privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கார்போரண்டம் யூனிவர்சல் - மே நாளில் புஜதொமு சாதனை !

கார்போரண்டம் யூனிவர்சல் – மே நாளில் புஜதொமு சாதனை !

-

ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் மற்றுமோர் திருப்புமுனை

கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைப்பு விழா!

கார்போரண்டம் யூனிவர்சல்
தொழிலாளர் உழைப்பால் உயிரூட்டப்பட்ட கார்போரண்டம் யூனிவர்சல்

——————————————————————

அன்பார்ந்த தோழர்களே!

சூர் சிப்காட் 1-ல் கார்போரண்டம் யூனிவர்சல் தொழிற்சாலை 1981-ல் தொடங்கப்பட்டது. இவ்வாலை தமிழகத்தின் முன்னணி குழும நிறுவனங்களின் ஒன்றாகவும் ஆண்டுக்கு 40,000 கோடியில் வர்த்தகம் செய்தும் வருகின்ற ஏறக்குறைய 30,000 தொழிலாளர்களைக் கொண்ட முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இவ்வாலையில் சாணைக்கற்கள் (இரும்புகளை கிரைண்-டிங் செய்யும் சாணைகற்கள்) உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆரம்பத்தில் சில 10 தொழிலாளர்களைக் கொண்டு மாதம் 30 இலட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்த இவ்வாலையில் தற்போது மாதம் 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. 1998-ல் 200 நிரந்தரத் தொழிலாளர்கள் இவ்வாலையில் பணி புரிந்தனர். தற்போது இவ்வாலை 144 நிரந்தரத் தொழிலாளர்களையும் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களையும் 90 பயிற்சி தொழிலாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது. இவர்கள் மட்டுமல்ல, சி.சி.எஸ்.டி. என்ற பெயரில் மாணவர்களையும் சட்டவிரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்தி வருகிறது.

முருகப்பா நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாத நடவடிக்கைகள்!

பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் இவ்வாலையில் உற்பத்தி நிலைமை அடிப்படையில் 500-க்கும் அதிகமான நிரந்தரத் தொழிலாளர்களை கொண்டிருக்க வேண்டும். ஆனால், இன்று நிலைமையோ அவ்வாறில்லை. இது மட்டுமல்ல, ஆலைக்குள் தொழிலாளர்களை புகைப்படம் எடுப்பது, வீடியோ கேமரா முன்பாக நின்றுதான் டீ குடிக்க வேண்டும் என்று கூறி டீ குடிக்கும் நேரத்தைக் கூட குறைத்து தொழிலாளர்களைக் கைதிகள் போல் நடத்துவது போன்ற பலவேறு அடக்குமுறைகளை செலுத்தி நவீனக் கொத்தடிமைகளின் கூடாரமாக கார்போராண்டம் யூனிவர்சல் ஆலை நிலவுகிறது.

இவ்வாலையில் செய்யப்படும் சாணைக் கற்கள் உற்பத்தியானது உயர்ந்த ஒருவகை மணலும் ஒருவகை வேதியியல் பசையும் கலந்து உருவாக்கப்படுவது. இதில் மிகவும் ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்துகின்றன. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி துன்பப்படும் நிலையில், தொழிலாளர்கள் மீது பலவேறு சட்டவிரோத தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது.

ரவுடித்தனம், பண்ணையார்த்தனம், குரூர புத்தி – இவற்றின் மொத்த உருவம் கார்போரண்டம் ஆலை நிர்வாகம்!

கார்போரண்டம் யூனிவர்சல்
கார்போரண்டம் யூனிவர்சல்

இவ்வாலை தொடங்கப்பட்ட காலத்தில், சங்கம் கட்டி போராடுவதற்கு வாய்ப்பில்லாமல் தொடர்ந்து நிர்வாகத்தின் பேச்சை நம்பி உழைத்து வந்தோம். அப்போது 30, 40 ரூபாய்தான் ஊதிய உயர்வாக இவ்வாலை கொடுத்தது. இதனை எதிர்த்துக் கேட்க முடியாமல் வாய் மூடியிருந்த தொழிலாளர்களை அமைப்பாக்கி, 1982-ல் இவ்வாலையில் சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அடக்குமுறையோ, சுரண்டலோ முடிவுக்கு வரவில்லை. இதனால், 1994-ல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஆலை நிர்வாகத்திற்கு எதிராக தீவிரமான போராட்டங்களில் இறங்கினோம். நிர்வாகமோ நயவஞ்சமாக செயல்பட்டு 1996-ல் சங்கத்தை இரண்டாக உடைத்தது. இதன் மூலம் தொழிலாளர்கள் மீது கேள்விக்கிடமற்ற அடக்குமுறைகளை செலுத்தத் தொடங்கியது. இதன் பின்னர், புதிய நிரந்தரத் தொழிலாளர்கள் நியமனம் என்பதே இல்லை. இருக்கும் தொழிலாளர்களை வீதியில் வீசியெறியும் வேலைகளைத் தொடங்கியது.

இன்றுவரை இவ்வாலையில் ஊதிய உயர்வு கோரிக்கையானது உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்ட வரலாறில்லை. தற்போது கூட 18 மாதங்கள் 35 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. இறுதியில் நொந்து, நோகடித்து, மனம் வெதும்ப வைத்து, ஏதாவது ஒரு நெருக்கடிக்குத் தள்ளி, அற்ப தொகையைத்தான் ஊதிய உயர்வாகக் கொடுத்துள்ளது.

இது மட்டுமல்ல, சட்டவிரோத தனது நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்து தொழிலாளர்களையும் சங்கத்தையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது. தற்போதும் இந்த நிலை நீடிக்கிறது. குறிப்பாக, சட்டபூர்வமான தொழிற்தகராறு சட்டம் பிரிவு – 12 (3) கீழான ஒப்பந்ததை போடுவதில்லை. கட்டைப் பஞ்சாயத்து செய்துதான் ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறது.

தொடரும் அடக்குமுறைகளும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீதான தாக்குதலும்!

நியாயம் கேட்கும் தன்மானமுள்ள தொழிலாளர்களை தொடர்ந்து பழி வாங்குவதே எங்களது ஆலை முக்கியமான நடவடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, 2008-ம் ஆண்டு ஆலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதை எதிர்த்து சங்கத்தின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் சட்டபூர்வமாக மனுதாக்கல் செய்தோம். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறைப்படுத்தும் மற்றும் ஒழிப்புக் குழுவிடம் ஆலையை ஆய்வு செய்யும் படி ஆணையிட்டது. சில ஆண்டு களுக்குப் பின்னர் தற்போதுதான் இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. அரசு மிகவும் மெத்தனமாகத்தான் செயல்பட் டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த மெத்தனமான நடவடிக்கையைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் சங்க நிர்வாகிகளை ஒழித்துக் கட்டும் வேலையில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக, உறுதியாகப் போராடி வருகின்ற நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் உட்பட நான்கு சங்க நிர்வாகிகள் பொய்யான காரணங்களைக் காட்டி இடைநீக்கம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகியோரை வடமாநிலங்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் மொத்த சங்கத்தையே செயல்பட முடியாமல் தடுத்துள்ளது. சட்டபூர்வமாக சங்கம் வைக்கும் உரிமை இருந்தும், சங்கமாக செயல்படும் நமது முயற்சியைத் தடுத்துள்ளது. இதுமட்டுமல்ல, தொழிற்தகராறு நிலுவையில் இருக்கும் போது இடைநீக்கம், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதம் என தெரிந்தும் இதனை செய்துள்ளது.

இதுதான் ஆலை நிர்வாகம் நடத்திவரும் 35 சுற்று பேச்சுவார்த்தையின் இலட்சணம்!

கார்போரண்டத்தின் கோரப் பசிக்கு இரண்டு தொழிலாளர்கள் பலி!

ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாக போராடும் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளுக்கு அளவே இல்லை. குறிப்பாக, ஆலையில் ஆபத்து நிறைந்த பகுதியில் சுழற்சி முறையில் செய்து வந்த வேலையை மாற்றியமைத்து சங்கத்தில் உறுதியாக செயல்படும் தொழிலாளர்களை மட்டும் தொடர்ந்து அங்கு வேலைக்கு வைப்பது, ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவது என்ற நடவடிக்கையை இவ்வாலை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமை மீறல்களையும் செய்கிறது. தொழிலாளர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளக் கூடாது என ஆலைக்குள்ளேயே 144 தடையுத்தரவு போட்டுவைத்துள்ளது. இதனை மீறும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களது தன்மான உணர்வை நசுக்கி வருகிறது. ஆலையின் மேற்கண்ட நடவடிக்கைகளால், தொழிலாளர்கள் பலரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இவ்வாலையில் இத்தாக்குதலுக்கு இரண்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

2011ம் ஆண்டு இவ்வாலையில் பணி புரிந்த தொழிலாளி இராஜேந்திரன் மீது அற்பக் காரணங்களைக் கூறி விளக்கம் கோரும் கடிதத்தைக் கொடுத்தது. இதற்கு முன்பு இதே போல அற்ப சொற்ப காரணங்களுக்காக விளக்கம் கோருவது எனத் தொடங்கிய ஆலை நிர்வாகம், ஏற்கனவே 22 தொழிலாளர்களை இடைநீக்கம், டிரான்ஸ்ஃபர், வேலைநீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் தனக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்த இராஜேந்திரன், மன உளைச்சலுக்கு ஆளாகி ஆலைக்குள்ளேயே மரணமடைந்தார். இவரது மரணம் ஆலைக்கு வெளியே நடந்ததுபோல போலி ஆவணங்களை தயாரித்து ஆலையில் நடக்கும் அடக்கு முறைகளை மூடி மறைத்தது. தொழிலாளி இராஜேந்திரனின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் இவ்வாலை அதிகாரிகளே.

2009-ம் ஆண்டு, ஊதிய உயர்வு உரிய காலத்தில் கிடைக்காமல் தொழிலாளி மூர்த்தியின் குடும்பத்தினர் வாடிய நிலையில், அவரை தொடர்ந்து கடினமான உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்ற வேலையில் ஈடுபடுத்தியதை அடுத்து, முகத்துக்கு நேரே புகைப்படம் எடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது ஆலை நிர்வாகம். இதனால், ஆலைக்குள்ளேயே மாரடைப்பு ஏற்பட்டு தொழிலாளி மூர்த்தி மரணமடைந்தார். இந்த மரணத்தையும் ஆலைக்கு வெளியே நடந்தது போல மாற்றி பிரச்சனையை மூடிமறைத்தது.

எங்களது தற்போதைய கோரிக்கைகள்!

நீண்டகாலமாக முடிக்கப்படாமல் இருக்கும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும். எங்களது சங்க நிர்வாகிகள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் வாபஸ் பெற வேண்டும். நமது சங்கத்தினர் மீதும் தொழிலாளர்கள் மீது செலுத்திவரும் அற்பத்தனமான நடவடிக்கைகளை (கேமரா முன்னால் நின்று டீ குடிக்க வேண்டும் என்பது, தொழிலாளியைப் படம்பிடிப்பது, சுழற்சிமுறையை ரத்து செய்து நமது சங்க உறுப்பினர்களை மட்டும் வேலை வாங்குவது…) உடனடியாக ஆலை நிர்வாகம் நிறுத்த வேண்டும். தொழிலாளர்களைப் பிளவுப்படுத்தி குளிர்காயும் போக்கை ஆலை நிர்வாகம் கைவிட வேண்டும்.

உறுதியான போராட்டத்தின் அடுத்தக் கட்டம்… பு.ஜ.தொ.மு.வுடன் இணைப்பு!

இன்று பல ‘பெரிய’ தலைவர்கள் தலைமை தாங்கும் சங்கங்கள் கூட சட்டபூர்வமாக நடத்தாமல் கட்டைபஞ்சாயத்து முறையில்தான் சங்கம் நடத்தி வருகின்றனர். ஆலை நிர்வாகத்துடன் சமரசம், தொழிலாளர்களைக் காட்டிக் கொடுப்பது, ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு துணைபோவது என்ற நிலைமை இன்று நிலவுகிறது. ஒசூரிலும் இதைக் காண்கிறோம்.

நமது கார்போரண்டம் யூனிவர்சல் தொழிலாளர்களின் தொழிலாளர்கள் சங்கம் (டி.ஆர்.பி.119) என்பது இந்த 32 ஆண்டுகளாக ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடி வந்துள்ளது. தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர்த்து சட்டபூர்வமாக நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இதனால், எங்களது சங்க நிர்வாகிகள் பலர் இடைநீக்கம், இடமாற்றம், வேலைநீக்கம் போன்ற அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நமது சங்கம் உறுதியாக செயல்பட்டு வருகிறது. சட்டமும் நீதியும் முதலாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த 32 ஆண்டுகால அனுபவமாக உணர்ந்துள்ளோம்.

ஆலைக்குள் நிர்வாகத்துடன் சட்டபூர்வமாக தாங்கள் நடத்திய போராட்டங்கள் எதுவும் ஆலை நிர்வாகத்தை அசைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீது ஆலை நிர்வாகம் தொடுக்கும் அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளது. பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தார் என்பதற்காக எங்களது சங்க நிர்வாகி வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை வைத்து பாருங்கள். அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து தொழிலாளர் துறையில் வழக்கு, வாய்தா, ஆலை அதிகாரிகள் வர மறுப்பு, தொழிலாளர் துறை அதிகாரிகளும் ஆலை அதிகாரிகளும் கொஞ்சுவது, குலாவுது, தூ! தூ! மானங்கெட்ட பொழப்பு என்று மனம் வெதும்புகிறது. ஆகையால், இனியும் இந்த சட்டத்தை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற நிலையில்தான் வீதியில் இறங்கிப் போராட முடிவு செய்துள்ளோம்.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உறுதியாக, இடையறாது, தன்னலம் கருதாது, வர்க்க உணர்வுடன், நாட்டுப்பற்றுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போராடி வருகிறது. ஒசூர் தொழிலாளர்களுக்காக பல முன்னுதாரணமிக்கப் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆகையால், எங்களையும் இணைத்துக் கொண்டு போராடுவதுதான் தீர்வு என்பதை உணர்ந்து பு.ஜ.தொ.மு.வில் எமது சங்கத்தை இணைத்துள்ளோம்.

எங்களைப் போல ஒசூரில் உள்ள பிற ஆலை தொழிலாளர் சங்கங்களும், தொழிலாளர்களும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கவும் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் பு.ஜ.தொ.மு.வில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! பு.ஜ.தொ.மு. தலைமையில் நாங்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுங்கள்!

நிகழ்ச்சி நிரல்

நாள் : 01.05.2014, வியாழக் கிழமை,
நேரம் : காலை 11 மணி
இடம் : கார்போரண்டம் யுனிவர்சல் ஆலை வாயில் முன்பு.

தலைமை:
தோழர் மதிவாணன், தலைவர்,
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்

வரவேற்புரை:
தோழர் காளியண்ணன், செயலாளர்
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்

கொடியேற்றி சிறப்புரையாற்றுபவர்:
தோழர் பரசுராமன், மாவட்டத்தலைவர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

வாழ்த்துரை வழங்குபவர்கள்:
தோழர் சங்கர், மாவட்ட செயலாளர்,
பு.ஜ.தொ.மு

தோழர் செந்தில்குமார், தலைவர்,
பு.ஜ.தொ.மு கமாஸ்வெக்ட்ரா கிளைச் சங்கம்

தோழர் வேல்முருகன், செயலாளர்,
பு.ஜ.தொ.மு வெக் இந்தியா கிளைச் சங்கம்

தோழர் கோபால்,
ஹரிதா ரப்பர்

தோழர் இ.கோ.வெங்கடேசன்,
அசோக்லேலாண்டு

தோழர் சிவலிங்கம், இணைச் செயலாளர்,
கார்போரண்டம் ஐ.சி. எம்ப்ளாயிஸ் யூனியன்

நன்றியுரை :
தோழர் சுந்தரேசன் இணைச் செயலாளர்,
கா.யூ.தொ.தொ. சங்கம்.

இவண்
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் (பதிவு எண்-110 DRP)
இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பதிவு எண்-24 KRI)
(கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்)