புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் 04.10.2013 வெள்ளிக் கிழமை மதியம் 1.00 மணி அளவில் நன்னிலம் பேருந்து நிலையத்தில் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக் கழக அரசு உறுப்புக் கல்லூரி கட்டுமானப் பணியை உடனே துவங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் சிறீதர் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத், திருச்சி மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சாருவாகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றிய போது…
“நமது நன்னிலம் பாரதிதாசன் அரசு உறுப்புக் கல்லூரியானது சுமார் 1,500 மாணவர்களைக் கொண்டு, கடந்த மூன்றாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் பிள்ளைகளைப் பெருமளவு சார்ந்து இயங்கும் கல்லூரியானது சொந்தமாக நிலம் வாங்கிப் பல மாதங்கள் ஆகியும், இன்றும் பள்ளிக் கட்டிடத்திலேயே இயங்கிக் கொண்டு இருப்பது மாணவர்களின் கல்விச் சூழலை பாதிப்பதாகவே உள்ளது. வகுப்பறைகள் போதாமல் சில நேரங்களில் மாணவர்கள் அல்லாட வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
மேலும், இப்போது இயங்கி வரும் கட்டிடத்தில் மாணவர்களுக்குப் போதுமான கழிப்பிட வசதி கூட இல்லை. அரசு, கல்வி நிறுவனங்களைப் பராமரிப்பதில் எப்படி இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அரசுக் கல்லூரிகளில் அரசு போதுமான நிதி ஒதுக்கிப் பராமரிக்கவில்லை என்றாலும் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றனர்.
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும். அப்படிப் போராடும் போதுதான் நமக்கான இலவச கல்வி உரிமையைப் பெற முடியும். அப்படிப்பட்ட கல்வி உரிமையினை மட்டுமின்றி நம்முடைய அடிப்படை உரிமைகளையும் பெற அமைப்பாக அணி திரள்வோம்” என்று உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
தோழர் ஆசாத்,
மாவட்ட அமைப்பாளர்
தொலைபேசி 99434 94590
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர் மாவட்டம்