Friday, June 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 766

மனித உரிமை வேடதாரி ”மக்கள் கண்காணிப்பகம்” ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!

மதுரை சின்ன சொக்கிகுளத்தில் ஹென்றி டிபேன் என்பவரை செயல் இயக்குனராகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மக்கள் கண்காணிப்பகம்.கடந்த 02.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.வல்லரசு என்பவர் கொடுத்த  புகாரின் பேரில்  மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் குற்ற எண். 1697/2011-ல் இ.த.ச.பிரிவுகள் 147, 323, 355, 427,294(பி), 506(i) மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989 ன் படி 1.ஹென்றி டிபேன், அவரது மனைவி 2. சிந்தியா டிபேன்,  மருமகன் 3. பிரதீப் சாலமோன்,  மகள் 4. அனிதா மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் !

கடந்த 01.10.2011 மாலை 6.00 மணி முதல் 02.10.2011 காலை 6.00 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி  தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் என்ற தலைப்பில் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பில் மரணதண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்  நாஞ்சில் சம்பத்,கொளத்தூர் மணி, தியாகு, சந்திரபோஸ்,  நாகை திருவள்ளுவன், வடிவேல் ராவணன் ,சிபிஜ மற்றும் சிபிஜ[எம்] அமைப்பினர் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர்  கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்ஒட்டர்  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக  வேன்களில் திரட்டி வரப்பட்டிருந்தனர்.பல்வேறு தமிழ் தேசிய, திராவிட, தலித், இடதுசாரி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் வல்லரசு மீது தாக்குதல்

 இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்து நன்கொடையும் திரட்டியவர் வழக்கறிஞர் வல்லரசு. இவர்தான் தற்போது ஹென்றி டிபேன் மீது புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சிக்கு சென்ற வழக்கறிஞர் வல்லரசு அங்கு நடந்தது பற்றிக் கூறியது:

”நான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்  கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு 8 வயது இருக்கும்போது என் தந்தை கந்தசாமி இறந்து போய்விட்டார். 9 வயதில் என் தாயார் சுகந்தியும் இறந்து போய்விட்டார்.சிறுவயது முதல் அண்ணன், தம்பிகள் இல்லாமல் தாய், தந்தையரை இழந்து பல்வேறு நபர்களின் உறுதுணையுடன் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரை  சொக்கிகுளத்தில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அங்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிற திரு.ஹென்றி டிபேன் என்பவரின் மருமகனும் பணியாளருமான திரு.பிரதீப் சாலமோன் என்பவர் என்னிடம் பிரச்சனை செய்து வந்தார். இத்தகைய நிலையைத் தொடர்ந்து  நான் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்க விரும்பாமல் பணியில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.

மக்கள் கண்காணிப்பகத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்ற ஜான்வின்சென்ட் என்பவரிடம் ஜூனியராக உள்ளேன். ஜான்வின்சென்ட் நடத்துகிற தனி வழக்குகளுக்கு உதவி செய்து வந்தேன்.

இந்நிலையில் கடந்த  செப்டம்பர்  இறுதி வாரத்தில் மதுரையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு முன்பு மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவ்வார்ப்பாட்டத்திலிருந்த பிரதீப் சாலமோன் என்னிடம், பேனரைப் பிடி என்று சொன்னார். நான் மக்கள் கண்காணிப்பக ஊழியர் இல்லாததால் மறுத்தேன் .அதற்கு சாலமோன் என்னை ஆபாசமாகத் திட்டினார்.இதனால் எனக்கும் பிரதீப் சாலமோனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதன்பின் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரண தண்டனை ஒழிப்பு சம்பந்தமான தூங்காநிலை மாநாடு ஒன்றினை அக்டோபா 1ம் தேதி நடத்தினர். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரவு சுமார் 10.00 மணியளவில் இறையியல் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு என் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டுத்  திரும்பும்போது என் வாகனம் உடைந்து கீழே கிடந்தது தொடர்பாக  பிரதீப்பிடம் கேட்டதற்கு உன்னை எவன்டா இங்கே வரச் சொன்னது என்று சொல்லி அவமானப்படுத்தினார்.

அதன்பின் நான் அங்கிருந்த மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றியிடம்  சார் உங்கள் மருமகன் எப்போது பார்த்தாலும் என்னை இழிவாகப் பேசுகிறார்,அவமானப்படுத்துகிறார்.தயவுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன். அதற்கு ஹென்றி டிபேன் என் மருமகனை பற்றி எனக்குத் தெரியும்டா, நீ யாருடா புகார் கொடுப்பது, என்று கூறிக்கொண்டே என் கழுத்தை நெறித்து கீழே தள்ளிவிட்டார். பின்னர்  என் சட்டையைப் பிடித்து தூக்கி தரதரவென்று இழுத்துக் கொண்டே வெளியே போடா ராஸ்கல் என்று கத்தினார். நான் அவரது பிடியில் சிக்கிக்கொண்டு, சார் நான் ஒரு வழக்கறிஞர்  என்னை இப்படி பொதுக்கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சினேன். அப்போது என் செருப்பு கழண்டு கொண்டது. நான் ஹென்றிடிபேனிடம் சார் என் செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியதற்கு அவர் எடுப்பதற்குச் சம்மதிக்கவில்லை. வாடா என்று கூறிக்கொண்டே என்னை வெளிவாயில்வரை  இழுத்து வர அங்கு பிரதீப் சாலமோனும் பலரும் சேர்ந்து கொண்டு என்னைத் தாக்கினார்கள்.

பிரதீப் சாலமோனின் மனைவி அனிதா,ஹென்றியின் மனைவி சிந்தியா ஆகியோர் என்னைச் செருப்பால் தாக்க முயற்சித்தனர்.செருப்பு என் மேல் படாமல் கீழே விழுந்தது.உடம்பு மற்றும் காலில்  கடுமையான வலி ஏற்ப்பட்டது. அவசர போலிஸ் 100க்கு தகவல் சொல்லிப் புகார் கொடுத்தேன். நான் கடந்த 02.10.21011 முதல் 08.10.2011 வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக  சிகிச்சை எடுத்தேன்.ஏற்க்கனவே பிளேட் வைக்கப்பட்டிருந்த எனது காலில் அடிபட்டதால் தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனிடையே கடந்த 04.10.2011 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் என்னிடம் விசாரணை செய்வதற்காக காவல் உதவி ஆணையா திரு.கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் கண்காணிப்பகத்தின் வாகனமும் அதில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கக்கூடிய பிரபாகரன் என்பவர் உள்ளிட்ட  சிலரும் இருந்தனர். உதவி ஆணையர்  என்னிடம் என்ன நடந்தது என்று விசாரணை செய்த பின்பு ஹென்றி டிபேன்  செல்வாக்கு உள்ளவர். டிஸ்சார்ஜ் ஆகுங்கள் என்று சொன்னார்.

தற்போது தனக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு தொண்டு நிறுவன தொடர்புகள் இதெல்லாம் கொண்டு இப்பிரச்சனையை திசை திருப்புகிற முயற்சியிலும் ஹென்றிடிபேன் ஈடுபட்டு வருவதாக அறிகிறேன்.எனக்கு நீதி வேண்டும்”.

உயர்நிதி(!)மன்றக் கூத்து!    

மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 04.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரி வழக்கறிஞர் திரு.ஆறுமுகம் (வழக்கறிஞர் திரு.லஜபதிராயிடம் இளம் வழக்கறிஞராக இருந்தவர்)மூலம் மனுதாக்கல் செய்தனர்  ஹென்றி டிபேன் குடும்பத்தினர். போலிஸ் தரப்பில் ஆஜரானவர்  வழக்கறிஞர்  திரு.பாலசுப்பிரமணியன். மாலை 5.30 மணி வரை ஹென்றிடிபேனின் பிணை மனுவே கிடைக்கப்பெறாத வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்திற்கு மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள்தான் மனுவின் நகலையே கொடுத்தனர்.போலிஸ் வழக்கறிஞர்  பின்னாலே தான் மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள் நின்றிருந்தனர். ஹென்றிடிபேன் மனு 10 வது வழக்காக இருந்தது. 8வது வழக்கு டி. லஜபதிராய் என்று அழைக்கப்பட்டவுடன் என்ன வழக்கென்று கேட்காமலேயே USUAL DIRECTION GRANTED என்று சொன்னார் நீதிபதி கர்ணன்.[வழக்கறிஞர் லஜபதிராய் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று நீதிபதிக்குச் சொல்லப்பட்டிருந்தது போலும்.(ஹென்றி அண்ணே! உங்க அளவுக்கு சாமர்த்தியம் கர்ணனுக்கு இல்லண்ணே!கொஞ்சம் டிரெயினிங் குடுங்க!) நீதிமன்ற ஊழியர்கள், அரசு வழக்கறிஞர்கள்  இது வேறு வழக்கு என்று தெரிவிக்க, பின்பே நிதானத்திற்கு வந்த நீதிபதி 8 & 9 வழக்கிற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு 10வது வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்  வல்லரசு சார்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் ஆஜராகி புகார்தாரர் சிகிச்சையில் இருப்பதால் இவ்வழக்கில் பிணை உத்தரவு வழங்க கூடாது, மேலும் புகார்தாரர் மனுதாக்கல் செய்ய காலஅவகாசம் கொடுத்து வழக்கை திங்கட்கிழமையன்று ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

அரசுதரப்பு வழக்கறிஞர் புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து சென்று விட்டார் என்று பொய்யான தகவலைச் சொல்ல  அதை மறுத்து சிகிச்சையில் இருப்பதற்கான ஆவணங்களை வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி உத்தரவு வழங்குவதிலேயே முனைப்பாக இருந்து உத்தரவு வழங்குவதை எதிர்த்தால் நீதிமன்ற அவமதிப்பு எடுப்பேன் என்று சொல்ல, இந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் பதிலடி கொடுக்க அதையும் மீறி நீதிபதி கர்ணன் ஹென்றிடிபேனுக்கு ஆதரவாகப் பிணை உத்தரவு வழங்கினார்.

மேற்படி இச்சம்பவத்தில் ஹென்றிடிபேனால் போலீசு தரப்பு வழக்கறிஞரும், நீதிபதி கர்ணனும் விலைக்கு வாங்கப்பட்டிருந்தார்கள் என்பது அன்று (04.10.2011) நீதிமன்றத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெளிவாகத்  தெரிந்தது.

ஹென்றிடிபேனுக்குப்  பிணை வழங்கிய நீதிபதி கர்ணன் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணனின் தம்பி பாஸ்கரனுக்கு சப்ளை அண்ட் சர்வீஸ் செய்து பணம் கொடுத்து பதவிக்கு வந்தவர் என்பது ஊரறிந்த உண்மை. நீதிபதி கர்ணன் அவர்கள் 04.10.2011 அன்று திருச்சி கே.என்.நேரு, கரூர் கே.சி.பழனிச்சாமி, நடிகை குஷ்பு, ஹென்றிடிபேன், பொட்டு சுரேஷ் ஆகியோருக்கு உரிய நீதி வழங்கி தனது தீபாவளி வசூலை சிறப்பாக முடித்துச் சென்றதை வழக்கறிஞர்கள் அறிவார்கள்.

இதற்கிடையில் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார் ஹென்றிடிபேன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வல்லரசை மருத்துவமனையில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்து வெளியேற்றி விட்டார்கள்.

இப்படியாக காவல்துறையுடனும், நீதித்துறையுடனும் கள்ளக்கூட்டு வைத்து செயல்பட்டு வரும் மக்கள் கண்காணிப்பக ஹென்றிடிபேன்தான் காவல் துறை சித்திரவதை மற்றும் நீதித்துறை ஊழலை எதிர்த்துப் போராடி வருவதாக நாடகமாடி வருகிறார்.

மக்கள் கண்காணிப்பகத்தில் குடும்ப ஆதிக்கம்!

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்

ஹென்றி டிபேனின்  மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஜனநாயக விரோத அமைப்பு. அங்கு ஹென்றி டிபேனும் அவரது குடும்பத்தினரும்தான் எல்லாம்.அவர்களை மீறி யாரும் பேச முடியாது.ஊழியர்களை எல்லாம் அடிமைகளாகத்தான் நடத்துவார்கள்.எதிர்க்கும் நபர்களை திட்டமிட்டுப் பழிவாங்கி விடுவார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.2005 ஆம் ஆண்டு  ம.க.இ.க.தோழர்களிடம் பேசியதற்க்காக  ஹென்றி டிபேன் வழக்கமாக நடத்தும் தீவிரப் புலன்விசாரணையை(பெரிய துப்பறியும் சாம்பு!) சுயமரியாதையோடு எதிர்த்து நின்ற ஓட்டுநர் மோகன்குமாரிடம் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்துக் கொண்டு ,சம்பளமும் தராமல் வம்பு செய்ய ,பின்பு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அதன் பிறகே  ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்தார் இந்த மனித உரிமைக் காவலர் ஹென்றி டிபேன். பின்பு  தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார் மோகன்குமார்.அதன்பின் மக்கள் கண்காணிப்பகத்திற்க்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் உள்ள கள்ள உறவை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் பத்திரிக்கை மக்கள் கண்காணிப்பகத்தால் குன்னூரில் நடத்தப்பட்ட உலகமய ஆதரவுக் கூட்டப் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அப்புகைப்படத்தை வழங்கினார் என்று குற்றம்சாட்டி அமுதா என்ற ஊழியரின் மெயிலை அவர் அனுமதியின்றி திருட்டுத்தனமாகப் பார்த்து,விசாரணை என்ற பேரில் சித்திரவதை செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்க்காக ஆறு வருடங்களாய் மக்கள் கண்காணிப்பகத்திற்க்காக கடுமையாக உழைத்த உமா ராணி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.விளக்கம் தரக்கூட மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டார்.இப்படி ஹென்றி டிபேனின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மிக நீளமானது.தற்போது வழக்கறிஞர் வல்லரசுவின் சீனியராக இருந்த ஒரே குற்றத்திற்க்காக 15 வருடங்கள் ஹென்றிக்காக பணியாற்றிய வழக்கறிஞர் ஜான் வின்செண்ட் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார். நெஞ்சில் இரக்கமற்ற கொடிய முதலாளிகள் கூட ஹென்றி டிபேன் போல் நடக்கத் துணிய மாட்டார்கள்.முன்னறிவிப்பின்றி டிஸ்மிஸ் செய்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம் எவ்வளவு துன்பப்படும் என்பதை இந்த ஏ/சி அறைக் கோமான் அறிய மாட்டார் போலும். இதோடு  மக்கள் கண்காணிப்பகத்தில் பணிபுரியும் ஹென்றியின் மனைவி சிந்தியாவின் ஆணவம்,அதிகாரத் திமிர் ஊரறிந்தது.மக்கள் கண்காணிப்பகத்தில் தங்கிப் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சொந்த வேலைக்குப் பயன்படுத்துவது முதல் தனக்குப் பிடிக்காதவர்களை ஹென்றியிடம் போட்டுக் கொடுத்துப் பழிவாங்குவது வரை அத்தனையும் செய்வார் இந்தச் (ச்சீ……)சீமாட்டி.இதற்க்கடுத்து மகள் அனிதா,மருமகன் பிரதீப் என்று குடும்பக் குத்துவிளக்குகளின் அதிகார எல்லை நீளூம்.நல்ல வேலை ஹென்றிக்கு கருணாநிதியைப் போல் சில மனைவிகள்,பல குழந்தைகள்,பலப்பல பேரக் குழந்தைகள் இல்லை.தப்பித்தார்கள் மக்கள் கண்காணிப்பக ஊழியர்கள்!

மக்கள் கண்காணிப்பகம் பன்னாட்டு முதலாளிகளின் கள்ளக் குழந்தை!

ஹென்றி டிபேன்

ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. உலகெங்கிலும் நடந்து வருகிற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்ற மக்களையும்; மனித உரிமைகள் மீது ஆர்வம் கொண்டுள்ள ஜனநாயக சக்திகளையும் தங்களின் வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காகவே அமெரிக்க அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க கண்காணிப்பகம், ஆசியா கண்காணிப்பகம் என ஒவ்வொரு நாட்டிலும்  மனித உரிமை அமைப்புகளைக்  கட்டி இயக்கி வருகின்றன. அத்தகைய ஏகாதிபத்திய திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஹென்றிடிபேன் நடத்தி வரும் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் சித்ரவதைக்கு எதிரான பிரச்சாரம்.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் திணிக்கும் தனியார்மய பொருளாதாரக் கொள்கைகள் தான் உலகெங்கிலும்  மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து மக்களைச் சாவின் விளிம்பில் தள்ளுகின்றன. யாரைச் சமரசமின்றி எதிர்க்க வேண்டுமோ, அவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசும் ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் என்பது நண்பன் வேடத்தில் இருக்கும் துரோகி.மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டும்; அரசியல் உணர்வைக் காயடிக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய அரசுகளின் திட்டங்களை அவர்கள் சொல்லுகிறபடியே செயல்படுத்தும் ஒரு பொம்மைதான் மக்கள் கண்காணிப்பகம்.

இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு ,சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.

இவ்வாறாக மக்கள் கண்காணிப்பகம் அதன் தன்மையில் ஓர் ஜனநாயக விரோத, குடும்ப ஆதிக்க நிறுவனமாகவும்,ஹென்றி டிபேன் ஓர் கொடிய கார்ப்பரேட் முதலாளியாகவும்  இருந்து ஓர் பன்னாட்டு நிறுவனத்திற்க்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள நிலையில் அதை மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பென்று கூற முடியுமா?

கூடுதலாக,

1] மக்கள் கண்காணிப்பகத்திற்க்கு பல நூறு கோடி ரூபாய் நிதி எங்கிருந்து வருகிறது?

2] என்ன நோக்கத்திற்க்காக நிதி வழங்கப் படுகிறது?

3] மக்கள் கண்காணிப்பகம் தொடங்கியதிலிருந்து இன்று வரை பெறப்பட்ட நிதி எவ்வளவு? கொடுத்தது யார்?உடன்படிக்கை விபரங்கள் என்ன?

4] நிதிகள் நிறுத்தப் பட்டால் தற்போது எடுக்கப்பட்ட போராட்டங்களின் நிலை என்ன?

5]ஆயிரங்களில்,லட்சங்களில் சம்பளம் பெற்று மனித உரிமைக்குப் போராட முடியுமா?

6] மக்கள் கண்காணிப்பகத்தின் கொள்கை,லட்சியம் என்ன? அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் என்ன?

7]  மக்கள் கண்காணிப்பகத்தோடு எந்த அடிப்படையில் தமிழ் தேசிய,திராவிட,தலித்,இடதுசாரி அமைப்பினர் இணைந்து பணியாற்றுகின்றனர்?

8] வழக்கறிஞர் வல்லரசு தாக்கப்பட்ட சம்பவம்,அதையொட்டி காவல்துறை,நீதித்துறை உடனான ஹென்றியின் உறவு குறித்து   மக்கள் கண்காணிப்பகம் கூறுவதென்ன?  அதன் தோழமை அமைப்பினர் நிலைப்பாடென்ன?

இவற்றிற்க்கு  மக்கள் கண்காணிப்பகம் மட்டுமல்ல ஏகாதிபத்திய நாடுகளிடம் பிச்சையெடுத்து ஹென்றி விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக எச்சில் ஒழுக ஹென்றி டிபேனிடம் உறவு வைத்துள்ள பலரும் நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டும்.[ உண்மை அறியும் குழு கூட அமைக்கலாம்!

{அல்லது}

உண்மைகளை உலகத்திற்க்கு உரத்துச் சொல்ல ஹென்றி டிபேனும்,மக்கள் கண்காணிப்பகமும் தன்னை ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்?  அதன் தோழமை அமைப்பினர் கூட இதற்கு முயற்சிக்கலாம்.செய்வார்களா?

____________________________________________

இணைப்பு: மக்கள் கண்காணிப்பகத்தில் பணியாற்றிய ஒருவரின் கடிதம்:

இரா.முருகப்பன்,

7, பாரதிதாசன் நகர், கல்லூரிசாலை, திண்டிவனம் – 604 001

———————————————————————————————————————

பெறல்:

திரு. ஹென்றி டிபென் அவர்கள்

இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம் – தமிழ்நாடு

சொக்கிக்குளம், மதுரை

பார்வை  : 02.06.06 நாளிட்ட நிர்வாகி அவர்களின் கடிதம்

ஐயா, வணக்கம்

பார்வையில் கண்ட கடித்ததில் நான் பணியை ராஜினாமா கடிதம் எழுதாமலும் ரூபாய் மூவாயிரம் கணக்கு நேர் செய்யாமலும் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். மேலும் மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கணக்குகளை ஒப்படைப்பு செய்யும் படியும் கேட்டுள்ளீர்கள்.

  1. நான் ரூபாய் மூவாயிரத்திற்கான கணக்கை நேர் செய்யத் தயாராக இருக்கிறேன்.
  2. நான் பணி செய்த காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2005க்கான ஊதியத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பணி நீக்கம் செய்யப்படாத நிலையில் பிழைப்பூதியமும் வழங்கப்படவில்லை. தங்கள் நிறுவனத்திடமிருந்து எனக்கு வரவேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  3. தங்களிடம் உள்ள என்னுடைய மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செல்பேசியைக் கேட்டு பலமுறைக் கடிதம் எழுதிய பின்பு இவ்வளவு நாட்கள் கழித்து என்னிடம் ராஜினாமா கடிதம் கேட்டிருப்பது உள்நோக்கம் உடையதாகத் தெரிகிறது.
  4. அவசியம் கருதி நான் கேட்டபின்பும் தங்களுக்கு நான் தரவேண்டிய ரூபாய் மூவாயிரத்திற்கு பிணையாக என்னுடைய பள்ளிச் சான்றிதழை தாங்கள் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதும் மனித உரிமை மீறல் என்பதும் தாங்கள் அறிந்ததுதான். எந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் பின்பற்றாத ஒரு நடைமுறையாகும்.
  5. நான் விகடன் குழுமத்தில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர நடைபெறும் நேர்காணலுக்கு என்னுடைய சான்றிதழ் தேவை எனக் கேட்டிருந்தேன். தாங்கள் சான்றிதழை அனுப்பாமல் பார்வையில் கண்ட கடிதத்தை அனுப்பியுள்ளீர்கள். மேற்படி விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் நான் பள்ளிச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை எனில் அதன்முழுப் பொறுப்பும் தங்களையே சாரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
  6. தங்கள் கடிதத்தில் என்னை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளீர்கள். நான் அலுவலகத்திற்கு வரும் பட்சத்தில் அவமானமும் உளரீதியான சித்திரவதையும் மன அழுத்தமும் சந்திக்க நேரிடும் என்பது என்னுடைய கடந்த கால நேரிடை அனுபவமாகும். நான் பணிபுரிந்த காலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடந்ததை அறிவேன். தங்கள் நிறுவனத்தின் உளவியல் ரீதியான சித்திரவதையையும் அவமானத்தையும் தாங்காமல் பலர் ராஜினாமாக் கடிதம் கொடுத்துள்ளதையும் நான் அறிவேன். குறிப்பாக தலித்துகளான வனராசன், மோகன், சோபியா, செம்மலர் போன்றோரும் வரவேற்பரையில் பணியாற்றிய மகராசன், கோபால் உள்ளிட்ட இன்னும் பலருக்கு நேர்ந்தவற்றை நான் குறிப்பாக அறிவேன்.  மனித உரிமை நிறுவனம் என்ற அடையாளத்துடன் செயல்படும் தங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தால் எனக்கும் அத்தகைய நிலைதான் ஏள்படும் என்பதை நான் அறிந்தும் உணர்ந்தும் அனுபவித்தும் உள்ளேன். ஆகையால் என்னுடைய சான்றிதழ் மற்றும் செல்பேசியை வழங்கவும் கணக்கை நேர் செய்யவும் அலுவலகத்திற்கு நேரில் வர விருப்பம் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
  7. தங்கள் அலுவலகத்தில் ஊழியர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் ஊழியர்களின் சான்றிதழ்களை பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதையும் ஊழியர்கள் இடையே சாதியப்பாகுபாடு  கடைபிடிக்கப்படுவதையும் தலித் ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாததையும் மறைமுகமாக உளவியல் சித்திரவதைக்கு ஊழியர்கள் உள்ளாக்கப் படுவதையும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதையும் சக ஊழியர்கள் அச்சமின்றி ஒருவருடன் ஒருவர் பழக இயலாமல் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் எப்பொழுதும் அச்சம் நிறைந்த சூழ்நிலையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டியதையும் நான் என்னுடைய சொந்த பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. இதை ஒரு சமூகம் மற்றும் பொதுப் பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இவண்
இரா.முருகப்பன், திண்டிவனம்
04.06.2006

நகல் :

10.06.06ல்      1.         –           கோ.சுகுமாறன்

2.         –           வழக்.பொ.இரத்தினம்

3.         –           வழக்.ராஜு

4.         –           திரு.அபிமன்னன்

12.06.06ல் தகவலுக்கான கடிதம்

5.         –           கொளத்தூர்.மணி

6.         –           பழ.நெடுமாறன்

7.         –           வழக்.இராபர்ட்

8.         –           புனிதப்பாண்டியன்

9.         –           தேவநேயன்

10.       –           வழக்.கே.சந்துரு

11.       –           தொல்.திருமாவளவன்

12.       –           பேரா.அ.மார்க்ஸ்

13.       –           பேரா.சே.கோச்சடை

____________________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ் நாடு –
மதுரை மாவட்டக் கிளை.
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!

16
நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்'டை ஆதரிப்போம்
சஞ்சீவ் பட்

பிரம்மாண்டமான கோலியாத்தை சிறுவன் டேவிட் வீழ்த்திய கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமகால இந்தியாவில் மிருகபலத்துடன் அதிகாரத்திலிருக்கும் ரத்தவெறி பிடித்த கோலியாத்து ஒருவனின் முகத்தில் டேவிட் ஒருவர் காறித்துப்பிய சம்பவம் கடந்த வாரங்களில் அரங்கேறியுள்ளது. குஜராத் முதல்வர் நரவேட்டை புகழ் மோடி முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த இனவழிப்புக் கலவரத்தின் சூத்திரதாரி நரேந்திர மோடி தான் என்றும், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக ‘இந்துக்கள்’ தொடுக்கப் போகும் தாக்குதல்களைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று மோடியே குறிப்பிட்டார் என்றும் சஞ்சீவ் பட் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி 2010-ம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் குஜராத் கலவரத்தை விசாரித்து வரும் சிறப்புப் புலணாய்வுத் துறையின் முன் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வாக்குமூலங்களின் விவரங்கள் கடந்த மார்ச் மாதம் தெகல்கா பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

மோடி சமீப காலங்களாக அகில இந்திய ரேஞ்சுக்கு கனவு கண்டு வருகிறார். இதற்காகவே ஊடகங்கள் மூலம் ஊதிப் பெருக்கி பலவண்ணங்களில் இமேஜ் பலூன்களைப் பறக்க விட்டுள்ளார். இந்நிலையில், சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் அந்த பலூன்களில் ஊசியால் பொத்தலிட்டு விட்டது. சண்டையை மறப்போம், வளர்ச்சியைப் பற்றியும் அதற்குத் தேவையான ‘அமைதியைப்’ பற்றியும் மட்டுமே இனி பேசுவோம் என்று மிகச் சுலபமாக ஆயிரக்கணக்கான முசுலீம் பிணங்களைத் தாண்டிச் சென்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த மோடிக்கு சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் ஆப்பறைந்தது. அமுக்கி விடலாம் என்று கணக்குப் போட்ட ரத்த வேட்டையை மீண்டும் விவாதத்திற்கு இழுத்து வந்தார் சஞ்சீவ் பட் – 2002-ல் செத்துப் போன பிணங்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.

இந்தப் பின்னணியில், தனக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ் பட்டை ஒழித்துக் கட்ட, அவர் மேலிருந்த பழைய வழக்குகளை தூசி தட்டி எடுக்கிறார் மோடி. கே.டி பன்ந்த் என்கிற போலீசு கான்ஸ்டபிள், முன்பு குஜராத் கலவரம் தொடர்பாக சஞ்சீவ் பட் விசாரணைக் குழுவின் முன் சமர்பித்த அறிக்கை தவறானதென்றும், தன்னை மேற்படி அறிக்கையில் சாட்சிக் கையெழுத்திட நிர்பந்தித்ததோடு முறைகேடாகத் தடுத்து வைத்தார் என்றும் சஞ்சீவ் பட் மேல் குற்றம் சுமத்துகிறார். முன்னுக்குப்பின் முரணாகவும் நாடகத்தனமாகவும் அமைந்த கே.டி பன்ந்தின் புகாரைக் கையிலெடுக்கும் காவல்துறை, போர்ஜரி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சஞ்சீவ் பட் மேல் முதல் தகவலறிக்கையைப் பதிகிறது.

இதனடிப்படையில் கடந்த மாதம் 30-ம் தேதி சஞ்சீவ் பட் கைது செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டை சோதனை என்கிற பெயரில் சலித்தெடுக்கும் போலீசு, குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் தேடியுள்ளனர். எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட்டை மிரட்டி பீதியூட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சஞ்சீவ் பட்டை போலீசு காவலில் எடுத்து ‘விசாரிக்க’ போலீசு முயன்று வருகிற நிலையில், சஞ்சீவ் பட் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சஞ்சீவ் கைது செய்யப்பட்டிருக்கும் சட்டப்பிரிவுகள் எளிதில் பிணை கிடைக்கக் கூடிய பிரிவுகள் தான் என்றாலும், அவரை போலீசு காவலில் எடுத்து சித்திரவதை செய்து பணிய வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், பிரபலமான வழக்கறிஞர்களை இறக்கியுள்ள குஜராத் அரசு, பிணை வழங்குவதை எதிர்த்து வாதாடி வருகிறது.

இதற்கிடையே நீதி மன்றத்துக்கு வெளியே மனித உரிமை அமைப்புகள் சஞ்சீவின் விவகாரத்தைக் கையிலெடுத்து போராடிக் கொண்டிருக்கின்றன. அறிவுத்துறையைச் சேர்ந்த பலரும் மோடியின் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்டித்து வருகிறார்கள். உடனடியாக சஞ்சீவ் பட்டை போலீசு கையில் ஒப்படைத்தால் ஓரளவு கிழிசல்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் யோக்கியவான் முகத்திரையும் ஒட்டுமொத்தமாக அவிழ்ந்து விடும் என்று தயங்கும் நீதி மன்றம், பிணை வழங்குவது அல்லது போலீசு காவலுக்கு அனுப்பது தொடர்பான தனது முடிவை தொடர்ந்து ஒத்தி வைத்து வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சீவிடம், மூன்று மணிநேரங்களாவது போலீசு காவலுக்கும் ‘விசாரணைகளுக்கும்’ சம்மதித்தால், இன்றே பிணை வழங்குவதாக செஷன்ஸ் நீதிபதி ஜி.என் பட்டேல் பேரம் பேசியுள்ளார். அதே இடத்தில் நீதிபதிக்குப் பதிலளித்த சஞ்சீவ், “பொறுக்கிகளோடும் கிரிமினல்களோடும் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது அறம் சார்ந்த போராட்டம். எனது ஜாமீன் கோரிக்கை மனுவின் மேல் நியாயமாக நீங்கள் அளிக்கும் சட்டப்பூர்வமான உத்தரவு என்னவோ அதற்குக் கட்டுப்படுகிறேன். ஏழு நாட்களல்ல பதினான்கு நாட்கள் கூட போலீசு காவலில் இருக்க எனக்குச் சம்மதமே.” என்று முழங்கியுள்ளார். நீதிபதி தனது முகத்தில் விழுந்த எச்சிலை துடைத்தாரா என்பது தெரியவில்லை.

தங்கள் நோக்கத்திற்காக கொலை செய்யவும் தயங்காதவர்கள் என்பதை இந்துத்துவ பயங்கரவாதிகள், வரலாற்றில் எண்ணற்ற முறை பதிவு செய்தவர்கள் தான். தன்னோடு முரண்படுவது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏன் அது ஒரு முன்னாள் அமைச்சராகவே இருந்தாலும் கொல்லத் துணியாதவர் மோடி என்பதை ஹிரேன் பாண்டியாவின் கொலைச் சம்பவத்தில் நாடே பார்த்தது. இப்போது சஞ்சீவ் பட்டை போலீசு காவலில் எடுக்கத் துடிப்பதும் கூட அவரை சித்திரவதைகளுக்குள்ளாக்கி மௌனமாக்கத் தான் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். இதையும் கடந்து சஞ்சீவின் மேல் பாய்ந்து குதறத்துடிக்கும் மோடிக்கு அதற்கான வேறு காரணங்களும் இருக்கின்றன.

தற்போது சஞ்சீவின் பிணை மனுவை எதிர்த்து அரசின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள கே.வி ராஜு என்கிற அதே வக்கீல் தான் ஹிரேன் பாண்டியா கொலை வழக்கில் அவரது மனைவி ஜாக்ருதி பாண்டியா சார்பிலும் ஆஜராகிறார். ஏற்கனவே சஞ்சீவ் அளித்துள்ள வாக்குமூலத்தில், 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் ஹிரேன் பாண்டியாவும் பங்கேற்றார் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டிருந்த விவரங்களையே, 2002-ம் ஆண்டு மே 13ம் தேதி கலவரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஹிரேன் பாண்டியாவும் வாக்குமூலமாக அளித்திருந்தார். அதில் இந்துக்களின் தாக்குதலை போலீசு கண்டு கொள்ளக் கூடாது என்று அதிகாரிகளிடம் மோடி வாய்மொழி உத்தரவிட்டதைக் குறிப்பிட்டிருந்தார். இந்த உண்மையை வெளியிட்ட சில நாட்களிலேயே ஹிரேன் பாண்டியா இந்துத்துவ குண்டர்களால் கொல்லப்பட்டார்.

தற்போது, சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தையே சர்ச்சைக்குள்ளாக்கும் விதமாக பொய்க்கேசு போட்டிருக்கும் மோடி, இதற்காக ராஜுவைக் களமிறக்கியிருப்பதன் மூலம் ஹிரேன் பாண்டியா வழக்கை சிதைத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறார்.

அரசியல் அதிகாரம், பார்ப்பனியமயமாக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் பக்கபலம் என்று சகல விதத்திலும் ஆயுதபாணியாக நிற்கும் ஒரு ரத்தவெறி கொண்ட மிருகத்தின் முன் சஞ்சீவ் பட் ஏந்தியிருப்பது உண்மை என்கிற ஆயுதம் மட்டுமே. ஆயிரக்கணக்கான மக்களை தெருநாய்களைக் கொல்வது போல் கொன்று குவித்து விட்டு, அந்தப் பிணங்களின் மேல் வெற்றி ஊர்வலம் நடத்தத் துடிக்கும் மோடியை தனியாளாக எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட் அதிகார வர்க்கம் கண்டிராத அபூர்வமான மனிதர். அவரது போராட்டத்தை ஆதரிப்பு நமது கடமை..

தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?

ஒரு நாளைக்குத் தேவையான உணவு, மருத்துவம், கல்விச் செலவுகளைச் சமாளிக்க, நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.32/ ஆகவும், கிராமப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.25/ ஆகவும் இருந்தால் போதும் எனத் திட்ட கமிசன் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது.  திட்ட கமிசனின் இந்தத் தெளிவான வரையறைக்கும் அன்றாட நடப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்தத் தெளிவான வரையறை மீது நாலாபக்கங்களிலிருந்தும் கிண்டலும் கண்டனங்களும் பாயவே, “நாங்கள் ஒரு தனி நபரின் வருமானம் என்றுதான் வரையறுத்துக் கொடுத்திருக்கிறோம்; ஆனால், பொதுமக்கள் இதனைக் குடும்பத்தின் வருமானம் எனத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.  மேலும், இது வறுமைக் கோட்டைத் தீர்மானிப்பதற்கான வரையறை தானே தவிர, இதனை அளவுகோலாகக் கொண்டு ஏழைகள் பெறும் உரிமைகள் எதையும் மறுக்கப் போவதில்லை” என தன்னிலை விளக்கத்தை  அளித்திருக்கிறது, திட்ட கமிசன்.

இந்த விளக்கம், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலுவது போன்ற பச்சையான மோசடித்தனமாகும். ஏனென்றால், “மே 2011 அன்று சந்தையில் நிலவும் விலைவாசியின் அடிப்படையில், மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறத் தகுதியுடையவர்கள் குறித்துத் தெளிவான வரையறையை வகுத்துத் தருமாறு” உச்ச நீதிமன்றம் கேட்டதற்குதான் இந்தப் பதிலை மனுவாகத் தாக்கல் செய்திருக்கிறது, திட்ட கமிசன்.  இதன் பொருள், ஒரு நாளைக்கு இதற்கு மேல் கூலி வாங்கும் யாரையும் ஏழையாகக் கருத முடியாது; அவர்களுக்கு மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் உணவுப் பொருட்களை வழங்க முடியாது என்பதுதான்.

திட்ட கமிசன் தற்பொழுது உச்ச நீதிமன்றத்திடம் அளித்துள்ள இந்த வரையறையைக் கைவிட்டுவிட்டால்கூட, இதற்குப் பதிலாக இன்னொரு வரையறையை முன்வைத்து ஏழைகளைக் காவுகொள்ளத் தயங்கப் போவதில்லை.  குறிப்பாக, ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வெட்டுவதற்கு, இந்திய மக்களின் சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது, திட்ட கமிசன்.

வறுமைக் கோட்டைத் தீர்மானிக்கும் வருமான அளவுகோலை அரசு மிகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதுதான் பிரச்சினை என்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் இதனைச் சுருக்கி விடுகின்றன.  ஆனால், பிரச்சினை என்பது வருமான அளவுகோலைத் தீர்மானிப்பதல்ல.  ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு விதமான மானியங்களைக் கூடுமான வரை வெட்டிச் சுருக்கிவிட வேண்டும் என்ற அரசின் தீய நோக்கம்தான் இதில் மையமானது.  குறிப்பாக, திட்ட கமிசன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளைக் கணிசமாகக் குறைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகிறது.  இதற்காகவே, உணவுப் பாதுகாப்புச் சட்டம், சமூகப் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு, தேசிய அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பல தந்திரமான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது.  வருமான அளவுகோலை உயர்த்தி வைத்தால்கூட, இனி அடித்தட்டு மக்களுக்கு அரசின் நல உதவிகள் அனைத்தும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!

வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்.  அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள்.  ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் போலீசு ரௌடிகள் நாசப்படுத்தினர். இக்கோரச் சம்பவம் பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.

வாச்சாத்தி வன்கொடுமையை அறிந்த பழங்குடி மக்கள் சங்கமும் அதன் அரசியல் தலைமையான சி.பி.எம். கட்சியும் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிமன்றத்திடம் மன்றாடிய பிறகு, பழங்குடி ஆணைய விசாரணைக்கும் அதன் அறிக்கை அடிப்படையில் நட்டஈட்டுக்கும், சி.பி.ஐ. விசாரணைக்கும் வழிபிறந்தது. சி.பி.ஐ. விசாரணைக்குப் பிறகு 269 சீருடைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, முதலில் கோவை, கிருட்டிணகிரி, பிறகு தருமபுரி அமர்வு நீதிமன்றங்களில் வழக்கு நொண்டியடித்தது. ஜெயலலிதா ஆட்சியின் முட்டுக்கட்டை, கருணாநிதி ஆட்சியின் அக்கறையின்மை காரணமாக 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, கடைசியாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் தீர்ப்பு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்து போக, மீதி 85 போலீசார், 125 வனத்துறையினர் 6 வருவாய்த்துறையினர் என 215 பேரும் குற்றவாளிகள் என்றும், பல்வேறு குற்றவியல் பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர்களுள் பாலியல் குற்றவாளிகள் 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் உடனே பிணையில் விடப்பட்டனர். வழக்கு மேல்முறையீட்டுக்குப் போகிறது.

வாச்சாத்தி கிராம மக்களும், குறிப்பாக பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களும், வெளியிலுள்ள அரசியலற்ற படித்த பாமரர்களும் இத்தீர்ப்பை வரவேற்று மனநிறைவு தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால், வாச்சாத்தி வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.  வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் தண்டனைகளும் மீண்டும் வச்சாத்திகள் நடக்காமல் தடுக்கக் கூடியவை அல்லவென்று அறிந்தும் சி.பி.எம். கட்சி மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவிப்பதோடு, நட்டஈடு தொகையைக் கூட்டி கேட்பதோடு அடங்கிக் கொள்வது நியாயமான அரசியலா?

“வாச்சாத்தியில் வன்கொடுமை எதுவும் நடக்கவே இல்லை. நட்டஈடு தொகைக்கு ஆசைப்பட்டு, போலீசார் மீது பாலியல் வன்முறை புகார்களைப் பெண்கள் கூறுகின்றனர்” என்று சொல்லி போலீசு கிரிமினல் குற்றவாளிகளை அன்று பாதுகாத்த ஜெயலலிதா இப்போதும் முதலமைச்சர். வாச்சாத்தி, சின்னாம்பதி போன்ற பல பாசிச அரச பயங்கரவாதக் குற்றங்களைத் தானே அரங்கேற்றிய ஜெயலலிதா, நரேந்திர மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சகபாடிகளாகக் கொண்டிருப்பவர்;  இந்த அரசியல் பாசிசப் பண்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்று அறிந்தும், மாறி மாறி அவருடன்  அணிசேருகின்றனர் போலி கம்யூனிஸ்டுகள்.

வாச்சாத்தி மக்கள் மீது தாக்குதல் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் தண்டனை ஏதுமின்றித் தப்பித்துக் கொண்டார்கள். வாச்சாத்தி குற்றவாளிகள் 19 ஆண்டு காலம் சுதந்திரமாக இருந்ததோடு, மேலும் மேல்முறையீடு என்று தண்டனையின்றித் தப்பித்து வாழ்வார்கள். குற்றமிழைத்துவிட்டு இயல்பாக செத்துப் போனார்கள் 54 பேர். இதையும், குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனையை அனுபவிக்காமல் 15 ஆண்டுகளாகியும் இழுத்தடிக்கப்படும் சொத்துக் குவிப்பு வழக்கால் பாதிக்கப்படாமல் ஜெயலலிதா பதவி சுகத்தை அனுபவிப்பதையும் ஒப்பிடாமல் இருக்க முடியாது. ஜவ்வாது ஏலகிரி மலைப்பகுதியிலும், மாதேசுவர மலையிலும் அரச பயங்கரவாத வெறியாட்டம் போட்ட தேவாரம், விஜயகுமார் போன்ற அதிகாரிகள் விருதுகளும், வெகுமதிகளும் பெற்றதையும் எண்ணிப் பாராமல் இருக்க முடியாது.

போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011 (தலையங்கம்)

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 

ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

வன உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது, மன்மோகன் சிங்  சோனியா காந்தி கும்பல்.  சோனியா காந்தியின் தலைமையில் செயல்பட்டு வரும் தேசிய ஆலோசனை கவுன்சில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாதங்களை நடத்தி, உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தயாரித்து, அரசிடம் அளித்தது; அதனை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, ஆய்வு செய்து, சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, கழிக்க வேண்டியதைக் கழித்துத் தள்ளிவிட்டு, மைய அரசிடம் அளித்தது.  அதனை மைய அமைச்சரவை ஆய்வு செய்து தனது ஒப்புதலை அளித்து, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் அரிசியைப் பட்டினி கிடந்து வரும் ஏழை மக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ விநியோகம் செய்யுங்கள் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டபொழுது அதனை மறுத்து, “அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என முகத்தில் அடித்தாற் போலப் பதில் சொன்னவர், மன்மோகன் சிங்.  உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு திரியும் கொள்கைக் குன்று அவர்.  அப்படிபட்டவரின் ஆட்சி உணவுப் பாதுகாப்பிற்கெனத் தனியொரு சட்டத்தைக் கொண்டு வரப் போகிறதென்றால், நம்மைக் கொஞ்சம் கிள்ளித்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடாதே!

நமது நாட்டில் தனியார்மயம்  தாராளமயத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, பல்வேறு குற்றங்குறைகளோடு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் (Universal Public Distribution System) நடைமுறையில் இருந்து வந்தது.  அதன் பின்னர், இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டத்தை(Targeted Public Distribution System) 1990களின் இறுதியில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது, மைய அரசு.  இதற்கேற்ப, குடும்ப அட்டைகள் வழங்குவதில் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர் என்ற பிரிவினை கொண்டுவரப்பட்டு, பல வண்ண அட்டைகள் வழங்கப்பட்டன.  இன்று, தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து, பெரும்பாலான மாநிலங்களில் இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம்தான் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்திய உணவுக் கழகத்தின் திறந்தவெளிக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் உணவு தானியம்
இந்திய உணவுக் கழகத்தின் திறந்தவெளிக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் உணவு தானியம்

உணவு மானியத்தை வெட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரிவினையை, உணவுப் பொருட்கள் ஏழைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டதாக ஆளுங் கும்பல் பூசி மெழுகியது.  ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதைக் குறிக்கும் குடும்ப அட்டைகள் பெரும்பாலான ஏழைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதையும் இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பட்டினியால் வாடும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சமீபத்தில் வெளியாகியுள்ள அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்கூட ஒப்புக் கொண்டுள்ளன.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, “உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள 88 நாடுகளில் இந்தியா 66  ஆவது இடத்தில் இருக்கிறது.”  உலகெங்கிலும் சத்தான உணவின்றி அரைகுறைப் பட்டினி நிலையில் வாழும் மக்களில் ஏறத்தாழ 27 சதவீதத்தினர் (23 கோடி பேர்) இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்; இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 75,000 குழந்தைகள் சத்தான உணவின்றி இறந்து போகின்றன; உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 15 இலட்சம் குழந்தைகள் அரைகுறைப் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுகின்றன என இந்தியாவின் பட்டினிப் பட்டாளத்தைப் பற்றிப் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.

இப்படிபட்ட நிலையில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து, உணவுப் பொருட்கள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும்படியும்; பொது விநியோகத் திட்டத்தில் நடக்கும் ஊழலைத் தடுத்து நிறுத்தும்படி, அதில் மாற்றங்களைக் கொண்டு வருவதுதான் நியாயமான திட்டமாக இருக்க முடியும்.  ஆனால், மைய அமைச்சரவையால் ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவோ, ஏழைகளுக்கு ஏற்கெனவே கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் பறித்துவிடும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நாடெங்கும் 11 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதைக் குறிக்கும் குடும்ப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்த அட்டைகள் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளையும், மோசடிகளையும் தடுக்க முன்வராத தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா, இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்துவிடும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.  இம்மசோதாவின்படி, கிராமப்புறங்களில் வாழும் மக்களில் 90 சதவீதப் பேருக்கும், நகர்ப்புறங்களில் வசித்துவரும் 50 சதவீதப் பேருக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுமென்றும்,  அதே சமயம், இவர்கள் அனைவருக்கும்கூடக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்க முடியாது என மசோதா தெளிவாக வரையறுத்திருக்கிறது.

அதாவது, கிராமப்புறங்களில் உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் 90 சதவீதப் பேரில், 44 சதவீதப் பேர் முன்னுரிமை தரத்தக்கவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.  மீதி 46 சதவீதப் பேர் பொதுவானவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையைவிடக் கூடுதலான விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.  நகர்ப்புறங்களில் இத்திட்டத்தின் கீழ் வரும் 50 சதவீதப் பேரில், 28 சதவீதப் பேர் முன்னுரிமை தரத்தக்கவர்களாகவும், 22 சதவீதப் பேர் பொதுவானவர்களாகவும் வகைப்படுத்தப்படுவார்கள்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே எனக் குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டிருப்பதற்கு, முன்னுரிமை தரத்தக்கவர்கள், பொதுவானவர்கள் எனப் புதிய நாமகரணம் சூட்டுகிறது, இம்மசோதா.  மேலும், பொது விநியோக முறையிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்கள் என்ற புதிய பிரிவையும்  இப்படி விலக்கி வைக்கப்படுபவர்கள் கிராமப்புறங்களில் 10 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 50 சதவீதமாகவும் இருப்பர்  உருவாக்கியிருக்கிறது. இப்படி விலக்கி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிகிறது, இம்மசோதா.

இந்தியாவிலேயே நகரமயமாக்கத்தில் முன்னணியாகத் திகழுகிறது, தமிழகம்.  தமிழக மக்கட் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வசித்து வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இவர்களுள் வெறும் 28 சதவீதப் பேருக்குதான் ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி கிடைக்கும் என்றால், இம்மசோதா ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கப் போவதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் பம்மாத்துதான்.

வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கு நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு நபரின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.20/க்குள்ளும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவரின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.15/க்குள்ளும் இருக்க வேண்டும் எனத் திட்ட கமிசன் முதலில் வரையறுத்தது.  எனினும், இந்த அளவுகோலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், தற்பொழுது திட்ட கமிசன் வறுமைக் கோட்டைக் கணக்கிடுவதற்கான வருமான அளவுகோலை ரூ.25/ என உயர்த்தியிருக்கிறது.

இந்த அளவுகோலின்படி பிச்சையெடுப்போர் கூட ஏழை என்ற ‘தகுதி’யைப் பெறமுடியாது.  இரண்டு கிளாஸ் டீ, பொரை, ஒரு கட்டு பீடி வாங்குவதற்குக்கூட இந்த ‘வருமானம்’ தாங்காது எனும்பொழுது, திட்ட கமிசன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மூன்று வேளை சாப்பாடு, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இந்த வருமானம் போதுமானது என உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.  அவரின் வாதப்படி ஒருவன் வயிறார உண்டு வாழ்வதற்கு 25 ரூபாய் போதுமென்றால், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பல பத்தாயிரம் ரூபாய் சம்பளமும், படிகளும் ஏன் அள்ளிக் கொடுக்க வேண்டும்?

கிராமப்புற விவசாயிகள் உணவு உரிமை கேட்டு கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்
கிராமப்புற விவசாயிகள் உணவு உரிமை கேட்டு கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

தற்பொழுது ஏறத்தாழ 11 கோடி குடும்ப அட்டைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இதனை 6 கோடியாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டம் போட்டுள்ள மன்மோகன் சிங் கும்பல், அதற்குத் தகுந்தபடி வருமான அளவுகோலை நிர்ணயம் செய்ய முயலுகிறது.  சுருக்கமாகச் சொன்னால், செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டியிருக்கிறார்கள்.

தற்பொழுது தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.  சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது.  உணவு பாதுகாப்பு மசோதாவோ, “முன்னுரிமை குடும்ப அட்டை பெற்றவர்களுக்குக்கூட ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் விலையில்தான் வழங்கப்படும்; ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகள் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும்” என்று கூறுகிறது.  இதுவொருபுறமிருக்க, முன்னுரிமை குடும்ப அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை அவ்வப்பொழுது வறுமைக் கோடு பற்றி எடுக்கப்படும் கணக்கீட்டின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும் என்றும் இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், ஏழைகளுள் ஒருபகுதியினருக்குக்கூட உணவுப் பாதுகாப்பு கிடைக்கும் என்றோ, அவர்களுக்கு மலிவான விலையில் அரிசியும் கோதுமையும் கிடைக்கும் என்றோ எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.  இந்த மசோதா தற்பொழுது ஏழைகளுக்குக் கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பை மட்டுமல்ல, பொது விநியோகத் திட்டத்தையும், பொதுக் கொள்முதலையும் ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடுதான் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி “இந்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்” குறித்துத் தயாரித்துள்ள அறிக்கையில்,  “பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக இந்திய அரசும் பொருளாதார நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர்.  இதனைக் களையெடுக்கக் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்குப் பதிலாக, பணத்தைக் கொடுத்து வெளிச் சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.  இந்த மாற்றத்தை ஏற்கெனவே ஓரளவு உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியுள்ள மாநிலங்களில் அல்லது மாவட்டங்களில் கொண்டு வர வேண்டும்.  இதற்கு ஏற்ப உணவுக் கொள்முதலில் தனியாரையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கியின் இந்த ஆலோசனையில் முதல் வரியல்ல, கடைசி வரிதான் நம் கவனத்துக்குரியது. ரேசன் கடை ஊழல் என்று பேசத் தொடங்கி, உணவுக் கொள்முதலில் தனியாரை நுழைப்பது என்று முடிகிறது உலகவங்கி அறிக்கை. உலக வங்கி கூறுவதற்கு முன்னாலேயே கொள்முதலில் ஏற்கெனவே தனியார் மண்டிகள் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உலக வங்கி கூறும் தனியார் என்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள். ரேசன் கடைகளும், அரசாங்கத்தின் தானியக் கொள்முதலும் அவர்களுடைய ‘சுதந்திரமான’ வர்த்தகத்துக்கும், கொள்ளை இலாபத்துக்கும் தடையாக இருக்கும் என்பதனால்தான், ரேசன் கடைகளை ஒழித்துவிட்டு பணத்தைக் கொடுக்கச் சொல்கிறது உலகவங்கி.

இதைத்தான் உணவுப் பாதுகாப்பு மசோதாவின் வழியாக சட்டமாக்கிவிட முயலுகிறது, மைய அரசு.  இம்மசோதாவின் 13 ஆவது அத்தியாயம், “முன்னுரிமைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக பணப் பட்டுவாடாவிற்கு மாறுவது” பற்றிப் பேசுகிறது.    இம்மாற்றம் பையப்பைய அமல்படுத்தப்படும்பொழுது, அரசிற்கு ரேஷன் கடைகளை நடத்த வேண்டிய அவசியமோ, அரிசி, கோதுமையைக் கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டிய தேவையோ இல்லாமல் போய்விடும்.

மளிகைப் பொருட்கள் சில்லறை விற்பனையில் ஏற்கெனவே இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துவிட்ட நிலையில், இப்பொழுது அத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதிக்க முடிவெடுத்திருக்கிறது, மைய அரசு.  இன்னொருபுறம், குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக பணத்தைக் கொடுத்து, அவர்களைச் சந்தையின் சூதாட்டத்தில் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இம்மாற்றம் குறித்து டெல்லியில் ஒரு மோசடியான கருத்துக் கணிப்பையும் நடத்தி முடித்திருக்கிறது, மைய அரசு.  அக்கம்பக்கமாக நடந்துவரும் இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள், அரசின் உண்மையான நோக்கம் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு கொடுப்பதல்ல, மாறாக, வர்த்தகச் சூதாடிகளின் இலாபத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுதான் என்பது தெளிவாகிவிடும்.  ரேஷன் கடைகளில் நடைபெறும் ஊழலைவிட, பணப்பட்டுவாடாவிற்கு மாறுவதுதான் மிகப் பெரிய ஊழல், பகற்கொள்ளையாக இருக்கும்.

தேசிய ஆலோசனைக் கவுன்சில் தயாரித்து முன்வைத்த வரைவு மசோதாவை ஆய்வு செய்த ரங்கராஜன் கமிட்டி, இம்மசோதா சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றுதான் கவலைப்பட்டிருக்கிறது.  மைய அமைச்சரவையோ அரிசி, கோதுமையைத் தவிர்த்து, வேறெந்த உணவுப் பொருளையும் இம்மசோதாவோடு இணைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்திருக்கிறது.

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் தற்பொழுது 6.5 கோடி டன்னுக்கும் மேல் அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கும் நிலையிலும், அச்சேமிப்பை விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்க மறுத்து வருகிறது, மைய அரசு. அவ்வாறு செய்தால், தானிய விற்பனையில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபம் படுத்துவிடும். ஏழைகளின் வயிற்றைக் காட்டிலும் முதலாளிகளின் பணப்பெட்டியைப் பற்றி பெரிதும் கவலைப்படும் பொருளாதார வல்லுநரல்லவா மன்மோகன் சிங்!

சத்தான உணவு கிடைக்காமலும் அரைகுறைப் பட்டினியாலும் நோஞ்சானாகி, நோயில் வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை: 'வல்லரசு' இந்தியாவின் மறுபக்கம்
சத்தான உணவு கிடைக்காமலும் அரைகுறைப் பட்டினியாலும் நோஞ்சானாகி, நோயில் வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை: 'வல்லரசு' இந்தியாவின் மறுபக்கம்

பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் தேவையான உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் 2001  இல் ஒரு வழக்கு தொடரப்பட்டது. “வறுமைக் கோட்டைத் தீர்மானிக்கும் அளவுகோல் எது?” என்பது பற்றி அரசாங்கத்தால் ஒரு முடிவுக்கு வர முடியாததால் அவ்வழக்கு முடியவில்லை.

என்ன செய்வது? தனியார்மய  தாராளமயக் கொள்கைகள் விலைவாசி உயர்வைத் தீவிரப்படுத்துகின்றன. விவசாயத்தை அழித்து விவசாயிகளின் நிலவெளியேற்றத்தை தீவிரப்படுத்துகின்றன. தாராளமயக் கொள்கைகள் சிறு தொழில்களை அழிக்கின்றன. வறுமைக்கு ஒரு அளவுகோலை நிர்ணயிக்கலாமென்றால், அதற்குச் சற்றும் அவகாசம் தராமல் ஒவ்வொரு கணமும் விலைவாசி மேலே செல்கிறது. வாழ்க்கைத் தரம் கீழே செல்கிறது. வழக்கும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

எனவேதான் கைக்குப் பிடிபடாத வறுமையை ஒழிப்பதற்குப் பதிலாக, முதலில் பட்டினியை ஒழித்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. அந்த முயற்சியின் முதல் கட்டம்தான் ரேசன் கடை ஒழிப்பு. அடுத்த கட்டம் உணவுப் பாதுகாப்பு  அதாவது கார்ப்பரேட் முதலாளிகளின் உணவு தானிய வணிகத்தைப் பாதுகாப்பது! இந்த அயோக்கியத்தனத்தைத் தேசிய அளவில் செய்யத்திட்டமிட்டிருப்பதால் இதற்கு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

நோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்!

பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி
பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி

அலைக்கற்றை ஊழல் வழக்கில் இரண்டு கைகளிலும் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கும்  மாட்சிமை தாங்கிய உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் சாணியை வழித்து அடித்தது போன்றதொரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் தொடுத்திருக்கும் அறிவுச் சொத்துடைமை தொடர்பான வழக்கினை விசாரிக்கும் நீதிபதி தல்வீர் பண்டாரி, மேற்படி பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பதன் காரணமாக இவ்வழக்கை அவர் விசாரிக்க கூடாது என்று அறிவுத்துறையினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆட்சேபம் எழுப்பினர். இதன் விளைவாக இவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி பண்டாரி விலகிக் கொண்டார்.

இது தனிப்பட்ட நீதிபதி ஒருவரின் நடத்தை நெறிமுறை சம்மந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்களின் உயிரை விலை கேட்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரமுமாகும். புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அதற்கேற்ப தீர்ப்பை வாங்க முயற்சிக்கின்றன. அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.

நோவார்ட்டிஸ் என்ற சுவிஸ் பன்னாட்டு நிறுவனம், இமாடினிப் மெசிலேட் என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்தை (வணிகப்பெயர் கிளிவெக்  Glivec) உற்பத்தி செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உரியதென்றும், தன்னுடைய காப்புரிமையை மீறி இந்திய மருந்து நிறுவனங்கள் இம்மருந்தை உற்பத்தி செய்து வருவதைத் தடை செய்ய வேண்டுமென்றும், இதற்கேற்ப இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக இந்திய அரசை நிர்ப்பந்தித்து வருகிறது.

இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவுக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் செய்த மேல்முறையீட்டை இந்திய அரசின் ‘அறிவுசார் சொத்துடைமைக்கான மேல்முறையீட்டு வாரியம்’ நிராகரித்து விட்டது. இது தொடர்பாக நோவார்ட்டிஸ் தொடுத்த வழக்கையும் 2007ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.

மேற்கூறிய வழக்கில் நோவார்ட்டிஸின் மேல்முறையீடு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான தல்வீர் பண்டாரி என்பவர், அறிவுசார் சொத்துடைமை மற்றும் காப்புரிமைச் சட்டம் தொடர்பாக, அமெரிக்க அறிவுச் சொத்துடைமையாளர்கள் சங்கம் (அதாவது பன்னாட்டு கம்பெனிகள்) நடத்திய நீதிபதிகளுக்கான சர்வதேசக் கருத்தரங்கில் இரண்டு முறை (2009, 2011) கலந்து கொண்டிருக்கிறார். 2007இல் அறிவுசார் சொத்துடைமை தொடர்பாக இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் (சி.ஐ.ஐ.), அமெரிக்க  இந்திய வர்த்தகக் கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் சட்டப் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டத்திலும் முதன்மை உரை ஆற்றியிருக்கிறார்.

“அறிவுச் சொத்துடைமையைத் தேச எல்லை கடந்து அமலாக்குவதில் இந்திய நீதித்துறை மற்றும் இந்திய வழக்குகளின் அனுபவமும், அறிவுச்சொத்துடைமையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும்” என்பது, 2009ஆம் ஆண்டு கருத்தரங்கில் நீதிபதி பண்டாரி ஆற்றிய உரையின் தலைப்பு. “மருந்துகள் தொடர்பான காப்புரிமை… குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு இருக்கிறது; எல்லா நாடுகளும் (அறிவுச் சொத்துடைமையைப் பாதுகாப்பதற்கு ஏற்ற) பொருத்தமான காப்புரிமைச் சட்டங்களை இயற்ற வைப்பதற்கும் அவர்கள்தான் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்’’  இது அந்த உரையில் அவர் தெரிவித்திருந்த கருத்து.

டெல்லி அறிவியல் கழகம் என்ற அமைப்பும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல அறிவுத்துறையினரும், நீதிபதி தல்வீர் பண்டாரி குறித்து மத்திய சட்ட அமைச்சருக்கும் ஒரு பகிரங்க கடிதம் எழுதினர். இதன் பிறகுதான் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் பண்டாரி. ‘வழக்கிலிருந்து நீதிபதி விலகல்’ என்று ஒரு துணுக்கு போல வெளியான இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கும் இவ்வழக்கின் ‘மதிப்பு’ என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

_______________________________

நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.
நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.

லுகேமியா என்று அழைக்கப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளை மேலும் சில ஆண்டுகள் உயிர் வாழ வைக்கும் மருந்து  இமாடினிப் மெசிலேட். இமாடினிப் மெசிலேட்  என்ற இந்த அடிப்படை மருந்தின் (generic drug) மூலக்கூறில் சிறியதொரு மாற்றம் செய்து, ‘கிலிவெக்’ என்று வணிகப்பெயர் (brand name) வைத்து, 40 நாடுகளில் இதற்குக் காப்புரிமையும் பெற்று வைத்திருக்கிறது நோவார்ட்டிஸ் நிறுவனம். ரத்தப் புற்றுநோயாளிகள் நாளொன்றுக்கு 4 மாத்திரைகள் வீதம் ஆயுள் முழுவதும் இம்மாத்திரையை சாப்பிட வேண்டும். கிலிவெக் மாத்திரை ஒன்றின் விலை 1000 ரூபாய். அதாவது ஒரு நாள் உயிர் வாழ்வதற்கு 4,000 ரூபாய். மாதத்துக்கு ஒன்றேகால் இலட்சம் ரூபாய்.

இம்மருந்தின் வேதியல் மூலக்கூறுக்கு (molecule) இந்தியாவில் யாருக்கும் காப்புரிமை வழங்கப்படவில்லை. எனவே இந்த அடிப்படை மருந்தை (generic drug) ரான்பாக்ஸி, சிப்லா, நாட்கோ, ஹெடெரோ என்பன போன்ற பல இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கின்றன. இந்திய கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரை ஒன்றின் விலை 90 ரூபாய். அதாவது நாளொன்றுக்கு 360 ரூபாய்.

இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் 24,000 பேர். இவர்களில் 18,000 பேர் நாளொன்றுக்கு 360 ரூபாய் கொடுத்து மருந்து வாங்க முடியாதவர்களாகையால், மருத்துவமே பார்க்காமல் இவர்கள் இறந்து விடுகின்றனர். மீதமுள்ள 6000 பேர் இந்திய மருந்துகளால்தான் உயிர் பிழைத்திருக்கின்றனர். உலகெங்கிலும் ஏழை நாடுகளில் உள்ள ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  பல இலட்சக்கணக்கான நோயாளிகளும் இந்திய மருந்தை இறக்குமதி செய்து, அதனை உட்கொண்டுதான் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

நோவார்ட்டிஸ் தனது மருந்துக்குக் காப்புரிமை பதிவு செய்துள்ள 40 நாடுகளில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் இந்திய மருந்தை இறக்குமதி செய்து பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறது காப்புரிமை விதி. அதாவது நாளொன்றுக்கு 4000 ரூபாய் செலவிட வசதியில்லாத ரத்தப் புற்றுநோயாளிகள் சத்தம் காட்டாமல் செத்துவிட வேண்டியதுதான். அத்தகையதொரு சூழ்நிலையை இந்தியாவில் இனிமேல்தான் வரவேண்டும் என்பதில்லை. இதனை ஏற்கெனவே நாம் அனுபவித்திருக்கிறோம்.

_______________________

2003ஆம் ஆண்டில், தன்னைத் தவிர வேறு யாரும் ரத்தப்புற்றுநோய்க்கான இம்மருந்தை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற உரிமையை காட்டிரிப்ஸ் (GATT-TRIPS) ஒப்பந்தத்தின் கீழ் நோவார்ட்டிஸ் நிலைநாட்டிக் கொண்டது. இமாநிப், இமாலெக், டெம்சாப், சொலேடா (Imanib, Imalek, Temsab, Zoleta) என்ற பெயர்களில் விற்கப்பட்டு வந்த பிற இந்திய கம்பெனி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது நோவார்ட்டிஸ் நிறுவனம். ஜனவரி 2004இல் நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடியவர், மைய அமைச்சரான ப.சிதம்பரம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடையின் விளைவாக, கிலிவெக் மாத்திரையை 1000 ரூபாய் கொடுத்து வாங்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் செத்து மடிந்தனர். பொதுநலன் கருதி இந்தத் தடையை நீக்குமாறு இந்திய கம்பெனிகளும் புற்று நோயாளிகள் சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். எனினும், நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது.

2005ஆம் ஆண்டில் புதிய காப்புரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (1994இல் உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த இந்தியா, 1970இல் இயற்றப்பட்ட இந்தியக் காப்புரிமைச் சட்டத்தைப் பத்து ஆண்டுகளுக்குள் ரத்து செய்வதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் புதிதாக இயற்றப்பட்ட சட்டம் இது) நோவார்ட்டிஸ் நிறுவனம், கிலிவெக் மருந்தில் சிறிய சில மாற்றங்களைச் செய்துவிட்டு, இப்புதிய சட்டத்தின் கீழ் அதற்கு காப்புரிமை கோரியது. ‘புதியது’ என்று நோவார்ட்டிஸ் கூறும் மருந்தில் புதுமையோ, கண்டுபிடிப்போ (novelty or invention) ஏதுமில்லையென்று கூறி இந்திய காப்புரிமை ஆணையம் காப்புரிமை வழங்க மறுத்துவிட்டது. காப்புரிமை ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நோவார்ட்டிஸ், தான் செய்திருப்பது ‘மேம்படுத்தும் கண்டுபிடிப்பு’ (incremental innovation) என்றும், ஆகவே இதற்கும் காப்புரிமை தரவேண்டும் என்றும் வாதாடியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்

இந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. 1995க்கு முன்னரே புழக்கத்தில் இருக்கின்ற இமாடினிப் மெசிலேட் என்ற காப்புரிமை இல்லாத மருந்தின் இலேசாகத் திருத்தம் செய்யப்பட்ட மறுபதிப்பே இந்த மருந்து என்றும், இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3 d பிரிவு கூறும் கண்டுபிடிப்புத்தன்மை (inventiveness) இதில் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் இம்மருந்துக்கு விலை வைக்கப்பட்டிருப்பதால், இதற்கு வழங்கப்படும் காப்புரிமை என்பது இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமைக்கு (அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு) எதிரானதாக அமையும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. “இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்  3 d பிரிவு, உலக வர்த்தகக் கழகத்தில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது” என்ற நோவார்ட்டிஸின் வாதத்தையும் நிராகரித்த உயர் நீதிமன்றம், சர்வதேச ஒப்பந்தங்கள் பற்றி தான் கருத்து கூற இயலாது என்றும், உலக வர்த்தகக் கழகத்திடமே முறையிடுமாறும் கூறி நோவார்ட்டிஸின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

பிரச்சினையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றால், தன் யோக்கியதை உலக அளவில் அம்பலமாகும் என்பதால் நோவார்ட்டிஸ் இப்பிரச்சினையை உலக வர்த்தகக் கழகத்துக்குக் கொண்டு செல்லவில்லை. ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட கோடிக்கணக்கான டாலர்களைத் திரும்ப எடுக்கத்தான் காப்புரிமை கோருவதாக, நோவார்ட்டிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், உண்மை வேறாக இருக்கிறது.

கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு என்றும் தெரிவித்திருக்கிறார். தனியார்துறைபொதுத்துறை கூட்டு என்று கூறிக்கொண்டு, தன் பங்குக்கு உமியைக் கொண்டு வரும் முதலாளித்துவம், அவலை ஊதித் தின்கிறது என்ற உண்மைதான், நோவார்ட்டிஸ் விசயத்திலும் அம்பலமாகியிருக்கிறது.

1970 இந்திய காப்புரிமை சட்டம், எந்தப் பொருளுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேல் காப்புரிமையை அனுமதிக்கவில்லை. உ.வ.கழகத்தில் இணைந்த இந்தியா, காப்புரிமையின் காலத்தை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. நோவார்ட்டிஸ் காப்புரிமையைக் காலவரையறையற்றதாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறது. அதன்பொருட்டு, மருந்தில் சில சில்லறை முன்னேற்றங்களை செய்து காப்புரிமையை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கு ஏற்ப (evergreening) சட்டத்தைத் திருத்த முனைகிறது.

2007இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, காப்புரிமைச் சட்டங்களைத் திருத்துவதற்காக ஒரு குழுவை மைய அரசு நியமித்தது. மஷேல்கர் குழு என்று அழைக்கப்பட்ட அக்குழு, காப்புரிமை சட்டத்தின் 3 d பிரிவை முடக்கும் வகையிலான சிபாரிசுகளை முன்வைத்தது. அவை அனைத்தும் மண்டபத்தில் வைத்து நோவார்ட்டிஸால் எழுதித் தரப்பட்டவை என்பதும், அந்த ‘சிபாரிசுகளில்’ இடம்பெற்றிருந்த வாக்கியங்கள்கூட  நோவார்ட்டிஸ் உள்ளிட்ட மருந்து கம்பெனிகளுடைய நன்கொடையில் வயிறு வளர்க்கும் ஐரோப்பிய ‘சிந்தனையாளர்களால்’ ஏற்கெனவே எழுதப்பட்டவைதான் என்ற உண்மையும் அம்பலமானது. வேறு வழியின்றி அரசு பின்வாங்கியது.

நவம்பர் 24, 2009 அன்று அமெரிக்க வர்த்தகக் குழுவுக்கும் இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரத்தை தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.  நோவார்ட்டிஸைப்  போலவே, கிலியாட் என்ற அமெரிக்க மருந்துக்கம்பெனி, தான் தயாரிக்கும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தில் சிறு மாற்றங்களைச் செய்துவிட்டு, புதிய மருந்து என்ற பெயரில் அதற்கு இந்தியாவில் காப்புரிமை கோரியிருக்கிறது. இந்தியக் காப்புரிமை ஆணையம் 3 d பிரிவின்படி அதனை நிராகரித்து விட்டது. ஆனால், “மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்குவதே பயனுள்ளது என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்” எனக் கூறுகிறது பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டக்குறிப்பு.

உலக வர்த்தகக் கழகத்துக்குப் போவதை விட, இந்திய அதிகார வர்க்கத்தையும், அரசாங்கத்தையும் பயன்படுத்தித் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும், உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை வாங்குவதுமே எளிமையான வழிமுறைகள் என்று நோவார்ட்டிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கருதுகின்றன. அதற்காகத்தான் சர்வதேச நீதிபதிகள் மாநாடு, பண்டாரியைப் போன்ற நீதிபதிகளின் கருத்துரைகள்!

நீதிபதிகள் மட்டுமல்ல, இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் தேடிப் பிடித்திருக்கும் வழக்குரைஞர்களும் நமது கவனத்துக்கு உரியவர்கள். முன்னாள் மத்திய அமைச்சரும், மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பெற்றிருந்தவருமான ப.சிதம்பரத்தைத்தான் 2003இல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கிற்கு பிடித்துப் போட்டது நோவார்ட்டிஸ். இன்று, 2011, ஜூலை 23ஆம் தேதியன்று சொலிசிட்டர் ஜெனரலாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் ரோகிந்தன் நாரிமன் என்பவர்தான், ஜூலை 22ஆம் தேதிவரையில் நோவார்ட்டிஸின் வழக்குரைஞர். ஜூலை 22ஆம் தேதியன்று தனது சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்த கோபால் சுப்பிரமணியம்தான் ஜூலை 23 முதல் நோவார்ட்டிஸின் வழக்குரைஞராக நியமனம் பெற்று விட்டார். இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தை நீதிமன்றத்தில் உடைப்பதற்கு, அத்தகைய சட்டங்களை உருவாக்கியவர்களையே அமர்த்திக் கொண்டுள்ளது நோவார்ட்டிஸ். சட்டத்தின் வரிகளுக்கும் எழுத்துக்களுக்கும் இடையில் நுழைந்து வியாக்கியானமளித்து, பன்னாட்டுக் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்பை  வாங்கித் தருவதற்கு இந்த விலைமாந்தர்கள் பாடுபடுவார்கள்.

இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் வெற்றி பெற்றால் ரத்தப் புற்றுநோய் மருந்துக்கான காப்புரிமை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நோவார்ட்டிஸின் கையில் இருக்கும். மாதம் 1.2 இலட்சம் ரூபாய் மருந்துக்குச் செலவிட முடியாமல் பல ஆயிரம் மக்கள் சாகவேண்டியிருக்கும். சில ஆயிரம் மக்கள் தமது சொத்து, சேமிப்பு அனைத்தையும் நோவார்ட்டிஸின் காலடியில் சமர்ப்பித்து, போண்டியான பிறகு உயிரை விட வேண்டியிருக்கும். நோயாளிகளின் உறவினர்கள் மருந்துக்காகக் கடன் வாங்கி, வாங்கிய கடனைக் கட்ட இயலாமல் தற்கொலை செய்ய வேண்டியிருக்கும்.

இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்
இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்

இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவை நெகிழ்த்துவதில் நோவார்ட்டிஸ் வெற்றி பெறுமானால், அடுத்து 10,000 மருந்துகள் வரிசையில் நிற்கின்றன. அவை அனைத்துக்கும் இந்திய அரசு காப்புரிமை வழங்க வேண்டியிருக்கும். எயிட்ஸ் முதல் காசநோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட எல்லா நோய்களுக்கான மருந்துகளும்  எட்டாக்கனியாகிவிடும். அது இந்திய மக்களை மட்டுமின்றி, மலிவான இந்திய மருந்துகளைச் சார்ந்து உயிர் வாழும் ஏழை நாட்டு மக்களையும் மரணத்துக்குத் தள்ளிவிடும்.

ஏனென்றால், இந்தியாவின் மொத்த மருந்து உற்பத்தியில் கணிசமான பகுதி ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முக்கியமாக யூனிசெப், ஐ.நா. மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் 87 ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படும் மருந்துகளில் 70% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. உலகம் முழுவதும் நுகரப்படும் எயிட்ஸ் நோய்க்கான மருந்துகளில் 80 சதவீதமும், எயிட்ஸ் நோயுடனேயே பிறக்கும் குழந்தைகளுக்கான மருந்தில் 92 சதவீதமும் இந்தியாவிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. பல்வேறு நோய்களுக்குமான மூல மருந்துகளை (generic drugs),  இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்குத் தருவதனால்தான், ‘உலகின் மருந்து தொழிற்சாலை’, ‘ஏழை நாடுகளின் மருந்துக்கடை’ என்ற நற்பெயர்களை இந்தியா ஈட்டியிருக்கிறது. இந்தியாவின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்திவிட்டால் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற்றுவிட்டால், இந்தியாவின் மருந்து உற்பத்தி  ஏற்றுமதி முழுவதையும் நிறுத்தி, உலக மருந்துச் சந்தை முழுவதிலும் தங்களது தீவட்டிக் கொள்ளையை நடத்த முடியும் என்பதே பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு.

நீதிமன்றத் தீர்ப்புக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. இந்திய மருந்துக் கம்பெனிகளை ஒவ்வொன்றாக விழுங்கி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்(பார்க்க: பு.ஜ. மார்ச், 2011). இதன் காரணமாக காப்புரிமை இல்லாத மருந்துகளின் விலையே கடுமையாக உயர்ந்து விடும் என்று அஞ்சுவதாக நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. (எகனாமிக் டைம்ஸ், பிப்.24) அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய மருந்து சந்தையின் 40 சதவீதத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றி விடும் என்று கூறுகிறார் எஸ்.பாங்க் என்ற பன்னாட்டு வங்கியின் உதவித் தலைவர். மருந்து உற்பத்தித் துறையில் அந்நிய மூலதனம் நுழைந்ததன் ‘பயன்’ இதுதான்.

“காற்றில்லாத வெற்றிடத்தைக் கண்டு இயற்கை அஞ்சுவதைப் போல, இலாபம் இன்மை அல்லது மிகக் குறைந்த இலாபம் ஆகியவற்றைக் கண்டு மூலதனம் பீதி கொள்கிறது. பொருத்தமான இலாபம் இருக்கும் பட்சத்தில் மூலதனம் விழித்துக் கொள்கிறது. 10% இலாபம் என்றால் எங்கேயும் வரத் தயார். 20% என்றால் மூலதனம் குஷியாகிவிடுகிறது. 50% என்றால் கேட்கவே வேண்டாம், கம்பீரம்தான். 100% இலாபம் என்றால் எல்லா மனிதச் சட்டங்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு மூலதனம் தயாராகிவிடுகிறது. 300% இலாபம் என்றால் எத்தகைய கிரிமினல் குற்றத்தைச் செய்வதற்கும் மூலதனம் தயார். தூக்கு மேடை ஏறுவதற்கும் மூலதனம் துணிந்து விடும்” என்று மூலதனத்தின் இலாபவெறி பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.

கிலிவெக் மாத்திரையில் மட்டும் நோவார்ட்டிஸ் 1000% இலாபம் பார்க்கிறது. இந்த இலாப விகிதத்தோடு ஒப்பிட்டால், நோவார்ட்டிஸ் நிறுவனம் நீதிபதிகளுக்குச் செய்திருக்கும் விருந்துபசாரம் என்பது மிகவும் சாதாரணமான குற்றமாகவே தெரிகிறது. அல்லது நோவார்ட்டிஸின் மிகச் சாதாரணக் குற்றங்களைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது என்றும் கூறலாம்.

_______________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ‘அம்மா’வின் வேண்டுகோளை புறக்கணித்ததையடுத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது, ஜெ அரசு
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ‘அம்மா’வின் வேண்டுகோளை புறக்கணித்ததையடுத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது, ஜெ அரசு
ஊடகங்களின் புறக்கணிப்பையும் மீறி, பெருவாரியான மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடந்து முடிந்த கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்
ஊடகங்களின் புறக்கணிப்பையும் மீறி, பெருவாரியான மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடந்து முடிந்த கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடைபெற்ற மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்திப் பணிய வைத்துவிடவே அரசு முயன்றது. ஆளும் வர்க்க ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்தன. அண்ணா ஹசாரே என்ற ஒரு கோமாளி நடத்திய சர்க்கஸ் வித்தையையும், அதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் நேரலை ஒளிபரப்பில் காட்டி, ஊருக்கு ஊர் நாலு ஊழல் ஒழிப்புக் கோமாளிகளை உருவாக்கிய ஊடகங்கள், கூடங்குளம் போராட்டத்தைப் புறக்கணிக்கவே செய்தன என்பதை விளக்கத் தேவையில்லை. கூடங்குளம் போராட்டத்தை நாடறியச் செய்தால் அது, நாடு முழுவதும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றவைக்கும்  அத்தகைய சூழ்நிலையை தங்களது எசமானர்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் ஊடகங்கள் அறியும்.

ஆயினும் ஊடகங்களின் புறக்கணிப்பையும் மீறி இடிந்தகரையில் நடைபெற்ற மக்கள் போராட்டம் முதல் கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. “அணு உலையால் ஆபத்தில்லை; சுனாமி தாக்கினாலும், நிலநடுக்கம் வந்தாலும் அணு உலை அசையாது. உங்கள் அச்சம் அடிப்படையற்றது. போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று தனது உண்மையான கருத்தை, தனக்குரிய தோரணையில் அறிவித்தார், ஜெயலலிதா. அம்மாவின் ‘வேண்டுகோள்’ ஏற்கப்படாவிட்டால், அடுத்து லத்திக்கோல் வரும் என்பதே மரபு. எனினும், மூவர் தூக்கு பிரச்சினையில் நடந்ததைப் போலவே, மக்கள் போராட்டத்தின் உறுதி, ஜெயலலிதாவின் மீது பெருந்தன்மையைத் திணித்தது; பிரதமர் திருவாளர் கல்லுளிமங்கனின் மவுனம், தலைவியின் மீது ‘புரட்சி’யைத் திணித்து. விளைவு  “மக்களுடைய அச்சம் அகற்றப்படும் வரையில் கூடங்குளம் அணு மின்நிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும்” என்ற தமிழக அமைச்சரவைத் தீர்மானம்.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ‘அம்மா’வின் வேண்டுகோளை புறக்கணித்ததையடுத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது, ஜெ அரசு
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ‘அம்மா’வின் வேண்டுகோளை புறக்கணித்ததையடுத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது, ஜெ அரசு

சுயமாகச் சிந்திக்கும் மக்களையோ, தொண்டர்களையோ ஜெ. ஒருபோதும்  விரும்புவதில்லை. மொத்த தமிழகத்துக்காகவும் சிந்திக்கும் பொறுப்பைத் தன்னந்தனியாக ஏற்றுக்கொண்டு, மேசையைத் தட்டும் பொறுப்பை மட்டுமே மற்றவர்களுக்கு ஒதுக்கும் தாயுள்ளம் கொண்டவர். இடிந்தகரையிலிருந்து அம்மாவுடன் பேசுவதற்கு வந்த பிரதிநிதிகள், ஊருக்குத் திரும்பிச் சென்று, போராடும் மக்களின் கருத்தையும் கேட்ட பின் தங்களது முடிவை அறிவிப்பதற்கே விரும்பினர். ஆனால், அதற்கு முன் அந்தப் பொறுப்பையும் அம்மாவே ஏற்று, சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்து, இடிந்தகரை போராட்டத்தை கோட்டையிலிருந்தே வாபஸ் வாங்கிவிடக் கூடும் என்று அஞ்சியதாலோ என்னவோ, கோட்டை வளாகத்திலேயே அவர்கள் அறிவித்துவிட்டனர்.

தமிழக அரசின் தீர்மானம் ஒருபுறமிருக்க, டிசம்பரில் இயங்கத் தொடங்குவது என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அணு மின்நிலையப் பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கூடங்குளத்தை மூட நேரிட்டால், இந்திய-ரசிய கூட்டுத் தொழில் முயற்சிகள் பலவும் பாதிக்கும் என்று ரசியா எச்சரித்திருக்கிறது. கூடங்குளத்தில் அரசு தோற்றுவிட்டால், ஜெய்தாபூர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் அணுமின் நிலையங்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் கிளர்ந்தெழும். மேலும், சிங்குர், நந்திகிராமம் பிரச்சினைகளைப் போலன்றி, இதன் பரிமாணம் மிகவும் பெரிது. இந்தியாவின் அணுசக்தி கனவினால் அமெரிக்க, பிரெஞ்சு பன்னாட்டு முதலாளிகள் அடையவிருக்கும் கொள்ளை இலாபம், அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளின் இலாப வெறி, அணு மின்நிலையங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு… போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன.

தனியொரு பிரச்சினையாகக் கையாண்டு தீர்வு கண்டுவிடக்கூடிய பிரச்சினை அல்ல கூடங்குளம் பிரச்சினை என்ற போதிலும், அதன் குறிப்பான அபாயங்கள் நம் கவனத்துக்குரியவை. ஃபுகுஷிமா விபத்தினைத் தொடர்ந்து ரசிய அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய ஒரு ஆய்வறிக்கையை ரசிய அரசு நிறுவனங்கள் அதிபர் மெத்வதேவிடம் அளித்திருக்கின்றன.  வெள்ளம், தீ, நில நடுக்கம் முதலான இயற்கைப் பேரழிவுகள் முதல் மனிதத் தவறுகள் வரையிலான காரணங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் ஏற்பாடுகள் ரசிய அணுஉலைகளில் இல்லை என்று கூறுகின்றது அந்த அறிக்கை. “அதுநாள் வரை வெளிப்படையாகச் சொல்லப்படாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று நார்வேயின் ஆற்றல் தொழில்நுட்பத்துறையின் தலைமைப் பொறியாளர் ஓலே ரிஸ்தாத் இவ்வறிக்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.

அவ்வறிக்கை பட்டியலிட்டுள்ள எல்லா குறைபாடுகளையும் ஆராயத் தேவையில்லை. ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். நில நடுக்கம் வந்தால் அணு உலையைப் பாதுகாப்பதெப்படி என்ற பிரச்சினை, ரசிய அணுஉலைகளின் வடிவமைப்பின்போது கணக்கில் கொள்ளப்படவே இல்லை என்று கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால், இந்திய அணுசக்தித் துறை இந்த உண்மையை வெளியில் சொல்லவேயில்லை. அணுமின் நிலையத்தின் 1.6 கி.மீ. சுற்றெல்லையில் மக்கள் குடியிருப்பு இருக்கக் கூடாது என்பது மிகவும் அடிப்படையான உலகறிந்த ஒரு விதி. ஆனால், கூடங்குளம் அணுமின்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுனாமி குடியிருப்புகளை அரசே கட்டிக் கொடுத்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு குறித்த இந்திய அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள இவ்விரு எடுத்துக் காட்டுகளே போதுமானவை.

சுனாமியோ, நிலநடுக்கமோ வந்தால்தான் அணுலைகளுக்குப் பிரச்சினை என்ற பார்வையே பிழையானது. அமெரிக்கா, கனடா, பிரான்சு ஆகிய நாடுகளில் இதுவரை நடந்துள்ள விபத்துகள் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்டவை அல்ல. வடிவமைப்பு தவறு மற்றும் இயக்குபவரின் தவறினால் விளைந்தவை. சமீபத்திய சில பத்தாண்டுகளில் 17 முறை விபத்தின் விளிம்பிலிருந்து அமெரிக்க அணுஉலைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. உயர் வெப்பமும் உயர் அழுத்தமும் மிகவும் சிக்கலான தொழில்நுட்பமும் கொண்ட அணு உலைகளில், ஏதேனும் ஒரு இடத்தில் நேரும் சிறு பிழை, சங்கிலித்தொடர் போல முற்றிலும் எதிர்பாராத விளைவுகளைத் தோற்றுவிக்கும். அந்த வகையில் ஃபுகுஷிமா விபத்தைக்கூட எதிர்பாராதது என்று கூறுவது ஏமாற்றுவேலை. தீவிர நிலநடுக்கப் பகுதி என்று அறியப்பட்ட இடத்தில் 6 அணு உலைகளை வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த கொதிநீர்  உலைகளின் வடிவமைப்பிலும் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாட்டிலேயே இவை தொடர்பான உண்மைகள் இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஃபுகுஷிமா விபத்து நேர்ந்தபோது 30 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதியிலிருந்து வெளியேறினால் போதும் என்றனர்; அமெரிக்கா தனது குடிமக்களை 90 கி.மீ. சுற்றெல்லைக்குள் இருக்கவேண்டாம் என்றது. பிறகு 220 கி.மீ தூரத்தில் உள்ள டோக்கியோ நகரில் குழாய்த் தண்ணீரில் கதிர்வீச்சு இருப்பது தெரிந்தது. பின்னர், அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவின் கடற்பரப்புகளில் கதிர்வீச்சு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணுசக்தி துறையின் செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி, புகுஷிமாவில் நடந்தது அணுஉலை விபத்து என்று ஒப்புக்கொள்வதற்கே பத்து நாள் ஆனது. “இது விபத்தெல்லாம் இல்லை. விபத்தைத் தடுப்பதற்கு நடக்கும் ஒத்திகைப் பயிற்சி” என ஜப்பான்காரனே யோசித்துப் பார்த்திருக்க முடியாத கோணத்தில் ஃபுகுஷிமாவுக்கு அன்று விளக்கம் அளித்தார், இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே.ஜெயின்.

ஹிரோஷிமாவில் இலட்சக்கணக்கில் மக்கள் செத்து விழுந்ததைப் போல ஃபுகுஷிமாவில் சாகவில்லைதான். இதை வைத்து இந்த அபாயத்தை குறைத்து மதிப்பிட்டுவிட க்கூடாது. செர்னோஃபில் விபத்தில் கூட 32 தீயணைப்பு வீரர்கள்தான் உடனே இறந்தனர். ஆனால், அதன்பின் புற்றுநோய், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,40,000 பேர். இறந்தவர்கள் 70,000 பேர். உண்மையான எண்ணிக்கை இதைப் போல 10 மடங்கு என்று கூறுகிறது நியூயார்க் அகாதமி ஆஃப் சயின்சஸ் என்ற ஆய்வு நிறுவனம்.

மக்கள் போராட்டத்திற்கு ஆதராவாக புரட்சிகர இயக்கங்கள்

அணு மின்ஆற்றலின் பிரச்சினைகள் குறித்து பல அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் போதுமான அளவு எழுதியிருக்கிறார்கள். அணுமின் நிலையம் இயங்கும்போது நேரும் விபத்து என்பது அதன் பிரச்சினைகளில் ஒரு அம்சம் மட்டுமே. விபத்து நேராமல் கூடப் போகலாம். ஆனால், இயங்கி முடித்தபின் அந்த மின்நிலையமும், அணுக்கழிவுகளும் தோற்றுவிக்கும் பிரச்சினையிலிருந்து தப்பவே முடியாது.

அணு ஆற்றலின் அபாயம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாதபோது, அதன் தவிர்க்க இயலாமை குறித்து அரசும் ஆளும் வர்க்கமும் பேசத் தொடங்குகின்றன. அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், நகரங்கள், பெருகி வரும் மின்சார சாதனங்கள், நுகர்பொருட்கள் ஆகியவற்றைக் காட்டி, இந்த மின்சாரத் தேவையை ஈடுசெய்ய வேறு என்ன வழி என்பதை நீங்கள் கூறுங்கள் என்று நம்மைக் கேட்கிறார்கள். அந்நியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகள், அவர்களுக்கான தடையில்லா மின்விநியோகம், உலகமயம் தோற்றுவிக்கும் நகரமயம், நுகர்பொருள் கலாச்சாரம், அதற்கான கேளிக்கை விடுதிகள், மால்கள், ஒளிவெள்ளத்தில் திளைக்கும் நகர்ப்புறக் கடைவீதிகள் … என்று பெரும்பான்மை மக்களைச் சுரண்டுகின்ற, ஒதுக்குகின்ற ஒரு வளர்ச்சிப் பாதையைத் தீர்மானித்துக் கொண்டு, அதற்கு மின் விநியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனை கூறுமாறு அவர்கள் நம்மிடம் கோருவது அயோக்கியத்தனம். காற்றாலை, சூரிய ஒளி என்று மாற்றுகள் குறித்து நாம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம்.

அணு மின்நிலையம் என்ற வழிமுறை நமது மின் தேவை குறித்த பொருளாதாரரீதியான கணக்கீட்டிலிருந்து எட்டப்பட்ட முடிவு அல்ல. பொருளாதாரரீதியிலும் இது பெரும் செலவு பிடிப்பது; சுயசார்பானது அல்ல; உடனே ஆகக்கூடியதும் அல்ல. அணுமின்சாரம் குறித்த இந்த சாமியாட்டம், இந்தியஅமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க, பிரெஞ்சு அணு உலை உற்பத்தியாளர்களின் வர்த்தகத் தேவை ஆகியவற்றால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அணு மின்நிலையம் என்பது தேவதைகள் உலவும் சொர்க்கமாகவே இருக்கட்டும். அந்தச் சொர்க்கம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை மக்களுக்குக் கிடையாதா? அது சொர்க்கமல்ல, நரகம்தான் என்பதை திருவாளர் மன்மோகன் சிங்கிற்கு நாம் புரிய வைத்து விட்டால், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவாரா? அறிவும் அறமும்தான் நாட்டை நடத்துகின்றனவா? “இல்லை.. இல்லை” என்று திகார் சிறையிலிருந்து கத்துகிறார், அமர்சிங்.

ஃபுகுஷிமா விபத்துக்கு மேல் புரியவைப்பதற்கு வேறென்ன பொழிப்புரை வேண்டும்?  இன்று அணு உலைகள் அமைப்பதை எல்லா நாடுகளும் இடைநிறுத்தம் செய்து விட்டன. மன்மோகன் சிங்கோ “சுயேச்சையான ‘அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம்’ ஒன்றை அமைப்பதன் மூலம் அணு உலைகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவோம்” என்று அறிவித்திருக்கிறார்.

முதலில் அணுஉலைகளை விற்கும் அமெரிக்க முதலாளிகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துங்கள் என்று இந்திய அரசை நெருக்குகிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன். மன்மோகன் அரசு ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் அணுசக்தி கடப்பாடு சட்டத்தின் 17பி பிரிவு, “அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில், அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பதற்கு வழி வகுக்கிறது. பிரிவு 46 பாதிக்கப்பட்ட மக்கள் அணு உலை தயாரித்த கம்பெனியிடம் நட்ட ஈடு கோர மறைமுகமாக வழி செய்கிறது.’’ எனவே இவ்விரண்டு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே  நீக்க வேண்டும் என்கிறார் ஹிலாரி. (தி இந்து, ஜூலை,19, 2011)

அணு உலைகளையே நீக்க வேண்டும் என்று கோருவதற்கு இதைக் காட்டிலும் வலிமையான காரணம் தேவையா என்ன?

______________________________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு!

271

உணர்வு என்ற வாரப்பத்திரிக்கையின் (செப். 2-8, 20011) கட்டுரையாளர் திரு. நிஜாம் அவர்களுக்கு, ஒருநாள் திடிரென்று அல்லா உள்ளுணர்வை ஏற்படுத்தினான். உள்ளுணர்வு என்றால் கடவுள் வானில் தோன்றி அறிவிப்பதை புரிந்துகொள்ளும் உணர்வு. இது எல்லோருக்கும் இருக்காது. சில அதிசக்தி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அப்படி நிஜாம் அவர்களுக்கு வந்த உள்ளுணர்வுதான் என்ன?

“பல பத்திரிக்கைகள் சீண்டுவதற்குக்கூட ஆள் இல்லாமல் கடைகளில் விற்பனையாகாமல் பல நாட்கள்கள் கிடக்கும்”என்ற உள்ளுணர்வுதான் அவருக்கு வந்த அற்புதம். உடல், உள்ளம் நடுங்க, வியர்த்துக்கொட்ட கொஞ்சம் நேரம் துன்ப ப்பட்ட அவர், இயல்பு நிலைக்கு திரும்பியதும் பேனாவை எடுத்தார்; எழுதினார்… ‘புத்தியிழந்த புதிய கலாச்சாரம்’ என்று பறைசாற்றினார்.

கட்டுரை கவி நயமும் இலக்கிய சுவையுடனும் இருக்க வேண்டுமல்லவா! அங்கங்கே மானே,தேனே, பொன்மானே என்று போட்டுக்கொண்டால்தானே சுவையாக இருக்கும். அதனால் ‘பழைய பேப்பர்கடைக்காரன்கூட வாங்க மறுக்கும்பத்திரிக்கை’ என்று இலக்கியச் சுவையையும் சேர்த்துக்கொண்டார். இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது புத்தியை இழந்துவிட்டதாக பொங்கி எழ என்ன காரணம்?

பத்திரிக்கையின் விற்பனை ரேட்டிங்கை உயர்த்துவதற்கு, இதுதான் பைபிள், இந்துமதத்தின் மூடநம்பிக்கைகள் என்று எதையாவது கிறுக்குவதைவிட்டுவிட்டு, புதிய கலாச்சாரம், இசுலாத்தை கொஞ்சம் உரசிப் பார்க்கிறது என்பதுதான் இவருக்கு வந்த உள்ளுணர்வின் ஆவேசம். இந்த உள்ளுணர்வின் உச்சகட்டம் என்ன தெரியுமா? புதியகலாச்சாரத்தின் கட்டுரையாளர் தோழர் வேல்விழி, “முயற்சி செய்து தோற்றுவிட்டார்” என்ற அறிவிப்புதான். இசுலாமியக் குழுக்களில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிஜேவின் குழுவினர் பிற இசுலாமியக் குழுக்கள் மற்றும் மத த்தவர்களுடன் விவாதம் செய்துவிட்டு பிறகு தமது பத்திரிக்கையில் ‘நாங்கள் ஜெயித்துவிட்டோம் என்று தமக்குத்தாமே முதுகை சொரிந்துகொண்டு பீற்றிக்கொள்வது வழக்கம். அதுபோல பிஜே மகானின் வாரிசு நிஜாம் அவர்களும் புதிய கலாச்சாரத்தின் கட்டுரையை படித்த அடுத்தகணமே “தோற்றுவிட்டார்” என்ற உள்ளுணர்வு மேலோங்கிவிடுகிறது.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லும் பழமொழி உங்களுக்குத் தெரியும். நிஜாம் அவர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பங்களாதேசமும், பாகிஸ்தானும் இசுலாமிய நாடுகளாக, இசுலாமியர்கள் அதிகம் வாழ்பவர்களாக இருப்பதால, குற்றம் புரிபவர்கள் எண்ணிக்கையில் இசுலாமியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். அதுவே இந்தியாவாக இருந்தால் இந்துக்கள் கூடுதலாக இருப்பார்கள். அதற்காக இசுலாமியர்கள் அனைவரும் இல்லது இந்துக்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்ல முடியுமா? புதிய கலாச்சாரத்தின் கட்டுரையாளர் இசுலாமிய நாடுகள் என்பதை வசதியாக மறைத்துவிட்டு இசுலாமியர்கள்தான் குற்றம்  செய்கிறார்கள் என்பதுபோல் எழுதியுள்ளதாக நிஜாம் அவர்களின் நெஞ்சம் குமுறிவிடுகிறது.

புதிய கலாச்சாரத்தில் வந்த “இசுலாமியப் பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்’ என்ற கட்டுரையின் சாராம்சம் என்ன? வங்கதேசத்திலுள்ள இளைஞர்கள், பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடூரங்கள் இக்கட்டுரையின் மையக்கருத்தாகும். பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் ஆசிட்வீச்சுகளை கட்டுரையாளர் சுட்டிக்காட்டினாலும் பிரதானமாக எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் வங்க தேசத்துடையவைகள். இசுலாமியர்கள்தான் அதிகம் இக்குற்றத்தை செய்வதாக இக்கட்டுரையில் எங்குமே குறிப்பிடவே இல்லை. மதம், சமூகம், அரசு, நீதிமன்றம் ஆகியன ஆணாதிக்க சமூக கட்டமைப்பை பாதுகாப்பதால் இக்குற்றங்கள் தொடர்கின்றன, பெருகுகின்றன என்பதே கட்டுரையின் சாராம்சம்.

குறிப்பாக வங்கதேசத்தின் ஆசிட் வீச்சுகளை எடுத்துக்காட்டாக கட்டுரையாளர் கூறினாலும் “மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்களை எரிப்பதால்தான் இருக்கிறது” என்று எல்லா மதங்களும் பெண்கள் மீது வன்கொடுமையை கட்டவிழ்த்து விடுகிறது என்பதைச் சாடுகிறார். இந்து மத்தையோ, கிறித்துவ மத த்தையோ அல்லது பொத்தாம் பொதுவாகவோ கட்டுரையாளர் கூறியிருந்தால் ‘இசுலாம்தான் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது’ என்று தமது அணிகளிடம் மாய்மாலம் செய்திகொள்ளலாம். ஆனால் கட்டுரையாளர், ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள்; அதனால் ஆண்களே பெண்களைவிட உயர்ந்தவர்கள்; பெண்கள் தவறு செய்தால் அல்லது தான் சொல்லுவதை கேட்க மறுத்தால் அடிக்கலாம்; (கொஞ்சம் லேசா ஒரு சின்ன தட்டு தட்டலாம்) போன்ற குர்ஆனின் வசங்களையும் சில சரியத் சட்ட நடைமுறைகளையும் எடுத்தாண்டு இசுலாமிய மதத்தின் கோட்பாடுகளும் ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக இருப்பதை சுட்டிக்காட்டிதால்  உள்ளுணர்வு பொத்துக்கொண்டு வந்து பட்டுக்கோட்டை கொட்டப்பாக்கு என்று சொல்ல வைத்துவிட்டது.

“மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்களை எரிப்பதால்தான் இருக்கிறது” என்றுதானே சாடுகிறார். இதுதான் இவர் எழுதியுள்ள விமர்சனத்தின் புத்தி மிகுந்த கருத்துக்கள். தோழர் வேல்விழி கம்யூனிசத்தின் தரப்பிலிருந்து எழுதியுள்ளதற்கு கம்யூனிசம் எப்படி பெண்களை அடிமைப் படுத்துகிறது கம்யூனிஸ்கள் அதிகர் வாழும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகளில் அந்நாட்டவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்ட்கள் குற்றவாளிகளாக உள்ளதாகவும், பாழாய்போன கம்யூனிசம்தான் இதற்கு காரணம் என்றும் சொல்ல்லாமா? புகவின் கட்டுரைப்படி அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நிஜாம் கூறுகிறார். கம்யூனிஸ்ட்கள்தான் அதிகம் குற்றம் புரிகிறார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகள் என்றாலே குற்றவாளிகள்தான்; கம்யூனிசமே இதற்கு காரணம் என்று சொல்லுவது தவறு என்பதுபோல் இசுலாம்தான் காரணம் என்று சொல்லக்கூடாது. அப்படி நாங்களும் சொன்னால் என்னவாகும் என்று சின்னதாக பயமுறுத்தி, புகவிற்கு ‘நல்ல புத்தி’ சொல்லி சொல்கிறார்.

இசுலாமியர்கள்தான் ஆசிட்வீச்சு போன்ற கொடூரங்களைச் செய்வதாக தோழர் வேல்விழி எந்த இடத்திலும் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ். காலிகள்கூட இப்படிச் செய்கிறார்கள் என்பதை சான்றுடன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் நிஜாம் அவர்கள், இச்சுலாமிய ஆணாதிக்க கோட்பாடுகளை எடுத்தெழுதிவிட்டதால் “நாங்கள கம்யூனிஸ்கள்தான் கொடுரமானவர்கள் என்று சொன்னால் என்னவாகும் என்ற தொனியில் மிரட்டிப்பார்க்கிறார். எற்கனவே அப்படி புழுகிக் கொண்டுதான் திரிகிறார்கள் என்பது வேறு விஷயம்.

நிஜாம் அவர்களே, ரஷ்யாவிலும், சீனீவிலும் உள்ள கம்யூனிஸ்ட்கள் பெண்கள் மீது ஆசிட்டை எங்கே வீசினார்கள்? கம்யூனிசத்தின் எந்தக் கொள்கை பெண்களை அடக்கி ஆளவேண்டும், கற்பழிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதைச் சொல்லவேண்டுமல்லவா? அதுதானே புத்தியுள்ள விமர்சனமாக இருக்கும். தோழர் வேல்விழி எடுத்துவைத்துள்ள சான்றுகள் சில மட்டும்தான். இன்னும் நிறைய எடுத்துச் சொல்லலாம். அதுபோல கம்யூனிச கொள்கையின் ‘ஆணாதிக்க சட்டங்களை’ எடுத்தெழுதி உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். ஆத்திரம் தலைக்கேறி உளற வேண்டாம்.

பதில் சொல்ல முடியாமல் சிக்கிக்கொண்டால் அந்த அவமானமே ஆத்திரமாக உருவெடுத்து தொடர்பில்லாமல் உளரவைக்கும். அதுபோல நிஜாம் அவர்கள், “அந்தப் பகுதியில் மிகவும் எளிதாக ஆசிட் கிடைக்கிறது என்று கட்டுரையாளரே கூறியுள்ளார். அதனால் அவர்கள் எளிதாக ஏந்தும் ஆயுதம் ஆசிட் என்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. கள்ளிப்பாலும், நெல்மணியும் எளிதாக கிடைப்பதால், தமிழகத்தில் உசிலம்பட்டி பகுதியில் பச்சிளங் குழந்தைகளை அதனைக் கொண்டு கொலை செய்கிறார்கள்; உசிலம்பட்டி பகுதியில் அப்படி நடக்கிறது என்றுச் சொன்னால் நியாயம் இருக்கிறது; ஒட்டு மொத்த இந்தியாவிலும் கள்ளிப்பாலைக் கொடுத்துக் குழந்தைகளை கொலைசெய்கிறார்கள் என்று சொல்லுவது முட்டாள்தனம். அதுபோலத்தான் ஆசிட் கதையும்” என்று எழுதியுள்ளார்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. ஆசிட் எளிதாக கிடைக்கிறது என்று உங்களுக்கே தெரிகிறது; அப்படியிருப்பதால் ஆசிட்டை பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது என்று கேட்கிறாரா? அல்லது துப்பாக்கி எளிதா கிடைச்சா துப்பாக்கியால சுடுவோம்ல என்று சொல்ல வருகிறாரா? வீட்டுக்குவீடு கத்தி அரிவாள்மனைகள் இருக்கும்போது, எளிதாக கிடைக்கும்  அதைப் பயன்படுத்தாமல் ஆசிட்டை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று தோழர் வேல்விழி கேட்பதாக கற்பனை செய்து கொண்டு பதில் சொல்கிறாரா? அல்லது எளிதாக கிடைக்காத துப்பாக்கிக்கொண்டு சுடுங்கள் பார்போம் என்று புக சவால் விட்டுள்ளதா? ஒன்றுமே புரியவில்லை. கள்ளிப்பால், நெல்மணி எல்லாம் இங்கே எதுக்கு சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை.

இங்கே கள்ளிப்பாலைக் கொடுத்து கொலை செய்வதைப் போல, அங்கே ஆசிட் வீசுகிறார்கள். இதில் என்ன கட்டுரையாளர் அதிசயத்தை கண்டுவிட்டார் என்று கேட்கிராறோ நிஜாம். ஒருவேளை அரிதாக கிடைக்கும் துப்பாக்கியால் சுட்டால் இக்கட்டுரை தேவையில்லாததாகிவிடும் என்று நிஜாம் கருதுகிறாரா? ஆயுதம் எதுவானாலும் ஆணாதிக்க வன்கொடுமை என்பதுதானே மையக்கருத்து. அதுபோல ஒட்டுமொத்த இசுலாமியர்கள் என்றோ, இசுலாமியர்கள் என்றாலே கொடுரமானவர்கள் என்றோ கட்டுரையாளர் கூறவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.இசுலாமியர்களில், ஆணாதிக்க கொடூரர்களாக  இருப்பவர்களுக்கு அதற்கு காரணமாக இசுலாமியக் கோட்பாடும் உள்ளது என்பதே கட்டுரையின் சாராம்சம். அது மட்டுமல்ல,  சினிமா, விளம்பரங்கள் போன்ற நவீன முதலாளித்துவ விழுமியங்களும் இவர்களின் கொடுர மனநிலைக்கு காரணமாக உள்ளதையும் தோழர் வேல்விழி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனாலும் பிற ஆயுதங்களைவிட ஆசிட் வீச்சில் மனித இனத்திற்கே கேவலமான கொடூரமான மனநோய் உள்ளது. பிற ஆயுதங்கள் உடலை சிதைப்பதைவிட ஆசிட் உடலை, அதிலும் குறிப்பாக முகத்தை சிதைக்கும் கொடூரம் மிக மிக வக்கிரமானது. தனக்கு கிடைக்காத அந்தப் பெண், கோரமுகத்துடன் தினம் தினம் செத்து பிழைக்கவேண்டும் என்ற வக்கிரம். கொஞ்ச நாளில் அவள் அந்த கொடூரத்தை மறந்து விடக்கூடாது என்ற மனவக்கிரம்.  எழுத்தால் சொல்ல முடியாத வக்கிரம். பின்னே சும்மாவா? “ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்” என்று முகம்மதுநபி சொல்லி இருக்கும்போது, இந்த ………… பெண்கள்,இவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால் ஆசிட் வீசாமல், வேடிக்கையா பார்பார்கள்?

தமிழகத்தில் நடக்கும் பெண்குழந்தைகளின் கொலைக்கு காரணம் என்ன? பெண் குழந்தை என்றால் திருமணக்காலத்தில் வரதட்சிணை போன்ற நெருக்கடி ஏற்படும். அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் அக்குழந்தையை கொன்று விடுகிறார்கள். அதுபோல வங்கத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆணாதிக்கமும் அதனை வளர்க்கும் மதமும் காரணமாக அமைகிறது.  வங்கத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடந்ததாகவே இருக்கட்டும். அதனைச் சுட்டிக்காட்டியும், அதற்கு காரணமாக அமைவதையும் எழுதக்கூடாதா? ஒட்டு மொத்த வங்கத்திலும் நடந்தால்தான் எழுதனுமா? வேடிக்கையாக இருக்கிறது இவரது உள்ளுணர்வு.

அடுத்து ஒரு தொடர்பில்லாத உளறல். பிற மதங்களைவிட இசுலாம்தான் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதாக பிறமதங்களை ஒப்பிட்டு புலம்புகிறார். தோழர் வேல்விழி பிற மதங்கள் நல்ல மதங்கள் என்று எங்கேயும் கூறவில்லை. எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்கி வருகின்றன என்பதைத்தானே எழுதியிருக்கிறார்.

பிரான்ஸ் போன்ற நாடுகள், பொதுவிடங்களில் புர்கா அணிய தடைச் சட்டம் இயற்றி இசுலாமியப் பெண்களுக்கு உதவிட முயற்சிக்கையில், ஆசிட் வீச்சின் அலங்கோலமாகிப்போன பெண்கள் தமது அலங்கோலத்தை மறைக்க புர்காவை விரும்பி அணிய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர் என்று பெண்ண்டிமைச் சின்னமான புர்கா பற்றி எழுதியதும், புர்காவின் மாண்புகளும் மாண்புமிக்கவர்களும் பெட்டிச் செய்தியாக பரிணமித்துவிட்டது. புர்கா பற்றி சொல்ல வேண்டுமானால் பல பக்கங்கள் வேண்டும். கொஞ்சமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் எனது  “2010ல் இசுலாமியப் பெண்கள் – மதமும் வாழ்க்கையும்”   கட்டுரையை படித்துக்கொள்ளுங்கள்.

முதலமைச்சர் ஜெயலிதா முழுக்க போர்த்திக்கொண்டு வலம் வந்த போதும் அவரது முன்னேற்றத்தை தடுக்கவில்லையாம். சினாமாவில், இதற்கு முன் அரசியலில் கவர்ச்சியாக வந்தபோதும் அவரது முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கவர்ச்சியே அவரை இன்றுவரை அரசியலில் அசைக்க முடியாத(!) முன்னேற்றத்தை தந்துள்ளது. இவர்கள் (தவ்ஹீது அமைப்பினர்) உட்பட இசுலாமிய அமைப்புகள், கட்சிகள்கூட இன்று அவரின் தயவுக்கு மண்டியிட்டு காத்திருக்கும் அளவுக்கு முன்னேற்றத்தை தந்துள்ளது. அப்படி என்றால் கொஞ்சம் நாளைக்கு கவர்சியாக இருந்து எல்லோரையும் வலைச்சு போட்டுக் கொள்ளலாம் என்பது நிஜாம் அவர்களின் ஆசை என்று சொல்ல்லாமோ? நல்லவேளை, ரம்ஜான் நேரங்களில் முக்காடு போட்ட மாதிரி ஜெயலிதா பேனர்களில் காட்சி தருவது போல், புர்கா போட்ட மாதிரி ஒரு படத்தை உணர்வில் போட்டு புர்காவின் மாண்பு பற்றி பீற்றிக்கொள்ளாமல் இருந்தாரே. அதற்காக மகிழ்சியடைவோம்.

இவைகளெல்லத்தையும் விடுங்கள். தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பில் உள்ள இவர்கள் தங்களைத் தவிர பிற இசுலாமிய இமைப்பில் உள்ளவர்கள் இல்லாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று  பட்வா கொடுத்து ரொம்ம நாளாச்சுங்களே! பிறகேன் இவர் வங்கத்து (இசுலாமிய) மக்களை, முசுலீம்கள் என்று வக்காலத்து வாங்குகிறார் என்று புரியவில்லை. நாங்கள் எத்தனை குழுக்களாக வேண்டுமானாலும் பிரிந்துகொண்டு அடிச்சிக்குவோம்; காறி துப்பிக் கொள்வோம்; ஆனால் கம்யூனிஸ்கள் ஏதாவது சொன்னா ஒண்ணா கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைப்போம் என்று கூறுகிறாரோ நிஜாம்? பெண்கள் மீதான இது போன்ற கொடூரங்களுக்கு விரலைக்கூட அசைக்காத இவர்களை இசுலாமிய மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்.

_______________________________________________________________

சாகித்
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்

2. பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பார்ப்பன ஜெயா அரசின் வன்கொடுமை வெறியாட்டம்!

3. ஹனில் டியூப் தொழிற்சங்கக்கிளைத் தலைவர் மீது கொலை முயற்சி! பு.ஜ.தொ.மு.வின் கண்டன ஆர்ப்பாட்டம்.

4. உள்ளாட்சித் தேர்தல்கள்: உள்ளூரைக் கொள்ளையடிக்க ஒரு ஏற்பாடு!

5. கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

6. ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

7. வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?

8. மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

9. ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்: வர்க்க ஒற்றுமையால் விளைந்த வெற்றி!

10. லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

11. வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

12. நோவார்ட்டிஸ் வழக்கு: மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகளின் காப்புரிமை!

13. 27ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

14. காக்கை குருவிகளா விவசாயிகள்?

 புதிய ஜனநாயகம் அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

சமச்சீர் கல்வி, டாஸ்மாக், ஜெயா, ஸ்பெக்ட்ரம் ஊழல் – கேள்வி பதில்!

இன்றைய சூழலில் சமச்சீர் கல்வி தேவையா?

_ எஸ். பிரபு

அன்புள்ள பிரபு

கல்வி தனியார்மயமாக்கப்பட்டிருப்பதும், காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பதும்தான் இன்றைய சூழலில் நாம் கவலைப்பட வேண்டிய முக்கியமாக பிரச்சினைகள். 90களில் மறுகாலனியாக்கம் தீவிரப்படுத்த நாட்களில் கல்வி என்பது இனியும் அரசின் சேவைகளில் ஒன்றல்ல, அது விற்பனைக்குரிய பண்டம் என்பது அதிவேகமாக அமலாக்கப்பட்டது.

அதன் விளைவுதான் புற்றீசல் போல பெருகியிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள். மழலை பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை தனியார் முதலாளிகளே நாடெங்கும் ஆக்டோபஸ் போல ஆக்கிரமித்திருக்கின்றனர். ஏழைகள், நடுத்தர வர்க்கம் அனைவரும் தமது வருமானத்தில் கணிசமான பங்கை தனியார் கல்வியில் இழந்து வருகின்றனர். ஆங்கிலப் பள்ளிகளும், பொறியியல் கல்வியும் கற்காவிட்டால் தமது பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பாழாகிவிடும் என்று திட்டமிட்டு பரப்பப்படும் மூடநம்பிக்கைகட்க்கு அவர்களும் பலியாகியிருக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை என்பதே தனியார் முதலாளிகள் தமது இலாப நோக்கத்திற்காக செய்து வரும் முதன்மையான பிரச்சாரம். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கற்காவிட்டால் வாழ்க்கையே முடிந்து போய்விடும் எனுமளவுக்கு அவர்களது பிரச்சாரம் நடக்கிறது. இந்நிலையில் சமச்சீர் கல்வி வந்துவிட்டால் அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே கல்வி என்றால் அவர்கள் இதுகாறும் கொள்ளையடித்து வந்தது ஒப்பீட்டளவில் பிரச்சினையாகும்.

அதனால்தான் சமச்சீர்கல்வியை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றம் வரை போனார்கள். மறுபுரம் கருணாநிதி கொண்டு வந்ததனால் மட்டும் ஜெயா இதை எதிர்க்கவில்லை. வர்க்கரீதியாக அவர் கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஆதரிக்கிறார். மற்றபடி சமச்சீர் கல்வி ஏன் வேண்டும், அது தரமற்றது என்று சொல்லப்படுவது உண்மையா என்பது குறித்தெல்லாம் வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. அவற்றை படித்துப் பாருங்கள்.

அனைவருக்கும் இலவசக் கல்வி எனும் நமது கோரிக்கையின் முதல் படி சமச்சீர் கல்வி. இன்று முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து பெற்றோர் வீதிக்கு இறங்கியிருப்பது உற்சாகமளிக்கும் சூழல். இரண்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது. அதை தலைமையேற்று நடத்துவதை புரட்சிகர அமைப்புகளின்றி வேறு யாரும் செய்யமாட்டார்கள்.

___________________________________

கேள்வி 1:
டாஸ்மாக்கை ஒழிக்க முடியுமா?

கேள்வி 2:
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் கூட்டணி கட்சிகளை வெளியேற்றுவது வாடிக்கைதான் என்பது கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியுமா?

 கேள்வி 3:

தயாநிதி மாறன், சிதம்பரம்… அடுத்தது?

– டி.பெருமாள்

அன்புள்ள பெருமாள்,

1. டாஸ்மாக்

உலகளவில் இந்தியாவும், இந்தியளவில் தமிழ்நாடும் குடிப்பதில் வேகமாக வளர்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கும், முதலாளிகளுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் தரும் டாஸ்மாக் ஒரு அட்சயபாத்திரமாக விளங்குகிறது. எனவே எக்காலத்திலும் இதை ஒழிப்பதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள். அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக்கே கருவூலமாகத் திகழ்கிறது. அதை ரத்து செய்தால் அரசு திவாலாகிவிடும். அதாவது மக்களின் சட்டைப்பையில் காசை எடுத்து அதில் சிலவற்றை அவர்களுக்கே வீசுவது என்பதாக அரசு செயல்படுகிறது.

அரசு, முதலாளிகளது நிலை இதுவென்றால் எல்லா அரசியல் கட்சிகளது நிலையும் அதுதானென்று ஆகிவிடுகிறது. விதிவிலக்காக ஓரிரு கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் டாஸ்மாக்கை ஒழிக்க விரும்புவதில்லை. இன்னும் தேர்தல் காலங்களில் தொண்டர்களை திரட்டுவதற்கே அது தேவைப்படுகிறது. குடியை ஒழிக்க விரும்புவதாக சவுடால் அடிக்கும் பா.ம.க ராமதாஸ் தன் கட்சியில் குடிப்பவர் எவரும் இருக்க இயலாது என்று அறிவித்து விட்டாலே கூடாரம் காலியாகிவிடும்.

அடுத்தது குடி என்போது முன்னெப்பதைக் காட்டிலும் அநேக ஆண்கள் அன்றாடம் குடித்தே தீருவது எனும் வழக்கமாக மாறிவிட்டது. வர்க்க ரீதியாக உடலுழைப்பு செய்யும் ஏழை ஆண்கள் தங்களது வருமானத்தில் கணிசமான பங்கை குடிக்கு செலவழிக்கிறார்கள். வேலை கிடைக்காத நாட்களில் கடன் வாங்கி குடிக்கிறார்கள். இதனால் இத்தகைய குடும்பங்களில் வருமானமிருந்தும் வாழமுடியாத அவலம் நிரந்தரமாகிவிட்டது. அந்த வகையில் இது ஏழை குடும்பங்களின் பெண்களது பிரச்சினையாகிவிட்டது.

நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வாரம் ஒரு முறை, விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், விருந்துகள் போன்றவற்றில் அதிகம் குடிக்கிறார்கள். இவர்களுக்கு பொருளாதாரம் பிரச்சினை இல்லை என்றாலும் சிலர் நாட்பட அன்றாடம் குடித்தே ஆகவேண்டிய குடிகாரர்களாக மாறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கெட்டுகெதர் நிக்ழவுகளில் குடிக்கவில்லை என்றால் நாகரிகம் இல்லை என்பதாக கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

மறுகாலனியாக்கம் கடுமுழைப்பு நிறைந்த உதிரித் தொழிலையும், அதிக பணிச்சுமையையும், வீடு, குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது. அலவத்தில் உழலும் வாழ்க்கையை உரிமைக்கான போராட்டத்தில் மாற்றுவது போய் வலியை மறக்க குடிப்பது என்றாகி விடுகிறது.

மேற்குலக நாடுகளில் குடிப்பது என்பது தட்பவெப்பம், பண்பாடு, உணவுப்பழக்கம் காரணமாக ஒரு சமூகப் பண்பாக உள்ளது. அங்கேயும் குடிக்கு அடிமையான குடிகாரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சிறு எண்ணிக்கையில்தான் உள்ளனர். இங்கோ குடிப்பது சமூகப்பண்பாக இல்லாத நிலையிலும் குடிகாரர்களே அதிகம் உள்ளனர்.

ஆல்ககாலின் அளவு அல்லது காரம் குறைந்த கள் போன்றவையே நமது மரபில் இருந்தது. இன்று அதிக காரம் நிறைந்த வெளிநாட்டு மது வகைகளை நமது மக்கள் குடித்துப் பழகிவிட்டனர்.

எனவே குடிப்பதை ஒரு ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்காமல் சமூகப் பொருளாதார தளத்தில் வைத்துப் பார்ப்பதே சரியாக இருக்கும். குளிர் பிரதேசங்கள், கடுமுழைப்பில் ஈடுபடுவோர் போன்ற காரணங்களுக்காக குடிப்பது தவறில்லை. அதே போல என்றாவது ஒரு நாள் குடிப்பதும் பிரச்சினை இல்லை. ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்.

சென்னையின் சேரிப்பகுதிகளில் குடிக்கு அடிமையாகும் ஆண்கள் அனைவரும் 40, 50 வயதுகளில் இறந்து விடுகின்றனர். இந்தியாவின் ஆயுள் சராரசரி சேரிகளில் இல்லை. எனவே இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படும் ஏழைப்பெண்கள் விழித்தெழுந்து போராடும் வரை டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. அத்தகைய போராட்டம் ஆந்திராவில் 90களில் நடந்தது. பல நகரங்களில் இருக்கும் மதுக்கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கி மூடினார்கள்.

இதைத்தவிர டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு வேறு வழி இல்லை.

_________________________

2. ஜெயலலிதா

அகில இந்திய அளவில் ஓட்டுக்கட்சி அரசியலில் தனி முன்னுதாரணம் படைத்தவர் ஜெயலலிதா மட்டுமே. இதில் மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றோர் கூட வெகுவாக பின்தங்கித்தான் உள்ளனர். ஆணவம், செருக்கு, அகம்பாவம், மேட்டிமைத்தனம், பழிவாங்குதல் என்று எல்லா டிகிரிகளிலும் கொட்டை போட்டவர் புரட்சித் தலைவி.

அம்மா அரசவையில் அகில இந்திய தலைவர்கள் பலரும் பம்மித்தான் நடந்து கொள்வர். காங்கிரசு, பா.ஜ.க கட்சிகளுக்கு இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை கிடையாது என்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் காலந்தள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜெயாவை சகித்துக் கொள்கிறார்கள். அதே போன்று ஜெயாவும் இந்திய அரசியல் கனவில் ஒரு முக்கிய இடத்தை அடைய வேண்டுமென்று உறவு கொள்கிறார்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்காகவே அரைமனதாக கூட்டணியை அமைத்தவர் ஜெயா. கூட்டணி பேரம் முடியாமலேயே வேட்பாளரை அறிவித்து பின்னர் வேறுவழியின்றி மாற்றிதெல்லாம் திடுக்கிடும் விசயமல்ல. இப்படி நடக்கவில்லை என்றால்தான் ஆச்சரியமாக இருக்கும்.

இதெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், விஜயகாந்த், சரத்குமார், கிருஷ்ணசாமி அனைவரும் தெரிந்த ஒன்றுதான். இவர்களைப் பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்பதால் சகித்துக் கொள்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை சொந்தக் கொள்கை என்பது எதாவது செய்து அரசியலில் நீடிப்பது, அதையும் சொந்த பலத்தில் செய்ய முடியாது, மாறி மாறி கூட்டணிகளின் தயவில் நீடிப்பது என்று சீரழிந்து போய்விட்டார்கள். விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஒரு ஆம்பளை ஜெயலலிதா என்பதால் பிரச்சினை இல்லை.

சட்டமன்றத் தேர்தலில் உள்ள நிர்ப்பந்தம் உள்ளாட்சித் தேர்தலில் இல்லை என்பதால் கூட்டணிகளை கழட்டிவிட ஜெயலலிதா தயங்கவில்லை. ஆனாலும் இந்த அளவுக்கு மோசம் போக மாட்டோம் என்று வேண்டுமானால் கூட்டணிக் கட்சிகள் நினைக்கலாம். மற்றபடி அவர்களுக்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருக்காது.

சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், காரியவாதம், போன்றவை கோலேச்சும் ஓட்டுக்கட்சி அரசியலின் யோக்கியதையை இந்த அளவுக்கு வெளிப்படுத்தியமைக்காக நாம் ஜெயலலிதாவை பாரட்டலாம். வேறு என்ன?

________________________________

3. ஸ்பெக்ட்ரம் ஊழல்

தயாநிதி மாறன் ஒரு அமைச்சராக பதவி இழந்திருக்கிறாரே தவிர ஒரு முதலாளி என்பதால் தண்டிக்கப்படவில்லை. அவர் இருக்கும் சன் குழுமத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி விவாகரத்தையும் தற்போது சுமூகமாக முடித்து விட்டார்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை என்பதாகவும், அரசின் கொள்கை முடிவில் வேறுபாடு இல்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

வினவில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஏற்கனவே வந்துள்ள கட்டுரைகளில் தெரிவித்த்து போல இந்த வழக்கை நீர்த்துப் போக வைப்பதே தற்போது நடந்து வருகிறது. இதை மேலும் மேலும் தோண்டினால் ப.சிதம்பரம் மட்டுமல்ல, மன்மோகன் சிங், இந்திய அரசு, அதன் கொள்கை முடிவுகள், பிறகு முதலாளிகள் என்று சகலரும் மாட்டுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ராசா இதை கொஞ்சம் அம்பலப்படுத்தினாலும் அவரை மிரட்டுவது போன்ற குற்றப்பிரிவுகளை அரசு தொடுக்கிறது. அதனால் அவரும் தான் அரசையோ, பிரதமரையோ குற்றம் சாட்டவில்லை, தான் நிரபராதி என்றுதான் பேசமுடிகிறது. ஆகவே அடிப்படை விதிமுறையை மீறாமல் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எனும் ஆட்டத்தை எப்படி ஆடுவது என்பதுதான் அரசுக்கும், இந்த வழக்கில் மாட்டியவர்களுக்கும் உள்ள பிரச்சினை.

அதன் வெளிப்பாடுதான் தற்போது நீர்த்துப்போகும் இந்த வழக்கு. இதற்கு இடையில் அண்ணா ஹசாரேவை வைத்து கொஞ்சம் பிரேக் விட்டார்கள். இதற்கு மேலும் இது சூடு பிடிக்காது எனும் போது வேறு யார் மாட்டப் போகிறார்கள்?

தெலுங்கானா போராட்டம்! கேள்வி – பதில்!!

கேள்வி 1:

வணக்கம். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் தனித் தெலுங்கானா போராட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
கேள்வி 2:

ஒருவேளை தெலுங்கானா பிரிக்கப்பட்டால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

கேள்வி 3:

அகில இந்திய அளவிலான விளைவுகள் என்னவாக இருக்கும்?

– முரளி

அன்புள்ள முரளி,

2010 ஜனவரி புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரை உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கிறது. அதையே இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்.

______________________________________

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001-இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி,-வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்துப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனி மாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

47

இந்திய அணுசக்தித் திட்டம் : கூற்றுகளும் உண்மையும் சுவ்ரத் ராஜு

வினவு குறிப்பு: அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் விபத்து நிவாரணம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன.  இதில் அமெரிக்க நிறுவனங்களை காக்கும் சரத்துக்களை சேர்ப்பதற்கு இந்திய அரசு பெரிதும் முயன்று வருகிறது. எனில் போபாலில் இந்திய மக்கள் பட்ட துன்பம் அணு விபத்து மூலம் திரும்பலாம்.

இந்தக் கட்டுரை அணுசக்தி குறித்த முழுமையான அறிவை வாசகருக்கு நிச்சயம் தரும். இந்தியாவில் ஐம்பதாண்டுகளாக செயல்படும் அணுமின் நிலையங்கள் சொல்லிக் கொள்ளும் வண்ணம் உற்பத்தியை செய்ய முடியாமல் இருப்பதும், இந்நிலையில் எதிர்காலத்தில் அணுமின்சாரம் பற்றிய பிரமைகள் உருவாக்கப்படுவதையும் ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார். இதனால் அணு ஆயுதம் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காகவே அணுமின்நிலையங்கள் இயங்கி வந்திருப்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். சுதேசி திட்டமாக போற்றப்படும் தோரியம் குறித்த யதார்த்தத்தையும் அவர் விளக்குகிறார். அதன்படி தோரியம் வணிக ரீதியில் சாத்தியமாகாது என்பதோடு உலக அளவில் அது தேவையற்ற ஒன்றாகவும் உள்ளதை கூறுகிறார்.

அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் நம்பகமான கூட்டாளி அல்லது அடியாள் என்ற நிலையை பெறவே இந்த அணுசக்தி ஒப்பந்தம் உதவும் என்பதையும் ஆசிய அளவில் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவை அணு ஆயுத நாடாக வைத்திருப்பதை அமெரிக்கா விரும்புவதையும் சொல்கிறார். கூடவே அணுமின்நிலையங்களின் தேவைக்காக எப்போதும் அமெரிக்காவையே நம்பி இருக்க வேண்டிய நிலை வரும் என்பதையும் சொல்கிறார். முக்கியமாக உலக அளவில் அணு மின்நிலையங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்திருப்பதையும், அவற்றின் கழிவை புதைக்கும் பிரம்மாண்டமான செலவையும் வைத்துப்பார்க்கும் போது அதனால் பெரிய நன்மை இல்லை என்பதையும் கூறுகிறார். எனவே அரசியல் ரீதியில் இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்காக இருக்கிறது. அது உண்மைதான் என்பதை இந்த நீண்ட கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது. இந்த அரிய கட்டுரையை மொழிபெயர்த்து அனுப்பிய தோழர் அனாமதேயனுக்கு நன்றிகள். வாசகர்கள் இந்த அரிய கட்டுரையை படிப்பதோடும் பலருக்கும் சுற்றுக்கு விட்டு பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

__________________________________________________________________________

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

மனித உரிமை செயல்வீரரும், இயற்பியலாளருமான சுவ்ரத் ராஜு எழுதிய இந்தக் கட்டுரை, ஜனவரி, 2010-ல் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியா’ஸ் எகானமி ஏட்டில் வெளிவந்திருந்தது.  இந்திய அணுசக்தித் திட்டத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான செயல்பாடுகளைப் பற்றிய முழுமையானதொரு கண்ணோட்டத்தைத் தரத்தக்க கட்டுரை இது.

இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம் அறிவியல் விளக்கம் அளிப்பது அல்ல. மாறாக, அணுசக்தித் துறையின் செயல்பாடு பற்றிய பொதுப் புரிதலை ஏற்படுத்துவதும், தொடர்புடைய அரசியல், பொருளாதார, இராணுவ விவகாரங்களைப் புரியவைப்பதும் ஆகும்.  படிப்பவருக்கு ‘யு’ என்பது அணுப்பிளவுத் தன்மைகொண்ட தனிமம் என்ற அளவுக்கு அறிவியல் தெரிந்தால் போதும் என்று ஆசிரியரே ஓரிடத்தில் சொன்னதால் துணிந்து, பலரும் படிக்கவேண்டுமே என்ற ஆவலில் இந்த சிறப்பான கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்துவிட்டேன். தவறுகளுக்கு நானே பொறுப்பு. வாசகர்களின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். நன்றி

– அனாமதேயன்.

____________________________________________________________________________

இந்திய அணுசக்தித் திட்டம்

கூற்றுகளும் உண்மையும்

சுவ்ரத் ராஜு

அரசியல் பொருளாதார ஆய்வுக் குழுவின் (RUPE) ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியாஸ் எகானமி – இதழ் எண் 48ல் [ஜனவரி, 2010] வெளியிடப்பட்டது.

1. அறிமுகம்

அணுசக்தி தொடர்பாக இந்தியாவில் நடைபெறும் பிரதான விவாதங்களில், நவீனத்துவத்துக்கும், வல்லரசு என்ற தகுதிக்குமான ஒரு துருப்புச் சீட்டைப் போலவே அணுசக்தி நெடுநாட்களாகவே முன்னிறுத்தப்பட்டு வருகிறது.  1957ல் இந்தியாவின் முதல் அணுவுலையைத் துவக்கிவைத்துப் பேசும்போது, “அணுசக்திப் புரட்சி என்பது தொழிற்புரட்சியைப் போன்றதே; இந்தியா அணுசக்தித் துறையில் முன்னேறவில்லை என்றால் அது மீண்டும் ஒருமுறை தோற்றுப்போகும். நாம் இத்துறையில் முன்னேற வேண்டும் இல்லையேல் பணிந்து பிறருக்கு வழிவிட்டுப் பின் அதே பாதையில் இழுபட நேரிடும்என்று நேரு விவரித்தார்.[1]

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய விவாதத்தில் இவ்விரு கருத்துக்களும் [நவீனத்துவம், வல்லரசு] வலுவாய் புத்தெழுச்சி பெற்று நின்றன.  உதாரணமாக, 2006-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தபோது, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு அவருடன் நடத்திய நேர்காணலை பிரம்மாண்டமாக வெளியிட்டிருந்தது.[2]  அதன் முதல் பக்கத்தின் கால் பகுதியை ஒரே ஒரு கேள்வியே நிறைத்திருந்தது: “டாய் டு புஷ் [புஷ் இடம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கேள்வி]: இந்தியாவை ஒரு பொறுப்பு மிக்க அணுசக்தி வல்லமையுள்ள நாடாகக் கருதுகிறீர்களா? பதில்: ஆம், கருதுகிறேன்” [3] இது மற்ற முதல் பக்கத் தலைப்புச் செய்திகளைப்போல் நான்கு மடங்கு பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது! இப்பதில் சந்தேகமில்லாமல், டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆசிரியர்களையும், இந்திய நிறுவனத்தின் பிற அங்கங்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

எனினும், வல்லரசுக் கருத்துக்கு ஆதரவான விவாதங்கள் விரிந்த அரசியல் ஆதரவைப் பெற்றுத் தருவதற்குப் போதுமானதல்ல என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. எனவே, இந்த ஒப்பந்தம் நாம் ‘அணுசக்தித் துறையில் அனாதையாக இருக்கும் நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மட்டுமல்லாமல் நமது வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது என்று வலியுறுத்தியது.  ஜஜ்ஜார் என்ற இடத்தில் அனல் மின் நிலையம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டிய சோனியா காந்தி, வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை, மின்சாரத்துக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் தேவை.  ஆக, இந்த ஒபந்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரிகள் என்று விளித்தார்.[4]

பாராளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் இக்கருத்தும் பிரதானமாக இழையோடியது.  2007-ம் ஆண்டு நவம்பர், 28 அன்று நடைபெற்ற விவாதத்தில், “அடிமட்ட அளவிலான(grass root level) வளர்ச்சிக்கு “சிவில் அணுசக்தித் தெரிவு[civilian nuclear option] அத்தியாவசியமானது என்றும் 2020-ல் இந்தியா 30,000 40,000 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கும் என்றும் காங்கிரஸ் தரப்பின் முதல் பேச்சாளராக எழுந்த ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். சிந்தியாவைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் இந்தியாவை விசுவரூபம் கொள்ளச் செய்ய மிக அவசியமாக இருக்கிறது.[5]  2008 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்த பிரணாப் முகர்ஜி, ஆற்றல் அனைத்துக்கும் தேவைஎன்பதை விளக்கினார். அணுசக்தி இல்லையேல் 2050-ல் நமது மின்சக்திப் பற்றாக்குறை 4,12,000 மெகா வாட்களாக இருக்கும் என்ற அபாயத்தைச் சுட்டிக் காட்டினார்.  அணுசக்தி இப்பற்றாக்குறையை வெறும் 7000 மெகா வாட்களாகக் குறைக்கும் என்றும், மின்சக்தித் தேவைக்கான நெருக்கடியை நிவர்த்தி செய்யும் என்றும் விளக்கிக் கூறினார். [6]

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்திய அணுசக்தித் துறையால் தரப்பட்டவையே.  ஆனால், இந்த புள்ளிவிவரங்களுக்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா? காங்கிரஸ் பெற்ற அரசியல் வெற்றிக்குப் பிறகும் கூட இந்தக் கேள்வி முக்கியமானதாகவே தொடர்கிறது. முதலில், அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தையின் வேகத்தை மட்டுப்படுத்தியது; அணுசக்தி ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பின்னும் இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை.  அமெரிக்காவில் இருந்து பெறப்படும் அணு எரிபொருளின் மறுசுழற்சி பற்றிய கருத்து வேறுபாட்டைக் களைவதே நவம்பர் 2009-ல் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றதன் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.[7]   இவ்வரசு ஏற்கனவே ஏழு நாடுகளுடன் தனித்தனியே அணுசக்தி உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளது.  அமெரிக்கா, பிரான்சு மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அணுவுலை அமைப்பதற்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.[8]

இந்த சூழலில், அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி உற்பத்தி இலக்குகளின் சாத்தியப்பாடுகள் பற்றிய ஒரு மறுபரிசீலனை அவசியம் செய்யப்பட வேண்டியிருக்கிறது.  இந்தியாவில் அணுசக்தி உற்பத்தி பற்றிய இதுநாள் வரையிலான வரலாற்று அனுபவம் என்ன கூறுகிறது? இந்தியாவின் மின்சாரத் தேவையில் ஒரு முக்கியப் பங்களிப்பை செலுத்த அண்மை எதிர்காலத்தில் அணுசக்தித் துறைக்கு வாய்ப்பு இருக்கிறதா?  அணுசக்தியில் சமூக மற்றும் இராணுவத் திட்டங்களுக்கு இடையிலான இணைப்பு என்ன? அணுஆயுத உற்பத்தியின் மீது இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் தாக்கம் என்ன? பிரம்மாண்டமான அணுசக்தி விரிவாக்கத்தை நோக்கி இந்த அரசு முன்னேறவில்லை என்றால் அது ஏகாதிபத்திய சக்திகளை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு இந்தியாவைக் கொண்டுவிடுமா? இப்படிச் சில கேள்விகளைப் பற்றிக் கீழே விவாதிப்போம்.

2. அணு மின்சக்தி பற்றிய கணிப்புகள்:

அணுசக்தித் தேவை பற்றிய இந்த அரசின் வலியுறுத்தல்களில் இருந்து தொடங்குவோம்.  முன்னர் குறிப்பிட்டது போலவே, அடுத்த சில பத்தாண்டுகளில் அடையத்தக்கதாக சில பெருத்த ஆவலாதித்தனமான கணிப்புகளை அணுசக்தித் துறை முன்வைத்துள்ளது.  இந்தியா தனது நிதி ஆதாரங்களை அணுசக்தி வளர்ச்சியை நோக்கித் திருப்பவேண்டும் என்ற வாதத்தைத் தூண்டும்படியாக இந்த கணிப்புகள் அமைந்துள்ளன.

பல்வேறு ஆய்வுகளைப் பரிசீலித்து, 2050-களில் இந்தியாவின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 8 டிரில்லியன் கிலோவாட்-மணிகளாக (kWh) இருக்கும் என அணுசக்தித் துறை 2004-ம் ஆண்டில் மதிப்பீடு செய்தது.[9,10]  2002-2003-ல் மின் உற்பத்தி 0.6 டிரில்லியன் கிலோவாட்- மணிகளாக(kWh) இருந்தது என்றும், இது 13 மடங்கு அதிகரிக்கும் என்றும் அணுசக்தித் துறையின் ஆய்வு குறிப்பிடுகிறது.  மேலும், மக்கள்தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டபின் (மக்கள் தொகை அதிகரிப்பு சுமார் 1.5 பில்லியனில் [150 கோடி]- நிலைகொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது) நபர்வாரி மின்சாரப் பயன்பாடு 614 kWh யில் இருந்து 5305 kWh ஆக, சுமார் 9 மடங்கு உயரும் என்றும் இந்த ஆய்வு முன்னறிவிக்கிறது.

அணு மின்சாரம் இல்லாமல் இவ்வளவு பெரிய தேவையை சமாளிக்க சாத்தியமில்லை என்றும் இந்த ஆய்வு வாதிடுகிறது. 2050-களின் மொத்த மின்சாரத் தேவையில் 25 சதவீதத்தை அணுமின் சக்தி வழங்கும் என்றும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.  இக்கூற்றின்படி, 275 ஜிகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு ஆண்டுக்கு 2 டிரில்லியன் கிலோவாட்-மணி(kWh) அளவுக்கான அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றாகிறது.

இருப்பினும், அணுசக்தித் துறையின் இந்த ஆரம்ப ஆய்வு, புஷ்- மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னால் 2004-ல் வெளியிடப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நேரத்தில், இந்த அணுசக்தி உற்பத்தி பற்றிய கணிப்புகள் எல்லாம் மேலும் உயர்த்தப்பட்டன.  விவாதங்களில் இன்று சுட்டிக்காட்டப்படும் அணுசக்தி உற்பத்தி தொடர்பான அளவுகள் எல்லாம் அணுசக்தித் துறையின் புதிய கணிப்புகளில் இருந்து எடுத்தாளப்படுபவை.

நவம்பர், 2009 முடிய அணுசக்தித் துறையின் தலைவராய் இருந்த அனில் ககோத்கர், (இடதுசாரிக் கட்சிகளோடு தனது உறவை முறித்துக்கொண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல அரசு முடிவெடுத்துவிட்ட சமயத்தில் ஜூலை 4, 2008 அன்று,) இந்திய விஞ்ஞானக் கழகத்தில் உரையாற்றியபோதும்,[11] டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research) உரையாற்றியபோதும் (ஜூன் 2009-ல்) மின் தேவை பற்றிய தங்களது கணிப்புகளை அப்படியே இருத்திக்கொண்ட போதிலும், அணுஉலைகளின் மொத்த உற்பத்தித் திறன் பற்றிய தங்களது கணிப்புகளை 250 சதவீதம் உயர்த்திக் காட்டினார்.  இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறி, இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு மென்னீர் அணுவுலைகளையும் (LWR) எரிபொருளையும் (யுரேனியம்) இறக்குமதி செய்துகொள்ள அனுமதிக்கப்படுமானால், இந்த அணுஉலை எரிபொருட் கழிவுகளின் மறுசுழற்சி அணுவுலைகளின் உற்பத்தித் திறனை 650 ஜிகாவாட்டுகள் அளவுக்கு உயர்த்தும் என்று அறுதியிட்டுக் கூறினார்! இந்தப் புள்ளிவிவரங்கள்தான் இருவாரங்களுக்குப் பின்னர் பாராளுமன்ற விவாதத்தில் பிரனாப் முகர்ஜியால் எடுத்தாளப்பட்டன.

ஆக, 2050-ம் ஆண்டு வாக்கில் இந்திய மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவை அணுமின் சக்தி வழங்கும் என்று ககோத்கர் அனுமானித்தார்.  இந்த அனுமான அளவானது, இன்றைய இந்திய மொத்த மின் உற்பத்தியில் 2.64 சதவீதத்தை மட்டுமே வழங்கும் 4.12 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனைப் போன்று சுமார் 150 மடங்கு அதிகம் என்பதைக் கவனிக்கவும்.[12]  ககோத்கரின் கூற்றுக்கு அடிப்படையான இரண்டு வரைபடங்கள் அப்படியே படம் 1ல் தரப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகார மட்டத்தில் உள்ளோரால் இவ்வாறான புள்ளிவிவரங்கள் திரும்பத் திரும்ப எடுத்தாளப்படுகின்றன.  2050ம் ஆண்டுகளில் 470 ஜிகாவாட் மின்சாரத்தை அணுசக்தி வழங்கும் என்று சமீபத்தில் இந்தியப் பிரதமர் தனது அனுமானத்தை வெளியிட்டார். [13] இக்கூற்றுக்கான பிறப்பிடம் எதுவென்பது தெளிவாய் இல்லை. எனினும், அது ஒருக்கால் க்கோத்கர் தனது பேச்சில் தெரிவித்த பல்வகை மென்நீர் உலைகள் இறக்குமதி தொடர்பான இரண்டாவது சாத்தியப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கூற்றாக இருக்கலாம்.

படம் 1

 

3. அணு மின்சக்தி பற்றிய கணிப்புகளின் சுருக்கமான வரலாறு

இவ்வகை ஆர்வக்கோளாரான கணிப்புகளை அணுசக்தித் துறை கடந்த காலத்திலும் பலமுறை செய்துள்ளது. 1987-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அணுசக்தித் திறன் 18-20 ஜிகாவாட் அளவுக்கு இருக்கும் என அணுசக்தித் துறையின் முதல் செயலர் ஹோமி பாபா 1962-ம் ஆண்டில் அறிவித்தார்.[14]  எதார்த்தத்தில், 1987-ல் அது பாபாவின் கணிப்பில் வெறும் 5% ஆக, அதாவது 1.06 ஜிகாவாட்டுகளாக மட்டுமே இருந்தது.[15]  “செயல்பாடு இலக்கை மோசமாக நழுவ விட்டுவிட்டது” என்று பாபாவுக்கு அடுத்து வந்த விக்ரம் சாராபாய் 1970-ம் ஆண்டிலேயே ஒப்புக்கொள்ளவேண்டி இருந்தது.[16] இருப்பினும், அச்சமயம் தனது பத்தாண்டுக்கான செயல் திட்ட அறிக்கையை (profile) வெளியிட்ட சாராபாய், 1980-ல் அணுசக்தி 2.7 ஜிகாவாட்டுகள் என்ற இலக்கை அடையும் என்று குறிப்பிட்டார்.  ஆனால், எதார்த்தத்தில் அது இந்த கணிப்பில் 5ல் ஒரு பங்குக்கும் குறைவாக 510 மெகாவாட்டுகளாகவே இருந்தது. இந்த பத்தாண்டு செயல்திட்ட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் மூலதனச் செலவை ஈடுகட்டும் வகையில் 500 மெகாவாட் திறன்கொண்ட பெரிய அணுவுலைகளை நிறுவவேண்டிய தேவை இருப்பதாக அவர் முடிவு செய்திருந்தார்.  அதன்படி, ”1972-73 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 மெகாவாட் திறன்கொண்ட ஒரு புதிய அணு மின் நிலையத்தை அமைக்கவேண்டிய அதீதமான பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று அவர் அறிவித்தார்.[17]  இந்த அறிவிப்பு வந்து 35 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் இந்தியாவின் முதல் 500 மெகாவாட் அணுமின் நிலையம் – தாராப்பூர் 4 – 2005-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.

1974-ம் ஆண்டின் பொக்ரான் அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் சிவில் அணுசக்தித் துறையில் அன்னிய ஒத்துழைப்பு சரிந்ததே இலக்குகளில் அடைந்த தோல்விக்குக் காரணம் என்று சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆயினும், 2000 ஆண்டு அளவில், 10000 மெகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் கொண்ட உலைகளை அமைத்துவிடுவோம் என 1984-ம் ஆண்டில் தனது அணு சக்தி ”செயல் திட்டஅறிக்கை” (profile)யின் வாயிலாக அணுசக்தித் துறை அறிவித்தது.  1989-ல் அணுசக்தித் துறையால் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்த இலக்கை மறுபரிசீலனை செய்து அதன் சாத்தியப்பாட்டைக் கண்டறிந்ததுடன் நில்லாமல், தன் பங்குக்கு முன்வைக்கப்பட்ட அந்தத் திறன் இலக்கை சற்றே உயர்த்தவும் செய்தது.   இந்தத் திறன் இலக்கு பலமுறை வெளிப்படையாக மேற்கோள்காட்டிப்  பேசப்பட்டுள்ளது.  உதாரணமாக, ” நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 3 சதவீதமாக இருக்கும் அணு மின்சக்தி 2000-ம் ஆண்டில் 10% அளவுக்கு அதிகரிக்கும்படியான வேலைகள், 10000 மெகாவாட் அணுமின் உற்பத்திச் செயல் திட்ட அமலாக்கம் என்ற வகையில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது” என அணுசக்தி ஆணையத்தின் தலைவர் 1989-ல் எழுதினார்.[18]

இச் செயல் திட்டம் களமிறங்கி ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடந்த பின்னால் இந்திய கணக்குத் தணிக்கை முதன்மை அலுவலர் (Comptroller and Auditor General of India) அதன் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்தார்.  அவர் தனது பரிசீலனையின் முடிவாக, “மார்ச் 1998 முடிய ரூ.5291.48 கோடிகளை செலவழித்து இந்தச் செயல் திட்டம் அளித்த கூடுதல் மின் உற்பத்தி பெரிய பூச்சியமே” என எழுதினார்.[19] [அழுத்தம் சேர்க்கப்பட்டது]  மேலும்,  2009ம் ஆண்டு வரையிலும் கூட இந்த அணுமின்சக்தி இந்திய மொத்த மின் உற்பத்தியில் அதே 3% அளவுக்கே நீடிக்கிறது.

இந்த அணுசக்தித் துறை தனது குறுகிய கால இலக்கைக் கூட எட்ட முடிந்ததில்லை.  உதாரணமாக, “இன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் அணுசக்தித் துறை 6800 மெகாவாட் உற்பத்தித் திறன் இலக்கை எட்டும்” என்று 2003-ம் ஆண்டு ககோத்கர் அறிவித்தார்.[20]  ஆனால், ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னும் அணுசக்தி உற்பத்தித் திறன் 4120 மெகாவாட் என்ற அளவிலேயே இருக்கிறது.[21]

4. முப்படிநிலை அணுமின் திட்டம்

அணுசக்தித் துறை தனது முந்தைய வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றியதில்லை என்பது தெள்ளத் தெளிவு.  இந்நிலையில், அவர்களது தற்போதைய கணிப்புகள் நடைமுறை சாத்தியமானவையா? முதன்மையான விசயம் என்னவெனில், அணுசக்தித் துறையின் கணிப்புகள் ஆவலாதித் தனமானவையாகவும், சர்வதேச அளவிலான எதிர்பார்ப்புகளையும் விஞ்சி வெகுதொலைவில் நிற்பவையாகவும் உள்ளன. உதாரணமாக, மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (MIT) 2003-ம் ஆண்டு நடத்திய விரிந்த பல்நோக்கு ஆய்வின்படி, 2050-ம் ஆண்டில் உலக அளவிலான அணு மின்சக்தி உற்பத்தித் திறன் 1000 ஜிகா வாட்டுகளாக அதிகரித்து இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.[22]  இதற்கு சற்றும் ஒவ்வாத வகையில், 2050-ல் இந்தியா மட்டும் 650 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் பெற்றிருக்கும் என்கிறது நமது அணுசக்தித் துறை.  அதாவது, உலக உற்பத்தித் திறனில் 65 சதவீதத்தை இந்தியா மட்டுமே பெற்றிருக்குமாம்!

அணுசக்தித் துறையின் இந்த கணிப்புகள் எல்லாம் பாபாவால் முதன்முதலில் 1954-ம் ஆண்டு முன்மொழியப்பட்ட முப்படிநிலை அணுமின் திட்டத்தின் அடிப்படையில் அமைந்தவை.  இத்திட்டத்தை பின்னர் விவரமாக ஆய்வுக்கு உட்படுத்துவோம்.  இடையே, அதன் சாராம்சமான உண்மைகள் இவையே: திட்டத்தில் உள்ள மூன்று படிநிலைகளில் முதல் படிநிலை மட்டுமே யுரேனியத்தை எரிபொருளாகக் கொள்ளும் வழமையான அணுவுலைகளைக் கொண்டிருக்கிறது.  இரண்டாவது, மூன்றாவது படிநிலைகள் முறையே வீரிய ஈனுலைகள் (F.B.Rs) மற்றும் தோரிய அணுவுலைகளைக் கொண்டவை.  இந்த மூன்று படிநிலைகளில் முதல் படிநிலை அணுவுலைகள் மட்டுமே 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்துக்குப் பின், ஓரளவுக்கு நிறைவற்ற நிலையில் என்றபோதிலும், செயல்படுத்தப் பட்டுள்ளது.

இரண்டாவது, மூன்றாவது படிநிலைகள் உலக அளவில் எங்குமே வணிக ரீதியாகவும், விரிவாகவும் பயன்பாட்டில் இல்லாத ஒரு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கின்றன.  வீரிய ஈனுலைகள் பல நாடுகளில் முயன்று கைவிடப்பட்டவை. இந்தியாவின் எதிர்காலக் கனவான தோரியம் உலைகள் எங்குமே இதுவரை வணிகரீதியான செயல்பாட்டுக்கு வந்ததில்லை.

இருப்பினும், நமது அணுசக்தித் துறையின் மின் உற்பத்தி பற்றிய மேற்படிக் கணிப்பில், முதல் படிநிலை அணுவுலைகளின் பங்களிப்பு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஏதுமில்லை.  கணிப்பின் 90% மின்னாற்றல் திறன் 2வது மற்றும் 3வது படிநிலை அணுசக்தித் திட்டங்களில் இருந்து மட்டுமே வரவேண்டி இருக்கிறது.  ஆக, கிட்டத்தட்ட அணுசக்தித் துறையின் மின் ஆற்றல் பற்றிய முன்மொழிவுகள் அனைத்தும் இல்லாத தொழில்நுட்பத்தையும், சாத்தியமில்லை என்று உலகளவில் கைவிடப்பட்ட தொழில்நுட்பத்தையும் சார்ந்து இருக்கிறது!

இது வெறொரு விசயத்துக்கு இட்டுச் செல்கிறது.  சுயசார்பே அனைத்திலும் முதன்மையானதாய்க் கருதப்பட்ட காலகட்டத்தில் எழுந்த தொலைநோக்குப் பார்வையே இந்த முப்படிநிலை அணுமின் திட்டம்.  இந்தியாவின் யுரேனியத் தாதுவள இருப்போ தரத்திலும், அளவிலும் மிகக் குறைவானது.  உலக அளவிலான அணு உலைகளில் யுரேனியமே மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் பெரிய அளவிலான சுயசார்பு அணு சக்தித் திட்டதை இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே குறைந்த தரத்திலுள்ள எரிபொருளில் இருந்து சாத்தியப்பட்ட அளவுக்கு சக்தியை உறிஞ்சி எடுக்கும்படியாக இத்திட்டத்தின் இரண்டாவது படிநிலை வடிவமைக்கப்பட்டது. மூன்றாவது படிநிலை இந்தியாவில் விரவிக் கிடக்கும் தோரிய வளத்தில் கவனம் செலுத்தியது.

உலகில் அபரிமிதமான யுரேனிய இருப்பு உள்ளதால் பிந்தைய தொழில்நுட்பங்கள் வேறெந்த நாட்டிலும் பின்பற்றப்படவில்லை.  அண்மை எதிர்காலத்தில் இத் தொழில்நுட்பங்கள் முன்னிலைக்கு வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.  ”குறைந்தபட்சம் அடுத்த 50 ஆண்டுகளுக்காவது ஒற்றைச் சுழற்சி எரிபொருள் முறையே சிறந்த தெரிவு” என்று முன்னர் குறிப்பிட்ட எம்.ஐ.டி ஆய்வு வலியுறுத்திக் கூறுகிறது. அதாவது வழமையான யுரேனிய அணுவுலையே சிறந்த தேர்வு என்கிறது.

இந்தியா தனது இரண்டாவது, மூன்றாவது படிநிலைகளை சுயசார்பாய்க் கட்டியமைப்பதில் வெற்றி காணவில்லை என்பதால், முப்படிநிலை திட்டம் தோற்றுவிட்டது என்று சொல்லுவதே நல்லது.  இருப்பினும், இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், கொள்கை வகுப்போருக்கு (சுயசார்பை முதன்மைப்படுத்திய) இந்த முப்படிநிலை அணுமின் திட்டம் என்பது இனியும் ஒரு பொருளற்றது. ஏனெனில், கடந்த இருபது ஆண்டுகளில் சுயசார்புக்கான முக்கியத்துவம் என்பது வெகுவாய் நீர்த்துப் போய்விட்டது.

உண்மையில், இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்று, சர்வதேச யுரேனிய வர்த்தகத்தில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் இருந்து அணுவுலைகளை இறக்குமதி செய்துகொள்ளவும் இந்தியா அனுமதிக்கப்பட்டிருப்பதாகும்.  வீரிய ஈனுலை அல்லது தோரியம் அணுவுலை மூலம் தயாரிக்கப்படும் மின்சக்திக்கு ஆகும் செலவைக் காட்டிலும் இவ்வகையில் (யுரேனியம் அணுவுலை மூலம்) உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி (இறக்குமதி செய்யப்பட்ட போதிலும்) மலிவாய் இருக்கப்போவதால் முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின்பால் செலுத்தப்படும் கவனமும் அமைதியாகக் கைகழுவப்படக் கூடும்.  [இந்திய அணுஆயுதத் திட்டத்திற்கு வீரிய ஈனுலைகள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஆகவே கட்டுமானத்தில் இருக்கும் சில அணுவுலைகளுக்கு அப்பால் மேலும் சிலவும் கட்டியமைக்கப்பட சாத்தியம் உண்டு.  ஆனால், அதற்கும் மின்சக்தி உற்பத்தி பற்றிய முன்மொழிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.]

இருப்பினும் மூன்று படிநிலைகளைக் கொண்ட இந்திய அணுசக்தித் திட்டத்தைப் பற்றி கீழே விவாதிப்போம்.

4.1 சுருக்கமான தொழில்நுட்ப விவரிப்பு

இந்தியாவின் யுரேனியக் கனிமவள இருப்பு குறைவானது என்ற ஒப்புதலே இந்த முப்படிநிலைத் திட்டத்துக்கு அடிப்படை. ககோத்கர் கூறியதுபோல, ”அணு மின்சக்திக்கு இந்தியாவில் யுரேனியம் இல்லை”.[23]  பதிலாக, உலக அளவில் ஏராளமான தோரிய இருப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்த சாதகத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டுதான் முப்படிநிலை வழிமுறை வடிவமைக்கப்பட்டது.

இந்த முப்படிநிலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் பற்றிய நல்லதொரு ஆய்வை வெங்கடராமன் அவர்கள் எழுதிய நூலில் காணலாம்.[24] மற்றொரு ஆய்வை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் வலைத்தளத்தில் காணலாம்.[25]  இதை மிகச் சுருக்கமாக இங்கு தொகுத்துத் தருகிறோம்.  அணுசக்தித் திட்டத்தின் முதல் படிநிலை அதியழுத்த கனநீர் அணுவுலையைப் (PHWRs) பயன்படுத்துகிறது. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 0.7% அளவே யுரேனியம்-235 (U235) உள்ளது. மற்றது U238. அணுவுலையில் பயன்படும் அணுப்பிளவு எரிபொருள் U235.  எனவே பெரும்பாலும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியம், மைய விலக்கு விசையை அடிப்படையாகக் கொண்ட அதிவேகக் கடைசல்களைக் கொண்டு  [centrifuges ] U238ஐ பிரித்தெடுப்பதன் மூலமாக  U235இன் விழுக்காட்டை அதிகரித்து செறிவூட்டப்படுகிறது.

அதியழுத்த கனநீர் அணுவுலையில் (PHWR) எரிபொருளை செறிவூட்டுத்தல் இன்றி நேரடியாகப் பயன்படுத்த முடியும்.  இது செறிவூட்டுத்துதலுக்கான செலவை மிச்சப்படுத்துகிறது.  ஆனால், இவ்வகை அணுவுலைகளில் அணுக்கருப் பிளவை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தி நடத்துவதற்கான தணிப்பானாக [moderator] செயல்படும் கனநீரின் விலை மிக அதிகம் என்பதே இந்த வகை உலைகளின் பாதக அம்சமாகும். இந்த அணுவுலைகளின் செயல்பாட்டின்போது U238 களில் சில புளூடோனியம்-239 (Pu239) ஆக மாற்றமடைவதால் பாபா இவ்வகை அணுவுலைகளைத் தேர்ந்தெடுத்தார்.

இரண்டாவது படிநிலையில், வீரிய ஈனுலையில் (FBR) மேற்சொன்ன புளூடோனியம், முதல் படிநிலையில் பயன்படுத்தப்பட்டு எஞ்சிய யுரேனியக் கழிவுடன் சேர்த்து எரிபொருளாக அளிக்கப்படுகிறது.  இவ்வுலைச் செயல்பாட்டின்போது புளூடோனியம் எரிபொருளாக எடுத்துக்கொள்ளப்படுகையில் அதனுடன் சேர்த்து அளிக்கப்பட்ட யுரேனியக் கழிவையும் புளூடோனியமாக மாற்றி தனக்கான எரிபொருளைத் தானே ஈன்றெடுத்துக் கொள்கிறது.  கோட்பாட்டளவில், இந்த வழிமுறை யுரேனியக் கழிவையும் பயன்படுத்திக்கொள்வதால் இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தின் முழு சக்தியையும் உறுஞ்சி எடுத்துவிடுகிறது.

மூன்றாவது படிநிலை வேறுவிதமான ஒரு தற்பெருக்கத்தைக் கொண்டது. வீரிய ஈனுலையின் அணுப்பிளவுச் செயல்பாட்டுப் பகுதி அல்லது மையம் தோரியம்-232 (Th232) ஆல் போர்த்தப்படுகிறது.  இவ்வுலையின் செயல்பாட்டின்போது போர்த்தப்பட்ட தோரியம் யுரேனியமாக (மற்றொரு யுரேனியத் தனிமமாக- isotope ) U233 மாற்றம் அடைகிறது. இது ஒரு அணுப்பிளவு எரிபொருளாகப் பயன்படக் கூடியது.  [இவை யுரேனியத்தின் பொதுவான இரு தனிமங்கள்.  அதாவது, ஒரே இரசாயனக் கூறுகளையும் –properties- மாறுபட்ட பௌதீகக் கூறுகளையும் கொண்டவை.  அவற்றின் மேல் குறிக்கப்பட்டுள்ள எண் –பொருண்மை எண்- அதன் அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கும்.  இக்கட்டுரை தொடர்பாக வாசகர் U என்ற வடிவம் தாங்கிய தனிமம் அணுப்பிளவு எரிபொருளாகப் பயன்படக் கூடியது என்ற அளவுக்குத் தெரிந்துகொண்டால் போதுமானது] தோரியத்தில் இருந்து யுரேனியமாக உருமாற்றப்பெரும் இந்த ஆரம்பத் திரட்சி மூன்றாவது படிநிலை அணுவுலையில் எரிபொருளாக அளிக்கப்படுகிறது.  இந்த அணுவுலையின் மையமும் முந்தைய வீரிய ஈனுலையில் போலவே தோரியத்தால் போர்த்தப்படக் கூடியது.  ஆக இந்த அணுவுலைகளின் செயல்பாடு கூடுதலான யுரேனியத்தை U233உற்பத்தி செய்த வண்ணம் இருக்கும். எனவே, இந்தியாவின் ஏராளமான தோரீய இருப்பைப் பயன்படுத்துவதற்கு இந்த முப்படிநிலை வழிமுறை வகை செய்யும் என்று பாபா பரிந்துரைத்தார்.

நடப்பைக் கணக்கில் கொண்டு பார்க்கையில் இந்த முப்படிநிலை அணுசக்தித் திட்டம் பற்றிய பாபாவின் பரிந்துரைகள் காலத்தை முந்தியவையும் நடைமுறைச் சாத்தியம் அற்றவையும் ஆகும் என்பது தெளிவு.  இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டு 55 ஆண்டுகள் கடந்த பின்னும் திட்டம் முதல் படியிலேயே சிக்கிக் கிடக்கிறது.

5. முதல் படிநிலை

முதல் படிநிலை என்பது முப்படிநிலைத் திட்டம் தொடங்கப்படுவதற்கான முதல் படி என்ற அளவுக்கே முக்கியமானது.  பாபாவின் மாபெரும் திட்டத்தின் மீசிறு துளியே இது.  இந்தியாவின் யுரேனிய இருப்பு 10 ஜிகாவாட் [1000 மெகாவாட் = 1 ஜிகாவாட்] திறன் கொண்ட அணுவுலைகள் அமைக்கப்படுவதற்கு மட்டுமே போதுமானது என அணுசக்தித் துறை மதிப்பீடு செய்துள்ளது.  அது ககோத்கரின் 2050-ம் ஆண்டுக்கான இறுதிக் கணிப்பில் வெறும் 2% மட்டுமே.[11]  இந்த சுதேசித் திறனுடன் இறக்குமதி யுரேனியம் மற்றும் அணுவுலைத் திறனையும் இணைக்க அணுசக்தித் துறை திட்டமிடுகிறது.  இந்த இறக்குமதி அணுவுலைகளும் கூட அதிகரிக்கப்போகும் மின்சக்தி 2050-களின் அணுசக்தித் திறனில் அற்பமான ஒரு பின்னமே என்று வெளிப்படையாகவேனும் அணுசக்தித் துறை கூறிக்கொள்கிறது.

இருப்பினும், வணிகரீதியாக செயல்படுத்தப்படப் போவது என்னவோ அணுசக்தித் திட்டத்தின் இந்த முதல் படிநிலையை மட்டுமே.  நாம் முன்னர் குறிப்பிட்டது போலவும், பின்னர் விரிவாய் விவாதிக்க இருப்பது போலவும், இப்படித்தான் நடக்க சாத்தியமுள்ளது.  ஆக, இந்தியாவில் அணு மின் உற்பத்தி பற்றிய நடைமுறை சாத்தியப்பாடுள்ள விவாதம் சாராம்சத்தில் அணுசக்தித் திட்டத்தின் இந்த முதல் படிநிலையைப் பற்றியதாகவே உள்ளது.  இந்தப் படிநிலை (2வது, 3வது நிலைகளுக்கு மாறாக) வழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இது பற்றிய விவாதம் அணு மின்சக்தி பற்றிய உலகளாவிய விவாதத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

கீழ்க்கண்ட முக்கியமான கேள்விகளை நாம் பரிசீலிப்போம்:

  • அணுசக்தி பற்றிய கருத்து உலகளாவிய புத்தெழுச்சி கண்டிருப்பது ஏன்?
  • அணுசக்தி பற்றிய பொருளியல் கூறுகள் பகர்வது என்ன?
  • அணுசக்தி அமைப்புகளால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எத்தகையவை?
  • இக்காரணிகள் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்துகின்றன?

5.1 அணுசக்தி மறுமலர்ச்சி

பெருத்த மூலதன உள்ளீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் ஆண்டுகள் பலவாய் மீளா உறக்கத்தில் இருந்த அணுசக்தித் துறை, குறிப்பாக மேலைநாடுகளில், புத்தெழுச்சி பெற்றது போல் காணப்படுகிறது.  [சீனாவைப் போன்ற சில வளர்முக நாடுகளும் அணுசக்தி விரிவாக்கத்துக்கான ஆவல்மிகு திட்டங்களை அறிவித்திருக்கின்றன] தட்பவெப்ப மாறாட்டம் மற்றும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் ஆகியவை தோற்றுவித்த பதற்றம் பகுதியளவுக்கு இந்த புத்தெழுச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இரண்டாவதும், பெரிதும் வெளிப்படுத்தப் படாததுமான காரணம் புவி-அரசியல் ஆகும். எகானமிஸ்ட் ஏடு தெரிவிப்பதுபோல், “எண்ணை, எரிவாயு வளங்கள் நம்பத்தகாத …அரசுகள் வசம் இருப்பதாக மேலை நாட்டு அரசுகள் அஞ்சுகின்றன.  அணுசக்தித் துறைக்குத் தேவையான மூலப்பொருள் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நட்புப் பிரதேசங்களில் கிடைக்கின்றன”[27]

கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பட்ட விரிவான விவாதங்களும், அதற்குப் பொருத்தமான கொள்கை மாற்றங்களும் நடந்துவரும் வேளையில், பெரிதாய் முன் தள்ளப்படும் இந்த அணுசக்தி மறுமலர்ச்சி பெருத்த பிரச்சினைகளில் சிக்கித் தத்தளிக்கிறது. மகாராட்டிர மாநிலத்தின் ஜெய்தாபூரில் அணுவுலை நிர்மாணிக்க இருப்பதாக அறியப்படும் அரிவா என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனம் உலக அளவில் முதன் முறையாக தலைமுறை III ரக அணுவுலையை பின்லாந்தில் நிறுவிவருகிறது. இருப்பினும், இது கால இலக்கிற்கு மூன்று ஆண்டுகள் தாமதமாகும் என்றும், திட்டச் செலவைவிட 60% கூடுதலாகும் என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்சொன்ன அரிவா நிருவனமும், இந்தியாவில் அணுவுலை அமைக்க இருக்கும் வெஸ்டிங்ஹவுஸ் என்ற அமெரிக்க நிறுவனமும் பிரிட்டனில் புதிய அணுவுலைக் கட்டுமானங்களை செய்ய இருகின்றன.  அவை தற்சமயம் ஒழுங்குமுறைப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட இருக்கும் அணுவுலைக் கட்டுமானங்கள் குறித்து பிரிட்டிஷ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் [Health and Safety Executive] ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.  அந்த கட்டுமானங்கள் பற்றிய தனது ஒத்த அறிக்கைகளில் இந்த இரு நிறுவனங்களின் வடிவமைப்புகள் பற்றியும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், “இந்த வடிவமைப்புகளில் பாதுகாப்பு தொடர்பான ஏராளமான ஓட்டைகளை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம்… இவை திருப்திகரமாக சரிசெய்யப்படவில்லை என்றால் நாங்கள் வடிவமைப்பு ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என்றும் கூறியிருக்கிறார்.[28, 29] (இந்த அறிக்கைகளின் சுருக்கம் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.[30])

தட்பவெப்பநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்ள வல்லது அணுசக்தியே என்ற வாதமும் வன்மையாக மறுக்கப்பட்டிருக்கிறது.  உதாரணமாக, காற்றாலை மற்றும் சிறு நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட மாற்று சக்தி மூலங்களை முன்னிருத்தி லொவின்ஸும் ஷேக்கும் விவாதித்துள்ளனர்.[31]  இவ்வாறான மாற்றுக் கருத்துகளுக்கு இடையிலும், அணுவுலை விபத்தையும், பல துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் புறந்தள்ளிவிட்டு அடுத்த சில பத்தாண்டுகளில் அணுவுலைகள் பல நிர்மாணிக்கப்பட உள்ளதுபோல் தெரிகிறது.

எனவே, முதலில் இந்த அணு மின் உற்பத்திச் செலவு கட்டுப்படியாகக் கூடியதா, அணுசக்தி பாதுகாப்பானதா என்பன பற்றியும்; அடுத்து, அணுசக்தி பற்றிய உலகளவிலான விவாதம் இந்தியாவுக்கு எவ்வகையில் பொருந்தும் என்பது பற்றியும் முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.  குறைந்தபட்சம் அடுத்த சில பத்தாண்டுகளுக்காவது இந்தியாவின் மீது விதிக்கப்படும் தட்பவெப்ப உடன்படிக்கைகளின் படியான கடப்பாடுகள் வளர்ந்த நாடுகளின் மீதான கடப்பாடுகளில் இருந்து மாறுபட்டதாய் இருக்கும்.  அடுத்து, மிகக் குறைந்த யுரேனிய வளத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் விரிந்த அளவிலான அணுசக்தித் திட்டங்கள் எரிபொருளுக்காக இந்நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணியச் செய்யும்.  தெளிவாக இவ்விளைவு விரும்பத்தக்கது அல்ல. இது பற்றியும், மேலும் சில பிரச்சினைகள் குறித்தும் கீழே விவாதிப்போம்.

5.2 அணுசக்தியின் பொருளியல்

அணுமின் உலைகளின் நிர்மாணச் செலவு ஏராளம். ஆனால், நிலக்கரி-அனல் மின்நிலையங்கள் போன்றவற்றோடு ஒப்பிடும்போது இவற்றின் இயக்கச் செலவு மிகவும் சிக்கனமானது என்பது அணுசக்தி செலவீனம் பற்றிய மையமான உண்மை.  எனவே, பிற சக்தி மூலங்களோடு அணு மின்சக்திக்கு ஆகும் செலவை ஒப்பிடுவதற்கு “சமன்செய் ஆற்றல் செலவீனம்” [ levelized cost of energy] என்ற பொது நிலைப்பாடு பயன்படுத்தப்படுகிறது.  சுருக்கமாக, இந்த சமன்செய் ஆற்றல் செலவீனம் l என்பது கீழ்க்காணும் சூத்திரத்தால் வரையறுக்கப்படுகிறது.

இங்கு Ct என்பது t என்ற ஆண்டில் நிர்மாணம், பராமரிப்பு, எரிபொருள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய செலவீனத்தின் மொத்தத் தொகையைக் குறிக்கிறது. Et என்பது t ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் குறிக்கிறது. n என்பது உலையின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது; r என்பது தள்ளுபடி விலையைக் ( discount rate) குறிக்கிறது.

இங்கு சொல்லப்பட்ட கருத்து எளிமையானது.  அணுவுலையில் உள்ளீடு செய்யப்பட்ட மூலதனம் வேறுவகையில் பயன்பட்டிருக்கக் கூடும். எனவே இந்த மூலதனம் ஈட்டியிருக்கக்கூடிய வருவாய்க்கு ஈடுசெய்யும் வகையில் அணுவுலையின் இயக்கச் செலவு மலிவாய் இருக்கவேண்டும். [அதற்குப் பொருத்தமான] தள்ளுபடி வீதத்தால் இந்த லாப சதவீதம் உறுதிசெய்யப்படுகிறது.

இந்த கருத்தாக்கத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள உதவும் ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.  ஒரு அனல் மின் நிலையம் அமைக்க ஆகும் செலவு ரூ.100 என்றும் அதை இயக்க ஆகும் செலவு ஆண்டொன்றுக்கு ரூ.10 என்றும் கொள்வோம்.  அதே சமயம் அணுமின் நிலையம் அமைக்க ரூ.150-ம் இயக்குவதற்கு ஆண்டுக்கு ரூ.5-ம் ஆவதாகக் கொள்வோம்.  மேலும், இரண்டும் ஏககாலத்தில் திடீரென அமைக்கப்படுவதாகவும், அவற்றின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகவும், அவை சம அளவு மின்சக்தியை உற்பத்தி செய்வதாகவும் கொள்வோம். ஒரு பொதுக் கணக்கில், அணுமின் நிலையத்தில் ஆனதைவிட (ரூ.225) அனல்மின் நிலையத்தில் அதிகச் செலவீனம் (ரூ.250) ஆகியுள்ளது.  ஆனால் இக் கணக்கு, அணுமின் நிலையத்தின் துவக்ககாலத்திலேயே உள்ளீடு செய்யப்பட்ட கூடுதல் தொகையான ரூ.50  வேறெங்கும் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. தள்ளுபடி விலை வீதம் 10 ஆக இருக்கும்போது அணுமின் சக்தியும், 5% ஆக இருக்கும்போது அனல் மின்சக்தியும் பெருத்த செலவீனமாக இருப்பதை வாசகர் மேற்படி சூத்திரத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.  இரண்டுக்குமான வெட்டுப்புள்ளி 5.56% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. [என்னைப் போன்ற, மேற்படி சூத்திரத்தில் பொருத்திப் பார்க்கத் தெரியாதவர்களுக்கான எளிய வழி: மேற்சொன்ன உதாரணத்தில் அனல் மின்நிலையத்தின் பதினைந்து ஆண்டுகளுக்கான சராசரி நிலை மூலதனம்+ மாறும் மூலதனம் ரூ.180.  அணு மின்நிலையத்தில் அது ரூ.190.  ஆக, கூடுதல் மூலதனமான ரூ.10 க்கு ஈடு செய்ய வேண்டிய லாபக் குறைவு வீதம் (10/180 x 100) 5.555 அதாவது 5.6% ..  மொ-ர்.]

5.2.1 இந்தியாவில் அணுசக்தியின் பொருளியல்

நாம் முன்னரே குறிப்பிட்டதுபோல, வழமையானதிலிருந்து சற்றே மாறுபட்ட அணுவுலைகளை இந்தியா பயன்படுத்துகிறது.  இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தை செறிவூட்டுதல் இன்றி அப்படியே பயன்படுத்தும் சாதகத் தன்மை இந்த வகை அணுவுலைகளுக்கு இருக்கிறது.  இவ்வழியில் செறிவூட்டும் செலவு மிச்சமானாலும், இந்த அணுவுலைகள் விலை உயர்ந்த கனநீரைப் பயன்படுத்துகின்றன.  இந்திய அணுசக்தித் துறை எதிர்காலத்தில் இவ்வாறான மேலும் பல அதிஅழுத்த கனநீர் அணுவுலைகளை (PHBRs) நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய அணு மின்சக்தி பற்றிய பொருளியலை அறிந்துகொள்வது இரண்டு காரணக்கூறுகளால் சிக்கலாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, கனநீர் உற்பத்தி உள்ளிட்ட அணு மின்சக்தி தொடர்பான பல்வேறு அம்சங்களுக்கு அளிக்கப்படும் மானியம் பற்றி துல்லியமான மதிப்பீட்டைப் பெறுவது கடினமாக உள்ளது.[32]  இரண்டாவதாக, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி செய்யப்படும் இடத்தில் அணுசக்தித் துறை சொல்லப்படும் ஒரு “மூடிய சுழற்சி” [closed cycle] முறையைப் பயன்படுத்துகிறது. இந்த மறுசுழற்சி முறை பெருத்த செலவு பிடிக்கக் கூடியது. எனினும், தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அடக்கவிலை பற்றிய அதிகாரபூர்வமான மதிப்பீட்டில் இதற்கான செலவு சேர்க்கப்படவில்லை.  அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது படிநிலையில் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட எரிபொருள் இறுதியாகப் பயன்படுத்தப்படக் கூடியது என்பதே இதற்கான காரணமாக இருக்கிறது. இந்த இரண்டாவது படிநிலை இதுநாள் வரை நடைமுறைக்கு வரவில்லை என்பதால், உண்மையில் இக்காரணம் அடிப்படை ஏதும் அற்றது.

சில சமயங்களில் அணு மின்சக்தி அனல் மின்சக்தியை விட மலிவானது என்ற வாதமும் வைக்கப்படுகிறது.[33,34] ஆனால், அளிக்கப்படும் மானியம் மற்றும் மேற்படி செலவீனங்களை இந்த வாதங்கள் மொத்தமாகப் புறந்தள்ளிவிட்டுப் பேசுகின்றன. கனநீர் உற்பத்திக்கு அளிக்கப்படும் மானியங்கள் பற்றிய குறைந்தபட்ச மதிப்பீட்டின் அடிப்படையில்[32] தள்ளுபடி விலை வீதத்தை ஆகக் குறைவாக 3 சதவீதத்தில் இருத்திப் பார்த்தாலும், அணுமின்சக்தி, அனல் மின்சக்தியின் உற்பத்திச் செலவோடு ஒப்பிடத்தக்க வகையில் இல்லை.  மேற்சொன்ன மறுசுழற்சிக்கு ஆகும் செலவை முழுமையாக விலக்கிப் பார்த்த பின்னும் இந்த முடிவே உறுதிசெய்யப்படுகிறது. [35,36]

சர்வதேச அளவிலான வரையரைகளுக்கும் இந்த நிலைப்பாடு பொருந்தி நிற்பதைக் கீழே விவரிப்போம்.

5. 2. 2 சர்வதேச அளவில் அணு மின்சக்தியின் பொருளியல் சாத்தியப்பாடுகள்

மேற்சொன்ன எம்.ஐ.டி. யின் 2003-ம் ஆண்டு ஆய்வு, பல்வேறுபட்ட தள்ளுபடி விலைகளையும் பரிசீலித்த பின்னர், “கட்டுப்பாடற்ற சந்தையில், நிலக்கரி மற்றும் எரிவாயு மின்சாரத்தின் அடக்க விலையோடு அணு மின்சக்தியின் அடக்கவிலை தற்போதைக்குப் போட்டியிடும் நிலையில் இல்லை” என்று இறுதிசெய்தது.[22]  சிக்காக்கோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட விரிந்த ஆய்வும் இதே முடிவைத்தான் வந்தடைந்தது. பிரான்சைத் தவிர, “பெரும்பாலான பிற நாடுகளில் அணுசக்திக்கு ஆகும் பெருத்த மூலதனச் செலவு, அது நிலக்கரி, எரிவாயுவகை மின்சாரத் தொழில்நுட்பங்களுடன் போட்டியிடும் நிலையைத் தடுக்கிறது” என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.[37] மேலும், “மிகச் சாதகமான எடுத்துக்காட்டுகளிலும்”  அமெரிக்காவின் முதன்மையான புதிய அணுவுலைகளின் நிர்மாணச் செலவு நிலக்கரி மற்றும் எரிவாயு மின் நிலையங்களின் அதிகபட்ச நிர்மாணச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்  என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. [ 1998 முதல் மின்சார உற்பத்தியின் அடக்கவிலை பற்றிய OECD-யின் மதிப்பீடுகளை சிகாகோ பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு பயன்படுத்தியுள்ளது.  2005-ம் ஆண்டில் OECD-யின் மதிப்பீடுகள் மாற்றப்பட்டு இருக்கின்றன.  அதன்படி அணு மின்சக்தியின் உற்பத்திச் செலவு பல நாடுகளில் மலிவாகி உள்ளதாக அதன் அறிக்கையில் காணப்படுகிறது.[39]  பலநாடுகளுக்கும் அனுப்பிய கேள்விப்படிவத்தில் பெற்ற விவரங்களின் அடிப்படையில் OECD-யின் இந்த முடிவு வந்தடையப்பட்டுள்ளது.  2005-ம் ஆண்டு அது பயன்படுத்திய புள்ளிவிவரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை.  உதாரணமாக அந்த அறிக்கையின் 43-ம் பக்கத்தில், பின்லாந்தின் அணுவுலைக் கட்டுமானச் செலவு கிலோவாட்டுக்கு சுமார் 2000 அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் பின்லாந்தில் அரிவா நிறுவனத்தால் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 1600 மெகாவாட் திறன்கொண்ட அணுவுலையின் கட்டுமானச் செலவு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்படி ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கான அடக்க விலை OECD எடுத்தாண்டதைப்போல இரு மடங்கு ஆகும்.]

“கொட்டிக் கிடக்கும் மலிவான சரக்கு” என்று இதன் ஆர்வலர்களால், முன்னர் பேரார்வத்துடன் கூத்தாடப்பட்ட அணு மின்சக்தி அதற்கு மாறாக, 1970-ம் ஆண்டு தொட்டு பெருத்த செலவீனமானது என்பதையே நிரூபித்திருக்கிறது என்று எகானமிஸ்ட் ஏடு தொகுத்துக் கூறுகிறது. [42]  இதன் காரணமாகவே கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுவுலைக் கட்டுமானத்திற்கான விண்ணப்பம் ஏதுமில்லை.

அணுசக்தியின் அடக்க விலை பற்றிய இந்த கணக்குகளை எல்லாம் கரியமில வாயு வெளியேற்றத்தின் மீது சுமத்தப்படும் ஒரு விலை மாற்றிவிடுமா என்பது மற்றொரு கேள்வி.  இது தொடர்பாக, “ஐரோப்பிய கார்பன் வெளியேற்ற வர்த்தகத் திட்டத்தின் படி வெளியேற்றப்படும் ஒரு டன் கார்பனுக்கு  €14 (யூரோக்கள்) என்று விலை வைக்கப்பட்டுள்ளது.  அணுவுலைகளைக் கவர்ச்சிகரமானதாக்கும் என மின் உற்பத்தி முதலாளிகள் எதிர்பார்த்த € 50 விட இந்த விலை மிகவும் குறைவாகிப் போனது” என்று எகானமிஸ்ட் ஏடு குறிப்பிடுகிறது.[43]

எனவே நிலக்கரி சக்தியைக் காட்டிலும் அணுசக்தி மிகவும் செலவீனமானது எனும் ஒருமித்த கருத்து சர்வதேச அளவில் நிலவுகிறது. [இருப்பினும், சூரிய சக்தி போன்ற சில மாற்று சக்தி வளங்களைக் காட்டிலும் அணுசக்தி கணிசமான அளவு மலிவானதாகவே இருந்துவருகிறது.] [இது பொதுவான உலக வழக்கு.  ஆனால், ஆண்டுதோரும் அதிகரிக்கும் அணுக் கழிவுப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஆகும் செலவு; சுமார் 25 ஆண்டுகளில் மூடுவிழா காணும் அணுவுலைகள் அமைந்த இடமும் அதன் நெருங்கிய சுற்றுவட்டாரமும் புவிப்பரப்பில் நிறந்தரமாய்ப் பயனற்றுப் போவதற்கான இழப்பீட்டுக் கணக்கு; செயல் முடக்கப்பட்ட உலையைப் பல்லாயிரம் ஆண்டுகாலம் போர்த்திப் பாதுகாப்பதற்கு ஆகும் செலவு .. இன்னும் பலவும் அணு மின்சக்தியின் அடக்க விலையைக் கணக்கிடுகையில் சேர்க்கப்படுவதாகவே தெரியவில்லை –மொ-ர்] இந்தியாவும் இந்த வரையரையுடன் ஒத்துப்போகிறது.  இந்த ஆய்வு முடிவுகள் அணுசக்தித் தொழிற்துறை வளர்ச்சியை சோர்வடையச் செய்த போதிலும், புதிய அணுவுலைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடவில்லை.  மாறாக, அணுசக்தி பெருத்த செலவீனமானது என்ற இந்த உண்மை, சில சமயங்களில், அணுசக்தித் துறைக்கு கொள்கை ரீதியான உதவிகளும், மானியங்களும் வழங்கப்படுவது அவசியம் என்ற வகையில் சிந்திக்க வைத்திருக்கிறது!

5.3 பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் பற்றி

முன்னர் கூறியது போல தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கவலைகள் அணுசக்தித் தொழிலின் சமீபத்திய புத்தெழுச்சிக்குப் பகுதியளவுக் காரணமாக அமைகிறது.  அணு மின்சக்தி பசுமைக் குடில் வாயுக்களை வெளியிடுவதில்லை என்ற சாதக அம்சத்தைப் பெற்றிருக்கிறது.  இதன் விளைவாக (வேறு சில அற்பக் காரணங்களும் உள்ளிட்டு) க்ரீன்பீஸ் அமைப்பின் செல்வாக்கு மிக்க முன்னாள் உறுப்பினர் பாட்ரிக் மூர் போன்ற சில சூழலியலாளர்கள் அணுசக்தியின் பிரச்சாரகர்கள் ஆகியிருக்கிறார்கள்.  இருப்பினும், க்ரீன்பீஸ் அமைப்பும் பிற பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்களும் இன்றளவும் அணு மின்சக்தியை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன.  அவர்களது முதன்மையான மறுப்புரைகளில் ஒன்று அதிகரித்துவரும் அணுக் கழிவுகள் பற்றியது.

அணுவுலைகள் கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் சில நீண்ட நெடுங்காலத்துக்கு அபாயகரமானதாகத் தொடரக்கூடியவை.  உதாரணமாக, அணுவுலைக் கழிவான புளூடோனியத்தின் (Pu239 ) அரை ஆயுள் 24,000 ஆண்டுகள்.  (அதாவது புளூடோனியம் தன் கதிரியக்க சக்தியில் பாதியை இழக்க 24000 ஆண்டுகள் பிடிக்கும்.  எஞ்சியதில் பாதியை இழக்க மேலும் 24000 ஆண்டுகள் … இப்படி)

துரதிஷ்டவசமாக, இக்கழிவுகளை வெளியேற்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஏதுமில்லை.  அணுசக்தித் திட்டவியலாளர்களிடையே இந்த நீண்ட காலப்போக்கில் ஏற்பட்டிருக்கும் சற்றே உடன்பாடான கருத்து, இந்தக் கழிவுகளை அழிக்கவொண்ணா அடியாழ இடுகாடுகளில் (geological repository) இட்டு மூடிவிடுவது என்பதே.  இன்று வரை அத்தகைய ஒரே ஒரு இடுகாடு மட்டும்தான் –அமெரிக்க அணுக்கழிவு தனிமைப்படுத்தல் முன்மாதிரி இடுகாடு – அமைக்கப்பட்டுள்ளது.  அதுவும் இராணுவம் தொடர்பான அணுக் கழிவுகளை இடுவதற்காகவே இயங்குகிறது.  அணுசக்தியின் சமூகப் பயன்பாடு வெளிப்படுத்திய கதிரியக்கக் கழிவுகளில் ஒரு பகுதியை யூக்கா மலை அணுக்கழிவு இடுகாட்டில் போட்டுவிடலாம் என அமெரிக்கா திட்டமிடுகிறது.  ஆனால், அந்த இடுகாடு இன்னும் கட்டப்படவில்லை. இது தொடர்பான திட்டங்கள், அவற்றின் செயலாக்க வழிமுறைகள் பற்றிய விவாதங்களை அணுப் பொறியியல் கையேட்டில் காணலாம்.[44]

இந்தியாவில், எரிக்கப்பட்ட யுரேனியம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.  ஆயினும், இந்த மறுசுழற்சி முறையும் அபாயகரமான கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. தற்போதைக்கு இதன் அளவு குறைவானதே.  2001-ம் ஆண்டளவில் இந்தியாவில் திரண்டிருக்கும் இறுதி நிலைக் கதிரியக்கக் கழிவின் ( high-level-waste ) [மா பாதகக் கழிவின்] அளவு 5000 கனமீட்டர் (m3) என மதிப்பிடப்பட்டது (இது சுமார் இரு பெரும் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவுக்கு ஒப்பானது)[45]. இந்தக் கழிவுகளின் அளவு மளமளவென அதிகரிக்க இருக்கிறது. 2011-ம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கு 700 கனமீட்டர் அளவுக்கு இறுதி நிலைக் கதிரியக்கக் கழிவு உற்பத்தி செய்யப்படும் என இந்திய அணுசக்தித் துறை 2004-ம் ஆண்டில் மதிப்பிட்டிருக்கிறது. இறுதியாக இந்தக் கழிவுகள் அடியாழ இடுகாடுகளில் புதைக்கப்படுவதன் மூலம் வெளியேற்றப்படும் என்கிறது அணுசக்தித் துறை. ஆயினும், ”இந்த நடவடிக்கையின் சாத்தியப்பாடு பற்றிய செயல் விளக்கம் மற்றும் இந்த வழிமுறையின் பாதுகாப்புத் தன்மை குறித்த விசயங்கள் நம் முன் நிற்கும் பெருத்த சவாலாக இருக்கின்றன” என்று ஒப்புக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு அணுசக்தித் துறை உள்ளாகியிருக்கிறது.[46]

அணு மின்சக்தி தொடர்பான மற்றொரு கவலைக்குறிய அம்சம் அணுவுலைகளின் பாதுகாப்பு பற்றியது.  முன்னாள் சோவியத் யூனியனின் உக்ரைன் குடியரசில் இருந்த செர்னோபில் என்ற இடத்தில் 1986-ம் ஆண்டு நிகழ்ந்த அணுவுலை விபத்தின்போது கதிர்வீச்சுத் தன்மை கொண்ட ஏராளமான பொருட்கள் வளிமண்டலத்தில் கலந்தன.  இவை சோவியத் எல்லையைத் தாண்டி வடக்கே வெகு தொலைவில் இருந்த ஸ்வீடன் வரையிலான அண்டை நாடுகளிலும் பரவின.  2006-ம் ஆண்டு வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இந்த விபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் மக்களின் வாழ்நாளில் நாலாயிரத்துக்கும் மேலானோர் கதிர்வீச்சுப் பாதிப்பினால் புற்றுநோய் பீடித்து இறந்தனர்.  இவ்விபத்தால் “சீர்கேடடைந்த பிற பகுதிகளில்” வாழ்ந்த அறுபது லட்சத்துக்கும் மேலான மக்களிடத்தில் இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு ஐயாயிரத்துக்கும் மேல். (உ.சு.நி அறிக்கையின் பட்டியல் எண் 12)[47]

எனினும் க்ரீன்பீஸ் அமைப்பு சுட்டிக்காடியது போல,[48] இப்படிப்பட்ட ஒரு பாரிய பேரழிவின் தொடர்பாக, “அதன் விளைவுகளை ஒருமைப்படுத்தியும், அதிகரித்த புற்றுநோய் சாவுகள் பற்றிய மதிப்பீடாக ‘எளிமைப்படுத்தியும்’ காட்ட முயலும் எந்த விவரணைகளும், இவ்விபத்தால் மக்கள் அனுபவித்த பன்முகப்பட்ட துயரங்கள் அனைத்தையும் மோசமான முறையில் சிறுமைப்படுத்துவதாகவே இருக்கும்”.

செர்னோபில் விபத்து பெரும்பாலும் மோசமான வடிவமைப்பினாலும் இயக்குனரின் (operator) தவறினாலும் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, இந்த அணுவுலை முறையான தடுப்பரணால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கவில்லை. மேலும், அந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில், positive void coefficient விளைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.[49] அதாவது அணுக்கருப் பிளவால் தோற்றுவிக்கப்படும் வெப்பத்தைத் தாங்கி வெளியேற்றும் குளிர்விப்பான் தப்பித்து வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக, அணுக்கருப் பிளவின் கட்டற்ற செயல்பாட்டு தூண்டப்பட்டிருக்கிறது.  இவ்வாறு தூண்டப்பட்ட கட்டற்ற அணுக்கருப் பிளவு ஏராளமான குளிர்விப்பான்கள் வெளியேற வழிசெய்திருக்கிறது.  இவ்வாறாக ஒன்றுக்கொன்று துணை செய்யும் படுபயங்கரமான எதிர்வினை நிகழ்வு நடந்திருக்கிறது.   (it seems to have had a positive void coefficient,49 which meant that the escaping coolant increased the intensity of the reaction which in turn caused more of the coolant to escape, thus leading to catastrophic positive feedback. )  புதிய அணுவுலைகள் தடுப்புறுதி மிக்கதாய் நல்ல முறையில் வடிவமைக்கப் படுவதாகத் தோன்றுகிறது. இவ்விபத்தின் மூலம் அணுசக்தித் தொழிற்துறை தனது பொறியியல் பாடத்தை நல்லமுறையில் படித்திருக்கும் என்று மட்டுமே ஒருவர் எதிர்பார்க்க முடியும்.

நாம் மேலே விவரித்ததைப்போல, அணுசக்தி என்பது உள்ளியல்பாகவே விபரீதமானது.  இருப்பினும், அணுவுலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த எந்த ஒரு விவாதத்திலும் அணுசக்தியை முன்னெடுப்போரால் வைக்கப்படும் புறக்கணிக்க முடியாத ஒரு கருத்து இருக்கிறது.  அணுசக்தி பொதுவாகவே, நாமும் செய்தது போலவே, நிலக்கரியுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.  ஆயினும், நிலக்கரியும் தீங்கானதே என்பதே அந்த கருத்து.

இதன் காரணமாகத்தான் நிலக்கரி சுரங்கங்களில் ஆண்டாண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் மடிகிறார்கள்.  இதற்கு சீனா ஒரு அதிர்ச்சிகரமான உதாரணம். அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 2006-ம் ஆண்டு சீன நிலக்கரி சுரங்கங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 4,746; 2007-ல் அது 3,786. [50,51]

நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவிலும் ஆண்டாண்டும் நூற்றுக்கணக்கானோரைப் பாதிக்கிறது.  ஆனால், இங்கு இதுபற்றிய புள்ளிவிவரங்கள் சற்று பிரச்சினைக்கு உரியதாய் இருக்கின்றன. நிலக்கரி அமைச்சகத்தின் விவரப்படி இந்திய நிலக்கரி சுரங்கப்பணி மிகவும் பாதுகாப்பானது.  இங்கு சாவு எண்ணிக்கை நபர்வாரி சாராசரிக் கணக்கில் அமெரிக்காவை விடக் குறைவு; கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் அளவுக்குக் குறைவானது.[52]  இது உள்ளபடியே நம்பத்தக்கதாய் இல்லை.  இருப்பினும், அமைச்சகம் அளித்த விவரப்படியே பார்த்தாலும் 2006-ல் நிலக்கரிச் சுரங்கப் பணியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆகவும் பலத்த காயமுற்றோரின் எண்ணிக்கை 966 ஆகவும் இருக்கிறது.  2007-ல் அது  முறையே 69 ஆகவும் 904 ஆகவும் இருக்கிறது.[52] [யுரேனிய சுரங்கப் பணியும் தீங்கானதே.  இருப்பினும் அது நிலக்கரி சுரங்கப்பணியோடு ஒப்பிடுகையில் மிகச் சிறிய அளவே நடப்பதால் விபத்தும் குறைவாகவே நடக்கிறது] .

நமது சமுதாயத்தில் நிலவும் பாரதூரமான ஏற்றத்தாழ்வும் இந்த நிலைமை தொடர ஒரு காரணமாக இருக்கிறது. அணு விபத்து பேரழிவு விளைக்கத் தக்கதாய், அனைவரையும் பாதிப்பதாய் இருக்கிறது.  எனவே அணுசக்தி அமைப்புகளில் பாதுகாப்பு குறித்து பாரிய கவனம் செலுத்தப்படுகிறது.  நூற்றுக்கணக்கான மக்கள் ஆண்டாண்டும் நிலக்கரிச் சுரங்கங்களில் செத்தாலும், அம்மக்களில் ஆகப் பெரும்பான்மையோர் ஏழைகளாகவும், நாதியற்றவர்களாகவும் இருப்பதால் இந்த விபத்துகள் யாரது கவனத்தையும் ஈர்க்கவும் இல்லை, பெரிதாய் இதற்கு ஒரு எதிர்ப்பும் இல்லை.

5.4 இந்தியாவுக்கான பிரத்தியேக அம்சங்கள்

இந்தியாவில் அணுசக்தியின் விருப்பார்வம் பற்றிய விவாதத்தை மாற்றக்கூடிய இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.

முதலாவது அம்சம், இந்தியாவின் மோசமான யுரேனியத் தாதுவள இருப்பு பற்றியது.  நாம் முன்னரே சொன்னதுபோல, இந்தியாவின் யுரேனிய இருப்பு மிகக் குறைவு என்பது மட்டுமல்ல, அதன் தரமும் மோசமானதே.  திட்டக் கமிசனால் நியமிக்கப்பட்ட கிரித் பாரிக் தலைமையிலான நிபுணர் குழு சக்திவளக் கொள்கை தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில், “இந்தியாவின் யுரேனிய வளம் மிகக் குறைவானது.  கிடைக்கப்பெறும் யுரேனியத்தைக் கொண்டு மொத்தத்தில் 10000 மெகா வாட் உயர் அழுத்த கனநீர் அணுவுலைகளை மட்டுமே இயக்க முடியும்.  மேலும், வெளிநாடுகளில் சில இடங்களில் கிடைக்கும் தாதுவளம் 12-14% யுரேனியத்தைக் கொண்டு இருக்கையில், இந்தியாவில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தரத்திலுள்ள தாதுவிலிருந்து (0.1% அளவுக்குத் தரம் குறைந்த யுரேனியத் தாது) யுரேனியம் பிரித்தெடுக்கப்படுகிறது.  இதன் காரணமாக இந்தியாவின் அணுவுலை எரிபொருளின் அடக்கவிலை சர்வதேச விலையோடு ஒப்பிடுகையில் 2-3 மடங்கு அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.[54]  ஆக, விரிவான ஒரு அணுசக்தித் திட்டம் இறக்குமதி எரிபொருளை நம்பியே தாக்குப்பிடிக்க முடியும் என்பது இந்த அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.  மேலும், இந்த இறக்குமதி அணு மின்சக்தியை செலவு மிக்கதாக்கி விடுகிறது.

இருப்பினும், இவ்வாறான யுரேனிய இறக்குமதி, எரிபொருளின் நிலைத்த தேவையைப் பெறுவதற்காக ஏகாதிபத்திய நாடுகளை அண்டி இருக்கும் நிலைக்கு நமது நாட்டைக் கொண்டுவந்து விடும் என்பதே மிகவும் அபாயகரமான விசயம் ஆகும்.  1974-ம் ஆண்டு நிகழ்த்திய அணுவெடிப்புப் பரிசோதனைக்குப் பின் தாராப்பூர் அணுவுலைக்கு அளித்துவந்த எரிபொருளை அமெரிக்கா நிறுத்திவிட்டது.  கடந்த ஆண்டு அணுசக்தி மூலப்பொருள் வர்த்தகர்கள் குழுவால் [Nuclear Suppliers Group] [சர்வதேச அணுசக்தி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகள் அடங்கிய சுயநலக் கும்பல். இதில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது] அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவை அனுமதிக்கும் படியான ஒரு விலக்கு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் உலகளாவிய போர்த்தந்திரக் கூட்டாளியாக இணைந்ததன் காரணமாகவே இந்த விலக்கு இந்தியாவுக்குப் பெற்றுத்தரப்பட்டது. இறக்குமதி எரிபொருளை நம்பி மேற்கொள்ளப்படும் விரிவான அணுசக்தித் திட்டம் எதிர்காலத்தில் பொறுப்புக்கு வரும் எந்த ஒரு அரசும் அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்து வெளியேற முடியாதபடி புதைகுழியில் சிக்கியதைப்போல் ஆக்கிவிடும்.

இரண்டாவது முக்கியமான அம்சம், இங்கு அணுசக்தி அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் உறுதியான நிர்வாகக் கட்டமைப்பு இல்லை என்பதே. நிலவுகின்ற மோசமான நிர்வாக வடிவத்தின் அடிப்படைக் கூறுகளை பாபா-நேரு இடத்தில் தேடிக் காணமுடிகிறது. ”அணுசக்தியை வளர்த்தெடுக்கும் பொறுப்பு மிகச் சிறிய உயர் அதிகார அமைப்பின் வசம் ஒப்படைக்கப்படவேண்டும். மேலாண்மை செலுத்தும் இணைப்பு ஏதுமின்றி, நேரடியாகப் பிரதமருக்குப் பதில்சொல்ல வேண்டிய நிலையில், செயல் அதிகாரத்துடன் கூடிய சுமார் மூன்று நபர்களைக் கொண்டதாக இவ்வமைப்பு இருக்கலாம் .. .. அணுசக்தி ஆணையம் என்று இதைக் குறிப்பிடலாம்” என்று பாபா 1948-ல் நேருவுக்கு எழுதினார்.[55] (அழுத்தம் சேர்க்கப்பட்டது).  பாபா ஜனநாயகத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர் அல்ல என்பது தெளிவு. மேலும் பலவற்றைப் போல, இந்த விசயத்திலும், நேருவுடன் தனக்கு இருந்த தனிப்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பிற அங்கங்களில் செயல்படும் குறைந்தபட்ச கண்காணிப்பு மற்றும் சீர்செய்தல் வழிமுறைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் பாபா. அணுசக்தி ஆணையம் 1954-ல் நிறுவப்பட்டு 55 ஆண்டுகள் கடந்தபின்னும் அதே கெட்டித்தட்டிப்போன சிறிய அதிகாரவர்க்கக் கும்பல் இந்த நாட்டின் அணுசக்தி தொடர்பான அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. [தற்போது இந்த அணுசக்தி ஆணையம் சற்றே விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  டிசம்பர், 2009ல் அது அணுசக்தித் துறைத் தலைவரின் தலைமையின் கீழ், அவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் அலுவலத்தில், அறிவியல் தொழில்நுட்ப ஸ்டேட் அமைச்சராக இருக்கும் ப்ரிதிவிராஜ் சவ்கான் உள்ளிட்ட 12 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது]

பல பத்தாண்டுகளாகியும் இந்த அணுசக்தி நிறுவனம் ஒரு சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பின் தேவையைக் கூட உணரவில்லை. அணு மின்சக்தி அமைப்புகளை நிறுவுதல் மற்றும் நெறிப்படுத்துதல் ஆகிய இரண்டு செயல்களையும் அணுசக்தித் துறையே தனது பொறுப்பில் வைத்திருந்தது.  அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள மூன்று மைல் தீவில் 1979-ல் நடந்த பாரதூரமான அணுவுலை விபத்துக்குப் பின்னர்தான் தனியாக ஒரு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை (AERB)அமைக்கும் நடவடிக்கையை அணுசக்தித் துறை தொடங்கியது.[57]  அணுசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குறிக்கோளுடன் 1983-ல் இந்த வாரியம் அமைக்கப்பட்டது.  இருப்பினும், இந்த வாரியம் (AERB) அணுசக்தித் துறைத் தலைவர் தலைமைவகிக்கும் அணுசக்தி ஆணையத்திடமே நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டியிருக்கிறது. இச்செயல், அணுசக்தித் துறையிலிருந்து தனித்து சுதந்திரமாகச் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பு என்ற கூற்றை கேலிக்குறியதாக்குகிறது.

எதார்த்தவாதியான ஏ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 1995-ல் இயங்கிய இந்த வாரியம் (AERB) இந்திய அணுசக்தி அமைப்புகளில் காணப்பட்ட, உடனடிக் கவனிப்பு தேவைப்பட்ட 95 பிரச்சினைகள் உள்ளிட்ட 130 பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தொகுத்து ஒரு அறிக்கை தயாரித்துக் கொடுத்தது.  அந்த அறிக்கை தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

இந்த வாரியத்தை (AERB) விட்டு விலகிய பின்னால், திரு.கோபாலகிருஷ்ணன்,  “அணுசக்தித் துறையின் அணுவுலை அமைப்புகளில் பாதுகாப்பு நிலைமை சர்வதேசத் தர நிர்ணயத்துக்கு மிகவும் பின்தங்கி இருக்கிறது” என்றும், “உண்மையிலேயே சுதந்திரமான ஒரு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வழிமுறை இன்மையும், அணுசக்தித் துறை வகிக்கும் ஈடிணையற்ற அதிகாரமும், செல்வாக்கும், இவற்றுடன் இணைந்த உண்மைகளை மூடிமறைக்க விரிவாய்ப் பயன்படுத்தப்படும் அலுவல் கமுக்க சட்டமும் (Official Secrets Act) ஆகிய இவைதான் இந்த படுமோசமான நிலைமைகளுக்கு முதன்மையான காரணங்கள்” என்றும் எழுதினார்.[58].  இதற்குப் பதிலளிக்கும் முகமாக அணு மின்சார நிறுவனம் (Nuclear Power Corporation) இந்த கவன ஈர்ப்புகளை வெறும் “பதற்றக் கூச்சல்” என்று புறந்தள்ளியதுடன் கோபாலகிருஷ்ணன் “காற்றடிக்கும் திசையில் பறக்கிறார்” [“tilting at windmills”] என்று தனது வருத்தத்தையும் வெளியிட்டது. மேலும், “இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை நாங்கள் எதிரிகளாகக் கருதவில்லை.  நாங்கள் அனைவரும், சிக்கனமானதும் பாதுகாப்பானதுமான முறையில் அணுசக்தித் துறையை வளர்த்து அணுசக்தியின் எண்ணற்ற பலன்களை நாட்டுக்கு வழங்கவேண்டி நமது தேசப்பிதாக்களால் பணிக்கப்பட்ட ஒரே அறிவியல் குடும்பத்தின் சகோதரர்கள்”  என்றும் கூறியது.[59]

இந்த சகோதரத்துவ ஒத்துழைப்பு பற்றிய பரிந்துரை சந்தேகத்துக்கு இடமின்றி அடியொற்றிச் செல்லும் வேளையில், அணுசக்தியைப் போன்றதொரு அபாயகரமான தொழில்நுட்பத் துறையில் அதன் நெறியாளர்களும், அமைப்பாளர்களும் இவ்வளவு நெருக்கமாக இருப்பது ஓரளவுக்குப் பிரச்சினைக்கு உரியதாகவும் இருக்கிறது.  உண்மையில் இது, திரு. கோபால கிருஷ்ணன் குறிப்பிடுவது போல, அணுசக்திப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நியதியை மீறுவதாக இருக்கிறது. அந்த நியதிப்படி சம்பந்தப்பட்ட (இந்தியா உள்ளிட்ட) அனைவரும், “ஒழுங்குமுறை அமைப்புக்கும் … அணுசக்திப் பயன்பாட்டுடன் .. தொடர்புடைய .. வேறெந்த அமைப்புக்கும் இடையே திறம்படச் செயல்படத் தக்கதொரு பிரிவினையை உத்தரவாதப்படுத்தத் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்”.[60]

அணு விபத்துகள் அறிதாய் நிகழ்பவையே. எனவே, நமது அணுசக்தித் துறை செய்திருப்பது போன்று, பாதுகாப்பு நெறிமுறையை மீறுகின்ற செயல்கள் பெரிதும் சாத்தியமானவையாகவே இருக்கின்றன.  விபத்துக்கான வாய்ப்புகள் குறைவாயினும், ஒரே ஒரு விபத்தே பேரழிவைக் கொண்டுவரக் கூடிய காரணத்தால் பாதுகாப்பு குறித்து பாரதூரமான கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், இங்கோ ஒழுங்குமுறைக் கட்டமைப்பு சிதிலமடைந்து கிடப்பது தெளிவு.   இந்த நிலைமையில் அணுசக்தித் திட்டம் விரிந்த அளவில் முன்னெடுக்கப்பட இருப்பது, குறிப்பாகப் பெருத்த கவலைக்குறியதாக இருக்கிறது.

6. அணு சக்தித் திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிநிலைகள் பற்றி

மேற்சொன்னது போல, முப்படிநிலை அணு சக்தித் திட்டத்தில் முதலாவது படிநிலை மற்ற இரண்டு படிநிலைகளைக் காட்டிலும் மிகச் சிறியது. அணுசக்தித் துறையின் முன்மொழிவுகளின்படியே மின்சக்தியின் பெரும்பகுதி வீரிய ஈனுலை மற்றும் தோரிய அணுவுலைகளாகிய இரண்டாவது மற்றும் மூன்றாவது படிநிலைகளில் இருந்தே கிடைக்க வேண்டி இருக்கிறது என்பதையும் மேலே விவரித்தோம். துரதிஷ்டவசமாக, பாபாவின் தொடக்ககாலக் கணிப்புக்குப் பின் 55 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த இரு படிநிலைகள் தொடர்பான தொழில்நுட்பங்களும் நம்பிக்கை அளவிலேயே தொடர்கின்றன. ரஷ்யாவில் இருக்கும் 30 ஆண்டு பழமையான ஒரு வீரிய ஈனுலையைத் தவிர [61] மேற்சொன்ன இரு படிநிலைகளுக்கான தொழில்நுட்பங்கள் உலகில் வேறெங்குமே வர்த்தக ரீதியான செயல்பாட்டில் இல்லை.

இரண்டாவது படிநிலைக்கான தொழில்நுட்பம் மூன்றாவது படிநிலையினதை விட ஒரளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது.  பல்வேறு நாடுகள் முன்மாதிரி வீரிய ஈனுலைகளை (Prototype Fast Breeder Reactor) நிர்மாணித்து, நிர்மாணித்த கையோடு அதைக் கைவிடவும் செய்திருக்கின்றன. ஆனாலும், இந்தியா தனது சொந்த  முன்மாதிரி வீரிய ஈனுலையைக்  கல்பாக்கத்தில் நிர்மாணித்து வருகிறது.  மூன்றாவது படிநிலை என நமது மனக்கண்ணில் விரிந்த தோரியம் அணுவுலை போன்றதொன்றை கட்டுவதற்கான முயற்சியைக்கூட யாரும் இதுவரை எடுத்ததில்லை. தோரியம் எரிபொருட் சுழற்சி முறையை வணிக ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரம்மாண்டமான ஆய்வு முயற்சிகள் தேவை.  தொழில்நுட்ப ரீதியான ஏராளமான தடைதாண்டல்கள் இல்லையேல் வழமையான யுரேனிய அணுவுலைகளைவிட தோரிய அணுவுலைகள் கணிசமான அளவுக்கு பெருத்த செலவு பிடிக்கக் கூடியவையாய் அமையும். (இந்தியாவில் இல்லாவிடினும்) உலகில் மிகப் பெரும் அளவில் யுரேனியம் கிடைப்பதால் இந்த தோரிய அணுவுலை முயற்சிக்கு உலகளவில் ஒரு பொருளாதார உந்துதல் இல்லை.  தோரிய அணுவுலைத் திட்டத்தின்பால் தனது ஆய்வைத் தொடரும் நாடு உலகளவில் இந்தியா மட்டுமே.

முதல் படிநிலை “உலகத் தரத்திலான செயல்பாட்டிலும்”, இரண்டாவது படிநிலை “உலகின் முன்னேறிய தொழில்நுட்பம்”  என்ற நிலையிலும், மூன்றாவது படிநிலை “உலகளவில் தனித்துவமானது” என்ற நிலையிலும் இருப்பதாக இந்த நிலைமையை அணுசக்தித் துறை வர்ணிக்கிறது! [11]

6.1 இரண்டாவது படிநிலை

ஒரு முன்மாதிரி வீரிய ஈனுலையைக் கட்டியமைக்க இந்தியா நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது. “பெரியதொரு 500 மெகாவாட் முன்மாதிரி வீரிய ஈனுலையை வடிவமைத்துக் கட்டியமைப்பது” என்பதை ”1970-80 ஆகிய பத்தாண்டுகளுக்கான வேலைத் திட்ட அறிக்கை”  தனது இலக்குகளில் ஒன்றாகக்  கொண்டிருந்தது.  கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த PFBR 2010-ல் செயல்படத் தொடங்கும் எனற தற்போதைய கால அட்டவணைப்படி குறைந்தது 30 ஆண்டுகள் காலதாமதம் ஆகியிருக்கிறது!

இன்றைய நிலவரப்படி, எடுத்துக்கொண்ட இந்தப் பணி பெருத்த காலதாமதமாகி இருப்பதுடன் நிதி இலக்கையும்  வெகுவாகத் தாண்டிச் செல்கிறது. எனவே, இந்த காலக்கெடுவும் கூட நடைமுறைச் சாத்தியமில்லை என்பதே உண்மை. இந்த அணுவுலைத் திட்டப் பணி, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியான ரூ.3492 கோடிகளுக்குள் செப்டம்பர், 2010 என்ற கால இலக்கில் முடிவடையும் என திட்ட அமலாக்க அமைச்சகம் மார்ச் 2009-ல்,  தொகுத்தளித்தது.[62]  எனினும், சில மாதங்கள் கழித்து வெளியான பாவினி-யின் (இந்த திட்டப்பணியை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட  பொதுத்துறை நிறுவனம்) ஆண்டறிக்கை 2009-ல் வேறு வழியின்றி குறிப்பிடப்பட்டிருந்தது என்னவென்றால், “திருத்தப்பட்ட திட்டச் செலவு ரூ.5,677 கோடிகள் ஆகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது”  என்பதே.[63] இது தொடக்க நிலை திட்டச் செலவை விட 60% அதிகம். மேலும், “இந்த கட்டுமானப் பணி மே 31, 2008 அளவில் அடைந்திருந்த 35% முன்னேற்றத்தோடு ஒப்பிடும்போது,   மே 31, 2009 அளவில் 45% முன்னேறியிருக்கிறது” என்றும் அந்த ஆண்டறிக்கை குறிப்பிட்டுகிறது.  இதிலிருந்து, இந்த திட்டப்பணி செப்டம்பர், 2010-ல் முடியப்போவதில்லை என்று தெளிவாக அனுமானிக்க முடியும்.

உலகின் பிற பகுதிகளில் இந்த வீரிய ஈனுலைகள் தொடர்பான வரலாற்றைப் பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும். பல நாடுகள் முன்மாதிரி வீரிய ஈனுலைகளைக் கட்டி அமைத்திருக்கின்றன.  சர்வதேச அணுசக்தி முகாமை (IAEA) யின் விவரத்திரட்டு பயனுள்ள வகையில் இந்த வரலாற்றைப் பரிசீலிக்கிறது.[64] 1980-களில் பிரான்சு, ஜெர்மெனி, பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வர்த்தக அளவிலான வீரிய ஈனுலைகளை நிர்மாணிக்கத் தொடங்கின.  அந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தோல்வியே கண்டன.  பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்குப் பின்னர் 1998-ல் இந்த வகை பிரெஞ்சு ஈனுலை மூடப்பட்டது.  பெருத்த பொருட்செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பின்னும் ஜெர்மானிய ஈனுலை இயக்கப்படவே இல்லை!  இவ்வகை ஜப்பானிய ஈனுலை 1995-ல் பாரதூரமான விபத்துக்கு உள்ளான பின்னால் நிரந்தரமாக மூடப்பட்டது.  அமெரிக்கத் திட்டமும் காலப்போக்கில் கறைந்து மறைந்தது. நடப்பில் இருக்கும் வர்த்தக ரீதியான வீரிய ஈனுலை  ரஷ்யாவின் 30 ஆண்டுகள் பழைமையான ஒன்றே ஒன்று மட்டுமே.  இந்த எதார்த்த நிலைமைகள் வலியுறுத்திய வகையில் “வீரிய ஈனுலைகளை அமைப்பதற்கான பொருளாதார நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்”  என்று சர்வதேச அணுசக்தி முகாமை இது பற்றிய தனது தொகுப்பறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த்து. இத்திட்டத்தின் மூல மதிப்பீட்டின் படியே கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் PFBR ஒரு சிக்கனமான சக்தி மூலம் என எதிர்பார்க்கப் படவில்லை.[65]  திட்டச் செலவை அதிகப்படுத்தி இருக்கும் மறு மதிப்பீடு இந்த மோசமான நிலைமையை மேலும் கொடுமையானதாக்கவே உதவுகிறது.

மேலும், இந்த வீரிய ஈனுலையின் பாதுகாப்பு அம்சம் பற்றிய மிகப் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன.  செலவை மிச்சப்படுத்த வேண்டி அணுசக்தித் துறை பலவீனமான தடுப்பு மதில்களைக் கொண்டதாக இந்த வீரிய ஈனுலையை வடிவமைத்திருக்கிறது என்று குமாரும் ரமணாவும் வாதிடுகின்றனர்.[66]  அவர்களுடைய கணிப்பின்படி, வளிமண்டலத்தில் கதிர்வீச்சை வெளிவிடும்படியான ஒரு பாரிய விபத்து நிகழுமானால், அது இந்த அணுவுலையின் தடுப்பு மதில்களை நிச்சயமாக உடைத்து வெளியேறும். இந்த ஆசிரியர்கள் தமது ஆய்வில் விவாதிக்கும் மிக மோசமான பிரச்சினை என்னவென்றால், இவ்வகை அணுவுலை (PFBR) positive void coefficient என்ற குணாம்சத்தைக் கொண்டிருக்கிறது.   நாம் முன்னர் விவரித்தது போல, செர்னொபில் அணுவுலை வெடிப்பு விபத்துக்குக் காரணமான பண்புகளில் இதுவும் ஒன்று. “அணுக்கருப் பிளவு நிகழ்த்தப்படும் அணுவுலை மையத்தை உடைத்து வெளியேறும் நிகழ்வு பெரிதும் அசாத்தியமானது” (voiding of the core is highly improbable) என்றும் “கோட்பாட்டு அளவிலானதொரு மைய ஒழுங்கு குலைவு விபத்து என்ற அளவுக்கு மட்டுமே இது பார்க்கத்தக்கது” (is of concern only in the case of hypothetical core disruptive accident) என்றும் அணுசக்தித் துறை தனது வடிவமைப்பு தொடர்பான அறிக்கையில் வாதிடுகிறது. [67]  அது ”கோட்பாட்டளவிலான”  பிரச்சினையே என்று கொண்டாலும் பெருநாசம் விளைவிக்கக் கூடியதாய் இருப்பதால், இதைப் பகுப்பாய்வு செய்வதில் பாரதுரமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே ஒருவர் எதிர்பார்க்க முடியும். ஆனால் அணுசக்தித் துறையோ (அனாமதேய ”ஆய்வுகளை” சுட்டிக்காட்டி)  “positive void coefficient .. விளைவு அனுமதிக்கத் தக்கதாகவே கருதப்படுகிறது” என்று வெறுமனே கூறுகிறது.

அணுசக்தித் திட்டத்தின் இந்த இரண்டாவது படிநிலைதான் அணுசக்தித் துறையால் தெரிவிக்கப்பட்டிருக்கும் அணு மின்சக்தி உற்பத்தித் திறனில் பெரும்பகுதியை வழங்க வேண்டியிருக்கிறது என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.  அணு மின்சக்தி பற்றிய இந்த சவடாலை எல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது வாசகருக்கு இச்சமயம் தெளிவாகி இருக்கும்.  இருந்தும், இன்னமும் ஒருவர் அணுசக்தித் துறையை நம்புவாராயின், அணுசக்தித் துறையின் மின் உற்பத்தி பற்றிய அனுமானங்கள் அடிப்படையிலேயே நிலையற்றவை என்று ரமணனும் சுசித்ராவும் வாதிடுவதைப் பார்க்கவும். [68] சுருக்கமாக, வீரிய ஈனுலைகளின் வளர்ச்சி பற்றிய அணுசக்தித் துறையின் மதிப்பீடுகள் இரட்டிப்பு நேரம் (doubling-time) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  முன்னர் விவரித்ததுபோல இந்த அணுவுலைகள் தனது எரிபொருளைத் தானே தயாரிக்கின்றன; ஆக, ஒரு குறிப்பிட்ட காலச் செயல்பாட்டில் ஒரு ஈனுலை மற்றொரு அணுவுலையில் எரிபொருளாக இடத்தக்க புளூடோனியத்தை உற்பத்தி செய்கிறது.

இருப்பினும், இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால், மேற்சொன்ன செயல்பாடு (இரட்டிப்பு) ஒரு தாமதத்தை உள்ளடக்கி இருக்கிறது. முதல் அணுவுலைக்குத் தேவையான புளூடோனியம் முன்னதாகவே ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.  இரண்டாவதாக, அந்த அணுவுலை குறிப்பிட்ட நேரம் இயக்கப்பட்ட பின்னர்தான் அதன் மையத்தில் இருந்து புளூட்டோனியத்தைப் பிரித்தெடுக்க முடியும். பிறகு, மற்றொரு அணுவுலையில் பயன்படுத்துவதற்காக இது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  இதற்கு ஆகும் தாமதத்தை அணுசக்தித் துறை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  அணுசக்தித் துறையின் ஜோசியம் பலிக்குமானால், அவர்களிடம் “ப்ளூட்டோனியம் ஏதும் மிச்சமிருக்காது”! என்கிறது ரமணன் மற்றும் சுசித்ராவின் ஆய்வுக் கட்டுரை.  அணுசக்தித் துறை தனது கணிப்புகளை சாதிக்க முடியாது அல்லது அதிகபட்சம் 40 விழுக்காட்டுக்கு மேல் சாதிக்க முடியாது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள்.  இந்த அளவுக்கான சாத்தியப்பாடும் கூட அசாத்தியமே என்பதை நாம் விவாதித்த பிற கூறுகள் உட்கிடையாக வலியுறுத்துகின்றன.

இந்த வீரிய ஈனுலைத் திட்டம் அணு ஆயுதத் திட்டத்துடனும் முக்கியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தைப் பின்னர் விரிவாய்க் காண்போம்.

6.2 மூன்றாவது படிநிலை

அணுசக்தி எரிபொருளாகத் தோரியத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பம் இன்னமும் குறைவளர்ச்சி கண்டதாகவே இருக்கிறது. யுரேனியத்தை விடவும் தோரியம் மிகப் பெரும் அளவில் இப்புவியின் மேற்பரப்பில் கொட்டிக் கிடக்கிறது.  ஆயினும், தோரிய எரிபொருட் சுழற்சி விரிவாய் வளர்க்கப்படவில்லை என்பதற்கான காரணம் மிகச் சாதாரணமானது.  யுரேனியத்தில் அணுப்பிளவுத் தன்மைகொண்ட ’யு’ இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.  எனவே, இயற்கையாய்க் கிடைக்கும் அந்த தாதுவை சுத்திகரித்தாலே எரிபொருள் கிடைத்துவிடுகிறது.   தோரியத்தில் அவ்வாறு இல்லை.  இயற்கையில் கிடைக்கும் தோரியம் அணுக்கருப் பிளவு எரிபொருளாகப் பயன்படுத்தப்படக் கூடியது அல்ல.  தோரியம், அணுக்கரு வெடிப்பு எதிர்வினைக்கு உட்படும்போது அணுப்பிளவுத் தன்மைகொண்ட யுரேனியம்-233 உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக, தோரியத்திலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை சுத்திகரித்தல் பொன்ற நேரடி செயல்பாடோ, இரசாயன மாற்றமோ அல்ல.  மாறாக, அதற்கு ஒரு யுரேனிய அணுக்கரு வெடிப்பினால் ஏற்படும் தோரிய அணுக்கருவின் எதிர்வினை செயல்பாடே தேவைப்படுகிறது.

மேலும், இந்த வழிமுறையும் கூட சிக்கலான புதிர்கள் நிறைந்தது.  அதற்கான காரணங்கள் இரண்டு.  முதலாவதாக, இந்த யு-வை [ U233 ] உற்பத்தி செய்யும் அணுசக்தி எதிர்வினையின்போது வேறொரு யுரேனிய வகைத் தனிமமும் [ U232 ] உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தத் தனிமத்தின் சிதைவு பெரிய அளவிலான காமா கதிர்வீச்சைத் தோற்றுவிக்கும்.  எனவே, எரிபொருள் உருவாக்கம் மற்றும் மறுசுழற்சி செயல்பாடுகள் வெகுதொலைவில் கையாளப்பட வேண்டியவை.

இரண்டாவதாக, தோரிய எரிபொருள் சுழற்சிமுறை மேற்சொன்ன வகையிலான தற்பெருக்கத்திற்கு உட்படுத்தப் படவேண்டும்.  எரிபொருளின் முதல் தொகுப்பு (பெருத்த பொருட்செலவில் அறிதாய்த் தயாரிக்கப்பட்ட இது) அணுவுலையில் இடப்பட்ட பின்னால், எரிக்கப்பட்ட கழிவும் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உலையில் இடப்பட வேண்டும். இருப்பினும், காமாக் கதிர்வீச்சுப் பிரச்சினைக்கு அப்பாலும் கெட்டித்தட்டிப் போனதும்  கரைக்க முடியாததும் வேதிவினை அற்றதுமான தோரியம்-டை-ஆக்சைடு எஞ்சி நிற்கிறது.

உண்மைகள் இவ்வாறு இருக்க, உலகில் வேறு எந்த நாட்டிலும் தோரியத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டம் இல்லாதது ஆச்சரியப்படத் தக்க ஒன்றல்ல.  இந்தியா இந்த அபாயகரமான பாதையில் தொடர்வதுதான் உண்மையில் வியப்பளிக்கிறது.  உலக அணுசக்திச் சங்கம் குறிப்பிடுவது போல, “ பல ஆண்டுகளாக இந்தியா மட்டுமே தனித்து நின்று தோரியப் பயன்பாட்டுக்கான பெருத்த ஆய்வு முயற்சிகளை எடுத்துவருகிறது”[69]

மேற்சொன்ன பிரச்சினைகளின்பால் சிறிது முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் [70] தோரிய சுழற்சி பற்றிய அனுபவத்தைப் பெறுவதற்காக முன்னேறிய கனநீர் அணுவுலையை (AHWR) கட்டுவதற்குத் தற்போது திட்டமிட்டு வருவதாகவும் அணுசக்தித் துறை அறிவிக்கிறது.  இருந்தபோதிலும், இந்தத் தடைகளை எல்லாம் கடந்து முன்னேறுவதற்கு மிகப் பிரம்மாண்டமானதும் ஏராளமான செலவு பிடிக்கக் கூடியதுமான ஆய்வுப் பணிகள் தேவை.  யுரேனிய எரிபொருள் சுழற்சிமுறை மன்ஹாட்டன் திட்டத்திற்குப் பின்னர்தான் வளர்த்தெடுக்கப்பட்டது.

இந்த பகீரத ஆய்வுகளின் முடிவில், தோரிய வழி மின்சாரம் எப்போதாவது பொருளாதார ரீதியில் போட்டியிடத் தக்கதாக உற்பத்தி செய்யப்பட முடியுமா என்பது விளங்காமலேயே உள்ளது.  தனித்து நின்று தோரிய எரிபொருள் சுழற்சித் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதற்கு செய்யப்படும் ஏராளமான செலவுகள் நியாயமானவைதானா?  கொடுப்பினையற்ற வகையில், வெளிப்படையற்ற தன்மையும், ஜனநாயக பூர்வமான விவாதம் இன்மையும் நிலவும் இந்தியாவில் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும் அல்லது வெளிப்படையாக விவாதிக்கப்படும் என்று தோன்றவில்லை.

7.  அணுஆயுதமயமாக்கம்

அணுசக்தியின் இராணுவ அம்சமான அணுகுண்டுகளில் இருந்து அதன் சமூக அம்சமான அணுமின்சாரத்தைத் தனித்துப் பார்ப்பது பெருங் கடினம்.  பாபா, நேரு இருவருமே இதை உணர்ந்திருந்தனர்.  “அணுசக்தித் தொழிற்துறை வளர்ச்சி, பல நாடுகளின் கரங்களில் ஏராளமான அணுப்பிளவுப் பொருட்களைக் குவிக்கும்; அவற்றில் இருந்து அணுகுண்டு தயாரிப்பது என்பது ஒப்பீட்டளவில் மிக எளிதான செயல்” என்று பாபா குறிப்பிட்டார்.[71]  பின்னாளில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் எனப் பெயர் மாற்றப்பட்ட அணு சக்தி நிறுவனத்தை டிராம்பேயில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில்,  ”எனது அரசாங்கத்தின் சார்பாகவும் … ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் எந்த ஒரு இந்திய அரசாங்கத்தின் சார்பாகவும், … நாங்கள் அணுசக்தியை அழிவுப் பணிக்கு எந்நாளும் பயன்படுத்த மாட்டோம் எனக் கூற விரும்புகிறேன்” என்று நேரு கூறினார்.  அணுசக்தியின் சிவில் மற்றும் இராணுவத் தன்மைகள் எனத் தனித்துப் பிரிக்கவொண்ணாத் தன்மையை நேருவும் உணர்ந்திருந்தார்.  பல ஆண்டுகள் முன்னர், அரசியல் நிர்ணய சபை விவாதங்களின்போது, “ நீங்கள் இந்த இரண்டையும் (அணுசக்தியின் அமைதிவழி மற்றும் இராணுவப் பயன்பாடுகள்) எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று (தனது இப் புரிதலுக்கு) ஒப்புதல் அளித்திருந்தார். (p.49 [72])

இருப்பினும், அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு, அடுத்தடுத்து பதவிக்கு வந்த இந்திய அரசுகள் தோற்றத்தின் அளவில் இந்த வேறுபாட்டைத் தொடரவே விரும்பின.  1974-ல் முதல் பொக்ரான் அணுகுண்டுப் பரிசோதனைக்குப் பின், இது அணுவெடிப்பின் சமூகப் பயன்பாட்டுச் சாத்தியப்பாடுகளை அறிவதற்காக செய்யப்பட்ட பரிசோதனையே  என விவரிக்கப்பட்டது.  ஆகவே, இது ”அமைதிக்கான அணுசக்தி வெடிப்பு” என அழைக்கப்பட்டது. [பரவலாய் நம்பப்படுவதற்கு மாறாக, இந்த கோளாறான சொற் பிரயோகம் இந்திய அரசின் கண்டுபிடிப்பு அல்ல.  கால்வாய்களை விரிவுபடுத்துதல் போன்ற சமூக நடவடிக்கைகளுக்கு அணுசக்திக் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க அரசு நெடுங்காலமாக விவாதித்து வருகிறது.  “அணுவெடிப்பின் அமைதிவழிப் பயன்பாடுகள்பற்றிய இப்படிப்பட்ட ஒரு அமெரிக்க ஆய்வில் இருந்து பொருத்தமான அந்த சொற்றொடரைப் பெயர்த்தெடுத்துப் பயன்படுத்திக்கொண்டார் பாபா]

“நாங்கள் அணு ஆயுதத்தை வைத்திருக்கவில்லை என்று முற்றிலும் தெளிவான முறையில் நான் கூறமுடியும்” என்று ராஜீவ் காந்தி 1985-ல் அறிவித்தார். (p . 267 [73]).  இந்தக் கூற்றுகள் எல்லாம் 1998-ம் ஆண்டு பொக்ரான் வெடிப்புடன் முடிவுக்கு வந்தன.  “எதிர்கால அரசின்”  அந்த நேரத்துப் பிரதிநிதியான பிரமோத் மகாஜன், அணு ஆயுதங்கள் ”பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை அல்ல”.  ”இந்தியா எங்கு இருக்கிறது என்பதை இனி உலகம் அறிந்துகொள்ளும். ஆதலால், எந்த இந்தியனும் தனது பாஸ்போர்ட்டைக் காட்டத் தேவையில்லை”.   இதுவே இந்த பொக்ரான் வெடிப்பின் முக்கியத்துவம் என்று தெளிவுபடுத்தினார்.

1974-ன் ”அமைதிக்கான அணுவெடிப்பு”, 1998-ன் அணுகுண்டுப் பரிசோதனை ஆகிய இரண்டுக்குமான ஆய்வு பெரிதும் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. அய்யங்கார், “அணு வெடிப்பொருளை வெடிக்கச் செய்த இந்த நடவடிக்கை… டிராம்பேயில் விஞ்ஞானிகள், பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும் வழமையான செயல்பாடுகளில் இருந்து சற்றே விலகிய நடவடிக்கையே.  மொத்த திட்டப்பணிகளும் இரகசியமாக இருப்பதற்கு … இதுவே காரணம்” என்று இது பற்றி நன்கு புரிந்துகொள்ளத்தக்க வகையில் விவரிக்கிறார். [75]

ஆய்வின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தன்மை என்ற பிரச்சினைக்கு அப்பால் அணுப் பிளவுத் தன்மையுடைய பொருட்களின் குவிப்பு என்ற முக்கியமானதொரு பிரச்சினையும் உள்ளது.  இந்தியாவின் அணுவெடிப்பு ஆராய்ச்சி புளூடோனியத்தைப் பயன்படுத்தியுள்ளது.  பொதுவாய் அணுகுண்டுகளில் பயன்படுத்தப்படும் புளூடோனியம் ஆயுதத் தரத்திலான புளூடோனியம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் வரையறைப்படி இந்த ப்ளூடோனியம் 93 விழுக்காட்டுக்கும் அதிகமான  Pu239 வைக் கொண்டிருக்கிறது.

நாம் ஏற்கனவே விவரித்தபடி, மின்சார உற்பத்திக்கான அணுவுலை செயல்பாட்டிலும் கூட, யுரேனியம் ஒரு நியூட்ரானை உட்கிறகிக்கும் போது, [நியூட்ரானால் யுரேனிய அணுக்கரு சிதைக்கப்படும் பொழுது] இந்த Pu239உற்பத்தியாகிறது.  இருப்பினும், ஒரு அணுவுலை மின்சாரத் தயாரிப்புக்கானதாக இருக்கும்போது யுரேனிய எரிபொருள் தண்டுகள் [rods] சாத்தியமான அளவுக்கு அதிகபட்ச யுரேனியத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், உலையில் நீண்ட நேரத்திற்கு வைக்கப்படுகின்றன.  இந்த காலப் போழ்தில் பிற அணுசக்தி எதிர்வினைகளும் நிகழ்கின்றன.  அதன் விளைவாக இந்த அணுவுலைகளில் இடப்பட்ட எரிபொருட் கழிவில் Pu240 உள்ளிட்ட பிற புளூடோனியத் தனிமங்களும் கலந்திருக்கின்றன.  இந்த வகையிலான அணுவுலைத் தர புளூடோனியத்தில் கலந்திருக்கும் இன்னபிற புளூடோனியத் தனிமங்கள் அவற்றிலிருந்து அணுகுண்டு தயாரிப்பதைக் கடினமானதாக்கி விடுகின்றன. (இது தொடர்பான விவாதத்தை அமெரிக்க அணுசக்தித் துறையின் வகைபிரிக்கப்படாத ஆவணத்தில் பக்கம் 37-39-ல்  பார்க்கவும்[76])

எனினும், ஆய்வு அணுவுலைகளில் செலுத்தப்படும் யுரேனிய எரிபொருள் தண்டுகள் குறைந்த அளவு எரிப்புக்குப் பின்னர் வெளியே இழுக்கப்படுகின்றன.  ஆயுதத் தரத்திலான புளூடோனியத்தை உற்பத்தி செய்ய எரிக்கப்பட்ட இந்த தண்டுகளைப் பயன்படுத்த முடியும்.  1974-ம் ஆண்டின் பொக்ரான் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அணுப்பிளவு எரிபொருள் ‘சிரஸ்’  (CIRUS) ஆய்வு அணுவுலையில் இருந்து பெறப்பட்டதே.  இந்த சிரஸ் பற்றிய வரலாறு சுவாரசியமானது.[72,73] கெனடியன் இந்தியன் ரியாக்டர், யூ.எஸ் என்பதே ‘சிரஸ்’ என்பதன் விரிவு ஆகும்.  ஏனெனில், இந்த அணுவுலையின் வடிவமைப்பு கனடாவினது, பயன்படுத்தப்படும் கனநீர் அமெரிக்காவினுடையது மற்றும் எரிபொருள் இந்தியாவினுடையது.  இந்த அணுவுலையில் இருந்து எடுக்கப்படும் எரிபொருள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கட்டுப்பாடுகள் எதையும் கனடா விதிக்கவில்லை.  இந்த எரிபொருளை அமைதி வழிக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்ற இந்தியத் தரப்பின் கடப்பாடு, உண்மையில், இந்த உடன்படிக்கையின் இரகசிய இணைப்பு ஒன்றில் மட்டுமே இடம் பெற்றிருந்தது.  மேலும் பார்க்கையில், எரிபொருள் கனடாவில் இருந்து அளிக்கப்படும் என்பதே தொடக்கநிலைக் கருத்தாக இருந்தது. எனினும், இதற்கு வாய்ப்பில்லாத வகையில் இந்தியத் தரப்பு முந்திக்கொண்டு அந்த அணுவுலையில் பயன்படுத்துவதற்கான எரிபொருள் தண்டுகளைக் குறித்த காலத்துக்குள் சுயசார்பாகத் தயாரித்துவிட்டது. இந்த செயல், என்ன இருந்தாலும் அணுவுலையில் எரிக்கப்பட்ட எரிபொருள் இந்தியாவினுடையது தானே, அதைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்தினால் என்ன என்ற வாதத்தை முன்வைக்க வழிசெய்தது.

அமைதிவழி அணுசக்தித் தொழில்நுட்பம் அளிக்கப்படுவதன் விளைவாக நிகழும் அணு ஆயுதப் பரவல் பற்றிய விவாதங்களில், ‘சிரஸ்’-ல் இருந்து பெற்ற புளூடோனியத்தின் அணு வெடிப்புப் பயன்பாடு அடிக்கடி சுட்டிக்காட்டி விவாதிக்கப்படுகிறது. [“அணுஆயுதப் பரவல்என்ற பதப் பிரயோகம் ஐயப்பாடான ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், இது ஏகாதிபத்திய அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் நிகழும் பேரழிவு ஆயுதங்களின் பரவலை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது] ஆப்ரகாம் போன்ற சிலரது பதிவுகள் இத் தொடர் நிகழ்வுகளை, நல்லெண்ணம் கொண்ட ஆனால், சற்றே ஏமாளித்தனமான கனடாவினரை வஞ்சகமான இந்தியர்கள் சூழ்ச்சித்திறனால் வென்றுவிட்டார்கள் என்பதுபோல் படம்பிடிக்கின்றன.  மேலை நாடுகள் எப்போதுமே நல்லெண்ணம் கொண்டவை என்ற மூதுரையின் வெளிப்பாடாகவே இவ்வகை முடிவுகள் வந்தடையப்படுகின்றன.

இவ்வாறான விவரணைகளைப் பாரதூரமாகக் கருதத் தேவையில்லை.  ஆயுதத் தரத்திலான அணுப்பிளவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இது இந்தியாவுக்கு உதவும் என்று சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துதான் இந்த கனடாவின் தொழில்நுட்பக் கையளிப்பு நடந்துள்ளது.  இது தொடர்பாகக் கேட்கப்படவேண்டிய பொருத்தமான கேள்வி, “தன்னை அணுஆயுதபாணி ஆக்கிக்கொள்ளும்படி  இந்தியாவை ஊக்குவிக்க ஏகாதிபத்திய உலகைத் தூண்டிய கணிப்புகள் எவை?” என்பதுதான்.

உண்மையில், சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்கா கிட்டத்தட்ட நேரடியாக அணுகுண்டையே இந்தியாவிற்கு வழங்க இருந்தது! சீனாவுக்கு எதிராகப் பிரயோகிப்பதற்காக “ஆசிய நட்பு” இராணுவச் சக்திகளின் கையில் ”அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் அணுஆயுதங்களை வழங்குவதன் சாத்தியப்பாடுகளைப்”  பரிசீலிக்கும் ஒரு இரகசிய ஆய்வை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1964-ல் நடத்தியது என்று பெர்கோவிச் விவரிக்கிறார்.[73 – பக்கம் 90-93]  அதே காலகட்டத்தில், ‘சமூகத்’ தேவைகளுக்காக இந்தியா அணு வெடிப்புப் பரிசோதனைகளை நடத்த உதவுவதன் சாத்தியப்பாடுகளை ‘தனிப்பட்ட முறையில்’ அமெரிக்க அணுசக்திக் கமிஷன் பரிசீலித்து வந்தது.  இந்த இரண்டு சாத்தியப்பாடுகளும் நடைமுறையற்றுப் போனாலும், இந்தியாவின் கரங்களில் அணு ஆயுதங்கள் இருப்பது பற்றி அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிகள் நிம்மதியற்று இருக்கிறார்கள் என்ற பொத்தாம்பொதுவான கற்பிதம் ஒரு அபத்தம் என்பதையே இவை காட்டுகின்றன.  அமெரிக்காவை ஆளும் நிறுவனத்துள்ளும் இதற்கான எதிர்ப்புச் சக்திகள் இருக்கின்றன.  நாம் கீழே விவாதிக்க இருப்பது போல, அதைப் பெரிதும் ஒத்த பதட்டம் இன்றும் தொடர்ந்து அவர்களை இயக்குகிறது.

1985-ம் ஆண்டு ’துருவா’ என்ற பெயரில் ‘சிரசுக்கு’ [CIRUS] ஒரு கூட்டாளியை இந்தியா கட்டியமைத்தது.  சிரசை ஒத்த, ஆனால் கணிசமான அளவு பெரிதாக, அணுஆயுதத் திரம் கொண்ட புளூடோனியத்தை உற்பத்தி செய்யத் தக்க வகையில் துருவா அமைக்கப்பட்டது.  சிரஸ் மற்றும் துருவாவில் இருந்து 500 கிலோ அணுஆயுதத் தரத்திலான புளூடோனியத்தை இந்தியா உற்பத்தி செய்து குவித்துள்ளது என்று மியான் எட் அல்-ன் ஆய்வு மதிப்பிடுகிறது.[77] இது நூற்றுக்கும் மேலான அணுஆயுத ஏவுகணையின் வெடிப்பு முனையை நிரப்பப் போதுமானது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல, மின்சக்தி உற்பத்திக்கான அணுவுலைகளில் உற்பத்தியாகும் புளூடோனியத்தில் இருந்து அணு ஆயுதங்களைத் தயாரிப்பது கடினமானது. எனினும், இது அறவே முடியாதது அல்ல; மின் அணுவுலைத் தர ப்ளூடோனியத்தில் இருந்தும் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட முடியும்.  உண்மையில், 1998-ம் ஆண்டு அணுவெடிப்பில் மின் அணுவுலைத் தர புளூடோனியமே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு சில சான்றுகள் உள.[73]  இது உண்மையானால், அணுவுலை எரிபொருட் கழிவுகள் மலையெனக் குவிந்து இருப்பதால், இந்திய அரசின் கையிலுள்ள அணுவெடிப்புப் பொருட்களின் இருப்பு, மேற்சொன்ன மதிப்பீடுகளைவிட கணிசமான அளவு அதிகமாக இருக்கும்.

முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது நிலையான வீரிய ஈனுலைத் திட்டம் இங்கே பெருத்த முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.   நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல, இந்த வீரிய ஈனுலைகள் அதன் மையத்தில் இடப்பட்ட எரிபொருளுடனும், யுரேனியப் போர்வையுடனும் இயங்குகின்றன.  இந்த யுரேனியப் போர்வை அணுஆயுதத் தரத்திலான புளூடோனியத்தைப் பெற்றெடுக்கிறது.  கல்பாக்கத்தில் கட்டுமானத்தில் உள்ள PFBR மட்டுமே ஆண்டாண்டும் 140 கிலோ கிராம் புளூடோனியத்தை உற்பத்தி செய்ய முடியும் என க்ளாசர் மற்றும் ரமணா ஆகியோர் மதிப்பிடுகின்றனர். [78]  இது மிகப்பெரிய அளவில் அணுஆயுதக் குவிப்பை செய்துகொள்ள இந்திய அரசுக்கு வழிவகை செய்யும்.

இந்த வீரிய ஈனுலைத் திட்டம் சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுமா என்பது பற்றிய கேள்வி இந்தியா அமெரிக்கா இடையிலான ஆரம்ப காலக் கருத்து வேறுபாடுகளில் முக்கியமான ஒன்றாக இருந்ததை இந்த சூழலில் கவனிப்பது பொருத்தமானதாக இருக்கும்.[79]  இந்த ஈனுலைகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, “சாத்தியமில்லை.  ஏனெனில் இது நமது போர்த்தந்திர நலனைப் பாதிக்கிறது” என்றும் இவ்வாறு ஆவதை விட இந்த ஒப்பந்தத்தை மூழ்கடித்து விடுவதே மேல் என்றும் ககோத்கர் பதிலளித்தார். [80]

இறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த வீரிய ஈனுலைகள் ஐ.ஏ.ஈ.ஏ கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவில்லை.  இந்த முடிவை இந்தியாவின் பேரம்போசும் திறமை என்றோ, அமெரிக்கர்களின் அறியாமை அல்லது சூதுவாதற்ற தன்மை என்றோ மீண்டும் ஒருமுறை கற்பித்துக் கூறுவது ஒருவரின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டும்.  அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிப் பிரிவினரிடையே இது பற்றிய முரண்பட்ட கருத்து வெளிப்படையாக நிலவியது.  செல்வாக்கு மிக்க ப்ரூகிங்ஸ் கழகத்தின் ஸ்டீஃபன் கோஹன், “நாங்கள் (அமெரிக்கா) வீரிய ஈனுலைத் திட்டத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருந்திருப்போம்”. இருப்பினும், “புஷ் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்” என்று கூறுகிறார் .[81]  எனவே, இது ஒரு அரசியல் முடிவாகவே இருந்தது. ’சிரஸ்’ விசயத்தில் நடந்தது போலவே, இந்தியா அணுஆயுதம் தரித்து நிற்பதற்கு ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு தனது சொந்த நலனை முன்னிட்டு அனுமதி வழங்க முடிவெடுத்துவிட்டதாகவே தோன்றுகிறது.   இந்தியாவை சீனாவுக்கு எதிராக அணுஆயுதம் தரித்த பிராந்திய சக்தியாக வளர்க்க வேண்டிச் செய்யப்பட்டவையே இவை என்று மேற்சொன்ன இரு நிகழ்வுகளில் இருந்தும் ஒரு முடிவுக்கு வர நியாயமிருக்கிறது.

வெகுவாய் செறிவூட்டப்பட்ட யுரேனியமும் இராணுவத் தேவைக்கு ஆகக்கூடியதே.  யுரேனிய செறிவூட்டலுக்கான இந்திய அமைப்புகள் ஓரளவுக்கு தறக்குறைவானவையே.  பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் ஒன்றும், மைசூருக்கு அருகே ரத்திஹல்லி-யில் ஒன்றுமாக, இரண்டு வாயுவழி மைய விலக்கு விசையாற்றல் செறிவூட்டு நிலையங்கள் – gas centrifuge enrichment facilities – இந்தியாவில் உள்ளன. இந்தியா சுமார் 400-700 கிலோ அளவுக்கு 45-30% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தயாரித்துக் குவித்திருக்கிறது என்கிறார் மியன் எட் அல் .  இந்தியாவின் வசம் 94 கிலோ அளவுக்கு 90% செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு. [82]  இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இதைக்கொண்டு அணுகுண்டு தயாரிக்கவும் முடியும்.

இத் தலைப்பின் கீழான விவரங்களைத் தொகுத்துக் கூறுவோமாயின், இந்திய அணுசக்தித் திட்டம் தன் முதன்மை அங்கமாக அணுஆயுத அம்சத்தைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.  வீரிய ஈனுலை போன்ற சில விசயங்களில், அணுவுலைகளின் குறிக்கோள் மின்சார உற்பத்தி என்பதாகத் தோன்றவில்லை.  மாறாக, ஆயுதத் தொழிற்சாலை என்ற பொருளை மறைப்பதற்கான மூடியாகவே மின் உற்பத்தி என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.  விரிவாகப் பார்த்தால், அணுசக்தித் திட்டம் மின் உற்பத்தி செய்வதில் அடைந்த பெரும் தோல்விக்குப் பின்னரும் அரசின் பேராதரவைப் பெற்றுத் திகழ்வதற்குக் காரணம் இந்தியாவின் அணுகுண்டுத் தயாரிப்புக்கு அதன் பங்களிப்பே எனக் கொள்ளலாம். இது தொடர்பான ஒரு இழையை, உறுதிசெய்யப் படாததெனினும், இங்கு குறிப்பிடுவது பொருந்தும். சாராபாய், ஹோமி சேத்னா காலத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் அசோக் பார்த்தசாரதி.   இவர், அணு மின்சக்தி உற்பத்தியில் அணுசக்தித் துறை கண்ட தோல்வியை தொடர்ச்சியாக முன் நிறுத்தி வாதிட்டதாகவும், அதன் விரிவாக்கத் திட்டங்களை மறுதலித்துப் பேசியதாகவும் கூறுகிறார்.  “நமது அணுசக்தித் திட்டத்திற்கு அணு மின்சக்தியைக் காட்டிலும் பெரிய குறிக்கோள்கள் இருக்கின்றன.  எக்காரணம் கொண்டும் இந்த குறிக்கோள்களை நாம் விட்டுக்கொடுக்க முடியாது”  என்ற விளக்கத்தின் மூலம் இறுதியாக, பி.என். ஹக்சர் தனது கருத்தை வீழ்த்தினார் என்றும் இவர் குறிப்பிடுகிறார். [அழுத்தம் அவருடையது] [83]

8. முடிவுரை

இந்தியாவில் அணுசக்தி பற்றிய விவாதம் நேர்மையின்மையின் உச்ச கட்டத்தில் இருப்பதைத் தெளிவாய் உணர முடிகிறது.  ஒவ்வொரு முறையும் குப்புற விழுவதற்காகவே, நமது அணுசக்தித் துறை தான் உற்பத்தி செய்ய இருக்கும் மின்சாரத்தின் அளவு பற்றித் தொடர்ந்து அசத்தும் முன் அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.  இவ்வாறான கணிப்புகள் சென்ற ஆண்டு (2008) அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாதிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.

எக்கேடுகெட்டாலும், அணுசக்தித் துறையில் ஏராளமான முதலீடு செய்வது என்ற முடிவில் அரசு உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது.  அணுசக்தி விரிவாக்கம் முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின் வழிநின்று நடந்தேறும் என்று அணுசக்தித் துறை உறுதியாகக் கூறுகிறது.  ஆனால், இது பெரிதும் அசாத்தியமானது.  யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட வழமையான சுதேசி மற்றும் இறக்குமதி அணுவுலைகள் மூலம் அணு மின்சக்தி அதிகரிக்கப்படுவதற்கே இன்றைய சூழலில் அதிகபட்ச சாத்தியப்பாடு இருக்கிறது.

தட்பவெப்ப மாறாட்டம் காரணமாக உலகெங்கும் அணுசக்தி மீதான ஆர்வம் ஓரளவுக்குப் புத்தெழுச்சி பெற்றிருக்கிறது.  இருப்பினும், நிலக்கரி போன்ற ஒப்பிடத்தக்க சக்தி மூலங்களை விட அணுசக்தி பெருத்த செலவு பிடிக்கக் கூடியதாகவே தொடர்கிறது.  இந்தியாவின் யுரேனியத் தாதுவள இருப்பு அளவிலும், தறத்திலும் குறைவானதாக இருப்பதால், பெரிய அளவிலான அணுசக்தி விரிவாக்க நடவடிக்கை தவிர்க்க ஒண்ணாமல் ஏகாதிபத்திய நாடுகளை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு இந்தியாவை இட்டுச் செல்லும்.  மேலும், இங்கு ஒரு முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பு இல்லாததால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் படுமோசமாகி உள்ளன.

அணுசக்தித் திட்டத்தில் சிவில் மற்றும் இராணுவ அம்சங்கள் எப்போதும் பின்னிப் பிணைந்துள்ளன.  அணுஆயுதத் தயாரிப்பு அணுசக்தி விரிவாக்கத் திட்டத்தின் பெருமுக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகவும் இருக்கிறது.  புதிய முன்மாதிரி வீரிய ஈனுலையும் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஏராளமான யுரேனியமும் இந்தியாவின் பெருத்த அணுஆயுதக் குவிப்புக்கு வழிவகுக்கும்.  இந்த ஆயுதமயத் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.  இச்செயல், ஆசியாவில் கண்மூடித்தனமான ஆயுதப் போட்டியைக் கட்டவிழ்த்து விடும் அபாயத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

தற்போது நிலவுகின்ற சமூக அமைப்பு முறை என்ற கட்டமைப்புக்குப் பெரிதும் உட்பட்ட வகையிலேயே அணுசக்தி பற்றிய நமது விவாதம் அமைந்திருக்கிறது என்பதை நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.  குறிப்பாக, தாராளவாத முதலாளித்துவ வளர்ச்சிக்கு முடிவிலா மின்சக்தி அதிகரிப்பு தேவைப்படுகிறது.  பல்வேறுபட்ட மனிதப் பயன்பாடுகளுக்கு மின்சாரம் தேவையாய் இருக்கையில், நிலவுகின்ற வளர்ச்சி மாதிரியோ மின் தேவையை எல்லையற்ற அளவுக்கு நீட்சியுறச் செய்கிறது. அளப்பறிய தேவை பற்றிய இக் கருத்தாக்கம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.  இருப்பினும், அவக்கேடான வகையில், நிலவுகின்ற புதிய தாராளவாத முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டமைவின் உள்ளும் கூட மோசமான கொள்கைகளால் அணுசக்தி விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

9. இணைப்பு : அணுசக்தி ஒப்பந்தத்தின் அரசியல்.

மேற்கண்ட நமது பகுப்பாய்வின் தொடர்ச்சியாக ஒரு சுவாரசியமான கேள்வி எழுகிறது: இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறவேண்டித் தன்னையே பலிக்கடாவாக நிறுத்தத் துணியும் அளவுக்கு காங்கிரசு அரசுக்கு என்ன அவசியம் வந்தது?  இந்த கட்டுரையின் மையப் பொருளில் இருந்து சற்றே விலகியதாய் இருப்பினும், இக்கேள்வி தன்னளவிலேயே சுவாரசியமானதும், முக்கியத்துவம் வாய்ந்த்தும் கூட.  இக்கேள்வி வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. [84]

இது பற்றிய விவாதம் சரியான காலத்தொடர்புடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும் . இந்த அரசு (2008-ம் ஆண்டு மத்தியில்) அணுசக்தி ஒப்பந்தததை நிறைவேற்றத் தீர்மானித்ததை ஒட்டி ஐ.மு. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடது சாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. எனவே இந்த முடிவு ஒரு அரசியல் நெருக்கடியை முன் தள்ளியது.  இறுதியாக, காங்கிரசு அரசு இந்த நெருக்கடியில் இருந்து சிறிதும் பாதிப்பில்லாமல் தப்பியதோடு, கூடுதல் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எனினும், பின்னர் அடையப் பெற்ற இந்த வெற்றிகள் அந்த நேரத்தில் தெளிவானதாக இல்லை.  இந்த அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் தோல்வி அடைந்து வீழ்ந்திருக்கக் கூடியதாய் இருந்தது.  மேலும், அது தேர்தலை சந்திக்க உகந்த நேரமாகவும் இல்லை.  இதற்கான பிற காரணங்களுக்கு மத்தியில், அப்போது பணவீக்க விகிதம் கடந்த 13 ஆண்டுகால உச்சத்தில் இருந்தது.[85]  இந்த சூழலில் காங்கிரசு தனது அரசை ஆட்டங்காணச் செய்வது தற்கொலைக்கு ஒப்பானதாக இல்லையா? இப்படி ஒரு விசித்திரமான நடத்தையை மேற்கொள்ளத் தூண்டிய பலம் வாய்ந்த சக்திகள் எவை?

தலைப்பு 1-ன் கீழ் நாம் பார்த்ததுபோல, ஆற்றல் உத்தரவாதத்திற்கு அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்ற வாதத்தை இந்த அரசு முன்வைத்தது.  எனினும், மேற்கண்ட பரிசீலனையின்படி, இந்தியாவின் சக்தித் தேவைக்கு அணுசக்தி முக்கியத்துவமற்ற ஒன்றாக இருக்கிறது, இருக்கவும் போகிறது. சர்வதேச யுரேனியம் கிடைக்கப் பெறும் வாய்ப்பு உள்நாட்டு யுரேனியத் தாதுவளத்தை ஆயுதத் தேவைக்கு என விடுவிக்கும் என்றாலும், அணுப்பிளவுப் பொருட்களின் முதன்மையான குவிப்பு சுதேசி ஈனுலைகளில் இருந்தே வரக்கூடியதாக இருக்கிறது.  ஆக, இந்தியாவின் அணுஆயுதத் திட்டத்துக்கும் இந்த ஒப்பந்தம் அவசியமான ஒன்றல்ல.

தனது சொந்த பிரச்சாரத்திற்கு இந்த அரசு தானே பலியாகிவிட்டது என்றொரு வாதமும் இருக்கிறது.  எனினும், மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரங்கள் எல்லாம் முற்றிலும் வெளிப்படையானவை.  கணிப்புகள் ஏதும் நடப்புக்கு வர சாத்தியமில்லை என்பதும் நன்கு அறிந்ததே. மேலும்,  அணுசக்தித் துறையின் முன்வைப்புகளின்படியே கூட வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவின் சக்திக் கலவையில் அணுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யப்போவதில்லை. ஆக, இவ்வகையான வாதம், பல பத்தாண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவின் சக்திவள உறுதிப்பாட்டிற்குக் கிடைக்க இருக்கும் சிறியதொரு அனுகூலத்திற்காக இன்றைய தனது அரசைத் தியாகம் செய்யும் அளவுக்கு காங்கிரசு தெளிந்த தொலைநோக்கு உடையது என்ற கருத்தை நோக்கித் தள்ளுகிறது.  இந்த வாதம் சரியல்ல என்பது வெளிப்படை.

தள்ளாடிக்கொண்டிருக்கும் தனது மின் உற்பத்தித் திட்டத்திற்கு உயிர்ப் பிச்சை தேவையாய் இருந்ததால், இந்திய அணுசக்தி நிருவனமே இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முன் தள்ளியது என்கிறது மற்றொரு வாதம்.[86]  இது ஒரு காரணக்கூறாக இருப்பினும், ஒரு சில தொழில்நுட்பவாதிகளின் செல்வாக்கால் இவ்வாறான ஒரு பாரிய அரசியல் முடிவு எடுக்கப்படுவது அசாத்தியமானது.

பெரிதும் ஏற்கத்தக்க ஒரு பதிலை புஷ் நிர்வாகத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரன ஆஷ்லி டெல்லிஸ் அளித்திருக்கிறார். [87]  இந்த ஒப்பந்தம் ” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார்.  மேலும் கூறுகையில், “நம்பிக்கையின் புதிய அத்தியாயத்தைக் கட்டியமைக்கும் அதிபர் மற்றும் பிரதமரின் கடுமுயற்சியில் அஸ்திவாரமாகத் திகழ்கின்ற வெளிப்படையான காரணத்திற்காகவே வரவிருக்கும் அனைத்துக்குமான ஈர்ப்பு மையமாக இந்த ஒப்பந்தம் திகழ்கிறது… … எனது கருத்துப்படி, ஏன் இந்த ஒப்பந்தம் தோற்க முடியாதது, தோற்கக் கூடாதது என்பதற்கு அறுதிக் காரணமாக அமைவது இதுவே.  ஏனென்றால், உண்மையிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒன்றை செய்யும் முயற்சியில் இரு தலைவர்களும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அந்த ஏதோ ஒன்று தனது உறவை நீட்டிப்பதற்கு வலியுறுத்திக் கோருவது, நம்பகத்தன்மை,  கடமையில் உறுதிப்பாடு மற்றும் இறுதியாக பரஸ்பர நம்பிக்கை தொடர்பான செயல்பாடுகளையே” என்று ஆஷ்லி டெல்லிஸ் குறிப்பிடுகிறார்.

இருப்பினும்,  அமெரிக்காவுடனான கூட்டு என்ற நிலையில், இந்த “நம்பகத்தன்மை” , “கடப்பாடு” போன்ற சொற்கள் உணர்த்தும் உண்மைப் பொருள் என்ன?  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் இச்சொற்கள் உணர்த்தும் பொருள் என்பது வெட்டவெளிச்சமானது.

அமெரிக்க நலன்களை உறுதியாய் பற்றி நிற்பதைத் தடுக்கும் ஜனநாயக அரசியல் நிர்ப்பந்தங்களை அனுமதிக்காதவையே இந்த நம்பத்தக்க அரசுகள்.  இந்த அம்சம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏறுமாறாய் இருக்கின்ற மூன்றாம் உலக வாசிகளுடன் சேர்ந்து இயங்குவதை அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிகள் விரும்புவதில்லை.  ஜனநாயக அரசியலை நன்கு சமாளித்து, தனது ‘சர்வதேசக் கடமைகளை’ வழுவாது நிற்கும் நாடு எதுவோ அதுவே ’நம்பத்தக்க கூட்டாளி’.

“[ஈராக்கிற்கு எதிரான] போருக்கான அணிதிரட்டலின்போது ஜனநாயகத்தைப் பற்றிய அணுகுமுறை என்றுமில்லாத் தெளிவுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது” என்று சாம்ஸ்கி குறிப்பிடுகிறார் [88].  ”மக்களின் கருத்துக்கு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஈராக் மீதான போரை ஆதரிக்கவிடாமல் பிரான்சு, ஜெர்மெனி போன்றோ நாடுகளைத் தடுத்துவிட்டன. எனவே, தனது முந்தைய மேற்கத்தியக் கூட்டாளிகளான இவர்களும் “பழைய ஐரோப்பா”வை நோக்கித் தள்ளப்பட்டனர்.  பழைய மற்றும் புதிய ஐரோப்பிய அரசுகள் ஒரே ஒரு எளிய வரையறையால் தெளிவாய் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. பிரச்சினையில் தனது ஆகப்பெரும் குடிமக்களின் நிலையைத் தானும் எடுத்து, வாஷிங்டன் ஆணைகளைப் பின்பற்ற மறுத்தால், மறுத்ததாலேயே ஒரு அரசு அநீதியான பழைய ஐரோப்பாவில் சேர்ந்துவிடுகிறது” என்றும் குறிப்பிடுகிறார் சாம்ஸ்கி .

இது பற்றி அமெரிக்கா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு மிக்க நபர்களும் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் தோல்வி இந்தியாவை “அறவே நம்பத்தகாத நாடு” என்ற நிலைக்குத் தள்ளிவிடும் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரோனன் சென் விவரிக்கிறார்.  (ஒருவர் மாற்றி ஒருவர் வரும்படியான) “சுழற் கதவு”  அரசாங்கங்கள் அமையும் நிலைமைக்கு இடையே, இந்தியாவைத் தனித்துக் காட்டும் ஓர் அம்சம், இது ஏதோ ஜனநாயக நாடு என்பதல்ல … நாம் நமது கடப்பாடுகளுக்கு என்றும் மதிப்பளித்து வருகிறோம் என்பதே” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  மாநிலங்கள் அளவில் எப்போதும் அது அவ்வாறு இல்லை என்று தெரிவிப்பதுடம், “ அதற்கு ஒரு உதாரணமாக … ஒரு தேர்தலுக்குப் பின் வந்த மாநில அரசு ஒரு ஒப்பந்தத்தை மாற்றிவிட்டது, அதுதான் என்ரான் ஒப்பந்தம்”! என்றும் வருந்துகிறார். சென்-ஐப் பொருத்தவரை, எவ்வளவு கடுமையானதாகவும், நியாயமற்றதாகவும் இருந்தபோதிலும் பன்னாட்டு நிறுவனங்களுடனோ அல்லது அமெரிக்க அரசுடனோ செய்துகொண்ட ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேர்தல்களோ மக்களின் விருப்பங்களோ குறுக்கீடு செய்யக்கூடாது.

”உலக ஒழுங்கமைவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அணுசக்திப் பாதுகாப்பு போன்ற விசயங்களில் இந்திய அதிகாரவர்க்கத்தினரும் அரசுப் பிரதிநிதிகளும் தமது தனித்துவத்தைப் பேணுவதில் உறுதிமிக்கவர்கள் என்ற பெருமைமிகு பாரம்பரியம் கொண்டவர்கள்” என்று கிளிண்டன் நிர்வாகத்தில் ஒரு உறுப்பினராக இருந்த அஷ்டன் கார்டர் அமெரிக்க செனட் சபைக்கு விளக்கினார். எனினும், “இந்தியா .. ஒரு ஜனநாயக நாடாக”  இருப்பதால் “தில்லியின் எந்த அரசும் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாக விரிவான பல நடவடிக்கைகளை எடுக்க முடியாது” என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்தியாவை ஆளும் மேட்டுக்குடிகளுக்கு இந்த உண்மையும் பெருங் கசப்பாய் இருந்தது. இடதுசாரிக் கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னேறவிடாமல் தடுத்தபோது “முடிவெடுக்கும் திறனை இந்திய ஜனநாயகம் பெரிதும் முடக்குகிறது… இந்த போக்கு மாறயே தீரவேண்டும்” என்று அறுதியிட்டுக் கூறினார் சிதம்பரம். [91]   பலகட்சி ஜனநாயக அமைப்புமுறையின் பயன்பாடு பற்றியே கேள்வி எழுப்பும் அளவுக்கு மனம் நொந்து போனார் மன்மோகன் சிங். கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய மாநாடு ஒன்றில் பேசும்பொது, “ஒரு கட்சி ஆட்சி ஏதேனும் சாதக அம்சங்களைக் கொண்டிருக்கின்றதா” என்றும் “தேசீய-அரசுகள் பெரிதும் செயல்படுத்திக் காட்ட வேண்டிய வகையில் பயனுள்ள ஒரு ஒற்றுமையைக் கூட்டரசு வழங்க சாத்தியமிருக்கிறதா” என்றும் வினவினார்.

முடிவு என்னவென்றால், நீண்ட தேக்கநிலைக்குப் பிறகு, ஜப்பானில் G8 நாடுகளின் கூட்டத்திற்கு மன்மோகன் சிங் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு இடதுசாரிக் கட்சிகளுடன் ஒரு சண்டையை விரைவுபடுத்தியது காங்கிரசு.  டைம்ஸ் ஆஃப் இண்டியா விவரித்தது போல, “சர்வதேச சமூகத்தின் முன்னால் காங்கிரஸ் தலைமைக்கு ஒரு தலைகுனிவு ஏற்படும் என்று மன்மோகன் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்”.[93]   ஆக, மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றது, மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, தாங்கள் நம்பத்தக்க ஏகாதிபத்தியக் கைக்கூலி என்ற தகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எல்லா இடர்பாடுகளையும் கடந்து அரகள் தமது தொடர்ந்த இருப்புக்கான சிறப்புரிமை பெற்றிருக்கின்றன என்ற கருத்தாக்கத்தை இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை தனது அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது.  அமெரிக்காவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காங்கிரசு இந்த அடிப்படைக் கோட்பாட்டை மீற முனைந்ததும், தனது சொந்த அரசின் இருத்தலையே அபாயத்துக்கு உள்ளாக்க விரும்பியதுமான எதார்த்த உண்மை ஏகாதிபத்தியத்திடம் அது கொண்டிருக்கும் நெருக்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அம்சமாக இருக்கிறது.

_____________________________________________________________________________

– சுவ்ரத் ராஜு

அரசியல் பொருளாதார ஆய்வுக் குழுவின் (RUPE) ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியாஸ் எகானமி – இதழ் எண் 48ல் [ஜனவரி, 2010] வெளியிடப்பட்டது.

ஆங்கில மூலம் – India’s Atomic Energy Programme: Claims and Reality

– தமிழாக்கம்: அனாமதேயன்
________________________________________________________________________

படிக்க

ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி!

ங்குத் திரும்பினாலும் கான்ட்ராக்ட், CL என்ற பெயரில் தினம்தோறும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிற்சங்கம் அமைத்தாலே வேலை இல்லை. போனஸ், பிஎஃப், இ.எஸ்.ஐ போன்ற சட்ட உரிமைகளை இந்த நாட்டில் முதலாளிகள் தங்களின் மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை. இது போன்ற எண்ணற்ற முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டின் நீதிமன்றம், போலிசு,ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவரும் துணை நிற்கிறார்கள்.இதனை எதிர்த்து  தன்னெழுச்சியாக தொழிலாளர்கள் போராடும் போதெல்லாம் ஊடகங்களும் தன் பங்குக்கு அதனைக் கண்டு கொள்வதேயில்லை, அல்லது திரித்து செய்திகளை முதலாளிகளுக்கு சார்பாக வெளியிட்டு, போராடும் தொழிலாளர்களின் முதுகில் குத்தி வருகின்றன.

இந்நிலையில்தான் துவண்டு போகும் தொழிலாளர்களுக்கு தலைமையேற்று வழிநடத்தி  வருகின்றன புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி –யின் தலைமையிலான புரட்சிகர தொழிற்சங்கங்கள்.

அந்த வகையில் ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில்  பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக  உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.

சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களை  உற்பத்தி செய்துவரும் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் (லிட்) எனும் ஆலை ஓசூர் சிப்காட்-1 பகுதியில் இயங்கி வருகிறது. சுமார் 15- ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வாலையில் அவுஸ்கீப்பிங், கார்டன், பாண்டரி போன்ற இடங்களை  பராமரிக்க 6- பெண்கள் உள்ளிட்ட  மொத்தம் 20- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து பராமரித்து  வருகின்றனர். இவர்கள் கடந்த 13 – ஆண்டுகளாக இங்கே அற்ப கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர்’2010 முதல் போராடி தங்களின் உரிமைகளைப் பெற உறுதிப்பூண்டு தங்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-யில் சங்கமாக இணைத்துக்கொண்டார்கள். ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு  சட்டப்படி நியாயமாக வழங்கவேண்டிய போனஸ், காலணி, உள்ளிட்ட உரிமைகளை கேட்டனர். 12- ஆண்டுகளாக கூலி உயர்வு போனஸ், காலணி கொடுக்காமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை திருடித் தின்று கொழுத்த நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துப் போராடியதால் வேறுவழியின்றி போனஸ் மற்றும் கூலி உயர்வை அளித்தனர்.

கல்லியறிவற்ற,பின்தங்கிய வறிய ஏழைகளான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவ்வாலையில் மலக்குழியை கழுவுகின்றனர். அதிகாரிகள் மென்று துப்பும் சுவிங்கம் –குப்பைகளை மூச்சைப் பிடித்துக்கொண்டு அகற்றும் வேலைகளை செய்கின்றனர். கேண்டீனில் உணவு கிடையாது. புல்வெளியில் அவ்வப்போது படமெடுக்கும் பாம்பு,தேள் போன்ற விஷ ஜந்துகளிடமிருந்து தப்பித்தாலும் கான்ட்ராக்ட் சூப்பர்வைசர் ரவுடி முனீரிடமிருந்து தப்பிக்கவே முடியாது. மலக்குழியின் துர்நாற்றத்தையே சகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள், வாயைத் தொறந்தாலே கெட்டவார்த்தைகளில் பேசும் ரவுடி முனீரை சகித்துக் கொள்ள முடியாது அன்றாடம் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

வேறு தொழில் ஏதும் தெரியாத இந்த அப்பாவித் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட கடந்த ஜுன் மாதம் ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு ரூ 50-ஐ மட்டும் கூலி உயர்வாக அறிவித்துவிட்டு ஆகஸ்ட் – 1-ம் தேதி முதல் 5- பேருக்கு வேலை இல்லை என திடீரென்று திமிராக அறிவித்துவிட்டான் நயவஞ்சகன் விக்டர் பிரசாத்.

யார் இந்த விக்டர் பிரசாத் ?

கொடிய விசமுள்ள நச்சுப்பாம்பை நல்லப்பாம்பு என்று சொல்வதைப்போல ‘மனித வள மேம்பாட்டு அதிகாரி’ என்ற போர்வையில் இவ்வாலையில் புகுந்தான் விக்டர்  பிரசாத். தொழிலாளர்களையும்,தொழிற்சங்கத்தையும் ஒழித்துக்கட்ட எண்ணற்ற தாக்குதல்களை தொடுத்து வருகிறான்.

அப்பாவி மக்களை குண்டுவைத்துக் கொல்வதும், துப்பாக்கியால் சுடுவதும் பயங்கரவாதம் என நாம் அறிவோம். அதுபோல் உழைத்து பிழைப்பதைத் தவிர வேறு எதையும் அறியாத இந்த ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து வயிற்றிலடிக்கும் இவனை முதலாளித்துவ பயங்கரவாதி என்றழைப்பதுதான் பொருத்தம். அந்தளவிற்கு  மிகவும் கொடியவன்தான்  இந்த விக்டர்பிரசாத்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றிலடித்த இந்தக் கொடூரனுக்கு முதலாளித்துவப் பயங்கரவாதிக்கு மாதச்சம்பளம் ரூ1,50,000. ஆலையில் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவது, தொழிலாளர் ஒற்றுமையைப் பிளக்க கருங்காலிகளை ஆசைக்காட்டி உருவாக்குவது,  இது போன்ற வேலைகளை செய்வதுதான் இந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் (HR) முக்கியமான வேலையாகும். அப்படிப்பட்ட வேலைகளை செய்துவரும்  மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி விக்டர் பிரசாத் தூண்டுதலின் பேரில்தான கான்ட்ராக்ட்காரன் 5- பேரை வேலை  நீக்கம் என்று அறிவித்தான்.

ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்க மறுத்த பு.ஜ.தொ.மு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களையும்  அணிதிரட்டி உடனடியாக ஆலைவாயில் முன்பு 10.08.2011 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை திரளான உள்ளுர் மக்கள் ஆதரவுடன் நடத்தின. இதனைக் கண்டு அரண்டுப்போன நிர்வாகம் உடனே பேச்சுவார்த்தைக்கு  முன்வந்தது.

அதன்பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  வேலை நீக்கத்திற்குப் பதிலாக சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் 4- நாட்கள் மட்டும் வேலையிழப்பு என்று தொழிலாளர்கள் ஒப்புதலுடன் பேசிமுடிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலையைவிட்டு  நீக்கப்படுவதை தொழிலாளர்கள் தங்கள் வர்க்க ஒற்றுமையைப் பேணி, பு.ஜ.தொ.மு-ன் வழிக்காட்டுதலின்படி உறுதியாக நின்றுப் போராடி முறியடித்தனர். இழப்பை எல்லோரும் பகிர்ந்துக் கொண்டனர். இதனால், ஆப்பறைந்த குரங்குப்போல திகைத்து நின்றான் விக்டர் பிரசாத்.

இந்நிலையில் ஒப்புக்கொண்ட விசயங்கள், பேச்சுவார்த்தை மரபுகள் அனைத்தையும் மீறி திடீரென்று தடாலடியாக விக்டர் பிரசாத்தும், கான்ட்ராக்ட்காரனும் இணைந்துக் கொண்டு சங்க முன்னணியாளர்கள் 4-பேரையாவது  கட்டாயமாக வேலையை விட்டு நீக்கியே  ஆக வேண்டும் என்று முடிவெடுத்து செப்டம்பர் 12 –தேதி அதன்படியே அறிவித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த தொழிலாளர்கள் ஆலையினுள்ளே உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.

அதனடிப்படையில் 14.09.2011 அன்று மாலை 5-மணிக்கு வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு மறுநாள் 15.09.2011 அன்று காலை 10-மணிக்கு இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது, ஆட்குறைப்புக்கான  நியாயமான காரணங்கள் எதுவும் நிர்வாகத் தரப்பில் முன்வைக்கப்படவில்லை. மாறாக, சங்கம் சேர்ந்ததற்குதான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது வெட்டவெளிச்சமாக அம்பலமானது. ஆதாரம் இல்லாததால் கான்ட்ராக்ட்காரன் பேச்சுவார்த்தையின் இடையிலே எழுந்து ஓடிவிட்டான். அதனால் விழிப்பிதுங்கி நின்ற நிர்வாகம் இறுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்கப் போராட்டத்திற்கு பணிந்தது.

தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பேணிப் பராமரித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஊன்றி நின்று வெற்றியை சாதித்துக் கொடுத்தது புரட்சிகரத் தொழிற்சங்கமான பதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைமை. இது ஓசூர் வரலாற்றிலே அதுவும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநீக்கத்திற்கு எதிரான, உரிமைக்கானப் போராட்டத்தில் பெற்ற வெற்றி என்பது இதுவரை யாரும் சாதித்திராத முன்னுதாரணமிக்கப் போராட்ட அனுபவமாகும். மேலும், இந்த அனுபவம் பிற ஆலையில் கொத்தடிமைகளாக உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கானப் போராட்டத்திற்கு ஒளிவிளக்காகவும் திகழ்கிறது என்பதே எதார்த்தமாக உள்ளது.

__________________________________________________

    – புதிய ஜனநாயம் செய்தியாளர், ஓசூர்.
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மெட்ரிக் பள்ளியில் 4 வயது யுகேஜி சிறுமிக்கு ஆசிரியைகள் செய்த பாலியல் வன்கொடுமை!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டத்தில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார்மய கல்வியின்  தரங்கெட்டத் தனத்தைப் பாருங்கள்!

கல்வித்துறை,  காவல் துறை அதிகாரிகள் பள்ளி முதலாளிக்கு ஆதரவாக!

இதை அம்பலப்படுத்த தயங்கிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்!

_____________________________________________

வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு 19 ஆண்டு நெடிய போராட்டத்திற்குப் பிறகே ஓரளவு நீதி கிடைத்திருக்கிறது. எளியோரை அதிகாரம் கொண்டோர் குதறுவதும், அதை எதிர்க்க இயலாமல் மக்கள் சகித்துக் கொண்டு வாழ்வதுமான சூழ்நிலையில் இத்தகைய குற்றம் இழைத்தோரை அதிகாரவர்க்கம், காவல்துறை, அரசு எத்தனை மெனக்கெட்டு பாதுகாக்கிறது என்பதற்கு வாச்சாத்தி ஒரு எடுத்துக்காட்டு.

இங்கே ஒரு நான்கு வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த நீண்ட போராட்டத்திற்கு பிறகே அதை முறைப்படி விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது. இதே கொடுமை அரசு பள்ளிகளில் நடந்திருந்தால் அவர்கள் நாம் தட்டிக்கேட்க முடியும். ஆனால் தனியார் பள்ளிகள் என்றால் குற்றவாளிகளைப் பாதுகாக்க தனியார் முதலாளியும், அவரது பணபலத்தினால் ஊடகங்களும், காவல்துறையும் உதவி செய்ய ஓடிவருகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்பது தனியார் கல்வி முதலாளிகளிடம் இருக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற வேண்டுமென்றால் இத்தனை இடர்ப்பாடுகளை நமது அரசமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அநீதிகளை உடனுக்குடன் தட்டிக் கேட்பதற்கு பெற்றோரும், மக்களும் தயாராகும் போதும், இதன் ஊற்று மூலமான தனியார் கல்வி மயத்தை தட்டிக்கேட்கும் போதுமே இத்தகைய கொடுமைகளை நாம் எதிர்காலத்தில் நிறுத்தமுடியும்.

– வினவு

____________________________________________

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்  யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமியிடம் பிரின்சிபால் லசி போஸ்கோ மற்றும் ஆசிரியர் போஸ்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர். அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.

அது முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டன….

 

   

பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா
பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா

ந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் அன்று வரவில்லை. ஏ.கே.டி பள்ளியில் சுமார் 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்சி, ஸ்டேட் போர்டு, மெட்ரிக் ஆகிய பள்ளிகள் ஒரே வளாகத்தில் உள்ளது. கூடவே பொறியியல் கல்லுரி,  பி.எட், டி.டிஎட்  மற்றும் அனைத்து கல்விக்கான உதிரி பாகங்களும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய பெரிய நிறுவனம். ஏ.கே.டி  பள்ளியின் முதலாளி மகேந்திரனுக்கு மாவட்டம் கடந்து பல பேருந்துகள் ஓடுகிறது. லாட்ஜ், நஞ்சை, புஞ்சை நிலங்கள் என மிக பெரும் அதிபதி.

சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை சொல்ல சொல்ல தந்தை வீடியோவில் பதிவு செய்தாலும் உறவினர்களால் பொறுக்க முடியாமல் பெண்கள் பலர் அன்று இரவே ஆசிரியைகள் வீட்டுக்கும் சென்று செருப்பால் நாலு சாத்து சாத்தினர்.மப்டி போலீசு வந்தது, “இப்ப என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க? ” என்று தடுத்தனர். “அவளுங்கள இங்கேயே கொளுத்தனும்”, என்று பெண்கள் சொன்னார்கள். “போலீசுகிட்டேயே இப்படி பேசுரீங்களா” என்று காவலர்கள் கதைத்து சென்று விட்டனர்.

விடிந்ததும் கள்ளகுறிச்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சிறுமி வீட்டு வாசலில் பள்ளி முதலாளி மகேந்திரனுடன் காத்திருந்தனர்.வழக்கறிஞர்கள் சிலர், “இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனால் நிற்காது, ஒரு ஆண் பெண்ணை ரேப் பண்ணினால்தான் தண்டனை. பெண் ஆசிரியைகள் அதுவும் குழந்தையிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது எடுபடாது.நீதிமன்றத்தில் கண்டபடி குறுக்கு விசாரணை செய்வார்கள். அதனால் நாலு சாத்து சாத்திவிட்டு இதோடு விட்ட விடுங்க”,என பலர் பல விதமாக ஆலோசனை சொன்னார்கள்.

பள்ளி முதலாளி மகேந்திரனும், “நான்கு டீச்சரையும் நான் ஏற்பாடு செய்றேன். இங்க அடிக்கீறிங்களா? எங்க வீட்ல வச்சிக்கலாமா?” என்றார். பெற்றோர்கள், “வேண்டாம் எங்க வீட்லேயே வச்சிக்கலாம்” என்று சொன்ன பிறகுதான் ஊர் பெரிய மனிதர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதை பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொள்ளலாம் என்ற பெரிய மனிதர்களிடம் மறுத்த பெற்றோர்கள் அவர்களை அனுப்பிவிட்டு தாமதிக்காமல் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். செல் பேசியை அனைத்து விட்டனர்.

ஆனாலும் பெரிய மனிதர்கள் நேரிலே வந்து நான்கு டீச்சரும் ரெடியா இருக்காங்க வாங்க என்ற விடுத்த அழைப்பை உதாசினப்படுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். ஆய்வாளர் விவேகானந்தன் ’’நீங்க புகாரை தாமதமாக கொடுக்கீறிங்க குற்றவாளிகள் தலைமறைவாகிட்டாங்க” என்றார்.

இச்சூழலில் மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரையும், ஏ.கே.டி  பள்ளியின் மற்ற பெற்றோர்களையும் நேரில் சந்தித்து காவல் துறை, பள்ளி நிர்வாகம், குற்றவாளிகள் குறித்து விசாரித்தோம். அச்சத்தால் சில எதிர்ப்பு குரல்கள் அடங்கியிருந்தன. இன்று பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் அன்று மௌனம் சாதித்தன. இவர்கள் விசாரித்தால் வழக்கு உருப்படாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகினோம். பெற்றோர்களின் பொது மக்களின் அச்சத்தை போக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம்.

சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மூடிமறைப்பதற்கு பலரிடம் ரூபாய் கட்டுகள் அளிக்கப்பட்டன. பத்திரிக்கையாளர்களும் கவனிக்கப்பட்டனர். ஆனாலும் விஷயம் பெற்றோர்கள் மத்தியில் புகைந்து சாலை மறியலாக கொழுந்து விட்டு எரிந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நான்கு முனை சந்திப்பில் போக்கு வரத்து நிலை குலைந்தது. ஏ.கே.டி  பள்ளி பெற்றோர்கள் ஆவேசத்துடன் போலிஸிடம் வாதிட்டனர். இறுதியில் குற்றவாளி ஆசிரியர்களை கைது செய்கிறோம் என்ற உத்தரவாதத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

வேறு வழியில்லா சூழலில் ஏ.கே.டி பள்ளி முதலாளியிடம் உத்தரவு பெற்று கள்ளக்குறிச்சி காவல் துறை, பிரின்ஸ்பால் லேசி போஸ்கோவை மட்டும் கைது செய்தது. பிறகு பள்ளி முதலாளி நிலைமையை சீர் படுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் டி.ஆர்.ஓ  தலைமையில் நடந்தது. இதில் கல்வி துறை, காவல்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பயப்படாமல் பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு அளிக்கும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

பள்ளி நிர்வாகம் தரப்பில் ”இது போன்ற சம்பவம் பள்ளியில் நடந்ததாக உறுதியாகவில்லை. கள்ளகுறிச்சி கல்வி வளர்ச்சியால் முன்னேற ஏ.கே.டி கல்வி நிறுவனம் பாடுபட்டு வருகிறது. இந்த நற்பெயரை கெடுக்க வெளியில் இருந்து வேலை பார்க்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது. ஏனைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளி ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக கள்ளக்குறிச்சியில் 17.8.2011 ஆர்ப்பாட்டம் நடத்த போலிசிடம் அனுமதி கோரியது. ஆனால் ஆய்வாளர் விவேகானந்தன், “அதையெல்லாம் வழக்கை உங்கள் இஷ்டத்துக்கு சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது ஆர்ப்பாட்டதுக்கு அனுமதியெல்லாம் கிடையாது” என்று மறுத்ததுடன் மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர் சங்கராபுரம் ராமலிங்கம் அவர்கள் ஆர்ப்பாட்ட அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் கையெழுத்து போட சொன்னார்.

“அனுமதி மறுப்பை எழுத்து பூர்வமாக கொடுங்கள்”, என கேட்டு வாங்கினார் இராமலிங்கம். மீண்டும் வேறு தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி DSP, SP யிடம் பதிவு தபாலில் மனு கொடுத்தோம். கிடைத்த 10 நிமிடத்தில் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தது காவல் துறை. “அனுமதி மறுக்கும் கடிதத்தில் ஏற்கனவே 14.8.2011 ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கோரிய மனுவை பரிசிலித்து அன்று மறுக்கப்பட்டது. மேற்படி வழக்கில் ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆய்வாளர் விவேகானந்தன் பள்ளி முதலாளிக்குச் சேவை ஆற்றினார்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ! ஒரு நெடிய போராட்டம் !!
போலிசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கள்ளக்குறிச்சி நகரத்திலும் ஏ.கே.டி பள்ளியில் படிக்கும் பல்வேறு கிராமங்களிலும்,

தமிழக அரசே!

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்!

வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்று!

 பெற்றோர்களே! மாணவர்களே! அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை அமுல்படுத்த போராடுவோம்!

என சுவரொட்டி ஒட்டினோம்.

பள்ளி முதலாளி மகேந்திரன் ஆள்வைத்து போஸ்டரை கிழித்தார். தலைமையாசிரியர் 20 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து பிறகு பிணையில் வெளியில் வந்தார். போடப்பட்ட வழக்கு பிரிவுகள்

     342 – சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்

                            323 – சிறுகாயம் ஏற்படுதல்,     506 (i) – குற்றமுறு மிரட்டல்

                            377 – இயற்கைக்கு மாறான பாலியல் நடவடிக்கை

இதற்கிடையில் மற்றொரு ஆசிரியர் போசியாவும் முன் ஜாமின் பெற்று விட்டார். உயர்நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 இந்த வழக்கு பொருந்தாது என்பதால் முன்ஜாமின் வழங்கியது.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீசுக்கு எதிராக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் போடப்பட்ட வழக்கு விசாரணை 19.8.2011 நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு வந்தது. பள்ளி நிர்வாகத்தினை இந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனறு நீதிபதி நிபந்தனை விதித்தார். நாம் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19(1) படி கருத்துரிமையை நடைமுறைபடுத்த போடப்பட்ட வழக்கில் பள்ளி நிர்வாகத்தை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினோம். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கை சி.பி.சி.ஐடிக்கு மாற்ற கோரியும், தனியார் பள்ளி மாணவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பவைகள் பொதுநல வழக்கின் சாரமாக இருப்பதால் வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டு 26.9.2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அன்றே அவசரமாக போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  30-8-2011-ம் தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு விடுமுறை தினத்தில் மனுதாரர் ராமலிங்கத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்று கூறினர்.

முதல் தகவல் அறிக்கையை பாதி மட்டுமே படித்து விட்டு தலைமை நீதிபதி ’’என்னால் முழுமையாக படிக்கமுடியவில்லை’’ என்று ஆதங்கப்பட்டார். காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குற்றவாளிகளின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லையென்றும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  நபர்களைக் கைது செய்யாமல் இருப்பதுமான போலீஸின் செயல் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே இத்தகைய காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்ட அனைவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு அது சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்துறை செயலாளரும், டி.ஜி.பியும் எங்கள் முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியும் கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

மறுநாள் 27.9.2011 அன்று வழக்கு விசாரணையின் போது எஸ்.பியும், கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியை செப்டம்பர் 8-ம் தேதி முன் ஜாமின் பெற்றுவிட்டார். பள்ளி முதல்வர் ஆகஸ்ட்டு 30-ம் தேதி ஜாமின் பெற்றுவிட்டார். எனவே அவர்களை கைது செய்ய முடியாது என்று போலீசு தரப்பில் கூறப்பட்டது. நாம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தான மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தோம்.

அவ்வறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ டாக்டரை மிரட்டி விவரங்களை கேட்டுள்ளார். அப்போலோ டாக்டர் சியமளாதேவி பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் குழந்தையைப்பற்றி மருத்துவ விவரங்களை அளிக்க முடியாது என்று மறுத்துள்ளார். நீங்கள் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று மிரட்டியதையும் மருத்துவ அறிக்கையிலேயே பதிவு செய்திருந்தார் மருத்துவர். அதை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையை சி.பி.சிஐடிக்கு மாற்றி டி.எஸ்.பி பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரினோம்.

தலைமை நீதியரசர் ஆய்வாளரை பார்த்து இது ஒரு சீரியஸ்சான குற்றசாட்டு என்பதை பதிவு செய்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எந்த விதமான மனுவும் போடாமல்  ஏ.கே.டி பள்ளி மிகவும் புகழ் வாய்ந்தது. 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று பேச முற்பட்டார். நாமும் அந்த மாணவர்களது பாதுகாப்பு குறித்துதான் கவலை அளிக்கிறது என்று சொன்னோம்.

தீர்ப்பை ஒத்தி வைத்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அரசுக்கு எதிராக நீதிபதிகள் அழுத்தமான உத்தரவு ஏதேனும் பிறப்பித்து விடுவார்களோ என்ற நிலையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்  தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நாங்கள் டி.எஸ்.பியை  வைத்து விசாரிக்கிறோம் என்றார். அதற்கு நீதிபதிகள் சி.பி.சிஐடிக்கு மாற்றினால் என்ன என்று கேட்டனர். தமிழக அரசு ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு சி.பி.சிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நாம் கோரியபடி வழக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் வைத்து விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்ததுடன், சி.பி.சிஐடி விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ மருத்துவரிடம் நடந்து கொண்ட சம்பவத்திற்கு எங்கள் வேதனையையும் அதிருப்தியையும் பதிவு செய்கிறோம் என்றும், யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும் அந்த நிர்பந்தத்திற்கு செவிசாய்க்காமல்   இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்குப் பிறகு 28.9.2011 அன்று ஐஜி, சைலேந்திர பாபு மற்றும் டிஐஜி, எஸ்பி, டி.எஸ்.பி சகிதம் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்தித்து விசாரித்தனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு. “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றும், ஆய்வாளர்  விவேகானந்தன் மாணவி இறந்ததாக  பரவிய வதந்தி பற்றி தகவலை அறிந்து கொள்ளவே அப்பல்லோ டாக்டரை பார்த்தார்” எனவும் தலைமை நீதிபதி வேதனைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பெற்றோர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சந்தித்தோம்.’’எங்கள் குழந்தை இந்த ஆண்டு அவர் அம்மாவிடம் வீட்டிலேயே படிக்கிறது. நாங்களும் பள்ளி நிர்வாகத்திடம் விலை போய்விட்டோம் என பலர் சந்தேகப்பட்டனர். உங்களுடைய முயற்சியால் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இப்படி ஒரு மாற்றம் வரும் என்று நம்பவில்லை” என்று உருக்கமாக பேசினார் குழந்தையின் தந்தை.

போஸ்யா மிஸ் எனக்கு எப்படி ஊசி போட்டார்கள் என்பதை சிறுமி செய்து காட்டும் போதும் இரவில் துாங்கும் போது அம்மாவிடம் மிஸ் என்னை காரில் அழைத்து சென்றார்கள்,வீடியோ எடுத்தார்கள், விளையாட்டு பொம்மை கொடுத்தார்கள் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் போது பெற்றோர்கள் படும் வேதனை என்பது குற்றவாளிகள் தண்டனை அடையும் போது மட்டுமே தீரும். பல பெற்றோர்கள் இதற்காகதான் வெளியல் சொல்லாமல் மனம் புழுங்கி சகித்து கொண்டு போகிறார்கள்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா, தனியார் பள்ளி முதலாளிகள்? எதிர்த்து பேசும் ரவுடியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீசு போல பெற்றோர்கள் சங்கமாக திரண்டு பாலியல் தவறு செய்யும் ஆசிரியரையும் பாதுகாக்கும் பள்ளி முதலாளியையும் உடனுக்குடன் தண்டிக்க வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக்குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, காவல்துறை அதிகாரிகள், ஒத்துப்போகும் பத்திரிகைகள் அனைவரையும் மீறி நாம் நீதி பெறமுடியும்.

இன்று நீதிமன்றம் இப்படி ஒரு உத்திரவு பிறப்பித்தற்கே இத்தனை நெடிய போராட்டத்தை மக்கள் அரங்கிலும், சட்ட அரங்கிலும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வேளை இதை செய்யத்தவறியிருந்தால் அந்த சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதைக் கண்டும் வேதனையோடு நாட்களை கடத்தும் பெற்றோரும் வாழ்நாள் முழுதும் துன்புற்றிருப்பார்கள்.

________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

அமெரிக்கக் கடன் நெருக்கடி -  மைனரின் சாயம் வெளுத்தது ! ‘‘உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு” என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொருமுறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.

1970களில் 283 கோடி அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவின் கடன் சுமை, 2011இல் 14.5 இலட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் தொகையை இந்திய ரூபாயில் சொன்னால் (66,70,00,00,00,00,000  அதாவது, 6.67 கோடியே கோடி ரூபாய்) அதிலுள்ள பூஜ்யங்களை எண்ணுவதற்கே தலை கிறுகிறுத்துப் போய்விடும். இம்மொத்தக் கடனில் சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் மட்டும் 4.5 இலட்சம் கோடி டாலர்கள்.

அமெரிக்க அரசின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், செலவுகளைச் சமாளிக்க, அதாவது பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச்சந்தையிலிருந்து எவ்வளவு கடன் பெற வேண்டும் என்ற வரம்பு தீர்மானிக்கப்படும். அரசின் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட இந்த வரம்பையும் தாண்டி கடன் வாங்க வேண்டிய நிலை உருவானால், அதற்கு அமெரிக்க காங்கிரசின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

காங்கிரசின் ஒப்புதலோடு பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரம்பையும் தாண்டிக் கடன் வாங்குவது அமெரிக்க அரசிற்குப் புதிய விசயமுமல்ல. ஆனால், கடந்த ஜூலை மாத இறுதியில் நடப்பாண்டு பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி கடன் வாங்க வேண்டிய சூழல் அந்நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டபொழுது, அதற்கு காங்கிரசில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்கள். கடன் வரம்பை உயர்த்துவதற்குப் பதிலாக, அமெரிக்க அரசு தனது செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டது, குடியரசுக் கட்சி.

குடியரசுக் கட்சியின் நோக்கம், அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதெல்லாம் அல்ல. அக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபொழுது போர்ச் செலவுகளுக்காகவும், முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையை ஈடுகட்டுவதற்காகவும் ஏழு முறை கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அப்போது கடன் சுமை அதிகரிப்பது பற்றி அமெரிக்காவின் தீவிர வலதுசாரி கும்பல் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அமெரிக்க அரசு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் அற்பமான மானியத்தையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற கொள்கையையுடைய குடியரசுக் கட்சியும் தீவிர வலதுசாரிக் கும்பலும் இக்கடன் நெருக்கடியை தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாக இப்பொழுது பயன்படுத்திக் கொண்டன.

4 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என நிதியாதிக்கக் கும்பல்கள் நிர்பந்தித்து வந்த வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 2.1 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்குச் செலவுகளைக் குறைப்பது, செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகையைத் தொடருவது என்ற சமரசத்தின் அடிப்படையில் கடன் வரம்பை உயர்த்திக் கொள்ள அமெரிக்க காங்கிரசில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் 1.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு கல்வி, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை வெட்ட இப்பொழுதே திட்டம் தயாராகிவிட்டது; மேலும், 1.5 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு மானியத்தைக் கழித்துக் கட்டுவது பற்றி ஆலோசனை கூற, இரண்டு கட்சிகளையும் சேர்ந்த காங்கிரசு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், நிதியாதிக்கக் கும்பல்கள் எதிர்பார்த்த அளவிற்கு செலவைக் குறைக்கும் வரம்பு நிர்ணயிக்கப்படாததால், அக்கும்பலின் கையாட்களுள் ஒன்றான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (Standard and Poor) என்ற தர நிர்ணய நிறுவனம், அமெரிக்காவின் கடன் வாங்கும் தகுதியினை “ஏஏஏ”  லிருந்து “ஏஏ+” ஆகக் குறைத்து, அமெரிக்க அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

அமெரிக்க அரசின் கடன் உயரக் காரணமென்ன?  

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு, அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டது. குறிப்பாக, 2008  இல் ஏற்பட்ட வீட்டு மனைக் கடன் குமிழி வெடிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏற்பட்டதைப் போல பெருமந்தத்தில் சிக்க வைத்தது. இப்பொருளாதார வீழ்ச்சிக்கு ஏற்ப அரசின் வரி வருமானமும் சரிந்து வீழ்ந்தது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அரசிற்குத் தனது செலவுகளை ஈடுகட்ட 307 கோடி அமெரிக்க டாலர்கள் தேவையாக இருந்தபொழுது, அம்மாதத்தில் அரசின் வரி வருமானம் வெறும் 172 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. அரசின் கடனை அதிகரிக்காமல், அரசு தனது செலவுகளை  நிர்வாகச் செலவுகள், இராணுவச் செலவுகள், மருத்துவக் காப்பீடு போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டியையும், அசலையும் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்டவற்றை ஈடுக்கட்ட முடியாது என்ற நிலையை இந்தப் பொருளாதார மந்தம் அமெரிக்கா மீது திணித்தது.

அமெரிக்க அரசின் வரி வருமானம் வீழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில், அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பொருளாதாரச் சரிவைத் தூக்கி நிறுத்துவது என்ற பெயரில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மேல்தட்டுப் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கினார். அவர் அளித்த வரிச் சலுகையால் 2003 தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய அமெரிக்க அரசிற்கு 1.7 இலட்சம் கோடி டாலர்கள் வருமான இழப்பு ஏற்பட்டது. புஷ்ஷுக்குப் பின் பதவிக்கு வந்த ஒபாமா இந்த வரிச் சலுகையை ரத்து செய்யாததோடு, அதனை 2013ஆம் ஆண்டு வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

இவ்வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, டாட் காம் பங்குச் சந்தை சூதாட்ட வீழ்ச்சி மற்றும் இரட்டை கோபுரத் தாக்குதல்களால் வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, முதலீட்டு வங்கிகளுக்கும், வேலியிடப்பட்ட நிதியங்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டு, வீட்டு மனைக் கடன் சூதாட்டம் தீவிரமாக நடத்தப்பட்டது. 2008இல் வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்ததையடுத்து, புஷ் 700 கோடி அமெரிக்க டாலர்களையும் அவரையடுத்து வந்த ஒபாமா 814 கோடி அமெரிக்க டாலர்களையும் அமெரிக்க வங்கிகள்  தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கும் மானியமாகவும், நிதியுதவியாகவும் அளித்தனர்.

அரசின் வரி வருமானம் சுருங்கிக்கொண்டே வந்த அதேசமயத்தில், அமெரிக்காவின் இராணுவச் செலவோ அதற்கு எதிர்விகிதத்தில் ஏறிக் கொண்டே போனது. தற்

சமயம் அமெரிக்காவின் வருடாந்திர மொத்த இராணுவச் செலவு 1.2 இலட்சம் கோடி டாலர்களைத் தொட்டுவிட்டது. இது அமெரிக்காவின் பட்ஜெட்டில் 40 சதவீதமாகும். இந்த வருடாந்திர இராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா ஆப்கானிலும், இராக்கிலும் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்காக மட்டும் கடந்த பத்தாண்டுகளில் 1 இலட்சம் கோடி டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஒபாமா அதிபரான பின் ஆப்கானில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால், அந்த ஆக்கிரமிப்புப் போருக்காக மட்டும் மாதமொன்றுக்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகிறது. மேலும், லிபியா மீதான தாக்குதலின் மூலம் ஒரு புதிய போர் முனையைத் திறந்திருக்கிறது, அமெரிக்கா. உலகைத் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைப்பதற்காகவே இந்த இராணுவ மற்றும் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவுகளை வீங்க வைத்துக் கொண்டே போகிறது, அமெரிக்க ஆளும் கும்பல்.

அமெரிக்க வங்கிகள் நடத்திய பங்குச் சந்தை சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி; இந்நெருக்கடியையொட்டி அமெரிக்க வங்கிகளுக்கும், தொழிற்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட மானியம், நிதியுதவி, வரிச் சலுகை மற்றும் அமெரிக்காவின் போர்ச் செலவுகள்  இவைதான் 2007 இல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதமாக இருந்த அந்நாட்டின் கடன் சுமையை இன்று 72.4 சதவீதமாக வீங்க வைத்துள்ளன. குறிப்பாக, முதலீட்டு வங்கிகளுக்கும், கார் கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்ட மானியத்தால் மட்டும் அமெரிக்காவின் கடன் சுமை 3.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அதிகரித்தது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையில் 70 சதவீதம் அமெரிக்காவின் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளால்தான் ஏற்படுகிறது. இந்தச் செலவுகளில் ஒரு பைசாவைக்கூடக் குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்க வலதுசாரி கும்பல், சமூக நலத் திட்டங்களுக்கான அரசின் செலவு கட்டுப்பாடின்றிச் செல்வதாகவும் தகுதியற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் வாரி வழங்கப்படுவதாகவும் கூறி, பாசிச புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவை வெட்ட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருக்கும் ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும், அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில்தான் வேறுபட்டு நின்று மோதிக் கொள்கிறார்கள்.

தியாகம் செய்!”  ஒபாமாவின் குரூரம்

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்க வைப்பதுதான் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராக இன்றும் இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே வேலைவாய்ப்பும், தொழிலாளர்களின் சம்பளமும் தேங்கிப் போயிருந்த நிலையில், அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்கச் செய்வதற்காகவே கடன் அட்டைகள் (Credit cards), வீட்டு அடமானக் கடன், கார் கடன், அவற்றுக்கான மானியங்கள் வாரி வழங்கப்பட்டன; இவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டது. இந்தக் குமிழி உடைந்தபொழுது, அது அமெரிக்க அரசை மட்டுமல்ல, பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்களையும் போண்டியாக்கியதோடு, கடன்காரர்களாகவும் ஆக்கியது.

2005க்கும் 2009க்கும் இடைபட்ட காலத்தில் கருப்பின மக்களின் சொத்தின் மதிப்பு 53 சதவீத மும், அமெரிக்காவில் குடியேறியுள்ள இலத்தீன் அமெரிக்க மக்களின் சொத்து மதிப்பு 66 சதவீதமும், வெள்ளை இனத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் சொத்தின் மதிப்பு 16 சதவீதமும் சரிந்து வீழ்ந்தது. வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்ததால், ஏறத்தாழ 1 கோடி அமெரிக்கர்கள் தங்களின் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். வீட்டு அடமானக் கடன் கொடுத்த வங்கிகள் தங்களின் கடனுக்கு ஈடாக இச்சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டன.

வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்த பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தையடுத்து, அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 51 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தற்சமயம் ஏறத்தாழ 2.5 கோடி அமெரிக்கத் தொழிலாளர்கள் நிரந்தர வேலையின்றியுள்ளனர்.

அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படியே, தற்பொழுது 4.4 கோடி அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; 4.9 கோடி அமெரிக்கர்கள் “உணவுப் பாதுகாப்பின்றி” வாழ்கிறார்கள். அன்றாட வாழ்க்கையிலிருந்து பட்டினியை ஒழிக்க முடியாத அமெரிக்க அரசு, பட்டினி என்ற வார்த்தையை அரசின் பதிவேடுகளில் பயன்படுத்துவதைச் சட்டபூர்வமாகத் தடை செய்து ஒழித்துவிட்டது.

சமூக ஏற்றத்தாழ்வுகளோ கடந்த பத்தாண்டுகளில் அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது. “அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமே உள்ள பெரும் பணக்காரர்கள்தான் இப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரத்தின் 40 சதவீத்தைக் கட்டுப்படுத்துவதாக’’க் கூறுகிறார், அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ். “அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் 24 சதவீதத்தை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றி அனுபவித்து வருவதாகவும்; 1980களில் ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் சராசரி வருமானத்தைவிட 42 மடங்கு அதிக வருமானம் ஈட்டிவந்த அமெரிக்கத் தொழிற்கழகங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், 2001இல் 531 மடங்கு அதிக வருமானம் ஈட்டுவதாகவும்; 1980 தொடங்கி 2005ஆம் ஆண்டு முடிய ஈட்டப்பட்ட அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் ஏறத்தாழ ஐந்தில் நான்கு பகுதியை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றிக் கொண்டுவிட்டதென்றும்” கூறுகிறார், மற்றொரு பொருளாதார அறிஞரான நிக்கோலஸ் கிறிஸ்டாஃப்.

‘‘அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும்பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்” என அமெரிக்காவின் ‘ஜனநாயகத்தை’ப் புட்டு வைக்கிறார், மிகப் பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட். “அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றத்தாழ்வுஅமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்” எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும்பொழுது, கருப்பின அதிபர் ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூற முடியும்.

இது சாதாரண நெருக்கடியல்ல;  மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடி

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! அரசின் செலவுகளை அதிகப்படுத்தியும், உற்பத்தி சார்ந்த தொழில்களில் முதலீட்டை அதிகப்படுத்தியும் இந்தக் கடன் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள முடியும் என கெய்னிசிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் தொழிற்துறையில் மூதலீடு செய்வதில்லை. கொள்ளை இலாபம் தருகின்ற நிதிச் சந்தைச் சூதாட்டத்தில்தான் முதலீடு செய்கின்றனர். உள்நாட்டில் முதலீடு செய்து உற்பத்தியில் ஈடுபடுவதைவிட, அயல்பணி ஒப்படைப்பையும் (Outsourcing) இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும்தான் அவர்கள் இலாபகரமானதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்த பிறகு தமக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் நிதியுதவிகளையும் இக்கார்ப்பரேட் முதலாளிகள் நலிவடைந்து போன தமது போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கும், உலகெங்கிலும் சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் முதலீடு செய்யவோ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ பயன்படுத்தவில்லை.

பற்றாக்குறையைக் குறைக்க தொழில்துறை உற்பத்தியை அதிகப்படுத்துவது, கார்ப்பரேட் வரி வருமானத்தை அதிகப்படுத்துவது என்ற கொள்கையை அமெரிக்க ஆளும் கும்பல் தனது வரலாறு நெடுகிலும் தீண்டத்தகாததாகவே கருதி வருகிறது. இதற்கு மாறாக, மானியத்தை வெட்டுவது, ஆட்குறைப்பு செய்வது, சம்பளத்தை வெட்டுவது என்ற தாராளவாதக் கொள்கையைத்தான் இந்தக் கும்பல் சர்வரோக நிவாரணியாக முன்வைக்கிறது. ஏற்கெனவே பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை, இந்தத் தீர்வு  அரசு செலவுகளைக் குறைப்பது  மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் எனத் தெரிந்திருந்தும், இந்தச் சுய அழிவுப் பாதையைத்தான் அமெரிக்க நிதியாதிக்கக் கும்பல் அமல்படுத்தத் துணிந்துள்ளது. அமெரிக்க முதலாளிவர்க்கம் ஏன் இப்படிச் சிந்திக்கிறது என்ற கேள்விக்கு, அப்படிச் சிந்திக்கவில்லையென்றால், அது முதலாளித்துவ வர்க்கமாக இருக்க முடியாது என்ற லெனினினுடைய விளக்கத்தைதான் பதிலாகத் தர முடியும்.

அமெரிக்காவில் 2000க்குப் பின் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள், குறிப்பாக வீட்டுமனைக் கடன் குமிழி வெடிப்பு பிரம்மாண்டமானதாக மட்டுமின்றி, உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தையையும், தொழிற்துறையையும் குப்புறக் கவிழ்க்கும் அளவிற்கு சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. தற்பொழுது தீவிரமான இந்தக் கடன் நெருக்கடியும்கூட, பல நாடுகளின் பங்குச் சந்தைகளைச் சரியச் செய்தது. இதன் காரணம், நிதி மூலதனப் பாய்ச்சல் உலகளாவிய தன்மை பெற்றிருப்பதும்; சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரங்களாக மாற்றப்பட்டு, அவை அனைத்தும் அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருப்பதும்தான்.

தற்பொழுது உலகெங்கிலும் நடைமுறையில் இருந்து வரும் தனியார்மய  தாராளமயப் பொருளாதாரக் கொள்கையானது, அனைத்து நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகிறது; பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது; உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கிறது. இம்மூன்றும்தான் நெருக்கடிகள் தோன்றுவதற்கும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதற்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

‘‘உலகமயத்தின் பின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியானது, பணக்காரர்கள், சூப்பர் பணக்காரர்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் அளவுக்கு அதிகமாகச் செல்வத்தைக் குவியச் செய்கிறது. இச்செல்வம் நிதி மூலதன உலகில் புகுந்து பல ஆபத்தான வழிமுறைகளின் மூலம்  எடுத்துக்காட்டாக, வீட்டு மனைக் கடன் சூதாட்டம்  இலாப வேட்டையாடுவதற்காகச் சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருக்குகிறது; அடுத்தடுத்த குமிழிகளை உருவாக்குகிறது.”

‘‘அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் குவியும் அந்நியச் செலாவணி உபரியானது மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுவதால், இம்முதலீடு வீட்டுமனைக் கடன் போன்ற குமிழிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.”

‘‘கடந்த முப்பதாண்டுகளில் உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளதோடு, அதிலிருந்து பிரிந்து சுயேச்சையாகவும் இயங்கி வருகிறது. இது சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருகச் செய்தும் பின்னர் வெடிப்பை ஏற்படுத்தியும் நிதி உலகில் மட்டுமின்றி, உண்மைப் பொருளாதாரத்திலும் ஏற்ற இறக்கங்களையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.”

இம்மூன்று அடிப்படையான காரணிகள்தான், சமநிலையின்மைகள்தான் நெருக்கடிகளை அடுத்தடுத்து உருவாக்கி வருவதாகக் கூறுகிறார், மைக்கேல் லிம் மாஹ் ஹுய் என்ற பொருளாதார அறிஞர். இம்மூன்று சமநிலையின்மைகள் இல்லாத தனியார்மயம்  தாராளமயத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது எனும்பொழுது, இக்கட்டமைப்பில் நெருக்கடிகள் தோன்றுவதையும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதையும் தவிர்த்துவிட முடியாது.

அமெரிக்காவின் ஒட்டுண்ணித்தனம்

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! ‘‘அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும். இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்த நாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.

அமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.

டாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்காவின் இந்த ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.

பொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்காத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.

டாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ  பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ‘வளர்ச்சிக்கு’க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.

உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.

டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.

அமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழி இல்லை.

இனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், “ கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்’’. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்