Monday, May 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 620

ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்த சதி – திருச்சி ஆர்ப்பாட்டம்

0

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பால் விலை ஏற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பால் விலையை லிட்டருக்கு ரூ 10 உயர்த்தி உள்ளது, அரசு. இதனை அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் கண்டித்தத்துடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நமது அமைப்பின் சார்பிலும் திருச்சி பகுதியில் இப்பிரச்சனையை மக்களிடம் விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்து விலை உயர்வு அன்று நகரம், புறநகர், கல்லூரி, கடைவீதி என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

அதன் பின் 3.11.2014 நகரின் மையப் பகுதியில் உள்ள சிக்னலில் பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கபட்டது. ஆயிரக்கணக்கான நபர்களை சந்தித்து பேசப்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் சிலர் தமக்காக தான் விலை உயர்த்தப்பட்டது என அப்பாவித்தனமாக கூறினர்.

  • பருத்திக் கொட்டை, புண்ணாக்கு மானிய விலையில் தருவதற்கும், விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்த அரசுக்கு வேறு வழி இல்லையா?
  • மொட்டை அடிச்சவனுக்கும், மொளப்பாரி தூக்கினவனுக்கும் பல கோடிகளை ஒதுக்கிய பணத்தை ஏன் பால் உற்பத்தியாளர்களுக்கு தரக்கூடாது

பால் விலையை உயர்த்தி தான் இதை செய்ய வேண்டுமா? இது மக்களை மோதவிடும் தந்திரம் என விளக்கப்பட்டது.

இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்கிறதா என்கிற தோரணையில் அமைப்பு பிரசுரத்தை பெற்றுக் கொண்டனர். இது போல தவறான கண்ணோட்டத்தில் கேள்வி கேட்பவர்களிடம் பொறுமையாக விளக்கப்பட்டது. அ.தி.மு.க கொடி கட்டிய காரிலும் பிரசுரம் வழங்கி விளக்கப்பட்டது. விருப்பம் இல்லாமல் பிரசுரம் மட்டும் பெற்றுச் சென்றனர். காலை முதல் மாலை வரை பிரசுரம் வழங்கியது நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் விலை உயர்வு ஏழை நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி! ஆவின்-க்கே பால் ஊற்ற அரசு செய்த சதி” என்ற தலைப்பில் 05.11.2014 அன்று திருச்சி பாலக்கரை இராமகிருஷ்ணா பாலம் அருகே காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் விலை உயர்வு ஆர்ப்பாட்டம்

பெண்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் தோழர். பவானி தலைமை ஏற்று நடத்தினார். ம.க.இ.க தோழர் ஜீவா, மனித உரிமைப் பாதுகாப்பு மைய தோழர் காவேரி நாடன், ம.க.இ.க-வின் மாநில இணை செயலாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.. ம.க.இ.க மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள் போராட்ட உணர்வை மக்களிடையே விதைத்தது. இவ்வார்ப்பட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள், பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர்.

தோழர் பவானி பேசும் போது:

milk-price-trichy-demo-08

இந்த பால் விலை உயர்வினால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பருத்திக் கொட்டை, புண்ணாக்கிற்கு அரசு மானியத்தை ரத்து செய்ததன் விளைவு, விவசாயிகளுக்கு பால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. அவர்களால் முடியாத நிலையில் ஆடு மாடுகள் பேப்பரை தின்னும் அவலநிலைதான் இருக்கின்றது என்றார்.

ம.க.இ.க தோழர் ஜீவா பேசும் போது:

“போதிய தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஆவின்பால் கொடுக்க பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அளவுக்கு ஆவின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அரசாங்கம் அதிலும் கலப்படம் செய்வதுடன் அதன் விலையையும் ஏற்றி குழந்தைகளுக்குக் கூட வஞ்சனை செய்கிறது. தண்ணீரைக் கூட இலவசமாக வழங்காத அரசிடம் நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். தண்ணீர், கல்வி, மருத்துவம், போன்றவற்றைக் கூட இலவசமாகத் தர முடியாது என்று சொல்லும் இந்த அரசு எதற்கு? இதற்கெதிராக ஒரு போராட்டம் இல்லை. ஆனால், ஜெயலலிதா ஒரு கிரிமினல் குற்றவாளி. அவர் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து 22 பேருந்துகள் எரிக்கப்பட்டன. இந்த இழி நிலை மாற நாம் போராட வேண்டும். இந்த அநீதியான ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கும் நக்சல்பாரிகளே இந்த தேசத்தைக் காப்பவர்கள்” என்றார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டத் தலைவர் காவிரி நாடன் பேசுகையில்:

milk-price-trichy-demo-14

“பால் விலை உயர்வு மட்டுமல்ல, மின்கட்டணமும் உயரப்போகிறது. மக்களின் கருத்துக் கேட்டே மின் கட்டண உயர்வு என்று சொல்லி நடத்தும் கருத்த கேட்புக் கூட்டம் ஒரு நாடகமே. மீனவ சமூகம் பாதிப்பு, இலங்கை அரசு அனைத்தும் இவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நடத்துகிறது. விடுதலை புலிகளுக்கு ஆயுதம், மருந்து கொடுத்தார்கள் என மீனவர்களை சிறை வைத்தது அரசு. ஆனால், சிங்கள ராணுவத்திற்கு நிதி, ஆயுதம் கொடுத்து லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றது இந்திய அரசு, இதற்கு என்ன தண்டனை? காங்கிரசுக்கு மாற்றாக பாஜக என மக்கள் நினைத்தனர். இவர்கள் அனைவரும் நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகளே!” என்றார்.

தோழர்.காளியப்பன் பேசும் போது:

milk-price-trichy-demo-16

“எந்த பரிசீலனையும் இல்லாமல் விலையை ஏற்றியிருக்கிறது அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் நிதி தர வேண்டும். ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என காரணம் கூறுகின்றனர். இது சரி என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆவின் நிறுவனம் ஏன் நட்டத்தில் இயங்குகிறது? அப்படி இயங்கினாலும் விலையை ஏன் உயர்த்த வேண்டும்” என தோழர் கேள்வி எழுப்பினார்.

“25 லட்சம் குடும்பங்கள் பால் உற்பத்தியே நம்பியே உள்ளது. கல்வி மருத்துவம் எப்படியோ அப்படி பாலும் அடிப்படை தேவை. பால் நோயாளிகளுக்கு மருந்தாகவும் குழந்தைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியில் 2-ம் இடத்தில் இருந்தும், மக்கள் சத்து பற்றாக்குறையுடன் உள்ளனர். நாட்டு மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டிருந்தால் விலை ஏறியிருக்காது. பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லை. மக்களின் வயிற்றிலடிப்பதே பெரிய பயங்கரவாதம். அரசின் அடிப்படை நோக்கம், ஆவின் நிறுவனத்தை முடிவிட்டு, தனியாருக்கு கொடுப்பதே. இது மட்டுமின்றி பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்வு. எல்லா துறைகளையும் நட்டத்தில் இயங்குவதாக காட்டி தனியாருக்கு தாரைவார்க்கின்றது. இதை மக்கள் போராட்டத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும்” என சிறப்புரையாற்றினார்.

பாய்லர் பிளன்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் தோழர் சுந்தர்ராஜ் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விலை உயர்வை கண்டு விரக்தியடைந்து வீட்டுகுள் முடங்காமல் வீதியில் இறங்கி போராடும் போது இந்த அரசின் சதி செயலை அம்பலப்படுத்தவும், அரசு பணிய வேண்டிய நிர்ப்பந்தமும் குறைந்தபட்சம் விலையை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். மக்கள் வீதியில் இறங்கி போராடுவதன் மூலமே இந்த அரசின் மக்கள் விரோதப் போக்கை கைவிட வைக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

மக்கள் கலை இலக்கியக் கழகம் வாழ்க!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாழ்க!
பெண்கள் விடுதலை முன்னணி வாழ்க!

மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனை ஓங்குக!
புதிய ஜனநாயக புரட்சி வெல்க!

பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடித்து
ஆவின் பாலுக்கு விலை உயர்வு
பச்சத்தண்ணியில் காசு பொறுக்கும்
பாதகத்தி ஆட்சியிலே
பாலுக்கு விலை ஏறுதுன்னு
புலம்பாதே! புலம்பாதே!

இடுப்புக் கோவணம் உருவுவதற்கும்
எதிர்காலத் திட்டம் வருது
மறவாதே! மறவாதே!

ஆரோக்கியா, திருமலான்னு
தனியார் நிறுவனத்தை வளர்க்காதே!
ஆவினுக்கு பாலை ஊத்தி
பச்சிளம் குழந்தைகளின்
வயிற்றிலடிக்காதே! வயிற்றிலடிக்காதே!

பருத்திக்கொட்டை, புண்ணாக்கு
மானியத்தை வெட்டாதே!
மாடுகளின் மடியறுத்து
பொறுக்கித் தின்ன அலையாதே!

ஏய்க்காதே! ஏய்க்காதே!
பால் உற்பத்தியாளர் பெயராலே
பால் விலை உயர்வுன்னு ஏய்க்காதே!
தனியார் பாலின் கொள்கைக்கு
துணை போவதை மறைக்காதே!

அரசுத்துறைகள் நட்டமென்று
ஆட்டையை போட நினைக்காதே!
ஆவின் நிறுவனம் நட்டமாம்!
மின் வாரியம் நட்டமாம்!
போக்குவரத்து துறையும் நட்டமாம்!
பொது துறைகளே நட்டமாம்!
இது அரசுத்துறைகளை இழுத்துமூட
அரசே நடத்தும் நாடகம்!

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
ஆவின் பாலில் கலப்படம் செய்து
2000 கோடி கொள்ளையடித்த
அ.தி.மு.க அமைச்சர்கள்
துணை போன அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

தனியார்மயம், தாராளமயம்
தாலியறுக்க வந்தாச்சு!
சேவைதுறைகளையும் ஒழித்துகட்ட
உலகவங்கி சொல்லியாச்சு
கல்வி, மருத்துவம் தனியாராச்சு
ஆலைகள், சாலைகள் தனியாராச்சு
விவசாய மானியம் பறிபோச்சு
பாலும் மோரும் பறிபோகுது,
பார்த்துக் கொண்டிருந்தா தீராது!
வீதியில் இறங்கி போராடு!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
தனியார்மயம், தாராளமயம்
உலகமய தாசர்களை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!
தனியார்மய, தாராளமய
உலகமய கொள்கைகளை
கிழித்தெறிவோம்! கிழத்தெறிவோம்!

ஏறுது ஏறுது விலைவாசி!
காரணம் யாரு நீ யோசி
மோடி, லேடி கேடிகள் ஆட்சி!
தேவையான்னு மாத்தி யோசி!

விலைவாசி ஏறுன சோகத்தில்
வீதியை நொந்து சாகாதே!
அமைப்பாய் திரண்டு போராடினா
அரசை பணியவைத்த வரலாறுண்டு!

பாலு விலை ஏறுதுன்னு
ஓட்டுகட்சிகள் அலறுது பாரு!
தனியார் மயமே காரணமுன்னு
சொல்ல மறுப்பது ஏன்னு கேளு!
தி.மு.க, அ.தி.மு.க வுக்கும்
காங்கிரஸ், BJP க்கும்
வேறு வேறு கொள்கை அல்ல!
தனியார் மயத்தை புகுத்துவதில்
எல்லாம் கூட்டு களவாணிகளே!

பறிமுதல் செய்! பறிமுதல் செய்!
ஆவின் பாலில் கொள்ளையடித்த
அ.தி.மு.க காலிகளின்
அதிகாரிகளின், அமைச்சர்களின்
சொத்துகளை பறிமுதல் செய்!.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.
திருச்சி மாவட்டம்.

கொட்டும் மழையிலும் மக்கள் கொண்டாடிய புரட்சி தினம்

0

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 4

16. சென்னை – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தும் நோக்கத்தை முன்வைத்து மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளை ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களுடன் இணைந்து நடத்தி சிறப்பித்து வருகின்றது. அதன் மூலம் ரசியப் புரட்சியின் அனுபவங்களையும், புரட்சிகர உணர்வையும் வரித்துக்கொண்டு வருகிறது.

இவ்வாண்டும், பு.மா.இ.மு சென்னை, விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி, கோவை, தர்மபுரி, தூத்துக்குடி என பல மாவட்டப் பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்களின் திரளான பங்கேற்புடன் நவம்பர் புரட்சி நாளை சிறப்பித்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடத்திய நவம்பர் புரட்சிநாள் விழா செய்தித் தொகுப்பு;

உண்மையில் ஒரு விழாவை சிறப்புற நடத்த வேண்டுமென்றால், விழாவிற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால், விளையாட்டுப் போட்டிகள் இல்லாமல் சாத்தியமே இல்லை. ஒரு விழாவை அழகுபடுத்தும் மிகச் சிறந்த வடிவங்களில் ஒன்று விளையாட்டுப் போட்டிகள்.

அந்த வகையில், நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னைக் கிளையின் சார்பாக, குரோம்பேட்டை, மதுரவாயல், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் விளையாட்டு போட்டிகள், அப்பகுதி மக்களின் முழு ஒத்துழைப்போடும், பங்கேற்போடும் சிறப்புற நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டிகள்

குரோம்பேட்டை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட சிறார்களின் உற்சாகத் துள்ளலோடு விளையாட்டுப் போட்டிகள் எளிமையாக நடைபெற்றன. காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை போட்டிகள் நடைபெற்றன. பகுதிச் செயலர் தோழர். தம்புராஜ் நவம்பர் புரட்சி நாளின் சிறப்புகளை விளக்கி போட்டியை தொடங்கி வைத்தார். சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் லெமன் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் உழைக்கும் மக்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. சிலம்பாட்டத்தைப் பார்த்த இளஞ்சிறார்கள், தாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொடுங்கள் என்று தங்கள் ஆவலை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.

மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான தயாரிப்புகள், மக்களிடம் நேரில் வீடு வீடாக சென்று அறிவிப்பது என வேலை உற்சாகத்துடன் நடைபெற்றது. தோரணங்கள், பேனர்கள் என ஒரு விழாவின் தன்மையோடு நடந்த போட்டிகளில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு போட்டிகளில் பங்கேற்றனர். உறியடித்தல், மியூசிக் சேர், லெமன் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள் என பல்வேறு போட்டிகள் மாலை வரை உற்சாகத்தோடு நடத்தப்பட்டன. அப்பகுதிமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நிகழ்ச்சிகளை அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டதுபோல் இருந்தது.

எழும்பூர் டாக்டர்.சந்தோஷ் நகரிலோ, மழையும் போட்டியின் பங்கேற்பாளர்களில் ஒன்றாக ஆனது. காலை முதல் மாலை வரை உற்சாகத்தின் விளிம்புக்கே செல்லும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நூற்றுக் கணக்கானோரின் பங்கேற்போடு நடத்தப்பட்டன. திட்டமிட்ட போட்டிகளைத் தாண்டி, மக்களின் ஆர்வத்தின் காரணமாக கூடுதலாகவும் போட்டிகள் நடத்த வேண்டியதாகி விட்டது.

தோழர்களுக்கு இணையாக பொறுப்புகளை எடுத்துக் கொண்டு பகுதி இளைஞர்களும் போட்டிகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்தனர். வழக்கமாக, பெற்றோர்களின் அழுத்தத்தின் காரணமாக வெளியில் வரத் தயங்கும் இளம்பெண்கள், எங்களைக் கூப்பிட மாட்டீர்களா? என்று உரிமையோடு கேட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அந்தளவுக்கு உற்சாகம் பகுதியில் மழையோடு சேர்ந்து கரைபுரண்டோடியது. அப்பகுதி மக்கள் மதிய உணவு இடைவேளையின் போது போட்டிகளை நடத்திய பு.மா.இ.மு தோழர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து உணவளித்து மகிழ்ந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதியில் நடந்த விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் பெரும்பான்மையான மக்கள் இதில் கலந்து கொண்டது விளையாட்டு போட்டியை நடத்திய எமது பு.மா.இ.மு விற்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.

சந்தோஷ் நகரில் நடந்த விளையாட்டுப் போட்டிகள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஒட்டுமொத்தமாக, உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவான நவம்பர் 7 விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இப்பகுதி உழைக்கும் மக்களை பற்றிக்கொண்டு, அவர்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதை பார்க்கமுடிந்தது.

இருசக்கர வாகன பேரணி

சென்னை வாழ் உழைக்கும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பு.மா.இ.மு தோழர்கள் குரோம்பேட்டையில் தொடங்கி திரிசூலம் விமான நிலையம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி, கோயம்பேடு வழியாக மதுரவாயலுக்கும், மதுரவாயலில் தொடங்கி அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை செங்கொடி ஏந்தி இரு சக்கர வாகனப் பேரணியாக கொடியேற்றும் நிகழ்ச்சிக்குச் சென்றனர். சிவப்புச் சட்டை அணிந்த இளைஞர்களின் அணிவகுப்பை உழைக்கும் மக்கள் ஆங்காங்கே நின்று கவனித்தனர்.

குரோம்பேட்டையில் தொடங்கி நடந்த பேரணி

மதுரவாயலில் தொடங்கி நடந்த பேரணி

நமக்கு எந்த வகையிலும் பயன்படாத,
அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்பை
இன்னும் ஏன் நாம் கட்டிக்கொண்டு அழவேண்டும்.
இந்த அரசமைப்பு முறையை மொத்தமாக தூக்கியெறிவோம்!

உழைக்கும் மக்களாகிய நம் கையில் அதிகாரம் இருக்கும் வகையில்
மாற்று அதிகார அமைப்புகளுக்கான
போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம்.
அதற்கொரு மாபெரும் அரசியல் எழுச்சியை உருவாக்குவோம்!
உழைக்கும் அனைவரும் புரட்சிகர அமைப்பாக அணிதிரள்வோம்.
நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்,
இம் மண்ணிலும் ஒரு சொர்க்கத்தைப் படைப்போம்!

என்ற கருத்துக்கள் அடங்கிய பிரசுரம் வழி நெடுகிலும் மக்களிடம் வினியோகிக்கப்பட்டது. பலர் இதனைப் பெற்று ஆர்வமுடன் உடனே படித்தனர். சாலையில் வாகனக்களில் உடன் வந்த பொதுமக்கள் ஆர்வத்தோடு என்ன விசயம், எங்கு செல்கிறீர்கள் என கேட்டு தெரிந்து கொண்டு வாழ்த்தினர்.

பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய கம்பீரத்துடன் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி!

வம்பர் 7 ரசியப் புரட்சி நாள் விழாவை முன்னிட்டு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னைக் கிளையின் சார்பாக நவம்பர் 7 அன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி பு.மா.இ.மு. செயல்படும் குரோம்பேட்டை, மதுரவாயல், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

ஒவ்வொரு பகுதியிலும் பறை முழக்கம் அதிர,
நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!
நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளை
நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
நாட்டை மீண்டும் அடிமையாக்கும்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி இந்து மதவெறி பாசிசத்தை
ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!

நடத்தி முடிப்போம்! நடத்தி முடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை
நடத்தி முடிப்போம்! நடத்தி முடிப்போம்!

என கம்பீரமான முழக்கங்களுடன்……கொடியேற்று விழா நிகழ்வு உணர்வுபூர்வமாக தொடங்கியது.

குரோம்பேட்டையில், அப்பகுதியின் செயலாளர் தோழர். தம்புராஜ் தலைமையேற்றார். அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், அமைப்புத் தோழர்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் அதிகாலை என்றும் பாராமல் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சென்னை மாநகர செயலாளர் தோழர். வ.கார்த்திகேயன் கொடியேற்றி உரையாற்றினார். ரசியப் புரட்சி மூலம் அந்நாட்டு உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம், என அவர்களது வாழ்நிலைமை எப்படி மேம்பட்டது என்பதைப் பற்றியும், அதைப் போன்று நம் நாட்டின் நிலைமையை எடுத்துக் கூறி, இங்கு ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தைப் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதேபோல், மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில், தோரண வேலைப்பாடுகள் மிளிர, கொடியேற்று விழா அறிவிப்பு பேனர்கள் தெருமுனைகளை நிறைத்திருக்க, அப்பகுதி செயலாளர் தோழர். கிருஷ்ணா தலைமையேற்க, மாநகர இணைச் செயலர் தோழர். மருது கொடியேற்றி நவம்பர் புரட்சி தின உரை நிகழ்த்தினார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பத்து இளைஞர்களின் அறிமுகத்தோடு இப்பகுதியில் தொடங்கப்பட்டது பு.மா.இ.மு. அதன் தொடர்ச்சியாக அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்கள் நடைபெற்றன. மதுரவாயலை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கெல்லாம், பிள்ளையார் கோயில் தெரு  மக்கள் என்பவர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்த்து நிற்கும் துணிவுள்ளவர்கள் என்ற மதிப்பை பெற்றுள்ளோம். அப்படி ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமாகத்தான் ரசியப் புரட்சி போன்று நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என உழைக்கும் மக்களுக்கு அறை கூவினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முத்தாய்ப்பாக, இறுதியில் எழும்பூர், டாக்டர்.சந்தோஷ்நகர் பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் வைத்து, சிறப்பானதொரு கொடியேற்றுவிழா நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதியில் செங்கொடி பேரணி, பறை முழக்கம் அதிர, தோழர்கள் செங்கொடிகளுடன் முன்னால் அணிவகுக்க, பின்னால் வரிசையாக இருசக்கர வாகனங்கள் செல்ல, அரசியல் முழக்கங்களின் கனல் தெறிக்க டாக்டர் சந்தோஷ் நகரின் ஒவ்வொரு தெருவுக்குள்ளும் சென்றது. இது எங்கும் சிவப்புமயமாக மொத்த பகுதியையும் மாற்றி விட்டது. ஒட்டுமொத்த பகுதி மக்களும் ஆர்வத்தோடு பு.மா.இ.மு-வை வரவேற்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சந்தோஷ் நகர் பகுதி செயலர் தோழர். அசோக் தலைமையேற்க, மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த.கணேசன் கொடியேற்றி ரசியப்புரட்சிநாள் உரை நிகழ்த்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

எல்லாப் பகுதிகளிலும் கொடியேற்று நிகழ்வின் இறுதியாக உழைக்கும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உழைக்கும் மக்களின் விழாவாக பாட்டாளி வர்க்க உணர்வோடு நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா !

ழைக்கும் மக்கள் குவிந்து வாழும் பகுதியும், வர்க்கப் பாசத்திற்கும், போர்க்குணத்திற்கும் ஓர் உதாரணமாய் திகழும் பகுதியுமான எழும்பூர் டாக்டர்.சந்தோஷ்நகர் பகுதியில் மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பகுதி முழுக்க செங்கொடி ஏற்றியும், ஊரின் நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகள் வைத்தும் தோழர்களோடு அப்பகுதி இளைஞர்களும் இணைந்து நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்தனர். ஊரே திருவிழாக்கோலம் பூண்டது எனலாம்.

இதனை சாதாரண பகுதி நிகழ்வாகத்தான் நாம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அப்பகுதி உழைக்கும் மக்கள் திரளாக கலந்துகொண்டு ஒரு பொதுக்கூட்டத்திற்கு இணையாக நிகழ்ச்சியின் தன்மையை மாற்றி விட்டார்கள். தோழர்கள், ஆதரவாளர்கள், அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏறத்தாழ 500 பேர் வரை நாற்காலியில் அமர்ந்து கவனித்தனர் என்றால், அதைச் சுற்றி ஒட்டுமொத்த ஊர் மக்களும் திரண்டு வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாலை நிகழ்ச்சியில், வரவேற்புரை ஆற்றிய பு.மா.இ.மு வின் பகுதி செயலர் தோழர். அசோக் சந்தோஷ் நகர் பகுதியில் பு.மா.இ.மு. நடத்திய போராட்டங்கள், அதன் மூலம் சாதிக்கப்பட்ட விசயங்களைக் குறிப்பிட்டு, ஆனால் அதில் நாம் திருப்தியடையவில்லை. உழைக்கின்ற மக்களின் எல்லா அடிப்படைத் தேவைகளும் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே அது சாத்தியம். அதற்கு அணிதிரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வரவேற்றார்.

அதன் தொடர்ச்சியாக தலைமையேற்று நடத்திய பு.மா.இ.மு.வின் மாநகர இணைச் செயலர் தோழர். மருது, எப்படி ஹிட்லரின் பாசிசத்திற்கெதிராக லெனின்கிராடு எப்படி ஒரு முன்னுதாரணமான எதிர்ப்புக் களமாக விளங்கியதோ, அதுபோல இந்துமதவெறி பாசிசத்திற்கெதிராகவும், மறுகாலனியாக்க அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழகத்தின் முன்னுதாரணமான ஓர் எதிர்ப்புக் களமாக டாக்.சந்தோஷ் நகர் திகழும் என்ற நம்பிக்கையை, அங்கு நடந்த பல்வேறு போராட்டங்களின் உதாரணங்களிலிருந்து வெளிப்படுத்தி தலைமையுரை ஆற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அப்பகுதியில் பொன்னம்மா அக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவர் பு.மா.இ.மு.வைப் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பு.மா.இ.மு. பகுதியில் செய்த போராட்டங்களைப் பற்றி பெருமையோடு குறிப்பிட்ட அவர், பு.மா.இ.மு இப்பகுதிக்கு வந்த பிறகுதான் பல விசயங்களில் நாங்கள் விழிப்புணர்வு அடைந்தோம், எங்கள் பகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன என்று நன்றி உணர்ச்சிபொங்க பேசினார். மேலும், இப்பகுதி மக்களாகிய நாங்கள் கடைசி வரை பு.மா.இ.மு வோடு உடன் இருந்து போராடுவோம் என்று நம்பிக்கையோடும், உணர்வுபூர்வமாகவும் பேசிச் சென்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நிகழ்ச்சியில், பு.மா.இ.மு-வால் நடத்தப்படும் டாக்டர். சந்தோஷ் நகர் பகுதியில் இரவுபாடசாலை மாணவர்களின் தனியார்மயத்தை அம்பலப்படுத்திய நாடகம், பு.மா.இ.மு துளிர்களின் புரட்சிகர பாடல், இளம் பெண்களின் புரட்சிகரப் பாடல்கள், பள்ளி மாணவர்கள் அரங்கேற்றிய உழைக்கும் மக்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம், கவிதை என நிகழ்ச்சிகள் அனைத்தும் உழைக்கின்ற மக்களிடையே புரட்சிகர உணர்வூட்டின.

இறுதியாக, சிறப்புரை ஆற்றிய பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த.கணேசன் “டாக். சந்தோஷ் நகர் பகுதியில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதி, இந்த அரசால் சேரி என்று புறக்கணிக்கப்பட்ட பகுதி, இந்தப் பகுதி மக்களாகிய நாம் அனுபவிக்கும் கொடுமைகளைப் போலத்தான் நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் இந்த அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டி உணர்த்தினார். உழைக்கின்ற மக்களின் மீது பொருளாதார ரீதியாகவும், அதற்கெதிராக போராடும் போது அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளான போலீசு, இராணுவத்தைக் கொண்டும் கொடூரமாக ஒடுக்கும் இந்த அரசு, முதலாளிகளும், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் கொள்ளையடிக்கும்போது அவர்களை பாதுகாக்கும் அரணாக விளங்குவதை ஜெயா வின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு – ஜெயில் – பெயில் – அதிமுக வினரின் வன்முறைகளை உதாரணம் காட்டி இன்றைய அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டு பேசினார். அந்த வகையில், இந்த அரசுதான் நமது எதிரி. அந்த எதிரியை வீழ்த்தாமல் நமக்கு விடிவு இல்லை. அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்க வேண்டும். அதன் தொடக்கப் புள்ளியாக உழைக்கும் மக்கள் கையில் அதிகாரம் இருக்கும் வகையில் மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும், அதற்கான அரசியல் எழுச்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும்” என்று அறை கூவி அழைத்தார்.

நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு நவ.2 அன்று மூன்று பகுதிகளிலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இறுதியாக, டாக். சந்தோஷ்நகர் பகுதி பு.மா.இ.மு.வின் செயற்குழு உறுப்பினர் தோழர். பிரேம் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி நடைபெற எல்லா வகையிலும் உதவியளித்த அப்பகுதி உழைக்கும் மக்கள், அப்பகுதியின் துடிப்புமிக்க இளைஞர்கள், இவர்கள் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடத்தியிருக்க முடியாது என்பதை நினைவு கூர்ந்து நன்றி கூறினார். ஆம், இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு அணுவிலும் அப்பகுதி உழைக்கும் மக்களின் வியர்வையும், இரத்தமும் கலந்திருந்ததை அப்பகுதி முழுவதும் பார்க்க முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பிற்போக்குத்தனமான சிந்தனையை விதைக்கின்ற விழாக்கள் ஏராளமாய் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அடைத்துக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில், உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவாக, நம் விடிவுக்கான வழி சொல்லும் நிகழ்வாக, மாட மாளிகைகள் நிறைந்த சிங்காரச் சென்னையில் இந்த அரசால் சேரிகள் என புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பு.மா.இ.மு நடத்திய இந்நவம்பர் புரட்சிநாள் விழா நிகழ்ச்சிகள் அப்பகுதிகளைச் சார்ந்த மக்களிடையே தங்கள் விடிவுக்கான வழியான புதிய ஜனநாயகப் புரட்சியைப் பற்றிய ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், அது மிகையில்லை.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்

16
கருப்பு பணம் வாங்கி சிவந்த கை!
கருப்பு பணம் வாங்கி சிவந்த கை!

டந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நீலகண்டாச்சாரி சுவாமிகள் என்பவர் பெங்களூரு விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2011 – 2012-ம் ஆண்டில் தானும் தனக்கு வேண்டியவர்கள் எட்டு பேருமாக சேர்ந்து ஜெனிசிஸ் என்கிற நிதி அலோசனை நிறுவனத்திற்கு சுமார் 3,994 கோடிகள் அளவுக்கு நன்கொடை வசூலிக்க உதவியதாகவும், இதற்கான கழிவுத் தொகை இரண்டு சதவீதம் வர வேண்டியிருப்பதாகவும், அந்த தொகையை ஜெனிசிஸ் தர மறுத்து மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த ஜெனிசிஸ்? எதற்கான நன்கொடை வசூல் இது? – நீலகண்டாச்சாரியின் புகார் மனு மேலும் சில விளக்கங்களை அளிக்கிறது.

தங்களை காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தர்கள் என்று குறிப்பிடும் நீலகண்டாச்சாரி, தனக்கும் மடத்தில் உள்ள சிரீதரன் என்பவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கிறார். சிரீதரன் என்பவர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால் மடத்தின் சார்பாக 10,000 கோடி வரை நன்கொடை வசூலிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரீதரனை ஜெனிசிஸ் நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் நீலகண்டாச்சாரியும் அவரது எட்டு நண்பர்களும், மடத்திற்காக ஜெனிசிஸ் நிறுவனம் நன்கொடை வசூலித்துக் கொடுப்பது அதிலிருந்து இரண்டு சதவீதத்தை கழிவாக தமக்குக் கொடுப்பது என்று பேசி வைத்திருக்கிறார்கள்.

தற்போது ஜெனிசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, அவரது கணவர் கிரிஷ்ணப்பா, இத்தம்பதியினரின் மகள்களான சௌமியா, ஷில்பா, மேகனா மற்றும் மருமகன் சுதாகர் ஆகியோரின் மீது கிரிமினல் சதி புரிந்தது, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிந்திருக்கிறார் நீலகண்டாச்சாரி. மேலும் இவர்கள் சங்கரமடத்திற்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை தம்மிடமிருந்து மறைத்துள்ளதாகவும், சங்கர மடத்தைப் பயன்படுத்தி கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் குற்றச்சாட்டில் பதிந்துள்ளார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட விஜயநகர காவல் நிலையம், ஜெகத்து குருவே விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் விசாரணைக்காக கர்நாடக மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகாரை அனுப்பி வைத்தது. புகாரின் மேல் விசாரணையைத் துவங்கிய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஜெனிசிஸ் சார்பில் சில ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மடத்தின் சார்பாக சிரீதரன் என்பவரை நன்கொடையைப் பெற்றுக் கொள்ள அதிகாரம் கொண்டவராக நியமித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2012-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி ஜெனிசிஸ் சார்பில் மடத்திற்கு அனுப்பட்ட கடிதம் ஒன்றில் மடத்திற்கு உட்பட்ட ஐந்து அறக்கட்டளைகளுக்கு ஜெனிசிஸ் சார்பாக ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளின் வழியே 3,992 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மடத்தின் சார்பாக இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள சிரீதரன், இந்த தொகையைப் பெற்றுக் கொண்டதை உறுதிப் படுத்தி அளித்த கடிதமும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்துள்ளது.

இந்த விவரங்களோடு மடத்தின் கணக்குத் தணிக்கை அலுவலரை அணுகிய குற்றப் புலனாய்வுத் துறை, மடத்திற்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் கிடைத்த நன்கொடை மற்றும் நிதி விவரங்களை கேட்டிருக்கிறது. மடத்தின் சார்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் வெறும் பதினைந்து கோடிகளுக்கு மட்டுமே முறையான கணக்குகள் உள்ளன. ஜெனிசிஸ் நிறுவனத் தரப்பின் படி, அவர்கள் தமக்கு மடத்திடம் இருந்து கிடைத்திருக்க வேண்டிய 2.5 சதவீத கழிவுத் தொகையே இன்னமும் வர வேண்டியுள்ளது என்பது தான்.

சிரீதரனும் விசாரணையில் தனது தரப்பை முன்வைத்துள்ளார். தான் ஜெனிசிஸ் நிறுவனத்தோடு சங்கர மடம் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தவிற பிற விவரங்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றுள்ளார். 2011-12 காலகட்டத்தில் சந்திரசேகர் குரு என்பவரின் தலைமையில் சங்கர மடத்திற்குச் சென்றதாகவும், அப்போது மடத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து நடந்த விவாதங்களில் தான் பங்கேற்கவில்லை, தன்னை அறைக்கு வெளியே செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த அளவில் தற்போது விவகாரம் விசாரணையில் உள்ளது. பெங்களூரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை மடத்தின் குறிப்பிட்ட ஐந்து அறக்கட்டளைகளின் மூலம் கருப்புப் பண சுழற்சி நடந்திருக்கிறது என்ற கோணத்தில் மேல் விசாரணை செய்து வருகிறது.

என்னது காஞ்சி சங்கர மடத்தில் கருப்பு பணமா என்று யாராவது அதிர்ச்சி அடைய முடியுமா? லோககுரு கம்பெனிக்கு ஒரு கிரிமினல் கூட்டத்தை ஜமுக்காளத்தைப் போட்டு வடித்து எடுத்தாலும் உலகில் வேறெங்கும் கண்டு பிடிக்க முடியாது என்பதைத்தான் யாராவது மறுக்க முடியுமா?

கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!
கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!

உள்ளே நடந்த ஊழல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய ஒரே ‘பாவ’த்துக்காக சங்கர ராமனை சாட்சாத் அந்த ’பகவானின்’ சந்நிதியில் ’பகவானின் கண்’ முன்னே போட்டுத் தள்ளியதாகட்டும், சாட்சிகளை காசு கொடுத்து பிறழ் சாட்சிகளாக மாற்றிய சாமர்த்தியமாகட்டும், நீதிபதியிடமே டீலிங் பேசிய திமிராகட்டும் – ஜெகத்து குரு உலகத்து ஜெகத்தின் கிரிமினல்கள் அனைவருக்குமே ஆதி குரு என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

கும்பகோண மடத்தை சங்கர மடமாக மாற்ற வரலாற்றையே போர்ஜரி செய்து மாற்றியதாகட்டும், பெரும் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டைப் பஞ்சாயத்து தரகனாக செயல்படுவதாகட்டும் இந்த கும்பலை மிஞ்சிய திருட்டு கும்பலை பார்ப்பது கடினம்.

ஆனால், இந்த மொத்த விவகாரமும் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன. அது போல தேசிய, பிராந்திய என்ற வேறுபாடுமில்லை.

இதே காலகட்டத்தில் 2ஜி வழக்கில் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கனிமொழியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பற்றி தேசிய ஊடகத்திலிருந்து பா.திருமாவேலனின் விகடன் பத்திரிகை வரை மாய்ந்து மாய்ந்து எழுதினார்கள். ஊழலுக்கு எதிரான இந்த போர்முரசு சங்கராச்சாரி (அ) சுப்புனி குறித்து வெம்பிய முரசாக ஏன் போங்காட்டம் ஆட வேண்டும்?

சங்கர மடம் காசு கொடுத்து தான் இந்த மௌனத்தை விலைக்கு வாங்கியிருக்க வேண்டும் என்பதில்லை, பார்ப்பன நலன் என்று வந்தால் யாரும் சொல்லாமலே பொத்திக் கொள்ளும் வாய்கள் தான் இவை.

சாராயம் காய்ச்சி விற்பதெல்லாம் ’ராயப்பன்களின்’ வேலையாக பதிவாகியிருக்கும் பொதுபுத்தியின் முன் சோ ராமசாமி சாராயக் கம்பெனியின் தலைமைப் பதவியில் இருந்தார் என்கிற செய்தி நுழைவதில்லை.

இந்த இலட்சணத்தில் சுவிஸ் வங்கியின் பாதுகாப்பறையில் இருக்கும் பல பல பலான கோடி கோடி பணத்தை ஸ்கார்பியோ காரில் பறந்து சென்று மோடி மீட்டு வருவார் என காமிக்ஸ் கதை காட்டிய கனவான்களை நினைத்துப் பாருங்கள்! ஸ்கார்பியோ கார் தயாராகும் பெங்களூருவிலேயே 4000 கோடியை ஆட்டையைப் போட்டு விட்டு ஒன்னும் தெரியாத அம்பி மாதிரி சங்கரமடத்தில் நெய் பொங்கலை மொக்கி விட்டு ஒரு பெருச்சாளி இருக்கிறதே? அது குறித்து தமிழிசை தவிலோசை போல பேசுவாரா? இல கணேசனோ, பொன்னாரோ பொங்கி எழுவார்களா?

அவ்வளவு ஏன், சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது கூட ஜெயேந்திரனுக்கு பார்டிகார்டாகவும், பிரச்சார பீரங்கியாகவும் பேசிய கூட்டமல்லவா இது!

சமூகத்தை ஏற்றத்தாழ்வுடன் கூடிய படிநிலை அமைப்பாக நிலைநிறுத்திய பார்ப்பனியம் தன்னளவிலேயே குற்றத் தன்மையுடையது தான் – அப்படியிருக்க நடைமுறையில் அதன் இருப்பை உத்திரவாதப்படுத்தும் சங்கர மடம் இந்தக் குற்றத்தை மட்டுமல்ல, இதற்கு மேல் பஞ்சமா பாதகங்களையும் செய்யாவிட்டால்தான் அதிசயம்!

இந்தக் குற்றக் கும்பலையும், அதன் பகிரங்கமான சங்கர மட கம்பெனி ஆபிசையும் இழுத்து மூடுவது எப்போது?

–    தமிழரசன்

மேலும் படிக்க:

Kanchi Mutt had confirmed receipt of funds, claims firm

Firm ‘laundered’ crores in donations to mutt

மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி

0

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 3

13. சென்னை – மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி

‘நிதி மூலதனம் கொல்லும் ! கம்யூனிசம் வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நவம்பர் புரட்சி விழா சென்னையில் ம.க.இ.க மற்றும் பெ.வி.மு சார்பில் நடத்தப்பட்டது. விழாவில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

இதற்கு பெ.வி.மு சென்னை கிளையின் இணைச் செயலர் தோழர் சித்ரா தலைமை தாங்கி நடத்தினார். ரஷ்யாவில் நடந்த புரட்சியை போல இந்தியாவிலும் ஒரு புரட்சியை நடத்த வேண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

ம.க.இ.க. தோழர் சோமு வாழ்த்துரையையும், நிகழ்ச்சிகளை பெ.வி.மு. தோழர் செல்வி தொகுத்தும் வழக்கினார்கள்.

புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இளம் தோழர்களின் உற்சாகமான பங்கேற்பு பறை முழக்கத்துடன் சிறுவர்களின் நடனத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பகத்சிங் தன்னுடைய கடைசி நேரத்திலும் இந்த மண்ணை பார்த்துக் கொண்டே சாக விரும்பியதை காட்சியாக நடித்த இளந்தோழர் வெண்மணி பகத்சிங்கை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

‘சீரழிவு பண்பாடு’ என்ற தலைப்பில் பேசிய ம.க.இ.க தோழர் இளவரசி பள்ளிகளில் நடக்கும் விழாக்களில் இப்போது குழந்தைகளை விஜய், அஜீத் போன்று வேடங்கள் போட்டு சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதையும், சிங்காரம் என்ற பெயரில் அழகு பதுமைகளாக வளம் வருவதையும் இடித்துரைத்து பேசினார்.

அடுத்து வந்த ம.க.இ.க தோழர் தாமிரபரணி ‘வேலை கிடைச்சிடுச்சி’ என்ற தலைப்பில் இப்போது சமூகம் உள்ள நிலைமையில் இளைஞர்களுக்கான வேலை அரசியல் மாற்றத்திற்காக போராடுவதுதான் என்று பேசி சென்றார்.

‘அம்மா கைது – தமிழகத்தின் துயரம்’ என்ற தலைப்பில் அம்மாவின் கைது குறித்து கவிதை வாசித்தார் பெ.வி.மு வின் இளம் தோழர் கவி. சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான அம்மாவிற்காக அ.தி.மு.க அடிமைகள் நடத்திய தற்கொலை முயற்சிகள், பேருந்து எரிப்பு, கடைகளை அடித்து நொறுக்கியது, தீ மிதித்தது, மண்சோறு சாப்பிட்டது, போஸ்டர்கள் ஒட்டியது போன்ற அபட நாடகங்களை அம்பலப்படுத்தியது கவிதை.

‘போலி ஜனநாயகமும் நவம்பர் புரட்சியும்’ என்ற தலைப்பில் ம.க.இ.க தோழர் வாசுதேவன், இப்போது நிலவும் போலி ஜனநாயக அரசை தகர்த்து எறியாமல் உழைக்கும் மக்களுக்காக அரசை நிறுவ முடியாது, அதற்காக பாடுபட தோழர்கள் நெஞ்சில் உறுதி ஏற்க வேண்டும் என்று தன்னுடைய கவிதையின் மூலமாக தெரிவித்தார்.

சிற்றுரையில் பேசிய சென்னை கிளை செயலாளர் தோழர் அமிர்தா நம்முடைய ‘விடுதலைக்காக பாதை’ புதிய ஜனநாயக அரசை அமைக்க போராடும் புரட்சி பாதை என்பதையும் அதற்காக போராடும் அமைப்புகளில் உள்ள நாமும் மக்களுடன் தியாகத்திற்கு அஞ்சாமலும், அர்ப்பணிப்புடனும், ஐக்கியமுடனும் இருக்க வேண்டும் அப்போது தான் மக்களும் நம்முடன் புரட்சிக்கு வருவார்கள் என்பதை, தங்களுடைய உயிரையும் கொடுக்க தயங்காத தோழர்களின் தியாகத்தை எடுத்துக்காட்டி விளக்கி பேசினார்.

சிறப்புரையில் பேசிய ம.க.இ.க. தோழர் துரை சண்முகம் ‘புரட்சி அழைக்கிறது நீங்கள் தயாரா?’ என்ற கேள்வியை முன் வைத்து, ஒரு அமைப்பாக சேர்ந்து சமூக மாற்றத்திற்காக போராடும் போது மட்டும் தான் பிரச்சினைகள் என்று பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று சிறுச்சேரி சிப்காட்டில் வேலை செய்து கொண்டு இருந்த உமா மகேஸ்வரியின் நிலை என்ன ? சாதாரணமாக இப்போது பள்ளிகளில் – வேலை பார்க்கும் இடங்களில் – பொது இடங்களிலும் பாதுகாப்பற்ற தன்மைதான் நிலவுகிறது. நமக்கு என்ன என்று விட்டுவிட்டால் இது பல மடங்கு அதிகரித்து, அடக்கிப் போகும் நிலைமைதான் வரும். ஒரு அமைப்பாக இருக்கும் போதுதான் இவற்றை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வும் – கடமையும் இருப்பதை உணர முடியும். அதற்கான போராட்டம் உங்களை அழைக்கிறது நீங்கள் வரவேண்டும் என்று பேசியது அரங்கில் வந்த பல குடும்ப பெண்களை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்ததாக ‘கல்யாண கதை கேளு’ என்ற அம்மாவின் வளர்ப்பு மகனின் கல்யாணத்தை விவரிக்கும் ம.க.இ.க.வின் பாடலை ஜெயலலிதா, சசிகலா, தினகரன் போன்று வேடமிட்டு காட்சிப்படுத்தி தோழர்கள் நடத்திய கலை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

என்றும் அழியாதது, அழிக்கவும் முடியாதது நக்சல்பரி எழுச்சி என்று முழக்கும் பாடலும் தோழர்கள் உணர்வுடன் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

பெ.வி.மு. தோழர்கள் “நவம்பர் 7 என்ற தினமொன்று”; “இந்து மதவெறிக்கு அடையாளம் காவி”; “பொழப்புக்கு வேல இல்ல” போன்ற புரட்சிகர பாடல்களை பாடியது அரங்கத்தில் சிறப்பாக பாராட்டப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பெ.வி.மு தோழர் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பகுதிகளில் முதல் முயற்சியாக ஓட்டப் பந்தயம், எலுமிச்சை ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தினர். அதில் பகுதி குழந்தைகளும் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் விழா அரங்கில் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த புது முயற்சி தோழர்கள் மத்தியும் அணிகள் மத்தியும் மகிழ்ச்சியான தருணமாகவும் ஐக்கியப்படும் தன்மையாகவும் அமைந்தது.

நன்றியுரை பெ.வி.மு. தோழர் சாந்தி வழங்கினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விழா அரங்கில் குழந்தைகள் வரைந்த ஆசான்களின் ஓவியங்கள், கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் விழா சிறப்பாக முடிந்தது.

நவம்பர் 7 விழாவின் சிறப்புகளையும் கடமைகளையும் நெஞ்சில் ஏந்தி தோழர்கள் உற்சாகமாக கலைந்தனர்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

14. தேனி மாவட்டம்

நவம்பர் 7 ரசிய புரட்சிநாள் நீடுழி வாழ்க

nov7-theni-poster

தேனி மாவடட்த்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சிநாள் கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

போடிநாயக்கனூர், தேவாரம், நாராயணத்தேவன் பட்டி,கம்பம்,கூடலூர் ஆகிய கிளை பகுதிகளில் திரளான தோழர்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை அடைய அர்ப்பணித்து பாடுபடவும் உறுதியேற்று நவம்பர் புரட்சி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

வி.வி.மு செயல்படும் ஆறு பகுதிகளில் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், பேரணியாக சென்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இறுதியாக கூடலூர் கிளை பகுதியில் மையப்படுத்தி தெருமுனைக்கூட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு தோழர் மோகன் முன்னிலை வகித்தார்.  தோழர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்

15. புதுச்சேரி

நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்!

செத்தால் சுடுகாடு போவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் என்ற போதிலும், பார்ப்பனீயமோ செத்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்ற அறிவியலுக்குப் புறம்பாக மூட நம்பிக்கையை மக்களுக்கு சொல்லி மக்களை மடையர்களாக மாற்றுகிறது. செத்தால் தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்ற கற்பனையான நம்பிக்கையில் தான் இந்த அறிவியல் யுகத்திலும் மக்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அறிவியல் முன்னேறாத காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னேயே மக்கள் உயிருடன் இருக்கும் போதே சொர்க்கத்தில் வாழ்ந்தனர். ஆம், மார்க்சிய வழியில் புரட்சி நடத்தி மண்ணில் சொர்க்கத்தைப் படைத்துக் காட்டியது லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசு.

நமது உழைப்பைச் சுரண்டி சேர்த்த சொத்துக்களை தனது வளர்ச்சியாகக் காட்டி திமிராக வலம் வருகிறது முதலாளித்துவம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மக்கள் விரோத கொள்கைகள் மூலம் உலகையே முழுங்கத் துடிக்குது முதலாளித்துவம். அதனால், மக்கள் வாழ்விழந்தவர்களாக வேகமாக மாறிவருகிறார்கள். ஆனால், சுரண்டல் இல்லாத, உழைக்கும் மக்களுக்கே அனைத்தும் சொந்தம் என்ற உன்னத பொதுவுடமைத் தத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட அரசாக இருந்தது அன்றைய அரசு. இன்று, நவம்பர் 7-ன் தேவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதை தொழிலாளர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் உணர்த்தி இன்றைய நரக வாழ்க்கையை ஒழித்து மீண்டும் மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைக்க அறைகூவும் விதமாக புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக இணைப்பு சங்கங்கள் இயங்கும் பகுதியான வில்லியனூர் பகுதியில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த அரங்கக் கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில புஜதொமு தலைவர் தோழர். சரவணன் தலைமையில் நடந்தது. புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர். பழனிசாமி மற்றும் புதுச்சேரி மாநில இணை செயலாளர் தோழர். லோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் ஒரு தோழரின் மகளான நித்யஸ்ரீ நமது நாட்டின் நிலையை எள்ளி நகையாடும், “எங்க நாடு ஆகுது வல்லரசு” என்ற புரட்சிகர பாடலைப் பாடினார்.

கூட்டத்தில் தோழர். சரவணன் தனது தலைமையுரையில், “ஒவ்வொருவரும் மத பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். ஆனால், அது கொண்டாடும் நோக்கம் பற்றி தெரியாதவர்களாக உள்ளனர். மத பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களைத் தெரிந்து கொண்டால் நமது வாழ்க்கைக்கு எவ்வளவு நேர் எதிரானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மக்களை மூட நம்பிக்கையில் மூழ்க வைப்பதன் மூலம் அவர்களின் போராடும் குணங்களை மழுங்கடிப்பதாகத் தான் உள்ளது” என்பதை இடித்துரைத்துப் பேசினார். மேலும், “நவம்பர் -7 என்பது தான் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான உன்னத நாள்” என விளக்கிப் பேசினார்.

தோழர். பழனிசாமி தனது உரையில், “நவம்பர்-7 ரசியப் புரட்சிக்குப் பின் அங்கு சட்டம் மக்களிடம் சுற்றுக்கு விடப்பட்டு, அதில் மக்கள் கோரிய திருத்தங்கள் செய்தும் தான் இயற்றப்பட்டது. ஆனால், இன்று மோடியோ தினம் தினம் ஒரு அறிவிப்பின் மூலம் தொழிலாளர் விரோத சட்டங்களை மக்கள் மீது திணித்து வருகிறார். ஏற்கனவே கோவணம் போல் மானத்தைக் காத்து நிற்கும் சட்டத்தைக் கூட அதை அம்மணமாக்கப் போகிறார்” என்பதை விளக்கிப் பேசினார்.

அடுத்தபடியாக, தோழர். லோகநாதன் தனது உரையில், “இன்று மக்கள் படும் பாடுகளுக்குக் காரணங்களைத் தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் கடன் பட்டு பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். ஒரு புறம், அந்த அறியாமையில் மக்களை மூழ்கடித்து போராடாத மொன்னை களாக மாற்றும் அதே சமயம், மறுபுறம், அதே பண்டிகைகளைக் காரணமாக வைத்து, முதலாளிகள் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றனர். மக்கள் தான் இருபுறமும் அடிவாங்கும் மத்தளமாக உள்ளனர். மக்களை, அரசியல் தளத்தில் போராடாத மொன்னைகளாகவும், பண்பாட்டுத் தளத்தில் உணர்ச்சியற்ற மொக்கைகளாகவும் மாற்றி வருகின்றது மறுகாலனியாக்கம். இன்று விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், மின்சாரம் முதல் ஆறுகள், மலைகள், காடுகள், கடல் என அனைத்தும் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விடப்பட்டுவிட்டது. ஆனால், புரட்சிக்குப் பிந்தைய ரசியாவில் மேற்கூறிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு பெருகி, வேலை நேரம் குறைக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகளை இன்றைய நமது வாழ்நாளோடு ஒப்பிட்டுப் பார்த்து ரசியப் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! செத்த பிறகு தேவையில்லை நமக்கு சொர்க்கம்! வாழும் போதே படைப்போம் இந்த மண்ணில் ஒரு சொர்க்கம்!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, நமது பசிக்காக என்பதாக இல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்பாட்டு உணவாக மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. இந்த அரங்கக் கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக வந்து கலந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு – 95977 89801.

வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்

0
  • வெள்ளாற்றை கட்டாந்தரையாக்கிய மணல் கொள்ளையர்கள்-தண்டனை என்ன?
  • தமிழக அரசே மணல் குவாரிகளை உடனே மூடு

என்ற கோரிக்கைகளை முன்வைத்து 10-11-14 திங்கள் அன்று மாலை 4.30 மணியளவில் அதிகமாக மக்கள் கூடுமிடமான கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

manal-kollai-demo-poster-2

பெருந்திரளாக விவசாயிகள், பொது மக்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து அதிகளவில் கலந்து கொண்டார்கள். போராட்டதிற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை ஏற்று நடத்தினார். அருகில் விருத்தாசலத்தில் இருந்தாலும் பல மாதங்களாக நடந்த மணல் கொள்ளைக்கு தாமதமாக வருகிறீர்கள் என கிராம மக்கள் நேசத்தோடு கடிந்து கொண்டதற்கு அமைப்பின் சார்பில் வருத்தம் தெரிவித்து ஆற்றின் இரு கரையிலும் உள்ள மக்களிடம் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்த அனுபவத்தை விளக்கினார்.

“அனைத்து மக்களும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என விரும்புகின்றனர். தலைமை ஏற்று போராட்டம் நடத்த உரிய நபர்கள் இல்லாததால் மணல் கொள்ளை தொடர்கிறது. மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மணல் கொள்ளையை மூடும் வரை தொடர்ந்து போராடும்.

தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடினோம். காவல் துறைக்கு எதிராக போராடினோம், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு எதிராக போராடினோம் எங்களை யாராலும் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதை இந்த நேரத்தில் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் எங்களுக்கு அந்தப் பண்பை, துணிவை வழங்கியிருக்கிறது.

பொதுப்பணித்துறைக்கு 40 லாரிக்கு மணல் கணக்கை காட்டிவிட்டு 400 லாரி மணல் கணக்கில் வராமல் கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால்தான் அதிகாரிகள் முதல் யார் எதிர்த்தாலும் பணம் வீசி எறியப்படுகிறது.  நமது வீட்டு பொருளை கொள்ளையடிக்க நமக்கு லஞ்சம் கொடுக்கிறான். நாம் இத்தகைய சூழ்ச்சிக்கு பலியாகாமல் போராட வேண்டும் ” என உரையாற்றினர்.

அவரைத் தொடந்து கார்மாங்குடி பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் உரையாற்றும் போது, “மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன்தான் மணல் கொள்ளைக்கு காரணம்.  லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு எதிராக செயல் படுகிறார். அதிகாரிகளிடம் பேசுவது, மணல் கொள்ளையர்களிடம் பேசுவது, மக்களிடம் பேசுவது என மூன்று செல் வைத்திருக்கிறார். அனைத்திற்கும் புரோக்கராக செயல்படுகிறார். கட்சிகளை நம்பி பயனில்லை. தி.மு.க செய்ததை அ.தி.மு.க விரைவாக செய்கிறது. எந்தக் கட்சியும் மணல் கொள்ளையை தடுக்க முன்வராது. நாம் தான் போராட வேண்டும் எத்தகைய போராட்டத்திற்கும் நான் மக்களை திரட்டி கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.” என்று கூறினார்.

மருங்கூரை சேர்ந்த பஞ்சமூர்த்தி உரையாற்றும் போது, “வருபவர்கள் எல்லோரும் மணல் கொள்ளையை தடுப்பது போல் பேசி கடைசியில் பணம் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். நீங்களும் அது போல் இருந்தால் என்னை அழைக்காதீர்கள் என்று கூறினேன். ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு மைய நண்பர்கள் தங்கள் அமைப்பைப் பற்றி விளக்கிச் சொன்னதும் அவர்களைப் பற்றி நான் விசாரித்தேன். அதன்பிறகுதான் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட உரிய போராட்டம் நடத்த வேண்டும்” என பேசினார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார் காவல் துறையை மிகவும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், “நாம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது இந்தப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளையும் உள்ளூர் ஓட்டுக்கட்சிகளையும் அம்பலப்படுத்தவும்தான். இதற்கு ஆதரவான அதிகாரிகளும், அரசாங்கமும் நல்லவர்கள் போலவும், இதை எதிர்த்து போராடும் மக்களும் அமைப்புகளும், தீவிரவாதிகள் போலவும் அரசாங்கம் சித்தரிக்கிறது” என்று பேசினார்.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இளங்கோவன் உரையாற்றும் போது, “படத்தில் வரும் வசனம் போல எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்.  என்ன உண்மை என்றால் இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்தப் பகுதி மக்களுக்கு சொந்தமானது, இந்த ஆற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கும் கொள்ளையனுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு உணவளிக்கும் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு சொந்தமானது. அதை இந்தப் பகுதி மக்கள் தான் பாதுகாக்க வேண்டும். அதற்கு போராட வேண்டும். நாங்கள் மணல் லாரியை மறித்து போராடினோம். காவல் துறையினர், ‘மறிப்பவர்கள் மட்டும் நில்லுங்க, வேடிக்கை பார்ப்பவர்கள் தனியே போங்க’ என்றவுடன் நானும் சிலரும்தான் மறியலில் இருந்தோம். அனைவரும் விலகிவிட்டனர் இப்படி போராடினால் எபப்டி வெற்றி பெற முடியும்” என பேசினார்.

அறிவரசன் என்ற இளைஞர் பேசும் போது, “இந்த மணல் கொள்ளை பற்றி பலமுறை அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்தும், புகார் மனு எழுதியும் எந்த வித பயனும் இல்லை. மாறாக மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று மனு போடும் என்னை 20-க்கும் மேற்பட்ட போலீஸ் வீட்டுக்கு வந்து ‘உனக்கு மட்டும் 144 தடை போட்டிருக்கிறோம்’ என்று மிரட்டுகிறது. ஆனால், ஒரு கொலை நடந்ததை விசாரிக்க 2 போலீஸ் மட்டும் வருகிறது. இது தான் மணல் கொள்ளையனின் அடியாள் போலீஸ் என்பதை நிரூபித்தது. இங்குள்ள 2 பெரிய கட்சிகளும் 2 ஜாதிக் கட்சிகளும் நான்தான் வீரன், சூரன், பெரிய புடுங்கி என்று மார்தட்டி கொள்ளும். இப்ப எல்லாரும் எங்கடா போனீங்கள்” என்று தன்னுடைய உணர்வை வெளிபடுத்தி ஆவேசமாக பேசினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவர்களைத் தொடர்ந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேசும் போது

“மணல் கொள்ளையால் இந்த பகுதி எந்தளவு பாதிக்கப்படுகிறது. என்று இங்கு பலரும் பேசினார்கள். கருவேப்பிலங்குறிச்சி தொடங்கி கார்மாங்குடி வரை ஆற்றில் மணல் இல்லை வெறும் களிமண்தான் தெரிகிறது. இப்போதே 150 அடியில் உள்ள போர்வெல் ஆட்டம் கண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து குடிக்க தண்ணீர் கிடைக்காமல் குடங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நமது விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று விட்டு ஊரைகாலி செய்து பஞ்சம் பிழைக்க நகரத்துக்கு கூலிகளாக ஓட வேண்டிய அவல நிலை ஏற்படும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு

மணல் அள்ளுவது அரசாங்கம். நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி கொள்வது நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்காது. மக்கள்தான் போராடி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். எந்த ஓட்டுக் கட்சியும் இதற்காக போராட மாட்டார்கள். அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கொள்ளையை ஆதரிக்கின்றன. சட்டப்படிதான் அனைத்தும் நடக்கிறது. மேலும் இதில் அவர்களுக்கும் கமிஷன் போகிறது. உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் முதல் VAO, தலையாரி, தாசில்தார், கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தலைமை நிலைய செயலாளர் வரை அனைவருக்கும் இதில் பங்கு போகிறது. அதனால் யாரும் போராடவோ, தடுத்து நிறுத்தவோ முன் வரமாட்டார்கள். இதைப் புரிந்து கொண்டு மக்களாகிய நாம் தான் போராடி தடுத்து நிறுத்த வேண்டும்.

மணல் கொள்ளையாகட்டும், வாக்களிப்பதற்காகட்டும் அற்ப பணம் 1000, 2000 வாங்குவதிலா நம் வாழ்க்கையை நடத்துகிறோம். வருடம் முழுவதும், பிள்ளைகளை படிக்க வைப்பது, நல்லது கெட்டது பார்ப்பது என அனைத்திற்கும் நாம் குடும்பத்தோடு இரவு பகலாக உழைக்கிறோம். அந்த வருமானத்தில்தான் நாம் குடும்பத்தை நடத்துகிறோம்.

ஆனால் மணல் கொள்ளை மட்டுமல் அனைத்து வளங்களும் கொள்ளை போகிறது. கல்வி, மின்சாரம், மருத்துவம், குடிநீர் என மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகள் அனைத்தையும் பாதுகாத்து வழங்குவதற்கு பதிலாக தனியார்மயமாக்கி ‘காசுள்ளவன் வாங்கட்டும் இல்லாதவன் செத்து போகட்டும்’ என அரசின் தனியார்மயக் கொள்கை தாராமயக் கொள்கை சொல்கிறது. மோடி அரசோ, மன் மோகன் சிங் அரசோ, அதி.மு.க.,  தி.முக எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்காக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆற்றுமணல் கொள்ளை இவற்றை விசாரிக்க சகாயம் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்திரவிட்டது. தமிழக அரசு அந்தக் குழுவை நடத்த விடாமல் எல்லா முட்டுக்கட்டைகளையும் போடுகிறது.

வெள்ளாறு மட்டுமல்ல தாமிரபரணி, காவிரி, பாலாறு, கொள்ளிடம் என அனைத்து ஆறுகளும் சாகடிக்கப்படுகின்றன. விவசாயிகள் சங்கத்தினர் அமைத்து மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவதுடன் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்து பேராடி வருகிறார்கள். தமிழக அரசோ மணல் கொள்ளைக்கு ஆதரவாக விவசாயிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறது. ஆற்றில் 3 அடிக்கு மேல் மணல் அள்ளக் கூடாது. இரண்டு பொக்லைன்தான் பயன் படுத்த வேண்டும். ஆனால் சட்டத்தை யார் மதிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தின் நீர் மட்டம் செமி கிரிட்டிகல் (அரை நெருக்கடி நிலை) என வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களிடம் கருத்து கேட்டபிறகு தான் மணல் எடுக்க வேண்டும். ஆனால் எந்த மக்களை கலந்து பேசினார்கள். மணல் கொள்ளையை எதிர்த்து போராடியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தடுத்து நடவடிக்கை எடுத்த கோட்டாட்சியர், தாசில்தார், துணை ஆய்வாளர், ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர்கள் கொலை மிரட்டலை சந்தித்தனர்.

குடிநீருக்காகதான் மூன்றாம் உலகப் போர் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அரசோ நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு பதிலாக தனியார் கொள்ளைக்கு திறந்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் தீவிரவாதி என மிரட்டி பொய் வழக்கு போட்டு மக்களை அச்சுறுத்துகிறது.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களின் அனைத்து வாழ்வாதார போரட்டங்களுக்கும் உறுதுணை யாக இருக்கும். காவல் துறையின் மிரட்டலைப் பற்றி கவலை வேண்டாம். அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். இத்தகைய மணல் கொள்ளையை எதிர்க்க அமைப்பாக திரண்டு இடை விடாமல் தொடர்ந்து போராடினால் கண்டிப்பாக குவாரிகளை மூட முடியும். விருத்தாசலம், மணிமுத்தாறு பகுதியில் கிராம மக்கள் ஒற்றுமையாக திரண்டு போராடி குவாரியை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். வேலுர் பாலாறு மணல் குவாரிகளுக்கு எதிராக போராடிய மக்கள் மணல் கொள்ளையனிடம் வாங்கிய பணம் 1.5 லட்சம் ரூபாயை திருப்பி வீசி எறிந்துள்ளனர். அத்தகைய மான உணர்வுதான் அதிகாரிகளையும், அரசியல் கட்சிகளையும், அச்சுறுத்தும். வேட்டியிலும், மீசையிலும் இல்லை மானம், நாம் வாழும் காலத்தில் அநீதிகளுக்கு எதிராக நாம் என்ன செய்தோம் என்பதில்தான் இருக்கிறது. வெற்றி தோல்வி உறுதியான பிறகுதான் போராடுவது என்பது அறியாமை, சுதந்திரத்திற்காக போராடிய திப்பு, கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், வ.உ.சி. ஆகியோர் போராட்டத்தின் தியாகத்தில்தான் சுதந்திரம், சுயமரியாதை, நாட்டுப் பற்று உயிர்ப்புடன் இருக்கிறது.

உழைக்கும் மக்களும் விவசாயிகளும் இந்த பகுதி மக்களும் ஒற்றுமையுடன் திரண்டு போராட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் மணல் அள்ளுவதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் போட வேண்டும். உங்களுடைய அனைத்து போராட்டத்திலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உறுதுணையாக களத்தில் இருக்கும் என உறுதியளிக்கிறோம்” என பேசினார்.

கூட்டத்தின் இறுதியில் நமது அறிவிப்பை ஏற்று பல விவசாயிகள் போராட்டத்திற்கு தங்கள் பெயரை பதிவு செய்தனர். நன்கொடை அளித்தனர். ஒன்றும் செய்ய முடியாதா? என ஏங்கிய மக்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது ஆர்ப்பாட்டம். அதிகளவில் போலீசு பாதுகாப்புக்கு நின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தமிழக அரசே! தமிழக அரசே!
கைது செய், கைது செய்!
மணல் கொள்ளையர்களை, கைது செய்!

நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!
மணல் கொள்ளையை, தடுக்காத
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!.

வேடிக்கை பார்க்குது, வேடிக்கை பார்க்கது,
மாவட்ட நிர்வாகமே
மொத்தமா, வேடிக்கை பார்க்கது.
மணல் கொள்ளையை, வேடிக்கை பாக்குது!

போச்சு போச்சு- அய்யோ போச்சு
குடிநீர்போச்சு, விவசாயம்போச்சு,
தூக்கம் போச்சு, நிம்மதி போச்சு
கொள்ளையடிக்கிறான், கொள்ளையடிக்கிறான்,
ஆற்றுமணலை கொள்ளையடிக்கிறான்,
இரவு பகலா கொள்ளையடிக்கிறான்
நாதியில்ல நாதியில்ல,
தடுப்பதற்கு நாதியில்ல,…

3 அடிக்கு அனுமதி வாங்கி
30 அடிக்கு அள்ளுறான்
தாசில்தாரும், டி.எஸ்பியும்
மாட்டுவண்டிய மடக்கிறாங்க
மணல் லாரிய அனுப்புறாங்க
யாருக்கடா அரசாங்கம், வெங்காய அரசாங்கம்.

போராடுவோம் போராடுவோம்!
மணல் குவாரிகளை,
மூடும்வரை போராடுவோம், போராடுவோம்

கொள்ளை போகுது கொள்ளை போகுது
மணல் கொள்ளை தட்டிக் கேட்டால்
போலீசு வருது பொய் வழக்கு போடுது
கனிம வளம், நீர்வளம்
பொதுப்பணித்துறை வருவாய்த்துறை
அதிகாரி எங்கே? அதிகாரி எங்கே?
எத்தனை துறை இருந்தாலும் வக்கில்ல வக்கில்ல
மணல் கொள்ளையை தடுக்க
வக்கில்ல, வக்கில்ல

அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்
போலீசு லட்டிக்கும், பொய் வழக்குக்கும்
அஞ்சமாட்டோம்,..

போராடுவோம் போராடுவோம்!
மணல் குவாரிகளை,
மூடும்வரை போராடுவோம், போராடுவோம்

மடப்பயலே, மடப்பயலே
புரிஞ்சுக்கடா மடப்பயல
எல்லையில்ல, எல்லையில்ல
காத்துக்கும் தண்ணிக்கும்
எல்லையில்ல, எல்லையில்ல
சொந்தமடா சொந்தமடா
அனைத்து உயிருக்கும் சொந்தமடா…

அனுமதியோம் அனுமதியோம்
மண்ணையும்,மக்களையும் காட்டிக்கொடுத்து
மணல் கொள்ளைக்கு, காசுவாங்கும்,
துரோகிகளை அனுமதியோம்.

புறக்கணிப்போம், புறக்கணிப்பாம்!
விவசாயத்தை, அழித்து விட்டு
குடிநீருக்கு வேட்டு வைக்கும்,
மணல் கொள்ளைக்கு ஆதரவளிக்கும்
பஞ்சாயத்து தலைவரை புறக்கணிப்போம்!
கவுன்சிலரையும்,கட்சிகாரனையும் புறக்கணிப்போம், புறக்கணிப்போம்!

தீர்மானம் போடு! தீர்மானம் போடு!
மணல் குவாரிகளை மூடுவதற்கு
பஞ்சாயத்தில தீர்மானம் போடு
ஒன்றியத்தில தீர்மானம்போடு
மாவட்ட கவுன்சில தீர்மானம் போடு!
மாவட்ட ஆட்சியரே உத்திரவு போடு!

அரசியல்வாதிக்கு பல லட்சம்
எதிர்த்து கேட்டால் உனக்கும் பங்கு
மானம் இழந்து வாழ்க்கையா?
மணல் கொள்ளைக்கு லஞ்சப்பணமா?
வீசி எறிவோம் வீசி எறிவோம்
வாங்கிய பணத்தை
வீசிஎறிவோம் வீசிஎறிவோம்…

கைது செய் கைது செய்
வெள்ளாற்றை கட்டாந்தரையாக்கிய
மணல் கொள்ளை மா பியாக்களை கைது செய்
துணை நின்ற அதிகாரிகளை கைது செய்! கைது செய்!

manal-kollai-demo-poster-1

தகவல்:
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

அங்கன்வாடி

5

“என் குழந்தைக்கி ரெண்டு வயசாகப் போகுது, உங்க பள்ளிக்கூடத்துல சேக்கறதுக்கான விவரம் தெரிஞ்சுக்கலாம்னு….” நான் முடிக்கக் கூட இல்லை..

குழந்தைகள் காப்பகம்
பூ, காய், கனி, விலங்கு அதோட குட்டிங்க, பறவை அதோட குட்டிங்க, இதுபோல எது எதோட தொடர்பு உடையது என்பதை சொல்லிக் கொடுப்போம் (படம் : உதாரணத்துக்கு மட்டும்)

“உள்ள வாங்க மேடம், இந்த சேர்ல உக்காருங்க” என்றவர் ஃபேன் சுவிட்சை தட்டிவிட்டு நேராக இருந்த நாற்காலியை தேவையில்லாமல் சரிசெய்து போட்டு மரியாதையை காட்டிய விதமே மிகவும் பவ்யமாக இருந்தது. பலிகொடுக்கக் கொண்டு போகும் ஆட்டுக்கு செய்யும் மரியாதையை செயல்ல காட்டிவிட்டு வேலையை தொடங்கிச்சு அந்தம்மா.

“வருசத்துக்கு 13,500 ரூபா டேர்ம் பீஸ் கட்டணும். நீங்க ரெண்டு அல்லது மூணு முறையா பிரிச்சுக்கூட கட்டலாம் மேடம். அட்மிஷன் பீஸ் 2,500 ரூபா, ஆண்டு விழாவுக்கு காஸ்டியூம் வாங்க ஏதாவது கொஞ்சம் பணம் கட்றா மாதிரி இருக்கும். கராத்தே, பரதநாட்டியம், பாட்டுகிளாஸ் இதுவும் இருக்கு. இது வேணுன்னா அதுக்கு தனியா பீஸ் கட்டணும். மத்தபடி எதுக்கும் நாங்க காசு வாங்கறதில்ல.”

“நாங்க முக்கியமா குழந்தைக்கி அடிப்படையான விசயங்களத்தான் சொல்லித்தர்றோம். வீட்ல பாத்திங்கன்னா குழந்தைங்க தானா சாப்பிடாது. ஊட்டச்சொல்லும். கண்ட எடத்துலயும் கண்டதையும் பண்ணி வப்பாங்க. வீட்டுக்கு வர்ரவங்ககிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் பண்ணாது. ஹாய், பாய் இப்படி எதுவும் சொல்லாம மரியாதை குறைவா நடந்துக்கும். அடிப்படையில டிசிப்ளினா நடந்துக்கணுங்கறத கத்துக் கொடுக்குறோம்.

சிலபஸ்ன்னு எடுத்துகிட்டா பூ, காய், கனி, விலங்கு அதோட குட்டிங்க, பறவை அதோட குட்டிங்க, இதுபோல எது எதோட தொடர்பு உடையது என்பதையும், சாலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும். அப்பறம் யோகா, பாட்டு, பரதநாட்டியம் இதெல்லாம் கத்துக் கொடுப்போம். இதுக்காக நான் ஸ்பெசலா குழந்தைகளடோ சைக்காலஜி படிச்சிருக்கேன். அதையெல்லாம் தாண்டி நானும் ரெண்டு குழந்தைகளுக்கு தாய்.

காலையில ஒன்பதரை மணிக்கு கொண்டு வந்து விடணும். மதியம் பன்னிரெண்டரை மணிக்குக் கூட்டிட்டு போயிடணும். ஸ்னாக்ஸ் மட்டும் கொடுத்துவிடணும். கூடுதலா விடற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாதத்துக்கு முன்னூறு ரூபா கட்டணம். மாலை நாலுமணி வரைக்கும் குழந்தைங்கள விடலாம். கூடுதலான நேரம் விட்டா சாப்பாடு கொடுத்து விடணும். கண்டகண்ட பாக்கெட் ஐட்டமெல்லாம் அனுமதிக்கிறது கிடையாது. ஒன்லி ஹெல்த்தி ஃபுட், வீட்ல பிரிப்பேர் பண்ணது மட்டுந்தான் கொண்டு வரணும். மத்தபடி எங்க குழந்தைங்க போல பாத்துப்போம். நீங்க என்னைக்கி மேடம் அட்மிஷன் போட்றீங்க? அட்ரச சொல்லுங்க?”

மூச்சு முட்ட ஒப்பிச்ச அந்தம்மா கூலா இருந்தாங்க. எதுத்தாப்போல கேட்டுட்டு இருந்த எனக்குதான் வேத்துப்போச்சு. ஏழு கழுத வயசான நமக்கே டிசிப்பிளினோட இருக்க முடியாம தடுமாருறோம். பச்ச பிள்ளைக்கி எதுக்குங்க டிசிப்பிளின்.  அந்தம்மா சொல்ற கணக்கப் பாத்தா ஒரு மாச மளிகை சாமானுக்கு செய்ற செலவ ஒரு மாசம் புள்ளைய பாத்துக்க கொடுக்கணும் போல இருக்கு. பட்டினி கெடந்து, பிள்ளைய அவங்கள பாத்துக்க சொல்லிட்டு நமக்கு என்ன வேலையின்னு தோணினாலும் ஒரு வீட்டில் ஒரு குழந்தையா தனிச்சு வாழும் இந்த நகர வாழ்க்கையில குழந்தைகளோட சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமும் இருக்கு என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

அங்கன்வாடி
மத்த பிள்ளைகள பாத்து எல்லாரைப்போலதான் நாமளுங்கற எண்ணம் உருவாகும்.

கிராமத்துல பிள்ளைங்க சேந்து விளையாடும், சேந்து சாப்புடும், குழந்தைகள் உலகத்துல உள்ள நல்லது கெட்டது புரிஞ்சுக்கும் வாய்ப்பு அதிகம். மத்த பிள்ளைகள பாத்து எல்லாரைப்போலதான் நாமளுங்கற எண்ணம் உருவாகும். தெருவுல வித்துட்டு போற எல்லாத்துக்கும் அடம் பிடிக்காம வீட்டு சூழல் புரிஞ்சுருக்கும். வீட்ல பெரியவங்க இருப்பாங்க, கூடமாட பாத்துப்பாங்க. வெளியே தெருவில கூட்டிட்டுப் போவாங்க. அக்கம்பக்கம் உள்ளவங்க கூட ஒத்தாசையா நடந்துக்குவாங்க.

ஆனா நகரத்துல நெலம வேற. மனிதர்களின் வாழ்க்கை முறை, அதன் சூழல், குழந்தைகளின் உலகம் வேறா இருக்கு. பெற்றோர் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகளை தனியா விட முடியாது. அதிக படிப்பு, பெரிய வேலையா இருந்தாலும் சரி (ஆடம்பர வாழ்க்கையை பெருக்கிக் கொள்ள), கூலி உழைப்பு சாப்பாட்டுக்கே கணக்கு பார்க்கும் வேலையா இருந்தாலும் சரி, கணவன் மனைவி இருவருமே வேலைக்கி போக வேண்டிய சூழ்நிலை நகரத்து மக்களுக்கு. குழந்தைகளோ சேர்ந்து பழக, விளையாட முடியாமல் தனிச்சு போய்றாங்க. அதனாலேயே சின்ன வயசில குழந்தைகளை இதுபோல இடத்துக்கு அனுப்ப வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்படுது.

தேவை இருந்தாலும் நமக்கான இடம் இது இல்லங்கற முடிவோட அரசு அங்கன்வாடி இருக்கும் இடத்தை விசாரிக்கத் தொடங்கினேன். அனேகம்பேர் கை காட்டியது தனியார் கல்வி சாரா பள்ளியைதான். “அங்கன்வாடி நம்ம பகுதிக்கு எங்க இருக்குன்னு தெரியல” என்றதே பதிலாக இருந்தது. அங்கன்வாடியை தேடும்போது அடிக்கொண்ணு டே-கேர், கிரச், நர்சரி என்று தனியார் நிறுவனங்களத்தான் கடந்து போகவேண்டி இருந்தது.

நான் அலைஞ்சு திரிஞ்சு தேடியதுல கண்டுபிடிச்ச ரெண்டு அங்கன்வாடியில ஒன்னு பழுதடஞ்சு எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. “குழந்தைகள் யாரும் வர்ரதில்ல, தடுப்பூசிக்காக கர்ப்பவதியும், குழந்தைகளும் வாரத்துக்கொருக்க வருவாங்க, மத்தபடி பூட்டிதான் கெடக்கு”ங்கற தகவலோட அடுத்த அங்கன்வாடியில சந்திச்சவங்கதான் சாரதா.

புறக்கணிக்கப்படும் அங்கன்வாடிகள்
புறக்கணிக்கப்படும் அங்கன்வாடிகள்

பல குழந்தைங்க அம்மா அம்மா என்று அழுக, ஒரு குழந்தை முந்தானையை பிடிச்சு இழுக்க, இரு குழந்தைகள் அடித்துக்கொள்ள, அவர்களை சமாதானம் செய்யும் நேரத்தில் மற்றொரு குழந்தை சத்துமாவு பாக்கெட்டை பிரிச்சு கொட்ட குழந்தைகளை விட வரும் பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல என்று தசாவதானியாக வேலை பார்த்தவரிடம் எனக்கு பதில் சொல்வது கூடுதல் சுமையாக இருக்குமோ என்ற தயக்கத்தோடவே அணுகினேன்.

ஆனால் மிகவும் பக்குவமாக சொன்னார் “சமைக்கிற நேரமாச்சு. இன்னும் டீச்சர் வரல. கேஸ் வேற தீந்துப்போச்சு. வெளிய வெறகடுப்புலதான் சமைக்கணும். கொழுக்கட்ட புடிக்கணும், முட்ட அவிக்கணும். இந்த பிள்ளைங்க வேற படுத்தி எடுத்துருவாங்க” என்று தன் வேலையின் நெருக்கடி நிலையை புலம்பிய போதே ஒரு குழந்தை மலம் போய்விட்டது. “கொஞ்ச நேரம் இங்க உக்காருங்க நான் இப்ப வந்துர்ரேன்.” என்று அந்த வேலையை கவனித்துவிட்டு வந்தார்.

ஒரு வயசு புள்ளையெல்லாம் சேத்துக்குவோம். நீங்க கொண்டாந்து விடுங்க. முதல்ல கொஞ்சம் அழும், அடம் பண்ணும். போகப் போக சரியாகிடும். இந்த அஸ்வின் கூட ஒரு வயசுலேருந்து வர்ரான். நான் எந்த வேல பாத்தாலும் எம்பின்னாலேயே வருவான். சேர்லதான் உக்காருவான். மடில போட்டுதான் தூங்க வக்கணும். ஒரு நாள் வீட்டுல இருக்க மாட்டான், பால்வாடிக்கி போறேன்னு அழுது அடம்பிடிக்கிறான்னு அவங்க அம்மா சொல்லுவாங்க.

இந்த பாப்பா பேரு க்ரேஸ் நல்ல புள்ள. நல்லா சாப்புடுவா, தூங்கி எழுந்து நான் சாப்புடும் போதும் சாப்புடுவா. வீட்டுக்கு போகும் போது மறக்காம கொழுக்கட்டைய கேட்டு வாங்கிட்டு போவா. நல்லா சாப்புடற குழந்தைகள பாத்துக்கறதுல எந்த கஸ்டமும் இருக்காது.

காவியா சமத்துக்கார பொண்ணு எந்தப் பொருள் கீழ கெடந்தாலும் எடுத்து வச்சுருவா. யார் ஒண்ணுக்கு போனா, ரெண்டுக்கு போனான்னு கரெக்டா வந்து சொல்லிருவா. ஒன்னு கேட்டா ஒம்பது சொல்லுவா நல்ல சுட்டி.

anganwadi-3காலையில ஒம்பது மணிக்கு வருவேன் நாலு மணிக்கு திரும்பி போவேன். அஞ்சு வருசமாச்சு இந்த வேலைக்கு வந்து. வேலைக்கு சேந்த புதுசுல ஒரே தலைவலியா இருக்கும். ஒரு லட்சரூபா குடுத்து இந்த வேலைக்கு வந்தோமே நம்மளால நெலைக்க முடியுமான்னு தொணுச்சு. இப்ப ஒரு நாளைக்கி லீவுன்னு வீட்டுல இருக்க முடியல இந்த பிள்ளைங்க ஞாபகம் வந்துருது.

ஒவ்வொரு குழந்தையின் தனித் தன்மை பத்தி கூறியது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது. அதே வேளை குழந்தைகளின் அழகான மழலை பேச்சை புரிந்து கொள்ளும் அறிவும் ஆற்றலும் நமக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ள தோன்றியது.

அங்கன்வாடியில் ஆயா வேலை பார்க்க படிப்பு ஒரு தகுதி இல்லை. வாழ்க்கையில் நலிவுற்றவர்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்கிறது அரசு. ஒரு குழந்தையை கவனிக்க முடியாமல் வீட்டில் வேலைக்காக ஆயாக்களை வச்சுக்குறவங்களா இந்த வேலைக்கு வரப்போறாங்க. துப்புரவு தொழில்ல தாழ்த்தப்பட்ட பிரிவினரைத் தவிர வேறு யாரும் அந்த வேலைக்கு வர்ரதில்லை. அது போலதான் இந்த ஆயா வேலையும். வாழ்க்கையில் கைவிடப்பட்ட நிலைமையில இருப்பவர்களே இந்த வேலைக்கு வருகிறார்கள்.

அங்க இருக்கும் குழந்தைகள்ள நாலு பேரு ஆட்டோக்காரங்க குழந்தைகள். ரெண்டு வீட்டு வேலை செய்பவரின் குழந்தைங்க. பழைய பேப்பர் வாங்குபவரின் குழந்தை ரெண்டுபேர். இப்படி அங்க இருக்கும் குழந்தைகள்ள அடிப்படைத் தொழிலாளியின் குழந்தைகளே அதிகம் பேர்.

அங்கன்வாடி இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம். 1975-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டிருக்கு. இன்னும் பசியால் வாடும் குழந்தைகள் இல்லாத நெலமைய கொண்டு வரமுடியாம இப்பதான் மசாலா முட்டை போட திட்டம் போட்ருக்கு அரசு.

உரிமைகளுக்காகப் போராடும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள்
உரிமைகளுக்காகப் போராடும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் (ஆகஸ்ட் 11, 2014)

நாப்பதாண்டு காலம் முடியப்போகுது மக்கள் தொகை எவ்வளவோ பெருகிப்போச்சு. குழதையை க்ரஷ்சில் விடும் வசதி படைத்த பெற்றோர்கள் ‘ஸ்கைப்’ மூலம் குழந்தை என்ன செய்யுது என்று அறியும் அளவுக்கு வசதி வாய்ப்பு ஒருபக்கம் பெருகிப்போச்சு. ஆனால் தண்ணி, டாய்லெட், ஆயா, டீச்சர், சமையல் பெருட்கள், கட்டிடம், பாதுகாப்பின்மை என்ற வசதி குறைவற்ற இந்த அங்கன்வாடி மையம் பெரும்பான்மை மக்களின் தேவையாக உள்ளது.

வீதிக்கி வீதி சாராய கடையை திறந்திருக்கும் அரசு தேடியும் அகப்படாத அளவுதான் அங்கன்வாடி திறந்துள்ளது. அதுக்கும் போதிய அளவு ஆட்கள் இல்லாமல் 40 குழந்தைகளுக்கு ஒரு டீச்சர் ஒரு ஆயா என்ற வீதத்துலயும், டீச்சருக்கு வேறு வேலைகளையும் கொடுத்து வருது நிர்வாகம். சரிவர கவனிக்க முடியாதது மட்டும் இல்லாமல் பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. தேனி உத்தம்பாளையம் குழந்தைகள் கடத்தல் விசயமே இதுக்கு சாட்சி.

தினக் கூலிக்கு வேலை செய்றவங்களும், மாதச் சம்பளம் குறைவாக உள்ளவர்களும் பெருகிவரும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறும் வேளையில், குழந்தைகளை பணம் கொடுத்து பார்த்துக்கொள்ள எப்படி முடியும். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் போல தனியார் குழந்தைகள் காப்பகமும் கொள்ளையடிக்கின்றன. விதவிதமான விளையாட்டு சாதனங்கள், ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், பெற்றோருக்கு விளையாட்டு போட்டி, பரிசு என்று கவர்ச்சி திட்டம் போட்டு பெத்தவங்க பிரச்சனையை பணம் பண்றாங்க.

அங்கன்வாடியில வேலைபார்க்கும் ஆயாக்களோ ‘குழந்தைகள் சைக்காலஜி’ படிக்கல. சாதாரண மக்களுக்கு இருக்கும் இளகிய மனம் உள்ளவராகவும் இயல்பிலேயே மக்களிடம் பந்தபாசத்துடன் நடந்துகொள்பவர்களாகவும் இருக்காங்க. ஆரம்பத்தில் குழந்தைகள், தண்டனை கைதிகளைப்போல பார்க்கவே பரிதாபமாக இருந்தாலும், அவர்கள் அன்பில் கொஞ்ச நாள்லயே விட்டுப்பிரிய மனமற்றவங்களா மாறி போறாங்க.

மூணு மாசம் முடிஞ்சுருச்சு. இப்ப என்னோட குழந்தைய அழைக்க போகும் போது, இன்னும் சரியாக பேச்சுக் கூட வராத மத்த குழந்தைகள் பைய எடுத்துக்கொடுத்து, கதவை தொறந்துவிட்டு, டாட்டா காட்டும் போது டிசிப்ளினை பத்தி பாடம் நடத்துன அந்த ‘மேடம்’தான் ஞாபகத்துக்கு வர்றாங்க!

– சரசம்மா

எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்…

38

“ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்.

ஆரியப் பார்ப்பன தமிழ் அழிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக உயர்தனிச் செம்மொழியை ஒரு வாளாக உயர்த்திப்பிடித்த கால்டுவெல்லுக்கோ, இல்லை பார்ப்பனிய திரிபுக்கு எதிராக தமிழ்ச்சமர் புரிந்த பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவணர் போன்றவர்களையெல்லாம் புதிய தலைமுறைகளுக்கு போற்றிச் சொல்லவோ, விழா எடுக்கவோ விரும்பாத வைரமுத்து, தமிழுக்காக உயிரையே கொடுத்த தாளமுத்து, நடராசனுக்காகவெல்லாம் ஒரு போஸ்டர் கூட அடிக்காத ‘வெற்றித் தமிழர் பேரவை’ இப்போது தமிழுக்காக ஒரு குரலை கொடுத்ததற்காக காவி தருண் விஜய்க்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது என்றால், வைரமுத்துவுக்கு “வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுது” என்பது நமக்கு புரிகிறது.

தருண் விஜய் - வைரமுத்து
“ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்

ஈழத்தமிழர் படுகொலை, மீனவர் படுகொலை, ஆரம்ப வகுப்பிலேயே தமிழ்வழிக் கல்வி அழிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு… என நீளும் அநீதிகளின் போது எங்கேயும் தலையைக் காட்டாத இந்த வெத்துத் தமிழ்ப் பேரவைக்கு பா.ஜ.க. தருண் விஜய் போலவே திடீர் தமிழ்க் காதல் வந்தது திகைக்க வைக்கிறது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டால் தனக்குத்தானே கால் அமுக்கு பேரவை, கை அமுக்கு பேரவை என்று அல்லக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் காட்டிக் கொள்ள தமிழகத்தில் பஞ்சமா என்ன?

தமிழை தாய் மொழியாக கொள்ளாத ஒருவர், தமிழுக்குக் குரல் கொடுப்பதும், “தமிழை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க குரல் கொடுப்பது, திருவள்ளுவர் பிறந்த நாளை இந்திய மொழிகளின் திரு நாளாக கொண்டாட வேண்டும், இந்தியாவின் இரண்டாவது மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும். (முதல் இடம் சமஸ்கிருதத்திற்கு அல்லது எல்லோரும் வைரமுத்து அளவுக்கு வாட்டப்படும் வரை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்திக்கு போல) பாரதியார் வாழ்ந்த காசி இல்லத்தை நினைவுச்சின்னமாக்க வேண்டும்” என்றெல்லாம் பா.ஜ.க. தருண் விஜய் போராடுவதால் பாராட்டு விழா நடத்துவதாக வைரமுத்து அளக்கிறார்.

அட, ஈர வெங்காயமே! ஆக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இனி தமிழை வாழவைக்க முடியாது என்று தன்னை வைத்து ஒரு முடிவுக்கே வந்துவிட்டது கவிப்பேரரசு!

கால்டுவெல் கூட தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத அயர்லாந்துக்காரர்தான், ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு மரபில் தமிழின் தனித்துவத்தை அவர் ஆதாரங்களுடன் நிறுவியதும், பல அயல்நாட்டு அறிஞர்கள் தமிழின் செம் மொழித்தன்மைக்கு குரல் கொடுத்ததும் வரலாறு.

ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என எழுதச் சொன்னதும், பெஸ்கி பாதிரியார் என்ற வீரமாமுனிவர் இலக்கணம், அகராதி வரைந்து இனிய தமிழுக்கு ஏற்றம் தந்ததும், வைரமுத்துவுக்கு வசதியாய் காவி மசக்கையால் மறந்துபோனதா?!

சமஸ்கிருதத்தில் பதவி ஏற்கும் தருண் விஜய்

ஆரிய சமஸ்கிருதத்தையும், அதன் நாறிய இனவெறி சரக்குகளையும் தள்ளிவிட்டு, அன்னைத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, “மீண்டும் சமஸ்கிருதத்தை அரியணைக்கு ஏற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக பேட்டியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன குள்ளநரி தருண் விஜய்க்கு பாராட்டாம்!

அப்படி என்ன போராடிவிட்டார், அந்த தமிழ்த் தருமி! சிதம்பர நடராசர் கோயிலில் தமிழ்பாட தீட்சிதர்களுடன் உழைக்கும் மக்களும், கம்யூனிஸ்டுகளும் சண்டைக்கு நின்று சாதித்த போது வைரமுத்து என்ன வளிமண்டலத்திலா இருந்தார்!

வாயைத் திறந்து தமிழுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட காணோம். மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ். ‘எழுதிக் கொடுத்ததை மயக்குறு வண்ணம் பேசுவதாலேயே தமிழுக்கு போராளி என்றால், இத்தனை இன அழிப்பையும் செய்துகொண்டே, தமிழ் பெயர்களை சிங்கள மயமாக்கிக்கொண்டே, இலங்கையில் தமிழ் இலக்கியத்தை பேச – கூட்டம் நடத்த குரல் கொடுத்த ராஜபக்சே கூட ஒரு போராளிதான், பாவம் பாராட்டுவிழா நடத்த வைரமுத்துவுக்குத்தான் வசதியாக நேரம் வாய்க்கவில்லை போலும்!

தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது இருக்கட்டும் முதலில் தமிழகத்தில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்று அறிக்கை விடவும் அதை தருண் விஜய்யின் தமிழக பா.ஜ.க. கூட்டாளிகள் வழிமொழியவும் யோக்கியதை உண்டா?

தருண் விஜய் - மோடியுடன்
தமிழ்த்தாயை இந்தியத் தாயாக்க, சமஸ்கிருதத் தாயாக்க, ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், கமண்டலத்தில் அடைக்கத்தான் இத்தனை அகத்திய வேலையும்.

தமிழுக்காகத்தான் இத்தனையும் என்று நம்மிடம் போக்கு காட்டும் வைரமுத்துவிற்கே உரைக்கும் படி தருண் விஜய் தனது நோக்கத்தை தெரிவிக்கிறார் இப்படி “தமிழ்த் தாய்க்கான பணியை இந்தியத் தாய்க்கான பணியாகப் பார்க்கிறேன்.” அப்படிப்போடு! தமிழ்த்தாயை இந்தியத் தாயாக்க, சமஸ்கிருதத் தாயாக்க, ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், கமண்டலத்தில் அடைக்கத்தான் இத்தனை அகத்திய வேலையும்.

“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பெரு மறைப்பையும்…, உண்டு பண்ணுகிற ஆரிய பாஷையில் எனக்கு ஆசை வொட்டாது, சாகாக் கல்வியை லேசில் அறிவிக்கும்… தென் மொழியிடத்தே மனம் பற்றச்செய்த…” என்று தமிழை வெறும் மொழியாக மட்டும் பார்க்காமல் அதை ஆரிய வர்ணாஸ்ரம சமஸ்கிருத எதிர்ப்பின் வரமாகப் பார்த்த வள்ளலார், பார்ப்பனியத்துடன் முரண்பட்டு ஏற்படுத்திய அமைப்புக்குப் பெயர் சமரச சன்மார்க்க சபை! வர்ணாஸ்ரம வெறிக்கு தமிழனை கிடாவாக வெட்டி, தமிழை பொங்கலாக வைக்கும் சுத்த சமரச சரணாகதிக்குப் பெயர் ‘வெற்றித் தமிழ் பேரவை!’ தமிழை வெறும் சொல்லிலிருந்து மட்டும் பார்த்தால் நாம் எப்படி ஏமாந்துவிடுவோம், என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதான்!

நாம் சொல்வது என்ன? கவிப்பேரரசு காதில் ரீங்காரமிடும் தமிழ் கொசு தருண் விஜயே கூறுகிறார். “அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் விழாவை தமிழக கிராமத்தில் கொண்டாட உள்ளேன்.” (தினமணி, 11.11.2014). போச்சுடா! இனி வை.கோ., ராமதாசு வகையறாக்களுக்கு தமிழின சவடால் அடிக்க ஒரு பருக்கையும் மிஞ்சாது போல!

வரலாற்றில் ஆரியப் பார்ப்பனியம், அருந்தமிழ் நூல்களை பகையாடி தீயில் எரித்தது, உறவாடி ஆடிப்பெருக்கு நீரிலும் அழித்தது. எஞ்சியிருக்கும் தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத மறுப்பு போன்ற அடிப்படைகளையும் அழித்தொழிக்க இப்போது ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனக் கும்பல் தமது வரலாற்றுப் பகையான தமிழை அழித்தொழிக்க, தமிழுக்கு குரல் கொடுப்பதாய் வேலைகாட்டி, தமிழ், தமிழின உணர்வை உட்கவர்ந்து ஒழிக்கும் திட்டத்தோடு உறவாடிக் கெடுக்க முனைந்துள்ளது.

ஒரு ‘நல்லி’ எலும்பு கிடைத்தால் கூட வாய்ப்பை பயன்படுத்த நாயாய் அலையும் பா.ஜ.க காவிப்படை, தமிழகத்தின் ‘தலைசிறந்த எழுத்தாளர்’ நல்லி குப்புசாமி செட்டியின் எட்டு நூல் வெளியீட்டு விழாவையும் விட்டு வைக்காமல், உள்ளே நுழைந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாராட்டியுள்ளது. செட்டிக்கும் பா.ஜ.க. பட்டாய் விளையும் என்ற கணக்கில் மகிழ்ச்சி! செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு ‘தமிழ் கிளிப்பிங்ஸ்’ வரவு! ரஜினி வீட்டில் ‘டீ’, கமலுக்கு ‘குப்பை’, வைரமுத்துவுக்கு ‘தமிழ்’ என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.

தருண் விஜய் - வைரமுத்து
கார்ப்பரேட்டை திணித்து, கசம்பிடித்த ஆரியத்தை திணிக்கும் கும்பலின் ஒரு விஷஜந்து, திருக்குறளைப் பற்றி பேசுவதற்கு பெரிய ஆதரவாம்!

தமிழகத்தில் ஆடு, மாடுகளே அம்மா… அம்மே! என அழகு தமிழில் பேச கற்றுக் கொண்ட பிறகும், இன்னும் “அவா… பார்தம்…” என்று தம் கட்டும் சு.சாமி, இல.கணேசன் வாய்களை வைத்துக்கொண்டு இவர்கள் தமிழுக்கு குரல் கொடுக்கப் போகிறார்களாம்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சாதி வெறியை ஏற்காத திருக்குறளையும், “சதுர்வர்ணம் நமா சிருஷ்டம்” என்று சாதிவெறியை கக்கும் பகவத்கீதையும் சமமாக மதிப்பார்களாம்! இதுதான் பாரதப் பண்பாடாம்! இந்தக் கயமையை ஏற்க முடியுமா? தீண்டாமையையும் ஏற்போம்! திருக்குறளையும் ஏற்போம் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.

இதை அம்பலப்படுத்தி போராடத் துப்பின்றி, வடக்க உள்ளவனையே மடக்கிட்டோம் பாத்தியா என்ற மப்பு வேறு! உ.பி.யிலும், அரியானாவிலும், குஜராத்திலும் தாழ்த்தப்பட்டவர்களையும், இசுலாமியர்களையும் போட்டுத் தள்ளி விட்டு தமிழ் வாழ்க! என்று குரல் கொடுத்துவிட்டால் மட்டும் பாராட்டலாம் என்பதை விட பச்சை அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியுமா?

கம்பி வளைத்து, கரணை பிடித்து, சாரம்கட்டி வண்ணம் பூசும் வட மாநில தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து வரும் தமிழை, தெருக்குரலை ஆதரிக்கத் துப்பில்லை! கார்ப்பரேட்டை திணித்து, கசம்பிடித்த ஆரியத்தை திணிக்கும் கும்பலின் ஒரு விஷஜந்து, திருக்குறளைப் பற்றி பேசுவதற்கு பெரிய ஆதரவாம்!

வைரமுத்து மட்டுமல்ல பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கும் மனங்களை தமிழாலேயே என்கவுண்டர் செய்ய ஏராளமான இலக்கிய அமித்ஷாக்கள் களத்தில் நிற்கிறார்கள்! ஜோ.டி.குரூஸ், ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பத்ரி இப்படி பலவிதமான ஷாக்கள் இலக்கியம், ஊடகம், நாடகம், சினிமா, தமிழ் என விதவிதமாக போட்டுத்தள்ள புறப்பட்டுவிட்டார்கள்! எச்சரிக்கை தமிழகமே, நம் எதிரில் தமிழ் படமெடுத்தாடும் காவிப் பாம்புகள்!

– துரை.சண்முகம்

ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் மறைவு – ம.க.இ.க அஞ்சலி !

4

mss pandian 3ய்வாளர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் டில்லியில் நவம்பர் 10 அன்று மாலை மறைந்து விட்டார். 1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் பற்றிய கட்டுரை ஒன்றை எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் அவர் எழுதியிருந்தார். ம.க.இ.க வின் அந்தப் போராட்டத்தைப் பற்றி மட்டுமின்றி, அதன் அரசியல் பின்புலத்தையும் விளக்கிச் சென்றது அக்கட்டுரை. அந்தக் கட்டுரையின் வழியாகத்தான் எம்.எஸ்.எஸ் பாண்டியன் எங்களுக்கு  அறிமுகமானார்.

1990 களின் துவக்கத்தில் நாங்கள் முன்வைத்த பார்ப்பன பாசிசம் என்ற கருத்தாக்கத்தையும், அதனை கருத்தியல் ரீதியாக முறியடிப்பதற்கு இந்து மதத்தின் ஆன்மாவான பார்ப்பனியத்தை தாக்க வேண்டும் என்பதையும் மார்க்சிய லெனினிய அமைப்புகளே ஏற்றுக்கொள்ளத் தயங்கிய அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. (இப்போதும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை). தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மரபு குறித்து கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத, அதே நேரத்தில் “மைய நீரோட்டத்தில் சேர மறுக்கும்” தமிழகம் குறித்து ஒருவித வெறுப்பும் கசப்புணர்ச்சியும் கொண்டிருந்த “வட இந்திய மனோபாவத்தை” அசைப்பதற்கும், வட இந்திய அறிவுத்துறையினருக்கு திராவிட இயக்கம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்கும் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் பெரிதும் உதவின.

90 களில் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இல் அவர் பணியாற்றிய காலத்தில்  அவரை சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்தைக் கொண்டிருந்தபோதும், புலிகள் இயக்கத்தையும் பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கமற்ற தமிழினவாத அரசியலையும் அவர் விமரிசினக் கண்ணோட்டத்துடனேயே அணுகினார்.

இந்திய அறிவுத்துறையில் ஒருவர் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருப்பதும், இறுதிவரை அந்நிலைப்பாட்டில் நீடித்து நிற்பதும் அரிது. அத்தகைய ஒருவர் சிந்தனையாளராக அங்கீகரிக்கப்படுவதோ அரிதினும் அரிது. பாண்டியன் அதில் வெற்றி பெற்றிருந்தார். எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும் திராவிட இயக்கம் என்று அங்கீகரிக்கும் பார்ப்பனியர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கும், இடைநிலைச் சாதிகளின் பார்ப்பன எதிர்ப்பு நீர்த்துப்போய் அவர்கள் நிறுவனமயமாவதைப் புரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்கள் பயன்படும். குறிப்பாக, 19 ஆம் நூற்றாண்டில் நாடார் சாதியினர் தீண்டத்தகாதோராக நடத்தப்பட்டதையும், அவர்களது முன்னேற்றத்தில் கிறித்தவ மிசனரிகளின் பாத்திரத்தையும் பற்றிய வரலாற்றை, என்.சி.இ.ஆர்.டி யின் 9 ஆம் வகுப்பு பாடநூலிலிருந்து நீக்க வேண்டுமென்று நாடார் சங்கங்களும் ஓட்டுக்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்த போது, இந்தக் குரலின் பார்ப்பன அடிவருடித் தன்மையை அவர் கூர்மையாக அம்பலப்படுத்தினார்.

1996 இல் அனைத்திந்திய புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, அதன் கருத்தரங்கில் அவர் ஒரு பேச்சாளர். அன்று உடல்நலக் குறைவால் அவரால் உரையாற்ற இயலாத போதிலும், வராமலிருப்பது சரியல்ல என்று கருதி நிகழ்ச்சியில் வந்து அவர் கலந்து கொண்டதும், நக்சல்பாரி அமைப்பினர் மீது அவர் காட்டிய மதிப்பும் மறக்கமுடியாதவை. பார்ப்பன பாசிசத்தின் வெற்றிமுகம் குறித்தும், ஜனநாயக இயக்கங்களின் பின்னடைவு குறித்தும் அந்நாட்களில் அவர் வெளிப்படுத்திய வருத்தமும் மறக்கமுடியாதது. அறிவுத்துறையினரிடம் நிலவும் அகம்பாவம் சிறிதுமற்ற அவரது இயல்பான உரையாடும் முறையையும், இதமான நட்புணர்வையும் நினைக்கையில் அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரம் அதிகரிக்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !

0

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 2

10. அஞ்செட்டி

  • நவம்பர் 7: ரசியப் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்!
  • கம்யூனிச அகிலத்தின் 150-ம் ஆண்டில் சாதி, மதம், இனம், மொழி கடந்த பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமையை கட்டியமைப்போம்!
  • மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம்!

மேற்கண்ட முழக்கங்களின் கீழ் அஞ்செட்டி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அத்திமரத்தூர் கிளையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. தோழர்களும் புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்க தோழர்களும் உள்ளூர் மக்களும் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. நாட்றாபாளையம் பேருந்து நிலையத்தில் விண்ணதிரும் முழக்கங்களும் எளிய கிராம விவசாயிகள், தொழிலாளர்கள் நடத்திய பேரணி அங்கிருக்கும் மக்களுக்கு புதிய நம்பிக்கையூட்டும் வண்ணம் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர்.சரவணன் கொடியேற்றினார். தோழர்கள் செவ்வணக்கம் செலுத்திய பின்னர், கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் முனியப்பன் ரசியப் புரட்சியின் முக்கியத்துவத்தையும் இதனைக் கொண்டாட வேண்டிய அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்தி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைவிட நவம்பர் புரட்சி தான் உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய விழா என்பதை விளக்கி ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர்.ராமு உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கம்யூனிச அகிலம் என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தி பேசினார் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் சுரேசு. முதலாம் கம்யூனிச அகிலத்தின் 150 ஆண்டை ஒட்டிய அவரது உரையில் சர்வதேச அளவில் மூன்று அகிலங்கள் இருந்ததையும் அவை ஒவ்வொன்றின் சாதனைகளையும் மக்களுக்கு விளக்கினார்.

இந்தியா போன்ற காலனி நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கும் உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகமூட்டுவதற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை வீறுகொண்டெழச் செய்வதற்கும் ஜெர்மனியின் பாசிசத்தை வீழ்த்துவதற்கும் தோழர்கள் லெனின், டிமிட்ரோவ் தலைமையில் கம்யூனிச அகிலம் செய்த பணிகளையும் தோழர் ஸ்டாலினின் மகத்தான பங்களிப்பையும் விளக்கினார். இந்த வெற்றிக்கும் நவம்பர் புரட்சி தான் உத்வேகம் மூட்டியது என்பதையும் தோழர் விளக்கி பேசினார்.

தற்போது நமது நாட்டில் நடந்து வரும் மாற்றங்கள் மூலம் இந்த சமூக அமைப்பு உழைக்கும் மக்கள் வாழத்தகுதியற்றதாக மாறிவிட்டதையும், பெங்களூரில் தெருநாய்களிடம் கடிப்பட்டு சாகும் ஏழைகளின் குழந்தைகளை இந்த சமூகம் காப்பாற்ற முடியாமல் போனதிலிருந்தும், சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது தினம் தினம் நடக்கும் நிகழ்வுகளாக மாற்றப்பட்டுள்ளதையும் விளக்கினார்.

முகலிவாக்கம் கட்டிட விபத்தும் ஒசூரில் சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தை நவீன முறையில் ஓரிரு மாதங்களில் கட்டியதையும் குறிப்பட்டு, நாதியற்ற ஏழை கூலி விவசாயிகளுக்கு அடைக்கலமாக இருந்த கட்டிடத் தொழிலும் இனி நமக்கு கிடைக்காது என்பதை மக்களுக்கு உணர்த்தினார்.

தற்போதைய மோடி அரசு நேரடியாக பார்ப்பன பாசிசத்தைக் கொண்டுவந்துள்ளதை விளக்கினார். இந்துத்துவாவை எதிர்ப்பதாக கூறும் சி.பி.ஐ.யின் தளி எம். எல். ஏ. ஒரு தரகு முதலாளி என்பதை உழைக்கும் மக்களின் சொந்த அனுபவத்திலிருந்து விளக்கினார். ஓட்டுக் கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளாக மாறிவிட்டதை உணர்த்தினார். அதனால், இவர்கள் பாசிசத்தின் கோடாரிக் காம்புகள் என்பதையும் உணர்த்தினார். பார்ப்பன பாசிஸ்ட் மோடி உழைக்கும் மக்கள் மீது திணித்துவரும் எண்ணற்ற அடக்குமுறைகள் சாதாரண ஏழைகள் வாழத் தகுதியற்ற நாடாக நமது நாடு மாறிவிட்டதை சுட்டுக்காட்டினார்.

தொகுப்பாக பார்க்கும் போது, கிராமங்கள் தோறும் உண்மையான ஜனநாயகத்திற்கான மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவதுதான் இன்று நம்முன் உள்ள கடமை என்பதை உணர்த்திப் பேசினார்.

இறுதியாக, புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர்.தீபன் நவம்பர் புரட்சிவிழா நடத்துவதாக உள்ளூர் மக்களிடம் தெரிவித்த போது பலரும் நிதி உதவி, இனிப்புகள் வழங்கி உதவினர் என்பதை நினைவு கூர்ந்து, வி.வி.மு.வின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக கருதுவதாக கூறி நன்றியுரையாற்றினார்.

மிகவும் பின்தங்கிய கிராமமான நாட்றாபாளையத்தின் உழைக்கும் மக்கள், வி.வி.மு. தோழர்கள் நடத்திய ஊர்வலம், தெருமுனைக் கூட்டம் புதிய நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். சூழ்ந்து இறுதிவரை ஆதரவு தந்த மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
அஞ்செட்டி

11. சென்னை – ஆவடி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி- அம்பத்தூர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக்குழு தோழர்கள் இணைந்து சென்னை பட்டாபிராம் பகுதியில் ” நவம்பர் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்! ” என்கிற தலைப்பில் நவம்பர் புரட்சி நாள் விழா நடத்தப்பட்டது.

7.11.2014 அன்று மாலை 6 மணியளவில் துவங்கிய இவ்விழாவில் இப்பகுதிகளுக்குட்பட்ட பு.ஜ.தொ.மு கிளை மற்றும் இணைப்பு சங்கத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சுமார் 400 பேர் வரை கலந்துக் கொண்டனர். தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மு.முகிலன் தலைமை தாங்கினார்.

தோழர்.முகிலன் (தலைமையுரை)
தோழர்.முகிலன் (தலைமையுரை)

தலைமையுரையில் இந்நிகழ்ச்சியின் அவசியத்தை உணர்த்தி பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட  தோழர் இராஜேந்திரன் “போலீஸ் இல்ல; பொறுக்கி” என்கிற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். போலீசின் உண்மை முகத்தை ஜனரஞ்சகமான முறையில் திரைகிழித்து, அனைவரும் போலீசை எள்ளி நகையாடும்படி செய்தார்.

இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

திரு.வெள்ளையன்
திரு.வெள்ளையன்

கோக் – பெப்சியை அமெரிக்க மூத்திரம் என்றும் பிரச்சாரம் செய்து மக்களை திரட்டியவை நமது அமைப்புகள் என்றும், தொழிலாளர்களை மட்டுமல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களை பாதிக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளிலும் தலையிட்டு போராடுகின்ற பாரம்பரியம் கொண்டவை என்றும் நமது போராட்டங்களை நினைவு கூர்ந்தார். இத்தகைய புரட்சிகர அமைப்புகள் நடத்துகின்ற “நவம்பர் புரட்சி நாள்” விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

மார்க்சிய – பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் தமிழேந்தி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

திரு.தமிழேந்தி
திரு.தமிழேந்தி

தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு கலந்து கொண்டுள்ள இவ்விழாவில் அவரை வாழ்த்துரை வழங்க அழைத்தமைக்கு நன்றி தெரிவித்து, தொழிலாளர்களின் உரிமைப் பறிப்புகளுக்கெதிரான போராட்டத்தில் உங்களோடு இணைந்து போராட தயாராக உள்ளேன் என்றும், தூய்மை இந்தியா என்ற பெயரில் கையில் துடைப்பத்தை எடுத்துள்ள இந்து மதவெறி பயங்கரவாதி மோடியை விரட்டியடிக்க தொழிலாளர்களின் குடும்பத்தினர் துடைப்பத்தை கையிலெடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர்.பா. விஜயகுமார் அவர்கள், பிற்போக்கும், மானக்கேடும் மிகுந்த பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற தீபாவளியை அம்பலப்படுத்தியதோடு ரசியப் புரட்சியை உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்பதனையும் எடுத்துரைத்தார்.

தோழர் பா.விஜயகுமார் (சிறப்புரை)
தோழர் பா.விஜயகுமார் (சிறப்புரை)

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சோசலிச அரசின் சாதனைகளை எடுத்துச் சொன்னார். நாட்டுப்பற்று, மனித சமூகத்தை நேசித்தல், சுரண்டல்-அடக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கம்யூனிசம் போதித்தது. முதலாளித்துவமோ சுரண்டல், சுயநலம், நுகர்பொருள் மோகம், போதை-பொறுக்கித்தனங்களையே போதித்து வருகிறது என சாடினார். லாபவெறி பிடித்து அலைகின்ற முதலாளித்துவத்துக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் பாதசேவை செய்கின்ற அதே தருணத்தில், மதவெறியூட்டுவதன் மூலம் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி வருவதையும் சுட்டிக்காட்டினார். மறுகாலனியாக்கம், இந்து மதவெறி பாசிசம் ஆகிய இரண்டையும் முறியடிக்கும் வகையில் தொழிலாளி வர்க்கம் தனது இரு கரங்களிலும் போர் வாளை ஏந்திப் போராட வேண்டியுள்ளது என்கிற வரலாற்றுக் கடமையை நினைவூட்டியதுடன், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் அணித்திரளுமாறு அறைகூவல் விடுத்தார்.

நிகழ்ச்சிக்கு இடையிலும், இறுதியிலும் குழந்தைகள் பங்கேற்ற ஓவியப் போட்டி, பாடல்கள், மாறுவேடப் போட்டி, கவிதை வாசிப்பு, உரைவீச்சு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிளை சங்கத் தொழிலாளி ஒருவரது மனைவி தோழர் சாந்தி ”மாற்றம் தேவை” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

வீரமங்கை வேலு நாச்சியார் வேடமணிந்த 7 வயதான பூவரசி, சார்லி சாப்ளின் வேடமணிந்த 7 வயதான பிரபஞ்சன், ” நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு ”என்று மோடியின் முகத்தில் காறி உமிழ்ந்த 3 வயதான செயலினி போன்ற எண்ணற்ற குழந்தைகள் தங்களது திறமைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தினர். இளம்தொழிலாளர்கள் பங்கேற்ற புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளராக இருந்த குழந்தைகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

போட்டிகளில் பங்கேற்ற சிறுவர் – சிறுமியர்
போட்டிகளில் பங்கேற்ற சிறுவர் – சிறுமியர்

பு.ஜ.தொ.மு-வின் மூத்த தோழர்.எழில்மாறன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெயராமன், காஞ்சி மாவட்ட தலைவர் தோழர் நாச்சியப்பன் ஆகியோர் மேற்படி பரிசுகளை வழங்கினர். விழாவின் இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஆனந்தன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. கலந்துக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உணவருந்தி சென்றனர்.

பரிசளிப்பு - தோழர் எழில்மாறன்
பரிசளிப்பு

நவம்பர் புரட்சி தினத்தை தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் ஒரு நம்பிக்கையூட்டும் தினமாக மாற்றுவதற்கு இந்த விழா உதவிபுரிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்கள்

12. திருச்சி

நவம்பர்-7 ரசிய புரட்சி நாள் வெல்க!
புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு!

னித நேயம், சேவை, உதவி, அன்பு, பாசம், உழைப்பு, அரசியல், பொருளாதாரம் என அனைத்தும், இன்று லாப நோக்கத்தோடும், வெறியோடும் பிரித்து மேயப்பட்டு வருகிறது. நாட்டின் வளங்கள்,காடு,மலை,கடல்,உயிரினம் முதல் பிணங்கள் வரை இன்று காசு பொறுக்கும் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. மக்களை பாதுகாக்க, சேவை செய்யவே பிறப்பெடுத்துள்ளதாக கூறிக்கொண்டுள்ள அரசும், அரசியல் கட்சிகளும் சுரண்டிய சுரண்டலில் 2G, நிலக்கரி,கிரானைட் துவங்கி பச்சிளம் குழந்தைகளின் உயிரின் ஆதாரமான ஆவின் பால் வரை கைவைத்துவிட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்குள்ளான ஜெயலலிதா இன்னமும் நாட்டின் நிர்வாகத்தை நடத்துகிறார். IAS அதிகாரிகள் ஜெயாவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெற்ற பிறகே டம்மி பீசான பன்னீர் செல்வத்திடம் ஒப்புக்கு கையெழுத்து பெற கோப்புகளை அனுப்புகின்றனர். ஊழலிலும், கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஊறிபோயுள்ள இந்த நபர்களே இன்று நாட்டின் அரசியல், பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். மோடி,லேடி, உள்ளிட்ட எல்லா கேடிகளும் தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்காக நாட்டை திறந்துவிட்டு வருகின்றனர்.

அரசியல்,பொருளாதாரம்,கல்வி,இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இவர்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கான கொள்கையை திணித்தும் சமூகத்தை சீரழித்தும் வருகின்றனர். இந்த பிணந்தின்னி கழுகுகள் கூட்டத்தை எதிர்கொள்வது எப்படி? மனிதனின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை தடுக்க முடியுமா? பண்டிகைகள், பிரார்த்னை, பரிகாரம் மூலம் இதனை சரி செய்ய முடியுமா? மூடத்தனங்கள் உலகை விடுவித்ததாக வரலாறு இல்லை, விஞ்ஞான பூர்வமான செயல்பாடுகளே விடிவைத் தரும்.

1917 நவம்பர் புரட்சி உணர்த்தும் பாடம் இதுதான், ரசிய மண்ணில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சிக் கெதிராகப் போராடிய புரட்சியாளர்களின் பின்னே துவக்கத்தில் மக்கள் செல்லவில்லை. மன்னனை நம்பினார்கள், புகழ்ந்தார்கள், மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டப் பிறகுதான் ஜாரின் கோர முகத்தை சோவியத் மக்கள் கண்டு கொண்டனர். இத்தகைய கொடுங்கோன்மையை முன்னமே உணர்ந்து அமைப்பாக திரட்டப்பட்டிருந்த புரட்சியாளர்கள் ஜாருக்கு எதிராக போராடி அதிகாரத்தை மீட்டெடுத்தனர்.

இப்படிப்பட்ட நவம்பர் புரட்சிக்கு இது 97ம் ஆண்டு, நமது நாட்டை ஆக்கிரமித்துள்ள நச்சு கிருமிகளான முதலாளித்துவ சுரண்டலையும், பழமைவாத நில உடைமை சிந்தாந்தத்தையும், ஆரிய பார்ப்பன சூழ்ச்சிகளையும், சாதிய கொடுமைகளையும் வீறுகொண்டு வீழ்த்தவும், முறியடிக்கவும், அறைகூவி அழைக்கிறது நவம்பர் புரட்சி.

புதிய வரலாற்றை படைப்போம்! – அதனை
இப்புவி முழுவதும் பரப்புவோம் வாரீர்!!

என பிரசுரமாக அச்சிடப்பட்டு உழைக்கும் மக்களிடம் நவம்பர் புரட்சி நாளின் அவசியத்தை வழியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.

BHEL

திருச்சி துவாகுடியை அடுத்துள்ள BHEL தொழிற்சாலை முன்பு உள்ள டிரைனிங் செண்டர் அருகில் காலை 7 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனை சேர்ந்த தோழர் திருஞானம் அவர்கள் தலைமை வகிக்க தோழர்.நாராயணசாமி அவர்கள் கொடியேற்றினார். பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில செயலாளர் தோழர்.சுந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தோழர்.பொன்னுசாமி நன்றியுரையாற்றினார்.

குட்செட்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்-தலைமையில் இயங்கும் சுமைப்பணித்தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் சார்பாக குட்செட் பகுதியில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து நவம்பர்-7 தினத்தை ஒட்டி காலை 7.30 மணி அளவில் கொடியேற்றி, பட்டாசுவெடித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.

சு.தொ.பா.ச வின் தோழர்.குத்புதீன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமைப்பணித்தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்பு தலைவரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான தோழர்.ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடன் வாழ்த்துரை வழங்கினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைகுழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடி சிறப்பித்தனர். இறுதியில் சு.தொ.பா.ச வின் தோழர்.முத்துகருப்பன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தில்லைநகர், காந்திபுரம்

இதைதொடர்ந்து காலை 10 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ம.க.இ.க.மையக் கலைக்குழு தோழர்.சத்யா அவர்கள் கொடியேற்றி நவம்பர்-7 நாம் ஏன் கொண்டாட வேண்டும் என அதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக பேசிய கலைக்குழு தோழர் கோவன் மோடி அரசின் தனியார்மய தாராளமய கொள்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் இந்து மதவெறி பாசிசத்தை பற்றியும் சீரழிவு கலாச்சாரத்தை பற்றியும் விளக்கி பேசினார். கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியில் பு.மா.இ.மு.மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா நன்றியுரையாற்றி இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார். வெடி வெடித்து,இனிப்புகள் வழங்கி பகுதி மக்களுடன் நவம்பர்-7 தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.

அன்றைய தினத்தில் திருச்சி மாநகர் முழுவதும் பாலியல் சீரழிவு கலாச்சாரத்திற்க்கு எதிராக வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இக்கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கைதட்டி உற்சாகமூட்டி அனுப்பி வைத்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

உறையூர் கைத்தறி மண்டபம்

nov7-trichy-function-01

அன்று மாலை உறையூர் கைத்தரி மண்டபத்தில் நவம்பர் புரட்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தினை ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன் தலைமையேற்றி நடத்தி வைத்தார்.

ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன்
ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன்

பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா பேசும்போது:

நாடு முன்னேறாமல் இருக்க காரணம் மக்கள் தொகை பெருக்கம் என மக்கள் மீது பழியை போடுகிறது நமது அரசு. ஆனால் தோழர் லெனின் குழந்தைகளை நாட்டின் செல்வம் என வர்னிக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது வெறும் வயிறும்,வாயுடன் பிறப்பதில்லை இரண்டு கைகளோடும் கால்களோடும்தான் பிறக்கிறது. சமூக உற்பத்தியில் பெரும் பங்காற்றுகிறார்கள். இன்று கல்வி என்பதே பெண்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஆனால் சோவியத்தில் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்சி கல்வி வரை இலவசமாக தாய் மொழியில் கொடுத்தது மட்டுமல்ல விண்வெளிக்கு முதன் முதலாக பெண்ணை அனுப்பியது. சோசலிச புரட்சியே இதற்கு காரணம். ஆனால் இங்கே ஓட்டு போடும் உரிமை கூட இங்கே பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்தது. அனைத்து பொறுப்புகளும் மதிப்பிழந்தே உள்ளது. ஆனால் சோவியத்தில், சாதாரண பால் கறந்து விற்பனை செய்யும் சாதாரண பெண்ணை பாராளுமன்றத்திற்க்கு அனுப்பி மதிப்பளித்தது என இன்றைய நிலைமையையும் சோவியத் யூனியனில் நிலவிய நிலைமையையும் ஒப்பிட்டு பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா
பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா பேசும் போது:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா

இளைஞர்கள் ஊதாரியாக சுற்றுவதும் வருத்தப்படாத வாலிபர் சங்கமாக பொறுப்பற்று திரிவதுதான் பெருமையா?

உண்மையான மகிழ்ச்சி என்பது நம்முடைய அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து போராடுவது நம்முடைய கடமை என ஏன் உணர்வதில்லை. நவம்பர் 7 கமல் பிறந்த நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி என இளைஞர்கள் கருதுகின்றனர் ஆனால் சமூக விடுதலைக்காக மாணவர்களும்,இளைஞர்களும் அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து போராடுவதை இப்போது செய்யாமல் வேறு எப்போது செய்வது என அறைகூவல் விடுத்தார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான் பேசும் போது:

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான்
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான்

மறுகாலனியாக்கத்தை விரைவாக அமுல்படுத்தும் நோக்கில் நாட்டின் போடி, லேடி, கேடிகள் ஆட்சி செயல்படுகின்றன. கல்வி,மருத்துவம்,ஆலைகள்,சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. சேவைதுறைகள் ஒழித்து கட்டப்படுகின்றன. தொழிலாளர்கள் சட்டங்கள் திருடப்பட்டு முதலாளிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.

மின்சாரம்,தண்ணீர்,பால் என அத்தியாவசிய பொருட்களை கடுமையாக விலையேற்றப்படுகின்றன. காரணம் கேட்டால் நட்டத்தில் இயங்குகின்றன என பொய்யை பரப்புகின்றனர். “மின்வாரியம் நட்டம் என்பது மோசடி அதனை தனியார்மயமாக்கவே இந்த வழிமுறைகள் எங்களுக்கு வேறு வழியில்லை” என மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையமே எமது தோழர்களிடம் சரணடைந்து ஒத்துக் கொண்டது உலகறிந்த விசயம். இப்படிப்பட்ட முதலாளித்துவ தாசர்களின் ஆட்சியை எதிர்த்து பல்வேறு மக்களும் போராடி வருகின்றனர். கூடங்குளம் மக்கள் கல்விக்கான போராட்டம்,மீனவர்கள் போராட்டம்,கலாச்சார சீரழிவுக்கு எதிரான போராட்டம் என நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இனி தனித் தனி போராட்டங்கள் தீர்வை தராது. ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து போராடும் போதே நிரந்தரமான தீர்வு கிடைக்கும். மாமேதை லெனின் பாதையில் ரசிய புரட்சியை போல நமது மண்ணிலும் மக்களை திரட்டி போராடுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பாரதிதாசன் கவிதையோடு தனது உரையை முடித்தார்.

பிறகு அன்று மாலை நடைபெற்ற பேச்சுபோட்டி, பாடல் போட்டி, கவிதைப் போட்டி, மாறுவேடப்போட்டி என கலந்து கொண்டு வெற்றியடந்தவர்களுக்கு இவ்விழா மேடையில் பரிசுகள் கொடுக்கப்பட்டது.

சிறுவர் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு, பார்வையாளர்கள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறுவர்கள் கலை நிழச்சிகள், பெரியவர் கலைநிகழ்ச்சி மற்றும் ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள் அரங்கத்தில் வந்திருந்தவர்களை உற்சாகமூட்டினர்.

ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இடையில் இனிப்பு, காரம், தேநீர் என கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
திருச்சி கிளை

ஈரோடு மின்சார கட்டண கருத்து கூட்டத்தில் பெரும் கலகம்

7

சென்னை, நெல்லையைத் தொடர்ந்து ஈரோட்டிலும் அம்பலப்பட்டது மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ‘கருத்துக் கேட்புக் கூட்டம்’ எனும் நாடகம்!

“மொத்தத்தில், மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் நம் அமைப்புகளின் பிரச்சாரக் கூட்டமாக மாறியிருந்தது. இனி வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு ஆணையம் பிரச்சாரம் செய்யவில்லையென்றாலும் நாம் பிரச்சாரம் செய்யலாமென தீர்மானித்துள்ளோம். மண்டப வாடகை, மைக்செட் செலவில்லாமல் பிரச்சாரம் செய்யவும் அதிகாரிகளை எதிர்க்கும் போர்க்குணத்தை மக்களிடம் பரப்பவும் வாய்ப்பாக அமையும் அல்லவா?”

இது சென்ற ஆண்டு (2013) திருச்சியில் நடந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் பற்றி வினவில் வெளியான  கட்டுரையின் இறுதியில் நாம் தெரிவித்திருந்த கருத்து.

இதனால்தானோ என்னவோ இந்த ஆண்டு இந்த கருத்து கேட்பு கூட்டத்தை திருச்சியில் வைக்காமல் தவிர்த்துள்ளது ஆணையம். ஆனாலும் என்ன? எந்த ஊரில் வைத்தாலும் உழைக்கும் மக்களும் தோழமை அமைப்புகளும் இருக்கத்தானே செய்கின்றன. 31.10.2014 அன்று ஈரோட்டில் வைத்திருந்த கூட்டத்தை விளம்பரம் செய்து நடத்த தீர்மானித்தோம். ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல்,திருச்சி பகுதி தோழர்கள் இணைந்து கருத்து கேட்பு கூட்டத்தை ‘சிறப்பாக்க’ முடிவு செய்து களமிறங்கினோம். 350 சுவரொட்டிகள் மூலம் ஈரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்தோம். 3000 பிரசுரங்கள் அச்சிட்டு பகுதி மக்கள், விசைத்தறி தொழிலாளர்கள், பேருந்து பயணிகள் மத்தியில் கருத்தைப் பரப்பியதுடன் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்து ஆணையத்தின் கார்ப்பரேட் ஆதரவு – மக்கள் விரோத போக்கை கண்டிக்க அழைத்திருந்தோம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

முன்னதாக நமது நெல்லை மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும், சென்னை பு.மா.இ.மு தோழர்களும் இந்த வேலையை சிறப்புற செய்து ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். நமது புதிய ஜனநாயகம், வினவு தளத்தில் வந்த கட்டுரைகளுடன் தமிழ்நாடு மின்துறைப்பொறியாளர் அமைப்பின் தலைவர் திரு. சா.காந்தி அவர்கள் தற்போது தொகுத்துத் தந்த பிரசுரம் மற்றும் கட்டுரைகளும் நமக்கு கை கொடுத்ததன.

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மின்வாரியமே கோராத நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தன் முனைப்புடன் கட்டண உயர்வை அறிவித்து மக்களிடம் கருத்து கேட்டது. இணையத்தில் வெளியிட்டிருந்த இந்த கட்டண விவரத்தைப்பற்றி இணையத்தின் மூலம் கருத்து தெரிவிக்க அக்டோபர் 23-ம் தேதி வரை காலக்கெடு தந்து அதன் பின் நேரடியாக மக்களிடம் கருத்து பெறுவதற்காக மாநிலத்தில் 3 இடங்களில் மட்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

இணையத்தில் கட்டண விவரத்தைப் பார்க்கவும் இணைய வழியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும் எவ்வளவு மக்கள் தயாராக இருக்கின்றனர் என்பது வாசகர்கள் அறியாததல்ல. மேலும், மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினாலே அங்கு வந்து கருத்து தெரிவிக்க வசதியும் விழிப்புணர்வும் இல்லாத மக்களுக்கு 10 மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினால் எத்தனை பேர் வந்து கருத்து தெரிவிப்பார்கள்? 10 ரூபாய்க்கு இலவச திட்டங்களை அறிவிக்க 30 ரூபாய் செலவில் விளம்பரம் செய்யும் அரசுகள் இதனால்தான் உரிய விளம்பரமே செய்யாமல் கூட்டத்தை நடத்தின. இவற்றிலிருந்தே இது கண்துடைப்பு நாடகம் என்பதையும் ஒரு சடங்குக்காக கூட்டம் நடத்திவிட்டு மக்களிடமிருந்து கருத்து கேட்டுத்தான்- மக்களின் ஒப்புதலுடன்தான் மின் கட்டணத்தை உயர்த்தினோம் என்று ஏய்க்கவே இந்த கூட்டங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது என்பார்களே அது இந்த ஆண்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் கூட்டங்களுக்கு அப்படியே பொருந்தும். சென்னை, நெல்லை, ஈரோடு என நடத்திய 3 கூட்டங்களிலும் தலையிட்டு ஆணையத்தின் மக்கள் விரோதத் திட்டத்தை நமது அமைப்புகள் அம்பலப்படுத்தின.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தனியார் மின் முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாகவே இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது; அதற்கேற்பவே செயல்படுகிறது; அவ்வாறே செயல்பட்டுத் தீரும் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவாக உணர்த்தியது ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பினரின் இந்த அம்பலப்படுத்தல். அது மட்டுமல்ல; ஆணைய உறுப்பினர்களின் வாயாலேயே அதை ஒத்துக்கொள்ளவும் வைத்தார்கள் எமது தோழர்கள். ஆம், சென்னையில் தோழரின் கேள்வியை நைச்சியமாக தவிர்த்து, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி, ஈரோட்டில் வரலாறு காணாத வகையில் இரவு 9 மணி வரை கூட்டத்தை நடத்தியும் ஜகா வாங்க முடியாமல் இறுதியில் உண்மையை ஒத்துக்கொண்டு கையெடுத்துக்கும்பிட்டு கதறியது இந்த ஆணையம்.

தோழர்கள் துவக்கத்திலேயே எழுப்பிய அர்த்தமுள்ள கேள்வி : “இந்த கூட்டத்தில் பெரும்பாலோர் கட்டணத்தை ஏற்றக் கூடாதென்று கூறினால் உயர்த்தாமல் விடப் போகிறீர்களா?” என்பதுதான். இந்த கூட்டங்களில் பேசிய யாரும் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை. இருந்த போதும் மின் கட்டண உயர்வு முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பதால் மக்களின் கருத்து கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவில்லை. இந்த மாதம் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆனால், ஆணையம் போன்ற அதிகார வர்க்க கும்பலிடம் கைதொழுது நின்று காரியம் சாதிக்கலாமென்ற மக்களின் அறியாமையை இந்த கூட்டங்களின் வாயிலாக நாம் தகர்த்தெறிந்துள்ளோம். ‘இவ்வாறுதான் பேச வேண்டும்’, ‘அதிகாரிகளின் மனம் கோணாமல் கோரிக்கை வைக்க வேண்டும்’ என்கிற கேடுகெட்ட சட்டவாத வரம்புகளை மீறியே ஆக வேண்டுமென மக்களுக்கு உணர்த்தியுள்ளோம். தோழர்கள் பேசியதற்காக ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டவர்கள் கூட இறுதி கட்டத்தில் தோழர்களுடன் சேர்ந்து கலகம் செய்த அரிய காட்சியை அரங்கேற்றினோம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

மற்ற எல்லா இடங்களையும் விட அதிக எண்ணிக்கையில் ஈரோடு கூட்டத்திற்கு பொது மக்கள் கருத்து தெரிவிக்க திரண்டனர். கோவை மாவட்ட சிறு தொழில் முனைவோரும் ஈரோடு, பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர்களும் உணர்வு பூர்வமாக பங்கெடுத்துக் கொண்டதுடன் உரிய புள்ளி விவரங்களுடன் ஆணையத்திடம் கேள்வியெழுப்பினர். தாங்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் பலரையும் அழைத்து வந்திருந்தனர். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமாக திரண்டு வந்திருந்தனர். அந்த வகையில் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு நிறைந்திருந்தனர்.

காலையில் வந்த கூட்டம் குறைந்த போது மாலையில் மேலும் அதிகமான மக்கள் வந்து அரங்கை நிறைத்தனர். அந்த வகையில் சுமார் 1600 பேருக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 130 பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு கருத்து தெரிவித்தனர். வழமையாக மாலைக்குள் முடியும் கூட்டம் இரவு 9 மணி வரை நடந்து முடிந்தது. அது மட்டுமல்ல, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திணறிய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆணைய அதிகாரிகள், பதில் சொல்லும் நிகழ்ச்சியையே கடைசியாக தள்ளிப் போட்டு விட்டனர். பெயர் பதிவு செய்திருந்த 130 பேரிடமும் கருத்து கேட்ட பின்னரே தங்கள் கருத்தைப் பேசுவதென மாற்றிக்கொண்டனர். ஆனாலும் பதில் கூறும் நெருக்கடியை தள்ளிப் போட முடிந்ததே தவிர, தவிர்க்க முடியவில்லை. மாறாக, ஏராளமானோர் ஆணையத்தின் யோக்கியதையை சந்தி சிரிக்க வைக்கவே இந்த நடைமுறை உதவியது. பேசிய பலரும் மக்களுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்படும் ஆணையத்தை வறுத்தெடுத்தனர்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

நமது தோழர்களுக்கு முன்னதாக பேசிய 25 பேரும், எல்லா விலைவாசியும் ஏறியுள்ள இன்றைய நிலையில் மின் கட்டணத்தை ஏற்றுவதும் தவிர்க்க முடியாததுதான். ஆனால், பார்த்து- கொஞ்சம், கொஞ்சமாக ஏற்றுங்கள்; இடி போல இறக்காமல் மெல்ல மெல்ல (வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல) ஏற்றுங்கள் ; எங்களுக்கு மட்டுமாவது ஏற்றாமல் விட்டு விடுங்கள்… என்றவாறு இறைஞ்சினர்.

அடுத்ததாகப் பேசிய கோவை பு.ஜ.தொ.மு தோழர் இராமசாமியோ, “மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிய பெரியார் பிறந்த இந்த மண்ணில்தான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தைக் குறைத்துவிடும் என்ற மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது. மற்ற இரு கருத்துக் கேட்பு கூட்டங்களை விட இங்குதான் மக்கள் எதிர்பார்ப்புடன் பெருமளவில் திரண்டுள்ளீர்கள். ஆனால், நாங்கள் மின் கட்டணத்தை குறையுங்கள் என பேச வரவில்லை.” என்று அதிரடியாகவே ஆரம்பித்தார்.

தோழர் விளவை ராமசாமி

“ஆணையம் ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டுதான் கூட்டத்தை நடத்துகிறது. நம்மை ஏமாற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நஷ்டம் என்று மக்கள் மேல் கட்டணத்தை சுமத்துகிறார்கள். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் தங்கள் சம்பளம் போன்ற அனைத்து சலுகைகளையும் குறைவில்லாமல் அனுபவித்து வருகின்றனர். நஷ்டம் ஏன் அடைந்தது என்று அதிகாரிகள் இங்கு தெளிவாக சொல்லவேண்டும். முறையான பதில் சொல்லாமல் இவர்களை இங்கிருந்து வெளியே விடக் கூடாது” என்றார். அது வரை பேசிய யாரையும் இடைமறிக்காத ஆணையம், தோழர் பேசிக் கொண்டிருந்த போது இடைமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், மக்களோ “அவரைப் பேச விடு” என்று அதிகாரிகளுக்கெதிராக ஆவேசப்பட்டனர். வேறுவழியில்லாமல் அதிகாரிகள் அனுமதித்தனர்.

பிறகு பேசிய பலரும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று பேசினர். இதில் போலி கம்யூனிஸ்ட் அமைப்புகளாகிய CPM, இந்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழிகளில் முயற்சிக்கலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினர். ஆனால் தனியாரிடம் அதிக விலைக்கு கொள்முதல் செய்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் மின்சாரம் வழங்கியதும்தான் இந்த நட்டத்திற்குக் காரணம் என்ற உண்மையை வாய்தவறிக் கூட பேசவில்லை.

அடுத்தாக மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் ஆனந்த், ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டு கருத்துக் கேட்பு என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஆணையத்தின் செயலை கடும் ஆவேசத்துடன் கண்டித்தார். இவர்களை நம்பி நாம் இங்கு வருகிறோம், இவர்களோ நம்மை ஏமாற்றுகின்றனர். எனவே, இன்று இவர்களை ஓட ஓட விரட்டவேண்டும். அப்போதுதான் மக்களை ஏமாற்ற நினைக்கும் போது அவனவன் நினைத்துப் பார்ப்பான் என்றதும் அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

அடுத்ததாக பேசிய விவசாய சங்கத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு முன்னால் பேசியவர்கள் அதிகாரிகளை ஆத்திரமுட்டும் வகையில் பேசியிருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். உடனே மக்கள் தரப்பிலிருந்து, “ பேசியது சரிதான், நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டாம்” என்றனர்.

பிறகு பேசிய ஈரோடு பு.ஜா.தொ.மு தோழர். புஷ்பராஜ் கட்டண உயர்வால் விவசாயிகள், தொழிலாளர்கள் படும் பாதிப்பை பேசினார். இறுதியாக நஷ்டம் எப்பொழுது ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது? என்று வினவினார். கூடுதலாக 1994 – 95 ம் ஆண்டு 347 கோடி உபரியாக மின்வாரியம் வைத்திருந்தது. ஆனால் ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகு 2007 – 2008 ல் 3512 கோடி நஷ்டம் எப்படி வந்தது என்றும் கேள்வியெழுப்பினார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - கருத்துக்கேட்பு கூட்டம்

அடுத்ததாகப் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சாருவாகன் “1998-ல் துணைமின் உற்பத்தியாளர்களிடம் மின்சாரம் வாங்க யூனிட் ரூ.3.41 என்று விலை நிர்ணயித்து 13 ஆண்டுகாலம் நீடிக்கக் கூடிய ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2008ல் அவசரமாக ரத்து செய்யப்பட்டு, பிறகு அதே நிறுவனங்களிடம் யூனிட்டுக்கு ரூ. 7.91 என்று விலை நிர்ணயித்து 15 ஆண்டுகள் நீடிக்கும் படி ஒப்பந்தம் போட்டது ஏன்? இதனால் 700 கோடி அளவில் நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்? டாடா நிறுவனத்துடன் 2.41க்கு மின்சாரம் வாங்குவது என்று போட்ட ஒப்பந்த்தை மீறி இன்றுவரை கூடுதல் கட்டணம் கொடுத்து மின்சாரம் வாங்குவதால் 1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்?” என்று நஷ்டத்திற்கான காரணத்தை பட்டியலிட்டு கேள்வியெழுப்பினார்.

erode-electricity-meeting-10

இதனை மக்கள் கைதட்டி வரவேற்று ஆமோதித்தனர். அதிகாரிகளோ கூட்டத்தின் போக்கு கண்டு திகைத்தனர்.

பிறகு பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் சேக்,

erode-electricity-meeting-11

“லாபம் வரும்போது, அதற்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை பேசி லாபத்தில் இன்செண்டிவ்,போனஸ் என்று எடுத்து கொண்டு நன்றாக அனுபவித்த அதிகாரிகள், தன் திறமையின்மையால் நஷ்டம் உண்டாகும் போது அதை ஏன் மக்கள் தலையில் சுமத்த வேண்டும்? நியாயமாகப் பார்த்தால் இவர்களது சொத்தை பறிமுதல் செய்துதானே நஷ்டத்தை அடைக்க வேண்டும்? மேலும் தனியார் மின் உற்பத்தி முதலாளிகள் கொழுப்பதற்காக பொதுத்துறை நிறுவனத்தை திட்டமிட்டே அழித்து தேசத்திற்கே துரோகம் செய்யும் இவர்களை ஏன் தேச துரோக வழக்கில் கைது செய்யக் கூடாது?” என்றதும் கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

அடுத்ததாக நாமக்கல் தோழர்.சத்தியா பேசும் போது, “மக்கள் இவர்களை நம்பி ஏமாந்தது போதும். இனி நாம் இவர்களை எதிர்த்துப் போராட அணிதிரள்வதன் மூலம்தான் எதையும் சாதிக்க முடியும்” என்றும், “ஆணையம் தனியாருக்கு சேவை செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது” என்றும் அம்பலப்படுத்தினார்.

erode-electricity-meeting-12

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர். ஓவியா பேசும் போது “ஒவ்வொரு முறையும் கூட்டம் நடத்துகிறார்கள், நாமும் சென்று எதிர்ப்பு தெரிவிக்கிறோம், ஆனால் கட்டணத்தை உயர்த்தி கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்த தைரியம் எப்படி வந்தது? நாம் இவர்களை நம்பும் வரைதான் நம்மை ஏமாற்றுவார்கள், இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டால் இவர்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் நமக்கான நிர்வாகத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.

தோழர் ஓவியா

கோவை பு.மா.இ.மு தோழர் பாபு பேசிய போது இந்த மூன்று தெய்வமும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இங்கு வந்திருக்கிறார்கள், இவர்கள் தனியாருக்குதான் சேவை செய்வார்கள். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய MP, MLA –க்களுக்கு கூட இவர்களை கேள்வி கேட்க அதிகாரம் இல்லை. இந்த தெய்வங்கள் எடுப்பதுதான் முடிவு. இவர்கள் கோவையின் சிறு தொழில்களை அழிக்க முடிவு செய்து விட்டார்கள்.. அதற்காகத்தான் இந்தக் கட்டண உயர்வு. இவர்களை நாம் இது போன்ற கூட்டங்களால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டமைப்பே தனியாருக்கானதுதான், நமக்கில்லை இதை நொறுக்கும் போது மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார்.

erode-electricity-meeting-14

இறுதியாகப் பேசிய கரூர் தோழர், அதிகாரிகளும், ஆணையரும் எப்படி தனியாருக்காக சேவை செய்கிறார்கள் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இதுவரை காலமும் தன்னுடைய பொறுப்பு என்று கூறியவற்றையெல்லாம் தன்னால் கூட கட்டுப்படுத்த முடியாத ஆணையங்களிடம் ஒப்படைத்து தனது பொறுப்பை கைகழுவுகிறது. ஏற்கனவே அரசு நிறுவனம் BSNL அழிந்து இப்போது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை செய்யத் தொடங்கிவிட்டது. இதன் அடுத்த முயற்சிதான் மின்வாரிய நஷ்டம், கட்டண உயர்வு… என்பவை. இந்த அரசு முறைக்குள் நின்று இதற்குத் தீர்வு தேடுவது முட்டாள்தனம். இதற்கு வெளியிலிருந்து ஒரு புரட்சி மூலம்தான் தீர்வு காண முடியும் என்று முடித்தார்.

தோழர்களுக்கு இடையில் பேசிய அனைவரும் கூட கட்டண உயர்வை எதிர்த்துதான் கருத்தை பதிவு செய்தனர். கருத்து கேட்பு மாலை 7 மணிவரை நடந்தது. இது முடிந்ததும் பதிலளிக்க வந்த மின்வாரிய இயக்குநர் தங்களின் எதிர்கால திட்டம் பற்றியும் தாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்ற வகையிலும் விளக்கமளித்துக் கொண்டு சென்றார்.

மக்களும் தோழர்களும் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் பேசியதால் இடை மறித்த தோழர்கள், “கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் தேவையில்லாதது எல்லாம் எதற்கு?” என்றனர். ஆனால், அவர் மீண்டும் நஷ்டத்திற்கான காரணத்தை சொல்லாமல் பேசவே தோழர்கள் மேடைக்கு அருகே சென்று மைக்கில், “நஷ்டத்திற்கான காரணம் என்ன? எப்பொழுதிலிருந்து நஷ்டம்? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்” என்றனர்.

erode-electricity-meeting-16

ஏற்கனவே சென்னை, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள் இந்த கூட்டத்திற்காக நிறைய குறிப்புகள் எடுத்து வந்திருந்தும் பதில் சொல்லத் திணறினர். பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் நிலக்கரியை வாங்கி இரயிலில் கொண்டு வந்ததே நட்டத்திற்குக் காரணம் என்றார். 7 ஆண்டுகளாக புதிதாக நாம் மின்உற்பத்தி செய்யவில்லை. தனியாரிடமிருந்தே மின்சாரம் வாங்கினோம் என்றார். இடைமறித்த தோழர்கள் 7 ஆண்டுகளாக ஏன் புதிதாக உற்பத்தி செய்யவில்லை? என்றதும் மக்கள் அனைவரும் பதில் சொல் என்று ஆவேசத்துடன் ஆர்ப்பரித்தனர். காவல்துறை இடையில் வந்து தோழர்களிடமும் மக்களிடமும் கெஞ்சி அமைதிப்படுத்தியது.

erode-electricity-meeting-17

கடைசிவரை மக்களின் கேள்விகளுக்கு பதிலே சொல்லவில்லை. இடையில் ஆணையர், மின்வாரிய இயக்குநரிடம் அதை ஏன் செய்யவில்லை? இதை ஏன் செய்தீர்கள் என்று சில கேள்விகளை எழுப்பி நாடகமாடினார். வாரிய அதிகாரியிடமிருந்து அப்போதும் பதில் இல்லை என்றதும் சரி ‘ரிட்டனாகக்’ கொடுங்கள் என்று சொல்லி நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்த முயன்றார். தோழர் சாருவாகன் இடைமறித்த போது அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் கூடியிருந்த மக்களோ, “அவரைப் பேசவிடு” என்றனர். “நம் கேள்விகளுக்கான பதிலை அதிகாரிகள் கூறமாட்டார்கள். நான் கூறுகிறேன்” என்று சொல்லி மின் வாரியத்தை ஒழித்துக் கட்ட அரசாங்கமும் அதிகார வர்க்கமும் மேற்கொண்டுள்ள சதிகளைப் பேசினார். அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாமல் பின்னால் நின்று புலம்பித்தள்ளினர்.

ஆணைய உறுப்பினர் ஒருவர், தான் இவற்றைக் குறித்துக் கொண்டதாகக்கூறி சமாதானப் படுத்த முயன்றார். அதன் பிறகும் தோழர்கள் கேள்வியெழுப்பி உங்கள் முடிவு என்ன என்ற பின், மற்றொரு ஆணைய உறுப்பினர், “1997-ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற கொள்கைக்குப் பிறகே தனியார் துறை வளர்ந்தது. 15 வருடத்திற்கு பிறகு தற்போது பாதிப்பு தெரிந்தாலும் இதை எப்படி மாற்ற முடியும்? அதனால் இப்போது பேசிப் பயனில்லை. மேலும் இப்போது தொழிற்சாலைகள் பெருகி விட்டன. மின்சாரத்தின் தேவை அதிகமாகி உள்ளது” என்றார்.

“தங்கள் வாயாலேயே தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைதான் காரணம் என்று சொன்னதற்கு நன்றி” என்று தோழர்கள் கூறினர். உடனே சுதாரித்த ஆணைய உறுப்பினர், “நான் சாதாரண நபராகவே பேசினேன். பத்திரிக்கையில் எதுவும் போடாதீர்கள்” என கையெடுத்து கும்பிட்டார்.

அடுத்துப் பேசிய தோழர்கள் “பள்ளி, கல்லூரி மாணவர் நலனுக்காகத்தான் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதாக நீங்கள் கூறியது பொய். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கவே தனியாரிடம் மின்சாரம் வாங்குகீறிர்கள். அதில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டத்தான் இந்தக் கட்டண உயர்வு என்பதை நீங்களே உங்கள் வாயால் ஒத்துக்கொண்டீர்கள். இதுதான் மக்கள் உணர வேண்டியது” என்றார்.

erode-electricity-meeting-18

இதை மறுக்க முயன்ற ஆணையர், “29 கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மட்டும்தான் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அது நாங்கள் எடுத்த முடிவில்லை. அரசு போட்ட ஒப்பந்தம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றார்.

இதைத்தான் காலையிலிருந்து எமது அமைப்புகளின் சார்பாக உணரவைக்க முயற்சித்தோம். அதிகாரிகள் தங்கள் வாயாலேயே ஒத்துக்கொண்டது நாங்களே எதிர்பார்க்காத்து. 1991-ல் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் காட் ஒப்பந்தமும்தான் இவர்களுக்கு முக்கியம். அதற்கு சேவை செய்யத்தான் இந்த ஆணையம். எனவே தனியார்மயத்தை ஒழிக்காமல் மின்கட்டண உயர்வைத் தடுக்க வேறு தீர்வில்லை என்று விளக்கினோம். கூடியிருந்த மக்கள் இதை கைதட்டி வரவேற்றனர். வேறு வழியில்லாமல் கூட்டம் முடிவதாக ஆணையம் அறிவித்தது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பது சட்டபடியே நம் நாட்டை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும் ஒர் ஏற்பாடாகும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவே ஒழுங்குமுறை ஆணையங்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு அரசாங்கம் தனது பொருப்பிலிருந்து நழுவிக் கொள்கிறது. பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏதுவாக சட்டங்களை மாற்றுகிறது. இந்த அமைப்பை வைத்துக்கொண்டு விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த வாழ்வாதார உரிமை பாதிக்கப்பட்டாலும் மக்களுக்கு தீர்வு கிட்டாது. ஏனென்றால் மக்கள் மீதான ஒடுக்குமுறை அனைத்தும் சட்டப் பூர்வமாகவேதான் அரங்கேறுகின்றன. எனவே, இந்த சட்டப்பூர்வ அமைப்புக்குள் நின்று இதற்கு தீர்வு தேடுவதில் அர்த்தமில்லை. இந்த கட்டமைப்பையே அடித்து நொறுக்குவதன் மூலமாக மட்டுமே, மக்கள் தங்களுக்கான சொந்த கட்டமைவை புத்தம் புதிதாக உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்களுக்கான விடிவை உருவாக்க முடியும் என்பதை வந்திருந்த மக்களுக்கு உணர்த்தும் படி இருந்தது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையக் கூட்டம்

அந்த வகையில் இந்த ஆட்சியும் அதிகார அமைப்புகளும் மட்டுமே மக்களுக்கானவை என்றும், இந்த அமைப்பு முறைக்குள் நின்று இரைஞ்சுவதன் மூலமாக மட்டுமே ஏழைகள் தங்கள் வாழ்வை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்த அடிமை மனோபாவத்தை உடைத் தெரிந்துள்ளோம். இந்த அமைப்பு முறையே மக்கள் விரோதமானதுதான். அப்படி நரிகளுக்காக கட்டியமைக்கப்பட்ட ஆட்சியில் ஆடுகளுக்கு நீதி கிடைக்காது; இந்த ஆட்சியமைப்பிற்கு வெளியே மக்கள் திரள் போராட்டங்களினூடாகத்தான் நீதி பெற முடியும் என்பதை ஓரளவிற்கேனும் புரிய வைக்க முயற்சித்துள்ளோம்.

அடுத்த ஆண்டுகளில் ஒன்று இந்த கருத்துக்கேட்பு நாடகத்தை நடத்த பயந்து அடாவடியாக மின் கட்டணத்தை ஏற்ற வேண்டும். அல்லது, காவல் துறையின் கப்-சிப் தர்பாரை உருவாக்கி மக்கள் யாருமில்லாத அரங்கில் இந்தக் கூத்தை அரங்கேற்றுவதன் மூலம் இது ஜனநாயக ஆட்சியல்ல என்று அம்பலப்பட வேண்டும். இரண்டில் எதுவெனினும் அது மக்களுக்கும் சமூக மாற்ற அரசியலுக்கும் சாதகமானதே! இதுதான் மக்களை திரள் திரளாக அரசியல் படுத்தும் அரசியல் நடைமுறை. ஆளும் வர்க்க தீவிரவாத பூச்சாண்டிக்கு வாய்ப்பளிக்காமல் மக்களே தங்கள் சொந்த நடைமுறையிலிருந்து இது யாருக்கான ஆட்சி என்பதைப் புரிந்து கொள்ளச் செய்வதற்கான அரசியல் போராட்டம். இதன் போக்கில் மட்டுமே ஒரு கருத்து, சமுதாயத்தையே புரட்டிப் போடும் மாபெரும் ஆற்றலாக – புரட்சியாக மாறும் ரசவாதம் அரங்கேற முடியும். இதைக் கண்டுதான் ஆளும் வர்க்கம் குலை நடுங்குகிறது.

மாபெரும் ஓட்டுக்கட்சிகளை அசாதாரணமாகக் கையாளும் அதிகாரிகள் நமது விவசாயிகளும், தொழிலாளிகளும், மாணவர்களுமான எளிய தோழர்கள் பேசும் எளிய உண்மைகளைக் கண்டு அச்சமடைகின்றனர். அந்த வகையில் இந்த கூட்டங்களிலான நமது வினையை லெனின் கூறிய வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கலாம்- “மாபெரும் தொடக்கம்”.

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள்,
தொடர்புக்கு-9750304727

வைகுண்டராஜனை கைது செய் – HRPC ஆர்ப்பாட்டம்

1
  • தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு 8 கோடி லஞ்சம் !
  • தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு !

சி.பி.ஐ.யே கைது செய்! சொத்துக்களை முடக்கு ! எனவும் தாதுமணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தியும் மதுரை மாவட்டக்கிளை சார்பில் 10.11.2014 அன்று காலை 10.00 மணி அளவில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

vaikuntarajan-poster

உயர் நீதிமன்ற வழக்குரைஞர் லூயிஸ் “மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமான போராட்டமாகும். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாது மணலைக் கடத்திக் கொள்ளையடித்தவர் தலைமறைவாகியிருப்பதாகச் சொல்வது ஒரு நாடகமாகும். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உதவி செய்ததற்காக ஒரு அதிகாரிக்கு மட்டுமே 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், கொள்ளையின் பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். வைகுண்டராஜனை கைது செய்யவும் அவரது சொத்துக்களை முடக்கவும் போராட்டத்தை நாம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.”

வழக்குரைஞர் ராஜேந்திரன்

“ஆதாரபூர்வமான தகவல்களை சேகரித்தபின்தான் வைகுண்டராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி நடுக்கடலில் படகில் உல்லாசமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வைகுண்டராஜன் மிகப் பெரிய திருடன் மட்டுமல்ல. மிகப் பெரிய ரவுடியும் கூட. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் நடவடிக்கை எடுப்பவரின் உயிர் தங்குமா என்பது தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கொள்ளையனை, ரவுடியை காப்பாற்ற என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.”

வழக்குரைஞர் ஜெகன்

“இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அவைகளைச் சுரண்டுவதற்கும், அழிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என்கிறது உச்சநீதி மன்றம். ஆனால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்பட வில்லை. நாடு முழுவதும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையை ஆராயத் தான் சகாயம் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. ஆனால் 30 மாவட்டங்களில் ஆய்வு என்பதை மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையை மட்டுமே விசாரிக்கும் குழுவாக தமிழக அரசு சுருக்கி விட்டது. இதன் மூலம் கனிம வளக் கொள்ளையர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது தெளிவாகவே தெரிகிறது. கனிம வளக் கொள்ளை என்பது மிகப் பெரியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஆய்வு செய்யவேண்டும். அப்போது தான் பல உண்மைகள் வெளியே வரும். ஆனால் பணம் விளையாடுகிறது.”

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழர் குருசாமி வி.வி.மு. உசிலை வட்டம்

“வைகுண்டராஜன் மற்றவர்களைப் போல ஒரு சராசரி ஆள் இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 3 மாவட்டங்களில் அவனது பெயரை உச்சரிக்கவே மக்கள் பயப்படுகின்றனர். வைகுண்டராஜனை எதிர்த்த பலரும் தாக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி தனது கொள்ளையைத் தொடர்ந்துள்ளன. பெயரை உச்சரிக்கவே பயந்த தூத்துக்குடியிலும், அதன் சுற்று வட்டாரக் கிராமங்களிலும் வி.வி.முவும் பிற தோழமை அமைப்புகளும், வைகுண்டராஜனின் கொள்ளையை அம்பலப்படுத்தி போராடிய பொழுது அந்தப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்தனர். உங்களால் மட்டும் தான் வைகுண்டராஜனை எதிர்க்க முடியும் என்று பல கிராம மக்கள் எங்களைப் பாராட்டினர். எங்களோடு இணைந்து போராட முன்வந்தனர்.

தோழர் குருசாமி
தோழர் குருசாமி

இன்றைக்கு வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வருகின்றன. காவல் துறைக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஒற்றைக்கண் சிவராசன், சந்தனக் கடத்தல் வீரப்பனை சுற்றி வளைத்தவர்களுக்கு வைகுண்ட ராஜனை பிடிக்க முடியாதா? முடியாது என்றால் சொல்லுங்கள். நாங்கள் மக்களின் உதவியோடு அவனைப் பிடித்து ஒப்படைக்கிறோம். அந்த நிலைமையை காவல்துறை உருவாக்காது என்று நினைக்கிறோம்.”

வழக்குரைஞர் வாஞ்சிநாதன், உதவிசெயலர் ம.உ.பா.மையம் மதுரை

“கடந்த 20 வருடங்களாக வைகுண்டராஜன் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றார். தாது மணல் எடுத்து அணுகுண்டு தயாரிப்புக்குத் தேவையான தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட்டைப் பிரித்து, வெளி நாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளார். இது கனிமவள சட்ட விதிகளின்படி குற்றம். இது ஒரு தேச விரோத செயல். தூத்துக்குடி ஆட்சியராக இருந்த ஆசிஸ்குமார் தாதுமணல் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
வழக்குரைஞர் வாஞ்சிநாதன்

தொடர்ந்து சட்ட விரோதமாக தாது மணலைக் கடத்தி வந்த வைகுண்ட ராஜனின் கொள்ளையை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளிக் கொணர்ந்தது. தூத்துக்குடிப்பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்.

வைகுண்ட ராஜனின் கொள்ளைக்கு உதவி செய்ததற்காக தூத்துக்குடி துறைமுக கழக தலைவர் சுப்பையா IAS-க்குக் கொடுக்கப்பட்ட லஞ்சம் 7½ கோடி ரூபாய். இந்த வழக்கு 2012-ல் பதிவு செய்யப்பட்டாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று வைகுண்டராஜன் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் தலைமறைவாகி விட்டார். R.S.S. பாஜக பிரமுகர்களை தொடர்பு கொண்டு வருகிறார். இது CBIக்கும் தெரியும்.

வைகுண்டராஜன் தலைமறைவானதால் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று CBI அறிவிக்க வேண்டும். அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகுண்டராஜனைக் கைது செய்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். CBI வைகுண்டராஜனைக் கைது செய்யத் தவறினால், மத்தியிலுள்ள பஜகவும் இந்தக் கொள்ளைக்குத் துணை போவதாகத்தான் கருத வேண்டியது வரும்.”

லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம், மதுரை

“3 மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக 3 லட்சம் கோடி ரூபாக்கும் மேல் கொள்ளையடித்த மிகப் பெரிய குற்றவாளி வைகுண்டராஜன். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தார். நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட்டது. எதையும் தமிழக அரசு மயிரளவுக்குக் கூட மதிக்கவில்லை. காரணம் வைகுண்டராஜன் ஜெயா டிவியின் பங்குதாரர் மட்டுமல்ல அவர் ஜெயாவின் பினாமியாகவும் இருந்தார். ஜெயாவுக்கும் வைகுண்டராஜனுக்கும் அவ்வளவு நெருக்கம். அதனால் தான் அவரால் தொடர்ந்து சட்டவிரோதமாக தாது மணலைக் கடத்த முடிந்தது.

லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம் மதுரை
லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம் மதுரை

சுப்பையா IASக்கு வைகுண்டராஜன் கொடுத்த லஞ்சம் 7½ கோடி ரூபாய். முன்ஜாமின் மனுவுக்கு எதிராக CBI வாதிட்டதால் ஜாமின் மறுக்கப்பட்டது. எனவே வைகுண்டராஜன் தலைமறைவாகிவிட்டார். ஆடிக்காற்றில் அம்மியே பறப்பதுபோல, ஜெயாவே ஊழலில் தண்டனை பெற்று தவிக்கிறபோது வைகுண்டராஜனை கைது செய்வது பெரிய வேலை இல்லை. பாஜகவுக்கும் ஜெயாவுக்கும் உள்ள அரசியல் போட்டியில், வைகுண்டராஜனை தமிழக அரசு பாதுகாக்கிறது. ஆனால் வைகுண்டராஜனோ பா.ஜ.க வின் உதவியை நாடுகிறார். இது CBIக்கும் தெரியும்.

வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் அவர் என்ன அண்டார்டிகாவுக்கு சென்று விட்டாரா இல்லை அட்லாண்டிக் சென்று விட்டாரா? நடுக்கடலில் நவீன படகில் இருப்பதாகத்தானே செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்ய வேண்டியது தானே. இதை நாங்கள் கவனித்துக் கொண்டும் இருக்கிறோம். இதற்காக போராடிக் கொண்டும் இருக்கிறோம். ஒரு அதிகாரிக்கே 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றால், தமிழகத்துள்ள பல அதிகாரிகளுக்கு வைகுண்டராஜனால் கொடுக்கப்பட்ட லஞ்சம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும். அந்த அளவிற்கு சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் கொள்ளை நடந்திருக்கிறது.

இந்தக் கொள்ளைக்குத் துணைபோன அத்தனை அதிகாரிகளையும் தண்டனை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு ஒரு கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது. சிபிஐ பம்மாத்து செய்யக் கூடாது. தாது மணலிலுள்ள தோரியத்தைக் கடத்தி தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் விற்பனை செய்து கொள்ளையடித்த வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும். வைகுண்டராஜனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகம் முழுவதும் வைகுண்டராஜன் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று நாங்கள் அறிவிப்போம். வைகுண்டராஜன் கைதுசெய்து தண்டிக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.”

ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,ம.உ.பா.மையம் மற்றும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெண் தோழர்கள், யா.ஒத்தக்கடை சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அன்று காலை உயர் நீதிமன்றத்திற்கு வந்தவர்களின் கண்ணிலிருந்து வைகுண்டராஜன் தப்பவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முழக்கங்கள்

துறைமுக கொள்ளையனுக்கு
தாதுமணல் கொள்ளையன் பலகோடி லஞ்சம்!

லஞ்சமே பலகோடி என்றால்
கொள்ளையடித்தது எத்தனை கோடி!

தப்ப விடாதே! தப்ப விடாதே!
லஞ்ச ஊழல் பேர்வழி வைகுண்டராஜனை
தப்பவிடாதே!

கிரானைட் ஊழலுக்கு விசாரணைதாதுமணல் கொள்ளைக்கு பாதுகாப்பா?

தமிழக அரசே
பதில் சொல்!

தமிழ்நாட்டில்
அனைத்து கனிமவளக்
கொள்ளைகளையும்
தடுத்து நிறுத்து!

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ் நாடு
மதுரை மாவட்டக் கிளை.
94434 71003,98653 48163

தமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து

11

தருண் விஜயின் உண்மை முகம் பாரீர்!

tarun-vijay-vairamuthu-1“சமஸ்கிருதம்தான் இந்தியா. …சமஸ்கிருதத்தை நீக்கினால்
இந்திய உணர்வே அழிந்து விடும்…
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை…                                                    
உயர்பதவிகளைப்  பெற, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்                           
என்ற நிலைமை முன்னொரு காலத்தில் நிலவியது.
அந்நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும்.”

(தருண் விஜய், டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)

தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே,
சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே!
உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

தருண் விஜய்க்கு விழாவா? வெட்கமாயில்லை?

tarun-vijay-vairamuthu-2இருநூறாண்டுகளுக்கு முன் பார்ப்பன ஆதிக்க சக்திகளால்
அழிக்கப்பட்ட தமிழையும், திராவிட மரபையும் மீட்டுத்தந்தார்
அயர்லாந்திலிருந்து வந்த கால்டுவெல் !

தமிழால் வயிறு வளர்க்கும் சினிமாக் கவிஞன் எவனும்
அவருக்கு விழா எடுக்கக்காணோம்!

கால்டுவெல்லையும், திராவிட மரபையும் அழிப்பதையே
தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் வடநாட்டுக்காரன்
“தமிழ் ஆதரவு” என்று நடித்தால் உடனே அவனுக்கு விழாவாம்!

ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

 

கயமையில் காங்கிரசை விஞ்சும் பாஜக!

tarun-vijay-vairamuthu-3

  • ஈழத்தமிழின அழிப்புப் போரை எதிர்த்து
    அன்று  கும்பலோடு கோவிந்தா!
    இன்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து,
    சிங்களவெறி பிக்கு அநகாரிக
    தர்மபாலாவுக்கு
    இங்கே தபால்தலை வெளியீடு!
  • தமிழக மீனவர்களைக் காப்போம் எனப்பேசி
    ஓட்டுப் பொறுக்கிவிட்டு,
    தற்போது மீனவர்களுக்கு தூக்கு!
    படகு பறிமுதல், ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா என்று
    சு.சாமியின் திமிர்ப்பேச்சு!
  • இந்தி – சமஸ்கிருத திணிப்பு,
    பாடநூல்கள் பார்ப்பனமயம்..!
    கூடவே தமிழுக்கு ஆதரவு என்று
    தருண் விஜய் நடத்தும் நாடகம்!
  • இத்தனைக்குப் பிறகும்
    காவிக் கிரிமினல்களைப் பாராட்ட
    மியூசிக் அகாதமிக்குப் போகும் தமிழன்,
    இளித்தவாயனா, இனத்துரோகியா?

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆர்.எஸ்.எஸ்-ன் குருஷேத்திரம் – ஜெயமோகனின் பிருந்தாவனம்

9

வீடு, அலுவலகம், வீடு என்று எந்திரமயமான வழித்தடத்தில் வாழ்க்கையை கொடுத்திருக்கும் சென்னை மாநகரில் ஞாயிறு என்பது ஒரு தற்காலிக விடுதலை. எந்திரகதியான இயக்கத்திலிருந்து விடுபட்டு எஞ்சிய வாழ்க்கையை தொட்டுப் பார்க்க கிடைத்திருக்கும் ஒரு நாள். ஆகவே அந்த நாளை குறிபார்த்தே அனைத்து சமூக அரசியல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
நிஜபாரதமாதா கூறு போட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டு விட்ட போது பேனர் மாதாதான் அச்சமற்ற இந்துக்களின் ஒரே அடைக்கலமோ!

இதன்படி இந்த ஞாயிற்றுக்கிழமை 09.11.2014 இரண்டு முக்கிய நிகழ்வுகள். யாருக்கு முக்கியம், எதற்கு முக்கியம்? மோடி அரியணை ஏறி சங்க பரிவாரம் தனது செல்வாக்கைக் காட்ட விரும்பியதால் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு. இது முதல் நிகழ்வு. இரண்டாவது எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழா. அதுவும் வெறும் புத்தகமல்ல. மகாபாரதம். இரண்டிலுமே கிருஷ்ணன் இருக்கிறான். முன்னதில் கார்ப்பரேட் கிருஷ்ணனும், பின்னதில் கார்ப்பரேட் உலகம் இளைப்பாறும் பிருந்தாவன இலக்கிய கிருஷ்ணனும் இருக்கிறார்கள். இருவேறு நிகழ்வுகள் என்றாலும் இரு துருவ வேறு அல்ல. ஒன்றின் தொடர்ச்சி அல்லது நீட்சி .

ஆனால் தமிழ்நாட்டில் மோடி அலை சுனாமியாக வீசியதாக அருளிய ஊடகங்களின் பொய் வெளிறிப் போனாலும், அவர்களது கிராபிக்ஸ் கற்பனை இன்னமும் மறைந்துவிடவில்லை. ஆதலால், ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் விவாதமாக கொண்டு சேர்க்கப்பட்டது. பின்னது ஊடகங்களில் பேசப்படவில்லை. ஓரிரு பத்திரிகையாளர்களிடம் தொடர்பு கொண்டு ஜெயமோகன் நூல் வெளியீடு பற்றி கேட்ட போது அவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. கமல், இளையராஜா பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்த போதும், “அப்படியா, யாரையாவது அனுப்புவார்கள்” என்பதாக முடித்துக் கொண்டார்கள். பிருந்தாவனத்தின் ரசனையும், இந்திரபிரஸ்தத்தின் அரியணையும் அனைவருக்கும் அல்ல.

முன்னது மேன்மக்களுக்கு, பின்னது சாதா மக்களுக்கு……

இதனால் எதற்குப் போவது என்ற குழப்பம். மக்கள் குறித்தா, மேன்மக்கள் குறித்தா… . ஜெயமோகனின் மகாபாரதம் புத்தக வெளியீட்டு விழா எழும்பூர் மியூசியம் அரங்கில் நடக்கவிருக்கிறது என்று தெரிந்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகவும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிபதி ராமசுப்பிரமணியன் அனுமதி வழங்க உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
“அரை மணிநேரத்துல விட்டுறுவாங்கள்ள…” – அணிதிரண்ட அச்சமற்ற இந்துக்களின் கவலை!

அதுவும், முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் சார்பில் திறமையாக வாதிட்டது பற்றி நாளிதழ்களில் படித்த போது நீதித்துறையிலும் இந்து உணர்வுள்ள நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. “ஆர்.எஸ்.எஸ் போடும் காக்கி நிக்கர் யூனிஃபார்ம் அவர்களை போலீஸ் அல்லது ராணுவப் படையினர் என்று குழப்பத்துக்கு வழி வகுக்கும்” என்ற வாதத்துக்கு, “போலீஸ் இப்போது அரை நிக்கர் போடுவதில்லை, ஆர்.எஸ்.எஸ்சின் யூனிஃபார் 1920-களில் வடிவமைக்கப்பட்டதையே அவர்கள் இன்றும் போடுகிறார்கள்” என்று தெளிவுபடுத்திய நீதிபதி, “அவர்கள் லத்தி கம்புகளை ஏந்தி வரப் போவதில்லை என்று அவர்களது வழக்கறிஞர்கள் உறுதியளித்திருக்கிறார்” என்றும் கூறியிருந்தார். “ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான பொதுமக்களின் உரிமையை குறிப்பான காரணங்கள் இல்லாமல் கட்டுப்படுத்த முடியாது” என்று உச்சநீதி மன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ராமசுப்பிரமணியம்.

‘அம்மாவுக்கு’ பிணை வழங்கி லீகல் பாயிண்டுகளை உருவாக்கிய நீதித் துறை ஆர்.எஸ்.எஸ்-க்கு மட்டும் சளைத்து விடுமா என்ன? ஆனாலும் ராம சுப்பு அரசியல் சட்டத்தை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் வரலாற்றையும் கரைத்து குடித்திருக்கிறார். ஆகவே ஏப்பமும் பெருசுதான்.

எழும்பூர் செல்வதற்கான பேருந்து சொல்லி வைத்தது போல மியூசியத்தைத் தாண்டிதான் சென்றது. மேம்பாலத்தைக் கடக்கும் போது மியூசியம் தியேட்டரினுள் வெளிச்சமும் கூட்டமும் தென்பட்டன. பிருந்தாவனத்திற்கே உரிய ரம்மியத்தை அதாவது மேன்மக்கள் பங்கேற்கும் ரசனைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் அங்கே காட்சிகள் உருவாக ஆரம்பத்திருந்தன.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
“மோடியும் லேடியும் இருக்கும் போது என்ன செய்துவிடுவார்கள்” – அரைமணி நேர கைது எனும் குருஷேத்ர யுத்தத்திற்கு தயாராகும் வீர இந்துக்கள்

ஆனாலும் மியூசியத்தை தவிர்த்து விட்டு அடுத்த வரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் நோக்கியே நடையை போட்டேன். குழந்தைகள் மருத்துவமனைக்குள் அந்த நேரத்திலும் கூட்டம் தெரிந்தது. பார்த்து ரசிப்பதற்குரிய உடல்களையோ உடல் மொழியையோ அங்கிருக்கும் ஏழை பாழைகள் கொண்டிருக்கவில்லை. நூறடிதூரத்தில் பிருந்தாவனக் காட்சியில் மெய்மறந்தவர்களுக்கு இந்த மெய் நிச்சயம் எரிச்சலூட்டும்.

மருத்துவமனை வெளியே மழைத் தண்ணீரோ, சாக்கடை தண்ணீரோ தேங்கியிருந்தது. வெளியில் கிடந்த பெஞ்சுகளில் சில ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். விளம்பரம்தான் என்றாலும் ‘சுவட்ச் பாரத்’ வெளிச்சம் இங்கே எல்லாம் வருவதற்கு வாய்ப்பில்லை.

சாலையைக் கடந்து ருக்மிணி லட்சுமிபதி சாலையில் திரும்பும் இடத்தில் தடுப்பு வைத்து மறித்திருந்தார்கள். ஒரு பெரும் போலீஸ் படையே நின்றிருந்தது. அதிக ஆள் நடமாட்டமே இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் போல அரை டவுசர் அணிந்த யாரும் நடமாடுவது போல தெரியவில்லை. போலிசு படை யாரிடமிருந்து யாரை பாதுகாக்க இவ்வளவு குவிக்கப்பட்டிருக்கிறது? குஜராத்திலும், கோவையிலும் காக்கி சட்டை நிறுவனம், காக்கி பேண்டின் பாக்கெட்டில் பஞ்சாமிர்தம் அருந்திக் கொண்டே சா (Saw)வரிசை படங்களை பார்த்ததோ இயக்கியதோ நினைவுக்கு வந்தது.

வழியில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் மாலை நேர பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அதற்குள் மக்கள் நிரம்பியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் போடும் போதும் அருகிலேயே ஆமென் சொல்வதை சாத்தியப்படுத்திய தந்தை பெரியாரின் தமிழக மண் கொஞ்சம் பெருமை அளித்தது. ஆனாலும் இது எத்தனை நாளைக்கு? சிலுவைக் கோவிலை சிவன் கோவிலென இடிக்கவும், பேசவும், அதற்கு தத்துவ விளக்கம் கொடுக்கவும் கூடிய கோமான்கள் எழும்பூர் மியூசியத்தில் இருக்கும் போது பெரியாரின் நினைவு மட்டும் என்ன சாதிக்கும்?

ரோட்டின் ஒரு புறம் வரிசையாக மாநகர போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 32-க்கும் குறையாத பேருந்துகளை வாடகைக்குப் பிடித்து வந்திருக்கிறார்கள். ஒரு பேருந்தில் 40 பேர் வைத்தாலும் 1,200 பேருக்கும் அதிகமான கூட்டம். ஒரு கோடிப் பேர் வாழும் சென்னையில் ஒரு ஆயிரம் பேர்தான் இந்து ஞான மரபின் மானம் காக்க குழுமியது ஷத்திரிய இந்துக்களுக்கு நிச்சயம் வருத்தம் அளித்திருக்கும். ஆனால் எழும்பூர் மியூசியத்தில் 500 பேர் கூடியிருந்தார்கள் என்றால்  அது பிராமண இந்துக்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும். என்ன இருந்தாலும் ஊர்வலம், தடை, சிறை என்றால் அது சூத்திர-பஞ்சம இந்துக்களின் கடமை அல்லவா?

ஆர்.எஸ்.எஸ் பேரணி
தமிழிசை ரொட்டுல உக்காந்தாதான் சூத்திர சுயம்சேவக்குகள் அடுத்த தேர்தல்ல ஓட்டு கேக்க வேலை செய்வாங்க! ஆனாலும் தியாகம் தியாகம்தான்.

மைதானத்தை நெருங்க நெருங்க போலீஸ் கூட்டம் நிறைய தெரிந்தது. மைதானத்துக்குள் போகும் வழியில் பலர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். “என்ன மீட்டிங் முடிந்து விட்டதா” என்று கேட்டதும் “இல்ல, இல்ல இன்னும் நடக்குது” என்று மலையாளம் கலந்த தமிழில் பதிலளித்தார். கம்யூனிச வாடை உள்ள சேட்டன்கள் சென்னை டீக்கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இந்து தர்ம வாசனை உள்ள மலையாளிகள் சங்க பரிவார அணிவகுப்பிற்கு வந்து சேர்ந்ததும் பொருத்தமானதே.

உள்ளே போய் பார்த்தால், ஒரு 1,000 பேர் இருப்பார்கள். அதில் பாதி பேர் காக்கி அரை நிக்கர் போட்டவர்கள். சிறு சிறு கும்பல்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். அரை நிக்கர் போட்டு, தலையில் கூம்புத் தொப்பியும் (ஆர்.எஸ்.எஸ் சீருடை) வைத்திருந்த ஒருவரைச் சுற்றி ஏழெட்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். தேசத்தை கட்டியமைப்பது, அன்னியரை விரட்டியடித்தல் என்று பேசிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால், “வேன் வந்தா நம்ம வேனான்னு பார்த்து ஏறணும். எல்லாரும் ஏறிட்டாங்களான்னு பார்த்துக்கணும்” என்று ஊருக்கு போகும் பிரச்சனையை பேசிக் கொண்டிருந்தார்கள். இந்து தர்மம் காக்கத்தான் என்றாலும் இல்லற தர்மம் காக்க ஊர் போய் சேரவேண்டுமல்லவா?

மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்து சோகையாக பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவேளை ஊர்வலம் தடை என்பதால் ஏற்பட்ட சோகப் பெருக்கின் காரணமாகவா அந்த சோகை? ஆனால், மைக்கில் ஒருவர் பாடுவது மட்டும்தான் சத்தமாக வந்தது, 1,000 பேர் கூடிய கூட்டத்தில் ஏழெட்டு பேர் கூட கோரஸ் பாடவில்லை.

மைக்காரர் “சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, கிராமம் அனைத்தும் தவபூமி” என்று உணர்ச்சியை பொழிய முயற்சித்து பாடிக் கொண்டிருந்தார். வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தார். மைக்கின் குறையா அல்லது அவரது குரலின் குறையா என்று தெரியவில்லை. கூடியிருந்த 99% பேர் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தவபூமியான கிராமங்களை அழிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை பாஜக ஏற்றுக் கொண்டு காங்கிரசுக்கு போட்டியாக அமல்படுத்தும் போது அங்கே சந்தனம் புழுதியாக மணக்கிறது என்பதை எந்த இந்துதான் ஏற்பான்?

ஆர்.எஸ்.எஸ் பேரணி
எத்தன மணிக்கு ஊருக்கு போவோம்! நம்ம வண்டி எங்க நிக்குது?

ஆர்.எஸ்.எஸ் சீருடை போட்டிருந்த ஒருவர் தன்னந்தனியாக, பரிதாபமாக உட்கார்ந்திருந்து பாடல் வரிகளை திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். உலகின் வாழ்க்கையும், உணர்ச்சியும் எங்கே போய்க் கொண்டிருக்கும் போது புராதன இனக்குழுவின உணர்ச்சிகளும், ஆரம்ப கால சொத்துடமை ராஜ்ஜியங்களின் ராஜதந்திரமும் மோதிக் கொள்ளும் பாரதத்தை பத்து வருடம் தனியாக சொல்லப் போகும் ஜெயமோகனைப் போலத்தான் இவரா? இல்லை யார் வந்தாலும் எங்களது சாதகத்தை விடமாட்டோம் என்று உறுதியேற்கும் முன்குடுமி வைத்து முன் கோப நம்பூதிரிகளின் இலட்சிய மாதிரிகளா?

சற்று தொலைவில் 4 இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு பையன் ஸ்மார்ட் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். அதனால் என்ன, இதெல்லாம் அந்தக் காலத்தில் மகாபாரதத்தில் கண்டுபிடித்த கருவிகள்தானே? இல்லை வெண்முரசைத்தான் ஸ்மார்ட் போனில் படிக்க முடியாதா?

“என்ன மீட்டிங் எதுவும் இல்லையா, பாட்டா பாடிக்கிட்டு இருக்காங்களே”

“மீட்டிங் இல்லை, இது பேரணி. அது எல்லாம் முடிஞ்சாச்சு, எங்கள இப்ப அரெஸ்ட் பண்ணியாக்கும் வெச்சிருக்கு”

“ஏன்?”

“கோர்ட்ல அனுமதி கொடுத்த பொறகும், பேரணிக்கு கிளம்பியதும் எல்லாத்தையும் பிடிச்சி இங்க அடைச்சிட்டாங்க, சுத்தி பாருங்க போலீசு நிக்கிறாங்கள்ள”

“அப்படின்னா எல்லாரும் புழல் சிறைக்கு போவாங்களா?”

“அதெல்லாம் இல்லை, இப்போ விட்டுருவாங்க. ஆனா, இத வச்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கூட போடலாமோ. நம்ம மாநிலத்திலதான் ஒரு முதலமைச்சர் இருக்கே, அவங்களுக்கு இந்துக்கள்னாலே பிடிக்காது. இந்து ஓட்டு வேண்டாமாம், அதான் தடை பண்ணிட்டாங்க. இனி பாருங்க நல்ல வளர்ந்திருவோம்.”

கவனியுங்கள் ஒரு இந்து பரிவார தொண்டரின் உத்தி இந்துக்களின் ஓட்டுக்களைத்தான் குறி வைக்கிறது. அப்படி ஓட்டுக்களை வாங்கி ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் சங்கபரிவாரங்கள் ஒருபுறம். மறுபுறம் இந்து மேன்மக்கள் இளைப்பாறும் பிருந்தாவன கதாகலாட்சேபத்தை ஜெயமோகன் நடத்துகிறார். இதுதான் இந்து தர்மத்தின் “கேயாஸ் தியரியோ?”.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
ராஜராஜசோழன் பெயரை போட்டே ஆயிரம் பேருதானா! இதுக்கு ரஜினி போரை போட்டா கூட ரெண்டு ஆயிரத்தையாவது தேத்தலாமே!

சட்டையில் ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000-வது ஆண்டு விழா என்ற பேட்ஜ் அணிந்திருந்தார், அந்தத் தொண்டர்.

“ராஜேந்திர சோழன் முடிசூட்டு விழாவுக்குத்தான் இந்த பேரணியா”

“ஆமா, ஆனா தமிழ்நாட்டில யாருக்கும் அந்த மன்னர புடிக்காதாம். ஏன்னா, அவருதான் இந்துமதத்தை வளர்த்தாராம்.”

பரவாயில்லையே, இந்த இடத்தில் தமிழ் ஆர்.எஸ்.எஸ் அதாவது தமிழினவாதிகளும் இந்தி(து) ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரு மாதிரியாகத்தான் சிந்திக்கின்றது.

“நீங்க எல்லாம் எந்த ஊரு, எத்தனை வருசமா ஆர்.எஸ்.எஸ்ல இருக்கீங்க”

“கன்னியாகுமரில மார்த்தாண்டம். எங்க ஊர்ல எல்லாரும் ஆர்.எஸ்.எஸ்தான்”

“நீங்க யூனிஃபார்ம் போடலையா?”

“நாங்க கொண்டு வரலை. அதான் எங்களை இங்க வச்சிருக்காங்க. நாங்கெல்லாம் வரலைன்னா எல்லாரையும் ஜெயிலுக்கே கொண்டு போயிருப்பாங்க. இவ்வளவு பேர் இருக்கறதாலதான் இங்க வைச்சிருக்காங்க”

பரவாயில்லை ஆயிரம் பேருக்கே காவல் துறை பயப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். எனில் குஜராத்தில் காவல் துறை ‘பயந்து’ போய் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு போட்டியாக வேலை செய்வதும் நியாயம்தான்.

“அப்படியா, படிக்கிறீங்களா, வேலை செய்றீங்களா”

“இங்கதான் ஏர்போர்ட்ல வேலை செய்றோம். பெருங்குடில தங்கியிருக்கோம்”

“ஓ, கெவர்ன்மெண்ட் வேலையா”

“இல்ல, இல்ல ஒரு காண்டிராக்டர் வேலைதான்”

ஆர்.எஸ்.எஸ் பேரணி
வேனிலும் கிருஷ்ணன், வெண்முரசிலும் கிருஷ்ணன், குருஷேத்ரத்திலும் கிருஷ்ணன்!

“ஏன் ஊரை விட்டு இங்க வேலைக்கு வாரீங்க. அதுவும் உங்க கன்னியாகுமரி எம்.பி அமைச்சாரகவும் இருக்காரு. மோடியும் மேக் இன் இந்தியான்னு ஊரு பூராவும் தொழிற்சாலையா கட்டி குவிக்கப் போறாருன்னு பேசுறாங்களே?”

“எங்க ஊருக்கு அதெல்லாம் வராது, புல்லட் டிரெயின் இருக்குல்ல, அத கன்னியாகுமரி வர கொண்டு வரதுக்கு முயற்சி பண்றாங்களாம்”

அடேயப்பா, பூனா – அகமதாபாத் புல்லட் டிரெயினுக்கே 50,000 கோடி என்றால் காசி – கன்யாகுமாரிக்கு நிச்சயம் 50 லட்சம் கோடி செலவாகும். ஆகட்டுமே, இனி விஷ்ணுபுரவாசிகள் சடுதியில் புல்லட்டில் வந்து பிருந்தாவன நிகழ்வுகளை அடிக்கடி நடத்தலாம்.

“இன்னைக்கு இங்கயே பக்கத்துல மகாபாரதம் புத்தகம் வெளியீட்டு விழா நடத்துகிறாங்களே, அது பத்தி தெரியுமா”

“தெரியாதே”

“ஜெயமோகன், உங்க மாவட்டத்துக்காரருதான். மகாபாரதத்தை 4 புத்தகமா எழுதியிருக்கிறாராம். அதை வெளியிடுகிறார்கள்”

“அப்படியா, தெரியாதே”

என்ன செய்வது சூத்திர இந்துவுக்கு விதிக்கப்பட்ட அறிவுத் தேடலில் பார்வதிபுரத்து கடாட்சம் இருக்குமென்பது யாராவது எதிர்பார்த்தால் அது அநீதி!

ஆர்.எஸ்.எஸ் பேரணி
குருஷேத்ர யுத்தத்திற்காக தரையில் சூத்திர இந்துக்கள்! சாணக்கிய தர்மத்திற்காக பிருந்தாவன குஷன் சேர்களில் சாத்திர இந்துக்கள்!

இதற்கு மத்தியில் அரை நிக்கர் யூனிஃபார்ம் போட்ட ஏழெட்டு பேர் அணிவகுப்பு நடத்த முயற்சித்திருந்தார்கள். “ஏக், தோ ” என்று இப்படி அப்படி கொஞ்சம் நடந்தார்கள். வரிசையும் இல்லை விறைப்பும் இல்லை. இதற்கு மானமிகு வைகோவின் கருஞ்சட்டை படை கூட பரவாயில்லை. அதனால் என்ன கூட்டணி தளபதி எனும் முறையில் கலிங்கத்து புயலை கமலாலயம் பக்கம் கொண்டு வந்து பயிற்சி எடுத்தால் போயிற்று!

“வேன் வந்ததும், தங்களோடு கூட வந்தவர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா என்று பார்த்து விட்டு ஏறவும்” என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். சரி கூட்டம் கலைய ஆரம்பித்து விட்டது என்று வெளியில் வர முயற்சித்தேன்.

ஒருவர் தொலைபேசியில், “அரெஸ்ட் ஆயாச்சு, இங்க ஸ்டேடியத்தில வச்சிருக்காங்க, பாதி பேர சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு கொண்டு போயிருக்காங்க” என்று சீரியசாக பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு அம்மா, தொலைபேசியில், “ஆமா, ஒரே குழப்பம், கணவர் ஒரு இடத்தில், மனைவி ஒரு இடத்தில்னு ரெம்ப கஷ்டம்” என்று யாரிடமோ புலம்பிக் கொண்டிருந்தார்.

சென்னை  நகரின் ரம்மியமான நவம்பர் மாதத்தில் நடக்கும் இந்த செல்லக் கைதுக்கே இத்தனை புலம்பல் என்றால், காஷ்மீரில், குஜராத்தில், முள்ளிவாய்க்காலில் அலறும் சோகங்கள் இவர்கள் காதில் வெறுப்பாக விழத்தானே செய்யும்? அது வெறுப்பல்ல, விவேகம், வாழ்வின் அடிமுடி அறியாத தேடல் மாரத்தான் என்று தத்துவ விளக்கம் சொல்ல எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
ராஜஸ்தான் தலைப்பாகையுடன் வந்திருக்கும் சேட்டு இந்துக்கள், வேடிக்கை பார்க்கும் தமிழ் இந்துக்கள்!

மியூசியம் நோக்கிப் போகும் சாலையில் அரை நிக்கர் யூனிஃபார்ம் போட்ட 2 பையன்களும், இன்னொருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தனர். வேகமாக போய் அவர்களை எட்டிப் பிடித்து விசாரித்தேன்.

“ஆமாங்க, எல்லாத்தையும் அரெஸ்ட் பண்ணி வச்சிட்டாங்க” என்று தளர்ந்து போய் கூறினார், அந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தந்தையானவர்.

“ஏன், என்ன விஷயமாம். கோர்ட்லதான் உத்தரவு வாங்கியாச்சாமே” என்று கேட்டதும்,

“ஆமா, அது கொடுத்திருக்காங்க. ஆனா, இன்னைக்கு காலையில 11 மணிக்கு வடபழனில ஏதோ கட்சி பிரச்சினை பண்ணினாங்களாம். அதுதான் டிவில எல்லாம் பிளாஷ் நியூசாம். அதான் பேரணியை தடுத்து அரெஸ்ட் பண்ணி வச்சிட்டாங்க”

இங்கே அவர் சொன்னது மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வடபழனியில் நடத்திய ஆர்ப்பாட்டம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அல்லவா?

“நீங்க எந்த ஊரு, என்ன செய்றீங்க”

“இங்க அயனாவரம்தான். வெயிங் மெசின் சர்வீஸ் பார்க்கிறேன்”

“தினமும் ஷாகா போவீங்களா”

“தெனம்லாம் யாருங்க போக முடியும். ஞாயித்துக் கிழமைகள்ள போவோம். காலையில 6 மணியிலருந்து 8 மணி வரை உடற்பயிற்சி, பாட்டு எல்லாம் நடத்துவாங்க” என்றார்.

வெண்முரசு நூல் வெளியீடு
விஜய்டிவியில் வெண்முரசு நிகழ்வு! பாபநாசமா கொக்கா!

பரவாயில்லை இனி நித்தம் ஷாகா போகாமலே ஆர்.எஸ்.எஸ் படையில் சேர முடியும். இந்த விதி பிருந்தாவனத்திற்கும் உண்டு. பங்குச்சந்தை குறித்து அசைபோடும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதலாளியே, ஜெயமோகனின் வெண்முரசை சிலாகிக்கிறாரில்லையா?

எனினும் இந்த சூத்திர இந்துவுக்கும் வெண்முரசு கூட்டம் குறித்தும், ஜெயமோகன்  பற்றியும் தெரியவில்லை. அது பிரச்சினையில்லை. இல. கணேசனும், வானதி சீனிவாசனும் படித்து திளைக்கும் ஜெயமோகன் மகாபாரதத்தை ஒரு சாதா இந்து படித்தால் அதன் தரம் என்னாவது? இல்லை படித்தால்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா?

சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம். ஊர்வல புராணம் முடிந்து விட்டது. புத்தக வெளியீட்டு விழாவையும் பார்த்து விடுவோம் என்று மியூசியம் வாயிலுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது, இணைய உலகின் இந்து ஞானமரபு கனவான்களான ஜடாயு, ஹரன் பிரசன்னா, பத்ரி போன்ற ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் பேரணியில் கலந்து கொண்டு கைதாகியிருப்பார்களா அல்லது கமல்ஹாசனையும், இளையராஜாவையும் பார்க்க புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பார்களா என்ற சந்தேகம் வந்தது. நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத்தான் போயிருப்பார்கள் என்று நினைத்தால் பின்னர் புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்களில் அவர்கள் தெரிந்தார்கள்.

வெண்முரசு நூல் வெளியீடு
மோடிக்காக தெருவில் இறங்கி பெருக்கிய உலகநாயகன், ஜெயமோகனுக்காக மேடையில் ஏறி வார்த்தைகளால் குளிப்பாட்டுகிறார்! களத்திலும் கருத்திலும் கமல்!

அதுவும் ஒரு குறையல்ல. பிருந்தாவனத்தில் இளைப்பாறும் மேன்மக்கள்தான் சாதா இந்துக்களை அணிதிரட்டி ஆடவைத்து ஆட்சியை கைப்பற்றும் சாதுர்யம் படைத்தவர்கள். அவர்களைப் போய் போர்க்களத்தில் அதுவும் அரைமணிநேர கைது விவகாரத்தில் சிக்கவைக்க நினைப்பது பெருங்கேடு!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்த விவகாரம் ஊடகங்களில் பிரம்மாண்டமாக விவாதிக்கப்பட்ட போது வெண் முரசுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லையா என சிலர் கேட்கலாம்.

பாபநாசம் படத்திற்கு ஒரு பிரமோசனாக வெண்முரசு விழாவை விஜய் டீவியில் போடுவதற்கு உலக நாயகனும், உலக ஊடக அதிபர் முர்டோச்சின் தமிழ் தரகர்களும் பேசி முடித்து விட்டார்கள். ஆக படத்துக்கு படம், இலக்கியத்துக்கு இலக்கியம்.

ஆனால் இந்த சாமர்த்தியம் இவ்விதமாக மட்டும் புரிந்து கொண்டிருக்க யாராலும் முடியாது. ஏனெனில் விழாவில் பேசிய கமல் ஜெயமோகனை புகழ்ந்து தள்ளியதை பார்த்தால் இங்கே படைப்பாளி அல்லவா சிங்கம் என்று தோன்றும். ஆனால் அந்தப் பணிவும் இந்த மார்க்கெட்டிங்கையும் பார்த்தால் இது இதுதான் உண்மையான மகாபாரதத்தை புரிந்து கொள்ள வேண்டிய இடம். மற்றபடி இது விஷ்ணுபுரத்தின் தலைமறைவு உறுப்பினரானா நீயா நானா ஆன்டனியால் நடந்தாக நினைத்தாலும் குற்றமில்லை. விசயம் நடப்பதுதான் முக்கியம். யாரால் என்று யாராவது பேசிக் கொள்வது பிரச்சினை அல்ல.

வெண்முரசு நூல் வெளியீடு
சூத்திர இந்துக்களை இயக்கும் சாத்திர இந்துக்கள், வெண்முரசு கொட்டிய வெற்றிகரமான தருணத்தில்! இந்த சிந்தனை குழாமில் யார் யாருக்கு மோடியின் ஜாக்பாட் கிடைக்கும்?

ஆகையால் கமல் மோடியின் ‘சுத்த’ இயக்கத்தில் மனமுவந்து கலந்து கொண்டிருப்பதையும் பார்த்தால் பிருந்தாவனமும், இந்திரப்பிரஸ்தமும் ஏற்கனவே ஒரு அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

எனினும் தமிழகம் முழுக்க ஒரு 5,000 சூத்திர பஞ்சம இந்துக்கள் கூட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தயாரில்லை எனும் போது, பத்துவருட மகாபாரத தவத்தின் கூடவே பத்து இலட்சம் இந்துக்களை சேர்ப்பதற்கும் முயல வேண்டும்.

கைது எபிசோடை முடித்துக் கொண்ட வானதி சீனிவாசன் அவசரம் அவசரமாக ஜெயமோகன் நிகழ்வில் கலந்து கொண்டதை பார்க்கும் போது மேற்சொன்னது சரிதான் என்று தோன்றியது.

மேலதிகமாக சென்ற தேர்தலின் போது எழுத்தாளர் ஜெயமோகன், தானைத்தலைவர் மோடியை ஆதரித்ததாக வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் வானதி சீனிவாசன்! இதை வெண்முரசு வேந்தரும் மறைமுகமாகக் கூட மறுக்கவில்லை.

பிறகென்ன, கிருஷ்ணன் சாமர்த்தியமாக சிரிக்கிறான்.

–    அப்துல்

அல்லேலுயா x கோவிந்தா உலகப் போர் – பாகம் 3

10

டந்த முறை எங்கள் ஊருக்கு சென்ற போது அங்கு கோவிந்தா கோஷ்டிக்கும் அப்பொழுது  புதிதாக வந்திருந்த அல்லேலுயா கோஷ்டிக்கும் நடந்த சண்டைகளை பற்றி  சொல்லி இருந்தேன். பல மாதங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு சென்ற போது “கோவிந்தா vs அல்லேலுயா”வாக இருந்த சண்டை இந்த ஒரே வருடத்தில் “கோவிந்தாக்”கள் vs “அல்லேலுயாக்”கள் ஆக வளர்ந்திருந்தது. இது முதல் அதிர்ச்சி; எங்கள் ஊரில் அல்லேலுயா கூட்டத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் சமீபத்தில் திருபெரும்புதூரில் இழுத்து மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை என்பது இன்னொரு அதிர்ச்சி.

ஆமாம் நம்புங்கள், சாட்சாத் பின்லாந்து நிறுவனமான நோக்கியாவே தான்.

hallelujah-govinda-2திருபெரும்புதூர் சிப்காட்டிற்கு சில கிலோமீட்டர் பக்கத்தில் இருக்கும் எங்கள் ஊரில் இருந்து நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தவர் கணேசன். இவர் பன்னிரண்டாவது வரை படித்திருக்கிறார். தந்தை இல்லை. கல்லூரிக்குக் கூட போகாத தன் மகன் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலைப் பட்டு வந்த கணேசனின் அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்தது புதிதாக வந்த நோக்கியா தொழிற்சாலை. கணேசனுக்கு மாத சம்பளம், சீருடை எல்லாம் கொடுத்து அவன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்தது நோக்கியா. அந்த புதிய அத்தியாயம் குறை அத்தியாயமாக கலைந்து விடும் என்று பாவம் அந்த அப்பாவி அம்மாவிற்கு தெரிந்திருக்கவில்லை.

கணேசன் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்று அதோடு கொஞ்சம் கடன் வாங்கி வீட்டை கட்டினான். ஒரு லோன் போட்டு பைக் எடுத்தான். மாதத் தவணைகள் போக மிச்சம் இருந்த ஊதியத்தில் குடும்பம் ஓடியது. அடுத்து கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தான். ஆனால், அப்போதுதான் அவன் தலையில் இடி இறங்கியது.

தொழிலாளர்கள் மத்தியில் நோக்கியா நிறுவனம் மூடப்படப் போகும் தகவல் அரசல் புரசலாக பரவத் தொடங்கியது. கணேசன் வேலை செய்த யூனிட் தான் முதல் பலி. கிட்டத்தட்ட வேலை போகப் போவது உறுதியாகிவிட்டது. மாதத் தவணைகள், கடன், வட்டி, எதிர்காலம் என அனைத்தையும் குறித்து கணேசன் கவலைப்படத் தொடங்கினான். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த நிலை; கணேசனின் அம்மாவுக்கு. மெல்லச் சீராகி வந்த தங்கள் நிலமை மீண்டும் பழைய ஏழ்மைக்கே திரும்ப போகிறதே என்று கவலை. கும்பிட்ட கடவுள் தன்னை கைவிட்டு விட்டதே என்று புலம்ப தொடங்கினார். அப்போதும் இல்லாத கடவுளை மட்டுமல்ல, சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் நம்பக் கூடாது என்று அவர் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.

வினவையே சுற்றி வரும் அறிஞர் பெருமக்களுக்கே மறுகாலனியாக்கத்தின் தாக்குதல் பூமாலையாக தெரியும் போது அந்த அபலை அம்மாவின் அவலத்தை போக்கும் அறிவு யாருக்கு இருக்கும்?

அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்த நம் அல்லேலுயா கோஷ்டியைச் சேர்ந்த கிறிஸ்டி அலயஸ் திரிபுரசுந்தரி அக்காவிடம் கணேசனின் அம்மா புலம்புவது வழக்கம். அந்த அக்காவோ கணேசனின் அம்மாவிடம் மெல்ல கிறிஸ்துவின் மகிமைகளை பற்றியும் ஜபத்தை பற்றியும் விளக்கத் தொடங்கினார், நம் கிறிஸ்டி (இனிமேல் அலயஸ் இல்லை). கணேசனின் தாய்க்கு முதலில் இதில் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை. ஆனால் கிறிஸ்டியும், நம் அல்லேலுயா ஃபாதரும் தொடர்ந்து பேசி வந்தார்கள்.

“அம்மா, ஒரு 500 ரூபாய் தான் செலவாகும், உங்கள் வீட்டில் ஒரு ஜபக் கூட்டம் வைக்கலாம், உங்கள் மகன் வேலை போகாமல் இருக்க கர்த்தரை கும்பிட்டு ஜபம் செய்தால், கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் மகனையும் காப்பாறுவார்” என்று ஃபாதர் வற்புறுத்தத் தொடங்கினார்.

கணேசனின் அம்மாவிற்கு முதல் பயம், ஊரில் இருப்பவர்கள் தன்னை ஒதுக்கிவிட்டால்? ஏற்கனவே கிறிஸ்டி வீட்டில் நடந்த கோவிந்தா vs அல்லேலுயா சண்டைகள் பற்றி தெரியும். ஆனால், நம் அல்லேலுயா ஃபாதர் ஜகஜால கில்லாடி ஆயிற்றே. அவர் தன் ஜபத்தால் மேன்மை அடைந்தவர்கள் என ஒரு பட்டியலை கொடுக்க தொடங்கினார், “செட்டியாருக்கு ஜபத்தால் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைத்தேன், கிறிஸ்டியின் கணவருக்கு எலும்பு முறிவை ஜபத்தால் குணமாக்கினேன், பக்கத்து தெரு சிவாவுக்கு ஜபத்தால் வட்டி தொழிலில் லாபம் வர வைத்தேன்” என அடுக்கத் தொடங்கினார். விட்டால் அம்மாவுக்கு புதுதில்லியில் ஜாமீன் வழங்கியதே ஏசு பெருமான்தான் என்று கூட சொல்வார்.

கணேசனின் அம்மாவிற்கு மனது கரையத் தொடங்கியது. ஜபத்திற்கு இசைந்தார். முதலில் 500 ரூபாய்க்கு ஒரு ஜபம் என்று ஆரம்பித்த ஃபாதர் மெல்ல ஜபக் கூட்டத்தையும் கட்டணத்தையும் அதிகமாக்கி விட்டார்.

“என்ன கணேசா நீ வேலை போகும் என்று சொல்லி 2 மாதம் ஆகிறது, இன்னும் உன் நிறுவனத்தில் அதைப் பற்றி பேச்சே இல்லை பார்த்தியா? எல்லாம் ஜபத்தின் மகிமை, உனக்கு பயமிருந்தால் சொல் இன்னொரு ஜபம் செய்து விடலாம், உன் வேலை உறுதியாகிவிடும்” என ஜபங்கள் வார வாரம் தொடர்ந்தன, ஒவ்வொன்றும் 500 ரூபாய் செலவில்.

நோக்கியா நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை அதிகாரிகள் பிரச்சனை வராமல் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதை பற்றி திட்டமிட எடுத்துக் கொண்ட நேரத்தை நம்ம ஃபாதர் காசாக்கி விட்டார்.

ஒரு நாள் சுபயோக சுபமுகூர்த்த தினத்தில், மூன்று மாதம் சம்பளம், பிஎஃப், இன்னும் கொஞ்ச பணம் கொடுத்து நோக்கியா நிறுவனம் கணேசனை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. நடுத்தெருவில் விடப்பட்ட கணேசனின் வாழ்க்கைக்கு ஈடாக கிடைத்த மூன்று மாத சம்பளம், பிஎஃப் விஷயத்தைப் பற்றி கணேசன் வீட்டுக்கு வந்த ஃபாதர் கேட்டுக் கொண்டார். வேலை போனதை பற்றிய செய்தி சற்றே அதிர்ச்சி; உடனே சுதாரித்தார், “கணேசா பணத்த கம்பேனி கொடுக்கல, நம்ம உண்மைய பண்ண ஜபம், கர்த்தர், உன் கஷ்டங்களுக்கு மனமிறங்கி உன் கம்பனி ஓனர் மனச மாத்தி உனக்கு இப்படி பணம் வர ஏற்பாடு பண்ணியிருக்கார். கர்த்தருக்கு தான் நன்றி சொல்லனும்” சொல்லி வைப்போம் என்று ஃபாதர் அடித்துவிட்டது உண்மையில் வேலை செய்துவிட்டது. கணேசனும் அவன் அம்மாவும் கர்த்தரின் மகிமையில் உருக அவரின் ஆட்டுக் குட்டியாகி விட்டார்கள்..

வந்த பணத்தில் பத்து சதவீதத்தை சர்ச்சுக்கு நன்கொடையாக கொடுக்கக் கோரினார் ஃபாதர். இல்லை, இல்லை ஆணையிட்டார். நடந்தது. கணேசனை ஒரு பெட்டிக் கடை போடச் சொன்னார், இனி தவறாமல் ஜபம் செய்யவும், மாதம் குறிப்பிட்ட அளவு நிதியை கர்த்தருக்கு அளிக்கவும் செய்தால் கணேசன் பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் என அல்லேலுயாவில் சேர்த்து விட்டார்.

கணேசனின் ஜபம், திடீரென வந்த பணம் எல்லாம் கிறிஸ்டி, கணேசன், கணேசன் தாயார் , ஃபாதர் மூலம் ஊர் முழுவதும் பரப்பப்பட்டது. ஊரில் பலரும் கடன் தொல்லை, விவசாய பிரச்சனை, வரதட்சணை பிரச்சனை, வருமானத்தை பெருக்கிக் கொள்ள என்ற பல பிரச்சனைகள் மற்றும் ஆசைகளை தலையில் போட்டு குழம்பியபடி உட்கார்ந்திருப்பதை பார்த்த ஃபாதர் பல புதிய ஜபங்களை அறிமுகப்படுத்தி விட்டார்.

100 ரூபாய்க்கு ஒரு ஜபம்- இது குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க, 300 ரூபாய்க்கு ஒரு ஜபம் இது தொழிலில் லாபம் வர, 500 ரூபாய்க்கு ஒரு ஜபம் இது கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க, குழந்தை பாக்கியம் இன்ன பிற இல்லற பிரச்சனைகள் தீர, 1000 ரூபாய் ஜபம் நோய்கள் தீர, 5000 ரூபாய் ஜபம் கேன்சர், இதய நோய்  மாதிரியான் கொடிய நோய்களில் இருந்து குணம் பெற என்று ஜபபட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

முதலில் இதனால் பாதிக்கப்பட்டது எங்கள் ஊரில் இருந்த விநாயகர் கோவில் ஐயர்தான், கோவிலுக்கு வரும் பெண்கள் கூட்டம், சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் டல்லடிக்கத் தொடங்கின. அவர் தான் ஊரில் மெல்ல இந்த பிரச்சனையைப் பற்றி ஆரம்பித்து வைத்தார்.

“சரஸ்வதி, மகாலட்சுமி, மழைக்கு ஒரு கடவுள், வெயிலுக்கு ஒரு கடவுள், நோய் தீர்க்க ஒரு கடவுள், என்று முப்பத்து முக்கோடி தேவர்கள் நம் மதத்தில் இருக்கிறார்கள், எனக்கு எல்லாரையும் குளிர்விக்கும் மந்திரங்கள் தெரியும், வேதம் தெரியும், சாஸ்திரங்கள் தெரியும். எல்லாம் இருந்தும், இவர்கள் ஏன் ஒத்த ஜீசஸ் பின்னாடி அலையறாள்? கலி முத்திடுத்து, கலி முத்தினா இப்படித் தான் தெய்வங்கள நிந்திச்சு, ஒருத்தர ஒருத்தர் வெட்டிண்டு சாவப் போறா, ஆனால் நான் இருக்கும் போதேவா அந்தக் கொடுமைகள் இந்த பூமிக்கு வரணும்” என்று கோவிந்தா கோஷ்டிகளை உசுப்பேத்தினார்.

“நாம சுத்தபத்தமா இருக்கோம், நாள் கிழம பாக்கிறோம். ஆனா, ஊரில சோம்பேறிங்க அதிகமாகிடுத்து. குளிக்காம கொள்ளாமா சர்ச்சுக்கு போகலாம், எத வேணா போட்டுக்கலாம், எப்ப வேணாம் கறி தின்னலாம், அதுக்கு அலையற ராட்சஸ ஜென்மங்கள் நம்ம மதத்த கேவலப்படுத்துதுகள்” என கண்ணீர் வடித்தார்.

வீடுகளில் சண்டைகள் அதிகமாகிவிட்டன. இதில் முதல் பலி குழந்தைகள், பல குழந்தைகளுக்கு இரண்டு பெயர்கள், குடியானவர்கள் தெருவில் ஒரு குழந்தைக்கு பெயரே வைக்கவில்லை, சண்டை போய் கொண்டிருக்கிறது. வீடுகளில் இரண்டு பூஜை அறைகள்.

காலையில் சத்தமாக சுப்பிரபாரதம், அதை விட சத்தமாக கிறிஸ்து பாடல்கள். சிறுவர்களுக்கு பரீட்சை என்றால் ஒரு கோஷ்டி கோவிலில் அர்ச்சனை என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடுகிறது, மறு கோஷ்டி வீட்டில் அதிக மார்க் எடுக்க ஜபம் வைக்கிறது, பிள்ளையை படிக்க விடுவதில்லை.

பண்டிகைகள் என்றால் பெரும் தலைவலி. தீபாவளிக்கு மறுநாள் நோம்பு செய்வார்கள், மகாலட்சுமியை வேண்டி என நினைக்கிறேன். கோவிந்தா கோஷ்டி நோம்பில் மும்முரம் காட்ட, நம்ம ஃபாதர் தீபாவளிக்கு மறுநாள் ஒரு புது ஜபக் கூட்டத்தை அறிமுகப்படுத்தி பிரச்சனையை கிளப்பிவிட்டார். ஊரில் தீபாவளி ரணகளமாகிவிட்டது. மகாலட்சுமி விரதமா, நம்ம ஃபாதரின் புது ஜபக் கூட்டமா என பட்டிமன்றம்  லைவில் ஒளிபரப்பாகவில்லை, அவ்வளவுதான்.

தன்னுடைய வருமானம் கணிசமாக குறைவதை பொறுக்க முடியாமல் எங்கள் ஊரில் இருக்கும் ஐயர் எடுத்தார் அவர் அஸ்திரத்தை. கணபதி ஹோமம், சத்தியநாராயண பூஜை, சிறப்பு சரஸ்வதி ஹோமம், கஜ ஹோமம், புஜ ஹோமம் என பெரிய பட்டியல். சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் என அவரும் கிளம்பிவிட்டார்.

ராஜசேகர் தம்பதிகள் எங்கள் ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள்.   அவர்களின் மகன் சந்தோஷ் பன்னிரெண்டாவ்து வகுப்பு படிக்கப் போகிறான். அவன் கண்டிப்பாக மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து விட வேண்டும் என்பது அவர்களின் ஆசை. ராஜசேகரின் மனைவி சந்தியா அல்லேலுயாவில் இணைந்து விட்டார். ராஜசேகர் மிகத் தீவிர கிருஷ்ண பக்தர். போதாதா..பிரளையம் வர!

முதலில் சந்தியா சிறப்பு ஜபக் கூட்டம் ஒன்றை தன் விட்டில் நடத்தினார். சுமார் 5,000 ரூபாய் வரை ஃபாதருக்கு கொடுத்தார். ஆனால் பரீட்சையில் சந்தோஷ் எதிர்பாராத வகையில் குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டான். அதாவது 100-க்கு 99 மதிப்பெண். ஜபத்தை கேலி செய்து கை கொட்டி சிரித்த ராஜசேகர், வீட்டில் சிறப்பு சரஸ்வதி பூஜை நடத்தினார். ஹோமம் வளர்த்து பலருக்கு உணவளித்து சிறப்பாக நடந்த அந்த பூஜைக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகியது. நம்ம ஐயரும் ஒரு பெரிய தொகையை வாங்கி விட்டார்.

நம்புங்கள் அவர்கள் மகன் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துவிட்டான். சரஸ்வதி பூஜை ஜெயித்து விட்டது. இப்பொழுது யேசுவை விட சந்தியாவிற்கு ஈகோ முட்டிக் கொண்டது, ஒரு புது ஜபக் கூட்டம் சில பல ஆயிரங்கள், இந்த முறையும் சந்தோஷ் 100 மதிப்பெண் பெற்றுவிட்டான். ஒரு வழியாக தற்காலிகமாக சண்டை டிராவில் முடிவடைந்தது.  இருந்தாலும், நம்ம ராஜசேகர் ஒரு முறை தோற்றதை குத்திக் காட்டியபடி தான் இருக்கிறார்; அது தான் அந்த 99 மார்க்.

ஊரில் பல பிள்ளைகள், வீட்டில் நடக்கும் இந்தப் பிரச்சனைகளால் மன உளைச்சல் அடைந்துள்ளனர். எங்கள் எதிர் வீட்டில் இருக்கும் நிஷா குட்டி நான்காவதுதான் படிக்கிறாள். வீட்டில் கோவிந்தா அல்லேலுயா சண்டை, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவள், ஒரு நாள் வெறுப்பாகி பெற்றோர்களிடம், “இனிமே இப்படியே சண்டை போட்டு ஹெட் ஹேக் (தலைவலி) வரவச்சீங்க, நான் முஸ்லிம் மததுக்கு மாறிப்போய்டுவேன், எம் பேரை ஃபாத்திமான்னு வச்சிப்பேன்” என்று பொருமிவிட்டாள்.

இவர்கள் கூத்துகளை பார்த்துக் கொண்டிருந்தால், பல சுவாரசியமான விஷயங்கள் மனதில் ஓடுகிறது.

பழங்குடி மக்கள், விவசாயம் பார்க்கத் தொடங்கிய போது அவர்கள் விவசாயத்திற்கு உதவும் அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர். ஆரியர்கள் வருகைக்கு பின், மந்திரங்கள் மூலம் இயற்கையை கட்டுப்படுத்தலாம். மழைக்கு ஒரு கடவுள் அவனை குளிர்விக்க ஒரு மந்திரம், வெயிலுக்கு ஒரு கடவுள் அவனை குளிர்விக்க ஒரு மந்திரம், மலையை குளிர்விக்க ஒரு பூஜை, பாமபை குளிர்விக்க ஒரு பூஜை என வேதங்களையும் தாண்டி பல கடவுள்களையும், பூஜைகளையும், மந்திரங்களையும் யாகங்களையும் உருவாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கத் தொடங்கினார்கள் பார்ப்பனர்கள்.

உலகெங்கும் எந்த மதமானாலும் இப்படித்தான் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்று இப்படியாக தமது கல்லாவை ஓட்டுகின்றன.

பொதுவில் வரலாற்றில் மதங்கள் மக்களின அப்பாவித்தனமான நம்பிக்கையை மேலும் மூட நம்பிக்கையாக்கி தான் தம் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன. அதனால்தான் மார்க்ஸ் இந்த மதங்களை அபின் என்றார். கூடவே இதயமற்ற உலகின் ஏக்கப் பெருமூச்சு என்றும் அதனை மதிப்பிடுகிறார். அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள் மதங்களின் இருப்பை பொருளாதார பிரச்சினைகளின் கட்டமைப்பில் நீடிப்பதாக புரிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள், போராடுகிறார்கள்.

எந்த தந்திரங்களை செய்து ஹிந்து மதம் தன்னை நிறுவிக் கொண்டதோ இன்று அதே தந்திரத்தை கிறிஸ்துவம் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இதில் கிருஷ்ணனை விட கிறிஸ்துவின் மதம்தான் சீனியர். இந்து மதம் உலகின் ஆதிமதம் என்று பீலா விட்டாலும் அது கங்கைக் கரை சப்பாத்தி மற்றும் தயிர் சாத வாடையைத் தாண்டி எங்கேயும் போகவில்லை. கிறிஸ்துவின் அபிமானிகள்தான் முதலாளிகளின் கருவூல மகிமையை பெருக்க வேண்டி
‘ரிஸ்க்’ எடுத்து கடல் தாண்டி, கண்டம் தாண்டி ஜபிக்க வந்தார்கள். வடமொழி மந்திரங்களோ இமயத்தை தாண்டவே முடியாது என்று குந்திவிட்டன.

இதையும் தாண்டி ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் காலரை துக்கி விட்டுக் கொள்ள ஒரு பெருமையான செய்தி இல்லாமல் இல்லை. இந்த அல்லேலுயா கூட்டம் அடித்து விட்டுக் கொண்டிருப்பதெல்லாம் சிறிய அளவு டூபாக்கூர்கள்தான். பாருங்கள், ”மோடி வந்தால் இந்தியாவின் மொத்த பிரச்ச்னைகளும் நொடியில் மறைந்து ராம ராஜ்யம் முளைக்கும்” என்று சொன்னதை விடவா அந்த அல்லேலுயா பாதிரி சொல்லிவிட்டார்?

–    ஆதவன்