Sunday, January 19, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் !

பா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் !

-

தேர்தல் நெருங்க, நெருங்க காங்கிரசுக்கு எதிரான எதிர்குரல்களும், போராட்டங்களும் அதிகரிக்கின்றன. நேற்று (26.02.2014) கூட சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடியிருக்கிறது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் எனும் இயக்கம். அவர்கள்  மட்டுமில்லை… ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பலரும் காங்கிரஸை அம்பலப்படுத்தி வருகின்றனர். இவை அரசியல் ரீதியாக இல்லை என்றாலும் அப்பாவிகள் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கயவாளிகள் மீதான வெறுப்பில் நடைபெறுகின்றனது.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர் கட்சி கமலாலயத்திற்கு செல்லாத காரணம் என்ன?

இந்த எதிர்ப்பு சரி என்றாலும் இது காங்கிரசு மட்டுமே தொடர்பான ஒன்றல்ல. ஒட்டு மொத்தமாக இந்திய ஆளும் வர்க்கம், அதற்கு உட்பட்ட ஊடகங்கள், ஆம் ஆத்மி வரை ராஜீவ் கொலை வழக்கில் அநீதியாக தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரசுக்கு நிகராக ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எல்லா எதிர்ப்பு வேலைகள் செய்திருந்தாலும் ஜெயலலிதாவை தமிழ் அமைப்புகள் எதிர்ப்பதில்லை. பண்ருட்டி வேல்முருகன் நடத்திய சேலம் மாநாட்டில் பிரபாகரன் படம் வைத்து பின்னர் போலீசு மிரட்டியதும் எடுத்து விட்டார்கள். அதிமுக கூட்டணிதானே அம்மா கண்டு கொள்ளமாட்டார் என்று நினைத்து பின்னர் கண்டு கொண்டாலும் அதை கண்டிக்காமல் மேடையில் புரட்சித் தலைவி என்று புகழ்பாடினார் வேல் முருகன். இது சீமான், நெடுமாறன், வைகோ முதலான தமிழினவாதிகளுக்கும் பொருந்தும்.

ஜெயலலிதாவின் விடுதலை நாடகத்தின் கடிவாளம் மத்தியில் காங்கிரசு வசம் இருப்பது தெரிந்தும் அவர் நடத்திய நாடகத்திற்கு கைதட்டாதார் யாருமில்லை. இப்போது காங்கிரசு அரசு இதை கவுரவப் பிரச்சினையாக கருதிக் கொண்டு கொலை வெறியுடன் நீதிமன்றத்தில் பேசுகிறது. ஜெயாவின் தமிழ் உணர்வு உண்மையென்றால் இதையெல்லாம் எதிர்த்து பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டுமென்று எந்த தமிழின அமைப்புகளும் கோரவில்லை.

அப்சல் குருவை தூக்கில் போட துடித்த பாஜக இதில் ஏன் உடன் பேசவில்லை என்று கபில் சிபில் போட்டு வாங்க களத்தில் குதித்த பாஜக, தீவிரவாதி ஈவிகேஸ் இளங்கோவனை விட கடுமையாக டெல்லி ஊடகங்களில் பேசுகிறது. ஏனெனில் நிரபராதியான அப்சல் குருவை தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்று பாஜக சாமியாடியதைத் தொடர்ந்து அதன் இந்துமதவெறி வாக்கு வங்கியை குறிவைத்து காங்கிரசு அரசு இதை சதித்தனமாகவும், அவசரமாகவும் நிறைவேற்றியது. பதிலுக்கு ராஜிவ் கொலை வழக்கில் தனது பிராயச்சித்தத்தை நிறைவேற்றி காங்கிரசின் இந்தி பேசும் தேசபக்தி வங்கியை பாஜக கவர நினைக்கிறது.

நிலைமை இப்படி இருக்க ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர தமிழினவாதிகள் மறந்தும் பா.ஜ.க.வை கண்டிப்பது இல்லை. அதுகுறித்துப் பேசுவது கூட இல்லை. ஆனால் மூன்று பேரை தூக்கிலிடுவதில் காங்கிரஸ் காட்டும் அதே அளவுக்கான முனைப்பை பாரதிய ஜனதாவும் காட்டி வருகிறது என்பதை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. அதனால் இரண்டு குற்றவாளிகளில் ஒன்றான காங்கிரசை மட்டும் கண்டித்து விட்டு பாரதிய ஜனதாவை தப்பிக்க விடுகின்றனர்.

“ஈழ இனப் படுகொலையில் நேரடியாக ஈடுபட்டது காங்கிரஸ் அரசு. ஆகவே காங்கிரஸ்தான் நமது முதன்மை இலக்கு. எதிர்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா அதைக் கண்டிக்கவில்லை என்றாலும், அந்தக் குற்றத்தில் பா.ஜ.க.வின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவு” என்று இதற்கு இழுத்துப் பிடித்துக் காரணம் சொல்கின்றனர். ‘2009 தேர்தலின் போதுதான் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்தது; அதனால் அப்போது அவ்வாறு பேசினார்கள்’ என்றில்லை. வாஜ்பாய் காலத்திலிருந்தே தமிழினவாதிகள் அந்தப் புள்ளியில் இருந்து இம்மியும் விலகவில்லை. காங்கிரஸ் பேரை சொன்ன உடனேயே ‘வைப்ரேட் மோடு’க்கு போகும் இவர்கள், அந்தக் குற்றத்தின் கூட்டுப் பங்காளியான பா.ஜ.க.வின் பேரைச் சொன்னால் ‘சைலண்ட் மோடு’க்கு மாறுவது ஏன்?

இந்தியாவின் மேலாதிக்க அரசியலிலேயே ஈழத்தின் வாழ்வு சிக்குண்டிருக்கிறது என்பதை இவர்கள் எந்தக் காலத்திலும் உணருவதில்லை. தங்களைப் புரிந்து கொண்ட அதிகாரிகள், கட்சி, அரசு இருந்தால் ஈழத்தை சாதித்து விடலாம் என்ற பிரமையிலேயே எப்போதும் இருக்கின்றனர். புலிகளும் அப்படித்தான் இருந்தனர் என்பது தமிழினவாதிகளின் புரிதலோடு தொடர்புடைய ஒன்று. இதுதான் இவர்கள் பாஜக-வை சந்தர்ப்பவாதமாக பார்ப்பதன் பின்னணி.

இத்தனைக்கும் காங்கிரஸ் இன்று தமிழகத்தில் செத்த பாம்பு. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க, ஓய்வு நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி கூட தயாரில்லை. இந்த நேரம் பார்த்து, எழுவர் விடுதலை விஷயம் தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளாக உள்ளதால், அதை வைத்து அயோக்கியத்தனமான முறையில், ராஜீவ் கொலையோடு இறந்தவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா என்று இழிவாக அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி தன்னை செய்தியில் அடிபடும்படி பார்த்துக் கொள்கிறது. மேலும் சோனியா, ராகுல் காந்தி முன்னே தமது அடிமைத்தனத்தை காட்டவேண்டும் என்றும் இந்த கதர் அடிமைகள் துடிக்கிறார்கள்.

சத்தியமூர்த்தி பவன் வாசலில் சவுண்ட் கொடுக்கும் சீமானுக்கு கமலாலயம் முகவரி தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருக்கும் வைகோவிற்கு அவர்கள் எழுவர் விடுதலையை வன்மம் கொண்டு எதிர்ப்பது தெரியவில்லை. பொன்.இராதா கிருஷ்ணனை அழைத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அழகு பார்த்த பழ.நெடுமாறனுக்கு பாஜகவின் இரட்டை வேடம் தெரியவில்லை.

ஆனால் இந்துத்துவக் கும்பல் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது. அவர்களின் டெல்லி தலைமை மூவர் தூக்கை ஆதரித்தும் ஏழு பேர் விடுதலையை எதிர்த்தும் தொலைக்காட்சிகளில் அர்னாப்பிற்கும், காங்கிரசுக்கும் போட்டியாக கருத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனோ, ‘மூன்று பேரைத் தூக்கிலிடக் கூடாது’ என்று அப்பட்டமான பொய்யை வெட்கமின்றி சொல்கிறார், நடிக்கிறார்.

யாராவது பாஜக குறித்து கேட்டால், ‘அதான் பொன்னார் சொல்லி விட்டாரே’ என்று சொல்லிவிடலாம் இல்லையா… இப்படிப் பா.ஜ.க.வினர் தமது பாசிசக் கருத்துக்களை தேவைக்கேற்ப மேடைக்கேற்ப உரக்கப் பேசியோ, அமைதி காத்தோ நடிக்கின்றனர். நெருக்கிப் பிடித்தால் மத்தியில் பேசப்படும் கருத்துதான் தங்களது கருத்து என்றும் அதை வெளிப்படுத்தும் விதம் வேறாக இருக்கலாம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இந்துமதவெறி போல தமிழின வெறுப்பை அப்பட்டமாக காட்ட முடியவில்லையே என்பது இந்த பார்ப்பன பாசிச கட்சியின் சிக்கல்.

மோடி
பாரதிய ஜனதா என்ற இந்துவெறிக் கட்சி இந்தியாவின் எந்த தேசிய இனங்களையும், மொழிகளையும் அங்கீகரிப்பது இல்லை.

பாரதிய ஜனதா என்ற இந்துவெறிக் கட்சி இந்தியாவின் எந்த தேசிய இனங்களையும், மொழிகளையும் அங்கீகரிப்பது இல்லை. அவர்கள் தெற்கே இலங்கையையும், வடக்கே ஆப்கானிஸ்தானையும் அகண்ட பாரதத்தின் வரைபடத்திற்குள் கொண்டு வருகிறார்கள். திருச்சி பொதுக்கூட்டத்தில் இதை வெளிப்படையாக சொன்ன மோடி மொழிவாரி மாநிலங்களையே அடியோடு எதிர்த்தார். மொழிப்போர் மரபு கொண்ட வைகோவுக்கு அது பரவாயில்லை போலும். தோற்றாலும் நாலைந்து தொகுதிகளில் நிற்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை விட மொழிப் போர் உரிமை ஒன்றும் அவருக்கு மதிப்பு வாய்ந்த ஒன்றல்ல.

ஆனாலும் மோடி மேலும் பல வாய்ப்புகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார். கோவாவுக்குப் போனால் கொங்கணியில் சில நிமிடங்கள் பேசுவது, ஆந்திராவில் தெலுங்கில், மேற்கு வங்கத்தில் பெங்காலியில் என்று எந்த ஊருக்குப் போகிறாரோ அந்த ஊரின் மொழியில் ஓரிரு நிமிடங்கள் பேசி கைத் தட்டல் வாங்குகிறார் மோடி. அது மட்டுமல்ல… அந்தந்த தேசிய இனங்களின் கலாச்சார உடையையும் அணிந்துகொண்டு போஸ் கொடுக்கிறார். தேசிய இனங்களின் இருப்பையே ஏற்றுக்கொள்ளாத இந்துதேசியத்தின் முகத்தை அப்படியே உயிருடன் வைத்துக்கொண்டே, தேசிய இனங்களின் அடையாளங்களை வைத்து ஆதாயம் தேடவும் பார்க்கிறார்.

அதாவது அடையாளம் என்ற முறையில் தேசிய இனங்களை ஆதரிப்பது, அரசியல் என்ற முறையில் தேசிய இனங்களை ஒடுக்குவது இதுதான் இந்துமதவெறி பாஜக மட்டுமல்ல, காங்கிரசின் தந்திரமும் கூட.

பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர். அம்மா மெஸ், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர் போன்றவைத் தமிழ்நாட்டில் பிக்&அப் ஆவதைப் பார்த்து ஆசைப்பட்டோ என்னவோ… நாடு முழுவதும் நமோ டீ கடை, நமோ மீன் கடை என்று கிளம்பிவிட்டனர். அசைவ உணவுகளின் வாசனையைக் கூட ஏற்றுக்கொள்ளாத இந்த பார்ப்பனக் கூட்டம் மீன் கடையில் நின்றபடி போஸ் கொடுக்கிறது. இல.கணேசன் என்ற தஞ்சாவூர் பார்ப்பான், கையில் மீன் பையை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கும் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தேன். நிச்சயம் கணேசனின் அன்றைய இரவுத் தூக்கம் மீன் கவுச்சியால் நிறைந்திருக்கும். ‘குஜராத் எங்கும் சைவம்தான்’ என்று அதை ஒரு பெருமை போல பீற்றிக்கொள்கிறார்கள். வாக்கு வேண்டும் என்றதும் நமோ மீன்கடை அமைக்கின்றனர்.

அதேபோல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரிய தருண் விஜய் சில மாதங்களுக்கு முன்பு திடீர் தமிழ்ப் பற்றாளராக மாறினார். ‘‘தமிழின் மேன்மைகளை இத்தனை ஆண்டுகளாக அறியாமல் இருந்து விட்டோமே என்று வெட்கப்படுகிறேன். தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். இதையும் சில அப்பாவி தமிழார்வலர்கள் விவரம் தெரியாமல் கொண்டாடினார்கள்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலின் தமிழ் வெறுப்பும், பகையும் மிகவும் வெளிப்படையானது. பெரியார் உருவாக்கிய அரசியல் மரபு அவர்களை எளிதில் ஊடுருவ விடாமல் தடுத்து நிற்பதால் உருவான வன்மம் அது. அதனால்தான் கோயிலில் தமிழில் பாடுவதை எதிர்க்கிறார்கள். அதனால்தான் சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதை எதிர்க்கின்றனர். அதனால்தான் பா.ஜ.க.வில் இருக்கும் சுப்பிரமணியன்சாமி, ‘தமிழ் பொறுக்கீஸ்’ என்று வார்த்தைக்கு வார்த்தை வன்மத்துடன் எழுதுகிறார். இப்படி முற்றுமுழுதாக அவர்கள் கரையின் அந்தப் பக்கம் இருந்தாலும் கூட இக்கரையின் மீது அக்கறை கொண்டோராக நடிக்கிறார்கள். தமிழின உணர்வின் வழியாக இந்துத்துவத்தை ஊடுருவ வைக்க முடியுமா என்றுப் பார்க்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
எழுவர் விடுதலையை ஆதரிக்கும் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தவறானது, நான் அதைப் பற்றி விசாரிக்கிறேன் – ராஜ்நாத்சிங்

இது இத்தோடு முடியவில்லை. கடந்த இரண்டு மூன்று நாட்களில் ராஜ்நாத் சிங்கின் இரண்டு பேட்டிகளை நீங்கள் படித்திருக்கக்கூடும். ஒன்று, ‘குஜராத் வன்முறையில் எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்’ என்று ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது வரை மோடியின் வாயில் இருந்து இப்படிப்பட்ட சொற்கள் வரவில்லை. அவர் முஸ்லிம் படுகொலைகளை எதிர்விளைவு என்றுதான் இப்போதும் சொல்கிறார். பெரும்பான்மை இந்து வாக்குகளை ஈர்ப்பதற்கு மோடியை ‘கடப்பாரை இந்து’வாக உலவவிடும் இவர்கள், ராஜ்நாத் சிங்கை மன்னிப்பு கோர வைத்து ‘பெருந்தன்மை இந்து’வாக சித்தரித்து சிறுபான்மை வாக்குகளை கவர முயற்சிக்கின்றனர். இது வாஜ்பாயி சாஃப்ட்டானவர், அத்வானி வயலன்டானவர் எனும் முகமூடி மோசடிக்கு நிகரானது. அடிப்படையில் இந்துமதவெறி ஒன்றுதான் எனும் போது தேவை கருதி அது தனது முகங்களை பல முகமூடிகளாக அலையவிட்டு திசை திருப்புகிறது.

ராஜ்நாத் சிங்கின் மற்றொரு பேட்டி தமிழ் இந்துவில் வெளியானது. “மூவர் தூக்குப் பிரச்னையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அவர்களை தூக்கில் போடக்கூடாது” என்று சொல்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘அவர் அப்படி சொல்லியது எங்களுக்குத் தெரியாது. ஒரு தேசியக் கட்சிக்கு மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு இருக்க முடியாது. நான் இதைப்பற்றி விசாரிக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ராஜ்நாத். அது மட்டுமல்ல… அந்தப் பேட்டியில் மேலும் பல அரியக் கருத்துக்களை உதிர்த்துள்ளார் ராஜ்நாத். கீழ்கண்ட மூன்று கேள்வி பதில்களை கவனியுங்கள்.

இறுதிப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலையைக் கண்டிக்காத நீங்கள், இப்போது காங்கிரஸ் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏன்?

2009-ல் பா.ஜ.க. என்ன செய்தது என்பதுபற்றி எனக்கு நினைவில்லை. ஆனால், மிகவும் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை, இலங்கை அரசு இன்னும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அங்கு நடந்த படுகொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பல குறைபாடான உத்திகள் கையாளப்பட்டுள்ளன. இருநாட்டுப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து அவசியம். ஆனால், ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு இதைச் செய்யவில்லை.

இதற்கும் முன்பாக இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என நினைவுக்கு வரவில்லை!

தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

நோ கமென்ட்ஸ்!

– மிகவும் பச்சையாக பசப்புகிறார் ராஜ்நாத். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் பாலம் நினைவிருக்கிறது, 2009 நினைவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்ற பொய்யை நினைவில் வைத்திருக்கும் இவர்கள், உண்மைகளை மட்டும் வசதியாக மறந்துவிடுவது எதனால்? சுஸ்மா சுவராஜிடம் கேட்டால் 2009-ல் என்ன நடந்தது என்பது பற்றி, ராஜபக்சேவிடம் பரிசாக வாங்கிய நெக்லஸை தடவியபடியே பதில் சொல்லக்கூடும்.

2009-ல் நடந்தது நினைவில்லை என்று ராஜ்நாத் சொல்வதன் உண்மையான பொருள், 2002-ல் நடந்ததை நினைவில் கொள்ளாதீர்கள் என்பதுதான். இலங்கை ராஜபக்சே பற்றிப் பேசினால், இந்திய ராஜபக்சேக் குறித்தும் பேச வேண்டியிருக்கும் என்பதால் அவர் கவனமாக ஞாபக மறதியை தேர்வு செய்கிறார். மேலும் காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவும்தான் ராஜபக்சேவின் நண்பர்கள் என்பதை மறுக்க முடியாது அல்லவா!

மீண்டும், மீண்டும் கேட்கப்படும்போது ‘எதுக்குப் பழசை எல்லாம் பேசிக்கிட்டு. இப்போ உள்ளதைப் பேசுங்க’ என்கிறார். வரலாற்றின் நெடியப் பக்கங்களில் குருதி தோய்ந்த காவி வரலாற்றில் அவர்களால் மறக்கப்படிக்கப்பட்ட மறைக்கப்பட்ட படுகொலைகள் எண்ணிலடங்கா. ராஜ்நாத் சிங் இப்படி ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பச்சையாக பொய் சொல்லி ஏமாற்றுவது கூட பிரச்சினை இல்லை. ஏனெனில் பாசிசமே இத்தகைய ஏமாற்று வேலைகளில்தான் பலம் பெறுகிறது. ஆனால் அதை பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுக் கூட்டணியில் இருக்கும் வைகோ போன்ற தமிழினவாதிகள் அங்கீகரிக்கின்றனர் என்பதுதான் நாம் கவனப்படுத்தி எதிர்க்க வேண்டிய துரோகம்.

போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று இந்த நிமிடம் வரை கேட்கிறார் வைகோ. ஆனால் ராஜ்நாத் ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறார். பழசை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்கிறார். இந்த எழவைதானே ராஜபக்சேவும் சொல்கிறார்? ராஜபக்சே சொன்னால் ரத்தம் கொதிக்கும்; ராஜ்நாத் சொன்னால் உள்ளம் இனிக்குமா? இத்தனை கீழ்த்தரமான அரசியலை ஏற்றுக்கொண்டு அதை கொள்கை போல பேசித் திரியும் வைகோ போன்ற ஐந்தாம் படை அரசியல்வாதிகளும், அவர்களுக்கு அரசியல் தரகனாக செயல்படும் தமிழருவி மணியன்களும், அர்ஜன் சம்பத், பொன்னாரை தோளில் சுமக்கும் பழ.நெடுமாறனும் தான் தமிழினத்தின் உண்மையான பிரதிநிதிகள் என்றால் நமக்கு கோபம் வரவேண்டாமா?

இவர்கள் தமிழர் நலன், ஈழத் தமிழர் நலன் என்ற கள்ளப்பெயர்களைச் சூடிக்கொண்டு இந்துவெறியர்களுக்கு பல்லக்குத் தூக்குகின்றனர். சோ ராமசாமியும், இந்து ராமும், சுப்ரமணியன் சாமியும், குருமூர்த்தியும், ராமகோபாலனும், இல.கணேசனும், அர்ஜுன் சம்பத்தும் இதைத்தான் செய்கிறார்கள். அவர்களை தமிழின பகைவர்கள் என்று வரையறுக்கிறோம். என்றால் வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களை தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்!

–    வழுதி

  1. எங்கிருந்து தைரியம் வரும்….காங்கிரசை அடித்தால் எவனும் திருப்பி அடிக்க மாட்டான்….காரணம் அடி வாங்கிய கோஷ்டி யார் என்று பார்பதற்குள் பழைய சம்பவம் ஆகிவிடும்….இல்லை என்றால் இருக்கவே இருக்காரு கருணாநிதி….கரித்து கொட்ட கருணா ஈழ துரோகி..புகழ் பாட ஜெயா ஈழ தாய்…இதை தவிர இந்த தமிழர் கட்சி,one man army வைகோ கட்சி.,வேல்முருகன் படை…யாருமே இல்லதா கடையில் டீ ஆத்தும் தமிழருவி….நெடுமாறன்…இவர்கள் தான் உண்மையான தமிழ் ஈழ விரோதிகள்.
    அருண் ஜெட்லி தமிழக தீர்மானத்திற்கு எதிராய் சொன்ன கருத்தை தந்தி,பழைய தலைமுறை..சத்தியமற்ற டிவி…வசதியாக மறைத்து விட்டன..!
    எங்களுக்கு ஈழம் வேண்டாம்…அமைதியான தமிழகம் போதும்.

  2. ராஜீவ் கொலையோடு இறந்தவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா என்று இழிவாக அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி”””””” — காங்கிரஸ் கட்சி இப்படி கேட்பதில் என்ன தவறு??? மொத்தம் 19 பேர் ராஜீவோடு இறந்தனர்,இதில் யாரும் பெரும் வசதி படைத்தவர்கள் கிடையாது.. 4 பேர் தூக்கு தண்டனையை குறைக்க குரைக்கும் தமிழ் உணர்வாளர்கள், கொலை நடந்த முதல் 10 வருடம் வைக்கோ முதல் சீமான் வரை எங்கே போயிருந்தார்கள். கட்சியை உடைத்து ம.தி.மு.கவை ஆரம்பித்த வைகோ… ஏன் அப்பொழுதே அழுது புலம்பவில்லை??? பட வாய்ப்பு கேட்டு பிச்சை எடுத்துகொண்டிருந்த சீமான், ஏன் போராடவில்லை?? ஒரு ஈழத்து விதவை பெண்ணைத்தான் நான் திருமணம் செய்வேன் ஏன்று முழங்கிய சீமான், கோடிகளில் புரளும் அரசியல்வாதி வீட்டில் பெண்ணெடுத்தது எப்படி….. சோனியா காந்தி இடத்தில் இவர்கள் எல்லாம் கூவும் “மறத் தமிழச்சி” யார் இருந்தாலும் இலங்கையில் இது தான் நடந்திருக்கும்… வினவும், மற்ற தமிழ் போராளிகளும் உண்மையில் சொரனை உள்ளவர்களாக இருந்தால்… டூரிஸ்ட் விசாவில் இலங்கை சென்று அங்கே போராடி வேண்டும்… சும்மா பிணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது…..

    • இந்தியன்…நீ எங்கே இருந்தாலும் பதில் சொல்லவேண்டியது:

      19.பேர் ராஜிவோடு இறந்தனர்….
      1,50,000 கொல்லப்பட்ட தமிழர்களுக்கு எதிராக,துப்பாக்கி,தோட்டா,பீரங்கி
      கொடுத்த காங்கிரசு கயவர்களை எத்தனை முறை தூக்கில் போடலாம்?

    • //பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தார் என்ற பூஞ்சையான குற்றச்சாட்டுடன் ஒருவரை நளினி, முருகன், சாந்தன் போன்ற ஒரிஜினல் குற்றவாளிகளுடன் கோர்த்துவிட்டதில் இருக்கிறது கிரிமினல் சாணக்கியத்தனம். ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் அந்த அப்பாவியின் பின்னால் ஒளிந்துகொண்டு எளிதாக வெளியே வந்துவிட ஒரு வழி அன்றே ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையை நியாயப்படுத்துபவர்கள் அதை வெளிப்படையாகச் செய்வது சிரமம் என்பதால் அவர்களுக்கு ஒரு துருப்புச் சீட்டு பேரறிவாளர் உருவில் அழகாக உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.
      //

      http://www.tamilpaper.net/?p=8591

  3. தமிழ் மக்களே, ஈழ ஆதரவு என்று பேசிக்கொண்டே பா.ஜ.க வை ஆதரிக்கும் தமிழ்த் தேசியவாதிகளைக் கண்ட இடத்தில் உறைக்கிற மாதிரி கேளுங்கள்.முக்கியமாக வைகோவை.

  4. ஆயுதப் போராட்டம் விடுதலை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது… அவர்களால் கொல்லப்பட்ட சக ஈழத்தமிழ் போராளிகள் எவ்வளவோ பேர் ( ஊதாரணம் : பத்மனாபா ) — ஈழப் பிரச்சனையில் இந்தியா 80′ களில் தலையிட்டபோது… இது சிங்கள, தமிழ் மக்கள் சகோதர யுத்தம், இதில் இந்தியா தலையிட தேவையில்லை என்று கூறிய “மாவீரன்” பிரபாகரன் தான்.. கடைசி கட்ட போரில் இந்தியாவை சமாதனத்திற்கும், விடுதலை புலிகளை காப்பாற்றவும் அழைத்தார்… போர் ஆரம்பிக்கபட்டு,நடத்தப்பட்டது வி.புலிகளால், முடித்து வைக்க மற்ற 7 நாடுகளோடு இந்தியாவும் ஒத்துழைத்தது… ஒரு தீவீரவாத இயக்கத்திற்க்கு எந்த அராசாங்கமும் ஆதரவு அளிக்காது… ஒசாமாவின் அழிவும் பாகிஸ்தானில் இப்படித்தான் ஏற்பட்டது….. வரலாறு தெரியாமல் தற்க்குறித்தனமாக ஏதும் எழுதக்கூடாது.. ஜெய் இந்த்…

    • பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் தீவிரவாதிகள் அல்லர். அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள். எல்லா சுதந்திரப் போராட்டமும் இந்தியா போல அகிம்சைநெறியில்தான் அமைய வேண்டும் என்பதில்லை. இலஙையின் சூழலில் அவர்கள் ஆயுதம் தாங்கும் அவசியம் வந்தது என்பதை சரித்திரம் சொல்கிறது.

      அமைதியான தமிழ்நாட்டை வேண்டும் என்று ஈழத்தின் சுதந்திரத்தைநீங்கள் மறுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர்கள் சுதந்திர வேட்கை அவர்களுக்கு. உங்கள் அமைதி அவர்களால் கெட்டதை விடவும் அவர்கள் அமைதி இந்தியாவால் கெட்டது அதிகம்.

  5. வைகோ மானம் கேட்டவர் என்று மறுபடி மறுபடி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்…ஆர்.ஸ்.ஸ் அவரை தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ விட்டுவிட்டதோ என்ற சந்தேகமே வருகிற அளவு தான் அவர் பழைய கால நடவடிக்கைகளும் இருக்கின்றன தற்பொழுதைய நடவடிக்கைகளும் இருக்கின்றன…

    வைகோவிற்கு கொஞ்சம் சுய மரியாதை இருந்திருந்தால் இந்நேரம் இவ்வளவு மானம்கெட்டு பொய் இருந்திருக்க மாட்டார்…பெரியாரை ஏசுகிறார்கள் மௌனம் காக்கிறார், ராமர் பாலத்தை ஆதரிக்கிறார், மோடியை புகழ்ந்து நக்குகிறார்…இது எதுவோ பணத்திற்கோ பதவிக்கோ புகழுக்கோ இணைந்த கூட்டணியாக தெரியவில்லை…தமிழருவி மணியனின் கதையும் இதே தான்…இஸ்லாமியர்கள் இந்த மணியனை பணம் கொடுத்து சவூதி போன்ற நாடுகளில் இவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம்…இஸ்லாமியர்களுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்துமே, காந்திய சிந்தனை என்று சொல்லிக்கொண்டு காந்தியை கொன்றவர்களுடன் இணைந்து செல்கிறார்….இப்படி கொள்கையை விட்டுவிட்டு மானம் கெட்டு போய் பார்ப்பனர்களிடத்தில் விழுவதற்கு பதில் நல்ல கிணறு ஒன்றை தேடிப்பார்த்து அதில் போய் விழலாம்…

  6. ஒரு மாநிலத்திற்காக மீதமுள்ள மாநிலத்தில் செல்வாக்கை குறைத்துக்கொள்ள யார்தான் விரும்புவர்?

    ஆனால் ஒன்று இதில் காங்கிரஸ் கட்சியை விட மோடி கட்சியின் பங்களிப்பு மிகவும் குறைவுதான். இந்த விஷயத்திற்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவையில்லை. இந்த கட்டுரையின் மூலம் ஒன்று புலனாகிறது. பாஜக மேல் உள்ள பயத்தை இந்த கட்டுரையின் மூலம் கொஞ்சம் தீர்த்துக் கொள்ளவே உங்களுக்கு இந்த கட்டுரை என்பது தெரிகிறது.

  7. வைகோ உட்பட இந்த தமிழினவாதிகள் தங்கள் இருப்புக்கான குறந்தபட்ச அரசியலை பேசுவதற்கே வாய்ப்பில்லாத ஒரு நிலைமை அவர்களது வெளிப்படை மற்றும் மறைமுக பாஜக ஆதரவு அரசியல் தோற்றுவிக்கத் தான் போகிறது.

  8. தமிழின் பெரும்பான்மை ஊடங்கள் பார்க்காத, அல்லது பார்க்க நினைக்காத பார்வையில் ஒரு பதிவு ! ” எத்தை தின்றால் பித்து தெளியும் ” என்ற நினைப்பில், எண்ணை சட்டியிலிருந்து எரியும் நெருப்பில் குதித்த கதைதான் வைகோ தொடங்கி சீமான் வரையிலானவர்களின் போராட்டம் !

    இந்தியாவின் தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல, சீமான் முதல் தழருவிமணியன் வரை சீசன் அரசியல்வாதிகள் அனைவருக்குமே பதிவி மோகம் மட்டுமே நிரந்தரம் என்பதை நம்மவர்கள் இன்னும் புரிந்துகொள்ளாததே அதிசயம்தான் ! பெரியார் அண்ணாவுக்கு பிறகு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் கொள்கை என்பது கத்தரிக்காய்தான் ! ஒரு சீட் கிடைக்கும் என்றால் யாரிடமும் சேர்ந்துகொள்வார்கள் அல்லது எப்படியும் பேசுவார்கள். இதில் பெரியகட்சி சின்ன கட்சி வித்யாசமெல்லாம் கிடையாது.

    ஈழ மக்கள்,ஈழ மக்கள் என மீள வழியில்லாத ஈழத்தமிழர்களின் பெயரில் ஓட்டு திருட முயல்பவர்களுக்கு இங்கு, தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா ? அந்த அகதிகளின் முன்னேற்றதுக்கு இவரகள் இதுவரையிலும் ஏதேனும் செய்திருக்கிறார்களா ? செய்ய மாட்டார்கள் ! காரணம், ஈழப்போட்டத்தை பற்றி பேசினால் ஏமாந்த தமிழ்நாட்டுமக்களின் ஓட்டு கிடைக்கும் ! தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு உதவி என்ன செய்ய ? அவர்களுக்குத்தான் இங்கு ஓட்டுரிமை கிடையாதே !!!

  9. காங்கிரசை விட பா.ஜ.க வுக்குத் தான் சிங்கள பெளத்த இலங்கை அரசிடம் பாசம் அதிகம். மோடி பிரதமரானால் இலங்கைத் தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நிலைமை இன்னும் மோசமாகலாம். பாஜகவிலுள்ள இந்துத்துவாக்களைப் பொறுத்தவரையில், பெளத்த சமயமும் இந்துமதத்தின் ஒரு அங்கம் எனக் கருதுகின்றனர். ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக போர் நடத்துவதும், இந்துக் கோயில்களையும், நிலங்களையும், தமிழர்களின் வீடுகளையும் ஆக்கிரமிப்பதும், தமிழர்களின் நிலங்களில் அத்துமீறிக் குடியேறுவதும் சிங்கள புத்த பிக்குகளும், அவர்களின் ஆதரவாளர்களும் தான். சிங்கள பெளத்த பிக்குகளின் இந்து, தமிழ் வெறுப்பினால் தான், இலங்கையில் தமிழர் பிரச்சனை அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்பட முடியாமலிருக்கிறது. சிங்கள பெளத்தத்தின் அடையாளமாகத் தான், புத்தரின் பெயரில் வரலாற்றைத் திரித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழ்ப்பகுதிகளில் நடத்தி, தமிழர்களை அவர்களின் பாரம்பரிய கிராமங்களிலேயே சிறுபான்மையினராக்கும் Ethnic Cleansing நடக்கிறது.

    இலங்கையில் பெளத்தத்துக்கும், இந்துமதத்துக்குமிடையே தான் போரே தவிர, இஸ்லாத்துடனோ அல்லது கிறித்தவத்துடனோ அல்ல. ஆனால் பாஜக விலுள்ள இந்த்துதுவாக்களின் எதிரி முஸ்லீம்களும், கிறித்தவர்களும் தான் பெளத்தர்களல்ல. அந்த அடிப்படை விடயத்திலேயே, ஈழத்தமிழர்களும், பாஜகவும் ஒன்று பட முடியாது. அத்துடன், சுப்பிரமணியம் சுவாமி, சுஸ்மா சிவராஜ், சோ ராமசாமி போன்ற சிங்கள அரசு ஆதரவாளர்கள் பாஜகவில் இருக்கும் வரை, ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படப் போவதில்லை அப்படி ஏதாவது ஈழத்தமிழர் சார்பு முடிவெடுக்க அவர்கள் விடப்போவதுமில்லை. காங்கிரசை விட பாஜக வில் பார்ப்பன ஆதிக்கம் அதிகம். அதனால் பாஜக ஆட்சியில் ஈழத்தமிழர்களின் நிலைமை இன்னும் மோசமானதாகத் தானிருக்கும்.

    அதனால் ஈழத்தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்து, தமது வாக்குகளை வீணாக்காமல், ஜெயலலிதாவுக்கே 40 தொகுதிகளையும் அளித்தால், தமிழ்நாட்டுக்கும் பலம் கிடைப்பதுடன், அது ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கவும் உறுதியாகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரு சக்தியை உருவாக்கும். ஏனென்றால், தான் எடுக்கும் முடிவைக் கடைசி வரையில், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் கடைப்பிடிக்கும் தன்மையும், துணிச்சலும் செல்வி. ஜெயலலிதாவுக்கு இருக்கிறது போல் தெரிகிறது. அதுவும் கூட ஒரு நம்பிக்கை தான். 🙂

  10. // இல.கணேசன் என்ற தஞ்சாவூர் பார்ப்பான், கையில் மீன் பையை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கும் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தேன். நிச்சயம் கணேசனின் அன்றைய இரவுத் தூக்கம் மீன் கவுச்சியால் நிறைந்திருக்கும். //

    உங்களால் தூங்கவே முடிவதில்லையோ..?!

    • #அசைவ உணவுகளின் வாசனையைக் கூட ஏற்றுக்கொள்ளாத இந்த பார்ப்பனக் கூட்டம் மீன் கடையில் நின்றபடி போஸ் கொடுக்கிறது. இல.கணேசன் என்ற தஞ்சாவூர் பார்ப்பான், கையில் மீன் பையை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கும் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தேன். நிச்சயம் கணேசனின் அன்றைய இரவுத் தூக்கம் மீன் கவுச்சியால் நிறைந்திருக்கும். ‘குஜராத் எங்கும் சைவம்தான்’ என்று அதை ஒரு பெருமை போல பீற்றிக்கொள்கிறார்கள். வாக்கு வேண்டும் என்றதும் நமோ மீன்கடை அமைக்கின்றனர்.# அம்பி இந்த இரட்டை சரி என்பது உங்கள் கருத்தா

  11. எழுவர் விடுதலையில் ஜெயலலிதா உண்மை அக்கறையுடன் செயல்படுகிறாரா? என்னும் வினா இங்கு தேவையற்றது. அந்த விடுதலை முயற்சியை மேற்கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதே இங்கு வினா. அவருக்கு அத்தகைய உரிமை இல்லை என நீங்கள் கூறுவது வெறும் சட்ட அறியாமையே. தோழர் தியாகு பல ஊடகங்களிலும் எழுவர் விடுதலைக்குத் தமிழக அரசுக்கு முழுச் சட்ட அதிகாரம் உள்ளது எனத் தெளிவாக விளக்கி விட்ட பிறகும், இதனையே வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி தெளிவுபடுததிய பிறகும் உங்களுக்கு மட்டும் விளங்காதது ஏனோ? இது குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் நீங்கள் முந்திக் கொண்டு தில்லிக்கு ஆதரவாகத் தீர்ப்பளிப்பதுதான் மகஇகவின் அறமோ? ஒருவரின் மீதான விருப்பு வெறுபபின் அடிப்படையில் ஒரு சிக்கலை அணுகுவது சமூக அறிவியல் பார்வையாகாது.

    • ///தோழர் தியாகு விளக்கி விட்ட பிறகும், ராம்ஜெத்மலானி தெளிவுபடுததிய பிறகும்///

      அதை செய்யாமல், பிரச்சனையை மத்திய அரசின் பக்கம் திசை திருப்பிவிட்ட ஜெயலலிதாவை கண்டிக்காமல், எழுவர் விடுதலை செய்யப்பட்டாலும், விடுதலை செய்யப்படாவிட்டாலும் அதனால் தான்மட்டும் ஆதாயமடையுமாறு அரசியல் காய்நகர்த்தியிருக்கும் கேவலமான செயலை கண்டிக்காமல் இருக்கும் கயமைத்தனம் தான் தமிழினவாதிகளின் அறமோ?

      எழுவர் விடுதலையின் அரசியல் நியாயத்தை, ராஜீவ் கொலையின் அரசியலை பேசாமல் இன்றைக்கும் செண்டீமெண்ட் பேசுவதால் தான் காங்கிரஸ் கயவாளிகள் தைரியமாக இப்படி வெளியில் பேசிக்கொண்டு திரிகின்றனர். ப.ஜ.கவும் கயமைத்தனமாக இரட்டை வேடம் போடுகிறது.

      // சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

      நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என நினைவுக்கு வரவில்லை!/////

      ராஜ்நாத் சிங்கின் பேட்டியை படித்த பின்பும் ப.ஜ.க வை கண்டிக்காமல் இருக்கும் கயமைத்தனம் தான் தமிழினவாதிகளின் அறமோ?

      • தோழரே, என் நேரடிக் கேள்விக்குப் பதிலில்லை. எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழுச் சட்ட உரிமை இருப்பதாக நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் அதைத் தூக்கி மகஇக தில்லிக்குத் தர விரும்புவது ஏன்? இதுதான் உங்களின் பாரதமாதா பாசமா?

        • நலங்கிள்ளி,

          எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழுச் சட்ட உரிமை இருப்பதாக தியாகு உள்ளிட்ட தமிழினவாதிகள் நிலைநாட்டியுள்ள நிலையில், ஜெயலலிதா ‘விடுதலை’ நாடகத்தின் மூலம் அதைத் தூக்கி தில்லிக்குத் தந்திருப்பதை பற்றி அதே தமிழினவாதிகள் வாய் திறக்காதது ஏன்? இதே பிரச்சனையில் இரட்டைவேடம் போடும் ப.ஜ.கவைப் பற்றி தமிழினவாதிகள் வாய் திறக்காதது ஏன்? – கட்டுரையின் சாரமான இந்த கேள்விகளுக்கு நீங்கள் உட்பட தமிழினவாதிகள் எவரிடமும் பதிலில் இல்லை.

          இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பட, இறையாண்மை, மாநில சுயாட்சி உரிமை மற்ற பிற சட்டங்கள் உரிமைகள் அனைத்தும் ஆளும்வர்க்க நலன்களுக்கு உட்பட்டவை என்கிற அடிப்படையில் தான் ‘விடுதலை நாடகத்தின் கடிவாளம் மத்தியில்’ இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. விடுதலை நாடகத்தை விமர்சிக்காமல் அதை சுட்டிக் காட்டுவதை விமர்சிப்பதன் நோக்கம் என்ன?

    • Out of topic – for clarifying.
      @Zidane: Broilerல் கோழிகள் மட்டுமே. சேவல்கள் கிடையாது. கோழிகளின் கருவுறாத மாதவிடாய் தான் முட்டைகள். அவை vegetarian அல்லாமல் வேறென்ன?

  12. தமிழினவாதிகள்-தமிழ்உணர்வாளர்கள் என்ற வேறுபாட்டினை சரிவர இக் கட்டுரை விளக்கவில்லை.
    இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் தமிழ்உணர்வாளர்கள்தான்(வேண்டுமானால் சிலர் சுயநலன் கருதி). இவர்கள் எல்லோரையும் தமிழினவாதிகள் என்பது அடிப்படைத்தவறு ஏனெனில் இவர்கள் மற்றைய இனம் எதனையும் அடக்கியாளவேண்டும் என்று கூறவோ அல்லது செயற்படவோவில்லை. இதிலேயே இக்கட்டுரையின் நோக்கம் அடிபட்டுபோகிறது.
    பா.ஐ.க பற்றிய பயம் நியாயமானதே. என்றாலும் சில நோக்கங்களை அடைவதற்கு சில குறுக்குவழிகளிலும் செல்லத்தான்வேண்டும். காங்கிரசை முதலில் அப்புறப்படுத்தவேண்டியதே இன்று தமிழரின் முக்கியவேலை. தண்ணீரில் அமிழ்ந்துபோகும்போது பாம்பின் வால் மட்டுமே தென்பட்டால் , முதலில் அதனைப்பிடித்து அமிழாது தப்பவேண்டும். பின்பு பாம்பினைக் கடிக்காது பார்க்கவேண்டும். பாம்பின் வாலில் சரியாக பிடித்து நிமிர்த்தினால் பாம்பு கடியிலிருந்து தப்பலாம். முதலில் தண்ணீரில் மூழ்காது தப்பவேண்டும். அதனையே தமிழ்உணர்வாளர்கள் செய்யமுயற்சிக்கிறார்கள். எதனையும் விமர்சிப்பது இலகு, ஒன்றினை செய்வதே கடினம்.

  13. நலங்கிள்ளி அவர்களுக்கு,

    விடுதலை முயற்சி மேற்கொள்ள ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வி இன்று புதிதாக எழவில்லை ! ஏழு பேரின் விடுதலைக்காக பலகாலமாக பாடுபடும் பலரும் ( தோழர் தியாகு உட்பட ) சட்டரீதியான உரிமை உள்ளது என சில வருடங்களுக்கு முன்னரே சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதை கருத்தில்கொண்டு இதனை பார்த்தால்தான், இதில் ஒளிந்திருக்கும் தனிமனித அரசியல் ஆதாயம் புரியும் !

    ” என் கடிதங்கள் தொடங்கி டெசோ மாநாடு வரை எங்களின் முயற்சிகளே தூக்குதண்டனை ரத்துக்கு காரணம் ” என படு சீரியஸாக முந்நாள் முதல்வர் ஜோக்கடிக்க, அதனை எங்கே தழிக மக்கள் நம்பிவிடுவார்களோ ( ! ) என்ற பயத்தில் ஒரே கல்லில் முழு மாங்காய் மரத்தையும் சாய்க்க நினைக்கிறார் இந்நாள் முதல்வர் !

    தூக்கு தண்டனை ரத்தும், விடுதலையும் நல்ல முயற்சிகள்தான் என்றாலும் அதனை செயல்படுத்துபவர்களின் உண்மை நோக்கத்தை புரிந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாக நான் கருதுகிறேன்.

    • திரும்பவும் கேட்கிறேன் தோழர் சாமான்யன் அவர்களே, என் நேரடிக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் ஏன் திரும்பவும் சுற்றி வளைக்கிறீர்கள். விடுதலை முயற்சி மேற்கொள்ள ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வி இன்று புதிதாக எழவில்லை எனச் சொல்கிறீர்கள். இந்தக் கேள்வியை எழுப்பியிருப்பதே இந்தக கட்டுரைதானே. அதனை ஏன் அப்படியே மறைக்க விரும்புகிறீர்கள்? இதோ கீழே இந்தக் கட்டுரையின் வாசகம் –

      ஜெயலலிதாவின் விடுதலை நாடகத்தின் கடிவாளம் மத்தியில் காங்கிரசு வசம் இருப்பது தெரிந்தும் அவர் நடத்திய நாடகத்திற்கு கைதட்டாதார் யாருமில்லை.

      எழுவரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக அரசுக்கு முழுச் சட்ட உரிமை உள்ளது என்பதே தோழர் தியாகு போன்றவர்களின் வாதம். இப்படித் தமிழக அரசிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையையும் மகஇக தில்லிக்குத் தூக்கித் தர வேண்டிய தேவை என்ன? என்பதுதான் என் வினா.

  14. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் போராட்டம் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்த தமிழின விரோத போக்கினை தமிழர்களுக்கு வெளிப்படுத்துவே நடத்தப்பட்டது , நாம் தமிழர் கட்சியின் பலத்தை நிரூபிக்க போராட்டம் நடத்தப்பட வில்லை .. பாஜகவும் காங்கிரசும் ஒன்று என்பதில் தமிழ்த்தேசியர்களுக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை , ஆட்சியில் காங்கிரஸ் இருப்பதாலும் தமிழின விரோத போக்கில் மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் முனைப்பு காட்டுவதனாலும் காங்கிரஸ் கட்சி முதன்மையான நிலையில் வைத்து எதிர்க்கப்படுகிறது .. தமிழ்த்தேசியர்கள் யாருக்கு எதிராக போராட வேண்டுமென வினவோ மகஇகவோ முடிவு செய்யக் கூடாது , விமர்சனம் என்ற பேரில் இல்லாததை இட்டுக்கட்டி எழுதக்கூடாது .

    • /பாஜகவும் காங்கிரசும் ஒன்று என்பதில் தமிழ்த்தேசியர்களுக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை/

      இருவரும் ஒன்னுதானே பின்ன என்ன மயிறுக்கு முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்ச்சிக்கு பொன்னாரை கூப்பிட்டீங்க.. கேக்குறவன் எல்லாம் கேணப்பாயல் இல்லப்பு.. பாஜக வை கண்டிக்க துப்பில்ல, இதுல வியாக்கானம் வேறயா..

      /தமிழ்த்தேசியர்கள் யாருக்கு எதிராக போராட வேண்டுமென வினவோ மகைகவோ முடிவு செய்யக் கூடாது/
      வினவு சரியாதான சொல்லுது… தமிழ்தேசியம் பேசுறவன் எவனாவது பிஜேபி ஐ கண்டிச்சானா?
      ஆம் ஆத்மி, அதன் தமிழக பிரமுகர் உதயகுமாரை கண்டிச்சீங்களா?

      அப்புறம் என்ன சவுண்டு..

  15. /தமிழ்த்தேசியர்கள் யாருக்கு எதிராக போராட வேண்டுமென வினவோ மகைகவோ முடிவு செய்யக் கூடாது/

    பிஜேபி க்கு எதிரா போராடமாட்டேன் என்று இவ்வளவு பச்சையாக சொல்வதற்கு கூச்சமில்லையா?

  16. குஜராத் இனபடுகொலைக்கு நீதி கேட்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி இலங்கை அல்லது அமெரிக்கா, ஐநா மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால்……….????????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க