Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 769

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?

34

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 21

”பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டோம். பாகிஸ்தான் ஒரு புதிய தந்திரம் பண்ணியது. பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைப் பசி, பட்டினி போன்ற காரணங்களைக் காட்டி ‘எங்கள் நாட்டில் வறுமை, பிழைக்க வழியில்லை’ என்று சொல்ல வைத்து பாரதத்திற்குள் ஊடுருவிய அந்த அந்நியர்கள் சுமார் இரண்டரை கோடிப் பேர் பாரதத்தில் உள்ளார்கள்.  ஏற்கெனவே இருக்கிற தலைவலி போதாது என்பது போல் வெளியிலிருந்து இறக்குமதி செய்கின்ற இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

உலகில் ஒவ்வொரு நாடுமே தங்கள் நாட்டிற்குள் அதிகப்படியாக மற்ற நாட்டின் குடிமக்களை அனுமதிப்பதில்லை. எல்லா நாடுகளும் இப்படி கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் போது நமது நாடு மட்டும் என்ன சத்திரமா? எவர் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகக் கொடுமையானது.”

இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?” – இந்து முன்னணி, வெளியீடு, பக்கம் – 26.

முதலில் பொய்களைக் கவனிப்போம். இரண்டரைக் கோடிப் பேர் அகதிகளாக வந்தார்கள் என்பது எந்தவித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத வடி கட்டிய பொய். அடுத்து பாகிஸ்தானிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதும் முழுப் பொய்தான். காசுமீர் பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பேயே, பாகிஸ்தானுடன் நடந்த மூன்று போர்களையொட்டி எல்லையைக் கடுமையாகக் கவனித்து வருகிறது இந்திய அரசு. சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லை மாறும் இருநாட்டு எல்லையோர கிராம மக்கள் பலர் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் பல கிராமங்கள் வருடத்தில் பாதி நாட்கள் காலியாகத்தான் இருக்கின்றன.

எனில் இந்தியாவில் அகதிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் யார்?

இங்கே அரசின் சட்டபூர்வ பாதுகாப்பைப் பெற்ற அகதிகளும், பெறமுடியாத பரிதாபமான அகதிகளும் இருக்கின்றனர். இந்திய அரசின் பிராந்திய வல்லரசு என்ற நலனக்கேற்ப அகதிகளைக் கவனிக்கும் முறை வேறுபடுகிறது.

வங்க தேசத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த ‘சக்மா’ எனும் பழங்குடியினர் இருக்கின்றனர். இவர்களது நிலத்தையும், வாழ்வையும் பறித்துக்கொண்ட வங்கதேச அரசு இராணுவத்தின் மூலம் தொடர்ந்து அடக்கியும் வருகிறது. அதனால் வேறு வழியின்றி மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமிற்கும் சில ஆயிரம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் ஏதும் இல்லையென்பதால், கணிசமான சக்மா பழங்குடியினரை மீண்டும் வங்க தேசத்திற்கே விரட்டி வருகிறது இந்திய அரசு.

சீனாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் திபெத் பீடபூமியில், கடந்த சில நூற்றாண்டுகளாக லாமா எனப்படும் பௌத்தத் ‘துறவி’ நிலப்பிரபுக்கள் பெரும்பான்மை திபெத்தியர்களை ஒடுக்கி வந்தனர். 1949-இல் முடிவடைந்த சீனப் புரட்சி, இந்தக் கொடுங்கோன்மையான, பௌத்த நிலப்பிரபுக்களின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதிகாரத்தை இழந்த லாமாக்கள் தலாய்லாமா தலைமையில் 60-களில் இந்தியாவிற்கு ஓடி வந்தனர். இமாச்சல பிரதேசத்தின் தர்மஸ்தலாவிலும், ஏனைய வடஇந்திய நகரங்களிலும் பரவிக்கிடக்கும் சில ஆயிரம் திபெத்தியர்களை இந்திய அரசு தொடர்ந்து சீராட்டி வருகிறது. தலாய்லாமா கும்பலைத் தனி அரசாக அங்கீகரித்ததோடு அவர்களையம் உலக அரங்கில் ‘சுதந்திர திபெத் நாடு’ என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அளித்து வருகிறது. இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக இந்த ‘திபெத் அகதிகள்’ நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்கின்றனர்.

காலனிய ஆட்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே பாரசீகத்தைச் (ஈரான், ஈராக்) சேர்ந்த பார்ஸிகள் மேற்கு இந்தியாவிற்கு வந்தனர். குஜராத்திலும், பம்பாயிலும் வாழும் இப் பார்ஸிகளும், இவர்களது தரகு முதலாளிகளும் இந்து மத வெறியர்களுக்கு ஆதரவான சமூகப் பிரிவாகவே இருக்கின்றனர். எனவேதான் வெளிநாட்டுப் பின்னணியும், வேற்று மதச் சடங்குகளும் கொண்ட பார்ஸிகளை இந்து மதவெறியர்கள் முசுலீம்களைப் போல் எதிர்ப்புணர்ச்சி கொண்டு நடத்துவதில்லை.

தமது தாயகத்திலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் உலகெங்கும் சிதறியபோது ஒரு சிலர் இந்தியாவிற்கும் வந்தனர். இஸ்ரேல் உருவான பிறகு பெரும்பான்மை யூதர்கள் அங்கே சென்றுவிட்டாலும் சிறு எண்ணிக்கையிலான யூதர்கள் இங்கே இருக்கின்றனர். அமெரிக்க ஆதரவு, முசுலீம் எதிர்ப்புக் கொள்கையிலிருக்கும் இஸ்ரேலிய அரசு இந்து மதவெறியர்களுக்கும், இந்திய அரசுக்கும் நெருக்கமாக இருப்பதால், இந்திய யூதர்களும் பிரச்சினையின்றி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இமயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாளம் இந்தியாவின் பிராந்தியத் துணை வல்லரசு ஆதிக்கத்திற்கு அடங்கி வாழ்ந்துவரும் நாடாகும். தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நேபாள மக்களை இந்திய அரசு தனது தேவைகளுக்கேற்பப் பயன்படுத்திச் சுரண்டி வருகிறது. அதனாலேயே இந்தியாவிலிருக்கும் நேபாள மக்களைக் கண்டும் காணாமலும் நடத்தி வருகிறது. இந்திய இராணுவத்தின் தீவிரப் போரிடும் பிரிவான ‘கூர்க்கா ரெஜிமண்ட்’டில் பல ஆயிரம் நேபாள வீரர்கள் இருக்கின்றனர். பம்பாய் விபச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான நேபாளச் சிறுமிகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆசியுடன் இந்திய மாஃபியா கும்பல்கள் நேபாளத்தை மையமாக வைத்து போதைப் பொருள் வியாபாரத்தையும் வளமாகச் செய்து வருகின்றனர். இப்படி இராணுவத்தில் குறைந்த கூலி கொடுத்துப் பலியிடவும், பம்பாய் விபச்சாரத்தில் பணத்தை அள்ளவும் பயன்படும் நேபாள  மக்களை, இந்த மதவெறியர்கள் அகதிகளாகக் கருதாமல் இருப்பதன் மர்மம் இதுதான்.

சோவியத் ஆதரவுடன் ஆப்கானில் ஆட்சி நடத்திய நஜிபுல்லா அரசு, இந்திய அரசாலும் ஆதரிக்கப்பட்டது. இது பாக். எதிர்ப்பு மற்றும் சோவியத் ஆதரவு கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகும். பின்னர் அமெரிக்க – பாக். ஆதரவு முஜாஹிதீன்களும்,  தாலிபான்களும் நஜிபுல்லா அரசை வீழ்த்தினர். அப்போது இந்தியாவிற்கு ஓடிவந்த ஆயிரக்கணக்கான நஜிபுல்லா ஆதரவு ஆப்கானியர்களை இந்திய அரசு வரவேற்று இன்று வரை பராமரித்து வருகிறது. இவர்களும் முசுலீம்கள்தான் என்றாலும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் வாய் திறவாமல் இருக்கக் காரணம் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்.

அடுத்து நமக்கு நெருக்கமான ஈழ அகதிகள் பிரச்சினையைப் பார்ப்போம். ஈழத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளில் சரிபாதிப் பேர், பல்லாயிரக்கணக்கானோர், இந்தியாவில் – தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். நேபாளத்தைப் போல இலங்கையும் இந்தியாவுடன் பல்வேறு உறவுகளில் பிணைக்கப்பட்டிருக்கும் நாடுதான். இந்திய பிராந்தியத் துணை வல்லரசுக் கொள்கையின் முக்கியமான அங்கமாக இலங்கை இருப்பதும், ஈழவிடுதலைப் போராட்டம் காரணமாக, அக்கொள்கை இன்னும் முக்கியத்துவம் பெறுவதும் நாம் அறிந்ததே. 1983 ஜுலை படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஆரவாரத்துடன் மைய அரசினால் வரவேற்கப்பட்டனர். ஈழப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும், பணமும், பயிற்சியும் தடையின்றித் தரப்பட்டன. காரணம், இலங்கையில் தன் தலையீட்டையும், ஆதிக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்கும், இந்திய அரசு அகதிகளையும், போராளிகளையும வரவேற்று உபசரித்தது.

இன்றோ தமிழகத்தின் ஈழ அகதிகள் முகாம்கள் அனைத்தும் சிறைக் கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சிங்கள அரசால் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட இங்கே  அகதிகளுக்குக் கிடையாது என்பதே உண்மை. முன்பு ஈழ அகதிகளுக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்த இராமேசுவரம், இன்று மரணப் பள்ளத்தாக்காக மாறிவிட்டது. தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு பாதி வழியில் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டும், மீறி வந்தால் ஐந்தாம் மணற்திட்டில் இறங்கி பசி – வெயில் – குளிரில் பரிதவித்தும் வாடுவதே அவர்களின் தலைவிதியாகிவிட்டது. பத்தாண்டுகளுக்குள் நடந்த இந்தத் தலைகீழ் மாற்றம், அகதிகள் பிரச்சினையில் அரசியல் நலனுக்கேற்ப இந்திய அரசு போடும் இரட்டை வேடத்தைப் பளிச்செனப் புரிய வைக்கும். அவ்வகையில் இந்து மதவெறியர்களும் ஈழ அகதிகளை ஒடுக்குவதையே விரும்புகின்றனர்.

இனி ஆர்.எஸ். கும்பல் விரட்டத் துடிக்கும் வங்கதேச அகதிகளைப் பார்க்கலாம். 80-களில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் 70-களில் வங்கதேச அகதிகளுக்கும் நடந்தது. பாகிஸ்தானைப் பிளப்பதற்குத் தருணம் பார்த்திருந்த இந்திய அரசுக்கு வங்கதேசம் ஒரு கருவியாக வாய்த்தது. இந்திரா காலத்தில் பாகிஸ்தானுடன் இதற்காக நடந்த 1971 போரின்போது வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் வரவேற்கப்பட்டார்கள். பாகிஸ்தானை எதிர்த்த வங்கதேசத்து சேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவால் வளர்க்கப்பட்டார். அவரது ‘முக்தி வாஹனி’ இயக்கத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் இந்திய அரசால் அளிக்கப்பட்டன. போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, வங்கதேசம் பிரிந்தபோது அகதிகளின் வாழ்வும் முடிவுக்கு வந்தது.

சேக் முஜிபூர் ரஹ்மானுக்குப் பிறகு வந்த இராணுவ மற்றும் ஜனநாயக ஆட்சியாளர்கள் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வருவதால், இங்கிருக்கும் வங்கதேச ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசும், இந்து மதவெறியர்களும் தீவிரம் காட்டுகின்றனர். இன்றைய வங்கதேசமும் (பங்களாதேஷ்) இங்கிருக்கும் மேற்கு வங்க மாநிலமும், மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒரே மக்கள் வாழும் பிராந்தியமாகும். மேற்கு வங்கத்தில் இந்துக்களும், கிழக்கு வங்கத்தில் முசுலீம்களும் பெரும்பான்மையாக இருந்தாலும், இரு மதத்தைச் சேர்ந்தோரும் கணிசமான அளவில் இரு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வங்கதேசிய இனம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒருசில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால் இம்மக்களது நெருக்கமான உறவு பற்றி அதிகம் விளக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.

காலனிய ஆட்சியின்போது 1905-இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைசிராய் வங்கத்தை மேற்கு, கிழக்கு என மதத்தை அடிப்படையாக வைத்துப் பிரித்தான். ஆயினும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அன்றைய வங்கத்து மக்கள் தீரத்துடன் போரிட்டு முறியடித்தார்கள். மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வங்காளிகள் என்ற முறையில் அவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆயினும் அதன்பிறகு நாட்டு விடுதலைப் போராட்டம் இந்து மதச்சார்பை எடுத்ததும் அதை வெள்ளையர்கள் ஆதரித்ததும், எதிர் விளைவாக முசுலீம் லீக் தோற்றமும் இறுதியில் வங்கம் மதத்தால் பிளவுண்டு போகக் காரணமாய் அமைந்தன.

கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானின் ஒடுக்கு முறையிலிருந்து பிரிந்து வந்தாலும், வறுமையிலிருந்து விடுதலையடையவில்லை. இந்தியாவைவிடப் பின்தங்கியிருக்கும் வங்கதேசம் எவ்விதப் பொருளாதார முன்னேற்றமும் இல்லாத ஒரு வறிய நாடாகும். ஏற்கனவே துணைக் கண்டத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த வங்கத்து மக்களில் ஆகக் கடையரான ஏழைகள் பஞ்சம் பிழைக்க கல்கத்தா, டெல்லி, பம்பாய் நகரங்களுக்கு வருகின்றனர். இப்படி இந்தியாவின் வறிய பகுதிகளிலிலிருந்து பிழைப்புத் தேடி பெரு நகரங்களுக்குக் குடிபெயர்வது என்பது இந்நூற்றாண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வங்க தேசத்திலிருந்து இந்தியா வந்து ரூ.20, ரூ.30 என கூலிக்கு  வேலை செய்யும் இந்த ஏழைகளை முசுலீம்கள் என்ற ஒரே காரணத்தினால், விரட்டி அடிக்க வேண்டும் என்று இந்து மத வெறியர்கள் கூப்பாடு போடுகின்றனர்.

அகதிகள் பிரச்சினை என்பது ஆர்.எஸ்.எஸ். கூறுவது போல உலக அதிசயமல்ல. காலனிய நாடுகளை அடக்கி ஆளும் ஏதாதிபத்தியம் தோன்றியதிலிருந்து, நாடுவிட்டு நாடு போகும் அகதிகள் பிரச்சினையும் துவங்கிவிட்டது. அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டுக் காரணங்களினால் தன் நாட்டில் வாழ வழியின்றி அடைக்கலம் தேடி ஓடுவது என்பது இன்றைய உலகமாயக்கத்தின் வளர்ந்து வரும் பிரச்சினையாகும். இதற்குக் காரணமான வல்லரசு நாடுகளே இதற்குத் தீர்வு சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மலேசியா-சிங்கப்பூருக்கும், வளைகுடாவிற்கும் விசா இல்லாமல் போவது, மத்திய – தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து, அமெரிக்க –  ஐக்கிய நாட்டிற்குப் (யு.எஸ்.) போவது, மத்திய தரைக்கடல் – ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் போவது, தெற்காசிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்வது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்வது என வேலை – வாழ்க்கை தேடி ஓடும் ‘சட்ட விரோத அகதிகளின்’ இடமாற்றம் உலகெங்கும் நடந்து வருவதுதான்.

இன்னும் போஸ்னியா, குர்திஸ்தான், செசன்யா, கிழக்கு திமோர், ஆப்கான், ஈழம், காசுமீர் போன்ற அரசியல் அகதிகள் பிரச்சினையும் உலகெங்கும் உள்ளதுதான். இப்படி நாடு விட்டு நாடு போகும் இத்தகைய அகதிகளை அந்தந்த நாட்டு முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து சக்கையாய்ப் பிழிந்து சுரண்டியும் வருகின்றனர். இத்தகைய மலிவான உழைப்புச் சுரண்டலுக்காக பல நாடுகள் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கண்டும் காணாமல் அனுமதிக்கின்றனர்.

அதேசயம் இந்த அகதிகள் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வதைத் தடுத்து மிரட்டுவதற்காக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி அந்நாட்டு இளைஞர்களை உசுப்பி விடுவது என்ற தந்திரத்தை இந்நாட்டு அரசுகள் பின்பற்றி வருகின்றன. பிரிட்டனில் ஆசிய நாட்டவரைத் தாக்குவது – அல்ஜீரியர்களை பிரான்சில் தாக்குவது, தென் அமெரிக்கர்களை மிரட்டுவது, ஈழ அகதிகளை ஜெர்மனியில் அடிப்பது, ஆஸ்திரேலியாவில் தெற்காசியைரைத் தாக்குவது, இவை சில எடுத்துக்காட்டுக்கள். இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்தே உலகெங்கும் பாசிச இனவெறிக் குழுக்கள் தோன்றியுள்ளன. உலகளாவிய இந்த பாசிசக் கூட்டணியின் இந்தியப் பிரதிநிதிகளான ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் வங்கதேச அகதிகளை அடித்து  விரட்டுகிறது.

எனவே அகதிகளுக்காகக் கண்ணீர் விடுவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அடித்து விரட்டுவதும் , ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகங்ககளாகும். ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம இக்கணம்வரை அதிகரித்தே வருகிறது. இந்தியாவிலும் அப்படித்தான்.

அமெரிக்க – ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மத வெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழைகளை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது. முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

தொடர்புடைய பதிவுகள்

வினவுடன் இணையுங்கள்

தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்!

10
முகுல்-ராய்-சிவப்பு-கம்பள-வரவேற்பு
சொகுசு இரயிலும் – சிவப்பு கம்பளமும்

ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர்.

விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயில்நிலையத்தின் நடைமேடைகளைக் கழுவிச் சுத்தமாக்கி, வாசனைத் திரவியம் தெளித்து, சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றிருக்கிறார்கள் தென்னக ரயில்வே அதிகாரிகள்! அமைச்சரின் நடத்தை இருக்கட்டும், அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்த அதிகாரிகளின் நடத்தையை என்ன சொல்வது? பிணங்களுக்கும் பரிதாபத்துக்குரிய மரண ஓலங்களுக்கும் மத்தியில் அதனை துக்கம் விசாரிக்க வந்தவருக்கு பன்னீர் தெளித்து பால் பாயாசம் கொடுத்து விருந்தோம்பும் இந்தக் கேவலம் தமிழர்களின் உன்னதப் பண்பாட்டைக் காட்டுகிறதா?

இதே விபத்து மே.வங்கத்திலோ அல்லது கேரளத்திலோ நடந்திருந்தால் அங்கே எந்த அதிகாரியாவது இப்படியொரு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கக் கூடுமா?  தமிழன்தான் இளித்தவாயன், வடவர் ஆதிக்கம் என்று இனவாதிகள் தயார் நிலையில் வைத்திருக்கும் விடையை வழங்கக் கூடும். அது விடையல்ல, விடையைப் புரிந்து கொள்ள முடியாமல் தமிழ்மக்களின் மூளையை மறிக்கின்ற தடை.

வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது. மற்ற மாநிலங்களின் அரசியலும் பண்பாடும் உன்னதத்தில் உள்ளதாக இதற்குப் பொருள் அல்ல. இத்தகைய அருவெறுக்கத்தக்க அடிமைத்தனம் வேறு எங்கும் இல்லை என்பதே இதன் பொருள்.

அ.தி.மு.க அடிமைகள் கூட்டமே ஜெயாவின் காலில் விழுகிறது. அதிகாரிகளும் துணை வேந்தர்களும் ஜெயலலிதாவின் முன்னால் விநோதமான முறையில் உடம்பை மடித்தவாறு நிற்கப் பழகியிருக்கிறார்கள். இத்தகைய காட்சிகளை இந்தியாவில் வேறு எங்கே காணமுடியும்? வேறு எந்த முதலமைச்சராவது தலைநகரை விட்டு சுற்றுலாமைய மாளிகைகளில் தங்கி ஆட்சி செலுத்தியிருக்கிறார்களா? தலைமைச் செயலர் துவங்கி, பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் வரை தமது கோப்புக்களை இருமுடியாகச் சுமந்து  கொடநாட்டிற்கு பயணிக்கிறார்கள். இத்தகைய கேவலத்தை ஊடகங்களும் அறிவுத்துறையினரும் அங்கீகரித்திருப்பதை வேறு எங்கும் காண இயலாது.

கோபாலபுரம் சி.ஐ.டி நகர் குடும்ப ஆட்சியைப் போன்ற அருவெறுக்கத்தக்க அற்பத்தனத்தை வேறு எங்காவது நாம் கண்டிருக்க முடியுமா?  டெசோ எனும் காற்றுப் போன பலூனைப் பாருங்கள்! சுதந்திர ஈழம் என்று தொடங்கி, பின்னர் அது ஈழத்துயரை பகிர்ந்து கொள்ளும் சோக காவியமாகி, பிறகு படம் கொடி முழக்கம் ஏதுமற்ற மவுன ஊர்வலமாகி, கடைசியில் உள்துறை அமைச்சகத்தின் நற்சான்று பெற்ற நடவடிக்கையாகிவிட்டது.

கெக்கெக்கே என்று கருணாநிதியைப் பார்த்து சிரிக்க விரும்பினால், ஈழத்தாய் என்று ஜெயலலிதாவுக்கு காவடி சுமந்த சீமான், நெடுமாறன், இன்னபிற தமிழினவாதிகளின் வரலாறும், ஈழத்தைக் காப்பாற்ற அத்வானியின் காலைப்பிடித்த வைகோ வின் அரசியல் சாணக்கியமும் நினைவில் வந்து நம்மை சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றன. கிளிநொச்சியின் தோல்வி, ஒரு மிகப்பெரிய பின்னடைவை முன்னறிவித்த பின்னரும், வெற்றி வெற்றி என்று ஆய்வுக்கட்டுரை எழுதுவது, எல்லாம் முடிந்து புல் முளைத்த பின்னரும், தம்பி இருக்கிறார் என்று சொல்லக் கேட்டு ஓ வென்று ஆர்ப்பரிப்பது இவையெல்லாம் தமிழகம் தவிர வேறு எங்கே சாத்தியம்?  யோசித்துப் பார்க்கும்போது, முகுல் ராய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்ததொன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை என்று தோன்றவில்லை.

________________________________________________

– புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

5

புதிய-கலாச்சாரம்-ஆகஸ்டு-2012

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

அடிமைகளின் தேசம்!
“வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது.”

கடவுளை நொறுக்கிய துகள்!
“இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.” “தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.”

கடவுளை நொறுக்கிய துகள்! ஒரு வரலாற்று விளக்கம்
“கடந்த மாதத்தில் உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலகப் பத்திரிகைகள் வரை தலைப்புச் செய்தியாக இருந்தது – ‘கடவுள் துகள்’. ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அந்தத் துகளைப் பற்றியும் விஞ்ஞானம் சொல்லும் விளக்கங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

நாமக்கல்பிராய்லர்பள்ளிகள்!
“நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.”

 கல்லறைக் கருநாகங்கள்!
தனக்கு நடந்த அநியாயத்தைப் பாட்டி போதகரிடமும், சர்ச் கமிட்டி மெம்பர்களிடமும் முறையிட்டிருக்கிறாள். அவர்களோ, கோயில் குட்டியாருக்கு ஏற்கெனவே சம்பளம் குறைவு என்றும், இருந்தாலும் அத்தனை கஷ்டத்தோடும் தேவ காரியத்தில் ஈடுபட்டிருப்பவர் மேல் அபாண்டமாகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்யக் கூடியவரல்ல என்றும் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். தான் அத்தனை நேசித்த கோயிலைச் சேர்ந்தவர்களே ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் அவர் இப்போதெல்லாம் கோயிலுக்குப் போவதில்லையாம்.”

சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் எஸ்.எம்.எஸ். புரட்சி!
“உண்மையில் ஊழலையோ, பிற சமூகக் கேடுகளையோ எதிர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தெருவிலறங்கிப் போராடியாக வேண்டும். ஆனால், அதற்கு லீவு போட வேண்டும்; வெயிலில் நிற்க வேண்டும்; அரசு அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டும்; சம்பள இழப்பைச் சந்திக்க வேண்டும் – அதிகபட்சமாக வேலையிழப்பையே கூட சந்திக்க வேண்டியிருக்கலாம் – இந்த இக்கட்டான நேரத்தில் தான் அமீர் கான் ஆஜராகிறார். சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலேயே நீங்களும் ஒரு சமூகப் போராளியாகி விடலாம் என்கிற எளிய வழியைத் திறந்து விடுகிறார். நாம் யாரையும் குற்றவாளியாக்க வேண்டாமே என்கிறார்.”

 கருணையா, கொலையா? வரமா, சாபமா?
“அந்த முப்பதாவது நாள், அதிகாலை நான்கு மணியளவில் திண்ணையில் படுத்திருந்த சுதா, நாலு வயசு முதல் குழந்தையை தன் பாவடை நாடாவாலும், இரண்டு மாதம் கூட முடியாத அடுத்த குழந்தையை தன் கை விரல்களாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு, கடைசியாகப் புடவையால் தானும் தூக்குப் போட்டு விட்டாள். உயிர் போகும் நிலையில் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த உறவுக்கார சனங்க வெளியில் வந்து பார்த்து, சுதாவைக் காப்பாற்றி உடனே கார் வைத்து நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.”

 திரைவிமரிசனம்: ‘மேட் சிட்டி‘: பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!
“சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன. அத்தகைய அமெரிக்க செய்தி ஊடகங்களின் வணிக வெறி ஒரு அப்பாவியை எப்படி அலைக்கழித்து, அவனது இயல்பான பிரச்சினையை எப்படி ஒரு தேசியப் பிரச்சினையாக மாற்றி, மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் தான் இயக்குநர் கோஸ்டா கவ்ராசின் ’மேட் சிட்டி’.”

குறுக்கு வெட்டு
ஜீன்ஸ் அணிந்தால் கொலை, பேட்மேன் ரிடர்ன்ஸ், ராம்போவுக்கு புரியுமா, இந்தியாவின் உறக்கமின்மை, தங்கக் கவலைகள், காதல் கொலை, கட்சி மாறி ஓட்டுப்போடும் கட்டுப்பாடான கட்சி…

பிச்சை புகினும் கற்கை நன்றே….
“யாருமற்ற அநாதையாக்கப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்ற ஒரு சிறுமி… வர்க்க உணர்வோடு ஒரு அமைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையும், விருப்பமும், தன் வர்க்கத்தை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணமும் மனித குலத்தின் ஆழமான அர்த்தமான உணர்ச்சிகளில் ஒன்று. நிலை மறந்து மரத்துக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு அந்தச் சிறுமி போட்ட உணர்ச்சியின் பிச்சை அது!”

மாட்டுத்தாவணிகோயம்பேடு
“தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி நாட்டையே விபத்துக்குள்ளாக்கும் மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும் ‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள் பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல் “ஊம்.. வந்துட்டேன், ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

“இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!”

6

ஸ்பெயின் சுரங்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சி

 

கிரீஸைத் தொடர்ந்து ஸ்பெயினைக் கவ்வியிருக்கிறது உலக முதலாளித்துவ நெருக்கடி. நிதி மூலதனச் சூதாடிகளால் சூறையாடப்பட்ட ஸ்பெயின், திவால் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. “கடன் வேண்டுமானால், சிக்கன நடவடிக்கைகளை அதிகப்படுத்து; மக்கள் நலத்திட்டங்களை நிறுத்து; பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கு” என்று உத்தரவிடுகின்றன சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய மத்திய வங்கியும்.

போனஸ் வெட்டு, பென்சன் வெட்டு, வேலையில்லாதவர்களுக்குப் பராமரிப்புத் தொகை வெட்டு, பள்ளிகள்  மருத்துவமனைகள் மூடல், துறைமுகம், ரயில்வே, விமானநிலையங்கள் தனியார்மயம்  என்று அடுக்கடுக்கான தாக்குதல்களை பிரதமர் மரியானார ஜோய் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். “வீதிகளில் பெட்ரோலை ஊற்றாதீர்கள்!” என்று நாடாளுமன்றத்தில் அலறின எதிர்க்கட்சிகள். வீதிகளோ ஏற்கெனவே எரியத் தொடங்கிவிட்டன.

சிக்கன நடவடிக்கையின் தொடக்கமாக நிலக்கரிச் சுரங்கங்களை மூடிவிட்டு, நிலக்கரியை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது ரஜோய் அரசு. 18ஆம் நூற்றாண்டு முதல் 5 தலைமுறைகளாக நிலக்கரி வெட்டி வரும் அஸ்தூரியா பிராந்தியத்தின் சுரங்கத் தொழிலாளர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர். 8000 சுரங்கத் தொழிலாளர் குடும்பங்களுடன், அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து அந்தப் பிராந்தியத்துக்குள்ளேயே போலீசை நுழைய விடாமல் போர் நடத்துகிறார்கள். சாலைகளில் தடுப்பரண்கள் எழுப்பி போலீசுக்கு எதிராகக் கவண் கற்களையும் ராக்கெட்டுகளையும் ஏவுகிறார்கள். எங்கும் தீ; கரும்புகை. “இழப்பதற்கு இனி ஏதுமில்லை. தாக்குங்கள்!” என்று புகையைக் கிழித்துக் கொண்டு எழும்புகின்றன பெண்களின் குரல்கள்.

கருப்புப் பயணம் என்ற பெயரில் அஸ்தூரியாவிலிருந்து தலைநகர் மாட்ரிட் நோக்கி தொழிலாளர்கள் தொடங்கிய நடைபயணம், ஜூலை 10 அன்று மாட்ரிட் நகரில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டமாகியது.

ஸ்பெயின்-சுரங்கத்-தொழிலாளர்கள்

அரசு ஊழியர்கள் சாலை மறியலில் இறங்கினார்கள். லாரி ஓட்டுனர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து வண்டிகளை நிறுத்தினார்கள். நாடு முழுவதும் 60 நெடுஞ்சாலைகள் முடங்கின. “நாங்கள் பயங்கரவாதிகளல்ல, நிலக்கரிப் பெண்கள்” என்று முழங்கிய வண்ணம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் மனைவியர்கள் அதிரடியாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்கள். போராட்டக்காரர்கள் ஏவிய ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் சன்னலை நொறுக்கியது. “அடுத்தமுறை வெடிமருந்தோடு வருவோம்” என்று முழங்கியது ஒரு குரல்.

1934இல் 3000 தொழிலாளர்களை உயிர்ப்பலி கொடுத்து, ஃபிராங்கோவின் பாசிச ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை துவக்கிய அஸ்தூரியாவின் சுரங்கத்தொழிலாளர்கள், போர்க்குணமிக்க கம்யூனிஸ்டு மரபில் வந்தவர்கள்.

‘‘எப்போதுமே தேசத்தின் முதல் எழுச்சி எங்கள் சுரங்கத்தில்தான் தொடங்கும். நாங்கள்தான் முன்னணியில் நிற்போம். இதோ, வரலாறு திரும்புகிறது” என்றார் மெனன்டெஸ் என்ற சுரங்கத்தொழிலாளி.  ஆம்; இது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் மறுவருகை.

__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?

45

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 20

”பாரதத்தில் முசுலீம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்; இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன.”

–  இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று.

இந்தியாவில் முசுலீம்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உரிமைகள், சலுகைகள் என்பவை ஏதோ பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டவை போல ஆர்.எஸ்.எஸ். சித்தரிக்கிறது. முசுலீம் என்றாலே பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்ற உண்மைக்குப் புறம்பான அயோக்கியத்தனமான பிரச்சாரத்தை முதலில் முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக முசுலீம் மக்கள் வாழந்து வருகின்றனர். காஷ்மீர் உள்ளிட்ட வட மாநில முசுலீம்களும் பல நூற்றாண்டுகளாய் இம்மண்ணில் வாழ்பவர்கள்தான். இன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், பணக்கார பா.ஜ.க. தலைவர்கள் பலரும்தான் பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த அகதிகள்!

இந்தியாவில் இந்து – முசுலீம் மதக் கலவரங்களில் நேற்றும் இன்றும் பாதிக்கப்படுபவர்கள் இரு மதத்தைச் சேர்ந்த ஏழைகள்தான். அதேசமயம். இரு மதத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டும் இந்தக் கலவரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழியைத் தேடுகின்றனர். அதன்படி 1947 பிரிவினையின் போது வடமேற்கு மாநிலம் மற்றும் வங்காளத்தில் உள்ள மேட்டுக்குடி முசுலீம்கள் மட்டும் பாகிஸ்தானுக்கும், பங்களாதேசுக்கும் சென்றனர். அதேபோல அங்கிருந்த பணக்கார – மேல்சாதி இந்துக்கள் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியா வந்தனர். இரு நாடுகளிலும் உழைத்தால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலையிலிருந்த ஏழைகள் மட்டும் இடம் பெயரவில்லை.

பிரிவினைக் காலத்தில் கலவரங்கள் ஏதும் தென்னிந்தியாவில் நடக்கவில்லை. அதனால் இங்கிருக்கும் வசதி படைத்த முசுலீம்களும் இடம் பெயரவில்லை. மேலும் அவர்கள் இதுதான் தமது மண் எனக் கருதியதாலும், பிற மக்களுடன் கொண்டிருந்த நேச உறவினாலும், பாகிஸ்தான் போவது பற்றிச் சிந்திக்கவில்லை. 1947-க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்ட்ட காசுமீர் மற்றும் ஐதராபாத் நிஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்தோரும் இடம் பெயரவில்லை. எனவே கலவரம் தூண்டிவிடப்பட்ட வட மேற்கு, வட இந்திய, வங்காள மாநிலங்களில்தான் இடம் பெயர்தல் நடைபெற்றது.

அடுத்து இந்தியாவில் 12 கோடி முசுலீம் மக்கள் பல மாநிலங்களில் பரவலாக வாழ்கின்றனர். மதத்தைத் தாண்டிய மொழி, இன, பண்பாடு, பொருளாதாரக் காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர். முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களெல்லாம் வங்க தேசத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ போக முடியாது. அந்த அளவுக்கு வாழ்வியல் – சமூகவியல் – அரசியல் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஆனால், பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடையே இத்தகைய வேறுபாடுகள் இல்லையென்றாலும் வாழ்க்கை நிலைமை இடம் பெயருவதற்கு உகந்ததாக இல்லை. அங்கே சிந்து மாகாணத்தில் குறிப்பாக லாகூரைச் சுற்றிய பகுதிகளில் சுமார் 13 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அதிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். ஆய்வாளர் அஸ்கர் அலி என்ஜினியர் ஒரு முறை லாகூருக்குச் சென்றிருந்தபோது தெருக்கூட்டும் தாழ்த்தப்பட்ட தொழிலாளி ஒருவரிடம் ‘நீங்கள் ஏன் பிரிவினையின் போது இந்தியா செல்லவில்லை’ எனக் கேட்கிறார். ”இங்கேயும் தெரு கூட்டுகிறேன். இந்தியா சென்றாலும் அதைத்தான் செய்யப் போகிறேன். இதற்கு எங்கே இருந்தால் என்ன?” என்று பதிலளிக்கிறார் அந்தத் தொழிலாளி. அவரைப் பொறுத்தவரை வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் மதத்திற்குப் பங்கு ஏதுமில்லை. ஏழ்மைக்கு ஏது மதம்?

இப்படி ஏழ்மையில் உழலும் இத்தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ அங்கே தாக்கப்படுவதற்கு ஆதாரமும் கிடையாது; அடிப்படையும் கிடையாது. இந்தியாவைப் போல அங்கும் பெரும் கலவரங்கள் நடந்ததாகப் பார்ப்பனப் புளுகுணி தினமலரில் கூட செய்தி வந்ததில்லை. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் எதிர்விளைவாக பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின. இருந்தபோதும் அப்படிக்  கலவரம் செய்தமைக்காக இரு நாடுகளைச் சேர்ந்த பல இசுலாமிய வெறியர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. ஆனால், இங்கே மசூதியை இடித்த கரசேவகர்கள் யாரும் சுடப்படவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானில் தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்காக பா.ஜ.க. கும்பல் முதலைக் கண்ணீர் விட வேண்டாம். ஏனெனில் இங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் – இந்திய இந்துக்களால் தாக்கப்படுவதைவிட பாகிஸ்தான் இந்துக்களின் நிலைமை பரவாயில்லை. மற்றபடி இந்தியப் புவியியல் எல்லையை புனிதம் கொண்டாடும் இந்து மதவெறியர்கள் நினைப்பது போல் வாழ்வியல் நிலைமைகள் மதத்தை வைத்து மட்டும் சிக்கலாகவில்லை.

உலகிலேயே இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த இப்பிரிவினை அந்த அளவுக்கு சோகத்தையும், பிரச்சனைகளையும் கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முசுலீம்கள் ‘முஜாகிர்கள்’, வந்தேறிகள் என்றழைக்கப்படுகின்றனர். அதன்படி அவர்களுக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் இன்றுவரை மறுக்கப்பட்டே வருகின்றன. அவர்களும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் ஆயுத மோதலை நடத்தி வருகிறார்கள்.

இருநாட்டு எல்லையில் வாழும் மக்களும் இரு நாட்டுப் போர்களினால் அடைந்த துயரங்கள் அளவில் அடங்கா. இராணுவச் சண்டையினால் தேசியம் மாறுவதும், எல்லை தாண்டி இயங்கிவரும் மண உறவுகளும் – அதைத் தொடர முடியாத அரசுத்தடைகளும் அங்கே இயல்பானவை. பிரிவினையின்போதும், பின்னர் நடந்த 3  போர்களினாலும் இலட்சக்கணக்கான இந்துக்கள் இங்கே வந்திருக்கின்றனர். முசுலீம் நிலவுடைமையாளர்களின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து அடிமைப்பட்டிருந்த இராஜபுத்திரர்கள், இந்தியா வந்தவுடன் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஆளும் உண்மையான இராஜபுத்திரர்களாக மாறிவிட்டனர். எனவே பிரிவினை என்பது இரு நாட்டிலிருந்தும் இடம் பெயர்ந்த உழைப்பாளிகளான முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் பொன்னான வாழ்க்கை எதையும் வழங்கவில்லை.

பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான். மதக்குடியரசு தவறு என்று கருதும் நாம் அதை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டியதில்லை.

மேலும் மதத்தின் பெயரிலான எந்தவொரு அரசும் தனது நாட்டுச் சிறுபான்மை மத மக்களை ஒடுக்கப் பயன்படுவதைக் காட்டிலும் தன் மதத்துப் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஏய்க்கவும் ஒடுக்கவுமே பயன்படுகிறது. இந்து மதவெறியர்கள் – கிறித்துவ, உழைக்கும் மக்களுக்கும் எதிரிகள் என்பது எப்படி உண்மையோ அப்படி ஒரு இசுலாமியக் குடியரசு, அந்நாட்டு முசுலீம் உழைக்கும் மக்களுக்கும் விரோதியாகத்தான் இருக்கிறது.

பாகிஸ்தான் – வங்க தேசத்தில் சட்டப்படியும், இந்தியாவில் சட்டமின்றியும் பெரும்பான்மையினரின் மதவாதம் இருந்து வருகிறது. ஆயினும் இந்தியாவில் ஆயிரமாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்ட போதும், மசூதி இடிக்கப்பட்ட போதும் வளைகுடாவில் பிழைக்கப் போன இந்துக்களைக் கேட்பார் இல்லாமல் தாக்கியிருக்கலாமே? ஏன் அப்படி நடக்கவில்லை?

வங்க தேசத்தில் இந்துக்களைத் தாக்கிய முசுலீம் மதவெறியர்களை எதிர்தத்து ‘லஜ்ஜா’ (அவமானம்) என்ற நாவலை எழுதினார் தஸ்லிமா நஸரீன். அதனால் மதவாதிகள் அவருக்கு மரணதண்டனை அறிவித்து நாட்டை விட்டு விரட்டினாலும் தஸ்லிமா தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.

‘பம்பாய்’க் கலவரத்துக்குக் காரணம் பால் தாக்கரேதான் என்று பத்திரிகைகளும், நீத மன்றமும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன. ஆனால், பம்பாய்க் கலவரம் நடந்த புழுதி மறைவதற்குள் ‘பம்பாய்’ திரைப்படத்தின்மூலம் வரலாற்றை மாற்றி, முசுலீம்கள்தான் காரணம் என்று கதை சொல்லி, பால் தாக்கரேவிடம் ஆசியும், அனுமதியும் வாங்கினார் மணிரத்தினம். மாநில, தேசிய விருதுகள், த.மு.எ.ச. உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ அறிஞர்களின் பாராட்டு, தொலைக்காட்சிகளில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பு என ‘பம்பாய்’ படத்துக்குக் கிடைத்த சீராட்டும், பாராட்டும் பட்டியலிட்டு மாளாது.

வங்கதேசம் இசுலாமிய நாடு என்றாலும் ஒரு தஸ்லிமா நஸரீனுக்காக அந்நாடு பெருமைப்பட முடியும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டாலும் ஒரு மணிரத்தினத்துக்காக நாம் வெட்கப்படவே இயலும்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!

9

மருந்து-கம்பெனி-பரிசோதனை

 பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தமது மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்கு நம் மக்களைச் சோதனை எலிகளாக்கும் விசயம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலமாகி வந்தது. தற்போது உலகமயக் கொள்கையின் கீழ் இந்த அயோக்கியத்தனம் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டது.

ம.பி. மாநில மருத்துவர்கள் குறித்துப் புலன் விசாரணை நடத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு, இம்மாநிலத்தில் மட்டும் 2006-10 காலக்கட்டத்தில்  3307 பேர் மீது நெறிமுறைக்கு விரோதமாக மருந்துப் பரிசோதனை செய்து, பல கோடி ரூபாயைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இம்மாநில மருத்துவர்கள் பலர் பெற்றுள்ளனர் என்று சென்ற ஆகஸ்டு மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சோதிக்கப்பட்ட தடுப்பூசிகள் 6 பழங்குடியினச் சிறுமிகளைக் கொன்ற போதும், தில்லி “எய்ம்ஸ்” மருத்துவமனையில் 49 பச்சிளங்குழந்தைகள் பலியான போதும் இச்சோதனைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தன. தற்போது சமூக ஆர்வலர்கள் சிலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  கோரிப் பெற்றுள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன.

இந்தூர் அரசு மருத்துவமனையில் ஜான்சன் அன்ட்ஜான்சன், க்ளாக்ஸோ போன்ற பிரபல மருந்து கம்பெனிகள், அரசு மருத்துவர்கள் உதவியுடன் 2000 ஆரோக்கியமான குழந்தைகளிடம்  புற்றுநோய், ஆஸ்துமா, இதய நோய், போலியோ, கருப்பைப் புற்றுநோய் போன்றவற்றுக்கான மருந்துகளைச் சோதித்துள்ளன.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  ஒரு வயது கூட நிரம்பாத 4142 குழந்தைகளிடம்  உயர் ரத்த அழுத்த நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளை செலுத்தி,  42 வகை சோதனைகளை நடத்தி உள்ளனர். இதில் 49 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.

நாடெங்கிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வாறு 2031 பேர்கள் இறந்துள்ளர் என்றும், 22 பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதென்றும் தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்திருக்கிறது அரசு.  இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்குப் பலமுறை நோட்டீசு அனுப்பியும் இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் வாய்தா வழங்குவதற்குச் சளைக்கவில்லை.

மருந்து-கம்பெனி-பரிசோதனைமருந்துப் பரிசோதனைகள் எனப்படுபவை அனைத்தும் அறிவியல் ஆய்வின் தேவைக்காகவோ, புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காகவோ செய்யப்படுபவை அல்ல.

எந்த ஒரு நோய்க்கும் மருந்து என்பது குறிப்பிட்டவகை வேதியங்களின் கலவையாகத்தான் இருக்கிறது. ஏறத்தாழ ஒரே அடிப்படை மருந்தை, அதன் வீரியத்தைக் கூட்டியும், வேறு சில வேதியங்களைக் கலந்தும் பல வகையான வணிகப் பெயர்களில் விற்கும் மருந்துகம்பெனிகள், அம்மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு முன்னர், சட்டரீதியான தேவையை நிறைவு செய்வதற்காகச் சோதனைகளை நடத்துகின்றன.

இத்தகைய சோதனைகளின் நோக்கம் கொள்ளை இலாபம்தானே தவிர, அறிவியல் ஆய்வு அல்ல. ஒரு மருந்து உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறும் நாளிலிருந்து 20 ஆண்டுகள் வரைதான் அக்காப்புரிமை செல்லும். காப்புரிமை பெற்ற பின் மருந்துப் பரிசோதனை நடத்தி, பின்னர் சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் பெறவேண்டும். எனவே, பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தமது விற்பனைக் காலத்தையும் இலாபத்தையும் அதிகரித்துக் கொள்வதற்காகச் சோதனைக் காலத்தை சுருக்குகின்றன.

மருந்து கம்பெனிகளுடைய ஆராய்ச்சி மேம்பாட்டுச் செலவில் 70 சதவீதம் மனிதர்கள் மீதான ஆய்வுக்கானது. இதனைக் குறைப்பதன் மூலம் இலாபத்தைக் கூட்ட முடியும். உதாரணமாக, மருந்துச் சோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள பிரிட்டனில் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு 100 பவுண்டுகளை (ரூ.8800) ஆய்வு நிறுவனங்கள் தரவேண்டியிருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ, அதில் பத்தில் ஒரு பங்குகூடச் செலவாவதில்லை. அம்மருந்துகள் பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால், அங்கே பல இலட்சம் டாலர் நட்ட ஈடு தரவேண்டியிருக்கும். இந்தியாவிலோ அந்தப் பிரச்சினையே இல்லை.

நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்தச் சோதனைகளில், முதல் கட்ட ஆய்வு, மருந்தின் பாதுகாப்பு மற்றும் மனிதர்களின் தாக்குப் பிடிக்கும் திறனைச் சோதிப்பதற்கானது. இது, 8 முதல் 10 ஆரோக்கியமான நபர்கள் மீது நடத்தப்படுகிறது.

இரண்டாவது கட்ட சோதனை, மருந்தின் திறனையும் அதன் பக்கவிளைவுகளையும் சோதிப்பதற்கானது. இது, 100 முதல் 200 நபர்களிடம் சோதிக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டத்தில், 1000 பேர் முதல் 3000 பேர் வரை சோதிக்கப்பட்டு மருந்து வெற்றிகரமாக வேலை செய்கிறதா என்பதையும், அதன் பக்கவிளைவுகளையும் உறுதிப்படுத்துகின்றனர். நோயின் பல்வேறு கட்டங்களிலும், வேறு பல மருந்துகளுடன் சேர்த்தும் இந்த சோதனை செய்யப்படுகிறது.

நான்காம் கட்ட சோதனை என்பது, இந்திய மருந்துக் கண்காணிப்பாளரின் அனுமதி மருந்துக்குக் கிடைத்த பின்னர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மருந்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஆய்வாகும்.

இவற்றில் மூன்றாம் கட்ட ஆய்வுதான் மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. அமெரிக்க மருந்து கம்பெனிகள் 2008ஆம் ஆண்டில் ஆய்வுக்காக செலவிட்ட 2,12,446 கோடி ரூபாயில், 69, 022 கோடி ரூபாய், அதாவது சுமார் 33 சதவீதம் இந்த மூன்றாம் கட்ட ஆய்வுக்குச் செலவிடப்பட்டது. இந்த ஆய்வை இந்தியா போன்ற நாடுகளுக்கு “அவுட்சோர்ஸ்” செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடி டாலர்களை பன்னாட்டு மருந்துக் கொள்ளையர்கள் மிச்சம் பிடிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனிகள், சமீப காலமாக அறிமுகப்படுத்துகின்ற புதிய மருந்துகளுக்கான மூன்றாம் கட்ட சோதனையில் 50% இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டதாகவே அவை தெரிவிக்கின்றன.

அவர்களுடைய இந்தத் தேவையை நிறைவு செய்வதற்கு, இந்திய மக்களைச் சோதனை எலிகளாகப் பிடித்துக் கொடுத்து, அதன் மூலம் ஆதாயமடைகின்ற ஒப்பந்த ஆய்வு அமைப்புகள் இந்தியாவில் காளான்கள் போலப் பெருகியிருக்கின்றன.

காண்ட்ராக்ட் ரிசர்ச் ஆர்கனைஸேஷன் (சி.ஆர்.ஓ.) என்றழைக்கப்படும் இந்த அமைப்புகளைத் தொடங்குவதற்கு ஒருவர் மருத்துவராகவோ, மருந்தாளுனராகவோ இருக்கவேண்டியதில்லை; பதிவு செய்யும் தேவையோ, கட்டுப்பாடுகளோ இல்லை.  இந்த அமைப்புகள்தான்  மருத்துவர்கள் துணையோடு இந்திய மக்களைச் சோதனை எலிகளாக்கி வருகின்றன.

நடைபாதைவாசிகள், குடிசை வாழ் மக்கள், மொழி தெரியாத அண்டை மாநில ஏழைகள் ஆகியோரிடம் ரத்த மாதிரி எடுக்கிறோம், நோய் இருக்கிறதா என்று சோதனை செய்கிறோம் என்று பொய்க் காரணங்களைக் கூறி, அவர்களை ஒரு தரகர் கும்பல் அழைத்து வருகிறது. சில ஆங்கில ஆவணங்களில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுடைய உடலில் மருந்துகளை செலுத்தி, பிறகு தேவைக்கு ஏற்ப சில மணி நேர இடைவெளியிலோ, சில நாட்களுக்குப் பின்னரோ இரத்த மாதிரியைப் பெற்றுக்கொண்டு கையில் ஆயிரம், இரண்டாயிரத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பி விடுகின்றனர். என்ன மருந்து, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குச் சொல்வதில்லை.  சோதனை எலிகளுக்குப் பணம் தரப்படுவதில்லை என்பது ஒன்றுதான் இம்மக்களுக்கும் எலிகளுக்குமான வேறுபாடு.

சி.ஆர்.ஓ.க்கள் மற்றும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தமது சோதனைகளுக்கு அரசு மருத்துவமனைகளையேகூடப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நிதி ஒதுக்கீடு இல்லாமல் வாடும் அரசு மருத்துவமனைகளுக்குச் சில வசதிகளைச் செய்து தந்து, தங்கள் சோதனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தை இணங்கச் செய்கின்றனர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நோய், மருந்து பற்றிய அனைத்து ஆவணங்களும் மருத்துவத் தொழில் தருமத்துக்கு விரோதமாக விலை பேசப்படுகின்றன.

மருந்து-கம்பெனி-பரிசோதனைமருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களை வஞ்சிப்பது மருத்துவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. ஒரு புதிய மருந்து வந்திருப்பதாகவும், அதைப் பயன்படுத்தினால் குணமாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி நோயாளியை இணங்கச் செய்கின்றனர்.

சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்ட நோயாளிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களில் 97% பேர் மருத்துவரின் பரிந்துரை காரணமாகத்தான் இதில் கலந்து கொண்டதாகக் கூறியிருக்கின்றனர்.

சோதனைகளுக்குச் சம்மதித்தால் நல்ல மருத்துவம் இலவசமாகக் கிடைக்கும், மருத்துவமனையில் படுக்கை வசதியும் சாப்பாட்டு வசதியும் கிடைக்கும் என்றெல்லாம் மருத்துவர்களாலும், சி.ஆர்.ஓ.க்களாலும் ஆசை காட்டப்பட்ட அப்பாவி மக்கள் பலர், சோதனைகளுக்குத்  தங்களை ஒப்புவித்துள்ளனர்.

சி.ஆர்.ஓ.க்களுக்கு ஒத்துழைக்கும் அரசு மருத்துவர்களுக்கு  மருத்துவ மாநாடுகள் என்ற பெயரில் வெளிநாட்டு இன்பச் சுற்றுலாக்களும் கேளிக்கை வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.

ம.பி.மாநிலம் இந்தூர் எம்.ஜி.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஹேமந்த் ஜெயின் என்ற குழந்தை மருத்துவர் ரூ.75 இலட்சம், நெஞ்சக நிபுணர் சலீல் பார்கவா ரூ.64 லட்சம், இதய நோய் மருத்துவர் அனில் பரணி 65 இலட்சம்  என  மருந்துச் சோதனையின் மூலம் தாங்கள் வருவாய் ஈட்டியதாக இவர்கள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கின்றனர். பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று, அவ்வளவே.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் சிறந்த சிகிச்சை இலவசமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கி, அவர்கள் மீது மருந்துகளைப் பரிசோதிக்கின்றன. இந்தச் சோதனைகளின் முடிவுகளை சி.ஆர். ஓ.க்கள் ஆவணப்படுத்திப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கின்றனர். ஆந்திரப் பழங்குடிச் சிறுமிகள் 6 பேரின் உயிரைப் பலி கொண்ட ’கருப்பைப் புற்றுநோய் மருந்து’ திட்டத்திற்கு நிதியுதவி செய்து நடத்தியது, பில்கேட்ஸின் தன்னார்வ நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தைக் கொட்டியழுது தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் மக்களும் இத்தகைய மருந்துச் சோதனைகளிலிருந்து தப்புவதில்லை. ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை மருந்துச் சோதனைக்கு உட்படுத்தினால், அவருக்குத் தரப்படும் தொகை குறைந்த பட்சம் ரூ.30,000. அதுவே, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் தொடர்பான மருந்துகளுக்கானச் சோதனை என்றால் ஒரு நோயாளிக்கு ரூ.90 ஆயிரம் வீதம் மருத்துவருக்கு வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கிளின்வென்ட் ரிசர்ச், கிளினி ஆர் எக்ஸ் போன்ற சி.ஆர்.ஓ. நிறுவனங்கள் அதிகாரபூர்வமாகவே தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (Drug Controller General of India ) எனும் அமைப்புதான்  இந்தியாவில் நடைபெறும் இத்தகைய சோதனைகளையும், அவற்றை நடத்தும் சி.ஆர்.ஓ.க்களையும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளையும் கட்டுப்படுத்தும் அமைப்பாகும்.

இந்த அமைப்பில் உள்ள வல்லுநர்கள் வெறும் 4 பேர். முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த ஆள் பற்றாக்குறையைப் பராமரித்து வருகிறது அரசு. இவர்கள் செய்யும் விதிமீறல்களோ யாராலும் நியாயப்படுத்த முடியாதவை.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஒப்புதல் பெறப்பட்ட மருந்துகளாக இருப்பினும், அவை இந்திய மக்களின் தேவைக்கும், உடலுக்கும் பொருந்தினால் மட்டுமே இங்கே சந்தைப்படுத்த முடியும். இதற்காக மருந்துக் கம்பெனிகள் நடத்தும் மருந்துச் சோதனைகளையோ, சோதிக்கப்படுபவர்களையோ டி.சி.ஜி.ஐ. ஒருமுறை கூட நேரில் சோதித்ததில்லை. பொதுநலன்(?) கருதி சோதனை தேவையில்லை என்று கூறியும், சோதனையே நடத்தாமல் வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்றும் 2008 ஜனவரி முதல் அக்டோபர்  2010 வரை 31 மருந்துகள் முறைகேடாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கின்றது.

ஆஸ்துமாவுக்கான டாக்சோபைலின், ரத்தம் உறைவதைத் தடுப்பதற்கான ரிவாரோக்சாபான், நுரையீரல் நோய்க்கான பிர்பெனிடோன், ஸ்கிசோபெர்னியா எனும் மனநோய்க்கான செர்டின்டோல் போன்றவை தொடங்கி, எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் மருந்துகள் வரை இதில் அடக்கம்.

ஒரு குறிப்பிட்ட மருந்தைப் பரிசோதிப்பதற்கான திட்டவரைவு உள்ளிட்ட 800 பக்க ஆவணத்துக்கு நாலே நாளில் டி.சி.ஜி.ஐ.  அனுமதி அளித்திருக்கிறது என்றும், அதை ஊன்றிப் படிப்பதற்கு தனக்கே ஒரு மாதம் தேவை என்றும் கூறுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் குலாட்டி. இந்தூரில் நடைபெற்ற மருந்துச் சோதனையால் உயிரிழந்த 89 பேர் குறித்த ஆய்வில் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தியாவில் மருந்து சோதனைகளை நடத்துவதற்கு ஏற்கெனவே இருந்த கட்டுப்பாடுகளும் 2005ஆம் ஆண்டில் நீக்கப்பட்டு விட்டன.

மருந்து-கம்பெனி-பரிசோதனை

2005 க்கு முன் இந்தியாவில் பரவாக உள்ள நோய்களுக்கான மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்துக்கும், முதல் கட்ட ஆய்வு இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் மூன்றாம் கட்ட ஆய்வுகள் முடிந்த மருந்துகளுக்குத்தான் இங்கே இரண்டாம் கட்ட ஆய்வு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

2005இல் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி கதவைத் திறந்து விடுவதற்காக “டிரக்ஸ் அண்டு காஸ்மெடிக்ஸ் ரூல்ஸின் செட்யூல் ஒய்” திருத்தப்பட்டது. வெளிநாட்டில் ஒரு மருந்தை விலங்குகள் மீது பரிசோதித்து, அந்தப் பரிசோதனை முடிவுகள் அடங்கிய காகிதத்தைக் காட்டி, டி.சி.ஜி.ஐ. இன் தலையிலடித்து ஒரு ஹிப்போகிரெடிக் சத்தியத்தையும் செய்து விட்டால், இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனைகளை இந்தியர்கள் மீது நடத்திக் கொள்ளலாம் என்றும், அந்த ஆவணங்களை ஆராயத் தேவையில்லை என்றும் விதிகள் திருத்தப்பட்டன. உடனே ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் மனிதக் கசாப்புக் கடைகளாக இந்தியாவெங்கும் முளைத்தன.

இதற்குப் பிறகுதான் போபால் விசவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது, அவர்களுக்கே தெரியாமல் இதய நோய் மருந்து முதல் மயக்க மருந்து வரையிலானவை சோதிக்கப்பட்டன. இந்தூரில் 233 மனநோயாளிகளின் உடம்பில் பல்வேறு மருந்துகள் சோதிக்கப்பட்டன. இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களின் உடல்களை, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சோதனைக் களமாகத் திறந்து விட்ட யோக்கியர் அன்புமணிதான், இன்று மக்களைக் கொல்லும் மதுக்கடைகளைப் பூட்டப் போகிறாராம்!

மருந்துச் சோதனையால் கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளானவர்கள் அது பற்றி புகார் செய்யும்போது, எங்கள் மருந்தால்தான் இந்த பாதிப்பு என்று நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுகின்றன, மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள். அரசு உதவி பெறும் மருத்துவமனையான போபால் நினைவு மருத்துவமனையிலேயே போபால் மக்கள் மீது சோதனை நடத்தப்பட்டது பற்றித் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விவரம் கேட்டதற்கு, தர முடியாது என்று பதிலளித்திருக்கிறது அம்மருத்துவமனை. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் நோயாளிகளுக்கேகூடத் தனியார் மருத்துவமனையில் தரப்படும் மருந்துகள், சோதனைகளின் முடிவுகள் ஆகியவை ரகசியமாக்கப்படுகின்றன. தவறான அலட்சியமான சிகிச்சையால் பாதிக்கப்பட்டது கண்கூடாகத் தெரிந்தாலும், நிரூபிக்கச் சொல்லி சவால் விடுகிறார்கள் மருத்துவ மாஃபியாக்கள்.

தன்னை நம்பி உயிரையே ஒப்படைக்கின்ற ஒரு நோயாளியின் உடலை மருந்து கம்பெனிக்கு விலைபேசும் இவர்கள், கூலிப்படைக் கொலையாளிகளை விடக் கொடியவர்கள்.  ஆனால் இந்த வெள்ளை உடைக் கிரிமினல்களைத் தண்டிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. ம.பி. மாநிலத்தில் மனநோயாளிகள் மீது அவர்களுக்குத் தெரியாமலேயே மருத்துவ சோதனை நடத்திய 12 அரசு மருத்துவர்களுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டும் அபராதம் விதித்திருக்கிறது அம்மாநில அரசு. ஏனென்றால், இதைக் கிரிமினல் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க சட்டத்திலேயே இடமில்லை.

மருந்துச் சோதனைகள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பதைக் கண்ட  ம.பி.யைச் சேர்ந்த மருத்துவரானஆனந்த் ராய், இது தொடர்பாக ஒரு ஆணை பிறப்பிக்கக் கூடாதா என்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டார்.  கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, சட்டம் இயற்றுவது எங்கள் வேலை அல்ல என்று கறாராகக் கூறிவிட்டனர் நீதிபதிகள்.

மருந்து-கம்பெனி-பரிசோதனை

சர்வதேச மருந்துச் சோதனைத் தொழிலின் ஆண்டு மதிப்பு 1,56,870 கோடி ரூபாய். இதில் 15% சந்தையை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றி விட்டதாகக் கூறுகிறது மெக்கின்சி நிறுவனம். மீதி 85 சதவீதத்தையும் கைப்பற்றுவதற்கு ஒரு விபச்சாரத் தரகனைப் போல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு வலை வீசுகிறார், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்.

வாருங்கள். 5 இலட்சம் மருத்துவர்கள், 160 மருத்துவக் கல்லூரிகள், ஆங்கிலம் பேசத் தெரிந்த மருத்துவப் பட்டதாரிகள், 7 வகையான மனித மரபணு வகைகளில் 6 வகைகளை உள்ளடக்கிய 100 கோடி மக்கட்தொகை, மேலை நாடுகளைப் போலன்றி மருந்துகளால் களங்கப்படாத 100 கோடிக்கும் மேற்பட்ட பச்சை உடம்புகள்; வாருங்கள், உங்கள் மருந்துச் சோதனைகளை இங்கே தொடங்குங்கள்  என்று மருந்து கம்பெனி முதலாளிகளின் கையைப் பிடித்து இழுக்கிறார் அவர்.

பி.பி.ஓ. க்களும் ஆலைகளும் மலிவான இந்திய உழைப்பை விற்கின்றன. சி.ஆர்.ஓ.க்கள் இந்திய உடலும் மலிவுதான் என்று கூவுகின்றன. நாஜிகளால் மருந்துச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் எதிரிகளின் கைகளில் சிக்கியிருக்கிறோம் என்று உணர்ந்திருந்தார்கள். இந்திய மக்களோ, நம்ம டாக்டர், நம்ம கெவர்மென்டு என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்!

7

இந்தியாவின் உற்பத்தி தளங்களின் வீழ்ச்சியும், அழிவும் !!

“இந்தியாவின் உற்பத்தி துறைகள் நிரந்தரப் பணியை துறந்துவிட்டு, தினக்கூலிகளை, தற்காலிக பணியாளர்களை வைத்து லாபம் ஈட்டுகிறது.  இது தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுடன், தொழில்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய மானேசர் வன்முறை, நிலைமை மோசமாகி வருவதற்கான அறிகுறியாகும்.”

மனேசர் மாருதி தொழிலாளி – முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரந்தர தொழிலாளர்களை விட ஊதியம் குறைந்த – சட்டப் பாதுகாப்பற்ற தற்காலிக – ஒப்பந்த தொழிலாளர்களையே பணியில் அமர்த்துகின்றனர் படம் நன்றி – http://www.thehindu.com/

வ்வொரு காலையும் இந்தியாவின் 50 மில்லியன் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் சங்கு அலறலில் பணியிடத்திற்கு சென்று, அங்கு அவர்களது  ஒரே மாதிரி பணியை பிசகில்லாமல் செய்துவிட்டு, பின் அதே சங்கின் அலறல் சத்தம் கேட்டவுடன் அன்றைய ஷிப்ட் பணியை முடித்துவிட்டு,  அடுத்த ஷிப்ட் பணி துவங்க பார்க்கின்றனர்.

இந்தியாவின் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மொத்தத்தில் 11 சதமானமே என்றாலும், அவர்களும், இந்த துறையும்தான் இந்தியாவின் பொருளாதார பெருக்கத்திற்கு அடித்தளமாக உள்ளனர்.

சமீபத்தில் மாருதி சுசுகியின் மானேசர் தொழிற்பிரிவில் தொழிலாளர்கள், நிர்வாகத்தினரிடையே நடந்த மோதலில் ஒரு மூத்த பொது மேலாளா் கொல்லப்பட்டு,பலர் காயமடைந்த வன்முறை சம்பவம், கடந்த கால தொழிற்சங்க மூர்க்கத்தனத்தை நினைவூட்டுவதாக உள்ளது என பத்திரிகைகள் எழுதுகின்றன.  ஆனால் தொழில்துறை வேலைநிறுத்தம், மற்றும் மனித வேலை நேர இழப்பு என்பது வரலாற்று ரீதியாக பார்க்கையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. 1973-74-ல் அவசர கால பிரகடனத்திற்கு முந்தைய காலத்தில் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது.  ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன என வி.வி.கிரி தேசிய தொழில் மையம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலைக்கு எதை காரணம் காட்டுவது?  இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் ஒரு அதீத பாதுகாப்புள்ள தொழிற்கூடம்தானா?

புள்ளி விபரங்கள் வேறுமாதிரி சொல்கிறது.  இன்று தொழிலாளர்கள், நிஜ ஊதியம் என்ற அளவில் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டதைக் காட்டிலும், மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர், வேலை பாதுகாப்பில்லை.  இருப்பினும் அவர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

20 ஆண்டுகள் பரிதாபாத்தில் கருவி (உதிரிபாகம்) உற்பத்தித் தொழிலில் இருந்த திரு பூபன் சிங் கூறுகிறார்- தொழிற்கூடங்கள் தற்போது வேலை பார்ப்பவர்கள், வேலை பார்ப்பவர்களை மேற்பார்வையிடுபவர்கள் என இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது என்றார். இயற்கையாகவே தொழிலாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்குமிடையே ஒரு பகையுணர்வு இருந்தே வருகிறது.  அவரது காலத்தில் தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் இணைந்து இந்த இடைவெளியை இணைத்து வந்தனர்.  தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகத்தின் முன் வைத்ததுடன் பணியிடத்திலும் ஒழுக்கத்தை முறைப்படுத்தினர்.

1970களின் வேலை நிறுத்தங்களை தொடர்ந்து திரு சி.பி.சந்திரசேகர் என்ற பொருளாதார நிபுணரால் தொழிற்சாலைகளின் ஆண்டு ஆய்வு அறிக்கையில், 1981-82லிருந்து 1994-95 வரையிலான 15 ஆண்டுகளில், பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில் கொடுக்கப்பட்ட ஊதியஉயர்வு 40 சதமானமாக இருந்தது.  அதைத் தொடர்ந்த 15 ஆண்டுகளில் 15 சதம் குறைந்துவிட்டது என்கிறார்.

குறைந்து வரும் ஊதியங்கள்

தொழிற்சாலைகளில் வருவாய் நிகர மதிப்பிற்கு இணையான ஊதிய விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் 30.3 சதத்திலிருந்து 11.6 ஆக குறைந்துள்ளது.  அதே நேரத்தில் கடந்த 30 ஆண்டுகளில் முதலாளிகளின் லாபம் 23.4 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயா்ந்துள்ளதிலிருந்து, ஒன்று தெளிவாகிறது.  தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கூடிய அந்த விகிதத்தில்- முதலாளிகளின் லாபம் உயர்ந்த அந்த விகிதத்தில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் உயர வில்லை என்பதே. தற்காலிக பணியாளர்கள் பெருகிவருவது, மருத்துவ பலன்கள், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் இல்லாதது, இன்றைய நிலையை தெளிவாக்குகிறது.

19 வயது தற்காலிக பணியாளர் பாபு கூறினார். “தற்காலிக பணியாளர்களிடையே பல்வேறு வகை உள்ளது”  நிர்வாகத்தால் நியமனம் செய்யப்படும் தற்காலிக பணியளர்கள், தற்காலிக பணியாளர்கள் வருகைப் பட்டியலில் காட்டப்படும் தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் ஊதிய பட்டியலில் ஊதியம் பெறுபவர்கள், ஒப்பந்த காரர்கள் வருகைப்பட்டியலில் உள்ளவர்கள், ஆனால் ஊதிய பட்டியலில் வராதவர்கள் என பல்வேறு வகைகள் உள்ளது என்று கூறுகிறார்.

பாபு குட்டையாகவும், மெலிந்தும் ஐ ஐ டி படிக்க துடிக்கும் மாணவர் போல் அவ்வப்போது சீப்பினால் தலையை சீவி விட்டுக் கொள்வார்.  தேசிய பகுதி கணிப்பின் பிரகாரம் 2000-ல் இத்தகைய தொழிலாளர்கள் அமைப்பு சார் தொழிற்சாலையிலும், உற்பத்தி துறையிலும், கட்டுமான தொழிலிலும் பணிபுரிந்த தொழிலாளர்கள் 38 சதமானமாக இருந்தது, 2010-ல் அவர்களின் விகிதாச்சாரம் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தற்போதைய வீழ்ந்து வரும் சூழலில், உற்பத்தி தொழிலில் மட்டும் 5 மில்லியன் தற்காலிக தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்த தலைசுற்றுகிற சிப்ட் முறையால், ஒரு நிலையான தொழிற்சங்க நடவடிக்கை சாத்தியமற்றதாகிறது.

மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஊசி முதல், மாத்திரை வரை செய்யும் ஒரு மருந்து உற்பத்தி கம்பெனியில்தான் பாபு தனது முதல் வேலையை துவக்கினார். அவருக்கு அப்போது வயது 16 என்பதால், அந்த நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தது.  ஆனால் ஒப்பந்தகாரர், அவரை ஓராண்டிற்கு வருகைப்பதிவில் இல்லாத பட்டியலில் வைத்து, குறைந்த பட்ச ஊதியத்திற்கு குறைவாக மாதம்  ரூ 2400க்கு வேலை கொடுத்து, தூய்மையாக்கப்பட்ட பாட்டில்களை மெஷினில் ஏற்றி, இறக்கும் பணியை 8 மணி நேரம் பார்க்க வைத்துள்ளார்.

அதன்பின் 300 நிரந்தரத் தொழிலாளர்களையும், 1200 தற்காலிக பணியாளர்களையும் பணிக்கமர்த்தியுள்ள ஒரு எலக்டிரிக்கல் கம்பெனியில் வருகைப்பதிவில் உள்ள தொழிலாளியாகவும் பணிபுரிந்தார். அவர் அங்கே ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒரு மெஷினில் உள்ள திருகியை இறக்கிக்கொண்டு எட்டு மணி நேரம் வேலை பார்த்து மாதம் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 4847 பெற்றார். இத்தகைய ஒப்பந்த தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்க்க வேண்டும். நிரந்தர தொழிலாளி மட்டுமே உட்கார முடியும்? என்கிறார் அவர்.  நிரந்தர தொழிலாளர்களுக்கு சங்கம் இருக்கிறது.  ஆனால் அவர்கள் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்காக போராட மாட்டார்கள்.  “நாங்கள் ஏதாவது ஒரு சிறு நாற்காலியில் உட்கார்ந்தால், இந்த நிரந்தர தொழிலாளர்கள் எங்களை எழுப்பி விட்டு விடுவார்கள்” என்கிறார் பாபு.  இத்தகைய சூழலில் கழிப்பிடம் செல்வது போல் சென்று தனது கால்களுக்கு ஓய்வு கொடுத்துக் கொள்வதும், மேற்பார்வையாளர் கண்டுகொள்ளாத வரையில்தான். பின்னர் அந்த பணியையும் விட்டுவிட்டு பூமா போன்ற  பல்வேறு நிறுவன பெயர்களில் காலணிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் வேலை தேடிக்கொண்டார்.

அந்த கம்பெனிக்கு அவர் ஒரு “கம்பெனி தற்காலிக ஊழியராக” எடுத்துக் கொள்ளப்பட்டார்.  ஆனால் அந்த கம்பெனியோ அதனது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்து வந்தது.  எங்களது நிலுவை ஊதியத்தை கொடுங்கள், நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்றோம்.  ஆனால் அந்த கம்பெனியிடமோ எங்களது ஊதியத்தை தீா்வுசெய்ய பணமில்லை என்கிறது. சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது ஊதியத்திற்காக போராடுகிறார்கள்.  ஒப்பந்த தொழிலாளர்களோ ஊதியம் பெறாமலேயே அதற்காக போராட வருகிறோம் என்கிறார்கள்.

ஊதியம் பெறாத தொழிலாளர்கள்

மக்களவை சமர்ப்பித்த புள்ளி விபரப்படியே “இந்தியா இங்க்” என்ற நிறுவனம் 2011-12-ல் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையோ ரூ 711 கோடி.  இதில் சம்பளப்பட்டியலில் வராதவர்கள் ஊதியமோ, தொழில் நீதிமன்றங்களின் தாவாவுக்காக செல்லாத பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள தொகையோ சேராது.  அவர்கள் எப்போதுமே தொழில் நீதிமன்றங்களை அணுகியதில்லை. ஏனென்றால் அங்கு நியாயம் கிடைக்காது என்பதால்.  பூபன்சிங் என்ற ஓய்வுபெற்ற கருவிகளை செய்பவர் தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை பெறுவதற்காக 1997 லிருந்து போராடி வருகிறார்.  கடந்த ஆண்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் 13,527 அது தற்போது 13,642ஆக இந்த ஆண்டு உயர்ந்துவிட்டது.

இந்த நீதிமன்ற தலையீடோ, சங்கங்களோ இல்லாமல் பாபு போன்ற தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப, ஒரு புதுவகை சீர்குலைவு வழியில் நிர்வாகத்தை நிர்பந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாலை, தீயிலிருந்து பாதுகாப்பு குறித்த ஒரு மணி நேர சொற்பொழிவுக்கு வர அனைத்து தொழிலாளர்களும் அழைக்கப்பட்டனர்.  கடந்த 2009 மே மாதம் லகனியில் 10 தொழிலாளர்கள் தீ விபத்தில் மாண்டனர். பலர் தீக்காயமுற்றனர். “எப்போதெல்லாம் ஆலையின் சங்கு ஒலிக்கப்படுகிறதோ, அப்போது உடன் அனைவரும் திறந்த வெளிக்கு வந்து விட வேண்டும்” என்று மேலாளர் சொன்னார்.  தொழிலாளர்கள் தங்களது தலைகளை அசைத்து, சம்மதத்தை தெரிவித்தனர்.

மறுநாள் காலை 10 மணிக்கு ஆலையின் சங்கு ஒலித்தது, அனைத்து தொழிலாளர்களும் சொன்னது போல் ஆலையின் திறந்த வெளிக்கு வந்து திரணடனர்.  ஆனால் அங்கு எந்தவித தீ விபத்து ஏதும் நடைபெறவில்லை.  மேற்பார்வையாளர் விரைந்து திறந்த வெளிக்கு வந்தார். அங்கு அனைத்து தொழிலாளர்களும் “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிட்டனர்.

இது பல மாதங்களாக தொடர்ந்தது.  “யாராவது ஒருவர் அந்த ஆலையின் சங்கை ஒலிக்கச் செய்வோம், எல்லோரும் திறந்த வெளிக்கு ஓடி வந்து விடுவோம்”, பாபு சொன்னார். நிர்வாகத்தினர் வெளியே வந்து எங்களை பார்க்கும் போது, “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிடுவோம். அந்த மேற்பார்வையாளரும் ஒன்றும் சொல்லமாட்டார்.  ஏனெனில் அவருக்கே நான்கு மாத ஊதியம் நிலுவையாக உள்ளது. மேலும் தொழிலாளர்கள் உதிரிபாகங்களை இணைக்கும் பிரிவில் பணியை மெதுவாக செய்யத் தொடங்கி, முற்றாக நிறுத்திவிட்டனர்.  அதன் பின்னரே அவர்களது ஊதியத்தின் ஒரு பகுதி மட்டுமாவது, அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், பாபு போன்ற தொழிலாளர்களுக்கு இன்னும் நிர்வாகம் கொடுக்க வேண்டியது நிறையவே உள்ளது.

லக்னியில் நடந்த இந்த நிகழ்வுகள் ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வல்ல. மஸ்தூர் சமாச்சார் போன்ற பிரசுரங்கள், தொழிலாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக, சிறந்த பணி நிலையை பெற தலைமையில்லா பல போராட்டங்களை நடத்தியுள்ளதை பட்டியலிட்டுள்ளது.  இத்தகைய போராட்டங்களை கலைத்திட முடியாது, ஏனென்றால், இவைகள் அனைத்தும் “தொழிற்தாவா”, “அமைதியின்மை”, “வேலைநிறுத்தம்”, “கதவடைப்பு” போன்ற எந்த வகையிலும் சேராதது.  மாருதி நிறுவனம் போல சில நேரங்களில், இத்தகைய போராட்டங்களை கட்டுக்குள் வைத்திருப்பதோ, வழிகாட்டுவதோ அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால், அங்கெல்லாம் தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களின் கட்டுப்பாட்டிலில்லை.  காரணம், அங்கு தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.  திரு ராம்குமார், ஐசிஐசிஐ வங்கி குழுமத்தில் ஒரு இயக்குனர்.  அவரது நண்பர்தான் மாருதி தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் நடந்த வன்முறையில் இறந்து போன திரு அவானிஷ் தேவ்.  மானேசரில் நடந்தது ஒரு கொலை, இது ஒரு குற்றம் என்கிறார் திரு ராம்குமார்.  எந்தவித சமத்துவமின்மையும் ஒருவரை கொல்வதற்கு உரிமம் கொடுத்ததாக கொள்ள முடியாது என்கிறார் அவர்.

“இதுவரை நிர்வாகமும், தொழிற்சங்கமும் இணைந்து இருந்து வந்த இந்த தொழிற்சாலை என்ற பெரியவீட்டில் ஒரு சாரளம் உடைந்து விட்டது.  மேலும் பல கற்கள் வந்து உள்ளே விழுவதற்கு முன்பு இந்த உடைந்த சாளரம் உடன் செப்பனிடப்பட வேண்டும்” என்கிறார் தனியாக கூறும் போது.

“தொழிலதிபர்கள் தொழிற்சாலையை நடத்த தங்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று கோரமுடியாது.  அது தங்களது தொழிலாளர்களது உரிமைமற்றும் நலத்தினை குறைத்திட முயலுமானால், அதை ஏற்க முடியாது”  என்கிறார் திரு ராம்குமார்.

ஆனால் அதே நேரத்தில், தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தினர் மீது கொண்டுள்ள சந்தேகத்தை விலக்கிக்கொண்டு, ஒரு பன்முறையற்ற தொழிற்கூடத்திற்கு உறுதி அளிக்கும் திட்டத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திரு ராம்குமார்.

அத்தகைய ஒரு திட்டம் நிரந்தர தொழிலாளர்களும், தற்காலிக தொழிலாளர்களுக்கு மிடையேயான ஊதிய வேறுபாடுகள் களைவதற்கும், மற்றொருபுறம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்குமிடையேயான வேறுபாடுகளை களையும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார் திரு ராம்குமார்.

கடந்த ஆண்டு மாருதியில் நடந்த தொடர் வேலை நிறுத்தங்களை ஒட்டி மானேசர் தொழிற் கூடத்தில் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது போராட்டங்களை முன்நடத்த வந்த தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளி, வருங்கால திட்டம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை போல செய்தியை, அந்த பகுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.  கனவானே இன்றைய நிலைமை ஒன்றும் புரியவில்லை அல்லவா.  கடந்த சில மாதங்களாகவே, தொழிலாளர்களில் சிலர் மற்ற தொழிலாளர்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்து வந்தனர். அத்தகையோரை பணி நீக்கம் செய்ததன் மூலம் நிர்வாகம், ஒரு மதிப்பிடமுடியாத கருவியை தூக்கியெறிந்துவிட்டது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

_________________________________________________________
நன்றி- தி இந்து – திரு அமன்சேத்தி
தமிழில் –சித்ரகுப்தன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!

0

மீனவர்-கொலை-டந்த ஜூலை 16ஆம் தேதியன்று,  துபாய் அருகேயுள்ள  ஜாபல்அலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த, 6 இந்தியர்களும் 2 துபாய்காரர்களும் அடங்கிய மீன்பிடி படகை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அமெரிக்கக் கடற்படையினர் எந்திரத் துப்பாக்கி மூலம்  கண்மூடித்தனமாகச் சுட்டதில் இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினத்தைச் சேர்ந்த சேகர் என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். முத்து முனிராஜ் என்ற மீனவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் எதற்காக துபாய் செல்ல வேண்டும்?

சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி தமிழக மீனவர்களைக் கொன்று வருவதாலும், பொதுவில் மீன்பிடித் தொழில் நசிவடைந்துள்ளதாலும், தமிழக மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வளைகுடா நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்குச் சேர்ந்து பாரசீக வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அங்கேயும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை செய்த பின்னரும் அந்தப் படகு தங்களை நோக்கி வேகமாக வந்ததால், இரானியப் படை அல்லது அல்கய்தா தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்க வருவதாகச் சந்தேகித்து, தற்காப்புக்காகச் சுட்டதாக அமெரிக்கக் கடற்படை திமிராக விளக்கம் அளிக்கிறது. ஆனால், கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே வருவது மீனவர்களா, தீவிரவாதிகளா என்று தெரிந்துவிடும்.

மேலும், இந்திய மீனவர்கள் சென்ற படகு யாருக்கும் அபாயத்தை ஏற்படுத்தாத வகையில் சரியான திசையில் சென்றுள்ளதாகவும், அமெரிக்கக் கடற்படையினர்தான் தவறிழைத்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக துபாய் போலீசுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்கா, இதை ஏற்க மறுத்து விசாரணைக்குப் பின்னர்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறது.  பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் எதற்காக அமெரிக்கக் கடற்படை நிறுத்தப்பட்டிருக்கிறது?

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், இப்போது இரானைக் குறிவைத்துள்ளன. இரானை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க மேலாதிக்க வல்லரசு தனது படைகளைக் குவித்து வருகிறது. பாரசீக வளைகுடாவின் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் உலகின் 40%க்கும் மேலான எண்ணெய் ஏற்றுமதி வணிகம் நடக்கிறது என்பதால், இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் நாடுகளின் இறையாண்மைக்கும் பெருத்த அச்சுறுத்தலாக உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்கிறது இரான்.

இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்த, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகப் பொய்க்குற்றம் சாட்டி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் பல பொருளாதாரத் தடைகளை போட்டுள்ளன. தனது எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலும் முடமாக்கும் இப்பொருளாதாரத் தடை நடவடிக்கையை எதிர்க்கும் இரான், ஹோர்முஸ் நீரிணை கால்வாய் பகுதியை மூடப்போவதாக  எச்சரித்தது. இரான் அப்படிச் செய்தால், அதை உடனடியாக முறியடிப்போம் என்று நான்கு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களை வளைகுடா பகுதியில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா, இரானை ஆத்திரமூட்டி வம்புக்கு இழுத்து போர்த் தாக்குதலைத் தொடுக்க முயற்சித்து வருகிறது.

நேற்றுவரை இராக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று  அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள், இப்போது பாரசீக வளைகுடாவில் இரானின் தற்கொலைப் படகுத் தாக்குதல் என்ற பயங்கரவாதப் பீதியூட்டி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தக் கிளம்பியுள்ளதன் வெளிப்பாடுதான் மீனவர் சேகரின் படுகொலை.  ஒருக்கால், தமிழக மீனவர்கள் இரானிய ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால், அவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இப்படுகொலையை அமெரிக்கா இந்நேரம் நியாயப்படுத்தியிருக்கும். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பதால், மீன்பிடி படகின் மீதான தாக்குதல் பற்றிய விசாரணைக்கு வேறுவழியின்றி அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் அடாவடித்தனங்களைத் தடுக்கக்கூட முன்வராத இந்தியா, ஏகாதிபத்திய எஜமானரான அமெரிக்காவின் அட்டூழியத்துக்கு நியாயம் கேட்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பாரசீக வளைகுடாவில் இன்று ஒரு  தமிழக மீனவர் அமெரிக்க மேலாதிக்க வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளார். நாளை, எந்தவொரு ஏழை நாட்டைச் சேர்ந்த மீனவரும் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளதை உலகுக்கு உணர்த்திவிட்டு, மீனவர் சேகரின் உடல் இந்தியாவுக்குத் திரும்பியிருக்கிறது.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

நீதி வேண்டுமா, ஆயுதமேந்து!

17
ரூபம்-பதக்
ரூபம்-பதக்

ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை.

ரூபம்-பதக்
ரூபம்-பதக்

பீகார் மாநிலத்திலுள்ள புருனியா சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினர்  ராஜ் கிஷோர் கேசரி மரணமடைந்த வழக்கில், அவரது மரணத்துக்குக் காரணமான 35 வயதான ரூபம் பதக் என்ற பெண்ணுக்கு, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின்  கீழ் ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.  ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன?  இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!”

ராஜ் கிஷோர் கேசரியும், அவரது உதவியாளர் பி.என்.ராய் என்பவனும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, ரூபம் பதக்கை 2007ஆம் ஆண்டு தொடங்கியே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி வந்தனர்.  இக்கொடுமையை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ரூபம் பதக், கடந்த 2010ஆம் ஆண்டு, ராஜ் கிஷோர் மற்றும் பி.என். ராய் மீது பாலியல் வல்லுறவு குற்றஞ்சுமத்தி போலீசிடம் புகார் அளித்தார். ஆனால், போலீசோ அப்புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ரூபம் பதக்கை அலைக்கழித்தது.  தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடக் கோரி அவர் நீதிமன்றத்தில் முறையிட்டும்கூட, புகாரும், வழக்கும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.

இதற்கிடையே பீகார் சட்டசபைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.  ராஜ் கிஷோர் மீண்டும் புருனியா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தான்.  ரூபம் பதக் கொடுத்திருக்கும் புகார் தனது வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்பதால் அப்புகாரையும் வழக்கையும் திரும்பப் பெறும்படி ரூபம் பதக்கை நிர்பந்தித்த ராஜ் கிஷோர், “இதற்கு மறுத்தால் உனது மகளைக் கடத்துவேன்” என மிரட்டினான்.  இதனால் வேறு வழியின்றிப் புகாரையும் வழக்கையும் திரும்பப் பெற்றார், ரூபம் பதக்.

ரூபம் பதக்கிற்கு நீதி மறுக்கப்பட, ராஜ் கிஷோரோ தேர்தலில் வென்று மீண்டும் எம்.எல்.ஏ., பதவியைக் கைப்பற்றினான்.  ரூபம் பதக் மனதை நம்பிக்கையின்மையும் ஆத்திரமும் ஒருசேர ஆக்கிரமித்தன.  இந்நிலையில்,  ராஜ் கிஷோர் வீட்டிற்குச் சென்று அவனைச் சந்தித்த ரூபம் பதக், தன்னை, தனது வாழ்வைச் சீரழித்த அந்தக் கயவனை, சமையலறைக் கத்தியால் குத்திச் சாய்த்தார்.  ராஜ் கிஷோரைத் தான் கத்தியால் குத்தியதை ரூபம் பதக் மறுக்கவில்லை; அதே சமயம், தான் குத்தியதால் அவன் இறந்துபோய்விட்டான் என்பதையும் அவர் அறியவில்லை. ரூபம் பதக்கை சம்பவம் நடந்த இடத்திலேயே கைது செய்த போலீசு, ரூபம் பதக்கிடம் எம்.எல்.ஏ. இறந்துவிட்டதாகத் தெரிவித்தபொழுது, “அவன் சாத்தான்; இறந்திருக்கமாட்டான்” என்றுதான் பதில் அளித்திருக்கிறார்.

ரூபம் பதக் அளித்த தண்டனையால் செத்துப்போன காமக் கொடூரனான ராஜ் கிஷோரை உத்தமனாகவும், 1974இல் நடந்த மாணவர் இயக்கத்தின் ஹீரோவாகவும்; ரூபம் பதக்கை நடத்தை கெட்டவளாவும் சித்திரிக்கும் பிரச்சாரத்தை பா.ஜ.க., மட்டுமின்றி, அனைத்து ஓட்டுக்கட்சிகளும், நிதிஷ்குமார் அரசாங்கமும் முன்னின்று நடத்தின.  ஓட்டுக்கட்சிகளின் இந்தப் புளுகுத்தனத்தை, அவதூறை அம்பலப்படுத்தியும், வழக்கு விசாரணையை முறையாகவும் நடத்தக் கோரி பெண்ணுரிமை அமைப்புகள் போராடியதையடுத்து, வேறு வழியின்றி இவ்வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது, நிதிஷ்குமார் அரசு.

ஆனால், மையப் புலனாய்வுத் துறையோ ராஜ் கிஷோர் மீதான ரூபம் பதக்கின் பாலியல் புகாரை ஒதுக்கி விட்டு, இதனை வெறும் கொலை வழக்காக மட்டும் கருதி விசாரணை நடத்தியது. ராஜ் கிஷோரின் உதவியாளனாக இருந்த பி.என். ராயைக் கைது செய்யக்கூட சி.பி.ஐ., முன் வரவில்லை என்பதிலிருந்தே, அதனின் விசாரணை எந்தளவிற்கு ஒருதலைப்பட்சமாக நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு விடலாம்.  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் வழக்கின் காரண காரியங்களை ஆராயாமல், ரூபம் பதக்கிற்கு ஆணாதிக்க வக்கிரப் பார்வையிலிருந்து ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது.

நீதி பெறுவதற்கு ரூபம் பதக் ஆயுதம் ஏந்தியது சரிதான் என்பதே இந்தத் தீர்ப்பிலிருந்து பெறப்படும் நீதி.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சட்டிஸ்கர் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

2

சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

படுகொலை

ஜூன் 28ஆம் தேதி. சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம்  கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமம். இவ்வாண்டின் விதைப்புத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பதையொட்டி, யார் முதல் ஏர் ஓட்டுவது என்பதைப் பற்றி அன்று இரவு நிலவொளியில் அப்பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கிராம மக்களைச் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசுப் படை,  திடீரென நாற்புறமிருந்தும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய அம்மக்களைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. பலரது முதுகிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்து சரிந்து விழுந்து மாண்டனர். கொல்லப்பட்டவர்களின் பிணங்களை பூட்சுக்காலால் எட்டி உதைத்தும், கத்தியைக் கொண்டு அவர்களது உடல்களை வெட்டியும் போலீசுப் படை வெறியாட்டம் போட்டது.

அன்று  ஜாலியன்வாலா பாக்கில் பிரிட்டிஷ் இராணுவம் இந்திய மக்களை நாற்புறமும் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டம் போட்டதைப் போன்றதொரு மிகக் கொடிய பயங்கரவாத வெறியாட்டத்தை, சட்டிஸ்கரில் கடந்த ஜூன் 28அன்று இரவில் இந்திய துணை இராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீசுப்படை நடத்தியிருக்கிறது. சிறுவர்சிறுமிகள் உள்ளிட்ட  19  அப்பாவி பழங்குடியினரைத் துடிக்கத்துடிக்கப் படுகொலை செய்துள்ளது.

கொல்லப்பட்ட இரண்டு அப்பாவிகளின் பிணங்களுக்கு மாவோயிஸ்ட் போல இராணுவச் சீருடையை அணிவித்து, பிணங்களின் அருகே துப்பாக்கிகள்  வெடிகுண்டுகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்ட போலீசுப்படை,  பிணங்களைச் சுற்றி தரையில் உறைந்திருந்த இரத்தக் கறைகளை அகற்றிய பின்னர் அன்றிரவே ஒரு டிராக்டரில் பிணங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பசாகுடா கொண்டு சென்றது. அன்று இரவு முழுவதும் கிராமத்தில் முகாமிட்ட போலீசுப் படை, மறுநாள் காலைக்கடன் முடிக்க வீட்டைவிட்டு வெளியே வந்த ரமேஷ் என்பவரை அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொன்றது. இளம் சிறுமிகள்  4 பேரின் ஆடைகளை உருவி மானபங்கப்படுத்தி, அவர்களைத் தாக்கி வண்புனர்ச்சிக்கு முயற்சித்துள்ளது.

இப்படுகொலை நடந்த அடுத்த நாளில், 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் கசியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, 1999க்குப் பிறகு பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக  நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை இதுதான் என்றும், இது மிகப் பெரிய வெற்றி என்றும் அறிவித்தது, மத்திய ரிசர்வ் போலீசுப் படை.

பின்னர், கொல்லப்பட்டவர் பழங்குடியின மக்கள் என்றும், இது மாவோயிஸ்டுகளுடனான மோதல் அல்ல, அப்பட்டமான படுகொலை என்றும்  அடுத்தடுத்து செய்திகள் வெளிவரத் தொடங்கின.  உடனே, “நாங்கள் தீவிரவாதிகளைக் கொல்வதற்கு முன்பாக, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பரிசீலிப்பது எங்கள் வேலை அல்ல” என்று திமிராக அறிவித்தார், மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் தலைமை இயக்குநரான  ‘வீரப்பன் புகழ்’ விஜயகுமார். பின்னர், கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பழங்குடியினர் என்று நிரூபணமானதும், “மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலின்போது  இடையில் சிக்கி அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால், அது மிகவும் வருந்தத்தக்கது” என்று முதலைக் கண்ணீர் வடித்தார்.

அதைத் தொடர்ந்து, “நாங்கள் மாவோயிஸ்டுகளைச் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்காகவே அக்கிராமத்துக்குச் சென்றோம். ஆனால், மாவோயிஸ்டுகள் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதால், நாங்கள் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சில அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடவடிக்கைக்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டனர்” என்று கதையை அவிழ்த்துவிட்டது, மத்திய ரிசர்வ் போலீசுப் படை.

படுகொலை

இது போலி மோதல் என்றும், இத்தாக்குதலில் பெண்களும் சிறுவர்களுமாக 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உண்மைகள் வெளியானதும், “மத்திய ரிசர்வ் போலீசாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், இது உண்மையான மோதல்தான், போலி மோதலே அல்ல; சிறுவர்கள் எவரும் கொல்லப்படவில்லை; நக்சல்பாரி பெண் போராளிகள்தான் கொல்லப்பட்டுள்ளார்கள்” என்றார்  மைய அரசின் உள்துறைச் செயலாளரான ஆர்.கே. சிங். ஆனால், ரிசர்வ் போலீசுப் படையினர் நாற்புறமும் சுற்றிவளைத்துக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டதால்தான் எதிர்ப்புறமிருந்த படையினருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர், கிராம மக்கள்.

“இது குறித்து எவ்வித விசாரணையும் நடத்தத் தேவையில்லை. கொல்லப்பட்டவர்களில் மகேஷ், நாகேஷ், சோமுலு ஆகியோர் மாவோயிஸ்டு தலைவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன”  என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால்,  காகா நாகேஷ் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன். மற்றவர்கள் மீது பசாகுடா போலீசு நிலையப் பகுதியில் இதுவரை எந்த கிரிமினல் குற்றப் பதிவும் இல்லை.

கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசுப் படை வெறியாட்டம் போட்டுள்ளதை  அங்குள்ள மரங்கள் சிதைந்து குண்டு பாய்ந்திருப்பதையும், ஆடுமாடுகள் கூடக் குண்டடிபட்டுக் கொல்லப்பட்டுள்ளதையும் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. உடனே விஜயகுமார், “கண்ணி வெடிகளுக்கு நடுவே எங்கள் படையினர் உயிரைப் பணயம் வைத்துப் போரிடுகிறார்கள்.  மத்திய ரிசர்வ் போலீசு படை என்பது முறையான போர்ப் பயிற்சி பெற்ற கட்டுப்பாடுமிக்க படை; காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தும் படையல்ல” என்று ஊடகங்களைச் சாடினார்.

பசாகுடா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த  காகா சரஸ்வதி என்ற 12 வயது சிறுமி மற்றும் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர்கள், கோடை விடுமுறையில் கிராமத்துக்கு வந்தவர்கள். பசாகுடா மத்திய ரிசர்வ் போலீசுப் படை முகாமுக்கு 3 கி.மீ. தொலைவில்தான் இந்தக் கிராமம் உள்ளது. கிராம மக்களோ அடிக்கடி பசாகுடா சந்தைக்குச் சென்று வருபவர்கள். அக்கிராம மக்கள் ரேஷன் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் வைத்துள்ளனர்.  இருப்பினும், “அப்பகுதியானது, மாவோயிஸ்டுகளின் விடுதலைப் பிரதேசமாகும். அங்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, எந்தப் பதிவேடுகளும் இல்லை” என்று கூசாமல் புளுகுகிறது போலீசுப் படை.

அன்று நல்ல நிலவொளி இருந்தது என்கிறார்கள் கிராம மக்கள். மேலும், இரவு நேரத்தில் ஊடுருவிப் பார்க்கும் வசதி கொண்ட பைனாகுலர்களையும் ரிசர்வ் போலீசுப் படையினர்  வைத்திருந்தனர். ஆனால்,“எங்கும் இருளாக இருந்தது, அதனால் கிராம மக்கள் யார், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் யார் என்று தெரியவில்லை” என்று நம்பச் சொல்கிறது போலீசுப் படை. பின்னர், நக்சலைட்டுகள் நாற்புறமிருந்தும் ஒரு மணி நேரத்துக்கு சுட்டனர் என்று புதிய கதையை அவிழ்த்து விட்டது இக்கொலைகாரப் படை. ஆனால், சிறுவர்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 30 பேர்தான் அந்தக் கிராமக் கூட்டத்தில் இருந்துள்ளனர்.  200 பேர் கொண்ட போலீசுப் படை சுற்றிவளைத்துத் தாக்கிய போது, இந்த 30 பேர் ஒரு மணி நேரத்துக்குத் தாக்குப் பிடித்துச் சுட்டிருக்கத்தான்  முடியுமா?

ஆனாலும், “கிராம மக்களையும் நக்சல்பாரிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்கள். விவசாயமும் செய்கிறார்கள். தாக்குதல் நடவடிக்கையின் போது அவர்கள் நக்சல்பாரிகளாக மாறுகிறார்கள். அந்தக்  கிராமத்தில் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதால், அவர்கள் நக்சல்பாரிகள் அல்ல என்று கருத முடியாது ” என்று இன்னுமொரு கதையை அவிழ்த்துவிடுகிகிறார், பிஜப்பூர் போலீசு சூப்பிரண்டு . “நக்சல்பாரிகள் அப்பாவி மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்; அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால், அதற்கு நக்சல்பாரிகள்தான் பொறுப்பு” என்று திமிராகப் பேட்டியளிக்கிறார், சட்டிஸ்கர் முதல்வர் ராமன் சிங்.

இது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத படுகொலை என்று அம்பலப்பட்டுப் போனதாலும், இதை எதிர்த்துப் பேசாவிட்டால் மக்களிடம் மேலும் தனிமைப்பட நேரிடும் என்பதாலும், சட்டிஸ்கரில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு இப்படுகொலையைக் கண்டித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் தீவிரவாத மாவோயிஸ்டுகள் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதை, பொறுப்பற்ற பேச்சு என்று சாடி, உண்மையறியும் குழுவை அமைத்து அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. அதேசமயம், மாநில காங்கிரசு கட்சியினர் அமைத்துள்ள உண்மையறியும் குழுவில் இருப்பவர்களில் பாதிப்பேர் மாவோயிஸ்டுகள் என்று அவதூறு செய்துள்ள பா.ஜ.க.வின் மாநில உள்துறை அமைச்சரான நான்கி ராம் கன்வார், நக்சல்பாரிகளுக்கு உதவும் எவரும் மாவோயிஸ்டு தீவிரவாதியாகத்தான் கருதப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்று  ஊடகங்களுக்குத் திமிராகப் பேட்டியளிக்கிறார்.

படுகொலை

மத்திய ரிசர்வ் போலீசுப் படை நடத்திய பச்சைப் படுகொலையும், அதை நியாயப்படுத்த மேற்கொண்ட கீழ்த்தரமான முயற்சிகள் அனைத்தும் அம்பலப்பட்டுப் போனதாலும், இப்படுகொலை நடந்த பத்து நாட்களுக்குப் பின்னர், அரிசி, பருப்பு, ஆடைகள், பாத்திரங்கள்  என  நிவாரணப் பொருட்களுடன் இக்கிராமத்துக்குச் சென்றனர், அரசு அதிகாரிகள். “நாங்கள் மாவோயிஸ்டுகள் என்றால், எதற்காக அரசு எங்களுக்கு அரிசியும் பருப்பும் கொடுக்க வேண்டும்? எங்கள் குழந்தைகளைக் கொல்லும் போலீசுப் படை எங்களுக்குத் தேவையில்லை; முக்கியமாக, கோப்ரா படை தேவையயேயில்லை” என்று  வருவாய்துறை அதிகாரியிடம் தெரிவித்த இக்கிராம மக்கள், நிவாரணப் பொருட்களை வாங்க மறுத்து,  தங்கள் கோபத்தையும் சுயமரியாதையையும் எதிர்ப்பாகக் காட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கண்டனம், மனித உரிமை அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்கள் ஆகியவற்றால் அம்பலப்பட்டுப் போயுள்ள சட்டிஸ்கர் அரசு, வேறுவழியின்றி இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நக்சல்பாரிகள் அப்பாவி கிராம மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினால், துணை இராணுவப் படைகள் அந்த நேரத்தில் தற்காலிகமாகத் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்திவிட வேண்டும்; இருட்டில் ஊடுருவிப் பார்க்கக்கூடிய பைனாகுலர்கள் மூலம் சரிபார்த்துவிட்டுத் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றெல்லாம் கொலைகாரப் படைகளுக்கு உபதேசிக்கிறது மைய அரசின் உள்துறை அமைச்சகம்.

குஜராத்தில் முஸ்லிம் பயங்கரவாதப் பீதியூட்டி அப்பாவி முஸ்லிம்களை மோதலில் கொன்று தீவிரவாதிகள் என்று இந்துவெறி பயங்கரவாத மோடி அரசு முத்திரை குத்தியதைப் போலவே, இப்போது சட்டிஸ்கரில்  மாவோயிஸ்டு பீதியூட்டி அப்பாவி பழங்குடியினரைச் சுற்றிவளைத்துக் கொன்றுவிட்டு, அவர்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். பழங்குடி மக்கள் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறையை ஏவி அச்சுறுத்தி, அவர்கள் எந்த வகையிலும் மாவோயிஸ்டுகளுடன் இணைய விடாமல் தடுப்பது, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தி தாக்குவது என்ற உத்தியுடன்தான் இப்பயங்கரவாதப் படுகொலையை அரசும் துணை ராணுவப் படைகளும் நடத்தியிருக்கின்றன. கனிம வளமிக்க சட்டிஸ்கரில்,  கார்ப்பரேட் கொள்ளைக்காகப் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் உள்நாட்டுப் போரின் இன்னுமொரு இரத்த சாட்சியம்தான் சர்கேகுடாவில் நடந்துள்ள இப்படுகொலை.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________

கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!

10

ர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும்.  இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும்.

‘‘தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்பொழுது 25 சதவீத இடங்களை, தங்கள் பள்ளியின் அருகாமையில் வசிக்கும் சமூகத்தில் பின்தங்கிய, நலிவுற்ற மாணவர்களுக்கு ஒதுக்கிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அப்படிச் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் அல்லது தனியார் பள்ளிகள் நிர்ணயித்துள்ள கட்டணம், இதில் எது குறைவோ அக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும்” என்கிறது இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.

அதாவது, இச்சட்டப்படி சேரும் மாணவர்களுக்குத் தனியார் பள்ளி முதலாளிகள் இலவசக் கல்வியெல்லாம் அளிக்கவில்லை; அம்மாணவனுக்குரிய கட்டணத்தை அரசிடமிருந்து கறந்துவிடுகிறார்கள் என்றபோதும் முதலாளிகள் இச்சட்டத்தைத் தம் மீது திணிக்கப்படும் அநீதியான சுமையாகவும், தமது வியாபாரத்தில் அத்து மீறி செய்யப்படும் தலையீடாகவும் கருதி எதிர்த்து வருகிறார்கள்.  இச்சட்டப்படி சேரும் மாணவர்களை ஓசிக் கிராக்கிகள் என்றே முத்திரை குத்துகிறார்கள்.  யாராக இருந்தாலும், காசு கொடுக்க வக்கிருப்பவனைத்தான் அனுமதிப்போமேயொழிய, மற்றபடி உரிமை என்று கூறிக்கொண்டு ஏழைகள், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் தமது பள்ளிவாசலை மிதித்துவிடக் கூடாது என்பதில் இந்தக் கும்பல் குறியாக இருக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொதுப்பாடத் திட்ட முறையை மட்டம் தட்டுவதற்குத் தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் எப்படியெல்லாம் புளுகினார்களோ, பார்ப்பன நஞ்சைக் கக்கினார்களோ,  அதனைப் போன்றே இச்சட்டத்திற்கு எதிராகவும் கீழ்த்தரமான, குசும்புத்தனமான வேலைகளைச் செய்து வருகிறார்கள்.  சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசங்கரா மேநிலைப்பள்ளி மற்றும் லேடி ஆண்டாள் வேங்கட சுப்பாராவ் மேநிலைப்பள்ளி என்ற இரண்டு தனியார் பள்ளிகளும், “இச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு குப்பத்துப் பசங்களை அனுமதித்தால், உங்கள் குழந்தைகளின் படிப்பும் பண்பாடும் கெட்டுவிடும்” எனத் தமது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி, அவர்களை இச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்கும்படித் தூண்டிவிட்டது.

‘‘நாங்கள் சந்தியாவந்தனம் பண்ணுவோம்; நாங்கள் அசைவ உணவுகளைப் பள்ளிக்கு எடுத்துவர மாட்டோம்; படிப்பில் பின்தங்கிய பசங்களோடு எங்கள் பிள்ளைகள் எப்படி ஒன்றாக உட்கார முடியும்?” என்றெல்லாம் தமது ஆசிரியர்களையும், மாணவர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் பார்ப்பன சாதிவெறியைக் கக்கிப் பேசவிட்டு (தி ஹிந்து, ஏப்ரல் 14, பக்.6), இச்சட்டத்திற்கு எதிரான கருத்தை நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உருவாக்கிவிடத் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.  தங்களின் எதிர்ப்பையும் மீறி, இச்சட்டப்படி ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டால், அம்மாணவர்களின் கதி என்னவாகும் என எடுத்துக் காட்டியிருக்கிறது, பெங்களூரு ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளி நிர்வாகம்.

அப்பள்ளி நிர்வாகம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி முதல் வகுப்பில் சேர்ந்த அக்குழந்தைகளின் பெயர்களை வருகைப் பதிவேட்டில் சேர்க்காமல், அவர்களை வகுப்பறையில் தனியாக ஒதுக்கி, தீண்டத்தகாதவர்களாக நடத்திவந்திருக்கிறது.  இறைவணக்கம் நடத்தப்படும்பொழுது, அச்சிறுவர்கள் மற்ற மாணவர்களோடு சேர்ந்து நிறுத்தப்படாமல், ஓசிக் கிராக்கிகள் எனக் காட்டுவதற்காகத் தனியாக நிறுத்தப்பட்டுள்ளனர்.  வகுப்பறையில் அக்குழந்தைகள் கடைசி பெஞ்சில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அக்குழந்தைகள் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்னால், அவர்கள் என்ன உணவு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் டிபன் பாக்ஸைத் திறந்து சோதித்திருக்கிறது, பள்ளி நிர்வாகம்.  அக்குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கப்படுவதில்லை.  அக்குழந்தைகளின் பெற்றோர்கள், பெற்றோர்கள்  ஆசிரியர் கழகக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை.  இப்படி அக்குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, அதன் உச்சமாக அக்குழந்தைகளின் தலை சொட்டையாகத் தெரியும்படி, உச்சந்தலை முடியைக் கொத்தாக வெட்டிப் போட்டுள்ளது, பள்ளி நிர்வாகம்.

கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதலாளிகளின் கூட்டமைப்பு இச்சட்டத்திற்கு எதிராக ஜூலை 16 முதல் ஒரு வார காலத்திற்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.  அக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியில் அந்த நான்கு குழந்தைகளும் அவமதிக்கப்பட்ட சம்பவமோ, அவ்வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக. ஜூலை 13 அன்று நடந்திருக்கிறது.  எனவே, இச்சட்டத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வலுவாகவும் வக்கிரமாகவும் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த வன்முறை, நவீன தீண்டாமை அக்குழந்தைகளின் மீது ஏவிவிடப்பட்டுள்ளது.

அந்நான்கு குழந்தைகளையும் மற்ற மாணவர்களுக்குத் தெரியும்படிதான் ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்; தலைமுடியைச் சிரைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.  இந்தக் கேடுகெட்ட வக்கிரத்திற்கு ஆசிரியர்களும் துணை நின்றிருக்கிறார்கள். ஏதுமறியாத இளம் குழந்தைகளை இப்படி அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கும் அப்பள்ளி நிர்வாகிகளையும் ஆசிரியர்களையும் நடுத்தெருவில் நிறுத்திச் சவுக்கால் அடிப்பதுதான் நியாயம்.

ஆனால், வல்லமை பொருந்திய மைய அரசும், மாநில அரசும் மயில் இறகால் தடவிவிடுவது போல், “அப்பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்; அந்த நோட்டீசுக்குப் பதில் அளிக்க பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம்;  அந்நிர்வாகம் பதில் அளித்த பிறகு, அது பற்றி விசாரித்து, உண்மை இருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம்” என அறிக்கை சவடால்தான் அடித்து வருகின்றன.

நவீன-தீண்டாமை
தலைமுடி வெட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஏழைக் குழந்தைகள் – படம் http://www.thehindu.com

காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் எனப் பல கவர்ச்சிகரமான சட்டங்களை அடுத்தடுத்து இயற்றியிருக்கிறது.  அப்படிபட்ட ஏட்டுச் சுரைக்காய் சட்டங்களுள் ஒன்றுதான் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.  குழந்தைகளின் கல்வி உரிமை பற்றிப் பேசுவதாகப் பீற்றிக் கொள்ளப்படும் இச்சட்டமும், பல்வேறு உரிமைச் சட்டங்களைப் போலவே, பல்வேறு ஓட்டைகளுடன் அரைவேக்காட்டுத்தனமாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஓட்டைகளை அடைத்துவிட்டு, இந்தச் சட்டத்தைக் கண்டிப்பாகவும், தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்தை மீறிக் குழந்தைகளைத் துன்புறுத்தாத வண்ணமும் அமல்படுத்தினால்கூட, இச்சட்டம் குழந்தைகளின் கல்வி உரிமைக்கானதாக, அவ்வுரிமையை உத்தரவாதப்படுத்துவதாக அமைந்துவிடாது.

இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கமே, அரசுப் பணத்தைத் தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு வாரிக் கொடுத்து, தனியார்மயத்தின் கீழ் புதுவிதமான அரசு உதவி பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை உருவாக்கிப் பராமரிப்பதுதான்; நரியைப் பரியாக்கியாக்கிக் காட்டுவது போல, கட்டணக் கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி முதலாளிகளை, சமூகப் பொறுப்புமிக்கவர்களாகக் காட்டுவதுதான்.  தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் மட்டும் இக்கட்டாயக் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற 141 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது.  இந்தப் பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏழை மாணவர்களின் பெயரால் அரசுப் பணம் மடைமாற்றி விடப்படுகிறது.

தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை உருவாக்கியது; மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவது; குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துவது; தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் தாழ்த்தப்பட்டபழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவது என அரசு பல வழிகளில் கல்வித்துறையில் நுழைந்துள்ள தனியார்மயத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை மாணவர்களின் பெயரால் எடுத்து வருகிறது.  அதிலொன்றுதான் இக்கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்.

இந்தச் சட்டத்தின் மூலம் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஏழை  பணக்காரன் என்ற வேறுபாடின்றி, ஒரேவிதமான பள்ளிக் கல்வியைக் கட்டாயமாகவும் இலவசமாகவும் கொடுக்கும் பொறுப்பிலிருந்தும், கடமையிலிருந்தும் அரசு தந்திரமாக விலகிக் கொள்கிறது.  கல்வி தனியார்மயமானலும்கூட, இது போன்ற கல்விச்சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஆங்கில வழிக் கல்வியைப் பெற்றுவிட முடியும் என்ற மயக்கத்தை ஏழை மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்துகிறது.

இக்கவர்ச்சிக்கு ஏழைக் குடும்பங்களைப் பலியாக்குவதன் மூலம், “கல்வியைத் தனியார்மயமாக்கதே!” என்ற கோரிக்கையை, போராட்டத்தைத் திசை திருப்புவதும், கல்வி என்பது காசுக்கு விற்கப்படும் கடைச்சரக்குதான் என்பதை நிலைநிறுத்துவதுமே அரசின் நோக்கம்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!

20
சுடுகாட்டுச்-சிறுவர்கள்

சிதையின் குழந்தைகள்  ஆவணப்படம் | Children of the Pyre

“நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால்  தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா.

குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது.  காரணம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணங்களால் மட்டும் அல்ல, அந்த படம் முன் வைக்கும் அனல் தகிக்கும் உண்மைகளால்.

குழந்தைகள் என்றவுடன் ஹார்லிக்ஸ் பிள்ளைகளும் அமுல் பேபிகளும் நினைவுக்கு வந்தால் நீங்கள் இந்தப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். இது புனித பூமியான காசியில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு நேராக போய்ச் சேர உதவும் வகையில் பிணங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றியது.

ஆவணப்படத்தின்  டிரைலர்

காசி நகரம்:
மாலை நேரம்:
மணிகார்னிகா சுடுகாடு:

சுடுகாட்டுச்-சிறுவர்கள்பிணம் எரிப்பதற்கு முன் சடங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் சில சிறுவர்கள் உஷாராக நின்று கொண்டிருக்கிறார்கள்.  பிணத்தை சிதையின் மீது வைப்பதற்கு முன்பு அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும் பல வண்ண பளபளப்பான துணியை எடுக்கிறார் புரோகிதர். அவ்வளவுதான் அந்தத் துணியை நொடியில் கைப்பற்றிக் கொண்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்கிறான் ஒரு சிறுவன். பிணத்துடன் வந்தவர்களோ சிறுவர்களை திட்டியபடி துரத்துகிறார்கள். துணியை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்றியபடி சிறுவர்கள் சிட்டாய் பறக்கிறார்கள்.

காசி ஹிந்துக்களுக்கு மிக முக்கிய புண்ணிய ஸ்தலம். தவறு செய்யும் கிறித்துவர்களுக்கு உடனடியாக சர்ச்சில் பாவமன்னிப்பு கிடைப்பது போல், ஹிந்துக்கள் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு காசியில் உள்ள கங்கையில் குளித்துவிட்டால் அவற்றை கரைத்துக் கொள்ளலாம்.

இன்னும் முக்கியமாக ‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என்ற நம்பிக்கையும் உண்டு. கடவுளின் நகரில் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும் துறைமுகமாக இருந்தாலும் சரி, அங்கு பிணங்களை எரிக்கும் வேலையை செய்பவர்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’தான். ‘நாங்க குளிச்சு சுத்த பத்தமாக வந்தாலும் எங்களைத் தொட மாட்டார்கள். பிணத்தையும் பிணத்தை மூடியிருக்கும் துணியையும் தொடுவதால் எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறார்கள்’ என்கிறான் ஒரு சிறுவன்.

காசியில் கங்கைக் கரையில் இருக்கும் மணிகார்னிகா சுடுகாட்டில் பல பிணங்கள் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு காட்சியில் பார்க்கும் தூரத்தில் 14 பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதாக எண்ணுகிறான் ஒரு பையன். அனைத்து பிணங்களையும் தொழில்முறை வெட்டியான்கள் எரிக்க வேண்டும் என்றால் வரிசையில் பிணங்கள் வெயிட் செய்து நாறிவிடும். ‘நாங்கள் இல்லையென்றால் இந்த பிணங்களை நாய்கள்தான் இழுத்துக் கொண்டு போகும்’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். ‘பிணம் சீக்கிரமா எரிஞ்சுடணும்னுதான் எங்க விருப்பம், அப்பதான் எங்க வேலை சீக்கிரம் முடியும், தூர தூரத்திலிருந்து வந்திருக்கும் சொந்தக்காரங்களும் சீக்கிரம் திரும்ப முடியும்’ என்று வாடிக்கையாளர்கள் மீது அக்கறையுடன் பேசுகிறான்.

‘இப்போ எனக்கு 15 வயதாகிறது, 5 வயதிலேயே இந்த வேலைக்கு வந்து விட்டேன்’ என்கிறான் ஒரு பையன். இன்னொருவனை 8 வயதுக்கு மேல் மதிக்க முடியாது.

ரவி, யோகி, சுனில், மனீஷ், ககன், ஆஷிஷ், கபில் என்ற ஏழு சிறுவர்களின் மூலமாக புண்ணிய நதிக் கரையில் இருக்கும் மயானத்தின் செயல்பாடுகளை காட்டுகிறது இந்த ஆவணப் படம்.

பிணங்களை எரிப்பதற்கு உதவி செய்யும் எடுபிடிகளாக இந்த சிறுவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பிணத்தை மூடி வரும் அலங்காரங்கள் செய்யப்பட்ட, பல வண்ணத் துணியை எடுத்துச் சென்று விற்பதில்தான் அவர்களுக்கு வருமானம். அதைத் தவிர பிணத்தை எரிக்க வருபவர்களிடம் வசூலிக்க முடிந்ததை வசூலித்துக் கொள்கிறார்கள்.

பிணத்தை சிதையில் ஏற்றும் முன்பு துணியை உருவி அருகில் வைக்கிறார்கள். அந்த நேரத்தில் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள், லாகவமாக அதை கையில் எடுத்தபடி கவனத்தை ஈர்த்து விடாதபடி நடக்கிறார்கள், யாராவது கவனித்து விட்டால் ஓடுகிறார்கள். சில சமயம் பிணத்தை எரிக்க வந்திருப்பவர்கள் அல்லது வெட்டியான் பிடித்து துணியை பிடுங்கி கொள்கிறார்கள் ‘சில பேர் நல்லவங்க, துணியை கொடுத்திடுவாங்க, போய் காசு சம்பாதிச்சுங்க என்று. சில பேருக்கு பொறாமை நாங்க துணியை வித்து நிறைய சம்பாதிக்கிறோம்னு பிடுங்கிடுவாங்க, துணியை சிதையில் வைத்து எரித்துப் போடுவார்கள்’.

அந்தத் துணியை எடுத்துச் சென்று கடைகளில் விற்றால் ஒரு துணிக்கு 2.50 ரூபாய் கிடைக்கும். அதை துவைத்து, மடித்து, பையில் போட்டு கடைகளில் 25-30 ரூபாய் விலைக்கு மறுபடியும் விற்கிறார்கள் கடைக்காரர்கள்.

கிடைக்கும் துணி எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு போய் விற்று பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் இந்த சிறுவர்கள். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்காகத்தான் தங்கள் வாழ்நாளையே இங்கு கழிக்கிறார்கள். பிணம் ரோட்டில் கடக்கும் போது நாம் மூக்கை பொத்திக்கொள்கிறோம். நம் குழந்தைக்கு கூட சாவைப் பற்றி விளக்காமல் “சாமிகிட்ட போய்டாங்க” என்று தான் சொல்லுகிறோம். ஆனால் காசியில் இருக்கும் இந்த சிறுவர்கள் சாவை தினமும் எதிர்கொள்கிறார்கள்.

“ஆரம்பத்தில் இந்த வேலைக்கு போனா என் அம்மா என்னை அடித்து நொறுக்கி விடுவார். இனிமேல் சுடுகாட்டிற்கு சென்றால் கொன்று விடுவேன் என்பார். ஆனால் ஒரு நாள் 500 ரூபாய் நோட்டை கொண்டு கொடுத்த பிறகு ‘நீ தினமும் சுடுகாட்டிற்கே வேலைக்கு போ’ என்று சொல்லிவிட்டார்”

அவர்கள் கஞ்சா புகைக்கிறார்கள், புகையிலை சாப்பிடுகிறார்கள். ‘இத்தனை பிணங்களை எரிக்க வேண்டியிருக்கிறது, கஞ்சா பிடிச்சா இன்னும் நான்கு பிணங்களை எரிப்பதற்கு தயாராக மனது லேசாகி விடும்’ என்கிறான் ஒரு பையன்.

‘சின்ன பையனாக இருந்து கொண்டு இந்த வயதிலேயே புகையிலை சாப்பிடுகிறாயே’ என்று கேட்டதும்

‘அது சரி, இவ்வளவு சின்ன வயதில் வேலை செய்து சம்பாதிக்கிறேனே, அதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா! அவ்வளவு அக்கறை இருந்தா அரசாங்கத்திடம் சொல்லி மாசா மாசம் 5,000 ரூபாய் அனுப்பி வைக்க ஏற்பாடு செய். நான் இதை எல்லாம் விட்டு விடுகிறேன். அது முடியாதுன்னா என்னை என் போக்கில் விட்டு விடு’

ஆம், இவர்களின் வாழ்க்கை பரிதாபப்பட வேண்டிய ஒன்றல்ல, சமூகத்தின் மீது கோபம் கொள்ள வேண்டிய விடயம். நம் பரிதாபத்தை உதிரும் மயிருக்கு சமமாக கூட அவர்கள் மதிப்பதில்லை.

“இன்று ஒரு அரசியல் தலைவரின் பிணத்தை எரிக்கிறார்கள். எங்க தேசத்தின் மிகப்பெரிய தலைவராம் அவர்” என்கிறான். தூரத்தில் மூவர்ணக் கொடி போர்த்திய உடல் ஒன்று சிதையில் வைக்கப்படுகிறது.

“அரசியல் தலைவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்”

“தாயோளி எல்லாவனும் தாயோளிகதான்!. பணக்காரங்களுக்குத்தான் வேலை செய்கிறானுங்க, அதிலும் முதலில் அவங்க பையை நிரப்பிக் கொள்கிறானுங்க’

“நான் மட்டும் நாட்டின் தலைவரானால், எல்லாருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய ஏற்பாடு செய்வேன். எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி செய்து கொடுப்பேன். ஆனா, ஏழைகளுக்கு மட்டும்தான். பணக்காரங்க எல்லாம் தாயோளிங்க’

“தலைவர்கள் பிணத்தின் மேல் மூவர்ணக் கொடி போர்த்தியிருக்கும். அதை எடுத்துச் சென்று போன முறை ஒரு படகுக் காரருக்கு 5 ரூபாய்க்கு விற்றேன்”. அந்த வகையில் ஒரு தலைவரின் மரணம் இந்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஓரிரு ரூபாய்கள் அதிக வருமானம் கிடைக்கும்.

ஆகஸ்ட் 15 அன்று மூவண்ணக் கொடி ஏற்றுகிறார்கள், தேசிய கீதத்தை பாடிக் காட்டுகிறான் ஒரு சிறுவன். மாலையில் ஓய்வு கிடைக்கும் போது தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.

பிணங்கள் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவெல்லாம் கூட வேலை செய்கிறார்கள்.  பிணங்கள் எரிந்துக்கொண்டே இருக்கும் என்பதால் பக்கத்திலேயே, அதாவது எரிந்துகொண்டிருக்கும் சிதைக்கு 5 அல்லது 10 அடிக்குள் உள்ள தரையில் அப்படியே படுத்துக்கொள்கிறார்கள். இரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தூங்குவதற்குள் ஏதாவது ஒரு பிணத்தை புரட்டிப் போடச் சொல்லி யாராவது எழுப்பி விடுகிறார்கள்.

வெயில் காலத்தில் சூட்டில் சிறுநீர் கூட வராது, உடம்பெல்லாம் வேர்க்குருக்களால் நிரம்பி விடுகிறது.

ககன் எனும் சிறுவனுக்கு 10 வயது தான். அவன்தான் எல்லோரையும் விட குறும்புக்காரன். தூக்கத்தில் ‘சிதைகள் எழுந்து நிற்கும், வாயைப் பிளந்து காட்டும்’ என்று சொல்கிறான்.  ”ஒரே கெட்ட கனவு பேய்கள் எல்லாம் வருகின்றன” என்கிறான்.

சுடுகாட்டுச்-சிறுவர்கள்

ந்தப்படத்தின் டிவிடியை என் நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். உயர்  மத்திய வர்க்க நண்பரின் மனைவி இந்தப்படத்தை பார்த்துவிட்டு “நல்ல வேளை, என் பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள்”என்றார். பார்ப்பனிய தத்துவத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள நண்பரின் மனைவி ஒரு சாட்சி. ஆனால் காசியிலேயே பிறந்து தினமும் கங்கையில் காலை மாலை குளிக்கும் அந்த சிறுவர்களின் பாவம் கரையவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கங்கையுடன் துளியும் சம்பந்தமில்லாத நம் சென்னை குழந்தைகள் கூட புண்ணியத்துடன் பிறந்துவிடுகின்றன.

கண்ணுக்கு முன் நடக்கும் எந்த அயோக்கியத்தனத்தையும் கடந்து சூடு சொரணையற்று செல்ல நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆயிரமாண்டு காலம் அடிமையாக, அரை வயிற்றுக் கஞ்சி குடித்து ஆதிக்க சாதிக்கு உழைத்து, கேள்வி கேட்காமல் மடிந்த மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவத்தை எண்ணி, அடுத்த ஜென்மத்தில் ஆதிக்க சாதியில் பிறக்க வேண்டிக் கொண்டே, விதியை நொந்து இறந்தவர்கள் தான்.

அந்த தத்துவம் இன்று சுரண்டப்படுபவர்களை பாவம் செய்தவர்களாகவும், சுரண்டுபவர்களை புண்ணியம் செய்தவர்களாகவும் சொல்லுகிறது. அப்பொழுது கங்கையில் குளித்தால் பாவம் போகாது என்ற சிறு உண்மையையாவது ஒப்புகொள்வார்களா? தலித் ஒருவர் கங்கையில் குளித்துவிட்டு வந்தால் ‘பாவ’மெல்லாம் போய், நல்ல வாழ்க்கை அவருக்கு கிடைக்குமா?

சுடுகாட்டுச்-சிறுவர்கள்
இயக்குநர் ராஜேஷ்.எஸ்.ஜாலா

ஆனால் இந்தப் படத்தை எடுத்த ராஜேஷ் ஜாலா ஒரு தீர்வை சொல்கிறார். ‘இந்தப்படத்தை அரசியல்வாதிகள், ஆளுபவர்களுக்கு போட்டு காட்ட வேண்டும். இது தான் இந்தியா’ என்று அம்பலப்படுத்தி அவர்களை திருத்த வேண்டும் என்கிறார்.

‘ஆளுபவர்களும், அதிகாரிகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது’ என்பது அபத்தம். சரி தெரியாது என்ற வைத்துக்கொண்டாலும், தினம் தினம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைக்கும் பொருளாதார கொள்கை, போராடும் மண்ணின் மைந்தர்களை தீவிரவாதிகள் என்று கொல்வது போன்ற சமூகப் பணி செய்துக்கொண்டிருக்கும் அவர்கள் இந்த படத்தை பார்த்து திருந்தி விடுவார்கள் எனும் வாதத்தை பற்றி என்ன சொல்வது! அவர்கள் என்ன விஜய்காந்த படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளா அல்லது எம்ஜி ஆர் படத்தில் வரும் நம்பியார்களா, நீண்ட நீதி நெறி வசனத்தின் பின் திருந்திவிட?

ஹார்லிக்ஸ் பிள்ளைகள் அல்ல, சமுகத்துடன் உறவாடும் பிள்ளைகள் தான் நேர்மையாகவும், இரக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த சிறுவர்கள் ஒரு அனாதை பிணத்தை பார்த்தவுடன் அதற்கு ஈமச் சடங்குகள் செய்து அதை எரிக்கிறார்கள்.

அந்த சிறுவர்களுக்கு அழகுணர்ச்சி இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆடிப்பாடுகிறார்கள். தங்களுக்குள் சிரித்து கேலி பேசி மகிழ்கிறார்கள். நவராத்ரா திருவிழா நேரத்தில் எரியும் சிதைகளின் பின்னணியில் மேடை போட்டு ஆட வரும் நாட்டிய பெண்களுடன் ககன் டான்ஸ் ஆடுகிறான். ‘நான் அவ்வளவு நல்லா ஆடலை’ என்று வெட்கத்துடன் புன்னகைக்கிறான். மழை பெய்யும் போது, எடுத்து வைத்திருந்த பிணத்தை போர்த்தும் துணியை கட்டிக் கொண்டு அழகு பார்க்கிறான் இன்னொரு சிறுவன்.

‘இந்தத் தொழிலை விரும்பி தான் செய்கிறோம் என்று அவர்கள் எங்குமே சொல்லவும் இல்லை. வேறு வழியில்லை, குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஹிந்துத்வவாதிகளும், ஜெயமோகன்களும் ஜாக்கி ஏத்தி நிற்க வைக்கும் காசியின் புனிதத்தை இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவற்றை கேள்வி கேட்டபடியே தான் இருக்கிறது. படத்தை பார்த்த பிறகு தீர்வை நோக்கி நகர வேண்டியது நாம் தான். என்ன செய்ய போகிறோம்? இவர்களுக்காக உச்சு கொட்டிவிட்டு நகரபோகிறோமா? அல்லது ஹிந்து மரபை எண்ணி கன்னத்தில் போட்டு கொண்டு முக்தியடைய போகிறோமா?

_________________________________________________

– ஆதவன்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சிறுமி சுருதி கொலை:சீயோன் பள்ளியை அரசுடமையாக்கு!

5

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரைபோராடுவோம்  !

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் தெருமுனைக்கூட்டம்

சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் படித்து  வந்தசுருதி, அப்பள்ளி முதலாளியின் லாபவெறியினால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இக்கொலைக்கு காரணமான அப்பள்ளியினை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில்  02.08.12 அன்று தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாலை  6 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

”பாவம் அந்தக் குழந்தை , வாழ வேண்டிய வயதில் விதி அழைத்துக் கொண்டதே” என்ற அனுதாபங்கள் பரவிக் கிடந்த இடங்களில் எல்லாம் சென்று கண்ணீர் மட்டுமல்ல, இக்குழந்தையின் இறப்புக்கு காரணமான தனியார்மயத்தினை ஒழிப்பதற்கான போராட்டம்தான் தற்போதைய தேவை என்பதை உழைக்கும் மக்களிடம் பதிய வைக்கும் வகையில் இந்த தெருமுனைக் கூட்டம்அமைந்தது.

கடந்த 25 அன்று தனியார்மய லாபவெறிக்கு படுகொலை செய்யப்பட்ட சுருதிக்கு அஞ்சலி செய்யும் நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் “சிறுமி சுருதிக்கு நடந்தது விபத்து என்று கூறுவது அயோக்கியத்தனம் என்றும் இது படுகொலை என்பதை புரிந்து கொண்டதால்தான் முடிச்சூர் கிராம மக்கள் கொதித்தெழுந்து போரடி பேருந்தினை தீ வைத்து எரித்தார்கள்.  இது இரங்கல் கூட்டம் அல்ல, கண்ணீர் மட்டும்  விட்டு விட்டுப் ,போவதல்ல நமது வேலை, .தினமும் பல குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் நல்லப் படிப்பைத் தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர். கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ், பேருந்து கட்டணம் என்று பகற் கொள்ளையை நடத்திவரும் தனியார் பள்ளிகள், அதை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை மிரட்டுவதும், குழந்தைகளை அடித்து கொடுமைப் படுத்துவதும் என ரவுடிகளாக செயல்படுவதையும் கூறி இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி தரமான கல்வியைத் தரும் ? இந்த கல்வி முறையில் படிக்கின்ற குழந்தைகள் சிந்தனை சீரழிக்கப்பட்டு சமூகத்திற்குஉதவாதவையாக  மாற்றப்படுவதையும் ” விளக்கினார்.

“அடிப்படை வசதிகள் அரசால் மறுக்கப்பட்ட நிலையிலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 800 பேர்கள் மருத்துவப் படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கல்வியை ஒழுங்காக அளிக்காமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டும், சட்டவிரோதமாக செயல்பட்டும் வரும் தனியார் பள்ளிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் குடிக்கின்ற தண்ணீர் முதல் நாம் பயன் படுத்துகின்ற அனைத்தும் காசாகிவிட்ட நிலையில் கல்வியிலும் தனியார்மயம் தரமான கல்வி என்ற பெயரில் நுழைந்து உயிர் வாழும் உரிமையான கல்வியைசூறையாடிக் கொண்டிருப்பதற்கு எதிராக உழைக்கின்ற மக்கள் வீதியிலிறங்கி போர்க்குணமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும், அதற்குமக்களை அணி திரட்டுவதற்கான கூட்டம்தான் இது.” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாகப் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச்செயலாளர் தோழர். வெற்றிவேல் செழியன், முன்னாள் சாராயவியாபாரியும், இந்நாள் கல்வி முதலாளியுமான ஜேப்பியாரின் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஓட்டுனர் என்று தனது உரையினை  ஆரம்பித்தார். “ இந்தப் பிரச்சினையை தொழிற்சங்கத்தை சேர்ந்த தான் பேசுவதற்கு முழு உரிமையும் உண்டென்றும் ஏற்கனவே  இந்த சீயோன் பள்ளி முதலாளி விஜயன் தன் கல்வி நிறுவனங்களில் வேலை செய்த ஓட்டுனர்களை தினமும் 12 மணி நேரம் கசக்கிப் பிழிந்தும் சம்பளம் கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததையும் அதைக்கண்டு கொதித்துப் போன அந்த தொழிலாளிகள் புஜதொமு சங்கத்தை ஆரம்பித்து போராடியதையும் அதனாலேயே அத்தொழிலாளர்கள் வேலை நீக்கம்செய்யப்பட்டதையும்” எடுத்துக்கூறினார்.

சங்கம் ஆரம்பித்த தோழர்களை ரவுடிகள் மூலம் மிரட்டிய  ஒரு ரவுடி இந்த நல்லாசிரியர் விருது பெற்றவர், கல்வி வள்ளல் என்று புகழப்படுவதையும் அம்பலப்படுத்தினார். தொழிலாளியான சுருதியின் தந்தை தனக்கு லாபம் வரும் என்பதற்காக பழைய வண்டியை வாங்கி ஓட்டக்கூடாது என்று   நேர்மையுடன் இருந்ததை பல நூறுகோடி சொத்துடையவிஜயன் தன்னுடைய லாபம் குறையக்கூடாது என்பதால் பழைய வண்டிகளை வாங்கி இயக்கிய அயோக்கியத்தனத்துடன் ஒப்பிட்டு பேசினார்.

உற்பத்தி துறையைவிட லாபம் கொழிக்கும் துறையாக மாறிப்போன கல்வித்துறையை வைத்து பல கோடிகளை முதலாளிகள் பெருக்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றபடி அரசாங்கம் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடி தனியார் பள்ளிகளில் மாணவர்களை வலுக்கட்டாயமாக தள்ளி விடுவதையும் விளக்கினார்.

இப்படி ஒரு விஜயன்அல்ல, பல விஜயன்கள் பல சுருதிகளை தினமும் கொன்று கொண்டிருக்கிறார்கள். சாதாரணமக்கள் கூட தனியார் பள்ளி நிறுவன முதலாளிகளை மாபியா குற்றக் கும்பல் என்று கூறும் அளவுக்கு, தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இன்று விவசாயம் , சிறு தொழில் , வணிகம் என்று அனைத்துமே தனியார் – பன்னாட்டு முதலாளிகளால் அழிக்கப்பட்ட சூழலில்  இந்த மறுகாலனியாக்கத்தை வேரறுக்க மக்கள் அணி திரண்டு போராட வேண்டும்.

அன்று தொழிலாளர்கள் காய்ந்த வயிறுடன் உணவின்றி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும்போது, விஜயனிடம் பிரியாணி வாங்கித்தின்ற காவல் துறையும் கல்வித்துறை அதிகாரிகளும்  இன்று அவனை கைதுசெய்திருக்கிறார்கள் என்றால் அது மக்களின் போராட்டம்தான் அதை சாதித்தது. அப்படி 5000 பேர்கள் போராடி அவனை கைது செய்ய முடியுமென்றால் லட்சக்கணக்கான மக்கள் வீதியிலிறங்கி போராடும் போது கண்டிப்பாக இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும் “ என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் புமாஇமு சென்னைக் கிளைத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தனியார்மயத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வினை ஊட்டும் வகையில் அமைந்தது.

இந்த தெருமுனைக்கூட்டத்தில் மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாம்பரம் பகுதி வாழ் உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர். வியாபாரிகளும் நிகழ்ச்சிகளை  கவனித்து ஆதரவளித்தனர். மேலும் அந்த தெருமுனைக்கூட்டத்தில் மட்டும் 10000 ரூபாய் வரை துண்டேந்தி வந்த தோழர்களுக்கு மக்கள் மனமுவந்து நிதியளித்தார்கள். உழைக்கும் மக்கள் தானாகவே முன்வந்து கூட்டத்தின் நடுவில் செல்பவர்களை முறைப்படுத்தியும் வந்தனர் .

இந்த தெருமுனைக் கூட்டத்தை ஒட்டி தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தோழர்கள் பிரச்சாரம்செய்த போது உழைக்கும் மக்கள்  கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதை புரிந்து கொண்டும், பலர் கண்ணீர் விட்டும் தனியார் பள்ளி முதலாளிகளை வசைமாரிப் பொழிந்து  நமக்கு ஆதரவளித்தார்கள், பார்ப்பன மற்றும் மேட்டுக்குடிகளோ “குழந்தை செத்ததுக்கு அவர் என்ன பண்ணுவார்?, செத்தது விதி” என்றனர். அதற்கு தோழர்கள் “உங்க குழந்தை செத்தாலும் அது விதிதானா?”  என்று கேட்டு அவர்களுக்கு உறைக்கும்படி விளக்கினர்.

காசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் தனது மூளையில் அறைந்து வைத்திருக்கும் மேட்டுக் குடியினரின் மயக்கத்தை அவ்வளவு சீக்கிரத்தை உடைத்து விட முடியாது.  ஆனால் உழைக்கும் மக்களின் மத்தியில் தனியார்மயத்தை ஒழித்தால் மட்டுமே கல்வி கற்கும் உரிமையை பெற முடியும் என்ற கருத்தைபதிய வைப்பதாக இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________________________

– தகவல்:  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , சென்னை.

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது?

8

சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? பேருந்தின் ஓட்டையா? தனியார்மய இலாபவெறியா?

பள்ளி-மாணவி-சுருதி-கொலை

சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சுருதி, 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து, பின் சக்கரம் தலையில் ஏறி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப் பள்ளிப் பேருந்துக்கு ஜூலை 9ஆம் தேதியன்றுதான் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எஃப்.சி. வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நாளேடுகளில் வெளியாகவே, இப்பிரச்சினையைத் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பேருந்தின் ஓட்டுநர், கிளீனர் சிறுவன், ஒப்பந்தக்காரர் யோகேசுவரன், பள்ளித் தாளாளர் விஜயன், பேருந்துக்கு சான்றிதழ் தந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஆகியோர் கைது செய்து சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடின்றி வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தைச் சரியாகப் பராமரிக்காதது, பராமரிப்பற்ற வாகனத்தைப் பயன்படுத்துவது, கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை இழைத்தது  ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

“கைது மட்டும் போதாது; இதை ஏன் கொலை வழக்காக மாற்றக்கூடாது” என்று விசாரணையின் போது நீதிபதிகள் ஆவேசமுற்றதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்க புதிய சட்ட வரைவை உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதாகவும் தினமலர் செய்தி கூறுகிறது.

குடந்தை தீ விபத்துக்குப் பின் எல்லாப் பள்ளிகளுக்கும் தீப்பிடிக்காத கூரைகள் வந்தது போல , இதற்கும் ஒரு தீர்வு வேண்டும் என்று கூறியிருக்கிறது தினமணி. அதென்ன தீர்வு, ஓட்டை விழ முடியாத பேருந்துகளா?

மொத்தப் பிரச்சினையையும் பேருந்தின் ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில், தம் கண்களுக்கு பட்டியைக் கட்டிக் கொண்டுதான் ஊடகங்கள், நீதிமன்றம் ஆகிய அனைத்துமே இப்பிரச்சினையை அணுகுகின்றன. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியன் சினிமாவை ரீமிக்ஸ் செய்து சிந்திப்பதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது.

பள்ளி-மாணவி-சுருதி-கொலை

இது வெறும் பேருந்து விபத்து அல்ல. மெட்ரிக் பள்ளிக்குப் பிள்ளைகளை அள்ளிப்போகும் வாகனத்தில் ஏற்பட்டுள்ள விபத்து. டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி போன்ற அதிஉயர் தரம் வாய்ந்த பள்ளிகள் இயக்கும் வாகனங்களில் இத்தகைய ஓட்டைகள் விழுவதில்லை. ஆம்னி பேருந்துக்கும் லோக்கல் பேருந்துக்கும் இடையிலான வேறுபாடு போலத்தான். “பேருந்தில் ஓட்டை விழுந்திருக்கிறது” என்று பெற்றோர் யாராவது தாளாளர் விஜயனிடம் போன வாரம் புகார் செய்திருப்பார்களேயானால், “நீ கொடுக்கிற காசுக்கு ஏ.சி. வண்டியா அனுப்ப முடியும்?” என்று கேட்டிருப்பார்.

சொந்தமாகப் பேருந்து வைத்திருந்த சென்னையின் சுயநிதிக் கல்லூரிகள், அந்தப் பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் கட்டிய ஒரே காரணத்துக்காக, அவை அனைத்தையும் காண்டிராக்ட் முறைக்கு மாற்றிவிட்டனர். சீயோன் பள்ளி தனது சொந்தப் பேருந்தை காண்டிராக்டுக்கு விட்டிருப்பதற்கான காரணமும் அதுதான்.

இப்போதைக்குச் சூழ்நிலை சரியில்லை என்பதால், சீயோன் பள்ளித் தாளாளரால் இப்படிப் பேச இயலாது என்றாலும், இதுதான் உண்மை. மெட்ரிக் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து கோவிந்தராசன் கமிட்டி அறிக்கை வெளியிட்டபோது, அதைப் பின்பற்ற முடியாதென்று வழக்கு தொடுத்த 6400 மெட்ரிக் பள்ளிகளில் சீயோன் பள்ளி முக்கியமானது.

இந்த விபத்தும் முதன்முதலாக நடப்பது அல்ல. செப். 2010 இல் போச்சம்பள்ளியில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியின் பேருந்து, அந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது அந்தப் பள்ளி வாயிலிலேயே ஏறி இறங்கியது. அந்தப் பள்ளியின் அடாவடித்தனத்தால் ஆத்திரம் கொண்டிருந்த ஊர் மக்கள், அந்தப் பள்ளியை அடித்து நொறுக்கி தீ வைத்தது மட்டுமின்றி, தாளாளரின் காருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். உடனே தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒரு நாள் பள்ளிகளை இழுத்து மூடி பெற்றோர்களை மிரட்டினார்கள்.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் எனப்படுபவர்கள் யார்?

இவர்கள் கல்வி மாஃபியாக்கள்  எந்த அரசாங்கம் வந்தாலும், அதிகாரிகள் வந்தாலும் அவர்களை அரவணைத்து விலைக்கு வாங்கிக் கொள்கிற மணல் மாஃபியா, சுரங்க மாஃபியா போன்றவர்கள்.

இவர்கள் வியாபாரிகள் மட்டுமல்ல; வழிப்பறிக் கொள்ளையர்கள். குழந்தைகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு பெற்றோரிடம் பணம் பறிக்கும் கயவர்கள். பெற்றோரிடம் பணம் பறிப்பதற்கான புதிய முறைகளைப் பற்றி இடையறாமல் சிந்தித்துப் புதிய புதிய வழிமுறைகளை டிசைன் டிசைனாகக் கண்டு பிடிப்பவர்கள்.

“பணம் இல்லாதவனுக்குக் கல்வி தேவையில்லை. தாய்மொழிக் கல்வி இழிவானது. ஆங்கில வழிக் கல்வியே உயர்வானது. தனியார்மயமே சிறந்த கொள்கை. பணம் பண்ணுவதே வாழ்க்கை இலட்சியம்.பெற்றோர்களால் ஒப்படைக்கப்படும் உருப்படாத பிள்ளைகளை, நூற்றுக்கு நூறு வாங்கும் கறிக்கோழிகளாக உயர்த்தும் உன்னதப் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதால், இதற்கு நிர்ணயிக்கும் விலையை, எதை அடகு வைத்தேனும் கொடுப்பது பெற்றோரின் கடப்பாடு.”  இவை இவர்களது கொள்கைகளில் சில. அனைத்தையும் விரித்துச் சொல்லத் தேவையில்லை.

கோவிந்தராசன் கமிட்டி, ரவிராசபாண்டியன் கமிட்டி என்று எந்த கமிட்டி போட்டு கட்டணத்தை வரன்முறைப்படுத்தினாலும், அதை மதிக்க முடியாது என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்பவர்கள்; எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்கள்.

இவர்கள் சமச்சீர் கல்வியை எதிர்த்தவர்கள். காசு கொடுப்பவனுக்கும் ஓசியில் படிப்பவனுக்கும் ஒரே பாடத்திட்டமா என்பதுதான் இவர்களது குமுறல். சமச்சீர் பாடத்திட்டம்தான் வரப்போகிறது என்று தெரிந்த பின்னரும், தாங்கள் வாங்கி வைத்திருந்த பாடப்புத்தகங்களை மாணவர்கள் தலையில் கட்டிக் காசு பார்த்தவர்கள்.

மெட்ரிக் பாடத்திட்டம் என்றொரு பாடத்திட்டமே தற்பொழுது தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற போதும், பெற்றோர்களிடமிருந்து காசு பறிக்கும் தீய நோக்கத்திற்காகவே, இன்னும் தங்கள் பள்ளிகளை மெட்ரிக் பள்ளிகள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டவிரோதச் செயலை ஜெயா அரசும் தெரிந்தே அனுமதித்து வருகிறது.

இவர்கள் கிரிமினல்கள், கருப்புப் பணப் பேர்வழிகள்  வாங்குகிற காசுக்கு ரசீது கொடுக்காமல், பிளாக் டிக்கெட் விற்பவனை விடவும், ஆர்.டி.ஓ. ஆபீசு புரோக்கரை விடவும் கேவலமான முறைகளில் பணம் வசூலிப்பவர்கள்.

இவர்கள் ரவுடிகள்; பெற்றோர்கள் சட்டமோ நியாயமோ பேசினால் பிள்ளைகளுக்கு டி.சி. கொடுத்து விடுவோம் என்று பெற்றோர்களை மிரட்டும் தாதாக்கள். விபச்சார விடுதித் தலைவிகள், திருநங்கைகளை அடியாட்களாகப் பயன்படுத்துவது போல, தங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களை அடியாட்களாகப் பயன்படுத்துபவர்கள்.

இப்படிப்பட்ட கிரிமினல்களில் ஒருவர்தான் சீயோன் பள்ளிகள் குழுமத்தின் தாளாளர் விஜயன்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்தக் கிரிமினல்களெல்லாம் ஒன்று சேர்ந்து, அம்மையாரைத் தரிசித்து காணிக்கை செலுத்தியதன் விளைவாகத்தான் பொதுப் பாடத்திட்டம் நிறுத்தப்பட்டது. பத்மா சேஷாத்திரி உள்ளிட்ட மெட்ரிக் பள்ளி தாளாளர்களைக் கமிட்டியாகப் போட்டு, பொதுப் பாடத்திட்டம் சரியில்ல என்று அறிக்கை வாங்கப்பட்டது. மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடை விவகாரத்தில் அரசு தலையிடமுடியாது என்றும்,  அது பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான பிரச்சினை என்றும் ஜெ அரசு அறிவித்தது.

பள்ளி-மாணவி-சுருதி-கொலைஇப்போது “பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது” என்று கேட்டு,  சீயோன் பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசன் தாக்கீது அனுப்பியிருப்பதாக நாளேடுகளில் செய்தி வந்திருக்கிறது.  இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசன் என்பவர் மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி. அவருக்கு அந்த மாவட்டத்தில் எத்தனை தனியார் பள்ளிகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டால், அவர் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது.

நன்கொடைக் கொள்ளை தொடர்பாகவோ அல்லது தனியார் பள்ளியின் வேறு எந்தப் பிரச்சினை தொடர்பாகவோ இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசனிடம் புகார் கொடுக்கப் போவதாகப் பள்ளித் தாளாளர்களைப் பயமுறுத்திப் பாருங்கள். அந்த அதிகாரியை ஒரு பிச்சைக்காரனுக்குச் சமமாகக்கூட அவர்கள் மதிப்பதில்லை என்பது அப்போதுதான் உங்களுக்கு தெரியவரும்.

மற்ற அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து பிரித்து மெட்ரிக் பள்ளிகளுக்காகத் தனியொரு இயக்ககம் அமைத்திருப்பதன் நோக்கமே, இவர்களுடைய சுதந்திரமான கொள்ளையை ஊக்குவிப்பதுதான். மெட்ரிக் பள்ளிகளின் அட்டூழியம் என்பது தனியொரு பிரச்சினை அல்ல. இது, கல்வி தனியார்மயத்துடன் நேரடியாகத் தொடர்புள்ளது.

“கல்வி ஒரு வணிகப் பொருள்தான், அதை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முடியாது” என்பதே மத்தியமாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் கொள்கை. அதனால்தான் “ஏழைகளுக்கு 25% இடம் ஒதுக்குங்கள், அதற்கு நியாயமான ஒரு தொகையை நாங்கள் கொடுத்து விடுகிறோம்” என்று கல்வி வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கல்வி அடிப்படை உரிமை இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் இந்த சட்டத்திற்கு ‘கல்வி உரிமைச் சட்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறது.

ஒரு சரக்கை என்ன விலைக்கு விற்கலாம் என்பதை முதல் போட்டு தொழில் நடத்தும் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தங்களுடைய வியாபார உரிமையில் அரசு தலையிடக் கூடாது என்பதும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் வாதம். அதை மீறி 25% என்பதை தங்கள் மீது திணித்தாலோ, கோவிந்தராசன் கமிட்டி, ரவிராசபாண்டியன் கமிட்டி என்று கமிட்டி போட்டு கட்டண நிர்ணயம் செய்தாலோ, அப்படி உள்ளே நுழையும் மாணவர்களை அவர்களுக்குத் தகுதியான வகுப்பறைகளில்தான் அமரவைக்க முடியும் என்றும், காசுக்கு ஏற்ற தோசையாகத்தான் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வியும் இருக்கும் என்றும் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார்கள்.

இதை ஏன் கொலை வழக்காக மாற்றக்கூடாது என்று நீதிபதிகள் உணர்ச்சி வசப்பட்டு பேசியிருப்பதாகத் தெரிகிறது. உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பார்த்தால், கொலைகொள்ளை உள்ளிட்ட பல குற்றப் பிரிவுகளில் மெட்ரிக் பள்ளி முதலாளிகளைத் தண்டிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குச் சட்டத்தில் இடமில்லையே!

சுருதியைக் காவு கொண்ட ஓட்டை பேருந்தில்தான் இருக்கிறது என்று பலரும் எண்ணலாம். ஆனால், கல்வி தனியார்மயத்தைப் பாதுகாக்கும் விதத்தில் இருக்கிறது சட்டம். அது சட்டத்தில் இருக்கும் ஓட்டை அல்ல; சட்டமே ஓட்டை. அது பிரேக் இன்ஸ்பெக்டரால் அடைக்க முடியாத ஓட்டை. விஜயன் முதல் ஜேப்பியார் வரையிலான எல்லா கிரிமினல்களும் சுலபமாகத் தப்பித்துக் கொள்ள முடிகின்ற ஓட்டை!

__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

32

மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன்  ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.

-வினவு

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்

ஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்….

கோவை மாநகரில், மாநகராட் சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத் தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும்,இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்-கார்டூன்

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

__________________________

நன்றி – இனியவன்

__________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________