privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பொறுக்கியின் நித்ய தர்மத்திற்கு பரிவட்டம் போடும் தந்தி டிவி

பொறுக்கியின் நித்ய தர்மத்திற்கு பரிவட்டம் போடும் தந்தி டிவி

-

ந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே சங்கொலி ஒலிக்கிறது. டமருகத்தின் சப்தமும் தம்புராவின் மீட்டலும் கேட்கிறது. தொலைக்காட்சித் திரையில் இதழ் விரிக்கும் தாமரை ஒன்றின் மத்தியில் நிகழ்ச்சியின் பெயர் மலர்கிறது. தொடர்ந்து துவக்கக் காட்சி. கோயில் பிராகரம் போன்ற அரங்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெர்மாகூலில் தங்க நிற காகிதங்களை ஒட்டி கோயிலின் தூண்கள் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மையமாக கருவறை போன்ற ஒரு ஏற்பாடும், அதன் இரு புறத்திலும் யாழியைத் தாங்கி நிற்கும் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நித்தியதர்மம்கருவறை போன்ற அமைப்பினுள் இருந்து கடவுளைப் போல் அவர் வெளிப்பட்டு வருகிறார். தர்பார் மண்டபங்களில் இருக்கும் சிம்மாசனம் போல் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்கிறார். மந்தகாசமான புன்னகையொன்றை வீசி ஆசி வழங்குகிறார். அந்த மண்டப அமைப்பின் வலது பக்கவாட்டுப் பகுதியிலிருந்து அழுது வீங்கிய கண்களோடும் சோகம் அப்பிய முகத்தோடும் அந்தப் பெண்மணி பிரவேசிக்கிறார்,

“எம் புருசன் வீட்டைக் கவனிக்கறதில்லீங்கைய்யா. அந்தப் பொம்பளையே கதின்னு கெடக்கறாருங்க. மூணு பொம்பளைப் புள்ளைங்கள வச்சிகிட்டு நான் அல்லாடறனுங்க. நீங்க தானுங்க எம் புருசனை மீட்டுத் தரோனும்”

அந்தப் பெண்ணின் புலம்பலைத் தொடர்ந்து சமூகம், குடும்பம், பாசம், நட்பு, உறவு, நம்பிக்கை, காதல், பரிவு போன்ற விசயங்களை உள்ளடக்கி ஒரு சிறிய பிரசங்கத்தை ‘அவர்’ நிகழ்த்துகிறார். அது முடிவுற்றதும், அப்பெண்ணின் கனவர் அழைக்கப்படுகிறார்.

“ஐயா, எம் மேல தப்பே இல்லீங்க. எம் பொண்டாட்டி வேணுமின்னே சந்தேகப் படறாளுங்க. எனக்கும் அவிங்களுக்கும் வெறும் நட்பு தானுங்கைய்யா இருக்கு. வேற தப்பு தண்டா எதுக்கும் நாங்க போகலீங்கைய்யா”

அந்த இளைஞரின் இறைஞ்சலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சிறிய பிரசங்கம். தொடர்ந்து மூன்றாவதாக இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்மணி அழைக்கப்படுகிறார்.

”ஐயா, நான் ஒரு தப்பு தண்டாவும் செய்யலீங்கைய்யா. எங்க அப்பாரு நெலத்த வித்த காசுல இருந்து ஒன்ற லச்ச ரூவா கடங் குடுத்து இருக்கனுங்க. அத திருப்பிக் கேட்டதுக்குத் தான் அவ இந்த டிராமா செய்யறாளுங்க”

அந்தப் பெண்மணியின் பதில் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மீண்டும் பிரசங்கம். தொடர்ந்து இந்த சிக்கலுக்கு தீர்வு ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் ‘அவர்’. தீர்வுக்கான தேடலின் இடையிடையே குடும்ப உறவுகள் பற்றியும், நட்பு, சமூகம் பற்றியும் பல அறிய தத்துவங்களை உதிர்த்துக் கொண்டே இருக்கிறார். ஒழுக்கமாக வாழ்வது எப்படியென்று நிறைய சொல்கிறார். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்த கோட்பாடுகளை முன்வைக்கிறார்.

“இரண்டு தனி நபர்களுக்கிடையே இருக்கும் பிரச்சினையை அவர்களுக்கு பேசி தீர்க்க வேண்டும். அவர்கள் தீர்க்க வில்லையென்றால், அந்தக் குடும்பங்கள் அதைக் கையிலெடுக்கும். அவர்கள் தீர்க்கவில்லையென்றால், அவர்களின் நட்பு வட்டம் கையிலெடுக்கும். அவர்கள் தீர்க்கவில்லையென்றால், அந்த ஊர் அதைக் கையிலெடுக்கும். அவர்கள் தீர்க்கவில்லையென்றால், அந்த நாடு அதைக் கையிலெடுக்கும். அந்த நாடும் அதைத் தீர்க்கவில்லையென்றால், உலகமே அதைக் கையிலெடுக்கும்” – (உலகம் தீர்க்கவில்லையென்றால் யார் கையிலெடுப்பது என்று ‘அவர்’ சொல்லவில்லை. உலகமே கைவிட்டதை இவர் தீர்த்து முடிப்பார் என்று நேயர்களே முன்வந்து புரிந்து கொள்ளுமாறு பெருந்தன்மையாக விட்டுள்ளார்)

நித்தியானந்தாஅந்த ’அவர்’, ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா. அந்த நிகழ்ச்சி, தந்தி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் ’நித்திய தர்மம்’. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அறியாத தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லை. குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் மற்றும் உறவுச் சிக்கல்கள் கள்ளக்காதல்கள் போன்றவற்றை மலிவான ரசனையாக விரிவாக விவரித்து ‘தீர்வு’ காண்பது எனும் போர்வையில் நடந்து வரும் மோசடி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியின் மலிவான வடிவம் தான் நித்தியானந்தாவின் ‘நித்ய தர்மம்’.

நித்தியானந்தாவுக்குத் தனியே அறிமுகம் தேவையில்லை. ஒரே சிடியின் மூலம் ஒரே இரவில் அகில உலகப் புகழ் பெற்றவர். சுடுகாட்டு ஆண்டியும் மண்டையோடுகளை அணிந்தவனுமான அந்த சிவனே மதுரை ஆதீனத்தின் கனவில் வந்து நித்தியானந்தாவுக்கு ரெக்கமண்டேசன் கடிதம் கொடுத்திருக்கிறார் என்றால் நிறைய பேரை சுடுகாட்டுக்கு அனுப்பி வைத்து மண்டையோடுகளோடு அரசியல் நடத்தும் மோடியெல்லாம் எம்மாத்திரம். ஆம், பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மண்டியிட்டு வணங்க வைத்த மோடியே தலை தாழ்த்தி வணங்கிய சிறப்பு பெற்றவர் தான் நித்தியானந்தா.

நித்யானந்தாவின் சிறப்பை உலகறியச் செய்த பெருமை தமிழ் ஊடகங்களையே சாரும் – நேர்மறையிலும் எதிர்மறையிலும். அந்த வகையில் தமிழர்களுக்கு நித்தியானந்தாவின் முதல் அறிமுகம் கிடைத்தது குமுதத்தின் வாயிலாகத் தான். குமுதம் பத்திரிகையில் நித்தியானந்தா எழுதிய ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்கிற தொடரைத் தொடர்ந்து அவரது திறந்து கிடந்த கதவின் வழியாக சாரு நிவேதிதா போன்ற இலக்கிய நித்தியானந்தாக்கள் ஆசிபெற்று சென்றது போல, அசிங்கங்களால் வெறுப்புற்ற சில கேமராக்கள் உள்ளே நுழைந்தன.

நித்தியானந்தாவின் திடீரென்று ‘தோன்றி மறையும்’ யோக வித்தையை சாரு நிவேதிதா சிலாகித்து எழுதிக் கொண்டிருந்த வேளையில் தான் அவரோடு திறந்த கதவுகளின் வழி உள்நுழைந்த கேமராக்கள் அவரது ‘மறைந்து தோன்றும்’ வித்தையை சன் டீ.வி வழியே தமிழர்களிடம் கொண்டு சேர்த்தன. அதைத் தொடர்ந்து நக்கீரன் பத்திரிகை எதிர்மறை அறிமுகத்தைப் பார்த்துக் கொண்டதும் இணையத்தில் ‘சாமி வீடியோக்களை’ காண கட்டணம் வசூலித்ததெல்லாம் சமகாலச் சரித்திரங்கள்!

நித்தியதர்மம்கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சிக்கு அடுத்த இடத்தில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்தது தினத்தந்தி. யார் ’உல்லாசமாக’ இருந்ததன் விளைவாக எவர் ‘சதக் சதக்’ ஆனார்கள் என்கிற உலகப் பொது அறிவைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியே தீர்வது என்கிற லட்சிய தாகத்தில் அரை நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுவருகிறது. தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த செய்தித் தொலைக்காட்சி சேனல் தான் தந்தி தொலைக்காட்சி.

தந்தி தொலைக்காட்சியில் பல்வேறு ஆங்கில, தமிழ் செய்திச் சேனல்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், டி.ஆர்.பி ரேட்டிங்கை குறி வைத்து பல விவாத நிகழ்வுகளும் நடத்தி வருகின்றனர். இதில் சீமானின் உடல் முறுக்கல்கள் மற்றும் உடற்பயிற்சி அசைவுகள் போன்ற ஆக்சன் காட்சிகள் கொண்ட ’மக்கள் முன்னால்’ நிகழ்ச்சியும் ஒன்று. டி.ஆர்.பி ரேட்டிங்கை அள்ள வேண்டுமானால் இது போன்ற சவ சவ நிகழ்ச்சிகள் மற்றும் போதாதே, எனவே தான் தமது செய்தித்தாளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட வியாபார வெற்றி பார்முலாவான கள்ளக்காதல் கதைகளை தொலைக்காட்சியிலும் கடைவிரித்து விற்க முடிவு செய்து, அதற்குப் பொருத்தமான ஆளைத் தேடி நித்தியிடம் முக்தியடைந்துள்ளனர்.

ஏற்கனவே சன் தொலைக்காட்சி மற்றும் நக்கீரனின் புண்ணியத்தால் ரஞ்சிதாவின் வழியே ’சிறப்பான’ அறிமுகத்தைப் பெற்றிருந்த நித்தியானந்தாவுக்கு சமீப காலமாக யோக வகுப்புகளுக்கு ஆட்கள் வருவதில்லை. வரும் சொற்ப ஆட்களும் அவரது ஆன்மீக ஆராய்ச்சிகளுக்கு தங்களை சந்தேகத்துக்கிடமின்றி உட்படுத்திக் கொள்ள ஒரு முறைக்குப் பல முறைகள் யோசித்திருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அவரது கடையில் யாவாரம் சுத்தமாக படுத்து விட்டது. எனவே, தனது ’திறமையை’ நிரூபித்துக் காட்ட பொருத்தமான ஊடகத்தை அவரும் தேடி வந்திருக்கிறார். தந்தி தொலைக்காட்சியின் பொருளாதாயத் தேடலும் நித்தியின் அருளாதாயத் தேடலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்து கொண்டது.

நித்தியதர்மம்இந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை மற்றும் அந்தக்கால நடிகை லட்சுமியின் நிஜம் போன்றவைகளின் பிரதி என்றாலும் நித்தியானந்தாவுக்கென்றே சில சிறப்பியல்புகள் இருக்கின்றன. தன்னிடம் வரும் வழக்குகளை அத்தனை துல்லியமாக விசாரிக்கிறார். சரியான இடங்களில் தலையிட்டு கிடுக்கிப் பிடி கேள்விகளால் துளைக்கிறார்

“அது எப்படிம்மா உங்களுக்கு அந்த இடத்துல இந்த சந்தேகம் வந்தது?”

“அய்யா, நீங்க ஏன் இதைப் பற்றி இதற்கு முன்னால் சொல்லவே இல்லை?”

“அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் அடைந்த உணர்வு என்ன?”

“எந்த சந்தர்ப்பத்தில் இருந்து தவறு செய்யத் துவங்கியதை உணர்ந்தீர்கள்”

ஒரு கிரிமினலால் தானே இன்னொரு கிரிமினலின் மனதைப் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நித்தியானந்தாவின் நிகழ்ச்சியான ’நித்திய தர்மம்’ அதன் முன்னோடி நிகழ்ச்சிகளையெல்லாம் விஞ்சி நிற்கிறது. இதில் பல சிறப்புகள் இருக்கின்றன. ஒரு கிரிமினலே குற்றங்களை விசாரித்து நீதிபதி ஸ்தானத்திலிருந்து தீர்ப்பளிக்கிறான் என்பது முதன்மைச் சிறப்பு. அயோக்கியத்தனத்தில் கரைகண்டவன் என்பதால் நேயர்களை நடந்த சம்பவத்தின் இண்டு இடுக்குகள் வரை தவறவிடாமல் அழைத்துச் சென்று காட்டும் வல்லமை நித்திக்கு உண்டு என்பது அடுத்த சிறப்பு.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ’ஆன்மீக ஆராய்ச்சி’ போன்ற தகிடுதத்தங்களின் பின்னே மறைந்து தப்பித்து ஓடுபவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது நித்தியைத் தவிர வேறு யாருக்கு நன்றாகத் தெரிந்திருக்க முடியும். இதோ, தன் மேல் சாட்டப்பட்ட குற்றத்தை மறைக்க முயற்சிக்கும் நபரை நித்தி கிடுக்கிப் பிடி போடும் அழகைப் பாருங்கள்,

நித்தியதர்மம்”உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையே புரிஞ்சுக்காம, சுத்திச் சுத்தி வேற எதையோ பேசறீங்க. உங்க மேல சாட்டப்பட்ட குற்றச்சாட்டை முதல்ல புரிஞ்சுக்கோங்க. வேற எதை எதையோ பேசறதன் மூலமா குற்றச்சாட்டை மறக்கவோ மறைக்கவோ முயற்சிக்காதீர்கள். நேரடியாக குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்”

பாவம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர். கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்ட பின் நடந்தது ஆன்மீக ஆராய்ச்சி தான் என்று சொல்லும் திறமை அவரிடம் இல்லையென்பதால் நிகழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

அடுத்தவர் வீட்டில் நடக்கும் அசிங்கங்களை கண்டு ரசிக்கும் மனோபாவத்தை தினத்தந்தியின் மூலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்களிடம் விதைத்து வந்த பெருந்தமிழர் ஆதித்தனாரின் வாரிசுகள் இப்போது தாங்கள் விதைத்ததை ஜீ தமிழும் வேறு சேனல்களும் அறுவடை செய்து போவதைப் பார்த்துக் கொண்டு எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? அது தான் நித்தியானந்தாவைக் களமிறக்கியுள்ளனர்.

இதில் நித்தியானந்தாவைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. பாம்பு என்றால் விஷம்  – சாமியார் என்றாலே பொறுக்கி என்பதை நித்தியானந்தா மட்டுமின்றி அகில இந்திய அளவில் பலரும் தற்போது நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால், தங்களது லாப வேட்டைக்காக ஊரறிந்த அயோக்கியனுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவும் தயங்காத தந்தி தொலைக்காட்சியின் ஊடக தர்மம் தான் நமது கவனத்துக்குரியது.

ஜோசிய, ஜாதக, ராசிக்கல், மாந்ரீக சமாச்சாரங்களை கடைபரப்பும் அதே ஊடகங்கள் தான் இதன் விளைவாக எங்காவது நரபலி நடந்தால் அதையும் கடைவிரித்துக் கல்லாக்கட்டுகின்றன. சில்லறை லாபத்துக்காகவும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும் தந்தி தொலைக்காட்சி சாக்கடையை தாம்பாளத்தில் பரிமாறத் துணிந்துள்ளதை அதன் பிற விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பூமிப் பரப்பின் மேலும் வான மண்டலத்தின் கீழும் உள்ள சகல விசயங்கள் குறித்தும் தயங்காமல் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் கம்பெனிக் கருத்தாளர் குழாமிலிருந்து எவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

அவர்கள் கண்டுகொள்ளவும் போவதில்லை. இது பிழைப்புவாதியும் கொள்ளைக்காரனும் சந்தித்துக் கொள்வதைப் போன்ற தருணம். தந்தியின் அயோக்கியத்தனத்தை விமர்சிக்காமல் கள்ள மௌனம் காக்கும் வரை ஊருக்கு உபதேசம் செய்வதற்கான வாய்ப்பை தந்தி கருத்து கந்தசாமிகளுக்கு தாராளமாக வழங்கும். நித்தியானந்தாவின் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டே கூட ஊருக்கு உபதேசம் வழங்கலாம்.

நித்தியானந்தாவின் நிகழ்ச்சி தந்தி தொலைக்காட்சியின் லாபவெறியை அம்பலப்படுத்தவில்லை; அதன் மேல் விமர்சனமற்ற “கருத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களையே” அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள் விமர்சிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மலிவான ரசனையிலிருந்து தங்களைக் கத்தரித்துக் கொண்டு பெருவாரியான மக்கள் எதிர்க்கத் துவங்கும் போது தான் ஊடக வியாபாரிகள் வழிக்கு வருவார்கள்.

ஊரறிந்த பொறுக்கி என்பதை நிரூபித்து விட்ட நித்தியானந்தாவிற்கு நீதிபதி இடம் அளித்து அழகையும், செல்வத்தையும் பார்க்கும் தந்தி டிவியின் அயோக்கியத்தனம்தான் இங்கு காறித் துப்பப்பட வேண்டியது.

–    தமிழரசன்