புதுச்சேரியில் பு.ஜ.தொ.மு சார்பாக ”ஈழ மக்களின் படுகொலைக்கு துணைபோன இந்திய அரசைக் கண்டித்து” தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரம்.
ஈழ மக்களை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த சிங்கள அரசையும், அதற்கு துணைபோன இந்திய அரசையும் கண்டித்து நடைபெறும் எழுச்சி தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மாணவர்களை கிளர்ந்தெழ செய்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பு.ஜ.தொ.மு நடத்திய மன்மோகன்சிங், சோனியாகாந்தி இருவரின் உருவபொம்மை எரிப்பு, சட்டசபை முற்றுகை என உருவெடுத்த இப்போராட்டம், மூன்று புதிய நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
ஒன்று: உண்ணாநிலை வடிவத்திலிருந்த மாணவர்களின் போராட்டத்தை உருவ பொம்மை எரிப்பு, முற்றுகை என்ற வடிவத்துக்கு மாற்றியுள்ளது.
இரண்டு: மாணவர்கள் மட்டுமே போராட்டக் களத்தில் இருந்ததை மாற்றி தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளது. பு.ஜ.தொ.மு அல்லாத தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
மூன்று: ‘அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், அல்லது தனி ஈழத்துக்கு ஆதரவாக இந்திய அரசு தனி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், அல்லது தனி ஈழம் அமைவதற்கு இந்திய அரசு தலையிட வேண்டும், இல்லையேல் எங்கள் போராட்டம் தீவிரமாகும்’ என்ற கோணத்தில் போராடிய மாணவர்களின் போராட்டத்தை, ஈழ மக்களின் இன அழிப்புப்போரை முன்னின்று நடத்திய பாசிஸ்ட் இந்திய அரசை கண்டிக்கின்றோம்! இந்திய ஆளும் வர்க்க நலனுக்காக ஒரு இனத்தையே அழித்த இந்திய அரசின் உதவியோடு அதே இனத்துக்கு விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் அல்லது கோரிக்கை வைப்பதும், மனித குலத்துக்கே ஆபத்தான அமெரிக்க அரசின் தீர்மானம் ஈழ மக்களின் துயரத்தை துடைத்துவிடும் என்று நம்புவதும் முட்டாள்தனமானதும் ஈழ விடுதலைக்கு துரோகமிழைப்பதுமே ஆகும். எனவே இந்திய பிராந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடிக்காமல் மீண்டும் இவர்களை நம்பியே ஈழ விடுதலையை சாதித்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்போமானால் இன அழிப்பு குற்றவாளி ராஜபக்சே, மன்மோகன்சிங், சோனியா மட்டும்மல்ல ஈழ மக்களுக்காக போராடுகிற நாமும்தான் என்கிற அனுபவத்தை 30 ஆண்டுகால ஈழ விடுதலைப்போராட்டம் படிப்பினையை கற்றுத் தந்துள்ளது.
இதன் அடிப்படையில் பு.ஜ.தொ.மு மற்றும் இணைப்பு சங்கங்களின் மூலம் போராட்டம் தொடர்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
தேதி | நேரம் | இடம், வடிவம் | சங்கம் | தலைமை |
---|---|---|---|---|
20.03.2013 | 8am to 6pm | சுதேசிமில் எதிரில், தர்ணா | பு.ஜ.தொ.மு. | தோழர் பழனிச்சாமி, தலைவர். |
21.03.2013 | 8am to 6pm | வடமங்கலம்- தர்ணா | ஹிந்துஸ்தான் யூனி லீவர் | தோழர். எழில், செயலாளர் |
21.03.2013 | 8am to 6pm | திருபுவனை- தர்ணா | மதர் பிலாஸ்டிக் மற்றும் ரானே ப்ரேக்ஸ் | தோழர். வினாயக முருகன், செயலாளர். |
21.03.2013 | 8am to 6pm | கிராமப் புறங்களில் – இரு சக்கர வாகன ஊர்வலம் | பு.ஜ.தொ.மு | தோழர். லோகனாதன், அலுவலக செயலாளர். |
22.03.2013 | 8am to 6pm | கன்னிக்கோயில் தர்ணா | கோத்ரேஜ் சாராலீ | தோழர். கல்யாணகுமார், தலைவர் |
இவண்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- புதுச்சேரி.
தொடர்புக்கு:
தோழர். கலை, பொதுச்செயலாளர், 9488778940