Sunday, June 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 770

மூவர் தூக்கை ரத்து செய்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!!

பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஈழம் மீதான போர்க்குற்றம் புரிந்த காங்கிரசு அரசை மக்களிடம் அம்பலப்படுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் செய்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் போராடி வருகின்றன. அவற்றின் சில போராட்டக் காட்சிகளை இங்கே பதிவு செய்கிறோம்.

 

விழுப்புரம்:

விழுப்புரத்தில் வி.வி.மு, பு.மா.இ.மு சார்பாக 150 பேருக்கும் மேற்பட்டோர் நடத்திய ஆர்ப்பாட்டம் நகர மக்களிடம் இப்பிரச்சாரத்தை வீச்சாகக் கொண்டு சென்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதை ஒட்டி மூன்று நாட்களாக தஞ்சை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

விருத்தாசலம்:

விருத்தாசலம் திரு. டி.காளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லரியில் மாணவர்களை திரட்டி சாலை மறியல் போராட்டமும் ஊர்வலமும் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தால் நடத்தப்பட்டது. முதல் நாள் விடுதியில் சென்று பகத் சிங் பற்றி விளக்கி பேசப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் தூக்கில் தொங்காமல் இருக்க வேண்டுமென்றால் அது மாணவர்களால்தான் முடியுமென்று பேசியதை புரிந்து  கொண்ட மாணவர்கள் முழுமனதுடன் போராடினார்கள்.

ஓசூர்:

21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?  என்ற  கேள்வியின் அடிப்படையில் ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து, மாவட்டத் தலைநகரமான கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில், மாலை 5.30 மணியளவில் செங்கொடிப் பதாகையுடன், குழந்தைகள், பெண்கள், பெரியவர்களுமாக ஒன்று திரண்டு விண்ணதிரும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  இவ்வார்ப்பாட்டத்திற்கு  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத்தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர் பரசுராமனும், விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்  சரவணனும்  எழுச்சிகர கண்டன உரையாற்றினர். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் ஆதரவளித்தனர்.

மதுரை:

மதுரை, 27 ஆகஸ்ட் தலைமை தபால் நிலையம் முன்பு  காலையில்  ம.க.இ.க., பு.ஜ.தொ.மு, வி.வி.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தோழர் மருது தலைமை தாங்கினார். உசிலை விவிமு தோழர்,குருசாமி, மகஇக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.

திருச்சி:

இந்திய அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! என்ற தலைப்பில் 27.8.2011 இன்று காலை திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பிரசுரம் நூற்றுக்கணக்கான சுவரொட்டி என தயாரித்து விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கருணை அடிப்படையில் தூக்கு தண்டனனையை ரத்து செய்ய கோரும் தமிழின ஆர்வலர்கள் மத்தியில், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை என்பதே சட்ட விரோதம் என்றும் அடித்து துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு, 21 ஆண்டுகள் சிறையில் தள்ளி அதன் பின் தூக்கு தண்டனை அறிவித்து இருப்பது அயோக்கியத்தனமானது என்பதை விளக்கியும் ராஜீவை கொன்ற கொலையாளிகள் என காங்கிரசு பேடிகள் கூக்குரல் இடுவதை ஒரு வாததிற்கு உண்மையென்றே எடுத்துக் கொண்டாலும் அது காங்கிரசு, ராஜீவ் கும்பலின் குற்ற செயலுக்கான எதிர்வினையே என்பதை விளக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் ம.க.இ.க.தோழர்கள், பு.மா.இ.மு.அமைப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள்,பெண்கள் விடுதலை முன்னணியினர், பு.ஜ.தொ.மு.வை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள், பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

உடுமலை:

உடுமலை பகுதியில் தூக்கு தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு சார்பில் தோழர் காஞ்சனா தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்ற்து. இதை ஒட்டி பகுதி முழுவதும் வீச்சான பிரச்சாரம் நடத்தப்பட்டது.

கோவை:

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து  செய் அனைவரையும் விடுதலை செய் என்ற முழக்கத்துடன்  கோவை  தமிழ்நாடு  உணவகம் முன்பு ம.க.இ.க,  மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் 27 -8 -2011 அன்று  நடந்தது. தோழர் விளவை ராமசாமி தலைமை வகிக்க தோழர் மணிவண்ணன் உரையாற்றினார் .  ஆர்ப்பாட்டத்தில்  தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து பேற்ற வாக்குமூலத்தை வைத்து தூக்கு தண்டனை அளித்து 21 ஆண்டுகள் சிறை தண்டனை அதுவும் போதாதென்று மரண தண்டனையா ?   அமைதிப்படை முதல் முள்ளிவாய்க்கால் வரை பல்லாயிரம் ஈழ தமிழர்களை  படுகொலை செய்த காங்கிரஸ் போர்க்குற்றவளிகளுக்கு என்ன தண்டனை என்று எழுப்பப்பட்ட வினாக்கள் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்ப்பை தந்தது.

கோவை ம.உ.பா.மை:

ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி. ராஜீவ் கொலைவழக்கின் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு நகல் எரிப்புப்போராட்டம். கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலைய வாயில் முன்பு 29 8 2011 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தால் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் T வெங்கடேசன் மாவட்ட தலைவர் தோழர் ராஜன், பொருளாளர் தோழர் அபுதாகிர் மற்றும் செயற்குழு உறுப்பினர் தோழர் ஹைதர் கலந்து கொண்டு கைதாகினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கம், மற்றும் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் சார்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை:

சென்னையில் பனகல் மாளிகை அருகே ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விண்ணதிரும் முழக்கங்களுடனும் செங்கொடிகள், பதாகைகள், முழக்கத்தட்டிகளுடனும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் கணிசமான அளவில் பெண்களும், குழந்தைகளும் உண்டு.

வீடியோ:

ம.க.இ.க மாநில இணைச் செயலாளார் தோழர் காளியப்பன் மதுரையில் நடந்த புதிய கலாச்சாரம் இதழ் வாசகர் வட்டத்தின் கூட்டத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை எதிர்த்து பேசிய பேச்சின் ஒரு பகுதி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

24

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

மூவர் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யுமாறு போர்க்குணமிக்க போராட்டங்களை தமிழக மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த போராட்ட உணர்விற்கு பொருத்தமில்லாத கோழைகளாக, துரோகிகளாக, காட்டிக் கொடுப்பவர்களாகத்தான் பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர்.

சட்டமன்றத்தில் தூக்குதண்டனையை ரத்து செய்வதற்கு தனக்கு அதிகாரமில்லை என்று பாசிச ஜெயா கூறியிருப்பதும், அதில் கருணாநிதி இரட்டை வேடம் ஆடுவதாக சொல்லியிருப்பதும் நீங்கள் அறிந்ததே. உள்ளூர தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆசை கொண்டிருக்கும் ஜெயலலிதா ஒரு புறம் என்றால் மறுபுறம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அரசியல் நியாயத்தை தூக்கிலேற்றுகிறார் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்கு தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை. நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் கூட அவர்களை மன்னித்திருப்பார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையை தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.”

கருணாநிதி அறிக்கையின் பின்னே பல மறைபொருள் விசமத்தனங்கள் மறைந்திருக்கின்றன.

முதலில் அவர் ஆட்சியில் இருந்த போது 2000ஆம் ஆண்டு கருணை மனுவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது அவர்தான். அப்போது இந்த அறிக்கை வாசகங்கள் அவருக்கு நினைவில் வரவில்லை போலும். அப்போது கருணாநிதி ஏன் அப்படிச் செய்தார்? உண்மையிலேயே அவருக்குத் தமிழுணவர்வு இல்லையா? அப்படி இல்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்.

ஜெயலலிதா, சோ, சுப்ரமணிய சாமி, தினமலர், இந்து முதலான பார்ப்பனக் கும்பலுக்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி அப்படிச் செய்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏற்கனவே இந்தக்கும்பலின் சதியால் ஆட்சியிழந்த அனுபவம் அவருக்குண்டு. அதுவும் கூட அவர் அக்கும்பலை எதிர்த்து நடந்ததல்ல. என்றுமே கருணாநிதியை பார்ப்பனக் கும்பல் ஏற்றுக் கொண்டவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு அத்தகைய ஜென்ம பகை அந்தக் கும்பலோடு கிடையாது. தன்னை ஏன் அவர்கள் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி அவருக்கு இப்போதும் உண்டு.

கொள்கையை விட தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம் என்ற வகையிலும் கருணாநிதி அப்படி ஒரு முடிவை எடுத்து கருணை மனு நிராகரிக்க காரணமாக இருந்திருக்கிறார். இது திராவிட இயக்கத்தின் பிழைப்புவாதப் பாரம்பரியம் தந்திருக்கும் மரபுச் சொத்து.

சரி, இப்போது ஆட்சியில் இல்லையே, தற்போதாவது கொள்கையை வெளிப்படையாக சொல்லி மரண தண்டனையை ரத்து செய்யக் கோரலாமே? யார் தடுத்தது? அதிலும் பிரச்சினை இருக்கிறது. காங்கிரசு கூட்டணி அரசின் அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் கருணாநிதி, 2ஜி ஊழலில் செருப்படி பட்ட பிறகும், கனிமொழி, ராஜா சிறையில் நீடித்திருந்தாலும் காங்கிரசு அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஜெயா அரசின் கைது நடவடிக்கைகளால் கட்சியே கலகலத்துப் போயிருக்கும் நிலையில் காங்கிரசின் தயவு என்பது கொள்கையை விட மதிப்பு வாய்ந்த விசயம்.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தாலும் அவர் தூக்குத் தண்டனையை விரும்பியிருக்க மாட்டார் என்று சோனியா மனக் குளிர உளற வேண்டிய அவசியம் என்ன? இதே கருணாநிதிதானே கொலைகார அமைதிப்படையை வரவேற்க செல்லமாட்டேன் என்று செய்து காட்டியவர்? அந்த அமைதிப்படையை அனுப்பி கொலைக்கணக்கை ஆரம்பித்தவர் அந்த ராஜீவ்தானே? அந்த வகையில் போர்க்குற்றவாளி என்றாலும், போர்க்குற்றத்திற்கு தண்டனை என்ற முறையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜீவ் காந்திதானே?

சரி நேரடியாக ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லாமலே அவரது  கொலை என்பது அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான எதிர்வினை என்றாவது சொல்லலாமே? அதுவும் கடினம் என்றால் இருதரப்பிலும் தவறுகள் நடந்திருக்கின்றன, அதை மறப்போம் என்றாவது சொல்லலாமே? இத்தனை சந்து பொந்து இருந்தும் அதையெல்லாம் விடுத்து இப்படி அப்பட்டமாக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அப்பாவிகளை ஏன் இழிவு படுத்த வேண்டும்?

பாசிச ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும்? ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா? அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன?

கருணாநிதி அவர்களே, நீங்கள் மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால் சற்று அமைதியாக இருங்கள். நான் வடிப்பது முதலைக் கண்ணீர்தான் என்று அந்த அரசியல் நியாயத்தை இழிவுபடுத்தாமலாவது இருங்கள். அதுவே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு செய்யும் மகத்தான தொண்டாக இருக்கட்டும். மேலும் உங்கள் வாரிசுகள் சிலர் சிறையில் இருக்க, அவர்கள் ‘சம்பாதித்த’ சொத்துக்களை காப்பாற்றும் அவஸ்தையில் சிறை செல்லாத வாரிசுகள் இருக்க, நீங்கள் வாரிசுகளை காப்பாற்றும் அரசியலை மட்டும் கவனியுங்கள். தூக்குத் தண்டனை ரத்து குறித்து தமிழக மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

13

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கிலடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சீமான், வைகோ, பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் முதலான தமிழின ஆர்வலர்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்காக ஜெயவிடம் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

கோயம்பேட்டில் நடக்கும் வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களும், திரைத்துறையினரும் கூட இப்படித்தான் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து பேசி வருகிறார்கள். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் மூவர் தூக்கை ரத்து செய்ய போராடுவதற்கு பதில் இப்படி ஜெயலலிதாவிடம் விசேடமாக கோரிக்கை வைப்பது சரியா? கேட்டால் இது மூவரது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதில் நமது மான அவமானத்தை பார்க்க்க் கூடாது என்றும் நியாயப்படுத்துகிறார்கள்.

மூவரையும் தூக்கில் போடவேண்டுமென்று எப்போதும் பேசி வரும் ஜெயாவிடம் எதை எதிர்பார்த்து இந்தக் கோரிக்கை? “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று திமிராக பேசிய இந்த நரி எப்படி தீடீரென்று பரியாக முடியும்?

தற்போது இந்தப் பிரச்சினை தொடர்பாக ஜெயாவே தனது முகம் இதுதான் என்று காட்டியிருக்கிறார். தமிழின ஆர்வலர்கள் வெட்கப்படாமல் அதை பார்ப்பார்களா?

மூவர் தூக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் பாசிச ஜெயா வெளியிட்ட அறிவிப்பு: (நன்றி: தினமணி)

“1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.  இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.  மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது.  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள்.  27.10.1999 அன்று மேதகு தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.

தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை  உயர்  நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த மேதகு ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர்  கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் அவர்கள் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார்.  அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.  இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.  இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப் பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மேலும் பேரறிவாளனின் தாய் திருமதி அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார்.  தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட  மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர்.

இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து முதல்வராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  ஆனால் 2000-ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதி தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.  அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்து விட்டு, இன்று  ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா?  அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை எனக் கருதுகிறேன்.

உச்ச  நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ ஃஅல்லது குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.  இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும்.   அமைச்சரவையின் அறிவுரைப் படி ஆளுநர் அவர்களால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் அவர்களாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்த வித அதிகாரமும் தமிழக முதலமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என  1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது.

இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்த நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத்  தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.  உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.”

இதுதான் ஈழத்தாயின் கருணை கொப்பளிக்கும் அறிக்கை!

தனக்கு அதிகாரமில்லை என்பதை சட்டபூர்வமாக மெனக்கெட்டு சொல்லியிருக்கிறார். அதிலும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்ட நிலையில், புதிய சூழ்நிலை, ஆதாரங்கள் இருப்பின் அதை மறு ஆய்வுக்குட்படுத்துமாறு சம்பந்தப்ட்டவர்களோ, வேறு யாரோ குடியரசுத்தலைவரிடம் கோரலாம் என்பதையும் கூறியிருக்கிறார். அந்த வேறு யாரோவில் ஏன் புரட்சித் தலைவி இல்லை? ஏன் தமிழக அரசு இல்லை?

கருணாநிதி அமைச்சரவை கருணை மனைவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது நிஜம்தான். அதனால் இன்று தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கருணாநிதி கோருவது பித்தலாட்டம் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஈழப்பிரச்சினையில் கருணாநிதியின் துரோகத்தை ‘புரிந்து’ கொண்டு அவரை எதிர்த்தவர்கள்தானே வைகோவும், சீமானும், பெரியார் தி.கவும்? அதனால்தானே ஈழத்தின் எதிரி ஜெயாவை அவர்கள் தேர்தலில் ஆதரிக்கவும் செய்தார்கள். அந்த அடிப்படையில்தானே ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? அதை ஏற்பதில் என்ன பிரச்சினை?

இந்த நெடிய அறிக்கையில் முதலமைச்சரான தனக்கு அதிகாரம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால் குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட நிலையிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்பதை சிலர் கூறுகிறார்கள். அதற்கு நம்பூதிரிபாடு, சி.என்.அண்ணாத்துரை போன்றோர் முதலமைச்சராக இருந்த போது நடந்த வரலாற்றினையும் கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.

தனக்கு அதிகாரமில்லை என்பதை இப்படி மாய்ந்து மாய்ந்து சொல்லும் பாசிச ஜெயலலிதா மூவர் தூக்கிலடப்படுவதும் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூட ஏன் சொல்லவில்லை? தனக்கு அதிகாரமில்லை என்றாலும் மூவர் தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஏன் கூறவில்லை?

இல்லை குடியரசுத் தலைவருக்கு தமிழக போராட்ட நிலைவரங்களை அறிக்கை மூலம் தெரிவித்து அவரது முடிவை மறு ஆய்வு செய்யுமாறு ஏன் கோரவில்லை? இதற்கு கூட அதிகாரமில்லையா, இல்லை மனமில்லையா? காவிரிப் பிரச்சினையில் கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை இன்று வரை கருநாடக அரசு அமல்படுத்த மறுக்கிறது. இதினாலொன்றும் அரசியல் சட்டப்பிரச்சினைகள் வந்துவிடவில்லை. அதே போல மூவரை தூக்கில் போட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாது என்றும் அதனால் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கலாமே?

கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும், அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர்களை வைத்து வாதடியதாகட்டும் அந்த ஈடுபாடு இந்த மூவர் மீதான உயிர் குறித்து ஏன் இல்லை? புதிய சட்டசபை அலுவலகத்தை மருத்துவமனையாக்க போகிறேன் என்று மக்கள் பணத்தோடு விளையாடும் ஜெயலலிதா மூன்று பேரின் உயிர் குறித்தும் அதேமாதிரிதான் விளையாடுகிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மேலும் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு வந்த கோரிக்கைகளை அவர் பத்திரிகைகள் மூலம்தான் அறிந்து கொண்டாராம். அன்றாடம் பல்வேறு ஊர்களில், கல்லூரிகளில் நடக்கும் போராட்டங்களும், ரயில் மறியலும் குறித்து உளவுத் துறை போலீசு அவருக்கு சேதி சொல்லவில்லையா?

மூவரையும் தூக்கில் போட வேண்டுமென்று முந்தாநாள் வரை நரம்பு புடைக்க பேசியவரிடம் ஏன்தான் இந்த தமிழின ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை? 2000-ஆம் ஆண்டு  கருணாநிதி கூட கருணை மனுவை நிராகரிக்குமாறு சொல்தவற்கு பாசிச ஜெயாவின் மீதான பயம்தான் முதன்மைக் காரணம். அதுவே பின்னர் சீமானைக் கைது செய்வதற்கும் காரணமாக இருந்தது. பாசிச ஜெயா தலைமையிலான பார்ப்பனக் கூட்டத்திற்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி ஈழம் தொடர்பான விவகாரங்களில் நடந்து கொண்டார் என்பது ஊரறிந்த விசயம்.

ஆக பாசிச ஜெயா ஒரு போதும் ஈழத்திற்காகவோ, மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காகவோ குரல் கொடுக்க மாட்டார். இனியாவது தமிழின ஆர்வலர்கள் தமது கோரிக்கைகளை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் வைத்து போராடட்டும். சொல்லப் போனால் இந்த மூவரையும் எப்படியாவது தூக்கில் போட வேண்டும் என்று குறியாக இருப்பவர்தான் இந்த பாசிச ஜெயா. நம்மைக் கொல்ல வரும் கொலைகாரனிடமே நம்மைக் கொல்ல வேண்டாமென்று மன்றாடுவது என்ன வகை அரசியல்?

இன்னும் ஆதாரம் வேண்டுமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதா பேசியதைப் பாருங்கள்:

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”

– புரட்டுத் தலைவி ஜெ. ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் 23.10.2008)

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

85

”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி

கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.

தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்
தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்

ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.

சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.

இப்படிக்கு

தோழர் செங்கொடி

என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.

ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.

______________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!”இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.

ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.

எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.

ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.

கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…

அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று  மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.

காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
ஆற்றாமையில் காஞ்சி மக்கள் மன்றத்தினர்

__________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் மகேஷ்

”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.

”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.

அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.

இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.

ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.

அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.

சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.

‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’

இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
மக்கள் மன்ற குழந்தைகளுடன்

பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.

”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.

மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.

ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.

அப்பத்தான்…”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி சடலமாக

வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.

அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.

தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.

மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.

செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:

”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”

‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.

எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?

அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார் முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.

மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

____________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து
____________________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

30
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த்.

முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு  போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)

ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத,  ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)

இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.

இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’  தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.

அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.

இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?

உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?

அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.

‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA   என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.

(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.

‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.

மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின்  தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.

ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)

இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.

‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின்  புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும்  மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.

ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?

அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.

அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.

20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.

மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.

தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

_________________________________________________

நன்றி: அருந்ததி ராய், தி இந்து (21.8.2011)

தமிழாக்கம்: வேல்விழி, அறிவுச் செல்வன்

_________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆகஸ்டு 27 ஆர்ப்பாட்டம்!!

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத்தின் மீதான போர் புரிந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் 27.8.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட விவரத்தை இங்கே தருகிறோம். அனைவரும் வருமாறு கோருகிறோம்.

இடம்: பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

நாள்: 27.8.2011

நேரம்: மாலை 4.30 மணி

தலைமை: வே. வெங்கடேசன், சென்னை ம.க.இ.க செயலாளர்

சிறப்புரை: மா.சி.சுதேஷ்குமார், மாநில இணைச்செயலாளர், பு.ஜ.தொ.மு

*       இராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை  விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! இது அநீதி!! தன்மானமுள்ள, மனிதாபிமானமுள்ள எவரும் இதனை எதிர்த்து போராடவேண்டும்.

*       தடா என்ற கொடிய கருப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டுத்தான் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. முதலில் இந்த கருப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதையும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதும் பச்சை பாசிசம்!

*       இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை பரிசீலிக்காமலே ஏற்கனவே, முடிவு செய்துவைத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் அன்று வழங்கியது. கருணை மனுப்போட்ட பின்னர், அவர்களது மரணத்துடன் விளையாடத் தொடங்கிய காங்கிரசு அரசு, தற்போது அவர்களை தூக்கிலிட அனுமதித்துள்ளது.

*       இந்தத் தீர்ப்பன் அடிப்படையில் 21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?

*       ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தான் இராஜபக்சே, இராஜபக்சே இனப்படுகொலை செய்தவன், போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்குத் துணைபுரிந்த இந்திய அரசு, இராஜபக்சேவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதன்மூலம் தனது நோக்கத்தை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.

*       ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இராஜபக்சேவுக்கு உதவுவதன் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியே பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத்தண்டனை!

*       ஈழத் தமிழர்களின் சுயநிரணய உரிமைக்காகவும், இந்திய அரசின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவும், பேரறிவாளன்- சாந்தன்- முருகன் ஆகியோரின் விடுதலைக்காகவும் போராடுவோம்!

அனைவரும் வருக!

______________________________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

அலைபேசி – (91) 97100 82506 (வினவு)
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?

28

ங்கும், இங்கும், எங்கும், தூணிலும், துரும்பிலும், எப்.எம்மிலும், சானலிலும், தினசரியிலும், எஸ்.எம்.எஸ்சிலும், மீஸ்டு காலிலும் கூட எல்லாவற்றிலும் ஊழல் ஒழிப்பு போர் பொங்கி வழியும் நேரம். அந்த ‘போராட்ட நேரத்திற்கு’ பொருத்தமாக ஒரு ராகம் காஞ்சிபுரத்திலிருந்து ஊளையிடத் துவங்கியிருப்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஊழல்ஒழிப்பு அம்பிகள் தயாரா?பண ஆதாயத்திற்காக நடக்கும் ஊழலை விட, கொலை செய்துவிட்டு நீதிபதியையே விலைக்கு வாங்கும் ஊழல் பஞ்சமா பாவங்களையும் விட மோசமில்லையா? அப்பேற்பட்ட விஸ்வரூப ஊழலை காஞ்சி மட ஜெயேந்திரன் செய்திருப்பது சமீப நாட்களாக ஊடகங்களில் யாரும் கவனிக்கப்படாமல் ஓரமாய் ஒதுங்கியிருக்கிறது. அதை ஊழல் எதிர்ப்பு போராளிகளின் கவன வெளிச்சத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறோம்.

முதலில் சுருக்கமாக பிளாஷ் பேக்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார். இந்த புண்ணிய ஷேத்திரத்தில் இப்படியான புண்ணிய செயலை செய்வர்  என்று சங்கர மட சங்கராசாரிகளான ஜெயேந்திரனும், விஜயேந்திரனும் கைது செய்யப்பட்டனர். மேலும் மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியன், அப்பு என்று ரவுடிகள் முதல் அக்ரஹாரத்து பூணூல் மாஸ்டர்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட்டு மொத்தம் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயா மாமியோடு ஏதோ பிசினஸ் பிரச்சினையால் சண்டை மூண்டு சங்கர்சாரிஸ் டூ விட்ட நேரமாதலால் வழக்கு ஜரூராக நடந்து வந்தது. எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்து வந்தால் நீதி கிடைக்காது என்று நரித்தனமாய் பொங்கிய ஜெயேந்திரன் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவாள் அதிகாரம் டெல்லி வரை கொடி கட்டிப் பறப்பதால் நீதிபதிகளும் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டனர்.

அதன்படி 2006-ஆம் ஆண்டு முதல் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதே ஆண்டில் கருணாநிதி அரசு தமிழகத்தில் பதவியேற்கிறது. அவாள்களின் உள்ளம் கவர்ந்த தளபதி ஜெயேந்திரனை காப்பாற்ற விரும்பிய தி.மு.க அரசு அதற்கு பக்க பலமாக துணை நின்றது. ஆரம்பத்தில் நீதிபதி சின்ன பாண்டியும், பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜூம் விசாரிக்க தற்போது நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இதுவரை 170 சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

அவாள்களின் அதிகார ஆதரவோடும் தி.மு.கவின் உறுதுணையோடும் 92 பேர் பல்டி சாட்சிகளாக மாற்றப்பட்டார்கள். இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், சங்கரராமன் மனைவி பத்மா உட்பட பெருந்தலைகளே உண்டு. இந்நிலையில் வரும் 5-ம் தேதி வழக்கறிஞர் வாதம் நடப்பதாக இருந்தது. இந்த நேரம் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் இந்த வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரன் மற்றும் சிலர் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ சி.டியை தாக்கல் செய்து அதில் மை லார்டுக்கு இந்த லார்டு லபக்தாஸ் ரேட் பேசும் விசயத்தை வெளியே கொண்டு வருகிறார். இதை விசாரிக்க வேண்டுமென்று இவரது வழக்குரைஞர் மணிகண்டன் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுகுணா புதுச்சேரி கோர்ட்டில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். இந்த மனு பற்றி 8 வாரத்தில் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

அந்த ஆடியோ மேட்டரில் கௌரி எனும் பாப்பாத்தியம்மாள் பார்ப்பன மொழியில் பார்ப்பன மேலாண்மையோடு உரையாடலை ஒருங்கிணைக்க கான்பிரன்ஸ் காலில் ஜெயேந்திரன் ‘அருள்’வாக்கு ஓதுகிறார். எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் அனுப்பி விடுவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதிபதியோ நமஸ்காரத்தை சொல்லி, தனக்கு அவசர பணத் தேவை இருப்பதால்தான் இந்த அவசரம் என்று வழிய, ஜெயேந்திரன் அதெல்லாம் பிரச்சினை இல்லை கடன் வாங்கியாவது உடன் அனுப்புவதாக வலியுறுத்த, பின்னர் அந்த கௌரி பெரியவாளே சொல்லியாச்சு இனியாச்சும் நம்பி ஆகிற வேலையை பாருங்கோ என்பது போல முடித்து வைக்கிறார்.

இந்த உலகில் என்னன்ன நீதி, சாட்சியங்கள், சந்தர்ப்ப சூழ்நிலை என்று என்னென்ன இருக்கிறதோ அத்தனையின் படியும் ஜெயேந்திரன் ஒரு பச்சையான கொலைகாரன் என்பதை யாரும் மறுப்பே இன்றி ஏற்க முடியும். இருந்தும் அத்தனை வழிகள் மூலமும் இந்த வழக்கினை ஒன்றுமில்லாததாக்க ஜெயேந்திரன் முயன்று அதில் வெற்றியும் பெற்ற நிலையில்தான் இந்த கிளைமாக்ஸ் ஊழல். அந்த அளவு மோசடியில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் இந்த குற்றவாளி.

2ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராசா குற்றவாளி என்பதிலும், அவர் செய்த குற்றத்தை அங்கீகரித்து, ஆதரித்து, வழிகாட்டிய குற்றத்தினை மன்மோகன்சிங் முதல் ப.சிதம்பரம் வரை முழு அரசுமே காரணமென்பதெல்லாம் தற்போது ராசா, கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக வைக்கும் வாதமென்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதிலும் மன்மோகன் சிங்கையே நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்தால் இதை கேசுவலாக நீருபிப்போம் என்று சவால் விட்டதெல்லாம் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மூழ்கிவிட்ட துயரம். இருப்பினும் கடைசிக் குற்றவாளி ராசாவையே தூக்கில் போட வேண்டும் என்று கொக்கரித்தவர் ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரே.

ராசாவாவது சில பல மில்லியன் கோடி ரூபாய் இழப்புக்கு காரணமானவர். அதுவும் அரசின் கொள்கையின் படி நடந்த கொள்ளை முடிவு என்றாலும் அதற்கே தூக்கு என்றால் ஜெயேந்திரனது குற்றம் அதைவிட பலமடங்கு கொடியது.

ஏனெனில் ஜெயேந்திரன் ஒரு அப்பாவியை கொன்றதோடு, அந்தக் கொலை குறித்து நடக்கும் வழக்கில் சாட்சிகளை விலைக்கு வாங்கியதோடு, இறுதியில் தீர்ப்பு தர இருக்கும் நீதிபதிக்கே விலை பேசியிருக்கிறார். ஆக இந்து மதத்தின் சர்வதேச தலைவரும், குற்றவாளிகளை விசாரித்து தண்டிக்க வேண்டிய ஒரு நீதிபதியும் இப்படி அப்பட்டமாக பிசினஸ் பேசுவது போல ரேட் பேசியிருப்பதை பார்த்து இந்த ஊழல் எதிர்ப்பு அம்பிகள் சும்மா இருப்பது ஏன்?

ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக் கொள்ளும் இவர்கள் அம்பி அந்நியனாவதைப்போல, காந்தியவாதியாக இருந்து கொண்டே சத்ரபதி சிவாஜியாக மாறும் அண்ணா ஹசாரே வழியில்  பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா?

ஏனெனில் ஜனலோக்பால் வந்தால் கூட அதில் வரும் ஊழல் வழக்குகளை இத்தகைய நீதிபதிகள்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அந்த நீதிபதி இனத்தை சேர்ந்தவரையே ஒரு சர்வதேச புகழ் சாமியார் விலைக்கு வாங்குவது என்றால் இது மாதிரி ஊழல் இதுவரை இந்தியாவே கண்டதில்லையே?

சும்மா ஆளே இல்லாத கடையில் ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடுவதை  விட்டு ஊழலுக்கு இலக்கணமே படைத்திருக்கும்  இந்த ஜெயேந்திரனை நரபலி கொடுத்தால் ஊழல் எதிர்ப்பு சாமிக்கு அளவில்லா ஆனந்தமாக இருக்குமே? செய்வார்களா?

கலெக்டர் ஆபீஸ் பியூனையும், கை வண்டியில் கத்திரிக்காய் விற்கும் பாமரனையும் ஊழலுக்காக தண்டிக்க வேண்டும் என்று சீன் மேல் சீன் போடும் இந்த மேட்டுக்குடி கனவான்கள், தங்களது இனத்தை சேர்ந்த ஆன்மீக தலைவரை மட்டும் கண்டு கொள்ளாத மர்மம் என்ன? இதுதான் இனப் பாசமோ?

சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம் !

மெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா (Equatorial Guinea).

மத்திய கினியா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சிறியதொரு நாடெனினும், புதிய குவைத் என அழைக்கப்படும் அளவிற்கு எண்ணெய் வளம் மிக்கது. ஆப்பிரிக்க கண்டத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ள இந்நாட்டின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 15 இலட்சம் ருபாய்க்கும் அதிகமென்றும் தனிநபர் வருமானத்தில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்நாடு இருக்கிறதெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அந்நாட்டிற்குக் கிடைக்கும் வருமானத்திற்கும், அந்நாட்டு மக்களின் வாழ்நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதையும், 1990களில் மத்திய கினியாவில் கச்சா எண்ணெய் வளம் கண்டெடுக்கப்பட்ட பின், அந்நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்கு ‘வளர்ச்சி’ அடைந்ததோ, அந்தளவிற்கு அந்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதையும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 177 நாடுகளின் மனிதவள மேம்பாட்டுத் தர வரிசையில் இந்நாடு 121ஆவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் 70 சதவீதம் பேர் நாளொன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வருவதாக இன்னொரு புள்ளி விவரம் சொல்கிறது.

1968ஆம் ஆண்டு ஸ்பெயினின் காலனியாதிக்கத்திலிருந்து ‘விடுதலை’ அடைந்த மத்திய கினியா, 1979ஆம் ஆண்டு வரை பிரான்சிஸ்கோ மக்கியாஸ் என்ற சர்வாதிகாரியால் ஆளப்பட்டது. பின்னர் 1979இல் நடந்த அரண்மனை புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய, தற்போதைய அதிபர் தியோடொரோ ஓபியாங், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.

அதேசமயம், கினியாவில் தேர்தல்களும் நடத்தப்படும். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 95 சதவீத வாக்குகளைப் பெற்று, மீண்டும் அதிபரானார் ஓபியாங். கினியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிதான் நடைபெறுகிறது எனக் காட்டுவதற்குத் தேர்தலைவிட, வேறு மாயமந்திரம் எதுவும் தேவையில்லையே!

1996ஆம் வருடம் இந்நாட்டில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்தது. பல எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டோடு தொடங்கப்பட்டன. அவையனைத்தும் அதிபர் ஓபியாங், அவரது குடும்பம் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் கச்சா எண்ணெய் வருமானத்தில் பெரும்பகுதியை இக்கும்பலே கொள்ளையடித்துவிடுகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி காரணமாகத் தாராளமாகப் பணம் புழங்கும் அரசுத் துறையில் இலஞ்சமும், ஊழலும், பகற்கொள்ளையும் தலைவிரித்தாடுகிறது. ஆட்சியாளர்கள் எண்ணெய் உற்பத்தி  ஏற்றுமதியில் மட்டும் அக்கறை காட்டி வருவதால், பாரம்பரிய கொக்கோ, காபி விவசாயம் சீரழிந்து மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டனர்.

மற்றொரு பக்கம் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் கேள்விக்கிடமற்றதாக இருக்கிறது. சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் போராடக் கூட வேண்டாம், ஆட்சிக்கு எதிராக முணுமுணுத்தாலே போலீசின் சிறப்பு கவனிப்புக்கு ஆளாக நேரிடும். கறுப்புக் கடற்கரைச் சிறைச்சாலையில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்வது சர்வசாதாரணமானது. சித்திரவதைகளைக் கண்காணிக்கும் ஐ.நா. குழுவினர் இந்தச் சிறைச்சாலையைச் சோதனையிடச் சென்றபோது, போலீசார் சித்திரவதைக் கருவிகளை ஒளித்துக்கூட வைக்கவில்லை. உங்களால் செய்ய முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் எனக் குழுவினரின் கண்களில் படும்படி அனைத்துக் கருவிகளையும் மேசை மீதே வைத்திருந்தனர்.

அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்வதை அரசின் கொள்கையாகவே கொண்டுள்ளது, கினியா. எனினும், கினியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், “கினியாவிற்கு நீதி குறித்துப் போதிப்பதைக் கைவிட வேண்டும்; மற்றவர்கள் குறிப்பிடும் அளவிற்கு அந்நாட்டில் இலஞ்சமோ, வறுமையோ தாண்டவம் ஆடவில்லைசு என அமெரிக்க அரசிற்கு கமுக்கச் செய்தி அனுப்பியதாக, விக்கி லீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சிறப்பு ஆலோசகராக இருந்த லானி ஜே. டேவிஸ், கினியாவின் சர்வாதிகாரி ஓபியாங் குறித்து உலக நாடுகள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒரு பிரச்சார இயக்கத்தையே நடத்தினார். இதற்காக, ஓபியாங்கிடமிருந்து பல கோடி அமெரிக்க டாலர்களைச் சன்மானமாகப் பெற்றுக் கொண்டார், அவர்.

முன்னாள் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் இன் நெருங்கிய கூட்டாளியும் அமெரிக்க  ஐரோப்பிய கூட்டுப் படைகளின் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாண்ட்ஸ் எம். கிராட்டாக்குச் சொந்தமான எம்.பி.ஆர்.ஐ., என்ற தனியார் கூலிப்படை நிறுவனம்தான் மத்திய கினியாவின் இராணுவத்திற்கும், போலீசிற்கும் பயிற்சியளித்து வருகிறது. இத்தனியார் படை மத்திய கினியா போலீசாருக்குப் பயிற்சி கொடுப்பதை அமெரிக்க உள்துறை ரத்து செய்தாலும், அதிபர் புஷ் அப்பயிற்சிக்குப் பின்னர் ஒப்புதல் அளித்தார்.

செவ்ரான், மாராத்தான் ஆயில், நோபிள் எனர்ஜி ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் மத்திய கினியாவின் எண்ணெய் வளம் சிக்கிக் கொண்டுள்ளது. அதே சமயம், லிபியாவின் அதிபர் கடாஃபியோ, தனது நாட்டில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான், ஓக்ஸிடென்டல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் உரிமத்தை சென்ற ஆண்டு அக்டோபரில் புதுப்பிக்க மறுத்தார். கினியாவில் ஓபியாங்கின் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்கா பக்கபலமாக இருப்பதற்கும், லிபியாவில் அதிபர் கடாஃபியைத் தூக்கியெறியும் நோக்கத்தோடு அமெரிக்க  ஐரோப்பிய கூட்டுப் படை போர் தொடுத்திருப்பதற்கும் பின்னுள்ள காரணம் இதுதான்.

____________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?

34

பூலோகத்தின் சொர்கத்தில் இன்றைய தேதியில் இரண்டரை கோடி பேர்களுக்கும் மேல் வேலையில்லாமல் அலைகிறார்கள். சுமார் ஒரு கோடி வீடுகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. 14.3 % மக்கள் வறுமையில் வாடுவதாக அதிகாரப்பூர்வமான கணக்கீடுகளே தெரிவிக்கின்றன; அதாவது ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் 2,573 குழந்தைகள் சோற்றுக்கு வழியற்ற ஏழைக் குடும்பங்களில் பிறக்கின்றன. மாணவர்களின் கல்விக்கடன் 40 லட்சம் கோடிகள், நுகர்வோர் கடன் நூறு லட்சம் கோடிகள், கடன் அட்டை வைத்திருப்போரின் கடன் அளவு 800 பில்லியன் – ஆக மொத்தம் தமது அன்றாடத் தேவைகளைக் கூட கடன் வாங்கித் தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற நிலையில் சுமார் 25 கோடி பேர் வாழ்கிறார்கள்.

இப்படி சகல பிரிவு மக்களும் ‘இன்பமயமான’ வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த சொர்க்க பூமியில் பிரதி வருடம் சுமார் நாற்பது லட்சம் கோடிகள் மட்டும் தான் இராணுவத்திற்காக செலவிடப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் 0.076 சதவீதம் பேரின் கையில் மட்டுமே ஆயிரத்து எண்ணூத்தி நாற்பது லட்சம் கோடியளவிலான செல்வம் குவிந்துள்ளது.

மேலே விவரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தின் பெயர் – அமெரிக்கா.

டபிள் டிப் டிப்ரஷன் - திவால் ஆனது அமெரிக்கா மட்டும்தானா

ஒவ்வொரு தொழிற்சாலையாய் அக்கு அக்காய் பிரித்து சீனத்துக்குக் கப்பலில் அனுப்பிய நிலையில் இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்து நிற்கும் அதே நேரத்தில், பெரும் நிறுவனங்களின் சி.இ.ஓக்களின் சம்பளம் 30% அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டின் முதல் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் 31 சதவீதத்தை லாப வளர்ச்சி விகிதமாகக் காட்டி அதே 31 சதவீத அளவுக்கு வரி விலக்குப் பெற்றுள்ளன. இன்றைய தேதியில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை (14.34 Trillion) விட அதனுடைய கடனின் (14.6 Trillion) அளவு அதிகம். அமெரிக்கா செலவிடும் ஒவ்வொரு டாலரிலும் 40 சென்ட் கடன் தொகையாக இருக்கிறது.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?இன்று மொத்த நாடே கடன்காரனாய் உலக அரங்கில் நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  அமெரிக்க அரசின் கடன் பெரும் தகுதியை (credit worthiness) S&P எனும் தரநிர்ணய நிறுவனம் குறைத்துள்ளது. அமெரிக்கா போண்டியாகி நிற்பது உலக முதலாளித்துவ கட்டமைவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள முதலாளித்துவ பத்திரிகைகள் அச்சத்தில் அலறுகின்றன. பல நாட்டுத் தலைவர்களும் தமது தூக்கத்தைத் தொலைத்து வால் ஸ்ட்ரீட்டை அவதானித்து வருகிறார்கள். அவர்களின் இதயத் துடிப்பு, டோவ் ஜோன்ஸின் குறியீடுகள் எழுந்தால் எழுகிறது – விழுந்தால் விழுகிறது.

இன்றைய இந்தப் பொருளாதார நிலை டபுள் டிப் ரெஷசன் – அதாவது இரண்டாம் பொருளாதார நெருக்கடி – என்று முதலாளித்துவ உலகத்தால் சொல்லப்பட்டாலும், இது 2008-ல் துவங்கிய சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சி தான். இன்னும் சொல்லப் போனால், மூன்றாண்டுகளுக்கு முன் உலகை ஆட்டிப்படைத்த சர்வதேச பொருளாதார நெருக்கடி இன்னும் முடிந்து விடவில்லை என்பதே எதார்த்த உண்மை. இன்றைய அமெரிக்க ஓட்டாண்டித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் 2008-லிருந்து உலகைப் பீடித்து ஆட்டி வரும் பொருளாதார நெருக்கடியையும், தவிர்க்கவியலாமல் அதனை உண்டாக்கிய முதலாளித்துவ கட்டமைப்பின் உள்முரண்பாடுகளையும் புரிந்து கொள்ளவது அவசியம்.

குதியற்றவர்களுக்கு வீட்டுக் கடன் கொடுத்தோம். அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை எனவே நாங்கள் திவாலாகி விட்டோம்’. ஃப்ரெடி மேக் மற்றும்  ஃபான்னி மே ஆகிய நிதிமூலதன வங்கிகள் மண்ணக் கவ்வியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஒவ்வொரு வங்கியாக திவாலாகத் துவங்கிய போது இவ்வாறு தான் சொன்னார்கள். ‘சந்தை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்’ ( market will heal itself) எனவே அரசுகள் பொருளாதாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கவேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் சொன்ன பொருளாதாரக் கோட்பாடுகளையெல்லாம் தூக்கி உடைப்பில் போட்டு விட்டு அரசுக்குக்கு கருணை மனு போட்டு வரிசையில் நின்றார்கள்.

அமெரிக்க நிதிமூலதன நிறுவனங்களை மீட்க பல்வேறு தவணைகளாக அவ்வரசு அழுத மொத்த தொகை மட்டும் சுமார் 8.5 ட்ரில்லியன் டாலர்கள் – 8500000000000$ அல்லது சுமார் 340 லட்சம் கோடி ரூபாய்கள். முதலாளித்துவத்தை படுகுழியில் இருந்து மீட்பதற்காக பாய்ச்சப்பட்ட இந்த பிரம்மாண்டமான தொகை எதார்த்தத்தில் சாதித்தது என்னவென்பதைப் பற்றியும், இன்று தனது கடன்பெறும் தகுதியை அமெரிக்கா இழந்து நிற்பதற்கான காரணங்களையும் பற்றி பார்க்கும் முன், பெருமந்தத்திற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் பற்றி சுருக்கமாகக் கவனிப்போம். விரிவான தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளது.

என்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகள் துவக்கத்திலும் நாஃப்தா (NAFTA) ஒப்பந்தம் அமுலுக்கு வந்த போது மெக்சிகோவுக்கும், பின்னர் தொண்ணூறுகளின் இறுதியில் சீனத்துடன் பொருளாதார உறவுகள் சீரடைந்த போது சீனத்துக்கும், தொடர்ந்து சில லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை மாற்றிக் கொண்டன. அமெரிக்காவில் ப்ளூ காலர் வொர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் சம்பளம் மற்றும் இன்னபிற சலுகைகளை ஒப்பிடும் போது இந்த மூன்றாம் உலக நாடுகளின் உழைப்புச் சக்தி மிகவும் மலிவானது என்பதும் லாபம் அதிகம் என்பதும் இதற்கான முதன்மையான காரணங்களாக இருந்தன.

இப்படி, படிப்படியாக வெவ்வேறு துறைகளின் உற்பத்தி அலகுகள் மாற்றப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த இடத்தில் முதலாளித்துவ ஆதரவாளர்கள் இதை வேறு வகையில் நியாயப்படுத்தக்கூடும். அதாவது, ‘ இப்படிப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவு தான் இந்தியாவில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படவும் பலருக்கு வேலை கிடைக்கவும் காரணமாக இருந்துள்ளன’ என்பது அவர்களது வாதமாக இருக்கும். ஆனால் இது ஒரு பொய்த்தோற்றம்தான், உண்மையோ நேர்மாறானது.

புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை உலகை ஒரு பெரும் சங்கிலியால் இணைத்துள்ளது. மூலதனம் தனது தேசிய அடையாளத்தை இழந்து தேச எல்லைகளைக் கடந்து பரவி நிற்கிறது. உலகம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்கும் இப்பொருளாதாரச் சங்கியிலியின் தலைக் கண்ணியாக இருக்கும் அமெரிக்காவின் பங்கு என்பது, பிற நாடுகளில் உற்பத்தி செய்வதை வெறுமனே நுகர்வது மட்டும் தான். அதாவது, உலகப் பொருளாதாரமே மெல்ல மெல்ல அமெரிக்க நுகர்வுக்கான ஏற்றுமதி சார் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, அமெரிக்க நுகர்வில் பங்கம் ஏற்பட்டால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியும், உழைப்புச் சக்திகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவிலோ உள்நாட்டு வேலைகள் மெல்ல மெல்ல அருகி, ஒரு கட்டத்தில் பலரும் வேலையிழந்து தமது அன்றாடத் தேவைகளுக்குக் கூட கடன்களையே சார்ந்திருக்கச் செய்கிறது. இது ஒருபக்கம் இருக்க, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னிருந்தே நுகர்வுக் கலாச்சாரம் அமெரிக்க சமூகத்தில் மிக வலுவாகவும் கவனமாகவும் முதலாளித்துவத்தால் புகுத்தப்பட்டது. கடன் வாங்கியாவது பொருட்களை நுகரும் ஒரு சமுதாயமாக அமெரிக்கா மாற்றியமைக்கப்பட்டது.

2008-ல் பொருளாதார நெருக்கடியைத் துவக்கி வைத்த ரியல் எஸ்டேட் குமிழியின் வெடிப்புக்கான காரணமும் இதில் தான் ஒளிந்து கிடக்கிறது. நடுத்தர வர்க்கத்தை விடாமல் துரத்தி அவர்கள் தலையில் வீடுகளைத் திணித்தன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் மத்தியிலும் அமெரிக்காவில் வீடுகள் வாங்கியோரில் பெரும் சதவீதத்தினர் வீடு வேண்டும் என்று வங்கிகளை அணுகியவர்கள் அல்ல. நமது ஊரில் கடன் அட்டைக்காக தொலைபேசியில் தொடர்ந்து நச்சரிப்பதைப் போல அங்கே வீடுகளை வாங்கச் சொல்லி பல்வேறு வகைகளில் ஆசை வார்த்தைகள் காட்டியுள்ளனர்.

இப்படி இவர்கள் தெரிந்தே தான் அனைவருக்கும் கடன் கொடுத்துள்ளனர். இந்தக் கடன்களின் மேல் இருக்கும் நம்பகமற்ற தன்மையை (Risk factor) தவிர்த்துக் கொள்ள அவர்கள் வால் ஸ்ட்ரீட்டை அணுகினர்.  உதாரணமாக, ஒரு வீட்டின் உண்மையான மதிப்பு ஒருலட்சம் என்றால், அதற்குக் கொடுக்கப்பட்ட கடன் பத்திரத்தை சர்வதேச பங்குச் சந்தையில் ஊக பேர சூதாட்டத்தில் சுற்றுக்கு விட்டனர். பல்வேறு கைகள் மாறி மாறி அப்பத்திரங்களின் மதிப்பு நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில், வீடுகளை வாங்கியவர்கள் கட்டமுடியாமல் திரும்ப ஒப்படைக்கிறார்கள். இவ்வாறு foreclosure செய்யப்பட்ட வீடுகளின் தவணைத் தொகையையும் கூட கந்து வட்டிக்காரன் போல் விடாமல் துரத்தி வசூலித்தன வங்கிகள். பலரும் திவால் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் – மேலும் ஒழுங்காக தவணை கட்டிக் கொண்டிருந்த பலரும் வருமானம் குறைந்து கட்டமுடியாத சூழலில் வீடுகளைத் திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டவுடன், இந்த மாயக் குமிழி மொத்தமும் வெடித்துச் சிதறுகிறது.

இதற்குள், இந்தச் சூதாட்டப் பணம் பல நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாய்ந்திருந்தது. தமது அஸ்திவாரம் ஆட்டம் கண்டதும் வெளியே சுழன்று கொண்டிருந்த பணத்தை ஒன்று பதுக்கினார்கள் அல்லது உள்ளிழுத்துக் கொண்டார்கள். இதனால் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட நடுக்கம், உலகெங்கும் அதிர்வலைகளை அனுப்பியது. இந்தியா சீனா ஐரோப்பா ஜப்பான் என்று ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக அனைத்து பங்குச் சந்தைகளின் குறியீடுகளும் படுபாதாளத்தில் வீழ்ந்தன. ரியல் எஸ்டேட் மட்டுமல்லாது, கட்டுமானப் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், உணவுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டங்களின் விளைவாய் உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளில் புழங்கும் பணத்தில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. அதாவது இந்த வர்த்தக சூதாட்டம் உண்மைப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தில் நடைபெறவில்லை.

அமெரிக்காவின் உள்நாட்டுச் சந்தை கவிழ்ந்து கிடக்கும் நிலையில் அதற்கான ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களின் தேக்கமும் அதைத் தொடர்ந்து இங்கே சம்பளக் குறைப்பு ஆட்குறைப்பு என்று ஒரு பக்கம் அடிவிழுகிறது என்றால், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையே பிரம்மாண்டமான சூதாட்டச் சந்தையாக மாற்றப்பட்டதால் ஊக பேர வணிகத்தில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களைக் கவ்வுகிறது.

இது வெறுமனே முதலாளித்துவ உலகின் ஒரு நெருக்கடியல்ல; இது முதலாளித்துவ கட்டமைவின் நெருக்கடி. முதலாளித்துவ உற்பத்தியின் மிக அடிப்படை நோக்கமே மூலதனத் திரட்சி தான். இந்த மூலதனத் திரட்சிக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. தொழிலாளிகளைச் சுரண்டுவது, கூலியைக் குறைப்பது என்பதெல்லாம் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்தே எழுகிறது. அதனால் தான், தமது ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றினர். ஆலைகள் செல்லும் நாடுகளில் உள்ள உழைப்புச் சுரண்டல் காரணமாகவும், உள்நாட்டில் ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வேலையின்மையும் உற்பத்திப் பண்டங்களின் நுகர்வைத் தடுக்கிறது. அதாவது செல்வம் முதலாளித்து வர்க்கத்திடம் குவிய குவிய பிற மக்கள் தொடர்ந்து தங்களது வருமானத்தை இழந்து வருகிறார்கள். இது முதலாளித்துவ கட்டமைப்பின் ஒரு அடிப்படை முரண்பாடு.

இந்த அடிப்படையான முரண்பாட்டின் விளைவு தான், அமெரிக்கச் சந்தையின் சரிவு திருப்பூர் பனியன் தொழிலாளி வரையில் பாதிப்பை உண்டாக்குகிறது.

மூலதனத் திரட்சி என்பது ஒரு கட்டத்தில் உற்பத்தி – நுகர்வு என்கிற வட்டத்தின் சுழற்சியால் மட்டுமே நிகழ்வதில் சிக்கல்  ஏற்படும் போது முதலாளித்துவம் தவிர்க்கவியலாமல் ஊக பேர வர்த்தகத்தைச் சரணடைகிறது. ஒரு பண்டத்தின் உண்மையான மதிப்பை விட பல ஆயிரம் மடங்கு அதன் மதிப்பு மிகையாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டு நடக்கும் அந்தச் சூதாட்டக் குமிழ் ஒரு கட்டத்தில் வெடித்தே ஆகவேண்டியுள்ளது. சப் ப்ரைம் நெருக்கடி என்று சொல்லப்பட்ட சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இதற்கான ஒரு துலக்கமான சான்றாக நம்முன் நிற்கிறது.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?தமது சூதாட்டத்தைத் தொடரமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு நின்ற நிதிமூலதனச் சூதாடிகளைக் கைதூக்கி விட முதலில் 35 லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுத்தார் புஷ். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஒபாமா, பல்வேறு சந்தர்ப்பங்களில் வால் ஸ்ட்ரீட்டுக்குள் பாய்ச்சிய தொகையின் அளவு 8.5 ட்ரில்லியன் டாலர்கள். உழைக்கும் மக்களின் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட அரசாங்கம் செய்து கொடுக்கக் கூடாது என்று கட்டளையிடும் முதலாளித்துவம் அரசிடம் இருந்து ‘நிவாரணம்’ பெற கூச்சமே படவில்லை.

தாம் பெற்ற இந்த பிரம்மாண்டத் தொகையைத் தமது போட்டி நிறுவனங்களை வளைப்பதற்கும் இணைப்பதற்குமே பெருமளவு பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு முறை பெரும் தொகை சந்தைக்குள் பாய்ச்சப்படும் போதும் அது காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைந்து காணாமல் போயுள்ளது.

அமெரிக்க அரசு இவர்களுக்கு அளித்த இந்த பெரும் தொகையில் கணிசமான அளவு மக்களின் வரிப்பணம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான தொகையிலிருந்து வெட்டப்பட்டது என்றாலும், பெருமளவிலான தொகை அமெரிக்கப் பொதுக் கடன்பத்திரங்களை விற்பதன் மூலமும் திரட்டப்பட்டது. சந்தையைச் சரிவிலிருந்து காப்பாற்றுவதற்கான நிவாரணத் தொகையாகச் சொல்லப்படும் இந்த 8.5 ட்ரில்லியன் டாலரில் ஒரு கணிசமான பங்கு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கப்பட்ட தொகை. இதை, அமெரிக்க அரசு மக்கள் மேல் விதிக்கும் வரிவருவாயிலிருந்தோ அல்லது கடன் பத்திரங்களை விற்பதன் மூலமோ திரட்டி வங்கிகளுக்கு அடைக்க வேண்டும்.

கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? வங்கித் துறையின் சரிவைக் காக்க வங்கிகளிடமிருந்தே பணம் பெறப்பட்டு அதை அடைக்க மக்களின் தலைமேல் கை வைப்பதோடு மட்டுமே இந்த முதலாளித்துவ அராஜகங்கள் முடிவுறவில்லை.

அமெரிக்காவில் டாலரை அச்சிடும் பொறுப்பை 12 பெடரல் ரிசர்வ் வங்கிகள் தான் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் 12 பெடரல் ரிசர்வ் வங்கிகளும் தனியாருக்கே சொந்தமானது. இதில் பங்குதாரர்களாக இருக்கும் நிதிமூலதன கும்பல் தான் அமெரிக்காவின் பணக் கொள்கைகளைத் (Monetory policies) தீர்மானிக்கின்றனர். மேலும், கணிசமான அளவுக்குக்  கடன்பத்திரங்களைத் தாமே ரிசர்வில் வைத்திருக்கின்றனர். அவற்றை வெளிச்சந்தையில் விநியோகிப்பதும் இதே தனியார் நிதிமூலதன வங்கிகள் தான். எனவே, எதார்த்தத்தில் அமெரிக்க அரசு கடன்பத்திரங்கள் மூலம் திரட்டும் தொகையையும் தனியார் வங்கிகள் தான் தீர்மானிக்கின்றன.

இது ஒரு விசித்திரமான சுழற்சி. அதாவது, அமெரிக்கக் கருவூலத்திற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன; அப்படி வாங்கிய கடனைக் கொண்டு வங்கிகளுக்குக் கடன் கொடுத்து பெயில் அவுட் செய்யப்படுகின்றது. இதில் கடன் வாங்கியது யார் கொடுத்தது யார்?

இது ஒரு புறம் இருக்க, அமெரிக்க அரசு வெளியிடும் அரசுப் பொதுக்கடன் பத்திரங்களின் ‘கடன்பெறும் தகுதியை’ (credit worthiness) S&P, Moody’s, Fitch போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் நிர்ணயம் செய்வதும்  இதே நிதிமூலதன வங்கிகள் தான்.

இது இவ்வாறு இருக்க, கடந்த வாரங்களில் சர்வதேச நாணய நிதியம் IMF தனது கடன் கொள்கைகளைத் திருத்தி அமைத்துள்ளதாகச் செய்தி வந்தது. அதன் படி, பொருளாதார சீர்குலைவுகளைச் சரிசெய்ய ஜி-20 நாடுகள் எனப்படும் வளர்முக நாடுகள் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. உடனே, தனது தலையங்கத்தில் இதைக் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைந்த தினமணி, அமெரிக்காவுக்கே கடன் கொடுக்கும் நிலைக்கு புனித பாரதம்  உயர்ந்து விட்டதாக சொறிந்து கொண்டது.

ஆனால், எதார்த்தம் என்னவென்பதை ஐ.எம்.எஃப் மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “சர்வதேசப் பொருளாதார கட்டமைப்பில் ஏற்படும் திடீர் குழப்பங்களைக் களைந்து கொள்ளும் முகமாகவும் சர்வதேசப் பொருளாதாரத்தின் சமன்பாட்டை நிலைநாட்டவும்” இந்நாடுகளிடம் இருந்து இப்போதைக்கு 500 பில்லியன் டாலர்  அளவுக்கு நிதி திரட்டும் திட்டம் இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், எப்போதெல்லாம் சர்வதேச அளவில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆன்மாவாக இருக்கும் நிதிமூலதன சூதாட்ட கும்பல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா போன்ற ஏழை நாடுகள் தண்டம் அழ வேண்டும் என்பதே.

ஏற்கனவே அமெரிக்கா தனது மக்களின் ஓய்வூதியம், சேமிப்பு என்று சகலத்தையும் வால் ஸ்ட்ரீட்டை நோக்கித் திருப்பி விட்டுள்ளது; அதுவும் போதாமல் தனது கடன்பத்திரங்களையும் விற்று படையல் வைத்துள்ளது. இப்போது, அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் இறக்கப்பட்டுள்ளதால், ‘சர்வதேச பொருளாதாரத்தை’ காக்கும் வேலை ஏழை நாடுகளின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா ஒழுங்காக மாமூல் வந்து சேர்கிறதா என்று பார்த்துக் கொள்ளும் சண்டியர் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும்.

ஆக, இப்போது தரமிறக்கப்பட்டுள்ளதும் கூட அமெரிக்காவுக்கு பல்வேறு வகைகளில் சாதகமானது தான்.  இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அன்னியச் செலாவணியாக தேங்கிக் கிடக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை சூதாட்டச் சந்தைக்கு இழுத்து வந்து சுழற்சிக்கு விடும் வேலையை ஐ.எம்.எஃப் கவனித்துக் கொள்ளும். முரண்டு பிடிக்கும் நாடுகள் என்று எதாவது இருந்தால் அதை அமெரிக்க இராணுவம் கவனித்துக் கொள்ளும்.

நிதி மூலதனம் என்பது ஏற்கனவே தேச எல்லைகளையும் அடையாளங்களையும் கடந்து உலகம் முழுவதும் விரவி நிற்கிறது. நவீன தொலைத் தொடர்பு, மற்றும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட இவர்களின் வலைப் பின்னலின் இயக்கம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டதொன்று. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் பெரும் மூலதனத்தை ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்குக் கடத்துவதும், ஒரு சூதாட்டத்திலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுவதும் தடையின்றி நடக்கிறது. முன்பொருமுறை சிதம்பரம் மும்பைப் பங்குச்சந்தையில் தங்குதடையின்றி இறங்கும் அந்நிய மூலதனத்தைக் கட்டுப்படுத்திக் கண்காணிப்பது குறித்து லேசாக முணுமுணுத்ததற்கே சென்செக்ஸ் குறியீட்டை ஐந்தாயிரம் புள்ளிகள் இறக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். உடனே அவர் தனது கருத்தை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவின் கடன் இப்போது அதிகரித்து தான் உள்ளது. ஆனால், அமெரிக்காவின் கடனை அடைப்பது என்பது அவர்களிடம் இருக்கும் அச்சடிக்கும் இயந்திரம் எத்தனை வேகமாக டாலரை அச்சிடுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கும் என்கிற நிலையில், அந்த டாலரின் மதிப்பை நிலைநாட்டும் இராணுவ வலிமையும் அரசியல் வலிமையும் அதற்கு இன்னமும் இருக்கும் எதார்த்தமான் சூழ்நிலையில் S&Pஇன் அறிவிப்பிற்கான மெய்யான பொருள் வேறு.  இந்தச் சூதாட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பொத்தாம் பொதுவாக பொருளாதார நெருக்கடி என்று சொல்வதும், அதனைத் தீர்க்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்று சொல்லி நட்டத்தை நமது தலையில் கட்டுவதும் தான் இப்போது அமெரிக்காவின் ‘கடன் நெருக்கடி’ நாடகங்கள் அவர்களுக்குப் பயன்படுகிறது

அமெரிக்காவின் இரண்டாவது பொருளாதார நெருக்கடி சுட்டிக் காட்டும் விசயங்கள் இரண்டு. ஒன்று உலகாளவிய முதலாளித்துவ பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்பது தற்போது வேறு வழியில்லாமல் வெளியே வருகிறது. அதுவும் வெறும் செய்தியாக இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைய பாதிக்கும் நடவடிக்கைகளோடு வருகிறது. இந்த நெருக்கடியின் ஊற்று மூலம் ஊக வணிகம் மூலம்தான் இலாபம் ஈட்ட முடியும் என்ற பகாசுர வெறி மற்றும் இழிவு நிலையில்தான் முதலாளித்துவம் வாழ முடியும் என்பது. இரண்டாவது இந்த நெருக்கடிக்கு காரணமாட முதலாளித்துவ நிறுவனங்களை தண்டிப்பதற்கு பதில் அந்த நெருக்கடியும் சுமையும் மூன்றாம் உலக நாடுகளின் மேல் தள்ளி விடப்படுகின்றன.

ஆகவே முதலாளித்துவத்திற்கு மரணக்குழி பறிக்காமல் உலக மக்கள் நிம்மதியான வாழ்வை வாழ முடியாது. அந்த வகையில் உலக முதலாளித்துவ கட்டமைப்பு தோற்றுவித்திருக்கும் இந்த அபாயத்தை உலக மக்கள் போராடுவதன் மூலமே வெல்ல முடியும். இன்று கிரீசிலும், இலண்டனிலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தொடரும் அந்த போராட்டங்கள் சரியான அரசியல் தலைமைக்காக காத்திருக்கின்றன.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

123
அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!
படம் – http://www.thehindu.com

ண்ணா ஹசாரேவுக்கு பெருகி வரும் ‘ஆதரவைப்’ பார்த்தால் பயமாக இருக்கிறது. பெயிட் நியூஸ் புகழ் டைம்ஸ் நௌ சேனலில் தொடங்கி என்.டி.டிவியின் தரகு வேலை புகழ் பர்க்கா தத், மாஃபியா உலகத் தொடர்பு மற்றும் கறுப்புப் பண புகழ் பாலிவுட் நடிகர்கள்,  கவர்ச்சிப் பத்திரிகை புகழ் ஷோபா டே, ஆயிரம் ஆ.ராசாக்களுக்கு இணையானவர் என்று தொடர் மின் அஞ்சல்களினால் புகழடைந்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், எடியூரப்பா புகழ் பாரதிய ஜனதா, வசூல்ராஜாவில் இளைஞர்களை போட்டுத் தாக்கிய சீனா தானா புகழ் ராக்கி சாவந்த், மற்றும் மலேசிய ஊழல் புகழ் டத்தோ சாமிவேலுவின் ஒரே இலக்கிய நண்பர் ஜெயமோகன் என்று நாட்டில் வாழும் உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.

ஊருக்கு உழைத்த உத்தமராம் அண்ணன் ஆட்டோ சங்கரை மட்டும் இந்தக் கேடு கெட்ட அரசு தூக்கில் போடாமல் இருந்திருந்தால் அவரும் கூட ஆதரித்திருப்பார். இன்னொரு உத்தமரான ஹர்ஷத் மேத்தா நெஞ்சு வெடித்துச் செத்துப் போனதால் அவருக்கும் வாய்ப்புக் கிடைக்காமலேயே வைகுண்டம் போனது ஒரு சோகம் தான். ஆக்கிரமிப்புப் புகழ் அமெரிக்காவே ஆதரித்திருப்பதால் அவ்விடத்தின் விசேடத் தயாரிப்பான பின்லேடனும் கூட ஆதரித்திருப்பார். துரதிருஷ்டவசமாக அன்னாரும் அல்லாவின் சொர்க்கத்தை அடைந்து விட நேர்ந்து விட்டதால் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்.

உச்ச கட்டமாக, கடந்த சில நாட்களாக கற்பழிப்புகளின் தலைநகரம் என்று போற்றப்படும் தில்லி மாநகரத்தில் எந்த கற்பழிப்புச் சம்பவங்களோ கொலை சம்பவங்களோ இடம் பெறவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தில்லி நகரத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் துவங்கிய பின் குற்றச்சம்பவங்கள் 35% அளவிற்குக் குறைந்துள்ளதாக போலீசு உயரதிகாரிகளே தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் காணப்படுகிறது. ஏதோ நல்லது நடந்தால் சரி தான். ஆனால், இந்த ‘நல்லது’ இன்னும் கொஞ்சம் நாட்கள் தொடர வேண்டுமானால் மேற்படி காரியங்களில் ஈடுபடும் யோக்கியர்களை ராம்லீலா மைதானத்திலேயே இருக்கச் செய்வது அவசியம். அதற்கு அண்ணா இன்னும் கொஞ்சம் நாட்கள் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டும். அதற்கு காங்கிரஸ் மனது வைக்க வேண்டும்.

இவ்வாறாக நாடும் நாட்டிலுள்ள நல்லவர்களும் அண்ணாவின் பின்னே திரண்டிருப்பதாகவும் மான ரோசமுள்ளவர்கள் அனைவரும் இதில் தமது பங்களிப்பைச் செலுத்தியே வேண்டும் என்று ஊடகங்கள் கொலைவெறியோடு கூத்தடித்துக் கொண்டிருந்த சூழலில் தான் நமது வினவு தளத்தின் சென்னைப் பகுதி செய்தியாளர்களுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது. பதிவுலக புகழ் குருஜி போன்ற அறிவு ஜீவிகளே மெய்யுலகில் அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு அலைமோதுவதாக சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருந்ததால், நாம் சென்னையில் அண்ணா ஹசாரேவுக்காக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சென்று பார்த்து வந்தால் என்னவென்று யோசிக்க, 20ம் தேதி என்று அதற்கு நாங்கள் நாள் குறித்தோம். தமிழகத்தில் அண்ணாவுக்காக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்யும் அந்த கனவான்கள் யாரென்று அறிந்து கொள்வதில் ஒரு த்ரில் இருந்தது.

________________________________________________________________

சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. நாங்கள் காலை பத்துமணிக்கே சென்று விட்டோம்.  முகப்பிலேயே “குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன்லோக்பால்” என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்து பீதியூட்டியிருந்தனர். சாலையோரங்களில் பளபளப்பான ப்ளக்ஸ் பேனரில் ஆத்திரம் பொங்க முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணா ஹசாரே ‘இந்தியனே எழுந்து வா’ என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

கட்டிடத்தின் முன்பக்கம், சாலையோரமாக ஐ.டி துறையில் பணிபுரியும் சில அண்ணா ஆர்வலர்கள் நின்று கொண்டு தேசியக் கொடியை தேசபக்தியுடன் ஆட்டிக் கொண்டிருந்தனர். சேப்பாக்கத்தில் இந்தியா பாக்கிஸ்தான் மேட்சைப் பார்க்க வரும் ரசிகர்களைப் போல முகத்திலும் மற்றும் வெளியே உடல் தெரிந்த பாகத்திலெல்லாம் தேசியக் கொடியை வரைந்து வைத்திருந்தனர். வருவோர் போவோரிடமெல்லாம் “சார் சார் கரப்ஷனுக்கு எகென்ஸ்ட்டா ஒரே ஒரு சைன் பண்ணிட்டுப் போங்க சார்” என்று அழைத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் “கரப்ஷன்.. டவுன் டவுன்” என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

சரியாக நாங்கள் நுழைந்த நேரமாகப் பார்த்து சாலையில் ட்ரைசைக்கிளில் காய்கறிகளை வைத்துக் கொண்டு சென்ற ஒரு வியாபாரியையும் கையெழுத்திட அழைத்தனர். சரியாகப் புரியாமல் குழம்பியவர், “இன்னாது இது” என்று விசாரித்தார். ‘சார் ஊழலை ஒழிக்க ஒரு கையெழுத்து…..” என்று ஒரு பெண் ஆர்வலர் இழுக்க, “அடப் போம்மே… வோட்டுப் போட்டே ஒழியல; கையெழுத்துப் போட்டா ஒழியப்போவுது” என்று விட்டு சைக்கிளை ஏறி மிதிக்க ஆரம்பித்தார். “இல்லிட்டரேட் மோரோன்” என்று அந்தப் பெண் ஆர்வலர் பக்கத்தில் நின்ற வட இந்திய ஆர்வலரிடம் முனகிக் கொண்டே முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

நாங்கள் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தோம். ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் தன்னார்வ இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பேஷன் பெரேடுக்கு வந்ததைப் போல் உடையணிந்து கொண்டு லேப்டாப்பும் ஐ.போனும் சகிதம் பரபரப்பாக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கழுத்திலும் இடையிலும் ஐ.டித் துறை ஊழியர்கள் அணிவது போல் புகைப்படத்துடன் கூடிய ஐ.டி கார்டுகள் தொங்கியது. அதில் ஒருவரை மடக்கி நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்தோம். “சார் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவா ஆறு நாளா இங்க உண்ணாவிரதம் இருந்திட்டு இருக்காங்க சார். லோக்கல் மீடியா கவரேஜ் கிடைக்கல சார். ஒன்லி நேஷனல் மீடியாஸ்” என்று விசனப்பட்டுக் கொண்டார். ஏற்பாடுகளைப் பற்றி கேட்டோம். “இங்கெ பண்ணிருக்க அரேன்ஞ்மென்ட்ஸ் எல்லாம் டொனேஷன் வந்ததிலேர்ந்து தான் பண்ணிருக்கோம். நீங்க உள்ளே போங்க அப்புறமா பேசுவோமே” என்று நகர்ந்தார்.

உள்ளே ஒரு பெரிய ஹால். அதில் ஒரு பக்கம் மேடை போல அமைத்திருந்தனர். அதில் சிலர் அமர்ந்திருந்தனர். அதில் இரண்டு காவியுடைச் சாமியார்களைக் காண முடிந்தது. மூன்று இருபத்தோரு இன்ச் எல்.சி.டி டீவிக்கள் பொருத்தியிருந்தனர். அதில் டைம்ஸ் நௌ செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே கடந்த ஆறு நாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.

சில அய்யராத்து மாமிகள் தங்கள் குழந்தைகளுக்கு நேரு ட்ரெஸ் போட்டு கையில் கொடியோடு அழைத்து வந்திருந்தனர். அந்தக் குழந்தைகளை வரிசையாக மேடையில் நிற்க வைத்து போட்டோ பிடித்துக் கொண்டனர். இது இரண்டாம் சுதந்திரப் போராட்டமல்லவா? நாளைப் பின்னே ‘நானும் கச்சேரிக்குப் போனேன்’ என்று பொளந்து கட்ட இது போன்ற ஆவணங்கள் அவசியமாயிற்றே? இதில் யார் குழந்தையை முன்னே நிறுத்தி முழுமையாக கவர் செய்து கொள்வது என்பதில் சுதந்திரப் போராளிகளின் தாய்மார்களுக்கும் லேசாக முட்டிக் கொண்டது. நாகரீக மனிதர்களல்லவா அதனால் உண்டான உள்ளக்கடுப்பை நாசூக்கான மொழியில் ‘ஷிட்’ என்று வெளியேற்றிக் கொண்டார்கள்.

நாம் மேடையை நெருங்கினோம். ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஒருவர் காலாற நடக்க எண்ணி எங்களைக் கடந்து சென்றார். ஐந்து நாள் சாப்பிடாமல் படு உற்சாகமாக காணப்பட்ட அவரை அணுகி பேச்சுக் கொடுத்தோம். “சார்… மொத்தல்லே ‘ஜன்லோக்பால்’ அப்படின்னா ஒரு சமஸ்கிருத வார்த்தை. ஏற்கனவே இருக்கற லோக்பால் வேஸ்டு சார். இப்போ.. நாம ஒத்தர் மேல கம்பளெயின்ட் கொடுக்கறோம்னு வைங்க. ஒருவேள அது ருஜுவாகல்லேன்னா நம்பளயே பிடிச்சு உள்ள போட்ருவான் சார். ஆனா பாருங்க இந்த ஜன் லோக்பால்ல அப்படியெல்லாம் சிட்டிசன்சுக்கு ப்ராப்ளம் இல்லை” என்று துவங்கியவரை நாம் இடைவெட்டினோம் –

“சரிங்க.. இப்ப பாத்தீங்கன்னா, ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கங்களேன். டாடா அம்பானியெல்லாம் தான் இதனாலே பலன் அடைஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட இருந்து இந்த ஊழலாலே ஏற்பட்ட நட்டத்தை எப்படி வசூலிப்பதுன்னு ஜன்லோக்பால் ஒன்னும் சொல்லலியே. அதுமட்டுமில்லாம, ரிலையன்ஸே அண்ணா ஹசாரேவை ப்ரமோட் பன்ற டைம்ஸ் நௌவுக்கு விளம்பரமும் கொடுக்கறாங்க. இதைப் பத்தி என்ன சொல்றீங்க” என்றோம்.

“அதாவது சார்.. ஜன்லோக்பால் வந்தா நாட்டுக்கு நல்லது சார். அப்படி இல்லாட்டா அண்ணா ஹசாரே இவ்வளவு தூரம் போராட மாட்டாரே? வயசானவரு  பாஸ் அவரு… புரிஞ்சுக்கங்க. ரிலையன்ஸைப் பொருத்தளவில இது அவங்களுக்கு பிஸினஸ் பாஸ். பொலிடீஷியன்ஸ் தான் இந்த மாதிரி டீலிங்ஸை பத்திரமா பாத்துக்கனும்.. ஏன்னா அதுக்குத் தானே அவங்களை எலக்ட் பண்ணிருக்கோம்? அப்படிச் செய்யாத போது ஜன்லோக்பால் அவங்களை தண்டிக்கும் பாஸ்”

“அது சரிங்க, ஆனா நீங்க சொல்றாப்ல பார்த்தா, ஆ. ராஜா வாங்கின லஞ்சத்தை மட்டும் ரெக்கவர் பண்ணித் தர்றது தான் ஜன்லோக்பாலோட வேலை. கூடவே அவருக்கு ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ உள்ள வைப்பாங்க. ஆனா, அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடில வர்ற  மத்த அமௌன்டெல்லாம் பிஸினஸ் தானா?”

“ம்ம்ம்… அது வந்து.. எனக்கு சரியா சொல்லத் தெரியலை.. ஆனா, ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீர்ந்துடும் அவ்ளோதான். சரி நான் கொஞ்சம் பிஸி. நீங்க எங்க வாலண்டியர்ஸ் யார்ட்டயாவது பேசிப்பாருங்களேன்” என்றவாறே எஸ்கேப்பாகப் பார்த்தவரைத் தடுத்து,

“சரி.. ஒரே ஒரு கேள்வி. ஜன் லோக்பால் அமைப்பால் ஊழல் பணத்தை இரண்டே வருசத்தில் ரெக்கவர் செய்ய முடியும்னு சொல்றீங்களே, சாதாரணமா இந்த மாதிரி பணமெல்லாம் ஸ்விஸ் வங்கில தானே போட்டு வைக்கிறாங்க? அந்த நாட்டு சட்டப்படி நீங்க கேட்ட போதெல்லாம் பணத்தைத் திரும்பத் தரமாட்டானே அதுக்கு ஜன்லோக்பால் என்ன வழி சொல்லுது?” என்று கேட்டோம்.

“ம்ம்ம்… அது சார்… அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். நீங்க ஆர்க்கனைசர் கிட்ட கேளுங்களேன்” என்று விட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். அவர் சுத்தமாகக் களைப்பே இல்லாமல் படு உற்சாகமாகவும் தெம்பாகவும் இருந்தார். ஐந்து நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்தும் கூட இப்படி ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் ‘உண்ணா’விரதம் பற்றி வியந்து கொண்டே முதலில் சந்தித்த போராட்ட அமைப்பாளரைத் தேடிப் பிடித்தோம்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்டவரிடமிருந்தும் மேலே உள்ள கேள்விகளுக்கு அதே விதமான பதில் தான் வந்தது. நாட்டில் நிலவும் ஊழலுக்கான காரணம் என்னவென்று கேட்டோம்,

” பாஸ்… இந்த நாட்டை ஆள்றது  யார் தெரியுமா?”  என்று விட்டு எங்களை உற்றுப் பார்த்தவர் எங்களிடம் இருந்து எந்த மறுமொழியும் வராதது கண்டு திருப்தியுற்றவராகத் தொடர்ந்தார் ” ரோமன் கத்தோலிக் கும்பல் தான் சார் இந்த நாட்டையே ஆள்றாங்க. முதல்ல இந்த சோனியா காந்திய நாட்டை விட்டுத் துரத்தினாலே ஊழல் ஒழிஞ்சுடும் சார்… க்ரிஸ்டியன் மிஷனரிஸோட சதி தான் சார் இப்ப நம்ம நாட்ல இத்தன ஊழல் நடக்கறக்கே காரணம்” என்று சொல்லி விட்டு ஏதோ பெரிய சதியைக் கண்டுபிடித்து விட்டவர் போல் பெருமையாகப் பார்த்தார்.

“அப்ப கர்நாடகாவில் எடியூரப்பா செய்த ஊழலுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று சிரிக்காமல் முகத்தை வைத்துக் கொண்டே கேட்டோம்.

“ஆங்.. அது வேற பாஸ். நீங்க மொத்தமா பார்க்கனும் பாஸ்.. இப்ப பாருங்களேன், படிச்ச நாம இப்படி கஷ்டப்படறோம்.. படிக்காத மக்களுக்கு எதுவுமே புரியலை பாத்தீங்களா… இங்க வந்திருக்கதில ஒத்தனாவது லோக்கல் ஆளு இருக்கானா சார்? இப்படி இருந்தா எப்படி சார் நாடு முன்னேறும்?” என்று நமது கேள்விக்கு பதில் அளிக்காமல் அடுத்த பிரச்சினைக்குள் தாவினார்.

” அப்படியா… ஆனா, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடிப்படையாக அமைந்த சட்டங்களைப் போட்டதே பாரதிய ஜனதா ஆட்சியில தானே அதுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று மீண்டும் அதே இடத்துக்கு வந்தோம்.

“சார்.. நீங்க கேட்டதையே கேட்கறீங்க.. முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீரும். இப்ப அதை எதிர்க்கறது யாரு? காங்கிரஸ் தானே? சோனியா தானே? அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே? ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்? பாருங்க சார்.. ஆ.ராசா மாதிரி ஒத்தரை மினிஸ்டர் ஆக்கினா ஊழல் நடக்கத்தானே செய்யும்? அமைச்சர் ஆக்கினது யாரு? சோனியா தானே? அதான் சொல்றோம்… பர்ஸ்ட்டு பேர்ப்பர்லாம் படிங்க சார். தோ.. நாங்க பாம்லெட்ஸ் கூட போட்ருக்கோம் படிச்சி பாருங்க” என்று பொங்கித் தள்ளியவரின் அரசியல் புரிதல் எமது தலைகளை 360 டிகிரிக்கு சுழற்றியடிக்கவே கேள்வியை மாற்றினோம்.

“சரிங்க லோக்கல் ஆளுங்க யாருமே பெரிசா வரலியே.. அதிகமா நார்த் இண்டியன் ஐ.டி வொர்க்கர்ஸா தெரியறாங்களே?” என்றோம்..

“ஏன்.. நான் கூட தமிழ் தான் சார்.. மொழியெல்லாம் பார்க்காதீங்க சார். இப்படிப் பாத்துப் பாத்து தான் தமிழ்காரன்னாலே நார்த்ல கேவலமா பாக்கறான். லோக்கல் சேனல்லெ பெரியளவில கவரேஜ் பண்ண மாட்றான்.. இதே சன் டி.வில ஒரு கவரேஜ் கிடச்சிருந்தா ஒரு பத்தாயிரம் பேராவது வந்திருப்பான்.. பட் அன்பார்சுனேட்லி கிடைக்கலே.. ஆனா இங்க வந்திருக்கவங்கெல்லாம் குவாலிட்டி பீபிள்.. தீஸ் பீபிள் கேன் மேக் சேஞ்சஸ்.. யு நோ? படிக்காதவன் வந்தா ஓக்கே.. வரலேன்னா அவனுக்கும் சேத்தே நாம தானே பார்த்துக்கனும்?” என்றார்..

“ஏன் டி.வி கவரேஜ் வேணும்? நேரா மக்களைப் பாத்து போராட்டத்துக்கு வரச் சொல்லி கூப்பிடலாமே?” என்று கேட்டோம்.

“நாங்க எல்லாமே வொர்க் பன்றவங்க. ஒன்லி சாட்டர்டே அன்ட் சன்டே லீவ். மோர் ஓவர், மத்த நாள்ல வேற பர்செனல் கமிட்மென்ட்ஸ் இருக்கும். சோ.. இதையே ஒரு வேலையா வச்சில்லாம் பண்ண முடியாதுங்க. நேரம் கிடைக்கும் போது பண்றோம். தட்ஸ் ஆல்.. சோ.. மக்கள் தான் டி.விலயோ நியூஸ்லயோ பாத்துட்டு வரணும்.. போய் சொல்லலாம் நேரம் கிடையாது. ஓக்கே?” என்றவாறே நகரப் பார்த்தவரிடம் அடுத்து ஒரு கேள்வியைப் போட்டோம்.

“ஜன்லோக்பால் மசோதாவையும் அண்ணா ஹசாரேவையும் ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸில் இருந்து டைம்ஸ் நௌ சேனல், பர்க்கா தத், உள்ளிட்டு பலரின் மேலும் கூட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே? பாரதிய ஜனதாவே பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட கட்சியாயிற்றே? இங்கும் கூட பல பாரதிய ஜனதா கட்சியினரையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரையும் காண முடிகிறதே?”

“அதாவதுங்க… ஒரு நல்ல விஷயம் நடக்குது. அதுக்கு யார் சப்போர்ட் பண்ணா என்னா சார்? நல்லவனோ கெட்டவனோ ஒரு பொதுக்காரியம்னு வரும் போது சப்போர்ட் பண்ணா அதை ஏத்துக்கிடறது தானே புத்திசாலித்தனம்?” என்றார்.  எமக்கோ, ‘கோழி குருடா இருந்தா  என்ன.. கொழம்பு ருசியா இருக்கா பாரு’  என்கிற கவுண்டமணியின் வசனம் காதுகளுக்குள் ரீங்கரித்தது.

“அப்படின்னா… ஆ.ராசாவும் சுரேஷ் கல்மாடியும் கூட ஜன்லோக்பாலை ஆதரிச்சா அந்த ஆதரவை ஏத்துக்கிடுவீங்களா?” என்றோம்

“…” பதில் எதையும் அளிக்காமல் எங்களைக் கடந்து சென்று விட்டார் அவர்.

__________________________________________________________

பார்ப்பனர்கள், வட இந்தியர்கள், பார்ப்பனராக துடிக்கும் சில மாநிறத் தோல் வசதியான தமிழர்கள் என்ற கூட்டத்தில் கருப்புத் தமிழன் ஒருவர் கூட இல்லை. மொத்த கூட்டத்தில் சுண்டி இழுக்கும் வெள்ளை நிறம் கொண்டோர் சுமார் 80 சதவீதம் இருக்கும். அவ்வகையில் இங்கு சராசரி தமிழர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. நாங்கள் பேசிய அனைவருமே சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்தார்கள். இட ஒதுக்கீட்டை இகழ்ச்சியுடன் எதிர்க்கும் மனநிலை பலருக்கும் இருந்தது. இதைத்தாண்டி, ஈழம், மூவர் தூக்கு, விலைவாசி உயர்வு என எந்த பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது கவலைப்படவில்லை. மேலும் ஜன் லோக்பாலின் என்றால் என்ன, அதன் விசேசம் என்ன என்று அநேகமாக யாருக்கும் தெரியவில்லை.

முகத்தில் தேசியக்கொடி பெயிண்ட் அடிக்க ரூ.20, பதிவுக் கட்டணம் ரூ.20, ஸ்டிக்கர் ரூ.10 என்று உள்ளே நுழைபவர்கள் கட்டாயமாக மொய் எழுதவேண்டும். இதைத்தாண்டி நன்கொடை தனி. நன்கொடைகூட பத்து இருபது எல்லாம் பர்சில் பதுங்கிக் கொண்டு நூற்றில் தொடங்கி விழுந்தவாறே இருந்தது. டைம்ஸ் நௌ நேரடி ஒளிபரப்பிற்காக அவ்வப்போது ஒருவர் இயக்குநர் போல ஷாட்டை ரெடி செய்தார். காமரா முன்னர் அழகானவர்களை நிற்க வைத்து, காமரா பின்னால் இருவரை முழக்கமிட வைத்து, காமரா மேன் காமராவை ஷேக் செய்து எடுப்பது மூலம் ஏதோ பெரிய கூட்டம் இருப்பதாக செட்டப் செய்து காண்பித்தார்கள். ரோமன் கத்தோலிக்க சதி என்ற இரகசியம் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தொடங்கி அக்ரஹார மாமிகள் வரை பேசும் பொருளாக இருந்தது. வட இந்தியர்களோடு கொஞ்சம் ஆந்திர ஐ.டி கும்பலும் இருந்தது.

இதற்கிடையே “பாரத் மாதா கீ ஜே” “வந்தே மாதரம்” என்கிற கூச்சல்கள் காதைக் கிழித்துக் கொண்டு கிளம்பவே அது வந்த திசையை நோக்கிச் சென்றோம். அங்கே அண்ணாவின் ஆதரவாளர்கள் சிலர் நகரை பைக்கில் வலம் வந்து கொண்டிருப்பதன் ஒரு அங்கமாக இந்நிகழ்வு நடக்கும் இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். முன்னே சில பைக்குள் கடந்து சென்றதைத் தொடர்ந்து சில கார்களும் அந்த பவனியில் தொடர்ந்து வந்தன.

அதிலொன்றின் பின் சீட்டில் டீ ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து அமர்ந்திருந்த ஒரு இளைஞர் வலது கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்தார். அதில் ஒரு தேசியக் கொடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தார் – இடது கையில் பாதி குடித்திருந்த நிலையில் ஒரு கிங் பிஷர் பாட்டில்! பீரும் தேசியக் கொடியும் செம காம்பினேஷன்! பதிலவுலக குருஜியின் மெய்யுலக அறிவை எண்ணியும் ஒரு ஆச்சரியம் அப்போது வராமலில்லை.

காரின் உள்ளே ஏர். ஆர். ரகுமான் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார் – “வண்ட்டேஏஏஏ ஏமாத்தரம்ம்ம்ம்ம்…”

_____________________________________________________________

– வினவு செய்தியாளர்கள்
______________________________________________________

இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?

5

நூல் அறிமுகம்: “நிலம் என்னும் நல்லாள்”

“இல்லாதவர்கள் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் பொதுவுடைமை பேசுகிறார்கள், இருப்பவர்கள் இழக்க நேரிடுமே என்று முதலாளித்துவம் பேசுகிறார்கள்”, என்றார் நண்பரொருவர். அவர் சொல்வது உண்மையாக இருந்தால் இல்லாதவர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு இந்நேரம் புரட்சி வெடித்து சோசலிசமல்லவா மலர்ந்திருக்கவேண்டும்?

ஒரு போதும் செல்வந்தர்களாகிவிட முடியாதென்று தெரிந்தாலும்  செல்வம் சேர்த்துவிடலாமமென கற்பனை செய்துக்கொண்டாவது வாழ்க்கையை தள்ளுகிறவர்களை  எல்லோருக்கும் எல்லாம் என்ற சோசலிசத்தை நோக்கி வருவதற்கு எது தடுக்கிறது?

கம்யூனிசம் என்றால் இப்போது இருக்கும் நிலையியிலிருந்து கீழேதான் வாழ வேண்டியிருக்கும் என்று  பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் என்றால் தமக்கு எதுவும் கிடைக்காதென அவநம்பிக்கை கொள்கிறார்கள். (எனில், மற்றவர்களிடமிருந்து சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுதான் அது தன்னிடம் வருகிறது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் எனபது ஒரு பக்கம்.) தமது வசதி வாய்ப்புகள் பறி போய்விடும், தற்போதைய சுகமான வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

இதில், முதலாளித்துவத்தின் வதந்திகள் – “தமது பெண்களும் பொதுச் சொத்தாகி விடுவார்கள் அல்லது உனக்கென்று எந்த சொத்தும் இருக்காது, உன் வருங்கால சந்ததிக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது, இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முடியாது, கம்யூனிசமென்றால் எல்லோரும் சோம்பேறிகளாகி விடுவார்கள், யாருக்கும் பொறுப்பு இருக்காது அல்லது  கடினமாக உழைப்பவருக்கும் படுத்துறங்கி நாளைக் கழிப்பவருக்கும் வித்தியாசமில்லையா” முதலான அவதூறுகள் காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து இன்றளவும் பரப்பப்பட்டு உயிருடன் அலைந்து கொண்டிருக்கின்றன.

அதோடு, இல்லாதவர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை கிடைக்க வழி செய்வதுதானே, அவர்களை மேலே முன்னேற வைப்பதுதானே என்று தமக்கிருப்பதை இழக்காமல் வாழ்வதையே சமத்துவமாகக் கருதிக்கொள்கிறார்கள்.

உண்மையில் கம்யூனிசம் மக்களுக்கு இதைத்தான் வழங்குகிறதா? புதிய சமுதாயத்தை, வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கு உறுதி அளிக்கும் கம்யூனிசம்,மக்களிடமிருந்து இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பறித்துக்கொண்டு முன்பு வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையைவிட கீழே தள்ளிவிடப் பார்க்கிறதா?

சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மனிதகுலம் காணாத சாதனைகளை குறுகிய காலத்தில் அம்மக்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

எனில், அது அவ்வளவு எளிதாகவா இருந்தது? முதலாளித்துவ நாடுகளில் சுரண்டல்களுக்கிடையிலே வாழும் நமக்கே இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்போது குதிரைகள்,மாடுகள், கோழிகள், கொஞ்சம் நிலம் என்று விவசாயம் செய்த அம்மக்கள் எந்த பிரச்சினையுமின்றி சோசலிசத்தை ஏற்றுக்கொண்டனரா?

நிச்சயமாக இல்லை.  சொத்துரிமைக்காக உடன்பிறந்தவராக இருந்தாலும்  ஜென்மப்பகை பாராட்டுவதை பைபிள் காலத்திலிருந்தே காணலாம். ஒரு சதுர அடி நிலம் உடன்பிறந்தவனுக்கு அதிகப்படியாகப் போய்விட்டது என்ற காரணத்துக்காக ரத்தம் சிந்தி ஜெயிலுக்கு செல்வதை நாம் கண்கூடாகவே கண்டிருப்போம். கையளவு நிலமாக இருந்தாலும் கூட அவ்வளவு எளிதில் யாரும் விட்டுக்கொடுத்து விடுவதில்லை. இணையத்தில் கூட யாரிடமாவது ஏதாவது பிரச்சினையென்றால் “அவருக்கும் எனக்கும் வாய்க்கா வரப்புத் தகராறா” என்ற கமெண்டை சர்வசாதாரணமாகக் காணலாம். எனில்,நிலத்தின் மீது மக்களுக்கிருக்கும் பிணைப்பை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

அப்படியிருக்கும்போது, நிலத்தை அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டு விவசாயம் செய்ய வேண்டுமென்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர்? எல்லாம் ஒரு சொடுக்கில் வழுக்கும் வெண்ணெய் போல நடந்து விட்டதா? முதலாளித்துவம் பரப்பிவருவது போல உண்மையில் சர்வாதிகாரமாகத்தான் சோவியத் ஆட்சி நடைபெற்றதா? கூட்டுப்பண்ணைக்காக ருஷ்ய மக்கள் தங்களது சொத்துரிமையை இழந்தனரா?

இந்த கேள்விகளுக்கு மட்டுமல்ல,  கூட்டுப்பண்ணைக்காக, சோசலிசத்துக்காக தங்களை தயார்படுத்திக் கொண்ட க்ராமியாச்சி கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களை, கலகங்களை, சந்தேகங்களை, துரோகங்களை நம் கண்முன் விரிக்கிறது  – மைக்கேல் ஷோலோக்கோவ் எழுதிய ”நிலம் என்னும் நல்லாள்” நாவல்.

_____________________________________________

க்ராமயாச்சி கிராமத்தில் கூட்டுப்பண்ணையை உருவாக்குவதற்காக மாவட்ட கமிட்டியால் அனுப்பப்படுகிறார் டாவிடேவ். அவர் வரும் போதே கிராமத்தில் நடுத்தர விவசாயிகளை, வழி தவறிச் செல்பவர்களையும் பற்றி அறிவுறுத்தப்பட்டே அனுப்பப்படுகிறார்.

கிராம சோவியத்துக்குச் சென்று செயலாளரையும், தலைவரையும் சந்திக்கிறார். அவர்கள் ஒரு கூட்டுச்சங்கம் இருப்பதாகவும் , டிராக்டர் இல்லாததால் மாடுகளை வைத்து உற்பத்தியை பெருக்குவதும், வாங்கிய கடன்களை அடைக்கமுடியததாலும் அது செத்ததாகவும் ஆகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்,செயலாளர் நாகுல்நாவும், தலைவரான ரஷ்மியட்நாவும்.

மேலும் கூட்டுச்சங்கத்தின் தலைவர் வியாபாரியாக மாறிவிட்டதாலும் சரியானபடி இல்லையென்று சொல்கிறார்கள். டாவிடேவ் ஏழை கொசாக்கியர்களையும் விவசாயிகளையும் அடுத்த நாளே கூட்டுப்பண்ணை சங்கம் தொடர்பாக சந்திக்கவும் கூட்டம் கூடவும் வேண்டுமென்கிறார்.

இதற்கிடையில் பழைய தளகர்த்தர்கள் போலீஸ்டீவும், யாக்கோவ் லூக்கீச்சும் இரவு முழுக்க கூடிப்பேசுகிறார்கள். அதில் போலீஸ்டீவ் கார்ல் மார்க்ஸின் கம்யூனிச அறிக்கையை வாசித்திருப்பதாகவும், கூட்டுப்பண்ணை அவர்களது சொத்துகளை முழுக்க அபகரித்துவிடுமென்று அறிந்திருப்பதாகவும் கூறுகிறான்.”கூட்டுப்பண்ணையில் ஆரம்பித்து கம்யூனில் கொண்டுபோய் கடைசியில் சொத்துரிமையையே அது ஒழித்துவிடும். மாடுகள், காளைகள் மட்டுமல்ல,குழந்தைகளைக் கூட அரசாங்கமே எடுத்துக்கொள்ளும், வாத்து சூப்பும், கோதுமைக் கஞ்சியும் சாப்பிட நமக்கு பிரியமாக இருந்தாலும் புளித்த பீரைத்தான் கொடுப்பார்கள், கொத்தடிமையாக கடைசிவரை நிலத்தோடு கட்டுண்டு கிடக்க வேண்டியதுதான்” என்று பேசி இருவரும் தங்களது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையிலும் கம்யூனிஸ்டுகளுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் எதிராக போரிடுவதாக கையொப்பம் இடுகிறார்கள்.

அடுத்தநாள் தீவிர தொழிலாளிகளும், கொசாக்கியருமாக 32 பேர் ஆண்களும் பெண்களுமாக கூடியிருக்க, டேவிடாப் கூட்டுப்பண்ணையை பற்றியும் அதன அவசியத்தைப் பற்றியும் பேசுகிறான். ரத்தத்தை உறிஞ்சும் நிலச்சுவான்தார்களை ஒழித்து ஆடுகள், மாடுகள், கருவிகளை சமூகச் சொத்தாக்கினால் மட்டுமே அனைவரும் நீடித்து வாழ முடியும். நிலச்சுவான்தார்களிடம் தானியம் இருந்தாலும் அவர்கள் கொடுக்க மனமில்லாமல் கீழே கொட்டுவதால்தான் வறுமையில் வாடுகிறீர்கள், உங்களிடம் கொடுக்க மனமிருந்தாலும் தானியங்கள் இல்லை. கூட்டுப்பண்ணை ஒன்றினால்தான் விவசாயி வறுமையிலிருந்து விடுதலை பெறமுடியும். இல்லையென்றால் இரக்கமற்ற நிலச்சுவான்தார்கள் இரத்தத்தை உறிஞ்சிவிடுவார்கள் என்று தோழர் லெனின் இறக்கும் போது கூட கூறியதாகவும் சொல்கிறான்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. உடனடியாக சேர பலர் முன்வருகிறார்கள். அவர்களது வர்க்க உணரச்சியை பாராட்டும் டாவிடேவ், இவர்களே சோவியத் ரஷ்யாவின் ஜீவநாடி என்றும் கூட்டுப்பண்ணையில் சேர தயங்கிக்கொண்டிருக்கும் நடுத்தர விவசாயிகளையும் அழைத்துவரவேண்டும் என்று கூறுகிறான்.

இதன் நடுவில் நாகுல்நாவ் உணர்ச்சி மேலிட்டவனாய், சொத்துரிமையால் தங்கள் குடும்பத்துக்கும் அண்டை வீட்டார் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சிறுபகை எப்படி அண்டைவீட்டுக்காரரின் மகனை காவு கொண்டது என்றும் அதற்காக தான் பல ஆண்டுகள் தன் குடும்பத்தை விட்டு விலகியதையும் கூறுகிறான். நகரத்தில் தொழிலாளியாக இருந்து தற்போது போல்ஷிவிக்காக திரும்பி வந்திருப்பதாகவும் நடப்பவற்றை பார்க்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் உலகபுரட்சி அண்மையில் நம்மை நாடி வந்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறான்.

அடுத்ததாக, நிலச்சுவான்தார்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. தானியங்கள், கால்நடைகள், கருவிகள் அனைத்தும் பதிவேடுகளில் குறிக்கப்பட்டு பொதுச் சொத்தாக்கபடுகிறது. இதை ஏற்கெனவே ஊகித்த சில நிலச்சுவான்தார்கள் தங்களது செல்வத்தை,கால்நடைகளை விற்று தங்கமும் காசுகளுமாக்கி புதைத்து வைக்கின்றனர். அல்லது தெரிந்த நண்பர்களிடம் கொடுத்தனுப்பி விடுகின்றனர்.

நிலச்சுவான்தார்களின் வீட்டை நோக்கி போகும் குழுக்கள் அவர்களின் வீடுகளில் பெண்களையும் குழந்தைகளையுமே காண்கின்றனர். அவர்களும் பயத்தில் உறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தட்டுமுட்டு சாமான்களை சாக்குகளில் கட்டியபடி இருக்கின்றனர். அல்லது காவல்நாய்களை அவிழ்த்துவிட்டு  கூட்டுச்சங்கத்தாரை கடிக்கவிடுகின்றனர்.

குழுக்கள், வீடுகளிலிருந்து ஆடைகளை, புது பூட்சுகளை, தங்கம் போன்ற தானியங்களை, தேனை  களஞ்சியத்துக்கு கொண்டு வருகின்றனர். கந்தல் துணிகளை தைத்து தைத்து வரிகள் விழுந்த ஆடைகளைக் கொண்டவர்களுக்கு புது ஆடைகள் வழங்கப்படுகிறது. ஒரே ஆடையை துவைத்து நிர்வாணமாக நின்று கணப்பு அடுப்பருகே உலர்த்திவிட்டு அதே ஆடையை அணிந்து கொள்ளும் மக்கள் அடுத்த குளிர்காலம் வரை இது வரும் என்ற மகிழ்ச்சியை புதிய ஆடைகள் தருகிறது.

குழுவில் ஒருபகுதியினர் நிலச்சுவான்தார்கள் ஓட்டிச் சென்ற குதிரை,கால்நடைகளை தேடி நிலச்சுவான்தார்களிடம் துப்பாக்கி இருந்தாலும் உயிருக்கு பயப்படாமல் பின் தொடர்ந்து சென்று அவர்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இதற்கு நடுவில் அக்குழுவில் ஒருவனான ஆன்றி தன்னால் நிலச்சுவான்தார்களிடமிருந்து பொருளை கைப்பற்ற முடியாதென்றும் தான் அதற்காக பயிற்றுவிக்கப்பட்டவன் அல்லவென்றும் நிலச்சுவான்தார்களை ஒழிப்பது பாவமென்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள்  மரண பயத்தில் மூழ்கி கிடக்கிறார்களென்று இரக்கமேற்படுவதாகவும் கூறி பின்வாங்குகிறான்.

ஆன்றியிடம், “நம் குழ்ந்தைகள் வடித்த கண்ணீருக்காக நம் விரோதிகள் என்றாவது அழுததுண்டா அல்லது தாங்கள் கொன்ற குழந்தைகளுக்காக கலங்கியது உண்டா?வேலை நிறுத்தம் நடந்தபோது எனது தாய்க்கு வேலை போய்விட்டது, நாலு பிள்ளைகள், அவள் எங்களுக்கு உணவு வழங்குவதற்காக நாள் முழுவதும் சுற்றி விருந்தினருடன் வருவாள். திரைக்கு அந்தப்புறம் நாங்கள் இருப்போம். சிறுபிள்ளைகள். சமயத்தில் குடிகாரர்கள் வருவார்கள். என் தங்கைகள் அழுதுவிடக்கூடாதென்று அவர்கள் வாயை பொத்துவேன். அப்படி சம்பாதித்த காசுதான் எங்களுக்கு ரொட்டி வாங்க பயன்பட்டது . இப்படிபட்டவர்கள் மீதா இரக்கப்படுகிறாய்  இத்தகைய குறைபாடுகள் அற்ற சமுதாயத்தைதான் உருவாக்க முயல்கிறோம். வருங்காலத்தில் மீண்டும் அது நிகழக்கூடாது. மிராசுதாரரின் பிள்ளை மிராசுதாரராக முடியாது அப்படி நினைத்தால் தொழிலாளி வர்க்கம் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்” என்று சொல்லி ஆன்றியை சிந்திக்க வைக்கிறான்.

க்ராமயாச்சி கிராமத்தில் திரும்பவும் கூட்டுப்பண்ணை தொடர்பாக கூட்டம் நடக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் பல சந்தேகங்கள். கேள்விகள். கோழி முட்டையொத்த நிலத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களால் விரிந்த முறையில் கூட்டுப்பண்ணையை பார்க்க முடியவில்லை. இரு குடும்பங்கள் இருந்தால், அதில் முதலில் பெண்களுக்கிடையில் சண்டை வரும் அதனால் ஆண்கள் பேசிக்கொள்ளமாட்டார்கள். விரிசல் பெரிதாகி தனித்தனியாகிவிட வேண்டியதுதான். குடும்பங்களுக்கே இப்படி என்றால் கூட்டுப்பண்ணைகள் வெற்றி பெறுவது எப்படி என்றெல்லாம் சந்தேகங்களும் கேள்விகளும் வருகின்றன.

யாவுமே சமூகச் சொத்தாக்கப்படுமா?

வீடுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சொந்த நிலங்களைப் வைத்து வேலை செய்வோரின் நிலை என்னவாகும்?

அவர்களிடமிருந்து நிலம் எடுத்துக்கொள்ளப்படுமா?

எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவதா?

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளிக்கிறான் டேவிடாவ். தற்போது இருப்பதை விட நிலைமை மோசமாகிவிடாதென்றும், கம்யூனிசம் அவர்களை  புதிய சமுதாயத்தில் உந்தித் தள்ளுகிறது என்றும் பாலைக் குடிக்காவிட்டால் கன்றுக்குத்தான் நஷ்டமென்றும் உணர்ந்து கொண்ட விவசாயிகள் கூட்டுப்பண்ணையில் சேர விண்ணப்பிக்கின்றனர்.

இருநூற்று பதினேழு குடும்பங்களில் அறுபத்தி ஏழு பேர் மட்டும் சேர கையை உயர்த்தினர். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. இத்தனை நாள்கள் எங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழவில்லையா என்று  நடுத்தர விவசாயிகள் பலரும் தயக்கத்துடன் இருக்கின்ற்னர்.

அடுத்தநாளே ஒரு கூட்டமாக குதிரைகளும்,ஆடுமாடுகளும் கிராம சோவியத்தின் முன்பு நின்றது. மக்கள் மனுக்களை கொடுத்து கூட்டுப்பண்ணையில் சேர்ந்தனர். கூட்டுப்பண்ணைக்கு “ஸ்டாலின்” என்று பெயர் வைத்தனர். நாகுல்நாவும் தச்சர்களும் சேர்ந்து மாட்டுக்கான கொழுவை அடித்தனர். க்ராமியாச் கிராமத்தில் சமூகத்துக்காக பொதுவாக செய்யப்பட்ட முதல்காரியமாக அது இருந்தது.

தங்களது சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த நிலச்சுவான்தார்கள் கொசாக்கியரை வஞ்சம் தீர்க்க  ஒன்றாக கூடி திட்டம் தீட்டுகிறார்கள். இதற்கு நடுவில் நிலச்சுவான்தார்களால் ஒரு கொசாக்கிய விவசாய தம்பதியினர் கொலையுண்டு போகிறார்கள். இதுவும் நிலச்சுவான்தார்களின் வேலை.

கூட்டுப்பண்ணையில் சேர்ந்த யாக்கோவ் லூக்கிச் இரட்டை வாழ்க்கை வாழத் துவங்கினான். பகலில் கூட்டுப்பண்ணையில் உடம்பு நோக வேலை செய்வான். இரவில், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலச்சுவான்தார் போலஸ்டீவுக்கு உதவிக் கொண்டிருப்பான்.

பனி பெய்யும் பிப்ரவரி மாதம். சூரியன் உதயமாகி பனியை உருகியோடச்செய்யும். பனி உருகியதும் நிலம் காய்ந்து வெடிக்கும். யாக்கோவ் லூக்கிச் தனது ஆடுகளை வெட்ட ஆரம்பிக்கின்றான், லூக்கிச் புரட்சி ஏற்படு முன்னரே செல்வம் சேர்க்க ஆரம்பித்துவிட்டான். மகனை கர்னலுக்கு படிக்க வைக்க வேண்டும். சீமாட்டியை திருமணம் செய்விக்க வேண்டும். ஒரு ஆலையை கட்ட வேண்டும். தங்க சங்கிலியில் கடிகாரம் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும். தனது மகனையும் சீமாட்டியை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால், புரட்சி அத்தனையிலும் மண்ணள்ளி போட்டுவிட்டது.

தனது சொத்தில் ஒன்று கூட செஞ்சேனைக்கு சென்று விடக்கூடாதென்று திட்டமிட்டிருந்தான். அதன்படி ஆடுகளை அடித்து களஞ்சியத்தில் தொங்கவிட்டார்கள். லூக்கிச்சின் தூண்டுதலின் பேரில் கிராமத்தில் இரவு தோறும் கால்நடைகள் வெட்டப்பட்டன. அனைவரும் தின்ன முடியாமல் கறியை வயிறு முட்ட தின்றனர். வயிற்றுவலியால் அங்குகிங்கு நகரவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

இப்படி கால்நடைகள் சம்காரம் செய்யப்படுவதை கேள்விப்பட்ட டேவிடாவ் கூட்டுச்சங்கத்தை கூட்டினான். கால்நடைகளை வெட்டுவோர் கூட்டுப்பண்ணையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், அப்படி வெளியேற்றினால் கூட்டுப்பண்ணையில் ஒருவர் கூட மிஞ்ச முடியாது. கூட்டம் முடியும் போது கிராமத்தார்கள் ஒருவரோடொருவர் பேசியபடி கலைந்து சென்றனர் – “அவள்தான் வெட்டு வெட்டு என்று என்னை தூண்டிவிட்டாள், வீட்டுக்குப் போய் கவனித்துக்கொள்கிறேன், அவளை நன்றாக”.

குதிரைகளுக்கு கொட்டகை கட்டப்பட்டது. எல்லா குதிரைகளும் கொண்டு வந்து விடப்பட்டன. குதிரைக்குச் சொந்தக்காரர்கள் தங்களது குதிரைக்கு அதிகம் வைக்கோல் போடுமாறு கவனித்துக்கொள்பவனை கேட்டுக்கொண்டனர். இரவுகளில் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றனர். அவர்களில் யாருக்கும் அவ்வளவு எளிதில் சொத்துமீது ஆசை போகவில்லை.  ஆனால் கூட்டுப்பண்ணை ஆரம்பமானதில் இருந்து கிராமத்தில் ஒரு புதுவித பரபரப்பு தோன்றியிருந்தது. கால்நடைகளைக் கொல்வதும் நின்றது.

அடுத்துக்கூடிய கட்சி கூட்டத்தில், ஸ்டாலின் கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களின் கால்நடைகளை மட்டுமில்லாமல், கோழி-வாத்து போன்றவற்றையும் சமூகமயமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.  இதற்கு பெண்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பு இருந்தது. மழைக்காலத்துக்குள்ளாக குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வாங்கிவிடலாமென்றும் அவை நூற்றுக்கணக்கில் பொரிக்க உதவுமென்றும் பிடிவாதமாக இருக்க வேண்டாமென்றும் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள், வருத்தப்பட்டார்கள், சிரித்தார்கள், பறவைகளையும் கோழிகளையும் பொதுக்கூண்டுக்குள் அடைத்தார்கள். கோழிகள் முட்டையிட்டன. அவையெல்லாம் பொதுவாக சேமிக்கப்பட்டன.

நடுவில், புது வதந்தி கிராமத்தை சுற்றியபடி இருந்தது. அதாவது, கூட்டுப்பண்ணையில் நீராவி இயந்திரம் இல்லாத காரணத்தால் முட்டை பொரிக்க வைக்க அறுபது வயதுக் கிழவிகளை அடைக்காக்க சொல்லப் போவதாக வந்த வதந்திதான் அது. இதைக்கேட்டு கிழவிகள் கோபமடைந்துவிட்டார்கள், சிறு சிறு நாற்காலிகள் செய்து அதனடியில் வைக்கோலைப் பரப்பி முட்டையை வைத்து கிழவிகளை அடைகாக்க சொல்ல்ப்போகிறார்கள், முடியாதென்று சொல்லும் கிழவிகளை நாற்காலியோடு கட்டுப்போட்டு விடுவார்கள் என்ற வதந்தியை ஒரு கன்னியாஸ்திரி மூலமாக பண்ணையார்கள் பரப்பிவிட்டார்கள் நல்லவேளையாக அந்த கன்னியாஸ்தீரி கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களிடம் அகப்படவில்லை.

டேவிடாவுக்கும், கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களுக்கும் ஒரு விவாதம் வந்தது. அதாவது, இந்த பறவைகள் விஷயம் சிறிதானதுதான். உண்மையில், செய்திருக்க வேண்டியது நூற்றுக்கு நூறு அங்கத்தினர்களை சேர்த்துவிட்டு விதைப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், கூட்டுப்பண்ணையை கம்யூனாக்கிக்கொண்டிருக்கிறோம். இது இடதுசாரி வழுக்கல். ஒரு போல்ஷிவிக்குரிய  வீரத்தோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு கோழிக்குஞ்சுகளை உரியவர்களுக்கு திருப்பிக்கொடுத்துவிடலாமென்று முடிவுக்கு வருகிறார்கள்.

இடையில், இரட்டை வேடமிட்ட லூக்கிச் போலீஸ்டீவின் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு கூட்டுப்பண்ணையை உள்ளிருந்தே சிதைக்கும் வேலையை தொடங்கியிருந்தான். குதிரைகள், மாடுகள் இரவில் படுக்குமிடத்தில் வைக்கோலுக்கு பதிலாக மணலை கொட்டுவது, அதனால் கால்நடைகளின் தோல் பனியில் சிக்கி சீரழிவது என்று நடந்து கொண்டிருந்தது.

அதோடு, விதைப்புக்கும் பயிரிடப்பட வேண்டிய ஹெக்டேர்களும், தானியங்களும் தீர்மானிக்கப்பட்டது. விதை தானிய வசூல், உற்பத்தி, கருவிகளை செப்பனிடுவது, வேலைப்பிரிவினை, விஞ்ஞான  முறையில் பயிடுவது  போன்றவை விவாதிக்கப்பட்டன. கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர்கள் தானியவசூலை ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் கூட்டுப்பண்ணை விவசாயிகளும், தனி விவசாயிகளும் தானிய வசூலை எதிர்த்தனர்.

ஏனெனில், தானியம் வசூலிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அடுத்த விதைப்பே இருக்காது. எந்த நேரத்தில் போர் வரலாம் போன்ற காரணங்கள்தான்.

இந்த வதந்தி காட்டுத்தீ போல கிராமமெங்கு பரவியது. ஆனாலும் தானிய வசூல் வெற்றியடையவே இல்லை. கொசாக்கியர்கள் ஏதாவது காரணம் சொல்லி வீட்டை விட்டு வெளியேறிவிடுவர்.

இவை நடுவில்,  நிலச்சுவான்தார்கள் போல்ஷ்விக்குகளை தாக்க ஒரு படையை திரட்டியிருந்தனர். காலியாக இருந்த நிலச்சுவான்தாரின் வீட்டை தலைமையலுவலகமாக மாற்றியிருந்தனர். அவர்களது நடவடிக்கைகள் யாருமற்ற இரவு வேளைகளில் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. குதிரைகளை லாயத்திலிருந்து திருடிக்கொண்டு படைகளை  அழைக்க சென்றனர். லூக்கிச்சும் அவர்களுடன் சென்றிருந்தான். கொசாக்கியர்களைப் பார்த்து கோலாஸ்டீவ் தாக்குதலுக்கு தயாராகும்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த பெரியவர் எழுந்தார்.

“நீங்கள் வருவதற்கு சற்று முன்னர்தான் அந்த பத்திரிக்கையை படித்தோம். ஸ்டாலின் எழுதிய கடிதம். அதைப்படித்தபின் நீங்களும் நாங்களும் வேறு என்று புலனாகிவிட்டது. நாங்கள் ஊழலை மட்டும்தான் எதிர்க்கிறோம், எங்கள் சோவியத்தை அல்ல. நாங்கள் கையெழுத்திட்ட மகஜர்களை திருப்பிக்கொடுத்துவிடுங்கள். எங்கள் கிராமத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்தான். உங்களுடன் சேர்ந்தால் வெளிநாட்டுப்படைகள் வரும். கம்யூனிஸ்டுகள் யார், நமது சகோதர்கள்தானே?” என்று அவர்களை துரத்தி விட்டார்கள்.

போலாஸ்டீவும், லூக்கிச்சிடம் முடிந்தவரை கூட்டுப்பண்ணைக்கு தீங்கு செய்துக்கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு குதிரைகளை விட்டு ஓடிவிட்டான். லூக்கிச்சுக்கு அவன் கிளம்பினதும்தான் மனமகிழ்வும் நிம்மதியும் ஏற்பட்டது. எதிர்புரட்சிக்காரர்கள் கிராமத்தை விட்டோடினர். ஸ்டாலினின் அந்தக்கட்டுரை வெள்ளப்பெருக்கினால் மூன்று வாரங்கள் தாமதமாக பல கிராமங்களை சென்றடைந்தது.

இந்த நாவலில், கட்சி அங்கத்தினர்களான டேவிடாவ்,நாகுல்நாவ், ரஷ்மியட்நாவ், போலீஸ்டீவ், லூக்கிச் கதாபாத்திரங்கள் உண்மையானவையே. சம்பவங்களும், கிராம மக்களது உணர்ச்சிகளும் உண்மையானவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையே.  இப்போது நாம் நாவலை வாசித்தாலும்  கூட்டுப்பண்ணையின் காலத்துக்கே சென்று வந்தது போலிருக்கிறது.

மக்களுக்கும் சொத்துக்குமான உறவைப் பற்றி சொல்வதில் ஷோலோக்கோவ் வெற்றி பெறுகிறார். சுயநலம், ஏமாற்றி பிழைத்தல்,மூடநம்பிக்கைகள், வதந்திகள் என்று பலவும் மக்களிடம் நிலவி வந்திருக்கிறது, இன்று போலவே. இழக்க ஒன்றுமில்லாதவர்கள், உழைக்கத் தயங்காதவர்கள் கூட்டுப்பண்ணையின் அவசியத்தை உணர்ந்து இணைய முன்வந்தாலும் நடுத்தர விவசாயிகளிடம் ஊசலாட்டம் இருந்திருக்கிறது.  மாலையில் தோன்றி மறையும் மின்மினி பூச்சிகளின் வாழ்க்கையையொத்த நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணத்தை எந்த போராட்டத்திலும் நாம் காணலாம்.

மிக சொற்பமான சொத்துகளே இருந்தாலும் எண்ணத்தில் செல்வந்தராகவும், அன்றாட வாழ்க்கையில் வறியோராகவும்  இருந்தாலும் என்றாவது சொத்து சேர்த்து செல்வந்தாராகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். உழைக்கும் மக்களைபோல தம்மீதான சுரண்டலை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இவர்களும் வர்க்க உணர்வு பெற்றால் சுரண்டலற்ற, சமத்துவமான,  ஒளிமிக்க எதிர்காலமான உலக புரட்சிக்கான நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்த நாவல் இரத்தமும் சதையுமான சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகள் குறித்த அழுத்தமான அனுபவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. சொத்துடமையின் வரலாற்று ரீதியான பண்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறியிருக்கும் மக்களை மாற்றுவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்த ஒன்று என்பதை இந்நாவல் பாத்திரங்களினூடாக நாம் உணர முடியும். ஆனாலும் இத்தகைய தடைகளை தகர்த்தெறிந்து அதற்கான பொறுமையையும், போராட்டத்தையும் கைவிடாத அந்த எளிய தோழர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கம்யூனிசம் என்பது எல்லா வசதிகளையும் செய்து தரும் சொர்க்க மல்ல. அது மக்களே தமது வாழ்க்கையை உழைத்து உருவாக்கும் ஒரு போராட்டம். அந்த போராட்டத் தருணங்களை நுகர விரும்புவர்கள் உடன் இந்த நாவலை படியுங்கள். கம்யூனிசம் குறித்து அறிய விரும்புவர்களுக்கு இந்த நாவல் கூட ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

நாவல்: நிலம் என்னும் நல்லாள் (Virgin soil Upturned)

பக்கங்கள்: 490, விலை ரூ. 200.00

ஆசிரியர்: மைக்கேல் ஷோலோக்கோவ்

தமிழாக்கம்: தா.பாண்டியன்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367

_________________________________________________

வேல்விழி

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !

30

லைப்பை பார்த்து விட்டு தினமணி அபிமானிகள் கோபிக்கக் கூடாது. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்று தினமணியின் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ஆசிரியர் வைத்தியநாதனின் மூக்குக்கு கீழே ஒரு முரட்டு மீசையும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆசிரியரை இப்படியா கொச்சைப்படுத்துவது என்று தினமணி அபிமானிகள் கோபப்படலாம். நாம் என்ன செய்வது? போயஸ் தோட்டத்தின் வாசலை மொய்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் ஆசிரியரின் நா வன்மை குறித்துத்தான் போவோர் வருவோரிடமெல்லாம் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் அம்மா வெற்றி பெற்றது குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இதொன்றும் தோட்டத்தில் நடக்காத அதிசயமில்லை. அம்மாவின் கருணையைப் பெற விரும்புவோர் எல்லோரும் செய்கின்ற காரியம்தான். எதிர்காலத்துக்கு வேண்டியதை செய்து வைத்துக் கொள்ளும் ஆசை எல்லோருக்கும் இருப்பதைப் போல வைத்தியநாதனுக்கும் இருந்திருக்கிறது. அவ்வளவுதான். உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது; பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

வதந்தியை ஆதாரமாக கொண்டு இப்படி ஒரு செய்தி வெளியிடுவதும், “நக்கினார்” என்று அதற்குத் தலைப்பு போடுவதும் நியாயமா என்று யாரேனும் கேட்பார்களேயானால், ஆகஸ்டு 15 தினமணியின் 11 ஆம் பக்கத்தைப் படிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். “மாசேதுங் ஜோசியம் பார்த்த புத்தர் மலை” என்று தலைப்பு போட்டு முக்கால் பக்க அளவில் ஒரு அண்டப்புளுகை வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர் வைத்தியநாதன்.

1949 இல் சீனாவில், வூதாய் மலையில் உள்ள புத்தர் கோயிலுக்கு வந்த மாவோ, அங்கே ஜோசியம் பார்த்தாராம். இதை நாங்கள் சொல்லவில்லை, அந்த ஊர் சுற்றுலா வழிகாட்டிகள் அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடம் இப்படித்தான் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறது தினமணி – இது முதல் வரி. அதாவது “நாங்கள் சொல்லவில்லை கைடுகள் சொல்கிறார்கள்” என்ற உத்தி இளித்தவாயர்களை ஏமாற்றுவதற்கு. ‘அந்த கைடுகள் விடுவது சரடல்ல உண்மைதான்’ என்று நக்கலாக தெரிவிப்பதற்காக சரடு என்ற சொல்லுக்கு தனியாக ஒரு மேற்கோள் குறி.

அதற்கு அடுத்த வரியில் “எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம் மாவோவுக்கும் இருந்திருக்கிறது” என்று ரொம்பவும் பெருந்தன்மையாக மாவோவின் பலவீனத்தை அங்கீகரிப்பது போன்ற தோரணையில் எழுதி, அவர் ஜோசியம் பார்த்தது உண்மைதான் என்ற கருத்தை தந்திரமாக நிலைநிறுத்துகிறார் ஆசிரியர், தில்லானா மோகனாம்பாள் வைத்தி.

சீனத்தின் எதிர்காலத்தை சிவப்பாக்கும் புரட்சியை வழிநடத்திய மாவோ, தன்னுடைய சொந்த எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஜோசியம் பார்த்தாராம். யாரிடம்? கம்யூனிச சீனத்தில் தங்களுடைய சொந்த எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருந்த புத்த பிக்குகளிடம்!

நம்மூரில் நாடி ஜோசியம் போல அங்கே நம்பர் ஜோசியமாம். மாவோ ஒரு சீட்டை எடுத்தாராம். 8341 என்று நம்பர் போட்ட சீட்டு வந்ததாம். அந்த நம்பருக்குப் பலன் என்ன என்பதை மாவோவுக்கு சொல்ல மறுத்துவிட்டார்களாம் பிக்குகள்.

“83 வயது வரை வாழ்வார், 41 ஆண்டுகள் ஆள்வார்” என்பதுதான் அந்த சீட்டு தெரிவித்த இரகசியமாம். அன்று முதல் இன்று வரை உலகத்தில் யாருக்குமே தெரிந்திராத அந்த இரகசியம், அங்கிருக்கும் சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதாம். அவர்கள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சாட்சி? யார் சொன்ன தகவல்? எந்த விவரமும் கிடையாது. ஆகஸ்டு 14ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில்தான் இந்த செய்தி முதலில் வெளிவந்திருக்கிறது. “ஏஜென்சி செய்தியிலிருந்து” என்று போட்டு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிடுகிறது. ஆனால் ராய்டர், பிடிஐ என்று எந்த செய்தி ஏஜென்சியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அந்த ஏஜென்சிகள் யாரும் இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை. ஒரு வேளை தினமணி குரூப்புக்கு சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA) இந்த செய்தியை கொடுத்திருக்கலாம்.

ஏனென்றால் இச்செய்தியையும் வெளியிட்டுவிட்டு, “இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியவில்லை, சுற்றுலா வழிகாட்டிகள் சொல்கிறார்கள்” என்று மாமாத்தனமாக எழுதியிருக்கிறது எக்ஸ்பிரஸ். அதைக்கூடச் சொல்லாமல், இந்த புளுகுமூட்டை உண்மைச்செய்தி போல வெளியிட்டிருக்கியிருக்கிறது தினமணி!

உண்மையில் 1948 ஏப்ரலில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் மாவோ அம்மலையைக் கடந்திருக்கிறார். ஒரு இரவு அங்கே தங்கியுமிருக்கிறார். அவர் தங்கியது குறித்த படமும் நினைவுக் குறிப்புகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம் என்ன, இது போதாதா? ஜோசியம் பார்த்தார், ரேகை பார்த்தார் என்று அடித்து விடவேண்டியதுதானே. பாபர் மசூதிக்கு உள்ளே இராமன் பிறந்த இடத்தை மட்டுமின்றி, பக்கத்திலேயே சீதையின் சமையலறையையும் (சீதா கி ரசோய்) சமையல் பாத்திரங்களையும் “கண்டுபிடித்த” யோக்கியர்களால் மாவோ ஜோசியம் பார்த்ததையா “கண்டுபிடிக்க” இயலாது?

சென்னை நகரின் நடைபாதையில் அமர்ந்திருக்கும் ஜோசிட ரத்தினங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு கைரேகை பார்ப்பது போல தயாரித்து மாட்டிக்கொள்ளும் போட்டோவுக்கும், புத்த பிக்குகளிடம் மாவோ ஜோசியம் பார்த்த கதைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? இவ்வளவு மட்டமான ஒரு கட்டுக்கதையை வரலாற்று உண்மை போல சித்தரித்து வெளியிடும் ஒரு நபர், புகழ் பெற்ற நடுநிலை நாளேட்டின் ஆசிரியராம். அவரை எல்.கே.ஜி ஆண்டுவிழா முதல் சிற்பி மணிவிழா வரையில் எல்லாவிதமான சுபகாரியங்களுக்கும் அழைக்கிறார்கள்.

அந்த விழாக்களில் திருவாளர் வைத்தியநாதன், சமுதாயத்தில் யார் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஊர் நாயம் உரைக்கிறார். அந்த உரைகளை, ஸ்ரீமான் வைத்தியநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தினமணியில், பேச்சாளர் வைத்தியநாதனுடைய திருவுருவப் படத்துடன் எட்டு காலம் செய்தியாக எடிட்டர் வைத்தியநாதனே வெளியிடுகிறார்.

மாவோ ஜோசியம் பார்த்த கதையை வெளியிட்டிருக்கும் தினமணி ஆசிரியர், “நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி”யைக் கொண்டவர் என்பதை வாசகர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இவற்றை விவரித்தோமேயன்றி நமக்கு வேறு நோக்கம் ஏதுமில்லை.

இந்தப் பதிவைப் படித்துப் பார்த்த ஒரு நண்பர், “இதெல்லாம் ஒரு விசயம் என்று மதிப்பு கொடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே” என்றார். எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்திக்கு இறக்கை முளைத்து அது இப்போது பவுத்த தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது அப்படியே அமெரிக்கா போய், மீண்டும் வூ தாய் மலைக்கே திரும்பி, அங்கிருந்து திபெத், நேபாளம், சிக்கிம் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவ்வாறு திரும்புங்கால் தினமணியில் வெளியான அந்த முக்கால் பக்க புளுகு, 300 பக்க புளுகு மூட்டையாக உப்பி தமிழ் கூறும் நல்லுலகத்தின் தலையில் இறங்கக்கூடும்.

நக்சலைட் இயக்கத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த ஜெயமோகன், ஒரு முறை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தமக்குள் பேசிக் கொள்வதை ஒளிந்திருந்து கேட்டாராம். ஜெயமோகனின் மதிப்புக்குரிய அந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் “நக்சலைட்டுகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாக” பேசிக் கொண்டார்களாம். கேட்டவுடன், ஜெயமோகனுக்கு காலடி நிலம் நழுவிவிட்டதாம். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் குறித்து அவரே தனது தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் நாம் பி.தொ.நி.குரலை (பின் தொடரும் நிழலின் குரல் – ‘நாவல்’) சுமக்க நேர்ந்தது.

மாவோவின் மீதும், தினமணி வைத்தியநாதனின் மீதும் பெருமதிப்பு கொண்டவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கக்கூடும். அத்தகையோரில் ஒருவராக ஜெமோ வும் இருக்கக்கூடும் என்பதே நமது அச்சம். அந்த வகையில் இந்தப் பதிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அவ்வளவே.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

25

பெரியோர்களே தாய்மார்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,

அனைவரையும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளத்தின் முதல் பக்கத்துக்கு உடனே வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இரண்டு உரிமைப் போர்களுக்கு அணிதிரளுமாறு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு இன்று தனது வாசகர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

முதல் போராட்டம் “சரக்கடிக்கும் உரிமை” தொடர்பானது. “குடிப்பதற்கான வயது வரம்பு 25” என்று மகாராட்டிரா, டெல்லி அரசுகள் தீர்மானித்திருப்பதை எதிர்த்த தனது போராட்டத்தின் நியாயத்தை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது டைம்ஸ் ஆப் இந்தியா:

“இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகமே வியந்து போற்றுவது நம் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. மென்மேலும் அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரவும் அதன் மூலம் மக்களைத் துன்புறுத்தி லஞ்ச வசூலை அதிகரித்துக் கொள்வதற்கே கிழட்டு நரிகளான அரசியல்வாதிகள் திட்டமிடுகிறார்கள்.”

“மைக்கை பிடுங்கி அடித்து கெட்டவார்த்தைகளால் ஏசிக்கொள்கிற எம்.பி எம்.எல்.ஏக்களும், நாட்டைக் கொள்ளையடிக்கின்ற அமைச்சர்களும் ஒழுக்கம் பற்றி நமக்கு உபதேசம் செய்வதா? இது தண்ணியடிப்பது பற்றிய பிரச்சினை அல்ல. நம்முடைய சுயமரியாதை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினை. படித்த, நேர்மையான, பொறுப்பான, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்கள் அனைவரும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுந்து நின்றாக வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை. உன்னால் உதவ முடியாவிட்டால் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாதே என்று முழங்கவேண்டும்” என்று குமுறி வெடித்திருக்கிறது டைம்ஸ் .ஆப் .இந்தியா.

இரண்டாவது போராட்டம் ஊழல் எதிர்ப்பு, அண்ணா ஹசாரே ஆதரவு தொடர்பானது. சரக்கடிக்கும் உரிமையைப் போலன்றி, இது எல்லோருக்கும் தெரிந்த எளிமையான பிரச்சினை என்பதால் இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா அதிகம் விளக்கவில்லை.

சரக்கடிக்கும் உரிமை தொடர்பான டைம்ஸ் ஆப் இந்தியாவின் “அப்ரோச்” கவனிக்கத்தக்கது. “ITS MY LIFE இது என்னுடைய வாழ்க்கை. நான் குடிப்பேன், குளிப்பேன், குப்புற அடிச்சுப் படுப்பேன். நீ யார்றா கேக்குறதுக்கு – ITS NONE OF UR BUSINESS” என்று அரசாங்கத்துக்கு சவால் விடுகிறது அந்த முழக்கம்.

இல்லையா பின்னே? உண்ணாவிரதம் இருக்கணும்னா 22 கண்டிசன் போடறான். சரக்கடிக்கணும்னா 25 வயசுன்னு கண்டிசன் போடறான். என்ன சார் இது சர்வாதிகாரமா இருக்கு? சாப்பிடவும் கூடாதுங்குறான், சாப்பிடாம இருக்கவும் கூடாதுங்கிறான். சாப்பிட்டா நமக்கு ஜெயில். சாப்பிடலேன்னா ஹசாரேக்கு ஜெயில்.

ஊழல் கனிமொழிக்கு திகார் ஜெயில், ஹசாரேவுக்கும் அதே ஜெயிலான்னு கேட்டிருக்கார் கேப்டன். ஜெயில் மட்டுமா? ரெண்டு பேருக்கும் அதே போலீசு, அதே மாஜிஸ்டிரேட், அதே சி.ஆர்.பி.சி. என்ன சார் நியாயம்?

This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?

அதுனாலதான் “ஐ ஆம் அன்னா ஹசாரே” ன்னு லட்சக்கணக்குல ‘சிட்டி’சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.

“அந்தப் பிரச்சினை வேற, இந்தப் பிரச்சினை வேற” ன்னு ஏமாத்த முடியாது சார். சாயங்காலம் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா.

ஐ ஆம் அன்னா ஹசாரே !

குறிப்பு:

ன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் தம் ஆதரவைத் தெரிவிக்கலாம். ரிலையன்ஸ் அம்பானி, டாடா, ஏர்டெல் மித்தல் ஆகிய முதலாளிகள் ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போரை ஸ்பான்சர் செய்திருப்பதனால், மேற்படி கம்பேனிகளின் மொபைலிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராளிகள் இலவசமாக பேசலாம் பேசலாம் பேசிக்கிட்டே இருக்கலாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.

“இட்ஸ் மை லைப்” என்று முழங்கும் சரக்குரிமை இயக்கத்திலிருந்து ஹசாரேயின் ஊரான “ராலேகான் சித்தி”க்கு மட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா விலக்களித்திருக்கிறது. அந்த ஊரில் மட்டும் சரக்கடிப்பவர்களின் வயது 25 க்கு கீழே இருந்தாலும், மேலே இருந்தாலும் அவர்கள் கட்டி வைத்து உரிக்கப்படுவார்கள்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 

கருணையினால் அல்ல!

பேரறிவாளன்,சாந்தன்,முருகன்...கருணையினால் அல்ல ! ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் கருணை மனுவை, தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்காமலேயே ஆளுநர் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராஜீவ் கொலையையொட்டிக் ‘குற்றம்’ இழைக்காமலேயே தண்டனை பெற்ற – தமிழகம் முழுவதும் தாக்கப்பட்ட – தி.மு.க. தொண்டர்களின் தலைவர் கருணாநிதி இக்கருணை மனுவின் மீது கருத்துச் சொல்லியாக வேண்டும்.

இந்நால்வரின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருகிறோம். இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஒர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதை சீர்குலைத்தது இந்திய அரசு. ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஒர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்ளும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று திரும்பியது.

இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர் விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனித்ப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமனல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இராஜீவ் கொலையுண்ட போதும் நாம் இந்தக் கருத்தைத்தான் முன் வைத்தோம். இன்று இந்நால்வரின் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதையும் அதே அடிப்படையில்தான் கோருகிறோம்.

அடுத்து இந்தத் தீர்ப்பும் தண்டனையும் சட்டவிரோதமானது என்கிறோம். ஏற்கனவே 26 பேருக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், எனவே அச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகி விட்டது. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்கு மூலங்கும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்டவைதான்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே சட்டரீதியாகச் செல்லத் தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறோம்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றவர்களல்ல என்ற போதிலும், சட்ட ரீதியாகவே கூட இது செல்லத்தக்கதல்ல என்ற போதிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கும், ஆளுநர் பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஆளுநரின் அதிகாரம் குறித்துத் தானே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இப்போது கருணை மனுவை தன்னிச்சையாக நிராகரிப்பதற்கும் காரணம் இருக்கிறது.

“ஈழ விடுதலைக்கு இந்திய அரசு எவ்வளவோ உதவிய போதிலும், அவர்களது நன்மைக்காவே ஒரு ஒப்பந்தத்தை அரும்பாடுபட்டு இராஜீவ் உருவாக்கித் தந்த போதிலும் நன்றி கெட்டத்தனமாகப் புலிகள் அமைதிப்படைச் சிப்பாய்களைக் கொன்றனர்; தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒப்பற்ற இளம் தலைவர் இராஜீவையும் கொன்றுவிட்டனர்” – என்ற பொய்ப் பிரச்சாரம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து இங்கே நடத்தப்படுகிறது. ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, ‘அமைதி’ப் படையின் அட்டூழியங்கள் என்பன முதல் அத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில்தான் இராஜீவ் இருந்தார் என்பது வரையிலான பல உண்மைகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மரணதண்டனையை ஆதரிக்கும் சோ முதல் வாழப்பாடி ராமமூர்த்தி ஈறான அனைவரும் இப்பொய்களையே தம் தரப்பு வாதங்களாக முன்வைக்கின்றனர். எனவே, இப்பொய்ப்பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஆளுநரின் நடவடிக்கையும் அமைந்திருக்கின்றன.

ந்நிலையில் இந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோருவோரின் அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்பதும் அவசியமாகிறது.

இன்று நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்குப் பெரிதும் முனைந்து வருபவர்கள் (அநேகமாக) அனைவருமே, அன்று இராஜீவ் கொலை செய்யப்பட்டபோது ‘கொலையாளி’களை வன்மையாகக் கண்டித்தார்கள்; இராஜீவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்; இந்தக் கொலை சி.ஐ.ஏவின் சதி என்றார்கள்; இதற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் நீதிமன்றம் விசாரித்து யாரைக் குற்றவாளி என முடிவு செய்தாலும், அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கட்டுமென்றும் முன்மொழிந்தார்கள்.

இத்தகைய போக்குகளை விமரிசித்து இராஜீவ் கொலைக்கான நியாயங்களை நாம் எழுதினோம். அதன் விளைவாக நாம் ‘மல்லிகையின்’ (சிறப்புப் புலனாய்வுப் படையின் அலுவலகம்) மணத்தை நுகர நேர்ந்ததுடன், ஏராளமான தோழர்கள் தடா, தே.பா.சட்டம், ராஜத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் சிறை செல்லவும் நேர்ந்தது. எனினும் ‘ஈழத்தமிழன்’ என்று சொன்னாலே வேட்டையாடப்பட்ட ஒரு காலத்தில், ஈழ ஆதரவு எனப் பேசினாலே கைது செய்யப்பட்ட காலத்தில் ‘புத்திசாலித்தனமாக’ மவுனம் சாதிப்பதை விட வெளிப்படையாக பேசுவது நம் அரசியல் கடமை என்ற அடிப்படையில் நாம் அவ்வாறு செய்தோம்.

அன்று அரசியல் பேசாமல் “நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்” என்று சட்டவாதத்தில் நுழைந்து தப்ப முயன்றவர்களது அணுகுமுறை தவறு என்று மீண்டும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் முன்முயற்சியை இழக்காமல் சட்டவாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது வேறு, சட்டவாதத்தையே அரசியலாக்கி கொள்வதென்பது வேறு.

சட்டவாதத்தையே அரசியலாக்கிக் கொள்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், அதன் சட்டம், நிறுவனங்கள் இவற்றின் எல்லைக்குள் நின்று பேச முடியுமேயொழிய இவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. எனவேதான் “ஒரு ஆக்கிரமிப்பு போர் குற்றவாளியைக் கொன்றதற்குத் தூக்கு தண்டனையா’ என்ற கேள்வியை இன்றைக்கும் அவர்களால் முதன்மைப்படுத்த இயலவில்லை. நீதிமன்றத்தின் மீது தங்களது விசுவாசத்தைப் பிரகடனம் செய்தவர்கள் தீர்ப்பின் மோசடியை முதன்மைப்படுத்தியும் இயக்கம் எடுக்க முடியவில்லை. அதன்மீது அதிருப்தி தெரிவிக்க மட்டுமே முடிகிறது.

நான்கு பேரைத் தூக்கிலிடுவது அரசியல் ரீதியான அநீதி, சட்டரீதியாகவும் அநீதி என்று போராடுவதற்குப் பதிலாக, “இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்” – என்று முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் “ஆட்டோ சங்கருக்கு ஏன் கேட்கவில்லை?” என்று பார்ப்பனத் திமிருடன் சோ கேட்டால் “அப்போதே கேட்காதது தவறுதான்” என்று பதிலிளிக்கிறார் இரமாதாஸ். இதுமட்டுமல்ல, குறிப்பாக இந்த நால்வருக்காகப் பேசாமல் பொதுவாக மரணதண்டனை ஒழிப்பு பற்றிப் பேசும் கருணாநிதி, வைகோ, போன்றோரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுப்பதற்குப் பதில் அவர்களது புகழ் பாடப்படுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட வேண்டிய மதவெறிக் கொலைகாரன் தாக்கரே போன்றோரிடமும் ஆதரவு திரட்டப்படுகிறது.

இறுதியாக சோனியாவே ‘குற்றத்தை’ மன்னித்துவிட்டார். யாரையும் தூக்கிலிட வேண்டுமெனத் தானோ, தன் பிள்ளைகளோ விரும்பவில்லை எனக்கூறிவிட்டார். ‘மிகக் கொடிய கொலையை செய்த குற்றவாளிகளுக்கும்’ இரக்கம் காட்டிய தாயுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்க வார்த்தையில்லாமல் தடுமாறுவதாகக் கூறியுள்ளார் ராமதாஸ். மரண தண்டனை ரத்தாவதற்கு முன்னால் இராஜீவ் கொலையின் அரசியல் ரீதியான நியாயத்தையும், நால்வரும் நிரபராதிகள் என்ற சட்டபூர்வமான உண்மையையும் ஒரே வாக்கியத்தில் ரத்து செய்து விட்டார் ராமதாஸ்.

ஜெயின் கமிசன் அறிக்கையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட தி.மு.கவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதற்காக ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த காங்கிரசு – சோனியாவின் திடீர்க் கருணைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

புலிகளின் விரோதம் தேவையில்லை என்பதில் தொடங்கி, இந்த அறிவிப்பு அளிக்கக்கூடிய ‘அனுதாப அரசியல்’ ஆதாயம் வரை, காரணம் எதுவாயுமிருக்கலாம். எனினும் சோனியாவின் மனிதாபிமானம் நால்வரையும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கு முன்னால், அவரது கணவரை ஈழ ஆக்கிரமிப்புப் போர்க் குற்றத்திலிருந்து – வெகுசனக் கருத்திலும் – விடுதலை செய்துவிடும். “மரண தண்டனை ஒழிப்பு – மனிதாபிமான” முழக்கத்தின் சாதனை இது.

என்னதானிருந்தாலும் நான்குபேரைத் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்துக் கொண்டு அரசியல் பேசிக்கொண்டிருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். நான்கு பேரின் உருவத்தில் தூக்குமேடையில் நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். மரண தண்டனை ஒழிப்பு எனும் பொதுவான முழக்கம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ஆனால் அந்த அரசியல் நியாயத்தை அது தூக்கிலிட்டுவிடும்.

மரணதண்டனை என்பது குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலவடிவங்களில் பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுகெதிராகப் போராடும் மக்கள் ‘ எதிர் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை’யுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம் – கருணையினால் அல்ல.

_______________________________________________________________

புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 1999

_______________________________________________________________

பின்குறிப்பு:

11 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் அரசியல் நியாயம் காலம் கடந்தும் சரியான பாதையை  காட்டுவதோடு இன்றும் அதன் தேவை இருக்கிறது என்பதை படிப்பவர்கள் உணர முடியும். எனினும் அன்றைய சூழலிலிருந்து இன்றைய சூழல் கொஞ்சம் மாறியிருக்கிறது.

கருணாநிதி அமைச்சரவை கூடி கருணை மனுவை நிராகரித்ததன் பேரில் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்க, பின்னர் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து காங்கிரசு அரசால் நிராகரிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நளினையை மட்டும் மரணதண்டனையிலிருந்து ரத்து செய்திருக்கிறார்கள். ‘தாயுள்ளம்’ கொண்ட சோனியாவின் உண்மை சொரூபத்தை இப்போது வேறு வழியின்றி உணரும் தமிழின ஆர்வலர்கள் அன்றைக்கு ஏன் அறியவில்லை என்பதை இந்தக் கட்டுரை மூலம் அறியலாம்.

முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டுமென்று ஓரளவுக்கு குரல் எழும்பிய நிலையில் காங்கிரசு அரசு இதைச் செய்யக் காரணம்?

முதலில் பா.ஜ.கவின் வாயை அடைக்க வேண்டுமென்பதற்காக அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போடவேண்டுமென்று நினைத்த காங்கிரசு கும்பல் அதற்கு நிபந்தனையாக முன்வரிசையில் உள்ள நபர்களையும் தூக்கிலேற்ற வேண்டும் என்பதற்காக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் தூக்கிலேற்ற துணிந்திருக்கிறது. அப்சல் குரு ஏன் அப்பாவி என்பதை அருந்தததி ராய் தொடங்கி பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றனர். கூடிய விரைவில் அந்தக்கட்டுரைகளில் ஒன்றை வெளியிடுவோம்.

ராஜபக்ஷேவின் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதற்கு உதவும் விதத்தில் கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறும் காங்கிரசு அரசு தேசத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதற்காகவும் இதைச் செய்திருக்க முடியும் என்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அண்ணா ஹசாரேவை வைத்து ஆங்கில ஊடகங்கள் எழுப்பும் ஜனநாயகக் கூச்சலின் பின்னேதான் இத்தகைய நிரபராதிகள் மூன்று பேர் தூக்கிலேற காத்திருக்கின்றனர். இதுதான் இந்தியாவின் உண்மையான ‘ஜனநாயகம்’. அரசியல் நோக்கம் கருதியே அப்சல் குருவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் நால்வரும் தூக்கிலேற்றப்பட இருக்கின்றனர்.

ராஜீவ் கொலையை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதை புலிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் வரை விரும்பியதில்லை. ராஜீவ் காந்தி ஒரு போர்க்குற்றவாளி என்பதும், அவரது போர்க்குற்றத்தின் எதிர் நடவடிக்கைதான் அவரது கொலை என்பதும் நாம் இன்றும், இனியும் பேச வேண்டிய அரசியல் என்பதை இந்தக் கட்டுரை அரசியல் அறத்துடன் நிறுவுகிறது.

ஆகவே இவர்கள் மீதான தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்படவேண்டும் என்று  நாம் கோருவது ஈழத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு போரின் குற்றத்தை ரத்து செய்யாமல் இருக்க வேண்டும் என்பதோடு இணைந்தது. ஆனால் இதை பேசுவதற்கு தமிழன ஆர்வலர்கள் யாரும் தயாரில்லை. மேலும் இன்று அம்மாவின் பின்னே அணிதிரண்டு ஈழத்திற்காக குரல் கொடுக்கும் சீமான், அரசியல் அநாதை வைகோ முதல் பலரும் பாசிச ஜெயா 2007-ஆம் ஆண்டு கூட இம்மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்று பேசியதை எப்படி முழுங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் இதை காங்கிரசு அரசின் குற்றமாக மட்டும் பேசி சுயதிருப்தி அடைகிறார்கள். காங்கிரசு கும்பல் முதன்மைக் குற்றவாளி என்பதைக் கூட அவர்கள் ராஜீவ் காந்தி ஒரு போர்க் குற்றவாளி என்பதோடு சேர்த்துப் பேசுவதில்லை.

தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும். ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதன் மூலம் நாம் ஈழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்வதாக மாறிவிடும். அதனால்தான் நமது கோரிக்கை கருணையினால் அல்ல, அரசியல் நீதியால்.

– வினவு

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

105

அண்ணா ஹசாரே

ங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி மேல் தோல்வி பெற்று இந்திய அணி சாதனை படைத்து வரும் வேளையில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதாவது படித்த நடுத்தர வர்க்க கனவான்கள் இலண்டனில் நடந்த இளைஞர்களின் கலகத்தைக் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நேரம். இந்திய அணி தோல்வியால் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்து தொலைக்காட்சிகளின்  விளம்பரங்களும் குறைந்து போன நிலை. கிரிக்கெட் பால் போனால் என்ன இருக்கவே இருக்கிறது லோக் பால் எனும் பந்து. வந்தார் அண்ணா ஹாசாரே. அவர் அடிக்காத சிக்சரை அடித்ததாக நம்ப வைக்க ஊடகங்களும்  அணிவகுத்தன. சின்னத்திரையில் கோக் குடித்தும், லேஸ் கடித்தும் காட்சிகளை மலிவான உணர்ச்சிகளாக உசுப்பேற்றிக் கொள்ளும் மேன்மக்களும் ஆட்டத்திற்கு தயாரானார்கள். இதோ ஆரம்பித்து விட்டது ஜோக்பால் வெர்ஷன் 2.0

அரசு கொண்டு வர இருக்கும் லோக்பாலுக்கு பல் இல்லை என்று அவர்கள்  உருவாக்கியிருக்கும் ஜன லோக்பாலை வலியுறுத்தி அண்ணா அணியினர் காலவறையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார்கள். வழக்கமாக இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சமீபத்திய ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. தாராளமயமாக்கம் சூடுபிடித்த இந்த ஆண்டுகளில் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்றே இந்த நிபந்தனைகளை அரசும், நீதிமன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்தி வந்தன.

சென்னையில் கூட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடங்களில் எல்லாம் இப்போது நடத்தக் முடியாது. சுவர் எழுத்து எழுத தடை, சுவரொட்டி ஒட்ட தடை, முக்கிய சாலைகளில் கூட்டம் நடத்த, ஊர்வலம் நடத்தத் தடை என்பதெல்லாம் அரசியல் கட்சிகளில் இருக்கும் அனைவரும் அறிந்த விசயம். இந்தகைய அடக்குமுறைகளை ஒழுங்கு என்ற பெயரில் கொண்டு வந்த போதும், அப்படி கொண்டு வரவேண்டுமென்று குத்தாட்டம் போட்ட மேட்டுக்குடி வர்க்கம்தான் இப்போது அண்ணா போராட்டத்திற்கு தடை என்றதும் சீறி எழுகிறது.

டிராபிக் ராமசாமி முதல் இப்போது அண்ணாவின் போராட்டத்தில் மெழுகுவர்த்தியை ஏந்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் பெரிசுகள் வரை இந்தகைய ‘ஒழுங்கைக்’ கொண்டு வரவேண்டுமென்று நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இந்து பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதியும் பொங்கியிருக்கிறார்கள். அத்தகைய பெரிசு அம்பிகள்தான் இப்போது மீண்டும் எமர்ஜென்சி வந்து விட்டது என்று துள்ளுகிறார்கள்.

சமச்சீர் கல்விக்காக எமது தோழர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய போது பல இடங்களில் போலிஸ் தடியடி, சிறை, வழக்குகளை சந்தித்துதான் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் சில, பல நாட்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பதினைந்து வயது மாணவனும் உண்டு. இது இந்தியாவெங்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. எந்தப் போராட்டமும் இத்தகைய அடக்குமுறைகளை சந்தித்தே நடைபெறுகிறது. அப்போதெல்லாம் ஜனநாயகம் காக்கப்படுவதாக ராகம் பாடும் அம்பிகள் இப்போது மட்டும் அதுவும் செல்லமாக அண்ணா போராட்டம் சீண்டப்படும் போது துள்ளுவது காணச்சகிக்க வில்லையே?

அண்ணாவின் வீரகாவியமாக சித்தரிக்கப்படும் அந்த காலவறையற்ற உண்ணாவிரதம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில் வெறும் ஆறு மட்டும் அண்ணா அணியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 5000 பேர்களுக்கு மேல் கூடக்கூடாது, மூன்று நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தக்கூடாது என்ற அந்த நிபந்தனைகளை டெல்லி போலீசு புதிதாக ஒன்றும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள்தான். அதன் படிதான் நிபந்தனைகளை விதித்திருப்பதாக டெல்லி போலீசு சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருக்கிறது.

இத்தகைய நிபந்தனைகள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிபந்தனைகளெல்லாம் இந்தியாவெங்கும் அன்றாடம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர், வடகிழக்கு போன்ற போராட்ட மாநிலங்களில் இது இன்னும் காட்டு தர்பாராக இருக்கும். எனில் இத்தகைய நீதிமன்ற, அரசு நிபந்தனைகள், மக்களின் போராடும் உரிமையை ரத்து செய்கிறது, இவற்றை இந்தியாவெங்கும் ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா அம்பிகள் அணி கோரவில்லை. சொல்லப்போனால் அத்தகைய நிபந்தனைகள் இன்னும் அதிகம் வேண்டுமென்பதுதான் அண்ணாவின் பின் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் நிலை.

அண்ணாவிற்காக சென்னையில் சீன் போடும் அருணா சாய்ராம், அனிதா ராம், சுவர்ணமால்யா போன்ற கருநாடக, பரதநாட்டிய தாரகைகளிடம் அண்ணா சாலையில் தொழிலார்களின் ஊர்வலங்களை தடை செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள்; கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்று ஒரே ஸ்வரத்தில் பாடுவார்கள், ஆடுவார்கள்! ஆனால் அவர்களது கோரிக்கைதான் ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பதால் இது ஒன்றும் பிரச்சினை அல்ல.

ஐரோம் ஷர்மிளா காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது போலீசு வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று மருத்துவ மனையில் வைத்து உணவையும், மருந்தையும் வலுக்கட்டாயமாக புகட்டிவிடும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவின் போராட்டத்திற்கு மட்டும் போலிசு பவ்யமாக நிபந்தனைகளை விதிக்கிறது. தாள் பணிந்து பேசுகிறது. அதை அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன போது பவ்யமாக கைது செய்கிறது. மாஜிஸ்ரேட் கூட அண்ணாவின் இடத்திற்கு வந்து பவ்யமாக விசாரிக்கிறார். பின்னர் நீதிமன்றக் காவல் என்றதும் சிறையில் உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இரவே விடுதலை என்றதும் சிறையை விட்டு அகல மறுக்கிறார்.

இதுவே மற்றவர்களென்றால் இப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. போராட்டங்களுக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் எவரும் அன்றிரவே விடுதலை செய்யப்பட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி விடுதலை செய்யப்பட்டாலும் யாரும் சிறையிலேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க முடியாது. குண்டு கட்டாக இழுத்து வந்து வெளியே தூக்கி எறிவார்கள். ஆக அண்ணா ஹசாரேவுக்காக போலீசு, நீதிமன்றம், சிறை எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்கிறது. இந்த இலட்சணத்தில் இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று அண்ணா அறிவித்திருப்பதை என்ன சொல்ல? முருகா, முருகா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்து அழவேண்டியதுதான்.

அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் மசோதா தற்போது  பாராளுமன்ற நிலைக்குழு முன் இருக்கிறது. இத்தகைய முறைகளில் பாராளுமன்றம்தான் இதை நிறைவேற்ற வேண்டும், மாறாக பாராளுமன்றத்திற்கு வெளியே சிலர் டெண்டு அடித்து போராட்டம் நடத்தி கொண்டு வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுப்பதாகும் என்று பிரதமர் மன்மோகன் உட்பட பல காங் அரசு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

பாராளுமன்றத்திற்கு தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கைநாட்டு இட்டது முதலான இட்டதுகளில் இருந்தே பாராளுமன்றத்திற்கு இறையாண்மையோ, புனிதமோ, உரிமையோ ஒரு எழவும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனால் இதையெல்லாம் அண்ண அணி கூறவில்லை. நாங்கள்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆக பாராளுமன்றத்தின் பல் எப்போதோ பிடுங்கப்பட்டு விட்டது என்பதும், இந்திய அரசும் இப்போது அமெரிக்காவின் அடிமையாகி விட்ட நிலையில் அது குறித்தெல்லாம் அண்ணா ஹசாரே அணி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் அந்த லோக்பாலை தூக்கிவிட்டு இவர்களது ஜன லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.

அமைப்பு முறை என்ற முறையில் இந்திய அரசு அமல்படுத்தி வரும் தனியார் மயம்தான் ஊழலின் ஊற்று மூலம் என்பதை மறுத்து அந்த தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஊழலை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று பொத்தாம் பொதுவான முழக்கத்தோடு அண்ணா அணி நடத்துவது ஒரு பச்சையான நாடகமே.

மேலும் அண்ணா ஹசாரே அணி உருவாக்கியிருக்கும் ஜன் லோக்பாலை காங்கிரசு மட்டுமல்ல, பா.ஜ.க, கம்யூனிஸ்டுகள் உட்பட எந்தக் கட்சியும் இதுவரை ஆதரிக்கவில்லை. எனில் எல்லா கட்சிகளையும் எதிர்த்து அண்ணா அணி போராடியிருக்க வேண்டும். அப்படி போராடமல் இருப்பதற்கு என்ன காரணம்? “நீ போராடுற மாதிரி ஆடு, நான் ஆதரிக்கிற மாறி நடிக்கிறேன்” என்று எதிர்க்கட்சிகளும் இந்த நாடகத்தை தெரிந்தே நடத்துகின்றன. அண்ணாவின் ஜன் லோக்பாலை பா.ஜ.க கட்சி ஏற்காத நிலையில் அதன் உறுப்பினர் வருண் காந்தி அதை தனிநபர் மசோதாவாக பாரளுமன்றத்தில் எழுப்புவேன் என்று கூறியிருக்கிறார். இது நாடகம் என்பதற்கு இது ஒன்றே போதும்.

அடுத்து சமீபத்திய பெரும் ஊழலான 2 ஜியை எடுத்துக் கொள்வோம். குற்றவாளி ராசா எடுத்து வைத்த வாதப்படியும், உண்மைகளின் படியும் பிரதமர் மன்மோகன் சிங்கையே இப்போது கைது செய்திருக்க வேண்டும். அவரையும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்களையும், முன்னர் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் அமைச்சர்களையும் கைது செய்ய வலுவான முகாந்திரம் உள்ள நிலையில் இப்படி எந்தக் கோரிக்கையையும் எழுப்பாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு என்று பேசுவது யாரை ஏமாற்ற?

காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் என்று ஊழலின் குறிப்பான விசயங்களைப் பற்றி எதுவும் பேசாமல், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை கலைக்கவே அண்ணாவின் காமடி நாடகம் பயன்படுகிறது. அது தெரிந்தே காங் அரசும் அண்ணாவை எதிர்ப்பது போல எதிர்த்து அணைப்பது போல அணைத்து இந்த ஆட்டத்தை தொடர்கிறது.

ஆனால் இந்த ஆட்டத்தில் தனது தராதரத்தை மறந்து அண்ணா கோஷ்டி அதிகம் ஹீரோயிசம் போட நினைப்பதுதான் காங்கிரசு அரசின் பிரச்சினை. இந்த ஆட்டத்தின் மூல நோக்கத்தில் இருவருக்கும் உடன்பாடு இருந்தாலும் உடனடி நற்பெயர் யாருக்கு என்பதில்தான் தற்போதைய காமடி சண்டை எழுந்திருக்கிறது.

ஊடகங்கள் அனைத்தும் ஒற்றுமையாக இந்த நாடகத்தை மாபெரும் வீரக்காவியமாக சித்தரிக்கின்றன. இந்தியா முழுவதும் 20 நகரங்களில் மக்கள் எழுச்சி என்றெல்லாம் தொடர்ந்து உசுப்பேற்றுகிறார்கள். எங்கும் காமராவின் எல்லைகளைத் தாண்டி கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டமும் அரசியல் என்றால் என்ன என்று அ-னா, ஆவன்னா கூட தெரியாத கனவான்கள் கூட்டம். அதிலும் டெல்லி திகார் சிறைக்கு கார்களில் வரும் மேன்மக்கள் ஒரு கி.மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து சிறை முன்பு கூடுகிறார்களாம். இத்தகைய மாபெரும் தியாகங்களை வைத்துத்தான் இதை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று தொடர்ந்து ஓதி நம்மை துன்புறுத்துகிறார்கள்.

42 வருடங்களுக்கு முன்னர் சி.என் அண்ணாதுரை காலமான பிறகு தமிழகம் தற்போது இரண்டாவது அண்ணாவை கண்டெடுத்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா குதூகலிக்கிறது. சில நூறு சேட்டுபையன்கள் தோற்றத்தில் இருக்கும் அம்பிகளின் கூச்சலை வைத்து திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது அதன் நோக்கம். அதனால்தான் எந்த இந்தி மொழியை எதிர்த்து தமிழகம் போராடியதோ அந்த இந்தி மொழி பேசும் ஒரு தலைவரை தமிழகம் ஏற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் விசமத்தனமாக பொய்யுரைக்கிறது.

அண்ணா ஹசாரேவின் காந்திய வேடங்களை பலர் தோலுரித்திருக்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டது, இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட் நிதியில் கையாடல் செய்தது, அதை நீதிபதி பி.பி.சாவந்த் உறுதி செய்தது, அண்ணா ஹசாரேவின் கிராமமான ராலேகாவ் சித்தியில் நாட்டாமையாக ஆட்டம் போட்டது, குடித்தவரை தூணில் கட்டி அடிப்பது, அசைவ உணவை கிராமத்தில் தடை செய்தது, கேபிள் டி.வியை முடக்கியிருப்பது வரை பல வண்டவாளங்கள் அண்ணா ஒரு நிலபிரபுத்துவ நாட்டாமை என்பதை தெரிவிக்கின்றன.

ஊடகங்களின் கவரேஜ்ஜுக்கு பொருத்தமாக தனது உண்ணா விரதத்தின் தேதியையெல்லாம் தள்ளிவைக்கும் இந்த விளம்பர மோகியின் பலவீனத்தை புரிந்து கொண்டு ஊடகங்களும் அவரை மாபெரும் போராளியாக சித்தரிக்கின்றன. குறைந்தபட்சம் நமது தங்கபாலு அளவுக்கு கூட அறிவில்லாத இந்த காமடியனை ஊடகங்கள் ஜாக்கி வைத்து தூக்க தூக்க அவரும் தன்னை ஒரு 70 எம்.எம் ஹீரோவாக கருதிக் கொள்ள நாட்டு மக்கள் இந்த நாடகத்தை பார்த்து தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.

புரட்சிகரமான முழக்கங்களின் மூலம் மக்களை திரட்டி அவர்களது அரசியலை காயடிப்பதை குறிக்கோளாக வைத்து இயங்கும் ஏகாதிபத்தியங்களின் ஆசி பெற்ற தன்னார்வக் குழுக்கள் அண்ணாவின் நாடகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்கள்தான் ‘இந்தியா’வெங்கும் மேன்மக்களை திரட்டி ஏதோ இந்தியாவே போராடுவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்வ இயக்கங்களும் அண்ணாவின் மூலம் கல்லா கட்டலாம் என்று மனப்பால் குடிக்கின்றன. ராம்தேவ், டபுள் ஸ்ரீ ரவி சங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் தங்களது சாம்ராஜ்ஜியத்தின் நலன் கருதி இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமாற்ற விழைகிறார்கள். இந்த வகையில் ஏராளமான உள்குத்துகள் நடந்தாலும் அது நமது கவனத்திற்கு வராது.

ராசா, கல்மாடி இருக்கும் திகார் சிறையில் அண்ணா அடைக்கப்பட்டதையே ஒரு மாபெரும் அநீதியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. கைது என்றால் சிறையில்தான் அடைப்பார்கள். சிறை என்றால் குற்றவாளிகள், மற்றும் குற்றம் சுமத்தப் பட்டோர்தான் இருப்பார்கள். சிறையிலும் கூட தீண்டாமையுடன் கூடிய 5 நட்சத்திர தரத்தை எதிர்பார்க்கும் இவர்கள்தான் ஊழலை எதிர்க்க போகிறார்கள் என்றால் எருமை மாடு கூட வெட்கப்படும்.

பேரறிவாளன் 9வால்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்று சொல்லி அதுவும் ஒரு பொய்க்குற்றச்சாட்டு என்றாலும் அதற்கே தூக்குத் தண்டனை என்று தீர்ப்பளித்த  நாட்டில்தான் நோகாமல் மீடியா டார்லிங்காக இருக்கும் அண்ணாவிற்காக அரசு செய்யும் காமடிகளை மாபெரும் அடக்குமுறை என்று சித்தரிக்கிறார்கள். அந்த வகையில் அண்ணாவுக்கு கிடைக்கும் மலிவான கவரேஜ் அனைத்தும் இந்த நாட்டின் மக்கள் உரிமைகளை காவு கேட்பதற்கு பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

2ஜி ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், அரசு அனைவரும் குற்றவாளிகளாக தெரியவரும் நேரத்தில் அதை மறைப்பதற்கே அண்ணாவின் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் அண்ணாவின் உண்ணவிரத நாடகம் அரசின் மறைமுக ஆதரவோடு இன்னும் கொஞ்ச நாட்கள் நடைபெறும். கார்ப்பரேட் ஊடகங்களும் அதை வைத்து வரும் நாட்களில் ஊதிப்பெருக்கும். ஓய்வு நேர அரசியலுக்கு வாகாக இருக்கும் இந்த மெழுகுவர்த்தி பேஷன் ஷோவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை உறுதி செய்து கொண்டு வரும் படித்த நடுத்தர வர்க்கம் மேலும் பாசிசமயமாவதற்குத்தான் இந்த நாடகம் உதவி செய்யும்.

அந்த வகையில் அண்ணாவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அண்ணா ஹசாரேவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது. ஊழலின் ஊற்று மூலமான இந்த அரசு அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இந்த காமடி நாடகத்திற்கு அழ முடியாது. மீறி அழுபவர்களை யாரும் காப்பாற்றவும் இயலாது.

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: