கடந்த 2-12-14 அன்று மணல் குவாரியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வெள்ளாற்றுப்பகுதி மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் நடத்திய முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மாவட்ட நிர்வாகம் மணல் குவாரியை தற்காலிகமாக மூடி உத்திரவிட்டது. மேலும் மணல் கொள்ளை குறித்தும் விதி முறை மீறல் குறித்தும் விசாரணைக்கும் உத்தரவிட்டது.
பின்னர் எந்த முன்னறிவிப்பும் இன்றி எந்தவிதமான அதிகாரிகள் விசாரணையும் இன்றி மணல் குவாரியை துவக்கி வழக்கம் போல் கொள்ளை தொடரப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் எனத் தொடங்கப்பட்டு மருங்கூரை சேர்ந்த எம்.ஜி.பி. பஞ்சமூர்த்தி அதன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த 11 உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.
நேற்று (15-12-14 அன்று) காலை 10.00 மணி முதல் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி முற்றுகைப் போராட்டம் நடந்து வருகிறது.
வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திவரும் இப்போராட்டத்தில் வெள்ளாற்று இரு கரைகளிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், ஆண்கள், பெண்கள் பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
சுமார் 4 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் வந்தார். காவல் துறை புடைசூழ பந்தலுக்கு வந்தார்; அவர் “போராட்ட குழுவினருடன் பேச்சு நடத்த வேண்டும்” என்று அழைத்தார். .
“மக்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள். கஞ்சி காய்ச்சி கொண்டு இருக்கிறோம். நாங்கள் சாப்பிட்ட பின்புதான் பேச முடியும்” என்று வழக்கறிஞர் ராஜு கூறினார். இதனை கைதட்டி வரவேற்றனர்.
ஆர்.டி.ஓ இதனால் காத்திருந்தார். சற்று நேரம் கழித்து டி.எஸ்.பி பாண்டியன் மீண்டும் வந்தார். “உங்களுடைய கோரிக்கை என்ன” என்று கேட்டார்.
“எங்களது ஒரே கோரிக்கை மணல் குவாரியை மூட வேண்டும்” என்பதுதான் என்றார் ராஜு.
ஆர்.டி.ஓ. “குவாரியை மூடமுடியாது” என்றார்.
“அப்படியானால் பேசமுடியாது” என்றார் ராஜு.
இருந்தாலும் டி.எஸ்.பி. பேச்சை முடிக்க விடாமல், “உங்களுடைய மற்ற கோரிக்கைகளை கூறுங்கள்” என்றார்,
“கார்மாங்குடி மணல் குவாரியில் ஆண்டுக்கு 10,91,000 கன மீட்டர், அதாவது 67000 யூனிட் மணல்தான் எடுக்க அனுமதி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மணலை ஒருமாதத்திலேயே எடுத்து முடித்துவிட்டார்கள். மேலும் இதில் பல விதி மீறல்கள் நடந்துள்ளன. மணல் குவாரியை அரசே நடத்துகிறது என்று சொல்லுகிறார் அதிகாரி. அப்படியானால் ஏன் விதி மீறல்கள் நடக்கின்றன.”
“சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தின் விதிமுறை படி ஆற்றின் கரையில் மணல் எடுக்க கூடாது. 3 அடி ஆழத்துக்கு மேல் எடுக்கக்கூடாது. எந்திரங்களை வைத்து எடுக்க கூடாடது என்று விதிமுறை உள்ளது. அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது” என்றார் தோழர் ராஜு.
ஆனால் வருவாய் கோட்டாட்சியர், “விதிமுறை மீறல் இல்லை என்று பொதுப்பணித்துறை அறிக்கை கொடுத்துள்ளது” என்றார். மக்கள் இதை கடுமையாக எதிர்த்தார்கள்.
“விதிமீறல் இல்லை என்றால் கடந்த ஓராண்டு காலமாக மணலுக்காக பொதுப்பணித்துறை வாங்கிய பணம் எவ்வளவு என்ற கணக்கை கொடுங்கள்” என்று கேட்கப்பட்டது.
“அதைக் கொடுத்து விட்டால், போராட்டத்தை கைவிட்டுவிடுவீர்களா என்று DSP கேட்டார்.
“போராட்டத்தைகைவிட வேண்டுமென்றால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். முதலில் கணக்கை கொடுங்கள்” என்று கேட்கப்பட்டது.
“அந்தக் கணக்கை நீங்கள் பொதுப்பணித்துறையிடம் போய் கேளுங்கள்” என்றார்.
“அதெல்லாம் எங்கள் வேலையில்லை. அரசு என்றால் மாவட்ட நிர்வாகம்தான். எனவே நீங்கள்தான் தரவேண்டும்” என்றார் ராஜு.
“இந்த ஆவணங்களை வாங்கிக்கொண்டு நீதிமன்றத்துக்கு போங்கள்” என்றார்.
“நீதிமன்றம் போவது போகாதது எங்கள் பிரச்சனை. நீங்கள் முதலில் ஆவணக் கணக்குகளை கொடுங்கள்” என்றோம.
“குவாரியை மூடுவது இங்கே முடிவு செய்யப்படவேண்டியது இல்லை, அது அரசின் முடிவு” என்றார் டி.எஸ்.பி.
“அப்படியானால் விதியைமீறி அடிக்கப்பட்ட கொள்ளை, அதிகாரிகளுக்கு, அரசியல் தலைவர்களுக்கு, ஊராட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லஞ்சம் இதைப்பற்றி நான் புகார் தருகிறேன். இதன்மீது நடவடிக்கை எடுங்கள், வழக்கு பதிவு செய்யுங்கள்” என்று கோரப்பட்டது.
புகார்மனுவை பெற்றுக்கொண்டார் டி.எஸ்.பி. அதன்பின் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
மீண்டும் டி.எஸ்.பி வந்து, “உங்களுடைய போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் காலையில் வந்து தொடரலாமே, எதற்கு உங்களுக்கு வீண்கஷ்டம், பொதுமக்களுக்கும் கஷ்டம்” என்றார்.
ஆனால் அவரது கோரிக்கை அனைத்து மக்களாலும் நிராகரிக்கப்பட்டது. இரவிலும் மணல் குவாரியிலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர், மக்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடனும் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.பி பஞ்சமூர்த்தியுடனும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் நேற்று (15-12-2014) இரவு 10.30 மணி அளவில் நடத்திய தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு:
மேலும் படிக்க
- வைப்பாறில் மணல் கொள்ளை – விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !
- மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?
- வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்
- மணல் கொள்ளை : விருதை தாசில்தார் அலுவலக முற்றுகை
- மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்
- பொதுக்கூட்டம் : மணல் கொள்ளையர்களுக்கு என்ன தண்டனை ?
- மணல் கொள்ளை : பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – முற்றுகை அறிவிப்பு