திருமங்கலத்தில் பொதுக்கூட்டம்
மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கை-2012 நமது நாட்டை மறுகாலனியாக்கும் அடையாளமே!
என்ற தலைப்பின் கீழ் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 12.09.2013 மாலை 6.30 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் நடத்தப்பட்டது.
இப்பொதுக்கூட்டதிற்கு திருமங்கலம் விவிமு அமைப்பாளர் தோழர் வீரணன் தலைமை தாங்கினார். உசிலை வட்டச்செயலாளர் தோழர் குருசாமி மற்றும் வழக்குரைஞர் திரு.நடராசன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சிற்றுரையும், தோழர் லயனல் அந்தோனிராஜ் மதுரை மாவட்ட செயலாளர் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அவர்கள் சிறப்புரையும் ஆற்றினார்கள். இறுதியாக புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தின் தலைமை உரையாக தோழர் வீரணன் பேசுகையில் இன்றைய ஓட்டுக்கட்சிகள் சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ உட்பட அனைத்தும் பிழைப்புவாதக் கட்சிகளாக சீரழிந்துள்ளதை அம்பலப்படுத்திப் பேசினார்.
தோழர்.குருசாமி தனது உரையில் தேசிய நீர்க்கொள்கை-2012 என்பது நமது நாட்டின் நீர்வளத்தை முற்றிலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் செயல் என்றும் இன்று ஏற்கனவே விவசாயம் அழிந்து வரும் சூழலில் இனி இலவச மின்சாரத்தையும் நிறுத்தி முற்றிலும் விவசாயத்தை அழித்து உணவுக்கு அன்னிய நாட்டை கையேந்த வைத்து நமது நாட்டை மீண்டும் மறுகாலனியாக்கும் சதியின் வெளிப்பாடுதான் இந்த தேசிய நீர்க்கொள்கை என்று விளக்கினார்.
மேலும் இன்றைய தேவை மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை கட்டியமைக்கும் ஆற்றல் உள்ள அரசியல் கட்சி வேண்டும் எனவும் இப்பொழுது இருக்கின்ற ஓட்டுக்கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதிய தலைவர்களாகவும் தெய்வ வழிபாடு நடத்தும் பக்தர்கள் போலவும் நடத்துகிறார்களே ஒழிய சுதந்திரத்திற்கான உணர்வை வளர்ப்பதாக கட்சிகள் இல்லை என்றும் மக்களை திரட்டி மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்தும் ஆற்றலுடன் இருப்பது புரட்சிகர அமைப்புகளான வி.வி.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகள்தான் எனவும் இந்த அமைப்புகளின் தலைமையில் அணி திரண்டு போராட வாருங்கள் என்று கூறி தனது உரையை முடித்தார்.
கீழ உரப்பனூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தாலுகா அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அநீதியை தட்டிக்கேட்க இவ்வமைப்பினர்களே சரியானவர்கள் என்பதை அறிந்துகொண்டு பொதுக்கூட்டம் நடப்பதைக் கேள்விப்பட்டு இப்பொதுக்கூட்டத்திற்கு வந்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்குரைஞர் திரு.நடராசன் அவர்களிடம், தான் வைத்திருந்த சரியான ஆதாரங்களைக் காட்டி தனக்கு கிடைக்க வேண்டிய பட்டாவை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடுபட்ட தாசில்தாரை அம்பலப்படுத்துமாறு வேண்டுகோள் வைத்தார்.
வழக்கறிஞர் திரு நடராசன் அவர்களும் ஊழலில் ஈடுபட்ட அந்த தாசில்தாரை இப்பொதுக்கூட்டத்திலேயே அம்பலப்படுத்தி தனது கருத்தை பதிவு செய்தார். இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் தவறை தயங்காமல் தட்டிக் கேட்கும் போர்க்குணத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்து பெரும் வரவேற்பை பெற்றது.
தோழர் லயனல் அந்தோனிராஜ் அவர்கள் தனது சிறப்புரையில் தேசிய நீர்க்கொள்கை உருவான வரலாற்றை விளக்கினார். மனித உடலில் 80 சதவீதம் தண்ணீரின் தேவை உள்ளது என்று கூறி தண்ணீரின் அவசியத்தை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கியும் மனித உயிரின் ஆதாரமாக விளங்கும் நீர் தனியாரிடம் சென்று தண்ணீருக்கு விலை வைத்தால் தண்ணீர் இன்றி மனித இனம் அழியும் என்பதை எளிமையாக விளக்கி இதன் ஆணிவேரான தனியார்மயத்தையும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிப் பேசினார்.
இறுதியாக ம.க.இ.க வின் புரட்சிகரக் கலைக்குழு நிகழ்த்திய புதிய பாடல்கள் குறிப்பாக கலாமு கலாமு என்ற பாடல், மக்களிடத்தில் கைதட்டல் மூலம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
பு.ஜ.செய்தியாளர்கள்
உசிலம்பட்டி.
மனித உயிரின் ஆதாரமாக விளங்கும் நீர் தனியாரிடம் சென்று தண்ணீருக்கு விலை வைத்தால் தண்ணீர் இன்றி மனித இனம் அழியும் என்பதை எளிமையாக விளக்கி இதன் ஆணிவேரான தனியார்மயத்தையும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிப் பேசினார்.