Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 441

நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

த்திரப்பிரதேச மாநில பொது சுகாதாரத்துறையில் பாரிய அளவிலான சீர்த்திருத்தங்கள் செய்யவும் தணிக்கை ஆய்வுகள் நடத்துவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதற்கெதிராக கடந்த சில வாரங்களாகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு உ.பி அரசு முயன்று வருகிறது.

மாநில பொது சுகாதார செலவீனங்கள் மீது தணிக்கை ஆய்வுகளை மேற்கொள்ளுதல், நோயாளிகளுக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் விலையிலா உணவு வழங்குதல், விலையிலா மருத்துவ ஊர்தியை உத்தரவாதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அலகாபாத் நீதிமன்றம் மார்ச் மாதம் அளித்திருந்த இந்த தீர்ப்பினை எதிர்த்து தான் உ.பி அரசு மூன்று முறை உச்சநீதிமன்ற கதவைத் தட்டியிருக்கிறது

அரசு மருத்துவ சேவைகளையே அரசு ஊழியர்கள் பயன்படுத்த வேண்டுமென்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கான செலவீனங்களை அரசு ஏற்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் முதல் விசாரணையிலேயே இவ்வழக்கிலிருந்து விலகி விட்டார். அதன்பிறகு உ.பி அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீர்திருத்தங்களுக்காக வழக்குத் தொடுத்தவர்களை உச்சநீதிமன்றம் இதுவரை அழைக்காத நிலையில் அலகாபாத் நீதிமன்ற உத்தரவை நிறுத்த ஆதித்யநாத் அரசு விரும்புகிறது.

தவறான வாக்குமூலங்களை தந்ததற்காக மாநில மருத்துவக்கல்வி முதன்மை செயலரான இரஜினீஷ் துபே மற்றும் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் பதியவில்லை என்று காரணம் கேட்டு அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீசு அனுப்பியது தான் ஆதித்யநாத் அரசின் பீதிக்கு முதன்மையான காரணம்.

கொள்கை மற்றும் நிதி முறைக்கேட்டிற்காக மூத்த அரசு ஊழியர்களை நீதிமன்றத்திற்கு இழுப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று. உயர்நீதிமன்றம் வழங்கிய 21 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் தவறான வாக்குமூலங்கள் அளித்தது தான் உ.பி அரசின் இந்த நாட்டாமைத்தனத்திற்கு காரணம்

தன்னுடைய மூத்த அரசு அதிகாரிகளில் ஒருவரான இரஜினீஷ் துபேக்கு நோட்டீசு அனுப்பியதன் மூலம் உயர்நீதிமன்றம் தவறிழைத்து விட்டது என்று கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்த முயற்சிக்கிறது ஆதித்யநாத் அரசு. கடந்த பத்தாண்டுகளுக்கான தணிக்கை ஆய்வுகளை சுகாதாரத்துறையில் நடத்தவியலாது என்றும் அது கூறியிருக்கிறது. வழக்கு தொடுத்தவரின் வேண்டுகோளுக்கும் கூடுதலான சீர்திருத்தங்களுக்கு உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் உ.பி அரசு கூறியிருக்கிறது.

ஆனால் “இந்த ஆணையில் பொருத்தமில்லாத எதையும் அரசு காணும் பட்சத்தில் அதற்கான விவரங்களுக்கோ அல்லது மாற்றங்களுக்கோ நீதிமன்றத்தை அணுகலாம்” என்றும் உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் நீதிமன்ற உத்தரவை நிறுத்துவதிலேயே ஆதித்யநாத் அரசு குறியாக இருக்கிறது.

கோரக்பூரின் பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் இல்லாததால் குழந்தைகள் மரணத்த அவலத்திற்கு உ.பியின் பொது சுகாதாரத்துறையின் மோசமான செயல்பாடுகளே காரணம்.

சினேஹ் லதா சிங்கின் வழக்கு

உ.பி அரசு தடுக்க நினைக்கும் அந்த தீர்ப்பானது 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சினேஹ் லதா சிங் என்ற ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்டது. லதாவிற்கு 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-வது குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக சிறுநீர் போகும் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை உள்ளிட்ட குறைந்தது 10 மருத்துவமனைகளுக்காவது சிகிச்சைக்காக அலைந்து திரிந்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

அவரது சிகிச்சைக்காக 250 ரூபாய் போன்ற சிறுதொகையைக் கூட அவரது குடும்பத்தினர் கடன் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த துன்பத்திலும் அரசு அதிகாரிகள் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.

கடைசியாக லக்னோவின் பிரபலமான கிங் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரியில்(KGMU) அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆயினும் அவருக்கு தேவைப்படும் ஒரு அறுவை சிகிசைக்கு படுக்கை வசதி இல்லை என்று கைவிரித்து விட்டனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு 2008-பிப்ரவரி மாதத்தில் தான் அவருக்கு படுக்கை வசதி கிடைத்தது. மேலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகே அவரது உடலிலிருந்து செயற்கை சிறுநீர் வடிக்கும் குழாய் நீக்கப்பட்டது. மகப்பேறுக்குப் பிறகு சிறுநீர் போக்கு பிரச்சினை ஏற்பட்டு 12 மாதங்களாக அலைந்து திரியும் நிலைக்கு லதா தள்ளப்பட்டார்.

அதன் பிறகு நட்ட ஈடு 50,000 ரூபாய் மற்றும் இழப்பீடு 5 இலட்சம் ரூபாய் கேட்டு உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை லதா தொடுத்தார். ஆனால் அதில் பெரும்பாலும் மாநில சுகாதார அமைப்பிற்கான சீர்திருத்தங்களை தான் கோரியிருந்தார்.

“மகப்பேறு மருத்துவத்திற்காக வரும் ஏழைப்பெண்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் அனைத்தும் அவை எத்தகையதாக இருந்தாலும் விலையில்லாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்பது அவரது 8 கோரிக்கைகளில் ஒன்று. மேலும் கருவுற்ற போதும், பேறுகாலத்தின் போதும் பேறுகாலத்திற்குப் பிறகும் தேசிய ஊரக சுகாதார சேவை கிடைப்பதை கறாராக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதன்மை சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்திலும் உரிய சிகிச்சைக்கான பதிவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். குறைகளை சரி செய்ய ஒரு குழுவை உருவாக்கி பேறுகாலங்களில் நடந்த மரணங்கள் குறித்து தணிக்கை ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று கடைசியாக லதா கேட்டிருந்தார்.

உ.பி சுகாதார மேம்பாட்டிற்காக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள்

இலதாவின் கோரிக்கைகளை முன் வைத்து அலகாபாத் நீதிமன்றத்தின் சுதிர் அகர்வால் மற்றும் அஜித்குமார் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சிறப்புமிக்க அந்த 96 பக்க தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பில் உ.பி அரசுக்கு 21 வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளின் உள்ள காலி இடங்களை நிரப்புவது முதல் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்துதல் வரைக்குமான பல்வேறு தீர்ப்புகள் அந்த பக்கங்களில் நிறைந்திருந்தன.

அலகாபாத் உயர்நீதிமன்றம்

“வசதிவாய்ப்பு மிக்க உயர் அதிகாரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைக்ககூடிய அதே மருத்துவ வசதி ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் மேலும் ஏழ்மை, படிப்பறிவின்மை மற்றும் ஏனையத் தடைகளால் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் ஏழை மக்கள் அல்லலுற கூடாது என்றும் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் அரசுக்கு வழிகாட்டியிருந்தது.

அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்புகளில் சில,

  1. தவறான வாக்குமூலங்களை அளித்ததற்காக மருத்துவக்கல்வித் தலைமை அதிகாரிக்கும் மோதிலால் நேரு மருத்துவக்கல்லூரி தலைவருக்கும் நோட்டீசு அனுப்ப வேண்டும்.
  2. அனைத்து அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும் அவர்களுக்கென்று தனிச்சிறப்பான வி.ஐ.பி சிகிச்சை கிடையாது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கான சிகிச்சை செலவீனங்கள் அரசு ஏற்றுக் கொள்ள கூடாது.
  3. சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும் நிதியாதாரம் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தால் துறை சார்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஏனெனில் “பயன்படுத்தப்பாடாத நிதி என்பது தேவைப்படும் சிகிச்சை மறுக்கப்பட்டதாகவே ஆகும்”.
  4. மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) மூலம் தணிக்கை ஆய்வுகள் இரண்டு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நிதியாதாரங்களை அந்த தணிக்கைகள் ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில், குற்றவியல் அல்லது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  5. மாவட்ட மருத்துவமனைகள், சமூக நல மையங்கள் மற்றும் முதன்மை சுகாதார மையங்கள் அனைத்திலும் ஒராண்டிற்குள் தணிக்கை ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
  6. அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் தீர்ப்பு வந்த ஏழு மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும்.
  7. கர்ப்பிணிப் பெண்களுக்கு சேவை செய்ய பெண் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.
  8. அரசு மருத்துவர்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளையும் ஊடுகதிரியல் (radiodiagnosis) மற்றும் நோயியல் (pathology) சோதனைகளுக்கு தனியார் மருத்துவமனைகளை பரிந்துரைக்கும் அவர்களது போக்கையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
  9. கருக்கலைப்புகளை மருத்துவ அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட கூடாது. அங்கு நடக்கும் தவறுகளுக்கு மருத்துவ அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
  10. மருந்துகள், கருவிகள் மற்றும் சிகிச்சை அரங்கங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
  11. மருத்துவ ஊர்திகள் எளிதில் செல்லுமளவிற்கு போக்குவரத்து வசதிகள் மேம்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற வண்டி நிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட வேண்டும். குடிமக்கள் புதிய வண்டிகளை வாங்கும் போது குடியிருப்புகளில் வண்டி நிறுத்த அவர்களுக்கு இடம் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
  12. நோயாளிகளுக்கும் அவர்களை பரமரிப்பவர்களுக்கும் விலையில்லா உணவு வழங்க வேண்டும்.
  13. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள புல்வெளிகளை திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும் இரவு பத்து மணிக்கு மேல் சத்தமான எந்த கொண்டாட்டமும் கூடாது.
  14. இந்த அனைத்து நடவடிக்ககைகளையும் உ.பி யின் தலைமைச்செயலாளர் கண்காணித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இப்பட இருந்தாலும் அவை வழிகாட்டுதல்கள் மட்டுமே. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் வாழ்வுரிமைகளுக்கும் எதிரானதாக இருக்கும் போது ஓடோடி வந்து அதை நிறைவேற்றும் இந்த அரசுகள் ஏழைகளுக்கு சாதகமாக ஒன்னுரெண்டு தீர்ப்புகள் வரும் போது காகிதத்திற்கான மதிப்பினை கூட அவற்றிற்கு கொடுப்பதில்லை என்பது  இந்த தீர்ப்பின் மூலம் தெரிகிறது.

-வினவுச் செய்திப் பிரிவு

நன்றி: thewire

ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !

2810 கோடியைத் திருட 63.91 கோடி இலஞ்சம் !

கோச்சார் குடும்பத்தாருக்கும் வீடியோகான் நிறுவன முதலாளி வேணுகோபாலுக்கும் சுமார் இருபதாண்டு காலத் தொழில் தொடர்பு உள்ளது. கிரெடென்சியல் பைனான்ஸ் எனும் நிறுவனத்தை சாந்தா கோச்சார் உள்ளிட்டு அவரது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து 1995 ஆண்டு தொடங்கினர். இந்நிதி நிறுவனத்தில் 2001 ஆண்டு ஒரு பங்குதாரராக வேணுகோபால் இணைகிறார். இதே காலகட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் உயர் பொறுப்புகளில் மளமளவென உயர்ந்து வருகிறார் சாந்தா கோச்சார்.

அதே சமயத்தில், 2008 ஆண்டு டிசம்பர் மாதம் வேணுகோபால் தூத், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருடன் கூட்டுச் சேர்ந்து “நு பவர்” எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இருவரும் அந்நிறுவனத்தில் சரிபாதியாக முதலீடு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

அந்நிறுவனத்தை ஆரம்பித்த சில மாதங்களிலேயே தன் வசமிருந்த 25,000 பங்குகளை தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்து விடும் வேணுகோபால் தூத், அந்நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறார். இது நடந்த அடுத்த சில மாதங்களிலேயே (2010 மார்ச்) தன்னுடைய துணை நிறுவனமான சுப்ரீம் எனர்ஜி என்கிற உப்புமா கம்பெனியின் வழியாக சுமார் 64 கோடியை நு பவருக்கு வழங்குகிறது வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனம்.

இந்தக் கடனுக்கு ஈடாக நு பவர் நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுக் கொள்ளும் சுப்ரீம் எனர்ஜி, பின்னர் அதை வேணுகோபாலின் பினாமியான மகேஷ் சந்திர புங்காலியா என்பவருக்குக் கைமாற்றி விடுகிறது. தன்னிடம் கிடைத்த நு பவரின் பங்குகளை வெறும் ஒன்பது இலட்சத்திற்கு பினாக்கில் டிரஸ்ட் என்கிற உப்புமா கம்பெனிக்கு விற்கிறார் புங்காலியா. இந்தப் பினாக்கில் டிரஸ்டின் அறங்காவலராக உள்ளவர் தீபக் கோச்சார்.

புரியும் விதமாகச் சொன்னால், தீபக் கோச்சாருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை சரிபாதிக் கூட்டு முதலீட்டுடன் தொடங்குவது போல் போக்கு காட்டி விட்டு, பின்னர் தனது பங்கு முதலீட்டுத் தொகையைக் கள்ளத்தனமாகச் சுற்றி வளைத்து தீபக் கோச்சாருக்கே கையளித்துள்ளார் வேணுகோபால் தூத். அதாவது நு பவர் நிறுவனத்தில் தான் முதலீடு செய்த 64 கோடி மதிப்பிற்கான பங்குகளை வெறும் 9 இலட்சத்திற்கு தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார் வேணுகோபால்.

ஒரு பக்கம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயல் அலுவலரான சாந்தா கோச்சாரின் கணவருக்கு இலஞ்சப் பணத்தைச் சுற்றுப்பாதையில் மாற்றிக் கொண்டிருந்த வீடியோகான் நிறுவனம், இன்னொரு பக்கம் வங்கிகளிடம் கடன் வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 20 வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து வீடியோகான் நிறுவனம் ரூ.40,000 கோடியை கடனாக வாங்குகிறது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மட்டும் 3,250 கோடியைக் கடனாக வழங்கியிருக்கிறது. இவ்வாறு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வேணுகோபாலுக்கு வழங்கிய கடனில் 86 சதவீதம் – அதாவது 2,810 கோடி ரூபாயை வாராக்கடனாக அறிவித்துள்ளது.

எலி அம்மணமாகச் சுற்றி வந்ததன் காரணம் இப்பொழுது புரிகிறதா?

-புதிய ஜனநாயகம் மே 2018

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !

பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போட்டுவிட்டுத் தரகு முதலாளிகள் நாட்டை விட்டு நைசாக வெளியேறிவிடும்போதும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அலசும்போதும், பொருளாதார நிபுணர்கள் என்ற பெயரில் உலாவரும் தனியார்மயத்தின் கைத்தடிகள் அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல உபதேசிக்கும் ஒரே ஆலோசனை, பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்பதுதான்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் முகத்திரையை மட்டுமின்றி, வங்கிகளைத் தனியார்மயமாக்க முயன்று வரும் மோடி அரசின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது.

மோடி அரசு நிதி ஆயோக்கை அமைத்த பிறகு, இத்தனியார்மயக் கைக்கூலி நிபுணர்களின் கருத்தே அரசின் கருத்தாகவும் மாறிவிட்டது.

‘‘வாராக் கடன் பிரச்சினையால் பொதுத்துறை வங்கிகள் நட்டமடைந்திருப்பதாலும் அவற்றின் பங்கு மதிப்பு சரிந்திருப்பதாலும், அவற்றை உடனடியாகத் தனியார் முதலாளிகள் வாங்க விரும்பமாட்டார்கள். அதனால், அரசு பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து, அவற்றைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திய பிறகுதான் விற்க முடியும்” என்கிறார், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தெபராய்.

மோடி அரசும் 2.11 இலட்சம் கோடி ரூபாயைப் பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்யப் போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டது.

உங்கள் வீட்டில் புகுந்து திருடியவனை நீங்கள் போலீசில் பிடித்துக் கொடுப்பீர்களா, அல்லது திருடியதற்கு மேலும் சன்மானம் கொடுத்து அவனை வழியனுப்பி வைப்பீர்களா? இந்த மறுமுதலீடு என்பது திருடனுக்குச் சன்மானம் கொடுப்பதற்குச் சமமானது.

இதுவொருபுறமிருக்கட்டும். ‘‘வாராக் கடன் பிரச்சினையைக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போலாகாதா” என எதிர்க் கேள்வி கேட்டால், பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க வேண்டிய அவசியத்திற்குத் தனியார்மய ஆதரவாளர்கள் அடுக்கும்

காரணங்கள் இவைதான்:

‘‘பொதுத்துறை வங்கிகளின் உயர் நிர்வாகிகளுள் பெரும்பாலோர் திறன் வாய்ந்த தொழில்முறை நிபுணர்கள் கிடையாது. அவர்களுள் பெரும்பாலோர் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து, நிர்வாகப் பதவிகளைப் பிடிக்கிறார்கள்.

இதனால் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் யாருக்கெல்லாம் கடன் கொடு எனக் கைகாட்டுகிறார்களோ, அவர்களுக்குக் கடன் கொடுத்து பொதுத்துறை வங்கிகளை நெருக்கடிக்குத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால், தனியார் வங்கிகள் தகுதியும் திறமையும் கொண்ட தொழில்முறை பொருளாதார நிபுணர்களால் நிர்வகிக்கப்படுவதால், அவ்வங்கிகளில் கண்டவனெல்லாம் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட முடியாது.”

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்துத் தனியார்மய விசுவாசிகள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும், தனியார்மயத்தை அவர்கள் சர்வரோக நிவாரணியாகக் காட்டுவதற்குக் கூறும் காரணங்கள் ‘‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும்” என்ற நகைச்சுவையை விஞ்சக்கூடியவை.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என நாம் கூறி வருகிறோமே, அதற்கொரு சான்றாக அம்பலமாகியிருக்கிறது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த விவகாரம்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனியார் வங்கி என்றபோதும், அதில் புழங்கும் பணம் பொதுமக்களின் பணம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் இந்தப் பிரச்சினயை நாம் அணுக வேண்டும்.

எப்படிப்பட்டவர்களை வங்கி நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனத் தனியார்மய ஜால்ராக்கள் சொல்லி வருகிறார்களோ, அந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்டவர்தான் ஐ.சி.ஐ.சி.ஐ. தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ.) சாந்தா கோச்சார்.

அவர் சி.ஏ. படிப்பும், நிர்வாக மேலாண்மை படிப்பும் முடித்தவர் என்றும், தனது உழைப்பு மற்றும் திறமையால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் செயல் தலைவராக உயர்ந்தவர் என்றும் கூறுகிறது, அவரைப் பற்றிய விக்கி பீடியா பக்கம்.

அதாவது, அவர் அரசியல் தலைமையைக் காக்காய் பிடித்து, வங்கியின் தலைமைப் பதவிக்கு வரவில்லை. எந்த அரசியல்வாதியும் சொல்லி வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடனை வழங்கவில்லை. அது அவரால் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு.

பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகிக் கொடுத்த கடன்கள்தான் வாராக் கடனாக நிற்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். ஆனால், அரசியல் நெருக்கடியோ, வேறு எந்த சிபாரிசோ இல்லாமல் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனும் வாராக் கடனாகி நிற்கிறது.

இதற்குக் காரணம் சாந்தா கோச்சார் குடும்பத்தின் சொந்த ஆதாயம் என்பதும் அம்பலமாகிவிட்டது. கையூட்டு வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கும் சாந்தா கோச்சார் குடும்பத்தினர் அடைந்திருக்கும் ஆதாயத்திற்கும் அடிப்படையில் எந்தவொரு வேறுபாடும் கிடையாது.

அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் கொடுக்கப்படும் கடன்களைவிட, சொந்த ஆதாயத்தின் பொருட்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கும் சாந்தா கோச்சாரின் நிர்வாக முடிவுதான் மிகக் கேடானது.

‘‘நிதி அமைச்சகத்திலிருந்து சில சலுகைகளைப் பெற்றுத் தந்ததற்காகக் கையூட்டுப் பெற்றார்” என்பது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு.

சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டு அதைவிட மோசமானது. வங்கியில் உள்ள பொதுமக்களின் பணத்தை வீடியோகான் முதலாளி கொள்ளையடிக்க விட்டுவிட்டு, அதற்குச் சன்மானம் வாங்கியிருக்கிறார்கள்.

அலைக்கற்றை வழக்கில் 200 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக ஆ.ராசாவையும் கனிமொழியையும் கைது செய்தார்கள். வழக்கு தோற்றதும் மேல்முறையீடும் செய்கிறார்கள். அரசியல் நிர்பந்தம் காரணமாக நிரவ் மோடிக்கு வங்கிப் பணத்தை வாரிக் கொடுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்கும் விசாரணையும் நடந்து வருகிறது.

ஆனால், தனது குடும்பத்தின் சொந்த ஆதாயத்திற்காகக் கடன் கொடுத்த சாந்தா கோச்சார் மீது ரிசர்வ் வங்கியோ, நிதி அமைச்சகமோ, புலன் விசாரணை அமைப்புகளோ எந்தவொரு விசாரணையும் இதுவரை நடத்தவில்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிர்வாகமோ சாந்தா கோச்சாருக்கு அப்பழுக்கற்றவர் எனச் சான்றிதழ் வழங்கிவிட்டது. அவருக்குப் பணி நீட்டிப்பு கிடைக்காது என்றொரு செய்தி வதந்தியாக உலா வருகிறது. சொந்த ஆதாயத்திற்காக வங்கிப் பணத்தை எடுத்துச் சூறைவிட்டவருக்குக் கிடைக்கவிருக்கும் ‘‘தண்டனை” மரியாதைக்குரிய பணி ஓய்வு.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்தத் தயங்காத ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் குடும்பம் நடத்திய மோசடி குறித்து மூச்சுகூட விடவில்லை.

திருடனைத் தேள் கொட்டினால், வாயைத் திறந்து கத்தவா முடியும்?

வங்கிகள் பொதுத்துறையாக இருக்கும் வரைதான் அவற்றின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்க வாய்ப்புண்டு. அவற்றைத் தனியாரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டால் கேள்விக்கிடமற்ற கொள்ளைதான் நடக்கும் என்பதை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் வீடியோகான் கூட்டணி நடத்தியிருக்கும் கொள்ளை எடுத்துக்காட்டிவிட்டது.

-ஆர்.ஆர்.டி.

-புதிய ஜனநாயகம் மே 2018

கரூர் : மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தின் நீட் தேர்வு சதி ! புமாஇமு ஆர்ப்பாட்டம் !

0

நீட் தேர்வு : மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கூட்டுச்சதி !
நீட் தேர்வை ரத்து செய்ய டெல்லிக்கு எதிராக கிளர்தெழுவோம் !

என்ற தலைப்பின் கீழ் 10.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் கரூர் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் பகுதி பு.மா.இ.மு தோழர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு.-வைச் சேர்ந்த தோழர் சுரேந்தர், தோழர் பிரித்திவ், தோழர் மாஞ்சோலை, தோழர் சிவா, தருமபுரி பு.மா.இ.மு தோழர் அன்பு மற்றும் கரூர் பகுதி மக்கள் அதிகாரம், தோழர் விக்னேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் வினோத் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பேசிய உரையின் சுருக்கம்: சென்ற ஆண்டு நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலி வாங்கப்பட்டார். இந்த ஆண்டு மாணவர்கள் – பெற்றோர்கள் அலைகழிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். நீட் தேர்வு பல பெற்றோர்களின் உயிரை பலிவாங்கியுள்ளது. நீட் தேர்வில் மட்டுமல்ல காவிரி, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்டம் என தமிழகம் பல வகைகளிலும் வஞ்சிக்கப்படுகின்றது. இனியும் இந்த அவலங்கள் தொடராமல் இருக்க நாம் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று பேசினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதுவரை கரூர் பகுதியில் பு.மா.இ.மு. – சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பலமுறை அனுமதி மறுத்துள்ளது போலீசு. தோழர்களின் தொடர் போராட்டத்தால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதிலும் பல கெடுபிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் தாண்டி இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர், தொடர்புக்கு : 98941 66350.

ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !

1

ரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இந்த அறிவிப்பு, ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் மீதும் தாக்கத்தை உண்டாக்க வல்லது. அத்துடன் மத்திய கிழக்கில் வரப்போகும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அதிக அக்கறை செலுத்தாத சர்வதேச அரசியல் நிலவரம், எந்தளவு தூரம் நமது தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

டிரம்பின் திடீர் அறிவிப்புக்கு முதலில் எதிர்வினையாற்றியது பங்குச்சந்தை வர்த்தகம் தான். இதனால் எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் விளைவாக பெட்ரோல் மட்டுமல்லாது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப் படவுள்ளன. ஏனெனில், 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன.

இலங்கையில் இரவோடிரவாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் மங்கள சமரவீர, டெய்லி மிரர் பத்திரிகை பேட்டியில், விலை உயர்வுக்கு ஈரான் பிரச்சினையை காரணமாகக் காட்டி இருந்தார். இருப்பினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வதேச பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில், முதலாளிய “அரசியல் ஆய்வாளர்கள்” மிகவும் அவதானமாக உள்ளனர். அவர்கள் “மைத்திரி அரசா, மகிந்த அரசா சிறந்தது?” என்று பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்கள்.

ஈரான் அதிபர் அசன் ரவ்கானி

உண்மையில், ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் தனியே அமெரிக்காவுடன் மட்டும் கைச்சாத்திடப் படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து அணுவாயுத வல்லரசு நாடுகளுடன், ஜெர்மனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருந்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில், ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தன. அன்றிருந்த ஒபாமா நிர்வாகம், கடும்போக்காளர்களை ஓரங் கட்டி விட்டு ஒப்பந்தம் போட்டது.

டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பதற்கு காரணம், அந்நாடுகளின் வர்த்தக நலன்கள் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் வாதாடலாம். உண்மை தான். யாருக்கு தான் நலன்கள் இல்லை? அமெரிக்கா பொதுநலன் கருதி, உலகை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவதாக சொன்னால், அது நகைப்புக்குரியது.

முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.

ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் படுவதாக அறிவித்துள்ள டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத தவணை கொடுத்துள்ளது. இதனால், எண்ணை ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப் படும். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் தவணை கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானுடனான அமெரிக்க வர்த்தகம் மிகவும் அரிது என்பதால், டிரம்பின் முடிவால் அமெரிக்க வர்த்தகர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை பேணி வருகின்றன. அதனால், அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் ஐரோப்பாவும் பாதிக்கப் படுகின்றது என்பது நிச்சயம். உலக சந்தையில் அமெரிக்காவுடன் போட்டி போடுவது எந்தளவு கடினமானது என்பது ஐரோப்பிய முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்காவின் நிழல் கூடப் படாத ஈரானில், ஏராளமான வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன. ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இது அவர்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம். அதை இலகுவில் இழக்க விரும்ப மாட்டார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா ஈராக் போரைத் தொடர்ந்து, ஈரான் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானை சுற்றி வளைத்திருந்தன. இருப்பினும், அமெரிக்கா ஆழமறியாமல் காலை விட விரும்பவில்லை. அதனால், அரை மனதுடன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதன் விளைவு தான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம். இதனால் ஈரான் மீண்டும் சுதந்திரமாக சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடிந்தது.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் நெருக்குவாரம் உள்ளது. சிரியாப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈரான் இரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அறிவித்து வந்தார். அந்த நேரத்தில், அதை வெறும் இஸ்ரேலிய பிரச்சாரமாகக் கருதி, யாரும் பொருட்படுத்தவில்லை.

ஈரானில் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதை கண்காணித்துக் கொண்டிருக்கும் IAEA என்ற சர்வதேச அணு சக்தி முகாமைத்துவ நிறுவனம் அதை மறுத்துள்ளது. ஏற்கனவே ஈரானிய அணு உலைகளில் இருந்த யுரேனியம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. ஐ.நா. மன்றம் வரை சென்று படம் காட்டி பயமுறுத்திய, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் குற்றச்சாட்டு எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறுப் பிரச்சாரம்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை உலகில் யாரும் நம்பாவிட்டாலும், தான் அதை நம்புவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, ஈரான் இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்ற ஒரேயொரு காரணத்தை சொல்லித் தான், ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இது முன்பு சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய் கூறி ஈராக் மீது படையெடுத்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இது மீண்டும் மத்திய கிழக்கின் மீது போர் மேகங்கள் சூழ்கின்றன என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு ஈரானிய படையினர் வசமிருந்த ஆயுதக் கிடங்கு தாக்கப் பட்டதாகவும், சில ஈரானியரும் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய அரசு அதை மறுத்திருந்தது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவை அல்ல. ஆகையினால், இந்தத் தடவையாவது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானிய அரசியல் களத்தில் விவாதிக்கப் பட்டது.

கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த சிரியாவின் உள்நாட்டுப் போர் தற்போது பிராந்தியப் போராக மாறியுள்ளது. ஒருவேளை இது மூன்றாம் உலகப் போராகவும் இருக்கலாம். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அது ஈரானுக்கு வைக்கப் பட்டுள்ள குறி என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக, ஈரானிய இராணுவ ஆலோசகர்களும், லெபனானிய ஹிஸ்புல்லா தொண்டர்களும், சிரியாப் போரில் தலையிடுவதற்கு அதுவே காரணமாக இருந்தது.

உள்நாட்டு யுத்ததால் சிதைந்து போயுள்ள சிரியா.

போரின் முடிவில் சிரியாவை ஆளும் ஆசாத் அரசு கவிழும் என்றும், ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்றும், இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடந்தேறின. ரஷ்யாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கிளர்ச்சிக் குழுக்கள் தோற்கடிக்கப் பட்டு, இறுதியில் ஆசாத் அரசு வெற்றி வாகை சூடியது.

இஸ்ரேலின் அயல்நாடுகளில் சிரியா மட்டுமே இதுவரையில் எந்தவித சமரசமும் செய்யாமல் எதிரி நாடாக உள்ளது. அத்துடன், அது லெபனான் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்தது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதும் சிரியா மட்டும் தான். இதனால், சிரியாப் பிரச்சினையை ஒரு வழியாக முடித்து விட்டால், ஈரானை தாக்குவது இலகுவாகி விடும் என்று இஸ்ரேல் கணக்குப் போட்டிருந்தது.

அமெரிக்காவால் எதிரி நாடுகளாக நடத்தப் படும் ஈரான் போன்ற நாடுகள், கடந்த கால உலக வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெற்றுள்ளன. ஈராக், லிபியா என்று ஒவ்வொன்றாக தீர்த்துக் கட்டிய அமெரிக்கா, சிரியாவையும் பிடித்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. ஆகையினால், தனது சொந்த நலன் கருதியாவது, ஈரான் சிரியாப் போரில் தலையிட வேண்டி இருந்தது. ஆசாத் அரசை வெல்ல வைப்பதன் மூலம், சிரியாவை தொடர்ந்தும் ஈரானின் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கலாம்.

அதே நேரம், சிரியாவின் உள்நாட்டுப் போரானது, “ஜென்ம விரோதிகளான” இஸ்ரேலையும், ஈரானையும் அருகருகே கொண்டு வந்து விட்டுள்ளது. தனது வடக்கு எல்லையில் ஈரானியப் படைகள் நிலை கொண்டிருப்பதால், இஸ்ரேலுக்கு எந்நேரமும் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும். சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தனது பலமடைந்துள்ள சிரியாவின் அரச இராணுவம், எதிர்காலத்தில் கோலான் குன்றுப் பகுதியை மீட்கும் யுத்தத்தை தொடங்கலாம். அதை ஈரானும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு எல்லைப்போர் மூண்டால், வடக்கே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தலாம்.

இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, “கடைசி ஐரோப்பிய காலனியான” இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி – இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்கு மாறாக, ஷியா – இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப் படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் சக்தி படைத்த நாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐரோப்பா மட்டுமல்லாது, ரஷ்யா, சீனா கூட, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அனுசரித்து போன காலம் ஒன்றிருந்தது. அத்தகைய காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு ஈரானை ஒடுக்குவது இலகுவாக இருந்திருக்கும். எதிர்பாராத விதமாக, சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யா தலையிட்ட பின்னர் நிலைமை சிக்கலாகியுள்ளது.

ரசிய அதிபர் புடின்

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டால், ரஷ்யா எந்தப் பக்கத்தை ஆதரிக்கும்? உண்மையில், இது ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்கடியான நிலைமை. இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன ஜார் மன்னன் என அழைக்கப் படும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் கோஷத்தின் கீழ் தான் சிரியாப் போரில் ஈடுபட்டார். இது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வெளிவிவகார கொள்கையாக இருந்தது.

இருப்பினும், இஸ்ரேலில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ரஷ்யர்களை புட்டின் புறக்கணிக்க முடியாது. இலட்சக்கணக்கான ரஷ்ய யூதர்கள் மட்டுமல்லாது, பொருளாதார காரணங்களுக்காக குடியேறிய ரஷ்யர்களும் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலிய தேர்தல்களில் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கியாக உள்ளனர். பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேலிய ரஷ்யர்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றார். அதாவது, ரஷ்யா சென்று புட்டினை சந்தித்து பேசிய பொழுது, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை சுட்டிக் காட்ட மறக்கவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கை, ஈரானை ஆளும் ஆயத்துலாக்களின் கரங்களை பலப்படுத்தும். அமெரிக்காவுக்கு ஆதரவான லிபரல் முகாமை பலவீனப் படுத்தும். அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறி வரும் கடும்போக்காளர்களின் கரம் உயரும். “அமெரிக்கர்கள் அயோக்கியர்கள் என்றால், ஐரோப்பியர்கள் கோழைகள்” என்று ஈரானில் பேசிக் கொள்கின்றனர்.

ஈரான் இன்று வரையில், ஷியா இஸ்லாமிய மத அடிப்படைவாத கருத்தியலை அரச கொள்கையாக கொண்டுள்ள போதிலும், சவூதி அரேபியா போன்ற “இஸ்லாமிய” நாடுகளே அதன் பிரதானமான எதிரிகளாக உள்ளன. அதனால், ஈரான் தவிர்க்கவியலாது, “கிறிஸ்தவ” ரஷ்யாவுடனும், “நாஸ்திக” சீனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டியுள்ளது. அரசியல்- பொருளாதாரக் காரணங்களுக்காக உருவான இந்தக் கூட்டணி, மதத்திற்கு அப்பாலும் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது.

  •  கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம்  தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர் . வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

 

அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !

2

தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்.

“கல்லெறிந்தது குற்றம்” என்று குரல்கொடுத்த சான்றோர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

*****

எஸ்.வி.சேகரை நாந்தான் புடிக்க வேண்டுமென்றால், எனக்கு டி.ஜி.பி. பதவி கொடுங்கள். -பொன். ராதாகிருஷ்ணன்

பொன்னார் ஜியை இன்றுமுதல் குட்கா ஜி என்று ஹிந்து சமூகம் கொண்டாடட்டும்…

அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

உச்ச நீதிமன்றமே உன் விலையென்ன ? ரெட்டி பிரதர்ஸ்

சுரங்க மாஃபியா ரெட்டி சகோதரர்கள் ( இடமிருந்து : சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி) உடன்பிறவா சகோதரன் ஸ்ரீராமுலு.

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியளிக்க லஞ்ச வாங்கிய விவகாரம், மோடி அரசுக்கு சாதகமாக ‘பெஞ்ச் பிக்சிங்’, தன் வழக்கை தானே விசாரித்துத் தீர்ப்பளிப்பது உள்ளிட்ட விசயங்கள் நாறிக்கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த ஊழல் வெளியாகியுள்ளது.

சுரங்க மாஃபியா ரெட்டி சகோதரர்கள் ( இடமிருந்து : சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் இவர்களின் ‘உடன்பிறவா சகோதரன்’ ஸ்ரீராமுலு) .

சுரங்க மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இரண்டு ‘ஸ்டிங்’ வீடியோக்களாக கர்நாடக செய்தி சானல்களில் வெளியாகியுள்ளன. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ரெட்டி சகோதரர்களையும் அவர்களை அரவணைத்து வரும் பா.ஜ.க-வினரையும் அம்பலப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் இவ்வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வீடியோக்களில் பா.ஜ.க வேட்பாளரும் ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவருமான ஶ்ரீராமுலு, முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீநிஜன், மேலும் இடைத்தரகர்களான கேப்டன் ரெட்டி, ரஜ்னீஷ் ஆகியோர் தீர்ப்புக்காக பேரம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

“நீங்கள் யாரிடம் பேசினீர்கள், ஜனார்த்தன ரெட்டியிடமா இல்லை ஶ்ரீராமுலுவிடமா?”

“இருவரிடமும்”

“அவர்கள் 500 கோடி கேட்டிருக்கிறார்கள். 100 கோடி முன்னரே கொடுக்கப்பட்டுவிட்டது. பாலகிருஷ்ணன் 10-ம் தேதி தீர்ப்பளித்துவிடுவார்.”

மேற்கண்ட உரையாடல் ஒரு உதாரணம்.

முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்

ஆந்திர அரசு ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனத்திற்கு விதித்த தடையை அகற்றத்தான் இந்த பேரம் பேசப்பட்டிருக்கிறது.

வெளியான சில மணிநேரங்களிலேயே இந்த வீடியோவை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. நித்தியானந்தா சொன்னதைப்போல, “எல்லாம் கிராபிக்ஸ்” என்று சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

முன்னர் ரெட்டி பிரதர்ஸிடம் அடிவாங்கிய எடியூரப்பா, “நான் அடிவாங்குனதே உண்மையில்ல, அதெல்லாம் கிராபிக்ஸ்” என்று சொல்லி, மறுபடியும் ரெட்டி பிரதர்ஸின் காலடியில் விழுந்து கிடக்கும்போது, இதனை கிராபிக்ஸ் என்று அமித் ஷா சொன்னதில் வியப்பில்லை.

வழக்கின் சுருக்கம்

முறைகேடான சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜனார்த்தன ரெட்டியின் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் (Obalapuram Mining company) செயல்பாடுகளுக்கு 2009-ம் ஆண்டு நவம்பரில் தடைவிதித்தது ஆந்திர அரசு. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் ரெட்டிக்கு ஆதரவாக ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் அரசு கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து தனக்கு அறிக்கையளிக்க வேண்டும் என்றும் அதுவரை தற்போது இருக்கும் நிலையே (status quo) தொடரும் என்றும் தீர்ப்பளித்தது. ஆந்திர உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்தது.

சுப்ரீம் கோர்ட் கோரியபடி நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரெட்டியின் முறைகேடுகளை சுட்டிக்காட்டி சுரங்கப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதையும் மீறி ரெட்டியின் சுரங்கப் பணிகள் தொடரலாம் எனத் தீர்ப்பளித்தார், தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன். இந்த தீர்ப்பை பெறுவதற்கு நடந்த பேரங்கள்தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை ஊழலில் திளைக்கிறார்கள் நீதிபதிகள். நீதிமன்ற வளாகம் என்பது ஒரு சந்தை வளாகம் (Market place)தான் என்பதையும் அங்கு காசுக்கு ஏற்ற நீதி வழங்கப்படும் என்பதையும் இவ்வீடியோக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நீதித்துறையின் தலைமைபீடமான உச்ச நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதிகளுமே அம்பலமான பிறகும் இன்னும் நீதிமன்றங்களுக்கு என்ன மாண்பு மிச்சமிருக்கிறது? தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்றும், தீர்ப்புகள் சமூகவலைத்தளங்களிலும் தெருக்களிலும் விவாதிப்பதற்கில்லை என்றும் மக்களிடம் அதிகாரத் திமிரோடு பாடம் எடுக்கிறார்கள் சந்துரு போன்ற ‘நல்ல’ நீதிபதிகள் (சந்துருவின் தந்தி டி.வி பேட்டி). நீதிமன்ற மாண்பு என்ற ஒன்று இன்னும் இருப்பதாகவும் அதை மக்களும் எதிர்க்கட்சிகளும் மதிக்க வேண்டும் என்றும் இன்னும் விரும்புகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளே இது “பூட்டகேசு” என்று புரிந்து கொண்டு எல்லாருக்கும் தகவல் சொல்லி விடுவோம் என்று ஊராருக்கு சேதி சொல்லிவிட்டார்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளை அதையே உறுதிப்படுத்துகின்றன. அடுத்து நடக்கவேண்டிய “காரியங்களை” விடுத்து இன்னும் “நீதிமன்ற மாண்பு” என்று பேசிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

– வினவு செய்திப் பிரிவு.

வெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்!

ர் கண்டிசனர் போன்றவையெல்லாம் சமீப காலத்திய கண்டுபிடிப்புகள். வெயிலின் வெம்மையை சமாளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய முறைகள் பல. அவற்றில் முக்கியமானவை வெட்டிவேர், மூங்கில் தட்டிகள். இந்திய வெயிலில் இருந்து அந்தக் காலத்து மன்னர்களையும் பின்னர் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் காப்பாற்றியவையும் இந்த வெட்டி வேர் தட்டிகள்தான். இன்றைக்கும் வெள்ளைக்காரன் காலத்து கட்டிடங்கள் சிலவற்றில் வெட்டிவேர் தட்டிகளையும், பங்காக்களையும் பார்க்கலாம்.

மின் விசிறியும் ஏர் கண்டிசனரும் வந்த பின்னர், எல்லா கைவினைப் பொருட்களையும் போலவே வெட்டிவேர்த் தட்டியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இருப்பினும் தீங்குகள் ஏதும் இல்லாத, ஆரோக்கியத்துக்கு உகந்த பாரம்பரிய முறைகள், கைவினைப்பொருட்கள் போன்ற அனைத்தும் இன்று வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரியவையாக மாறியிருப்பதைப் போலவே, வெட்டிவேர் – மூங்கில் தட்டிகளும் புது மவுசு பெற்றுவிட்டன. இன்று வெட்டி வேர் வாசத்துடன் குளுமை வேண்டுமென்றால், பல ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.

ஆயிரங்கள் எதுவும் இவற்றை உருவாக்கும் தொழிலாளிகளுக்குப் போவதில்லை. சென்னையில் இதயப்பகுதியான வால்டாக்ஸ் சாலையில், நடைபாதைகளில் வாழும் இந்த வீடற்ற உழைப்பாளிகள், கத்திரி வெயிலில் இரும்புத் தகட்டு கூரைக்கு கீழே வெந்து வாடும் தம் கைகளிலிருந்து தென்றல் காற்றைத் தருவிக்கிறார்கள்.

சாந்தி, காவியா, சகுந்தலா, வால்டாக்ஸ் ரோடு பகுதியில் வெட்டி வேர் மற்றும் மூங்கில் பத்தைகளை கொண்டு ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளிகள்.

“ எங்களுக்கு வேலை கொடுக்கிறவங்க ஆர்டர் வந்தா கூப்பிடுவாங்க. காலைல 6 மணிக்கு வந்தோம். ஒரு பாய் பின்னிருக்கோம் பொழுது சாயரதுக்குள்ள இரண்டு பாய் பின்னினா 350 ரூபா கெடைக்கும்.”

சுந்தர், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“பெரிய பங்களா, பணக்கார வீடுங்களுக்கு செஞ்சு கொடுப்போம். இப்பக்கூட இரயில்வே அதிகாரி வாங்குனார். இந்த பாய் பெங்களுருக்கு போகுது. இதோட சைசு 6க்கு 7 அடி. இதற்கு நாலு கிலோ மூங்கில் பத்தை, பத்து கிலோ வெட்டி வேர் வேணும்.

இத கந்தசாமி கோவில்ல வாங்குவோம். அம்பது கிலோ மூட்டை 20,000 ரூபா. அத அலசினா மண்ணு, தும்புன்னு ஐஞ்சு கிலோ போயிடும். மிச்சம் இருக்க வேரை வெச்சி ஸ்க்ரீன் செய்வோம். நாடாபீடிங் கட்டி பார்டிக்கிட்ட கொடுப்போம்.”

மகேஷ், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“ஒன்னும் கையில நிக்காது சார். முதல்ல, பாய் பின்னுற பொம்பள ஆளுங்களுக்கு சம்பளம், வெயில்ல வேலமேல எங்களுக்கு ரெண்டு கட்டிங், ஒரு கோட்டருக்கே சரியாகிடும். சாவு பத்தை, பேனர் பத்தை, சாலை பெருக்கும் மலாரம் செய்வோம். கொஞ்சம் கைசெலவு நிக்கும்.

இந்த பாயில வெட்டி வேருக்கு பதிலா, தேங்கா நார் வச்சி பின்னலாம். ஆனா நம்பிக்கை போயிடும். தொழிலும் கெட்டுடும்.”

மாடி வீட்டு பால்கனியையும், பங்களாவையும் குளிர வைக்கும் வெட்டிவேர் மூங்கில் ஸ்க்ரீன்.

மகாதேவன், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“1972-ல வால்டாக்ஸ் ரோட்டுக்கு வந்தோம். அதுக்கு முன்னாடி பிராட்வே பஸ் ஸ்டாண்டு இடத்துல இருந்தோம். தாத்தா காலத்துல இருந்து பாய் பின்னும் வேலைதான்.
18 வயசுல வேலைய செய்ய ஆரம்பிச்சேன். இப்ப வயசு அம்பத்தி அஞ்சி ஆகுது. புள்ளங்க படிச்சி வேற வேலைக்கு போயிட்டாங்க. ரயில்வே அதிகாரிகள், பள்ளிகூடம், கோஸ்டல் கார்டுக்கு எல்லாம் ஸ்க்ரீன் பண்ணி கொடுத்திருக்கோம்.”

மகாதேவன் மனைவி ரத்தினாம்பாள்.

“இந்த தொழிலுக்கு இப்ப ஆளு இல்ல. என் பசங்களே இந்த வேலைய செய்ய மாட்டேங்குதுங்க. இந்த வேலைய செஞ்சி வாய, வயித்த கட்டி ரெண்டு பசங்களையும் பாரா மெடிக்கல் படிக்க வச்சேன்.

இப்ப ஒருத்தன், பிசியோதெரபி. இன்னொருத்தன் BASLB (Bachelor of Audiology & Speech Language Therapy) படிச்சிருக்கான். ஒரு பொண்ணு அதையும் கட்டிக் குடுத்துட்டோம்.”

முனியம்மாள், பார்வையற்றவர்.

“சின்ன வயசுலருந்தே இந்த வேலைதான். கண்ணுல பூ விழுந்ததால ஆறு வருசமா தடவி தடவி வேலையை செய்யுறேன்.

சாலை பெருக்கும் மலாரம் மட்டும் கட்டுறேன். ஒரு மலாரத்துக்கு 5 ரூபா தருவாங்க. ஒரு நாளைக்கு பதினைந்து கட்டுவேன்.”

அங்காளம்மாள்

“12 வயசுல இருந்து பாய் பின்னுறேன். அந்த காலத்துல எங்களுக்கு சம்பாதிக்கணும், சொத்து சேர்த்து வைக்கனும்னு தெரியல. சம்பாதிக்கிறது சாப்புடுறதுன்னு இருந்துட்டோம். இப்ப எதுவும் இல்ல. இந்த குடிசைய காப்பாத்திக்கனாலே போதும்…”

கார்த்திக், தர்ஷினி, சபிதா, ஜனனி. டாக்டர், ஆசிரியராக வேண்டும் என்ற கனவுகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள்.

பாலகிருஷ்ணன் – லலிதா, தம்பதியினர்.

“43 வருஷமா வேலை செய்யுறோம். எங்களுக்குன்னு எதையும் பண்ணிக்கல இந்த பிளட்பாரத்துலையே இருந்துட்டோம். இதுவும் நிரந்தரம் கெடையாது.
இத காலி பண்ண சொல்லி கார்ப்பரேசன்ல இருந்து நோட்டிசு வந்துடுச்சி. இங்க வாழுற இருபத்தி நாலு குடும்பத்துக்கும் என்ன பண்றதுன்னு தெரியல!”

வினவு புகைப்படச் செய்தியாளர்.

காவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் !

தடைகளைத் தகர்த்த மக்கள் அதிகாரம் ! மக்கள் வெள்ளத்தில் திருமுல்லைவாசல் பொதுக்கூட்டம் !!

டந்த 21.04.2018 அன்று துவங்கி 30.04.2018 வரை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணத்தின் இறுதி நிகழ்வாக சீர்காழி வட்டம் திருமுல்லைவாசலில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற பிரச்சார நடைபயணம். (கோப்புப் படம்)

முதலில், மக்கள் அதிகாரத்தின் காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது தமிழக போலீசு .

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று நடைபயணத்துக்கான அனுமதியைப் பெற்றது மக்கள் அதிகாரம். அந்த நடைபயணத்திற்கும் ”முப்பது பேருக்குமேல் பங்கேற்கக்கூடாது, ஆறுமணிக்கு மேல் நடக்கக்கூடாது” என்ற ஏகப்பட்ட ‘கூடாது’களுடன்  பல கட்டுபாடுகள் விதித்து மக்கள் மத்தியில் நமது பிரச்சாரம் சென்றடையாது தடுக்க முயன்றது போலீசு. அதைத் தாண்டி பல கிராம மக்களின் ஆதரவுடன் பிரச்சார நடைபயணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் இறுதி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுத்தது போலீசு. மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெறவேண்டியிருந்தது.

நீதிமன்ற அனுமதிக்குப் பின்னரும், போலீசு விதித்த பல நிபந்தனைகள், கெடுபிடிகளைத் தாண்டி, கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமை தாங்கினார்.

திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் சுற்றுவட்டார மீனவ பஞ்சாயத்தார் – தலைவர்கள் முன்னிலை வகிக்க பல்வேறு விவசாய சங்கத் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.

முன்னாள் நீதிபதி திரு கோபாலகிருஷ்ணன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் குணசேகரன், கொள்ளிட பாசன விவசாய  சங்க தலைவர் ஆச்சாள்புரம் திரு சிவபிரகாசம், வேட்டங்குடி திரு வில்வநாதன், விருத்தாசலம் திரு நந்தகுமார், தமிழர் தேசிய முன்னணி தோழர் ராஜராஜன், மனிதநேய மக்கள் கட்சி சீர்காழி திரு மசாகுதீன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் பெரியார் செல்வம், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் திரு வேலுகுபேந்திரன், தமிழக காவிரி விவசாய சங்க மாநில இணை செயலாளர் திருவாரூர் வரதராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் நிறைவுரையாற்றினார்கள்.

அருகதையிழந்த அரசுக் கட்டமைப்பு !

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கூட கர்நாடகா தயாராக இல்லை.

நடுவர் மன்றம், மேலாண்மை வாரியம், காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு என காவிரி விவகாரம் ஒரு விஷச் சக்கரம் போல சுற்றிகொண்டே இருக்கிறது.

இவ்வாறு திட்டமிட்டே தமிழக விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளவும், விவசாயத்தைவிட்டு விவசாயிகளை வெளியேற்றவும், மோடி அரசு வழி செய்கிறது.

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமானப்படுத்தப்படுகின்றனர். பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் பெருகிவருகின்றன. இக்குற்றங்களில் பாஜக அமைச்சர்களும், போலீசு மற்றும் அதிகாரிகளே முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளனர். இவை அனைத்தும் இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையே காட்டுகின்றன.

எனவே இனி இந்த கட்டமைப்புக்குள்ளேயே நின்று தீர்வை தேடுவது முட்டாள்தனம். அமைச்சர்கள், அதிகாரிகள் என்ற அதிகார வர்க்க தாழ்வாரத்தின் கீழ் பெரும்பான்மை மக்களுக்கு நியாயத்தை பெறமுடியாது.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் எனும் கிரிமினல்களிடமே மனுகொடுத்து நியாயத்தை பெறமுடியாது.

மாறாக இவர்களை அப்புறப்படுத்தி மக்களுக்கான புதிய அதிகாரத்தை பெறுவதுதான் தீர்வு. இதை நோக்கி மக்கள் போராட்டங்கள் வளர்ந்து செல்வதைக் கண்டுதான் இவர்கள் அஞ்சுகிறார்கள்.

அதனால் தான் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரச்சாரம் ஆகிய அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட தடை செய்கிறது  அரசு.

எத்தகைய தடைகள் வந்தாலும் சரி அவற்றை மக்கள் போராட்டங்கள் தூளாக்கும்.

பொதுக்கூட்டத்தில் கலைநிகழ்ச்சிக்கு போலீசு அனுமதி மறுத்ததால் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல்கள் பேச்சின் இடையிடையே பாடப்பட்டன.

துவக்கம் முதல் இறுதிவரை மக்கள் கூட்டம் கலையாமல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு பேச்சாளரின் உரையின் போதும் மக்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது.

இறுதியாக மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர் தோழர் வீரசோழன் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

குட்கா கூட்டணி ! புதிய ஜனநாயகம் மே 2018 மின்னூல்!

குட்கா கூட்டணி ! புதிய ஜனநாயகம் மே 2018 இதழ் !

may-2018-puthiya-jananayakam

வெளியான கட்டுரைகள்:

1. பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்! பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம்!!
இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.

2. அ.தி.மு.க.- பா.ஜ.க.- அதிகார வர்க்கத்தின் குட்கா கூட்டணி!
ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

3. எது வன்முறை? எஸ்.வி.சேகரின் சொல்லா, பத்திரிகையாளர்கள் எறிந்த கல்லா?
சங்க பரிவாரத்துக்கு எதிரான குரல் ஒலிக்கும் களமாக தமிழ்த் தொலைக்காட்சிகள் இருப்பதை பா.ஜ.க.வினரால் சகிக்க முடியவில்லை. அதன் விளைவுதான் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான எஸ்.வி.சேகரின் வக்கிரத் தாக்குதல்.

4. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை!
தீண்டாமைக் குற்றங்கள் நாடெங்கும் அதிகரித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, இனி சாதிவெறியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதே இயலாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

5. சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி!
காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் சிறுமி ஆஷிஃபாவைக் கும்பல் வல்லுறவு செய்து கொன்றிருப்பது ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தி வரும் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலின் ஒரு பகுதியே.

6. உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம்!
இந்துத்துவ ஆட்சியின் முன்மாதிரியாகக் காட்டப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, தாக்கூர் சாதிக் கிரிமினல்களின் காட்டாட்சியே என்பதை உன்னாவ் பாலியல் வன்முறை நிரூபிக்கிறது.

7. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர்!
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் முகத்திரையை மட்டுமின்றி, வங்கிகளைத் தனியார்மயமாக்க முயன்று வரும் மோடி அரசின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது.

8. ஒரு இந்து மேலாதிக்கவாதியின் அன்றாட வாழ்க்கை
பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மோயுக் சாட்டர்ஜி, எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி” வார இதழில் இந்து மேலாதிக்க உணர்வின் சாமானிய வாழ்க்கை” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

9. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் -உடன் ஓர் நேர்காணல்
சீனாவில் தொழிலாளி வர்க்கம் உண்மையிலேயே அதிகாரம் பெற்றதாக இருந்ததா? மாவோவின் சீனா நகர்ப்புறத்து இளைஞர்களைக் கிராமப்புறத்துக்கு அனுப்பியது ஏன்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார், ஃபிரட் எங்ஸ்ட்.

10. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!
போராடும் பொதுமக்கள் அம்பலப்படுத்தும் உண்மைகள்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

போலீசின் கொட்டத்தை அடக்கிய வேலூர் தரைக்கடை வியாபாரிகள் !

0

 

தரைக்கடை காய்கறி வியாபாரம் (வினவு கோப்புப் படம்)

வெயில் மழை பாராது தலைச்சுமையாகவும், ரோட்டோரமாகவும் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி மற்றும்  தரைக்கடை வியாபாரிகளிடம் உள்ளூர் கட்டப் பஞ்சாயத்து ரவுடிகளும்  போலீசு ரவுடிகளும் அன்றாட மாமூல் என்ற பெயரில் வழிப்பறி செய்வதென்பது தமிழகம் அறிந்த ஒன்று. போலீசு  சீருடையில், போலீசின் ரோந்து வாகனத்தில் வந்து கடைக்கு எதிரே நிறுத்தி நிர்ணயித்துள்ள மாமூலை வாங்கிச்செல்லும் காட்சிகள் சினிமாவில் மட்டுமல்ல; அன்றாடம் நாம் கடந்துபோகும் கடைவீதியில் காணக் கிடைக்கும் காட்சிகளுள் ஒன்றுதான்.

இந்தக் காட்சிகளை கண்டிராதவர்கள் எவரேனும் இருந்தால், இரவு பத்து மணிக்கு மேல் ஏதேனும் ஒரு தள்ளுவண்டி கடையருகில் நின்று பாருங்கள். “பத்து பொட்டலம் இட்லியக் கட்டு! இல்லேன்னா கடையக் கட்டு!” என்று சிங்கம் பட ரேஞ்சுக்கு மிரட்டும் போலீசின் அலப்பறைகளை காணும் பாக்கியம் கிட்டும்.

இந்த வரிசையில் இது வேலூர் போலீசின் கதை. அச்சு பிசகாமல் மேலே சொன்ன அத்தனை கொடுமைகளையும் அனுபவித்து வந்தனர் வேலூர் நகரிலுள்ள தரைக்கடை வியாபாரிகள். போலீசின் தொடர் அட்டூழியங்களால் கொதித்திருந்த அவ்வியாபாரிகள், அப்பகுதியில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வழிகாட்டுதலில்,  “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம்” என்ற பெயரில் சங்கமாக ஒன்று திரண்டனர். சங்கம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே, மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் மற்றும் அடுக்கம்பாறை என வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சங்கக்கிளைகள் விரிவடைந்தன.

சங்கம் தொடங்கி தமது மாமூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததோடு, தமது அத்துமீறல்களையும் சங்கம் தட்டிக்கேட்டதால், ஆத்திரமுற்ற போலீசு அவ்வியாபாரிகளை பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக வன்மத்தோடு காத்திருந்தது.

இந்தச் சூழலில், குடியரசுத் தலைவர் வேலூருக்கு வருவதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.  கடந்த  03.05.2018 அன்று அடுக்கம்பாறையில் செயல்படும் சாலையோரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று திடீரென்று வந்து மிரட்டியது, கணியம்பாடி போலீசு. சிறிது நேரம்கூட அவகாசம் கொடுக்காமல் வியாபாரிகளை விரட்டியது. முதல்நாளே சொல்லியிருந்தால் கடை போடாமலிருந்திருக்கலாம் என்று வியாபாரிகள் தங்களுக்குத் தாங்களே புலம்பிக்கொண்டு கடைவிரித்திருந்த பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ”என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நீ இன்னும் கடையை எடுக்கல…” என்று கெட்டவார்த்தைகளால் திட்டியபடியே சங்கத்தின் கிளைச் செயலர் தோழர் முருகனை குறிவைத்துத் தாக்கினார் கணியம்பாடி போலீசு ஆய்வாளர் பாண்டியன்.

”கடையை அகற்றிக் கொண்டிருக்கும் போதே அடிக்கிறீயே! நீ என்ன போலீசா? ரவுடியா?” என நேருக்கு நேர் எதிர்த்துக் கேட்டனர், சக வியாபாரிகள். எதிர்த்துக் கேட்டவர்களையும் பெண்கள் என்றும் பாராமல் தாக்கத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் பாண்டியன். பரபரப்பான நகரின் மையப்பகுதியில் போலீசின் இந்த அத்துமீறலை கண்ட பொதுமக்களும் குவியத் தொடங்கினர். போலீசின் அடாவடித்தனத்தை அங்கேயே கண்டித்தனர். தர்ம அடி வாங்க நேரிடும் என்ற பயத்தில், அங்கிருந்து ஓடிவிட்டார் இன்ஸ்பெக்டர் பாண்டியன். தாக்கப்பட்ட முருகனை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு திரண்ட மக்கள்.

இன்ஸ்பெக்டர் பாண்டியனை கைது செய்யக்கோரி, ”பாண்டியன் போலீசா? ரவுடியா?” எனக் கேள்வியெழுப்பும் சுவரொட்டிகளை வேலூர் நகர் முழுவதும் ஒட்டியது, பு.ஜ.தொ.மு. அச்சுவரொட்டிகளைத் தேடித் தேடி கிழித்த இன்ஸ்பெக்டர் பாண்டியன், ”என்னைக் கண்டித்தே போஸ்டர் போடுறீங்களா! உங்கள பாக்குற வகையில பாத்துக்குறேன்!” என்று சங்க முன்னணியாளர்களை மிரட்டியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், “இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனது போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், சாராயம் விற்பனை, காட்டன் சூதாட்ட கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு மாமூல் வசூலித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்” என்றும் அம்பலப்படுத்தியிருந்தது.

தினகரனில் வெளியான செய்தி

இந்த செய்தி ஆதாரங்களோடு, தோழர் முருகனையும், பெண்களையும் தாக்கிய இன்ஸ்பெக்டர் பாண்டியன் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் போலீசு துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் அவர்களிடம் மனு அளித்தனர் வியாபாரிகள்.

”தரைக்கடை வியாபாரிகள்தானே” என்றத் திமிரில் ஆட்டம் போட்ட பாண்டியன், அவ்வியாபாரிகளின் விடாப்பிடியானப் போராட்டத்தை கண்டு பதற வேண்டியதாயிற்று. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்து,  சேதாரத்தின் அளவை குறைத்துக்கொள்ளும் பொருட்டு அ.தி.மு.க., பா.ம.க.வைச் சேர்ந்த பிரமுகர்களின் மூலமாக முருகனிடம் பேரம் பேச தூது விட்டார்.  முகத்திலறைந்தாற் போல பதிலளித்து திருப்பியனுப்பினார் தோழர் முருகன்.

போலீசின் தொடர் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். குறைந்தபட்சம், உடனடியாக பாண்டியனை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நிற்கின்றனர், அவ்வியாபாரிகள்.

இது வேலூர் நகரத்தோடு முடிந்துவிட்ட பிரச்சினையுமில்லை; சம்பந்தபட்ட இன்ஸ்பெக்டர் பாண்டியன் கொஞ்சம் எல்லை மீறிவிட்டார் என்றளவில் சுருக்கிவிடக்கூடியதுமில்லை; தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரச்சினை இது.

தெருவோரம் கடை விரிக்கும் இவர்கள் யார்? இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள்? நீரின்றி வெடித்துக் கிடக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். வேலூர் தோல்பட்டறை ஆலைக்கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள். நம்பியிருந்த நெசவும் கைத்தொழிலும் கைவிட்டதால் கால்வயிற்றுக் கஞ்சிக்காக நகரத்திற்குத் துரத்தப்பட்டவர்கள்.

தெருவோரம் கடை போடுவது ஆக்கிரமிப்பு; சட்டவிரோதம் என்று பீதியூட்டுவதன் மூலம் வியாபாரிகளை பணியவைக்கிறது போலீசு. வியாபாரிகளும், ரோட்ல கடை போடுவது தப்புதானே என்று தார்மீகரீதியில் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இதிலிருந்துதான், இவர்களை பகைத்துக்கொண்டால் கால் வயித்துக் கஞ்சிக்கும் வழியில்லாமல் போய்விடும் என்று அஞ்சி, போலீசு – ரவுடிகளுக்கு மாமூல் கொடுக்கின்றனர்.

வியாபாரிகளின் இத்தகையக் குற்றவுணர்ச்சியைத்தான் தான் அதிகாரம் செலுத்துவதற்கான நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறது, போலீசு. முதலில், ரோட்டில் கடை போடுவது சட்டவிரோதம் என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து வியாபாரிகள் விடுபட வேண்டும். உண்மையில், தள்ளுவண்டி வியாபாரி தொடங்கி குட்கா வியாபாரி வரையில் கைநீட்டும் போலீசின் நடவடிக்கைகளல்லவா சட்டவிரோமானவை.

ரோட்டில் கடை போடுவதென்பது, வியாபாரிகளின் வாழ்வுரிமை. அவர்களை நடுத்தெருவுக்கு இழுத்துவந்து விட்டதே இந்த அரசுதான். சொந்த மண்ணில் வாழவும் விடாமல், பிழைப்பு தேடி வந்த இடத்தில் பிழைக்கவும் விடாமல் விரட்டும் இந்த அரசையும் அதன் அடியாளான போலீசையும் இனியும் சகித்து வாழ்வதில் அர்த்தமில்லை.

போலீசின் அத்துமீறல்களையும் அட்டூழியங்களையும் காணும் இடத்திலேயே, அந்தக் கணத்திலேயே கணக்குத் தீர்த்துக்கொள்வதைத் தவிர, காரிய சாத்தியமான வழியேதுமில்லை.

வேலூர் தரைக்கடை வியாபாரிகளின் போராட்டம் உணர்த்தும் செய்தி இதுவொன்றுதான்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.

காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!

11

“காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்?” காஷ்மீரிகளுக்கு இந்தியாவின் எல்லைகளைக் காக்கும் படைகளின்மேல் எந்த மரியாதையும் இல்லையே, ஏன்? கொல்லப்படும் போராளிகளின் இறுதி ஊர்வலங்களுக்கு லட்சக்கணக்கான காஷ்மீரிகள் கூடுகிறார்களே, ஏன்? இந்தக் கேள்விகளுக்கு ஆசிஃபாவின் முறிக்கப்பட்ட முதுகெலும்பும், குனான் போஷ்புராவில் வழிந்தோடிய குருதி வெள்ளமும் பதிலளித்துள்ளன. ஆனாலும், பார்ப்பன தேசியத்தில் ஊறிய இந்தியப் பொதுப்புத்திக்கு இந்தப் பதில்கள் புரிவதில்லை. காஷ்மீரிகளைப் புரிந்துகொள்ள காஷ்மீரின் முந்தைய ஆட்சியாளர்களையும் புரிந்து கொள்வது அவசியம்.

அந்த வகையில் கவுண்டர்கரண்ட்ஸ் இணையதளத்தில் எம்.ஜே அஸ்லம் எழுதிவரும் கட்டுரைத் தொடர் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். கீழ்வரும் பகுதி அத்தொடரில் காஷ்மீரை ஆண்ட டோக்ரா மன்னர்களின் வாழ்க்கைக் குறித்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

***

காஷ்மீர் என்றென்றைக்கும் பாரத தேசத்தின் பகுதியாகவும் இந்து மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது என்பதுதான் சங்கிகள் கூறிவரும் கதை.

ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங் டோக்ரா, 16-03-1846 அன்று கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இழிபுகழ் பெற்ற அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் மூலம் 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மீரை விலைக்கு வாங்கினார். மலைச் சிகரங்களும், பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன் அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. அன்றைய காஷ்மீரின் மக்கள் தொகையைக் கணக்கிட்டால், தலையொன்றுக்கு ஏழேகால் ரூபாய்க்கு வாங்கிப் போட்டிருக்கிறார் குலாப் சிங் டோக்ரா. அந்தக் காலகட்டத்தில் காஷ்மீரால் தனது கல்லாப் பெட்டிக்கு எந்தப் பயனுமில்லை என்பதே ஆங்கிலேயக் கும்பினியரின் கணக்காக இருந்திருக்கிறது.

குலாப் சிங்கின் ஆட்சி 1846-ல் இருந்து 57 வரை நடந்தது. அதன் பின் ரன்பீர் சிங் (1857-1885), பிரதாப் சிங் (1885-1925), இறுதியாக ஹரிசிங் (1925-1947) என ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடித்த டோக்ராக்களின் ஆட்சியில், விவசாயிகளான இசுலாமிய மக்கள் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்தனர். மக்களைத் துன்புறுத்திய நேரம் போக மிஞ்சிய நேரங்களில் டோக்ராக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரத்தைப் பார்ப்போம்.

சமஸ்தான மன்னர்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு அருவெறுப்பானது என்பதற்கு ஜூனாகட் மன்னன் மகபத்கான் ரசூலுக்கு நாய்களின் மீதிருந்த காதலை உதாரணமாகச் சொல்வார்கள். அவர் 800 நாய்களை வைத்திருந்தார். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணியாளர்களை நியமித்து சம்பளம் கொடுத்தாராம். நாய்களுக்காக மிகுந்த பொருட்செலவில் திருமணங்கள் நடத்துவது ஜூனாகட் மன்னரின் வழக்கம். அப்படி ஒரு “கல்யாணத்திற்கு” வைசிராய் இர்வின் பிரபுவுக்கே அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை இர்வின் பிரபு “நாகரீகமாக” மறுத்து விட்டார் என்பது தனிக் கதை.

பிரதாப் சிங்

ஆனால், காஷ்மீரின் டோக்ராக்கள் மற்றைய சமஸ்தானாதிபதிகளைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருவாழ்வு வாழ்ந்துள்ளனர்.

மூன்றாவது டோக்ரா மன்னரான பிரதாப் சிங்கின் ஆட்சிக்காலத்தில் மன்னர் கக்கூசு போன வகையில் ஏராளமாக செலவாகியிருக்கிறது. மன்னருக்கு ஆயி வந்தவுடன் மூன்று பணியாளர்கள் தயாராகி விடுவார்கள். அதில் இரண்டு பணியாளர்கள் விலை உயர்ந்த முப்பத்தாறாம் நெம்பர் மஸ்லின் துணியைச் (chatees ki malmal) சுருட்டித் தயாராக வைத்துக் கொள்வார்கள். மன்னர் முக்கி வெளிக்கிப் போனவுடன் இரண்டு பணியாளர்களும், மன்னருக்கு புட்டத்தின் பின்னும் முன்னும் நின்றபடி, மஸ்லின் துணியை மன்னரின் கனமான துடைகளுக்கு இடையே, மிகவும் ஜாக்கிரதையான முறையில் ரம்பம் இழுப்பது போன்ற முறையில் மென்மையாக அசைத்து மலத் துவாரத்தைத் துடைக்க வேண்டும். டைமிங் மிகவும் முக்கியம். மூன்றாவது பணியாளர் வெள்ளி லோட்டாவில் “மிகச் சரியான இலக்கில்” தண்ணீரை ஊற்ற வேண்டும். தாமதமாகி புட்டத்திலும் விரைக் கொட்டைகளிலும் பீ அப்பி விட்டால்…? வேறென்ன, கடுமையான தண்டனைதான்.

முக்கி மலத்தை வெளியே வரவைப்பது, அதில் வெற்றி பெற்றபின், தண்ணீர் படுவதற்கு ஏற்ற முறையில் முன்புறம் குனிந்துக் கொள்வது போன்ற கடினமான பணிகளை மாட்சிமை தங்கிய மன்னரே செய்து கொள்வார்.

மேற்படி மஸ்லின் துணி மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அது பீ துடைத்தத் துணியாக இருந்தபோதிலும், அதனை ராஜ சன்மானமாக பணியாளர்கள் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பீ துடைக்க இறக்குமதி செய்யப்பட்ட மஸ்லின் துணிகளை அப்போதைய தலைமை அமைச்சர் மன்னருக்கே தெரியாமல் ஆட்டையப் போட்டுள்ளார். திருடிய துணியை அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. நிச்சயமாக சட்டை தைத்துப் போட்டிருக்க முடியாது. மன்னர் கண்டுபிடித்து விடுவார். மன்னரைப் போல் அதைப் பயன்படுத்தும் உரிமை அமைச்சருக்கு இருக்க வாய்ப்பில்லை. கருவாட்டைக் களவாண்ட பாப்பாத்தியின் கதைதான்.

மன்னர் அடிக்கடி ஆய் போனால்தானே நிறைய மஸ்லின் துணிகளை ஆட்டையப் போட முடியும்? இதற்காகவே தலைமை அமைச்சர் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார். மன்னர் குடிக்கும் பாலில் கொப்பறை விதைப் பொடியைக் கலந்து விடுவாராம். அது கடுமையாக பேதியைத் தூண்டக் கூடியது. மன்னர் எந்த நேரமும் கக்கூசிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டதால் அரசாங்கம் நிறைய மஸ்லின் துணிகளை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளது. ஒருபக்கம் பயன்படுத்தப்படாத மஸ்லின் துணிகளை அமைச்சர் பிளாக்கில் ஓட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பீ துடைத்த துணிகளோடு பணியாளர்கள் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

அல்லக்கை அலுவலர்களைக் கொண்ட மன்னர் பிரதாப் சிங்கின் கிரிக்கெட் அணி.

ஒரு முறை மன்னர் பிரதாப் சிங்குக்கு கிரிக்கெட் விளையாடும் ஆசை உண்டானது. தனது அல்லக்கைகள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு ஒரு அணியை உண்டாக்கி அதற்குத் தன்னையே தலைவராகவும் நியமித்துக் கொண்டார். காஷ்மீரில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் அணியுடன் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டி நடக்கும் நாளும் வந்தது. தலையில் பொன்னாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய தலைப்பாகையுடனும், மன்னருக்கான அலங்கார உடையுடனும், கழுத்தில் பல லட்சம் பெருமானமுள்ள நகைகளுடனும் களத்தில் இறங்கினார் மன்னர்.

மன்னர் சற்றுக் குள்ளமானவர் என்பதால், மேற்படி அலங்காரத்தோடும் கையில் கிரிக்கெட் மட்டையுடனும் இறங்கிய உருவத்தைப் பார்த்து, போட்டியைப் பார்க்க வந்தவர்கள் சிரிப்பை அடக்க மிகுந்த சிரமப்பட்டனர். சிரித்தால் வாயைத் தாங்கிக் கொண்டிருக்கும் தலை துண்டிக்கப்பட்டு விடுமே! போட்டி துவங்கியது. அனைத்து ஏற்பாடுகளுடனும் மைதானத்துக்கு வந்திருக்கிறார் மன்னர். கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மட்டை பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற விசயம் மட்டும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

எதிரணியில் இருந்த வெள்ளைக்கார அதிகாரிகளுக்கோ தர்ம சங்கடம். வேறு வழியின்றி குழந்தைக்கு பந்து போடுவதைப் போல, அல்லது லட்டுவைத் தூக்கிப் போடுவது போல மிக மெதுவாக மன்னருக்குப் பந்து ‘வீசினர்’. அதையும் அடிக்கத் தெரியாமல் ஒவ்வொரு பந்துக்கும் கிளீன் போல்டு ஆனார் மன்னர். மன்னரை அவுட்டாக்குவது ராஜத்துரோக குற்றமல்லவா? அவர் அவுட்டாகும் ஒவ்வொரு பந்தையும் “நோ பால்” என அறிவித்துக் கொண்டிருந்தார் அம்பயர். நோ பாலுக்கு ஒரு ரன் உண்டல்லவா? எனவே மன்னரின் அணி தொடர்ந்து ரன்களாக குவித்துக் கொண்டிருந்தது. இவ்வாறாக நடந்த போட்டியின் இறுதியில் யார் வென்றது என்பதைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

பிரதாப் சிங் இப்படி என்றால், காஷ்மீரை விலைக்கு வாங்கிய அவருடைய பாட்டனார் குலாப் சிங் பணவெறி பிடித்தவர். குலாப் சிங்கை யார் வேண்டுமானாலும் சுலபமாகப் பார்த்து விடலாம். மக்கள் யாராவது அவரிடம் மனுக் கொடுக்க விரும்பினால், ஒரு கையில் மனுவையும் இன்னொரு கையில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு “மகாராஜா… மனு” என்று உரக்கக் கத்த வேண்டும். பசித்த கழுகைப் போல் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் என்ன விசயம் என்றே கேட்பார் குலாப் சிங். இப்படி ஒருமுறை பணத்தைப் பறிக்க குலாப் சிங் பாய்ந்தபோது மனுவுடன் வந்தவர் சட்டென்று கையை மூடிக் கொண்டிருக்கிறார். தனது பிரச்சினையைக் கேட்டால்தான் காசு கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் அந்த ஒற்றை ரூபாய்க்காக பொறுமையாக உட்கார்ந்து அவரது பிரச்சினைக்கு காது கொடுத்திருக்கிறார் குலாப் சிங்.

ஹரிசிங்

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஒப்பந்தம் போட்ட கடைசி டோக்ரா மன்னனான ஹரிசிங் ஒரு பெண் பித்தன். நாடெங்கும் சுதந்திரப் போராட்டம் வீச்சுடன் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர் அடிக்கடி பாரிசுக்கும் லண்டனுக்கும் சென்று கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. வெள்ளை விலைமாதர்களைத் தேடி ஐரோப்பாவுக்கு அலைந்ததுதான் மாட்சிமை தாங்கிய மன்னரின் நிர்வாக நடவடிக்கையாக இருந்திருக்கிறது.

1921-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு விலைமாதுவுக்கு 1.50 லட்சம் பவுண்டுக்கு காசோலை கொடுத்து வில்லங்கத்தில் சிக்கி போலீசில் மாட்டிக் கொண்டார் ஹரிசிங். நீதிமன்றத்தில் ஹரிசிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தன் கட்சிக்காரரைப் பற்றிச் சொல்லும்போது, அவர் ஒரு ஏழை துர்ப்பாக்கியசாலி என்றும் அவர்மீது கருணை வைத்து விடுவித்து விடுமாறும் கோரினாராம்.

ஹரிசிங் மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத தந்தக் கோபுர வாசி. அவரை சுற்றியிருந்தவர்கள் அனைவரும் துதிபாடிகள். மன்னர் அடிக்கடி ஐரோப்பாவுக்கு போய்விடுவார். ஆகையால், பண்டிட், டோக்ரா அதிகாரிகள் குடிமக்களான இசுலாமிய மக்களை விரும்பியபடியெல்லாம் சுரண்டியிருக்கின்றனர்.

காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறதா?

சாக்கியன்

அக்லக் முதல் ஆசிஃபா வரை ஒரே சட்டம்தான் ! கருத்துப்படம்

2

ஒரே நாடு… ஒரே சட்டம்…

அக்லக் முதல் ஆசிஃபா வரை, ஹரேன் பாண்ட்யா முதல் லோயா வரை அனைவருக்கும் ஒரே சட்டம்தான்.

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

கவர்னர் தாத்தாவின் அறிக்கைக்கு தடை – பு.மா.இ.மு. வழக்கு வெற்றி !

6

ருப்புக்கோட்டை – நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் அமைத்த சட்டவிரோதமான சந்தானம் விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தாக்கல் செய்த இந்த பொதுநல வழக்கில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுநர் அவசரம் அவசரமாக கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பு, காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் போட்ட ஐவர் குழு, அதை தொடர்ந்து ஆளுநர் நியமித்த சந்தானம் குழு, பிறகு ஐவர் குழுவை ஆளுநர் கலைத்தது, இதற்கு இணையாக தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை.. என அடுத்தடுத்து நடந்த கேலிக்கூத்துகளைப் பார்த்த அனைவருக்கும் இந்த சிவகாசி ஜெயலட்சுமி விவகாரத்தில் எண்ணற்ற மாணவிகள் சிதைக்கப்பட்டிருப்பர் என்பது புரியாமல் இல்லை. ஊடகங்களும் இதனை எழுதத்தான் செய்தன.

அதே நேரத்தில், ஆளுநர், துணைவேந்தர், அரசு, போலீசு மற்றும் தரகர்கள் ஆகியோர் இணைந்த இந்த கிரிமினல் கூட்டணி, விசாரணை என்ற பெயரில் சாட்சியங்களை அழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இதனைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகத்தான் மேற்சொன்ன வழக்கு தொடுக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வரும் இந்த வழக்கை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு, மாணவிகளை பலியாக்க முயன்ற – நிர்மலா தேவி வழக்கினை பெண் டி.ஐ.ஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து, அதனை சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை செய்யவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் பெண் வழக்கறிஞர்களை உள்ளடக்கி – “பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின்” கீழ் புகார் குழு அமைக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிகள் பெயர் விபரங்களை வெளியிட்ட தேவாங்கர் கல்லூரி செயலாளர் ராமசாமி மற்றும் அருப்புக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையில் உள்ள போதே

  • சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் அறிக்கையினை Status Report ஆக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • காமராஜர் பல்கலை. இப்பிரச்சினையில் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டியின் விசாரணையை தடை செய்ய வேண்டும்.
  • தேவாங்கர் கல்லூரி செயலர் ராமசாமி, அருப்புக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை இடைக்கால நிவாரணமாக கோரப்பட்டது. இவ்வழக்கு 03.05.2018 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு கவர்னருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. வழக்கு 23.05.2018 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.

இதற்கிடையில், சந்தானம் கமிட்டி தனது விசாரணை அறிக்கையினை 15.05.2018 அன்று கவர்னரிடம் வழங்குவதாக செய்தி வெளியானது. எனவே ஏற்கனவே கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டியின் விசாரணையை தடை செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், அதன் அறிக்கையினை வெளியிடக்கூடாது என்ற அவசரக் கோரிக்கை 10.05.2018 காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குற்றவியல் விசாரணையில் கவர்னர் சட்டவிரோதமாக தலையிடுகிறார். நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நபரை நீதிபதியே குறிப்பான உத்தரவின்றி விசாரிக்க முடியாது, சி.பி.சி.ஐ.டி., நீதிமன்றத்தில் மனு போட்டு அனுமதி பெற்றுத்தான் நிர்மலாதேவி உள்ளிட்ட நபர்களை விசாரணை செய்தது, ஆனால் எவ்வித உத்தரவுமின்றி கவர்னர் நியமித்த அதிகாரி சந்தானம், ஜெயிலுக்குள்ளேயே சென்று நிர்மலாதேவியை விசாரணை செய்தது, உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை. இப்பிரச்சினையில் உண்மையான குற்றவாளிகள் யார்? இதற்கு முன் இது போன்று பாதிக்கப்பட்டவர் விபரம் என்ன? இனிமேல் இதுபோன்று நடக்கவிடாமல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்ற வகையில் விசாரணை அமைய வேண்டும். அதனை உயர்நீதிமன்றம் கண்காணிப்பது மிக அவசியம் என்றும் பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

தமிழக அரசின் வழக்குரைஞரும், காமராசர் பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞரும் ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி வாதிட்டனர்.

காமராஜர் பல்கலைக் கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமிருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. துணைவேந்தர் நியமித்த குழுவை ஆளுநர் கலைத்துவிட்டதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. இப்போது கவர்னர் சட்டப்படி செயல்படுவதாக இருவரும் வாதிடுவது கேலிக்கூத்து என்று பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

நீண்ட வாதுரைக்குப் பின்னர் வழக்கினை விடுமுறைகாலம் முடிந்த பின்னர், ஜூன் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இதற்கிடையில் கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டி விசாரணை அறிக்கையினை வெளியிடக்கூடாது, “சீல்” செய்த கவரில் வைத்திருக்க வேண்டும், இவ்வழக்கின் உரிய உத்தரவுக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையினை முடிவு செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டனர்.

கல்வித்துறையே கலவித்துறையாகவும், கல்லாத்துறையாகவும் மாற்றப்பட்டிருப்பதன் ஒரு வெளிப்பாடுதான் நிர்மலாதேவி விவகாரம். SAVE MKU என்ற அமைப்பில் கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரோடு இணைந்து இவ்விசயத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் போராடி வருகிறது. இவ்வழக்கு அப்போராட்டத்தின் ஒரு பகுதி.

ஒன்றிரண்டு சிறிய மீன்களைக் காவு கொடுத்து விவகாரத்தை மூடிவிடுவதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பிரச்சினை குறித்து பேசும் பல்கலைக்கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் கிரிமினல் கும்பலை அடையாளம் காட்டுவதற்கே கூட மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து விடாப்பிடியாகப் போராட வேண்டும்.

நீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் இந்த இடைக்காலத் தீர்ப்பு என்பது அப்படி ஒரு போராட்டத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பு.

தகவல்:

வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !

பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம் !!

ந்திய ‘‘ஜனநாயகம்” பாதுகாப்பான நான்கு தூண்களின் மீது நிற்கிறது என்ற பொய்மை, அதன் மீது நம்பிக்கை கொண்டவர்களே பயந்து அலறும் விதத்தில் மிக வேகமாக நொறுங்கிச் சரிந்து வருகிறது.

இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அதிர்ச்சியில் உறைந்திருக்கும் அறிவுத்துறையினரும் அரசியல் கட்சிகளும் ‘‘நீதிமன்றத்தை மதிக்கிறோம்” என்ற அவர்களுக்கேயுரிய சம்பிரதாயச் சொற்றொடரைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையின் வெளிப்பாடுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் ‘‘இம்பீச்மென்ட் மோஷன்” எனப்படும் பதவி நீக்கத் தீர்மானம்.

இதற்கு முன் நீதிபதிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானங்கள் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பானவை. தற்போதைய தீர்மானத்திலும் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இருப்பினும், ‘‘தீபக் மிஸ்ரா தலைமையிலான ஒரு நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் முழுவதையும் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொண்டு, மோடி அரசுக்குத் துணை நிற்கிறது” என்பதே தற்போதைய தீர்மானத்தின் மையப்பொருள்.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ‘‘ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று பிரகடனம் செய்தபோது, அது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத நிகழ்வு என்று அதிர்ச்சியுடன் பேசப்பட்டது.

இந்நடவடிக்கை தீபக் மிஸ்ராவுக்கும் மோடி அரசுக்கும் அரசியல்ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், இருவருமே சமரசத்துக்கு இறங்கி வரவில்லை.

மருத்துவக் கல்லூரி ஊழலில் சி.பி.ஐ.-இடம் கையும் களவுமாகச் சிக்கியிருக்கும் தீபக் மிஸ்ராவும், லோயா வழக்கில் ஆதாரபூர்வமாக சிக்கியிருக்கும் மோடி- அமித் ஷா கும்பலும் ஒருவரையொருவர் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலையில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர்.

வாரிசுரிமை, சாதி, அரசு ஆதரவு, ஊழல் போன்ற தகுதிகளால் பதவியைப் பெற்றிருக்கும் நீதிபதிகளோ, மோடி கூட்டணிக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே, நான்கு மூத்த நீதிபதிகளின் குமுறல் ‘‘பரபரப்பு செய்தி” என்ற அளவுக்கு மேல் பாரிய விளைவு எதையும் ஏற்படுத்திவிடவில்லை.

நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கப்பட்டதை நான்கு நீதிபதிகள் வெளிப்படையாகவே விமரிசித்ததால், அந்த வழக்கை தனது தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றிக்கொண்டார் தலைமை நீதிபதி.

லோயாவின் மரணம் நிகழ்ந்த சூழல் குறித்து எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமலேயே ‘‘மரணத்தில் சந்தேகப்பட ஏதுமில்லை” என்று தீர்ப்பு வழங்கியது இந்த அமர்வு. அதுமட்டுமல்ல, மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மனுதாரர்கள் ‘‘நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக” அவர்களை எச்சரித்தது.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளிலிருந்து மூத்த நீதிபதிகள் திட்டமிட்டே ஒதுக்கப்படுகின்றனர் என்பதும், அரசுக்குச் சாதகமான தீர்ப்பு வருவதை உத்திரவாதம் செய்யும் விதத்தில் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே அவை ஒதுக்கப்படுகின்றன என்பதும் தீபக் மிஸ்ரா மீது கூறப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு.

தீபக் மிஸ்ராவால் இதுவரை நியமிக்கப்பட்ட 7 அரசியல் சட்ட அமர்வுகளிலும் அவர் இருக்கிறார். ஒன்றில் கூட கொலீஜியத்தின் மற்ற நான்கு நீதிபதிகள் இல்லை. மற்ற பல மூத்த நீதிபதிகளும் ஓரங்கட்டப்பட்டு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஒதுக்கப்படுகின்றன.

செல்லமேஸ்வர் அமர்வு விசாரித்து வந்த ஆதார் வழக்கிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். ரஞ்சன் கோகோய் விசாரித்து வந்த சி.பி.ஐ. இயக்குநர் நியமன வழக்கு அவரிடமிருந்து மாற்றப்பட்டது.

பாபர் மசூதி வழக்கிலும் மற்ற மூத்த நீதிபதிகள் விலக்கப்பட்டனர். மோடிக்கு எதிரான சகாரா-பிர்லா ஊழல் வழக்கு, பா.ஜ.க.-வினருக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்டிருக்கும் அருண் மிஸ்ரா அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. குட்கா வழக்கைப் போல மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தும், அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து மோடியைக் காப்பாற்றினார் அருண் மிஸ்ரா.

வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பயன்படுத்தும் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்து ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கையும் தானே விசாரித்த தீபக் மிஸ்ரா, ‘‘தலைமை நீதிபதி அரசமைப்பு சட்டத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால், சட்டப்படி அவர் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்று தீர்ப்புக் கூறி, நிர்வாகி என்ற முறையில் தான் செலுத்திவரும் சர்வாதிகாரத்தை, தன்னுடைய தீர்ப்பின் வழியாகவே சட்டபூர்வமானதாக மாற்றிக்கொண்டார்.

‘‘சட்டப்படிச் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்” என்று நகைக்கத்தக்க முறையில் தனது நல்லொழுக்கத்துக்கு சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமை நீதிபதி, மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் இலஞ்சம் வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுபவர்.

யாரும் தனக்குத்தானே நீதிபதியாக முடியாது என்ற இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறி, தனக்கெதிரான வழக்கைத் தானே விசாரித்துத் தள்ளுபடி செய்தவர், அவ்வழக்கு பிற நீதிபதிகளிடம் விசாரணைக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, தனது உத்தரவின் தேதியைத் திருத்தி போர்ஜரி செய்தவர்.

தானொரு நிலமில்லாத ஏழை பிராமணன் என்று பொய் சத்தியம் செய்து ஒரிசா அரசிடமிருந்து இலவச நிலம் வாங்கி, பிறகு மோசடி நிரூபிக்கப்பட்டு பிடிபட்டவர். அந்தக் குற்றத்தை மறைத்து நீதிபதி பதவியைக் கைப்பற்றியவர். மேற்சொன்ன குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆளான தீபக் மிஸ்ராவைத்தான் உத்தமர் மோடியின் அரசு பாதுகாக்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியத்தால் ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டவருமான உத்தர்கண்ட் தலைமை நீதிபதி மாத்யூ ஜோசப்பின் பெயரை நிராகரித்திருக்கிறது மோடி அரசு. ஏனெனில், அவர் உத்தர்கண்டில் மோடி அரசுத்தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததைத் தனது தீர்ப்பின் மூலம் ரத்து செய்தவர்.

கோபால் சுப்பிரமணியத்தை நீதிபதியாக விடாமல் தடுத்ததில் தொடங்கி இஷ்ரத் ஜகான் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயந்த் படேலை ராஜினாமாவுக்குத் தள்ளியது வரை நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக வாயிற்புறம் வழியே நுழைந்து நீதித்துறையைக் கைப்பற்றும் வாய்ப்பு தவறிப் போனதால், கொல்லைப்புறம் வழியே நீதித்துறைக்குள் நுழைகிறது மோடி அரசு.

நீதிபதி பதவியில் அமர்ந்திருக்கும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகளும், பதவி வேட்டைக்காரர்களும் கொல்லைப்புறக் கதவைத் திறந்து பார்ப்பன பாசிசத்தை வரவேற்கிறார்கள்.

இதற்கு நன்றிக்கடனாக, ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மான நோட்டீசை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது” என்று நிராகரிக்கிறார் வெங்கையா நாயுடு. நாயுடுவின் முடிவை எதிர்ப்பதாயின், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும்.

‘‘அந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தீபக் மிஸ்ராவுக்கு உண்டு” என்று கூறும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறித்துவிடுமென்று” கவலைப்படுகிறார்.

‘‘தலையை வேண்டுமானால் சீவி விடலாம். ஆனால், அது நீதித்துறையைப் பிடித்தாட்டும் தலைவலிக்கு மருந்தாகுமா?” என்று பதவி நீக்க தீர்மானம் குறித்து கேள்வி எழுப்புகிறார் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே.

நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பு மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கு இது மறுக்கமுடியாத நிரூபணம். நெருங்கி வரும் பாசிசத்துக்கும் இது முன்னறிவிப்பு.

-புதிய ஜனநாயகம், மே 2018