Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 443

ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?

லே ஆஃப், சரியா தவறா – ஒரு கேள்வி, பல பதில்கள்

சிகரெட் குடிக்கிறது நல்லதா அப்படீன்னு ஒரு கேள்வியை கேட்டால்?

இந்தக் கேள்வியை ஒரு 5 வயது பையனிடம் கேட்கும் போது, “தப்பு சார், 5 வயசு பையன் சிகரெட் குடிக்கலாமா?” அப்படின்னு பதில் வரும்.

இந்தக் கேள்வியை ஒரு 10-வது படிக்கிற பையனிடம் கேட்டால், “இப்பதான் சார், ஏதோ ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு சொல்லி ஆரம்பிச்சிட்டோம். விட முடியல, தப்பு சார், நான் சீக்கிரம் விட்டுருவேன்.

கொஞ்சம் தள்ளி போய் ஒரு காலேஜ் படிக்கிற பையனிடம் கேட்டேன், “சார், லைஃப்ல எப்பதான் சார் எஞ்சாய் பண்றது. இதெல்லாம் தப்பு கிடையாது சார், அப்பா காசில குடிக்கிறது தப்புதான். இருந்தாலும், நான் சம்பாதிச்ச பிறகு இன்னும் நிறைய, பெட்டராவே, ஒரு நாளைக்கு ஒன்னு ரெண்டுன்னு குடிக்கிறத விட ரெண்டு பாக்கெட், மூணு பாக்கெட் குடிப்பேன் சார்” அப்படீன்னு ஒரு பதில் வரும்.

சரி, அதே கேள்வியை வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிக்கும் போது கேட்டா, “ஏய் இதெல்லாம் கேக்கறதுக்கு நீ யாரு? who are you to say about this? என்னுடைய பெர்சனல், என்னோட தனிப்பட்ட விஷயத்தில தலையிட நீ யாரு? don’t you know basic manners” என்று ஒரு பதில் வரும்.

ஆனா, கேள்வி ஒண்ணே ஒண்ணுதான், சிகரெட் பிடிப்பது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என்பதை தெளிவாக எழுதினால் கூட பதில்கள் வெவ்வேறாக உள்ளது. சரி, ஏன் இதை பேசறோம்? யூனியன் சார்பா இதை ஏன் பேசுகிறோம்?

கேள்வி, “லே ஆஃப் நல்லதா”.  இந்தக் கேள்வியை ஒரு fresher கிட்ட வைக்கிறேன். இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு போயி ஒரு கம்பெனில ஜாயின் பண்ணியவர் கிட்ட கேட்டா, “சார் நான் இப்பதான் ஜாய்ன் பண்ணியிருக்கிறேன், முதலாளி எது பண்ணாலும் நல்லதுதான் போலிருக்கு” என்று சொல்வார்.

சரி, ஒரு 5 வருசம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர்கிட்ட போய் கேட்டா, “சார் நான் இப்பதான் லோன் வாங்கி மூணாவது வருஷம் ஈ.எம்.ஐ. கட்டிகிட்டு இருக்கேன். லேஆஃப் தப்புதான் சார், நாங்க இங்கதான் டிரெயின் ஆகியிருக்கோம். லே ஆஃப் தப்பு”ம்பாரு.

ஒரு 15 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் எம்ப்ளாயி கிட்ட கேட்டா, “சார், நான் இப்பதான் சார் மூணாவது வீடு ஈ.எம்.ஐ. முடிச்சிருக்கேன். லேஆஃப் தப்புதான் சார். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வேலை செய்து, உடல் நலத்தை எல்லாம் காம்பரமைஸ் செய்து கொண்டு, நெஞ்சு வலி வந்தாலோ, முதுகு வலி வந்தாலும் ஆஸ்பிட்டல்லையே அட்மிட் ஆனாலும், தூக்கத்தை மறந்து வேலை செய்து கிட்டு இருகேன் சார், எப்படி இருந்த கம்பெனி, வெறும் 1000 பேர் வேலை செஞ்ச கம்பெனி 1 இலட்சம் பேர் கம்பெனி ஆனதுன்ன என் உழைப்புதான் சார் காரணம். பாருங்க லேஆஃப் தப்புதான் சார்” னு சொல்லுவாங்க.

ஒரு காலேஜ் கிராஜுவேட் கிட்ட போனா, “இண்டஸ்ட்ரியே புரிய மாட்டேங்குது சார், திடீர்னு சம்பாதிக்கிறாங்க, திடீர்னு வேலைய விட்டு தூக்குறாங்க, என்னன்னு புரிய மாட்டேங்குது சார்”

ஒரு 25 years experience இருக்கிற ஒரு title holder கிட்ட போய் கேட்டீங்கன்னா, “சார், national interest-ல லேஆஃப் சரிதான் சார், எங்க கையில ஒண்ணுமே கிடையாது சார். போர்டு என்ன சொல்லுதோ அதைச் செய்றேன், ஒரு அடியாட்கள் நாங்க, அவங்க சொல்றாங்க நாங்க செய்றோம், அதுக்குத்தான் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. CEO வே board சொல்றத கேட்க வேண்டிய ஒரு ஆள், அவ்வளவுதான்”

இப்படித்தான் பதில் வரும்.

சரி ஒரு share holder கிட்ட போய் கேட்டு பாருங்க லே ஆஃப் நல்லதான்னு, “கண்டிப்பா நல்லது சார், profit முக்கியம், profit  வைச்சுதான் நான் எந்த கம்பெனியிலயும் இன்வெஸ்ட் பண்ணுவேன்”

சரி, ஒரு mutual fund கம்பெனில போய் கேட்டு பாருங்க, “லே ஆஃப் நல்லதா”ன்னு. “சார் லே ஆஃப் நல்லதா கெட்டா என்கிறத விட, லேஆஃப்-ங்கிற நியூசை வைச்சுகிட்டு நான் எவ்வளவு பிரேக் பண்றேங்கிறதுதான் எனக்கு முக்கியம். ஒரு லே ஆஃப் இந்த கம்பெனில நடக்கப் போகுதுன்னா, அந்த கம்பெனில இலாபம் அதிகமாகும்னு சொல்லிட்டு அந்த கம்பெனி ஷேர நான் accumulate பண்ணுவேன். இந்த நியூஸ் வந்திச்சின்னா, அந்த நியூச நாங்க காசாக்குவோம். ஒரு லே ஆஃப் நல்லதா கெட்டதா என்று இல்லை. ஒரு கம்பெனில லே ஆஃப்-ஏ நடக்கலைன்னா, மார்ஜின் பெருசா இம்ப்ரூவ் ஆகாது. ஆனா லேஆஃப் நடக்குதுன்னு நடக்கும் போது சந்தையில ஏற்றம் இறக்கம் இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியா அதுல எனக்கு யூஸ் இருக்கும்” அப்படீன்னு ஒரு பதில் வரும்.

ஒரு CA கிட்ட போய் கேட்டீங்கன்னா, CA-ன்னா, வேற ஒண்ணுமில்லை. முதலாளியோட அல்லக்கைகள். board of directors, executives, கருப்புப் பணத்தை எல்லாம் எப்படி save பண்ணணும், எப்படி வெள்ளையாக்கணும். என் முதலாளி என்ன சொல்றாரோ அதுக்கு அப்படியே ஜால்ரா தட்றது. ஒரு CA. அவர் பேச்சை எல்லாம் நாம் கேட்கணும்னு அவசியம் இல்லை.

அடுத்து, ஒரு முதலாளி கிட்ட போய் கேளுங்க, “லே ஆஃப் நல்லதா”ன்னு. “ஆமா சார், வேலை செய்யாதவனை எல்லாம் எப்படித்தான் இது பண்றது. 15 வருஷமா வேலை செய்துகிட்டு இருந்தான். திடீர்னு ஒரு நாள் எனக்கு தெரிஞ்சிருச்சி. இலாபம் குறையறது மாதிரி இருந்தது. இவனுக்கு அதிகம் சம்பளம் அதிகம் கொடுக்கிறோம்னு திடீர்னு கண்ண முழிச்சி தெரிஞ்சுகிட்டேன். அதனால் எனக்கு வேணாம். லே ஆஃப் நல்லதுதான் நாட்டோட வளர்ச்சிக்கு, ஏன்னா, அவனவனை திருத்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். வேலையை விட்டு அனுப்பினேன்னா, அவனே நடு ரோட்டுக்குப் போய் பிச்சை எடுத்து வாழ்க்கையை புரிஞ்சிகிட்டு, நான் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு, பாதி சம்பளத்துக்கு வந்துருவான் சார். அதனால், லே ஆஃப் நல்லது” என்பார்.

கடைசியில, யூனியன்கிட்ட கேட்டா, எந்த யூனியனும் ஒரே குரல்ல சொல்றது, “லேஆஃப் என்பது தவறு, லே ஆஃப்னால நாட்டுக்கு இந்த சமுதாயத்துக்கு கேடு, தனிநபர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். லே ஆஃப் என்பது தனிநபரை மட்டும் பாதிக்கலை. இந்த சமூகத்தையே பாதிக்கும். எனவே, லே ஆஃப்ஐ எதிர்த்து குரல் கொடுப்போம்”

நன்றி : new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.

நின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து !

முழுத் துயரில் நின் கண்ணீர் சிந்து என் நாடே,
நின் சேகமான மண்ணின் சோகமான விதியையிட்டுப் போய் அழு.
உனக்கு வேதனையாயும் அயலானுக்கு அவனது ஊட்டமாயும்
நினைச் சூழும் அவலத்தில் குடங் குடமாய் நின் கண்ணீர் சிந்து.

நின் அடையாளங்கூறுங் கொடி ஒரு அந்நியக்கொடியின் கீழ்ப்பட்டுக் கிடக்கிறது.
நின் மரபுரிமையான மொழி மற்ற மொழியின் தாழ்வான அடிமையாய் உள்ளது.
அவர்கள் பெருமையாய்க் கொண்டாடுகையில் நின் கண்ணீர் சிந்து
சிறியதின் சவ அடக்கத்தில் பெரியதின் களிப்புக்காக
நின் செல்வமனைத்தும் பிடிபிடியாக நுகர்வுறும்
நின் சுதந்திரமனைத்தும் அதேவேளை கட்டுண்ணும்.

இலக்கு இதயத்தில் நெகிழ்ந்தானதும் நின் கண்ணீர் சிந்து
நின் நெஞ்சில் எரிமலை உறுமுவதை நிறுத்தியதும்
எழுச்சியின் இரவில் எவரும் காவலிராத போது
நின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து

நின் கண்ணீர்த்துளிகள் யாவும் பாவித்து முடிந்து உலரும் ஒரு நாள் வரும்
நின் கண்களில் கண்ணீர்த்துளிகள் இனியுந் திரளாத ஒரு நாள் வரும்
ஆனால் நின் குருதி கொதிக்கின்ற உருக்காகும் வேளை
பாய்வது தீயாய் குருதி நிறத் தீயாய் இருக்கும்.

ஆயிரம் தீவட்டிகளின் தீச்சுடரில் நீ வீரமாய் முழங்குவாய்.
நின் கண்ணீர்ச் சங்கிலியை ஒரு தோட்டாவால் அறுப்பாய்.

அமாடோ ஏ. ஹெர்னான்டெஸ்
(13 செப். 1903- 24 மாச் 1970)

(பிலிப்பினியக் (பிலிப்பைன்ஸ்) கவிதை. 1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்)

நன்றி: செம்பதாகை, ஆகஸ்டு-2018.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி – இலங்கை.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற முழு அடைப்பை (பாரத் பந்த்) ஆதரித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான    “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம்”  அடுக்கம்பாறை கிளையின் சார்பாக அடுக்கம்பாறையில் 10.09.2018 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர் முருகன் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வணிகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பிய முழக்கங்கள் மக்களிடை பெரும் வரவேற்பைப் பெற்றன.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.

ஸ்வப்னா பர்மன் : ஒளிரும் வைரங்களில் ஒன்று

ஹெப்டெத்லான் என்பது அத்தனை சுலபமான விளையாட்டு அல்ல. ஹெப்டா என்றால் கிரேக்க மொழியில் ஏழு எனப் பொருள். ஏழு தடகள விளையாட்டுக்கள் சேர்ந்ததே ஹெப்டெத்லான் விளையாட்டு. நூறு மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எரிதல் மற்றும் 800 மீட்டர் ஓட்டம் என இதே வரிசையிலான போட்டிகளில் பங்கு பெற்று புள்ளிகள் பெற வேண்டும்.  இது பெண்கள் பிரிவு ஹெப்டெத்லான் விளையாட்டில் உள்ள வரிசை. இதே போல் ஆண்கள் பிரிவுக்கும் தனி விளையாட்டு வரிசை ஒன்று உண்டு.மிக அதிகபட்ச உடல் தகுதியையும் ஆற்றலையும் கோரும் இந்த விளையாட்டில் பல் வலியுடனும், முதுகு வலியுடனும், ஆறு விரல்கள் கொண்ட கால்களுடனும், அந்தக் கால்களுக்குத் தனிச் சிறப்பான காலணிகள் இல்லாமலும் வெற்றி பெறுவதும் அப்படிப் பெற்ற வெற்றியில் இந்திய அளவில் அதிகபட்ச சாதனைப் புள்ளிகளைக் கடப்பதும் கற்பனைக்கே எட்டாத சாதனை. அப்படி ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் ஸ்வப்னா பர்மன். மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன், சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஹெப்டெத்லான் விளையாட்டில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

ஜல்பய்குரியை அடுத்த கோஷ்பாரா கிராமத்தில் பிறந்த ஸ்வப்னா, தனது பால்ய பருவத்தை கொடும் வறுமையில் கழித்துள்ளார். ரிக்சா இழுக்கும் தொழிலாளியான தந்தை பல ஆண்டுகளுக்கு முன் தாக்கிய பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விட்ட நிலையில், ஸ்வப்னாவின் தாயார் அருகில் உள்ள டீ எஸ்டேட்டில் கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவரோடு பிறந்தவர்கள் மூன்று பேர். ஆறு பேர் கொண்ட அந்தக் குடும்பத்தால் ஸ்வப்னாவின் தாயாரின் கூலியைக் கொண்டு இரண்டு வேளை உணவு மட்டுமே சாப்பிட முடியும்.

ஸ்வப்னாவின் சிறிய வயதில் அவருக்கு ஓட்டப் பந்தயத்தில் இருந்த திறமையைக் கண்டு வியந்த பயிற்சியாளர் சுபாஷ் சர்கார், இவருக்குப் பயிற்சியளிக்க முன்வருகிறார். எனினும், பிறவியிலேயே இவரது கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறு விரல்கள் உண்டு. இதற்கென தனிச்சிறப்பான காலணிகள் இருந்தால் தான் ஓட முடியும். ஆனால், குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக தனிச்சிறப்பான காலணிகள் வாங்க நிதியின்றி சாதாரணக் காலணிகளுடனேயே ஓடிப் பயிற்சி பெற்றுள்ளார். இப்போது ஜகார்தாவிலும் அவர் சாதாரணக் காலணிகளையே பயன்படுத்தியுள்ளார்.

“எனது கால்களில் எப்போதும் தீராத வலி இருந்து கொண்டே இருக்கும். இப்போது வரை நான் பொறுத்தமான காலணிகள் வாங்கப் போராடிக் கொண்டு தான் இருக்கிறேன்” எனக் குறிப்பிடும் ஸ்வப்னா, ”காலணிகள் ஒரு தொல்லை என்றால், அதன் அடிப்புறத்தில் இருக்கும் ஸ்பைக்குகள் மாபெரும் தொல்லை” என்கிறார். பொறுத்தமற்ற காலணிகளோடு ஓடும் போது அதன் கீழ்புறத்தில் இருக்கும் ஸ்பைக்குகளால் பாதம் முழுக்க வலி பரவும். இத்தனை இடர்பாடுகளைத் தாண்டியே அவர் ஹெப்டெத்லான் விளையாட்டில் படிப்படியாக முன்னேறினார்.

2013 -ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த தேசிய ஜூனியர் அத்லெடிக் போட்டிகளில் ஹெப்டெத்லான் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் முந்தைய தேசிய சாதனையை முறியடித்து வெற்றி வெற்றி பெற்றார்.  அதன் பின் 2014-ஆம் ஆண்டு கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஐந்தாம் இடம் பிடித்தார். அந்தப் போட்டிகளின் போது தான் முதன் முறையாக அவரது முதுகுத் தண்டுவடத்திலும் கணுக்காலிலும் காயம்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஸ்வப்னாவின் வெற்றியைக் கொண்டாடும் கிராமத்தினர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையேயும், போதிய மருத்துவ சிகிச்சைகள் இன்றியும் பயிற்சிகள் மேற்கொண்டு 2017-இல் நடந்த ஆசிய அத்லெடிக் போட்டியில் களம் புகுந்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார். முதுகு வலிக்கு நிரந்த தீர்வு இன்றி இப்போது வரை தொடர்ந்து மும்பைக்குச் சென்று வலிநிவாரணி ஊசி போட்டு வருகிறார். இத்தனை வலிகளோடும் தான் இந்தாண்டு இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறங்கினார் ஸ்வப்னா.

”இங்கே வந்த முதல் நாளே என்னால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் வந்தது. ஆனால் நான் இறங்கியே ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஒருவேளை கலந்து கொள்ளவில்லை என்றால் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிகளுக்கும் உழைப்புக்கும் அர்த்தமின்றிப் போயிருக்குமே” என்கிறார் ஸ்வப்னா. இந்தோனேசியா சென்ற போது ஏற்கனவே இருந்த வலிகளுடன் புதிதாக பல்வலியும் சேர்ந்து கொண்டது. பல்வலியின் காரணமாக இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் காய்சலும் இணைந்து கொண்டது.

”எனது வலது தாடையில் கடுமையான வலி இருந்தது. ஆனால், இங்கே ஊக்க மருந்து சோதனைகள் கறாராக இருக்கும் என்பதால் வலிநிவாரணிகள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. கொல்லும் வலியோடு சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த முடியுமா என்று முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. எனினும், கடந்த இரண்டு நாட்களாக எனக்கு நானே நம்பிக்கை அளித்து தேற்றிக் கொண்டேன்” எனக் குறிப்பிடும் ஸ்வப்னா, “வெல்ல வேண்டும் என்றால், வலியை மறக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். வலது முட்டியிலும் கூட வலி இருக்கத் தான் செய்தது.. அதையும் சமாளித்துக்  கொண்டேன்” என்கிறார்.

ஸ்வப்னா பர்மனின் வெற்றி ஏராளமான உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நூறு கோடிக்கும் மேலான இந்திய மக்கள் தொகையில் திறமைக்குப் பஞ்சமில்லை; ஆனால், அந்த திறமை யாரும் அறியாத திசைகளில் அரசால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது; அதில் விதிவிலக்காய் ஒளிரும் வைரங்களில் ஒன்று தான் ஸ்வப்னா. மேலும், தன்னை பின்னுக்கு இழுக்கும் அத்தனை சூழலையும் மீறிப் போராடி வெல்லும் இந்தப் போர்க்குணம் உழைக்கும் வர்க்கத்துக்கே உண்டு. விளையாட்டு வீரர்களை மேட்டுக்குடி கிளப்புகளில் தேடுவதை விடுத்து, உழைக்கும் மக்கள் திரளில் இருந்து தேடினால் கோடிக்கணக்கானவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.

– வினவு செய்திப் பிரிவு

என்னடா இது , திடீர்னு கொண்ட வெளிய கெளம்புது | கருத்துப்படம்

என்னடா இது திடீர்னு கொண்ட வெளிய கெளம்புது

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர்களுடைய விடுதலை தவறான முன்னுதாரணமாகிவிடும்! – தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் திருநாவுக்கரசு கருத்து.

♣♣♣

வேதாந்தா நிறுவனத்திற்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி.அனில் அகர்வால் : மத்தியில 25 லைசென்ஸ் வாங்கணும், மாநிலத்தில் ஒரு பதினஞ்சு லைசென்சு வாங்கணும். முடிச்சிடலாம். ஒரு பிரச்சினையும் வராது,

செய்தி : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. காவிரிப் ஆற்றுப்படுகையோ, டெல்டாவோ, தமிழ்நாட்டின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தெரிவு செய்யும் உரிமை கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் பொறுப்பு அரசுடையது.

கருத்துப்படம்: வேலன்

உங்களையும் நக்சலைட்டாக்காமல் விடமாட்டார் பகவான் !

2

ந்தியாவுக்கு
வாய் தேவை இல்லை
யாரும் பேசக் கூடாது.
காதுகள் மட்டும்
போதும்.
அதுவும்
மனிதக் காதுகளாய்
இருக்கக் கூடாது.

பார்ப்பன பாசிசத்தின்
அதட்டல்களையும்
ஆணைகளையும்
உள் வாங்கத் தக்க
ஓட்டைகள் மட்டும்
போதும்.

கண்கள்,
கண்டும் காணாத
காட்சி மறதிகளாய்
வெளிப் பார்வையின்
புதை குழிகளாய்
இருக்க வேண்டும்

இயலாதெனில்,
கெடுநிலைக்கு மத்தியில்
நடுநிலை தேடும்
அறிவாளிகளின் அளவுக்காவது
கருவிழிகள் கட்டாயம்
கடை பிடிக்க வேண்டும்.

இதயம்?
அது
இந்து மதத்திற்கு
தேவையே இல்லை!

சொரணையற்று
உள்ளே
புதைந்துக்கொள்வது
இதயம்.

உயிரற்று
வெளியே புதைப்பது
உடல்.

எந்த அளவுக்கு
நீ
நீ அற்றுப் போகிறாயோ
தெய்வ சங்கல்பம்.
நீயானால்,
ஜெயில் சம்பவிக்கும்.

ஏற்றால்
பிரசாதம்
இல்லையேல்,
சம்ஹாரம்.

அவ்வப்போது வரும்
அறிவிப்புகளுக்காக மட்டும்
விழித்துக் கொண்டால் போதும்
மற்றபடி பேசாமல்
மரண யோகாவில்
கண்ணை மூடுவது
உடம்புக்கு நல்லது!

அசரீரீ
அவாளுக்கும்
அகர்வாலுக்கும்
மட்டுமே உரியது,

மாஃபியாக்களுக்கு
எதிராக
சோஃபியாக்கள்
குரல் எழுந்தால்
பின்புலம் ஆராயப்படும்
முன்புலம் முடக்கப்படும்.

அத்து மீறுவதற்கு
அனுமார்களுக்கு மட்டுமே
அனுமதி.
கொலை செய்வதற்கு
ராமனுக்கு மட்டுமே
மனு ஸ்மிருதி!

கார்ப்பரேட் ராமாயணத்திற்கு
துடுப்பசைத்தால்
குகனுடன் அய்வராவோம்.
கார்ப்பரேட் பாசிசத்துக்கு
எதிர்ப்பசைத்தால்
வரவரராவ், சுதா பரத்வாஜ்
கன்சால்வேஸ், அருண் பெரிரா
கவுதம் நவ்லகாவுடன்
கைதாவோம்.

அரசியல் புரியாத
ட் யூப் லைட்டுகளின்
அஞ்ஞான இருளை அகற்றி
அருளுரைக்கிறார் பகவான்,

”சதுர் வர்ணம் நமா சிருஷ்டம்
சாகாதிருந்தால் உன் அதிர்ஷ்டம்
யதா யதாகி
நாடே நக்சலைட்டாகி….”

ந மோ.. நாராயணா..
நாவசைத்தாலே நக்சலைட்னா
அதே..‍ அதாகி..
என குழப்பத்தில்
ஒத்துக்கொள்ள மறுத்தாலும்
உங்களையும் நக்சலைட்டாக்காமல்
விடமாட்டார் பகவான்!

– துரை. சண்முகம்

மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !

டந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பி, உபரி நீர் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டுக் கடலில் கலந்து வருகிறது. காவிரியில் நீர் வராதா என ஏங்கிக் கொண்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளும் தமிழக மக்களும் இப்பொழுது பல்லாயிரம் கன அடி உபரி நீர் எவ்விதப் பலனும் இன்றிக் கடலில் கலப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் மேட்டூரிலிருந்து நொடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆகஸ்டு மாத இறுதியிலோ மேட்டூரிலிருந்து நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. மேட்டூருக்குக் கீழுள்ள முக்கொம்பு அணை, கல்லணை, கீழணை ஆகியவை ஆழி போல உருவெடுத்துவரும் இந்த வெள்ளத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகள் அல்ல.

குறிப்பாக, கல்லணையிலிருந்து காவிரியில் ஒரு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,750 கன அடி நீர்தான் அதிகபட்சமாகத் திறக்க முடியும். இதற்கு அதிகமாக கல்லணைக்கு வரும் நீர் அனைத்தும் கொள்ளிடம் வழியாகக் கடலுக்குச் சென்று விடும்.

வரைமுறையற்ற மணல்கொள்ளை மற்றும் அணைப் பராமரிப்பு பணிகளைக் கைவிட்டதன் காரணமாக உடைந்துபோன மேலணை.

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட அளவு கடலில் கலப்பது அவசியமே. எனினும், இன்று காவிரியில் நாம் காணும் காட்சி, கிரிமினல் குற்றத்திற்கு இணையானது.

ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்துகொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப்பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும் கூட இன்னும் வந்து சேரவில்லை.

கல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடிக் கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்கின்றன.

காவிரியும் அதன் கிளை நதிகளும் மணல் கொள்ளை-யாலும் ஆக்கிரமிப்புகளாலும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. வாய்க்கால்களோ தூர் வாரப்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால்தான் ஜூலை 19 அன்று மிகத் தடபுடலாக மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கும் தருவாயிலும் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு நீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 13,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற வேண்டிய சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி நிற்கிறது.

நாகப்பட்டின மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மட்டுமின்றி, தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் பகுதிகளிலும்; கல்லணைக் கால்வாய் செல்லும் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் உள்ள வாய்க்கால்களுக்கும் நீர் வந்து சேராததால், நட்ட நாற்றுகள் கருகிப் போகுமோ எனக் கலங்கி நிற்கிறார்கள் அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்.

கல்லணைக்கு அருகிலேயே காய்ந்துகிடக்கும் கட்டளைக் கால்வாயில் இறங்கி, காத்திருப்புப் போராட்டம் நடத்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

காவிரியின் இயற்கையான வடிகாலான கொள்ளிடம் ஆறு 160 கி.மீ. தூரம் ஓடிக் கடலில் கலக்கிறது. சமவெளிப் பகுதியில் இத்துணை தொலைவு ஓடும் கொள்ளிடம் ஆற்று நீரைத் தடுத்துத் தேக்கி வைப்பதற்கு கீழணையைத் தவிர, வேறு தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. குறிப்பாக, கீழணையைத் தாண்டினால், 60 கி.மீ. தொலைவுக்கு காவிரியின் உபரி நீர் எவ்விதத் தடையும் இன்றி ஓடிக் கடலில் மட்டுமே கலக்கும்.

இதனால் 2006-இல் 42.85 டி.எம்.சி., 2007-இல் 64.41 டி.எம்.சி., 2008-இல் 78.15 டி.எம்.சி., 2009-இல் 65.42 டி.எம்.சி. உபரி நீர் எவ்விதப் பயனும் இன்றி வீணாகக் கடலில் கலந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் கடலில் கலப்பதற்கு 10 டி.எம்.சி. நீரை ஒதுக்கியுள்ளன. அபரிமிதமான வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீர் இன்னுமொரு மடங்கு அதிகரிக்கலாம். ஆனால், அதனைவிடப் பல மடங்கு உபரி நீர் கடலில் கலப்பதைத் தமிழக அரசு எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அனுமதித்து வருவதை இப்புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

ஒரு டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு 6,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்துவரும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இப்படி காவிரி நீரை வீணடிப்பதன் மூலமும் டெல்டா விவசாயிகள் மீது பெரும் பொருளாதார இழப்பு சுமத்தப்பட்டு வருகிறது.

***

காவிரி உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்கக் கோரி 2014-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.

அதே ஆண்டில் அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே கொள்ளிடத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கும் அளவிற்குக் கதவணை கட்டப்படும் எனச் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.

அ.தி.மு.க. அரசு அறிவித்த இத்திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே புதைந்து போய்விட்டன என்பது ஒருபுறமிருக்க, “தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் என்பதால், அங்கு தடுப்பணைகளைக் கட்ட முடியாது” என்றொரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வாய்க்கால்களைப் பராமரிக்காமல் புறக்கணித்ததால், கரை உடைந்து வெள்ளக் காடான சீர்காழி – நாதல்படுகை.

தமிழகப் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் வீரப்பனும், நடராஜனும் கல்லணைக்கும் கீழணைக்கும் இடைப்பட்ட கொள்ளிடம் வடிநிலப் பகுதியில் ஏழு தடுப்பணைகளைக் கட்டி 10.5 டி.எம்.சி. அளவிற்கு நீரைச் சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

கீழணைக்குக் கீழே மூன்று தடுப்பணைகள் கட்ட வாய்ப்பிருப்பதாக அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். இக்கூற்றுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளும் “சேக்கிழார் புகழ் அறிவாளி” எடப்பாடியோ காவிரியில் தடுப்பணைகளே கட்ட முடியாது என்று உளறுகிறார்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முழுப் பெருமையும் தமக்கே உரியது என உரிமைப் பாராட்டிக் கொள்வதில் எவ்வித அசூயையும் கொள்ளாத அ.தி.மு.க. அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை முறையாகப் பராமரிக்கவோ, அதனை நடுவர் மன்றம் அளித்திருந்த வழிகாட்டுதல்படி நவீனப்படுத்தவோ ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதே உண்மை.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான வரைவு பத்தாண்டுகளுக்கு முன்பே, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டாலும், அத்திட்டம் இதுநாள் வரையிலும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது. 5,166 கோடி ரூபாய் பெறுமான இத்திட்டத்திற்கு மட்டுமின்றி, காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கும் ஒரு நயா பைசாகூட ஒதுக்க முடியாது என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக அரசிடம் தெரிவித்துவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.

நிதி ஆதாரமில்லை என்ற நொண்டிச்சாக்கை இதற்குக் காரணமாகக் கூறியிருக்கிறது, மைய அரசு. (தி இந்து, 12.08.2018) ஆனால், எட்டு வழிச்சாலைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒரே சொடுக்கில் ஒதுக்கப்படுகிறது.

காவிரி நதிப் படுகையில் நடந்த மணற்கொள்ளையில் சேகர்ரெட்டி, படிக்காசு கிரிமினல் கும்பலும், அவர்களது எஜமானர்களான ஜெயா ஓ.பி.எஸ். ஆகியோரும் அடித்த பல்லாயிரம் கோடி ரூபாயோடு ஒப்பிடும்பொழுது, இத்திட்டத்திற்கான நிதி ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனினும், மைய அரசு போலவே அ.தி.மு.க. அரசும் கடந்த ஏழு ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது.

ஆளுயர ஆழத்திற்கு வரைமுறையின்றிச் சூறையாடப்படும் ஆற்றுமணல். பசுமாட்டின் மடியை அறுத்தெறிவதற்கு இணையான கிரிமினல் குற்றம்.

இத்திட்டம் முழுமையாக நிறைவேறியிருந்தால், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 3.37 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், மைய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்ததன் மூலம் தமிழக மக்களுக்குக் கொடூரமான அநீதியை இழைத்திருக்கின்றன.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் மட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து மணிமுத்தாறு, அய்யாறை இணைக்கும் 6,800 கோடி ரூபாய் பெறுமான திட்டம், கீழ் வெண்ணாறு ஆற்றுப் படுகையில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் 1,560 கோடி ரூபாய் திட்டம், 14,000 கோடி ரூபாய் பெறுமான காவிரிப் பாசன வழித்தடங்களை நவீனப்படுத்தும் திட்டம், ஒகேனக்கல் – தொப்பூர் கால்வாய், மேட்டூர் கால்வாய், ஏற்காடு அடிவாரக் கால்வாய் பட்டணம் இணைப்புத் திட்டங்கள், வீராணம் ஏரியின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரியைத் தூர்வாரி சீரமைக்கும் திட்டம், கொள்ளிடத்து நீரை சுத்தமல்லி ஏரி, பொன்னேரிக்குக் கால்வாய் வழியாகக் கொண்டுபோகும் திட்டம் என இவையாவுமே காகிதத் திட்டங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன.

காவிரி மட்டுமின்றி, தமிழகத்தின் பிற நதி ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களும் கிடப்பில்தான் உள்ளன. குறிப்பாக, அமராவதி அணையின் பின் பகுதியில் உள்ள கூட்டாறு எனுமிடத்தில் மேல் அமராவதி அணையைக் கட்டி 2 டி.எம்.சி. நீரைச் சேமிக்கும் திட்டம், மோயாற்றுடன் பல சிற்றாறுகளை இணைத்துப் பவானி சாகர் அணைக்குக் கூடுதல் நீரை எடுத்துவருவதோடு, மோயாற்று நீரை காவிரியின் கடைமடை பகுதி வரை கொண்டு வரும் திட்டம், பரம்பிக்குளம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனைமலையாறு அணை, நல்லாறு அணை ஆகிய இரண்டு அணைகளை கேரள அரசின் மூலம் நிறைவேற்றுவது, தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவது ஆகிய அனைத்துமே பல ஆண்டுகளாகப் பேசப்பட்டாலும், அவை அனைத்துமே காகிதத் திட்டங்களாகவே உள்ளன.

***

ரு பன்னாட்டு நிறுவனமோ, இந்தியத் தரகு முதலாளியோ தொழிற்சாலை தொடங்க அடிக்கல்லை நடுவதற்கு முன்னரே, அவர்களுக்குத் தேவையான நிலம், நீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைக்கும், தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை மிக அலட்சியமாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

அதிவிரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புல்லட் ரயில்கள் என்பவையெல்லாம் தொழிற்துறை வளர்ச்சிக்கு அவசியமானவை என நமக்குப் பாடமெடுத்துவரும் ஆட்சியாளர்கள், உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயப் பொருள் உற்பத்திக்கும் அவசியமான நீர்ப் பாசனத் திட்டங்களை அடிக்கட்டுமானத் திட்டங்களாக ஏற்க மறுக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காகிதத் திட்டமாகவே முடங்கிக் கிடக்கிறது, காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்.

எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொகையை ஒதுக்கியிருந்தாலே கொள்ளிடத்தில் ஏழிலிருந்து பத்து தடுப்பணைகளைக் கட்டியிருக்க முடியும். குடிமராமத்துப் பணிகளை விவசாயிகளின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் விட்டிருந்தால், இந்நேரம் டெல்டா மாவட்டங்களிலுள்ள குளங்களும், ஏரிகளும் நிரம்பியிருக்கும் என்பதோடு, அ.தி.மு.க. அட்டைகள் அடித்த 4,735 கோடி ரூபாய் கொள்ளையும் (தமிழ் இந்து, 19.08.2018) தடுக்கப்பட்டிருக்கும்.

காவிரியிலும் கொள்ளிடத்திலும் தடுப்பணைகள் கட்ட முடியாது என எடப்பாடி வாதிடுவதற்குப் பின்னுள்ள காரணம் மணற் கொள்ளை மட்டுமல்ல. டெல்டா மாவட்டங்களைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற சதியும் அதனுள்ளே மறைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கடம் – கமலாபுரம் பகுதிக்கு வரும் பாசனக் கால்வாய்களில் நீர் வரவில்லை. இங்குதான் பல கச்சா எண்ணெய் எடுப்புக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. இயக்கி வருகிறது. ஏற்கனவே எண்ணெய் எடுப்பால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவிற்குக் கசடாகிக் குடிக்கவோ, பாய்ச்சவோ பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இப்போது சுத்தமாக நீரை வரவிடாமல் செய்வதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ‘‘மன நிலையை” உருவாக்கி வருகிறார்கள்.

இது போன்று நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 47 இடங்களில் கச்சா எண்ணெய் எடுப்பிற்குத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள தூர் வாரப்படவில்லை என்றும், கால்வாயின் மதகுகள் சீர் செய்யப்படாமல் துருப்பிடித்துக் கிடப்பதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், அப்பகுதி விவசாயிகள்.

இன்று காவிரியில் நாம் காணும் காட்சி கிரிமினல் குற்றத்திற்கு இணையானது. ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்து கொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப் பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும்கூட இன்னும் வந்து சேரவில்லை.

இந்தச் சதிகளெல்லாம் ஒருபுறமிக்க, ‘‘இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதைத் தடுக்க முடியாது” என்பதைக் கொள்கைப் பிரகடனமாகவே அறிவிக்கும் தனியார்மய ஆதரவாளர்கள், இதன் வழியாகத்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என வாதிடுகிறார்கள் (பார்க்க: புதிய ஜனநாயகம், ஜூலை 2017). கொஞ்சம் விவசாயிகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களையெல்லாம், விவசாயத்தை விட்டு வெளியேற்றி, அவர்களைத் தொழிற்துறை முதலாளிகளின் இலாபத்திற்காக, அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் தனியார்மயம் – தாராளமயத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தைப் படிப்படியாக ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் விவசாய மானியங்களை வெட்டுகிறார்கள். விவசாய விளைபொருட்களுக்குச் சந்தையில் உரிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த மறுக்கிறார்கள். வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க மறுக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் விவசாய நிலங்களையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.

இந்தக் கொள்கை தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மறுப்பது, ஏற்கெனவே இருந்துவரும் நீர்நிலை ஆதாரங்களைப் புறக்கணித்து அழிப்பது என்ற பேரழிவையும் ஏந்தி வருகிறது.

உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில் போராடும்பொழுது மட்டுமே, காவிரியை மட்டுமல்ல, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

– குப்பன்

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !

ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்

பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து அடங்கிய ஐக்கிய அரசு (யுனைட்டட் கிங்டம்) ஐரோப்பிய ஒன்றியத்துடன் 1975-ம் ஆண்டு இணைந்தது. ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து தமக்கிடையே பொருட்கள், மனிதர்கள் பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்ட ஒப்பந்தமாகும்.

இந்த நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகம், ஒரு நாட்டு குடியுரிமை வைத்திருப்பவர் இன்னொரு நாட்டுக்குச் சென்று வேலை செய்வதில் சுதந்திரம் என்று ஒற்றை பொருளாதார பிரதேசமாக அவை செயல்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம் முதலாளித்துவத்தின் உற்பத்தி, சந்தை, மூலதனம் ஆகியவற்றை உலக அளவில் சமூக மயமாக்கும் போக்கின் ஒரு வெளிப்பாடு.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் – நீல சாயம் பூசப்பட்ட பகுதிகள் (இடது பக்கம் உள்ள பகுதியளவு நீலம் பூசப்பட்ட தீவு அயர்லாந்து – அதன் அருகில் இருக்கும் நீலம் பூசப்படாத பெரிய தீவு பிரிட்டன்)

ஆனால், அந்த சந்தையில் இணைந்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கிடையேயான வேறுபாடுகள், அமெரிக்காவுடன் ஐக்கிய அரசுக்கு இருக்கும் நெருக்கம் இவற்றின் காரணமாகவும், முதலாளித்துவ நெருக்கடியால் தொழிலாளி வர்க்கம் வேலை இழப்புகளை எதிர்கொள்வதன் காரணமாகவும் ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அது வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அரசியலாகவும் தேச பெருமிதமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் மீது 2016-ம் ஆண்டு ஜூன் 26 அன்று நாடு முழுவதும் நடந்த கருத்துக் கணிப்பில் 51.9% பேர் ஐக்கிய அரசு வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், ஐக்கிய அரசின் ஒரு பகுதியாக இருக்கும், தனியாக பிரிந்து போகும் இயக்கம் தீவிரமாக இருக்கும் ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று மேலே சொன்ன கருத்துக் கணிப்பில் வாக்களித்திருந்தன. ஸ்காட்லாந்தில் 62% பேரும், வட அயர்லாந்தில் 55.8% பேரும் வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

எனவே, ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதில் பல இடியாப்பச் சிக்கல்கள் உள்ளன.

ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், நாங்கள் பிரிந்து சென்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்வதற்கான கருத்துக் கணிப்பை நடத்த கோருவோம் என்று ஸ்காட்லாந்து தேசியக் கட்சி அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே 2014-ல் நடந்த அத்தகைய கருத்துக் கணிப்பில் 55% பேர் சுதந்திரத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அடுத்த கருத்துக் கணிப்பை 2018 இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் நடத்த வேண்டும் என்று அக்கட்சி கோருகிறது.

பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து அடங்கிய ஐக்கிய அரசு அயர்லாந்து தீவின் வட பகுதியை தன்னுடன் இணைத்து வைத்திருக்கிறது. அதை எதிர்த்த போராட்டங்களைத் தொடர்ந்து வட அயர்லாந்தை தன்னுடன் வைத்திருப்பதற்கு 1998-ல் ஒரு ஒப்பந்தத்தை பிரிட்டன் போட்டிருக்கிறது.

நிக்கோல் ஸ்டுர்ஜியன்
பிரிந்து போக விரும்பும் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் நிக்கோல் ஸ்டுர்ஜியன்

ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், வட அயர்லாந்தின் நிலை என்ன? அயர்லாந்து குடியரசுடன் அதன் உறவின் நிலை என்ன?

அயர்லாந்து தீவில் சுதந்திர வர்த்தகம் தடைபடுவது வட அயர்லாந்து பிரிட்டனுடன் இணைந்த 1998 ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும். அப்படி வட அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையே சுதந்திர வர்த்தகத்தை அனுமதித்தால், வட அயர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு சுங்க எல்லை உருவாகி, வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்து, அயர்லாந்து குடியரசுடன் நெருக்கமாகி ஒன்றுபடும் சூழல் உருவாகும்.

தலை சுற்றுகிறதா? இதை இந்திய காஷ்மீருக்கும், பாகிஸ்தானிய காஷ்மீருக்கும் இடையே சுங்க ஐக்கியம் ஏற்படுத்தி, அதன் விளைவாக காஷ்மீருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு எல்லைக் கோடு போடப்படுவது போன்றது என்று குத்து மதிப்பாக புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பிரச்சனை குறித்து பிரிட்டனில் விவாதம் நடந்து வருகிறது. இதைப் பற்றி ரிக் என்பவர் மார்ச் 1, 2018 அன்று வெளியிட்டிருக்கும் கட்டுரையின் கூடுதல் விளக்கங்களுடனான மொழிபெயர்ப்பு.

*****

யர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு கடல் எல்லையை உருவாக்குவது ஒரு முட்டாள்தனமான திட்டம், ஆனால், கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை (ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவும் வேண்டும், அதே நேரம் வர்த்தக ஆதாயங்கள் தொடரவும் வேண்டும்) என்ற சவடாலும் முட்டாள்தனமானதுதான்.

“ஐரோப்பிய ஒன்றியம் வட அயர்லாந்தை பிரிட்டனிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறது.”

ஐக்கிய அரசு (பிரிட்டன்+வட அயர்லாந்து) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஐக்கிய அரசுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே போடப்பட வேண்டிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஆணையம் முழு விபரங்களுடன் வெளியிட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் வெளியேறுவதை (பிரெக்சிட்) ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அறிவு ஜீவிகளும் போட்ட கூப்பாடு இதுதான்.

இவர்களை உண்மையில் கடுப்பேற்றியது அயர்லாந்து / வடஅயர்லாந்து தொடர்பாக அந்த வரைவு ஒப்பந்தத்தின் பக்கம் 98-ல் தரப்பட்டுள்ள விதிமுறைகள்தான்.

அயர்லாந்து தீவின் இரு பிரிவுகளுக்கிடையே (பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் வட அயர்லாந்துக்கும், தனி நாடான அயர்லாந்து குடியரசுக்கும்) இடையே வலுவான ஒரு எல்லையை உருவாக்குவதை தவிர்க்க வேறு எந்த வழியும் கிடைக்கா விட்டால் வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஐக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதன் விளைவு என்னவாக இருக்கும்? அயர்லாந்து தீவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடலில் ஒரு சுங்க எல்லையை உருவாக்கினால், அது பிரிட்டனும் வட அயர்லாந்தும் அடங்கிய ஐக்கிய அரசை (united kingdom) இரண்டாக பிளந்து விடும்.

“எந்த ஒரு ஐக்கிய அரசு பிரதமரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மே சொல்கிறார். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒருபோதும் இதை நிறைவேற்றப் போவதில்லை என்று சொல்லப்படுவதும் உண்மைதான்.

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே
“எந்த ஒரு ஐக்கிய அரசு பிரதமரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மே சொல்கிறார்.

அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வது, ஏற்க மறுப்பது என்பதைத் தாண்டி அயர்லாந்து கடலில் பிரிட்டனுடன் ஒரு சுங்க எல்லையை உருவாக்குவது தீர்க்கப் போகும் பிரச்சனைகளை விட அதிகமான பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு முட்டாள்தனமான திட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை.

வட அயர்லாந்தில் பிரிட்டனுக்கு விசுவாசமான தரப்பினர் (உல்ஸ்டர் புராட்டஸ்டன்ட் பிரிவினர்), வட அயர்லாந்தை அயர்லாந்துடன் இணைக்க விரும்பும் அயர்லாந்து குடியரசுவாதிகளின் தாக்குதல்கள் போன்றவை நிகழக் கூடிய சாத்தியங்களை ஒதுக்கி விட்டாலும் அத்தகைய ஒரு எல்லை நேரடியான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வட அயர்லாந்தின் அன்னிய வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் வெளிநாடு அயர்லாந்து குடியரசாக இருந்தாலும், அதன் பெரும்பான்மை வர்த்தகம் பிரிட்டனுடன் நடைபெறுகிறது. எனவே, வட அயர்லாந்துக்கும் கிரேட் பிரிட்டனுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை உருவாக்குவது, அதற்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை உருவாக்குவதை விட அதிக பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது ஒருபுறம் இருக்க, அயர்லாந்து குடியரசு பிரெக்சிட் தொடர்பாக எதிர்கொள்ளும் தலைவலிகளான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு தனது ஏற்றுமதி பொருட்களை அனுப்புவதற்கான பாலமாக ஐக்கிய அரசை பயன்படுத்துவதை இழப்பது போன்ற பிரச்சனைகளையும் அது தீர்த்து விடப் போவதில்லை.

ஐரோப்பிய ஆணையத்துக்கு இவை அனைத்தும் தெரியும். அத்தகைய ஒரு நிலைமை (அயர்லாந்து கடலில் சுங்க எல்லை உருவாக்கப்படுவது) பிரிட்டனில் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அதற்குத் தெரியும். இத்தகைய ஒரு பரிந்துரை வலுவான எதிர்ப்பைக் கிளப்பும் என்பதும் தெரியும்.

இந்நிலையில் அதன் பரிந்துரை பிரிட்டிஷ் உணர்வுகளை மதிக்காத ஒரு மிரட்டலாக இருக்கலாம். அல்லது ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதன் விளைவுகளை இப்போதே எதிர்கொள்ளும்படி பிரிட்டனை கட்டாயப்படுத்துவதற்காக இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், இதை “அதிர்ச்சி வைத்தியம்” என்று அழைக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ள வரைவு ஒப்பந்தத்தின் 49-வது பத்தி இவ்வாறு சொல்கிறது:

போரிஸ் ஜான்சன்
“அயர்லாந்து எல்லை பிரச்சனை எல்லாம் பெரிய சிக்கல் இல்லை” என்று புறந்தள்ளிய போரிஸ் ஜான்சன், பிரதமர் தெரசா மே உடன்.

“[அயர்லாந்தின்] வடக்கு-தெற்கு ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கும் இரண்டுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை தவிர்ப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கவும் ஐக்கிய அரசு (UK) உறுதி அளிக்கிறது. எதிர்காலத்தில் போடப்படும் வேறு எந்த ஒப்பந்தங்களும், மற்ற அனைத்தையும் விட முக்கியமான இந்த நோக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நோக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐக்கிய அரசுக்கும் இடையேயான ஒட்டு மொத்த உறவு சட்டகத்துக்குள் நிறைவேற்றிக் கொள்வதாக ஐக்கிய அரசு உறுதி அளிக்கிறது. ஒருவேளை இது சாத்தியமில்லாமல் போனால், அயர்லாந்து தீவின் தனிச்சிறப்பான நிலைமைகளை உறுதி செய்வதற்கான தீர்வுகளை ஐக்கிய அரசு முன் வைக்கும்.

பரஸ்பரம் ஒப்புதல் உடைய தீர்வுகள் எதுவும் ஏற்படா விட்டால் இப்போதும் எதிர்காலத்திலும் உள்நாட்டு சந்தை, சுங்க ஒன்றியம் தொடர்பான வடக்கு-தெற்கு (அயர்லாந்து) ஒத்துழைப்பு, ஒட்டு மொத்த தீவின் பொருளாதாரம், 1998 ஒப்பந்தத்தை பாதுகாப்பது போன்ற விதிகளை முழுமையாக பராமரிப்பதை ஐக்கிய அரசு உறுதி செய்யும்.”

இதன் பொருள் என்னவென்றால் அயர்லாந்து குடியரசுடனான எல்லை சோதனைகளை தவிர்ப்பதற்கு ஏதாவது ஒரு வடிவிலான வர்த்தக ஒப்பந்தம் அல்லது தொழில்நுட்பத் தீர்வை பிரிட்டன் முன் வைக்கவில்லை என்றால், வடஅயர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஒற்றைச் சந்தை, சுங்க ஒன்றியம் போன்றவற்றை முழுமையாக பராமரிப்பதற்கு ஐக்கிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த அறிக்கை வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே, இது ஒரு ஒப்பந்தம் இல்லை, வரைவு அறிக்கை மட்டுமே என்று டேவிட் டேவிஸ் என்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு போவதற்கு வகை செய்யும்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்று நினைத்திருந்த பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதைக் கேட்டு கடுப்பாயின.

எல்லாவற்றையும் எப்படியாவது சரி செய்து விடலாம் என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருந்தாலும், விளக்கமான எந்த ஒரு தீர்வையும் முன் வைக்க பிரிட்டிஷ் அரசு தவறியிருக்கிறது. இவ்வாறு உருப்படியான முன்வைப்பு எதுவும் இல்லாத நிலையில்தான் வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஒன்றியத்தை பராமரிக்கும் திட்டம் முன்வைக்கப்படுகிறது.

இந்த வட அயர்லாந்து எல்லைப் பிரச்சனைக்கு எளிதான தீர்வு எதுவும் இல்லை என்று பிரிட்டிஷ் அமைச்சர்கள் நீண்ட நாட்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். முன்னாள் லண்டன் மேயராகவும் 2016 முதல் 2018 வரையிலும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்த போரிஸ் ஜான்சன் உண்மையிலேயே இந்த சிக்கல் லண்டன் மாநகரின் பகுதிகளுக்கும், காம்டன், வெஸ்ட் மினிஸ்டர் போன்ற பகுதிகளுக்கும் இடையே போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது போன்ற சிக்கல்தான் நினைத்திருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்த வேறு வழிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய முன் வைப்பு குறித்து சிறிதளவும் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஏனென்றால், இது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக தீர்க்கப்படக் கூடியது, எனவே இந்த நடைமுறைகள் பற்றி யோசிக்க வேண்டியதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்.

அப்படி இது ஒரு தொழில்நுட்ப பிரச்சனைதான் என்று அவர் உண்மையிலேயே நம்பியிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பார்? “எதற்கு இந்த தேவையில்லாத பரிந்துரை அறிக்கை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டு விடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அயர்லாந்து எல்லையில் சுங்க சோதனைச் சாவடிகளை தவிர்ப்பதற்கு தேவையான தொழில்நுட்ப தீர்வு நம்மிடம் உள்ளது” என்று மட்டும் சொல்லியிருப்பார். ஆனால் இதற்கு மாறாக, அவர் கோபப்பட்டு, பிதற்ற ஆரம்பித்தார்.

அவரைப் போல எல்லை பிரச்சனையை தொழில்நுட்பம் மூலம் தீர்த்து வைத்து விடலாம் என்று தொடர்ந்து உறுதியளித்து வந்த எல்லோருமே (அவர்களில் பலர் அது தொடர்பாக எதுவும் பேசாத ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையை மேற்கோள் காட்டினார்கள்) இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்வைப்பு மீது கடுப்பை உமிழ்கிறார்கள். இதுதான் ஒட்டு மொத்த பிரச்சனையின் சாரம் என்று நான் நினைக்கிறேன்

பிரிட்டனின் வெளியேற்றம் ஏற்படுத்தவிருக்கும் தவிர்க்க இயலாத இழப்புகள் பற்றி அரசு இதுவரை தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலைப்பாட்டிலேயே அது நிற்கிறது. பொருட்களும், மக்களும் கட்டுப்பாடுகள் இல்லாமல் நகர்வதை முடிவு கட்டி, தனக்கு ஏற்ற வகையில் வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் அயர்லாந்தில் வலுவான எல்லைக் கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியும், வர்த்தக பிரச்சனைகள் காரணமாக பொருளாதார இழப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கமுடியும் என்று கருதுகிறது.

ஆனால், வடஅயர்லாந்து எல்லை பிரச்சனைக்கு எந்த ஒரு மாய தீர்வும் இல்லை. ஐக்கிய அரசு தனது சொந்த வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்த உடனேயே அயர்லாந்து குடியரசுடன் ஒரு சுங்க எல்லை ஏற்படுத்தப்பட வேண்டும்.

எடுக்க வேண்டிய முடிவு நேரானது. ஐக்கிய அரசு பிற நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு தனியாக வர்த்தக ஒப்பந்தங்களை போட வேண்டுமானால் அயர்லாந்துடன் இப்போதைய எல்லை ஏற்பாடுகளை தொடர முடியாது.

இந்த இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். வலுவான எல்லை என்று முடிவு செய்தால், ஐக்கிய அரசுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் இப்போதைய நிலைப்பாடு. இதை எவ்வளவு உறுதியாக கடைப்பிடிக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது, ஆனால் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து யு.கே வெளியேற வேண்டியதன் அபாயத்தை இந்த நிலைப்பாடு அதிகரித்துள்ளது.

அதாவது, இதில் ஒரு வெளிப்படையான லாப நஷ்டக் கணக்கு உள்ளது. பிரெக்சிட் ஆதரவாளர்கள் வாக்களித்த ஒரு சில பலன்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் அனைத்தும் கிடைக்கப் போவதில்லை.

நமக்கு எது முக்கியம், அதை பாதுகாப்பதற்கு எதை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதுவரையில் இவை எதைப் பற்றியும் நாம் முறையான அரசியல் விவாதம் எதையும் நடத்தவில்லை. நாம் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு சாதித்து வருகிறது. லேபர் கட்சி இதுவரையில் அமைதியாக உள்ளது. இப்போது, வடஅயர்லாந்து தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்வைப்பு, திட்டமிட்ட தூண்டுதலாக இருக்கிறதோ இல்லையோ, அது விஷயத்தை விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

“மலம் எவ்வளவு நாறுகிறது என்பதை சிலருக்கு புரிய வைக்க வேண்டுமானால், அவர்களது தலையை அதற்குள் முக்குவதுதான் ஒரே வழியாக இருக்கிறது” என்று முன்பு என்னுடன் பணியாற்றிய ஒரு நண்பர் சொல்வார். அதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

– ரிக்
ஆங்கில மூலம் :
An Irish Sea border is a silly idea but so is the cake-and-eat-it bluster
நன்றி :
 new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.

பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. 5-ஆம் வகுப்பு தகுதி உடைய கடைநிலை ஊழியர் பணிக்கு, பட்டப்படிப்பு பி.எச்.டி. படித்தவர்கள் அலைமோதுகிறார்கள். 100 காலி பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பிக்கும் கொடுமை நடக்கிறது. பா.ஜ.க. மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள், அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் அழிந்த சிறு தொழில்கள், வேலை இழந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய விளைவுகள் கொடூரமானது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறது பா.ஜ.க. மோடி அரசு. தனது தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், எதிர்ப்பவர்களை அச்சத்தில் உறையவைக்கவும் எட்டு மாநிலங்களில் நடத்தப்பட்டவைதான் அறிவுத்துறையினர் மீதான இந்த ரெய்டு, கைது நடவடிக்கை.

தலித் மக்கள், பழங்குடியின ஆதிவாசி மக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடும் இடதுசாரி செயல்பாட்டாளர்களின் மீது அடக்குமுறையை ஏவும் விதமாக அவர்களது வீடுகளை சோதனை செய்வது மற்றும் அவர்களை ஆள்தூக்கி ஊபா சட்டங்களின் கீழ் கைது செய்வது என அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது மோடி அரசு. சனாதன் சன்தன் போன்ற இந்துத்வா பயங்கரவாத மதவெறி அமைப்புகளின் நடவடிக்கைகள் துப்பாக்கி வெடிகுண்டுகளுடன், அம்பலபட்டுவரும் நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பீமாகோரேகான் கலவரம், மோடியைக் கொல்ல சதி, நகர்ப்புற நக்சல் என ஒரு அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறது பா.ஜ.க. மோடி அரசு.

இந்தியாவின் புகழ்பெற்ற சமூக செயல்பாட்டாளர்களான ஆந்திராவின் புரட்சிகர எழுத்தாளர், கவிஞர், வரவர ராவ், தொழிலாளர்களுக்காக பல ஆண்டுகளாக போராடிவரும் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் , பேராசிரியர் வெர்ணன் கன்சால்வேஸ் வழக்கறிஞர் அருண் ஃபெரிரா பத்திரிக்கையாளர் கௌதம் நவ்லகா ஆகியோரை மகாராஷ்டிரா போலீசார் ஊபா சட்டத்தில் கைது செய்தது. புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர் மூத்த வழக்கறிஞர்கள் அவசரமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாலும், நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்ததாலும் தற்போது அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மகாராஷ்டிரா போலீசார் அவர்களை மீண்டும் கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் அடைக்க தொடர்ந்து முயன்று வருகிறது.

இதே காரணத்திற்காக பேராசிரியர்கள் சத்யநாராயணா , ஆனந்த் தெல்தும்டே பாதிரியார் ஸ்டாண்சாமி பத்திரிக்கையாளர் குர்மலாக் (வரவரராவ் மருமகன்) கிரந்தி தெகுலா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். ரெய்டு நடத்தப்பட்ட வீட்டில் “ஏன் இவ்வளவு மார்க்ஸ், மாவோ புத்தகங்கள்? நீங்கள் பிராமணப்பெண் ஏன் பொட்டு வைக்கவில்லை?” என கவிஞர் வரவரராவ் மகளிடம் கேட்பது, போலீசார் அதிகார எல்லையைத் தாண்டி காவிப் பாசிசப் படையாக மாறி செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

பீமாகோரேகான் கலவரத்திற்கு காரணமான முக்கியக் குற்றவாளிகளான இந்துத்வா பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. நாடு முழுவதும் வலைபின்னலை வைத்து கொண்டு கவுரி லங்கேஷ், தபோல்கர் போன்ற அறிவுஜீவிகளை சுட்டுக் கொலை செய்யும் சனாதன் சன்தன் அமைப்பினர் சமீபத்தில் வெடிகுண்டு ஆயுதங்களுடன் மகாராஷ்டிராவில் அகப்பட்டு கொண்டனர். இத்தகைய அமைப்புகளை தடை செய்யவோ, அவர்களை தீவிரவாதிகளாக கருதி ஊபா சட்டத்தில் கைது செய்யவோ பா.ஜ.க. மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அவற்றிலிருந்து திசை திருப்பவும், எதிர்ப்புக் குரலை நசுக்கவும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் செயல்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் பேராசிரியர், வழக்கறிஞர், ஆராய்ச்சி மாணவர் என 5 பிரபல மனித உரிமைப் போராளிகளை கொடிய ஊபா சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அதை நியாயப்படுத்த பிரதமர் மோடியைக் கொல்ல கம்ப்யூட்டரில் கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பதை யாரும் நம்பமுடியாத செய்தியை ஊடகங்கள் வாயிலாக ஊதிப்பெருக்கியது. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய கைது அச்சுறுத்தல்.

குட்கா ஊழல் குற்றவாளிகளை தொடர்ந்து பாதுகாக்கும் பா.ஜ.க. பினாமி அரசாக செயல்படும் எடப்பாடி அரசு தமிழகத்தில் மோடிக்கு எதிராக முழக்கமிட்டால், செய்தி வெளியிட்டால், பேசினால், போஸ்டர் ஒட்டினால், வழக்கு கைது நடவடிக்கை, வாழ்வுரிமைகளுக்காக போராடினால் துப்பாக்கிச் சூடு படுகொலை, தேசிய பாதுகாப்பு சட்டம், தேசத்துரோக வழக்கு, குண்டர்சட்ட வழக்கு என்பதை சகஜமாக சாதாரண மக்கள் மீதும் போடுகிறது. முற்றிலும் பேச்சுரிமை, கருத்துரிமை, மறுக்கப்படுகிறது. பா.ஜ.க.வின் பாசிச கொடுங்கோன்மை அபாயம் நாடு முழுவதும் பரவுகிறது.

மே17, திருமுருகன் காந்தி, தமிழகத்தில் பொதுக்கூட்டங்களில் பேசிய இடங்களில் எல்லாம் எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து கைது செய்து அலைக்கழிப்பது, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தைவிட கொடுமையானது. பல மாதங்களாக சிறையிலிருக்கும் செயற்பாட்டாளர் முகிலன்; ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையிலிருக்கும் வழக்கறிஞர் முருகன்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுக்கு சட்ட உதவிகள் செய்ததற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் மீதான அடக்குமுறைகள்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசியப் பாதுகாப்புச்சட்டம் எண்ணற்ற வழக்குகளில் கைது அச்சுறுத்தல்; பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக என முழக்கமிட்ட சோபியா கைது; மாணவி வளர்மதி கைது; பத்திரிக்கை, செய்தியாளர்கள் மீதான அச்சுறுத்தல் என எதிர்ப்புக் குரலை நெறிக்கிறது பினாமி எடப்பாடி அரசு. ஆனால் எச்.ராஜா., எஸ்.வி.சேகர், எதுவேண்டுமானாலும் பேசலாம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க. அரசின் தோல்வி ஏற்படுத்திய விளைவுகள் மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இந்துத்வா அமைப்புகளின் இந்து ராஷ்டிரா கனவை செயல்படுத்த உருவாக்கப்பட்ட தீவிரவாத சங்பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அம்பலப்பட்டு மக்கள் எதிர்ப்புகளை அதிகரித்து வருகிறது. பா.ஜ.க. மோடி அரசுக்கு எதிராக தயங்காமல் எதிர்ப்புகளை காட்டி வரும் எழுத்தாளர்கள் மனித உரிமைப் போராளிகள் இடதுசாரி தலைவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கைது செய்து சிறையலடைத்து அச்சுறுத்துவதன் மூலம் மக்களின் எதிர்ப்புக் குரலை அடக்கிவிடலாம் என மோடி அரசு முயல்கிறது.

அடிப்படை உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான தேசதுரோக குற்றச்சாட்டு பிரிவு 124 ஏ, ஊபா சட்டம், ஆயுதபடை சிறப்பு அதிகாரச்சட்டம், ஆகியவற்றை உடனே ரத்து செய்யப்பட வேண்டும். பீமாகோரேகான் நிகழ்வையொட்டியும் மோடியைக் கொல்ல சதி என்கிற பொய் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கவுரி லங்கேஷ், தபோல்கர் ஆகியோர் படுகொலைக்கு காரணமான சனாதன் சான்ஸ்தா போன்ற இந்துத்வா பயங்கரவாத மதவெறி அமைப்புகளை உடனே தடை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திருமுருகன் காந்தி, முகிலன், வழக்கறிஞர் முருகன் ஆகியோரை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும். பா.ஜ.க. மோடி அரசின் இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321

சோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் ! வில்லவன்

28
வில்லவன்

சென்னையில் தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய அபிராமி செய்திகளால் எல்லா ஊடகங்களும் மக்கள் மனங்களும் நிறைந்திருந்த வேளையில், மாணவி ஒருவர் ஒற்றை கோஷத்தின் மூலம் அவர்கள் கவனத்தை திருப்பியிருக்கிறார். அது வெறுமனே ஒற்றை வாசகமாக இருக்கலாம். மிகை ஆர்வம் காரணமாக வெளிப்பட்ட எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் சோஃபியா விமானத்தில் ஏறுகையில் எடுத்த ஒரு தீர்மானமும் அதனையடுத்து எடுத்த சிறு முயற்சியும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானவை. அது வெறும் ஒற்றை கோஷம் என்றால் பா.ஜ.க. இத்தனை பதற அவசியமில்லை.முதலில் சோஃபியாவின் விமான முழக்கத்துக்கு பா.ஜ.க. கூடாரத்தின் எதிர்வினைகளை கவனியுங்கள் (இந்துத்துவாவுக்கு தாலிகட்டினாலும் ஒரிஜினல் கள்ளக் கணவர்களாகவே வாழும் ”நடுநிலை” பார்ப்பனர்கள் உட்பட). விமான நிலைய வளாகத்தில் தாவித் தாவி குதிக்கிறார் தமிழிசை. அவரை தடுக்க அங்கிருந்த பெண் போலீஸ்காரர் ஒரு கபடியாட்டமே நடத்த வேண்டியிருந்தது. “சோஃபியா இடத்தில் என் மகளை வைத்து பார்க்கிறேன் ஆகவே அவரது எதிர்காலம் பாதிக்கப்படுமே என கவலையாக இருக்கிறது” என ரங்காராவ் பிட்டை போடுகிறார் தினமலர் வெங்கடேஷ். அவர் ஏன் மாணவி வளர்மதியை மகளாக நினைக்கவில்லை, சோஃபியாவை ஏன் மகளாக நினைக்க முடிகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

பொன்.ராதா, தமிழிசை உள்ளிட்ட பல பா.ஜ.க. தலைகள் கோஷமிட்ட பெண்ணுக்கு பின்னணியில் ஏதோ ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் அலறுகிறார்கள். பா.ஜ.க. பாதநக்கி கருத்தாளர்களும் அதனை அப்படியே வழிமொழிகிறார்கள். ஆனால் அனைவரும் கோபத்தையும் பதற்றத்தையும் அடக்கிக்கொண்டு தடுப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பது இங்கே பெரிதும் கவனிக்கத்தக்கது. பா.ஜ.க. பேச்சாளர்கள் ”நாங்கள் வெறும் புகார் மட்டும்தான் கொடுத்தோம். அவரை ஜெயிலில் தள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, அந்த உரிமைகூட எங்களுக்கு இல்லையா” என்றுதான் புலம்பினார்கள்.

விமான நிலைய வளாகத்திலேயே மேடை போட்டு உரையாற்றும் அமித்ஷா.

வழக்கமாக தமிழிசைக்காக தமிழக பா.ஜ.க.வின் பார்ப்பன லாபி எந்த வேலையையும் செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் தமிழிசையை வேலை மெனக்கெட்டு ஆதரிக்கிறார்கள். நேரடி மற்றும் மறைமுக பா.ஜ.க. கருத்தாளர்கள் எல்லோரும் அவர் வெறுமனே மாணவியல்ல அவருக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் சொல்லி சோஃபியா ஒரு சாமனிய பெண் அல்ல என நிரூபிக்க முற்படுகிறார்கள். பிறரை அவமானப்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட பா.ஜ.க. இவ்விவகாரத்தில் சோஃபியாவை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருகிறது.

மறுபுறம் செய்தி கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள் பேரார்வத்தோடும் ஒருவிதமான பரவசத்தோடும் அவரை ஆதரித்து பதிவிடுகிறார்கள். இத்தளங்களில் இயங்காத சாமானிய மக்களும் இதே உணர்வோடுதான் இருந்தார்கள். சோஃபியாவை ஆதரிக்கும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக எனும் ஹேஷ்டேக் ஒரு அலையைப்போல பரவிற்று. ஏன் சாதாரண நிகழ்வுவொன்று ஒருபுறம் பெரும் பதற்றத்தையும் மறுபுறம் பரவசத்தையும் உருவாக்குகிறது?

காரணம் அந்தப்பெண் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பொருளாதாரப் பிண்ணனி. பா.ஜ.க.வின் கோர முகம் தெரிந்தும் அதனை அலட்சியப்படுத்தி, பா.ஜ.க.வை ஆதரித்து பார்ப்பனக் கும்பலோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அதனை பயன்படுத்திய மிடில் கிளாசில் இருந்து அவர் வந்திருக்கிறார். அதிகம் படித்தவனுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது. நீ படி, அதிகம் பொருளீட்டு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதே அனேக மெத்தப்படித்தோரின் வாழ்நாள் அறிவுரை. அந்த அறிவுரையை சோஃபியா துணிவோடு புறந்தள்ளியிருக்கிறார். போராட்டங்களை இடையூறு என்பதாகவும் உரத்த குரலை அநாகரீகம் என்பதாகவும் கருதும் ஒரு வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஒரு சிறு பெண் எட்டி உதைத்துவிட்டார்.

தங்களது கவசமாக இருந்த ஒரு வர்க்கத்தில் இருந்து வந்த பெண் அவர்களுக்கான விதிகளை எல்லாம் உடைத்துவிட்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதை பார்க்கையில் தமிழிசைக்கு பயம் மேலிடுகிறது. என்ன நடந்தாலும் சாணி மாதிரி கிடக்கும் மிடில்கிளாசிடம் இருந்து வெளிப்படையான எதிர்குரல் எழுவதென்பது பா.ஜ.க. கூடாரத்தை பெரிதும் கலவரப்படுத்தவல்லது. அதனை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடத் துடித்ததன் விளைவே தமிழிசையின் அந்த விமான நிலைய குறளிவித்தை. எல்லாவற்றையும் பொறுக்கித்தனமாகவே கையாளும் பா.ஜ.க.வின் தலைவர் என்பதால் இதையும் அப்படியே கையாள முற்பட்டார் தமிழிசை. அதனால்தான் அவர் வெறுமனே புகார் சொல்லாமல் தன் ஆட்களை விட்டு சோஃபியாவையும் அவர் குடும்பத்தையும் மிரட்ட வைத்தார் (அவர் மிரட்டு என உத்தரவிடத்தேவையில்லை, என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என சொன்னாலே போதுமானது).

ஆனால், ஆரம்பத்திலேயே பாடம் கற்பித்துவிடவேண்டும் எனும் அவரது ஆத்திரம் எதிர்மறையாக வேலை செய்துவிட்டது. தலித், பெண், கிருஸ்துவர், வெளிநாட்டில் படிக்கிறார் என்பதாக பா.ஜ.க.வால் மிக இலகுவாக அவமானப்படுத்த முடிகிற எல்லா தகுதியும் சோஃபியாவுக்கு இருந்தது. ஆனால் மக்கள் யாரெல்லாம் களத்துக்கு வரவேண்டும் என விரும்பினார்களோ அங்கிருந்து ஒரு சிறு பெண் துணிந்து வரவும் கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பா.ஜ.க.வின் வழக்கமான அஸ்திரங்கள் பயனற்றுப்போயின. மிக அரிதான நிகழ்வாக பா.ஜ.க. தடுப்பாட்டம் ஆடும் நிர்ப்பந்தம் வந்தது.

பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாமல் ஷோவை ஓட்டிவிடவேண்டும் எனும் ஊடகங்களின் வேண்டுதலை குழந்தைகளை கொன்ற அன்னை அபிராமியால்கூட காக்க இயலவில்லை. ஆனாலும் பாசிச பா.ஜ.க. ஒழிக எனும் கோஷம் முன்னுக்கு வராமல் தடுத்து சோஃபியா செய்தது சரியா என்பதாக விவாதித்து தமது எஜமானர்களை அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். எந்த டி.வி.யும் தமிழிசை ஏன் புகார் மட்டும் கொடுத்துவிட்டு போகாமல் தன் கட்சி ஆட்களை அழைத்து ரகளை செய்தார் எனும் கோணத்தை விவாதிக்கவே இல்லை.

பா.ஜ.க.வின் டிப்ளமேட்டிக் அணிகள், டிப்ளமேட்டிக் ரவுடி அணிகள் மற்றும் பியூர் ரவுடி-பொறுக்கி அணிகள் எல்லாமே இம்முறை அடக்கி வாசித்தன. பார்ப்பன நற்செய்தியாளர்கள் சேதாரத்தை அனுமானித்து ”ஏர்கிராஃப்ட் ரூல்சை மீறிப் பேஷறது தப்பு” என ஆரம்பித்து ”பொண்ணோட எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்குல்ல..” என முடித்தார்கள், அதன் பொருள் மற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரும் இப்படி கோஷம் போட்டுவிட வேண்டாம் என்பதே. பொன்ரா வகையறா சோஃபியாவுக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொல்லி  அவர் உங்கள் ஆள் அல்ல என மக்களுக்கு பாடம் எடுத்தார்கள். மக்கள் தமது கோபத்தை அடுத்த வருடம் தேர்தலில் காட்டினால் போதும் என ஆலோசனை சொன்னார் ஒரு நடுநிலை. ”உங்க தலைவருக்கு இது நடந்தா நீங்க சும்மாயிருப்பேளா” என சிலர் முறையிட்டார்கள் (சம்பவத்தில் ஒரு முக்கிய திருப்பமாக தி.க. ஓவியாவும் இதை சொன்னார். வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.க. நாராயணன் ஓவியாவின் கருத்துக்களை குறிப்பிட்டு வழிமொழிந்தார்) ஆனால் ஒருவர்கூட பா.ஜ.க. பாசிஸ்ட் கட்சி இல்லை என்றோ பாசிச ஆட்சி இல்லை என்றோ சொல்லவில்லை.

சோஃபியாவின் குரலுக்கான எதிர்வினைகளையும் பரிசீலிக்கையில் அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது விளங்கும். மக்கள் இத்தகைய குரல் ஒன்றுக்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதும் பா.ஜ.க. கூடாரம் இத்தகைய குரலைக் கண்டு அஞ்சுகிறது என்பதும் உற்சாகமூட்டக்கூடிய செய்திகள். சோஃபியாவை ஆதரிப்பதன் மூலம் அவரது உணர்வுகளை பரவலாக்குவதன் மூலம் நாம் பெருந்தொகையான மத்தியதர மக்களிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும். உண்மையில் பா.ஜ.க.வின் பொருளாதார நடவடிக்கைகள் கொடூரமாகச் சிதைத்திருப்பது மிடில்கிளாஸ் மக்களின் எதிர்காலத்தைத்தான் (ஏழைகளுக்கு அப்படி ஒன்று இருந்ததில்லை). நிகழ்காலத்தை செலவு மிக்கதாக்கி சேமிப்பை அர்த்தமற்றதாக்கியதுதான் பா.ஜ.க. மிடில் கிளாஸ் விசுவாசத்துக்கு கொடுத்த பரிசு. இன்று அவர்களை பிடித்து நிறுத்தியிருப்பது அந்த விசுவாசம் அல்ல, பா.ஜ.க.வை செருப்பால் அடிப்பதில் இருக்கும் தயக்கம்.

இதுவரை நடுத்தர வர்க்க மக்களுக்கு போதிக்கப்பட்ட உதாரண மனிதர்களின் இலட்சணமான “நல்லா படி, ஃபாரின் போ, சம்பாதி” என்பதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டவர் சோஃபியா. அப்படியான உதாரண மிடில் கிளாஸ் மகளை சமூக அக்கறைக்கான மாடலாக நாம் காட்டவேண்டும். அவர் கோஷம் மட்டுமல்ல, மன்னிப்பு கேட்க மறுத்த துணிவு மற்றும் அவரது கருத்தியல் பங்களிப்பு (அவர் எழுத்துக்கள்) ஆகிய எல்லாவற்றையும் நாம் பெருமிதத்தோடு வரவேற்போம். எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம். இன்னும் ஆயிரமாயிரம் சோஃபியாக்களின் தயக்கத்தை அது உடைக்கட்டும்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

மணிப்பூர் பிணங்களின் முறையீடு : பீதியில் இந்திய இராணுவம்

டந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லை  என்று கூறி அதுவும் ஓரிருவர் அல்ல நூற்றுக்கணக்கில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து வலதுசாரி இணையதளங்கள் முதல் பத்திரிகைகளின் ஓப்பன் எடிட்டோரியல் பத்திகள் இராணுவ வீரர்களுக்காக கதறின.

அப்படி என்ன பிரச்சினை?  ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் வரைமுறையின்றி கொலை செய்த இராணுவத்தினர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நத்தை வேகத்தில் நடந்த விசாரணையை துரிதப்படுத்த கோரி சி.பி.ஐ. இயக்குநரை நேரில் அழைத்து கண்டித்தது. அதன் பிறகு சில போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. இதைக் கண்டித்து 400 இராணுவ வீரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

இப்பின்னணியில் போலி மோதல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரனையில் தெரியவந்த தகவல்களை ஸ்க்ரால் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம்:

“வீர தீர செயல்களுக்கான விருது பெறுவதுதான் நோக்கம்” –
மணிப்பூர் போலீசார் பச்சை படுகொலைகளை செய்துள்ளனர் என சி.பி.ஐ குற்றச்சாட்டு!

ணிப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தருண்குமார் என்பவருக்கு கடந்த  2012 நவம்பர்-23 அன்று குடியரசுத் தலைவர் வீர தீர செயல்களுக்கான பதக்கம் வழங்கி கவுரவித்திருந்தார். முகம்மது சமீன் கான் என்பவரை சுட்டுக்கொண்ட படைக்கு தலைமை தாங்கியதற்காக  இந்த விருது வழங்கப்பட்டது.

இச்சம்பவத்தில் போலீசரின் முதல் தகவல் அறிக்கையின் படி  “2012 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக  காங்கிரஸ் கட்சித் தொண்டர்களைக் கடத்தி குண்டு வைத்து கொலை செய்ய முகமது சமீன் கான் திட்டமிட்டிருந்தார். போலீசாருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஐரில்பம்ங் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லில்லாங் சண்டிபூர் பகுதியில் கண்காணிப்பில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கான் மற்றும் அவனது கூட்டாளிகளை தடுத்த போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர் மற்றும் கையெறி குண்டுகளை  வீசி போலீசாரைத் தாக்கினர். அப்போது நடந்த மோதலில் கான் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் சிவப்பு பாலீத்தீன் கைப்பற்றப்பட்டன. அவனது கூட்டாளிகள் இருட்டில் தப்பிவிட்டனர்.“

வீர தீர பதக்கத்தோடு தருண்குமார் பதவி உயர்வும் பெற்றார். தற்போது மோரெஹ் என்ற நகரத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மறுபுறம் கானின் குடும்பமோ கான் ஒரு அப்பாவி என்பதையும் அவர் படுகொலை செய்யப்பட்டார்  என்பதையும்  நிரூபிக்க கடந்த ஆறுவருடமாக போராடிவருகிறார்கள். கான் இறந்த பிறகு ஒரு மாதத்தில் பிறந்த குழந்தையுடன் அவர் மனைவி வாழ்ந்துவருகிறார்.

கான் என்கவுண்டர் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கானின் குடும்பத்தினர் சொல்வது போல அவர் அப்பாவி என்பதை உறுதி செய்து  கான் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க கடந்த 2014-ஆம் ஆண்டு ஆணையிட்டது. கான் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கிடைத்தது. ஆனால், தருண்குமார் மற்றும் அவரது படையினர் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதால் – இச்சட்டப்படி ஆயுதப்படையினர் சந்தேகிக்கும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கொலை செய்யலாம் – இப்பிரச்சினை வழக்கு முடியவில்லை.

இந்நிலையில் தான் மணிப்பூரில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட 98 போலி மோதல் வழக்குகளை விசாரிக்க கடந்த 2017 ஜூலை மாதம் சி.பி.ஐ.-க்கு  உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். “சட்டப்புறம்பாக கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கான அமைப்பு” சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இவ்வுத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.  1979 – 2012-க்கு இடையில்  1528 போலி மோதல் கொலைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் எந்த ஒரு வழக்கிலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி உச்சநீதி மன்றத்தை நாடியிருந்தார்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள். வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும்  அதீத நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து கூறியது.

அவ்வாறு உச்ச நீதிமன்றம் விசாரிக்க கோரியிருந்த 98 வழக்குகளில் ஒன்று தான் கான் கொலை வழக்கு.  ஒர் ஆண்டுக்கு பிறகு கடந்த ஜூலை 7-ஆம் தேதி சி.பி.ஐ. இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கான் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் கூறியவை உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி ஆய்வாளர் தருண்குமார் மற்றும் மேலும் 6 மணிப்பூர் போலீசார் மீது சதி செய்தல், கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.

என்கவுண்டர்  நடந்த பகுதியில் தீவிரவாதிகளின் எவ்வித இரகசிய செயல்பாடுகளும் இல்லை எனவும் ஆயுதங்களை போலீசாரே அப்பகுதியில் சோடித்தனர் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  “ இந்த என்கவுண்டரின் நோக்கமே அரசிடமிருந்து விருது பெறுவது தான். அதற்காக போலி என்கவுண்டரை நடத்தி அதனை உண்மையாக சோடித்துள்ளனர்.” என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தவிர போலி மோதல் தொடர்பாக மேலும் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அனைத்து மோதல்களும் ஒரே முறையை பின்பற்றி நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உதாரணமாக ஜனவரி 18, 2012-இல் மணிப்பூர் போலீசாரால் முகம்மது இசாக் மற்றும் முகம்மது முஸ்தகிம் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கை எடுத்துக் கொள்ளலாம். தலைமறைவு உறுப்பினர்கள் குறித்து கிடைத்த “இரகசிய தகவலின் அடிப்படையில்”  செயல்பட்டபோது “இசாக் மற்றும் முஸ்தாகிம் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தப்பியோட முயன்றதால்”  அவ்விருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆனால், இது என்கவுண்டர் அல்ல பச்சைப்படுகொலை என சி.பி.ஐ.-யின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் இல்லை எனவும் இவர்களுக்கும் மணிப்பூர் தலைமறைவு போராளிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுல்ளது. மேலும்  ஆயுதங்கள் வெடிபொருட்கள் போலீசாரால் சோடிக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 8 கமாண்டோ போலீசார் மீது கொலை, தடயங்களை அழித்தல், குற்றச்சதி, பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல லாய்ஷ்ராம் ரன்பீர் சிங் வழக்கில் – கங்கலெபக் கம்யூனிஸ்ட் கட்சி (Kangleipak Communist Party) உறுப்பினர் என சொல்லப்பட்டு 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று கொல்லப்பட்டார் –  நான்கு மணிப்பூர் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை மற்றும் தடங்களை அழித்தல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. முன்னர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி முந்தைய இரு சம்பவங்களைப்போலவே, இருசக்கர வாகனத்தில் வந்த சிங் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தடுத்தபோது சிங் துப்பாக்கியால் சுட்டார். அப்போது நடந்த  மோதலில் சிங் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் சிங் துப்பாக்கியால் சுட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரது துப்பாக்கி என்று சொல்லப்படுவதில் சிங்கில் கைரேகை கூட இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ கொல்லப்பட்ட லாய்ஷ்ராம் ரன்பீர் சிங்  போராளி குழுவினரிடமும் தொடர்பில் இருந்ததாக எந்த ஆதரமும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்.

அடுத்ததாக லாய்ஷ்ராம் லிங்கன். இவர் 2011-ஆம் ஆண்டு ஜுன் 28 என்று அவரது வீட்டின் முன்பு மணிப்பூர் போலீஸ் கமாண்டோ படையினரால் கொல்லப்பட்டார். அவரது உடலில் 20 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது பிணக்கூறாய்வில் கண்டறியப்பட்டது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி லிங்கனின் வீட்டை சோதனையிடும் போது லிங்கன் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றதாக அப்போது நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ விசாரணையில் இதுவும் பச்சப்படுகொலை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு மணிப்பூர் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை, தடயங்களை அழித்தல், சதி திட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இவைகள் போல லாக் அப் கொலை தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  மேலும் சட்டப்புறமாக சிறைவைத்தது தொடர்பாக  பத்து போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றப்பத்திரிகையை வரவேற்றுள்ளார்கள். “குற்றப்பத்திரிகையின் தரம் குறித்து மகிழ்ச்சி” என இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்துவரும் மனித உரிமை ஆர்வலர் பப்ளூ லோய்ட்ங்பம் தெரிவித்துள்ளார். “ஆனாலும் கீழ் நிலை அதிகாரிகள் தான் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள். உயர் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை வரம்புக்குள் வரவவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

சட்டபுறம்பாக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவர் ரேனு தக்ஹெலம்பம் கூறுகையில் “மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. இதற்காகத்தான் தாங்கள் பல காலம் காத்திருந்தேன்.” என்கிறார். இவரின் கணவரும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மேலும் அவர் கூறுகையில் ” போலிமோதல் கொலைகளை செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

மூலக் கட்டுரை: ‘Motive was to get gallantry medal’: CBI indicts Manipur police for ‘cold blooded murder

மேலும்:

தமிழாக்கம்:
– வினவு செய்திப்பிரிவு.

“பாசிச பாஜக ஒழிக” – கொண்டாடும் சிறுமிகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளின் கூட்டாளியான பாஜக-வின் தமிழிசை சவுந்தரராஜனின் முன்னர், விமானத்தில் வைத்தே “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று முழங்கியுள்ளார் சோஃபியா என்ற ஆராய்ச்சி மாணவி.

சோஃபியா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்கிறாயா என நீதிபதி கேட்டதற்கு, மன்னிப்புக் கேட்க முடியாது என மறுத்திருக்கிறார் சோஃபியா.

சோஃபியாவின் உறுதிக்கு இந்தியா முழுவதும் சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் பக்க பலமாக இருந்தனர். சோஃபியா விடுதலை செய்யப்பட்ட போது சுமார் ஆயிரம்பேர் அவரை வரவேற்கச் சென்றிருக்கின்றனர்.

இதோ இங்கு சோஃபியாவுக்கு ஆதரவாகவும், “பாசிச பாஜக ஒழிக” என்றும் முழக்கமிடும் திருச்சியின் இளம் சோஃபியாக்கள் ! திருச்சி சுமதி – அசுரன் தம்பதியினரின் மகள்கள் அசரத் பேகம் (6-ம் வகுப்பு) மற்றும் ஜென்னி (3-ம் வகுப்பு) ஆகியோர், சோஃபியாவை வாழ்த்தி முழக்கமிடும் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு..

 

துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !

மார்க்ஸ் பிறந்தார் – 17
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

  1. உண்மையான போர் முழக்கத்தைத் தேடல்

மார்க்சியம் ஒரு முழுமையான, முரணில்லாத போதனையாகும். அது ஒரு அங்ககமான அமைப்பு, அதில் முழுமைக்கு முன்பாகத் தனிப் பகுதி தோன்றுவதில்லை, உயிருள்ள கரு வளர்ச்சியடைவதைப் போல அதன் மொத்தமும் வளர்ச்சியடைந்து தன்னை முழுநிறை வாக்கிக் கொள்கிறது.

முதலில் இயக்கவியல் பொருள்முதல்வாதமும் பிறகு விஞ்ஞான கம்யூனிசமும் அரசியல் பொருளாதாரமும் தோன்றின என்று நினைப்பது வெகுளித்தனமாகும். ஆனால் மார்க்சின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர் பிரதானமாக இவற்றில் ஏதாவதொரு துறையில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

மார்க்ஸ் தன்னுடைய புதிய உலகக் கண்ணோட்டத்தைத் தத்துவஞானத்திலிருந்து தொடங்கினார் என்ற போதிலும், மார்க்சியத்தின் சமூக மற்றும் பொருளாதார அம்சங்களின் உருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதுதான் இத்துறையில் தீர்மானமான புரட்சி சாத்தியமாயிற்று.

இந்தக் கூறு ஏற்கனவே Rheinische Zeitung காலகட்டத்தில் தோன்றியிருந்தது. மார்க்சின் தத்துவஞான அறிவு பரந்த அளவிலும் கலைக் களஞ்சிய விரிவுடனும் இருந்தாலும் மெய்யான வாழ்க்கை முன்வைக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஆன்மிகச் செல்வம் போதுமானதாக இருக்கவில்லை; தத்துவஞானத்தில் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கும் அது போதுமானதாக இருக்கவில்லை.

மெய்யான வாழ்க்கை, தத்துவம் ஆகிய இரண்டிலும் சமூக உறவுகளைப் பற்றிய ஆழமான பகுப்பாய்வில் ஈடுபடும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அவர் கற்பனாவாத சோஷலிஸ்டுகளின், முதலாவதாகவும் முதன்மையாகவும் சான்சிமோன், ஃபூரியே மற்றும் ஓவனின் தத்துவக் கட்டுரைகளை விமர்சனப் பகுப்பாய்வு செய்தார்.

Utopian Socialist

அவர்கள் கம்யூனிஸ்டு சமூகத்தின் கூறுகள் பலவற்றை (தனிச் சொத்துடைமை, வர்க்க முரணியல்புகள் மற்றும் மனிதனை மனிதன் சுரண்டல் இல்லாதிருத்தல், உழைப்பு சாபக்கேடு என்ற நிலைமையை மாற்றி அதைப் பிரதான மனித அவசியமாகச் செய்வது, சுய நிர்வாகம், இதரவை) அதிகமான மதிநுட்பத்துடன் வர்ணித்தார்கள்; ஆனால் ஒரு முதலாளித்துவச் சமூகத்தைப் புரட்சியின் மூலமாக இல்லாமல், “உதாரணத்தின் வன்மையினால்”, அறவுரைகளினால், வங்கி அதிபர்களையும் தொழிற்சாலை முதலாளிகளையும் தங்களுடைய இலட்சியத்துக்கு மாற்றுவதன் மூலம் – அவர்கள் உடனே தங்களுடைய உடைமைகளைப் பொது நன்மைக்குப் பயன்படுத்தும்படி ஏழைகளிடம் விருப்பபூர்வமாக ஒப்படைத்துவிடுவார்கள் – கம்யூனிஸ்டு சமூகமாக மாற்றிவிட முடியும் என்று வெகுளித்தனமாக நம்பினார்கள்.

மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்திலேயே கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மீது ஒரளவுக்கு அவநம்பிக்கை கொண்டிருந்தார்; ஏனென்றால் அவர்களுடைய உன்னதமான கற்பனைகளுக்கும் அரை நிலப்பிரபுத்துவ பிரஷ்யாவின் வாழ்க்கைக்கும் இடையில் எவ்விதமான உண்மையான இணைப்பையும் அவரால் பார்க்க முடியவில்லை.

ஜெர்மனியில் கற்பனாவாத சோஷலிசக் கருத்துக்கள் பெரும்பாலும் குழப்பமான வடிவத்தில் – மாயாவாத வடிவத்திலும் கூடப் – பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தன என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொண்டால் மார்க்சின் அவநம்பிக்கை இயற்கையானதே.

மார்க்ஸ் Rheinische Zeitung பத்திரிகையில் பணி புரிந்த காலத்தில் அவசரமான, செய்முறைக் கடமைகளைத் தீர்ப்பதற்கென்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தபடியால் அவர் கற்பனாவாதத்தைப் பற்றி இன்னும் அதிக ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டார்.

“சரியான தத்துவம் ஸ்தூலமான நிலைமைகளுக்குள் மற்றும் இருக்கின்ற நிலைமைகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்” என்று அவர் கருதினார்.

அவருடைய முன்னாளைய நண்பர்கள், இளம் ஹெகலியவாதிகள் “அரசியலமைப்புச் சட்டத்தின் சுற்றுவட்டத்திற்குள் ஒவ்வொரு படியாக சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு பதிலாக” “சூக்குமக் கருத்தமைப்புகள் என்ற வசதியான சாய்வு நாற்காலியில்” இருந்து கொண்டு பொது முறையான வாதங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.(1) தன்னுடைய முன்னாளைய நண்பர்களுடைய நிலைகளைப் பற்றி அவர் வெறுத்தார்.

ஹெகலுடன் அவரது மாணவர்கள்

இந்த வழியில் சுதந்திரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கைகள் வெறும் கற்பனையே; இந்த உண்மையை மார்க்ஸ் இன்னும் உணரவில்லை. “சுதந்திரமான சிந்தனையைக் கொண்ட, செய்முறையான மனிதர்கள்” அனைவரையும் பத்திரிகையைச் சுற்றி ஒன்றுபடுத்த முடியும் என்று அவர் நம்பினார்; “இன்றைய அரசு அமைப்பின் அடிப்படைகளை எதிர்த்துத் தெளிவான ஆர்ப்பாட்டம் செய்வதனால் தணிக்கை முறை தீவிரப்படுத்தப்படலாம், பத்திரிகை கூட ஒடுக்கப்படலாம்” என்று அவர் அஞ்சினார்.(2)

எனினும் சம்பவங்கள் வேறுவிதமாக வளர்ச்சியடைந்தபடியால் 1842-ம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் கற்பனாவாதக் கம்யூனிசத்தைப் பற்றித் தன் கருத்துக்களை எழுதும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அநேகமாக இதே சமயத்தில் Rheinische Zeitung பத்திரிகை மெவிஸென் மற்றும் ஹேஸ் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அவர்கள் சோஷலிஸ்ட் கருத்துக்களை வெளியிட்டதுடன் “சொத்துடைமையில் புரட்சி” என்ற கோரிக்கையையும் கூட முன்வைத்திருந்தார்கள்.

குறிப்பாக மோஸஸ் ஹேஸ் தனிச் சொத்துடைமைக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக முதலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்துடன் ஒப்பிட்டுக் காட்டி இப்போராட்டம் ஒரு தேசியப் புரட்சிக்கு இட்டுச் செல்லப்படுகிறது என்று வலிமையாக வற்புறுத்தினார்.

மோஸஸ் ஹேஸ்

அவுக்ஸ்பர்கிலிருந்து வெளியிடப்பட்ட Algemeine Zeitung (“பொதுப் பத்திரிகை”) என்ற பத்திரிகை Rheinische Zeitung பத்திரிகைக்குப் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. அது தன்னுடைய எதிரியைத் தாக்குவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. “பணக்கார வர்த்தகர்களின் புதல்வர்கள்” (மோஸஸ் ஹேஸ் ஒரு வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்) தங்களுடைய உடைமைகளைக் கொலோனின் கைவினைஞர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற எண்ணம் சிறிதுமில்லாமல் சோஷலிஸ்ட் கருத்துக்களுடன் சல்லாபிக்கிறார்கள் என்று கிண்டல் செய்தது.

ஜெர்மனியைப் போன்ற பின்தங்கிய நாட்டில் மத்தியதர வர்க்கத்தினர் இப்பொழுதுதான் சுதந்திரமாக மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறார்கள், 1789-இல் பிரெஞ்சுப் பிரபுக்களுக்கு ஏற்பட்ட கதியைச் சுட்டிக்காட்டி இப்பொழுது அவர்களைப் பயமுறுத்துவது என்றால் அது சிறுபிள்ளைத்தனமானது என்று அது எழுதியது.

இது சாமர்த்தியமான தாக்குதல். முதலாளி வர்க்க வாசகர்கள் Rheinische Zeitung பத்திரிகையைப் படிக்காமலிருக்கும்படி பயமுறுத்துவதும் அது கம்யூனிஸ்ட் பத்திரிகை என்று அரசாங்கத்திடம் எடுத்துக்காட்டுவதும் அதன் நோக்கமாகும்.

Rheinische Zeitung -இன் பிரதம ஆசிரியர் என்ற முறையில் இத்தாக்குதலுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மார்க்சுக்கு ஏற்பட்டது. பத்திரிகை ஏற்கெனவே எடுத்த நிலையை ஆதரிக்க வேண்டும், அதே சமயத்தில் “கம்யூனிசத்தால்” அதிர்ச்சியடைந்திருக்கும் வாசகர்களைச் சாந்தப்படுத்த வேண்டும். இத்தகைய சிக்கலான, சமயோசிதமான கடமையை அவர் இராஜதந்திரத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

கம்யூனிசம் என்பது அழகான சொற்றொடர்களை உபயோகித்து வரவேற்பறையில் விவாதிக்கக் கூடிய பொருளல்ல என்று அவர் காரமாகக் கூறுகிறார். பன்னீரின் நறுமணம் அதில் இல்லை, அது அழுக்குத் துணியை அணிந்திருக்கிறது. ஆனால் நம் காலத்தின் முக்கியமான பிரச்சினையாக அது இருப்பதை இது தடுக்கவில்லை.

புதிய சமூகப் பிரிவை, அதாவது பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிய கருத்தை மார்க்ஸ் உறுதியாக ஆதரிக்கிறார். “இன்று எந்த உடைமையும் இல்லாதிருக்கின்ற சமூகப் பிரிவு மத்தியதர வர்க்கத்தினரது செல்வத்தில் பங்கு கேட்கிறது என்ற உண்மை, ஸ்ட்ராஸ்பர்க் பேச்சு இல்லாமலே, அவுக்ஸ்பர்கின் மெளனத்தை மீறி மாஞ்செஸ்டர், பாரிஸ் மற்றும் லியோனில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்ததே.”(3)

மார்க்சின் எழுத்துக்களில் பாட்டாளி வர்க்கம் முதல் தடவையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து 1842-ம் வருடத்திலேயே அவர் பிரான்சிலும் இங்கிலாந்திலும் பாட்டாளி வர்க்கத்தின் சமூகக் கோரிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது.

ஆனால் மத்தியதர வர்க்கத்துக்கும் (முதலாளி வர்க்கத்துக்கும்) புதிய சமூகப் பிரிவுக்கும் (தொழிலாளர்களுக்கும்) இடையில் “மோதல்” எந்த வழியில் தீர்க்கப்படும்? மார்க்ஸ் இதை முடிவு செய்வதற்கு இன்னும் முன்வரவில்லை. “இரண்டு மக்களினங்கள் தீர்க்க முயன்று கொண்டிருக்கின்ற பிரச்சினைகளை ஒரேயொரு சொற்றொடரில் தீர்த்துவிடுகின்ற கலையை நாம் கற்கவில்லை.”(4)

இந்தப் பிரச்சினையின் இரண்டு அம்சங்களுக்கு இடையில், அதாவது “புதிய சமூகப் பிரிவின்” இயக்கம் என்ற முறையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உண்மையான பிரச்சினைக்கும், தத்துவ ரீதியான விளக்கத்துக்கும் கம்யூனிசப் பிரச்சாரத்துக்கும் இடையில் மார்க்ஸ் தெளிவாக வேறுபடுத்திக் காண்கிறார்.

இரண்டாவது பிரச்சினையைப் பொறுத்தவரை மார்க்ஸ் விமர்சனம் செய்கிறார். ஆனால் இங்கும் அவர் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் எழுதுகிறார். Rheinische Zeitung கம்யூனிஸ்ட் கருத்துக்களை முற்றமுழுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தும், அவை தத்துவ ரீதியான மெய்மையைக் கொண்டிருக்கின்றன என்று ஒத்துக் கொள்ளவில்லை, ஆகவே அவை நடைமுறையில் அமுலாக்கப்படுவதை இன்னும் குறைவாகவே விரும்ப முடியும் என்று மார்க்ஸ் எழுதிய பொழுது “இன்றைய வடிவத்திலுள்ள” கம்யூனிஸ்ட் கருத்துக்களையே மனதில் கொண்டிருக்கிறார்.

கற்பனாவாதக் கம்யூனிசத்தில் மார்க்ஸ் துல்லியமாக எந்த அம்சத்தை வெறுத்தார் என்பதைப் பின்வரும் உதாரணத்தில் காண முடியும். Algemeine Zeitung-க்குத் தெரிந்த ஒரு பிரபலமடையாத நபர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனுக்குக் கொடுத்துவிட்டுத் “தன்னுடைய தோழர்களின் உணவுத் தட்டுகளைக் கழுவி, பூட்சுகளை சுத்தம் செய்தார்” என்பதை மார்க்ஸ் குறிப்பிட்டுக் கிண்டல் செய்கிறார்.

இங்கே அவர் ஃபூரியேயின் சீடர்கள் நடத்திய கம்யூன்களைக் குறிப்பிடுகிறார். இவற்றைப் பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்பட்டன; இவை கம்யூனிசக் கருத்துக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தின. இத்தகைய “முயற்சிகள்” உண்மையில் ஆபத்தானவை அல்ல என்று மார்க்ஸ் எழுதியது சரியானதாகும்.

தணிக்கை முறையின் காரணமாகத் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக எழுதுவதற்கு மார்க்சினால் முடியவில்லை. எனினும் அவற்றின் சாராம்சம் என்னவென்றால், மக்களின் அறிவை வெல்லக் கூடிய கம்யூனிஸ்ட் கருத்துக்களின் தத்துவ அடிப்படையைத் தேடுவது அவசியம்; அப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் அது பீரங்கியையும் எதிர்த்து நிற்க முடியும்.

புரூதோன்

கம்யூனிசத்தைப் பற்றித் தத்துவ ரீதியாக விமர்சனம் செய்வதற்கு முன்பாக லெரூ, கன்சிடெரான் ஆகியோரது நூல்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக “புரூதோன் எழுதிய நுண்ணறிவு நிறைந்த புத்தகத்தையும்” முற்றமுழுமையாக ஆராய உத்தேசிப்பதாக மார்க்ஸ் எழுதினார்.

பிற்காலத்தில் அவர் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்: “…”முன்னுக்குப் போக ஆசைப்படுகின்ற நல்லெண்ணங்கள் விவரமான அறிவின் இடத்தைப் பிடித்திருந்த அந்தக் காலத்தில் லேசான தத்துவஞான முலாம் பூசப்பட்ட பிரெஞ்சு சோஷலிசம், கம்யூனிசத்தின் எதிரொலி Rheinische Zeitung பத்திரிக்கையில் குறிப்பிடத்தக்க விதத்தில் தென்பட்டது. இந்த மேற்போக்கான அறிவுக்கு (dilettantism) என்னுடைய மறுப்பைத் தெரிவித்தேன் என்றாலும் Allgemeine Zeitung என்ற அவுக்ஸ் பர்க் நகரப் பத்திரிகையோடு நடத்திய விவாதத்தில் பிரெஞ்சுக் கொள்கைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி ஏதாவது அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு எனது கடந்த கால ஆராய்ச்சிகள் அனுமதிக்கவில்லை என்பதை அதே சமயத்தில் வெளிப்படையாக ஒத்துக்கொண்டேன்.”(5)

மார்க்சுக்கு இன்னும் இருபத்தைந்து வயது கூட முடியவில்லை. Rheinische Zeitung பத்திரிகையை நடத்துவதற்கு அகல்விரிவான, ஆழமான அறிவும் நிதானமான, செய்முறைத் தலைமைக்குரிய குணங்களும் தேவைப்பட்டன. ஆனால் மார்க்சின் ஆளுமையில் போர்க்குணம் அதிகம். எனவே மேற்கூறிய குணங்கள் அவரிடம் இல்லையென்று தோன்றின.

எனினும், ஒரு பத்திரிகையை நடத்துகின்ற சிக்கலான கலையில் தான் முழுத் தேர்ச்சி பெற்றிருப்பதை மார்க்ஸ் சிறப்பாக எடுத்துக்காட்டினார். இருப்பதோ ஒரே ஒரு நீர்ப்பாதை; ஆனால் அதன் ஒரு கரையில் தணிக்கை முறை என்ற பூதம் உட்கார்ந்திருக்கிறது; மறு கரையில் அதிதீவிரவாதப் புரட்சிகரக் கோரிக்கைகள் என்ற பயங்கரமான விலங்கு பசியுடன் உட்கார்ந்திருக்கிறது. இவற்றுக்கு நடுவில் கப்பலை சாமர்த்தியமாக ஓட்டிச் சென்று தன்னுடைய திறமையை நிரூபித்தார் மார்க்ஸ்.

அதிதீவிரவாதப் புரட்சிகரக் கோரிக்கைகளை “சுதந்திர மக்கள்” என்ற கழகத்தைச் சேர்ந்த பெர்லின் இளம் ஹெகலியவாதிகள் முன்வைத்தார்கள். அவர்கள் உலகத்தைப் புரட்சிமயமாக்குகின்ற உணர்வில் தோய்ந்து ஆனால் கருத்துக்கள் இல்லாத கட்டுரைகளை ஏராளமாகப் பத்திரிகைக்கு அனுப்பினார்கள். இக்கட்டுரைகளில் அரைகுறையாக ஜீரணிக்கப்பட்ட கற்பனாவாதக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருந்தார்கள்.

மார்க்ஸ் இந்தச் “சொற்களின் நீர் வீழ்ச்சியை” உறுதியாக நிராகரித்த பொழுது துணிவுடன் நடந்து கொண்டார். Rheinische Zeitung இன் புதிய ஆசிரியர் “பழமைவாதி”, அவர் “துரோகி” என்று “சுதந்திர மக்கள்” கூக்குரலிட்ட பொழுது அவர் சிறிதும் கவலைப்படவில்லை.

பத்திரிகையை நாட்டிலுள்ள எல்லா எதிர்ப்புச் சக்திகளின் கேந்திரமாகச் செய்வது புரட்சிகர ஜனநாயகவாதி என்ற முறையில் மார்க்சுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் பத்திரிகை மிகவும் “அதிதீவிரமான” முறையில் நடைபெற வேண்டும் என்று “சுதந்திர மக்கள் என்ற கழகம் கோரியது; அப்படிச் செய்தால் பத்திரிகை உடனடியாக மூடப்பட்டுவிடும். அதன் விளைவாகப் “போராட்டக் களம்” போலீஸ் மற்றும் தணிக்கை முறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிடும்.

“சுதந்திர மக்கள்” கழகத்தின் உறுப்பினர்களில் மார்க்ஸ் சில காலத்துக்கு முன்பு நட்புக் கொண்டிருந்த புரூனோ பெளவர், அடோல்ப் ருட்டென்பர்க், பிரெடெரிக் கோப்பென் ஆகியோரும் இருந்தனர். அத்தகைய கழகத்திடம் மார்க்ஸ் ஏன் கடுமையாக நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதன் நோக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

புரூனோ பெளவர்

அக்கழகத்தில் பலவிதமான கருத்துக்களை உடையவர்கள் இருந்தார்கள். அறிவுப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் மிதவாதப் பத்திரிகையாளர்கள், அரசியல் துறையில் புதிய அருணோதயத்தைப் பற்றித் தெளிவில்லாத கனவுகளைக் கொண்டிருந்த இளங்கவிஞர்கள், இளங்கலைஞர்கள், முதிர்ச்சியடையாத இளம் அறிவாளிகள், பாசறை மற்றும் குதிரைப் பண்ணை வேலைகளில் முற்றிலும் மூழ்கிவிடாத இராணுவ அதிகாரிகள், பேராசிரியர்களின் உரைகளைக் கேட்டு முற்றிலும் அலுப்படைந்த மாணவர்கள் ஆகியோர் அதில் சேர்ந்திருந்தனர். மேலும் வேடிக்கைப் பேச்சு அல்லது கெட்ட வார்த்தைகளைக் கேட்டு முகஞ்சுழிக்காத பெண்கள் சிலரும் அதில் இருந்தார்கள்.(6)

இக்கழகத்தினர் ஒரு மதுக்கடையில் கூடி அதிகமாகக் குடிப்பார்கள். அப்படிச் செய்யும் பொழுதே அன்றைய மொத்த அமைப்பையும் இடித்துத் தகர்த்துவிடுவார்கள். அவர்கள் அற்பவாதத்தின் பால் தங்களுடைய இகழ்ச்சியைப் பற்றி உரத்த குரலில் பேசுவார்கள், சமூகத்தின் “தப்பெண்ணங்கள்” அனைத்திலிருந்தும் விடுதலையடைந்துவிட்ட நபர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வார்கள். “அதிபுரட்சிகரமான சொற்றொடர்களை” ஒருவர் மீதொருவர் வீசிக்கொள்வார்கள் – ஆகவே இந்த பொஹீமிய (ஒழுக்கவரம்பற்ற) எழுத்தாளர்கள் மூளை குழம்பிப் போன அற்பவாதிகளுக்கு உதாரணமாக நடந்து கொண்டார்கள்.

அவர்களுடைய கோமாளித்தனம் பல சமயங்களில் களியாட்டமாகவும் மாறிவிடும். அவர்கள் அருவருப்பான வேடிக்கைகளைச் செய்வார்கள், பிச்சைக்காரர்கள் ஊர்வலங்களை நடத்துவார்கள், தொடர்ந்து குடிப்பதற்காக வருவோர் போவோரிடம் பணம் பிடுங்குவார்கள், விபச்சார விடுதிகளுக்குச் சென்று அங்கே கோமாளித்தனமாக நடந்து கொள்வார்கள், அதன் விளைவாக வெளியே விரட்டப்படுவார்கள்.

புரூனோ பெளவர் இப்படி அற்பவாதிகளை நடுங்கச் செய்யும் வேடிக்கைகளைச் செய்து கொண்டே அரசு, சொத்துடைமை, குடும்பம் ஆகியவை ஒழிக்கப்பட்ட கருத்துக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

“சுதந்திர மக்கள்” சமூகத்தின் “மரபுகளிலிருந்து” தங்களை “விடுவித்துக் கொண்டு”, “மக்கட் கூட்டத்திலிருந்து” உயர்ந்து நிற்கின்ற பெருமை மிக்க தனிமனிதனின் புகழைப் பிரகடனம் செய்து கொண்டிருந்த பொழுது அவர்கள் அதே சமயத்தில் மனித நிலைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதையும் சேற்றில் காது வரையிலும் அமிழ்ந்து கொண்டிருப்பதையும் கவனிக்கவில்லை. அவர்கள் சமூகத்தின் “பன்றித்தனத்தைத் தங்களுடைய தனிப்பட்ட பன்றித்தனத்தின் மூலம் எதிர்த்தார்கள்.

அறநெறிப் போதனை செய்யும் அற்பவாதப் போலித்தனத்தை மார்க்ஸ் மிகவும் வெறுத்த போதிலும் அதை எதிர்க்கின்ற இத்தகைய வடிவங்கள் மீது அவர் அனுதாபம் கொள்ளவில்லை.

“பெர்லினைச் சேர்ந்த வாயாடிகள்” நம்ப முடியாத ஆணவத்தோடு தங்களை உண்மையான புரட்சிக்காரர்கள், கம்யூனிஸ்டுகள், மனித குலத்தை விடுவிப்பவர்கள் என்று விளம்பரப்படுத்தி அந்த மாபெரும் இலட்சியத்தைக் கேவலப்படுத்துவதைப் பற்றி அவர் மிகவும் ஆத்திரமடைந்தார்.

Rheinische Zeitung பத்திரிக்கையை வெட்கமில்லாத சுய விளம்பரப் பத்திரிகையாக மாற்றுவதற்கு விரும்பிய “சுதந்திர வீரர்களிடம்” மார்க்ஸ் உறுதியான நியாயமான கோரிக்கையை முன்வைத்தார். உங்களுடைய தெளிவில்லாத வாதத்தை, ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களை, சுய போற்றுதலைக் குறைத்துக் கொள்ளுங்கள், உண்மையில் இருக்கின்ற நிலைமையைப் பற்றி அதிகமான கவனம் செலுத்துங்கள், அதிகத் திட்டவட்டமான முறையில், அதிகமான நிபுணத்துவத்துடன் பேசுங்கள் என்று மார்க்ஸ் கேட்டுக் கொண்டார்.

“சுதந்திர மக்கள்” கம்யூனிஸ்ட் மற்றும் சோஷலிஸ்ட் கோட்பாடுகளை-ஆகவே ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை-தற்செயலான நாடகபாணியான விமர்சனத்துக்குள் தந்திரமாக நுழைப்பது, இதரவை பொருத்த மற்றவை, ஒழுக்கக்கேடானவை கூட என்று மார்க்ஸ் கூறினார். “கம்யூனிசம் விவாதிக்கப்பட வேண்டும் என்றால், அதை மிகவும் வித்தியாசமான முறையில், முற்றமுழுமையாக விவாதிக்க வேண்டும்”(7) என்று மார்க்ஸ் வற்புறுத்தினார்.

மார்க்ஸ் “சுதந்திர மக்களுடன்” முறித்துக் கொண்டுவிட்டார்; ஆனால் Rheinische Zeitung பத்திரிகையை அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து இது பாதுகாக்கவில்லை; அதில் வெளியிடப்பட்ட விமர்சனக் கட்டுரைகள், குறிப்பாக மோஸெல் பிராந்திய திராட்சை பயிரிடுபவர்களை ஆதரித்து மார்க்ஸ் எழுதிய கட்டுரை அரசாங்கத்துக்கு ஆத்திரமேற்படுத்தின. பத்திரிகையை நோக்கி அடக்குமுறை மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன.

தணிக்கை முறையின் கடுந்துன்பங்கள், பங்குதாரர்களின் கூக்குரல்கள், மாநில சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், பிராந்தியத் தலைவரின் புகார்கள் ஆகியவை பற்றிக் கவலைப்படாமல் மார்க்ஸ் பதவியில் நீடித்தார். அதிகாரம் வகிப்பவர்களுடைய திட்டங்களைத் தன்னால் இயன்றவரை தடுப்பது தன் கடமையென்று மார்க்ஸ் கருதினார்.

பத்திரிகை தன்னுடைய முந்திய நிலையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை, அதன் குணாம்சத்தையும் கண்ணியத்தையும் தக்கவைத்துக் கொள்வதை அனுமதித்தால் மார்க்ஸ் சில சமரசங்களுக்குத் தயாராக இருந்தார். ஆனால் பத்திரிகை அதிகாரிகளிடம் “நிதானமாக” நடந்து கொள்ள வேண்டும் என்று பத்திரிகை உடைமையாளர்கள் வற்புறுத்திய பொழுது மார்க்ஸ் ஆட்சேபித்தார், ஆசிரியர் குழுவிலிருந்து விலகும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். முக்கியமான நோக்கத்தைப் பாதுகாப்பதற்காகச் சில பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்வதற்கு மார்க்ஸ் தயாராக இருந்தார். ஆனால் கொள்கைப் பிரச்சினைகளில் அவர் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

தணிக்கை அதிகாரியான ஸான்-பால் பத்திரிகையின் பரமவிரோதி. அவர் மிகவும் வெட்கங்கெட்ட முறையில் ஆசிரியர் குழுவினருக்குத் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் அவர் கூட பத்திரிகையின் ஆசிரியரான மார்க்சின் மேன்மையை, உறுதியை, ஆழமான நம்பிக்கைகளை மறுக்கவில்லை. பிரஷ்ய அரசின் கோட்பாடுகளுக்கு விரோதமான தீவிர ஜனநாயகக் கருத்துக்களைக் கொண்டிருந்த டாக்டர் மார்க்ஸ் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்று ஸான்-பால் அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்பிய பொழுது, இப்பத்திரிகையைப் பழைய முறையில் நடத்துவதற்கும் அதன் இலட்சியங்களுக்காகச் சுறுசுறுப்புடன் போராடுவதற்கும் தகுதியுள்ள ஒரு நபர் கூட இப்பொழுது கொலோனில் இல்லை என்று தெரிவித்தார்.

பத்திரிகையை விட்டு வெளியேறிய பொழுது மார்க்ஸ் நிம்மதியாக மூச்சுவிட்டார். அந்தச் சூழலில் தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று அர்னோல்டு ரூகேக்கு அவர் எழுதினார். “சுதந்திரத்துக்காக என்றால் கூட-அடிமை வேலை செய்வது மோசமானதே; கம்புகளைக் கொண்டு சண்டை போடுவதற்குப் பதிலாக குண்டுகளைக் கொண்டு குத்துவது வெறுக்கத்தக்கதே. போலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை எனக்கு அலுத்துவிட்டன. ஆகவே அரசாங்கம் என்னுடைய சுதந்திரத்தை என்னிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டது.”(8)

மார்க்சின் பெண்கள் 1865ம் வருடத்தில் வினா விடை தயாரித்த பொழுது “துன்பத்தைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று மார்க்சிடம் கேட்டனர். “கீழ்ப்படிதல்” என்று அவர் பதிலளித்தார். அநேகமாக இந்தக் காலத்தை நினைத்தே அவர் அப்படி பதிலளித்திருக்க வேண்டும்.(9)

பத்திரிகையிலிருந்து விலகியது நாட்டின் அரசியல் போராட்டத்தில் பங்கெடுக்கின்ற கடைசி சந்தர்ப்பத்தை இழப்பதாகவே மார்க்ஸ் கருதினார். ஜெர்மனியில் தோன்றிக் கொண்டிருந்த முதலாளி வர்க்க மிதவாதத்தைக் கெய்சர் தன்னுடைய பூட்சுகளின் கீழ் நசுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அற்பவாத ஜெர்மனி அந்த பூட்சுகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையிலிருந்து விலகிய பிறகு அங்கே இருப்பது அர்த்தமில்லாததாக மார்க்ஸ் கருதினார்.

ஜெர்மனியில் ஒருவர் “தனக்கே போலியாக மாறுகிறார்”(10), ஏனென்றால் “இங்கே உள்ள சூழல் ஒரு நபரைப் பண்ணையடிமையாக மாற்றுகிறது”(11) என்று மார்க்ஸ் கூறினார். எனவே அவர் சிறிதும் தயக்கமின்றி-மகிழ்ச்சியோடு கூட-ஜெர்மனியிலிருந்து புறப்படுவதென்று முடிவு செய்தார்.

மார்க்சின் மகிழ்ச்சிக்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுதும் Rheinische Zeitungஇல் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலும் ஜென்னி அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ஜெர்மனிக்கு வெளியில் தன்னுடைய புதிய வாழ்க்கையை ஜென்னியுடன் தொடங்குவதென்று மார்க்ஸ் உறுதியாக முடிவு செய்திருந்தார்.

மார்க்ஸ் 1843 மார்ச்சில் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய சொந்தத் திட்டங்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதினார்: “நான் காதலில் மூழ்கியிருக்கிறேன்-அதிலும் மிகவும் உறுதியான முறையில்-என்பதைச் சிறிதளவு புனைந்துரை கூட இல்லாமல் உங்களிடம் தெரிவிக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஏழு வருடங்களுக்கும் அதிகமாகிவிட்டது. என் மணப்பெண் எனக்காக அவளுடைய உயர்குல உறவினர்கள்-அவர்களைப் பொறுத்தவரை ‘வானத்திலிருக்கும் தேவன்’, ‘பெர்லினிலிருக்கும் பிரபு’ ஆகிய இருவரும் சம அளவுக்கு வழிபாட்டுக்குரியவர்களே-மற்றும் என் சொந்தக் குடும்பத்தினரை-அங்கே சில மதபோதகர்களும் என்னுடைய எதிரிகளும் வசதியாக உட்கார்ந்திருக்கிறார்கள்-எதிர்த்து மிகக் கடுமையாகச் சண்டையிட்டிருக்கிறாள், அதனுல் அவளுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.”(12)

1843 ஜூன் 12ந் தேதியன்று ‘கொலோனில் வசிக்கின்ற, தத்துவஞான டாக்டராகிய திரு. கார்ல் மார்க்சுக்கும் கிரைத்ஸ்னாக்கில் வசிக்கின்ற செல்வி யோஹன்னா பெர்த்தா ஜூலி ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலனுக்கும் (தொழில் கிடையாது)”(13) திருமண ஒப்பந்தச் சான்றிதழ் கையெழுத்திடப்பட்டது.

அன்று முதல் மார்க்ஸ் தன் வாழ்க்கை முழுவதும் விசுவாசத்துடனிருந்த துணைவியைப் பெற்றார். ஜென்னி “தன் கணவருடைய விதி, உழைப்பு, போராட்டம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அவற்றில் சிறந்த அறிவுடனும் தீவிரமான உணர்ச்சியுடனும் தானே பங்கெடுத்தாள்”(14) என்று எங்கெல்ஸ் எழுதினார்.

தம்பதிகள் கிரைத்ஸ்னாக்கில் தங்கியிருந்த பிறகு பாரிசுக்குப் புறப்பட்டனர். மார்க்சும் அர்னோல்டு ரூகேயும் பாரிசிலிருந்து Deutsch-Französische Jahrbücher (“ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்தர சஞ்சிகையை”) வெளியிடுவதற்கு முடிவு செய்திருந்தனர்.

“ஆகவே-தத்துவஞானத்தின் பழைய பல்கலைக்கழகமான பாரிசுக்குப் போவோம்-absitomen! (இது கெட்ட சகுனமாக இல்லாதிருக்கட்டும்! –ப-ர் .)…”(15)

குறிப்புகள்:

(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 392. 239
(2)Ibid. 240.
(3)Ibid., p. 216.
(4)Ibid., p. 219.
(5)கார்ல் மார்க்ஸ், “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை” , முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1982, பக்கம் 8.
(6) எம். செரெப்ரியக்கோவ், கவிஞர் ஹேர்வெக்கும் மார்க்சும், லெனின்கிராத், 1948, பக்கம் 28, (ருஷ்ய மொழியில்).
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 394. 251.
(8) Ibid., p. 397.
(9) Reminiscences of Marx and Engels, p. 266.
(10) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 398.
(11)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.
(12) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 399.
(13) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 571.
(14) Marx, Engels, Werke, Bd. 19, Berlin, 1962, S. 291.
(15) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

முக்கொம்பு அணையை உடைத்த ஊழல் பெருச்சாளிகள் !

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !

டெல்டா மாவட்ட விவசாயத்தின் மீது இன்னொரு பேரிடியாக இறங்கியிருக்கிறது, முக்கொம்பு மேலணை உடைப்பு.

காவிரியின் கடைமடை பகுதி விவசாயிகள் மட்டுமல்ல, கல்லணைக்கு அருகிலுள்ள தலைமடைப் பகுதியான செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கும்கூடத் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் முக்கொம்பு மேலணை உடைந்திருப்பது, சம்பா சாகுபடியைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கைக்குக் கிடைத்தவர்களுக்கும் வாய்க்குக் கிடைக்காத ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

mukkombujpg
உடைந்து போன முக்கொம்பு அணையின் மதகுகளைப் பார்வையிடும் “தமிழகத்தின் எதிரி எடப்பாடி”

மேலணையின் 9 மதகுகள் உடைந்து போனதை இயற்கையானதாகக் காட்டித் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முயல்கிறது, தமிழக அரசு. அவ்வணை 182 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் மனிதர்கள் திடீரென நோய்வாய்ப்படுவது போல அணை திடீரென இடிந்துவிட்டது என்றும் அலட்சியமாகப் பதில் அளித்து, அணையை முறையாகப் பராமரிக்கத் தவறிய தமது குற்றங்களையெல்லாம் மூடிமறைக்கிறது அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டம்.

மேலணை உடைந்து போனதை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் அலட்சியம், இலஞ்சம், ஊழல் ஆகியவற்றோடு மட்டும் முடிச்சுப்போட்டுச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இந்த அணை உடைந்துபோகும்படி கைவிடப்பட்டிருக்கிறது என்பதற்கும், அதன் பின்னே மணல் மாஃபியாக்கள், டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் புகுந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன், அதற்கு மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் ஆதரவு ஆகியவை இருப்பதற்கு வலுவான சாட்சியங்கள் இருக்கின்றன.

காவிரி ஆறு, முக்கொம்பு பகுதியில்தான் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு இயற்கையாகவே காவிரியை விட ஏறத்தாழ ஆறு அடி தாழ்வாக இருக்கிறது.

எனவே, தண்ணீர் கொள்ளிடத்தில் பாய்ந்து கடலுக்குச் செல்வதைத் தடுத்து, அதனை காவிரியின் வழியாகப் பாசனத்திற்குத் திருப்பிவிடும் நோக்கத்தில்தான் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் காலனிய அதிகாரியால் 1836-இல் 55 மதகுகளைக் கொண்ட மேலணை முக்கொம்பில் கட்டப்பட்டது. முக்கொம்பில் மேலணையும், அதனைத் தொடர்ந்து அணைக்கரையில் கீழணையும் கட்டப்பட்ட பிறகுதான் டெல்டா பகுதியில் பாசனப் பரப்பு அதிகரித்தது என்பதோடு, நீர்ப்பாசன முறையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

தற்பொழுது மேலணையில் உடைந்து போயிருக்கும் ஒன்பது மதகுகளும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்தவை. இதனால் காவிரி ஆற்றின் வழியாகப் பாசனத்திற்குச் செல்ல வேண்டிய நீரின் பெரும்பகுதி இப்பொழுது கொள்ளிடத்தில் பாய்ந்து கடலுக்குச் சென்றுவிடும் அவலமான நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிய அணை கட்டி முடிக்கும் வரையிலும் இந்த அவல நிலை தொடரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் அதிகபட்சமாக இரண்டு இலட்சம் கன அடி நீர் வெளியேறியதென்றும், அதனை இந்தப் பழமையான கட்டுமானத்தால் தாக்குப்பிடிக்க முடியாத காரணத்தினால் உடைந்து போய்விட்டதென்றும் ஒரு கதையை உருவாக்கி உலவவிட்டிருக்கிறது, எடப்பாடி அரசு.

2005-ஆம் ஆண்டில் மூன்று இலட்சம் கன அடி நீர் வெளியேறியபோது அதனைத் தாக்குப் பிடித்த அணை, வெறும் 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நாளில் உடைந்தது ஏன்? கொள்ளிடத்து மதகுகள் மட்டுமே உடைந்தது எப்படி?

மேலணையைப் போலவே, கோதாவரியின் குறுக்கே ஆர்தர் காட்டனால் கட்டப்பட்ட பழமையான தவளேஸ்வரம் அணைக்கட்டு, காவிரியைவிட அதிக வெள்ளத்தை வெளியேற்றிக்கொண்டு இன்னமும் பலமாக இருந்துவரும்போது, மேலணை திடீரென உடைந்தது எப்படி? – இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எடப்பாடி கூறும் கதையில் பதில் இல்லை.

மேலணைக்கு அருகிலேயே அனுமதிக்கப்பட்ட மணல் கொள்ளையும் மேலணையைப் பராமரிப்பது என்ற பெயரில் நடந்த ஊழலும்தான் அவ்வணையின் மதகுகள்
உடைந்துபோனதற்கு முதன்மையான காரணம்.

காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தமிழக அரசின் நீர்வளத் துறை ஆலோசகராகவும் இருந்த மோகனகிருஷ்ணன் 2002 –ஆம் ஆண்டே மேலணையின் 16 நீர் வழிப் போக்கிகளும், கீழணையில் 14 நீர்வழிப் போக்கிகளும் பலவீனமாக உள்ளன எனக் குறிப்பிட்டு, இந்த அணைகளில் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என அறிக்கை அளித்திருக்கிறார்.

ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த அணைகளைப் பலப்படுத்தி முறையாகப் பாரமரிப்பதற்குப் பதிலாக, அவ்வணைகளை மேலும் பலவீனப்படுத்தும் சதிகள்தான் ஒன்றன் பின் ஒன்றாக நடந்திருக்கின்றன.

மேலணைக்கு அருகிலேயே அனுமதிக்கப்பட்ட மணல் கொள்ளையும் மேலணையைப் பராமரிப்பது என்ற பெயரில் நடந்த ஊழலும்தான் அவ்வணையின் மதகுகள் உடைந்து போனதற்கு முதன்மையான காரணம். கடந்த ஏழு ஆண்டுகளாக அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டத்தினர்தான் மணல் மாஃபியா கும்பலின் தளபதிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அணை உடைந்து போனதற்கு இந்த அரசைத்தான் முதன்மைக் குற்றவாளியாக அடையாளப்படுத்த வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக மட்டும் 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் காவிரியின் தலைமடை பகுதிக்குக்கூடத் தண்ணீர் வரவில்லை.

காவிரி உள்ளிட்ட ஆறு ஆறுகளைத் தூய்மைப்படுத்துவதற்காக 885 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கு எழுதியிருக்கிறது, தமிழக அரசு. அதன் பிறகும் டெல்டாவில் ஓடும் காவிரியின் கிளை நதிகள் நீர் ஓட வழியின்றிப் புதர் மண்டிக் கிடக்கின்றன.

அதே நேரத்தில் 100 டி.எம்.சி.க்கும் கூடுதலான காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை அனுமதித்துவிட்டு, அது குறித்து கொஞ்சங்கூடக் குற்ற உணர்வோ, அச்சமோ இல்லாமல் எடப்பாடி முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரும் திமிர்த்தனமாகப் பேசி வருகின்றனர்.

2012 –ஆம் ஆண்டில் தமிழகத்திலுள்ள அணைகளைப் பராமரிப்பதற்கு உலக வங்கியிடமிருந்து 745 கோடி ரூபாயை பெற்ற அ.தி.மு.க. அரசு, 2018 -ஆம் ஆண்டுக்குள் இப்பராமரிப்புப் பணிகளை முடித்துவிடுவதாக உத்தரவாதம் அளித்திருந்தது. இது போக மேலணையைப் பராமரிப்பதற்கு என 2015 –ஆம் ஆண்டில் 10 கோடியும், 2016 –ஆம் ஆண்டில் மூன்று கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகும் மேலணை உடைந்து போயுள்ளது என்றால், இத்துணை கோடி ரூபாயும் எங்கே மாயமானது?

அ.தி.மு.க என்பது வெறும் கள்வர் கூட்டமல்ல. அது நெஞ்சில் சிறிதளவும் ஈரமோ இரக்கமோ இல்லாத கொடியதொரு கிரிமினல் கூட்டம். இப்படி ஒரு கூட்டத்திடம் தமிழகம் சிக்கிக்கொண்டதன் விளைவுகளைத்தான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

4,000 கோடி ரூபாய் பெறுமான நெடுஞ்சாலைத் துறை ஊழலில் தொடர்புடைய எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வர்; வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களை குவித்த வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் ஓ.பி.எஸ்., துணை முதல்வர்; குட்கா வழக்கில் தொடர்புடைய விஜய பாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர்; அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு வழக்கில் தொடர்புடைய பழனியப்பன் உயர்கல்வித் துறை அமைச்சர்; அனைத்திற்கும் மேலாக, நிர்மலா தேவி விவகாரத்தின் மையப் புள்ளியென அம்பலப்பட்டுப் போன பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டின் கவர்னர்.

இவர்களுடைய வழிகாட்டிகளாகவும் கூட்டாளிகளாகவும் திகழும் அதிகார வர்க்கத்தினர் – மோடியின் ஆசியோடு அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கிரிமினல் கும்பல் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக எத்தகைய தீமையையும் செய்யத் தயங்காது.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காகவும் மணல் கொள்ளையைத் தொடர்வதற்காகவும் டெல்டாவைச் சிறுகச்சிறுகப் பாலைவனமாக்கி வரும் இக்கும்பல், தற்போது மேலணை உடைந்திருப்பதை, தங்களுடைய தீய உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாகவே கருதும்.

புதிய ஜனநாயகம்,  செப்டம்பர் 2018

ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த விவசாயிகள் ?

ம் ஊர் வங்கியில் சென்று ‘ஐயா.. நான் விவசாயம் செய்ய வேண்டும். 2 லட்சம் கடன் வேண்டும்’ என்று கேட்டுப்பாருங்கள். என்னவோ, அந்த மேலாளரின் சம்பளத்தைக் கேட்பதைப் போல எரிந்து விழுவார். விவசாயக் கடன் வாங்குவது என்பது நம் ஊர் வங்கிகளில் ஒரு கொடுங்கனவு. பல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படாது.

ஆனால், நம்புங்கள். கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும், இந்தியா முழுவதும் ஒரு ‘விவசாயி’க்கு 95 கோடி ரூபாய் வீதம் 58,561 கோடி ரூபாயை கடனாக வழங்கியிருக்கின்றன இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். இந்த மாபெரும் தொகையை 615 விவசாயிகள் விவசாயக் கடனாக பெற்றிருக்கிறார்கள். ’திவயர்’ இணையதளம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற தகவல்கள் இதை வெளிப்படுத்துகின்றன.

95 கோடி ரூபாய் கடன் வாங்குகிற ஒருவர் விவசாயியா என்பது அடிப்படையான கேள்வி. அவ்வளவு தகுதியுள்ள ஒருவருக்கு எதற்கு ‘விவசாயக் கடன்’ பிரிவில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. பொதுவாக வங்கிகளில் இதர வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை விட விவசாயக் கடனுக்கு வட்டி குறைவு. வெறும் 4 சதவிகிதம்தான். ஏழை, சிறுகுறு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இப்படி வழங்கப்படுகிறது.

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்றால், வேளாண் வணிக நிறுவனங்களே பெரும்பகுதி விவசாயக் கடன்களை பெறுகின்றன. மேலே சொன்ன ’ஒரு நபருக்கு 95 கோடி ரூபாய்’ என்ற கடன் கூட இத்தகைய வேளாண் நிறுவனங்கள் பெற்றவையே. விவசாயக் கடனின் பெயரால், விவசாய விளைபொருள் சந்தையில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் மொத்த கடன் தொகையையும் சுருட்டிக்கொள்கின்றன. அம்பானியின் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் கூட வேளாண் வணிக நிறுவனப் பிரிவில்தான் வருகிறது. இவர்கள் விவசாயக் கடன் பிரிவில் கடன் பெற்று, தங்கள் நிறுவனங்களின் உள் கட்டமைப்பு வசதிகள், குளிர்பதன கிடங்குகளை நிறுவிக்கொள்கின்றனர். சாதாரண விவசாயிகளோ, ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் கடன் பெறுவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.

வங்கிகள் கடன் வழங்குவதற்கான கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. இதன்படி விவசாயம், சிறுகுறு தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, கல்வி, கட்டுமானம் என பல்வேறு பிரிவுகளுக்கும் என்னென்ன விகிதத்தில் கடன் வழங்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. இந்த முன்னுரிமையின்படி, வங்கிகள், தங்கள் மொத்த கடன் வழங்கும் மதிப்பில் 18 சதவிகிதத்தை விவசாயக் கடனுக்கு ஒதுக்க வேண்டும் என்பது கொள்கை. இதன்படி 18 சதவிகிதத்தை ஒதுக்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதன் பயனாளிகள் யார் என்பதுதான் பிரச்னை.

தி வயர் இணையதளம் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் திரட்டி வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

♦♦♦

டந்த 2016-ஆம் ஆண்டு அரசு வங்கிகள் (ஆள்பவர்களால் அதிகாரம் செலுத்தக்கூடிய) விவசாய கடன் என்கிற பெயரில் கிட்டத்தட்ட ரூ. 59 ஆயிரம் கோடியை 615 வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கின்றன. ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட தகவலுக்கு ரிசர்வ் வங்கி இந்த விவரங்களை அளித்திருக்கிறது.

மற்ற கடன்களைக்காட்டிலும் விவசாயக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில், குறைந்த விதிகளின் (ஏட்டளவில் குறைந்த விதிகள்) அடிப்படையில் சிறு விவசாயிகளும் பயன்படும்படி அளிக்கப்படுவதாக அரசு சொல்கிறது. தற்போது 4% வட்டியில் விவசாயக் கடன்கள் அளிக்கப்படுகின்றன.

விவசாய சங்க பிரதிநிதியான கிரண் குமார் வீசா , “நிறைய பெரிய நிறுவனங்கள் விவசாயம் தொடர்பான தொழிலைச் செய்கின்றன. அவர்களும் விவசாய கடன்கள் பிரிவில்தான் வங்கிக் கடன்களைப் பெறுகிறார்கள்.  ‘ரிலையன்ஸ் ஃபிரஷ்’ போன்ற நிறுவனங்களும் விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்யும் நிறுவனங்களின் பிரிவிலேயே வருகின்றன. அவர்கள் விவசாய பொருட்களை வாங்குவதையும் விற்பதையும் செய்கிறார்கள். அவர்கள் வங்கி கடன்களை விவசாய கடன்கள் பிரிவின் கீழ் வாங்கிறார்கள். குடோன்கள் கட்டுவதற்கும் இன்னபிற இதுதொடர்பான பணிகளுக்கும் அந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள்” என்கிறார்.

சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ரிசர்வ் வங்கி அந்தத் துறைசார்ந்தவர்களுக்கு கடன் தருவதில் முன்னுரிமை தரவேண்டுமென வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. வேளாண்மை, சிறு-குறு தொழில்கள், ஏற்றுமதி, கல்வி, வீட்டுவசதி, சமூக கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான துறைகளுக்கு வங்கிக் கடனில் சலுகைகள் தரப்படவேண்டும். இவற்றை முன்னுரிமை துறை கடன்கள் (priority sector lending-PSL)என்பர்.

முன்னுரிமை துறை கடன் கொள்கைபடி, வங்கிகள் அளிக்கும் மொத்த கடனில் 18%  சிறிய, வறிய நிலையில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் துறைக்கு வழங்க வேண்டும். கிரண்குமார் வீசா சொல்கிறார்,  “இந்தக் கடனில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் போகிறது. இதன் விளைவாக விவசாயிகள் கடன்களை பெற முடிவதில்லை”.

மேலும் அவர் தொடர்ந்தார், “உண்மையில், பெரிய நிறுவனங்கள் முன்னுரிமை கடன் கொள்கைப்படி கடன் பெறுவது மிகவும் எளிது. மற்ற கடன்களைக் காட்டிலும் விவசாய கடனுக்கு வட்டியும் குறைவு. பெரிய அளவில் கடன் கொடுப்பதால் தங்களுடைய செல்வமும் அப்படியே இருக்கும் என வங்கிகள் நினைக்கின்றன”.

த வயர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அனைத்து கிளைகளிலும் வழங்கப்பட்ட கடன் விவரங்களை கேட்ட நிலையில், அவ் வங்கியின் மும்பை மண்டலம் மட்டுமே விவரங்களை அளித்துள்ளது. மும்பை நகர கிளை, ரூ. 29.95 கோடியை மூன்று வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கிறது.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் ரூ. 10 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. அதே வங்கி கிளை, ரூ. 27 கோடிக்கும் அதிகமான கடனை ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு அளித்திருக்கிறது. இந்தக் கடனைப் பெற்ற பயனாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை வங்கி தெரிவிக்கவில்லை.

வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா, விவசாயிகள் என்கிற பெயரை உச்சரித்து வேளாண் கடன்களை பெரிய நிறுவனங்கள் குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார். “விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறோம் என்று சொல்வதன் பொய்முகம் இதுதான். ரூ. 100 கோடி கடன் கொடுக்கக்கூடிய வகையில் இவர்களெல்லாம் என்ன விவசாயம் செய்கிறார்கள்? எல்லாம் பாசாங்குத்தனமானவை. தொழில்சாலைகளுக்கெல்லாம், விவசாயின் பெயரால் ஏன் கடன் தரப்படுகிறது?” என்கிற வினாக்களையும் அவர் எழுப்புகிறார்.

வங்கிகள் தங்களுடைய வேலையை எளிதாக்கிக்கொள்ள, பெரிய கடன்களை வேளாண் கடன்கள் என்ற பெயரில் வழங்குவதாகச் சொல்கிறார் சர்மா. “ரூ. 100 கோடியை எளிதாக ஒரு நிறுவனத்துக்கு தந்துவிட முடியும். அதுவே, விவசாயிகளுக்கு தருவதென்றால் குறைந்தபட்சம் 200 பேருக்கு தர வேண்டும். பெரும் கடன்கள் மூலம் தங்களுடைய பணம் ஒரே இடத்தில் இருக்கும் அதே சமயம் 18% ஒதுக்கீட்டை நிறைவேற்றியது போலவும் இருக்கும் என்ற காரணத்தாலேயே இப்படி செய்கின்றன” என்கிறார் அவர்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 8.5 லட்சம் கோடியை வேளாண் கடனாக வழங்கியது. இது 2018-19-ஆம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. த வயர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் பெற்ற தகவலில், இதில் பெருமளவு பெரிய கடனாக அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  வேளாண் அறிஞர்கள் இந்த நிதி வேளாண் துறை நிறுவனங்களுக்கும் தொழிற்துறைகளுக்கும் போவதாக சொல்கிறார்கள்.

விவசாய கடன், அடிப்படை விவசாய உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கு என வேளாண் கடன்கள் மூன்று கிளை பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் அமைத்தல் உள்கட்டமைப்பு பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகத்தான் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் கிளினிக்குகள் மற்றும் வேளாண் வர்த்தக மையங்கள் விவசாயம் தொடர்பான செயல்பாடுகள் பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகவும் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்படுகின்றன.

ரிசர்வ் வங்கி அளித்த டேட்டாவின் படி பெரிய அளவிலான கடன்கள், வேளாண் கடன்கள் என்கிற பெயரில் 2016-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்தே வழங்கப்பட்டிருக்கின்றன. 2015-ஆம் ஆண்டில் 604 வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 52,143 கோடியை கடனாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 86.33 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு ரூ. 60,156 கோடி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 91.28 கோடி. இதே கடன் வழங்கும் முறை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.

2013-ஆம் ஆண்டு, ரூ. 56 ஆயிரம் கோடி கடனை 665 வங்கிக் கணக்குகள் பெற்றுள்ளன. சராசரியாக ரூ. 84.30 கோடி. 2012-ஆம் ஆண்டில் ரூ. 55, 504 கோடி 698 வங்கிக்கணக்குகள், சராசரியாக ஒவ்வொன்றும் ரூ. 79.51 கோடியை பெற்றுள்ளன.

“ஒரு விவசாயி போதாத நேரம் காரணமாக விவசாயம் பொய்த்துபோய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும்போது, வங்கி அதிகாரிகளால் வேட்டையாடப்படுகிறார். விவசாயிகள் என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை அரசு அளிக்கிறது என்பதை ஒரு சாதாராண விவசாயியால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை”  என்கிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கேதார் சிரோகி என்ற விவசாயி.

உத்தரபிரதேசம் இட்டாவாவில் வசிக்கும் சஞ்சீவ் என்ற விவசாயி, நான்கு ஏக்கரில் விவசாயம் செய்கிறார். “வாங்கும் விவசாய கடனில் பெரும்பகுதி தரகருக்கு தரவேண்டியிருக்கிறது. பல அழுத்தங்களின் காரணமாகத்தான் விவசாயி கடன் பெறுகிறார், அதற்கும் வங்கிக்கு நடையாய் நடக்க வேண்டும், வங்கி அதிகாரிகளின் பேச்சுக்களை சகித்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்க இந்த 615 வங்கி கணக்குக்கு சொந்தக்காரர்கள் யார், அவர்கள் ஏன் வேளாண் கடன் என்கிற பெயரில் கடன் பெறுகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது” என்கிறார் அவர்.

வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா சொல்வது போல் விவசாயிக்கு தனியாகவும் வேளாண் தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கு தனியாகவும் கடன்கள் அளிக்கப்பட வேண்டும். ‘வேளாண்மை’ என்ற முத்திரையுடன் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படக்கூடாது.  இதை நிதியமைச்சரிடன் நேரடியாக சொன்னபோதும் இதுவரை ஒரு எதிர்வினையும் வரவில்லை என்கிறார் சர்மா.

மூலம்: Exclusive: Agricultural Loans Worth Rs 59,000 Crore Went to 615 Accounts in One Year

தமிழாக்கம் :
– வினவு செய்திப்பிரிவு.