Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 440

இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும் !

பெட்ரோல் – டீசல் விலையுயர்வு : சென்னை கோயம்பேட்டிற்கு வந்த சிறுகடை உரிமையாளர்கள் கருத்து !

ண்ணாச்சி கடைன்னாலே நமக்கு எப்பவும் சொந்தகாரங்கள பாக்குறோம்ங்குற ஒரு நெனப்புதான். கடைக்கு பொருளு வாங்கப் போறோம்னா விலையக் கேட்டு, “இன்னா இம்மா வெல விக்கிற; பான வெல கேட்டா ஆனை வெல சொல்லுறியே”ன்னு சண்டையும் போட்டிருப்போம்.

கையில காசு இல்ல கணக்குல வச்சிக்கன்னு சொல்லியிருப்போம்… “இம்மாம் பொருளு வாங்கிருக்கனே கொஞ்சம் கொசுரு போட்டா கொறஞ்சியா போயிடுவா”ன்னு கொஞ்சம் அன்பாவும் கடிஞ்சிக்குவோம்.. இதையெல்லாம் காதுல வாங்கியும் வாங்காமலும் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பார் அண்ணாச்சி.

கோயம்பேடு சந்தை ( படம் – வினவு புகைப்பட செய்தியாளர் )

அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கும் அவர்களுடைய வாழ்க்கை இரவு பன்னிரண்டு மணிக்குதான் முடியும். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம். எழுந்ததும் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க பழைய ‘ஸ்கூட்டர்’ டி.வி.எஸ் 50-களை எடுத்துக்கொண்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்துவிடுவது சென்னையில் வழக்கம்.

அப்படி  கோயம்பேட்டில் இருக்கும் பெரியார் காய்கறி அங்காடிக்கு தினந்தோறும் வந்து செல்லும் சிறு வியாபாரிகள் மோடி அரசின் இந்த பெட்ரோல் விலையுயர்வை எப்படி சமாளிக்கிறார்கள்….

எம். ராகவன், திருமழிசை.

நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா இரண்டு தடவ வந்து போவேன். இப்ப இரண்டாவது தடவை வரதுக்கே இழுக்குது. காய்கறி வாங்கிட்டு போனா இரண்டு நாளைக்கு தாங்கும். ஆனா, கறிவேப்பிலை தாங்குமா? காய்கறி கடைக்கு பச்சயா இருந்தா தான் வருவாங்க. இதுக்குனாலும் இரண்டு நாளைக்கு ஒரு வாட்டி மார்க்கெட்டுக்கு வந்தாகனும். ஒரு முறை வந்தா மூவாயிரத்துக்கு சரக்கு போடுவோம். ஒரு கிலோ கோசு பதினைஞ்சி ரூபாய்க்கு வாங்குனா இருபதுக்கு விப்பேன். கேரட் பதினைஞ்சி ரூபாய்க்கு வாங்கி இருபதுக்கு விப்பேன். உருளை இருபதுக்கு வாங்கி இருபத்தஞ்சிக்கு விப்பேன். எல்லாம் அஞ்சி ரூபா லாபம் தான்.

இதுவே அழுகிப்போனா நமக்குதான் நஷ்டம். அதுக்கும் சேர்த்துதான் லாபத்துல எடுக்கணும்.  இப்ப பெட்ரோல் விலையும் கூட சேர்ந்திருக்கு. இதையும் ஜனங்க கிட்டதான் சேர்த்து வாங்கணும். வீட்டுல கடை இருக்கதால கொஞ்சம் சமாளிச்சிக்கலாம்.

இந்தக் கடை மட்டும் நமக்கு சோறு போடாது. இதை வச்சி பொழப்பு நடத்த முடியாது. கல்யாணத்துக்கு சமையல் வேலை  செய்வேன். அங்க போனா இரண்டாயிரம், மூவாயிரம் கிடைக்கும். இப்படித்தான் குடும்பத்த அட்ஜஸ் பண்ணி ஓட்டுறேன்.

இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும். கையில இரண்டு மூணு தொழில் இருந்தாதான் குடும்பத்தை நடத்த முடியும். அதான உண்மை.  சின்னதா காய்கறி கடை மட்டும் வச்சி வாழ்க்கைய நடத்துறவங்க தண்டல் வாங்கியே அழிஞ்சிடுவாங்க.

அப்துல் ரகுமான், போரூர், காய்கறி கடை வியாபாரி.

போட்டோ எல்லாம் எதுக்கு? இப்ப போட்டோ எடுத்து இன்னா பண்ண போறிங்க. விலைவாசி எல்லாம் ஏறிடுச்சி. நீங்க சொன்ன எல்லாம் இறங்கிடுமா. நாம சொன்ன எவன் குறைக்க போறான். போராட்டம் பிரச்சனன்னு நம்மள இழுத்து விட்டுடுவானுங்க. இதோடதான் வாழணும். நான் போறேன். எனக்கு வேலை இருக்கு.

பழனிசாமி, காசிமேடு.

மார்க்கெட்டு உள்ள கடை இருக்கு. தினமும் இரண்டு தடவை ஓ.எம்.ஆர் ரோட்டுல இருக்க கேண்டின், ஓட்டலுக்கு காய்கறி போட்டுட்டு வருவேன். ஒவ்வொரு  கடைகாரங்களும் மூவாயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்குவாங்க. இதுக்கு முன்னூறு ரூபா பெட்ரோல் ஆகும். இப்ப நானூறு ரூபா ஆகுது. இந்த செலவு எங்க கடை தலை மேலதான் விழும். நாங்க எதோ.. மார்க்கெட்டுல இருக்கதால பொழைக்கிறோம். சின்னக் கடை, தெருக்கடை எல்லாம் பிரச்சனை. பெட்ரோல் விலையேற்றம் எல்லாம் அவங்களுக்குதான் பெரிய பாதிப்பு.

காயத்ரி, வேளச்சேரி.

ஆமா, பெட்ரோல் விலைய ஏத்திட்டான்… எங்களை மாதிரி வியாபாரிங்க என்ன பண்றது? வாங்கி போட்டு அழறதுதான். அதோடதான் வியாபாரத்தை பார்த்துக்குனு இருக்குறோம். ஏற்கனவே ஜிஎஸ்டி, பணம் செல்லாது இதெல்லாம் பிரச்சனை. அதுலயே பாதி வியாபாரம் போயிடுச்சி. இப்ப மீதி வியாபாரம். பெட்ரோல் விலையேற்றத்துனால நெருக்கடிதான். ஒருநாளைக்கு ஐம்பது ரூபா நஷ்டம்னா நாம ஏத்துக்கலாம். தினமும் நஷ்டம்னா வாங்குறவங்க தலையிலதான் வைக்கணும்.. இதால வியாபாரம் பாதிக்கத்தான் செய்யும்.

சேகர், நெசப்பாக்கம்.

சொந்த ஊர் திருநெல்வேலி, ஏறக்குறைய இருபத்தி ஐந்து வருஷமா நானு மளிகை கடை வியாபாரம் பண்ணுறேன்.

இந்த மாதிரி அடிமேல் அடி இப்பதான் பாக்குறேன். காங்கிரசு பீரியட்ல நான் முப்பத்தி ரெண்டு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன். இப்ப எழுபத்தி எட்டுல வந்து நிக்குது. வியாபாரம் பல மடங்கு இப்ப இருக்கு. செலவுதான் அதிகமாவுது. மோடி ஏதோ வாய் ஜாலத்துல பிரதமரா வந்துட்டாரு. அவரு சொன்னதெல்லாம் நாங்க நம்புனோம். இப்ப எல்லோருக்கும் நஷ்டம்தான்.

பெரிசா நஷ்டம். நாங்க பொழக்கிறதே எங்களோட வியாபாரத் தந்திரத்தால்தான். கவர்மெண்ட் சப்போட்டு இல்ல. கடையில நாலு பொருளு வச்சிருந்தா அதை வாங்கின விலைக்கு ஐந்து பைசா கம்மியாவே கொடுப்போம். குறிப்பா பிராண்டட் அயிட்டம், எண்ணையில் கோல்டு வின்னர், அணில் சேமியா, இப்படி அதிகமா போறதுல லாபமே எடுக்காது. இதை வச்சி நாங்க பிராண்டு இல்லாத அயிட்டங்களை வித்தாதான் ஏதோ காசு கிடைக்கும். அதுலதான் ஐந்து ரூபா கிடைக்கும்.

மோடியை நம்பின ஜனங்க எல்லாம் மோசமா போயிட்டாங்க. அதை அவங்களே சொல்லுறாங்க.  நான் வியாபாரின்றதால நாலு மக்கள்கிட்ட பேசுவோம். ஒருத்தர் மோடியை முன்ன வாழ்த்துன மாதிரி வாழ்த்தல. நாம்ப மோசம் போயிட்டோம்னு அப்படி வெளிப்படையாவே சொல்லுறாங்க. ஏற்கனவே பழைய வியாபாரிங்கதான் இப்ப பொழைக்கிறாங்க. புதுசா கடை வச்சி எதுவும் பண்ண முடியாது.

அவங்க தண்டல் வாங்கி அழிய வேண்டியதுதான். என் கண்ணால் பார்த்திருக்கேன்… எவ்ளோ பேர் கடன் வாங்கிட்டு ஓடி போயிட்டாங்க.. நேத்து கூட பேப்பர்ல பார்த்திங்களா.? சாக்லேட் வியாபாரி கடன் தொல்லையால குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. இனி அதான் நிலமை. மோடிக்கு ஓட்டு போட்டு நாம ஆதரிக்கல.

ஆனா மோடி ஆட்சியில உட்கார வச்ச மத்த மாநிலத்துக்குகாறங்க தான் ரொம்பவும் பாதிக்கப்பட்டுட்டாங்க. அங்க வாழ முடியாம வடக்கே இருந்து வரவங்களே அதுக்கு சாட்சி.  அவங்கள இனிமேலும் மோடியால் வாய வச்சிக்கினு ஏமாத்த முடியாது. வர எலெக்சன்ல எல்லாம் தெரியப்போவுது பாருங்க.

பிரபாகரன், திருநின்றவூர்.

சொந்த ஊர் தூத்துக்குடி, இங்க வந்து கடை வச்சி இரண்டு வருஷம் ஆகுது. தினமும் நான் மளிகை பொருளு வாங்க மார்க்கெட்டுக்கு வருவேன். இங்க வந்து போக நாப்பத்தி எட்டு கிலோ மீட்டர். சரக்கை எல்லாம் மினி வண்டியில ஏத்தி அனுப்பிட்டேன். நான் சும்மா போகக் கூடாதுன்னு வண்டியில இந்த சரக்கை வச்சிருக்கேன்.

இது டபுள் செலவு..வேற இன்னா பன்றது. என்னோட கடை கொஞ்சம் மீடியமான கடைதான். ஊர்ல இருந்து ஆளுங்க கூட்டினு வந்து வேலை வாங்குறேன். அவங்க சாப்பாடு செலவு, கூலி ஐநூறு, சேர்த்து ஒரு ஆளுக்கு எட்டு நூறு ஆகுது. இந்த செலவை நாங்க ஜனங்க கிட்ட இருந்து வாங்கிப்போம்.

சாதாரண ஜனங்க வாழ்க்கைதான் கஷ்டம். அஞ்சாயிரம், ஆறாயிரத்துக்குள்ள குடும்பம் நடத்தியாவணும்னு பல பேர் இருக்காங்க. அவங்கதான் எங்க கஸ்டமர். இப்படியே விலையேறிட்டே போனா அவங்க கண்டிப்பா வாங்குற பொருளை குறைச்சிப்பாங்க. நாங்க எப்படியோ சமாளிக்கிறோம்.

சங்கத்துல இருந்து போராட்டம் பண்ண சொல்லுறாங்க நாங்களும் கடைய மூடுறோம். ஆனா விலை குறையிறதே இல்ல. இந்த கடையடைப்பால எங்க வருமானம்தான் போவுது. அன்னிக்கு கடை ஆளுக்கு சம்பளமும் தந்தாவணும். எவ்ளோ போராட்டம் பண்ணாலும் எந்த பலனுமில்லை. தீர்வு கிடைக்கிற மாதிரியான போராட்டத்தையும் பண்றதில்ல. இது அரசியல் கட்சிகாரனுங்களுக்கு தெரியாதா? அதால இவங்க மேலையும்  வெறுப்பா இருக்குது.

செந்தில், அரும்பாக்கம், சிவகாசி சொந்த ஊர்.

நான் அரும்பாக்கத்துல சின்ன மளிகை கடை வச்சிருக்கேன். அங்க ஒரு நாளைக்கு அஞ்சி மூட்டை அரிசி தேவைப்படும். அதை எடுத்துனு போக வருவேன். வாரத்துக்கு இரண்டு தடவை பெட்ரோல் போடுவேன். வந்து போக சரியா இருக்கும். இப்ப அதிக செலவுதான். அரிசி ஒரு ரூபா இரண்டு ரூபா லாபம் தான். ஆனா இதை சொல்லி விலை ஏத்த முடியாது. இதனால வர லாபத்துல நஷ்டம்தான் அடையுது. என்ன பண்றதுன்னு தெரியல.

நாம் சந்தித்த கடைக்காரர்கள் அனைவரும் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டதோடு, பொதுவில் விலைவாசி உயர்வினால் வியாபாரம் நன்கு நடக்கவில்லை என்பதையும் வேதனையோடு பேசுகிறார்கள். ஆனால் இதற்கு என்ன தீர்வு என்பதை பேசுவதில்லை. அப்படி பேசுவதற்கும் அவர்கள் வாழ்வில் இடமோ, நேரமோ, கருத்தோ இருப்பதில்லை. கடிவாளமிட்ட குதிரை போல வீடு – கடை – சந்தை என்று சுற்றி வருகிறார்கள். போராடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. அப்படி போராடுமளவு அவர்கள் அரசியலால் இணைக்கப்படவில்லை. மோடியை வெறுப்பதோடு எந்தக்கட்சியும் சரியில்லை எனும் பொதுக்கருத்தும் அவர்களிடம் வேரோடி இருக்கிறது. யாராவது தேவதூதன் வந்து இந்த பிரச்சினையை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. ஒருவகையில் தோல்வியையும், இழப்புக்களையும் ஏற்றுக் கொண்டே வாழ்வது எனும் ஓட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு?

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்

பந்தய மூலதனம் – 4

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன் பஃபெட், இதற்கு முன் ஹர்ஷத் மேத்தா இவர்கள் எல்லாம் பணத்தை குட்டி போட்டு பெருகச் செய்யும் மந்திரவாதிகள் என்று வணிக பத்திரிகைகளால் கொண்டாடப்படுபவர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருப்பவர்கள். 1980-களின் இறுதியில் ஹர்ஷத் மேத்தாவை “பங்குச் சந்தையின் அமிதாப் பச்சன்” என்று அவரது பக்தர்கள் கொண்டாடுவதாக இந்தியா டுடே பத்திரிகை குறிப்பிட்டது. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக, முதல் பங்குச் சந்தை வித்தகராக சாகசம் செய்த ஒருவரின் கதையை பார்ப்போம்.

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை குடியேற்றுவதை தனது தொழிலாகக் கொண்டு தொடங்கப்பட்டது அந்தக் கம்பெனி.

ஜான் லோ

ஜான் லோ

இந்நிறுவனம் அதே காலகட்டத்தில் செயல்பட்ட இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி போலவோ, ஹாலந்தின் கிழக்கிந்திய கம்பெனி போலவோ கம்பெனியின் பங்குகளை தமக்குள்ளாகவே பிரித்துக் கொண்டுள்ள வணிகர்களின் சிறு குழுவின் சங்கம் அல்ல. மிசிசிப்பி கம்பெனியின் பங்குகள் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு விற்கப்பட்டது. அந்த பங்குகளை வாங்கி விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மிசிசிப்பி கம்பெனி ஆரம்பிப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் முதல் வங்கியான ராயல் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. ராயல் வங்கியையும், மிசிசிப்பி கம்பெனியையும் ஆரம்பித்தவர் ஜான் லோ என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்ப்பது போல “கூல்” ஆக சூதாடுவதில் திறமை படைத்தவர். ஸ்காட்லாந்திலும், இங்கிலாந்திலும் பல திருவிளையாடல்களை செய்து விட்டு ஐரோப்பிய கண்டத்துக்கு தப்பி ஓடுகிறார்.

நமது காலத்தின் நீரவ் மோடி அல்லது விஜய் மல்லையா அல்லது தாவூத் இப்ராகிம் போன்றவர்களை இவரோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். இவர்கள் எங்கு சென்றாலும் அந்தப் பகுதி பணக்கார வட்டங்களில் இடம் பிடித்து விடுகின்றனர். தமது துணிச்சலான, அடாவடியான திட்டங்கள் மூலம் பணத்தை குவித்து விடுகின்றனர்.

அரசால் ஆதரிக்கப்பட்டு, நம்பகமானது என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு வங்கி தன் வசம் இருக்கும் வைப்புத் தொகைகளை விட பல மடங்கு அதிகம் கடன் கொடுப்பது சாத்தியம் என்பதை ஜான் லோ பயன்படுத்திக் கொண்டார். வங்கிகளின் இந்த செயல்பாடு முதலாளித்துவ சமூகத்தின் கடன் கட்டமைப்புக்கும், கூட்டு பங்கு நிறுவனங்களை உருவாக்கி பெரிய பெரிய புராஜக்ட்களை தொடங்கவும் அடிப்படையாக உள்ளது. அதன் அடிப்படை வடிவம் fractional banking என்று அழைக்கப்படுகிறது.

பிரான்சில் அதிகாரத்தில் இருந்த ஆர்லியன்ஸ் கோமகனின் ஆதரவுடன், அரசின் ஆதரவை பின்புலமாகக் கொண்டு ராயல் வங்கியையும், மிசிசிப்பி கம்பெனியையும் ஒன்றை ஒன்று தாங்கிப் பிடிக்கும்படி ஆரம்பித்தார், ஜான் லோ.
மிசிசிப்பி கம்பெனியில் பங்குகளை வாங்குவதற்கு ராயல் வங்கி முதலாளிகளுக்குக் கடன் கொடுத்தது. அந்தக் கம்பெனியின் நிதி விவகாரங்களயும் இந்த வங்கி கவனித்துக் கொண்டது. இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை லோ கவனித்துக் கொண்டார்.

அதாவது கம்பெனியின் பங்குகளை ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் வாங்கினாலும் அவர்களால் நிர்வாகத்தை நேரடியாக கட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் இருந்தது. லோ மற்றும் அவரது கூட்டாளிகளான சிலரும் நிறுவனத்தின் மேலே உட்கார்ந்து கொண்டு தொழிலை நடத்தினார்கள்.

கம்பெனி பங்குகளை வெளியிட்டு ஒரு வருடத்துக்குப் பிறகு அவை சந்தையில் 250 விலைக்கு வாங்கி விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தக் கட்டத்தில் லோ 6 மாதங்களுக்குப் பிறகு 200 பங்குகளை 500-க்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். 6 மாதங்களுக்குப் பிறகு 500-க்கு விற்கலாம் என்று ஆசைப்பட்டு பலர் போட்டி போட்டு பங்குகளை வாங்க அவற்றின் விலை தாறுமாறாக ஏறியது.

ஏகாம்பரம், சுப்பிரமணி குரங்கு வியாபாரம் நினைவுக்கு வருகிறதா? சமகாலத்தில் இதை share buyback என்று அழைக்கின்றனர். நமது காலத்தில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல், எல்&டி இன்ஃபோடெக் போன்றவை தம் வசம் குவிந்திருக்கும் லாபத்தை ஈவுத் தொகையாக கொடுக்கவில்லை. மாறாக, அந்தப் பணத்தை பயன்படுத்தி சந்தையில் தம் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் அவற்றின் விலையை உயர்த்துகின்றன.

மிசிசிப்பி பள்ளத்தாக்கில் நியூ ஆர்லியான் என்ற நகரத்தை இந்தக் கம்பெனி உருவாக்கியது. அங்கு குடியேற்றுவதற்காக பிரான்ஸ் அரசு தண்டிக்கப்பட்ட போக்கிரிகளையும், திருடர்களையும், விபச்சாரிகளையும் கட்டாயமாக அங்கு அனுப்பி வைத்தது. கம்பெனியின் திட்டத்துக்கு அரசு முட்டுக் கொடுக்கிறது.

நொடித்துப் போகும் நிலையில் இருந்த இன்னும் சில பிரெஞ்சு காலனிய கம்பெனிகளை லோ வாங்கினார். செலவழிப்பதற்குத்தான் பிரச்சனையே இல்லையே. நோட்டு அடிக்கும் வங்கியே இவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவ்வாறாக, மிசிசிப்பி கம்பெனி காலனிய வர்த்தகத்தில் ஏகபோக கம்பெனியாக மாறியது.

அந்தக் கால பிரான்சில் அரசு வரி வசூலிக்கும் உரிமையை முதலாளிகளுக்கு ஏலம் போட்டு வழங்கியது. அதை பயன்படுத்தி மிசிசிப்பி கம்பெனி வரி வசூலிக்கும் குத்தகையை எடுத்து மக்களை கசக்கிப் பிழிந்து பணத்தை குவித்தது.

நியூ ஆர்லியான் நகரம் பற்றிய கவர்ச்சிகரமான பிரசுரங்களை லோ அச்சிட்டு வெளியிட்டார். “மிசிசிப்பி பள்ளத்தாக்கு கற்பனைக்கெட்டாத வளம் கொழிக்கும் நாடு. அங்கே வசிப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்; நாம் கொடுக்கும் சில சொற்ப விலையிலான பொருட்களுக்கு பதிலாக தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை கொடுக்கிறார்கள்.”

“மிசிசிப்பி கம்பெனியின் கப்பல்கள் வெள்ளியையும், பட்டுத் துணிகளையும், வாசனைத் திரவியங்களையும், புகையிலையையும் பிரான்சுக்குக் கொண்டு வந்து குவிக்கின்றன” என்றெல்லாம் அந்த பிரசுரங்கள் மிசிசிப்பி பள்ளத்தாக்கின் பெருமைகளையும், அதில் மிசிசிப்பி கம்பெனியின் ஈட்டும் லாபத்தையும் வானுயரத்துக்கு ஏற்றி புகழ்ந்தன.

அரசு ஆதரவு, பரபரப்பான விளம்பரங்கள், சந்தையில் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இவற்றின் மூலமாக கம்பெனி குறைவான ஈவுத் தொகையை கொடுத்து வந்தாலும், 4 ஆண்டுகளிலேயே அதன் பங்கு விலை பலூன் போல மேலே ஏறியது. சந்தை நிலைமையை திறமையாக கணித்து மேலும் புதிய பங்குகளை லோ வெளியிட்டார். மேலும் மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்தார். புதிய பங்குகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் கம்பெனியின் அலுவலகத்துக்கு முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் இரவு பகலாக காத்துக் கொண்டு நின்றனர். இவ்வளவுக்கும் 500 மதிப்பிலான பங்கு 5000-க்கு விற்கப்பட்டது.

செல்வாக்கு மிக்கவர்கள், பிரபு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகளை 5000-க்கு வாங்கி அடுத்த நாளே பங்குச் சந்தையில் 6,000 7,000-க்கு விற்று விட போட்டி போட்டனர். 500 மதிப்பிலான பங்கின் விலை 10,000-க்கும், 15,000-க்கும் அதற்கும் மேலே போய் 20,000-க்கும் உயர்ந்தது.

புதிய பங்குகளை வெளியிட்டு ஈட்டிய பணத்தில் ஒரு சிறுபகுதி மட்டுமே மிசிசிப்பி கம்பெனி கப்பல்கள் வாங்கவும், சரக்குகளை வாங்கவும் செலவிடப்பட்டது. ஆனால், பெரும்பகுதி பிரான்ஸ் அரசின் செலவுகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டது. பிரான்ஸ் அரசின் கடன் பத்திரங்களை வாங்கியவர்களிடமிருந்த அவற்றை வாங்கியதன் மூலம் கம்பெனியே ஒட்டு மொத்தக் கடனையும் சமாளித்தது. அரசுக்கு புதிய கடனையும் வாரி வழங்கியது. மிசிசிப்பி கம்பெனியும், ராயல் வங்கியும், அரசும் இணைந்து யாருடைய தலையிலோ மிளகாய் அரைக்கின்றனர்? யாராயிருக்கும்?

இந்நிலை நீண்ட நாள் நீடிக்க முடியவில்லை. லோ போன்ற பிற பந்தய வணிக ‘திறமைசாலிகள்’ இந்த குழப்பத்துக்குள் புகுந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர். தம் வசம் இருந்த பங்குகளை அதிக விலைக்கு தள்ளி விட்டனர். பணத்தை பிற சொத்துகளில் முதலீடு செய்து ஒதுக்கினர். பங்கு விலை விழுந்து விடாமல் இருக்க லோவின் ராயல் வங்கி நோட்டுகளை அச்சடித்து குவித்தது.

ஒரு ஆண்டுக்குள் வங்கி நோட்டுகளின் மதிப்பு குறைந்து பண வீக்கம் தலை விரித்து ஆடியது. எல்லா பொருட்களின் விலைகளும் வேகமாக மேலே ஏறின. பாரிசில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த காகித நோட்டுக்கள் பெருமளவில் பொதுமக்கள் மத்தியில் வினியோகமாகியிருந்தன. கைவினைஞர்கள், சிறு வணிகர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், ஏன் விவசாயிகளும் கூட சிறு தொகைகளாக கணிசமான காகிதப் பணத்தை சேர்த்து வைத்திருந்தனர். அவர்களது சேமிப்புகளும், வருவாயும் செல்லாக் காசாகி விட்டன. மறுபக்கம் ஒரு சில திடீர்ப் பணக்காரர்கள் இந்த சூதாட்ட வெறியில் பெருமளவு சொத்துக்களை குவித்து விட்டனர்.
அந்த ஆண்டு இறுதியில் வங்கி நோட்டுகளை யாரும் மதிக்காத நிலைமை ஏற்பட்டது. லோவின் வங்கியும், கூட்டுப் பங்கு நிறுவனமும் இழுத்து மூடப்படுவது ஆரம்பமானது.

இந்த சிறு வரலாற்றின் அனைத்து பாத்திரங்களையும் கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். அரசு ஆதரவு, வங்கிக்கும் கூட்டுப் பங்கு கம்பெனிக்கும் தொடர்பு, பங்கு விலைகளை ஏற்றுவதற்கு கம்பெனி எடுக்கும் நடவடிக்கைகள், கம்பெனி பற்றிய மிகையான விளம்பரங்கள், பங்கு விலையை வாங்குவதற்கு போட்டி, ஒரு சில திடீர் பணக்காரர்கள் தோற்றம், பெருமளவு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுதல், பண வீக்கம், விலை வாசி உயர்வு, பெரும்பகுதி சிறு முதலீட்டாளர்கள் சேமிப்புகளை இழத்தல் – இது கூட்டுப் பங்கு கம்பெனிகள், பங்குச் சந்தை நடைமுறைகளில் தவிர்க்க இயலாமல் மீண்டும் மீண்டும் நடந்து வரும் விஷயங்கள்.

பங்கு நிறுவனங்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தையும் வகிக்கின்றன. மேலே சொன்ன வரலாற்றில் நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்தை உருவாக்கி வளர்ப்பதற்கு இந்த கூட்டுப் பங்கு முறை பயன்பட்டது. அது போல, ரயில்வே, பெரிய கட்டுமான திட்டங்கள், ஆலைகள் போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒற்றை முதலாளியின் மூலதனம் போதாத நிலையில் பலரிடமிருந்து பணத்தைத் திரட்டுவதற்கு இது ஒரு நல்ல உத்தியாக பயன்பட்டது, பயன்படுகிறது.

ஜான் லோவின் வங்கியும், பங்கு நிறுவனமும் காலத்திற்கு முந்தியவை. 18-ம் நூற்றாண்டு பிரான்சில் அவை 4-6 ஆண்டுகள் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டிலும் கூட்டுப் பங்கு நிறுவனங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. இன்றைக்கு உலகின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துவது வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும், கூட்டுப் பங்கு நிறுவனங்களும், பங்குச் சந்தை வர்த்தகமும் என்று ஆகி விட்டிருக்கிறது.
எப்படி என்று பார்க்கலாம்.

இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள ஜான் லோ பற்றிய முழுமையான விபரங்களுக்கு அ.அனிக்கின் எழுதிய “அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம்” (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ 1983) என்ற புத்தகத்தை பார்க்கவும்.

ஜான் லோ குறித்து சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு ஆங்கிலக் கட்டுரை  – John Law: the Scottish gambler who rescued France from bankruptcy

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

வங்கதேச ரோஹிங்கிய அகதிகளின் இன்றைய நிலை – படக்கட்டுரை

பாலுகலி அகதிகள் முகாமின் குறுக்கே செல்லும் செங்கற்களால் கட்டப்பட்ட நடைபாதை. உணவு பகிர்மான மற்றும் சேமிப்புக்கிடங்குகளை நன்கு இணைப்பதற்காக முகாம்களில் உள்ள சாலைகளை மேம்படுத்தவும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அவசர கால சேவைகளுக்காகவும் ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank) 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வங்கதேச அரசுக்கு உதவியாக 700 கோடி ரூபாய் கொடுத்தது.

மியான்மர் இராணுவத்தின் கொடுமையான அடக்குமுறைகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக மியான்மரின் ரக்ஹினே மாநிலத்தை சேர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம் மக்களின் 90 விழுக்காட்டினர் வங்கதேசம் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மர் இராணுவத்தின் இச்செயலை “இன அழிப்புக்குப் பொருத்தமான உதாரணம்” என்று ஐக்கிய நாடுகள் அவை விவரிக்கிறது.

கொடூரமான வன்முறைகள், எரிக்கப்பட்ட கிராமங்கள், படுகொலைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் என ஏராளமான நினைவுகளுடன் சுமார் ஏழு இலட்சம் ரோஹிங்கிய அகதிகள் கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்திலிருந்து வங்கதேச எல்லையை கடந்துள்ளனர் .

ஒராண்டிற்கு முன்னதாக வங்கதேசம் வந்தவர்களையும் சேர்த்தால் மொத்தமாக வங்கதேசம் தஞ்சமளித்துள்ள ரோஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 9,60,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிவரம். ஆனால் எண்ணிக்கை 10 இலட்சத்தையும் தாண்டும் என்கிறார்கள் வங்கதேச அதிகாரிகள்.

சமீபத்தில் வந்து சேர்ந்த அகதிகள் குதுப்பாலாங்-பாலுகலி (Kutupalong-Balukhali) வளாகத்தில் உள்ள மெகா முகாம்(Mega Camp) என்றழைக்கப்படும் இடத்தில் மிக நெருக்கமாக தங்கியுள்ளனர். 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அம்முகாம் புகலிடம் அளித்துள்ளது.

வங்கதேச எல்லைப்புற முகாம்களில் தங்கியிருக்கும் ஒரு இலட்சம் ரோஹிங்கிய அகதிகளை பாசன் சார்(Bhasan Char) என்ற நதித்தீவில் தங்க வைக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. வங்காள விரிகுடாவிற்கு அருகில், 20 ஆண்டுகளுக்கு முன்னதாக வண்டல் மண்ணில் தோன்றிய ஒரு தீவுதான் பாசன் சார். ஆனால் மக்கள் வசிப்பதற்கு தகுதியற்ற ஆளரவமற்ற தீவு அது.

குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக சுமார் 2,000 கோடி ரூபாய் அங்கு செலவு செய்ய இருப்பதாக வங்கதேச அரசு கூறியிருக்கிறது. ரோஹிங்கிய அகதிகள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு அத்தீவினை வங்கதேச மக்கள் பயன்படுத்தலாம் என்று மேலும் கூறியிருக்கிறது.

அனால் வங்கதேச அரசின் இந்த அறிவிப்பு மனித உரிமை அமைப்புகளிடம் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. கடுமையான அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக எந்த ஒரு உட்கட்டமைப்பு வசதி செய்வதற்கும் அத்தீவு தகுதியற்று இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்(Human Rights Watch) கூறுகிறது.

இது ஒருபுறமிருக்க ரோஹிங்கிய அகதிகள் மீதான மனிதத்தன்மையற்ற கொடுமைகள் நிகழ்ந்து ஓராண்டிற்கு பிறகும் தன்னுடைய அரசின் நடவடிக்கைகளை ஆங் சன் சூ கீ (Aung San Suu Kyi) ஆதரித்தே வருகிறார். மேலும் மியான்மர் இராணுவம் நிகழ்த்திய கொடுமைகளை தொடர்ந்து அவர் மறுத்து வருகிறார்.

******

விறகு சுமந்து வரும் ரோஹிங்கிய அகதி. உணவு சமைப்பதற்கு விறகைதான் ரோஹிங்கிய அகதிகள் நம்பி உள்ளனர். இது வங்கதேச எல்லை மாவட்டமான காக்ஸ் பஜாரில் (Cox’s Bazar) சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

முகாம்களை சுற்றியுள்ள காடுகளில் விறகுகளை சேகரிக்க துணிந்து செல்லும் ஒவ்வொரு முறையும் சுமார் 8 கிலோமீட்டர் தூரம்வரை நடக்கின்றனர் ரோஹிங்கிய அகதிகள்.

சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வங்கதேச அதிகாரிகளுடன் சேர்ந்து முகாமில் உள்ள அகதிகளுக்கு சமையல் எரிவாயு உருளைகளை வழங்க தொடங்கியிருக்கிறார்கள்.

பாலூகலி முகாமின் உள்ளே தங்களுடைய தங்குமிடத்திற்கு வெளியே தன்னுடைய இளைய மகனுக்கு முடியை வெட்டி விடுகிறார் ரோஹிங்கிய அகதி ஒருவர். அங்கு வசிக்கும் ஒட்டுமொத்த மக்களில் 55 விழுக்காட்டினர் சிறுவர்கள் என்று ஐநா அகதிகள் முகமை கணக்கிட்டுள்ளது

5 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கிய அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று  ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடையத் தொடங்கி ஓராண்டு முடிவுற்றதைக் குறிக்கும் தமது ஆண்டறிக்கையில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்(UNICEF) தெரிவித்துள்ளது.

5,500-க்கும் மேலான குடும்பங்கள், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களால் நடத்தப்படுகின்றன என்பதை ஐ.நாவின் அகதிகள் முகமை (UNHCR) 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடத்திய குடும்பக் கணக்கெடுப்பில் கண்டறிந்தது.

பாதிக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய அகதிகள், வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மழைக்காலத்தை ஒட்டி வரும் நோய்களை எதிர்கொள்ள கிஞ்சித்தும் தயாராக இல்லை என்பது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஆக்ஸ்பாம்(Oxfam) தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

9 இலட்சம் அகதிகளில் 2 இலட்சம் அகதிகள் வெள்ள மற்றும் நிலச்சரிவு அபாயங்களில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 24,000 அகதிகள் பேராபத்தில் இருப்பதாகவும் கருதப்படுகிறார்கள்.

தங்களது வாழ்வாதாரத்திற்காக முகாம்களில் கடைகளை திறந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகள்.

குதுப்பாலாங் முகாமில் உள்ள ஒரு சந்தையில் மீன் விற்கும் ரோஹிங்கிய அகதி.

தெற்கு காக்ஸ் பசார், டெக்னாப்பில்(Teknaf) உள்ள நயாபாரா முகாமிற்கு வெளியே உள்ள உள்ளூர் சந்தை இது. அங்கு ரோஹிங்கிய அகதிகளே பெரும்பான்மையான கடைக்காரர்களாக உள்ளனர்.

அகதிகள் முகாம்களை சுற்றியிருக்கும் சிறிய ஓடைகளில் பிடிக்கப்பட்ட நன்னீர் இறால்களை விற்கும் ரோஹிங்கிய அகதி.

குதுப்பாலாங் முகாமில் உள்ள ரிக்‌ஷா ஓட்டும் ரோஹிங்கிய அகதி இவர். பெரும்பான்மையான ரிக்‌ஷா ஓட்டிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களை வெளியே அழைத்து செல்வதற்கு முறையான அனுமதி கிடையாது. ஆனால் வெளியிலிருந்து “மெகா முகாமிற்கு” அழைத்து வருவதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு.

ஐக்கிய நாடுகள் அவையைப் பொறுத்தவரை குதுப்பாலாங்-பாலுகலி அகதிகள் குடியேற்றம் என்பது உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மட்டுமல்ல உலகிலேயே மிக அடர்த்தியாக மக்கள் வசிக்கும் அகதிகள் முகாமாகும்.

  • நன்றி : அல்ஜசீரா 
  • படங்கள் : சோரின் ஃபர்கொய் / அல்ஜசீரா
  • தமிழாக்கம் : வினவு செய்திப் பிரிவு

சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !

சுக்மாவில், ஆகஸ்ட்6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என்கவுண்டரில் 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக நக்சல் எதிர்ப்புப் படை டி.ஐ.ஜி டி.எம். அவஸ்தி கூறினார். ஆனால் கோம்பத், நல்கடோங், வெல்போச்சா, கிண்டர்பாத் மற்றும் எடகட்டா கிராம மக்கள் அதனை மறுக்கின்றனர். அங்கு நடத்தப்பட்ட பயங்கரத்தை அவர்கள் விவரிக்கின்றனர்.அங்கு விசாரிக்கச் சென்ற ஒரு உண்மை கண்டறியும் குழுவுடன் இணைந்து பத்திரிகையாளர்களோடு சென்ற, தி லீஃப்லெட் இணையதளத்தின் கிரித்திகா அகர்வால்,பாதுகாப்பு என்ற பெயரில் குற்றமற்றவர்கள் மீதான கண்ணுக்குத் தெரியாத மற்றும் இதுவரை கேட்டறியாத அநீதியான வன்முறைகளை கிராம மக்களிடம் கேட்டு பதிவு செய்துள்ளார்.

 அன்புக்குரியவர்களின் இழப்பு, சிதைக்கப்பட்ட உடல்களின் நினைவுகள் மற்றும் பதிலில்லா கேள்விகள் என இழப்புகள் மற்றும் அதிர்ச்சிகளால் நிறைந்த கதைகளால் பஸ்தாருக்கு (Bastar) செல்லும் சாலை நிரப்பப்பட்டுள்ளது.

மாவட்ட ரிசர்வ் படையால் (District Reserve Guards) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க என்கவுண்டரில் 15 மாவோயிஸ்டுகள் 2018, அகஸ்டு, 6-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதாக நக்சல் எதிர்ப்புப்படை டி.ஐ.ஜி.  டி.எம் அவஸ்தி கூறினார். ஆனால் அக்கிராம மக்கள் தங்களுக்கு நேர்ந்த பயங்கரத்தை விவரிக்கின்றனர். 

பஸ்தார், உலகின் மிகவும் இராணுவமயமான பகுதிகளில் ஒன்று.

பசுமையான தண்டகாரண்யா காடுகளின் பின்னணியில் சுக்மாவிலிருந்து (Sukma)கொண்டா(Konta) வரைக்கும் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பரவியிருக்கும் மத்திய ரிசர்வ் படை மற்றும் காவல்துறையினரின் முகாம்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம். வாகனங்கள் செல்லத்தக்க சாலைகளின் எல்லைகளை நெருங்க நெருங்க முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருக்கும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கிகளை தங்களது முதுகில் தொங்கவிட்டு அணிவகுத்துச் செல்வது போர் பகுதிக்கு வந்துவிட்டது போல தெரியும்.பெயர்கள் மற்றும் அலைபேசி எண்களை தொடர்ந்து பதிவு செய்வதையும் சில நேரங்களில் அடையாள அட்டைகளை கேட்பதையும் பார்த்தால் கண்காணிப்பிற்குள் இருப்பதைப் போலவும் ஏதோ வரக்கூடாத இடத்திற்கு வந்ததைப் போலவும் ஒரு அச்சஉணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

காட்டில் மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பதை வெட்டிச் சாய்க்கப்பட்ட இத்தகைய மரங்கள் குறிக்கின்றன.

இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கைப்படி சத்தீஸ்கரில் தற்போது 31 சி.ஆர்.பி.எப் படைப்பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படைப்பிரிவும், அடர்ந்த காடுகளில் சண்டையிடும் திறன் படைத்த கோப்ரா (CoBRA)படையணிகளையும் உள்ளடக்கிய 1000 படையணிகளுக்கும் மேல் கொண்டது. மாவோயிஸ்டுகளின் எல்லைப்பகுதிகள் மற்றும் அப்பகுதி மக்களது கலாச்சாரங்களை தெரிந்துக்கொlள்வதற்காக முறையாக பயிற்சியளிக்கப்படாத பஸ்தார் பழங்குடி மக்களை கொண்டு உருவாக்கப்பட்ட பஸ்தாரியா படைப்பிரிவு கடந்த 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.2018, ஆகஸ்டு மாத இறுதியில் இன்னும் ஏழு படைப்பிரிவுகள்குவிக்கப்பட இருந்தன. ஆந்திரப்பிரதேசத்தின் ‘வேட்டை நாய்கள் (Greyhound)’ வரிசையில் சத்தீஸ்கரும் சொந்தமாக ‘கருஞ்சிறுத்தை (Black Panther)’ என்றழைக்கப்படும் சிறப்பு நக்சல் எதிர்ப்புப் படையை பெற உள்ளதாக 2018, மே 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

’சத்தீஸ்கர் உலகிலேயே மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்’ – இப்பகுதிக்கு செல்லும் எவரிடமிருந்தும் நழுவமுடியாத உண்மை இது.

கோம்பாத் கிராமம், மேக்தா பஞ்சாயத்து

வாகனங்கள் செல்லும் சாலைகூட கோம்பாத்(Gompad) கிராமத்தில் கிடையாது. அனைத்து சாலைகளும் கொண்டா கிராமத்தோடு முடிந்து விடுகின்றன. அதன் பிறகு மாவோயிஸ்டுகளின் எல்லை தொடங்குகிறது. கடைசி வாகனச் சாலையின் எல்லையிலிருந்து அடர்ந்த பசுமையான காட்டினை கடந்து 20-25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கோம்பாத். ஆறுகள், வயல்வெளிகள், காட்டுப்பகுதிகள் மற்றும் சகதியான பாதைகள் என மழைக்காலத்தில் அந்த 20-25 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கவே வெளியாட்களுக்கு 6 மணி நேரம் பிடிக்கும். கீழே விழுந்திருக்கும் மரங்கள்தான் நக்சல்கள் இருப்பதற்கான பொதுவான அடையாளம். கோம்பாத்திலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருக்கும் கிராமம்தான் நல்கடாங். இதன் அருகாமையில்தான் மோதல் கொலைகள் நடந்ததாகச் சொல்லப்படும் இடம் உள்ளது.

பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் உடல்கள்.

நடத்தப்பட்ட 15 மோதல் கொலைகளாக சொல்லப்படுவதில் தலா ஆறு பேர் கோம்பாத்தையும் நல்கடாங்கையும் சேர்ந்தவர்கள். மேலும், வெல்போச்சாவை சேர்ந்த ஒருவர், எடகாடாவை சேர்ந்த ஒருவர் மற்றும் கிண்டர்பாத்தை சேர்ந்த மற்றொருவர் என அனைவரும் சுக்மா மாவட்டத்தின் ’கொண்டா’ போலீசு நிலைய எல்லைக்கு உட்பட்டவர்கள். சொல்லப்படும் மோதல் கொலைகள் நடந்த இடத்திற்கு அருகிலிருக்கும் நல்கடாங் கிராமம் கோண்டாவிலிருந்து 20-25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மிகப்பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையாக இதைக் குறிப்பிடுகிறார் சிறப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளரான டி.எம் அவஸ்தி. “காலை 7 மணிக்குப் பிறகு ஒருமணி நேரம் இருதரப்பிற்கும் துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச்சூடு தொடங்கிய பிறகு மற்றொரு குழுவையும் அங்கு அனுப்பினோம். அங்கே நாங்கள்15 உடல்களையும் 16 ஆயுதங்களையும் கைப்பற்றினோம்” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். “அங்கே மொத்தம் 170 பாதுகாப்புப் படையினர் இருந்தனர். ’கொண்டா’விலிருந்து ஒரு படைக்குழுவும் பீஜியிலிருந்து 2 படைக்குழுக்களும் சென்றன. மூன்று மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் பிரிவுகளும்(District reserve Guards) ஒரு சிறப்பு நடவடிக்கைப் படையினரும்(Special Task Force) அதிலிருந்தனர்” என்று அவர் ’தி லீப்லெட்டுக்கு’(The Leaflet) அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆனால் இச்சம்பவம் கிராம மக்கள் கூறுவது இதற்கு முற்றிலும் வேறுபட்டது. நடந்தேறியது ஒரு போலி மோதல் கொலைதான் என்றும் கொலையானவர்கள் அனைவரும் சாதாரண கிராம மக்கள், அதிலும் பெரும்பாலானோர் சிறுவர்கள்தான் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

2018,  அகஸ்டு, 6 – கோம்பாத் கிராம மக்கள் மறக்க முடியாத நாள்

அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் இருப்பு என்பது கிராம மக்களை பொறுத்தவரையில் ஒரு பெரும் பயங்கரத்தின் இருப்பாகும். ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி காலையில் கோம்பாத் கிராமத்தின் உள்ளேயும் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தி அப்பகுதி முழுதும் பரவியது. பாதுகாப்புப் படையினரால் நக்சல் என்று பொய்யாக முத்திரைகுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்படவோ கைது செய்யப்படவோ கூடும் என்பதால் கிராமங்களில் இருந்து காடுகளுக்குள்ளோ அல்லது பக்கத்து கிராமங்களுக்கோ ஓடி ஒளிந்து கொள்வது ஆடவரின் வழக்கம். இந்த அச்சமே பஸ்தாரின் ஆன்மாவை ஆக்கிரமித்துள்ளது.

பஸ்தார் பகுதிவாழ் பெண்களின் அனுபவம் ஆண்களைக் காட்டிலும் வேறாக இருப்பதை கண்டிப்பாக இங்கே குறிப்பிட வேண்டும். பாதுகாப்புப் படைகள் கிராமங்களுக்குள் நுழைந்தவுடன் கிராமத்தையும், வீடுகளையும், குழந்தைகளையும், வயதானவர்களையும், கால்நடைகளையும் மேலும் அவர்களிடம் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அனைத்தையும் பெண்கள்தான் அங்கேயே இருந்து பாதுகாக்க வேண்டி இருக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட முச்சாகி முகேஷின் தாய் முச்சாகி சுக்ரி.

“பெண்களையும் சிறுமிகளையும் தவறான நோக்கில் அவர்கள் தொடுவார்கள். பாதுகாப்புப்படைகள் கிராமத்திற்குள் நுழைகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததுமே கிராமப் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறோம். அவர்கள் எங்களது வீட்டிற்குள் பலாத்காரமாக நுழைந்து எங்களது கால்நடைகளை கொன்று சமைத்து சாப்பிட்டனர்” என்கிறார் நல்கடாங்கை சேர்ந்த ஒரு வயது குழந்தையின் தாய் ஒருவர்.

துயரம் நிகழ்ந்த அன்று 10-11 பேர் தங்களது மகன்களுடன் ’கோம்பாத்’திலிருந்து ’நல்கடாங்’கிற்கு தப்பிச்சென்று அங்கு வயல்களில் உள்ள குடிசைகளில் தங்கியிருந்தனர். நல்கடாங் மற்றும் எடகட்டா  கிராமங்களை சேர்ந்த வேறு சிலரையும் சேர்த்து மொத்தம் 40 பேர் அங்கு இருந்ததாக கிராமத்தினர் கூறினர்.

திடீரென்று பாதுகாப்புப்படைகள் தங்களை சூழ்ந்து கொண்டதாக தாக்குதலில் இருந்து தப்பிய நேரில் பார்த்த சாட்சியான கார்த்தி கோசா கூறினார். ”நாங்கள் எங்களது கைகளை உயரத்தூக்கி எங்களிடம் ஆயுதம் எதுவுமில்லை என்று காட்டினாலும் அவர்கள் தடியாலும் துப்பாக்கிக் கட்டையாலும் தாக்கி பின்னர் எங்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்” என்று கோசா கூறினார்.

“தப்பி ஓடுகையில் என்னுடைய காலிலே குண்டுபட்டுக் காயமானேன். பின்னர் எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி விட்டேன். ஆனால் என்னுடைய 12 வயது மகன் கார்த்தி அயடாவை அவர்களது துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்து விட்டேன்” என்று சுக்கா வேதனையுடன் கூறினார்.

கார்த்தி அயடாவுடன் போலி மோதல் கொலையானவர்களில் ஒரு வயது குழந்தையின் தந்தையும் வார்டு தலைவருமான சோயம் சந்திராவும் ஒருவர். தான் ஒரு வார்டு தலைவர் என படைவீரர்களை நோக்கி அவர் கத்தினாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் முதல் ஆளாய் அவரை சுட்டுக்கொன்று அவரது தலையை மண்வெட்டியால் அடித்து நொறுக்கி விட்டனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அவர்களுடன் இறந்தவர்களில் கோம்பத் கிராமத்தைச் சேர்ந்த சோயம் சீதா, கார்த்தி ஹித்மா, மாத்வி நந்தா மற்றும் மாத்வி தேவா ஆகியோரும் அடங்குவர்.

படையினாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கார்த்தியின் தந்தை சுக்கா, அவரது காலிலும் பாதுகாப்புப் படையினரின் தோட்டா பாய்ந்துள்ளது.

காலில் குண்டடிபட்ட சுக்காவுக்கு இன்னும் சிகிச்சை கிடைக்கவில்லை. 20-25 கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றால் நக்சல் என்று முத்திரை குத்தி காவல்துறை கைது செய்துவிடும் என அவர் அஞ்சுகிறார்.

இறந்துபோன சிறுவன் கார்த்தி அயடா படித்து வந்த போர்டா கேபின் பள்ளியில் ஆசிரியர்கள் கிடையாது. கடந்த ஆண்டு 3-ஆம் வகுப்பு படித்து வந்த அவன் வேறு அருகாமை பள்ளி எதுவும் இல்லையென்பதால் ஏனையோரைப் போலவே பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டான் என கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

சுகாதார நிறுவனமோ, பள்ளிக்கூடமோ, அங்கன்வாடியோ, மின்சாரமோ எந்த வசதியும் கிடையாது. குடிமக்கள் என்பதற்கான எந்த அடையாள அட்டையும் இல்லை. இதுவரை ஓட்டே போடாத அவர்களில் சிலர் மட்டுமே ஆதார் அட்டையை பெற்றுள்ளனர். உயிரிழந்த சோயம் சந்திராவும் அவர்களில் ஒருவர்.

நல்கடாங், துயரம் நடந்த இடம் அருகே உள்ள கிராமம்

தற்போது நடைபெற்ற போலி மோதல் படுகொலை சம்பவத்தில் முக்கா என்றழைக்கப்படும் முச்சாகி முகேஷின் தாயார் முச்சாகி சுக்ரிஇதற்கு முன்னர் கணவனது உயிரை ’சல்வா ஜுடும்’ எப்படி பறித்தது என்பதைக்கூறினார். பாதுகாப்புப்படை கிராமத்தை முற்றுகையிட்டவுடன் தன்னுடைய குழந்தைகளுடன் காட்டை நோக்கி தப்பி ஓடும்போது வயிற்று வலியால் பின்னடைந்த அவரது கணவர், அவர்களுடன் தாம் பின்னர் வந்து சேர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் வந்து சேரவில்லை. பாதுகாப்புப்படை அவரை சுட்டுக் கொன்றது. அவரது இறுதிச் சடங்கை செய்யக்கூட அவரது குடும்பம் அனுமதிக்கப்படவில்லை.தற்போதைய தாக்குதலில் அவரது மகனையும் இழந்துவிட சோகம் அவரைத் தொடர்கிறது.

அல்ஜசீராவின் அறிக்கையின்படி 2009-ன் ஆண்டு, அக்டோபர்2-ம் தேதி அன்று மத்திய அரசின் பாதுகாப்புப்படைகள் கோம்பத் கிராமத்தை தாக்கியதில் 9 பேர் பலியானார்கள். எட்டு வயது சிறுமியைக் கொன்றது, ஒரு 18 மாத குழந்தையின் விரல்களை குரூரமாக வெட்டியது, அவனது தாயை சித்திரவதை செய்து கொன்றது, அவனது தாத்தா பாட்டியை சுட்டுக் கொன்றது என அனைத்தும் அவற்றில் அடங்கும். அதே நாளில் ரோந்துப்படை மேலும் 2 இளைஞர்களை சுட்டுக் கொண்றது. ஸ்க்ரோல் இணையதள தகவலின்படி கொலையானவர்களின் எண்ணிக்கை 16.

முச்சாகி தேவாவின் தாய் முச்சாகி சன்னி தமது ரேசன் அட்டையைக் காட்டுகிறார்.

சல்வா ஜூடும் நிகழ்த்திய கொடுமைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தவர்களில் முச்சாகி சுக்ரியும் ஒருவர். தன்னுடைய கணவரை கொன்றது நக்சல்களா இல்லை பாதுகாப்புப்படையா என்பது தனக்கு தெரியாது என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி சல்வா ஜூடுமின் தலைவரான பி.விஜய் தன்னை ஒரு மாதம் சிறை வைத்ததை அவர் நினைவுகூர்கிறார்.எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் வந்தாலும் தன்னுடைய மகனுக்கு நீதி கிடைக்கநீதிமன்றம் செல்லவே அவர் விரும்புகிறார். நல்கடாங்கை சேர்ந்த கொல்லப்பட்ட அறுவரில் ஐவர் சிறுவர்கள் என்கின்றனர் கிராம மக்கள்.

ஆனால் இறந்தவர்களில் 13 பேர் பதினேழுவயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறுகிறார், சுக்மா காவல்துறை கண்காணிப்பாளரான அபிஷேக் மீனா. எலும்பை ஆய்வு செய்து பார்த்ததில் பெரும்பாலானோரின் வயது 18-லிருந்து 20 ஆக தெரிகிறது என்றும் மாவோயிஸ்டுகளும் அவர்களது பெற்றோர்களும்கூட அதையேதான் சொல்லுகிறார்கள் என்றும்அவர் கூறினார். ஆனால் பெற்றோர்கள் அதை மறுக்கிறார்கள்.

கிராம மக்கள் சொல்லும் வயதை விட கொல்லப்பட்டவர்களின் வயது அதிகமாக இருப்பதை அவர்களது குடும்ப அட்டை உறுதி செய்கிறது என்று அபிஷேக் மீனா கூறினார். ஆனால் லீப்லெட் இணையதளம் ஆய்வு செய்த இரண்டு குடும்ப அட்டை வேறு பார்வையை கொடுக்கிறது.

முச்சாகி சுக்ரியின் மகனான முச்சாகி முக்காவின் வயது 2013-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும் போது 8. அதே போல 2014-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும்போது முச்சாகி சன்னியின் மகனான முச்சாகி தேவாவின் வயது 7.

போலி மோதலில் கொல்லப்பட்ட மற்றொரு சிறுவனான ஹிட்மாவின் வயது 14 என்கின்றனர் கிராம மக்கள். தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள இருந்த ஒரே நம்பிக்கை ஹிட்மா மட்டுமே என்று கதறுகிறார் பார்வையற்ற அவனது தந்தை லக்மா. ஹிட்மாவை சுட்டப்பிறகும் அவன் உயிருடன்தான் இருந்தான் என்றும் தண்ணீர் கேட்டும் பாதுகாப்பு படைவீரர்கள் அவனுக்கு கொடுக்கவில்லை என்றும் லக்மாவின் சகோதரர் மட்கம் உங்கா கூறினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் கார்த்தியின் புகைப்படம்.

மட்கம் லக்மாவும் அந்த போலி மோதல் படுகொலையில் கொல்லப்படும்போது அவனது வயது 16-17 இருக்கும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அவனது அம்மாவும் பார்வையற்றவர். இரண்டு கால்களின் கீழ்பகுதியும் நொறுங்கிய நிலையில்தான் அவனது உயிரற்ற உடலை பார்த்ததாக அவனது சகோதரர் கூறினார். முச்சாகி தேவாவின் வயது என்ன என்று கேட்டபோது, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக போர்டா கேபின் பள்ளியில் படித்ததாகவும் பின்னர் அவன் நின்று விட்டதாகவும் அவனது நண்பன் கூறினான். நல்கடாங்கை சேர்ந்த கொல்லப்பட்ட அறுவரில் முச்சாகி லக்மா மட்டுமே 30 வயதுநிரம்பியவர் என்று கிராம மக்கள் கூறினர்.

தண்டேவாடா ஆம் ஆத்மி கட்சி தலைவரும் பழங்குடி பள்ளி ஆசிரியருமான சோனி சோரியும் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்த வழக்குரைஞர்களும்தான் கிராம மக்களை தூண்டி விட்டதாக அபிஷேக் மீனா குற்றஞ்சாட்டினார். ஆனால் காங்கிரசு தலைமையிலான தகவல் அறியும் குழுவிடம் கூட மக்கள் பேசுவதற்கு தயங்கியதாகவும் அபிஷேக் மீனா கூறினார். ஆனால் அந்தக் குழுவில் அங்கத்தினராக இருக்கும் எங்களுக்கு சோனி ஷோரியிடமிருந்தோ அல்லது ஆந்திர வழக்குரைஞர்களிடமிருந்தோ எவ்வித மிரட்டலோ அச்சுறுத்தலோ வரவில்லை.

கைதுகள்

முதலில் அகஸ்டு 6-ஆம் தேதி கிராமத்தைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தது போலீசு. ஆனால் டி.எம். அவஸ்தி தனது பத்திரிகை செய்தியில், இரண்டு பேரை மட்டுமே கைது செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். குண்டடிபட்ட துதி புத்ரி என்ற பெண்ணும் மாவோயிஸ்ட் தலைவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தலைக்கு 5 இலட்சம் அறிவிக்கப்பட்ட மார்த்தம் தேவா ஆகிய இருவரை மட்டுமே குறிப்பிடுகிறது போலீசு.

அபிசேக் மீனா, லீஃப்லெட் இணையதளத்துடன் தொலைபேசியில் பேசுகையில், தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சுமர் 25-30 மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் இருந்ததாகத் தெரிவித்தார். அனைவரும் மாவோயிஸ்டுகளா என்று கேட்டதற்கு அண்டா மற்றும் லக்மா இருவரைத் தவிர மற்றவர்கள் மாவோயிஸ்டுகள்தான் என பதிலளித்தார். அவர்கள் சங்கமாவின் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் நீண்ட நாள் மாவோயிஸ்டுகள் அல்ல என்பதால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இது  தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது. அவர்கள் இருவர் மட்டுமே மாவோயிஸ்டுகள் அல்ல என்பது எப்படி தெரிந்தது? ‘தேடப்பட்ட மாவோயிஸ்டு’ மரத்தம் தேவாவின் தலைக்கு 5 இலட்சம் அறிவித்தது குறித்து கேட்டபோது, ஒரு தவறு நேர்ந்து விட்டதாக அவர் கூறினார். அதாவது கோம்பத்தை சேர்ந்த தேவாவை கைது செய்வதற்கு பதிலாக தவறுதலாக நல்கடாங்கை சேர்ந்த புரட்சிகர மக்கள் குழுவின் (Revolutionary People’s Council) வேறொரு தேவாவை கைது செய்துவிட்டதாகவும், அவரும் தேடப்பட்டு வந்த குற்றவாளி எனினும், தலைக்கு பணம் அறிவிக்கப்படாதவர் எனக் கூறினார்.

ஹித்மாவின் தந்தை லக்மா.

துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் அந்த இடத்திற்கு கிராமப் பெண்கள் கூட்டமாக ஓடியதால் படுகொலையானோர் எண்ணிக்கை குறைந்ததாக முச்சாகி முகேஷின் தமக்கை ஹித்மே கூறினார். கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட பெண்கள் எப்படி பாதுகாப்புப்படையினரால் அடித்து நொறுக்கப்பட்டனர் என்பதை லிங்கராம் கொடோபி என்ற பழங்குடி செயற்பாட்டாளர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இது ஒரு அப்பட்டமான போலி மோதல் கொலை என்று சோனி சோரி குற்றஞ்சாட்டுகிறார். மக்கள் யுத்தக்குழுவைச் சேர்ந்த சிலர் மட்டுமே இருந்ததாகவும் ஆனால் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவியான கிராம மக்களே என்றும் சோனி சோரி குற்றம் சாட்டினர். “நான் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் பேசினேன். குறைந்தது அறுவர் சிறுவர்கள். சட்டத்தின் ஆட்சிக் குறித்த எந்த தோற்றமும் இல்லாதபோது நாம் எப்படி அரசியலமைப்பை பற்றி பேச முடியும்?” என்று அவர் கேட்கிறார்.

மக்கள் போர்ப் படை:

மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த பதின்ம வயதின் இறுதிகளில் அல்லது இருபதுகளில் இருப்பவர்கள்தான் அடிப்படையான மாவோயிஸ்ட் படையினர். மாவோயிஸ்டுகள் உருவாக்கிய இணை அரசாங்கத்தைக்கட்டிக்காப்பது, பாதுகாப்பு படைவீரர்களிடம் இருந்து கிராம மக்களை காப்பது மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு சில வேலைகளை செய்து கொடுப்பதுதான் அவர்களின் பணி. அவர்களது ஆயுதங்கள் பெரும்பாலும் வில் அம்பு மட்டுமே. சில நேரங்களில் துப்பாக்கிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

நல்கடாங்கில் மற்றொரு நாள்

கடந்த ஆகஸ்ட் 18, 2018 அன்று கிராமத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள டூமா கிராமத்திற்குச் செல்லுமாறும், அடுத்தநாள் அங்கு நக்சல்கள் வருவதாக தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்பதால் உடனடியாக காலி செய்யும்படி பாதுகாப்புப் படையினர் மிரட்டியுள்ளனர்.

மறுநாள் சில குடும்பங்கள் கிராமங்களுக்கு திரும்பியதும் அவர்களிடமிருந்து அரிசியையும் பயறு வகைகைளையும் பாதுகாப்புப்படையினர் திருடித் தின்றுள்ளனர். மேலும் அவர்களது நெடுநாள் சேமிப்புப் பணத்தையும் திருடியிருக்கின்றனர். “இது புதுவிதமான வழக்கம். பொதுவாக கிராமத்தவர்களை அடிப்பதைத்தான் செய்வார்கள். இது சல்வா ஜூடும் காலகட்ட நடைமுறைகளை நினைவுபடுத்துகிறது” என்கிறார் சோனி சோரி.

மட்கம் ஹிட்மேயின் கறைப்படியாத நக்சல் சீருடை

பாதுகாப்புப் படையினரின் வெறியாட்டங்கள் கோம்பத் கிராமத்திற்கு ஒன்றும் புதிதல்ல. 2016, ஜூன் 15-ஆம் தேதி பாதுகாப்புப்படையினர் நடத்திய வெறியாட்டம் கோம்பத் கிராமத்தினரால் என்றுமே மறக்க முடியாது. கிராமத்திற்குள் பாதுகாப்புப்படையினர் நுழைந்த அன்று மட்கம் லக்ஷ்மி கோதுமை கதிரடித்து கொண்டிருந்தார். அப்பொழுது தூங்கிக்கொண்டிருந்த அவரது மகள் மட்கம் ஹிட்மேவை தூக்கிக்கொண்டு கிராமத்து மக்கள் எதிர்ப்பையும் மீறி பாதுகாப்புப் படையினர் காட்டிற்கு சென்ற பிறகு நெகிழி பையில் போர்த்தப்பட்ட நக்சல் சீருடையணிந்த அவரது உயிரற்ற உடல்தான் கிடைத்தது. ஆனால் அவரை கடத்திச் செல்லும்போது லுங்கி, மேற்சட்டை, வளையல்கள் அணிந்திருந்ததாக கிராம மக்கள் கூறினார்கள். அதே சமயத்தில் அவருக்கு அணியப்பட்ட சீருடை பெரிதாகவும் கலையாமலும், அவரது உடலில் உள்ள துப்பாக்கிக் குண்டுகளைவிட குறைவான துளைகளுடனும் இருந்தது. என்கவுண்டரின்போது ஹிட்மேயின் சீருடை கொஞ்சம் கூட கறைப்படியாமல் இருந்தது எப்படி என்று கேட்கிறார் மூத்த பத்திரிக்கையாளரானஇராகுல் பண்டிதா.

மேட்கம் லக்ஷ்மியின் போராட்டம் அன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. முடிவில் சத்தீஸ்கரின் உயர்நீதிமன்றம் ஹிட்மேயின் உடலை மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால் உடற்கூறு ஆய்வு முடிந்து ஆய்வுகளும் ஒப்படைத்த பிறகும் கடைசித் தீர்ப்பு இன்னும் வந்தபாடில்லை.

2018, ஆகஸ்டு 19-ஆம் தேதி கோம்பத் கிராமத்திலிருந்த இந்திய தேசியக்கொடியை சோனிசோரியிடம் திரும்பியளித்தார் மட்கம் லட்சுமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோனி சோரியின் தலைமையில் இந்தியா முழுதும் இருந்து 200 நபர்கள் கோம்பத் கிராமத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர். அந்த கொடிமட்கம் லக்ஷ்மியால் ஏற்றப்பட்டது. கோம்பத் கிராம மக்களும் இந்திய குடியரசின் குடிமக்கள் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்ற அடிப்படையில்தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

“வன்முறை எதுவும் குறைந்தபாடில்லை. மாறாக, முன்னிலும் அதிகரித்து விட்டது. பழங்குடி மக்கள் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. என்னுடைய மகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசு வெகு இயல்பாக தற்போது 15 உயிர்களைப் பறித்துவிட்டது” என தேசியக் கொடியை திருப்பிக் கொடுக்கையில் மட்கம் லட்சுமி சோனி சோரியிடம் கூறியுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் குளத்தில் மீன் பிடித்துவிட்டு நான்கு பெண்களுடன் திரும்பி கொண்டிருந்த கோம்பத் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சோயம் ராமேவின் தொடையில் பாதுகாப்புப்படையினர் சுட்டனர். அவர் ஒரு நக்சல் என்று காவல்துறை குற்றம் சாட்டியது. போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் 20 நாட்களாக குண்டினை எடுக்காமல் மருத்துவமனைக்காக அலைந்துள்ளனர். மேலும் விறகு வெட்டும்போது வெட்டிக்கொண்டதாக கூறும்படி காவல்துறை மிரட்டியதாக சோனி சோரியிடம் அவர் கூறினார். ஆனால் சுக்மாவில் காவல்துறை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சோயம் ராமே ஒரு நக்சலைட் என்பதாலேயே என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறியது. சிகிச்சைக்குப் பிறகு சோயம் ராமேவும் அவரது கணவரும் இன்னமும் வீடு திரும்பவில்லை.

மாவட்ட ரிசர்வ் படை : மற்றொரு சல்வா ஜூடும்?

மாவட்ட ரிசர்வ் படைகள் முதலில் கங்கெர் மற்றும் நாராயன்பூரில் 2008­-ம் ஆண்டு நிறுவப்பட்டன. பின்னர் தண்டேவாடாவில் 2015-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் சுக்மா, கொண்டாகோன் மற்றும் பிஜப்பூர் ஆகிய இடங்களில் 2013-2014 ஆண்டு வாக்கில் நிறுவப்பட்டன. மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த பெரும்பாலும் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களாலே அப்படைகள் அமைக்கப்பட்டன. பகுதி மக்களின் மனநிலை, மொழியைப் புரிந்துகொண்டு தமது பணிகளை மேற்கொள்ள இத்தகைய படை அவசியம் என இழிபுகழ் முன்னாள் ஐ.ஜி கல்லுரி கூறியுள்ளார்.

தற்போது 600-க்கும் அதிகமான மாவட்ட ரிசர்வ் படையினர் சுக்மாவில் இருப்பதாக அபிஷேக் மீனா லீப்லெட் இணையதளத்திற்கு செல்பேசி வாயிலாக தெரிவித்தார்.

மாவட்ட ரிசர்வ் படை என்பது சிறப்புக் காவல்துறை அதிகாரிகள் படைக்கு இணையானது. சல்வா ஜுடும் நடைமுறையில் இருந்த சமயத்தில் பஸ்தாரில் நிறுவப்பட்டு பின்னர் நந்தினி சுந்தர் எதிர் சத்தீஸ்கர் மாநில அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

இந்த தேசியக்கொடியால் தங்களுக்கு பயன் ஏதுமில்லை எனக் கூறி சோனி சோரியிடம் தேசியக் கொடியை திருப்பியளித்துள்ளார் மக்டம் லக்‌ஷ்மி.

“பெயர்கள் மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளன. அவர்களது பாத்திரங்கள் மாறவில்லை. பெயர்களை மாற்றுவதால் உங்களால் குணத்தை மாற்ற முடியுமா? மாவட்ட ரிசர்வ் படை வேண்டாமென்று பெரும்பாலான கிராம மக்கள் கூறியுள்ளனர்” என்று சோனி சோரி கூறினார். பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக இழிபுகழ் பெற்றது மாவட்ட ரிசர்வ் படை. பிஜப்பூர் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நடந்த மிகப்பெரிய பாலியல் வன்முறையில் அவர்கள் நேரடியாக ஈடுபட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

போலி மோதல் கொலை என்று தாங்கள் கூறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா குடிமக்கள் உரிமைக் குழு (The Civil Liberties Committee of Andhra Pradesh Telangana) உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. வழக்கு தொடுத்தவர்களையும் எதிராளிகளையும் கூடுதல் தகவல்கள் அளிக்க சொல்லி உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

தி லீஃப்லெட் இணையதளத்தின் பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வால் உண்மை கண்டறியும் குழுவினருடன் சென்று சேகரித்த கள நிலவர அறிக்கையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.

தமிழாக்கம் :  வினவு செய்திப் பிரிவு

மூலம்: In the Gompad trail: An account of 15 ‘encounter’ deaths and bloodied facts in a haystack of security fiction from Chhattisgarh

காலை மதியம் டீ – நைட்ல மட்டும் சப்பாத்தி செய்வோம் !

வினவு புகைப்படச் செய்தியாளர்

சென்னை மாதவரம் – எர்ணாவூர் நெடுஞ்சாலையில் கண்ணில் பட்ட இடங்களில் எல்லாம் சிறு கடைகளை போட்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் தொழிலாளிகளை பார்க்கும்போதே நிச்சயம் பல கேள்விகள் எழும்.  ஒரு கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வகையில் வானுயர வணிக மால்களைக் கட்டி மக்களை சுண்டி இழுக்கும் கார்ப்பரேட் பாணியிலான நிறுவனங்களுக்கு மத்தியில், இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? யார் இவர்களிடம் வாங்குவார்கள்.? அப்படியே வாங்கினாலும் இதில் வரும் வருமானத்தைக் கொண்டு எவ்வாறு வாழ்க்கையை நடத்துவார்கள்?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் நுகர்வு கலாச்சாரத்தை விடுத்து மிகச்சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கே குறைந்தபட்ச நிதி ஆதாரம் தேவை. அதை இவர்கள் எவ்வாறு ஈடுகட்டுகிறார்கள்? அந்த சிறு கடை மக்களிடமே கேட்டுப் பார்ப்போம்.

திருநாவுக்கரசு, துண்டு, கைக்குட்டை வியாபாரம்.

சொந்த ஊர் செஞ்சிக்கோட்டை. அங்க இருந்து இங்க வந்து முப்பது வருஷம் ஆகுது. ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு. அதுல ஒன்னும் லாபம் இல்ல. அங்க இருந்தா பொழக்க முடியாதுன்னு இங்க வந்தேன். இப்ப வரைக்கும் ஊருக்கு போறதில்ல. நான் இந்த தொழிலை ஒரு ஆறு மாசமா பண்ணிட்டு வரேன். இதுக்கு முன்னாடி மணலி மார்கெட்டுல சொந்தமா டி.டி.பி. சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வச்சிருந்தேன். ஜெயலலிதா பீரியடுல அடிக்கடி ஏற்ப்ட்ட மின் தடையால தொழில் நிறைய பாதிக்கப்பட்டுடுச்சி.அந்த தொழிலை மூடிட்டு துணிக்கடை ஒன்னு வச்சேன். அதுவும் பெருத்த நஷ்டத்துல போயிடுச்சி. எந்த வேலையும் செய்யாம இருக்க முடியாது. மூனும் பொண்ணுங்க. கரை சேர்க்கணுமே.. இப்பதான் பெரிய பொண்ணுக்கு அஞ்சி லட்ச ரூபா கடன் வாங்கி கல்யாணத்த பண்ணேன். சும்மா இருக்க முடியுமா? வேற வழியில்லாம ஒரு ஏழாயிரபா முதலீடு போட்டு இந்த கடைய நடத்திட்டு வரேன்.

இந்த சரக்கு எல்லாம் வாரத்துக்கு இரண்டு முறை பாரீஸ் போயிட்டு வாங்கிட்டு வருவேன். இதுல ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா வருமானம் கிடைச்சிடும். ஒரு நாளைக்கு கிடக்காம கூட போயிடும். பெரும்பாலும் என்கிட்ட வாங்குறவங்க எல்லோரும் பாவப்பட்டு வாங்குவாங்க. நம்மள மாதிரி ஆளுங்க குறைவா இருக்கேன்னு வாங்குவாங்க. வர வருமானத்துல என்னோட எல்லாத் தேவையையும் குறைச்சிகிறேன். பொண்டாட்டி புள்ளைங்கள கூட வெளில எங்கயும் கூட்டிட்டு போறது கிடையாது. அப்படிதான் வாழ்க்கை போயிட்டு இருக்கு.

அப்துல் கபீர், டி-சர்ட் – பனியன் வியாபாரம்.

ங்க அப்பாவும் இந்த மாதிரி வியாபாரம் தான் பண்ணிட்டு இருந்தாரு. பிளாஸ்டிக் பொருள் விப்பாரு. நான் அஞ்சாவது படிக்கும்போது இறந்துட்டாரு. அதோட படிப்பை நிறுத்திட்டு சிம்னி விளக்கு தயாரிக்கிற கடையில வேலை செஞ்சிட்டு இருந்தேன்… எட்டு வருஷத்துக்கும் மேல அந்த வேலை பார்த்தேன். அங்கேயே இருந்தா முன்னேற முடியாதுன்னு எங்க மாமா கூட்டிட்டு வந்து அவரோட துணி கடையில வேலை செய்ய சொன்னாரு. சென்ட்ரல்’ல தான் வித்திட்டு இருந்தேன்.

அப்புறம் ஆடவர் துணி விற்பனை மையத்துல கொஞ்ச நாள் சேல்ஸ்மேனா வேலை பார்த்தேன். அங்கேயும் சம்பளம் பத்தல.. அப்புறம்தான் இந்த கடையை வச்சி ஓட்டிக்கிட்டு இருக்கேன். இதுவும் என்னோடது இல்ல.. எங்க மாமா மொத்தமா வாங்கிட்டு வந்து விக்க சொல்லி கொடுத்திருக்காரு. எவ்ளோ விக்குதோ அதுக்கான கணக்கை கொடுத்திட்டு ஒரு நாளைக்கு ஐநூரு ரூபா எடுத்துப்பேன்.. இந்த துணியெல்லாம் திருப்பூர்ல இருந்து வாங்கிட்டு வருவாரு.. நானே சொந்தமா வாங்கிட்டு வந்து விக்கலாம்னா கையில காசு இல்ல.. பசங்க தனியார் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க.. அவங்களுக்கு பீஸ் கட்டத்தான் சரியா இருக்கும்.பிள்ளைங்களோட வாழ்க்கை தானே முக்கியம்.

இந்த இடத்துலயே மூணு வருஷமா கடை போட்டிருக்கேன். முன்ன எல்லாம் போலீசு தொல்லை அதிகமா இருக்கும். பிளாட்பார்ம் கடைன்னு கேசு போட்டு பைன் போடுவாங்க. அப்புறம் மாநகராட்சிக்கு மாமூல் கட்டணும்.. இப்ப மாநகராட்சி கடை போடுறதுக்கு ஒரு கார்டு கொடுத்திருக்கான்.  அதனால் அந்த பிரச்சனை இல்ல. இந்த வியாபாரத்துல யாரும் நிக்கிறது கிடையாது. கொஞ்ச நாள்ல போயிடுவாங்க… எனக்கும் இந்த வேலை செய்யிரதுல விருப்பம் இருக்கோ, இல்லையோ வேற வழி இல்ல. இளைஞர்கள் வாங்குறாங்க. அவர்களால வாழ்க்கை ஓடுது!

சரவணன், குளிரூட்டும் கண்ணாடி விற்பவர்.

நான் இருபத்தி அஞ்சி வருஷமா இந்த மாதிரி தெருவுல தான் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி பாரிஸ்ல கடை போட்டிருந்தேன்… அங்க இருந்து எங்கள காலி பண்ணிட்டாங்க…  இங்க வந்து பத்து வருஷம் ஆவுது… பெரம்பூர்ல வீடு வாடகை எடுத்து தங்கி இருக்கேன். மாசம் நாலாயிரத்து ஐநூறு ரூபா வாடக… பசங்க இப்ப தான்  7, 10 வது படிக்குதுங்க… இந்த வேலையே செஞ்சி எனக்கு பழகிடுச்சி…இதத் தவிர வேற வேலையும் தெரியாது. இப்ப இங்க இருந்தும் காலி பண்ண சொல்லுறாங்க.. மெட்ரோ ரயில் வருதாம்..

நாகு, சன்னல் கூடை விற்பவர்.

நாலு வருஷமா தான் இந்த வேலையை செய்யுறேன். இந்த பை வித்தாலும் விக்கலனாலும் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா ஓனரு குடுத்துடுவாரு. இதுக்கு முன்னாடி நான் பேக் தயாரிக்கிற கடையில ஸ்டிச்சிங் வேலை பண்ணிட்டு இருந்தேன். பதினைந்து வருஷம்அந்த வேலை பார்த்தேன். எல்.கே.ஜி பேக்குக்கு 4 ரூபாவும், காலேஜி பேக்குக்கு 12 ரூபாவும் தருவாங்க… இப்ப அங்க வேலை இல்ல.. ஆர்டர் எதுவும் ஓனர் எடுக்கிறது இல்ல. அதான் இந்த வேலை. சொந்தமா நானே செய்யலாம்னா காசு இல்ல…. பத்தாயிரபா தேவைப்படும்.. அதுக்கு நான் எங்க போறது?

மனீஷ்: நெகிழி கூடை, நாற்காலி விற்பனையாளர்.

ன்னோட ஊர் மத்தியபிரதேசம். நாங்க முப்பது பேர் சேர்ந்து ஒரு ரூம்ல தங்கியிருக்கோம்.. நாக்பூர்.. ராஜஸ்தான்னு எல்லா ஊர்ல இருந்தும் வந்திருக்கோம். எல்லோருக்கும் இந்த வேலை தான்… காலையில பத்து மணிக்கு வந்திடுவோம். சாயந்திரம் 5 மணிக்கு போயிடுவோம். காலை, மதியம் சாப்பாடு கிடையாது. டீ, தண்ணி மட்டும்தான்.  நைட் மட்டும் சப்பாத்தி செஞ்சி சாப்பிட்டுக்குவோம். சம்பளம் எதுவும் கிடையாது. நாலு மாசத்துக்கு ஒரு முறை ஓனர் பத்தாயிரம் தருவார்.. அதைத்தான் வீட்டுக்கு அனுப்பிடுவோம்.

ராகேஷ், நெகிழி கூடை, நாற்காலி விற்பனையாளர்.

சொந்த ஊர் ராஜஸ்தான்….  ஒரு பொருளும் விக்கல…..

காலையிலிருந்து காத்துக்கிடந்த களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் ராகேஷ்

பாண்டியன், மழை நீர் புகா மேற்சட்டை வியாபாரம்.

ருபத்தி அஞ்சி வருசமா இந்த வேலைதான் செய்யுறேன்…. இதுக்கு முன்னாடி புரசைவாக்கத்துல கடை போட்டிருந்தேன்… சிங்கார சென்னையா மாத்தப் போறேன்னு எங்ளை எல்லாம் மொத்தமா காலி பண்ணி அனுப்பினாங்க… மொத்தம் ஆயிரம் பேர் இருக்கும்.. அதுல இருந்து இதை தெருத்தெருவா தூக்கிட்டு அலையுறேன்.. நிரந்தரமா இந்த இடம்தான்னு இல்ல… எங்க இடம் கிடைக்குதோ அங்க போட்டுடுவேன்… ஒரே இடத்துல போட்டாலும் வியாபாரம் நடக்காது அதனால எடத்த மாத்திகிட்டே இருப்பேன்.. இதை ஒவ்வொரு முறையும் ஆட்டோவுல வச்சி எடுத்துட்டு வரக்கூலி 100 ரூபா போயிடும். மிச்சம் இருக்கிறத வச்சி தான் குடும்பத்த நடத்தனும்…!

– வினவு களச் செய்தியாளர்கள்.

ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !

ரபிக் கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் இயற்கை எழில் கொஞ்சும் கொங்கன் பகுதியில் அமைந்துள்ளது மராட்டிய மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டம். கடல் வளமும், மலை வளமும் ஒருங்கே பெற்ற இந்தப் பகுதியில், மீன்பிடித் தொழிலும், விவசாயமும் மக்களின் வாழ்வாதாரங்களாக உள்ளன.

புகழ்பெற்ற அல்போன்சா வகை மாம்பழங்கள் விளையும் மாந்தோட்டங்களையும், முந்திரித் தோட்டங்களையும், நெல் வயல்களையும் கொண்ட விவசாய கிராமங்களும், ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் மீன்களைப் பாரம்பரிய முறைப்படி பிடித்து வரும் மீனவ கிராமங்களும் இந்தப் பகுதியின் வளத்திற்குச் சாட்சியமாக உள்ளன.

இந்த இயற்கை வளத்தையும், அதனோடு இணைந்த இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் அழித்து, ரத்தினகிரி மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்ட  மராட்டிய மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்கென ‘‘ரத்தினகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனமும் (சவுதி அராம்கோ), அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமும் இதன் பங்குதாரர்கள்.

மொத்தம் 6 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தின் சரிபாதி பங்குகள் இந்த இரு அந்நிய நிறுவனங்களிடமும், மீதமுள்ள பாதிப் பங்குகள் இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகியவற்றின் கூட்டமைப்பின் வசமும் உள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்குடன் கட்டப்படும் இந்தச் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானப் பணி முடிவடைந்து இயங்க ஆரம்பித்தால், ஆண்டுக்கு 12 இலட்சம் பேரல் எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்வதுடன் 1.8 கோடி டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான சுத்திகரிப்பு ஆலையாக இயங்கும்.

இதற்கென 6000 ஹெக்டெர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 14 இலட்சம் மாமரங்களும், ஏழு இலட்சம் முந்திரி மரங்களும், 200 ஹெக்டெர் பரப்புகொண்ட நெல் வயல்களும் அழிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் உள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 22,000 விவசாயிகளும், 5,000 மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாகத் துரத்தியடிக்கப்படும் நிலைமை ஏற்படவிருக்கிறது.

இந்தப் பகுதியில் வளமிக்க மண்ணும், விவசாயத் தேவைக்கேற்ற மழைப் பொழிவும் காணப்படுவதால், விவசாயம் ஓரளவிற்கு இலாபகரமானதாக நடைபெற்று வருகிறது. இதனால் இளைய தலைமுறையினர்கூட விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஆபூர்வத்தை இங்கு காணமுடியும். ரத்தினகிரி சுத்திகரிப்பு ஆலை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியது என்ற பொய்யை முன்னிறுத்தி, விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முனைகிறது, மகாராஷ்டிரா அரசு.

விவசாயிகளை செக்யூரிட்டிகளாக நிறுத்தும் மோசடியைத் தவிர, வேறெந்த மாற்றத்தையும் இந்தத் திட்டம் பகுதி மக்களுக்குத் தரப் போவதில்லை. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் வழியாக நாம் கண்டு உணர்ந்திருக்கும் பாடமிது.

சுத்திகரிப்பு ஆலை குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இந்தப் பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். ‘‘கொங்கன் சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு நடவடிக்கைக் குழு” என்ற போராட்டக் குழுவை உருவாக்கி, அதன் கீழ் அணிதிரண்டு போராடி வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பல கிராமப் பஞ்சாயத்துக்களில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தங்களது வாழ்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் நிலத்தை விற்பதற்கு விவசாயிகள் யாரும் தயாராக இல்லை. ‘‘எங்களது வாழ்க்கையை முன்னேற்ற இதுவரை எந்த உதவியும் செய்யாத அரசு இன்று எங்களது நிலத்தைப் பறித்துவிட முனைகிறது. அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், எங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு உதவி செய்யட்டும் என்று போராடும் விவசாயிகள் கோருகின்றனர்.

விவசாயிகள் நிலத்தை இழப்பார்கள் என்றால், நிலமற்ற மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி மற்றும் கடலின் மீதான உரிமை இரண்டையும் இழந்து போவார்கள்.

இந்தப் பகுதி சுற்றுச்சூழல் அமைப்புப் பன்முகத் தன்மை கொண்ட பல்லுயிர் வாழ்நிலைப் பகுதியாகும். எனவே, இந்தப் பகுதியில் எவ்வித தொழிற்துறை முன்னெடுப்புகளும் செய்யக்கூடாது என்றும், இந்தப் பகுதியில் ஒட்டு மொத்தமாக எல்லா தொழிற்துறைகளும் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் பேராசிரியர் மாதவ் கட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக் குழு பரிந்துரைத்தது.

அதே சமயம் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், ‘‘மாசுபாடற்ற” (zero pollution) திட்டம் என்று தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு கூறிவருகிறது. பெட்ரோலியத் துறையில் மாசுபாடற்ற ஆலை என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பது தெரிந்தும், மராட்டிய மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு அப்பட்டமான பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலையை எதிர்ப்பதுடன், போராடும் மக்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழக்கம் போல நாட்டின் வளர்ச்சிக்கு இந்த ஆலை மிகவும் அவசியம் என்று பேசிவருகிறார். ஆனால், கொங்கன் பகுதி மக்களுக்கு இது போன்ற பொய்மை குறித்தும் அதன் பின்னால் உள்ள கார்ப்பரேட் நலன் குறித்தும் யாரும் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இப்பகுதி மக்களுக்குத் தங்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது புதிதல்ல.

1992-இல் என்ரான் நிறுவனத்திற்கு எதிராக இவர்கள் குறிப்பிடத்தக்க போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதே ஆண்டு தங்களது கடற்கரையில் மிகப்பெரிய உருக்காலையை அமைக்க வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியும் அடித்தனர். அங்கிருந்து ஓடிவந்துதான் தூத்துக்குடியில் ஆலையைத் தொடங்கியது, ஸ்டெர்லைட்.

அதே சமயம் இந்த ஆலையை அமைத்தே தீருவது என்பதில் பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பங்குதாரர்களாக இருக்கும் அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டைப் போன்றே பன்னாட்டு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். தங்களின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் எதிர்கொண்டு வரும் அடக்குமுறையை எண்ணிப் பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் கட்டியமைத்த ஒற்றுமையையும் எதிர்த்து நிற்கும் துணிவையும் கொண்ட போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை நடத்தினால் மட்டுமே கொங்கன் பகுதியிலிருந்து இந்தத் திட்டத்தைத் துரத்தியடிக்க முடியும்.

-அழகு
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

மோடி அரசு ஆர்ப்பாட்டமாக அறிவித்த புல்லட் ரயில் திட்டத்தை குஜராத்தின் விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்கள் ஒப்புதல் பெறாமலேயே நிலம் கையகப்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்தனர்.

புல்லட் ரயில் திட்டத்தால்  பாதிக்கப்பட்ட  1,000 -த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (18.09.2018) அன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

துட்டு ஆதாயம் ஜப்பானுக்கு, செல்பி விளம்பரம் மோடிக்கு, நிலத்தை இழப்பதோ விவசாயிகள்!

தலைமை நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி எம்.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு,  இந்த அதிவேக ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரும் ஐந்து மனுக்களை விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் போக, 1,000 விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தமது வாக்குமூலங்களை சமர்ப்பித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் மைய அரசின் லட்சிய திட்டமான ரூ. 1.10 லட்சம் கோடி புல்லட் ரயில் திட்டத்தை தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். புல்லட் ரயில் பாதை கடந்து செல்லும் இடங்களில், தமது நிலம் பறிக்கப்படுவதை விரும்பவில்லை என்று மனுவில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

புல்லட் ரயில் திட்டத்திற்கு கடன் வழங்குவது ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) ஆகும். ஜப்பான் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்திற்காக நடப்பில் இருக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013, மீறப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

புல்லட் ரயில் திட்டத்திற்காக ஜப்பான் நிறுவனம், செப்டம்பர் 2015 -ல் இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இதற்காக குஜராத் அரசாங்கம் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நீர்த்துப் போக வைத்துவிட்டது. மேலும் ஜப்பான் நிறுவனத்தோடு உள்ள ஒப்பந்த வழிகாட்டுதல்கள் படி கூட குஜராத் அரசு செய்திருக்கும் நிலம் தொடர்பான திருத்தங்கள் பகிரங்கமான மீறலாகும்.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமது அனுமதியோ, ஆலோசனைகளோ கேட்கப்படவில்லை என விவசாயிகள் நீதிமன்றத்தில் கூறினர்.

மாதிரிப் படம்

இந்த திட்டத்தின் பாதிப்பையொட்டி விவசாயிகளின் மறுவாழ்வு, மீள் குடியேற்றம் தொடர்பான எந்த ஒரு மதிப்பீட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அரசு நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் எவையும் தமக்கு தெரியாது எனவும் கூறினர்.

இந்த விசாரணையின் போது தனது பதிலை அளிக்க இன்னும் அதிக நேரம் வேண்டும் என மத்திய அரசு கூறியது. இப்படி இழுத்து இழுத்து இறுதியில் எதிர்ப்பை அழிக்க நினைப்பது ஒரு அதிகார வர்க்க உத்தி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகளுக்கு நீதிமன்ற விசாரணைகளெல்லாம் ஒரு கண்துடைப்பே.

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

கடந்த ஐந்து வாரங்களாக மத்திய அரசு நாளைக் கடத்துவதை உயர்நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை என விவசாயிகளது வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இப்படித்தான் மத்திய அரசும் நீதித்துறையும் பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்றன.

“பாதிக்கப்பட்ட 1000 விவசாயிகளும், இந்த திட்டத்தை தடை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மன்றாடி வருகிறார்கள். புதன்கிழமை அன்று தாமதப்படுத்தும் மத்திய அரசின் பிரச்சினையை உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணையாக கோருவோம்” எனவும் யாக்னிக் கூறினார். ஆனால் மக்களது அவசரம் ஆட்சியாளர்களுக்கோ நீதிமன்றத்திற்கோ எப்படிக் கேட்கும்?

விவசாயிகலின் வாழ்வை அழிக்க போகும் புல்லட் ரயில் திட்டம்.

புல்லட் ரயில் திட்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களோடு தொடர்புடையதால் (குஜராத் மற்றும் மகாராஷ்டிரா) நிலம் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுதான் பொருத்தமான அரசு, என்று விவசாயிகள் தமது மனுவில் குறிப்பிடுகிறார்கள். குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விவசாயிகள் கடந்த ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த மனுவில் அப்படி தெரிவித்திருக்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 26-ன்படி நிலத்தின் சந்தை மதிப்பு தேவைப்பட்டால் திருத்தப்படவேண்டும் என்பதும் இங்கே பின்பற்றப்படவில்லை எனவும் மனுவில் விவசாயிகள் கூறியிருக்கின்றனர்.

குஜராத்தின் 2013-ம் ஆண்டு நிலம் தொடர்பான சட்டத்தை 2016-ல் அரசு திருத்தியது செல்லாது எனவும் அவர்கள் தமது மனுவில் கூறினர். ஒரு திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக நல பாதிப்பில் இருந்து பொது மக்களின் நலனை விலக்குவதை இச்சட்ட திருத்தம் மாநில அரசிற்கு வழங்குகிறது. ஆக நிலம் கையகப்படுத்தும் சட்டம் வைத்திருந்த குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இங்கே பகிரங்கமாக மீறப்படுகிறது. இதுதான் மோடி கால ஜனநாயகம் வழங்கும் புதிய குடியாட்சி உரிமை.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முகமாக இத்திட்டத்திற்கான அனைத்து நிலங்களும் முறைப்படி பெறப்பட்டு விட்டன, தற்போது வெறும் 17.5 மீட்டர் நிலம் மட்டுமே தேவைப்படுவதால் இப்பிரச்சினை மிகச்சிறிய ஒன்று என குஜராத் மாநில அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்படிப் பார்த்தால் வழக்கு போட்ட ஆயிரம் விவசாயிகளுக்கும் சில பல சென்டி மீட்டர் நிலம் மட்டுமே சொந்தம் போலும்!

இத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷன்சோ அபே-வால் துவங்கப்பட்டது.

மும்பை – அகமதாபாத் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் பாதையின் நீளம் 500 கி.மீ. இதில் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். புல்லட் ரயிலின் வேகம் 320 – 350 கி.மீ. ஆகும்.

வளர்ச்சியின் பெயரால் நிலம் பிடுங்கப்படும் மக்கள். – எட்டு வழிச்சாலை போராட்டக் காட்சி!

இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலம் சுமார் 1,400 ஹெக்டேர் ஆகும். அதில் 1,120 ஹெக்டேர்கள் அதாவது 2,767 ஏக்கர் நிலங்கள் மக்களுக்கு சொந்தமானவையாகும். அதன் படி சுமார் 6,000 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

புல்லட் ரயில் திட்டத்தினால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, போக்குவரத்திற்கோ எந்த பலனுமில்லை. நீண்ட கால கடன் என்ற முறையில் இதில் ஆதாயம் அடையும் ஜப்பான் தனது புல்லட் ரயிலை தேவையே இல்லாத இந்தியாவை வாங்க வைத்திருக்கிறது. மோடிக்கோ புல்லட் ரயில் கொண்டு வந்த தீரர் எனும் பட்டம் வரலாற்றில் தமக்கு இருக்க வேண்டும் என்பதால் இந்த ஆடம்பர திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்.

எட்டுவழிச்சாலையில் தமிழக அரசு என்னென்ன கூறியதோ அவற்றையே குஜராத்திலும் பார்க்கிறோம். பெரும்பான்மை விவசாயிகள் ஏற்றனர், சிலர்தான் ஏற்கவில்லை, பெரும்பான்மை நிலங்கள் சமூகமாக பெறப்பட்டது, ஓரிரண்டுதான் பிரச்சினை, அதிக நட்ட ஈடு கொடுக்கப்படும் என அடித்து விட்டார்களே அவைதான் இங்கும்.

மற்றபடி தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தில் அப்படி போராட முடியாது என்பதால் மக்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர்.

வினவு செய்திப் பிரிவு

மேலும் :

கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்

லைகளில் தொழிலாளர்களை சுரண்டும், வங்கிகளில் வட்டியை பிழிந்தெடுக்கும், விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்கும் மூலதனம், கடலோர பகுதிகளை குறிவைத்திருப்பதை எதிர்த்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அடிப்படையிலான வரைவு கடலோர மேலாண்மை திட்டத்தின் மீது கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படவிருக்கும் “இந்தக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்கே என்றும் எட்டு ஆண்டுகளாக மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புகளை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை” என்றும் குற்றம் சாட்டியிருக்கின்றனர், அந்த மீனவர்கள்.

கடல் அலை ஏற்றப் பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையிலான பகுதியை கடலோர ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதி என்று வரையறுத்து அதில் கட்டிடங்கள் கட்டுவது, சாலை அமைப்பது போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை 1991-ம் ஆண்டு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்தப் பகுதியை 4 மண்டலங்களாக வகைப்படுத்தி அவற்றில் எந்தவிதமான பணிகளில் ஈடுபடலாம் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.

நமது நாடு 7500 கி.மீ நீள கடலோர பகுதிகளை கொண்டுள்ளது. பாரம்பரியமாக தமது வாழ்விடமாகவும், மீன்பிடித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி வரும் மீனவர்களிடமிருந்து இந்த இடங்களை கைப்பற்றி ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கும் தாரை வார்க்கும் நோக்கத்தில் இந்த விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு நடவடிக்கையாக 2011-ல் வெளியிடப்பட்ட புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் 1991-ன் விதிமுறைகளை மீறிய முதலாளிகளின் கிரிமினல் குற்றங்களை அங்கீகரித்து அவர்களை விடுவிப்பதாக அமைந்தது.

இவ்விதிகளின் அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்டங்கள் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவமக்களின் வாழ்வுரிமையை பறித்து, கடலையும், கடற்கரையையும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த வரைவுத் திட்டம் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விட கடலோர பகுதிகளை வணிக நலன்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கும் கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது. “அரசு பேசும் அலை ஏற்ற பகுதி நிலாவினால் ஏற்படும் நீரோட்ட மாற்றங்களை கணக்கிடுவதை விட வணிக நிறுவனங்களின் நலனை உறுதி செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது” என்கிறார் சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

அலை ஏற்றத்துக்கும் அலை இறக்கத்துக்கும் இடைப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியை ரியல் எஸ்டேட் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் நீர் நிலைகளிலிருந்து (ஆற்று கழிமுகங்கள், பின்நில ஏரிகள் போன்றவை) 100 மீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்பட்டிருந்தது இப்போது 50 மீட்டர் என்று குறைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடலோர மண்டலம் III இப்போது இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தொகை அடர்த்தி அதிகமான பகுதிகளில் 50 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. (அடர்த்தி குறைவான பகுதிகள் முன்பு போல 200 மீட்டர் வரம்பு தொடரும்). மக்கள் தொகை அடர்த்தியை நிர்ணயிப்பதை தமது விருப்பம் போல வளைத்து கணிசமான கடலோர நிலங்களை ரியல் எஸ்டேட் முதலைகள் ஆட்டையை போடுவதற்கான வழிகளை இது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல புதிய வரைபடத்தை எதிர்த்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி போராடும் மீனவர்கள்

மேலும் கடலோர மண்டலம் I-ல் கூட ராணுவ, பாதுகாப்பு, போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவைகள் மற்றும் பொது சேவைகளுக்காக சாலை அமைப்பதை புதிய வரைவு திட்டம் அனுமதிக்கிறது. போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே, எந்த ஒரு கார்ப்பரேட் திட்டத்தையும் அரசு தனது விருப்பம் போல பொது சேவை அல்லது போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தேவை என்று அறிவித்து கடலோர பகுதியை சீரழிப்பதற்கு இது அச்சாரம் போட்டுத் தருகிறது.

மத்திய அரசால் 1996-ல் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை அடிப்படையாக வைத்து புதிய கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

1:25000 அளவில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் அபாயக்கோடு பொருத்தியிருக்க வேண்டும். கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் வரைபடம் மட்டுமில்லாமல் எழுத்துப்பூர்வமான திட்டமும் இருக்க வேண்டும். ஆனால் இது நாள் வரை எழுத்துப் பூர்வமான திட்டம் வெளியிடவில்லை. கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மீனவ மக்கள் எழுப்பிய தெளிவானகளுக்கு உரிய விளக்கத்தை இன்று வரை தராத அரசு இப்போது மீண்டும் கண்துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டஙளை நடத்துகிறது.

மேலும், “இந்த கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் குறித்து மீனவமக்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றும், அவர்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்றும் உழைக்கும் மக்களை அவமதிக்கும் வகையில் அறிக்கை அனுப்பியிருக்கின்றனர் இந்த அதிகார வர்க்க ‘அறிவாளிகள்’.

தொழிலாளர், விவசாயிகள் வாழ்வாதாரங்களை பறிப்பது மட்டுமின்றி, கனிம வளங்களை கைப்பற்றுவது, கடற்கரை வளங்களை ஆக்கிரமிப்பது என்று நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டி வருகிறது பன்னாட்டு மூலதனம். மிக விரைவில் மூச்சு விடுவதற்குக் கூட முடியாமல் உழைக்கும் மக்களை நெருக்கிக் கொல்லும் கொலை வெறியில் செயல்பட்டு வருகிறது மூலதனத்தின் ஆட்சி.

திருவள்ளூர் மாவட்டத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டால் புலிக்காட் பகுதி மீனவர்கள் அதை எதிர்த்து பொது அடைப்பும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தவிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர்கள் சங்கத் தலைவர் துரை மகேந்திரன் அறிவித்திருக்கிறார். தென்னிந்திய மீனவர்கள் நல சங்கத் தலைவர் கே பாரதி, இந்த வரைபடங்கள் மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் மீனவர்கள் கொடுத்த தகவல்கள் எதுவும் அவற்றில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது மீனவர்களுக்கு மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல. நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மறுகாலனியாக்கத்தின் ஒரு பகுதியே. எனவே, மறுகாலனியாக்கத்தால் சுரண்டப்படும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் இணைத்து மூலதனத்தின் ஆட்சியை எதிர்த்து வீழ்த்துவது முன்பு எப்போதையும் விட அவசியமானதாக மாறியிருக்கிறது.

– குமார்

நன்றி : new-democrats
புதிய தொழிலாளி – ஆகஸ்ட் 2018 இதழிலிருந்து

மூலக்கட்டுரை :

சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

(கோப்புப்படம்)

“திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதிய நூலை பதிப்பித்ததற்காக சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை, எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகள் மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கே வந்து முற்றுகையிட முயன்றனர்.

நேற்று மதியம் 2:30 மணிக்கு சிவனடியார்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்கள் நுழைவதற்கு வசதியாக பல்கலைக்கழக நிர்வாகமும் கேட்டை திறந்துவிட்டது. உள்ளே நுழைந்தவர்கள் சங்குஊதி போராட்டம் நடத்த முயன்றனர்.

மதவெறி கும்பல் வருவதை அறிந்த அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் நுழைவு வாயிலிலே அவர்களை தடுத்து நிறுத்தி ”மதவெறி கும்பலே வெளியேறு” என்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். மதவெறி கும்பலை தடுக்க வேண்டிய காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களிடம் எகிறியது.

மாணவர்களின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக இந்துத்துவ கும்பல் பின்வாங்கியது, உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல்துறை மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, மதவெறி கும்பலில் நான்கு பேரை தேர்வுசெய்து துணைவேந்தரை சந்திக்க அழைத்துச் சென்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதன் அடுத்தகட்டமாக மாணவர்கள் துணைவேந்தர் இருக்கும் நூற்றாண்டு கட்டிடத்தின் வாயில் கேட்டை மூடி, இந்துத்துவ பாசிஸ்டுகளை நுழையவிடாமல் போராட்டம் நடத்தினர் மாணவர்கள். இனி இந்துத்துவ கும்பல் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை என்றான நிலையில், மதிப்பிற்குரிய பல்கலைக்கழக பதிவாளர் அவர்களே கீழே இறங்கி வந்து பாசிஸ்டுகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

மனு கொடுத்த பின்னரும் போராடுவதற்காக காத்திருந்த மதவெறி கும்பல், மாணவர்களின் பின்வாங்காத போராட்டத்தைக் கண்டு அஞ்சி வெளியேறியது. சங்கு ஊதி வந்த இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு, மாணவர்களின் போராட்டம் சங்காக அமைந்தது.

இந்த போராட்டத்தின் பின்னணியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் சில கேள்விகளையும் சந்தேககங்களையும் முன்வைக்க விரும்புகிறது.

1. மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு போராடினால் உடனடியாக தடுத்து நிறுத்தும் பல்கலைகழக நிர்வாகம், பேரா.சரவணணுக்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிடவந்த இந்து மதவெறி கும்பலுக்கு யார் உத்தரவின் பேரில் கதவை திறந்துவிட்டது…?

2. நாப்கின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்காக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் போராடியபோது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து கைது செய்து, போராடிய மாணவிகள் மீது ”நைட்டு கேஸ்ல வழக்கு பதிவேன்” என்று மிரட்டும் D6-அண்ணா சதுக்க காவல்துறையினர், பேராசிரியரை மிரட்டவந்த மதவெறி கும்பலை கைது செய்யாதது ஏன்..?

3. போராட்டத்திற்கிடையே மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட
D6-காவல்நிலைய ஆய்வாளர் சபாபதி, “அந்த ஆளு ஏன் மதத்தை பற்றி தப்பா எழுதனும்? அவங்க போராடுறது சரிதான்!” என்று இந்துத்துவ பாசிச கும்பலுக்கு வக்காலத்து வாங்கியதன் பின்னணி என்ன..?

4. பலமுறை அடிப்படைவசதி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக பதிவாளரிடம் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் கடிதம் அளித்தும் அவர்களை அழைத்து பேசாத நிலையில், முகம் தெரியாத மதவெறி கும்பலுக்காக பதிவாளர் கீழே இறங்கிவந்து மனுவைப் பெற்றதன் காரணம் என்ன..?

5. மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலைக்கழக நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது..?

6. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தன்றே, இந்துமதவெறி கும்பல் முற்றுகையிட வந்ததன் சூட்சமம் என்ன..?

இவண்:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC_UNOM),
சென்னைப் பல்கலைக்கழகம்.

டெல்டாவை அழிக்கும் மோடி எடப்பாடி அரசுகள் ! திருவாரூர் ஆர்ப்பாட்டம்

டெல்டா விவசாயத்தை திட்டமிட்டு அழிக்கும் எடப்பாடி, மோடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் !

காவிரி நீர்ப் பங்கீட்டில் கழுத்தறுப்பு, காவிரி தடுப்பணைகளை உரிய முறையில் பராமரிக்காதது, கால்வாய்களைத் தூர் வாராமல் விடுவது எனத் தொடர்ச்சியாக டெல்டா விவசாயத்தை சீரழிக்கும் நாசவேலையில் மத்திய மோடி அரசும் அடிமை எடப்பாடி அரசும் ஈடுபட்டுவருகின்றன. இவையனைத்தும் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி விவசாயிகளைக் கூண்டோடு விரட்டிவிட்டு, ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் படுகைகளாக மாற்றி வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டமே.

இந்த மாபாதகச் செயலைச் செய்துவரும் மோடி, எடப்பாடி அரசுகளைக் கண்டித்து  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 20-09-2018 (வியாழக் கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் இரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர் !

தகவல்: மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு: 96263 52829

*****

எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்!

பிள்ளையார் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒட்டி, தமிழகத்தில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் வண்ணம் தொடர்ந்து பேசி வரும் பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா-வை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில், வன்முறையை தூண்டி கலவர பூமியாக மாற்றும் பயங்கரவாதி எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !

தகவல்: மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்
தொடர்புக்கு: 81108 15963

பெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது ? துரை சண்முகம் | காணொளி

ருவருக்கு எதுவெல்லாம் பிடிக்காது என்பதிலிருந்து அவரை மதிப்பிடமுடியும் என்றார் காரல் மார்க்ஸ். தந்தை பெரியாருக்கு சாதி பிடிக்காது, மதம் பிடிக்காது, பெண்ணடிமைத்தனம் பிடிக்காது, சமத்துவமின்மை பிடிக்காது. அதனால்தான் அவரை சங்க பரிவாரத்துக்குப் பிடிக்காது. ஆனால், அதே காரணத்தால்தான் அவரை நம் அனைவருக்கும் பிடிக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் கூறிவருவது போல, பெரியார் இந்துமதத்தை மட்டும்தான் எதிர்த்தாரா? பெரியார் கடவுள் மறுப்பு மட்டும்தான் போதித்தாரா? பெரியார் பார்ப்பனரல்லாதவர்களுக்காக மட்டும்தான் பாடுபட்டாரா ? இந்துமதப் பெண்கள் பணிக்குச் செல்வது குறித்து இந்துமதத்தின் ஆன்மிகச் சுடர் ‘மகா பெரியவா’ என்ன கூறினார்? நாத்திகப் பெரியார் என்ன கூறினார்?

பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை நொறுக்கி உண்மையான பெரியாரை அடையாளம் காட்டுகிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்.

பாருங்கள் ! பகிருங்கள் !

– வினவு களச் செய்தியாளர்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !

ஜான்சன் (ஓட்டுனர் சீட்டில் இருப்பவர்), சுரேஷ் (நீல சட்டை அணிந்திருப்பவர்)

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது பா.ஜ க. அரசு.

விலையுயர்வை குறைப்பதற்கான சாத்தியமில்லை என்று ஜேட்லியும், விலையுயர்வுக்கு காரணம் அமெரிக்காதான் என்று அமித்ஷாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், என்ன விளக்கம் கொடுத்தாலும் மக்கள் இவர்களை நம்புவதில்லை.

அதேசமயம் இந்த விலையேற்றத்தையும் வேறு வழிதெரியாமல் சுமந்து கொண்டு அன்றாட பணியின் பொருட்டு மூலைமுடுக்கெங்கும் பயணிக்கிறார்கள். இந்த விலையேற்றம் எங்கள் முதுகின் மேல் வந்திறங்கிய கூடுதல் சுமை என்பதை விவரிக்கிறார்கள் சென்னை கோயம்பேட்டின் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சுரேஷ், ஜான்சன், சேகர்.

ஜான்சன் (ஓட்டுனர் சீட்டில் இருப்பவர்), சுரேஷ் (நீல சட்டை அணிந்திருப்பவர்)

“நாங்க பதினைந்து வருஷத்துக்கு மேல ஆட்டோ ஓட்டுறோம். டீசல் விலை 38 ரூபாய் இருக்கும்போது வண்டி ஓட்ட ஆரம்பிச்சது. இப்ப டீசல் 78 ரூபாய்க்கு வந்து நிக்குது. ஆனா எங்க டிக்கெட் ரேட் மட்டும் இன்னும் ஏறல. ஒரு ஸ்டாப்புன்னா ஐந்து ரூபா. அதுக்கப்புறம் பத்து, இருபதுன்னுதான் இப்ப வரைக்கும் இருக்கு. இன்னும் கூடுதலா விலையை ஏத்தினா ஜனங்க ஏறாது.

இப்படி ஓட்டியே ஒரு நாளைக்கு 1200, 1500 பாக்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சி முட்டிடும். அதுல 500 ரூபா வாடகை.. 500 ரூபா டீசலு, பெட்ரோல் ஆட்டோன்னா இன்னும் கூட ஆகும். இந்த செலவு போக கையில 200,300 தான் நிக்கும்.

ஜாக்பாட்டா வாரத்துல இரண்டு நாள் 2,000 ரூபா கிடைக்கும். அதை வச்சிக்கினு கலக்சன் வராத நாளை ஓட்டனும். அப்படி இல்லையா, காலைல ஆறு மணிக்கு எடுத்தா சாயங்காலம் ஆறு மணிக்கு நிறுத்துற வண்டிய நைட்டு ஒன்பது, பத்து மணி வரைக்கும் ஓட்டுவோம். அப்படி கூடுதலா ஒழச்சா 300 லிருந்து 500 ரூபா வரைக்கும்  வரும். அப்பதான் வீட்டுக்கு கொடுக்க முடியும்.

ஒரு நாளைக்கு கொறஞ்சது 300 ரூபா கொடுக்கனும் பொண்டாட்டி கிட்ட. இல்லனா வீட்டுல சண்ட வரும். தண்டலுக்கு தெனமும் 200 ரூபா எடுத்து வைக்கனும். எங்க செலவு பாக்கு, சிகரெட்டுன்னு கொறஞ்சது 100 ரூபா ஆகும்.  இதையெல்லாம் சாமளிக்கனும்னா, லீவு போடாம வண்டி ஓட்டனும்.

நாங்க சொந்த வண்டி ஓட்டுறோம். இதுவே வாடகை வண்டி ஓட்டுறவங்களுக்கு பெரும்பாடு. வண்டி நிக்காம ஓடிகிட்டே இருந்தாத்தான் சமாளிக்க முடியும். இல்லனா வர காச வாடகை கொடுத்துட்டு சும்மா பேருக்கு வேலை பார்த்துட்டு போக வேண்டியதுதான்.

இதெல்லாம் அன்னைக்கு பொழப்புக்குத்தான். இதுபோக வண்டிக்கு டியூவ் (தவணை)கட்றதுக்கு, புள்ளைங்க படிக்கிற பீசு, சொந்தகாரங்க விஷேஷம் இதுக்கெல்லாம் தண்டல்தான். தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது. அடிக்கடி தண்டல் வாங்குவோம். அதுதான் எங்களுக்கு இருக்க ஒரே விமோசனம்.

அது என்ன தண்டல்னு கேக்குறிங்களா…..?

இப்ப இருபதாயிரம் தண்டல் வாங்கினா 17,000 நம்ம கையில கொடுப்பன். நாம 20,000 க்கு  டெய்லியும் 200 ரூபா 100 நாள் கட்டணும். இது இல்லாத திடீர்னு பசங்களுக்கு உடம்பு சரியில்லனா வட்டிக்கு தான் வாங்குவோம். அதுவும் ஸ்பீடு வட்டி.

அதாவது, ஆயிரம் ரூபா நான் வட்டிக்கு வாங்குறேன்னு வையுங்க, அந்த அசல் பணம் ஆயிரபா கொடுக்கிர வரைக்கும், எனக்கு பணம் கொடுக்கிறவருக்கு நான் தினமும் நூறு ரூபா கொடுக்கனும். அஞ்சி நாள்னா ஐநூற், பத்து நாள்னா ஆயிரம்னு… போயிட்டே இருக்கும்.

அப்புறம் இன்னொரு கொடும இருக்கு…… கலக்சன் இல்லாத போது, இல்ல வந்த காசுக்கு வேற முக்கியமான செலவு வந்து இரண்டு மூனு நாள் வண்டி வாடகை கொடுக்க முடியாம போகும். அதுக்கும் வட்டி போட்டு தான் வாடகைய கொடுக்கனும். இப்படி வட்டி கொடுத்தே எங்க வாழ்க்கை அழிஞ்சி போயிடும்” என்கிறார் ஜான்சன்.

இதுக்கே டயர்ட் ஆனா எப்படி… இன்னும் இருக்கு என்று கிண்டால சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார் சேகர், “சொந்த வண்டி ஓட்டினாலும் ஒரு முன்னேற்றமும் இல்ல. இந்த வண்டிக்கு எப்.சி பன்ன 30,000 இல்லாம நடக்காது. டிங்கரிங், பெயிண்டிங், ஆயில் சர்விஸ், டயர் மாத்துறது இப்படி செலவு இழுத்துக்குனே போவும். அறுபது ரூபா வித்த ஆயில் இப்ப  300 ரூபா விக்குது.  இன்னும் விலைவாசி எங்க போயி நிக்கும்னு தெரியல.

சேகர்

மாசம் முப்பது நாள், வருஷம் 365 நாள் நாங்க உழைக்கிறோம். ஆனாலும் கடன்ல இருந்து எங்களால மீள முடியல. உடம்பு சரியில்லானக் கூட நாங்க மாத்திரை போட்டுனு வண்டி ஓட்டுவோம். சொந்தகாரங்க யார்னா செத்தாதான் அரை நாள் லீவு போடுவோம். இப்படி உழச்சாலும், குழந்தைகளுக்கு அதுங்க கேக்குற நொறுக்கு தீனிகூட வாங்கி கொடுக்க முடியல. மிக்சர், கெஜரா, காராபூந்தின்னு எதாவது ஒன்னு கேட்பாங்க. பல நாள் நாங்க வெறும் கையோட தான் போயி நிப்போம்.

வாரத்துக்கு ஒரு நாள் கவிச்சி…… மீனோ, கோழியோ.. எதாவது வாங்கி போடலாம்னு நெனப்போம்…… பல நாள் அதுவும் முடியாது. இதனாலயே படுத்தா தூக்கம் வராது. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் துங்குறதே அதிகம். இப்ப விலைவாசி உயர்வால சுத்தமா தூக்கம் இல்ல.

டீசல் விலையுயர்வுக்கு முன்னாடி 12 மணி நேரம் உழச்சோம். இப்ப 18 மணி நேரம் உழைக்கிறோம். அதிகமா உழைக்கிறதால அதிகமா பணம் வரும்னு நெனக்க வேணாம். பழைய வசூலுக்கே இப்ப ரெண்டு மடங்கு உழைக்க வேண்டியதா இருக்கு.

இப்ப நாங்க இரண்டு முறையில வண்டி ஓட்டிட்டு இருக்கோம். ஒன்னு லைன்ல போறோம். இன்னொன்னு டிரிப் அடிக்கிறோம். காலையில மாலையில ஆபிஸ் டைம்னு லைன்ல போறோம். விடிய காலை, மதிய நேரத்துல லைன்ல ஆளு இல்லாத போது ட்ரிப்பு அடிக்கிறோம்.

உடம்புக்கு ஓய்வு ஒழிச்சல் இல்ல. உடம்பு புண்ணா நோவுது. திரும்பவும்  வேலை செய்யனும்னா பாக்கு, சிகரெட்னு புடிக்கனும். எப்பனா தண்ணி அடிக்கனும். அந்த செலவு பன்றதா? பசங்க கேக்குறத வாங்கி கொடுக்கிறதா? தலையே வெடிச்சிடும் போல இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே  அந்தப் பக்கம் கடந்து சென்ற டாடா மேஜிக்கை காட்டி, “இந்த வெள்ள வண்டியால பொழப்பு போயிடுச்சி” என்றார்.

அங்கிருந்து அமைதியாக விடைபெறும் தருவாயில், சற்று தொலைவில்  சவாரிக்காக காத்திருந்தார் ஒரு டாடா மேஜிக் வண்டியின் ஓட்டுநரும், உரிமையாளருமான  சரவணன்.

“சார்……. நாங்க சொகுசு கார் ஓட்டுறோம்னு ஆட்டோகாரங்க எங்கள பார்த்தா எறிஞ்சி விழுறாங்க. எங்களால தான் அவுங்களுக்கு டிக்கெட் ஏறலன்னு. ஆனா எங்க லட்சணம் அதுக்கு மேல இருக்கு. நான் சொந்த வண்டிதான் வச்சிருக்கேன், வெத்தல, பாக்கு, பீடின்னு எந்த செலவும் செய்ய மாட்டேன். ஆனாலும் கடன்…. கடன்…. ஊரை சுத்தி கடன்..!

மாதிரிப் படம்

பெரிய வண்டி பெரிய செலவு. வருஷத்துக்கு எப்.சி பன்ன 80 ஆயிரம் இல்லாம வேலை நடக்காது. இன்சுரன்ஸ் 25,000, ரோடு டாக்ஸ் 12,000, டிங்கரிங் 6000, பெயிண்டிங் 6000, இஞ்சின் செலவு 5000, ஆர்.டி.ஓ – பிரேக் இன்ஸ்பெக்டர் செலவு 2500, ஸ்டிக்கர் 1500, பத்து நாள் வேலை இல்லாம அலையிறது, அதுக்காக கடன் வாங்குறதுன்னு ஒரு லட்சம் வரைக்கும் செலவு பன்னாதான் ரோட்டுல வண்டி ஓடும்.

சரி வண்டி ஓடினா இதையெல்லாம் சம்பாதிச்சிடலாமேன்னு நீங்க நெனக்கலாம். அதுதான் தப்பு… இந்த கடனை அடைக்கதான் வண்டியே ஓடும். அதுக்கப்புறம்தான் நம்ம செலவு.  ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிச்சா அது நல்ல நாள்னு அர்த்தம். அதுவும் 200 கிலோ மீட்டரு ஓட்டினா தான் கிடைக்கும். அதுக்கு  800 ரூபா டீசல் போடனும்.

டிராபிக்குல 15 கிலோ மீட்டர் போறதுக்கு ஒன்னரை மணி நேரம் ஆகும். கை எல்லாம் உட்டு போயி, கண்ணு பூத்து போயிடும். ஒவ்வொரு டிரிப்புக்கும் இறங்கி டீ, காபி சாப்பிட்டா தான் ஒரு தெம்பு வரும். இதுல சிகரெட், பான்பராக் போடுறவன் கதை மோசம். எனக்கு அந்த பழக்கம் இல்லாததால 700, 800 ரூபா நிக்கும். இல்லனா முதலுக்கு மோசமாயிடும்.

இதுல, டீசல் விலைய ஒரு நாளைக்கு ஒன்பது வாட்டி ஏத்துறானுங்க. நாங்க ஜனங்க கிட்ட இதை எப்படி சொல்லுறதுனு தெரியல. நாங்க இரண்டு ரூபா ஏத்தினாலும் ஜனங்க எங்கள புடிபுடின்னு புடிச்சிடுறாங்க. என்ன பன்றதுன்னு வழி தெரியல. இந்த தொழிலை விட்டு நாங்க இனிமே எங்க போறது? அத நெனச்சாதான் கலக்கமா இருக்கு!

-வினவு களச் செய்தியாளர்

மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா ?

0

ப்பனும் மகனும் ஒன்னு சேந்து குடிச்சுட்டு அவுந்து விழுற வேட்டிய எடுத்துக் கட்டும் நிதானம் கூட தெரியாம அசிங்கப்படுத்தினா எப்பேர்ப்பட்ட அம்மாவுக்கும் அவமானமாதான் இருக்கும். வேலைக்கி போன கூலி காசுக்கு சாராயம் குடிக்கிறது பத்தாம வீட்டுல உள்ள காசையும், பொருளையும் திருடி குடிச்சா எப்புடி குடும்பம் பன்றது? இதெல்லாம் பொருக்க முடியாமெத்தான் சோலையம்மா வீட்ட விட்டு போனதும் நடந்தது.

அப்பனும் மகனும் குடிச்சுட்டு அசிங்கப்படுத்துறதும் அதுக்காக சோலையம்மா கோச்சுகிட்டு போறதும் புதுசில்ல, கோவங்கற பேருல  பத்துநாளு ஒருவாரம் எங்கனா தெரிஞ்ச எடத்துல தங்கி கூலி வேல பாத்துட்டு பெறவு தலவிதின்னு வீட்டுக்கு திரும்பி வாரதும் புதுசில்ல.

ஆனா இந்த மொற கோவம் தீந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது சோலையம்மாவுக்காக காத்திருந்தது மரண ஓலம்.

“என்னத்த சொல்ல எங்கதைய. செத்தப் பொணம் வீட்டுல கெடக்க எழவு வீட்டுப் பொம்பள நானு வயக்காட்டுல நின்னு வயிராற கஞ்சிகுடிச்சுட்டு வாயாற வெத்தலப் போட்டேன். எழவு விழுந்த சேதி என்ன வந்து சேர அஞ்சு நாளச்சு…

நா.. ஒன்னும் பத்து ஏக்கர் பண்ணையம் பண்ணி பணக்கார வாழ்க்க வாழனுமின்னு ஆசப்படல. கூலி பாடுபட்டு சோறு தின்றோம் அத புள்ள, புருசனோட சந்தோசமா சேந்து திங்கனுமுன்னு நெனச்சேன். அதுக்கு குடுப்பன இல்ல.

இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது?

அந்த மனுசன கெட்டவன்னு சொல்ல முடியாது. இந்த குடிதான் அவன கெடுத்துபுடுச்சி. குடிக்காதையா குடிக்காதையான்னு தலப்பாடா அடிச்சுகிட்டேன் கேக்காம இன்னைக்கி அனாதையா விட்டுட்டு போயிட்டான்.

நா.. கலைஞர் கச்சி அதனால எம்புள்ளைகளுக்கு தமிழ்லதான் பேரு வப்பேன்னு மூனு பிள்ளைக்கும் ஆசையா பேரு வச்சா..ன் அந்த மனுச… கதுரறுப்பு சீசன்ல ராத்திரி எத்தன மணிக்கி வீடு வந்தாலும் நெல்ல வித்து தீனி வாங்கிட்டுதான் வருவான். பிள்ளைங்க மேல உயிரையே வச்சுருந்தாரு.

வேலபாத்த அசதிக்காக சாரயத்த தேடிப் போயி குடிச்சப்ப பொண்டாட்டி பிள்ளையின்னு நிதானமா வீடு வந்தான். தடிக்கி விழுந்தா சாராயக் கடன்னு ஆன பொறவு எம்பொழப்பு சீரழிச்சி போச்சு.

பெரிய பொண்ண கட்டிக் குடுக்குற வறைக்கும் நிதானமாதான் இருந்தாரு. இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது? மாசத்துக்கு ரெண்டு தரம் ஆஸ்பத்திரி கூட்டிப் போகனும் ஒருக்க பஸ்சுக்கு போக 200 செலவு ஆயிடும்.

மூனு வருசமா நாங்க ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போறதும் டாக்டருங்க குடிக்காதிங்கன்னு சொல்றதும் பொழப்பா போச்சு. ஆஸ்பத்திரிலேருந்து திரும்பி வந்த மறு நாளே சாராய கடைக்கி போயிடுவான். நாத்து நட்டு, களப்பறிச்ச கூலிய ஏழு இடுக்குள பதுக்கி வச்சாலும் எடுத்துருவான். சாராயக் கட தூரமா இருந்தா போக முடியாது. காலடியில இருக்கதால தூங்கி முழிக்கிறதே அங்கதான்.

இப்பெல்லாம் எந்த வெவசாய வேலையும் சாராயம் இல்லாமெ நடக்குறதுல்ல. ஒரு மூட்ட நாத்தரிக்க, ஒரு ஏக்கர் நடவு நட, ஒரு ஏக்கர் கருதறுக்க கூலி இவ்வளவு, பாட்டுலுக்கு காசு தனி அப்புடிதான் ரேட்டே பேசுறானுங்க… ஈவுபாவா நல்லா வேல பாக்குற ஆளுக்கு வயக்காரங்க ரெண்டு பாட்டுலு சேத்தே வாங்கி தாராங்க.

எங்கூட்டாளு நாளைக்கி ஒங்களுக்கு வேலைக்கு வரேன்… இன்னைக்கி அவசரமா 100, 200 குடுங்கன்னு வாங்கியாந்து குடிச்சுருவாரு. காசு குடுத்தவங்க திட்டவும் செய்வாங்க சமயத்துல ரெண்டு அடியையும் போடுவாங்க. காசு குடுத்ததுக்காக முடியும் போது ஏதாச்சும் வேலைய வாங்கிப்பாங்க.

இந்தாள நம்பி ஒன்னுத்துக்கும் வேலைக்காதுன்னு ஆனபொறவு சின்ன பொண்ண துணிக்கடையில வேலப் பாக்க சென்னைக்கி அனுப்புனே. அது ஏதோ மூனு பவுன வாங்குச்சு துணிமணியெல்லாம் எடுத்து வச்சுருந்தா… அத போட்டு கல்யாணம் செஞ்சி வச்சோம்.

சின்னப்புள்ளைய கட்டிக்குடுத்து நாலு வருசமாச்சு. கல்யாணம் சீமந்தமுன்னு வாங்குன கடனுல அடைச்சது போக குழுக்கடனு 60 ஆயிரம் இருக்கு.  தலைய அடகு வச்சாவது மாசாமாசம் தவண பணம் கட்டியாகனும்.

வீட்டுக்குள்ள ஒரு பொருளுருக்கா பாத்தியளா… கரி படிஞ்ச குண்டானத் தவிர வேற எதுவும் இல்ல என் வீட்டுல. தண்ணி எடுக்குற கொடம் தவல, வீட்டுல இருந்த சைக்கெளு… எல்லாத்தையும் வச்சு குடிச்சுட்டான். அதவிட கொடுமெ ஒரு நாளு மம்பட்டிய(மண்வெட்டி) வித்துட்டு குடிச்சுட்டு வந்தான். மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற எந்த குடியானவனும் குடும்பத்த காப்பாத்துவான்னு நம்ப முடியுமா..?

இந்த காலனி வீடு கட்டி எட்டு வருசம் ஆகப்போவுது. இருந்த இரும்பு கதவும் துரு..தின்னு சாத்த முடியாமெ போச்சு. வேற மாத்துக் கதவு போட முடியல. எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.

சாராயக் கட இல்லன்னா எங்கூட்டாளு நல்லவந்தான்னு சொல்லிட்டே இருந்தா கடன குடுத்தவங்க ஏத்துப்பாங்களா? ஆத்துல தண்ணி இல்லாம ஊருக்குள்ள வேலை நெரந்தரமா கெடைக்க மாட்டேங்குது. எப்புடி கடனடைக்க..?

நெனச்சு பாக்கையில ஆத்தரம் அதிகமா வரும். அப்பனும் மகனும் எப்படியாச்சும் ஆக்கி தின்னுங்கடான்னு விட்டுட்டு… போருங்க (ஆழ்துளை கிணறு) அதிகமா இருக்குற பட்டுக்கோட்ட, மன்னார்குடி பக்கம் போயிடுவேன். வாரம், பத்து நாளு தங்கியிருந்து வேலை செஞ்சுட்டு கூலிய கடங்குடுத்த குழுவுக்கு கட்டிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவேன்.

இந்த தடவையும் அப்புடிதான்……. சின்னமக புள்ளைக்கி முடியெடுக்க போறேன்னு சொல்லிச்சு. ஒரு சட்டதுணி வாங்கிப் போடலான்னு காசு வச்சுருந்தேன் அப்பா எடுத்தானோ மகன் எடுத்தானோ காச காணோம். கேட்டா ரெண்டு பேருமே அடுச்சுபுட்டாய்ங்க… போக்கத்தவளுக்கு ஏது எடம், வழக்கம் போல திரும்பவும் கோச்சுகிட்டு வேலை தேடி போயிட்டேன்.

பத்துநாளைக்கு பெறவு என் போட்டா போட்டு கடையில ஒரு போஸ்டரு ஒட்டிருந்துச்சு. என்னையா எழுதிருக்குன்னு விசாரிச்சேன். அவசரமா வீட்டுக்கு வரனுமின்னு எழுதிருக்குன்னாங்க. ஒரு தடவையும் நம்மள தேடுவாரில்லையே இது என்ன புதுசான்னு… அடிவயிற கலக்கிருச்சு.

எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.

அடிச்சுபுடிச்சு வீட்டுக்கு ஓடியாந்தா அப்பா செத்து அஞ்சு நாளாச்சு… எங்கம்மா போனேன்னு கத்துறா எம்பொண்ணு. வெளிக்கி போன எடத்துலேயே ரெத்த வாந்தி எடுத்து செத்துக் கெடந்துருக்காரு அந்த மனுசென்…வயசு 49 – தாண்டலை!

ஒரு வருசமா சரியா நடக்கக் கூட முடியல. ஆனா சாராயம் காலடியிலேயே கெடைக்கிறதால நிறுத்தாம குடிச்சுட்டு இருந்தாரு…

நா.. பொலம்பி அழுதா போன உசுறு திரும்பி வருமா? கலங்கி படுத்தா கடங்காறன் விடுவானா? நா என்ன செய்யப் போறேன்?

ஊரா இது, ஒரு கட்டுப்பாடு இல்லாமெ போச்சு. பக்கத்து ஊரு டாஸ்மார்குல சாராயத்த வாங்கி ஊருக்குள்ள வச்சுகிட்டு சில்றையா டம்ளர்ல ஊத்திக் கொடுத்து யாவாரம் பாக்குறாங்க. முழுசா பாட்டுல வாங்க காசில்லன்னு கலங்கி நிக்க தேவையில்ல. கையில இருக்குற காசுக்கு தக்கன.. வாங்கி குடிச்சிக்கிடலாம். வேல முடிச்சு பொழுதுக்கா கூலி வாங்குனதும் முழு பாட்டுலு வாங்க டாஸ்மார்க்கு போறாங்க.

விடியக்காத்தாலயே ஊருக்குள்ள டீக்கடப் போல சாராயத்த விக்கிறதால வயக்காட்டுக்கு போற அத்தன ஆம்பளையும் வந்து குடிச்சுட்டு போறானுங்க. இது சரியில்லன்னு கேக்க முடியுமா? ஈனச்சிறுக்கி, பறச்செரிக்கி நாங்க எப்புடி நடந்துக்கனுன்னு தெருவுக்குள்ள வந்து நீ சொல்லித்தரியான்னு ஏசுவானுக.

எங்க தெருக்காரங்க எல்லாம் சேந்து போயி ஊரு பெரிய மனுசங்கிட்ட சொல்லியும் ஒன்னும் நடக்கல. டாஸ்மார்கு இருக்க கூடாதுன்னு சொல்லி கடைக்கி முன்னாடி உக்காது போராட்டம் செஞ்சும் ஒன்னும் நடக்கல.

அப்பனப் பாத்து எம்மகனும் 14 வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சுட்டான். இப்ப 17 வயசு ஆவுது காளை போல இருக்கான் ஒரு குடும்பத்த தாங்கலாம். ஆனா எந்த வய வேலையும் தெரியாது. குடிக்க கையில காசு இல்லன்னா மட்டும் சித்தாளு வேலைக்கி போவான். அவன நம்பி வீட்டுல அஞ்சு பத்து வைக்க முடியாது. இந்த சாராயக்கடைங்கள எடுக்காம வச்சுருந்தா எம்புருசனப் போல பிள்ளையையும் எழந்துடுவேனோன்னு பயமாருக்கு”

சாராயத்தால ஊருக்கூரு இதே நெலமெதான். யார் வீட்டு எழவொ பாய் போட்டு தூங்குனு… யாரும் கண்டுக்க மாட்டேங்குறாக.

குறிப்பு: உண்மைச்சம்பவம், ஊர்,பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

  • சரசம்மா

டிவிட்டர் டிரண்டிங்கில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் !

ல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் தந்தை பெரியாரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க. ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழகத்தின் குரலுக்கு அடிநாதமாகத் திகழ்பவர் பெரியார்.

பெரியாரின் 140-வது பிறந்த நாளோடு பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளும் சேர்ந்து வந்தது (17.09.2018). தமிழக டிவிட்டர்வாசிகள் மட்டுமல்ல, இந்திய அளவிலான டிவிட்டர்வாசிகளும் பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரது பணிகளை, அவரது கொள்கையை உரக்கக் கூறிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரை டிவிட்டர் டிரண்டிங்களில் மோடியை விட பெரியாரே முன்னணி வகித்தார்.

படிக்க:

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்
ஐயர் மனசுல பெரியார் !

இது சங்கிகளுக்கு வயிற்றெரிச்சலாகவே உள்ளது. இந்த சங்கிகளுக்கு பெரும்பான்மை இந்துக்கள் வாழும் தமிழகம், “கடவுள் இல்லை” என்று கூறிய இந்த ஈரோட்டுக் கிழவனை ஏன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்று புரியவில்லை.

இந்துத்துவ அடிமைகளுக்கு சுயமரியாதையின் அவசியமும், மகத்துவமும் தெரியுமா என்ன?

டிவிட்டரில் பெரியாரைக் கொண்டாடும் பல்லாயிரம் பதிவுகளில் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.

Prabha Raj

சங்கிகளால், கடவுளை வெளிப்படையாக மறுக்கிற ஒரு மனிதன், 87.58% ஹிந்துக்களைக் கொண்ட தமிழகத்தின் கனவு நாயகனாகத் திகழ்வதையும், பெரியார் மண்ணை ஏன் தங்களால் காவிமயமாக்க முடியவில்லை என்பதை அவர்கள் எப்போதும் அறிந்துகொள்ளப்போவது இல்லை. தமது மரணத்துக்குப் பின்னர் பல பத்தாண்டுகள் கடந்தாலும் சங்கிகளுக்கு கொடுங்கனவாக வாய்த்த ஒரே மனிதன் #HBDPeriyar140

carpe diem

இதற்கு சுட்டுரை எதுவும் தேவையில்லை.

Shabbir Ahmed

தமிழகத்தின் முதல் அர்பன் நக்சல் (நகர்ப்புற நக்சல்) #HBDPeriyar140

புத்தன்

இதுதான் இன்றைய புகைப்படம் #BleedBlack #HBDPeriyar140

Elite Naxal

என் கொள்ளுத்தாத்தாவுக்கு இதைவிட பொறுத்தமான புகைப்படம் இல்லை என்றே நான் கருதுகிறேன்  #HBDPeriyar140

THE ONE

எங்கும் கிடைக்காது #HBDPeriyar140

Amaranth

பாஜகவின் அதிகாரத்திற்கான பசி, பெரியாரின் கொள்கைகளுக்கு முன்னால் #HBDPeriyar140

Ashraf
#HBDPeriyar140 சங்கிகளின் கொடுங்கனவு

S.Prince Ennares Per

140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாளில் ஒரு அஞ்சாத தைரியமான மனம் பிறந்தது. கட்டுக்கடங்காது ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவர். தனது இறுதி மூச்சுவரையிலும் எதற்கும் பணியாமல் நின்றவர். ஒரு சட்டகங்களுக்குள் அடைபடாத மனிதர். #HBDPeriyar140

Voice of RaavanaN

தமிழகம் பெரியாருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இன்று @HRajaBJP-ஐ கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

கமல்

#HBDPeriyar140 90-வது வயதில் 180 கூட்டம். 91-வது வயதில் 150 கூட்டம். 93-வது வயதில் 249 கூட்டம். 94-வது வயதில் 229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம். மக்களுக்காக அவர்கள் சுயமரியாதைக்காக உரையாடினார்! அவர்தாம் பெரியார் ! இவருக்கு ஈடு இணை யார்?

Arunmozhi

சட்டகங்களுக்குள் அடைக்கமுடியாத ஒரு மனிதர். அவர் இல்லாத தமிழகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த மனிதர் இல்லையெனில் தமிழகத்தில் பல்வேறுதரப்பினரும், தங்களது பெயருக்குப் பின்னால் இந்தியாவின் பிற பகுதியினரைப் போல் சாதிப் பெயரோ, குடும்பப் பெயரோ இட்டுக் கொண்டிருப்பர்.

Chozhar parambarayil oru MLA

பெருந்திரளின் தலைவர், எனது விருப்பமிக்க தலைவர் #HBDPeriyar140. @narendramodi – நீங்களும் அவரது பிறந்தநாளில் பிறந்திருக்கிறீர்கள். இது எங்களுக்கு மிகபெரிய அவமானகரமானது. அவரது வயதில் கிட்டத்தட்ட பாதி வயதை அடைந்திருப்பீர்கள். அவருக்காக சிறிதேனும் நல்ல எண்ணங்களைக் கொண்டிருங்கள். உங்களது பிறந்தநாள் பரிசாக எதிர்வரும் தேர்தலில் தயவு செய்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுவிடாதீர்கள்.

Pirai Kannan

பார்த்துட்டு சாவுங்கடா………! #HBDPeriyar140 #Periyar140

Martin Joseph

#HBDPeriyar140 யோவ் கிழவா!! நானெல்லாம் படிக்கனும்தானே 93 வயசு வரைக்கும் கஷ்டப்பட்ட, படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன் வந்து பாருய்யா..!! நன்றியோடு கடைசி வரைக்கும் இருப்பேன்யா.. Love you கிழவா!!

நித்யா

#HBDPeriyar140 #பெரியார்140 பெரியார் யார்? மானம் கெடுப்பாரை… அறிவைத் தடுப்பாரை… அடியோடு பெயர்த்த கடப்பாரை – அவர்தான் #பெரியார்

prem vendan

எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி, பார்ப்பனரை எதிர்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழியே, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. – தந்தை பெரியார். #Periyar #HBDPeriyar140

பைஜூ யுவன்

உன் இனத்தில் யார் பெயர் சொன்னால் எதிரி குலைநடுங்குகிறானோ அவனே உன் இனத்தின் தலைவன்! #தந்தைபெரியார் #HBDPeriyar #HBDPeriyar140

Dinesh

எங்கெல்லாம் ஏதாவது ஒரு இனம் ஒடுக்கபடுகிறதோ அங்கெல்லாம் அந்த பெருங்கிழவனின் பெயர் உச்சரிக்கபட்டே தீரும். #HBDPeriyar140

Surya Born To Win

காவிகள் திராவிடர்களை விழுங்க முற்படுகிறர்கள். ஆனால் தொண்டையில் சிக்கிய முள் போல் ‘பெரியார்’ இருக்கிறார், விடமாட்டார்! #HBDPeriyar140

SàãNàã

அரசியல் சாசனத்தை எரித்தீர்களா? ஆம் எரித்தேன் .. தெறிக்க விடலாமா !!! #HBDPeriyar140

Aravindhan Annadurai

உன் வெண் தாடியும் கருப்பு சட்டையும் இல்லையெனில்.. என்றோ காவி எங்களையும் காவு வாங்கி இருக்கும்..! #HBDPeriyar140

amutharasan‏

ஒரு மனிதன் இறந்து 45 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது கருத்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறது எனில் அத்தகைய ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவர் தான். #HBDPeriyar140

 

– வினவு செய்திப் பிரிவு