Saturday, June 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 767

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மெட்ரிக் பள்ளியில் 4 வயது யுகேஜி சிறுமிக்கு ஆசிரியைகள் செய்த பாலியல் வன்கொடுமை!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டத்தில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார்மய கல்வியின்  தரங்கெட்டத் தனத்தைப் பாருங்கள்!

கல்வித்துறை,  காவல் துறை அதிகாரிகள் பள்ளி முதலாளிக்கு ஆதரவாக!

இதை அம்பலப்படுத்த தயங்கிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்!

_____________________________________________

வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு 19 ஆண்டு நெடிய போராட்டத்திற்குப் பிறகே ஓரளவு நீதி கிடைத்திருக்கிறது. எளியோரை அதிகாரம் கொண்டோர் குதறுவதும், அதை எதிர்க்க இயலாமல் மக்கள் சகித்துக் கொண்டு வாழ்வதுமான சூழ்நிலையில் இத்தகைய குற்றம் இழைத்தோரை அதிகாரவர்க்கம், காவல்துறை, அரசு எத்தனை மெனக்கெட்டு பாதுகாக்கிறது என்பதற்கு வாச்சாத்தி ஒரு எடுத்துக்காட்டு.

இங்கே ஒரு நான்கு வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த நீண்ட போராட்டத்திற்கு பிறகே அதை முறைப்படி விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது. இதே கொடுமை அரசு பள்ளிகளில் நடந்திருந்தால் அவர்கள் நாம் தட்டிக்கேட்க முடியும். ஆனால் தனியார் பள்ளிகள் என்றால் குற்றவாளிகளைப் பாதுகாக்க தனியார் முதலாளியும், அவரது பணபலத்தினால் ஊடகங்களும், காவல்துறையும் உதவி செய்ய ஓடிவருகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்பது தனியார் கல்வி முதலாளிகளிடம் இருக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற வேண்டுமென்றால் இத்தனை இடர்ப்பாடுகளை நமது அரசமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அநீதிகளை உடனுக்குடன் தட்டிக் கேட்பதற்கு பெற்றோரும், மக்களும் தயாராகும் போதும், இதன் ஊற்று மூலமான தனியார் கல்வி மயத்தை தட்டிக்கேட்கும் போதுமே இத்தகைய கொடுமைகளை நாம் எதிர்காலத்தில் நிறுத்தமுடியும்.

– வினவு

____________________________________________

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்  யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமியிடம் பிரின்சிபால் லசி போஸ்கோ மற்றும் ஆசிரியர் போஸ்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர். அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.

அது முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டன….

 

   

பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா
பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா

ந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் அன்று வரவில்லை. ஏ.கே.டி பள்ளியில் சுமார் 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்சி, ஸ்டேட் போர்டு, மெட்ரிக் ஆகிய பள்ளிகள் ஒரே வளாகத்தில் உள்ளது. கூடவே பொறியியல் கல்லுரி,  பி.எட், டி.டிஎட்  மற்றும் அனைத்து கல்விக்கான உதிரி பாகங்களும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய பெரிய நிறுவனம். ஏ.கே.டி  பள்ளியின் முதலாளி மகேந்திரனுக்கு மாவட்டம் கடந்து பல பேருந்துகள் ஓடுகிறது. லாட்ஜ், நஞ்சை, புஞ்சை நிலங்கள் என மிக பெரும் அதிபதி.

சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை சொல்ல சொல்ல தந்தை வீடியோவில் பதிவு செய்தாலும் உறவினர்களால் பொறுக்க முடியாமல் பெண்கள் பலர் அன்று இரவே ஆசிரியைகள் வீட்டுக்கும் சென்று செருப்பால் நாலு சாத்து சாத்தினர்.மப்டி போலீசு வந்தது, “இப்ப என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க? ” என்று தடுத்தனர். “அவளுங்கள இங்கேயே கொளுத்தனும்”, என்று பெண்கள் சொன்னார்கள். “போலீசுகிட்டேயே இப்படி பேசுரீங்களா” என்று காவலர்கள் கதைத்து சென்று விட்டனர்.

விடிந்ததும் கள்ளகுறிச்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சிறுமி வீட்டு வாசலில் பள்ளி முதலாளி மகேந்திரனுடன் காத்திருந்தனர்.வழக்கறிஞர்கள் சிலர், “இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனால் நிற்காது, ஒரு ஆண் பெண்ணை ரேப் பண்ணினால்தான் தண்டனை. பெண் ஆசிரியைகள் அதுவும் குழந்தையிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது எடுபடாது.நீதிமன்றத்தில் கண்டபடி குறுக்கு விசாரணை செய்வார்கள். அதனால் நாலு சாத்து சாத்திவிட்டு இதோடு விட்ட விடுங்க”,என பலர் பல விதமாக ஆலோசனை சொன்னார்கள்.

பள்ளி முதலாளி மகேந்திரனும், “நான்கு டீச்சரையும் நான் ஏற்பாடு செய்றேன். இங்க அடிக்கீறிங்களா? எங்க வீட்ல வச்சிக்கலாமா?” என்றார். பெற்றோர்கள், “வேண்டாம் எங்க வீட்லேயே வச்சிக்கலாம்” என்று சொன்ன பிறகுதான் ஊர் பெரிய மனிதர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதை பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொள்ளலாம் என்ற பெரிய மனிதர்களிடம் மறுத்த பெற்றோர்கள் அவர்களை அனுப்பிவிட்டு தாமதிக்காமல் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். செல் பேசியை அனைத்து விட்டனர்.

ஆனாலும் பெரிய மனிதர்கள் நேரிலே வந்து நான்கு டீச்சரும் ரெடியா இருக்காங்க வாங்க என்ற விடுத்த அழைப்பை உதாசினப்படுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். ஆய்வாளர் விவேகானந்தன் ’’நீங்க புகாரை தாமதமாக கொடுக்கீறிங்க குற்றவாளிகள் தலைமறைவாகிட்டாங்க” என்றார்.

இச்சூழலில் மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரையும், ஏ.கே.டி  பள்ளியின் மற்ற பெற்றோர்களையும் நேரில் சந்தித்து காவல் துறை, பள்ளி நிர்வாகம், குற்றவாளிகள் குறித்து விசாரித்தோம். அச்சத்தால் சில எதிர்ப்பு குரல்கள் அடங்கியிருந்தன. இன்று பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் அன்று மௌனம் சாதித்தன. இவர்கள் விசாரித்தால் வழக்கு உருப்படாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகினோம். பெற்றோர்களின் பொது மக்களின் அச்சத்தை போக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம்.

சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மூடிமறைப்பதற்கு பலரிடம் ரூபாய் கட்டுகள் அளிக்கப்பட்டன. பத்திரிக்கையாளர்களும் கவனிக்கப்பட்டனர். ஆனாலும் விஷயம் பெற்றோர்கள் மத்தியில் புகைந்து சாலை மறியலாக கொழுந்து விட்டு எரிந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நான்கு முனை சந்திப்பில் போக்கு வரத்து நிலை குலைந்தது. ஏ.கே.டி  பள்ளி பெற்றோர்கள் ஆவேசத்துடன் போலிஸிடம் வாதிட்டனர். இறுதியில் குற்றவாளி ஆசிரியர்களை கைது செய்கிறோம் என்ற உத்தரவாதத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

வேறு வழியில்லா சூழலில் ஏ.கே.டி பள்ளி முதலாளியிடம் உத்தரவு பெற்று கள்ளக்குறிச்சி காவல் துறை, பிரின்ஸ்பால் லேசி போஸ்கோவை மட்டும் கைது செய்தது. பிறகு பள்ளி முதலாளி நிலைமையை சீர் படுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் டி.ஆர்.ஓ  தலைமையில் நடந்தது. இதில் கல்வி துறை, காவல்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பயப்படாமல் பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு அளிக்கும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

பள்ளி நிர்வாகம் தரப்பில் ”இது போன்ற சம்பவம் பள்ளியில் நடந்ததாக உறுதியாகவில்லை. கள்ளகுறிச்சி கல்வி வளர்ச்சியால் முன்னேற ஏ.கே.டி கல்வி நிறுவனம் பாடுபட்டு வருகிறது. இந்த நற்பெயரை கெடுக்க வெளியில் இருந்து வேலை பார்க்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது. ஏனைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளி ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக கள்ளக்குறிச்சியில் 17.8.2011 ஆர்ப்பாட்டம் நடத்த போலிசிடம் அனுமதி கோரியது. ஆனால் ஆய்வாளர் விவேகானந்தன், “அதையெல்லாம் வழக்கை உங்கள் இஷ்டத்துக்கு சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது ஆர்ப்பாட்டதுக்கு அனுமதியெல்லாம் கிடையாது” என்று மறுத்ததுடன் மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர் சங்கராபுரம் ராமலிங்கம் அவர்கள் ஆர்ப்பாட்ட அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் கையெழுத்து போட சொன்னார்.

“அனுமதி மறுப்பை எழுத்து பூர்வமாக கொடுங்கள்”, என கேட்டு வாங்கினார் இராமலிங்கம். மீண்டும் வேறு தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி DSP, SP யிடம் பதிவு தபாலில் மனு கொடுத்தோம். கிடைத்த 10 நிமிடத்தில் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தது காவல் துறை. “அனுமதி மறுக்கும் கடிதத்தில் ஏற்கனவே 14.8.2011 ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கோரிய மனுவை பரிசிலித்து அன்று மறுக்கப்பட்டது. மேற்படி வழக்கில் ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆய்வாளர் விவேகானந்தன் பள்ளி முதலாளிக்குச் சேவை ஆற்றினார்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ! ஒரு நெடிய போராட்டம் !!
போலிசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கள்ளக்குறிச்சி நகரத்திலும் ஏ.கே.டி பள்ளியில் படிக்கும் பல்வேறு கிராமங்களிலும்,

தமிழக அரசே!

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்!

வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்று!

 பெற்றோர்களே! மாணவர்களே! அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை அமுல்படுத்த போராடுவோம்!

என சுவரொட்டி ஒட்டினோம்.

பள்ளி முதலாளி மகேந்திரன் ஆள்வைத்து போஸ்டரை கிழித்தார். தலைமையாசிரியர் 20 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து பிறகு பிணையில் வெளியில் வந்தார். போடப்பட்ட வழக்கு பிரிவுகள்

     342 – சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்

                            323 – சிறுகாயம் ஏற்படுதல்,     506 (i) – குற்றமுறு மிரட்டல்

                            377 – இயற்கைக்கு மாறான பாலியல் நடவடிக்கை

இதற்கிடையில் மற்றொரு ஆசிரியர் போசியாவும் முன் ஜாமின் பெற்று விட்டார். உயர்நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 இந்த வழக்கு பொருந்தாது என்பதால் முன்ஜாமின் வழங்கியது.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீசுக்கு எதிராக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் போடப்பட்ட வழக்கு விசாரணை 19.8.2011 நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு வந்தது. பள்ளி நிர்வாகத்தினை இந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனறு நீதிபதி நிபந்தனை விதித்தார். நாம் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19(1) படி கருத்துரிமையை நடைமுறைபடுத்த போடப்பட்ட வழக்கில் பள்ளி நிர்வாகத்தை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினோம். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கை சி.பி.சி.ஐடிக்கு மாற்ற கோரியும், தனியார் பள்ளி மாணவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பவைகள் பொதுநல வழக்கின் சாரமாக இருப்பதால் வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டு 26.9.2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அன்றே அவசரமாக போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  30-8-2011-ம் தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு விடுமுறை தினத்தில் மனுதாரர் ராமலிங்கத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்று கூறினர்.

முதல் தகவல் அறிக்கையை பாதி மட்டுமே படித்து விட்டு தலைமை நீதிபதி ’’என்னால் முழுமையாக படிக்கமுடியவில்லை’’ என்று ஆதங்கப்பட்டார். காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குற்றவாளிகளின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லையென்றும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  நபர்களைக் கைது செய்யாமல் இருப்பதுமான போலீஸின் செயல் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே இத்தகைய காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்ட அனைவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு அது சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்துறை செயலாளரும், டி.ஜி.பியும் எங்கள் முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியும் கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

மறுநாள் 27.9.2011 அன்று வழக்கு விசாரணையின் போது எஸ்.பியும், கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியை செப்டம்பர் 8-ம் தேதி முன் ஜாமின் பெற்றுவிட்டார். பள்ளி முதல்வர் ஆகஸ்ட்டு 30-ம் தேதி ஜாமின் பெற்றுவிட்டார். எனவே அவர்களை கைது செய்ய முடியாது என்று போலீசு தரப்பில் கூறப்பட்டது. நாம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தான மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தோம்.

அவ்வறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ டாக்டரை மிரட்டி விவரங்களை கேட்டுள்ளார். அப்போலோ டாக்டர் சியமளாதேவி பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் குழந்தையைப்பற்றி மருத்துவ விவரங்களை அளிக்க முடியாது என்று மறுத்துள்ளார். நீங்கள் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று மிரட்டியதையும் மருத்துவ அறிக்கையிலேயே பதிவு செய்திருந்தார் மருத்துவர். அதை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையை சி.பி.சிஐடிக்கு மாற்றி டி.எஸ்.பி பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரினோம்.

தலைமை நீதியரசர் ஆய்வாளரை பார்த்து இது ஒரு சீரியஸ்சான குற்றசாட்டு என்பதை பதிவு செய்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எந்த விதமான மனுவும் போடாமல்  ஏ.கே.டி பள்ளி மிகவும் புகழ் வாய்ந்தது. 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று பேச முற்பட்டார். நாமும் அந்த மாணவர்களது பாதுகாப்பு குறித்துதான் கவலை அளிக்கிறது என்று சொன்னோம்.

தீர்ப்பை ஒத்தி வைத்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அரசுக்கு எதிராக நீதிபதிகள் அழுத்தமான உத்தரவு ஏதேனும் பிறப்பித்து விடுவார்களோ என்ற நிலையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்  தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நாங்கள் டி.எஸ்.பியை  வைத்து விசாரிக்கிறோம் என்றார். அதற்கு நீதிபதிகள் சி.பி.சிஐடிக்கு மாற்றினால் என்ன என்று கேட்டனர். தமிழக அரசு ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு சி.பி.சிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நாம் கோரியபடி வழக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் வைத்து விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்ததுடன், சி.பி.சிஐடி விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ மருத்துவரிடம் நடந்து கொண்ட சம்பவத்திற்கு எங்கள் வேதனையையும் அதிருப்தியையும் பதிவு செய்கிறோம் என்றும், யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும் அந்த நிர்பந்தத்திற்கு செவிசாய்க்காமல்   இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்குப் பிறகு 28.9.2011 அன்று ஐஜி, சைலேந்திர பாபு மற்றும் டிஐஜி, எஸ்பி, டி.எஸ்.பி சகிதம் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்தித்து விசாரித்தனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு. “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றும், ஆய்வாளர்  விவேகானந்தன் மாணவி இறந்ததாக  பரவிய வதந்தி பற்றி தகவலை அறிந்து கொள்ளவே அப்பல்லோ டாக்டரை பார்த்தார்” எனவும் தலைமை நீதிபதி வேதனைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பெற்றோர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சந்தித்தோம்.’’எங்கள் குழந்தை இந்த ஆண்டு அவர் அம்மாவிடம் வீட்டிலேயே படிக்கிறது. நாங்களும் பள்ளி நிர்வாகத்திடம் விலை போய்விட்டோம் என பலர் சந்தேகப்பட்டனர். உங்களுடைய முயற்சியால் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இப்படி ஒரு மாற்றம் வரும் என்று நம்பவில்லை” என்று உருக்கமாக பேசினார் குழந்தையின் தந்தை.

போஸ்யா மிஸ் எனக்கு எப்படி ஊசி போட்டார்கள் என்பதை சிறுமி செய்து காட்டும் போதும் இரவில் துாங்கும் போது அம்மாவிடம் மிஸ் என்னை காரில் அழைத்து சென்றார்கள்,வீடியோ எடுத்தார்கள், விளையாட்டு பொம்மை கொடுத்தார்கள் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் போது பெற்றோர்கள் படும் வேதனை என்பது குற்றவாளிகள் தண்டனை அடையும் போது மட்டுமே தீரும். பல பெற்றோர்கள் இதற்காகதான் வெளியல் சொல்லாமல் மனம் புழுங்கி சகித்து கொண்டு போகிறார்கள்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா, தனியார் பள்ளி முதலாளிகள்? எதிர்த்து பேசும் ரவுடியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீசு போல பெற்றோர்கள் சங்கமாக திரண்டு பாலியல் தவறு செய்யும் ஆசிரியரையும் பாதுகாக்கும் பள்ளி முதலாளியையும் உடனுக்குடன் தண்டிக்க வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக்குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, காவல்துறை அதிகாரிகள், ஒத்துப்போகும் பத்திரிகைகள் அனைவரையும் மீறி நாம் நீதி பெறமுடியும்.

இன்று நீதிமன்றம் இப்படி ஒரு உத்திரவு பிறப்பித்தற்கே இத்தனை நெடிய போராட்டத்தை மக்கள் அரங்கிலும், சட்ட அரங்கிலும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வேளை இதை செய்யத்தவறியிருந்தால் அந்த சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதைக் கண்டும் வேதனையோடு நாட்களை கடத்தும் பெற்றோரும் வாழ்நாள் முழுதும் துன்புற்றிருப்பார்கள்.

________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

அமெரிக்கக் கடன் நெருக்கடி -  மைனரின் சாயம் வெளுத்தது ! ‘‘உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு” என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொருமுறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.

1970களில் 283 கோடி அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவின் கடன் சுமை, 2011இல் 14.5 இலட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் தொகையை இந்திய ரூபாயில் சொன்னால் (66,70,00,00,00,00,000  அதாவது, 6.67 கோடியே கோடி ரூபாய்) அதிலுள்ள பூஜ்யங்களை எண்ணுவதற்கே தலை கிறுகிறுத்துப் போய்விடும். இம்மொத்தக் கடனில் சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் மட்டும் 4.5 இலட்சம் கோடி டாலர்கள்.

அமெரிக்க அரசின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், செலவுகளைச் சமாளிக்க, அதாவது பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச்சந்தையிலிருந்து எவ்வளவு கடன் பெற வேண்டும் என்ற வரம்பு தீர்மானிக்கப்படும். அரசின் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட இந்த வரம்பையும் தாண்டி கடன் வாங்க வேண்டிய நிலை உருவானால், அதற்கு அமெரிக்க காங்கிரசின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

காங்கிரசின் ஒப்புதலோடு பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரம்பையும் தாண்டிக் கடன் வாங்குவது அமெரிக்க அரசிற்குப் புதிய விசயமுமல்ல. ஆனால், கடந்த ஜூலை மாத இறுதியில் நடப்பாண்டு பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி கடன் வாங்க வேண்டிய சூழல் அந்நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டபொழுது, அதற்கு காங்கிரசில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்கள். கடன் வரம்பை உயர்த்துவதற்குப் பதிலாக, அமெரிக்க அரசு தனது செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டது, குடியரசுக் கட்சி.

குடியரசுக் கட்சியின் நோக்கம், அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதெல்லாம் அல்ல. அக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபொழுது போர்ச் செலவுகளுக்காகவும், முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையை ஈடுகட்டுவதற்காகவும் ஏழு முறை கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அப்போது கடன் சுமை அதிகரிப்பது பற்றி அமெரிக்காவின் தீவிர வலதுசாரி கும்பல் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அமெரிக்க அரசு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் அற்பமான மானியத்தையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற கொள்கையையுடைய குடியரசுக் கட்சியும் தீவிர வலதுசாரிக் கும்பலும் இக்கடன் நெருக்கடியை தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாக இப்பொழுது பயன்படுத்திக் கொண்டன.

4 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என நிதியாதிக்கக் கும்பல்கள் நிர்பந்தித்து வந்த வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 2.1 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்குச் செலவுகளைக் குறைப்பது, செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகையைத் தொடருவது என்ற சமரசத்தின் அடிப்படையில் கடன் வரம்பை உயர்த்திக் கொள்ள அமெரிக்க காங்கிரசில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் 1.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு கல்வி, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை வெட்ட இப்பொழுதே திட்டம் தயாராகிவிட்டது; மேலும், 1.5 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு மானியத்தைக் கழித்துக் கட்டுவது பற்றி ஆலோசனை கூற, இரண்டு கட்சிகளையும் சேர்ந்த காங்கிரசு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், நிதியாதிக்கக் கும்பல்கள் எதிர்பார்த்த அளவிற்கு செலவைக் குறைக்கும் வரம்பு நிர்ணயிக்கப்படாததால், அக்கும்பலின் கையாட்களுள் ஒன்றான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (Standard and Poor) என்ற தர நிர்ணய நிறுவனம், அமெரிக்காவின் கடன் வாங்கும் தகுதியினை “ஏஏஏ”  லிருந்து “ஏஏ+” ஆகக் குறைத்து, அமெரிக்க அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

அமெரிக்க அரசின் கடன் உயரக் காரணமென்ன?  

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு, அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டது. குறிப்பாக, 2008  இல் ஏற்பட்ட வீட்டு மனைக் கடன் குமிழி வெடிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏற்பட்டதைப் போல பெருமந்தத்தில் சிக்க வைத்தது. இப்பொருளாதார வீழ்ச்சிக்கு ஏற்ப அரசின் வரி வருமானமும் சரிந்து வீழ்ந்தது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அரசிற்குத் தனது செலவுகளை ஈடுகட்ட 307 கோடி அமெரிக்க டாலர்கள் தேவையாக இருந்தபொழுது, அம்மாதத்தில் அரசின் வரி வருமானம் வெறும் 172 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. அரசின் கடனை அதிகரிக்காமல், அரசு தனது செலவுகளை  நிர்வாகச் செலவுகள், இராணுவச் செலவுகள், மருத்துவக் காப்பீடு போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டியையும், அசலையும் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்டவற்றை ஈடுக்கட்ட முடியாது என்ற நிலையை இந்தப் பொருளாதார மந்தம் அமெரிக்கா மீது திணித்தது.

அமெரிக்க அரசின் வரி வருமானம் வீழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில், அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பொருளாதாரச் சரிவைத் தூக்கி நிறுத்துவது என்ற பெயரில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மேல்தட்டுப் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கினார். அவர் அளித்த வரிச் சலுகையால் 2003 தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய அமெரிக்க அரசிற்கு 1.7 இலட்சம் கோடி டாலர்கள் வருமான இழப்பு ஏற்பட்டது. புஷ்ஷுக்குப் பின் பதவிக்கு வந்த ஒபாமா இந்த வரிச் சலுகையை ரத்து செய்யாததோடு, அதனை 2013ஆம் ஆண்டு வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

இவ்வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, டாட் காம் பங்குச் சந்தை சூதாட்ட வீழ்ச்சி மற்றும் இரட்டை கோபுரத் தாக்குதல்களால் வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, முதலீட்டு வங்கிகளுக்கும், வேலியிடப்பட்ட நிதியங்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டு, வீட்டு மனைக் கடன் சூதாட்டம் தீவிரமாக நடத்தப்பட்டது. 2008இல் வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்ததையடுத்து, புஷ் 700 கோடி அமெரிக்க டாலர்களையும் அவரையடுத்து வந்த ஒபாமா 814 கோடி அமெரிக்க டாலர்களையும் அமெரிக்க வங்கிகள்  தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கும் மானியமாகவும், நிதியுதவியாகவும் அளித்தனர்.

அரசின் வரி வருமானம் சுருங்கிக்கொண்டே வந்த அதேசமயத்தில், அமெரிக்காவின் இராணுவச் செலவோ அதற்கு எதிர்விகிதத்தில் ஏறிக் கொண்டே போனது. தற்

சமயம் அமெரிக்காவின் வருடாந்திர மொத்த இராணுவச் செலவு 1.2 இலட்சம் கோடி டாலர்களைத் தொட்டுவிட்டது. இது அமெரிக்காவின் பட்ஜெட்டில் 40 சதவீதமாகும். இந்த வருடாந்திர இராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா ஆப்கானிலும், இராக்கிலும் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்காக மட்டும் கடந்த பத்தாண்டுகளில் 1 இலட்சம் கோடி டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஒபாமா அதிபரான பின் ஆப்கானில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால், அந்த ஆக்கிரமிப்புப் போருக்காக மட்டும் மாதமொன்றுக்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகிறது. மேலும், லிபியா மீதான தாக்குதலின் மூலம் ஒரு புதிய போர் முனையைத் திறந்திருக்கிறது, அமெரிக்கா. உலகைத் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைப்பதற்காகவே இந்த இராணுவ மற்றும் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவுகளை வீங்க வைத்துக் கொண்டே போகிறது, அமெரிக்க ஆளும் கும்பல்.

அமெரிக்க வங்கிகள் நடத்திய பங்குச் சந்தை சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி; இந்நெருக்கடியையொட்டி அமெரிக்க வங்கிகளுக்கும், தொழிற்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட மானியம், நிதியுதவி, வரிச் சலுகை மற்றும் அமெரிக்காவின் போர்ச் செலவுகள்  இவைதான் 2007 இல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதமாக இருந்த அந்நாட்டின் கடன் சுமையை இன்று 72.4 சதவீதமாக வீங்க வைத்துள்ளன. குறிப்பாக, முதலீட்டு வங்கிகளுக்கும், கார் கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்ட மானியத்தால் மட்டும் அமெரிக்காவின் கடன் சுமை 3.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அதிகரித்தது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையில் 70 சதவீதம் அமெரிக்காவின் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளால்தான் ஏற்படுகிறது. இந்தச் செலவுகளில் ஒரு பைசாவைக்கூடக் குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்க வலதுசாரி கும்பல், சமூக நலத் திட்டங்களுக்கான அரசின் செலவு கட்டுப்பாடின்றிச் செல்வதாகவும் தகுதியற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் வாரி வழங்கப்படுவதாகவும் கூறி, பாசிச புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவை வெட்ட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருக்கும் ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும், அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில்தான் வேறுபட்டு நின்று மோதிக் கொள்கிறார்கள்.

தியாகம் செய்!”  ஒபாமாவின் குரூரம்

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்க வைப்பதுதான் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராக இன்றும் இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே வேலைவாய்ப்பும், தொழிலாளர்களின் சம்பளமும் தேங்கிப் போயிருந்த நிலையில், அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்கச் செய்வதற்காகவே கடன் அட்டைகள் (Credit cards), வீட்டு அடமானக் கடன், கார் கடன், அவற்றுக்கான மானியங்கள் வாரி வழங்கப்பட்டன; இவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டது. இந்தக் குமிழி உடைந்தபொழுது, அது அமெரிக்க அரசை மட்டுமல்ல, பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்களையும் போண்டியாக்கியதோடு, கடன்காரர்களாகவும் ஆக்கியது.

2005க்கும் 2009க்கும் இடைபட்ட காலத்தில் கருப்பின மக்களின் சொத்தின் மதிப்பு 53 சதவீத மும், அமெரிக்காவில் குடியேறியுள்ள இலத்தீன் அமெரிக்க மக்களின் சொத்து மதிப்பு 66 சதவீதமும், வெள்ளை இனத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் சொத்தின் மதிப்பு 16 சதவீதமும் சரிந்து வீழ்ந்தது. வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்ததால், ஏறத்தாழ 1 கோடி அமெரிக்கர்கள் தங்களின் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். வீட்டு அடமானக் கடன் கொடுத்த வங்கிகள் தங்களின் கடனுக்கு ஈடாக இச்சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டன.

வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்த பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தையடுத்து, அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 51 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தற்சமயம் ஏறத்தாழ 2.5 கோடி அமெரிக்கத் தொழிலாளர்கள் நிரந்தர வேலையின்றியுள்ளனர்.

அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படியே, தற்பொழுது 4.4 கோடி அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; 4.9 கோடி அமெரிக்கர்கள் “உணவுப் பாதுகாப்பின்றி” வாழ்கிறார்கள். அன்றாட வாழ்க்கையிலிருந்து பட்டினியை ஒழிக்க முடியாத அமெரிக்க அரசு, பட்டினி என்ற வார்த்தையை அரசின் பதிவேடுகளில் பயன்படுத்துவதைச் சட்டபூர்வமாகத் தடை செய்து ஒழித்துவிட்டது.

சமூக ஏற்றத்தாழ்வுகளோ கடந்த பத்தாண்டுகளில் அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது. “அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமே உள்ள பெரும் பணக்காரர்கள்தான் இப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரத்தின் 40 சதவீத்தைக் கட்டுப்படுத்துவதாக’’க் கூறுகிறார், அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ். “அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் 24 சதவீதத்தை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றி அனுபவித்து வருவதாகவும்; 1980களில் ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் சராசரி வருமானத்தைவிட 42 மடங்கு அதிக வருமானம் ஈட்டிவந்த அமெரிக்கத் தொழிற்கழகங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், 2001இல் 531 மடங்கு அதிக வருமானம் ஈட்டுவதாகவும்; 1980 தொடங்கி 2005ஆம் ஆண்டு முடிய ஈட்டப்பட்ட அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் ஏறத்தாழ ஐந்தில் நான்கு பகுதியை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றிக் கொண்டுவிட்டதென்றும்” கூறுகிறார், மற்றொரு பொருளாதார அறிஞரான நிக்கோலஸ் கிறிஸ்டாஃப்.

‘‘அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும்பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்” என அமெரிக்காவின் ‘ஜனநாயகத்தை’ப் புட்டு வைக்கிறார், மிகப் பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட். “அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றத்தாழ்வுஅமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்” எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும்பொழுது, கருப்பின அதிபர் ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூற முடியும்.

இது சாதாரண நெருக்கடியல்ல;  மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடி

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! அரசின் செலவுகளை அதிகப்படுத்தியும், உற்பத்தி சார்ந்த தொழில்களில் முதலீட்டை அதிகப்படுத்தியும் இந்தக் கடன் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள முடியும் என கெய்னிசிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் தொழிற்துறையில் மூதலீடு செய்வதில்லை. கொள்ளை இலாபம் தருகின்ற நிதிச் சந்தைச் சூதாட்டத்தில்தான் முதலீடு செய்கின்றனர். உள்நாட்டில் முதலீடு செய்து உற்பத்தியில் ஈடுபடுவதைவிட, அயல்பணி ஒப்படைப்பையும் (Outsourcing) இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும்தான் அவர்கள் இலாபகரமானதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்த பிறகு தமக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் நிதியுதவிகளையும் இக்கார்ப்பரேட் முதலாளிகள் நலிவடைந்து போன தமது போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கும், உலகெங்கிலும் சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் முதலீடு செய்யவோ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ பயன்படுத்தவில்லை.

பற்றாக்குறையைக் குறைக்க தொழில்துறை உற்பத்தியை அதிகப்படுத்துவது, கார்ப்பரேட் வரி வருமானத்தை அதிகப்படுத்துவது என்ற கொள்கையை அமெரிக்க ஆளும் கும்பல் தனது வரலாறு நெடுகிலும் தீண்டத்தகாததாகவே கருதி வருகிறது. இதற்கு மாறாக, மானியத்தை வெட்டுவது, ஆட்குறைப்பு செய்வது, சம்பளத்தை வெட்டுவது என்ற தாராளவாதக் கொள்கையைத்தான் இந்தக் கும்பல் சர்வரோக நிவாரணியாக முன்வைக்கிறது. ஏற்கெனவே பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை, இந்தத் தீர்வு  அரசு செலவுகளைக் குறைப்பது  மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் எனத் தெரிந்திருந்தும், இந்தச் சுய அழிவுப் பாதையைத்தான் அமெரிக்க நிதியாதிக்கக் கும்பல் அமல்படுத்தத் துணிந்துள்ளது. அமெரிக்க முதலாளிவர்க்கம் ஏன் இப்படிச் சிந்திக்கிறது என்ற கேள்விக்கு, அப்படிச் சிந்திக்கவில்லையென்றால், அது முதலாளித்துவ வர்க்கமாக இருக்க முடியாது என்ற லெனினினுடைய விளக்கத்தைதான் பதிலாகத் தர முடியும்.

அமெரிக்காவில் 2000க்குப் பின் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள், குறிப்பாக வீட்டுமனைக் கடன் குமிழி வெடிப்பு பிரம்மாண்டமானதாக மட்டுமின்றி, உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தையையும், தொழிற்துறையையும் குப்புறக் கவிழ்க்கும் அளவிற்கு சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. தற்பொழுது தீவிரமான இந்தக் கடன் நெருக்கடியும்கூட, பல நாடுகளின் பங்குச் சந்தைகளைச் சரியச் செய்தது. இதன் காரணம், நிதி மூலதனப் பாய்ச்சல் உலகளாவிய தன்மை பெற்றிருப்பதும்; சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரங்களாக மாற்றப்பட்டு, அவை அனைத்தும் அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருப்பதும்தான்.

தற்பொழுது உலகெங்கிலும் நடைமுறையில் இருந்து வரும் தனியார்மய  தாராளமயப் பொருளாதாரக் கொள்கையானது, அனைத்து நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகிறது; பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது; உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கிறது. இம்மூன்றும்தான் நெருக்கடிகள் தோன்றுவதற்கும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதற்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

‘‘உலகமயத்தின் பின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியானது, பணக்காரர்கள், சூப்பர் பணக்காரர்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் அளவுக்கு அதிகமாகச் செல்வத்தைக் குவியச் செய்கிறது. இச்செல்வம் நிதி மூலதன உலகில் புகுந்து பல ஆபத்தான வழிமுறைகளின் மூலம்  எடுத்துக்காட்டாக, வீட்டு மனைக் கடன் சூதாட்டம்  இலாப வேட்டையாடுவதற்காகச் சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருக்குகிறது; அடுத்தடுத்த குமிழிகளை உருவாக்குகிறது.”

‘‘அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் குவியும் அந்நியச் செலாவணி உபரியானது மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுவதால், இம்முதலீடு வீட்டுமனைக் கடன் போன்ற குமிழிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.”

‘‘கடந்த முப்பதாண்டுகளில் உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளதோடு, அதிலிருந்து பிரிந்து சுயேச்சையாகவும் இயங்கி வருகிறது. இது சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருகச் செய்தும் பின்னர் வெடிப்பை ஏற்படுத்தியும் நிதி உலகில் மட்டுமின்றி, உண்மைப் பொருளாதாரத்திலும் ஏற்ற இறக்கங்களையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.”

இம்மூன்று அடிப்படையான காரணிகள்தான், சமநிலையின்மைகள்தான் நெருக்கடிகளை அடுத்தடுத்து உருவாக்கி வருவதாகக் கூறுகிறார், மைக்கேல் லிம் மாஹ் ஹுய் என்ற பொருளாதார அறிஞர். இம்மூன்று சமநிலையின்மைகள் இல்லாத தனியார்மயம்  தாராளமயத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது எனும்பொழுது, இக்கட்டமைப்பில் நெருக்கடிகள் தோன்றுவதையும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதையும் தவிர்த்துவிட முடியாது.

அமெரிக்காவின் ஒட்டுண்ணித்தனம்

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! ‘‘அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும். இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்த நாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.

அமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.

டாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்காவின் இந்த ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.

பொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்காத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.

டாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ  பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ‘வளர்ச்சிக்கு’க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.

உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.

டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.

அமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழி இல்லை.

இனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், “ கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்’’. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 

நூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்!

6

வ்வொரு வருடமும்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனைக்கட்ட முடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். மைக்ரோஃபினான்ஸ் என்ற கந்துவட்டியின் தொல்லையால் சென்ற வருடம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆந்திராவில் தங்களை மாய்த்துக்கொண்டனர். மிச்சமிருக்கும் விவசாயிகளும், கிராமப்புறத்தினரும் இந்தியாவின்  வடக்கும் தெற்குமாக விசிறியடிக்கபடுகின்றனர். ”இந்தியாவின்  முன்னேற்றத்துக்கு” சாட்சியாக முளைக்கும் வானுயர் கட்டிடங்களிலும், பிரமாண்டமான பாலங்களிலும் தங்கள் வாழ்வை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகர்ப்புற ஏழைகளும், தொழிலாளர்களும் அரைவயிற்றுக்கே அடிமைகளாக உழைக்க வேண்டியிருக்கிறது.

மக்களின் உரிமைகளை, சொத்துகளை  ஏகபோகமாக சுருட்டிக்கொண்டுக் கொண்டு கொழுக்கிறது  முதலாளி வர்க்கம். உரிமைகளை இழந்த மக்களோ ஓட்டாண்டிகளாக மாறியதோடு இந்த முதலாளிகளிடமே வேலைக்காக பிச்சையெடுக்கின்றனர். முதலாளிகளின் செல்வத்துக்காக உழைக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். மும்பையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்றமும் இறக்கமுமே நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றன.

இந்த நிலையில், அரசும், அதிகார வர்க்கமும் முதலாளிகளின் கைப்பாவையாக, பன்னாட்டு கம்பெனிகளின்  அடியாளாக வேலை செய்துவருகிறது.  பொதுத்துறைகளை தனியாருக்கு திறந்துவிட அரசு முழுமூச்சுடன் இயங்கிவருகிறது. தண்ணீர்,மருத்துவம்,கல்வி, இயற்கை வளங்களை அடுத்து மின்சாரத்துறையை கொள்ளையடிக்க தனியாருக்கு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார், தமிழகத்தின் அமைச்சர் ஒருவர்.

எந்த சுதந்திரத்துக்காக நமது மூதாதையர் போராடினார்களோ அந்த பெயரளவிலான சுதந்திரத்தையும் அடகு வைத்துக்கொண்டிருக்கிறது  தரகு முதலாளி கும்பலும், அரசும். ஒபாமாவையும், ஹிலாரியையும் வரவேற்று அடிமைசாசனம் எழுதித்தருகிறது

இந்தியா. அந்நிய முதலீட்டாளர்களை வரவேற்று  அவர்களுக்கு நாட்டை தாரை வார்த்துக்கொடுப்பதே ‘நாட்டுப்பற்றா’க மாறிப்போயிருக்கும்போது அதற்கு உதவும் படியாகவே அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்திப் போராட்டங்கள்  பயன்படுகின்றன. உண்மையில் போராட்டம் என்பது எதற்கெதிரானதாக இருக்க வேண்டும்? யாருக்கெதிராக இருக்க வேண்டும்?

சமீபத்தில் வாசித்த ”உன் அடிச்சுவட்டில் நானும்” எனும் நாவல்  போராட்டம் என்பதையும், போராளிகளுக்கான அர்த்தத்தையும் சொல்லுவது போலிருந்தது.

இந்த நாவல் வியட்நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் போரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்த வீரதீரமான கம்யூனிஸ்ட் போராளிகளைப் பற்றியது.

அமெரிக்கப்படைகள்  பயந்து பின்வாங்கி ஓடிப்போனது என்றால் அது வியட்நாமில்தான். முதலில் அந்த  பின்னணியை பார்த்துவிடலாம்.   பண்டைய வியட்நாமை அரசர் குல சீனாவும், அதன்பிறகு  1800- களில் பிரான்சும் ஆட்சி செய்து வந்தன.  1900-களில் வியட்நாம் சுதந்திரத்துக்காக எழுச்சி கொள்ள துவங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களிடம்  பிரான்ஸ் வசமிழந்த நேரத்தில் வியட்நாமை ஜப்பான் ஆக்கிரமித்தது.  இந்த ஆக்கிரமிப்புகளால் கொதிப்புடன் இருந்த மக்கள் ஹோ சி மின் கீழ் திரண்டிருந்தனர்.

1945-ல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் கலகலத்துப் போயிருந்தது. தகுந்த சமயம் பார்த்திருந்த ஹோ சி மின், ஹனாய் பிரதேசத்தை தலைமையாகக்கொண்டு  வியட்நாமை சுதந்திர நாடாக அறிவித்தார். தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஹோ சி மின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வியட்நாமின் சுதந்திர பிரகடனத்தை மறுத்த  பிரான்ஸ் வியட்நாமுக்கு படைகளை அனுப்பியது.  நவீன ஆயுதங்களுடன் வந்திறங்கிய பிரெஞ்சு படையுடன் பார்க்கும்போது  ஹொ சி மின் படைகள் மரபான கெரில்லா படைகள்தான். ஆனாலும் உறுதியுடன் போரிட்டு பிரெஞ்சு ராணுவதளத்தை தகர்த்தனர், ஹோ சி மின் படையினர்.  இதில் வடக்கு  வியட்நாம் பகுதி  கம்யூனிஸ்ட் கட்சி வசமிருந்தது. தென் வியட்நாம் பகுதி பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி, வடக்கு தெற்கு என வியட்நாம் பிரிந்திருப்பதை வெறுத்தது. எல்லைக்கோடுகளை அழித்து மக்களை ஒன்று சேர்த்து ஒருமித்த வியட்நாமை உருவாக்க விரும்பியது. இதற்காக ஹோ சி மின் உலகநாடுகளிடம் உதவி கேட்கிறார்.

ஏற்கெனவே கம்யூனிச நாடுகளான சோவியத்  ரஷ்யா மற்றும் சீனாவின் மீதான கடுகடுப்பில் இருந்தது அமெரிக்கா. இதில் ஹோ சி மினுக்கு உதவினால் கம்யூனிசம் வளர ஏதுவாகிவிடுமென்று தனது படைகளை பிரான்சுக்கு அளித்து உதவுகிறது.  ஆமை புகுந்த வீடு உதவாது என்று சொல்வது போல அமெரிக்கா புகுந்த நாடு விளங்குமா?

மெதுவாக தெற்கு வியட்நாம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. தனது சார்பாக ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவுகிறது, அமெரிக்கா. ராணுவம் மற்றும் , போலீசின் அடக்குமுறைக்கும் எண்ணற்ற இன்னல்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  குண்டு மழை பொழிய ஆரம்பிக்கிறது. உயிர்கொல்லும் ரசாயனங்கள் வயல்கள் மீது தூவப்படுகிறது.

அரிசி விளையும் நிலங்களும் காடுகளும் அழிக்கப்படுகின்றன. நாபாம் என்று மிகக்கொடிய குண்டுகள் வீசப்பட்டன.  கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்காக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அரசு பொதுமக்கள் மீதும் தன் கைவரிசையைக் காட்டியது, அமெரிக்கா. கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரெஞ்சு படைகளை சமாளிப்பதோடு அமெரிக்க படைகளையும் சமாளித்தாக வேண்டியிருந்தது. பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அமெரிக்காவுக்கு அப்படியென்ன வியட்நாம் மீது அக்கறை? வியட்நாமில் கம்யூனிச சமுதாயம் மலர்ந்துவிட கூடாதென்பதே அதன் குறிக்கோள்.

இதற்காக அமெரிக்கா பலியிட்ட படைவீர்களின் எண்ணிக்கையும் கொஞ்சநஞ்சமல்ல. சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் விசாரணையே இல்லாமல் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புத்தபிட்சுகள் தங்களை தாங்களே நெருப்பு இரையாக்கிக்கொண்டனர்.  1965-ல் போர் மிகவும் உக்கிரமடைந்தது. அமெரிக்க அதிபர்  ஜான்சனுக்குத் துணையாக  போரை முன்னின்று நடத்தியவர் ராணுவத்தளபதி மக்நமாரா.  வியட்நாம் போரின் முக்கியமான ஆலோசகராகவும்,  மூளையாகவும் செயல்பட்ட மக்நமாரா வியட்நாமுக்கு பலமுறைகள் சென்று வந்திருக்கிறான்.

மக்நமாராவை கொலை செய்ய திட்டமிட்டிந்தனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.  முதல்முறை தப்பிவிட்டான். இரண்டாம் முறை  “காங்லி” எனும் பாலத்தை கடக்கும் போது மயிரிழையில்  தப்பிவிட்டாலும் காயங்களடைந்தான்.  மக்நமாராவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ”நகூயென் வான் டிராயை” கைது செய்கிறது போலீஸ்.

கைது செய்யப்படும்போது ட்ராயுக்கும் அவர் காதலித்த குயெனுக்கும் திருமணம் முடிந்து 19 நாட்களே ஆகியிருந்தன. இருவரையும்  கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம், “வெடிகுண்டுகள் எங்கிருக்கின்றன, மற்ற தோழர்கள் எங்கிருக்கின்றனர்” என்ற  செய்திதான்.  ”அமெரிக்க வெறியர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் வெடிகுண்டுகள்இருக்கின்றன” என்கிறார் ட்ராய்.   குயெனும் பலவித சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார். அதில், ட்ராயை குறித்து பயமுறுத்தி, பலவித சோதனைகள் கொடுத்து உண்மையை வாங்கிவிட முயற்சி செய்கிறது.

தோழர்கள், மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு இந்த சிறைகளில் சொல்லவொண்ணா துயர்களைஉபாதைகளை அனுபவித்துள்ளனர்.  அவர்கள் மன உறுதி எந்நாளும் சிதைக்கப்படுவதில்லை.  இந்த உண்மையை  கைதிகளை சித்ரவதை செய்ய தண்ணீர் நிரப்பிய வாளிகளும், நகக்கண்களில் ஏற்ற விதவிதமான ஊசிகளும், நூதன முறையிலான ஆயுதங்களையும் சிறையில் பார்த்து அறிந்துக்கொள்கிறார், குயென்.

குயெனுக்கு ட்ராயின் கட்சி வேலைகளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால்,ட்ராய்  மாலை வேளைகளில்,இரவுகளில் தாமதமாக வருவதும், ஏதோ யோசனையில் மிகவும் தீவிரமாக  இருப்பது மட்டும் புரிகிறது. திருமணமான சில தினங்களில் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வியட்நாமிலும் சம்பிரதாயமாக இருக்கிறது. ஆனால், ட்ராயுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று அவர் மீது வருத்தம் கொள்கிறார் குயென். பொது மக்களின் மனநிலையில் இருக்கும் குயென்  சிறைவாசத்தின் போதும்,, அதற்கு பிறகு  ட்ராயின் மரணதண்டனையினாலும் புடம் போடபட்டு  ட்ராயின் அடிச்சுவட்டில் ஒரு தோழராக  தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த நாவல்.

சிறையில், சகத்தோழர்களின் போராட்ட வாழ்க்கையையும், அர்ப்பணிப்பையும் கண்டும் கேட்டும் குயென் சாதாரன பெண்ணிலிருந்து போராளியாக மாறுகிறார்.  இந்த நாவல் குயென் சொல்லச் சொல்ல ட்ரான் வான் தின்  எழுதியது. இதில், குயென் சிறையில் சந்தித்த நபர்களின் பெயரை  வெளியிடாமல்”எக்ஸ்”, “எம்” என்றே குறிக்கிறார். இன்று அந்த மனிதர்கள் இல்லை. ஆனால், கட்சியின்  ரகசியத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து அறிந்துக்கொள்ள இது உதவுகிறது.

இன்றும் இணையத்தில், மொக்கைகள் பலர், தோழர்களுடன் விவாதம் செய்யும்போது ”உன் உண்மையான பேர், ஊரோட வா” என்று  கேட்பதை காண்கிறோம்.  இதைக்கேட்டுவிட்டு பதில்சொல்ல இயலாத கேள்வியை கேட்டுவிட்டது போல இறுமாந்து விடுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி என்பது  பெரும்பாலான நேரங்களில் தலைமறைவாகவே   இயங்க வேண்டியிருக்கிறது. அதோடு, அது கட்சிக் கட்டுப்பாடு.   சுரண்டுபவர்களும், ஒடுக்குபவர்களும், போரை ஏவுபவர்களும் தைரியமாக  உலா வருகையில் மக்கள் மீது அக்கறையும், தேசத்தின் பால் பற்றும் கொண்ட மக்கள் தலைமறைவாக இயங்கவேண்டியிருப்பது  மிகப்பெரிய முரண்தான் இல்லையா?!

குயென் சிறையில், தோழர்களுடன் இணைந்து பாடல்களையும், அவர்களது வாழ்க்கையை கேட்டறிகிறார்.  ட்ராயுடன் தான் வீம்பு பிடித்ததும், சாதாரண காரியங்களுக்காக கோபித்துக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது, ட்ராய் தன்னை புதிய உலகுக்காக தயார் செய்ய முனைந்திருக்கிறார், பக்குவப்பட்ட பெண்ணாக மாற்ற முனைந்திருக்கிறார்  என்று அறிந்துக்கொள்ளும்போது  குயெனுக்கு தெளிவு பிறக்கிறது. கட்சி வேலைகளில்  தன்னையும் ஈடுபடுத்திக்கொள்ள மனதளவில் தயாராகிவிடுகிறார், குயென். சிலநாட்களில் விடுதலை அடைகிறார்.

ஆனால், அவர் இப்போது பழைய குயென் அல்ல. தன் நாட்டுமக்களை நேசிக்கும் ஒரு போராளி.  போலீசின் நைச்சியமான ஆசைகாட்டுதல்களுக்கும் அடிமைத்தனத்துக்கும் மயங்காத ஒரு போராளி.  தன் கணவர் மரண தண்டனை அடைந்தாலும் அவரது அடிச்சுவட்டில் பயணம் செய்ய தயங்காத ஒரு போராளி.

இதை நாவல் என்று சொல்வதைவிட வாழ்க்கைக்கதை என்றே சொல்லலாம். குயென் சொல்லச் சொல்ல ட்ரான் தின் வான் எழுதியிருக்கிறார்.  நாவலில், ட்ராய்  அனுபவிக்கும் போலீசின் அடக்குமுறைகளும் சித்திரவதைகளும் வலியும் வேதனையும் மிக்கவை.  பொதுமன நோக்கில் பார்த்தால்,  இதனால் அவர் தனிப்பட்ட அளவில் எதனையும் பெறவில்லை என்று கொண்டாலும் அவர் இழந்ததுதான் அதிகம். எனினும், எதற்காக ட்ராய் அவற்றை அனுபவிக்க வேண்டும்? காதலித்து மணம் புரிந்த தன் மனைவியுடன் இனிமையாக காலத்தை கழித்திருக்கலாமே!

ட்ராயும், குயெனும், வானும், சிறையிலிருந்த தோழர் ”எம்”மும் “எக்ஸும்” இன்னும் எண்ணற்ற தோழர்களும் எளிமையான குடிமக்கள். தங்கள் நாட்டுக்காக, தாங்கள் விரும்பிய புதிய சமூகத்தை அமைத்திட தம்மை அர்ப்பணித்தவர்கள்.  ஆனால்,  இவர்கள்தான் அமெரிக்கப்படைகளை ஓட ஓட விரட்டியவர்கள். இது வரலாறு.  இந்த சாதாரண மக்களின் வீரம்தான் அமெரிக்காவை தன் படைகளை மீளப்பெற வைத்தது. எத்தனை உபாதைகளை, உடலளவிலும், மனதளவிலும் அனுபவித்தாலும் கொண்ட கொள்கை மாறாதவர்கள். வெகு சாதாரண மக்கள். இவர்களின் பெயர்கள்அதிகமாக வெளியில் அறியப்படுவதில்லை.

ஆனால், கம்யூனிசப்பாதையை விட்டு விலகிய  ஒன்றிரண்டு விதிவிலக்கின்  வார்த்தைகளை கொண்டு கம்யூனிசத்தின் லட்சியத்தை அவதூறு செய்யப்படுவது போல இவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தீரமும் பேசப்படுவதில்லை.  கம்யூனிஸ்டுகள் என்றால் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை கானல் நீருக்காக இழந்துவிட்டு பிற்காலத்தில் வாடுபவர்கள் என்பது போலவும்  இரக்கத்திற்குரிவர்கள் போலவும் பார்க்கப்படுகிறார்கள்.  கிண்டல் செய்யப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

உன்னத லட்சியத்தைக் கைக்கொண்ட குயெனையோ அல்லது  தாய்நாட்டுக்காக வீரத்துடன் சாவை எதிர்க்கொண்ட ட்ராயின் தைரியமோ பேசப்படுவதில்லை. போற்றப்படுவதில்லை. ஆனால், தோழர்கள் என்றும் அதற்காக கவலைப்படுவதில்லை. நாம் உயர்வாக எண்ணுபவற்றை துச்சமாக மதிப்பவர்களைப் பார்த்து இவ்வாறு எண்ணிக்கொள்வது நகைமுரணல்லாமல் வேறென்ன?

இன்று இந்தியாவும் அன்றைய வியட்நாம் போல அமெரிக்காவின் பிடியில்தான் இருக்கிறது. அதன் பொம்மை அரசாங்கம்தான் இங்கு ஆட்சி செய்கிறது. விவசாயிகளும், பழங்குடியினரும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  தொழிலாளர்களும், நகர்ப்புற ஏழைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகபோகத்துக்காக நாடு  முழுவீச்சில் மறுகாலனியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  நாட்டின் மீது உண்மையான பற்றும்,பக்தியும் இருந்தால் புரட்சிக்காக நம் கையில் இருக்கவேண்டியது மெழுகுவர்த்திகளோ  வெற்றுக்கோஷங்களோ அல்ல என்று நாம் உணர்வது எப்போது?

நகூயென் வான் ட்ராய் சுடப்படும் வீடியோ

நூல் விவரங்கள் :

வரலாற்று நாவல்:  உன் அடிச்சுவட்டில் நானும்
பக்கங்கள் : 112
எழுதியவர் : ட்ரான் வான் தின்
தமிழாக்கம் : தா. பொன்னிவளவன்
வெளியீடு : அலைகள் 

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

விலை :  ரூ 40

__________________________________________________________

-வேல்விழி
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 9

”பசுவை கோமாதா என்றும், காமதேனு என்றும் வணங்குகிற புண்ணிய பாரத பூமியில் – அரசின் புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடியே பதினேழு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 29,500 பசுக்கள், எருதுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் படுகொலை செய்யப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 20 கொலைகள் நடக்கின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாகவும், இந்த மண்ணின் மைந்தர்களாகவும் உள்ள இந்துக்களுக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்து 42 ஆண்டுகள் ஆகியும் இந்தப் படுகொலை நீடித்து வருவது ஏன்? பசுக்கொலை செய்பவர்களில் பெரும்பாலோர் முசுலீம்களாயிற்றே, பசுக்கொலையை நிறுத்தினால் அவர்கள் வாக்களிக்காமல் போய் விடுவார்களோ என்ற  அச்சத்தில் இந்த அட்டூழியத்தை அனுமதித்து வருகிறார்கள்.”

– ‘பசு வதைத் தடைச் சட்டம் ஏன்‘,  இந்து முன்னணி வெளியீடு பக்கம்1.

‘பசுவைக் கொல்வதென்பது நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விசயம். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழ்நாடு பாழாகிவருகிறது. தள்ளுவண்டியில் வைத்து பசுமாமிச பிரியாணி, பசுமாமிச பக்கோடா, பசுமாமிச சூப் என்று விற்கிறார்கள். யார் விற்கிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால், யார் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் – நமது இந்து இளைஞர்களே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். காரணம் அவர்களுக்குப் பசுவைச் சாப்பிடுவதும் தாயை வெட்டிச்சாப்பிடுவதும் ஒன்றுதான் என்பது தெரியவில்லை.

– ”இந்துக்களுக்கு உரிமை கிடையாதா?” – இந்து முன்னணி வெளியீடு. பக்கம்8

”பசுவைக்காப்போம்! பாரதம்காப்போம். கோயிலுக்குத் தானமாக வரும் பசுக்களைக் கசாப்புகடைகளுக்கு விற்பதைத் தடை செய்யக் கோரியும், பசுக்காப்பகம் அமைத்து பசுக்களைப் பராமரிக்க தமிழக அரசை வற்புறுத்தியும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.”

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது  இந்து முன்னணியின் சுவரெழுத்து விளம்பரம்

 எதற்கும் உதவாத மாடுகள்தான் தற்போது இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. கோவிலுக்குத் தானமாக வரும் மாடுகள் கசாப்புக் கடைக்குப் போகிறது என்பதின் பொருள் என்ன? அவை விவசாய வேலைக்குப் பயன்படாத, மடி வற்றிய, எலும்பும் தோலுமாக உள்ள மாடுகள் என்றுதானே பொருள்? பக்தர்களின் இத்தகைய மோசடிக்கு அரசாங்கம் என்ன செய்யும்?

இருப்பினும் பா.ஜ.க. கூட்டணியின் தமிழகத் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆரம்பித்த உழவர் சந்தைக்குப் பக்கத்திலேயே ஒரு பசு காப்பகம் வைத்திருக்கலாம். மேலும் ‘வயது’ காரணமாக சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவரும் கருணாநிதி இதையும் அனுதாபத்தோடு பரிசீலித்து நிறைவேற்றியிருக்கலாம். அதாவது கருப்புத்துண்டு அரசியலை மஞ்சள் துண்டு அரசியலாக மாற்றிய கலைஞரின் ‘முதிர்ச்சியை’ யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி ‘பசுக் கொலை’யைப் பரிசீலிப்போம்.

கவனியுங்கள், இந்து மதவெறியர்கள் பசுவைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள் என்றால் காளை மாடுகளைக் கொல்லலாமா? தமிழ் சினிமாவின் தாய்க்குல சென்டிமெண்டைப்போல, மாட்டிலும் பசுவை வைத்து அனுதாப அலை உருவாக்கும் தந்திரம் இது என்பது ஒருபுறமிருக்கட்டும். பசுவைக் கொல்பவருக்கு என்ன தண்டனை? எது கொடுப்பதாக இருந்தாலும் முதலில் இந்துமத வெறியர்களைத்தான் தண்டிக்க வேண்டும். வேத, இதிகாச, புராண உபநிடதங்கள், மனுஸ்மிருதி மற்றும் புத்த – சமண மத இலக்கியங்கள் அனைத்தும் பண்டைய ‘இந்துக்கள்’ மாட்டுக்கறி தின்னும் உலகளாவிய பழக்கத்தைக் கொண்டவர்களே என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

ரிக் வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள் தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள் பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு வேதங்களும் குறிப்பிடுகின்றன.

பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார். எனவே பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

வேதகாலந்தொட்டு பாரப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோதானம், நடத்தப்பட்ட மாட்டுக்கறி வேள்விகளால் விவசாயமே சீர்குலையும் நிலை தோன்றியது. மக்களின் வாழ்வைப் பிணியாய் அரித்துத் தின்ற பார்ப்பனியத்தின் சடங்கு – வேள்விகளை எதிர்த்து அப்போது புத்த – சமண மதங்கள் எழுந்தன.

இம்மதங்களின் பார்ப்பன எதிர்ப்பும் – புலால் எதிர்ப்பும் மக்கள் ஆதரவு பெற்றதன் அடிப்படையும் அதுதான். பின்னர் இம்மதங்களைச் செரித்துக்கொண்ட பார்ப்பனியம் அவர்களது புலால் மறுப்புக் கொள்கையையும் திருடிக்கொண்டது. இருந்தாலும் இந்தியா முழுவதும் பார்ப்பன – மேல்சாதியினரிடையே ஒரே மாதிரியான சைவ உணவுப் பழக்கம் இன்றும் கிடையாது. காசுமீரப் பண்டிதர்கள், வங்கத்துப் பார்ப்பனர்கள், தக்காணப் பார்ப்பனர்கள் போன்றோர் புலால் உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். புத்தர், மகாவீரரின் முயற்சியால் பார்ப்பனர்களிடமிருந்து மாடுகள் காப்பாற்றப்பட்ட பின்பே பார்ப்பனிய இலக்கியங்கள் புலால் மறுப்பை ஏற்றுக்கொண்டு கறியின் மேல் துவேசத்தையும் பிரச்சாரம் செய்தன. அதற்கும் காரணம் உண்டு.

சாதிப் படிநிலைக்கு வெளியேயும், ஊருக்குப் புறத்தேயும் இருந்த பஞ்சமர்கள், செத்த மாட்டைத் தின்பதற்கும், புதைப்பதற்கும் பார்ப்பனியத்தால் பணிக்கப்பட்டனர். இதை வைத்தே தாழ்த்தப்பட்ட மக்கள் பிறப்பிலும் தொழிலிலும் இழிவானவர்கள் என்பதை பார்ப்பனியம் இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகிறது. ”ஆவுரித்துத் தின்னும் புலையர்” என்று தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்துகிறது தேவாரம்.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைக்குப் பயன்பட்ட மாடு தற்போது முசுலீம் எதிர்ப்புக்கும் பயன்படுகிறது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தல் இந்து மத தேசியத்தை உருவாக்க முனைந்த மதவாதிகள்தான் பசுவுக்கு ஒளிவட்டம் போட்டு பசுவதையைத் தடைசெய்ய வேண்டும் எனப் பேச ஆரம்பித்தார்கள். வெள்ளையர்களிடம் அதிகாரமிழந்த மராத்திய சித்பவனப் பார்ப்பனர்களே இதைத் துவக்கினர்.

முசுலீம்கள் மீதான துவேசத்துடன் இந்து மதத்தையும், ஆங்கிலேய எதிர்ப்பையும் உருவாக்க முனைந்த திலகர்தான் மாட்டுப் பிரச்சினைக்கும் பிள்ளையார் சுழி போட்டார். சிவாஜி வழிபாடு, விநாயகர் ஊர்வலம் போன்றவையும் திலகரின் கைங்கரியங்கள்தான் என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அயோத்தி தொடங்கி பசுவதை வரை இந்து முசுலீம் பிரிவினையை வரவேற்ற வெள்ளையர்களும் இத்தகைய போக்குகளை ஊக்குவித்தார்கள். அதன்பின் வட இந்திய நகரங்களில் ‘இந்துக்களின் புனிதச் சின்னமான பசுவை முசுலீம்கள் கொன்று கோவிலில் வீசினார்கள்’ என்ற வதந்தியினால் மட்டும் பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. பிரிவினைக்குப் பின் 60-களில் சங்கபரிவார வானரங்கள் நடத்திய பசுவதை எதிர்ப்பு இயக்கத்தின் போதும் ஏராளமான கலவரங்கள் நடந்தன.

மாட்டுத் தலையை வைத்து ஆர்.எஸ்.எஸ். கொன்ற மனிதத் தலைகள்தான் இந்நாட்டின் மாபெரும் அவமானம். கேவலம் மாட்டிற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்து மத வெறியர்கள்தான், ஆயிரக்கணக்காக முசுலீம்களின் உதிரத்தைக் குடித்தவர்கள் என்பது வரலாறு.

ஆர்.எஸ்.எஸ்-இன் கலவரப்பட்டியலில் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாட்டிலும் பசுவதையைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார்கள். எனவே அவர்களின் முசுலீம் எதிர்ப்புக் கலவரத்தில் பசுவதைப் பிரச்சினையின் பங்கைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது இதைக் கையிலெடுப்பார்கள். கோமாதா, புனிதம், மதம் என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தினை ஊடுருவும் பசுவதையை அதன் யதார்த்த நிலையிலிருந்து இனிப் பரிசீலிப்போம்.

குரங்கிலிருந்து மாறிய மனிதனின் கை, கால்கள் நேர்த்தியடைந்து, முதுகுத் தண்டு நிமிர்ந்து, மூளை வளர்ச்சியடைவதற்கும் இறைச்சி பெரும் பங்காற்றியது. ஆரம்பகால மனிதனது கடும் உழைப்பிற்கும், போராட்டத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான புரதத்தை அளித்தது இறைச்சிதான்.

இன்றைக்கு பார்ப்பன – மேல்சாதியினரைத் தவிர உலகமே மாட்டுக்கறியைத் தின்கிறது. மாடு மட்டுமல்ல. ஆடு, குதிரை, ஒட்டகம், நாய், முயல், பலவித பறவைகள் என்று எதெல்லாம் கிடைக்கிறதோ அதெல்லாம் உட்கொள்ளப்படுகின்றன. கால்நடை உற்பத்தி, விவசாய உற்பத்தியில் கால்நடைகளின் பங்கு, காலநிலை, உணவுப்பழக்கம் இவற்றுக்கேற்ப சில வேறுபாடுகள் இருக்கலாம். நாட்டுக்கு நாடு இறைச்சியின் பெயர்தான் மாறுபடுகிறதே தவிர ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்றெல்லாம் கிடையாது.

கணிப்பொறி வேலைக்காக நம்மூர் அம்பிகள் ஈக்களாய் ஒட்டிக் கொள்ளும் அமெரிக்காவில்தான் சிகாகோ நகரம் உள்ளது. இறைச்சிக்காக நவீன ஆலைகளில் தினமும் பல்லாயிரம் மாடுகள் கொல்லப்படும் இந்நகரம் ‘உலகின் கொலைக்களம்’ என்றழைக்கப்படுகிறது. ஆதலால் கோமாதாவைக் கொலை செய்யும் அமெரிக்காவிற்கு இந்துக்கள் போகக் கூடாது என இந்து முன்னணி தடை போடுமா?

பார்ப்பனியத்தின் தீண்டாமைக் கருத்துக்கு அப்பாற்பட்டு, விவசாயத்திற்கு உதவும் மாடுகளைக் கொன்று உண்பது நமது விவசாயிகளிடமும் பொதுவில் இல்லை. அதேசமயம் விவசாயத்திற்கு உதவாத மாடுகளை வீணே பராமரிக்கத் தேவையில்லாத விவசாயிகள் அதை விற்கிறார்கள். அவையே கறிக்காக வெட்டப்பட்டு நாடெங்கும் விற்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் மாட்டுக்கறி என்பது ஒரு சாதாரண உணவுதான். ஆடு, கோழி இறைச்சியின் விலை மிகவும் உயர்ந்துவிட்ட நிலையில் மலிவான மாட்டுக்கறிதான் நமது உழைக்கும் மக்களின் புரதத் தேவையை ஈடு செய்கிறது. எனவே கறிக்காக பிராய்லர் கோழி வளர்ப்பது போல, இறைச்சிக்கென்றே மாடுகள் வளர்ப்பது, ஆலைகள் நிறுவுவதற்கு அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

பசு புனிதமென்றால், மீன் விஷ்ணுவின் மச்சாவதாரம், கோழி முருகனின் அவதாரம், ஆடு கிருஷ்ணன் மேய்த்தது என அனைத்தையும் தடை செய்யலாமா? மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு மிதிக்கலாமா? கடவுளே பிள்ளைக் கறியை ஏற்கும்போது, பக்தன் மட்டும் மாட்டுக்கறியைத் தின்னக் கூடாதா? எனவே மாட்டுக்கறி பிரச்சினையில் முசுலீம் எதிர்ப்பும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான துவேசமும் இருப்பதால், சாதியை மறுக்கவும், இந்து மத வெறியர்களின் அவதூறை ஒழிக்கவும் மாட்டுக் கறியைத் தின்னாதவர்களும் தின்று பழகுக!

பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்? பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.

நாம் பசுவதைத் தடைச் சட்டம் நீக்கப் போராடுவோம்!

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!

சதீஷ் குமார்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்  சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார்  படுகொலை வழக்கினை உயர்நீமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டு 3 மாதங்கள் கடந்துவிட்டன. சிபிஐ இவ்விசாரணையில் காட்டும் அலட்சியத்தை உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணையின் போதும் வழக்குரைஞர் சங்கரசுப்பு சுட்டிக்காட்டியும், வாய்தா வாங்குவதில்தான் சிபிஐ தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு இக்கொலையை தற்கொலையென திரிக்க முயன்றதற்கான ஆதாரங்கள் இருந்தும், அவரை சிபிஐ கைது செய்து விசாரிக்காமல் இருப்பதும், தமிழக அரசு அவரை பணிநீக்கம் செய்யாமல் இருப்பதும், சதீஷ்குமார் படுகொலையின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் போகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

கடந்த 2011, ஜுன் 7 அன்று காணாமல் போன சதீஷ்குமாரை கண்டுபிடித்து தர மறுநாளே சங்கரசுப்பு புகார் அளித்தார். சதீஷ்குமார் காணாமல் போய் 2 நாட்களுக்குப் பின் அவருடைய பைக் மற்றும் செல்போன் ஐசிஎப் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் காவல்துறை அலட்சியமாக விசாரிப்பதை உணர்ந்த வழக்குரைஞர் சங்கரசுப்பு உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் சதீஷ்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஐசிஎப் குளத்தில் தேட உத்தரவிட்டது. போலீசோ ஒப்புக்குத்தான் குளத்தில் தேடியது.

மக்கள் தொலைக்காட்சி நிருபர்தான் சதீஷ்குமாரின் உடலை அக்குளத்தில் இருந்து கண்டுபிடித்துக் கூறினார். உடலைப் பார்த்த உடனேயே அவர் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. விரல் நகங்கள் பிடுங்கப்பட்டும், சுண்டுவிரல் துண்டிக்கப்பட்டும், கூரான ஆயுதங்களால் உடலெங்கும் கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடன் உடல் கிடைத்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து அறுக்கப்பட்டு சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டார் என்பது நிரூபணமானது. பிரேத பரிசோதனை அறிக்கையை மறு ஆய்வு செய்து இது கொலை என்பதை சிபிஐயும் உறுதிப்படுத்தியது.

திருமங்கலம் காவல் ஆய்வாளர் (சட்டம்-ஒழுங்கு) நஸீர் 28.5.2011 அன்று அஜ்மீர்  தர்காவிற்கு செல்வதாக 2 வாரம் விடுப்பில் சென்றதும், அந்த பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்ள குற்றப் பின்னணி கொண்ட சுரேஷ்பாபுவை நியமித்ததும் சதீஷ்குமாரின் கொலையை திட்டமிட்டு நடத்திவிட்டார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காவல்துறை அணுகுமுறையின் மூலம் குற்றவாளிகளை தொடர்ந்து காப்பதற்கு அவர்கள் செயல்பட்டது அம்பலமாகி இருக்கிறது.

கொலையை தற்கொலையாக்க காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல் துறையின் முயற்சிகள்:

  • சதீஷ்குமார்  செல்போன் அணைக்கப்படாமல் இருந்தும், அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • சதீஷ்குமாரின் பைக் மற்றும் செல்போன் ஐசிஎப் குளம் அருகில் கிடைத்த பின்பும் அங்கு முழுமையாக தேடாமல் தவிர்த்துள்ளனர். போலீசு மோப்ப நாய் மூலம் புலன் விசாரணை செய்வதையும் வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்.
  • உடல் பலர் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்டு பரிசோதித்த போது கிடைக்காத பிளேடு துண்டுகளை சதீஷ்குமாரின் சட்டைப்பையில் இருந்து எடுத்ததாக முன்தேதியிட்ட பிரேத விசாரணை அறிக்கை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • உடல் கிடைத்த இடத்திலேயே பிரேத விசாரணை அறிக்கை எழுத வலியுறுத்தியும் தவிர்த்துவிட்டு, அதிகாலை 4 மணிவரை இரு வழக்குரைஞர்களை காவல்நிலையத்தில் காத்திருக்க வைத்தும் தயாரிக்காமல், காலை 10 மணியளவில் வருமாறு கூறி அவர்களை அனுப்பிவிட்டு, அவர்கள் வருவதற்கு முன்பாகவே வேறு இருவரிடம் சாட்சி கையொப்பம் பெற்று அறிக்கையை முன்தேதியிட்டு தயாரித்துள்ளார் சுரேஷ்பாபு.
  • பிளேடுகளை எப்போது சட்டைப் பையில் இருந்து எடுத்தீர்கள் என வினவியபோது பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் கொடுத்தார் என முதலில் கூறிய சுரேசு பாபு, அம்மருத்துவர் அதனை மறுத்தபோது யாரோ ஒரு வழக்குரைஞர் கொடுத்தார் என முன்னுக்கு பின் முரணாக கூறியிருக்கிறார்.
  • சதீஷ்குமார் தற்கொலை மனோபாவம் உடையவர் என மருத்துவரிடம் சான்றிதழ் பெற சுரேஷ்பாபு முயற்சித்துள்ளார்.
  • சிபிஐக்கு வழக்கினை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் முன்தேதியிட்ட பிரேத விசாரணை அறிக்கையை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுரேஷ்பாபு தாக்கல் செய்துள்ளார்.
  •   உடலில் வெளிக்காயங்கள் இல்லையென காவல்துறை துணை ஆணையாளர் தாமரைக்கண்ணன் கூறியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேற்கூறியவைகளை பிரமாண வாக்குமூலமாகவும், விசாரணையின் போது வாதங்கள் மூலமாகவும் வழக்குரைஞர் சங்கரசுப்பு சுட்டிக்காட்டி சுரேசுபாபுவை கைது செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரிய பிறகும், உயர்நீதிமன்றம் சந்தேகப்படுபவர்களை கைதுசெய்து விசாரிக்க உத்தரவிட்ட பின்பும் சிபிஐ இதுவரை சுரேஷ்பாபுவை கைது செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சிபிஐ-யின் பொறுப்பற்ற அலட்சியம்:

உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னால் சிபிஐ ஏதாவது ஒரு செய்தியை ஊடகங்களில் கசிய விடுவதிலும், விசாரணையின் போது கால அவகாசம் பெறுவதிலும் திறம்பட செயல்படுகின்றது. “கொலை என உறுதி செய்துவிட்டோம், துப்பு கொடுப்பவருக்கு பரிசுத் தொகை அறிவித்துள்ளோம், சிபிஐ அதிகாரிகள் பலர் விசாரணை செய்கிறோம், போலீசு அதிகாரிகள் உட்பட பலரை விசாரித்து உள்ளோம், பலரை சந்தேகப்படுகிறோம்” என தனது ‘மாபெரும் நடவடிக்கைகளை’ முன்வைத்தபோது “இதில் இருந்து என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள்” என நீதிபதிகள் வினவினால் “விசாரித்து வருகிறோம், கால அவகாசம் தாருங்கள்” என தலையை சொறிகின்றது சிபிஐ. கொலையை தற்கொலையாக்க முயன்ற சுரேஷ் பாபுவை காவலில் எடுத்து சரிவர நான்கு கேள்விகளைக் கேட்டாலே கொலைக்கான பின்னணியை அறிந்துவிட முடியும் என்ற நிலை இருந்தும், அதனை செய்யாமல் சிபிஐ தவிர்ப்பது யாரை பாதுகாக்க? சுரேஷ்பாபுவையா அல்லது பின்னால் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளையா? சதீஷ்குமார்  படுகொலையின் சூத்திரதாரியாக சுரேஷ்பாபு இருந்தாரா அல்லது படுகொலையை தற்கொலையாக்கி கொலையாளிகளை பாதுகாத்தாரா? என்பதுதான் கண்டறியப்படவேண்டிய விசயம். இப்படிப்பட்ட குற்றவாளியை கைது செய்து விசாரிக்காமல் சிபிஐ இழுத்தடிப்பது ஏன்?

சுரேசுபாபுவை தமிழக அரசு பாதுகாப்பதன் பின்னணி:

மதுரையில் குற்ற கும்பல்களுக்கு இடையிலான மோதலில் தனது அண்ணன் எதிர்க்குழுவால் கொலை செய்யப்பட்டார் என்பதற்காக பழிக்கு பழியாக ஆட்களை ஏவி கொலை செய்ததில் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டு, சந்தேகத்தின் பலனில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான் இந்த சுரேஷ்பாபு. இவ்வழக்கில் போலியாக சிலரை வழக்கில் சேர்த்து தப்பிக்க முயற்சித்து, பின்னர் மாட்டியிருக்கிறார். சிறையில் இருந்தபோது குற்றவாளிகளோடு மேலும் நெருக்கமாகி குற்றவாளிகளின் வலைப்பின்னல் உள்ளவர். சதீஷ்குமார் வழக்கில் சிபிஐ சந்தேகப்பட்டு காவலில் எடுக்க உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த கட்டை ராஜா எனும் கூலிப்படை கொலையாளி சுரேஷ்பாபுவோடு அதே சிறையில் இருந்ததாக கூறப்படுகின்றது. சுந்தேகத்தின் பலன் காரணமாக கொலை வழக்கில் இருந்து தப்பித்த ஒருவர் காவல் ஆய்வாளராக பணிபுரிய முடிகிறது என்றால் அவர் எவ்வளவு தூரம் உயரதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளவராக இருக்க வேண்டும்!

மேலும் வழக்குரைஞர் சங்கரசுப்பு தனது மகன் கொலையில் காவல் ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் ரியாசுதீனை சந்தேகப்படுவதாகவும் அவர்களால் சட்டவிரோதமான காவலில் வைத்து பணம் பறிக்கப்ட்ட ஒருவருக்காக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி அவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பெற்றதால் அவர்களை சந்தேகிப்பதாகவும் அவர்களை விசாரிக்க வேண்டுமென்றும் புகார் கொடுத்திருந்தார். அதேபோல வழக்குரைஞர் சங்கரசுப்பு தனது கட்சிகாரார் நிலத்தகராறு தொடர்பான பிரச்சினைக்காக, டிஐஜி ஜாங்கிட்டின் சொத்துக்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் பெறுவதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாகவே வழக்குரைஞர் சங்கரசுப்பு காவல்துறையின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பல வழக்குகளில் வழக்காடியிருக்கிறார். அரசு அடக்குமுறை வழக்குளில் புரட்சிகர, தமிழ்தேசிய, ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளுக்காக சமரசமின்றி நீதிமன்றத்திலும், களத்திலும் போராடக்கூடியவர்.

சதீஷ்குமார் படுகொலையில் காவல்துறையின் பங்கு வெளிவந்துவிடக்கூடாது என்பது மட்டுமல்ல தமிழக அரசின் பிரச்சினை. சுரேஷ்பாபு போன்ற கிரிமினல் அதிகாரிகளை உருவாக்குவதும், அவர்களை பாதுகாப்பதும் அரசின் தேவையாக உள்ளது. பிப்ரவரி 19, 2009 உயர்நீதிமன்றத் தாக்குதல், பரமக்குடி துப்பாக்கிக்சூடு… என இன்னும் பல நிகழ்வுகளில் ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்பதில் அரசின் நிலையோ மாறுவதில்லை.

சதீஷ்குமார்  படுகொலைக்கு உடனே நீதிபெறப் போராடுவோம்!

சதீஷ்குமார் படுகொலை விசாரணையில் இக்கட்டத்தில் உள்ள ஒரே துருப்பு சீட்டு சுரேசுபாபுதான். சுரேசுபாபு கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால்தான் கொலைக்கான பின்னணி தெரியவரும். இதனை சிபிஐ தானாக செய்யும் என நாம் காத்திருப்பது மடத்தனம். தனது மகனின் கோரமான படுகொலைக்கு நீதிபெற வழக்குரைஞர் சங்கரசுப்புவும் அவரது குடும்பத்தினரும் போராடி வருகின்றனர். சுரேசுபாபுவை கைது செய்து விசாரிப்பதற்கான ஆதாரங்களை சுயமாகத் திரட்டி சிபிஐக்கு தந்துள்ளார் வழக்குரைஞார் சங்ரசுப்பு. ஆனால் காக்கி உடை குற்றவாளி சுரேசுபாபுவோ தமிழக அரசின் பாதுகாப்பில், உயரதிகாரிகளின் அரவணைப்பில் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாளில் காவல் ஆய்வாளராக சுதந்திரமாக உலவி வருகிறார். கோரமான படுகொலையில் தனது மகனை இழந்த வழக்குரைஞர் சங்கரசுப்புவிற்கு தேவை நம் அனுதாபம் அல்ல. அவரது நீதிக்கான போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருப்பதும், போராடுவதுமே தேவை. இல்லையேல் மக்கள் நலனுக்காக உறுதியுடனும், இழப்புக்களுடனும் போராடும் இத்தகைய வழக்கறிஞர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பது நம் கடமை. ஆதரவு தாருங்கள்!

___________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னைக் கிளை.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!

விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது? – கேள்வி பதில்!

கேள்வி:
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மட்டும் இல்லையென்றால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிடும், சிறு பெண் குழந்தைகளை கூட கற்பழித்து சாக்கடையில் வீசுவது அதிகரிக்கும் என்பது என் எண்ணம், நம் இந்திய கலாசாரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய நாடுகளை போல் நம் அரசு பாலியல் தொழிலை ஏன் ஒரு குடிசை தொழிலாக கொண்டு வரக்கூடாது?இதனால் வேலைக்கு போகுமிடங்களிலும் பொது இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குறையுமே?

– சத்யா
___________________________________________

அன்புள்ள சத்யா,

இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.

தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதை காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு. தேவதாசி குடும்பத்தில் இருந்து வந்த மூவலூர் ராமாமிருதம் அம்மையார்தான் இந்த தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் பெரியார் ஆதரவுடன் முன்னணி பங்கு வகித்தார். 1999களில் கூட ஒரிசாவின் பூரி ஜகன்னாதர் கோவில் இருந்த கடைசி தேவதாசி மறைந்து விட்டாலும் தேவதாசி முறையை தொடர வேண்டும் என்று இந்துத்வவாதிகள் பேசி வந்தனர். அப்போதைய புதிய கலாச்சார இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வந்திருக்கிறது. வினவிலும் வெளியிடுகிறோம்.

இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’சாதிப்பெண்களை பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை அமலில் இருக்கிறது. இங்கும் ஊர்த் தெய்வத்திற்கு நேர்ந்து விடப்படும் அபலைப் பெண்கள் கிராமத்து ஆதிக்க வர்க்க ஆண்களின் காமக்கிழத்திகளாக பணி புரிய வேண்டும். இது கீழ்மட்ட அளவில் உள்ள தேவதாசி முறை என்றும் கூறலாம்.

இந்துமதப் புராணங்களிலும் தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, மேனகையின் ‘வரலாற்று’ பாத்திரங்களையும், முக்கியமாக முனிவர்கள் தவமிருந்து பவர் பெறும் நேரத்தில் அவர்களை முடக்கும் சல்லாபக் கதைகளையும் அறிவோம். வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும் சேர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.

அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம். இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

முழு நாட்டு மக்களையும் வேசி மக்கள் என்று தூற்றியதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலகெங்கும் எல்லாக் கலாச்சாரங்களிலும் விபச்சாரம் இருந்திருக்கிறது. விபச்சாரத்தை வெறும் ஒழுக்கம் குறித்த பிரச்சினையாகப் பார்க்காமல் அதை சமூக பொருளுற்பத்தி வரலாற்றில் வைத்துப் புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு விடை தெரியும்.

இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.

பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாக பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களை காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்கு பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்கு பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதை பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு ஆண்டை அல்லது முதலாளி அவனது சொத்துக்களை பாதுக்காப்பதற்கு குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்று அழைக்கப்படும் “ஒருத்திக்கு ஒருவன்” என்ற நன்னெறியின் பொருள் இதுதான். அதாவது ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே இருக்க முடியும். அப்போதுதான் வாரிசுரிமைச் சிக்கல் இருக்காது. ஆனால் ஒரு ஆணுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இது அடிமைகளுக்கும், ஆளப்படும் வர்க்கத்தினருக்கும் சாத்தியமுமில்லை, தேவையுமில்லை. பாலியல் வாழ்வில் மனித சமூகம் உருவாக்கிய சுதந்திரக்காதல் என்பது ஒடுக்கப்படும் வர்க்கத்தினரிடையேதான் ஓரளவுக்கு இருந்தது எனலாம். இன்றும் கூட அப்படித்தான்.

சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு “கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறார்.

இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது.

மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.

ஆக விபச்சாரம் உள்ளிட்டு பல்வேறு பாலியல் வக்கிரங்களின் ஊற்றுமூலம் மேட்டுக்குடியினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து இன்று பாலியல் வக்கிரங்கள் ஏன் அதிகம் நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம். அப்படி அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது உங்களது கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.

பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது. அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.

மேலும் நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக நம் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.

சரி, இத்தகைய பிரம்மாண்டமான பாலியல் தொழில் வலைப்பின்னல் மனிதர்களின் பாலுணர்வுக்கு போதிய ‘தீனி’ போட்டு ஆற்றுப்படுத்தலை செய்திருக்கிறதா? இல்லை. அப்படி முடியாது என்பது இதன் நோக்கத்திலும், இயல்பிலும் உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட பாலுணர்வு வெறி என்பது ஒரு போதும் அடங்காது. அதனாலேயே பழையமுறைகள் சலித்துப்போய் புதிது புதிதாக தேடும் வெறி தூண்டப்படுகிறது. விபச்சாரத்தில் கூட பெண்கள், விதவிதமான தேசிய இனப்பெண்கள், கன்னி கழியாத பெண்கள், பல வயது பெண்கள், என்று போய் தற்போது குழந்தைகள் வரை வந்து நிற்கிறது. எனினும் இந்த வேட்டை இத்தோடு நின்றுவிடாது. வேறு வேறு விதங்களில், முறைகளில் தொடரும்.

8 எம். எம் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு பணக்காரனது திருப்திக்காக ஒரு அப்பாவி இளம் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பின்னர் உண்மையாகவே கொலை செய்து அதை படமெடுத்து (SNUFF FILM) அவனுக்கு காட்டுகிறார்கள். அப்போதுதான் அவனது உணர்ச்சி திருப்தி அடைகிறது. அதற்காக அவன் பெரும் பணத்தை செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். இது உண்மையா, பொய்யா என்று பார்ப்பதை விட இவை போன்றவற்றை சாத்தியப்படுத்தும் வழிகளில்தான் பாலியல் வக்கிரங்கள் பெரும் பணத்தை அள்ள முடியும்.

மனிதர்களின் மறு உற்பத்திக்கென்று இயல்பான முறைகளில் இருக்கும் உடலுறுவு பின்னர் பாலுணர்வு வெறிக்காக விதவிதமாக மாற்றப்பட்டு ஓதப்படுகிறது. அவையெல்லாம் அறியாதவர்கள் இன்பத்தை முற்றிலும் அறியாதவர்கள், நுகராதவர்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்கி மிரட்டுகிறார்கள். பதற்றம் கொள்ள வைக்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்களில் இரத்தம் தெறிக்க கொலை செய்யும் விளையாட்டுக்கள் போல வன்புணர்ச்சி செய்யும் ரேப் விளையாட்டுக்களும் வந்துவிட்டன. ஆனால் இவை விளையாட்டோடு நிற்காமல் அந்த பிஞ்சு மனங்களில் ஊடுறுவி என்றாவது வினையாற்றாமல் போய்விடுமா என்ன?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் இத்தகைய சமூக சூழலே பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையான காரணம். விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலமாக இவற்றை ஒழித்துவிட முடியாது. அதனால்தான் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் கேளிக்கைகள் சட்டப்பூர்வமாகவே நிறைந்திருக்கும் அமெரிக்காவில் கூட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்து விடவில்லை. உண்மையில் இந்த வன்முறைகள் அமெரிக்காவிலேதான் அதிகம். வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை.

பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் “கற்பு – விபச்சாரம்” இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.

மேலும் சாதி, மதம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் நிறைந்திருக்கும் நமது நாட்டில் ஒரு பெண் காதலிப்பது என்பது இத்தனை தடைகளை தாண்டித்தான் முடியுமென்பதால் உண்மையில் பெண்களுக்கு இங்கே தேர்வு செய்யும் உரிமை இல்லை. இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் கூட சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தேர்வு செய்யும் சமரச நிலைமையே. இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல காரணமாகிறது.

சொத்துடமை தோற்றுவித்திருக்கும் வாரிசுரிமைக் குடும்பம்தான் நம்நாட்டிலும் செல்வாக்கோடு செலுத்துகிறது. இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகளில் ஒரு மனிதனின் தனித்துவ விருப்பமும், அதற்கு சமூகம் விதித்திருக்கும் தடைகளும் ஒரு முரண்பாட்டை வீரியத்துடன் உருவாக்குகின்றன. அந்த முரண்பாட்டின் பிரச்சினைகளோடுதான் நாமனைவரும் வாழ்கிறோம்.

நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டை கேடாக பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.

அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையை பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாக செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது. இன்று ஏழ்மை, மறுகாலனியாக்க நெருக்கடிகள், மேற்குலகின் முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவத் துருப்புகளுக்காக நம்மைப் போன்ற ஏழை நாட்டு பெண்கள் வேறு வழியின்றி விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான மேட்டுக்குடி விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தை பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஒரு இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்கு செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் ஏன் விபச்சாரத்திற்கு போக வேண்டும்?

காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!

காதல் சாத்தியப்படும் போது காமவெறிக்கு தேவை இல்லை. ஆனால் காமவெறி இல்லாமல் முதலாளித்துவ பாலியல் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாது.

ஆகவே பாலியல் வன்முறைகளை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை நாம் மாற்றுவதற்கு முன்வரவேண்டும். ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் ஒரு சமூக அமைப்பில் சுதந்திரக் காதல் பூத்துக் குலுங்கும். அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.

__________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

15

குந்திக்கினு கொறிக்கிறவன்
ஓடிக்கினு பேசுறவன்
அட்ச்சிகினு தூங்குறவன்
அம்சமா லபக்குறவன்
நெட்டுல நோண்டுறவன்
வினவுல பொருமுறவன்
அல்லா மாம்சும்
மறக்காம ஓட்டு போடுங்கப்பு!

வரப்போறது
உங்காட்சி, எங்காட்சி இல்லடே!
உள்ளாட்சி தேர்தல்!

சரிலே,
அது என்னடே
ஆட்சியில உள்ளாட்சி, வெளியாட்சி
ஓபனாட்சி, குளோசுடு ஆட்சி…ன்னு
பிரிச்சு விளையாடுதீக!

கட்டிங் மேட்டருல
வட்டம்னா என்ன,
மாவட்டம்னா என்ன,
கோட்டையின்னா என்ன
இல்ல செங்கோட்டையின்னாதான் என்னடே?

உறைய மாத்தி
கலரை மாத்தி
டேஸ்ட மாத்தி
எப்புடி அட்ச்சாலும்
சாராயம் சாராயம்தாம்லே,
கூமுட்டையில ஏதுடா குல்சா முட்டை!

ஏலே, மக்கா!
வைட்டமின் ‘ப’
ஆயிரத்துல ஆரம்பிச்சா கவுன்சிலரு
‘எல்லுல’ போனா எம்.எல்.ஏ
‘சி’யிலு முடிஞ்சா எம்.பி
ஹவாலாவுல டீலீங்னா லோக்கல் மினிஸ்டர்
சுவிஸ்ஸுக்கு கை மாத்துனா சென்ட்ரல் மினிஸ்டர்
உலகவங்கியோட டைரக்டா பேசுனா பிரைம் மினிஸ்டர்
கூட்டிப் பெருக்கிப் பாத்தா
சில்லறைங்களுக்கு உள்ளாட்சி
நோட்டுக்கு மத்த ஆட்சி!
கவுன்சிலருக்கு மல்லையா பீரு!
மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

___________________

ரிங்கப்பு, மேட்டருக்கு வா!
நிர்மலா பெரியசாமி எபக்டுல சொன்னா,
” தமிழகத்தில் தி.மு.க தனித்துப் போட்டி
கலைஞர் அறிவிப்பு, உடன்பிறப்புகள் உற்சாகம்”

ஏலேய் வீணாப்போன உடன்பிறப்புகளா!
எங்கனயிருந்து நைனா ஜாலி?
இதென்ன மாயாஜால் மங்காத்தா ஷோவா?
இல்ல மாகாபலிபுரம் மிட்நைட் டான்சா?

தில்லிக் குளுருல கனிமொழிக்கு அப்பீட்டு
சப்பாத்தி துன்னு ராசாவுக்கு சீதபேதி ரிப்பீட்டு
சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம்
ஏட்டையா கஸ்டடியில,
விழுப்புரத்து பொன்முடி சப் இன்ஸ்பெக்ட்டரு பாக்கட்டுல
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ரிமாண்டுக்குன்னு
டுடேயா, டுமாரோவான்னு வெயிட்டிங்!
பொங்கலூர் பழனிச்சாமி RAC யில புக்கிங்!
பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆட்டமெல்லாம் குளோசாகி
பல்லி ஊறும் பாளைச்சிறையில் குடிமுழுக
அஞ்சா நெஞ்சன் அஞ்சி அஞ்சி எஸ்ஸாக
எங்கனயிருந்துடே உற்சாகம்?

கட்சியில ஒரு கோடிப்பேருங்குறான்
ஊருக்கொரு சிங்கம், தளபதி, நாட்டாமைங்குறான்
ஆனா அம்மா அடிச்ச அடியில
ஜட்டியக் காணோம், ஜாக்கியக் காணோம்னு ஓடுறான்
பொண்டாட்டி புள்ளகளை பாத்து அழுவுறான்
களி தின்னு விக்கலுல நெளியுறான்
மாஜிஸ்ரேட்டு முன்னாடி கதறுறான்
மீடியாவக் கண்டா ஒளியுறான்
மீறிக்கேட்டா புலம்புறான்

இத விடுடா,
அம்மா அரஸ்ட்டுல அண்டம் கிடுகிடுங்க
ரப்பர் ஸ்டாம்ப் பிரதிபா பட்டீல் பாட்டியண்ட
காப்பாத்து, காப்பாத்துன்னு முறையிடுறான்.
வீராதி வீரன்னு ரீல்விட்டுகிணு
கைப்புள்ளயாட்டம் ராஷ்டிரபதி பவனுல
புகார் கொடுக்குறவன
இன்னுமா இந்த ஊர் உலகம் நம்புது!

ஆனது ஆச்சு, ஆட்சியும் போச்சு
வாரிசு சான்சும் ஜஸ்ட் மிஸ்ஸிங்ன்னு
தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின்
ஊரு ஊரா புண்ணிய ஷேத்திரம் போறமேரி
வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளைன்னு
உடன்பிறப்பு மேஸ்திரிகளை ஜெயில்ல பாத்தாரு,
ஆறுதலை ஏதோ கொஞ்சம் கொடுத்தாரு
விட்டா சேலம் சிவராஜ வைத்தியர் கணக்கா
ஓரே நாளுல மூணு ஜெயிலுக்கு போனாலும் தீராதுன்னு
போங்கடா போக்கத்தவனுகளான்னு
பாடி செக்கப்புக்கு இலண்டனுக்கு பறந்தாரு

இப்ப வெயிட்டான பாடியோட
உள்ளாட்சி தேர்தலுல பேசுதாறு
“கட்சியப் பாத்து போடாதீங்க,
ஆளப்பாத்து போடுங்கன்னு” புலம்புராறு!
அடுத்து யார் அரஸ்ட், யார் ரிமாண்டு,
எந்த ஸ்டேசன், எந்த ஏட்டுன்னு
இன்னும் எம்புட்டு நாளு அலையறது!

_______________________

னிமொழியை காங்கிரசு கண்டுக்கிலைனு
காங்கிரசை கலைஞர் கண்டுக்கல
ஆ வூன்னா காங்கிரசு தனித்துப் போட்டியினு
மைக் மாமா இளங்கோவன் கானா பாட்டு பாடி
கட்சிய கொன்னுட்டான்னு
கதர்க்காரனுவக துக்கப் படுறானுவ

சத்தியமூர்த்தி பவனுல
வேட்டியக் கிழிச்சது போக
இருக்குற துணிய வச்சு
கோமணம் கட்டுற பயலுவ
இப்போ உள்ளாட்சித் தேர்தலுல
தனித்துப் போட்டின்னு சொல்லிகிட்டு
அதுக்கு 12 வேட்டி கோஷ்டி தலங்கள போட்டு
கமிட்டி அமைச்சுருக்கானுக!
இன்னா தெகிரியம்!
டெபாசிட்டே தேறாத
தொப்பைத் தலையனுகளுக்கு
தெனாவட்ட பாத்தியாடே?

_____________________________

“சரக்கடிச்சுட்டு சட்டமன்றம் வாறான்னு”
அம்மா எகிற
“நீதான் கூட இருந்து ஊத்திக் கொடுத்தியா”ன்னு கேப்டன் திமிற
அது முந்தா நேத்து காமடி
“ஏதோ சீட்ட பாத்துப் போட்டுக்குடும்மா”ன்னு
போயஸ் தோட்டுத்துல காத்திருந்து
ஜாக்பாட்டு அடிச்சாரு நம்ம காப்டன்
இது நேத்து காமடி

அது கேப்டனுக்கு பம்பர் பிரைசுன்னா
அம்மாவுக்கு ராப்பிச்சைக்கு கொட்டுற சோறுதான்
பெறவு பிச்சைக்காரன் பிரியாணிக்கு அடிபோட
அம்மா பீச்சாங்கையால அடிச்சு விரட்ட

ஊர்மேய்ஞ்சு உடம்பு வளர்த்த
ஜல்லிக்கட்டு காளை கணக்கா
நம்ம காப்டன்  ஓடுறாரு, ஓடுறாரு,
நான்ஸ்டாப் ரன்னிங்குதான்.
பார்சிலானோவுல
காளைச்சண்டையை முடிச்சுக்கிட்டாலும்
நம்ம கேப்டன் காளை
மப்போட மிரண்டு புறண்டு ஓடுறதை நிறுத்துமாலே?

_______________________________

ப்பாலிக்கா நம்ம கேப்டனுக்கு
சிவப்பு வாளியில
காமரேடுங்க தண்ணி காட்டுனாங்களாம்!
அவுக கதையைக் கேட்டீகன்னா
அழுவுற புள்ளயும் வியுந்து வியுந்து சியிக்கும்!

காவிக்காரனை எதிர்க்கணும்னா
கதர்க்காரனோட கூட்டு!
கருப்பு சிவப்பு ஊழலை ஓய்க்கணும்னா
போயஸ்தோட்டுத்துல எச்சலை விருந்து
அம்மா அதிகாரத்தை வீய்த்தணும்னா
கோபலாபுரத்துல ஆறிப்போன டீ!

பதிவுலகுல வட போச்சேன்னு
மொக்கைங்க பேசுறமேரி
நம்ம காம்ரேடுங்களும் அம்மாகிட்ட
படாதபாடு பட்டாச்சு!
அப்பாவாச்சும் புத்தி வந்துச்சாடே?

பார் கேப்டன் ஒரு காலத்துல
சிவப்பு மல்லி படத்துல,
சிவப்பு சொக்கா போட்டுகினு,
சிவப்பு கண்ண உருட்டி உருட்டி
சிவப்பு டயலாக் உட்டவராச்சேன்னு
டாஸ் கேப்பிடல் படிச்ச நம்ம
மார்க்சிஸ்ட் மாமாக்கமாரு
வந்தவரைக்கும் ஆதாயம்ணு
கூட்டணியாம்!

இதுல கேப்டன்
கண்டிசனா தா.பாண்டியன் மாமாவும்
வரணும்னு உத்தரவு போட
அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சுன்னு
காம்ரேடுங்க ஒத்துக்கிணாங்களாம்!
பட்சே
அம்மையிண்ட முந்தானையை விட்டு
ஒருபோதும் இறங்காம் பாடில்லான்னு
அச்சன் தா.பா பேக் சைடு பெவிகால் தடவி
அவிடே அரை சீட்டு, கால் சீட்டு கிடைச்சாலும் மதின்னு
வெல் செட்டில்டாம்!
ஏலேய் ஆஃபாயில் அபிஷ்டுங்களா
சீக்கிரம் புரட்சி வர்ரது மாதிரி தெரியிதுடே!

சரிடே
புல்சே புண்ணாக்காட்டம்
ரொம்ப சிரிக்காதலே!

நெக்ஸ்ட் அயிட்டம்
பெரியார் சொன்ன ‘கண்ணீர்த்துளி’ சோகம்லே!

___________________________

“யாருக்காக, இது யாருக்காக,
இந்த மாளிகை வசந்த மாளிகை”ன்னு
சால்வை போட்ட சிவாஜி கெட்டப்புல
நம்ம வைகோ அண்ணே வாராறுலே!
எங்கனயும் சேர முடியாது,
எவிடயும் அடைய முடியாது,
இதுதாம்லே ரியாலிட்டி.
ஆனா அதைக்கூட கொஞ்சம்
ரோசமா நம்ம அண்ணன்
தனிச்சுப் போட்டின்னு
அடைகாக்குற பொந்துக் கோழி மேரி
பினாத்தும் போது
சிரிக்கவும் முடியல,
அழவும் முடியல,
உனக்கு எப்புடிலே?

___________________

ல்லாக் கட்சிக்காரனும் அத்துவிட்ட
இந்த காவிக் கட்சிப் பயலுவ
கோயம்புத்தூர் கவுண்டர் கட்சிக்காரனோட
கூட்டாம்டே!
காவிப்பயலுவ பாய கொல்லணும்பான்
கவுண்டர் பயலுவ சக்கிலியரை ஒழிக்கணும்பான்
இரண்டு பயலுவகளையும்
வளத்து விட்டது அய்யா கட்சியும், அம்மா கட்சியும்தான்!
இல்லேன்னா இவனுகளை எவன் மதிப்பாம்டே?

___________________

“அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி”
“எளிய மனிதனுக்கு அதிகாரம்,
கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்”னு
எதுகை மோனை எபக்டுல
ஒரு காலத்துல முழங்குன
நம்ம தம்பி திருமாவும்
ஃபீல்டுலதாம்டே இருக்காரு!
காங்கிரசு எருமையையே
கண்டுக்காத கலைஞரு
காய்ஞ்சு போன சிறுத்தைக் குட்டிக்கா
பால் குடுப்பாறு!
பாய்சன் குடுக்காம இருந்தா சரி!

என்ன செய்ய?
அரசியல்னு ஆயிப்போச்சு
இப்ப போய் புழப்ப மாத்த முடியுமா?
தம்பி திருமாவும் யாராவது
கூட்டணி வையுங்கய்யான்னு
குய்யா முய்யான்னு கத்துராறு
மாம்பழத்துக்கிட்டயும் தூது விடுராறு

மாம்பயத்தை கடிச்சு துன்ன
அவன் கட்சியிலேயே ஆளு இல்லைன்னு ஆயாச்சு,
பெறவு
வெம்பிப்போன மாம்யத்தை
கைக்காசு போட்டு
தின்னு பேதியாக
எவனும் தயாரில்ல!
ஆனா பாத்துக்கிடுங்க
தைலாபுரம் லாக்கரு
ரொம்பித்தான் வழியிது
வழியிறத கொஞ்சம்
நக்கலாம்ணு
சில பயலுவ அங்கனயும்
கிடக்கான் பாத்துக்கிடுங்க!

பெறவு நம்ம எஸ்.ஆர்.எம்
பச்சமுத்து கட்சியும்
அல்லா ஊர்லயும் போட்டியிடுதாம்!
காலேஜ், சொத்து பத்தை காப்பத்தருதக்கு
இதவிட்ட ஏதுடே வழி?

இதுதாம்டே உள்ளாட்சி தேர்தலு லைவ்!

அல்லா கட்சிக்காரனும்
அம்மாவாசை நல்ல நேரத்தை விட்டா கிடைக்காதுன்னுட்டு
மனு தாக்கல் செய்ஞ்சுருக்கான்!
ஒரே நாளுல 66,000 மனுக்களாம்!
நம்ம நேரம் எம்புட்டு கெட்டுப்போச்சு, பாத்தியாலே?

அது கிடக்கட்டும்
பல கிராமத்துல
ஆலமர, அரச மர பஞ்சாயத்து பெரிசுங்கள கூட்டி
பதவிகளை ஏலம் விடுறாய்ங்களாம்!
இதுனால ஜனநாயகம் கெட்டுப் போச்சுன்னு
நம்ம அண்ணா ஹசாரே அம்பிங்க
வருத்தப் படுதானுங்களாம்!

ஏலே போக்கத்த மூதிகளா
இதத்தாம்லே ராலேகான் சித்தியில
அண்ணா பண்ணிக்கீராறு
அவரு காட்டுத ஆளுதாம்லே
அங்கன பிரசிடண்டு!
மருமக உடைச்சா பொன்குடம்
மாமியார் உடைச்சா மண்குடாமாலே!

சரிலே
கடைசியில ஒன்னு சொல்லுதேன்!
திருப்பதி போய் முடிய வழிச்சு
அடிக்கிற மொட்டையும்
உள்ளாட்சி தேர்தலுல
வேகாத வெயிலுல நின்னு
வோட்டு போட்டு உனக்கு நீனே
அட்ச்சுக்கிற பட்டை நாமமும்
நல்லா மேச்சாகுதுலே!

போய் புள்ளி குட்டிகளை படிக்க வைக்க,
போராடுற வழியப் பாருலே!

________________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!

திடீர் பணக்காரன், ரவுடி ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலைக்கழகத்தில்  உரிமைக்காக மாணவர்கள் போராட்டம்!

மொழிவாரி மாணவர்களின் பிரச்சினையாக  மாற்றி, அடியாட்களை வைத்து மாணவர்களை அடக்கும் பல்கலை நிர்வாகம் !

– ஒரு நேரடி ரிப்போர்ட்

 சமீப காலமாக  பாரத் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பல பிரச்சினைகளால் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவே மாணவர்களின் இப்போராட்டம். ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது இப்பல்கலையில் நடந்து வரும் நிகழ்வுகளே ஒரு சிறந்த உதாரணம்.

பெரும்பாலும் இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்களுக்கென்று சில அல்லக்கைகளையும், ஆட்காட்டிகளையும் வைத்துக்கொண்டு ஆவர்த்தனம் செய்வர். ஆனால் இங்கோ அல்லக்கைகளும் ஆட்காட்டிகளும் மட்டுமே சேர்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை  நடத்தி வருகின்றனர் என்பதுதான் உண்மை. வளாகத்தில் எங்கு எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த /ஆ க்களைப் பார்க்கலாம். இப்பல்கலையில் உள்ள அனைத்து உயர் பதவிகளிலும் தங்கள் உறவினர்களை வைத்தே பல்கலையை நடத்தி வருகின்றார் கொள்ளையனான ஜகத்ரட்சகன்.

பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தாலும் மிகச்சிறிய அளவிலான இட வசதியை மட்டுமே கொண்டுள்ள இங்கு உள்கட்டமைப்பு என்பது பெயரளவிலேயே இருப்பது அங்குள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள்  மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இருக்கும் அங்கு குறைந்தபட்சம் தாகத்தை போக்குவதற்குத் தேவையான தண்ணீர் வசதிகூட இல்லை என்பது கொடுமையின் உச்சகட்டம்.

பல துறைகளைக் கொண்டு இயங்கி வரும் பல்கலைக்கழகம் என்று இவர்களின் வலைத்தளத்தில் சொல்லப்பட்டாலும் இவற்றில் பல பெயரளவில் மட்டுமே உள்ளது. மேலும் அவையாவும் மிகக் குறைவான கட்டிடங்களிலேயே அடங்கிவிடுகிறது. அங்குள்ள அனைத்து உபகரணங்களும் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாங்கப்பட்டு இயங்காத, அரதப் பழசான நிலையிலேயே உள்ளது. புதிய துறைகள் தொடங்கப்பட்டாலும் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் மாணவர்களை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவும் செய்முறைப்பயிற்சி இல்லாமல் அவர்களை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கும் நிலையே இங்கு நீடித்து வருகிறது. இதன்முலம் ஒட்டுமொத்தமாக இப்பல்கலையில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்  சூனியமாகிப் போய்விடுகிறது. இம்மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்குச் சென்றால்  பாரத் பல்கலை என்று பார்த்த மாத்திரத்தில் வெளியேற்றப்படும் அவலநிலையும் உள்ளது.

இந்நிலையில்  தங்களுக்கு பள்ளி வளாகத்திலேயே இந்த ஆண்டு முதல் நேர்முகத்தேர்வு வேண்டும் என்று மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முகநூலின்(ஃபேஸ்புக்) மூலம் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்ட படி நான்காம் ஆண்டு மாணவர்கள் 27.9.2011 அன்று வகுப்பிற்கு செல்லாமல் பல்கலையின் விளையாட்டுத் திடலில் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.சமாதானம் பேச வந்த டீன் (Dean) காசி விஸ்வலிங்கம் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு டிகிரி தான் தரமுடியுமே தவிர வேலை வாங்கித்தர முடியாது என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த மாணவர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை போராட்டம் ஒயாது என்று முடிவு செய்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கீழ் மட்டத்தில் உள்ள பல்கலையின்  நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாத நிலையில் பல்கலையின் தாளாளரும் ஜகத்தின் மகனுமான சந்தீப் ஆனந்த் வந்தால் மட்டும் தான் பேசுவோம் என்று மாணவர்கள் கறாராகக் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பல்கலையின் தேர்வு இயக்குனரும் பொறுக்கியுமான PJK என்கிற PremJeyaKumar நிர்வாகத்திற்குச் சாதகமான சில தமிழ் மாணவர்களை வைத்து போராட்டத்தை அடக்க முற்பட்டிருக்கிறான், மேலும் அதிகமாக வடமாநிலத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களை தமிழ் மாணவர்கள் மற்றும் வெளியிலிருந்து வந்த ரவுடிகளையும் வைத்து அடிக்க வைத்திருக்கிறார். இதில் வட மாநிலத்து மாணவர்கள் பலர் ரத்தம் சொட்ட சொட்ட அடிபட பதிலுக்கு அவர்களும் அடித்துள்ளனர். சரியாக இதை எதிர்பார்த்துக் காத்திருந்த  ரவுடி PJK இப்பிரச்சினையை தமிழ் மற்றும் வட இந்திய மாணவர்களுக்கான பிரச்சினையாக மாற்றி போலிசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பொதுவிலும் பிரச்சினை அவ்வாறாகவே சென்றுள்ளது / மடைமாற்றப்பட்டுள்ளது.

இது போன்ற கருங்காலித்தனத்தை நிர்வாகத்தின் சொந்தக்காரனும் ஆட்காட்டியுமான அடையார் செந்திலும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தங்களுடைய அதிகார பலத்தினாலும்  அடாவடித்தனத்தினாலும் இப்பரச்சினையை மொழிகளுக்கிடையேயான பிரச்சினையாக மாற்றியுள்ளது நிர்வாகம். இதற்கிடையில் எட்டு மணியானபோதும் மாணவர்கள் அனைவரும் பல்கலை வளாகத்திலேயே அடைக்கப்படிருந்தனர். அதற்குப் பிறகு வெளியே வந்த மாணவர்கள் அனைவரும் இரவு  பத்து மணியளவில் கல்லூரியில் இருந்து தாம்பரத்தில் உள்ள கேம்ப் ரோடு வரை அணிவகுத்துச் சென்றிருக்கின்றனர். சாயங்காலத்திலிருந்து நூற்றுக்கணக்கான போலிசும் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறது. முடிவு தெரியும் வரை மாணவர்களும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பல்கலையின் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி பல்கலை அலுவலகத்தின் வாயில் முன்பு நின்ற போது அது  தவறு என்றும், கை நீட்டி சம்பளம் வாங்குகிற நன்றி விசுவாசம் கூட இல்லையா என ஒருமையில் சந்தீப் ஆனந்த் திட்டியதும் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். சுய மரியாதை, தன்மானம் உள்ள எவராலும் இதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியாதாயினும் தங்களின் வாழ்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு உள்ளுக்குள் புழுங்கியும், வாய் மூடி மவுனிகளாகவும் இருக்கின்றனர். அற்ப சம்பளத்திற்குக் கூட வேலை செய்யத் தயாராக, படித்த வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகமிருக்கிறார்கள் என்பதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இவர்கள், இதை வைத்தே அனைவரின் வாயையும் மூடிவிடுகிரார்கள்.

மத்திய அரசாலும் பல்கலைக் கழக மானியக் குழுவினாலும் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை இழந்துவிட்ட இப்பல்கலைக்கழகத்தின் சமீப கால அடாவடித்தனங்கள், மாநிலத்திலும் மத்தியிலும் அவர்களுக்கிருக்கிற அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் போன்றவை அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.மாணவர்களின் இப்போராட்டம் வெல்ல ஆசிரியர்களும் சேர்ந்து பங்கு கொண்டால் போராட்டம் மேலும் வலுவடையும். போராடும் மாணவர்கள் வெற்றபெற நமது ஆதரவை தெரிவிப்போம்.

__________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

 “நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே”  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)

கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில் ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண் கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, “நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்” என்று அவ்வப்போது  அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, “அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக்கொடி, அரசியலையே வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!

ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், “உணவைத் துறப்பேன்” என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, “மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்” என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, “ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்” என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

ஆகஸ்டு 16  ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக  ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது  ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.

என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்”  அதாவது பட்டினிப் போர்  என்று அறிவித்தார் ஹசாரே.

தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன்,  ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.

“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்”  என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.

குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக  வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.

ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே  பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து  அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.

இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும்  இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள்.  இன்று தனியார்மயக் கொள்கைகள்,  ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன.  எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.

ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை  உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.

கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.

_______________________________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்ர் 2011
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

13

லக திரைப்பட ரசிகர்கள், திரை விமரிசகர்கள், திரைத்துறை படைப்பாளிகள் முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதல் பாட்டாளிவர்க்கம், புரட்சிகர கட்சிகள் வரை அனைவரும் கலை எழுச்சியுடன் இன்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த ’ போர்க்கப்பல் பொதம்கின்’(Battelship Potemkin) என்ற ரஷிய மவுன படத்திற்க்கு வயது 85.

திரை மேதை செர்ஜி ஐசன்ஸ்டினால் இயக்கப்பட்ட இந்த படத்தின் கரு, ரஷியாவில் 1905-ம் ஆண்டு ஜார் மன்ன்னுக்கு எதிராக நடந்த போதம்கின் கப்பல் தொழிலாளர்களின் கலகத்தை பற்றியது. பேட்டல்ஷிப் பொதம்கின் கப்பலில் அதன் மாலுமிகளால் ஆரம்பிக்கப்படும் கலகம் பின்பு ஒடேசா துறைமுகத்தில் தீயாக பரவி பல உயிரிழப்புகளுக்கு பின் மக்கள் எழுச்சியாக மாறுகிறது.

வடிவம், உள்ளடகம் என இரண்டிலும் கணகச்சிதப் படைப்பான இந்த படம், 1925-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில், ரஷிய புரட்சியை நினைவு கோரவும், அதன் எழுச்சியை ஆவணப்படுத்தவும் உலக மக்களுக்கு தெரியப்படுத்தவும் நடந்த குறிப்பிடத்தக்க முயற்ச்சி.

ஐசன்ஸ்ட்டீன் ரஷிய புரட்சியை மையமாக வைத்து மூன்று படங்களை இயக்கினார் ஸ்டரைக்(Strike -1925),  பேட்டில்ஷிப் பொதம்கின்(Battleship Potemkin-1925),அக்டோபர் (October-1928).  முதல் படம் ரஷிய புரட்சியின் மிக முக்கிய நிகழ்வுகளான, ரஷியா தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்தது குறித்த ஒன்று. அதை தொடர்ந்து இரண்டாவது படம் 1905-ம் ஆண்டு பேட்டில்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் ஏற்பட்ட கலகம் குறித்தது. இறுதியாக மூன்றாவது படம் 1917-ம் ஆண்டு லெனின் தலமையில் நடந்த பாட்டாளிவர்க மக்கள் பேரெழுச்சியை ஆவணப்படுத்தியிருக்கிறது.

பேட்டல்ஷிப் பொதம்கின் படம் வெளிவந்தவுடன் அதை பல முதலாளித்துவ நாடுகள் தடை செய்தன. இன்னொரு புறம் திரைத்துறைப் படைப்பாளிகளும் பொதுவுடமைவாதிகளும் உச்சிமுகர்ந்து வரவேற்றனர். 1925-ல் பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி ஏதும் இல்லாத நிலையில் மவுனப்படமாக ஐசன்ஸ்டின் எடுத்த இந்த படம், நூற்றாண்டுகள் கடந்தும், பார்க்கும் பார்வையாளனை ஒன்றிவிடச்செய்யும் அற்புத திரைக்கதையையும்,அதற்க்கு தகுந்த கச்சிதமான காட்சிகளையும் கொண்டது. இது பிரச்சாரப்படம் தான். ஆனால் பல போலி அறிவுஜீவிகளும், முதலாளித்துவ முட்டாள்களும் முன் வைக்கும் கருத்தான “கம்யுனிஸ்டுகளுக்கு படைப்புக்கான நுண்ணுர்வும், நவின யுக்திகளும் , புதுமைகளை படைக்கும் அறிவும் இல்லை” எனும் வாதம் முட்டாள்த்தனமானது என்பதை நிரூபித்த படம்.

தொடர் பிரச்சாரங்களைச் செய்யும் போது தான்  படைப்பில் பல புதுமைகள் செய்ய வேண்டிய நிர்பந்தம் தானாக எழுகிறது. இல்லையென்றால் மக்கள் பிரச்சாரத்தை புறந்தள்ளிவிடுவார்கள். இன்னொரு பக்கம் எழுச்சியை மக்களிடம் பதியவைக்க வேண்டும் என்கிற ஆவல் தான் புதுமைகளுக்கான தேவையை ஏற்படுத்துகின்றது.

ஒடெஸா படிகட்டுகள் எனும் ஒரு முக்கிய காட்சியில் ஐசன்ஸ்டீன் கையாண்ட  படத்தொகுப்பு யுக்தியான மாண்டேஜ் திரைத்துறையின் முக்கிய கோட்பாடாக மாறியது. இன்றளவும் பல நாடுகள் இந்தப் படத்தை அந்த யுக்தியை கற்றுக் கொடுத்த “க்ளாசிக் சினிமாவாக ” அறிமுக படுத்துகிறார்கள. அந்த யுக்தியின் பிறப்பின் சூழலும் அவசியத்தையும் பின்பு பார்க்கலாம்.

இன்னொரு பக்கம் இந்த படத்தை ஏதோ படத்தொகுப்பு கோட்பாட்டிற்க்கான ஒரு மாதிரி படம் என்பது போலவும், இந்த படத்தை பற்றிய விமரிசனம், ஆய்வு தொகுப்புகள், கட்டுரைகள் என பலவும் அதன் வடிவத்தை மாத்திரம் முன்னிறுத்தி அந்த வடிவத்தைக் கோரிய உள்ளடகத்தையும், அரசியலையும் புறக்கணிக்கும் வேலையை சிறப்பாகவே முதலாளித்து அறிவுஜீவிகள் செய்கிறார்கள்.

ஆனாலும் பார்வையாளர்கள் இந்த அறிவுஜீவிகளின் கருத்தை புறந்தள்ளுவது நிச்சயம். படம் பார்த்தப்பின் ரஷிய பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி இயல்பாகவே உங்களுள் புகுந்துவிடும். இந்த படம் பார்த்து தங்கள் நாட்டிலும் புரட்சி வந்துவிடும் என பயந்து ஆரம்ப நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள இந்த படத்தை தடை செய்தது. அதையும் மீறி பலர் மூலம் இந்த படம் ரகசியமாக பார்க்கப்படுவதும்,ஆராதிப்பதும் தொடரவே, திரைத்துறையை பற்றிய கோட்பட்டினை கற்க இது அவசியம் என்றபதாலும் அந்த தடைகள் புறகணிக்கப்பட்டு படம் எல்லா நாடுகளிலும் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் கோலாச்சியது.

சோவியத் அரசாலே அறிவிக்கப்பட்ட பெரும்கொடையான இந்த படத்தின் கதை என்ன?

இந்த படம் ஐந்து பகுதிகளாக பிரிக்கபட்டது,

1. “Men and Maggots”

பேட்டல்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் பணி செய்யும் மாலுமிகள் கடுமையான பணிகளோடும், மோசமான உணவும் கொடுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒரு நாள் புழுக்கள் நிறைந்திருக்கும் இறைச்சியின் சூப்பை சமைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்து நெளியும் புழுக்களை கண்டுக்கொள்ளாத அதிகாரி மாமிசம் புழுக்களற்றது அது தான் சமைக்கப்படும் என்கிறான். இதனால் ஆத்திரம் அடையும் மாலுமிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். மாலுமிகளின் கலகம் பிறக்கிறது.

2. “Drama on the deck”

உண்ணாவிரதம் போராட்டமாக மாறுகிறது, நடுக் கப்பலில் பிரச்சரங்கள், விவாதங்கள் என போராட்டம் சூடு பிடிக்கிறது ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்கெதிரான பெரும் கலகமாக வெடிக்கிறது. கப்பலில் ஊழியர்கள் வேலை செய்ய மறுக்க, கொழுத்த அதிகாரிகளோ துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டுகிறார்கள். பணியாமல் எதிர்த்து நிற்க்கும் கலகக்காரர்களின் தலைவன் சுட்டுக்கொல்லபடுகிறான். ஆனால் கலகம் தொடருகிறது, அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள், கப்பலில் இருந்து வீசியெறியப்படுகிறார்கள். கப்பல் ஒடேஸா துறைமுகம் வருகிறது.

3. “A Dead Man Calls for Justice”

சுடப்பட்ட தலைவனின் பிணம் துறைமுகத்தில் அனாதையாக கிடக்கிறது, மறு புறமோ இந்த செய்தி காட்டு தீயை போல பரவுகிறது. மக்கள் கூடுகிறார்கள். கலகத்தின் விளைவாக இறந்த த்ங்கள் தோழனுக்கு இறுதி மரியாதை செலுத்த சாரைசாரையாக வருகிறார்கள். அதிகார வர்கத்தின் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரளுகிறார்கள். மக்கள் எழுச்சியடைகிறார்கள்.

4. “The Odessa Staircase”

ஒடெஸா படிகட்டுகளில் மிக சாதரணமாக பொழுதை கழிக்கும் எண்ணற்ற மக்கள் கூட்டதின் மீது ஜார் ராணுவம் எந்தவித அறிவிப்புமில்லாமல் தாக்குதலை தொடுக்கிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரை கொன்று வெறியாட்டம் ஆடுகிறது ஜாரின் ராணுவம்.

5. “The Rendez-Vous with a Squadron”

பொதம்கின் கப்பலை கலக்காரர்கள் கைப்பற்றி கடலில் செலுத்துகிறார்காள், அதை தடுக்க அனுப்படும் இன்னொரு போர் கப்பல் இவர்களை நெருங்கி சரணடைய சொல்லுகிறது. மீறினால் பொதம்கின் தாக்கப்படலாம் என எச்சரிக்கை செய்யபட்டு தாக்குதல் தொடுக்க தயாராகிறது. எந்த நேரத்திலும் கப்பல் எதிர்கப்பலால் அழிக்கப்படலாம் என்ற சூழலில் பொதம்கின் ஊழியர்கள் குண்டுகளை எதிர்கொண்டு நிற்க, சுட வேண்டியா பீரங்கிகள் தாழ்ந்து பொதம்கினுக்கு வழிவிடுகின்றது. தங்களின் தோழர்களின் ஆதரவால் எழுச்சியடையும் பொதம்கின் தோழர்கள், சுதந்திரமாக கடலில் செல்கிறார்கள். கலகம் வெற்றியடைகிறது.

ஜார் மன்ன்ன் காலத்தில் முதலாளித்தும் வளர்ச்சியடைந்து வந்த நேரத்தில் ரஷியாவில் மக்கள் அனுபவித்த இன்னல்கள் சொல்லில் முடியாது. கசக்கி பிழிந்து சக்கைகளாக, மருத்துவம், சுகாதரம், போதிய உணவு என்று ஏதுமில்லாமல் தூக்கி வீசப்படுவார்கள். ஆனால் பின்னாட்களில் கம்யுனிஸ்ட கட்சியின் வரவால் அந்த தொழிலாளர்களது வர்க்கம் ஒரு முற்போக்கு பாதையில் வளரத் தொடங்கியது. ஒன்றுப்படவும், போராடவும் பழக ஆரம்பித்தார்கள். அரசின் மீதும், சக்கையாக பிழியும் முதலாளிகளையும் எதிர்த்து போராடக் கற்றுக்கொண்டார்கள். இது பின்னால் வரப்போகும் எழுச்சிக்கான ஆரம்ப படி நிலை.

இப்படியாக முன்னேறிய தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளான பேட்டில்ஷிப் பொதம்கினில் வேலை செய்த மாலுமிகள் 1905-ம் ஆண்டு இனிமேலும் சகித்துக்கொள்ள முடியது என கலகத்தை தொடங்குகிறார்கள். புழுக்கள் நிறைந்த மாமிசத்தை சாப்பிட மறுக்கிறார்கள். இது ஏதோ உணவால் வந்த பிரச்சனை என்பது போல் சுருக்கிவிட முடியாது. காலம் காலமாக ஊட்டப்பட்டு வந்த எழுச்சியின் ஒரு படிநிலை.

படத்தில் இந்த எழுச்சியை இயல்பாக பார்வையாளர்களுக்கு பதிய வைத்ததில் தான் முதல் வெற்றி. உதரணத்திற்க்கு சுடப்பட்டு ஒடேசா துறைமுகத்தில் அனாதை பிணம் போல் கலக்கார தலைவனின் பிணம் கிடத்தப்பட்டிருக்க, இறுதி மரியாதை செலுத்த வரும் ஒடேசா மக்களின் அனுதாபம் பேரேழுச்சியாக மாறும் காட்சியை பாருங்கள்.

முதலில் செய்தி சிலருக்கு தெரியும், பின்பு அது பலருக்கு, என தீயாய் பரவும்., மக்கள் கூட ஆரம்பிப்பார்கள். உடனடியாக பல கம்யுனிஸ்ட்டுகள் பிராச்சாரம் செய்வார்கள்,. மக்கள்திரள் அரசியல்படுத்தப்படும், அதற்க்கான துண்டு பிரச்சுரங்கள் விநியோகிக்கப்படும். முதலில் துக்கத்துடன் த்ங்கள் தொப்பிகளை கசக்கிச் பிடிக்கும் கைகள் காட்டப்படும் . பின்பு தொடர் அரசியல்படுத்தப்படுதலின் விளைவு விரல்கள் மடக்கி முஷ்ட்டிகள் உயரும். ”போராடுவோம்” என மக்கள் எழுச்சியடைவார்கள். இந்த காட்சி, மக்கள திரள் பற்றிய அரசியலை போதிக்கும் அதே நேரம் ஒரு திரைப்பட வடிவம் என்ற முறையிலும் மிக நேர்த்தியான காட்சிகளைக் கொண்டிருக்கும்.

மாண்டேஜ் கோட்பாட்டை விளக்கும் ஒடேசா படிகட்டுகள் பகுதியையும் பாருங்கள். மாண்டேஜ் யுக்தியின் தேவையை அந்த உள்ளடக்கம் கோருகிறது. அமைதியாக கூடும் மக்கள் மீதான எதிர்பாராத தாக்குதல், அந்த தாக்குதல் ஏற்படுத்தும் போர்கள், ஜார் ராணுவத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்ட வெறி, என  அந்த நச்சு சூழல் திரையில் வரவேண்டுமென்பது மாத்திரம் இல்லை. அதை பார்க்கும் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இலக்கல்ல. அதை பார்க்கும் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே புரட்சிகர இயக்குனரின் இலக்கு. அந்த இலக்கும், உள்ளடக்கமும், தொடர்ச்சியாக மாறும் காட்சிகளையும், பெரும் மக்களின் சிதறலையும், அவர்களை கொல்லும் ராணுவத்தின் கோரமுகத்தையும், சிதறி ஓடும் மக்களில் மடியும் குழந்தைகள் என அந்த போர்க்கள காட்சியின் வீரியம், அதை தொடர்ந்து இனி போராடுவது தான் வழி என ஒரு தாய் தன் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தனி ஒருவராக அந்த ராணுவத்தை எதிர்த்து முன்னோக்கி நகருவதும் சிலிர்க்க வைக்கும் காட்சி. அதை வார்த்தைகளால விளக்கிவிட முடியாது. பார்த்து அனுபவிக்க வேண்டும்.

பொதம்கின் கப்பலை நோக்கி இன்னொரு ராணுவ கப்பல் பீரங்கிகளை உயர்த்தி குறிபார்க்க, என்ன நடக்குமோ என்று வெறித்து பார்க்கும் கப்பல் ஊழியர்களின் நிலையையும், அந்த நேரத்திலும் எழுச்சியுடன்  சரணடையாத வீரத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் ”சுடாதே” என தங்களை மீறி திரையை நோக்கி முனங்கவைத்ததுதான் இந்த படத்தின் சிறப்பு தன்மை. தனித் தன்மை.

பல கோடிகள் செலவில் முன்னேறிய டெக்னிக்குகளுடன் லாபம் மட்டும் நோக்கம் என எடுக்கப்பட்ட டைட்டானிக் முதல் எத்தனையோ படங்களை ஒப்பிடும் போது வசதிகள் குறைவான நிலையில் எடுத்த ஒரு படம் வெல்கிறது என்றால், அது காலந்தோரும் வரும் மக்கள் எழுச்ச்சியின் சாட்சி. மக்கள் இருக்கும் வரை மக்கள் எழுச்சி மறையபோவதில்லை. மக்கள் எழுச்சி இருக்கும் வரை அதை பிரதிநித்துவப்படுத்தும் இந்த மாதிரியான கலைப்படைப்புகள் மறையப் போவதில்லை.

இனி போர்க்கப்பல் பொதெம்கினை பாருங்கள், எழுச்சி கொள்ளுங்கள்!

__________________________________________________________________________________

ஆதவன்
__________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!

56
5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள் !

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள் !வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று தந்தை குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இடையில் கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சிறுமி ராஜேஸ்வரி என்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் அந்தச்சிறுமியின் குடியிருப்புப் பகுதியருகே விசாரணை செய்திருக்கின்றனர். மேலும் பள்ளி அருகேயும் விசாரணை செய்திருக்கின்றனர். பள்ளி அருகே மூன்று கட்டிடங்கள் தாண்டி குமார குருக்கள் எனும் 46 வயது ஆஞ்நேயர் கோயிலின் பார்ப்பனப் புரோகிதர் குடியிருக்கிறான். இவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே இது போன்ற புகாரில் சிக்கி கைதாயிருக்கிறான். வீட்டு முகப்பில் அப்பாவி போன்று அமைதியாக இருந்த இந்த குருக்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளியே வந்திருக்கிறது.

பள்ளி வாசலில் நின்றிருந்த சிறுமியை சாக்லெட் கொடுத்து கடத்தி சென்ற கடவுளுக்கு பூசை செய்யும் இந்த குருக்கள் அவளை பலமுறை வன்புணர்ச்சி செய்து அதன் போக்கிலேயே அந்த சிறுமி மூச்சுத் திணறி செத்துப் போயிருக்கிறாள். பிறகு எதுவும் நடக்காதது போன்று அந்தச் சிறுமியின் பிணத்தை கிணற்றில் வீசியிருக்கிறான்.

இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த கயவனது தொழிலைக் குறிப்பிட்டு போட்டிருக்கிறோம்.

அடுத்து இத்தகைய கொடிய பாதகங்களை சமூகத்தில் பலரும், பல தொழில் செய்பவர்களும் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் இங்கே தனது சாதி மற்றும் தொழிலின் அடிப்படையில் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் சார்பாக கடவுளுக்கு பய பக்தியோடு பூஜை செய்யும் ஒருவன் செய்திருக்கிறான், எனவே மற்ற குற்றவாளிகளைப் போல இவனையும் ஒரு குற்றவாளி என்று ஒதுக்கிவிட முடியாது.

ஐந்துவயது சிறுமியை பல முறை வன்புணர்ச்சி செய்து மூச்சுத்திணற வைத்து கொல்லுமளவுக்கு வெறி கொண்ட இந்த கயவன் எத்தகைய கொடிய பண்புடன் வாழ்ந்திருக்கிறான்? கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா? கோரமாட்டார்கள்.

ஜெயேந்திரன், தேவநாதன், தீட்சிதன் பொறுக்கிகள் வரிசையில் குமார குருக்களும் சேர்ந்திருக்கிறான். இனி கடவுளுக்கு பூசை செய்யும் குருக்கள் அத்தனை பேரையும் போலீஸ், உளவுத்துறையைப் போட்டு கண்காணிக்க வேண்டும். அவர்களை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும். பொது சந்திப்பில் எல்லா குருக்களது போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இல்லையேல் நாம் இன்னும் பல சிறுமிகளை இழக்க வேண்டியிருக்கும்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தி இந்து நாளிதழின் ஊரகப் பிரிவு ஆசிரியராக பணியாற்றும் திரு பி சாய்நாத், மக்களின் வாழ்விலுள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் மிகச் சிறந்த படைப்பாளர்.  இன்று (21/09/11) நாடெங்கிலுமுள்ள ஊடகங்களில் இந்திய திட்டக் குழு ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ 32 சம்பாதிப்பார் எனில் அவரை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர் என கூற முடியாது என்ற ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டு பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்த அதே வேளையில், இந்திய அரசியல் என்பது எவ்வாறு வளம் கொழிக்கும் தளமாக மாறியிருக்கிறது என்பதை அற்புதமான தனது நக்கலும், நையாண்டியும் கலந்த நடையில் மக்களின் வயிற்றெரிச்சலை வெளிக்கொணரும் விதமாக  இந்து நாளிதழில் வந்த கட்டுரை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழாக்கம் செய்து இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

கொழிக்கும் மத்திய அமைச்சரவை
தில்லி திட்டக் கமிஷன் அலுவலக வளாக வாயிலில் வேலைக்கு காத்திருக்கும் தினக்கூலிகள். படம் www.thehindu.com

ர்இந்தியா நிறுவனம் நாம் விரும்பியது போல் நல்ல விதமாக செயல்படாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் திட நெஞ்சோடு பயமின்றி அதை அடர்த்தியான கடன் மேகத்திற்குள் பறக்கவிட்டவர்கள் நன்றாக உள்ளனர்.  பிரபுல் படேல் (குறுகிய காலம் மாநிலங்களுக்கான விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்) மே 2009 முதல் ஆகஸ்ட் 2011 வரையிலான 28 மாதங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூபாய் அரை கோடி வீதம் தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  இதுவும் அவரது வார்த்தைப்படியான கணக்கு என்பதால், குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்காகவே இருக்கலாம்.  இது போன்றவற்றில் அமைச்சர்கள் தற்பெருமை பேசாதவர்களாகவே இருக்க விரும்புகின்றனர்.  ஆனால் அலுவலக ரீதியான புள்ளி விபரங்கள் கொடுக்கும் போது, கணக்கில் தப்பிக்க வழியில்லை.

திரு படேல் 2009-ம் ஆண்டு தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்தாக ரூ 79 கோடி காண்பித்துள்ளார்.  மே மாதம் அந்த வருடம் தேர்தல் நடைபெற்றது என்பதால், அந்த கணக்கு ஏப்ரல் 2009 வரை என கணக்கில் கொள்வோம்.  இந்த மாதம் பிரதமர் அலுவலக இணையதளத்தில் அவர் (படேல்) பெயருக்கெதிரே ரூ 122 கோடி (சொத்து மதிப்பு) என குறிப்பிட்டிருப்பதோடு ஒப்பிடுவோம்.  இந்த உயர்வு என்பது 28 மாதங்களில் ஏற்பட்டது என்பதால் எனது கணக்குப்படி ஒரு நாளைக்கு சராசரி ரூ 5 லட்சம் சேர்ந்துள்ளது.  என்னால் கூட்ட முடியும் என்றாலும், நான் திரு பிரபுல் படேல் அளவிற்கு விரைவாக கணக்கு கூட்ட முடியாது என எண்ணுகிறேன்.

இதன் நடுவில் ஏர் இந்தியா நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவே போராடி திணறியிருக்கிறது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத  பணியாளர்களும் ஒவ்வொருவரும் ஒரு நாளில் சம்பாதிப்பதை விட மிகுதியாக, திரு படேல் தினசரி தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  அதாவது ஏர் இந்தியா விமானங்கள் தரை தட்டிக்கொண்டிருக்கையில், அவர் உயர உயர பறந்திருக்கிறார்.  தொழிற்சாலைகள் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்பின் முன்னாள் இயக்குனர் குழும தலைவர் என்ற முறையில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வாறு தெரிவித்தார்.  சிரமப்படும் தனியார் நிறுவனங்கள் பற்றி தெரிவிக்கையில், நலிவடைந்தவை என்ற எண்ணிக்கை ஒரு புறம் அதிகரிக்கையில், அதன் சொந்தக்காரர்கள் வளமாகிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.  இந்திய ஏழைகளும் அவர்கள் சார்ந்திருக்கிற அரசோடு ஒப்பிடுகையில் இது சரியாக பொருந்தி வருகிறது.  ஏழைகள் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர், மத்திய அமைச்சரவை வளமாகிக் கொண்டிருக்கிறது. (கார்ப்பரேட் முதலாளிகளை இந்த சமன்படுத்துதலில் இழுத்துப் பார்த்தால் அது மிக வியக்கத்தக்க வகையில் இருக்கும், ஆனால் அது வேறு கதை)

திரு படேல் அவர் மேற்கொண்ட பணிக்காக உயர்வளிக்கப்பட்டுள்ளார்.  அவர் மத்திய அமைச்சர் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறைகள் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் விவரங்களை, எப்போதும் போல் மக்களாட்சி சீரமைப்பிற்கான குழுமம் (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (நியூ) ஆகிய அமைப்புக்கள் விரிவாக மேற்கொண்ட ஆய்வுகளை படிக்கும் போது ருசிகரமாக இருக்கும்.  அது அலுவலக ரீதியானது.  சொட்டு சொட்டுகளாக விழுவதென்பது முடிந்து போன மாதிரி.  பாசனத்தை உயர்த்தும், வெள்ளம் உயரத்தை உடைத்துக் கொண்டு பாயும். ஒரு மத்திய அமைச்சரின் சராசரி சொத்து என்பது 7.3 கோடியிலிருந்து 28 மாதங்களில் 10.6 கோடியாக உயர்ந்துள்ளது.  28 மாதங்களிலும், சராசரி மாதத்திற்கு 10 லட்சங்களுக்கு குறைவில்லாத சேர்க்கை. திரு படேல்தான் மத்திய அமைச்சர்களில் மிக உயர்ந்த பணக்காரர் என்பது பழைய கதை.

ஆனால் திமுக வின் முனைவர் எஸ்.ஜகத்ரட்சகன் அதை தைரியமாக மோதி சிதறடிக்கச் செய்துவிட்டார்.  மாநில அந்தஸ்திலான அந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரின் சொத்து 1092 சதவீதம் வளர்ந்துள்ளது, ஆனால் படேலின் வளர்ச்சி 53 சதம்தான்.  ஆய்வின்படி அவரின் சொத்து மதிப்பு 2009ம் வருடம் 5.9 கோடி என்றிருந்தது இந்த வருடம் 70 கோடியாக உயர்ந்துள்ளது.  ஆனால் 122 (கோடி) என்ற எண்ணில் நின்று மட்டையடித்துக் கொண்டிருக்கிற படேல் இன்னமும் அமைச்சரவை பிரிமியர் லீகில் இன்னும் உயர்வான நிலையில்தான் உள்ளார். திமுக மனிதரின் செயல்பாடு விரைவான எண்ணிக்கை சேர்க்கைக்கு உதவியிருக்கலாம்.  ஆனாலும் நின்று நிதானமாக சேர்க்கும் படேலின் ஆட்டம் தான் நீண்ட விளையாட்டிற்கு நல்லது.

இதன் நடுவில் சுறுசுறுப்பான இளவயது அமைச்சர்கள் யாரும் மோசமென சொல்லிவிட முடியாது.  இளைஞர் மிலண்ட் தியோரா, மாநிலங்களுக்கான செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர 2009 லிருந்து 2011ற்குள் தனது சொத்துக்களை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியுள்ளார்.  அவரது சொத்து 17 கோடியிலிருந்து 33 கோடிக்கு மேல் சென்றுள்ளது. அவர் 2004ல் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தது ரூ 8.8 கோடி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  தினசரி சராசரியாக ஒரு லட்சம் ஒரு நாளைக்கு என சேர்த்து 7 வருடங்களில் சொத்தை 3 மடங்காக்கியிருப்பது ஒன்றும் மோசமாக சொல்ல முடியாது.

மேலோட்டமாக பார்க்கின்ற போது தியோரா, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை பின்னுக்கு தள்ளிவிட்டார்.  நெடிய ஓட்டத்தில் பின்னுக்கு வரும் அவரைவிட, இளையவர் தியோரா இரண்டரை பங்கு கூடுதல் பணக்காரராக உள்ளார்.  அவர் முன்னதாக 2009-லும் பவாரை விட பணக்காரராகத்தான் இருந்திருக்கிறார்.  ஆனால் இந்த 28 மாதத்தில் 90 சதவீதம் அதிகரித்திருக்கிறார்.  பவார் இதே காலத்தில் சொற்பமாக ஒரு நான்கு கோடி கூட சேர்க்கவில்லை.  அதற்கு அர்த்தம் என்னவென்றால், எல்லோரும் சொல்வது போல் அவரது சொத்தை காண்பிக்கும் கடிகார முள் 12.5 கோடியிலேயே நிற்கிறது. அவருடைய சொந்த மாநிலத்திலுள்ள சொத்துக்களை யெல்லாம் கணக்கிட்டு பார்க்கும் போது பவாருக்கு பிரமாணப்பத்திரத்தில் தனது மொத்த சொத்தை தெரிவிக்க் வேண்டுமா?  அல்லது மாத வருமானத்தை தெரிவிக்க வேண்டுமா என்ற குழப்பம் நேரிட்டது போல் தோன்றுகிறது.

அடுத்து தற்பெருமை பேசாத மற்றொரு அமைச்சர யாரென்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்.  அவர் தனது பங்கிற்கு 2009ற்கு பின்னர் ரூ 1.73 கோடி சேர்த்துள்ளார்.  திரு தேஷ்முக் நில அறிவியலுக்கான அமைச்சரும் ஆவார். (மகாராஷ்டிராவில் அவருக்கு குறிப்பிட்டுள்ள தலைப்பை பார்த்தால் ரியல் எஸ்டேட் விற்பன்னர் என்றும் தெரிகிறது).  மற்றபடி முனைவர் மன்மோகன்சிங் தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் நன்றாகவே செயல்பட்டுள்ளனர்.  பாராளுமன்ற நடவடிக்கைத்துறை அமைச்சர மற்றும் ஐபிஎல் புதிய தலைவர் திரு ராஜிவ் சுக்லா சொல்லப்பட்ட 28 மாதங்களில் ரூ 22 கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார்.  அதாவது 2009ல் 7 கோடியாக இருந்த சொத்து தற்போது 30 கோடிக்கும் அதிகம்.

பணியிலுள்ள அமைச்சர்கள் மட்டும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்வதில்லை.  அல்லது மைய அரசை மட்டும் வரம்பாக வைத்துக் கொண்டு மேல்நோக்கி நகருவதில்லை.  எப்போதும் போல் கின்னஸ் சாதனைக்கான பொருள் என்பது எனது இரு மாநிலங்களான  மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்துதான் வருகிறது. (எனக்கு இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டுடனும் சொந்தம் உண்டு.  அதாவது ஜகத்ரட்சகன் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்துடன் – எனவே சொந்த இடம் என பெருமைப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு சற்று அதிகம்தான்).

ஆனால் தற்போது நாம் ஆந்திரப்பிரதேசம் பக்கம் திரும்புவோம்.  ஓ.எஸ்.ஜெகன் மோகன்ரெட்டி என்பவர் ஆளும் பொறுப்பில் இல்லை.  ஆனால் அது அவரது தொழில் முனைவை நோக்கிய பயணத்தை எந்த வகையிலும் தடை செய்யவில்லை.  அவரிடம் 2009-ல் இருந்த வெறும் ரூ 72 கோடி என்ற எண்ணிக்கையை 24 மாதங்களில் நடப்பு ஏப்ரல் வரை ரூ 357 கோடி சொத்து மட்டும்தான் சேர்த்துள்ளார்.  அதாவது இந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 50 லட்சம் வீதம் மட்டுமே சேர்த்துள்ளார்.  எல்லாவற்றிலும் அவர் முன்னிலைப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில், இது ஒன்றும் சிறிய சாதனையல்ல.  சாமியார்கள் அரசியலில் ஆற்றல் என்றும் அடுத்த சந்ததி எனவும் பேசுவது எதைப்பற்றி என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கலாம்.

அந்தோ, சந்திரபாபுநாயுடு மட்டும் ஏழையாக வளர்ந்துள்ளார்.  அன்னா ஹ‌சாரேயால் உருவாகியுள்ள காலச் சூழல் காரணமாக இந்த ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் தனது சொத்து மதிப்பை எச்சரிக்கையோடு வெளியிட்டுள்ளார்.  திரு நாயுடுவின் சொத்து ரூ 40 லட்சம் அளவில் கூட இல்லை.  அதன் காரணமாக அவரின் வாழும் சூழலுக்கு உடனடியாக பங்கம் வந்துவிட்டதாக எண்ண வேண்டியதில்லை.  அவரின் மனைவி வசமுள்ள சொத்து ரூ 40 கோடி மட்டுமே.

ஆந்திர அரசியலில் இந்த தொடர்புடைய படங்களை ஒப்பிட்டு பார்த்தால் ஜகன் வளர்ச்சியில் இருப்பதும், நாயுடு சரிவில் இருப்பதும் புலப்படும்.  அவருடைய கணக்காளர்கள் அவரை விட பெருந்தன்மையுடையவர்களாக இருப்பதால் எதிர்காலம் என்பது திரு நாயுடுவிற்கு சாதகமாக இல்லை.  அவரின் ஜூப்ளி மலை சொத்து என்பது 10000 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்தோடு, 1125 சதுர அடியில் நடைபாதைகளும் கட்டப்பட்டுள்ளதன் மதிப்பு ரூ 23.20 லட்சத்திற்கும் குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.  இப்போது அந்த இடம்தான் ஆந்திரப்பிரதேசத்திலேயே மிக உயர்வாக மதிப்பிடப் படும் இடமாகும்.  எனவே அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள 10000 சதுர அடி கட்டிடம் என்பது, அந்த தொகை மதிப்பீட்டில் பார்க்கும் போது, மிக எளிமையான சாதாரண சொத்து என்றே வாதிட தோன்றுகிறது.

ஆனால் 2009 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அதன் மதிப்பு ரூ 9 கோடி என காண்பிக்கப் பட்டது போல் மதிப்பில்லாத ஒன்றா?  இதைப்பார்க்கிற போது திரு நாயுடு தற்போதைய சந்தை மதிப்பை குறிப்பிடாமல் அந்த இடத்தை கையகப் படுத்த செலவழித்ததை மட்டும் குறிப்பிட்டிருப்பார் போலும், ஏனெனில் சந்தை மதிப்பு என்பது நேரத்திற்கு நேரம் மாறுபடும் என்பதாலா?

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் யாதெனில் எல்லாவற்றிற்கும் பின்புலமாக புத்தி கூர்மையுள்ள கணக்காளர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணம் படைத்த மற்றும் வளமான இந்த மடத்தனமான வளர்ச்சி என்பது அமைச்சர்கள் அளவில் மட்டுமல்ல, பாராளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அளவிலும்தான்.  எல்லா அரசியல் சக்தி சார்ந்த தலைவர்கள்  குறிப்பாக காங்கிரஸ், பாஜக மற்றும் பெரிய மாநிலங்களில் ஆளும் அந்தஸ்திலுள்ள கட்சி தலைவர்களும் இதில் அடக்கம்.

ஒவ்வொரு பாராளுமன்ற, மற்றும் சட்டமன்ற தேர்தல் காலத்திலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.  மகாராஷ்டிராவில் 2004-ல் 108 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009ல் 189 ஆக உயர்ந்துள்ளது.  நான்கில் மூன்று பங்கு மத்திய அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அவர்களின் புதிய சொத்துக்கள் பதவியில் உள்ளபோது சம்பாதித்தவை. பொது மக்களின் கோபத்திற்கு நன்றி.  அதன் காரணமாகத்தான் ‘ஏடிஆர்’ மற்றும் ‘நியூ’ போன்ற ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக பலருக்கும் தெரிய வந்துள்ளது.  இது மிகவும் சிறப்பானது.

ஆனால் இத்தகைய அறிவிக்கப் பட்டவை அனைத்தும் அவர்களின் வரி செலுத்தும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.  அதுதான் பொதுமக்கள் இந்த எண்ணிக்கைகளில் சிறப்பான கூடுதல் கவனம் செலுத்த அனுமதிப்பதாக இருக்கும்.  பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்களின் வரி செலுத்துதல் போன்ற சமர்ப்பித்தல்களும் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.  நமக்கு மிக தேவையாக உள்ள மறுசீரமைப்பிற்கு அதுதான் பெருமளவில் உதவியாக இருக்கும்.  மற்றொன்று ஏமாற்றுதல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களாகும். ஆய்வறிக்கை காண்பிப்பதை பார்க்கும் போது அமைச்சர்கள் அவர்களுக்கு சொந்தமான 12 குடியிருப்பு கட்டிடங்கைள காண்பிக்கவில்லை என தெரிகிறது.

நமக்கு கடுமையான தணிக்கை என்பது தேவை.  அதுவும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களின் சொத்துக்களிலிருந்து அந்த தணிக்கை துவங்க வேண்டும்.  எப்படி மக்கள் அலுவலில் இருக்கும் போது ஒரு நாளைக்கு அரை கோடி சம்பாதிக்க இயலும்.  நினைவில் கொள்ளுங்கள் அவர்கள் அனைவரும் இந்த மிகப்பெரும் சொத்துக்குவிப்பு என்பதை ‘மக்கள் சேவை’யில்தான் சேர்த்துள்ளனர். நிச்சயமாக நாமும் இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.  சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது என்பது மட்டும் போதாது.  அது விசித்திரமாக மிகப் பெரியதாக இருப்பின் எவ்வாறு அது வந்தது என்பதை அறிவதும் நமக்கு அவசியமாகும்.

ஏப்ரல் கடைசியில் இந்தியாவின் திட்டக்குழு உச்சநீதிமன்றம் முன்பாக ஒரு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  அதில் ஊரக இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர் என்பதை தீர்மானிக்க ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ 20 செலவழிக்கும் நபர் என்பதை எல்லைக்கோடாக வைத்துக் கொண்டால் போதுமானது என்றது.  கிராமப்புற இந்தியாவிற்கு அது வெறும் ரூ 15 மட்டுமே.  மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால் இந்த ரூ 20 என்பதை வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ரூ 25 என உயர்த்திக்கொள்ளலாம் என்பதாகும்.

சிறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவினருக்கான முனைவர் அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான தேசிய ஆணையத்தின் அறிக்கையை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  அந்த அறிக்கையில் 83.6 கோடி இந்தியர்கள் ரூ 20 மற்றும் அதற்கு கீழான வருமானத்தில் வாழ்கிறார்கள் என பதிவு செய்திருந்தது.  கோடீஸ்வரர்களாக சேர்ந்த குழுக்கள் எவ்வாறு இந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையும்?  இந்த நிலை தொடருமானால் நங்கூரமிட்டு வைத்துள்ள பிடிமானம் மிக சீக்கிரம் விடுபட்டுவிடும்?  இதை எவ்வாறு தடுக்கப் போகிறோம்.  இதைப்பற்றி சிறிதளவாவது சிந்திக்க வேண்டும்.

எனவே கடந்த 20 ஆண்டுகளில் உள்ளார்ந்த மாற்றங்கள் என்பது எதனையும் சிரமத்திற்குரியதாக ஆக்கவில்லை, ஆனால் மாறாக கோடீஸ்வரர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்பதையும், அவர்கள் மட்டுமே வெல்ல முடியும் என்பதையும் குறிப்பாக காட்டுவதாக உள்ளது.

___________________________________________________

– திரு பி.சாய்நாத், நன்றி தி இந்து 
தமிழாக்கம்: சித்ரகுப்தன்
____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!

97

பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க) நடத்தி வரும் மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பேசினர். அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:

 “ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”

இப்பேச்சினை அடுத்துப் பேசிய கொளத்தூர் மணி, துரைசாமியின் இந்தக் கருத்தை மறுத்து ஏதும் பேசவில்லை. வைகோவும் இதைக் குறிப்பிடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இப்பேச்சின்போது மேடையில்தான் இருந்தார். அவரிடமும் எதிர்ப்பேதும் வரவில்லை.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்க வந்த தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயா அரசு 7 பேர் உயிரைப் பறித்தெடுத்துள்ளது. இதைக் கண்டித்தும் பெரியார் தி.க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் மூத்த உறுப்பினரும், நாடறிந்த வழக்கறருமான துரைசாமி இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கையே பொய் வழக்கு என பகிரங்கமாக பேசுகிறார். அதைவிட இந்த வெட்கம் கெட்ட விசயத்தை வைத்து மூவர் தூக்கையும் எதிர்க்கிறார்.

ஆக இம்மானுவேல் சேகரனை பகிரங்கமாக ஆள்வைத்துக் கொன்ற முத்துராமலிங்கத்தை ஒன்னுமே தெரியாத அப்பாவி என்பதுதான் பெ.தி.கவின் நிலைப்பாடா? அது உண்மையெனில் இப்போது பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அவ்வியக்கத்தினர் பேசுவது நாடகமா? சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். என்னதான் சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு என்று பேசினாலும் உண்மை என்னவோ இப்படி பச்சையாக வெளிவருகிறதே? பெ.தி.க சுயவிமரிசனம் செய்து கொள்ளுமா? பேசியவரை கண்டிக்குமா? பேசியவரை கண்டிக்காமல் மேடையில் அமைதி காத்த பெருந்தலைகளை கண்டிக்குமா?

________________________________________________

– இரணியன்
_______________________________________________________

பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

செப்டம்பர் 11 – 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை

 கடந்த 11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1. பல்லவராயனேந்தல் கணேசன் 2.வீரம்பல்  பன்னீர் 3. மஞ்சூர் ஜெயபால், 4. சடையனரி முத்துக்குமார் 5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி 6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர்இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு சார்பில் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிந்தது.

குழு உறுப்பினர்கள்

1.            சி. ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உ
ரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.

2.            சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

3.            திருமுருகன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், மதுரை

4.            சுப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்,

5.            ரிராகவன், வழக்கறிஞர்,

6.            ப. நடராஜன், வழக்கறிஞர்,

7.            சி. ராஜசேகர், வழக்கறிஞர்,

8.            ம. லயனல் அந்தோணிராஜ்

____________________________________________________

2011 செப்டம்பர் 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு மூன்றாகப் பிரிந்து துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடி ஐந்து முக்கு சாலை, மதுரை சிந்தாமணி, இளையான்குடி புறவழிச்சாலை துப்பாக்கிச் சூடு தடியடியில் இறந்த காயமடைந்த நபர்களின் வீடுகள்,  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மதுரை, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகள், பரமக்குடி சம்பவத்திற்கு மூலக் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சொல்லப்பட்ட மாணவர் பழனிக்குமார் கொலை நடந்த கமுதி, மண்டல மாணிக்கம், பள்ளபச்சேரி கிராமம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக மக்களை சந்தித்து விசாரித்தும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை,  குற்ற எண்கள்.300, 459, anan& 33/2011இ மருத்துவமனை tவிபத்துபதிவேடு அறிக்கைகள், ஆப்பநாடு மறவர் சங்க அறிவிப்பு சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட வீடியோ சி.டி. உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது.

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் குருபபூஜை விழா!

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். ஆதிக்க தேவர் சாதி வெறியர்களால் அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி 33 வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் இந்த ஆண்டு தலித் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, லத்தி சார்ஜ், பொய் வழக்கு, கைது சிறை 144 தடை உத்தரவு என்ற வகையில் செயல்பட்டுள்ளது. போலீசின் அச்சுறுத்தலால் ஆண்கள் இரவில் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று பதுங்கும் நிலைமையில் உண்மை அறியும் குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

‘’இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டல மாணிக்கம், பள்ளபச்சரி கிராமத்தில் சிறுவன் பழனிக்குமாரி படுகொலையால் பதற்றம் ஏற்பட்டதால் ஜான்பாண்டியன் 11.09.2011 அன்று தூத்துக்குடி வல்லநாட்டில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் பரமக்குடியில் ஐந்து முக்கு சாலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு 12.30 க்கு மேல் கலவரம், தீ வைப்பு, கல் வீச்சு என ஈடுபட்டதில் காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது அதனால் தற்காப்புக்காகவும் பொதுச் சொத்தைப் பாதுகாக்கவும் தடியடி கண்ணீர் புகை வீச்சு துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஆறு பேர் பலியாகிவிட்டனர்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், “மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன” என்று கூறினார்.

கூடுதலாக அரசு தரப்பின் கூற்றை பரமக்குடி நகர் காவல்நிலைய குற்ற எண். 300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை மூலம் அறியலாம். இப்புகாரை பரமக்குடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அளித்து 1000 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி நகர காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கொடுத்த புகாரில்சுமார் 1000 பேர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் ஐந்து முக்கு சாலையில் மறியல் செய்தனர். துணை ஆணையர் செந்தில்வேலன் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், தாசில்தார் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோத கூட்டம் கலைந்து போங்கள் என்றோம் செவி சாய்க்காமல் அவதூறாக பேசி காலித்தனமாக போக்குவரத்தை தடைபடுத்தி வாகனங்களை தாக்க முற்பட்டார்கள். கும்பலைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வட்டாட்சியர் வாய்மொழியாக உத்தரவிட்டார். கலவரக் கும்பல் கலைந்து போகவில்லை. கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தகனி  ஆகியோர் வெறி கொண்டு எங்களை நோக்கி கற்களை எறிந்தனர். உடனே வட்டாட்சியர் தடியடி நடத்தி கலவரக் கும்பலைக் கலைக்க சொன்னார். அங்கு வந்த டி.எஸ்.பி. யும் கலைந்து போகச் சொன்னார். ஆனால் போகவில்லை. குறைந்த பட்சம் தடியடி நடத்தப்பட்டது. அப்போதும் போகவில்லை.”

“எங்களை நோக்கி கல்லால் தாக்க ஆரம்பித்தனர். நாங்கள் பின்வாங்கினோம். அந்த சமயத்தில் 14 வாகனங்களுக்கு தீ வைத்து அடித்து நொறுக்கினார்கள். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீ வைத்தார்கள். அப்போது டி.ஐ.ஜி சந்தீப் மிட்டலுக்கு தலையிலும், அடையாறு துணை ஆணையா  டாக்டர் செந்தில்வேலனுக்கு வலது கையிலும் டி.எஸ்.பி. கணேசனுக்கு வலது காதிலும் மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உயிர்சேதம், பொருட் சேதத்தை தடுக்கும் பொருட்டு கலவரக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் எனவும் உடனே கலைந்து செல்ல வாய்மொழி உத்தரவிட்டார். துணை ஆணையர் செந்தில்வேலனும் அவ்வாறு எச்சரித்தர். கலவரக் கும்பல் மிகக் கொடூரமாக தாக்கவும் பரமக்குடி வட்டாட்சியர் துப்பாக்கியால் சுட்டு கலைக்க எழுத்து மூலமாக உத்தரவு வழங்கினர்”. இவ்வாறு புகார் பதிவு செய்துள்ளனர்.

சம்பவ சாட்சிகளின் வாக்குமூலங்கள் :

பரமக்குடி துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறும் பொழுது, “காலை சுமார் 11.30 மணிக்கு பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டுக்கு வந்தேன். அப்போது சுமார் 50க்கும் குறைவான நபர்களே கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியனை விடுதலை செய்யக் கோரி மறியல் நடத்தினர். போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆய்வாளர் சிவக்குமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, டி.எஸ்.பி.  கணேசன், துணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர் கூடியிருந்தவர்களை கலைந்து போக பேசினர். நேரம் ஆக ஆக குருபூஜைக்கு வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எண்ணிக்கையில் அதிகரித்தது. அவர்களிடம் உரிய அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் எந்த முன்அறிவிப்பும் இன்றி துணை ஆணையர் செந்தில்வேலன் திடீரென தடியடி நடத்தினார். மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். போலீஸினுடைய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் பலபேர்களின் மண்டை உடைந்தது. சிதறி ஓடிய நபர்கள் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டனர். உடனே ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆய்வாளர் கந்தமுனியசாமி, டி.எஸ்.பி.   கணேசன் ஆகியோர் துப்பாக்கியால் சூட்டனர். மூன்று பேர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பல பேருக்கு மண்டை உடைந்தது. சம்பவம் போர்களம் போல் காட்சியளித்தது.

காமராஜ் என்பவர் சொல்லும் போது, “எங்க அப்பா செல்லத்துரை வாத்தியார், தியாகி இமானுவேலுக்குப் பிறகு இரண்டாவதாக மறவர்களால் படுகொலை செய்யப்பட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். துணை ஆணையர் செந்தில்வேலன் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக  இருக்கும் பொழுது எங்க அப்பாவின் நினைவுநாளுக்கு பூஜைக்காக அனுமதி கேட்டேன். அதற்கு செந்தில்வேலனோ உங்க அப்பா படத்தை வீட்டிலேயே வைத்து பூஜை செய் வெளியிலே எதற்கு கொண்டு வருகிறாய். நடத்தக்கூடாது என்று சொல்லியதுடன் அருகில் இருந்த ஆய்வாளர் மூலம் வெளியே போகச் சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் மீறி நடத்தினோம். இந்த ஆண்டு குரு பூஜையில் எஸ்ஸி/.எஸ்.டி. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக தியாகி “தெய்வத்திருமகன்’’ இமானுவேல் சேகரன் என்று பிளக்ஸ் போர்டு வைத்தனர். தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். போலீசிடம் சென்று போர்டை அகற்ற புகார் கொடுத்தனர். மேலும் போக்குவரத்துத் துறையின் மேலாளர் மூலமாக எஸ்ஸி/.எஸ்.டி.  அரசு ஊழியர்களை மிரட்டியதாலும் தெய்வத்திருமகன் என்பதை மட்டும் அழித்துவிட்டோம்.”

“இரண்டு நாட்கள் முன்பாக ’’அவங்க எதுவானாலும் வைக்கட்டும் இவர்கள் எப்படி பங்சன் நடத்துகிறார்கள் என்று பார்ப்போம’’ என்று தேவர் சாதியைச் சேர்ந்த சிலர் பேசி வந்தனர். இந்த ஆண்டு குருபூஜையை நடத்தக்கூடாது என பல்வேறு இடையூறுகளை தேவர் சாதியினர் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை முழுஅளவில் ஒத்துழைக்கிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தரை தளம்  உலர்வதற்குள் தேவர் பேரவை என எழுதி வைத்ததுடன் அந்த இடத்தில் மலம் கழித்து அசிங்க படுத்தி சென்றனர். இது வெளியில் பல பேருக்கு தெரியாது. போலீசிடம் சொல்லியதுடன் நகராட்சியில் மூலம் அகற்றினோம்.”

“சம்பவ தினத்தன்று போலீஸ் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வஜ்ரா வாகனத்தில் தண்ணியே இல்லை. அதை பயன் படுத்தாமல் போலீசாரே தீ வைத்துக் கொளுத்தினர். பொது மக்களுடைய பைக், கார் போன்றவற்றை போலீசாரே அடித்து சேதப்படுத்தினர். ஆய்வாளர் சிவக்குமார் இரண்டு கையிலும் துப்பாக்கி வைத்து மக்களைப் பார்த்து சுட்டுள்ளார். ஆறு பேரை படுகொலை செய்ததோடு பலரை கொடூரமாக தாக்கியுள்ளனர். 1000 பேர் மீது வழக்குப் போட்டு கிடைப்பவரை கைது செய்வதற்காக கிராமம், கிராமமாக மக்களை அச்சுறுத்த தேடுதல் வேட்டை செய்கிறது. மக்கள் காடுகளிலும், வயல்வெளிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். பரமக்குடி நகரத்தில் தியாகி இமானுவேல் குருபூஜைக்காக வைத்த பிளக்ஸ் பேனர்கள்; அனைத்தையும் போலீசு கிழித்து கையிலே வைத்துக் கொண்டு அதில் உள்ள பெயர்களை வழக்கிலே சேர்த்து கைது செய்ய கிராமங்களுக்கு செல்கிறது. இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு பெருகி வலுவடைந்து வருகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது சாதி மோதல் கிடையாது. சாதி வெறியோடு தலித் மக்கள் மீது நடத்திய போலீஸ் தாக்குதல். இந்த படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.”

வழக்கறிஞர் முத்துக்கண்ணன் கூறும் பொழுது, “போலீஸ் தான் கலவரத்தைத் தூண்டியது. காலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் 50 பேர் தான் சாலை மறியல் செய்தனர். போலீஸ் நினைத்திருந்தால் இந்த துப்பாக்கிச் சூட்டை, லத்தி சார்ஜை தவிர்த்திருக்கலாம். சசிகலா நடராஜனின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. தேவர் சாதிக்காரர்களை கூப்பிட்டு பேசியிருக்கிறார். குருபூஜை நடத்தக்கூடாது என்று போலீசை தூண்டிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது சாதிக்கலவரமாக சித்தரிக்க போலீஸ் முயல்கிறது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைக் கூட சாதி வெறியோடு போலீஸ் எட்டி உதைத்திருக்கிறது. ஆறு பேரில் சிலரை காட்டுமிராண்டித் தனமாக போலீசு; அடித்தே கொன்றிருக்கிறது. இந்த படுகொலைக்கு காரணமான ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆணையர் செந்தில்வேலன், டி.எஸ்.பி. கணேசன், டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டல் ஆகியோர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றார்.

சிவா, வடிவேல் ஆகியோர்கள் கூறும் பொழுது, “பகல் 12 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மாலை ஆறு மணி வரை நீடித்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகும் நான்கு பேர்கள் பிணமான பிறகு கூட அவர்களை தூக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக போலீசு மீது தொடர்ந்து கல் எறிவதும் தாக்குவதும் பிறகு பின்வாங்குவதும் என்று மூர்க்கமாக மக்கள் போராடினார்கள். இந்த சம்பவத்தால் பல்வேறு ஊர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தலித் மக்கள் மீது நடந்த அநியாய தாக்குதல்”.

பரமக்குடியில் நகர காவல்நிலையம் எதிரே அலுவலகம் நடத்தி வரும் வழக்கறிஞர் பசுமலை  கூறும் பொழுது ஆப்பநாடு மறவர் சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் முதுகுளத்தூர் தேவர் திருமண மஹால் தொடர்பான சொத்துப் பிரச்சனையை பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம்” என்ற செய்தியைச் குறிப்பிட்டு தொடர்ந்து நமது ஐயா பசும்பொன் தேவர் அவர்கள் குருபூஜையை நடத்துவது போல் பெரும் ஆதரவு பெறும் இமானுவேல் குருபூஜை வருடா வருடம் கூட்டம் அதிகமாகி அரசு விழாவாக நடத்த அனுமதி வழங்கவிடாமல் தடுப்பதற்காகவும் கிராம வாரியாக கீழத்தூவல் கிராமத்திற்கு திரண்டு வர வேண்டும் என்று சம்பவத்திற்கு முன்பே குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர். இமானுவேல் குருபூஜையை தடுக்க வேண்டுமென்று போலீசும், தேவர் சாதியினரும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் இதற்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரை கொடூரமாக தாக்கியதில் அவருக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதனால் காழ்ப்புணர்ச்சியுடனே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்”.

மாவட்ட ஆட்சியர் அருணாராய் சம்பவ இடத்திற்கும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கும் அன்று முழுவதும் வரவில்லை. வருவாய் துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருக்கும் மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கோ காயம்பட்டு மருத்துவமனையில் இருப்பவருக்கோ மாவட்ட ஆட்சியர் எந்த ஆறுதலும் நேரில் சென்று கூறவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜெயபால் என்ற இளைஞனை  மனித நேயமற்ற நிலையில் இறந்த நாயை தூக்கிச் செல்வது போல் போலீசார் தூக்கிச் சென்றனர். இந்த படுகொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்என்றார்.

பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில், இராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருவதில் 10 நபர்களுக்கு துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கு லத்தியால் தாக்கப்பட்டதால் 9 காயங்கள ஏற்பட்டுள்ளது. தர்மராஜ் என்பவருக்கு 13 காயங்கள் எலும்பு முறிவுடன் சோந்து ஏற்பட்டுள்ளது. முகம், உடம்பில் முழுவதும் காயங்கள் உள்ளது. இதர நபர்களுக்கு லத்தியால் அடித்த காயங்கள் உடம்பில் முக்கிய பகுதிகளில் உள்ளன.

இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 70) அவரைச் சந்தித்தோம், “சம்பவத்தன்று நானும் இருந்தேன். ஐந்து முக்கு சாலையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் ஜான்பாண்டியனை விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு கைது செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது. அக்டோபர் 30 அன்று தேவர் குரு பூஜையில் இப்படி நடப்பீங்களா எனக் கேட்டேன். இந்நிலையில் நாளா பக்கமும் போலீஸ் சுற்றி வளைத்துவிட்டனர். சிவக்குமார்நீங்க என்னடா பெரிய விழா நடத்துறீங்க என்று கேவலமாக பேசினார்.” அதற்கு நான் அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கார் எங்க சாதி தான், ஜெகஜீவன் ராம் எங்க சாதி தான், பல மொழி தெரிந்த மாயாவதி எங்க சாதி தான் என வாக்குவாதம் செய்தேன்.”

“திடீரென்று போலீஸ் லத்தியால் அடித்து மக்களை துரத்தினர். டுப் டுப் என துப்பாக்கியால் சுட்டனர். நான் ஓடி அருகில் இருந்த படிக்கட்டில் ஏறி மறைந்து கொண்டேன். மக்களை அடித்து விரட்டி விட்டு வந்த போலீசார் என்னைப் பார்த்துவிட்டனர். சட்டையைப் பிடித்து இழுத்து வாடா மாப்பிள்ளை சட்டமா பேசுற என கொடூரமாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பெரிய கம்பால் ஒரே போடாக என இடது காலில் போட்டார் பெருவிரல் நசுங்கி இரத்தம் வழிந்தது தலையில் ஒரு அடி அடித்தார். புருவத்தில் இருந்து ரத்தம் வந்தது. சுற்றியிருந்த காவலர்கள் ஆளாளுக்கு கடுமையாக தாக்கினார்கள். வெயிலில் கால் சுடுது செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டேன் அதற்கு இன்ஸ்பெக்டர் உனக்கு எதுக்குடா செருப்பு பள்ளப்பயலே என அசிங்கமாக திட்டினார். கீழே விழுந்த வாட்ச்ஐ எடுக்கவிடவில்லை.”

“பிறகு போலீசார் காவல்நிலையத்தில் அடைத்து ஏண்டா பள்ளப்பயலே உங்களுக்கு குருபூஜை கேட்குதா என்று  தாக்கினர்தண்ணி தவிக்குது தண்ணீர் கொடுங்க அவசரமா யுரின் போகனும் எனக் கேட்டேன் போடா என விரட்டினா. சிவக்குமாரும், எஸ்.ஐ.யும் வெளியே போனவுடன் ஏட்டு ஒருவர் தண்ணீர் கொடுத்தார். சட்டை, பனியனில் இரத்தம் காய்ந்ததால் நாற்றம் எடுத்ததால் அனைத்தையும் கழற்றிவிட்டு டவுசருடன் இருந்தேன் அப்போது மதியம் சுமார் 2 மணி இருக்கும். அப்போது சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. இரவு 10.20 மணிக்கு தான் இராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். என்னைப் போல் அடிபட்ட பலரும் இதுபோல் தான் நடத்தப்பட்டனா. என்னை அடித்த இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்று சொல்லியதுடன் உன் சட்டையை கழற்றி ஜெயிலில் தள்ளாமல் விடமாட்டேன் என்று சொன்னேன். காவல்நிலையத்தில் அடைபட்ட போது நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து என்ற பாரதியார் வரிகளை நினைத்துப் பார்த்தேன்.

காயம்பட்ட 22 வயதான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தவமணி மகன் ராஜ்குமார் கூறுகையில் பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் மதியம் இரண்டு மணி முதல் மாலை 3.15 வரை தொடர்ந்து காவல்துறையினர் தாக்கினர். நான் உட்பட பலரும் அடிபட்டு 1 ½ மணி நேரம் சுடும் வெயிலில் கிடந்தோம். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது வேதனையில் துடித்தோம். தண்ணீர் கூட யாரும் கொடுக்கவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

காயம்பட்ட பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த குமார் கூறுகையில் எனக்கு கைகளில் போலீசார் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது. 3.00 மணிக்கு 20 போலீசார் நான் காய்கறி வாங்க கடைக்கு சென்ற போது அடித்தனர். நான் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவன்.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜெயபால் வயது 20 மஞ்சூரைச் சேர்ந்தவர் அவருடைய தந்தை பாண்டி கூறும் பொழுது என் மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டவன். மருமகள் நிறைமாத கர்ப்பிணி, கூலி வேலை செய்து தான் பிழைக்கிறோம். குருபூஜைக்குச் சென்றவன் பிணமாக வந்தான். பத்திரிக்கையில் அவன் நடந்து வருகிற போட்டோவும் இருக்கிறது. அவன் பிணமாக போலீசார் தூக்கி வருவதும் இருக்கிறது. அரசு கொடுத்த இழப்பீடை திருப்பித் தரப் போகிறேன். என் மகனின் படுகொலைக்கு நீதி வேண்டும். பணத்தை எளிதாக சம்பாதித்து விடலாம். என் மகனின் மார்பில் பாய்ந்த குண்டால் என் கை உள்ளே போகிற அளவுக்கு மார்பில் குழியாக இருந்தது. கீழே இருந்த சதையை எடுத்து அதில் வைத்து அழுத்தினேன். என் மகன் நான்கு பேர்களை ஒரே நேரத்தில் அடிக்கும் வலிமை உடையவன்.  அவனை கொன்று விட்டார்கள். நாங்கள் விடமாட்டோம்”.

பல்லவராயனேந்தல் ஊரைச் சார்ந்த கணேசன் வயது 55 துப்பாக்கிச் சூட்டில் பலியானவர். இவர் மனைவி கூறும் பொழுது என் கணவா குருபூஜைக்கு போகவில்லை. என் மகனுக்கு 15-ம் தேதி திருமணம் அழைப்பிதழ் கொடுப்பதற்காக பரமக்குடி சென்றார். அநியாயமாக துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டார். ஆடு, மாடு வைத்துள்ளோம் அதை எல்லாம் பட்டியில் அடைப்பதற்கு வந்துவிடுவேன் என்று போனார். பந்தகால் நட்டுப் போனவர் மகன் திருமணத்திற்கு வரவில்லை. போலீஸ் இப்படி அநியாயமாக கொன்றுவிட்டது. மணப்பெண்ணை பற்றி தவறாக பேசிவிடுவார்கள் என்பதற்காக என் கணவர் விருப்படியே  குறித்த தேதியில் திருமணத்தை நடத்தினோம்”.

காக்கனேந்தல் ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவருடைய அண்ணன் மனைவி கூறும் பொழுது போலீஸ் அநியாயமாக என் தம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டது. மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல்; இரவு நேரங்களில் போலீஸ் எங்களை கைது செய்கிறது. இரவு நேரங்களில் ஆண்கள் வீடுகளில் இல்லை. பாத்திர வியாபாரிகள் போல முள்ளுக்காட்டில் நின்று வேவு பார்க்கிறது. நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம். என்னுடைய வீடு பரமக்குடி பொன்னையாபுரத்தில் இருக்கிறது. ஒரு சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டு பல போலீசார் சுற்றி நின்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். உங்க ஆட்களை இப்ப வர சொல்லு என்று தாக்கியது. நான் மாடியில் இருந்து பார்த்தேன். தெருவில் இருந்த இருசக்கர வாகனங்கள் டாக்டருக்கு சொந்தமான கார் இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். தேவர் குருபூஜையை பாதுகாப்பாக நடத்துவதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. எங்கள் தலைவர் விழாவை நடத்தவிடாமல் தடுக்கிறது செய்தால் எல்லா குருபூஜையும் தடை செய்யட்டும் இல்லை என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி நடத்த ஆவண  செய்ய வேண்டும். இந்த அம்மா ஆட்சிக்கு வந்து இப்பவே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு என்றால் இவர்களுக்கு ஓட்டுப் போட்டது எவ்வளவு தவறு என்று தெரிகிறது”.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புறவழிச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

இளையான்குடியில் தியாகி இமானுவேல் பேரவை சேர்ந்த முனியாண்டி என்பவர் கூறும் பொழுது புறவழி சாலையில் குருபூஜைக்காக பகைவரை வென்றான் கிராமத்து மக்கள் சார்பில் பேனர் வைத்தோம்.  அதிகாலையில் சிலர் தியாகி இமானுவேல் படத்தின் தலையை கிழித்துவிட்டனர். இதற்காக நாங்கள் போலீசிடம் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. குருபூஜைக்கு செல்வதற்காக இந்திரா நகரில் 50 வாகனங்களில் நாங்கள் தயாராக இருந்தோம். பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் போலீஸ் அனுமதி மறுத்தது. இந்நிலையில் இளையான்குடி புறவழிச்சாலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கரைக்குடி மக்கள் சுமார் 27 பேர் சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி. இளங்கோவன் எந்த அறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுட்டார். ஆனந்த் என்ற +2 படிக்கும் மாணவன் துப்பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்தான். பொதுமக்கள் அனைவரும் சிதறி ஓடினர். போலீசாரே ஆனந்தை மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்பந்தமாக 200 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.”

“நாங்கள் கூட்டமாக சென்று துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினீர்கள் என்று டி.ஸ்.பி.இளங்கோவனிடம் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே நான் தான் சுட்டேன் என்று சொன்னார். பிறகு யாரையும் கைது செய்யக்கூடாது என்று நாங்கள் கடுமையாக பேசினோம். இத்தனை வருடம் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொன்னோம். டி.ஸ்.பி. மறவர் இனத்தைச் சேர்ந்தவர் நயினார் கோவில் அருகில் உள்ள சாதி ஆதிக்கம் மிகுந்த அக்கிரமேசி ஊரைச் சேர்ந்தவர். இவர் தேவர்களுக்கு சாதகமாக சாதி உணர்வோடு நடக்கிறார்.

ஆனந்தினுடைய தாயார் செல்லம்மாள் ‘’என் மகன் டியூசன் போனான் அநியாயமாக போலீஸ் சுட்டுவிட்டனர். தற்பொழுது மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்’’.என்றார்.

பகைவரை வென்றான் ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறும் பொழுது நாங்கள் வைத்த பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசோடு போராட்டம் நடத்தியதால் குருபூசைக்கு கிளம்ப காலதாமதம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் நாங்களும் பரமக்குடி போயிருப்போம். இந்த விழாவை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதை சீர்குலைக்கவே பேனர் கிழிப்பு காவல்துறையும் துணை போகிறது. இளையான்குடியில் துப்பாக்கி சூடே இல்லை என்று காவல் துறை மூடி மறைக்கப் பார்க்கிறது. டி.எஸ்.பி.இளங்கோவன் மருத்துவர்களிடமும் குண்டடிபட்ட ஆனந்தின் பெற்றோர்களிடமும் பேசி சரிகட்ட முயற்சிக்கிறார். தியாகி இமானுவேல் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். எங்களின் நியாயமான இக்கோரிக்கையை அமைப்பு பாகுபாடு கட்சிப் பாகுபாடு இலலாமல் அனைவரும் ஆதரிக்கின்றனர்”.

மதுரை சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

                11.09.2011 அன்று மதுரை, சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் காளியம்மாள் என்ற முதல்நிலை காவலரிடம் புகாரைப் பெற்று 38 நபர்கள் மீது குற்ற எண்.459/ 2011 yஇ.த.ச 147, 148, 188, 341, 322, 336, 353, 307 & 3 (1) தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகரில் குருபூஜைக்கு வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், புகார்தாரரான காளியம்மாள் என்ற தலித் பெண் காவலரை மானபங்கப்படுத்த முயற்சி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                மேற்படி சம்பவத்தைப் பற்றி நாங்கள் விசாரித்த பொழுது மதுரை சிந்தாமணியில் இருக்கும் முனியாண்டி மகன் துரைப்பாண்டி, கிருஷ்ணன் ஆகியோர் சொன்னது “11.09.2011 அன்று காலை 11 மணிக்கு புலியூர் என்ற ஊரிலிருந்து திறந்த வேனில் குருபூஜைக்கு வந்தவர்களை அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் சண்முகம் அடித்துத் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த நேரத்தில் பாட்டம் கிராமத்தில் இருந்து குருபூஜைக்குச் செல்ல வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணியைச் சேர்ந்த உள்ளுர்வாசிகளும் அப்போது இருந்தனர். திடீரென சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் போலீசாரும் லத்தியால் கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர். பால்குடம் எடுக்க வந்த பெண்கள், மற்றவர்களும் கூட ரத்தம் சொட்ட சொட்ட சிதறி ஓடினர். இச்செய்தியை சண்முகநாதன் வாக்கி டாக்கி மூலம் குருபூஜைக்கு வந்தவர்கள் காவலர்களை தாக்குகிறார்கள். பேருந்துகளை அடித்து நொறுக்கிறார்கள் என்று பொய்யாக தகவல் சொன்னதால் ஜீப்பின் கதவு திறந்த நிலையில் வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டார். ஜெயப்பிரகாஷ் என்ற 19 வயது இளைஞர் தொடைப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார். அவரைத் தூக்க முயற்சித்த பாலசுப்பிரமணி என்ற இளைஞர் விலாவில் குண்டடி பட்டார். மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஏற்கனவே பாட்டம் கிராமத்தில் உள்ள பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது சேர்வை இனத்தவர்களுக்கு பகை உள்ளது.இதில் சேர்வை சமுகத்திற்கு ஆதரவாக பல வழக்குகளில் எஸ்.ஐ.. சண்முகநாதன  செயல்பட்டுள்ளார்.

“ஆய்வாளர் கஜேந்திரன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் வேலை பார்த்த போது வெங்கடேச பண்ணையாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வெங்கடேச பண்ணையாருக்கும் பள்ளர் சமூகத் தலைவர் பசுபதி பாண்டியனுக்கும் பிரச்சினை இருந்தது. இதனால் பள்ளர் சமூகத்தின் மீது எப்போது விரோத மனப்பான்மையில் செயல்படுபவர். ஜீப்பை விட்டு இறங்கி துப்பாக்கியால் சுட்டதும் நல்ல நிலையில் வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று தனக்கு காயம்பட்டதாக நாடகம் ஆடி மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார். மேலும் காளியம்மாள் என்ற பெண் காவலரிடம்  புகார் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டுள்ளார். காளியம்மாள் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். சிந்தாமணியில் உள்ளவர்கள் பலர் அவருக்கு உறவுக்காராகள். சம்பவத்தன்று குருபூசைக்கு வந்தவர்களோடு பேசியதுடன் அனைவருடனும்  சேர்ந்து கரும்புச்சாறு வாங்கி குடித்தார். தடியடி ஆரம்பித்தவுடன் மற்ற பெண் காவலருடன் சென்றுவிட்டார். ஆனால் உண்மைக்கு மாறாக காளியம்மாளை யூனிபார்முடன் இழுத்து மார்பகங்களை பிடித்து அமுக்கி மானபங்கம் செய்ததுடன் அவரை கீழே தள்ளிவிட்டு உயிர் தலத்தில் காலால் மிதித்தனர் என்று வக்கிரமாக சாதி வெறியுடன் புகார் பதிவு செய்துள்ளனர். அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் உள்ள பெயர்கள் அனைத்தையும் புகாரிலேயே எழுதி பதிவு செய்துள்ளனர். முதல் நாள் இரவே எஸ்.ஐ. சண்முகநாதன் அவனியாபுரத்தில் அனுமதி பெற்று வைத்த ரேடியோவை நிறுத்துமாறும் கூட்டமாக இருப்பதை தடுத்தும் இடையூறு செய்தார். இச்சம்பவத்திற்கும் ஜான்பாண்டியன் கைது செய்ததற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மப்டி போலீசார் தான் பேருந்து மீது கல்வீச்சு நடத்தி கண்ணாடியை உடைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டல மாணிக்கம் பள்ளப்பச்சேரி கிராமத்தில் 09.09.2011 அன்று பழனிக்குமார் என்ற +1 மாணவன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சம்பவம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 12.09.2011 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பரமக்குடியில் 11.09.2011 அன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு அளித்த பதில் உரையில் மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்று கூறினார்”.

மேற்படி சம்பவம் தொடர்பாக அந்த ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்த போது. பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் சொன்னது

மண்டல மாணிக்கத்தில் ஆரம்பத்தில் நாடார், செட்டியார், முதலியார், பண்டாரம், அருந்ததியர் ஆகியோர் வீடு வாசல் நிலங்களோடு வாழ்ந்து வந்தனர். சுற்றியுள்ள ஏழு கிராமங்களிலும் மறவர் சாதியினர் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் மண்டல மாணிக்கத்தில் குடியேறி பல்வேறு வகைகளில் மற்றவர்களுடைய சொத்துக்களை அபகரித்து பெரும்பான்மையாக மாறிவிட்டனா. இக்கிராமத்தோடு இணைந்தது தான் பள்ளப்பச்சேரி கிராமம். 2004-ம் ஆண்டு மில்லுக்கு வேலை செய்யச் சென்ற பள்ளர் சமூகத்து பெண்களை  மறவர்கள் தாக்கினர். பிறகு நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போலீசாரே எங்களை அழைத்துச் சென்று மண்டல மாணிக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போதே மறவர் சாதியினர் எங்களை கடுமையாக தாக்கி மண்டையை உடைத்தனர். போலீசையும் தாக்கினர். இதற்கு போலீசே மறவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.”

“பள்ள்பச்சேரி கிராம மக்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால் மறவர்கள் இருக்கும் மண்டல மாணிக்கம் பக்கம் சென்று தான் பேருந்தில் செல்ல முடியும். எங்கள் இளைஞர்கள், பெண்கள் சென்றால் கிண்டல் செய்வார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்து பேச முடியாது, வெளியிலும் சொல்ல முடியாது. அரசு விடுதியில் பள்ளர் சாதி மாணவர்களை துன்புறுத்துவார்கள். இதனால் 40 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆனைக்குளம் பள்ளியில் சேர்த்துவிட்டோம். காவல்நிலையத்தில் கூட பெரும்பான்மை போலீசார் இப்பகுதி மறவர் சாதியினரே இதனால் எங்களுக்கு எந்த காலத்திலும் நீதி கிடைக்கவில்லை.”

“ஜனவரி 2011-ல் சிறையில் இருந்து வந்த ஜான்பாண்டியன் எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுது மாடியில் இருந்து மறவர் சமூகத்தினர் கல்லெறிந்து வாகனங்களை தாக்கியதுடன் இருவரை கத்தியால் குத்தினர். மேலும் எங்கள் பள்ளப்பச்சேரி ரிசர்வ் ஊராட்சி தொகுதியாகும்  எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்தினோம். ஆனால் மறவர் சாதியினர் அங்கு வாழக்கூடிய குமரன் என்ற அருந்ததியினரை மிரட்டி வேட்பு மனு தாக்கல் செய்து பஞ்சாயத்து தலைவராக ஜெயிக்க வைத்தனர். பஞ்சாயத்து தலைவர் தரையிலே உட்கார்ந்திருப்பார், மறவர்சாதி துணைத் தலைவர் நாற்காலியிலே அவரதுமகன் உட்கார்ந்திருப்பார். டீ வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளை தலைவர் தான் செய்வார் வாடா, போடா என்று தான் கூப்பிடுவார்.  மற்றொரு பாப்பாபட்டி, கீரிப்பட்டி இது மண்டல மாணிக்கத்தில் இரட்டை டம்ளர்  இன்றும் உள்ளது”.

இப்படி நாள்தோறும் அஞ்சி வாழ்கின்ற சூழலில் 09.09.2011 அன்று முத்துராமலிங்கபுரத்தில் நடந்த கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க எங்கள் ஊரில் இருந்து பலர் சென்றனர். பபூன் காமெடி முடிந்ததுடன் பல இளைஞர்கள் ஆற்றுப் பாலத்தை கடந்து திரும்பி ஊருக்கு ஐந்து பேர், நான்கு பேர் என்று வந்து கொண்டிருந்தனர். பின்பு இரு சிறுவர்கள் சற்று தூரமாக வந்த போது வேலியில் மறைந்திருந்த 10 பேர் மண்டல மாணிக்கம் மறவர்கள் பழனிக்குமார் என்ற 16 வயது சிறுவனை தலையில் வெட்டிக் கொன்றனர். கொலைக்கு முதல் நாள் மறவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தேவர் வாழ்க என்பதற்கு கீழே யாரோ ஒன்பது என்று எழுதிவிட்டார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தனர். போலீசார் எங்களை விசாரித்தனர். அந்த கட்டிடப் பகுதியில் மறவர் சாதி மாணவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவார்கள் நாங்கள் அங்கு செல்லவே முடியாது இரவிலும் அவர்களே அங்கு மது அருந்துவர். நாங்கள் யாரும் எழுதவில்லை என்று போலீசாரிடம் சொன்னோம். அன்று இரவு தான் பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அச்சிறுவன் பார்ப்பதற்கு 10 வயது போல தோற்றம் தான் இருக்கும் இமானுவேல் சேகர் குருபூஜையை தடுக்கும் நோக்கத்தில் தான் கொலை நடந்துள்ளது.

பள்ளபச்சேரி தங்கராஜ் கூறும் பொழுது அன்று இரவு நான் குண்டாற்றை தாண்டி வரும் பொழுது கத்தும் குரல் கேட்டது. அப்போது ‘’கதையை முடிச்சாச்சு இமானுவேல் சேகரன் விழா எப்படி நடக்குது பார்ப்போம்’’ என்று சொல்லிக் கொண்டே கருவேல மரங்களில் சென்று மறைந்தனா. பழனிக்குமார் தலையில் வெட்டுபட்டு கீழே கிடந்தான்”.

கொலையுண்ட பழனிக்குமாரரின் பெற்றோர்கள்     தங்கவேல், புவனேஸ்வரி, கூறும் போது எனக்கு நான்கு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை எனது இரண்டாவது மகன் பழனிக்குமார் என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. நன்றாக படிப்பான் பள்ளிக்கூடத்தில் 301 மார்க் எடுத்திருக்கிறான். இவன் படிப்பை அடையாளமாக வைத்து தான் ஆனைகுளம் அரசு பள்ளியில் எங்கள் ஊர் மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். மற்ற மூன்று பிள்ளைகளும் சிறுவர்கள் படிக்கிறார்கள். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது சார்பு ஆய்வாளர்  வழிவிட்டான் எழுதினார். கொலை செய்தவர்களுடைய பெயரை நாங்கள் சொல்லியும் எழுதாமல் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தொpயாத பத்து மர்ம நபர்கள் என்று எழுதிக் கொண்டார். மறவர் சாதி என்பதால் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார். நாங்கள் சொன்னதில் நான்கு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்”.

                பள்ளபச்சேரி இருளப்பன் கூறும் பொழுது எங்கள் ஊருக்கு தனி ரோடு கேட்டு பல வருடங்களாக மனுக் கொடுத்திருக்கிறோம். அரசு அதிகாரிகள் செயல்படுத்த மறுக்கிறார்கள். இதனால் மறவர்கள் இடத்திற்கு நாங்கள் செல்லுகின்ற கட்டாயம் இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது. நாங்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் சமுதாய ரீதியாகவே ஜான்பாண்டியன் வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினரை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டனர். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் அ.தி.மு.க.வில் உள்ள மறவர்கள் நாங்கள் நினைத்ததை முடித்துக் கொடுத்த தாயே என ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்”.

அரசு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணை

பரமக்குடி துப்பாக்கி சூடுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழக முதல்வா் ஜெயலலிதா அவா்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.காவல் துறையினா் தாங்களே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் மூலம் சம்மபவத்தை குறிப்பிட்டுள்ளனா்.

பரமக்குடி தாசில்தார் சிவக்குமார் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி சம்பவத்தில் எதுவும் சொல்ல முடியாது என்று கூறி முடித்துக்கொண்டார்.பரமக்குடி ஆய்வாளா் சிவக்குமார் தனது புகாரில் தாசில்தாரிடம் எழுத்துபூர்வமாக உத்திரவு பெற்று துப்பாக்கி சூடு நடத்தினோம் என்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் கலெக்டரிடம் பேசிவிட்டு உங்களை போனில் தொடர்பு கொள்கிறேன் என்றுசொன்னார். ஆனால் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி காவல் ஆய்வாளார் சிவக்குமாரை சந்திக்க முயன்ற போது அவர் வெளிப் பணிக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பின் அவருடைய செல் எண் 8056697999 –ல் தொடர்பு கொண்ட போது வேறு ஒருவர் எடுத்து மீட்டிங்கில் இருப்பதாகவும் நான் தகவல் சொல்லி விடுகிறேன்.உங்களோடு பேசுவார் என்றார்.ஆய்வாளர் சிவக்குமார் தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி டி.எஸ்.பி.கணேசன் அவர்களை சந்திக்க முயன்ற போது அவர் மாமல்லபுரத்திற்கு மாறுதல் ஆகிவிட்டதாக பரமக்குடி போலீசார் தொரிவித்தனர்.

இளையான்குடி தாசில்தார் மணி அவர்களிடம் விசாரித்தபோது, “இளையான் குடி புறவழிச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என போலீசார் கூறுகிறார்கள்.ஆனால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார்.சம்பவத்தில் ஆனந்த் என்ற மாணவன் காயம்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன்.”

நிழற்படங்கள்

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________________________________

மேற்படி சாட்சிகளின் விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை முடிவுகளாக தருகிறோம்.

1.            தேவர் குருபூஜைக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இமானுவேல சேகரன் குருபூஜை விழா நடத்தக்கூடாது, இமானுவேல் சேகரன் குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஆப்பநாடு மறவர் சங்கம், சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் சேர்ந்து ஜெயலலிதா அரசின் ஆதரவுடன் தேவர் சாதியினரை திருப்திபடுத்த சாதி வெறி கொண்ட போலீசை ஏவிவிட்டு பரமக்குடியில் ஆறு தலித் மக்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இவ்வாண்டு இமானுவேல் சேகரன் குருபூசையை தடுத்து நிறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

2.            செப்டம்பா 11 அன்று பரமக்குடியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா மண்டல மாணிக்கத்தில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவரை கொச்சைப் படுத்தும்விதமாக சுவரில் எழுதப்பட்டிருந்தது. இதுவே பரமக்குடி சம்பவத்திற்கு மூலக்காரணம் என கூறிப்பிட்டார். ஆனால் நாங்கள் நேரடியாக சென்று விசாரித்ததின் அடிப்படையில் பள்ளப்பச்சேரி கிராம பள்ளர் சாதி மக்கள் பல ஆண்டுகளாக அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மறவர்களை எதிர்த்து அப்பகுதியில் வாழ முடியாது என்ற நிலையில் பள்ளர் சாதி மக்கள் செல்ல முடியாத இடத்தில் அதிலும் கொல்லப்பட்ட பள்ளி சிறுவன் பழனிகுமார் கூட்டுறவு சங்க சுவரில் எழுதும் உயரம் கூட இல்லாத நிலையில். மறவர் சாதியினரே தேவர் வாழ்க என்பதற்கு கீழே ஒன்பது என எழுதிவிட்டு பொய்யாக போலீசில் புகார் கொடுத்து இரவில் கொலையும் செய்துள்ளனர்.

3.            மண்டல மாணிக்கம் பள்ளபச்சேரி பழனிக்குமாரை கொடூரமாக கொலை செய்தது, குருபூஜை தினத்தன்று ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது, குருபூஜை விழாவிற்கு சென்னை மாநகர அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் கொண்டு வரப்பட்டது, கற்கள், கைத்துப்பாக்கிகள், உருட்டுக் கட்டைகள் இவை எல்லாம் முன் கூட்டியே தயாரித்து சம்பவ இடத்தில் கொண்டு வரப்பட்டது, ஆரம்பத்தில் 50 பேராக பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக அப்புறப்படுத்தும் நிலையில் இருந்த காவல்துறை அப்புறப்படுத்தாமல் இருந்தது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு பரமக்குடி நகரைத் தாண்டி சென்றவுடன் ஜான் பாண்டியனை கைது செய்தது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்தோர்  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டு அதில் பேச்சுவார்த்தைக்காக எழுந்த ஒருவரை தள்ளிவிட்டு திடீரென தடியடியைத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டது, இவற்றை எல்லாம் நியாயப்படுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது, இன்றுவரை அ.தி.மு.க. அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களை யாரும் சந்திக்காதது, 144 தடை உத்தரவு நீக்கப்படாமல் இருப்பது, பொய் வழக்குகள் 2000 பேர் மீது போட்டிருப்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது, ஆகியவை பரமக்குடி சம்பவம் திட்டமிட்டு அரசாங்க ஆதரவுடன் போலீஸ் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்திய படுகொலை என்பதை உறுதி செய்கிறது.

4.            பரமக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசு எஸ்ஸி./எஸ்.டி போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட குருபூஜை பேனரில் தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன் என்று குறிப்பிட்டுள்ளதை தேவர் சாதியைச் சேர்ந்தோர், காவல்நிலையத்திலும் புகார் மனு அளிக்கிறார்கள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் நீக்கக் கோருகிறார்கள். போக்குவரத்து அதிகாரிமுன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது பேனரை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் விழா நடக்காது என்று மேல் இடத்தில் உள்ளவர்கள் சொன்னதாக சில அதிகாரிகள் குறிப்பிட்டது. குருபூஜைக்கு இருதினங்களுக்கு முன்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட்டில் தேவர் பேரவை என்று எழுதப்பட்டு அதில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. ஆகிய சம்பவங்கள் குருபூஜை விழாவின் போது பிரச்சனையை உருவாக்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.

5.            தமிழகத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக யாரேனும் போராட்டம் செய்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு முன் உதாரணமாக இச்சம்பவம் ஜெயலலிதா அரசு மற்றும் காவல்துறையால் நிகழ்த்தி காட்டப்பட்டுள்ளது. இனிவரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சி எப்படி நடக்கும் என்பதற்கு சாட்சியாக இச்சம்பவம் விளங்குகிறது. பரமக்குடி சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை.. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி துவங்கிவிட்டது என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதமே.

6.            பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பதற்கான வாய்ப்பிருந்து அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு  வரவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு முன்பான சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் கடைபிடித்தது போல் பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் குறிப்பிட்டிருப்பது பொய்யானது. அதே போல் இளையான்குடியிலும், மதுரையிலும் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஆதரவும் காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதிவெறியும் காரணமாக அமைந்துள்ளது.

7.            ஜான்பாண்டியனை கைது செய்யாமல் இமானுவேல் சேகரன் குருபூசைக்கு செல்ல அனுமதித்திருந்தால் துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்திருக்காது.

8.            அரசியல் சட்டத்தில் மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மனித உரிமைகளை மறுத்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி துப்பாக்கிசூடு நடத்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.

பரிந்துரைகள்:

1.            பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொலை சம்பவத்திற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி மற்றும் இதர போலீசார் மீது தமிழக அரசு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

2.            இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்து, கிராமங்களில் போலீஸ் ரெய்டு செய்வதை கைவிட வேண்டும். செப்டம்பா 11 அன்று 2000 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். யாரையும் கைது செய்யக்கூடாது.

3.            சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடும், காயம்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

4.    மண்டல மாணிக்கம் சிறுவன் பழனிக்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளவச்சேரி பகுதி நிலமையை நேர்மையான மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்து தலித் மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.    தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலித் மக்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையை இனக்கலவரம் என்பதாக தவறாக சித்தரிப்பதுடன் அதற்கு ஆதரவாக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி செயல் பட்டு வருகிறார்.இதனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் அரசாங்கத்தின் பங்கு குறித்து விசாரிக்க பணியில் உள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

36

ஜயகாந்த்-கம்யூனிஸ்டு

ழை பெய்ததும் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, பின் அறுவடை செய்யும் விவசாயிகளோடு ஒப்பிடும் போது ஓட்டுக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை என்னவென்று சொல்வது?

ஐந்தாண்டுகள் கொட நாட்டில் படுத்துக் கொண்டே எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு, இறுதி ஆண்டில் ஈர்த்து வரப்படும் கூட்டத்தை வைத்து ஹெலிகாப்டரில் பறந்து ஆர்ப்பாட்டம் செய்த ‘புரட்சித் தலைவி’ தி.மு.க அரசாங்கம் மீது மக்கள் கொண்ட வெறுப்பினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கரையொதுங்கினார்.

அது உழைத்துப் பெற்ற வெற்றியல்ல, உட்கார்ந்து பிடித்த வெற்றி என்றாலும் அம்மாவின் ஆணவத்தை தேர்தலுக்கு முன்பேயே நாம் மட்டுமல்ல அம்மாவின் நிழலை வணங்கி கரையேறிய கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்திருந்தார்கள். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதே வேட்பார்களை வெளியிட்டதாக இருக்கட்டும், பிரச்சாரத்தில் அவர்களை வேண்டாத விருந்தாளியாக பந்தாடியதாக இருக்கட்டும் எதுவும் மறக்கக் கூடிய ஒன்றல்ல.

ஆனாலும் தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் குவிந்திருந்த தமிழக மக்களின் மனநிலையை அம்மாவின் சேட்டைகள் சிதறடித்துவிடும் என்று அவரது அந்தப்புரத்து சாணக்கிய குருக்கள் கொஞ்சம் ஓதியதன் பலனாக அம்மா கொஞ்சம் இறங்கி வந்தார். அப்போதும் கூட ‘கேப்டன்’ விஜயகாந்தும், காம்ரேடுகளான போலிக் கம்யூனிஸ்டுகளும் சுயமரியாதை இன்றி அம்மாவின் அருளைப்பெற அலைந்த கதையும் நமக்கு மறந்திருக்காது.

தேர்தல் முடிவு வந்ததும் கையில் திணிக்கப்பட்ட அந்த வெற்றி தனது கடந்த கால ஆட்சியின் மகத்துவத்தை நினைத்து மக்கள் பயபக்தியுடன் அளித்த வெற்றி என்று ஜெயா பேசினார். “எனது அரசு, எனது திட்டம், எனது தொலை நோக்கு,” என்று எதற்கெடுத்தாலும் அந்த ட்ரிபிள் எக்ஸ்எல் அகந்தை அவ்வப்போது ஆட்டம் போட்டாலும் பார்ப்பன ஊடகங்கள் எதுவும் அதை கண்டு கொள்ளாததோடு ஏதாவது கோரிக்கை இருந்தால் பணிவோடு முன்வைத்து அம்மா பார்த்து ஏதாவது செய்தால் சரி என்று எழுதி வந்தனர். இந்த பக்தி பஜனை மண்டலியில் தினமணி வைத்தியநாதன் முதல் ஆளாய் இருந்தார்.

அம்மாவோடு கூட்டணி வைத்து அடிமைத்தனத்தோடு பணியாற்றியதன் பலனாக தே.மு.தி.கவிற்கு எதிர்க்கட்சி தகுதியும், காம்ரேடுகளுக்கு சில சீட்டுகளும் கிடைத்தன. பிறகு சட்டமன்றத்தில் அவர்களும் அம்மா சரணம் பாடியே காலத்தை ஓட்டினார்கள். சமச்சீர்கல்வி ரத்து என்று வந்த சட்டத்திற்கு போலிக்கம்யூனிஸ்டுகள் முதல் ஆளாய் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள். கேப்டனின்அடிமை எம்.எல்.ஏக்களோ கருணாநிதியை பழித்து அடுக்கு மொழியில் பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்கள்.

ஆனாலும் அம்மா தே.மு.தி.க சில்லறைகளை மதிக்கவில்லை என்பதோடு அவ்வப்போது கலாய்க்கவும் செய்தார். சட்டமன்ற அனுபவம் இல்லாத அந்த கத்துக்குட்டிகள், மேட்டூரில் அணை இருக்கிறது, திருத்தணியில் முருகன் கோவில் இருக்கிறது என்ற வரலாற்று உண்மைகளை பேசி கொல்கிறார்கள் என்று அம்மா அவர்களை எச்சரிக்கவே செய்தார். இவையெல்லாம்  கேப்டன் முன்னிலையில் நடந்திருந்தாலும் பதிலுக்கு திருப்பி சுடுவதற்கு அவரென்ன இராணவத்தில் இருக்கும் கேப்டனா என்ன? ஆர்.கே.செல்வமணி அளித்த அந்த கேப்டன் பதவியையும், வெத்துத் துப்பாக்கியையும் வைத்து மன்சூர் அலிகானை வேண்டுமானால் சுடலாம், அம்மாவை முடியுமா என்ன?

தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் புரட்சித் தலைவி மேயர், நகராட்சி என்று எல்லா பதவிகளுக்கான அ.தி.மு.க அடிமைகள் பட்டியலை அறிவித்து விட்டார். கூட்டணிக் கட்சி என்று பரிதாபத்துடன் கூறிக்கொள்ளும் சில அய்யோ பாவம் அடிமைகள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அம்மாவின் அதிரடிக்கு முன் கால்தூசு.

ஆனாலும் காம்ரேடுகள் விடவில்லை. விடாது போயஸ் தோட்டத்திற்கு காவடி எடுத்தார்கள். ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் (நல்லகண்ணுவிற்கு என்னாச்சு?) வந்தார்கள்; பேசினார்கள்; அம்மா வெளியிட்ட பட்டியல் இறுதியல்ல என்றார்கள். இப்படி என்னவெல்லாம் சமாதானமடைய முடியுமோ அப்படி எல்லாம் பேசினார்கள். ஆனாலும் அவர்களுக்கு மேயர் இல்லை, ஏற்கனவே இருந்த நகராட்சி இடங்களும் இல்லை என்று முதல்கட்ட ‘பேச்சுவார்த்தை’கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் காம்ரேடுகள் இத்தகைய போயஸ்தோட்டத்து அடிமைத்தனத்தில் கொட்டை போட்டவர்கள் என்பதால் ஏதோ சில எலும்புத்துண்டுகள் கிடைக்காமல் போகாது. ஆனால் கேப்டன் நிலையோ இன்னும் பரிதாபம். 29 நபர்களை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு நடந்தது போன்று இப்போதும் அம்மா இறங்கி வரமாட்டார் என்று கேப்டன் வீட்டு நாய்குட்டிக்கு கூடத் தெரியும்.

அப்போதாவது தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது அசுர பெரும்பான்மையில் ஆட்சியை அதிகாரத்துடன் நடத்தும் அம்மாவிடம் ஏதாவது கோரிக்கை வைக்க நினைத்தாலும் அது தொண்டைக்குழியை தாண்டி வருவது கடினம். மேலாக தி.மு.க பெருந்தலைகளே அம்மாவின் ருத்ர தாண்டவத்தை கண்டு கதிகலங்கிய நிலையில் கத்துக்கட்சி கேப்டன் கட்சியினர் என்ன செய்து விட முடியும்?

பத்து மேயர் பதவிகளில் நான்கிலிருந்து இரண்டு வரை, உள்ளாட்சி பதவிகளில் முப்பது சதவீதம் என்று பெருந்தன்மையுடன் மனக்கோட்டை கட்டிய கேப்டன் தற்போது என்ன செய்வது என்று திண்டாடி வருகிறார். அம்மாவின் நூறு நாள் ஆட்சி விழா பஜனை மண்டலிக்கு அவர் போகவில்லை என்பதுதான் பு.த வின் கோபத்திற்கு காரணம் என்று கேப்டனது பாடிகார்டுகளே பேசிவருகிறார்கள்.

அதன்படி கேப்டன் தனியாக தேர்தலில் நிற்பதை அவரது கட்சியினர் யாரும் விரும்பவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக அம்மாவும் அருள்பாலிக்க தயாரில்லை. சில பல எலும்புத் துண்டுகளை கவ்விக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவரது நிலை. காம்ரேடுகளை முதலில் அழைத்து பேசியது போல பெரிய கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவை இன்னும் பேசுவதற்கே அழைக்கவில்லை என்பது வேறு கேப்டனது படை வீரர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. இதெல்லாம் வைகோ அண்ணனின் வசந்த மாளிகை புலம்பலில் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.

அரசியல் வெற்றி என்பது கட்சிகள் தமது சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டி பெறும் போராட்டம் என்பது இல்லாமல் சில வரலாற்று விபத்துக்களால் கிடைத்தால் என்ன நடக்கும்? போயஸ் தோட்டத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு அம்மா போடும் ஆட்டமும், அந்த ஆட்டத்தில் சில எலும்புகளாவது தவறி கீழே விழும் என்று கூட்டணி அடிமைகள் தவமிருப்பதும் மேற்கண்ட விபத்து வெற்றியின் தொடர் விளைவுகள்.

இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற அநாமதேயங்கள் கேப்டன் கட்சிக்கு 51 சதவீத சீட்டு ஒதுக்கீடு தருவோம் என்றெல்லாம் பேசிக் கொல்லுகிறார்கள். இந்தச்சூழலில் லெப்டிணன்ட்டுகளின் கூட்டத்தை கூட்டிய கேப்டன் “எல்லாவற்றும் தயாராக இருக்குமாறு” பேசியிருக்கிறார். முக்கியமாக இந்த சொந்தக்கதை, சோகக்கதையெல்லாம் மீடியாவில் வெளியாகிவிடுவதாகவும், இந்த முறை அப்படி வெளியானால் இனி இந்த கூட்டத்தை கூட்டவே மாட்டேன் என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்.

தனது சொந்த சோகத்தைக் கூட வெளியுலகிற்கு தெரிவிக்காமல் குமுறி குமுறி அழவேண்டிய இந்தக் காட்சி எதை நினைவுபடுத்துகிறது?