற்றார். தனது தலைமையுரையில், மே நாள் என்பது போராட்ட நாள்தான் என்பதை வலியுறுத்திய அவர், அமெரிக்காவின் மேநாள் போராட்டங்களுக்கு முந்தைய நிலையில்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் உள்ளது. எல்லா அரசுத் துறையும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளால் சீரழிந்துள்ளது. அறிவு புகட்ட வேண்டிய கல்வித்துறை, கூட்டிக் கொடுக்கும் வேலை செய்கிறது. மக்களின் நண்பன் என்று சொல்லும் போலிசு குட்கா விற்கிறது. கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுகிறது. நீதிமன்றங்களில் நீதி விலை பேசப்படுகிறது. தொழிலாளர் துறையில் இழுத்தடித்து தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். எனவே இதை ஒழிக்க, கட்சிகளை நம்பி ஏமாறாமல் கட்டமைப்பை மாற்றுவதற்கான வேலைகளில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தோழர் மகேந்திரன் தனது உரையில், “இன்று மாணவர் இளைஞர்கள் சமூக உணர்வற்றவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழகமே போராட்டக்களமாக மாறிய போதும், ஐபிஎல் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்கத் திரள்வதே இதற்குச் சாட்சி. லட்சங்களைக் கொட்டி படித்து எப்படியாவது முன்னுக்கு வந்து விடலாம் என முட்டி மோதுகின்றனர். என்ன தான் படித்தாலும், இறுதியில் காண்டிராக்ட் வேலைதான் மிஞ்சுகிறது” என குறிப்பிட்டார். அரசின் பல்வேறு துறைகளும் சீரழிந்து வருவதைப் பட்டியலிட்டுப் பேசிய தோழர், மோடி போராடும் விவசாயிகளைச் சந்திக்காமல், நடிகைகளைச் சந்திப்பதையும், லெனின் விவசாயிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். எனவே, மக்களை மதிக்கின்ற அரசை உருவாக்க கட்சிகளை மாற்றுவது தீர்வாகாது கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்றார்.

திருவெண்ணெய் நல்லூர் வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஏழுமலை, இன்று விவசாயம் அழிந்து விட்டது. விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும், விவசாயத்தை நிரந்தரமாக காப்பாற்ற பேசுவதில்லை. விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இன்று காவிரியைத் தடுத்து, டெல்டாவைப் பாலைவனமாக்க மோடி அரசு வேலை செய்கிறது. விவசாயத்தில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் நிலைமை அதுதான் என்று விளக்கிய தோழர், இவற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு புரட்சிகர அமைப்புகளின் தோளில் உள்ளது. அதை அந்த அமைப்புகளால் மட்டும் செய்து விட முடியாது. அந்தத் தோள்களின் மேல் உள்ள பொறுப்பை மக்களும் பகிர்ந்து கொள்வதன் மூலமே சாதிக்க முடியும் என மக்களுக்குப் போராட அறைகூவல் விடுத்தார்.

தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் பேசும் போது இந்த அரசின் எந்த உறுப்பும் மக்களுக்குப் பயன்படாத நிலையில்தான் உள்ளது. அதனால், இந்த அரசு நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு மக்கள் வர வேண்டும். கட்சிகளால் மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை என்பதுதான் நாம் தினமும் காணும் உண்மை. எனவே, கட்சிகளை அல்ல, கட்டமைப்பை மாற்ற வேண்டுவதற்கான போராட்ட தருணம் இது என்றார்.

இறுதியாகப் பேசிய புதுச்சேரி, புஜதொமு மாநிலப் பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, மே-1 தொழிலாளர் தினம் என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நாளில் பிறந்த அஜீத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர் இளைஞர்கள். எந்த ஒரு சமூகப் பிரச்சினைக்கும் வாயே திறக்காத ஒரு சுயநல தறுதலை, உங்களுக்கு தலையா? இன்று எது நமக்குத் தேவை? என கேள்வி எழுப்பினார்.

போலிசு உங்கள் நண்பன் என்கிறது உண்மையில் போலிசு மக்களின் நண்பனா? எனக் கேள்வி கேட்டால் சிறுகுழந்தை கூட இல்லை என்ற உண்மையைச் சொல்லும். மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் போலீசின் நிலை இன்று இதுதான். போலீசு மட்டுமல்ல, மற்ற அரசுத் துறைகளின் நிலைமையும் இதுதான் என்பதை உதாரணங்களுடன் விளக்கிப் பேசி, மக்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதும் புரட்சியை நடத்துவதும் தான் நமது வேலையாக இருக்க வேண்டும் என்று முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பாடப்பட்ட தொழிலாளர்கள், மேதினம் மற்றும் கம்யூனிசத்தை பற்றிய பாடல்கள் உணர்வு பூர்வமாகவும், உற்சாகத்தை ஊட்டுவதாகவும் இருந்தன. மக்களும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆங்காங்கே நின்று கேட்டனர்.

மேதினம் என்பது கொண்டாட்ட நாளல்ல! போராட்ட நாள் என்பதையும் இந்த கட்டமைப்பை நொறுக்குவதற்கான போராட்டமாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் நிகழ்ச்சி அமைந்தது.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 959778901.

*****

மதுரையில்…

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் பேரனி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக 01.05.2018 அன்று மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் மாலை 5:00 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணியின் முன் வரிசையில் பறையிசை முழங்க சிறுவர்களின் கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இது சுற்றி இருந்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இறுதியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.