privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஜிண்டாலை முறியடிப்போம் - திருவண்ணாமலை மே நாள் முற்றுகை !

ஜிண்டாலை முறியடிப்போம் – திருவண்ணாமலை மே நாள் முற்றுகை !

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு.

கவுத்தி வேடியப்பன் மலை
கவுத்தி வேடியப்பன் மலை

என்று இயற்கையின் மகத்துவத்தையும், நாட்டிற்கு உறுப்பாக மலையும், மழையும், ஆறுகளும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர். இந்த பூமி பந்து தோன்றிய காலத்தில் முதலாவதாக உருவெடுத்த, பழமையான நமது நாட்டின் கிழக்கு, மேற்குதொடர்ச்சி மலைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வாழ்ந்துள்ள காடுகள், உயிர்காக்கும் அற்புத மூலிகைகள், அளவிடற்கரிய கனிம வளங்களையும், இயற்கையோடு இணைந்து வாழும் பறவைகளையும், விலங்குகளையும், மலைகளையும் காத்துவரும் உழைக்கும் மக்களையும் தனது லாப வெறிக்காக பெயர்த்தெடுத்து வீசியெறிய புறப்பட்டுள்ளனர் பன்னாட்டு- உள்நாட்டு முதலாளிகள்.

இந்த மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையை பாக்சைட் கனிம வள கொள்ளைக்காகவும், ஜவ்வாது மலையை சந்தன கட்டை, செம்மரக்கட்டை கொள்ளைகளுக்காகவும் சூறையாடியதை போல தற்போது கவுத்தி வேடியப்பன் மலைகளை தகர்த்து, அதன் அடியில் புதைந்து கிடக்கும் 935 மில்லியன் டன் இரும்பு தாதுகளை கொள்ளையடிக்க வெறியுடன் கிளம்பியுள்ளது ஜின்டால் என்ற பன்னாட்டு நிறுவனம்.

அன்று ஈஸ்ட் இன்டியா! இன்று ஜின்டால்!

சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட காலத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளின் கனிம வளங்களை சூறையாடிய முதலாளிகள் இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் ஒன்றுக்கொன்று தொடர்ச்சி இல்லாமல் மேற்கு வங்காளம் முதல் நீலகிரி வரை நீண்டு பரவியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் தரம் வாய்ந்த பாக்சைட், இரும்பு தாது, சுண்ணாம்பு கற்களை கொள்ளையடிக்க கிளம்பியுள்ளனர்.

2005-ம் ஆண்டு போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி, கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வந்த போது போர்க் குணத்துடன் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடி விரட்டியடித்தோம். ஆனால், அந்த கொலைகார ஜிண்டால் உச்சநீதிமன்றத்தின் ஆசியுடன் மீண்டும் நமது மண்ணிற்குள் நுழைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 680 மாவட்டங்களில் 238 -வது இடத்தில் கிடக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த திட்டத்தையும் போடாத மத்திய, மாநில அரசுகள் ஒரு முதலாளியின் லாப வேட்டைக்காக நமது மலைகளை தாரை வார்த்து கொடுத்துள்ளனர்.

நமது மாவட்டத்தை சுற்றிப் பாயும் செய்யாறும், துரிஞ்சலாறும் இப்போதே வறண்டு மணலாறாகத்தான் காட்சியளிக்கிறது. இந்த லட்சணத்தில் ஜிண்டாலின் இரும்புக் கொள்ளைக்காக 2 இலட்சம் மரங்களை வெட்டப் போகிறார்களாம். கம்பெனியை இயக்க அன்றாடம் தேவையான 560 கனமீட்டர் தண்ணீரை இயற்கை கொடையான சாத்தனூர் அணையிலிருந்தும், கவுத்தி-வேடியப்பன் மலைகள் தேக்கி வைத்திருக்கும் ஊற்று நீரிலிருந்தும் உறிஞ்சி கொள்ளப் போகிறார்களாம். கடினமான பாறை தன்மை கொண்ட மலைகளை 6,000 அடி துளை போட்டு தகர்க்க போகிறார்களாம். 600 லட்சம் டன் இரும்பை சூறையாடிவிட்டு மனித குலத்திற்கே கேடு விளைவிக்கும் 24 லட்சம் டன் கழிவுகளை மலைக்கு அடியிலேயே கொட்டப் போகிறார்களாம்.

இந்த பாதிப்புகளை மக்களின் மீது சுமத்தி வளர்ச்சித் திட்டம் என்ற போர்வையில் கொள்ளையிடுவதற்கு கவுத்தி-வேடியப்பன் மலைகளில் பரந்து கிடக்கும் 1,500 ஏக்கர் இரும்பு படுகையை கொண்ட நிலப்பரப்பை குறிவைத்துள்ளனர். தற்போதைக்கு 900 ஏக்கர், 20 ஏக்கர் என்று கூறிக் கொண்டாலும் மொத்தத்தையும் கொள்ளையிடுவதே கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கம்.

ஜிண்டாலின் இரும்பு கொள்ளைக்காக கவுத்தி – வேடியப்பன் மலைகளை சுற்றி வாழும் 51 கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களையும், மலைக்காடுகளில் உள்ள 30 வகையான அரிய வகை மூலிகைகளையும் , பறவைகள் சரணாலயத்தையும், பலிகொடுத்து அவர்களின் சாம்பல் மேட்டிலிருந்து கிடைக்கும் இரும்பை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் போகிறார்கள். இந்த படுபாதக செயல்களின் மூலம் கிடைக்கும் இரும்பு நமக்கு ஒரு பைசாவிற்கு கூட பலனை தராது. ஆனால் ஏற்கனவே அலுமினிய உற்பத்தில் கொழித்து திரியும் ஜிண்டாலின் பாக்கெட்டிற்கு கோடிக்கணக்கான டாலர்களை கொட்டப் போகிறது.

களம்பூர் பொன்னி உள்ளிட்ட பெயர் பெற்ற ரக நெல்லையும், வட மாவட்டத்தில் நெற்களஞ்சியமாக திகழ்ந்து நெல் உற்பத்தி செய்து கொடுத்தும் மணிலா கரும்பையும், பலவகை நவதானிய பயிர்களையும் விளைவிப்பதற்கு, இடதுபுறமாக 35 கிமீ பாய்ந்து 41 ஏரிகளை நிரப்பி 24,000 ஏக்கர் பாசனத்தையும், வலதுபுறமாக 28.6 கி.மீட்டர் பாய்ந்து 49 ஏரிகளை நிரப்பி 21,000 ஏக்கர் பாசனத்தையும் கொடுத்து லட்சக் கணக்கான விவசாயிகளை வாழவைத்த சாத்தனூர் அணை வரண்டு பாலைவனமாக போகிறது. அதுமட்டுமின்றி கவுத்தி-வேடியப்பன் மலைகளில் உற்பத்தியாகும் துறிஞ்சலாறும், செய்யாறும் ஒழியப் போகிறது. அன்றாடம் நூற்றுக்கணக்கான டம்பர் லாரி மூலம் இரும்புத்தாதுக்களை கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மலைகளை தகர்க்கும் வெடிகளால் ஏற்படும் அதிர்வுகள் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும், நகர மக்களுக்கும் பாதிப்பு என்று நாசத்தை விளைவிக்க போகின்றனர். இந்த பாதிப்புகள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்குத்தான்.

இந்த பாதிப்புகளை எதிர்த்து கவுத்தி-வேடியப்பன் இரட்டை மலைகளை சுற்றியுள்ள 20 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் இதை உணர்ந்துள்ள மக்கள் நமது பிரச்சாரத்தை வரவேற்று வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தையும் தனது உறவினர்களுக்கு செய்து தருவதை போல செய்தனர்.

ஜிண்டாலின் கனிம வள கொள்ளையை தடுக்க தேர்தல் பாதை உதவாது. இந்த போலி ஜனநாயக தேர்தலை புறக்கணித்து புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரளும் படி பிரச்சாரம் நட்த்தினோம். அதன் தொடர்சியாக உண்மையான ஜனநாயகத்தை படைக்கவும், அதற்கு மாற்று அதிகாரம் கொண்ட அமைப்புகளை கட்டி எழுப்புவோம் என்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களைத் திரட்டி மே தினத்தை போராட்ட தினமாக்கியுள்ளோம்.

மே தினப் பேரணி, முற்றுகை

  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம் !
  • கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!

பேரணி துவங்கும் இடம் : திருவள்ளுவர் சிலை
நேரம் : காலை 10 மணி, 01.05.2014
முற்றுகை : மாவட்ட  வனத்துறை அலுவலகம், திருவண்ணாமலை

[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
திருவண்ணாமலை-விழுப்புரம்-கடலூர் மாவட்டங்கள்