Sunday, June 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 768

பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

செப்டம்பர் 11 – 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை

 கடந்த 11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1. பல்லவராயனேந்தல் கணேசன் 2.வீரம்பல்  பன்னீர் 3. மஞ்சூர் ஜெயபால், 4. சடையனரி முத்துக்குமார் 5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி 6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர்இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு சார்பில் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிந்தது.

குழு உறுப்பினர்கள்

1.            சி. ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உ
ரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.

2.            சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

3.            திருமுருகன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், மதுரை

4.            சுப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்,

5.            ரிராகவன், வழக்கறிஞர்,

6.            ப. நடராஜன், வழக்கறிஞர்,

7.            சி. ராஜசேகர், வழக்கறிஞர்,

8.            ம. லயனல் அந்தோணிராஜ்

____________________________________________________

2011 செப்டம்பர் 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு மூன்றாகப் பிரிந்து துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடி ஐந்து முக்கு சாலை, மதுரை சிந்தாமணி, இளையான்குடி புறவழிச்சாலை துப்பாக்கிச் சூடு தடியடியில் இறந்த காயமடைந்த நபர்களின் வீடுகள்,  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மதுரை, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகள், பரமக்குடி சம்பவத்திற்கு மூலக் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சொல்லப்பட்ட மாணவர் பழனிக்குமார் கொலை நடந்த கமுதி, மண்டல மாணிக்கம், பள்ளபச்சேரி கிராமம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக மக்களை சந்தித்து விசாரித்தும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை,  குற்ற எண்கள்.300, 459, anan& 33/2011இ மருத்துவமனை tவிபத்துபதிவேடு அறிக்கைகள், ஆப்பநாடு மறவர் சங்க அறிவிப்பு சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட வீடியோ சி.டி. உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது.

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் குருபபூஜை விழா!

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். ஆதிக்க தேவர் சாதி வெறியர்களால் அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி 33 வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் இந்த ஆண்டு தலித் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, லத்தி சார்ஜ், பொய் வழக்கு, கைது சிறை 144 தடை உத்தரவு என்ற வகையில் செயல்பட்டுள்ளது. போலீசின் அச்சுறுத்தலால் ஆண்கள் இரவில் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று பதுங்கும் நிலைமையில் உண்மை அறியும் குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

‘’இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டல மாணிக்கம், பள்ளபச்சரி கிராமத்தில் சிறுவன் பழனிக்குமாரி படுகொலையால் பதற்றம் ஏற்பட்டதால் ஜான்பாண்டியன் 11.09.2011 அன்று தூத்துக்குடி வல்லநாட்டில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் பரமக்குடியில் ஐந்து முக்கு சாலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு 12.30 க்கு மேல் கலவரம், தீ வைப்பு, கல் வீச்சு என ஈடுபட்டதில் காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது அதனால் தற்காப்புக்காகவும் பொதுச் சொத்தைப் பாதுகாக்கவும் தடியடி கண்ணீர் புகை வீச்சு துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஆறு பேர் பலியாகிவிட்டனர்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், “மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன” என்று கூறினார்.

கூடுதலாக அரசு தரப்பின் கூற்றை பரமக்குடி நகர் காவல்நிலைய குற்ற எண். 300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை மூலம் அறியலாம். இப்புகாரை பரமக்குடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அளித்து 1000 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி நகர காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கொடுத்த புகாரில்சுமார் 1000 பேர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் ஐந்து முக்கு சாலையில் மறியல் செய்தனர். துணை ஆணையர் செந்தில்வேலன் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், தாசில்தார் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோத கூட்டம் கலைந்து போங்கள் என்றோம் செவி சாய்க்காமல் அவதூறாக பேசி காலித்தனமாக போக்குவரத்தை தடைபடுத்தி வாகனங்களை தாக்க முற்பட்டார்கள். கும்பலைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வட்டாட்சியர் வாய்மொழியாக உத்தரவிட்டார். கலவரக் கும்பல் கலைந்து போகவில்லை. கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தகனி  ஆகியோர் வெறி கொண்டு எங்களை நோக்கி கற்களை எறிந்தனர். உடனே வட்டாட்சியர் தடியடி நடத்தி கலவரக் கும்பலைக் கலைக்க சொன்னார். அங்கு வந்த டி.எஸ்.பி. யும் கலைந்து போகச் சொன்னார். ஆனால் போகவில்லை. குறைந்த பட்சம் தடியடி நடத்தப்பட்டது. அப்போதும் போகவில்லை.”

“எங்களை நோக்கி கல்லால் தாக்க ஆரம்பித்தனர். நாங்கள் பின்வாங்கினோம். அந்த சமயத்தில் 14 வாகனங்களுக்கு தீ வைத்து அடித்து நொறுக்கினார்கள். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீ வைத்தார்கள். அப்போது டி.ஐ.ஜி சந்தீப் மிட்டலுக்கு தலையிலும், அடையாறு துணை ஆணையா  டாக்டர் செந்தில்வேலனுக்கு வலது கையிலும் டி.எஸ்.பி. கணேசனுக்கு வலது காதிலும் மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உயிர்சேதம், பொருட் சேதத்தை தடுக்கும் பொருட்டு கலவரக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் எனவும் உடனே கலைந்து செல்ல வாய்மொழி உத்தரவிட்டார். துணை ஆணையர் செந்தில்வேலனும் அவ்வாறு எச்சரித்தர். கலவரக் கும்பல் மிகக் கொடூரமாக தாக்கவும் பரமக்குடி வட்டாட்சியர் துப்பாக்கியால் சுட்டு கலைக்க எழுத்து மூலமாக உத்தரவு வழங்கினர்”. இவ்வாறு புகார் பதிவு செய்துள்ளனர்.

சம்பவ சாட்சிகளின் வாக்குமூலங்கள் :

பரமக்குடி துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறும் பொழுது, “காலை சுமார் 11.30 மணிக்கு பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டுக்கு வந்தேன். அப்போது சுமார் 50க்கும் குறைவான நபர்களே கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியனை விடுதலை செய்யக் கோரி மறியல் நடத்தினர். போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆய்வாளர் சிவக்குமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, டி.எஸ்.பி.  கணேசன், துணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர் கூடியிருந்தவர்களை கலைந்து போக பேசினர். நேரம் ஆக ஆக குருபூஜைக்கு வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எண்ணிக்கையில் அதிகரித்தது. அவர்களிடம் உரிய அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் எந்த முன்அறிவிப்பும் இன்றி துணை ஆணையர் செந்தில்வேலன் திடீரென தடியடி நடத்தினார். மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். போலீஸினுடைய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் பலபேர்களின் மண்டை உடைந்தது. சிதறி ஓடிய நபர்கள் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டனர். உடனே ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆய்வாளர் கந்தமுனியசாமி, டி.எஸ்.பி.   கணேசன் ஆகியோர் துப்பாக்கியால் சூட்டனர். மூன்று பேர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பல பேருக்கு மண்டை உடைந்தது. சம்பவம் போர்களம் போல் காட்சியளித்தது.

காமராஜ் என்பவர் சொல்லும் போது, “எங்க அப்பா செல்லத்துரை வாத்தியார், தியாகி இமானுவேலுக்குப் பிறகு இரண்டாவதாக மறவர்களால் படுகொலை செய்யப்பட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். துணை ஆணையர் செந்தில்வேலன் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக  இருக்கும் பொழுது எங்க அப்பாவின் நினைவுநாளுக்கு பூஜைக்காக அனுமதி கேட்டேன். அதற்கு செந்தில்வேலனோ உங்க அப்பா படத்தை வீட்டிலேயே வைத்து பூஜை செய் வெளியிலே எதற்கு கொண்டு வருகிறாய். நடத்தக்கூடாது என்று சொல்லியதுடன் அருகில் இருந்த ஆய்வாளர் மூலம் வெளியே போகச் சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் மீறி நடத்தினோம். இந்த ஆண்டு குரு பூஜையில் எஸ்ஸி/.எஸ்.டி. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக தியாகி “தெய்வத்திருமகன்’’ இமானுவேல் சேகரன் என்று பிளக்ஸ் போர்டு வைத்தனர். தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். போலீசிடம் சென்று போர்டை அகற்ற புகார் கொடுத்தனர். மேலும் போக்குவரத்துத் துறையின் மேலாளர் மூலமாக எஸ்ஸி/.எஸ்.டி.  அரசு ஊழியர்களை மிரட்டியதாலும் தெய்வத்திருமகன் என்பதை மட்டும் அழித்துவிட்டோம்.”

“இரண்டு நாட்கள் முன்பாக ’’அவங்க எதுவானாலும் வைக்கட்டும் இவர்கள் எப்படி பங்சன் நடத்துகிறார்கள் என்று பார்ப்போம’’ என்று தேவர் சாதியைச் சேர்ந்த சிலர் பேசி வந்தனர். இந்த ஆண்டு குருபூஜையை நடத்தக்கூடாது என பல்வேறு இடையூறுகளை தேவர் சாதியினர் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை முழுஅளவில் ஒத்துழைக்கிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தரை தளம்  உலர்வதற்குள் தேவர் பேரவை என எழுதி வைத்ததுடன் அந்த இடத்தில் மலம் கழித்து அசிங்க படுத்தி சென்றனர். இது வெளியில் பல பேருக்கு தெரியாது. போலீசிடம் சொல்லியதுடன் நகராட்சியில் மூலம் அகற்றினோம்.”

“சம்பவ தினத்தன்று போலீஸ் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வஜ்ரா வாகனத்தில் தண்ணியே இல்லை. அதை பயன் படுத்தாமல் போலீசாரே தீ வைத்துக் கொளுத்தினர். பொது மக்களுடைய பைக், கார் போன்றவற்றை போலீசாரே அடித்து சேதப்படுத்தினர். ஆய்வாளர் சிவக்குமார் இரண்டு கையிலும் துப்பாக்கி வைத்து மக்களைப் பார்த்து சுட்டுள்ளார். ஆறு பேரை படுகொலை செய்ததோடு பலரை கொடூரமாக தாக்கியுள்ளனர். 1000 பேர் மீது வழக்குப் போட்டு கிடைப்பவரை கைது செய்வதற்காக கிராமம், கிராமமாக மக்களை அச்சுறுத்த தேடுதல் வேட்டை செய்கிறது. மக்கள் காடுகளிலும், வயல்வெளிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். பரமக்குடி நகரத்தில் தியாகி இமானுவேல் குருபூஜைக்காக வைத்த பிளக்ஸ் பேனர்கள்; அனைத்தையும் போலீசு கிழித்து கையிலே வைத்துக் கொண்டு அதில் உள்ள பெயர்களை வழக்கிலே சேர்த்து கைது செய்ய கிராமங்களுக்கு செல்கிறது. இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு பெருகி வலுவடைந்து வருகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது சாதி மோதல் கிடையாது. சாதி வெறியோடு தலித் மக்கள் மீது நடத்திய போலீஸ் தாக்குதல். இந்த படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.”

வழக்கறிஞர் முத்துக்கண்ணன் கூறும் பொழுது, “போலீஸ் தான் கலவரத்தைத் தூண்டியது. காலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் 50 பேர் தான் சாலை மறியல் செய்தனர். போலீஸ் நினைத்திருந்தால் இந்த துப்பாக்கிச் சூட்டை, லத்தி சார்ஜை தவிர்த்திருக்கலாம். சசிகலா நடராஜனின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. தேவர் சாதிக்காரர்களை கூப்பிட்டு பேசியிருக்கிறார். குருபூஜை நடத்தக்கூடாது என்று போலீசை தூண்டிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது சாதிக்கலவரமாக சித்தரிக்க போலீஸ் முயல்கிறது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைக் கூட சாதி வெறியோடு போலீஸ் எட்டி உதைத்திருக்கிறது. ஆறு பேரில் சிலரை காட்டுமிராண்டித் தனமாக போலீசு; அடித்தே கொன்றிருக்கிறது. இந்த படுகொலைக்கு காரணமான ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆணையர் செந்தில்வேலன், டி.எஸ்.பி. கணேசன், டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டல் ஆகியோர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றார்.

சிவா, வடிவேல் ஆகியோர்கள் கூறும் பொழுது, “பகல் 12 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மாலை ஆறு மணி வரை நீடித்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகும் நான்கு பேர்கள் பிணமான பிறகு கூட அவர்களை தூக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக போலீசு மீது தொடர்ந்து கல் எறிவதும் தாக்குவதும் பிறகு பின்வாங்குவதும் என்று மூர்க்கமாக மக்கள் போராடினார்கள். இந்த சம்பவத்தால் பல்வேறு ஊர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தலித் மக்கள் மீது நடந்த அநியாய தாக்குதல்”.

பரமக்குடியில் நகர காவல்நிலையம் எதிரே அலுவலகம் நடத்தி வரும் வழக்கறிஞர் பசுமலை  கூறும் பொழுது ஆப்பநாடு மறவர் சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் முதுகுளத்தூர் தேவர் திருமண மஹால் தொடர்பான சொத்துப் பிரச்சனையை பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம்” என்ற செய்தியைச் குறிப்பிட்டு தொடர்ந்து நமது ஐயா பசும்பொன் தேவர் அவர்கள் குருபூஜையை நடத்துவது போல் பெரும் ஆதரவு பெறும் இமானுவேல் குருபூஜை வருடா வருடம் கூட்டம் அதிகமாகி அரசு விழாவாக நடத்த அனுமதி வழங்கவிடாமல் தடுப்பதற்காகவும் கிராம வாரியாக கீழத்தூவல் கிராமத்திற்கு திரண்டு வர வேண்டும் என்று சம்பவத்திற்கு முன்பே குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர். இமானுவேல் குருபூஜையை தடுக்க வேண்டுமென்று போலீசும், தேவர் சாதியினரும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் இதற்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரை கொடூரமாக தாக்கியதில் அவருக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதனால் காழ்ப்புணர்ச்சியுடனே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்”.

மாவட்ட ஆட்சியர் அருணாராய் சம்பவ இடத்திற்கும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கும் அன்று முழுவதும் வரவில்லை. வருவாய் துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருக்கும் மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கோ காயம்பட்டு மருத்துவமனையில் இருப்பவருக்கோ மாவட்ட ஆட்சியர் எந்த ஆறுதலும் நேரில் சென்று கூறவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜெயபால் என்ற இளைஞனை  மனித நேயமற்ற நிலையில் இறந்த நாயை தூக்கிச் செல்வது போல் போலீசார் தூக்கிச் சென்றனர். இந்த படுகொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்என்றார்.

பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில், இராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருவதில் 10 நபர்களுக்கு துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கு லத்தியால் தாக்கப்பட்டதால் 9 காயங்கள ஏற்பட்டுள்ளது. தர்மராஜ் என்பவருக்கு 13 காயங்கள் எலும்பு முறிவுடன் சோந்து ஏற்பட்டுள்ளது. முகம், உடம்பில் முழுவதும் காயங்கள் உள்ளது. இதர நபர்களுக்கு லத்தியால் அடித்த காயங்கள் உடம்பில் முக்கிய பகுதிகளில் உள்ளன.

இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 70) அவரைச் சந்தித்தோம், “சம்பவத்தன்று நானும் இருந்தேன். ஐந்து முக்கு சாலையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் ஜான்பாண்டியனை விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு கைது செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது. அக்டோபர் 30 அன்று தேவர் குரு பூஜையில் இப்படி நடப்பீங்களா எனக் கேட்டேன். இந்நிலையில் நாளா பக்கமும் போலீஸ் சுற்றி வளைத்துவிட்டனர். சிவக்குமார்நீங்க என்னடா பெரிய விழா நடத்துறீங்க என்று கேவலமாக பேசினார்.” அதற்கு நான் அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கார் எங்க சாதி தான், ஜெகஜீவன் ராம் எங்க சாதி தான், பல மொழி தெரிந்த மாயாவதி எங்க சாதி தான் என வாக்குவாதம் செய்தேன்.”

“திடீரென்று போலீஸ் லத்தியால் அடித்து மக்களை துரத்தினர். டுப் டுப் என துப்பாக்கியால் சுட்டனர். நான் ஓடி அருகில் இருந்த படிக்கட்டில் ஏறி மறைந்து கொண்டேன். மக்களை அடித்து விரட்டி விட்டு வந்த போலீசார் என்னைப் பார்த்துவிட்டனர். சட்டையைப் பிடித்து இழுத்து வாடா மாப்பிள்ளை சட்டமா பேசுற என கொடூரமாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பெரிய கம்பால் ஒரே போடாக என இடது காலில் போட்டார் பெருவிரல் நசுங்கி இரத்தம் வழிந்தது தலையில் ஒரு அடி அடித்தார். புருவத்தில் இருந்து ரத்தம் வந்தது. சுற்றியிருந்த காவலர்கள் ஆளாளுக்கு கடுமையாக தாக்கினார்கள். வெயிலில் கால் சுடுது செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டேன் அதற்கு இன்ஸ்பெக்டர் உனக்கு எதுக்குடா செருப்பு பள்ளப்பயலே என அசிங்கமாக திட்டினார். கீழே விழுந்த வாட்ச்ஐ எடுக்கவிடவில்லை.”

“பிறகு போலீசார் காவல்நிலையத்தில் அடைத்து ஏண்டா பள்ளப்பயலே உங்களுக்கு குருபூஜை கேட்குதா என்று  தாக்கினர்தண்ணி தவிக்குது தண்ணீர் கொடுங்க அவசரமா யுரின் போகனும் எனக் கேட்டேன் போடா என விரட்டினா. சிவக்குமாரும், எஸ்.ஐ.யும் வெளியே போனவுடன் ஏட்டு ஒருவர் தண்ணீர் கொடுத்தார். சட்டை, பனியனில் இரத்தம் காய்ந்ததால் நாற்றம் எடுத்ததால் அனைத்தையும் கழற்றிவிட்டு டவுசருடன் இருந்தேன் அப்போது மதியம் சுமார் 2 மணி இருக்கும். அப்போது சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. இரவு 10.20 மணிக்கு தான் இராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். என்னைப் போல் அடிபட்ட பலரும் இதுபோல் தான் நடத்தப்பட்டனா. என்னை அடித்த இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்று சொல்லியதுடன் உன் சட்டையை கழற்றி ஜெயிலில் தள்ளாமல் விடமாட்டேன் என்று சொன்னேன். காவல்நிலையத்தில் அடைபட்ட போது நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து என்ற பாரதியார் வரிகளை நினைத்துப் பார்த்தேன்.

காயம்பட்ட 22 வயதான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தவமணி மகன் ராஜ்குமார் கூறுகையில் பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் மதியம் இரண்டு மணி முதல் மாலை 3.15 வரை தொடர்ந்து காவல்துறையினர் தாக்கினர். நான் உட்பட பலரும் அடிபட்டு 1 ½ மணி நேரம் சுடும் வெயிலில் கிடந்தோம். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது வேதனையில் துடித்தோம். தண்ணீர் கூட யாரும் கொடுக்கவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

காயம்பட்ட பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த குமார் கூறுகையில் எனக்கு கைகளில் போலீசார் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது. 3.00 மணிக்கு 20 போலீசார் நான் காய்கறி வாங்க கடைக்கு சென்ற போது அடித்தனர். நான் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவன்.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜெயபால் வயது 20 மஞ்சூரைச் சேர்ந்தவர் அவருடைய தந்தை பாண்டி கூறும் பொழுது என் மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டவன். மருமகள் நிறைமாத கர்ப்பிணி, கூலி வேலை செய்து தான் பிழைக்கிறோம். குருபூஜைக்குச் சென்றவன் பிணமாக வந்தான். பத்திரிக்கையில் அவன் நடந்து வருகிற போட்டோவும் இருக்கிறது. அவன் பிணமாக போலீசார் தூக்கி வருவதும் இருக்கிறது. அரசு கொடுத்த இழப்பீடை திருப்பித் தரப் போகிறேன். என் மகனின் படுகொலைக்கு நீதி வேண்டும். பணத்தை எளிதாக சம்பாதித்து விடலாம். என் மகனின் மார்பில் பாய்ந்த குண்டால் என் கை உள்ளே போகிற அளவுக்கு மார்பில் குழியாக இருந்தது. கீழே இருந்த சதையை எடுத்து அதில் வைத்து அழுத்தினேன். என் மகன் நான்கு பேர்களை ஒரே நேரத்தில் அடிக்கும் வலிமை உடையவன்.  அவனை கொன்று விட்டார்கள். நாங்கள் விடமாட்டோம்”.

பல்லவராயனேந்தல் ஊரைச் சார்ந்த கணேசன் வயது 55 துப்பாக்கிச் சூட்டில் பலியானவர். இவர் மனைவி கூறும் பொழுது என் கணவா குருபூஜைக்கு போகவில்லை. என் மகனுக்கு 15-ம் தேதி திருமணம் அழைப்பிதழ் கொடுப்பதற்காக பரமக்குடி சென்றார். அநியாயமாக துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டார். ஆடு, மாடு வைத்துள்ளோம் அதை எல்லாம் பட்டியில் அடைப்பதற்கு வந்துவிடுவேன் என்று போனார். பந்தகால் நட்டுப் போனவர் மகன் திருமணத்திற்கு வரவில்லை. போலீஸ் இப்படி அநியாயமாக கொன்றுவிட்டது. மணப்பெண்ணை பற்றி தவறாக பேசிவிடுவார்கள் என்பதற்காக என் கணவர் விருப்படியே  குறித்த தேதியில் திருமணத்தை நடத்தினோம்”.

காக்கனேந்தல் ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவருடைய அண்ணன் மனைவி கூறும் பொழுது போலீஸ் அநியாயமாக என் தம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டது. மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல்; இரவு நேரங்களில் போலீஸ் எங்களை கைது செய்கிறது. இரவு நேரங்களில் ஆண்கள் வீடுகளில் இல்லை. பாத்திர வியாபாரிகள் போல முள்ளுக்காட்டில் நின்று வேவு பார்க்கிறது. நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம். என்னுடைய வீடு பரமக்குடி பொன்னையாபுரத்தில் இருக்கிறது. ஒரு சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டு பல போலீசார் சுற்றி நின்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். உங்க ஆட்களை இப்ப வர சொல்லு என்று தாக்கியது. நான் மாடியில் இருந்து பார்த்தேன். தெருவில் இருந்த இருசக்கர வாகனங்கள் டாக்டருக்கு சொந்தமான கார் இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். தேவர் குருபூஜையை பாதுகாப்பாக நடத்துவதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. எங்கள் தலைவர் விழாவை நடத்தவிடாமல் தடுக்கிறது செய்தால் எல்லா குருபூஜையும் தடை செய்யட்டும் இல்லை என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி நடத்த ஆவண  செய்ய வேண்டும். இந்த அம்மா ஆட்சிக்கு வந்து இப்பவே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு என்றால் இவர்களுக்கு ஓட்டுப் போட்டது எவ்வளவு தவறு என்று தெரிகிறது”.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புறவழிச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

இளையான்குடியில் தியாகி இமானுவேல் பேரவை சேர்ந்த முனியாண்டி என்பவர் கூறும் பொழுது புறவழி சாலையில் குருபூஜைக்காக பகைவரை வென்றான் கிராமத்து மக்கள் சார்பில் பேனர் வைத்தோம்.  அதிகாலையில் சிலர் தியாகி இமானுவேல் படத்தின் தலையை கிழித்துவிட்டனர். இதற்காக நாங்கள் போலீசிடம் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. குருபூஜைக்கு செல்வதற்காக இந்திரா நகரில் 50 வாகனங்களில் நாங்கள் தயாராக இருந்தோம். பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் போலீஸ் அனுமதி மறுத்தது. இந்நிலையில் இளையான்குடி புறவழிச்சாலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கரைக்குடி மக்கள் சுமார் 27 பேர் சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி. இளங்கோவன் எந்த அறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுட்டார். ஆனந்த் என்ற +2 படிக்கும் மாணவன் துப்பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்தான். பொதுமக்கள் அனைவரும் சிதறி ஓடினர். போலீசாரே ஆனந்தை மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்பந்தமாக 200 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.”

“நாங்கள் கூட்டமாக சென்று துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினீர்கள் என்று டி.ஸ்.பி.இளங்கோவனிடம் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே நான் தான் சுட்டேன் என்று சொன்னார். பிறகு யாரையும் கைது செய்யக்கூடாது என்று நாங்கள் கடுமையாக பேசினோம். இத்தனை வருடம் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொன்னோம். டி.ஸ்.பி. மறவர் இனத்தைச் சேர்ந்தவர் நயினார் கோவில் அருகில் உள்ள சாதி ஆதிக்கம் மிகுந்த அக்கிரமேசி ஊரைச் சேர்ந்தவர். இவர் தேவர்களுக்கு சாதகமாக சாதி உணர்வோடு நடக்கிறார்.

ஆனந்தினுடைய தாயார் செல்லம்மாள் ‘’என் மகன் டியூசன் போனான் அநியாயமாக போலீஸ் சுட்டுவிட்டனர். தற்பொழுது மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்’’.என்றார்.

பகைவரை வென்றான் ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறும் பொழுது நாங்கள் வைத்த பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசோடு போராட்டம் நடத்தியதால் குருபூசைக்கு கிளம்ப காலதாமதம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் நாங்களும் பரமக்குடி போயிருப்போம். இந்த விழாவை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதை சீர்குலைக்கவே பேனர் கிழிப்பு காவல்துறையும் துணை போகிறது. இளையான்குடியில் துப்பாக்கி சூடே இல்லை என்று காவல் துறை மூடி மறைக்கப் பார்க்கிறது. டி.எஸ்.பி.இளங்கோவன் மருத்துவர்களிடமும் குண்டடிபட்ட ஆனந்தின் பெற்றோர்களிடமும் பேசி சரிகட்ட முயற்சிக்கிறார். தியாகி இமானுவேல் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். எங்களின் நியாயமான இக்கோரிக்கையை அமைப்பு பாகுபாடு கட்சிப் பாகுபாடு இலலாமல் அனைவரும் ஆதரிக்கின்றனர்”.

மதுரை சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

                11.09.2011 அன்று மதுரை, சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் காளியம்மாள் என்ற முதல்நிலை காவலரிடம் புகாரைப் பெற்று 38 நபர்கள் மீது குற்ற எண்.459/ 2011 yஇ.த.ச 147, 148, 188, 341, 322, 336, 353, 307 & 3 (1) தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகரில் குருபூஜைக்கு வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், புகார்தாரரான காளியம்மாள் என்ற தலித் பெண் காவலரை மானபங்கப்படுத்த முயற்சி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                மேற்படி சம்பவத்தைப் பற்றி நாங்கள் விசாரித்த பொழுது மதுரை சிந்தாமணியில் இருக்கும் முனியாண்டி மகன் துரைப்பாண்டி, கிருஷ்ணன் ஆகியோர் சொன்னது “11.09.2011 அன்று காலை 11 மணிக்கு புலியூர் என்ற ஊரிலிருந்து திறந்த வேனில் குருபூஜைக்கு வந்தவர்களை அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் சண்முகம் அடித்துத் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த நேரத்தில் பாட்டம் கிராமத்தில் இருந்து குருபூஜைக்குச் செல்ல வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணியைச் சேர்ந்த உள்ளுர்வாசிகளும் அப்போது இருந்தனர். திடீரென சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் போலீசாரும் லத்தியால் கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர். பால்குடம் எடுக்க வந்த பெண்கள், மற்றவர்களும் கூட ரத்தம் சொட்ட சொட்ட சிதறி ஓடினர். இச்செய்தியை சண்முகநாதன் வாக்கி டாக்கி மூலம் குருபூஜைக்கு வந்தவர்கள் காவலர்களை தாக்குகிறார்கள். பேருந்துகளை அடித்து நொறுக்கிறார்கள் என்று பொய்யாக தகவல் சொன்னதால் ஜீப்பின் கதவு திறந்த நிலையில் வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டார். ஜெயப்பிரகாஷ் என்ற 19 வயது இளைஞர் தொடைப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார். அவரைத் தூக்க முயற்சித்த பாலசுப்பிரமணி என்ற இளைஞர் விலாவில் குண்டடி பட்டார். மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஏற்கனவே பாட்டம் கிராமத்தில் உள்ள பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது சேர்வை இனத்தவர்களுக்கு பகை உள்ளது.இதில் சேர்வை சமுகத்திற்கு ஆதரவாக பல வழக்குகளில் எஸ்.ஐ.. சண்முகநாதன  செயல்பட்டுள்ளார்.

“ஆய்வாளர் கஜேந்திரன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் வேலை பார்த்த போது வெங்கடேச பண்ணையாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வெங்கடேச பண்ணையாருக்கும் பள்ளர் சமூகத் தலைவர் பசுபதி பாண்டியனுக்கும் பிரச்சினை இருந்தது. இதனால் பள்ளர் சமூகத்தின் மீது எப்போது விரோத மனப்பான்மையில் செயல்படுபவர். ஜீப்பை விட்டு இறங்கி துப்பாக்கியால் சுட்டதும் நல்ல நிலையில் வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று தனக்கு காயம்பட்டதாக நாடகம் ஆடி மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார். மேலும் காளியம்மாள் என்ற பெண் காவலரிடம்  புகார் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டுள்ளார். காளியம்மாள் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். சிந்தாமணியில் உள்ளவர்கள் பலர் அவருக்கு உறவுக்காராகள். சம்பவத்தன்று குருபூசைக்கு வந்தவர்களோடு பேசியதுடன் அனைவருடனும்  சேர்ந்து கரும்புச்சாறு வாங்கி குடித்தார். தடியடி ஆரம்பித்தவுடன் மற்ற பெண் காவலருடன் சென்றுவிட்டார். ஆனால் உண்மைக்கு மாறாக காளியம்மாளை யூனிபார்முடன் இழுத்து மார்பகங்களை பிடித்து அமுக்கி மானபங்கம் செய்ததுடன் அவரை கீழே தள்ளிவிட்டு உயிர் தலத்தில் காலால் மிதித்தனர் என்று வக்கிரமாக சாதி வெறியுடன் புகார் பதிவு செய்துள்ளனர். அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் உள்ள பெயர்கள் அனைத்தையும் புகாரிலேயே எழுதி பதிவு செய்துள்ளனர். முதல் நாள் இரவே எஸ்.ஐ. சண்முகநாதன் அவனியாபுரத்தில் அனுமதி பெற்று வைத்த ரேடியோவை நிறுத்துமாறும் கூட்டமாக இருப்பதை தடுத்தும் இடையூறு செய்தார். இச்சம்பவத்திற்கும் ஜான்பாண்டியன் கைது செய்ததற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மப்டி போலீசார் தான் பேருந்து மீது கல்வீச்சு நடத்தி கண்ணாடியை உடைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டல மாணிக்கம் பள்ளப்பச்சேரி கிராமத்தில் 09.09.2011 அன்று பழனிக்குமார் என்ற +1 மாணவன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சம்பவம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 12.09.2011 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பரமக்குடியில் 11.09.2011 அன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு அளித்த பதில் உரையில் மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்று கூறினார்”.

மேற்படி சம்பவம் தொடர்பாக அந்த ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்த போது. பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் சொன்னது

மண்டல மாணிக்கத்தில் ஆரம்பத்தில் நாடார், செட்டியார், முதலியார், பண்டாரம், அருந்ததியர் ஆகியோர் வீடு வாசல் நிலங்களோடு வாழ்ந்து வந்தனர். சுற்றியுள்ள ஏழு கிராமங்களிலும் மறவர் சாதியினர் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் மண்டல மாணிக்கத்தில் குடியேறி பல்வேறு வகைகளில் மற்றவர்களுடைய சொத்துக்களை அபகரித்து பெரும்பான்மையாக மாறிவிட்டனா. இக்கிராமத்தோடு இணைந்தது தான் பள்ளப்பச்சேரி கிராமம். 2004-ம் ஆண்டு மில்லுக்கு வேலை செய்யச் சென்ற பள்ளர் சமூகத்து பெண்களை  மறவர்கள் தாக்கினர். பிறகு நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போலீசாரே எங்களை அழைத்துச் சென்று மண்டல மாணிக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போதே மறவர் சாதியினர் எங்களை கடுமையாக தாக்கி மண்டையை உடைத்தனர். போலீசையும் தாக்கினர். இதற்கு போலீசே மறவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.”

“பள்ள்பச்சேரி கிராம மக்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால் மறவர்கள் இருக்கும் மண்டல மாணிக்கம் பக்கம் சென்று தான் பேருந்தில் செல்ல முடியும். எங்கள் இளைஞர்கள், பெண்கள் சென்றால் கிண்டல் செய்வார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்து பேச முடியாது, வெளியிலும் சொல்ல முடியாது. அரசு விடுதியில் பள்ளர் சாதி மாணவர்களை துன்புறுத்துவார்கள். இதனால் 40 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆனைக்குளம் பள்ளியில் சேர்த்துவிட்டோம். காவல்நிலையத்தில் கூட பெரும்பான்மை போலீசார் இப்பகுதி மறவர் சாதியினரே இதனால் எங்களுக்கு எந்த காலத்திலும் நீதி கிடைக்கவில்லை.”

“ஜனவரி 2011-ல் சிறையில் இருந்து வந்த ஜான்பாண்டியன் எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுது மாடியில் இருந்து மறவர் சமூகத்தினர் கல்லெறிந்து வாகனங்களை தாக்கியதுடன் இருவரை கத்தியால் குத்தினர். மேலும் எங்கள் பள்ளப்பச்சேரி ரிசர்வ் ஊராட்சி தொகுதியாகும்  எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்தினோம். ஆனால் மறவர் சாதியினர் அங்கு வாழக்கூடிய குமரன் என்ற அருந்ததியினரை மிரட்டி வேட்பு மனு தாக்கல் செய்து பஞ்சாயத்து தலைவராக ஜெயிக்க வைத்தனர். பஞ்சாயத்து தலைவர் தரையிலே உட்கார்ந்திருப்பார், மறவர்சாதி துணைத் தலைவர் நாற்காலியிலே அவரதுமகன் உட்கார்ந்திருப்பார். டீ வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளை தலைவர் தான் செய்வார் வாடா, போடா என்று தான் கூப்பிடுவார்.  மற்றொரு பாப்பாபட்டி, கீரிப்பட்டி இது மண்டல மாணிக்கத்தில் இரட்டை டம்ளர்  இன்றும் உள்ளது”.

இப்படி நாள்தோறும் அஞ்சி வாழ்கின்ற சூழலில் 09.09.2011 அன்று முத்துராமலிங்கபுரத்தில் நடந்த கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க எங்கள் ஊரில் இருந்து பலர் சென்றனர். பபூன் காமெடி முடிந்ததுடன் பல இளைஞர்கள் ஆற்றுப் பாலத்தை கடந்து திரும்பி ஊருக்கு ஐந்து பேர், நான்கு பேர் என்று வந்து கொண்டிருந்தனர். பின்பு இரு சிறுவர்கள் சற்று தூரமாக வந்த போது வேலியில் மறைந்திருந்த 10 பேர் மண்டல மாணிக்கம் மறவர்கள் பழனிக்குமார் என்ற 16 வயது சிறுவனை தலையில் வெட்டிக் கொன்றனர். கொலைக்கு முதல் நாள் மறவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தேவர் வாழ்க என்பதற்கு கீழே யாரோ ஒன்பது என்று எழுதிவிட்டார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தனர். போலீசார் எங்களை விசாரித்தனர். அந்த கட்டிடப் பகுதியில் மறவர் சாதி மாணவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவார்கள் நாங்கள் அங்கு செல்லவே முடியாது இரவிலும் அவர்களே அங்கு மது அருந்துவர். நாங்கள் யாரும் எழுதவில்லை என்று போலீசாரிடம் சொன்னோம். அன்று இரவு தான் பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அச்சிறுவன் பார்ப்பதற்கு 10 வயது போல தோற்றம் தான் இருக்கும் இமானுவேல் சேகர் குருபூஜையை தடுக்கும் நோக்கத்தில் தான் கொலை நடந்துள்ளது.

பள்ளபச்சேரி தங்கராஜ் கூறும் பொழுது அன்று இரவு நான் குண்டாற்றை தாண்டி வரும் பொழுது கத்தும் குரல் கேட்டது. அப்போது ‘’கதையை முடிச்சாச்சு இமானுவேல் சேகரன் விழா எப்படி நடக்குது பார்ப்போம்’’ என்று சொல்லிக் கொண்டே கருவேல மரங்களில் சென்று மறைந்தனா. பழனிக்குமார் தலையில் வெட்டுபட்டு கீழே கிடந்தான்”.

கொலையுண்ட பழனிக்குமாரரின் பெற்றோர்கள்     தங்கவேல், புவனேஸ்வரி, கூறும் போது எனக்கு நான்கு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை எனது இரண்டாவது மகன் பழனிக்குமார் என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. நன்றாக படிப்பான் பள்ளிக்கூடத்தில் 301 மார்க் எடுத்திருக்கிறான். இவன் படிப்பை அடையாளமாக வைத்து தான் ஆனைகுளம் அரசு பள்ளியில் எங்கள் ஊர் மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். மற்ற மூன்று பிள்ளைகளும் சிறுவர்கள் படிக்கிறார்கள். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது சார்பு ஆய்வாளர்  வழிவிட்டான் எழுதினார். கொலை செய்தவர்களுடைய பெயரை நாங்கள் சொல்லியும் எழுதாமல் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தொpயாத பத்து மர்ம நபர்கள் என்று எழுதிக் கொண்டார். மறவர் சாதி என்பதால் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார். நாங்கள் சொன்னதில் நான்கு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்”.

                பள்ளபச்சேரி இருளப்பன் கூறும் பொழுது எங்கள் ஊருக்கு தனி ரோடு கேட்டு பல வருடங்களாக மனுக் கொடுத்திருக்கிறோம். அரசு அதிகாரிகள் செயல்படுத்த மறுக்கிறார்கள். இதனால் மறவர்கள் இடத்திற்கு நாங்கள் செல்லுகின்ற கட்டாயம் இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது. நாங்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் சமுதாய ரீதியாகவே ஜான்பாண்டியன் வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினரை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டனர். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் அ.தி.மு.க.வில் உள்ள மறவர்கள் நாங்கள் நினைத்ததை முடித்துக் கொடுத்த தாயே என ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்”.

அரசு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணை

பரமக்குடி துப்பாக்கி சூடுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழக முதல்வா் ஜெயலலிதா அவா்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.காவல் துறையினா் தாங்களே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் மூலம் சம்மபவத்தை குறிப்பிட்டுள்ளனா்.

பரமக்குடி தாசில்தார் சிவக்குமார் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி சம்பவத்தில் எதுவும் சொல்ல முடியாது என்று கூறி முடித்துக்கொண்டார்.பரமக்குடி ஆய்வாளா் சிவக்குமார் தனது புகாரில் தாசில்தாரிடம் எழுத்துபூர்வமாக உத்திரவு பெற்று துப்பாக்கி சூடு நடத்தினோம் என்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் கலெக்டரிடம் பேசிவிட்டு உங்களை போனில் தொடர்பு கொள்கிறேன் என்றுசொன்னார். ஆனால் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி காவல் ஆய்வாளார் சிவக்குமாரை சந்திக்க முயன்ற போது அவர் வெளிப் பணிக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பின் அவருடைய செல் எண் 8056697999 –ல் தொடர்பு கொண்ட போது வேறு ஒருவர் எடுத்து மீட்டிங்கில் இருப்பதாகவும் நான் தகவல் சொல்லி விடுகிறேன்.உங்களோடு பேசுவார் என்றார்.ஆய்வாளர் சிவக்குமார் தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி டி.எஸ்.பி.கணேசன் அவர்களை சந்திக்க முயன்ற போது அவர் மாமல்லபுரத்திற்கு மாறுதல் ஆகிவிட்டதாக பரமக்குடி போலீசார் தொரிவித்தனர்.

இளையான்குடி தாசில்தார் மணி அவர்களிடம் விசாரித்தபோது, “இளையான் குடி புறவழிச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என போலீசார் கூறுகிறார்கள்.ஆனால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார்.சம்பவத்தில் ஆனந்த் என்ற மாணவன் காயம்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன்.”

நிழற்படங்கள்

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________________________________

மேற்படி சாட்சிகளின் விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை முடிவுகளாக தருகிறோம்.

1.            தேவர் குருபூஜைக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இமானுவேல சேகரன் குருபூஜை விழா நடத்தக்கூடாது, இமானுவேல் சேகரன் குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஆப்பநாடு மறவர் சங்கம், சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் சேர்ந்து ஜெயலலிதா அரசின் ஆதரவுடன் தேவர் சாதியினரை திருப்திபடுத்த சாதி வெறி கொண்ட போலீசை ஏவிவிட்டு பரமக்குடியில் ஆறு தலித் மக்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இவ்வாண்டு இமானுவேல் சேகரன் குருபூசையை தடுத்து நிறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

2.            செப்டம்பா 11 அன்று பரமக்குடியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா மண்டல மாணிக்கத்தில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவரை கொச்சைப் படுத்தும்விதமாக சுவரில் எழுதப்பட்டிருந்தது. இதுவே பரமக்குடி சம்பவத்திற்கு மூலக்காரணம் என கூறிப்பிட்டார். ஆனால் நாங்கள் நேரடியாக சென்று விசாரித்ததின் அடிப்படையில் பள்ளப்பச்சேரி கிராம பள்ளர் சாதி மக்கள் பல ஆண்டுகளாக அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மறவர்களை எதிர்த்து அப்பகுதியில் வாழ முடியாது என்ற நிலையில் பள்ளர் சாதி மக்கள் செல்ல முடியாத இடத்தில் அதிலும் கொல்லப்பட்ட பள்ளி சிறுவன் பழனிகுமார் கூட்டுறவு சங்க சுவரில் எழுதும் உயரம் கூட இல்லாத நிலையில். மறவர் சாதியினரே தேவர் வாழ்க என்பதற்கு கீழே ஒன்பது என எழுதிவிட்டு பொய்யாக போலீசில் புகார் கொடுத்து இரவில் கொலையும் செய்துள்ளனர்.

3.            மண்டல மாணிக்கம் பள்ளபச்சேரி பழனிக்குமாரை கொடூரமாக கொலை செய்தது, குருபூஜை தினத்தன்று ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது, குருபூஜை விழாவிற்கு சென்னை மாநகர அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் கொண்டு வரப்பட்டது, கற்கள், கைத்துப்பாக்கிகள், உருட்டுக் கட்டைகள் இவை எல்லாம் முன் கூட்டியே தயாரித்து சம்பவ இடத்தில் கொண்டு வரப்பட்டது, ஆரம்பத்தில் 50 பேராக பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக அப்புறப்படுத்தும் நிலையில் இருந்த காவல்துறை அப்புறப்படுத்தாமல் இருந்தது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு பரமக்குடி நகரைத் தாண்டி சென்றவுடன் ஜான் பாண்டியனை கைது செய்தது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்தோர்  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டு அதில் பேச்சுவார்த்தைக்காக எழுந்த ஒருவரை தள்ளிவிட்டு திடீரென தடியடியைத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டது, இவற்றை எல்லாம் நியாயப்படுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது, இன்றுவரை அ.தி.மு.க. அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களை யாரும் சந்திக்காதது, 144 தடை உத்தரவு நீக்கப்படாமல் இருப்பது, பொய் வழக்குகள் 2000 பேர் மீது போட்டிருப்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது, ஆகியவை பரமக்குடி சம்பவம் திட்டமிட்டு அரசாங்க ஆதரவுடன் போலீஸ் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்திய படுகொலை என்பதை உறுதி செய்கிறது.

4.            பரமக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசு எஸ்ஸி./எஸ்.டி போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட குருபூஜை பேனரில் தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன் என்று குறிப்பிட்டுள்ளதை தேவர் சாதியைச் சேர்ந்தோர், காவல்நிலையத்திலும் புகார் மனு அளிக்கிறார்கள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் நீக்கக் கோருகிறார்கள். போக்குவரத்து அதிகாரிமுன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது பேனரை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் விழா நடக்காது என்று மேல் இடத்தில் உள்ளவர்கள் சொன்னதாக சில அதிகாரிகள் குறிப்பிட்டது. குருபூஜைக்கு இருதினங்களுக்கு முன்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட்டில் தேவர் பேரவை என்று எழுதப்பட்டு அதில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. ஆகிய சம்பவங்கள் குருபூஜை விழாவின் போது பிரச்சனையை உருவாக்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.

5.            தமிழகத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக யாரேனும் போராட்டம் செய்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு முன் உதாரணமாக இச்சம்பவம் ஜெயலலிதா அரசு மற்றும் காவல்துறையால் நிகழ்த்தி காட்டப்பட்டுள்ளது. இனிவரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சி எப்படி நடக்கும் என்பதற்கு சாட்சியாக இச்சம்பவம் விளங்குகிறது. பரமக்குடி சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை.. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி துவங்கிவிட்டது என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதமே.

6.            பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பதற்கான வாய்ப்பிருந்து அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு  வரவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு முன்பான சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் கடைபிடித்தது போல் பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் குறிப்பிட்டிருப்பது பொய்யானது. அதே போல் இளையான்குடியிலும், மதுரையிலும் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஆதரவும் காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதிவெறியும் காரணமாக அமைந்துள்ளது.

7.            ஜான்பாண்டியனை கைது செய்யாமல் இமானுவேல் சேகரன் குருபூசைக்கு செல்ல அனுமதித்திருந்தால் துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்திருக்காது.

8.            அரசியல் சட்டத்தில் மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மனித உரிமைகளை மறுத்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி துப்பாக்கிசூடு நடத்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.

பரிந்துரைகள்:

1.            பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொலை சம்பவத்திற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி மற்றும் இதர போலீசார் மீது தமிழக அரசு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

2.            இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்து, கிராமங்களில் போலீஸ் ரெய்டு செய்வதை கைவிட வேண்டும். செப்டம்பா 11 அன்று 2000 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். யாரையும் கைது செய்யக்கூடாது.

3.            சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடும், காயம்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

4.    மண்டல மாணிக்கம் சிறுவன் பழனிக்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளவச்சேரி பகுதி நிலமையை நேர்மையான மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்து தலித் மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.    தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலித் மக்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையை இனக்கலவரம் என்பதாக தவறாக சித்தரிப்பதுடன் அதற்கு ஆதரவாக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி செயல் பட்டு வருகிறார்.இதனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் அரசாங்கத்தின் பங்கு குறித்து விசாரிக்க பணியில் உள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

36

ஜயகாந்த்-கம்யூனிஸ்டு

ழை பெய்ததும் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, பின் அறுவடை செய்யும் விவசாயிகளோடு ஒப்பிடும் போது ஓட்டுக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை என்னவென்று சொல்வது?

ஐந்தாண்டுகள் கொட நாட்டில் படுத்துக் கொண்டே எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு, இறுதி ஆண்டில் ஈர்த்து வரப்படும் கூட்டத்தை வைத்து ஹெலிகாப்டரில் பறந்து ஆர்ப்பாட்டம் செய்த ‘புரட்சித் தலைவி’ தி.மு.க அரசாங்கம் மீது மக்கள் கொண்ட வெறுப்பினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கரையொதுங்கினார்.

அது உழைத்துப் பெற்ற வெற்றியல்ல, உட்கார்ந்து பிடித்த வெற்றி என்றாலும் அம்மாவின் ஆணவத்தை தேர்தலுக்கு முன்பேயே நாம் மட்டுமல்ல அம்மாவின் நிழலை வணங்கி கரையேறிய கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்திருந்தார்கள். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதே வேட்பார்களை வெளியிட்டதாக இருக்கட்டும், பிரச்சாரத்தில் அவர்களை வேண்டாத விருந்தாளியாக பந்தாடியதாக இருக்கட்டும் எதுவும் மறக்கக் கூடிய ஒன்றல்ல.

ஆனாலும் தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் குவிந்திருந்த தமிழக மக்களின் மனநிலையை அம்மாவின் சேட்டைகள் சிதறடித்துவிடும் என்று அவரது அந்தப்புரத்து சாணக்கிய குருக்கள் கொஞ்சம் ஓதியதன் பலனாக அம்மா கொஞ்சம் இறங்கி வந்தார். அப்போதும் கூட ‘கேப்டன்’ விஜயகாந்தும், காம்ரேடுகளான போலிக் கம்யூனிஸ்டுகளும் சுயமரியாதை இன்றி அம்மாவின் அருளைப்பெற அலைந்த கதையும் நமக்கு மறந்திருக்காது.

தேர்தல் முடிவு வந்ததும் கையில் திணிக்கப்பட்ட அந்த வெற்றி தனது கடந்த கால ஆட்சியின் மகத்துவத்தை நினைத்து மக்கள் பயபக்தியுடன் அளித்த வெற்றி என்று ஜெயா பேசினார். “எனது அரசு, எனது திட்டம், எனது தொலை நோக்கு,” என்று எதற்கெடுத்தாலும் அந்த ட்ரிபிள் எக்ஸ்எல் அகந்தை அவ்வப்போது ஆட்டம் போட்டாலும் பார்ப்பன ஊடகங்கள் எதுவும் அதை கண்டு கொள்ளாததோடு ஏதாவது கோரிக்கை இருந்தால் பணிவோடு முன்வைத்து அம்மா பார்த்து ஏதாவது செய்தால் சரி என்று எழுதி வந்தனர். இந்த பக்தி பஜனை மண்டலியில் தினமணி வைத்தியநாதன் முதல் ஆளாய் இருந்தார்.

அம்மாவோடு கூட்டணி வைத்து அடிமைத்தனத்தோடு பணியாற்றியதன் பலனாக தே.மு.தி.கவிற்கு எதிர்க்கட்சி தகுதியும், காம்ரேடுகளுக்கு சில சீட்டுகளும் கிடைத்தன. பிறகு சட்டமன்றத்தில் அவர்களும் அம்மா சரணம் பாடியே காலத்தை ஓட்டினார்கள். சமச்சீர்கல்வி ரத்து என்று வந்த சட்டத்திற்கு போலிக்கம்யூனிஸ்டுகள் முதல் ஆளாய் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள். கேப்டனின்அடிமை எம்.எல்.ஏக்களோ கருணாநிதியை பழித்து அடுக்கு மொழியில் பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்கள்.

ஆனாலும் அம்மா தே.மு.தி.க சில்லறைகளை மதிக்கவில்லை என்பதோடு அவ்வப்போது கலாய்க்கவும் செய்தார். சட்டமன்ற அனுபவம் இல்லாத அந்த கத்துக்குட்டிகள், மேட்டூரில் அணை இருக்கிறது, திருத்தணியில் முருகன் கோவில் இருக்கிறது என்ற வரலாற்று உண்மைகளை பேசி கொல்கிறார்கள் என்று அம்மா அவர்களை எச்சரிக்கவே செய்தார். இவையெல்லாம்  கேப்டன் முன்னிலையில் நடந்திருந்தாலும் பதிலுக்கு திருப்பி சுடுவதற்கு அவரென்ன இராணவத்தில் இருக்கும் கேப்டனா என்ன? ஆர்.கே.செல்வமணி அளித்த அந்த கேப்டன் பதவியையும், வெத்துத் துப்பாக்கியையும் வைத்து மன்சூர் அலிகானை வேண்டுமானால் சுடலாம், அம்மாவை முடியுமா என்ன?

தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் புரட்சித் தலைவி மேயர், நகராட்சி என்று எல்லா பதவிகளுக்கான அ.தி.மு.க அடிமைகள் பட்டியலை அறிவித்து விட்டார். கூட்டணிக் கட்சி என்று பரிதாபத்துடன் கூறிக்கொள்ளும் சில அய்யோ பாவம் அடிமைகள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அம்மாவின் அதிரடிக்கு முன் கால்தூசு.

ஆனாலும் காம்ரேடுகள் விடவில்லை. விடாது போயஸ் தோட்டத்திற்கு காவடி எடுத்தார்கள். ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் (நல்லகண்ணுவிற்கு என்னாச்சு?) வந்தார்கள்; பேசினார்கள்; அம்மா வெளியிட்ட பட்டியல் இறுதியல்ல என்றார்கள். இப்படி என்னவெல்லாம் சமாதானமடைய முடியுமோ அப்படி எல்லாம் பேசினார்கள். ஆனாலும் அவர்களுக்கு மேயர் இல்லை, ஏற்கனவே இருந்த நகராட்சி இடங்களும் இல்லை என்று முதல்கட்ட ‘பேச்சுவார்த்தை’கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் காம்ரேடுகள் இத்தகைய போயஸ்தோட்டத்து அடிமைத்தனத்தில் கொட்டை போட்டவர்கள் என்பதால் ஏதோ சில எலும்புத்துண்டுகள் கிடைக்காமல் போகாது. ஆனால் கேப்டன் நிலையோ இன்னும் பரிதாபம். 29 நபர்களை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு நடந்தது போன்று இப்போதும் அம்மா இறங்கி வரமாட்டார் என்று கேப்டன் வீட்டு நாய்குட்டிக்கு கூடத் தெரியும்.

அப்போதாவது தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது அசுர பெரும்பான்மையில் ஆட்சியை அதிகாரத்துடன் நடத்தும் அம்மாவிடம் ஏதாவது கோரிக்கை வைக்க நினைத்தாலும் அது தொண்டைக்குழியை தாண்டி வருவது கடினம். மேலாக தி.மு.க பெருந்தலைகளே அம்மாவின் ருத்ர தாண்டவத்தை கண்டு கதிகலங்கிய நிலையில் கத்துக்கட்சி கேப்டன் கட்சியினர் என்ன செய்து விட முடியும்?

பத்து மேயர் பதவிகளில் நான்கிலிருந்து இரண்டு வரை, உள்ளாட்சி பதவிகளில் முப்பது சதவீதம் என்று பெருந்தன்மையுடன் மனக்கோட்டை கட்டிய கேப்டன் தற்போது என்ன செய்வது என்று திண்டாடி வருகிறார். அம்மாவின் நூறு நாள் ஆட்சி விழா பஜனை மண்டலிக்கு அவர் போகவில்லை என்பதுதான் பு.த வின் கோபத்திற்கு காரணம் என்று கேப்டனது பாடிகார்டுகளே பேசிவருகிறார்கள்.

அதன்படி கேப்டன் தனியாக தேர்தலில் நிற்பதை அவரது கட்சியினர் யாரும் விரும்பவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக அம்மாவும் அருள்பாலிக்க தயாரில்லை. சில பல எலும்புத் துண்டுகளை கவ்விக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவரது நிலை. காம்ரேடுகளை முதலில் அழைத்து பேசியது போல பெரிய கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவை இன்னும் பேசுவதற்கே அழைக்கவில்லை என்பது வேறு கேப்டனது படை வீரர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. இதெல்லாம் வைகோ அண்ணனின் வசந்த மாளிகை புலம்பலில் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.

அரசியல் வெற்றி என்பது கட்சிகள் தமது சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டி பெறும் போராட்டம் என்பது இல்லாமல் சில வரலாற்று விபத்துக்களால் கிடைத்தால் என்ன நடக்கும்? போயஸ் தோட்டத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு அம்மா போடும் ஆட்டமும், அந்த ஆட்டத்தில் சில எலும்புகளாவது தவறி கீழே விழும் என்று கூட்டணி அடிமைகள் தவமிருப்பதும் மேற்கண்ட விபத்து வெற்றியின் தொடர் விளைவுகள்.

இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற அநாமதேயங்கள் கேப்டன் கட்சிக்கு 51 சதவீத சீட்டு ஒதுக்கீடு தருவோம் என்றெல்லாம் பேசிக் கொல்லுகிறார்கள். இந்தச்சூழலில் லெப்டிணன்ட்டுகளின் கூட்டத்தை கூட்டிய கேப்டன் “எல்லாவற்றும் தயாராக இருக்குமாறு” பேசியிருக்கிறார். முக்கியமாக இந்த சொந்தக்கதை, சோகக்கதையெல்லாம் மீடியாவில் வெளியாகிவிடுவதாகவும், இந்த முறை அப்படி வெளியானால் இனி இந்த கூட்டத்தை கூட்டவே மாட்டேன் என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்.

தனது சொந்த சோகத்தைக் கூட வெளியுலகிற்கு தெரிவிக்காமல் குமுறி குமுறி அழவேண்டிய இந்தக் காட்சி எதை நினைவுபடுத்துகிறது?

எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!

41
எங்கேயும் எப்போதும் : ஆபத்தான அழுகை !

எங்கேயும் எப்போதும் : ஆபத்தான அழுகை !

போராடுவதற்கு போக்கற்று அரற்றுவதையே விதியாகக் கொண்ட நாடு இது. அழுவதற்கென்றே கதைகளை உருவாக்கிய மண்ணிது. நல்லதங்காளோ, அரிச்சந்திரனது மயான காண்டமோ, பாசமலரோ, பாவமன்னிப்போ எல்லாம் கிராமத்து திடலிலோ இல்லை மண் தரையுள்ள டூரிங் டாக்கிசிலோ முடிந்து போன விசயங்கள் என்று நினைத்திருந்தால் உங்கள் முடிவுகளை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! எஸ்க்கலேட்டர் வசதி கொண்ட மல்டிபிளக்ஸ் அரங்குகளில் கூட அந்த கண்ணீர்க் கதைகள் தொடருகின்றன என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?

சிறுவயதில் கேட்ட ஆகாசவாணியின் பிரச்சாரக் கதைகளும், பிலிம்ஸ் டிவிஷனின் 20 அம்சத்திட்டக் கதைகளும் தரும் ஆயாசத்தை இந்த படமும் தருகிறது. பிலிம்ஸ் டவிஷன் படம் போட்ட பிறகு “யோவ் ஆப்பரேட்டர் படத்த போடுய்யா” என்று வரும் கூச்சல்கள் ஒரு கனவு போல இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் இரசிகர்களால் ஏகமனதாக புறக்கணிக்கப்பட்ட அதே பிலிம்ஸ் டவிஷன் உணர்ச்சியை இன்றும் ரசிக்கப்படுகிறது என்ற உண்மை கொஞ்சம் அலுப்பாகவும் இருக்கிறது. காலம் மாறினாலும் நம் மக்களது இரசனை இன்னும் மாறவில்லையே?

திரைப்பட விமரிசனம் எழுதும்போது முதலிலேயே, முன்னுரையிலேயே  அதன் சாரத்தை, ஒன்லைனை சொல்லுவது வழக்கமில்லை. சொல்லிவிட்டால் ஆர்வமாக வருபவர்களது வேகம் பட்டென தணிந்து ஸ்க்ரோல் செய்து போய் விடுவார்கள். ஆனாலும் அடக்கமாட்டாமல் இங்கே முதலிலேயே அதை சொல்ல வைத்திருப்பது நம் குற்றமல்ல, படத்தின் குற்றம்.

இந்தப் படத்தில் இரண்டு விசயங்களிருக்கின்றன. ஒன்று கொடூரமான விபத்து, மற்றொன்று இனிமையான காதல். இனிமையான காதலில் இரண்டு காதல் கதைகள் இருக்கின்றன. ஒன்று பி சென்டருக்கான சிறு நகரத்து காதல். மற்றொன்று ஏ சென்டருக்கான ஐ.டி துறை காதல். அதே நேரம் பி சென்டரின் காதல் முற்றிலும் பி சென்டருக்குரியதல்ல. அது ஏ சென்டரை நோக்கி மாறும் விசயங்களுடன் வருகிறது. அதாவது ஏ சென்டருக்கான அழகியல் மதிப்பீடுகளுடன்.

இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து ஒரு உடன்பாட்டுப் பொருளாவது போல இங்கே காதலும், விபத்தும் சேர்ந்து உங்களிடமிருந்து கட்டற்ற கண்ணீரை வரவழைக்கிறது. நேரில் பார்க்கும் விபத்தென்றால் நாம் நிச்சயம் வருந்துவோம் என்றாலும் அதில் நமக்குத் தெரிந்த காதல் ஜோடிகள், அதுவும் அவர்களது காவியமான காதல் கதைகளின் நினைவுகளோடு வருமென்றால் நாம் யாரும் கோராமலேயே கதறி அழுவோம்.

நாளிதழ்களில் மற்றுமொரு செய்தியாக மறையும் ஒரு விபத்து போன்றுதான் இது இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு விபத்தை பார்த்து நாம் அழவேண்டுமென்று நினைக்கும் இயக்குநர் அந்த உடனடி விளைவைத் தாண்டி விபத்தின் சமூகப் பரிமாணத்தை அறிந்தவராகவோ, இல்லை அது குறித்து கவலைப்பட்டவராகவோ இந்தக் கதையில் தென்படவில்லை.

ஒரு மாபெரும் வரலாற்று சம்பவத்தையோ இல்லை ஒரு மனதை வலிக்கச் செய்யும் பெரிய விபத்தோ இரண்டையும் ஒரு சில தனிநபர்களது செயலாக மட்டும் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. தலைக்கேற்ற தொப்பியைத்தான் தேட வேண்டுமே ஒழிய தொப்பிக்காக தலையை வெட்டினால் முண்டத்திற்கான சவப்பெட்டிதான் தேவைப்படும், தொப்பி அல்ல. விபத்து குறித்த இந்தப்படத்தில் இத்தகைய விபத்து தெரிந்தே நடந்திருக்கிறது. அது இயக்குநரின் கருத்தால் விளைந்த விபத்து.

____________________________________________________________________________

இந்தத் திரைப்படம் குறித்து விமரிசனம் எழுதியிருக்கும் பதிவர்கள் பலருக்கும் கூட அந்த விபத்து நடந்திருக்கிறது. சாலை விதிகளை மதிப்போம், ஓட்டும் போது செல்பேசியில் பேசாதிருப்போம், மது அருந்தாமல் ஓட்டுவோம், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவோம், ஓட்டுநர்களுக்கு இந்தப் படத்தை விசேடமாக திரையிட்டு காட்ட வேண்டும் என்பதாய் அவை குவிகின்றன. இவையெதுவும் தவறல்ல. ஆனால் உடன் தெரியும் இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறுகளல்ல.

வாகனத்தை ஓட்டும் அனைவரும் பொதுவில் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது எச்சரிக்கையின் அளவை தீர்மானிப்பது பணிச்சூழல், குடும்பச் சூழல் குறித்த பிரச்சினைகள். பேருந்து ஓட்டுநர்களும், லாரி ஓட்டுநர்களும் எச்சரிக்கையாக இருப்பதால்தான் தமிழகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் இருந்தும் இலட்சக்கணக்கான விபத்துக்கள் நடப்பதில்லை. நடக்கும் ஒரு சிலவற்றுக்கு கண நேர, திட்டமிடாத, எதிர்பாராத செயல்கள் காரணமென்றாலும் ஒரு ஓட்டுநரின் எச்சரிக்கை அளவு ஏன் மீறப்பட்டது என்பது குறித்து நாம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் இந்தப்படத்தின் விளைவாய் வரும் மொக்கை மனிதாபிமானத்தில் சரணடைந்து உண்மையை தொலைத்துவிடுவோம்.

படத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ஆம்னி பேருந்தும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தும் மோதிக் கொள்கின்றன. இவை ஏன் மோதிக்கொண்டன, யார் காரணம் என்பது குறித்து படத்தில் தெளவில்லை என்றாலும் அது தேவையுமில்லை. ஆனால் என்னவெல்லாம் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது குறித்து இந்தத் திரைக்கதை சுட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து கோரக் காட்சிகளை வைத்து விபத்து குறித்து ஒரு பய உணர்வை மட்டும் இந்தப்படம் ஏற்படுத்துகிறது.

அரசுப் பேருந்துகள் போதுமான பராமரிப்பில் இல்லை. தனியார் பேருந்துகளை ஊக்குவிக்கும் தனியார்மயக் கொள்கை காரணமாக வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் அவை நலிந்துப் போக விடப்படுகின்றன. இரவு பத்து மணிக்கு கோயம்பேடு சென்றால் வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகளை நிறுத்துவதற்கே வழியில்லாமல் நேரக் கண்காணிப்பாளரும், ஓட்டுநர்-நடத்துநர்களும் திண்டாடுவதை பார்க்கலாம். அல்ட்ரா டீலக்ஸ், டீலக்ஸ் என்று பெயர்களை தாங்கியிருக்கும் பேருந்துகள் அந்த பெயர்களுக்குரிய வசதிகள் இல்லாமல் இருப்பதும், அது குறித்து கேட்கும் மக்களிடம் நடத்துநர்கள் பேசி அலுத்துப் போவதும் அன்றாடம் நடக்கும் காட்சிகள்.

பேருந்துகளின் வெளிப்புற கன்டிஷன்களே இப்படி இருக்கும் போது அதன் உள்கட்டுமான கன்டிஷன்கள் எப்படி இருக்குமென்று யூகித்துக் கொள்ளலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராஜபாட்டை போட்டுக் கொடுக்கும் அரசு ஒரு விரைவுப் பேருந்து நிறுவனத்தை நல்லமுறையில் நடத்துவது முடியாத ஒன்றா என்ன?

அரசால் திட்டமிட்டே உருவாக்கப்படும் இந்தச் சூழலை தனியார் பேருந்து முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு வழியின்றி நடுத்தர வர்க்கமும் இங்கே அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கிறது. தனியார் பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது உண்மையென்றாலும் அதன் ஓட்டுநர்கள் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள். அரசு ஓட்டுநர்களை விட மிகக் குறைந்த சம்பளம். மட்டுமல்ல, நிறுவனத்தின் பெயரை காப்பாற்றும் விதமாக குறிப்பிட்ட நேரத்தில், அதி வேகத்தில் பேருந்துகளை ஓட்டி சென்று இலக்கை அடைய வேண்டிய நிர்ப்பந்தம். அதன் கோரமுகத்தை கே.பி.என் விபத்தில் பார்த்திருக்கிறோம். இப்படி அனைவரும் அறிந்த விசயங்கள் என்றாலும் இந்தப் படம் எதனையும் கோடிட்டுக்கூட காட்டவில்லை. மாறாக படத்தில் இரு பேருந்துகள் ஓடுவதை பயமுறுத்தும் கோணங்களில், காட்சிகளில், இசையில் காட்டுகிறார்கள். கருத்து இல்லாத அந்தக் காட்சிகள் மூலம் விபத்து குறித்த ஒரு காரணமற்ற பயம் மட்டுமே தோன்ற முடியும்.

படத்தில் அரசுப் பேருந்து பஞ்சர் ஆவதும், அதன் ஓட்டுநர் அதிவேகமாக சாலையை விட்டிறங்கி ஓட்டுவதும் வருகிறது. அரசுப் பேருந்து என்றாலே மெதுவாக சென்று ஊரை தாமதமாக அடையும் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு. இங்கே ஊரறிந்த எதார்த்தத்தைக்கூட கதைக்காக சாகடித்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் பராமரிப்பில்லாத அரசுப் பேருந்து, பணிச்சுமையில் இருக்கும் தனியார் ஓட்டுநர்கள் என்பதைத் தாண்டி இந்த விபத்தில் வேறு எதைக்காட்டினாலும் அது பொருத்தமற்றது. ஆனால் இயக்குநர் அப்படி எதுவும் காட்டவில்லை.

ஃபைனல் டெஸ்டினேஷன் வரிசைப் படங்களில் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் விபத்தும், மரணமும் நடக்கும் என்று மிரட்டுவார்கள். அது பாதுகாப்பாக வாழும் மேற்குல மக்களை வேறு எப்படியும் மிரட்ட முடியாது என்ற எதார்த்தத்தோடு அபத்தமாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லா வகை அபாயங்களோடும் வாழும் நமது நாடுகளில் விபத்து என்பது சமூக வகைப்பட்டதாக, நிறுவன ரீதியாக இருக்கிறது. அதை வெறுமனே மொக்கை உபதேசங்களோடு கடந்துவிடலாம் என்பது இயக்குநரது துணிபு.

ஒருவேளை விபத்திற்காக காதல் கதை என்று அமைத்திருந்தால் அப்படி கொஞ்சம் ஏதாவது வந்திருக்கும். இங்கே காதலுக்காக விபத்து என்று போவதால் எதுவும் சொல்லிக்கொள்ளுமளவு வரவில்லை. அதனால்தான் ஆரம்பத்திலேயே விபத்து என்று காட்டியிருந்தாலும், படத்தின் முடிவை ரசிகர்கள் ஓரளவு ஊகிக்க முடியும் என்றிருந்தாலும் அது அவர்களது ரசனையை பாதிக்காது என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். அதில் அவர் சோடை போகவில்லை என்பதற்கு காரணம் இந்தப்படத்தை தூக்கி நிற்பது விபத்து போலத் தோன்றினாலும் அது நிற்பது உண்மையில் காதல் குறித்த சித்திரத்தில்தான். காதல் மயக்கத்தில் விபத்தின் வேர் மறைந்து போவது பார்வையாளர்கள் குறித்து இயக்குநருக்குள்ள மலிவான நம்பிக்கையைக் காட்டுகிறது.

அதிலும் ஒரு பேருந்தில் ஒரு இளம் ஜோடி, சமீபத்தில் திருமணமான ஜோடி வருகிறது. அதில் மணமகன் கொடூரமாக கொல்லப்படும் காட்சியை இடையில் காட்டி விட்டு பின்னர் பேருந்தில் அவர் மணமகளைக் கொஞ்சும் காட்சி ஒன்றே இயக்குநரது தரத்தை காட்டுகிறது. இது சென்டரல் ஸ்டேஷனில் கையை கீறி ரத்தத்தை வரவழைத்து உதவி கேட்கும் அதிரடி பிச்சைக்காரர்களின் ரசனைக்கொப்பானதாக இருக்கிறது. ஆனால் இந்த மலிவான உத்தியைக்கூட ஆழமான படிமமாக உணரும் நமது பதிவர்கள் இருக்கும் போது இயக்குநர் சரவணனை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியுமா என்ன?

காதலையும், விபத்தையும் ‘பொருத்தமாக’ இணைத்து வெற்றியடைந்த படம் டைட்டானிக். டைட்டானிக்கில் கூட இறுதிக்காட்சிகளில் சாதாரண மக்களெல்லாம் உயிர் காக்கும் படகுகளில் ஏற முடியாமல் அலறும் காட்சிகள் ஒரு பின்னணியாக மட்டும் வரும். படத்தை பார்க்கும் இரசிக மனமோ காதலர்கள் எப்படியாவது பிழைக்க மாட்டார்களா என்று ஏங்கும். இங்கும் அதே கதைதான். அஞ்சலி – ஜெய், அனன்யா – சரவ் ஜோடிகளின் காதல் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் என்ன ஆனார்கள், அவர்களது குடும்பத்தினர் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்கு வேண்டுமானால் இயக்குநர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நாமெல்லாம் என்றாவது ஒரு நாள் பயணம் போகிறோம். ஆனால் ஓட்டுநர்களுக்கு அது அன்றாட பிழைப்பாக இருக்கிறது என்ற முறையில் கூட அவர்கள் நினைக்கப்படவில்லை. ஒரு வேளை அவர்கள்தான் இந்தப் படத்தின் வில்லன்கள் என்று இயக்குநர் கருதியிருப்பார் போலும். ஒருக்கால் இந்த இயக்குநர் நாளையே கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விபத்தையும் காதலையும் பிசைந்து ஒரு கதை செய்தால் வில்லனாக யாரை காட்டுவார்? ஒரு சுவிட்ச்சை போட மறந்த தொழிலாளிதான் அந்த வில்லன் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா என்ன?

_____________________________________________________________________________________

படத்தில் வரும் காதல் காட்சிகள் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

காதலன் ஜெய்யை அதிரடியாக மிரட்டி காதலிக்கும் அஞ்சலியை எடுத்துக் கொள்வோம். இதையெல்லாம்  “ஓடிப்போயிடலாமா” என பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரேயே மணிரத்தினம் எடுத்துவிட்டாலும், இன்றும் அதை இரசிப்பதற்கு காரணம் என்ன?

ஆணுக்கு அடங்கியவள் பெண், அவனுக்குரிய பணிவிடைகள் செய்வது பெண் என்றாலும் அந்தக்கால ஆனந்த விகடனில் கணவன் துணி துவைப்பதும், சமையல் செய்வதும், மனைவி பூரிக்கட்டையால் கணவனை தாக்குவதான ஜோக்குகள் வரும். மனைவியின் பணிவிடைகளில் சோம்பிக் கிடக்கும் கணவன்கள் அதைப் படித்து சிரிப்பார்கள். அதுதான் இது. அரதப்பழைய விகடன் முதல் அதி நவீன தமிழ் டவிட்டர்- பஸ்ஸர்களின் டைம்லன் வரை இதுதான் ஓடுகிறது. ஒரு பொதுவான சமூக யதார்த்தத்தில் ஆண்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான் என்றாலும் கதையில் அதற்கு நேரெதிராக வரும் போது தீர்மானிக்கும் அந்த ஆண் ரசிகர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இது சிரிப்பதற்குரிய ஒன்றாக இருப்பதினாலேயே நிஜத்தில் வாய்ப்பில்லாததாக ஒன்றாக இருக்கிறது. நிஜத்தை காட்டியிருக்கும் பட்சத்தில் அங்கே சிரிப்பதற்கு ஏதுமில்லை. இந்த முரண் உங்களுக்குப் புரிகிறதா?

மற்றுமொரு சான்றைப் பார்ப்போம். படத்தில் இரண்டு ஜோடிகளின் ‘கற்பை’யும், ஒழுக்கத்தையும் அழுத்திக் காட்டுவதற்கு சில காட்சிகள் வருகின்றன. நாயகன் ஜெய், நாயகி அணியும் ஆடையின் வண்ணத்தைப் பார்த்து அதே கலரில் தினமும் சட்டை அணிகிறார். அவரோடு பணி புரியும் தொழிலாளி இரண்டு கலர் சட்டைகளை மாற்றி மாற்றி அணிகிறார். காரணம் கேட்டால் அவர் இரண்டு தெருவில் இரண்டு பிகர்களை சைட் அடிக்கிறார்.

ஐ.டி துறை நாயகனான சரவ், பொறியியல் முடித்திருக்கும் அனன்யாவை விரும்புகிறார். இவர்கள் இருவரும் கம்பெனி பேருந்தில் பயணிக்கும் போது ஒரு பெண் சரவை இரண்டு ஆண்டுகள் துரத்திக் காதலித்ததாகவும், அவர் ஏற்கவில்லை எனவும், பிறகு ஒரு அப்பாவியை திருமணம் செய்திருப்பதாக தாலியை காட்டுகிறார். பேருந்தின் பின் சீட்டில் இருக்கும் ஒரு இளைஞன்தான் அந்த அப்பாவி என்று சொல்கிறார்.

நகரப் பேருந்தில் அனன்யாவின் அருகில் பயணிக்கும் ஒரு நகரத்துப் பெண் இரண்டு காதலர்களோடு பேசுகிறாள். மற்றவர் லைனில் வந்தால் அது அப்பா என்று இருவரிடமும் மாறி மாறி பேசுகிறாள். இந்த மூன்று காட்சிகளுக்கும் திரையரங்கில் கைதட்டல் தூள் கிளப்புகிறது. காதல் ஜோடிகளின் ஒழுக்கத்தையும், ‘கற்பையும்’ ஜாக்கி வைத்து தூக்குவதற்காக இந்தக்காட்சிகள் திட்டமிட்ட முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

தங்களையும் அந்த நாயகர்கள் போல கருதிக் கொள்ளும் இரசிகர்கள் இந்த காட்சிகளுக்கு சிரிப்பதன் காரணம், தன்னைத் தவிர மற்றவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதால். ஆனால் எல்லோரும் தானென்று ஆனால் யார்தான் அந்த மற்றவர்கள்? ஆனால் நடப்பில் மற்றவர்கள்தான் பெரும்பான்மை எனும் போது அது இங்கே விமரிசனமாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி விமரிசனத்திற்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டுமென்றால் அது படத்தின் மையமான பாத்திரங்களோடு இருக்க வேண்டும். ஆனால் அது துணைப் பாத்திரங்களோடு கேலிக்குரியதாக ஆக்கப்படும் போது சுயவிமரிசனம் மறுக்கப்பட்டு ஆழ்மனதில் புதையுண்டிருக்கும் கீழ்மைகள் வெறும் கேலிப்பொருளாய் பார்க்ப்படுகின்றன. இந்த முரணை அறிந்து கொள்ள முடிகிறதா?

படத்தில் அஞ்சலி அநியாயத்திற்கு பிரச்சாரம் செய்கிறார். சொல்லப் போனால் அஞ்சலியின் பாத்திரச் சித்தரிப்பு அண்ணா ஹாசாரே டைப் போலித்தனத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. இறந்த பிறகு உடல் பாகங்களை தானம் செய்ய வேண்டும் என்று கையெழுத்து வாங்கும் அஞ்சலி இறுதிக் காட்சியில் அழுது கொண்டே காதலனது பாகங்களை தானமாக எடுக்க வேண்டுமென்று அரசு மருத்தவரிடம் கூறுவார். இப்படி தானமாகப் பெறப்படும் பாகங்கள் எவையும் ஏழைகளுக்காக பொருத்தப்படுவதில்லை. அவை அப்பல்லோவுக்கு சென்று பணக்காரர்களுக்கோ, வெளிநாட்டவருக்கோதான் பொருத்தப்படுகின்றன. இதற்காகவே உடல் தானம் குறித்த விழிப்புணர்வு வளரவேண்டும் என்று அப்பல்லோ முதலாளி ரெட்டி பேசியது குறித்து வினவில் முன்னர் எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது.

இருக்கட்டும், இத்தகைய மனிதாபிமானியான அஞ்சலி தனது காதலனை வம்படியாக கூட்டிச் சென்று பணக்காரர்களது கடையில் 6000 ரூபாய்க்கு துணி எடுப்பதும், மேட்டுக்குடியினர் செல்லும் காபிஷாப்புகளுக்கு சென்று 160 ரூபாய்க்கு காபி குடிப்பதும், நாற்பது ரூபாயை டிப்ஸாக கொடுப்பதும், அதில் நாயகனது அறியாமையை கேலி செய்வதும் என்ன விதத்தில் பொருத்தம்? நியாயமாக தமிழ்நாட்டு காதலர்களுக்கு இந்த முதலாளித்துவ இடங்கள் தேவையில்லை என்ற விதத்தில் கேலி செய்யப்பட்டிருந்தால் நாம் பெருமைப்படலாம். ஆனால் இந்த நுகர்வுக் கலாச்சார வக்கிரங்களுக்கு நாம் அறிமுகமாகவில்லை என்று இயக்குநர் செல்லமாக கிள்ளிச் சொல்லுகிறார். அதோடு அஞ்சலியின் உடல்தானம் குறித்த பிரச்சாரம் சேரும் போது அண்ணா ஹசாரே நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதல் குறித்த பிளாஷ் ஃபேக் நினைவுகளில் காதலின் சமூக யதார்த்தமும், அதன் பிரச்சினைகளும் மருந்துக்குக் கூட வரவில்லை. அந்த வகையில் உண்மையான காதல் படங்கள் எதுவும் தமிழில் இப்போதைக்கு வராது என்றுதான் தோன்றுகிறது. காதல் தோன்றும் தருணங்களை விதம் விதமாக ஆனால் அரைத்த் மாவாக காட்டும் நமது இயக்குநர்கள் காதல் தோன்றியதும் அது நிறைவேற எத்தனிக்கும் போராட்டங்களை, சமரசங்களை, குழப்பங்களை கிஞ்சித்தும் அறிந்தவர்கள் அல்லர்.

______________________________________________________

இயக்குநர் சரவணன் இந்தக் கதையை கூறியதும் தயாரிப்பாளர் முருகதாஸ் ஆடிப்போய் விட்டாராம். சரிதான். அதனால்தான் ஹாலிவுட் நிறுவனமான முர்டோச்சின் பாக்ஸ் நிறுவனமும் இதில் கூட்டுத் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறது. டைட்டானிக் அளவு செலவில்லாமலேயே இரண்டு பேருந்துகளை மோத வைத்து தமிழகத்தை அள்ளிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். இனி இந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்றால் நாம் மகிழ்வதற்கு ஏதுமில்லை.

திருமணம் செய்த இரசிகர்கள் இனி தினுசு தினுசாகக் காதலிக்க முடியாது என்பதால் விபத்தையும், திருமணம் செய்யாத இரசிகர்கள் விபத்தை ஒதுக்கி வைத்து காதலை மட்டும் நினைத்து திரையரங்கை விட்டு அகலுவார்கள். இதைத் தவிர இந்தப்படம் எதையும் ஏற்படுத்தாது. அப்படி ஏற்படுத்தியாகக் கூறப்படும் மொக்கை மனிதாபிமானங்கள் அனைத்தையும் இந்தத் திரைப்படம்தான் முதலில் கண்டறித்து கூறியதாக பெருமைப்படவும் முடியாது.

நல்லதங்காள் கதையை உற்பத்தி செய்த மண்ணிலிருந்து “எங்கேயும் எப்போதும்” போன்ற கதைகள் வந்து கொண்டேதான் இருக்கும். சமூக வாழ்க்கையில் கோபம் என்ற உணர்ச்சி பிறந்து செயலாக முடியாத நாட்டில் கண்ணீர், நிறையக் கண்ணீர் உதித்துக் கொண்டுதான் இருக்கும். சரிதானே?

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!

10
முர்டோச்சின் ஊடக ஏகபோகம்
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

டந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவின் ‘ஊடகப்பரப்பு’ பிரம்மாண்டமான மாறுதல்களைப் பார்த்திருக்கிறது. ஊடகப் பரப்பு என்பது அமெரிக்காவில் வசிக்கும் அர்ஜூன் அப்பாதுரை என்ற இந்திய ஆராய்ச்சியாளரால் முதலில் பயன்படுத்தப்பட்டது. காட்சி ஊடகங்கள் உலகில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், உலகளாவிய பண்பாட்டுப் பாய்ச்சல்களில் பொதுஊடகங்களின் பங்கையும் விவரிக்கவும் பொருத்தவும் பயன்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை வலிமைப்படுத்துவதற்கு ஊடகங்களில் பெரும்பகுதியினர் ஆற்றி வரும் பங்கு பாரட்டப்பட வேண்டிய அதே நேரத்தில் சில செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஓடைகள், இணையத் தளங்கள் செயல்படும் முறைகளில் பல மோசமான போக்குகளையும் பார்க்க முடிகிறது. இவற்றில் “பணத்துக்கு செய்தி”யும் பிற வெளிப்படையான வணிகப் போக்குகளும் அடங்கும்.

1990களில் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு புதிய தகவல் தொழில்நுட்பங்களும் விளம்பரதாரர்களுக்கு ஆதாயம் கொடுக்கும் இலக்காக மாறிய வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுக் கலாச்சரமும் ஊடகங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளரச்சியடைய வழிவகுத்தன.

உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிடும் போது இந்தியாவின் செய்தித் தாள்கள்/பத்திரிகைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்திய செய்தித் தாள்கள் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி எகனாமிஸ்ட் தகவலின் படி, இந்தியா இப்போது உலகின் அதிவேகமாக வளரும், மிகப்பெரிய செய்தித் தாள்களின் சந்தையாக இருக்கிறது. விலைக்கு விற்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கையில் சீனாவை முந்தி 11 கோடி பிரதிகள் தின விற்பனையைக் கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி ஓடைகளின் எண்ணிக்கை வளர்ச்சி பல மடங்காக அதிகரித்திருக்கிறது. 1991ல் ஒரே ஒரு பொதுத்துறை ஒளிபரப்பாளராக தூர்தர்ஷன் இருந்தது. இப்போது 600க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஓடைகளுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நாட்டிலிருந்து ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருகிகறது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பும் வானொலி நிலையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இப்போது இருக்கும் 250க்கும் அதிகமான பண்பலை வானொலிகளின் எண்ணிக்கை இன்னும் 5 ஆண்டுகளில் 1,200 ஆக உயரும். இந்திய பயனாளர்களுக்கென இயங்கும் இணைய தளங்களின் எண்ணிக்கையை யாரும் கணிக்கவில்லை.

ஆனால், எண்ணிக்கை அதிகரிப்பு தர அதிகரிப்பாக மாறவில்லை. முதலாளித்துவ அமைப்பின் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு விரோதமாக, ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி  வெளிப்படையாக தரக் குறைவுக்கு வழிவகுத்திருக்கிறது. பார்வையாளர்களைக் கைப்பற்றும் போட்டியின் கூடவே உள்ளடக்கத்தை ‘சிறுமைப்படுத்தும்’ போக்கு வளர்ந்தது. தொலைக்காட்சி ஓடைகள் மிகவும் பொருத்தமற்ற, பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனார்கள். 1991ஆம் ஆண்டில் வெளிநாட்டு மூலதனத்தை பெறும் விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு முதலில் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த பன்னாட்டு ஊடக நிறுவனங்களின் முதல் வரிசையில் இருந்தது பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் கண் வைத்துக் கொண்டிருந்த ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் (சாட்டிலைட் டெலிவிஷன் ஆசிய மண்டலம்) குழுமமும் ஒன்றாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

முர்டோக் நிலவரங்களை தெளிவாக புரிந்து கொண்டவர். அவரது இந்திய பேரரசு இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வினியோகத்திலிருந்து செய்தி, பதிப்பித்தல் மற்றும் திரைப்படம் வரை பரந்திருக்கிறது. ஸ்டார் இந்தியா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய (வருமான அடிப்படையில்) ஊடக பெருநிறுனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அது 8 மொழிகளில் செயல்படும் 32 ஓடைகளில் இருப்பதில் அதிகமான பார்வையாளர்களைக் (வாரத்துக்கு 17 கோடி பார்வையாளர்கள்) கொண்டிருப்பதாக சொல்கிறது. இந்த ஓடைகள் ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஒன், ஸ்டார் கோல்ட், சேனல் வி, ஸ்டார் ஜல்சா, ஸ்டார் ப்ரவாஸ், ஸ்டார் வேர்ல்ட், ஸ்டார் மூவிஸ், ஸ்டார் உத்சவ் மற்றும் கூட்டு நிறுவனங்களாக ஏசியாநெட், ஸ்கை நியூஸ், FX, பாக்ஸ் கிரைம், ஸ்டார் விஜய், ஸ்டார் நியூஸ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிற. ஸ்டார் குழுமம் டாடா குழுமத்துடன் கூட்டு வைத்து ‘நேராக-வீட்டுக்கு’ என்ற டிடிஎச் வினியோக சேவையையும் வழங்கி வருகிறது.

இந்திய செயல்பாடுகள்

கேபிசி
"யார் மில்லியனர் ஆக விரும்புகிறீர்கள்" என்ற பிரிட்டிஷ் நிகழ்ச்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு புகழ் பெற்ற "யார் கோடீஸ்வரன் ஆவார்" என்ற விளையாட்டு நிகழ்ச்சியை, தான் ஸ்டார் பிளஸ் சேனலில் நடத்த முடிவு செய்திருப்பதாக 2005ம் ஆண்டு புது தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கிறார், திரைப்பட நடிகர் ஷாருக்கான்.

நியூஸ் கார்ப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் “அடுத்த தலைமுறை” வாய்ப்பு என்று முர்டோச்சினாலேயே குறிப்பிடப்பட்டது. முர்டோச்சின் இந்திய முயற்சிகளின் வெற்றி கெட்டிக்காரத்தனமான வணிக மற்றும் மேற்கத்திய முறைகளை உள்ளூர் அணுகுமுறையுடன் செயல்படுத்தியதை நம்பியிருக்கிறது. அவர்தான் இந்தியாவின் முதன் முதலில் ஒரு இசைத் தொலைக்காட்சி (சேனல் வி), ஒரு 24×7 செய்தி தொலைக்காட்சி (ஸ்டார் நியூஸ்), பன்னாட்டு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றின் வெற்றிகரமான இந்திய வடிவம் (“கோடீஸ்வரன் ஆகப்போவது யார்”, இங்கிலாந்தின் “மில்லியனர் ஆக விரும்புவது யார்” என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) ஆகியவற்றை உருவாக்கியவர். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு தகவல் தொடர்பு துறை பேராசிரியாராக இருக்கும் தயா கிஷன், ‘முர்டோக்மயமாக்கப்படும்’ இந்திய ஊடகம் என்பதை “ஊடக வலிமை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வினியோக அமைப்புகளையும், உலகளாவிய நிகழ்ச்சி தயாரிப்பு பின்னல்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பன்னாட்டு, பல்ஊடக தனியார் பெருநிறுவனங்கள் கைக்குப் போவதாக” வரையறுக்கிறார்.

பெரு நிறுவன குழுமங்களின் கையில் ஊடக உடைமை குவிதல்; விளம்பர வருமானத்தை நம்பி இருப்பதால் மதிப்பீடுகளுக்காக அதிகரித்துக் கொண்டே போகும் போட்டி; அடிக்கடி தெளிவற்று வரையறுக்கப்பட்ட “உடனடி செய்தி” மீதான மிகையான சார்புநிலை; “எக்ஸ்குளூசிவ்” என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், “எதுவாயிருந்தாலும் சரி” என்ற செயல்உத்தி; வசதிபடைத்த நடுத்தர மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்தல் (விளம்பரதாரர்களுக்கு அதிக ஆதாயம் தரும் பிரிவினர்); செய்தி உள்ளடக்கத்தைக் கவர்ச்சி மயமாக்குதல், மீச்சிறு பொது அறிவு நிலைக்கு பொருந்தும்படி செய்தி அளித்தல்; விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் இடையிலான நெருக்கமான பொருத்தமற்ற உறவு; செய்தியை விலைபொருளாக மாற்றுவது: இவை அனைத்துமே இந்திய ஊடகத்துறையின் பெரும்பகுதிகளில் காணக் கிடைக்கும் முர்டோச் மயமாக்கலின் வெளிப்பாடுகள்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் முதல் டேப்ளாய்டுகளில் ஒன்றான த ஹெரால்டு செய்தித்தாளைத் தொடங்கிய ஜேம்ஸ் பென்னட் எனபவர், “கற்பிப்பதற்காக இல்லை, திடுக்கிட வைப்பதற்காகத்தான் செய்தித் தாள்கள்” என்று சொல்லியிருந்தார். துஸ்சு மற்றும் பிறரின் கருத்துப்படி, ஸ்டார் குழுமத்தின் ஓடைகள் பரபரப்பானதாகவும், நகர, மேற்கத்திய, நுகர்வுக் கலச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவும் இருக்கும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் முன்னணி வகித்தன. குறிப்பாக பாலியல் உள்ளடக்கத்தையும் பிரபலங்களை துதி பாடும் கலாச்சாரத்தையும் இந்தியர்களைப் பிடித்து ஆட்டுவதாகச் சொல்லப்படும் மூன்று Cகளான குற்றம், கிரிக்கெட், திரைப்படம் இவற்றையும் குறி வைத்தார்கள். கூடவே, இந்தியாவின் பெரும்பாலான செய்தித்தாள்கள் வெளிப்படையான பக்கசார்புடன் செயல்படுகின்றன. முர்டோச் நடத்தும் பாக்ஸ் நியூஸ் மற்றும் பிற நியூஸ் கார்ப் ஊடக அமைப்புகளைப் போன்றே வெளிப்படையாக அடாவடியான நிலைப்பாடுகளை எடுக்கின்றன.

ஸ்டார் செய்தி நிகழ்ச்சி “சன்சனி” (இந்தியில் பரபரப்பு என்று பொருள்) நகரக் குற்றங்கள், பாலியல் வன்முறை, கொலை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. அதே போன்று “ரெட் அலெர்ட்” என்ற நிகழ்ச்சி, குற்றங்களை காவல் துறை கையாளுவதைப் பற்றி டேப்ளாய்டுகளின் பாணியில் உண்மை விபரங்களை பின்தள்ளி பேசுகின்றது. செய்திகளை நாடகத்தனமாகவும் பரபரப்பாகவும் மாற்றுவதே நோக்கமாக இருக்கிறது. பெரும்பாலும், ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் சித்தரிக்கப்பட்ட குற்ற நிகழ்ச்சிகளுடன் பொருத்திக் காட்டும் உத்தியையும் பயன்படுத்துகிறார்கள். தி இந்துவின் தலைமை ஆசிரியர் என் ராம் அண்மை காலங்களில் ஊடக செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி வருத்தப்பட்டு சொல்லும் போது “இது ஒரு கவலைப்படத்தக்க போக்கு” என்று குறிப்பிட்டார். “எங்கும் புகுந்து விடும் உளவு பார்க்கும் ஒளிப்படக்கருவிகள் துப்பறியும் ஊடக உத்திக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்திருக்கின்றன”

பிரபலமானவர்களுக்கும் அவர்களின் பாலியல் வாழ்க்கைக்கும் பரவலாக இடம் கொடுக்கும் போக்கு ஸ்டார் நியூசில் மட்டும் இல்லை. ஊடக விமர்சகர் சேவந்தி நீனன் சொல்வது போல “திரு எம் தயவால் நாம் எப்போதையும் விட அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறோம்” “அவரது நிகழ்ச்சிகள் மேம்படுத்துவையாகவோ, அறிவூட்டுபவையாகவோ இல்லை என்பது பொருட்டே இல்லை. வேறு யாருடையதும் அப்படி இல்லைதான்”

உதாரணமாக டிவி டுடே குழுமத்தின் ஆஜ் தக் நிறுவனம் “கபரேன் படாபட்” (உடனடி செய்திகள்) என்ற முழக்கத்துடன் தேஜ் (வேகம் என்று பொருள்) என்ற ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தது. இந்த தொலைக்காட்சி “நீளமான விவாதங்கள், தேவையற்ற அலசல்களில்” ஈடுபடாது என்று உறுதியளித்தார் அதன் தலைமை அலுவலர் அரூண் பூரி. விற்பனை/பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதையே வணிக முறையாக கொண்டிருக்கும் ஊடக நிறுவனத்திற்கு செய்தியின் திடுக்கிடச் செய்யும் மதிப்புதான் அதிமுக்கியமாகப் போய் விடுகிறது. செய்திகளை முந்தித் தருவதற்காக கழுத்தை அறுக்கும் உத்திகளைப் பயன்படுத்தும் இந்திய ஊடகத் துறையின் சில பிரிவினர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஜூன் 2007-ல் ஊடகங்களை காட்டு மிருகமாக உருவகித்து, பத்திரிகையாளர்களை கட்டுப்பாடற்ற பசியுடன் அலையும் விலங்குகளுடன் ஒப்பிட்டதை நினைவூட்டுகிறார்கள்.

நவம்பர் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிய ஊடக செய்திகள் இது போன்ற பல பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. அதிகமாக திடுக்கிட வைக்கும் காட்சிகளையும் ஒலித்துணுக்குகளையும் தேடும் இடிபிடியில், மிக மோசமான உணர்வுகளை மதிக்காத முறைகள் பின்பற்றப்பட்டன, பல நேரங்களில் சரிபாரக்கப்படாத தகவல்கள் உண்மை என வழங்கப்பட்டன. இந்திய ஊடகங்களின் ஒரு பகுதியினர் தர்மத்துக்கு மாறாக நடந்து கொண்டதற்கு இன்னொரு வெளிப்படையான உதாரணம் 2008 மே மாதம் நடந்த 14 வயதான் ஆரூஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி செய்தி அளித்த முறைகளும், அதை கதை போல மாற்றுவதற்கு செய்த முயற்சிகளும் ஆகும். ஊடக நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகரித்து வரும் விளம்பரதாரர்களின் செல்வாக்கின் விளைவாக, விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் நடுவில் ஒரு காலத்தில் இருந்த சீனப் பெருஞ்சுவர் உடைவதைப் பார்க்க முடிகிறது. 2003-ல், பென்னட் கோல்மன் நிறுவனம் (பிசிசிஎல், டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், மகராஷ்டிரா டைம்ஸ் போன்ற அவற்றின் பிரிவுகளில் சந்தையின் முதல் இடத்தில் இருக்கும் பத்திரிகளை வெளியிடும் நிறுவனம்) “பணத்துக்கு செய்தி” தருவதற்கு மீடியா நெட் என்ற சேவையை ஆரம்பித்தது. அதன் மூலம் விற்பனை நிகழ்வுகளுக்கும் பிரபலமானவர்களின் நிகழ்வுகளுக்கும் கட்டணம் வாங்கிக் கொண்டு பத்திரிகையாளர்கள் அனுப்பப்பட்டார்கள். அதன் போட்டியாளர்கள் ‘இந்த செயல்முறை பத்திரிகையாளர் தர்மத்தை வெளிப்படையாக மீறுவது’ என்று புகார் சொன்ன போது, பிசிசிஎல் நிர்வாகம், ‘இந்த விளம்பரதலையங்கங்கள் நாளிதழின் முக்கிய பகுதியில் இல்லாமல், குறிப்பிட்ட நகரத்துக்கு மட்டுமான சமூக துணுக்குகளடங்கிய பலவண்ண துணைப் பகுதியில் மட்டுமே வெளியாவதால் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்’ என்று பதிலளித்தது.

ஸ்டார் நியூஸ்
மும்பையில் ஜூலை 13 ஆன்று நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகள் தொடர்பான ஒளிபரப்பின் ஒரு பகுதி முர்டோக் நிறுவனங்களில் அடிக்கடி குழப்பமாக வரையறுக்கப்படும் பிரேகிங் நியூஸ் மீதான மிகையான சார்புநிலை; எக்ஸ்குளூசிவ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், எதுவாயிருந்தாலும் சரி என்ற உத்தி;

பணத்துக்குச் செய்தி

மீடியாநெட் நல்ல விதமாக செய்தி வெளியிடப்படுவதற்காக நாளிதழ்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் காசு கொடுக்கும் ‘பணத்துக்கு செய்தி’ வெளியீட்டை நிறுவனமயாமாக்கியது. செய்தி போல வேடம் பூண்டிருக்கும் இது, சாதாரண விளம்பரங்களை விட தாக்கம் அதிகமானது. வாசகர் அல்லது பார்வையாளர் இதில் சொல்லப்படும் தகவல்கள் பத்திரிகையாளரால் தன்னிச்சையாக திரட்டப்பட்டது என்று எண்ணுவார்.

மற்ற ஊடக நிறுவனங்களும் பிசிசிஎல்லின் அடிச்சுவடுகளை ஒற்றி பின் தொடர ஆரம்பித்து விட, இந்த நிழல் வழிமுறை அரசியல் செய்திகளுக்கும் பரவி 2009 மக்களவை தேர்தலில் பரவலாக கையாளப்பட்டது. குறிப்பிட்ட வேட்பாளரை பாராட்டி அல்லது ஆதரித்து அல்லது அவரது அரசியல் எதிரிகளைக் குறை சொல்லி எழுதுவதற்கு உரிய ‘விலைப்பட்டியல்’ அல்லது ‘பொதிகள்’ வினியோகிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்த வேட்பாளர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது.

நிறுவனமாக இல்லாத வடிவத்தில் (ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமின்றி சட்ட விரோதமானதுமான), இந்த செயல்பாடுகளை நிரூபிப்பது மிகவும் கடினமானது, ஏனெனில் இந்த பண பரிமாற்றங்கள் அதிகாரபூர்வமான பதிவுகள் எதுவும் இல்லாமலேயே நடைபெறுகின்றன. இது பி சாய்நாத் எழுதி தி இந்துவில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் சுட்டிக் காட்டுவது போன்று பல வேடிக்கையான சம்பவங்களுக்கு வழி வகுத்தது . எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் மறுத்தாலும், அவரது சாதனைகளையும் திறமைகளையும் பாராட்டும் ஒரே மாதிரியான கட்டுரைகள் இரண்டு போட்டி போடும் நாளிதழ்களில் சில நாட்கள் இடை வெளியில் எப்படி வெளியானது என்பதை அவரால் விளக்க முடியவில்லை.

இந்திய பிரஸ் கவுன்சில், பணத்துக்கு செய்தி பற்றி அறிக்கை எழுதுமாறு ஒரு துணைக் குழுவை பணித்தது (அந்தக் குழுவில் இந்த கட்டுரையாளர்களில் ஒருவரான பரஞ்சோய் குகா தகுராலும் ஒருவர்) அந்த அறிக்கை சந்தர்ப்பம் சார்ந்த சாட்சியங்களை வைத்து முன்னணி செய்தித்தாள்களைக் குறிப்பிட்டு அவர்கள் செய்தி போன்ற உருவில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட தனிநபர்களுக்கு சாதகமான தகவல்களை வெளியிட்டதை விளக்கியது.

செல்வாக்கு வாய்ந்த பதிப்பாளர்களின் குழு முயற்சிகளால் ஜூலை 31, 2010 அன்று நடந்த கூட்டத்தில் கை தூக்கி வாக்கெடுப்பு மூலம் (முறையான வாக்கெடுப்பு இல்லாமலேயே) முடிவு எடுக்கப்பட்டு பெரிதும் நீர்த்துவிக்கப்பட்ட வடிவத்தில் இந்த அறிக்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் துணைக்குழுவின் 71 பக்க முழு அறிக்கை கசிய விடப்பட்டு பல இணையதளங்களில் கிடைக்கிறது. சமீபத்தில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்தார். ஜூலை 15ஆம் தேதி இந்தூரில் நடந்த மறைந்த பிரபாஷ் ஜோஷி (பணத்துக்கு செய்தியை தீவிரமாக எதிர்த்தவர்)யின் 75வது நினைவு நாளில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர், “பிரஸ் கவுன்சில் பணத்துக்குச் செய்திகள் பற்றிய தனது அறிக்கையை பொதுவில் வைக்க முடியாமல் இருப்பது ‘ரகசிய கலாச்சாரம்’ மற்றும் சுய ஒழுங்குபடுத்தல் தொடர்பாக முழு துறையில் நிலவும் போக்குகளின் அறிகுறி என்று குறிப்பிட்டார்.

தனியார் ஒப்பந்தங்கள்

“தனியார் ஒப்பந்தங்கள்” என்ற திட்டம் இன்னொரு கவலை தரும் போக்காக இருக்கிறது. பிசிசிஎல் ஆரம்பித்து வைத்த இந்த திட்டத்தின்படி பெருநிறுவனங்களின் பங்குகளைப் பெற்றுக் கொண்டு விளம்பர பகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்தத்திட்டத்தின் வெற்றி, பிசிசிஎல்லை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பங்கு முதலீட்டாளர்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. பிசிசிஎல் பேச்சாளர்கள், செய்திக் கட்டுரைகளின் உள்ளடக்கம் விளம்பரதாரர் மற்றும் பிசிசிஎல் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களால் பாதிக்கப்படுவதில்லை என்று சொன்னாலும், விற்பனை-ஆசிரியர் பிரிவுகளுக்கிடையேயான சுவரின் பலவீனத்தைக் கணக்கில் எடுக்கும் போது பொறுப்புகளுக்கிடையேயான முரண்பாடு வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வாடிக்கையாளருக்கு சாதகமான செய்தி வெளியிடப்படுவதாலோ, பாதகமாக செய்தி வெளியிடப்படாமல் இருப்பதாலோ, பத்திரிகை நிறுவனம் விளம்பரதாரர் நிறுவனம் இரண்டுமே ஆதாயம் பெறுகின்றன.

சமீப ஆண்டுகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியும், பரிவர்த்தனை செய்த போது இருந்த கூடுதல் மதிப்பிலேயே மதிப்பு நிர்ணயிக்கும் வருமான வரித் துறையின் வழிகாட்டல் முறையும் தனியார் ஒப்பந்த திட்டத்தின் கவர்ச்சியை ஓரளவு குறைத்திருக்கிறது. மீடியாநெட்டைப் போலவே, தனியார் ஒப்பந்த முறையும் பிசிசிஎல்லால் ஆரம்பிக்கப்பட்டு உடனடியாகவே மற்றவர்களால் பின்பற்றப்பட ஆரம்பித்தது. ஆகஸ்டு 27, 2010ல் செபி நிறுவனம் (இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கழகம்) ஒரு ஊடக நிறுவனம், தான் வெளியிட்ட அல்லது ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களில் அதற்கு இருக்கும் நலன்களை வெளிப்படையாக தெரிவிக்க வேணுடம் என்ற வழிகாட்டுதலை உருவாக்கியது. ஆனால், இந்த வழிகாட்டுதல் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

எதிர்பார்க்கும்படியாக விளம்பரதாரர்கள் வாங்கும் திறன் அதிகமான சமூக பிரிவுகளையே குறி வைக்கிறார்கள். வாசகர்கள்/பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமே செய்தி அலசலின் நோக்கமாக இருக்கும் போது, தவிர்க்க முடியாத பின் விளைவாக பன்முகத்தன்மை குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரே மாதிரியாள அதுவும் நகர, வசதி வாய்ந்த நடுத்தர வர்க்க நுகர்வோர்களுக்கு சார்பான உள்ளடக்கத்தை மட்டுமே பார்க்கிறோம்.

2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது ஊடகங்களின் வர்க்க சார்பு நிலை கண்டனத்துக்குள்ளாகியது. ஐந்து நட்சத்திர தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடந்த நிகழ்வுகளுக்கு தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சாதாரண மக்கள் கொல்லப்பட்ட சத்ரபதி சிவாஜி முனையத்தில் நடந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டன. வெளிப்படையான ஊழலை விட மோசமான ஊடக உலகத்தைப் பெரும்பான்மையான மக்கள் பிரச்சனைகளிலிருந்து தனிமைப்படுத்தும் போக்கு இதில் இருக்கிறது. நோம் சாம்ஸ்கி, ஊடக பிரநிதித்துவத்தை பெருநிறுவன குழுமங்கள், பத்திரிகை பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் இணைந்து அவர்களது நலன்களுக்கு சேவை செய்யுமாறு உருவாக்குவது என்று வரையறுத்த “சம்மதத்தை உற்பத்தி செய்தலை” ஒத்திருக்கிறது இது.

ஒழுங்குபடுத்தல்

இந்தப் பிரச்சனைக்கு ஒழுங்குபடுத்தல் ஒரு தீர்வாக இருக்கலாம், குறிப்பாக, கூட்டு சேர்த்தல், போட்டியைத் தவிர்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒழுங்குபடுத்தல் முக்கியமானது. பிரஸ் கவுன்சிலின் அதிகாரம் அச்சு ஊடகத்தின் மீது மட்டுமே இருக்கிறது, அரை நீதி அமைப்பான அதற்கு தண்டிக்கும் அதிகாரமும் எதுவும் இல்லை.

பிப்ரவரி 2008-ல் இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு படுத்து ஆணையம் (TRAI) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு “ஊடக உடைமைக்கான பரிந்துரைகள்” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது. இன்னும் வெளியிடப்படாத இந்த அறிக்கையில் (அறிக்கையின் ஒரு பிரதி இந்த கட்டுரையாளர்களிடம் உள்ளது), “மூன்று ஊடக துறைகளான அச்சு, தொலைக்காட்சி, வானொலி பிரிவுகளில் பன்முகத்தன்மையும் வேற்றுமையும் பராமரிக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று வாதிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியின் உதவியோடு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குறுக்கு ஊடக உடைமைகளை கட்டுப்படுத்தவும், ஒளிபரப்பாளருக்கும் வினியோகிப்பவருக்கும் இடையே இடைவெளியைப் பராமரிப்பதன் மூலம் போட்டிச் சந்தைக்கு எதிரான நடத்தைகளையும் ஊடக ஏகபோகத்தையும் தடுக்க பரிந்துரைக்கிறது. இந்தியாவின் தற்போதைய ஊடக சட்டங்களின் முக்கிய பிரச்சனை அவை தனிப்பட்ட நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், ஊடக குழுமங்களையும் பெரு நிறுவனங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பல பெரிய பெருநிறுவன குழுமங்கள் வெவ்வேறு நிறுவனங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் இந்த கட்டுப்பாடுகளை முழுவதுமாக தவிர்த்து விடுகின்றன. டிராயின் பரிந்துரைகள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யுகே, இந்தியா மற்றும் பிற இடங்களில் இருக்கும் எல்லா அரசாங்கங்களின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுடன் விருப்ப-வெறுப்பு நிலை இருந்தாலும் ஊடக உறவுகளை வளர்ப்பதை விரும்புகிறார்கள். நியூஸ் ஆப் த வேர்ல்ட் தொடர்பான தொலைபேசி ஒட்டுக் கேட்பு நிகழ்வும் முர்டோச்சுகள் மற்றும் நிறுவனத்தின் உயர் ஊழியர்கள் பொதுவில் விசாரிக்கப்பட்டதும், இந்திய ஊடக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

______________________________________________________

பரஞ்சோய் குகா தாகுர்தா மற்றும் அலீஸ் சீபிரைட்

பரஞ்சோய் குகா தாகுர்தா ஒரு தனிப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளர் அலீஸ் சீபிரைட் இந்தியாவில் பணிபுரியும் ஒரு பிரிடிஷ் பத்திரிகையாளர்.

கட்டுரை- படங்கள : நன்றி ப்ரண்ட் லைன், தமிழாக்கம்: குமார்
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

33

ன்றாக பின்னிப் பிணைந்திருந்ததாலேயே அந்த நான்கு விலங்குகளையும் சிங்கத்தால் அடித்துக் கொன்று சாப்பிட முடியவில்லை. எனவே தந்திரமாக, சூழ்ச்சி செய்து அந்த நான்கு விலங்குகளையும் பிரித்தது. இப்போது சிங்கத்தால் தனித்தனியாக அந்த நான்கு விலங்குகளையும் வேட்டையாடி புசிக்க முடிந்தது. இந்தக் கதையை விரல் சூப்பும் வயதிலேயே பள்ளியில் படித்திருப்போம்.

ஆனால், தந்திரமாக ஏமாற்றப்பட்டு, சூழ்ச்சி செய்து பிரிக்கப்பட்டு, தனித்தனியாக இருப்பதாலேயே தொடர்ந்து நாம் சிங்கத்தால் நர வேட்டையாடப்பட்டு இறந்து வருகிறோம். எனவே ஒன்றாக இணைவோம். சிங்கத்தை பின்னங்கால் பிடறியில் அடித்து ஓட ஓட விரட்டுவோம்… என்று முடிவு செய்து நான்கு விலங்குகளும் ஒன்றாக கைகோர்த்தன. சிங்கத்தை காட்டை விட்டே விரட்டின… என்றொரு கதையை எந்தக் காலத்திலும் நாம் படித்ததில்லை. அப்படியொரு கதை இந்தியாவில் சமீபத்தில் எழுதப்படவும் இல்லை.

இந்தக் குறையை போக்குவதற்காகவே வரலாற்று புகழ்மிக்க ஒரு கதையை அரியானா மாநிலம், குர்கான் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுவும் அச்சில் அல்ல. இந்திய சரித்திர கல்வெட்டில் பொறிக்கும் விதமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். மன உறுதியுடன் போராடி வரும் இத்தொழிலாளர்களின் போராட்டம், வர்க்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும், நாளைய விடியலுக்கு அறைகூவல் விடுப்பதாகவும் உள்ளது.

இந்திய நாட்டின் தலைநகரிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் மானேசர் தொழிற்பேட்டையை அடைந்துவிடலாம். ஒருவகையில் உலகமே இங்குதான் உற்பத்தியாகிறது என்று சொல்லலாம். கார்கள், பைக்குகள், செமிகண்டக்டர்கள், வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தொலைப்பேசி – கைப்பேசிகள்… அவ்வளவு ஏன், பாம் டேட்டா அனலிஸ் மையமும், பிரைன் ரிசர்ச் ஆய்வுக்கூடமும், இராணுவப் பள்ளியும் கூட இங்கு அமைந்திருக்கிறது.

1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தால் அதிகரித்து வந்த நுகர்வு கலாச்சாரத்துக்கு தீனி போடும் வகையில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே இந்த மானேசர் தொழிற்பேட்டையில் தனது இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலையை மாருதி சுசுகி நிறுவனம் தொடங்கியது. விதவிதமான ஃப்ளேவர்களில் தயாராகும் ஐஸ்க்ரீம் போல ஸ்விப்ட், ஏ-ஸ்டார், டிஸெயர், எஸ்எக்ஸ்4 மாடல் கார்களை உற்பத்தி செய்து நடுத்தரவர்க்கத்துக்கும், மேட்டுக்குடி கனவான்களுக்கும் இங்கிருந்து வழங்க ஆரம்பித்தது.

இதற்காக சுற்று வட்டார பகுதியிலிருந்து, ஐடிஐ முடித்த இளைஞர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியது. ஷிப்டுக்கு 600 தொழிலாளர்கள் வீதம் மொத்தம் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். இவர்களில் நிரந்தர தொழிலாளர்களை விட, பயிற்சியாளர்களும், அதை விட ஒப்பந்த தொழிலாளர்களும்தான் எண்ணிக்கையில் அதிகம் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆயிரத்து 200 தொழிலாளர்கள்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கள் உரிமைக்காக போராடி வருகிறார்கள் என்பதல்ல விஷயம். இவர்களுக்காக மானேசர் தொழிற்பேட்டையிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள், களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விஷயம். ஓரு தொழிற்சாலையில் மட்டுமோ அல்லது அந்தத் தொழிற்சாலையின் கிளைத் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொண்டோ மட்டும் போராடினால் போதாது. அந்த வட்டாரம் முழுதுமாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி உறுதியுடன் போராட வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய உலகமய சூழலில் முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிக்க முடியும் என்பதை இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தியிருக்கிறார்களே… அதுதான் சிறப்பு.

இதை தொடக்கத்திலிருந்து பார்த்தால்தான் இந்தப் போராட்டத்தின் வலிமையை, அது தரும் உத்வேகத்தை உணரவும், புரிந்து கொள்ளவும், பாடம் கற்கவும் முடியும்.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்

45 விநாடிகளில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று மெத்தப் படித்த மேதாவிகளிடம் கேட்டுப் பாருங்கள். விடை சொல்லவே 45 விநாடிகளுக்கு மேல் யோசிப்பார்கள். ஆனால், மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி தொழிற்சாலையின் அசெம்பிளிங் லைனில் பணிபுரியும் தொழிலாளர்கள், சராசரியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு 45 விநாடிகளும் ஒரு காரை உருவாக்க தங்கள் குருதியை எரிக்கிறார்கள். இதை ஏதோ அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகைப்படுத்தி சொல்வதாக நினைக்க வேண்டாம். மாருதி சுசுகியின் இணையதளத்திலேயே 12.5 மணி நேரத்தில் மெட்டல் ஷீட்டிலிருந்து ஒரு காரை தயாரிப்பதாகவும், அசெம்பிளிங் லைனில் 23 விநாடிகளுக்கு ஒரு கார் நகருவதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதாவது சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 600 கார்களை உற்பத்தி செய்வதற்காக 600 தொழிலாளர்கள் மாருதி சுசுகி இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்.

இந்த இடத்தில் மாருதி சுசுகி நிறுவனம் குறிப்பிடாமல் விட்ட ஒரு விஷயத்தை – கணக்கை – பார்ப்போம். அப்பொழுதுதான் எரிந்து சாம்பலாகும் அந்நிறுவன தொழிலாளர்களின் நிலையை உணர முடியும்.

8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில், 600 தொழிலாளர்கள், 600 கார்களை தயாரிக்கிறார்கள். இது அந்நிறுவனமே குறிப்பிடும் கணக்கு. 600ஐ 45 விநாடிகளால் பெருக்கினால் 27 ஆயிரம் விநாடிகள் வரும். அதாவது 450 நிமிடங்கள். அதாவது ஏழரை மணித் துளிகள். அதாவது 8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில் ஏழரை மணி நேரங்கள் கார்களை தயாரிக்க மட்டுமே ஒவ்வொரு தொழிலாளியும் செலவு செய்கிறார். மீதமுள்ள 30 நிமிடங்களில், 20 நிமிடங்கள் உணவுக்காகவும், 7 நிமிடங்கள் தேநீர் குடிக்கவும் ஒதுக்குகிறார். எனவே மீதமுள்ள 3 நிமிடங்களில்தான், அதாவது 180 விநாடிகளில்தான், ஒரு தொழிலாளி, அன்றைய தினம், தான் பணிபுரிந்த 27 ஆயிரம் விநாடிகளுக்காக ஓய்வெடுத்துக் கொள்ள, ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

இதையே கொஞ்சம் விரித்து பார்ப்போம். ஓய்வுக்காக கிடைத்த இந்த 180 விநாடிகளை, உழைப்புக்காக ஒரு தொழிலாளி செலவிடும் 27 ஆயிரம் விநாடிகளின் மீது பரப்பினால், மாருதி சுசுகி நிறுவனத்தில் ஒரு ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு விநாடியில் 150 மைக்ரோ விநாடிகள் மட்டுமே அவர்களுக்கு என்று கிடைக்கும். இதற்குள்தான் அவர்கள் நிற்கவும், மூச்சு விடவும், கை கால்களை அசைக்கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எஞ்சிய விநாடிகள், நிமிடங்கள், நேரங்கள் அனைத்தும் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம். நிறுவனத்துக்கு சொந்தமான ‘அந்த நேரத்தில்’ தலையைக் கூட திருப்பக் கூடாது. தப்பித் தவறி திருப்பினால், வெட்டி விடும் உரிமை நிறுவனத்துக்கு உண்டு.

ஆம், உணவுக்காக ஒதுக்கப்பட்ட 20 நிமிடங்களில், ஒவ்வொரு தொழிலாளியும் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு நடக்க வேண்டும். அங்கு வரிசையில் நிற்க வேண்டும். வாங்கிய உணவை அவசரமாக சாப்பிட வேண்டும். தனது இடத்துக்கு திரும்பி விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் சம்பளத்தில் வெட்டு நிச்சயம். வேலை நேரத்தில் கழிப்பறை செல்ல அனுமதியில்லை. எனவே சிறுநீர் – மலம் கழிக்கவும் இந்த உணவு இடைவேளையைதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருநாள் விடுப்பு எடுத்தால், ஊக்கத்தொகையில் ரூபாய் 1,500ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் பறிக்கப்படும். அடுத்த ஷிப்டுக்கு உரிய தொழிலாளி வரவில்லை என்றால், 16 மணி நேரங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். இதெல்லாம் நிர்வாகத்துக்கு உரிய ‘உரிமைகள்’.

இதைதான் ‘க்ளாஸ் பவர்’ என்று பெருமையாக விளம்பரங்களில் குறிப்பிடுகிறதா மாருதி சுசுகி? தனது வாடிக்கையாளர்களிடம், ‘நீங்களே எரிபொருள்’ என மல்டி கலரில் அச்சடித்து மார் தட்டுகிறதே மாருதி சுசுகி நிறுவனம்… அதன் உண்மையான அர்த்தம், எரிந்து சாம்பலாவது எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குருதிதான் என்பதை குறிப்பால் உணர்த்துகிறதா?

தங்கள் நிறுவன பங்குகளை மேட்டுக்குடியினர் வாங்குவதற்காக தொழிற்சாலையின் வெளித் தோற்றத்தை ஹை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து காட்டும் நிறுவனம், ஏன் உட்புற தோற்றத்தை படம் பிடித்துக் காட்ட மறுக்கிறது? ஒவ்வொரு பிரிவிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி ஒரு தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்பதை கண்காணிக்கும் நிறுவனம், கழிப்பறைகளில் கூட ‘அநாவசியமாக’ அவர் நேரத்தை செலவிடுகிறாரா என்பதை அறிய கேமராவை பொருத்தியிருப்பது வக்கிரம் மட்டுமல்ல, பாசிசத்தின் உச்சம்.

இந்நடவடிக்கையை ஆதரிக்க வேறு செய்கிறார், நிர்வாகம் வீசும் எலும்புத் துண்டை பொறுக்கித் தின்னும் ஒர் அதிகாரி. ”கழிவறைகளில் ‘நேரம்’ செலவிட எந்தத் தொழிலாளிக்கும் உரிமையில்லை. இதனால் உற்பத்திதான் பாதிக்கும்? எனவே அதிக முறை கழிவறை செல்பவர்கள் – ‘அதிக நேரத்தை’ அங்கு செலவிடுபவர்கள் ஆகியோரின் சம்பளம் பிடிக்கப்படும். இதில் தவறொன்றுமில்லை…” என கொக்கரிக்கிறார்.

இப்படி பல அடக்குமுறைகளை எதிர்கொண்டு கற்பனைக்கும் எட்டாத அளவில், மைக்ரோ விநாடி கூட வீணாக்காமல் உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் பணியை துல்லியமாக அறிய விரும்பினால், உடனடியாக சார்லி சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ சினிமாவை பாருங்கள்.

இப்படி தங்களையே எரித்து சாம்பலாவதற்குத்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு 10 முதல் 12 ஆயிரம் ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 முதல் 5 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது. ‘வேகமும் கட்டுப்பாடும்’ மாருதி சுசுகி காரின் அடையாளம் மட்டுமல்ல, மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது கட்டாயமாக சுமத்தப்பட்ட அடிமை ஒப்பந்தமும் கூட.

இந்த இடத்தில் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். ஷிப்டுக்கு 600 கார்கள் என்பது சராசரி அளவுதான். இதுவே உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்தால், இந்த 45 விநாடிகள் என்னும் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும். அதாவது 27 ஆயிரம் விநாடிகளில் ஓய்வுக்காகவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் ‘பெரிய மனதுடன்’ ஒதுக்கப்பட்ட 180 விநாடிகளும் நிர்வாகத்தால் களவாடப்படும்.

இப்படி தொழிலாளர்களை சக்கையாக உறிந்துதான் இந்திய சந்தையின் கார் விற்பனையில் மாருதி சுசுகி முதல் இடத்தில் இருக்கிறது. வருடந்தோறும் இந்நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம், இரு மடங்கு, மும்மடங்கு என அதிகரித்து வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வோ, சலுகைகளோ வழங்கப்படவேயில்லை. பதிலாக உற்பத்தியின் எண்ணிக்கை மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. இந்த ‘டார்கெட்’டை அடையும்படி தொழிலாளர்கள் டார்ச்சர் செய்யப்படுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் அத்தொழிலாளர்கள் தங்களுடன் சம்பளத்தை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் சேர்த்தே சுமந்து செல்கிறார்கள்.

இவர்களது பிரச்னைகளை பேசித் தீர்க்க மானேசரில் வலுவான சங்கம் இல்லை. 1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தில் ஏற்கனவே ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கம்’ இருக்கிறது. மாருதி நிர்வாகமே உருவாக்கிய இந்த எடுபிடி சங்கமே மானேசரில் உள்ள இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலைக்கும் பொருந்தும் என நிர்வாகம் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.

அப்படியானால், குர்கானில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என்ன சம்பளமோ அதையே எங்களுக்கும் தர வேண்டியதுதானே… அவர்கள் உற்பத்தி செய்யும் கார்களை விட அதிகளவில் உற்பத்தி செய்யும்படி எங்களை ஏன் கசக்கிப் பிழிகிறீர்கள் என்று மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிலாளர்கள் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதிலளிக்கவில்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !

எனவே மானேசர் தொழிலாளர்கள் எந்தக் கட்சியையும் சாராத ஒரு தொழிற்சங்கத்தைக் கட்ட முயன்றனர். கடந்த ஜூன் மாதம், ‘மாருதி சுசுகி பணியாளர் சங்கம்’ (மாருதி சுசுகி எம்ப்ளாயீஸ் யூனியன்) என்னும் பெயரில் சங்கத்தை தொடங்கி, அதனை பதிவு செய்வதற்காக 11 தொழிலாளர்கள் சண்டிகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

ஆனால், முதலாளிகளின் எடுபிடிகளாக மாறிவிட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கம் தொடங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலை உடனடியாக மாருதி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதைப் பார்த்து ஆவேசம் அடைந்த நிர்வாகம், ஜூன் 3 அன்று தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்களை விசாரித்து, ‘சங்கம் தொடங்கி அதை பதிவு செய்யச் சென்ற மாபெரும் குற்றத்துக்காக’ 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி, 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஏட்டளவிலேயே இருப்பதற்கு மானேசர் மாருதி சுசுகி நிறுவனம் நடந்துக் கொண்டது ஓர் உதாரணம்.

நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து ஜூன் 4 அன்று மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முறைப்படி முன்னறிவிப்பு கொடுக்காத வேலை நிறுத்தம் என்னும் காரணத்தை காட்டி இந்த வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என அரசும், மாருதி சுசுகி நிறுவனமும் அறிவித்தன. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வே தரமாட்டோம் என மிரட்டின.

இதற்கெல்லாம் அசராமல் மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்கள் உறுதியுடன் போராடினார்கள். தங்கள் சங்கத்துக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள். நிர்வாகம் தனது எடுபிடி சங்கத்தின் வலிமையை காட்டுவதற்காக 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்க தேர்தலை நடத்தியது. அதை ஒட்டுமொத்த தொழிலாளர்களும் புறக்கணித்தார்கள்.

மாருதி நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் இப்போது முதல்முறையாக போராடவில்லை. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் நடந்த நீண்ட போராட்டம், நிர்வாகத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறது. பல நிரந்தர தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 2005-ல் ஹோண்டா தொழிலாளர்கள் போராடிய போது, அரசும் நிர்வாகமும் குண்டர் படையின் உதவியுடன் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 2009-ல் ரிகோ ஆட்டோ நிறுவனத்தின் தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைக்காக தொடர்ந்து ஒரு மாதம் போராடி அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த முந்தைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொண்டு மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராடியதுதான் சிறப்புக்குரிய அம்சம். இப்போராட்டத்தை ஆதரித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் தொழிலாளர் சங்கம் உட்பட பல சங்கங்கள் திரண்டன. மானேசர் மட்டுமின்றி ரேவாரி மாவட்டத்திலுள்ள தாரு ஹோரா தொழிற்பேட்டை முதல் குர்கான் வரையிலான அனைத்து தொழிலாளர்களின் சங்கங்களையும் தங்களுக்கு ஆதரவாக மாருதி சுசுகி தொழிலாளர்கள் திரட்டினார்கள்.

இதனால் அரியானா மாநிலமே பற்றி எரிந்தது. ஆனால், எந்தவொரு தேசிய காட்சி ஊடகத்திலும் இப்போராட்டம் குறித்த விரிவான தகவல்கள், செய்திகள் வரவில்லை. இத்தனைக்கும் தில்லியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணத்தில் மானேசரை அடைந்து விடலாம். என்றாலும் ஊடகங்கள் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்தன. காரணம், செய்தி வெளியிட்டால் மாருதி சுசுகி விளம்பரம் கொடுக்காது. விளம்பர வருவாய் இல்லாவிட்டால் ஊடகத்தை நடத்த முடியாது. எனவே மாருதி சுசுகி நிறுவனத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அங்கு ‘முப்போகமும் விளைவதாக’ செய்திகளை வெளியிட்டன.

ஆனால், ஊடகங்களை போல் மாநில முதல்வரால் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்து மவுனமாக இருக்க முடியாதே? எனவே அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, இரு தரப்பையும் அழைத்து பேசினார். மானேசர் மாருதி சுசுகி நிர்வாக இயக்குநர் சின்ஜோ நகானிசி உள்ளிட்ட உயரதிகாரிகளும், தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதனையடுத்து 13 நாட்கள் நடைபெற்ற போராட்டம், ஜூன் 16 அன்று முடிவுக்கு வந்தது.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! “இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட்ட 11 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த மாருதி சுசுகி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. எனவே வேலைநிறுத்தத்தை கைவிட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். சனிக்கிழமை முதல் (ஜூன் 18 முதல்) அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள்” என்று மாநிலத் தொழிலாளர் நலத்துறைச் செயலர் சர்பன் சிங் அறிவித்தார்.

ஆனால், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது என்ற முக்கிய கோரிக்கை தொடர்பாக உடன்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. “புதிய தொழிற்சங்கம் அமைப்பதில் ஆலை நிர்வாகத்துக்கு எவ்வித பங்கும் இல்லாததால், உடன்பாட்டில் 2-வது தொழிற்சங்கம் அமைப்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அரியானா மாநில தொழிலாளர் நலத் துறையிடம் எங்களது தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்காக கடந்த ஜூன் 3-ம் தேதி விண்ணப்பம் அளித்தோம். இதற்கு அனுமதி கிடைத்தவுடன் எங்களது சங்கம் செயல்படத் தொடங்கும்” என்று புதிதாகத் தொடங்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சிவகுமார் நம்பிக்கையுடன் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

“தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, இந்த மாதம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கு தொடர்ந்து வேலை செய்வோம்…” என தொழிலாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அதன்படியே 13 நாட்கள் இழப்பை ஈடுகட்ட உழைத்தனர்.

ஆனால், மாருதி சுசுகி நிர்வாகம், தான் அளித்த வாக்குறுதிகளை மீறியது. ஜூலை மாதம் முழுக்க சங்கத்தை பதிவு செய்வதற்காக சண்டிகர் சென்ற 11 தொழிலாளர்களையும் குறி வைத்து தாக்கியது. ‘ஜூலை மாதம் முழுக்க தொழிலாளர்கள் மந்தமாக வேலை செய்தனர்…’ என குற்றம் சாட்டியது. புதிய சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்தது. இதனால் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்னை முற்றத் தொடங்கியது.

இந்நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் பிறந்தது. ‘ஃப்ரெஷ் பீஸ்’ புனிதரும், மாபெரும் குணசித்திர நடிகருமான அண்ணா ஹசாரே, தில்லி ராம் லீலா மைதானத்தில், அரசின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

இதை வேடிக்கை பார்ப்பதற்காக சில தொழிலாளர்கள் சென்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த நிர்வாகம், அந்தத் தொழிலாளர்களை அழைத்து மிரட்டியதுடன் ‘முன்பே அடையாளம்’ காணப்பட்ட 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. அத்துடன் 38 தொழிலாளர்களை ஆகஸ்ட் 29 அன்று சஸ்பெண்ட் செய்தது.

இதனையடுத்து தொழிலாளர்கள் அணி திரண்டு மீண்டும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போராட்டத்தை ஒடுக்க நிர்வாகமும் முயன்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ‘Good Conduct form’ல் கட்டாயமாக கையெழுத்திட வேண்டுமென்று இப்போது நிர்வாகம் கட்டளையிடுகிறது. ஆனால், ‘இப்படியொரு படிவமே தேவையில்லாதபோது நாங்கள் எதற்காக கையெழுத்திட வேண்டும்? எங்கள் சுயமரியாதையை அடகு வைக்க முடியாது’ என்று தொழிலாளர்கள் கம்பீரமாக மறுத்து விட்டனர்.

இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று ‘தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை…’ என்று மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா திமிருடன் பேசியிருக்கிறார். இதற்கு ஜப்பானில் உள்ள சுசுகி நிர்வாக தலைவர் ஒசாமு சுசுகி ஆதரவு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற மாருதி நிறுவனத்தின் 30வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒசாமு சுசுகி, “தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. அது ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல அமெரிக்கா சிலாகிக்கும் ‘நிர்வாகப் புகழ்’ இந்துமத பயங்கரவாதி மோடியின் குஜராத்தில், மாருதியின் ஒரு பிரிவை தொடங்கவும் ஒசாமு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அடக்குமுறைக்கும், தொழிலாளர்களை கசக்கிப் பிழியவும் குஜராத் முதல்வரான இந்த இந்துமத பயங்கரவாதி பொருத்தமானவன்தான். அதற்கு குஜராத் மாநிலம் ஹலோல் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாத மண்டலமே சாட்சி. இங்குள்ள ஜெனரல் மோட்டார்ஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்தில், செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கணக்கில் அடங்காதவை.

எனவே மாருதி சுசுகியின் மற்றொரு கிளை தொழிற்சாலையை இந்த மாநிலத்தில் நிறுவ ஒசாமு சுசுகி பேச்சு வார்த்தை நடத்துவதில் வியப்பொன்றும் இல்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! ஒசாமு சுசுகியின் அடாவடித்தனமான பேச்சும் நடவடிக்கையும் ஒரு விஷயத்தை அழுத்துமாக உணர்த்துகிறது. அது, ஏகாதிபத்தியங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேசம், நாடு, கொலைக்காரன், கொள்ளைக்காரன், மத பயங்கரவாதி என்பதெல்லாம் முக்கியமில்லை. நிதிமூலதனமும், நிதிமூலதன பெருக்கமும்தான் முக்கியம்.

ஆனால், ஏகாதிபத்தியத்தின் ஏவலாகவும், அடிவருடியாகவும் தரகு முதலாளிகள் வேண்டுமானால் இருக்கலாம். வர்க்க ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து கிளர்ந்து எழும் உழைக்கும் மக்கள் என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு தலைமை வகித்து நிற்பார்கள். எந்த அடக்குமுறைக்கும் அடி பணிய மாட்டார்கள்.

இந்த உண்மையைத்தான் மானேசர் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள், தங்கள் வட்டாரத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன் மூலம் இந்திய உழைக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

சமரசத்துக்கு அடிபணியாமல் போராடும் அத்தொழிலாளர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகள்.

______________________________________________

அறிவுச் செல்வன்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!

24

ஹாலிவுட் படங்களில் டெக்னாலாஜியை வைத்து மிரட்டுவதாக இருக்கட்டும், பின்லேடனை பறந்து போய் கொன்ற ஆக்சன் த்ரில்லராக இருக்கட்டும், மென்பொருள் துறையில் ஆதிக்கம் செய்வதாக இருக்கட்டும், உலகெங்கும் கடன் வாங்கி தின்று தீர்ப்பதாக இருக்கட்டும்…. எல்லாவற்றிலும் விண்ணைத் தொடும் அமெரிக்காவில்தான் ஏழைகள் அதிகமாம்! அதாவது வளர்ந்த நாடுகளில் அதிகம் ஏழைகள் வசிக்கும் நாடு அமெரிக்கா!

அமெரிக்க சென்சஸ் துறையின் வருடாந்திர அறிக்கை சென்ற செவ்வாய்க்கிழமை 13.09.2011 அன்று வெளியிடப்பட்டது. அமெரிக்க அரசுத்துறையே வெளியிட்டிருப்பதனால் ஆதாரம் கேட்கும் அம்பிகள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.

முதலில் இரண்டாவது வருடமாக வேலையில்லாத் திண்டாட்டம் ஒன்பது சதவீதத்திற்கும் மேல் தொடருகிறது. அதாவது வேலை செய்யும் திறன் கொண்டவர்களில் பத்தில் ஒருவருக்கு வேலை இல்லை. அமெரிக்க அளவுப்படி ஏழ்மை அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் வருடத்திற்கு 22,314 டாலர் அல்லது 10,26,444 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள். பத்து இலட்சம் சம்பாதித்தும் ஏழையா என்று கேட்காதீர்கள். அமெரிக்க வாழ்க்கைத் தரப்படி இந்த பத்து இலட்சம் என்பது அங்கே ஒரு இலட்சத்திற்கு சமம். இந்த அளவு கோலின்படி அமெரிக்காவில் இருக்கும் ஏழைகள் 4 கோடியே 62 இலட்சம் பேர். அல்லது அமெரிக்க மக்கள் தொகையில் 15.1% விழுக்காடு. அதாவது ஆறில் ஒரு அமெரிக்கன் ஏழை!.

இந்த ஏழைகளின் சதவீதம் சென்ற ஆண்டில் 14.3% ஆக இருந்தது. இந்த வருடம் ஏறியிருக்கிறது. 1980க்குப் பிறகு ஏழைகளின் சதவீதம் இவ்வளவு வேகத்தில் ஏறியிருப்பது இப்போதுதானாம். வேலை இன்மை, பணவீக்கம், என்று பல்வேறு காரணங்களால் ஏழைகள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறார்கள். இப்படி வருட சென்சஸ் ஆரம்பித்த பிறகு 1959-ம் வருடத்திற்கு பின் இந்த அளவு அதிக எண்ணிக்கையை இப்போதுதான் தொட்டிருக்கிறார்களாம். வாழ்த்துக்கள்!

மிசிசிபி மாநிலத்தில் மட்டும் 22.7% பேர் ஏழைகள். இந்த மாநிலத்தை தொடர்ந்து லூசியானா, கொலம்பியா மாவட்டம், ஜார்ஜியா, நியு மெக்சிகோ, அரிசோனா போன்ற மாநிலங்களிலும் அதிக ஏழைகள் வாழ்கின்றனர் இல்லை வாழ முடியாமல் வதைபடுகின்றனர்.

அமெரிக்க ஏழைகளில் கருப்பர்களும், ஹிஸ்பானியர்களும் சேர்ந்து 54% இருக்கிறார்கள். வெள்ளையர்கள் 9.9%மும், ஆசியர்கள் 12.1% பேரும் ஏழைகள். இதைக்கேட்டால் நமது மிடில்கிளாஸ் மாதவன்கள் கருப்பர்கள் ஒழுங்காக பள்ளிக்கு சென்று படிக்காததன் விளைவு என்று கூசாமல் உபதேசிப்பார்கள்.

மேலும் காப்பீடு இல்லாமல் வாழும் அமெரிக்கர்களின் சதவீதம் 16.3 ஆகும். இதன்படி கிட்டத்தட்ட ஐந்து கோடி அமெரிக்கர்கள் காப்பீடு இல்லாமல் வாழ்கின்றனர். அமெரிக்காவில் மருத்துவம் பார்ப்பதற்கு இந்தக் காப்பீடு கண்டிப்பாக வேண்டும். அந்தபடிக்கு பார்த்தால் இந்த ஐந்து கோடி அமெரிக்கர்களுக்கும் நோய் வந்தால் எமலோகம் நிச்சயம்.

தற்போது சோமாலியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருக்கம் மக்களுக்காக மேற்குலக ஊடகங்கள் மக்களிடம் காணிக்கை போடுமாறு கேட்டு வருகின்றன. இனி அந்த கோரிக்கை அமெரிக்க மக்களுக்காகவும் இருக்குமோ? மைனர் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்!

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

அப்சல் குரு
அப்சல் குரு

நண்பர்களே,

திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்

வினவு

_____________________________________________________

என்.டி.பஞ்சொலி,

வழக்கறிஞர், ஜி 3/617 ஷாலிமார் கார்டன் விரிவாக்கம் 1

ஷஹிபாபாத், காஜியாபாத் (உ.பி) 201005

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

அப்சல் குரு
அப்சல் குரு

முகமது அப்சல் குருவின் வழக்கறிஞா் என்ற அடிப்படையிலும், கூடவே மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினா் என்ற அடிப்படையிலும், நான் இத்துடன் அப்சல் குரு விடுத்த அறிக்கை நகலை இணைத்துள்ளேன்.

இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது என்பது கண்டனத்துக்குரியது என்பதிலோ, அது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த இயலாத செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த குற்றம் குறித்த மொத்த புலனாய்வு நடைபெறும் வழிமுறையில், விதத்தில் பல கேள்விகள் முன் நிற்கின்றன.  மேலும் எவ்வாறு துவக்க நிலை விசாரணையே துவங்காத நிலையில் மின்னணு ஊடகங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் சித்தரித்து அவரை கொன்றேயாக வேண்டும் எனுமளவிற்கு எவ்வாறு ஒலிபரப்ப இயலும்?

மேலும் மீண்டும் ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 செப் 2011-ல் நடைபெற்று பல உயிர்கள் பலியான சில மணிகளில், அப்சல் குருவின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருக்கிறது.  ஊடகங்கள் மின்னஞ்சல் ஒன்றை குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மை நிறுவப்படாத சூழலிலேயே, முக்கியமான நேர ஒலி/ஒளி பரப்புகளில் குண்டுவெடிப்பு என்பது அப்சல் குருவிற்கு ஆதரவாக உள்ள குழுவினால் ஏற்பட்டது போல் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் ஊடகங்கள் என்பது யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாகும்.  மேலும் 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளை மேற்கொள்கிற அத்தகைய ஊடகங்களின் செயல்பாடு, அடிப்படையான பத்திரிகை தர்மத்தை மீறுகிற செயல்களை திறம்பட கண்காணிக்க அதிகார அமைப்பு ஏதுமில்லை. அத்தகைய ஊடகங்களில் நடைபெறுகிற அனைத்து விவாத நிகழ்ச்சிகளும், நிலைத்திருக்கக் கூடிய கருத்திற்கு முரணாக யார் ஒருவர் மாறாக கருத்து சொன்னாலும் அதை எதிர்த்து மிகுதியான கருத்து திணிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. மின்னணு ஊடகங்களெல்லாம் மிக உரக்க ஊழலுக்கு எதிராக பேசிய போதிலும், எந்தவித பொறுப்புமின்றி அதிகாரத்தோடு அத்தகைய ஊடகங்கள் தாம் செய்து வரும் ஊழலை ஒருபோதும் உணர்ந்து பார்ப்பதில்லை.

ஊடகத்தின் முன்பாக யாரேனும் அப்சல் குருவிற்கு சாதகமாக பேசினால் அவர் இந்தியனுக்கெதிராக பேசுபவர் எனவும், தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது நிலையாக நிற்கக் கூடிய கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் மற்றும் இந்து மத உரிமை பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானது போல் சித்தரிக்கப்படுகிறது.

நமது “அப்சல் குருவை காப்பாற்றுங்கள்” என்கிற பிரச்சாரம் இந்திய ஜனநாயகத்தில் கீழ்காணும் அம்சங்களை பிரதிபலிக்கிறது.

  1. புலனாய்வு அமைப்புகளில் நிலவி வரும் ஊழல் மற்றும் அவர்களிடம் தொழில் திறமை குறைவாக இருப்பது அம்பலப்படுத்தப்படுகிறது.  பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டவர் பலமுறை புகழ்ந்து பேசப்பட்டார்.  ஆனால் பின்னர் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் அவருக்கிருந்த நிழலான மோசமான தொடர்புகள் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் சிறப்பு பிரிவில் செயலாற்றும் காவலர்களின் ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம்.
  2. நீதித்துறை என்பது அரசியலமைப்பு சட்ட நிலை, மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் “இந்த நாட்டின் தேசிய மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக” தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நபரின் இறப்பு குறித்த தண்டனையை முடிவு செய்யும் சட்ட அடிப்படை இங்கு கிடையாது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அது எந்த ஒரு இந்தியனும் இந்திய உரிமைக் குழுக்கள் அல்லது கார்ப்பரேட் நலனை திருப்திப் படுத்துவதற்காக தூக்கிலிடப்படலாம் என்றாகிவிடும்.
  3. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது.  அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப் படவில்லை.  கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர்.  எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும்.
  4. மனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக கைதான இருவர் ஒன்றும் அறிந்திராதவர்கள் என நிரூபித்துள்ளனர்.  இதில் கருவுற்றிருந்து சிறையில் குழந்தையை பெற்றெடுத்த ஒரு சீக்கிய பெண்ணும் அடக்கம். அவளது வாழ்வு முழுமையாக பழிவாங்கப்பட்டுவிட்டது.  நாம் எப்போதும் அவளை தொலைக்காட்சிகளில் கண்டதில்லை, என்பதுடன் அவளின் பயங்கரமான சோகமயமான வாழ்க்கையையும் கண்டதில்லை.  இது எவ்வாறு சில குடிமக்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதை காண்பிக்கிறது.
  5. டெல்லியிலும் நாட்டின் பிற பகுதியிலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமாக ஒன்றுபட்ட ஆதரவு காண்பிப்பதை காஷ்மீர மக்கள் பார்க்கின்றனர்.  அப்சலை தூக்கிலிடுவதென்பது அத்தகைய காஷ்மீர மக்களுக்கும், இதர இந்திய பகுதி மக்களுக்கும் இடையே நிலவிவரும் உணர்வு பூர்வமான பாலம் உடைந்துவிட ஏதுவாகும்.
  6. அப்சல் குருவிடம் எப்போதும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், அவருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வராததால், அவர் வழக்கறிஞர் மூலம் தனது தரப்பை தெரிவிக்க இயலவில்லை. மிக முக்கியமான சாட்சியங்கள் கூட குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ள நியாயமான விசாரணை என்ற உரிமையை நாம் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.
  7. பாராளுமன்ற தாக்குதல் வழக்கின் முழுமையான அனுபவம் என்பது நமது ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது. அதே சமயம் அது குறிப்பிட்ட சில மெனக்கெடும் ஆர்வலர் குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைக்காக போராட துணிந்தால் அதற்கு இடமளிப்பதும் சாத்தியப்படும் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அந்த இடம் என்பது குற்றத் தீர்ப்பிற்குள்ளாகிவிடும்.  இந்துத்வா தீவிரவாதிகள் வெடிகள் வெடித்து கொண்டாடலாம், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு சில தினங்களுக்கு தொடர்ந்து ஒலிபரப்ப நாடக காட்சிகள் கிடைக்கலாம். ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது வெடித்து சிதறுவதாக ஆகிவிடும். எனவே தான் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது.
  8. நான் இத்துடன் அப்சலின் பத்திரிக்கை செய்தி அறிக்கை நகல் ஒன்றை இணைத்துள்ளேன்.  அவர் வேண்டுகையின்படி அது பிரசுரிக்கப்பட்டால் அவர் மீது தவறான கருத்துக் கொண்டிருக்கும் மக்களில் பலர் அவரின் குரலைக் கேட்க முடியும்.

– என்டி பஞ்சொலி,  வழக்கறிஞர், 09 செப் 2011

 அப்சல் குருவின் பத்திரிகை செய்திக் குறிப்பு:

 சில தீய சக்திகள் மற்றும் சமூக விரோத நபர்கள் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடுங்கொடிய மற்றும் பதைபதைக்க வைக்கும் குண்டு வெடிப்பு என்ற சம்பவத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைப்படக் கூடிய செயலாகும்.  அந்த கொடுஞ்செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை கொல்வதை அனுமதிப்பதில்லை.  எனது பெயர் இதில் சம்பந்தமில்லாமல், தேவையில்லாமல் இழுத்தடிப்பது அறிந்து நான் மிகவும் துயருற்றுள்ளேன். சில தரகர்கள்/குழுக்கள் அசிங்கமான ஆட்டத்தை ஆடி என்பெயரை இதில் ஈடுபடுத்துகின்றனர்.  மிகக்கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போது சில தவறான நோக்கமுள்ள குழுக்கள் என் பெயரை வேண்டுமென்றே இழுப்பது என்பது இது முதல்தடவையல்ல. எப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் என் பெயரை வேண்டுமென்றே அடிபடச் செய்வதன் மூலம் என் மீது களங்கம் விளைவிக்கவும், எனக்கு எதிரான பொதுக் கருத்தை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

 நான் இதை எனது வழக்கறிஞர் திரு என்டி பஞ்சொலி மூலம் இதை எனது பத்திரிகை செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளேன்.  தயவு செய்து இதை பிரசுரிக்கவும்.

 (ஒ-ம்) அப்சல் குரு

த/பெ: அபிபுல்லா

பகுதி எண் 8, சிறை எண் 3

திஹார் சிறைச்சாலை

___________________________________________________

– தமிழாக்கம்: சித்ரகுப்தன்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 8

இந்த மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்குக் கூட கொடுக்கப்படாத சலுகைகள் மதம் மாறிப் போனவர்களுக்கு அளிக்கப்படுவது மிகப் பெரிய கொடுமையாகும். பள்ளிக் கூடம் தொடங்குவது நடத்துவது போன்ற விசயங்களில் கூட முசுலீம், கிறித்தவர்களுக்கு உள்ள சலுகைகளையாவது தாருங்கள் என்று கேட்கின்ற நிலையில் இந்துக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

– ”இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா

இந்து முன்னணி வெளியீடு. பக்.19

இயற்கையையும், சமூகத்தையும் அறிவியல் நோக்கிலிருந்து புரிந்து கொள்வதே கல்வி. முட்டாள்தனங்களையும், மூடநம்பிக்கைகளையும் உயிராகக் கொண்டுள்ள மதங்கள் கல்வியுடன் உறவு கொள்ள எவ்வித அடிப்படையும் இல்லை. இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கல்வியை விடுவிக்க வேண்டும் என்பதுதான் மதச் சார்பின்மையின் முக்கியக் கோரிக்கை. இந்தியாவில் மதத்தோடு கல்வி கொண்டுள்ள உறவின் வரலாறு என்ன?

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடையாது என்பதைத்தான் பார்ப்பனியம் ஈராயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது. ஷாகாவில் ஸ்வயம் சேவகர்கள் ஆராதனை செய்யும் ‘மனு’ தனது தர்மத்தில் வேதம் கேட்ட காதில் ஈயத்தை ஊற்றுவது, உச்சரித்த நாக்கை வெட்டுவது உட்பட கல்வி மறுப்பிற்காகப் பெரும் தண்டனைப் பட்டியலையே உருவாக்கியிருந்தான். நடைமுறையிலும் கட்டை விரல் வெட்டப்பட்ட ஏகலைவனிலிருந்து, கண்பறிக்கப்பட்ட சேலம் கட்டிநாயக்கன்பட்டி தனம் வரை அதே ‘தர்மம்’ தான் நிலவுகின்றது.

பிராமணர் – சத்திரியர்’ போன்ற ஆளும் வர்க்கப் பிரிவினருக்காக நடத்தப்பட்ட குருகுலங்களிலும் வருணாசிரம தர்மத்தின் பாடத்திட்டம்தான் கல்வியாகக் கற்றுத் தரப்பட்டது. மத்திய காலத்தில் முகலாய மன்னர்கள் அறிமுகப்படுத்திய மதரஸா கல்வியில்  இருந்த மதசார்பின்மை அம்சங்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு இறுதியில் அங்கேயும் மதக்கல்வியே மேலோங்கியது. ஆங்கிலேயர் காலத்தில்தான் கிறித்தவ மிஷனரிகள் மூலம் நவீன கல்வி அறிமுகமாகியது. அதுவும் காலனியாதிக்கத்திற்கு உதவும் வகையிலேயே உருவாக்கப்பட்டது.

இந்த கிறித்தவ நிறுவனங்களில் அன்றும் இன்றும் படித்துப் பயனடைபவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பன – மேல் சாதியினர்தான். வெள்ளையர் காலத்து ஐ.சி.எஸ். தற்போதைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கும்பல்களெல்லாம் கிறித்தவக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அத்வானி போன்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் இங்கு படித்தவர்களே. அந்த வகையில் பார்த்தால் மிஷனரிகளின் சேவையில் முக்கியப் பங்கை இவர்கள்தான் அனுபவித்திருக்கின்றனர்.

‘இயேசு சங்கம்’ நடத்தி வரும் சென்னை லயோலா கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்று என்கிறார்கள். நடிகர்கள், பணக்காரர்கள், அதிகாரி – அரசியல்வாதிகள் போன்றவர்களின் வாரிசுகள் இங்குதான் படிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கிறித்தவப் பள்ளியோ, அரசுப் பள்ளியோ அங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை அம்பேத்கார் முதல் குப்பன் சுப்பன் வரை மாறவில்லை. அவர்கள் படிக்கக்கூடாது என்ற மனுதர்மம் இன்னும் இறக்கவில்லை.

தற்சமயம் கல்வி நிறுவனங்கள் நடத்தும் சிறுபான்மைப் பிரிவினருக்கு சட்டத்தில் சில சலுகைகள் உள்ளது உண்மை. ஆனால், இச்சலுகை மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, மொழி, இனம் என்று பலருக்கும் தரப்படுகிறது. அதை வைத்தே ராமகிருஷ்ணா மிஷன், சமஸ்கிருதக் கல்லூரிகள் போன்ற இந்துக்களும் சலுகைகளை அனுபவிக்கின்றனர். ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் நியமன முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கு வங்க அரசு தலையிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடிய மிஷன், ‘நாங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரை வழிபடும் சிறுபான்மையினர், இந்துக்களல்ல’ என்று பகிரங்கமாக அறிவித்தது.

கல்விக் கொள்ளைக்காக மதத்தையே மாற்றிக்கொள்கிறார்களே என்று எந்த இந்து பக்தரும் இதுவரை கேள்வி எழுப்பியதில்லை. இத்தகைய முறைகேடுகள் எல்லாத் தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடந்து வருகின்றன. சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் விதி விலக்கல்ல. கேரளத்தில் கிறித்தவ மிஷனரிகள், நாயர்கள் மற்றும் இசுலாமியக் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த முனைந்த நம்பூதிரிபாடு அரசு அதற்காகவே கவிழ்க்கப்பட்டதும் ஒரு உதாரணம்.

சிறுபான்மையினருக்கான கல்விச் சலுகைகளால் இசுலாமிய மக்கள் அடைந்த பயன் என்ன? இந்துக்களை விடவும் கல்வி, வேலை வாய்ப்பில் அவர்கள் அதிகம் பயனடைந்திருக்கிறார்களா என்பதையும் நாம் பரிசீலிப்போம். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி (1987-88) கிராமப்புற முசுலீம்களில் 58% பேர் கல்வியறிவற்றவர்கள். இந்துக்களில் கல்வியறிவற்றோர் 51% பேர். நகர்ப்புறத்திலோ 42% முசுலீம்கள் கல்வியறிவற்றவர்கள்; இந்துக்களில் 25% பேர் கல்வியறிவற்றவர்கள், முசுலீம் பெண்களின் கல்வியறிவின்மை பற்றிச் சொல்லவே தேவையில்லை.

நகர்ப்புற இந்துக்களில் பட்டப்படிப்பு படித்தோர் 8% பேர்; முசுலீம்களில் 2.3%தான் பட்டதாரிகள். மேலும் முசுலீம் கல்வி நிறுவனங்களில் முசுலீம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கைதான் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. படிப்பதே வேலை வாய்ப்புக்காகத்தான் என்ற நிலைமையும், அரசு வேலை வாய்ப்புகளில் முசுலீம்கள் புறக்கணிக்கபடுவதாலும், கல்வி கற்பதற்கான அவர்களது ஆர்வமும் இயல்பாகவே குறைந்து விடுகிறது. மேலும் ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவதென்பது இந்துக்களைவிடவும் முசுலீம் மாணவர்கள் மத்தியில்தான் அதிகமாக இருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 90% முசுலீம் மாணவர்கள் ஆரம்பப்பள்ளியையே தாண்டுவதில்லை என்கிறது கோபால் சிங் குழு (1983) அறிக்கை.

வடமாநிலங்களில் குறிப்பாக உ.பி.யில் முசுலீம் மக்களின் தாய்மொழியான உருது திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதும், பாட நூல்கள் உருது மொழியில் அச்சிடுவது வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதும், சமஸ்கிருதமயமான இந்தி திணிக்கப்படுவதும், பாடத்திட்டமே மறைமுக இந்துப் பிரச்சாரமாக இருப்பதும் இந்நிலைக்குக் கூடுதல் காரணங்களாக அமைகின்றன.

ஆனால், கல்வி அமைச்சர்களின் மாநாட்டிலே சரசுவதி வந்தனம் பாடப்படும் சூழ்நிலையில், ஆர்.எஸ்.எஸ் .இன் புரட்டல் வரலாறு கல்வித் திட்டத்தில் அமலாக்கப்படும் நிலையில், 1947 இந்தியா – பாக். பிரிவினைக் கலவரத்தில் தன் கைத்துப்பாக்கியால் முசுலீம் பெண்ணைக் கொன்றதை சுயசரிதையில் எழுதிப் பெருமைப்படும் ராஷ்டோகி (ஓய்வு பெற்ற பேராசிரியர்) போன்ற இந்து வெறியரெல்லாம் – தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறுப்பெடுக்கும் காலத்தில், சிறுபான்மை மக்கள் சலுகை தந்து சீராட்டப்படுவதாகக் கூறுவது, அப்பட்டமான பித்தலாட்டமாகும். சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, கல்வி என்பதைக் கடைச்சரக்காக்கி விற்றுவரும் சூழ்நிலையில் உழைக்கும் மக்களுக்கு எந்தச் சலுகையுமில்லை என்பதே நடைமுறை. ஒரு மதச்சார்பற்ற அரசில் மதத்தின் பிடியிலிருந்து கல்வியை விடுதலை செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்குரிய ஒரே தீர்வு. அத்தகைய அரசில் சிறுபான்மையோரின் கல்விக்கும் உத்தரவாதமிருப்பதால் அவர்களுக்குச் சலுகை வேண்டும் என்ற கேள்வியே எழாது.

கிறித்தவ – இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ஆனால், ‘இந்துக்களால்’ நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் யார்? நிறுவனத்தை நடத்துகின்ற குறிப்பிட்ட ‘மேல்’சாதியினர்தான் பெரும்பான்மையாகப் படிக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் ‘இந்துக் கல்லூரிகள்’ என்ற பெயரில் ஏராளமான நிறுவனங்கள் உண்டு. நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் ‘இந்துக் கல்லூரிகள்’ சைவ வேளாளருக்குச் சொந்தமானவை. ஆசிரியர் நியமனத்திலிருந்து, மாணவர் சேர்க்கை வரை சைவப் பிள்ளையினருக்குத்தான் முன்னுரிமை. அதைப்போல ‘ஆதித்தன் குரூப்’ நடத்தும் கல்லூரிகளில் நாடார்களுக்குத்தான் முதல் மரியாதை. தென் மாவட்டக் கலவரங்களின் போது பல தேவர் கல்லூரிகளில் படித்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அத்துடன் அவர்கள் கல்வி வாழ்க்கையும் முடிந்தது.

இப்படி தமிழகத்தில் வட்டார மேல் சாதியினரால் நடத்தப்படும் ‘இந்துக் கல்லூரிகளில்’ தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சுயநிதிக் கல்லூரிகளின் இடஒதுக்கீடு மற்றும் கட்டணங்களை முறைப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு பெறுவதே சமூகநீதி என்று பேசும் மேல் சாதிக்காரர்களெல்லாம் – இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். காரணம் தங்கள் கல்விக் கொள்ளை குறைந்துவிடும் என்பதே. ஆக ‘இந்துப்’ போர்வையில் நடத்தப்படும் இம்மோசடிகளை மறைப்பதற்கு, இந்து முன்னணியின் பிரச்சாரம் எப்படி உதவுகிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே ‘காசுக்கேற்ற கல்வி’ என்பதுதான் உண்மையான பிரச்சினை. ”தமிழ் வழிக்கல்வி வேண்டாம், (கிறித்தவ) ஆங்கில மொழிக் கல்விதான் வேண்டும்” என்று கூறும் மெட்ரிக்குலேசன் கல்விச் சங்கம் ஒரு நாள் பள்ளி அடைப்பையே நடத்தியிருக்கிறது. இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் எல்லாம் ‘இந்துக்கள்’தான். சங்கர மடம் துவக்க இருக்கும் மருத்துவக் கல்லூரியை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ‘இந்து நலன்’ பேசும் இந்து மதவெறியர்கள் இத்தகைய பிரச்சினைகளில் மக்கள் நலனுக்கு விரோதிகளாக இருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்து முன்னணி கவலைப்படும் அளவிற்கு இந்துக்கல்வி நிறுவனங்கள் இல்லாமலில்லை. சங்கரமடம், சைவ ஆதீனங்கள், பங்காரு, சாயிபாபா, ஆனந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கேந்திரா, ஆர்.எஸ்.எஸ்.ன் சேவா பாரதி, ஜெயலலிதா, சசிகலா, உடையர், வாழப்பாடி, தங்கபாலு, விஸ்வநாதன், தம்பித்துரை, சோ.பாலகிருஷ்ணன் இன்னபிற வகையாறாக்களெல்லாம் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இனி, இராம.கோபாலன் ஒரு உண்மையான இந்துவாக இருந்தால் கீழ்க்கண்ட உண்மையான இந்து நலனுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

  1. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசதத் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சமசுகிருத மொழியில்தான் கல்வி. மிலேச்ச, சூத்திர மொழிகளுக்கு இடமில்லை. மெக்காலே பாணியிலான கல்வித் திட்டத்திற்குப் பதில் வேத, உபநிடத, புராண, இதிகாச, மனுதர்மம் முதலியவைதான் கல்வித்திட்டம். இந்துக்களே அணிதிரண்டு வாருங்கள்!
  2. இந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மட்டும் இந்து மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது. அல்லது குறைவான கட்டணமே வசூலிக்க வேண்டும்.
  3. கிறித்தவ, இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் – இந்துக்கள் யாரும் படிக்கக்கூடாது, பணியாற்றக்கூடாது!

– இப்படி ஆத்ம சுத்தியுடன் இந்து முன்னணி கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டும். போராடினால் இந்து மத வெறியர்களை ஒழிப்பதற்கு எவரும் மெனக்கெட வேண்டியதில்லை. ‘இந்துக்களே’ பார்த்துக்கொள்வார்கள்.

-தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

9
ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
படம் - www.thehindu.com

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.  நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை  எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை  ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை  ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.

பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.

மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் ‘மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.

அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.

ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய  ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக்  குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.

முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.

இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!

74

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!சென்னை, அரக்கோணம் அருகேயுள்ள சித்தேரியில் 13.09.2011 இரவு நடந்த இரயில் விபத்து குறித்து அறிந்திருப்பீர்கள். அதில் பத்து பேர் உயிரிழக்க, 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. இயற்கை சீற்றமல்லாது நடக்கும் விபத்துக்கள் இந்தியா போல எங்கும் நடப்பதில்லை. பாசஞ்சர், புறநகர் இரயில்களில் பயணிக்கும் சாதரண மக்கள் பாதுகாப்பாக செல்வார்கள் என்பதற்கு நமது அதிகார வர்க்கம் எப்போதும் கவலைப்படுவதில்லை.

விபத்து குறித்து முறையான விசாரணை நடந்து காரணங்கள் கண்டறியப்படுவதற்கு முன்னரே அமைச்சர்களும், அதிகார வர்க்கமும் புறநகர் ரயிலின் ஓட்டுநரின் தவறென்று கை கழுவதில் அவசரம் காட்டுகின்றனர். அவர்தான் தவறு செய்தார் என்பதை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடித்துவிட்டு அறிவிக்கலாமே? எல்லா விபத்திற்கும் ரயில்வே ஓட்டுநர்கள்தான் காரணமென்றால் அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எந்தப் பொறுப்புமில்லையா?

ஓட்டுநர்களின் தயவில் மட்டும்தான் பொதுமக்களது உயிர் பயணிக்கிறது என்பது உண்மையானால் ரயில்வேயின் பொது மேலாளரது ஊதியத்தை ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர்களின் ஊதியத்தை அதிகாரிகளுக்கும் மாற்றி அமைக்கலாமே? ஒத்துக் கொள்வார்களா, நமது அதிகாரிகள்?

இரவு 9.30 மணிக்கு விபத்து நடக்கிறது. மழையும் பெய்கிறது. எனினும் அருகாமையில் இருந்த மக்கள் உடன் வந்திருக்கிறார்கள். அருகாமை இடத்தில் ஒரு திருமண விருந்திற்கு பிரியாணி சமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த முகமது அலியும் அவரது 20 உதவியாளர்களும் சமையலை நிறுத்தி விட்டு ஓடி வந்திருக்கிறார்கள். இடிபாடுகளுக்கிடையில் உள்ள மக்களை காப்பாற்றியிருக்கிறார்கள். தலையற்ற, கை, கால்களற்ற உடல்களையும் எடுத்திருக்கிறார்கள்.

பின்னர் அந்த வட்டாரத்தில் உள்ள மருத்துவர்கள் பலரையும் வற்புறுத்தி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எல் அன்ட் டி நிறுவனத்தின் தொழிலாளர்களும், லாரி ஓட்டுநர்களும் கூட உடன் வந்து நிவாரண வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அரக்கோணம் பகுதியில் உள்ள அநேக டாக்சி ஓட்டுநர்களும் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வேலையினை அவர்களாகவே முன்வந்து இரவு முழுவதும் செய்திருக்கிறார்கள்.

விபத்தில் காயமடைந்தவர்களை சுமந்து சென்றால் பணம் கிடைக்காது, வண்டியையும் கழுவ வேண்டும், பிற சவாரிகளையும் இழக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களை அப்படி செய்யச் சொன்னது எது? திருமண விருந்து வேலையை நிறுத்தி விட்டு சிதறிக்கிடக்கும் மனிதச்சதை கண்டு நிலை தவறாமல், காயம் பட்ட உயிர்களை அந்த சமையல் தொழிலாளிகள் காப்பாற்றியது எதனால்?

ஒரு வேளை சித்தேரி கிராமத்தில் ஏதாவது ஒரு கோயில் குடமுழுக்கிற்காக நூறு புரோகிதப் பார்ப்பனர்கள் யாகம் வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கையில் இந்த விபத்து நடந்தால் என்ன செய்திருப்பார்கள்? ரத்தமும், எலும்புத் துண்டுகளும் சிதறி, மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக இருக்கும் நிலை கண்டு மயக்கம் அடைந்திருப்பார்களோ? என்ன இருந்தாலும் சைவ உணவு உட்கொள்ளும் அந்த புனிதர்களுக்கு இந்த வதைக்கூடத்தில் வேலையில்லையே? ஆனால் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் அந்த ‘பாய்’கள்தான் விபத்தில் சிக்கிய மனிதர்களின் உடலை யாரும் சொல்லாமலேயே சுமந்தார்கள் என்பதன் காரணம் என்ன? நமக்குத் தோழன் பாயா, இல்லை புரோகிதப் பார்ப்பனரா?

ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் என்றால் ரவுடிகள் என்று முகத்தை சுழிக்கும் படித்த நடுத்தர வர்க்கம், நாளையே எல் அன்ட் டி தொழிலாளிகள் ஊதிய உயர்விற்காக வேலை நிறுத்தம் என்றால் கரித்துக் கொட்டும் அந்த அன்பர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

காயம்பட்டவர்களை யாரும் அப்பல்லோ மருத்தவமனைக்கு கொண்டு செல்லப் போவதில்லை. அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள். தானாக சரியாகும் சளியென்றாலும் தனியார் மருத்தவமனைக்கு தட்சணை வைக்கும் மேட்டுக்குடியினர்தான் தனியார்மயத்திற்கு ஆதரவாக வெறியுடன் கூச்சலிடுவார்கள். ஆனால் விபத்தில் படுகாயமுற்ற மக்களை காப்பாற்ற அந்த தனியார் மயம் முன்வராது.

ஆம். இந்த உலகில் இயற்கைச் சீற்றமோ, துயரமான விபத்தோ எதுவாக இருந்தாலும், உதவிக்கு ஆண்டவன் வரப்போவதில்லை. உழைக்கும் மக்கள்தான் உதவிக்கு வருவார்கள்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

15
ஜெயா பிளஸ் வழங்கும்  தாலியறுக்கும் டாஸ்மாக் – சீசன் 2
கருணாநிதி அரசின் இலவசத் திட்டங்களைச் சாடிய ‘அம்மா’வின் படத்தைப் பெட்டியில் ஒட்டிக் கொண்டு, ‘அம்மா’வுடன் இலவச கவர்ச்சி பட்ஜெட்டை சமர்ப்பிக்க வரும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

ழைகளின் கோவணத்தைப் பிடுங்காத குறையாக வரிவிதிப்பைத் தீவிரப்படுத்துவது, தமிழனைப் போதையில் தள்ளி சாராயத்தின் மூலம் கிடைக்கும் கொழுத்த வருவாயிலிருந்து எலும்புத்துண்டு போல கவர்ச்சித் திட்டங்களுக்கு வாரியிறைப்பது என்ற உத்தியுடன் கிளம்பியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. தமிழச்சிகளின் தாலியறுத்து இலவச கலர் டிவிக்களை கருணாநிதி கொடுத்தார் என்றால், அதே சாராய உத்தியோடு கலர் டிவிக்களுக்குப் பதிலாக மிக்சி, கிரைண்டரைக் கொடுக்கக் கிளம்பியிருக்கிறார், ஜெயலலிதா. மதுபானங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 6,246 கோடி கிடைத்த விற்பனை வரி, இந்த ஆண்டு ரூ. 7,755 கோடியாக அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டைவிட கலால் வரி மூலம் ரூ. 2,076 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும் ஜெயா அரசின் 201112ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முந்தைய கருணாநிதி ஆட்சியைப் போலவே தமிழக மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, சாராய விற்பனை மூலம் கூடுதலாகக் கொள்ளையடிக்க ஜெயா அரசு தீர்மானித்துள்ளது.

இலவசத் திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்தபோதெல்லாம், மக்களை ஏழைகளாக வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலி செய்த ஜெயலலிதா, இப்போது 6ஆம் வகுப்பு முதலாக மாணவர்களுக்கு பேண்ட் சர்ட், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ், ஏழைகளுக்கு மிக்சிகிரைண்டர், மின்விசிறி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்  என 8,900 கோடி ரூபாய்க்குப் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதோடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆடுமாடுகள் தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

போலி கம்யூனிஸ்டுகளால் அன்றாடம் துதிபாடப்படும் ஜெயா, பட்ஜெட்டுக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் அரசு வருவாயைப் பெருக்குவது என்ற பெயரில், இதற்கு முன் 4 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டு வரியை(வாட் வரியை) 5 சதவீதமாக அவசர அவசரமாக உயர்த்தினார். இக்கூடுதல் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை கிலோ ரூ.2 முதல் 3 வரையிலும், சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ரூ.5 வரையிலும் அதிகரித்துள்ளதோடு, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. இக்கூடுதல் வரி விதிப்பால் மொத்தமாக அரசுக்கு ரூ.5200 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி, பட்ஜெட்டுக்கு முன்னதாக வரிகளைப் போட்டுவிட்டு, இப்போது வரிகளே இல்லாத பட்ஜெட் என்று மாய்மாலம் செய்தும், இலவசக் கவர்ச்சித் திட்டங்களின் ஒளிவெள்ளத்தில் வரிக் கொள்ளையை மூடிமறைக்கவும் பாசிச ஜெயா கும்பல் எத்தணிக்கிறது.

வழக்கம் போலவே, “கருணாநிதி கஜானாவைக் காலியாக்கி ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி கடன் வைத்துவிட்டுப் போயுள்ளார்; அதைக் குறைக்கப் போகிறோம்” என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால், நிர்வாக சூரப்புலியாகப் பார்ப்பன ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயா, எந்த அளவுக்குக் குறைத்திருக்கிறார் என்று பார்த்தால், 31.3.2012இல் 1,18,801 கோடி ரூபாயாக மாநில அரசின் கடன் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டின் கடன் மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடிக்கு அதிகரித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையால் தமிழகத்தில் நீடித்துவரும் மின்வெட்டு 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும் என்று ஆரவாரத்துடன் அறிவிக்கிறார், அமைச்சர் நத்தம் விசுவநாதன். முந்தைய தி.மு.க. அரசின் மின்திட்டங்கள் நிறைவேறுவதால்தான் மின்தடை முற்றாக நீங்குகிறதே தவிர, இது ஜெயலலிதாவின் மூன்று மாத கால நிர்வாக சூரத்தனத்தால் விளைந்த சாதனை அல்ல.

“விலைவாசி உயர்வுக்கு மைய அரசுதான் காரணம்” என்றும், “தமிழக மக்களுக்கு நன்மை செய்ய விடாமல் மத்திய அரசு தடையாக இருக்கிறது, மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை” என்றும் ஆவேசமாகக் கூப்பாடு போடும் ஜெயலலிதா, “மைய அரசிடம் ரூ.2.5 லட்சம் கோடி கோரிய நிதியில் ரூ.10,000 கோடியாவது தமிழகத்துக்குக் கொடுத்திருந்தால், கூடுதலாக வரி போட்டிருக்க மாட்டோம்” என்று பழியை மைய அரசின் மீது சுமத்துகிறார். ஆனால், திட்டக்குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது, மாநில அரசு கேட்டதைவிட மத்திய அரசு அதிகமாகக் கொடுத்ததாகக் கூறியதும் இதே ஜெயாதான். இப்போது, கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று சொல்பவரும் இவரேதான். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மைய அரசு அநியாயமாக உயர்த்தியபோது, மாநில அரசின் சார்பில் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிப்பதாகப் பம்மாத்து செய்த ஜெயா, அக் கூடுதல் செலவை வாட் வரி விதிப்பின் மூலமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் விலையை ரூ.3 அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாக உயர்த்தியும் மீண்டும் பறித்துக் கொண்டுவிட்டார்.

ஜெயா பிளஸ் வழங்கும்  தாலியறுக்கும் டாஸ்மாக் – சீசன் 2
தமிழச்சிகளின் தாலியை அறுக்கும் சாராயத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் ஜெயா.

முந்தைய கருணாநிதி அரசு “செம்மை நெல் சாகுபடி”, “ராஜராஜன்1000” என்றெல்லாம் பெயர் சூட்டிய ஒற்றை நாற்று நடவு என்று விவசாயிகளால் குறிப்பிடப்படுவதையே பெயர் மாற்றி “திருந்திய நெல் சாகுபடி” என்று அறிவித்துள்ள ஜெயா அரசு, திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தைப் பரவலாக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது தவிர, நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியைப் பரவலாக்குதல், பயறு வகைகள்  எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், பசுமைக் குடில், துல்லிய பண்ணைய முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அடர் நடவு முறை போன்றவை தீவிரமாகப் பரவலாக்குவது என்று அடுக்கடுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தியைப் பரவலாக்கக் கூடாது என சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதும், பி.டி. பருத்தியைப் பரவலாக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது என்று ஜெயா அறிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் பெரிதும் சார்ந்துள்ள தனியார் விதைக் கம்பெனிகள், பி.டி. பருத்தி விதைகளை விற்பதைத் தடுக்க அவரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக அரசின் வசமுள்ள நிலங்களை ஒருங்கிணைத்தும், நில உரிமையாளர்களைப் பாதிக்காதவண்ணம் தனியார் நிலத்தைக் கையகப்படுத்தியும் நில வங்கி ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி அரசு சிப்காட் மூலமாக செய்து வந்த நிலப்பறிப்பு வேலையை, இப்போது ஜெயா அரசு நிலவங்கியின் மூலமாகச் செய்யப்போகிறது. பலியாட்டுக்கு மாலை போட்டுக் கொண்டு வருவதைப் போல, விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்து, விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றி நாடோடிகளாக்கும் இச்சதியை மூடிமறைத்துக் கொண்டு, விவசாய வளர்ச்சித் திட்டங்களை ஆரவாரமாக ஜெயா அரசு அறிவித்துள்ளது.

நேற்றுவரை ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள், இலவசங்களே கூடாது, அதனால் மக்கள் சோம்பேறிகளாக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்டன. இப்போது ஜெயலலிதா அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை “ஆக்கபூர்வமான திட்டங்கள்’’, “வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள்’’, “கிராமப்புறத்துக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள்” என்றும் ஏற்றிப் போற்றி துதிபாடிக் கொண்டிருக்கின்றன. நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு ஜெயா அரசின் ஆரவார விவசாயத் திட்டங்களால் எந்த விவசாயி முன்னேற முடியும் என்பது இந்தக் கோயபல்சுகளுக்கே வெளிச்சம்.

_______________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்!!

17

ம்புங்கள் எம்.கே நாராயணணை மறந்திருக்க மாட்டீர்கள். பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்த நாராயணன், கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி அன்று அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற சிவசங்கர் மேனன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்த பதவி மாற்றம் குறித்து இந்தியாவின் அமெரிக்க தூதரான திமோதி ரோமர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஹெட்லி - எம்.கே.நாராயணன்
ஹெட்லி - எம்.கே.நாராயணன்

அந்தக் கடிதத்தில், “மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என, இந்திய அரசு கேட்பதெல்லாம், சும்மா பம்மாத்து வேலை தான். உண்மையில், ஹெட்லியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களை திசை திருப்பவே, ஹெட்லியை கொண்டுவர வேண்டும் என இந்திய அரசு கேட்கிறது. இந்தத் தகவலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே என்னிடம் தெரிவித்தார்’ என்று, ரோமர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மேலும், ஹெட்லியை அனுப்பும்படி அமெரிக்காவை இந்திய அரசு கேட்க வேண்டாம். அப்படிக் கேட்டாலும், அமெரிக்க விதிகளின்படி அதை நிறைவேற்றுவது சாத்தியமல்ல’ என, நாராயணனிடம் தான் கூறியதாகவும் ரோமர் தெரிவித்துள்ளார். 2009-ம் ஆண்டு டிசம்பரில் இந்த விஷயங்கள் நடந்தன என்று, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் எம்.கே.நாராயணின் பதவி மாற்றம் குறித்தும், அவர் காஷ்மீர் பிரச்சினையில் பழமைவாதமாகவும், அதிக்கம் செய்யும் தரப்பின் கருத்தை பிரதிபலிப்பதாகவும், அவருக்கும் நேரு, இந்திரா குடும்பத்திற்கும் உள்ள செல்வாக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்க அம்பி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மாற்றப்பட்டிருப்பதையும் அமெரிக்கர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதும் அதிலிருந்து தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மட்டுமல்ல நம்புங்கள் நாராயணனுக்கும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “”விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. ஹெட்லியை எப்படியும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டியது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அத்துடன், ஹெட்லியை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதிலும் மத்திய அரசு அக்கறை காட்டியது,” என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் உடனான தன் பேச்சு குறித்து, அவர் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறார். அதைப் பற்றியும் கருத்து சொல்லியிருந்தால் அண்ணாத்தேவின் தேசசேவை சந்தி சிரித்திருக்கும்.

இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்? நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன?

அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாமல் அதன் இரகசியங்களை இப்படி ஒரு வெளிநாட்டு தூதரிடம் பேசுவது என்ன செயல்? இது மட்டும் தேசத் துரோகமில்லையா? இங்கு நாராயணன் கூறியிருக்கும் கருத்துக்களின் படி இந்திய அரசு மக்களை திசை திருப்புவதற்காக ஹெட்லியைப் பற்றி பேசுகிறது என்பது உண்மைதான். பாக்குடனான பதட்டமே இவர்களது அரசியல் லாபத்திற்காகத்தான் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆனால் இந்த நாராயணன் இந்திய அரசைப் போல ஒரு அமெரிக்க அடிமை என்பதையும், அமெரிக்கர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுவதைப் பற்றியும் பேசியிருப்பதுதான் குறிப்பிடத் தக்கது. இருந்தும் இவரை அமெரிக்கா கை கழுவியிருப்பதற்கு காரணம், இன்னும் மோசமான அடிமை வேண்டும் என்பதுதான்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடக்கும் போது இந்த நாராயணன்தான் தே.பா.ஆலோசகர். அப்போது இவர் கொழும்பு சென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல சீனெல்லாம் போட்டார். அப்போது இவர் ராஜபக்சேவிடம் என்ன பேசியிருப்பார்? ” உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறோம். சீக்கிரம் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் முடித்து விடுங்கள், தமிழ்நாட்டிலிருந்து வரும் குரல்களையெல்லாம் கண்டு கொள்ளதீர்கள்”, என்றுதான் சொல்லியிருப்பார்.

இந்திய அரசும் அதன் அடிநாதமாய் விளங்கும் அதிகார வர்க்கமும் மக்களை எப்படி கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள், எவ்வாறு அமெரிக்க அடிமைகளாக பணிபுரிகிறார்கள் என்பதற்கு இந்த நம்புங்கள் எம்.கே.நாராயணன் ஒரு சான்று.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!

59
கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
படம் www.thehindu.com

2002 குஜராத் கலவரத்தில் இந்துமதவெறியர்களால் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அகமதாபாத் நீதிமன்றம் குஜராத் இனப்படுகொலை வழக்கை ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்துமதவெறியர்களின் இனப்படுகொலையை, இந்துமதவெறியர்கள் ஆளும் மாநிலத்தில் விசாரித்தால் கொலைகாரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது சிறு குழுந்தைக்கும் தெரியும்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆ.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழுவும் இந்துமதவெறியர்களை குறிவைத்து விசாரிக்கமால் ஏதோ விசாரணை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜகியா, சிறப்புப் புலனாய்வுக் குழுவும் சரிவர விசாரணை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மோடியின் அதிகாரமும், மாநிலமே இந்துமதவெறியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவும் சோடை போவதில் தவறவில்லை.

இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை ஆய்வு செய்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. நீதிமன்றத்தின் அமிகஸ் குரியாக (நீதிமன்ற நண்பர்) செயல்பட்ட அவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதுவும் சொதப்பலாகத்தான் இருக்குமென்பதை இப்போது ஊகிக்க முடிகிறது.

குஜராத் கலவரத்தை ஒடுக்க முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மட்டுமல்ல இனப்படுகொலைக்கும் அவர்கள்தான் தலைமை தாங்கியிருந்தார்கள். இதனால் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜகியா கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அமிகஸ் குரியின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், குஜராத் கலவர வழக்கில் முதல்வர் மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டனர்.

இதுகுறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்றும், இந்த வழக்கை இனிமேலும் தொடர்ந்து கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் கூறி, உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை ஆமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு என்ன காரணமென்று அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறது என்று நாடு முழுவதுமே பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.

பா.ஜ.க தலைவர்கள் இந்தத் தீர்ப்பை மனமுருக வரவேற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். மோடி தனது ட்விட்டில் GOD IS GREAT என்று தெரிவிக்க அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி முதலான பா.ஜ.க தலைவர்கள் தாங்கள் ஏற்கனவே மோடி ஒரு நிரபராதி என்பதை பல முறை சொல்லி வருவதாகவும் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

கணவனை இந்துமதவெறியர்களுக்கு பலிகொடுத்து அதற்காக வழக்கு தொடுத்த ஜகியாவோ இந்த தீர்ப்பு தனக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாகவும், தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார். இனி என்ன சட்டப் போராட்டம் நடத்த முடியும்?

கவனியுங்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மோடி குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த முடிவை விசாரித்து எடுக்குமாறு அகமதாபாத் நீதிமன்றத்திடம்தான் கேட்டிருக்கிறது. இதற்கே ஏதோ வழக்கிலிருந்து விடுதலை செய்தது போல பா.ஜ.க தலைவர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?

அகமதாபாத் நீதிமன்றம் குஜராத்தில் இருப்பதால், தீர்ப்பை நாமே எழுதிவிடலாம் என்ற திமிரன்றி வேறு என்ன?

டெல்லி குண்டுவெடிப்பில் 12 பேர் இறந்த உடன் எத்தனை எத்தனை கவனிப்புக்கள், விசாரிப்புகள், உளவுத்துறை அமைப்புகள், அமைச்சர்கள், ஐ.எஸ்.சதி, குற்றவாளிகளின் படங்கள் என்று எத்தனை வேகம்? ஆனால் 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த குஜராத் கலவரம் குறித்து தெகல்காவின் நேரடி வீடியோ ஆதாரம் வந்த பிறகும் குற்றவாளிகளை இன்னும் நெருங்க முடியவில்லை என்றால்?

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில் கொலைகார மோடியும் அவரது கொலைகார கூட்டத்தையும் இனி யாருமே தண்டிக்கவோ, சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கவோ முடியாது. உறவினர்களை இழந்த குஜராத் முசுலீம் மக்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்களில் சில இளைஞர்கள் இந்து மதவெறியர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று விரக்தியடைந்தால் என்ன நடக்கும்?

இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?

(செய்தி தினமணியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஒரு பா.ஜ.க பெருச்சாளியின் வளைக்குள்ளே…

26

ஜனார்தன ரெட்டிநீங்கள் எதை பெயரிட்டுச் சொன்னாலும் அது அவரிடம் இருந்தது. 44 வயதான ரெட்டி தனது வீட்டருகே 3 அடுக்கு பிரம்மாண்ட வளாகம் ஒன்றை தனது குழந்தைகள் விளையாட மட்டும் அமைத்திருந்தார்.  ரெட்டியின் குழந்தைகள் பாதுகாப்பு கருதி வெளியில் செல்வதில்லை.  மாறாக தங்கள் நண்பர்களை அழைத்து வந்து தமது வளாகத்தில் தான் விளையாடுவார்கள். ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை.

ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 40 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை நன்கொடையாக கொடுத்ததோடு, அதே போல் மற்றொன்றை தனது பெல்லாரி வீட்டிலும் வைத்திருக்கிறார்.  அவர் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்தால் சந்தனத்தால் வேலைப்பாடு செய்த அச்சு ஒன்றில் மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு அந்த வைர கிரீடம் சுழன்று நம்மீது ஒளிக்கதிர்களை வீசும். பெங்களூருவில் உள்ள நிரந்தர அறை ஒன்று அவருக்காக ஒதுக்கப்பட்ட டாஜ் நட்சத்திர விடுதியின் மேற்கு எல்லைக்கு அருகில் ரெட்டிக்கு பாரிஜாதா என்ற பெயரில் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.  அதிகமான சொகுசுக் கார்கள் ரெட்டியின் வீட்டில். பென்ட்லே, மெர்சிடீஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் என பல இதில் அடங்கும்.  விடுமுறைகளை உலகின் பல பகுதியிலுள்ள உல்லாச இடங்களில் பொழுதை கழிப்பவர் ரெட்டி.

சுரங்க தொழில் உச்சத்தை அடைந்து சில வருடங்களுக்கு முன் சுறுசுறுப்பானபோது, பெல்லாரிக்கும், பெங்களூருவிற்கும் சிற்றுண்டிக்கு, மதிய அல்லது இரவு உணவிற்கு ஹெலிகாப்டரில் பறப்பார் ரெட்டி.

ஆனால் சூழல் எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக காரில்தான் அதிக அளவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  3 ஹெலிகாப்டர் வைத்திருந்த ரெட்டியிடம் தற்போது ஒன்றுதான் உள்ளது.  1990களின் இறுதியில் கோடிக்கணக்கில் கடனில் இருந்த ரெட்டி கடந்த 12 ஆண்டு காலத்திற்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டபடி பார்த்தாலே அவரது மனைவி பெயரில் மட்டும் 150 கோடி சொத்து. இந்த கொழுத்தலுக்கு நன்றி சொல்ல வேண்டியது சுரங்கத் தொழிலுக்கு.  பெல்லாரியில் அவர் வீட்டருகே உள்ள மலைகுன்றை விளக்குகளால் அலங்கரிக்க மட்டும் ஆன செலவு 30 லட்சம்.

அவரது அரசியல் கலந்தாய்விற்காக உள்ள அறையின் பெயர் குட்டீரா.  அங்கு நுழைந்தால் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி, மூத்த பா ஜ க தலைவர் எல் கே அத்வானி, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரபபா ஆகியோரின் பிரும்மாண்ட உருவப்படங்கள் நம்மை வரவேற்கும்.

ரெட்டியின் வீடு ஒரு கோட்டையை போன்றது. ஒரு பார்வையாளர் உள்ளே செல்ல வேண்டுமெனில் 3 செக்போஸ்ட், ஸ்கேனர்கள், வெடிகுண்டு சோதனைகள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்ற அடுக்குகளை கடந்து தான் செல்ல வேண்டும்.

பணங்களின் சுரங்கம்

தங்கம், வெள்ளி, பண்ணை வீடுகள், கட்டிடங்கள், முன்னோர் சொத்துக்கள், என முன்னாள் அமைச்சரான ரெட்டியின் சொத்துக்கள் 153.49 கோடிகள்


மலை போல் நகைகள்

2.2 கோடி மதிப்புள்ள தங்க இருக்கை (சேர்)

2.58 கோடி மதிப்பில் தங்க சிலைகள்

13.15 லட்சம் மதிப்பில் தங்க பெல்ட்

20.87 லட்சம் மதிப்பில் தங்க சாப்பாட்டு தட்டு, ஸ்பூன், சிறு பாத்திரங்கள்

இவை தவிர வைர, வைடூரிய, கோமேதக கற்கள், கழுத்து நகைகள், ஆண்கள் அணியும் கங்கணங்கள், மோதிரங்கள், வளையல்கள் என ஒரு நகைக் குவியலே காணப்பட்டதாம்.

 

வருமானமும் முதலீடுகளும்-

கர்நாடக லோக்யுக்தா முன் அவர் சமா்ப்பித்த விபரங்களின்படி

பணம் ரொக்க கையிருப்பு

1.11 லட்சம்

கார் – லேன்சர்

ஆண்டுச் சம்பளம் – 31.5 கோடி

வியாபார வருவாய் – 18 கோடி

வட்டிகளின் மூலம் வருவாய் – 1.8 கோடி

காப்பீடு (இன்சூரன்ஸ்) – 18.91 கோடி

பரஸ்பர நிதி முதலீடு – 4.2 கோடி

பத்திரங்கள் – 14.4 கோடி

பங்கு முதலீடுகள் – 47.31 கோடி

மக்களுக்கு கடன் முன்பணம் – 8.6 கோடி

வியாபார நிறுவனங்களில் முதலீடு – 2.9 கோடி

வங்கி முதலீடுகள் – 14.51 கோடி

வங்கி சேமிப்பு கணக்குகள் – 60.79 லட்சங்கள்

அஞ்சலக முதலீடு – 24 லட்சங்கள்

 

பண்ணை வீட்டு சொத்துக்கள்-

பண்ணை வீடு 19.71 ஏக்கர்

4.4 கோடி மதிப்பில் 7800 சதுர அடி இடம்

ஆர் எம் வி விரிவாகத்தில் பெங்களூருவிலும், பெல்லாரியிலும் இரண்டு கட்டிடங்கள்

பெல்லாரியில் மூதாதையர் சொத்து 40 லட்சம்

பொறுப்புகள் – 16.82 கோடி

 

 குடும்ப வருவாய்-

மனைவி அருணா ரெட்டியின் சொத்துக்களை கணக்கிட்டால் அது ரெட்டியின் கணக்கிற்கு மேல் செல்லும்

ஆண்டுச் சம்பளம் – 16.5 கோடி

வியாபார வருவாய் 22.69 கோடி

நகைகள், இன்சூரன்ஸ், பங்கு வர்த்தகம், முதலீடுகள் என கணக்கிட்டால் கோடிகளில் வரும்

இவை தவிர இவரது குழந்தைகள் பிராமணி மற்றும் கிரீத்தியின்  வருடாந்திர வியாபார வருவாய் 3.7 கோடி

__________________________________________________________

நன்றி – டைம்ஸ் ஆப் இந்தியா, தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

176

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.

விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.

விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.

இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -
இமானுவேல் சேகரன்

ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?

அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.

ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.

ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.

முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.

இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு,  துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.

“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

_____________________________________________________________

குருசாமி மயில்வாகனன்

________________________________________________________