“பிரதமரின் நேபாள பயணம் மகத்தான வெற்றி பெற்றது என்று கேள்விப்பட்டேன்…. இல்லை இல்லை லடாக் பயணம் … கொஞ்சம் இருங்க, வாய் தவறி விட்டது. பூடான் என்றுதான் சொல்ல வந்தேன்.”
“இன்றைக்கு பூடானையும் நேபாளத்தையும் குளறுபடி செய்யும் மோடி நாளைக்கு ஐநா அல்லது பிரிக் (BRIC) கூட்டங்களில் சொதப்பி இந்தியாவை அவமானப்படுத்த மாட்டார் என்று நம்புவோம்”
“குஜராத்தி மொழியில் நேபாளம் என்றால் பூடான் என்று பொருளாக இருக்கும்”
“மோடி புவியியலில் கொஞ்சம் வீக் போல, அதுதான் பூடானுக்கு பதிலாக நேபாள்னு சொல்லியிருக்கிறார். முனபு (தேர்தல் பிரச்சாரத்தின் போது), சந்திரகுப்த மவுரியரையும் தட்சசீலத்தையும் பீகாருடன் இணைத்து பேசி குழப்பியவர்தான்”
“நம்ம பிரதமர் சொன்னதை உண்மையாக்குவதற்கு மாண்புமிகு மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி என்.சி.ஈ.ஆர்.டி வரலாற்று புத்தகங்களை திருத்தி பூடானை நேபாளத்தின் பகுதியாக மாற்ற உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.”
சமீபத்தில் பூடான் பயணம் மேற்கொண்ட மோடி, இணையத்தில் இப்படி கலாய்க்கப்பட்ட போது, சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஜிங்குஜா அடிக்கும் மோடி இணையப் படை எங்கோ மாயமாகியிருந்தது.
ஜூன் 15, 16 தேதிகளில் பூடானுக்கு 2 நாட்கள் அரசு முறை பயணமாக சென்ற மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பூடானுக்கு பதில் நேபாளம் என்று பேசி சொதப்பினார். “நான் ஜனநாயக மதிப்பீடுகளையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாத்த நேபாள…. பூடான் அரச குடும்பத்தை பாராட்டி என் உரையை ஆரம்பிக்கிறேன்.” என்று உளறியதோடு பின்னர் ஒரு இடத்தில் பூடான் என்பதற்கு பதில் லடாக் என்றும் பேசினார்.
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் பதவி ஏற்ற இந்துத்துவ பிரதமர் என்ற பூரிப்பில் தனது பதவி ஏற்பு விழாவுக்கு தெற்காசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டாடினார் மோடி. ஆனால், ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு, நவாஸ் ஷெரீபை அழைத்ததில் இந்துமதவெறியரில் சிலர் அதிருப்தி என்று அந்த முடிசூட்டு விழா முழுமையாக பலனளிக்கவில்லை. இந்நிலையில், மோடியின் அடுத்த கட்ட விளம்பர அத்தியாயமாக வெற்றிகரமான வெளிநாட்டு பயணத்தை நடத்திக் காட்டுவோம் என்று சிந்தன் பைட்டக் நடத்தியிருக்கின்றனர் பா.ஜ.கவினர். “நம்ம ஏரியாவை விட்டு அமெரிக்கா, ஐரோப்பா என்று போனால் ‘மோடி அளவு’ பந்தாவுக்கு ஸ்கோப் குறைவு, ஏதாவது அசம்பாவிதமாக முட்டை வீசும் சம்பவம், அல்லது செருப்பு வீசும் சம்பவம் கூட நடந்து விடலாம். அதனால், முதலில் நம்ம பேட்டையான தெற்கு ஆசிய பிராந்தியத்தில் நாமதான் தாதா என்று உறுதி செய்து கொள்வோம்.” என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அப்படி தெற்கு ஆசியாவில் பயணம் மேற்கொள்வதிலும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. இலங்கைக்கு போகலாம் என்றால் ‘ஜெயலலிதா ஏதாவது கடிதம் எழுதி விடுவாரோ, வைகோ டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி விடுவாரோ’ என்று யோசிக்க வேண்டும், வங்கதேசத்துக்குப் போகலாம் என்றால் மம்தா தீதியின் கண் உருட்டலை சமாளிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு போக வேண்டுமென்றால், ராஜ் தாக்கரேவிடம் முன் ஜாமீன் வாங்கிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நேபாளத்திற்கு போனால் மாவோயிஸ்டுகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
அதனால், யாரையும் துன்புறுத்தாத, இந்தியாவின் தயவில் வாழும் பிள்ளைப் பூச்சி நாடு பூடானுக்கு போய் அந்நாட்டு அரசின் மகத்தான வரவேற்பை பெற முடிவு செய்திருக்கிறார் 56 இஞ்சு மார்பு படைத்த வீரர் நரேந்திர மோடி.
ராஜதந்திரம் மிக்க இந்த ஒற்றை முடிவின் மூலம் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார் மோடி. அவற்றில் முக்கியமானது, தினமணி உள்ளிட்டு நாடெங்கிலும் வெறும் வாயிலேயே மோடியின் பஜனை பாடும் பக்தர்களுக்கு மெல்லுவதற்கு நிறைய அவல் கிடைத்தது.
பூடானில் மொத்தமே ஏழேகால் லட்சம் மக்கள்தான் (மதுரை மாநகரை விட குறைவு, திருநெல்வேலியை விட கொஞ்சம் அதிகம்) வாழ்கிறார்கள்; 1949-லிருந்தே இந்திய அரசுதான் அந்நாட்டின் திட்டச் செலவுகளுக்கு நிதி கொடுத்து அதன் வெளியுறவுக் கொள்கையையும், பொருளாதாரக் கொள்கையையும் கட்டுப்படுத்துகிறது போன்ற விபரங்களை எல்லாம் யாரும் தேடிக் கொண்டிருக்கவா போகிறார்கள். இருந்தாலும் பூடான் போனாலும், வாஷிங்டன் போனாலும் வெளிநாட்டுப் பயணம், பயணம்தான். அந்த வகையில் மோடியின் முதல் வெளிநாட்டு பயணத் திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பூடான் அரசின் மொத்த ஆண்டு வருமானம் $27 கோடி (சுமார் ரூ 1,600 கோடி) ஆனால் செலவுகளோ ஆண்டுக்கு $35 கோடி (சுமார் ரூ 2,100 கோடி). இந்த செலவுகளில் சுமார் 60% ‘மானியமாக’ கொடுப்பது யார் என்று பார்த்தால் அது இந்திய அரசுதான். 1990 வரை பெருமளவு இயற்கை பொருளாதாரம் சார்ந்து வாழ்ந்து வந்த பூடானில் கடந்த 20 ஆண்டுகளில், 5 சதவீதமே உள்ள ஆளும் அரச குடும்பத்தினர் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், ஆடம்பர வீடுகள், நவீன நுகர்வு பொருட்கள் என்று வாழ்வதற்குத்தான் இந்த பணம் திருப்பி விடப்படுகிறதே தவிர, சாதாரண பூடான் மக்களின் வாழ்க்கையில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தி விடவில்லை.
இந்திய அரசோ இத்தகைய நிதி உதவி மூலம் பூடானில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான காண்டிராக்டுகளை இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வாங்கி தருவதோடு, இயற்கை வளங்களும் நீர்வளமும் நிறைந்த அந்நாட்டிலிருந்து மின்சாரத்தை மலிவு விலையில் வாங்கிக் கொள்கிறது. பூடானிலிருந்து பெறும் மின்சாரத்துக்கு விலையாக இந்திய அரசு கொடுக்கும் தொகையிலிருந்து வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல், கடனை கட்டவே கடன் வாங்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது பூடான்.
இத்தகைய நாட்டுக்கு சென்று திரும்பி ‘பூடான் கொண்டான்’ என்று பெயர் சூடிக் கொள்ளும் முயற்சியிலான மோடியின் பயணத்தை தினமணி பரபரப்பாக படம் பிடித்தது.
மோடியின் பயண முடிவு வெளியான ஜூன் 11-ம் தேதி பிரதமர் மோடி 15-இல் பூடான் பயணம் என்ற தலைப்பிலும், ஜூன் 14-ம் தேதி பிரதமர் மோடி நாளை பூடான் பயணம் என்ற தலைப்பிலும், ஜூன் 15 அன்று பிரதமர் மோடி இன்று பூடான் பயணம் செய்திகளை வெளியிட்டதோடு 16, 17, 18 தேதிகளில் மோடி பூடானில் வரவேற்கப்பட்டது, அங்கு அவர் நடத்திய உரைகள், வெளியிட்ட அறிக்கைகள், திறந்து வைத்த திட்டங்கள் என்று தடபுடல் செய்ததோடு இந்திய-பூடான் உறவு குறித்து இறுதியில் ஒரு தலையங்கத்தையும் தீட்டியது. மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு போனால், “உசிலையை வென்ற அழகிரி அண்ணே நீ வாழ்க” என்று உடன்பிறப்புகள் விளம்பரம் செய்வது போல தினமணி பரவசமாக எழுதியது.
உண்மை நிலவரம் என்ன?
பூடானின் முந்தைய பிரதமர் ஜிக்மே தின்லே பிற நாடுகளுடன் குறிப்பாக சீனாவுடன் பூடானின் உறவை வளர்க்க முயற்சித்ததை பார்த்து கடுப்பான இந்திய ஆளும் வர்க்கங்கள் பூடானுக்கு பெட்ரோலிய மானியத்தை ரத்து செய்தும், பொருட்களின் ஏற்றுமதியை முடக்கியும் அந்நாட்டு அரச குடும்பத்தையும் ஆளும் குடும்பங்களையும் நிலைகுலையச் செய்திருந்தன.
உண்மையில் இந்தியாவுடன் இணைந்திருப்பது வரையில்தான் அந்நாட்டு மக்கள் மீதான மன்னர் மற்றும் அரச குடும்ப மேட்டுக்குடியினரின் ஆட்சிக்கு உத்தரவாதம். அந்த வகையில் பூடான் மன்னர் ஆட்சி இருப்பது வரை சீனாவுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாகவும் சரி, நடைமுறை ரீதியாகவும் சரி சாத்தியமில்லாத ஒன்று.
எனவே, அடுத்த தேர்தலில் முதல் சுற்றில் ஜிக்மே தின்லேயின் கட்சி முதலிடத்தை பிடித்தாலும் இறுதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவிற்கு அடிபணிதலை உறுதியாக கடைப்பிடிக்கும் ஷெரிங் தோப்கே பிரதமராக்கப்பட்டார்.
இத்தகைய பூடானுக்கு போவது மோடியின் சூப்பர் மேன் இமேஜை தூக்கி நிறுத்த மட்டும் பயன்படவில்லை. மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த முதலாளிகளில் முக்கியமானவர்களான குஜராத்தி, மார்வாடி வியாபாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் கடமையும் மோடிக்கு இருந்தது. அரிசியில் ஆரம்பித்து பல்வேறு நுகர்பொருட்களை பூடானுக்குள் கொண்டு சென்று விற்கும் அவர்களது வர்த்தகத்துக்கு பாதிப்பு வராமல் பேசி உறுதி செய்து வருவதுதான் மோடிக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை.
இப்படி தரகு வேலை பார்க்க போன மோடிக்கு இந்த பயணத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பை பற்றி
பாரோ விமான நிலையம் சென்றடைந்த மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோரை பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் மோடிக்கு, சிகப்பு கம்பள வரவேற்பும், பூடான் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாரோவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் மலைவழிப்பாதையில் பயணித்து, திம்புவுக்கு மோடி சென்றார். அப்போது சாலையின் இருமருங்கிலும் இந்தியா மற்றும் பூடான் நாட்டு தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் திரண்டு நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தனர். சாலையின் சில இடங்களில் மோடியின் புகைப்படங்களுடன், அவரை வாழ்த்தி பிரமாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
என்று தினமணி எழுதியிருந்தது. இது கிட்டத்தட்ட ஜெயலலிதா மதுரைக்கு விமானத்தில் வந்து இறங்கினால் மதுரை மேயரும் கவுன்சிலர்களும் வரவேற்பதற்கு சமமானது.
ஜெயலலிதா மீதான ‘பாசத்தை வெளிப்படுத்தும் வகையில்’ பள்ளிக் குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து டார்ச்சர் செய்வது போல பூடானிலும் ஆளும் வர்க்கங்கள் தேசியக் கொடி ஏந்திய மகளிரை நிறுத்தி வைத்ததோடு, மோடியின் பிரமாண்ட கட் அவுட்டுகளை கூட செய்து நிறுத்தியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் லேடியானாலும் சரி, டெல்லியில் மோடியானாலும் சரி தம் உருவத்தை பெரிய கட்-அவுட்டுகளாக பார்க்கும் பூரிப்பு நோயை கொண்டிருக்கிறார்கள். அந்த நோயை பக்தி மணத்துடன் செய்வதில் அவர்களது அடிமைகளும் சளைப்பதில்லை.
16-ம் தேதி பூடான் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்தான் மோடி வலிமையான இந்தியா, அமைதியான பூடான் என்றெல்லாம் பேசி நேபாளம், லடாக் எல்லாம் கலந்து அடித்து தனது முதல் வெளிநாட்டு சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இதையடுத்து, பூடான் நாடாளுமன்றத்தில் இருந்தவாறே காணொளிக் காட்சி மூலம் கொலாங்க்சு நீர் மின் திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார். இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் 600 மொகாவாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
என்று தினமணி வெளியிட்ட செய்தியை “இந்த கூட்டு முயற்சியில் நீர் மின் திட்டத்துக்கு பணம் கொடுத்து, காண்டிராக்ட் எடுத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கிட்டத்தட்ட இலவசமாக உறிந்து கொள்வது இந்திய அரசின் பங்கு. பூடான் மக்களை சமாளித்து, திட்டத்தை நிறைவேற்ற இடம், நீர், சட்ட ஒழுங்கு சூழலை ஏற்படுத்தி தருவது பூடான் அரசின் பங்கு.” என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படுகிறது என்று இந்தியா தெரிவித்தது.
பூடான் அரசை பணிய வைக்க இந்திய அரசு விதித்திருந்த தடைகள், பூடான் அரசு முறைப்படி பணிந்த பிறகு இப்போது விலக்கப்பட்டன, அவ்வளவுதான்.
இந்த கவரேஜ் முடிந்து, ஒரு வாரம் யோசித்த பிறகு 18-ம் தேதி எழுதிய தலையங்கத்தில், “புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிரதமரின் முதல் அரசுமுறைப் பயணத்தை உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்துமே கூர்ந்து கவனிக்கும் என்பது தெரிந்து, திட்டமிட்டுதான் பூடானைப் பிரதமர் மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.”
என்று கண்டு பிடித்து சொன்னது தினமணி. உண்மையில் சென்ற ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய அரசு அழைத்திருந்த ஓமன் சுல்தான் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ததும் ஒரு ஃபோனை போட்டு பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நாம்கியால் வாங்சுக்கை அழைத்து உட்கார வைத்தது இந்திய அரசு. அதுதான் இந்தியா பூடானுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவு. குடியரசு தின பட்டாசு வெடிக்க எந்த கூமுட்டையும் வரவில்லை என்றால் ஃபோனை போட்டு இழுத்து வரப்படும் எக்ஸ்ட்ரா வண்டிதான் இந்த பூடான் மன்னர்.
கடைசியாக, பூடான் பாரம்பரிய வழக்கத்தின்படி கைதட்டுதல் என்பது கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காக செய்யப்படுவது. எனவே ‘மாமன்னர்’ மோடி பேசி முடித்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பவில்லை என்று யாரும் எழுதி மானத்தை வாங்கி விடாதீர்கள் என்று பத்திரிகையாளர்களை முன்கூட்டியே எச்சரித்திருந்தது இந்திய தூதரகம்
ஆனால், நாடாளுமன்றத்தில் 25 நிமிடங்களுக்கு இந்தியில் பேசிய மோடி தனது உரையை முடித்ததும் 72 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்மை மறந்து கைத்தட்டியிருக்கின்றனர். அது பாரம்பரியத்தை முறித்து மோடிக்கு அப்ளாஸ் போடவா அல்லது பாரம்பரியப்படியே கெட்ட ஆவியை விரட்டியடிக்கவா என்பது பூடான் மக்களுக்குத்தான் வெளிச்சம்.
இதை
மோடி பூடான் நாடாளுமன்றத்தில் உரையை முடித்த உடன் பாரம்பரியத்தை மாற்றிய எம்.பி.க்கள்: பூடான் பாரம்பரிய வழக்கத்தின்படி ஆமோதிப்பதற்காக எம்.பி.க்கள் கரவொலி எழுப்புவது கிடையாது. இந்நிலையில், பூடான் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் மோடியின் பேச்சு முடிந்தவுடன் எம்.பி.க்கள் அனைவரும் கைகளைத்தட்டி ஆரவாரத்துடன் ஆமோதித்தனர்.
என்று பச்சை பெயின்ட் அடித்து காட்டிய தினமணி தனது தலையங்கத்தை,
ஏற்கெனவே, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் சீனாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நிலையில் பூடானை மையப்படுத்தித் தனது காயை நகர்த்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது!
என்று முடித்திருந்தது.
உசிலையை மையமாக வைத்து, “அஞ்சா நெஞ்சன் அழகிரி அண்ணன், தமிழக அரசியலில் ஒரு முக்கியமான காயை நகர்த்துகிறார் என்று எழுதியதற்கு சமம்” தினமணியின் இந்த பூரிப்பு! அய்யோ பாவம் பூடானை வைத்து இப்படி பூரிக்க வேண்டிய அவசியம் என்ன?
(பூடானில் வேலை செய்த வினவு வாசகர் ஒருவர் அளித்த தகவல்களோடும் எழுதப்பட்டது)
– செழியன்.
மேலும் படிக்க
பூடானில் மொத்தமே ஏழேகால் லட்சம் மக்கள்தான் (மதுரை மாநகரை விட குறைவு, திருநெல்வேலியை விட கொஞ்சம் அதிகம்) —தமிழ்நாட்டின் மா…மாநகர்களை..பூடான்னோடு சீ..சீ.. நோபாளத்…தோடு ஒப்பிடுவதை வளமையாக கண்டீக்கிறேன்.
“”” “” யாரையும் துன்புறுத்தாத, இந்தியாவின் தயவில் வாழும் பிள்ளைப் பூச்சி நாடு பூடானுக்கு போய் அந்நாட்டு அரசின் மகத்தான வரவேற்பை பெற முடிவு செய்திருக்கிறார் 56 இஞ்சு மார்பு படைத்த வீரர் நரேந்திர மோடி “”” “” “”
” ” ” ” குடியரசு தின பட்டாசு வெடிக்க எந்த கூமுட்டையும் வரவில்லை என்றால் ஃபோனை போட்டு இழுத்து வரப்படும் எக்ஸ்ட்ரா வண்டிதான் இந்த பூடான் மன்னர் ” ” ” ”
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த வார்த்தைகள் அமைகின்றது வெல்டன். பொங்கி எழுந்த சிரிப்பினை அடக்க முடியாமல் சிரித்ததில் மொத்த அலுவலகமும் திரும்பி பார்த்தது நான் வினவு படிக்கின்றேன் என்பதை வெளியே சொல்லமுடியாத நிலைமை , காரணம் வினவு , புதிய ஜனாநாயம், புதிய கலாச்சாரம் இவைகளை படிப்பவர்கள் என்றாலே தேச தூரோக குற்றம் போன்று பாவிக்கபடுகின்றது அவாக்களின் கூட்டத்தால், எதோ தீண்டதாகாத புத்தகம் போன்று பாவிக்கின்றனர். ஏன் என்று தெரியவில்லை.
ராஜ நரசிம்ம விவேக்
தஞ்சை
இவ்வளவு பிள்ளைப் பூச்சியா இருக்குற பூட்டானை, பேசாம வளைச்சி போட்டு, இந்தியாவோடு சேர்த்துட்டா என்ன?
வெங்கடேசன், இது சுப்பிரமணிய சாமியின் சிந்தனை.
அப்படியெல்லாம் வளைச்சுப் போட்டுவிட்டால் அப்புறம் எந்த நாட்டிற்கு இவ்வளவு பந்தாவுடன் போய்வர முடியும்?
Smiley போட மறந்து போச்சு. இப்போ போட்டுடுவோம்.
🙂
இந்த ‘பூட்டான் கொண்டான்’ என்ற கட்டுரையை படித்ததும் உண்மையிலேயே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இவ்வளவுக்கு விபரம் தெரியாதவர்களா வினவில் எழுதுபவர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. பிரதமர் மோடி என்ன செய்தாலும் எதிர்க்க வேண்டுமென்ற ஆவலில் சிலர் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.
உண்மையில் ஒரு நாட்டின் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ பதவியேற்றதும் தமது நாட்டுக்கு மிகவும் நெருக்கமான, நட்புறவுள்ள, தமது கொள்கைகளுடன் ஒத்துப்போகும் நாட்டுக்கு முதலில் சென்று, அந்த நாட்டையும், அந்த நாட்டு மக்களையும் கெளரவித்து, அவர்கள் அந்த நாட்டின் நட்புறவை அந்த நாட்டும் மக்களை மிகவும் மதிப்பதாகக் காட்டுவது ஜனநாயக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயம். குறிப்பாக மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் இது வரலாற்று ரீதியாக இருந்து வரும் வழக்கம். இதில் பெரிய நாடு, சிறிய நாடு, பிச்சைக்கார நாடு, பணக்கார நாடு, பிள்ளைப்பூச்சி நாடென்றெல்லாம் பார்ப்பதில்லை.
உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதிகள் பதவியேற்றதும், தமது நாட்டுக்கு வெளியே முதலில் உத்தியோக பூர்வமாக வருகை தரும் நாடு கனடாவாகும். அமெரிக்க உள்நாட்டு யுத்தம் இந்த இரு நாடுகளையும் உருவாக்கிய காரணத்தாலோ அல்லது இரண்டு நாட்டு மக்களின் முன்னோர்களும் ஆங்கிலம் பேசும் பிரித்தானியக் குடியேற்றவாதிகள் என்பதாலோ மட்டுமல்ல, கனடா அமெரிக்காவின் அயல் நாடும், உற்ற நண்பனும் கூட, இந்தக் கட்டுரையாசிரியரின் பாணியில் சொல்வதானால், “அமெரிக்காவின் குடியரசு தின பட்டாசு வெடிக்க எந்த கூமுட்டையும் வரவில்லை என்றால் ஃபோனை போட்டு இழுத்து வரப்படும் எக்ஸ்ட்ரா வண்டிதான் கனடா”.
அதாவது கனேடியர்களும், அமெரிக்கர்களும் என்ன தான் வேறுபாடுகளைப் பற்றிப் பீற்றிக் கொண்டாலும், கனடாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ ஏதாவது நேர்ந்தால், இந்த இரண்டு நாடுகளும் துணையாக ஒரே பக்கத்தில் தான் எப்பொழுதும் இருக்கும்.
அமெரிக்க ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கு வெளியே தமது முதல் பயணத்தை கனடாவுக்குத் தான் மேற்கொண்டனர். அது கனடா- அமெரிக்க நட்புறவையும், கனேடிய மக்களையும் கெளரவிப்பதற்காக தவறாது கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயம். பதின்மூன்று வருடங்களுக்கு முன்னால் முதல் முறையாக, ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஸ், அவர் ஜனாதிபதியாக இரனடாவது முறை பதவியேற்ற பின்னர், அந்த சம்பிரதாயத்தை மதிக்காமல், மெக்சிகோவுக்கு தனது முதல் பயணத்தை மேற் கொண்டதை, கனடாவின் மக்களின் முகத்திலடித்து விட்டதாகப் பலர் கருத்து தெரிவித்தனர். கனேடிய அரசும் தனது அதிருப்தியை அமெரிக்காவுக்குத் தெரிவித்தது. ஈராக் போரில், அமெரிக்காவுடன் இணைய கனடா மறுத்தமைக்கு அமெரிக்காவின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஜோர்ஜ் புஸ், தனது முதலாவது பயணத்தில் மெக்சிக்கோவுக்கு சென்றார். அவரின் செயலை அமெரிக்கர்களும் எதிர்த்தனர்.
இப்படியான ஜனநாயக நாடுகளின் சம்பிரதாயத்தின் படி தான் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு மிகவும் நட்புறவு கொண்ட நாடாகிய பூட்டானுக்கு தனது முதல் உத்தியோக விஜயத்தை மேற் கொண்டார். ஜனநாயக நாடுகளின் சம்பிரதாயத்தை பிரதமர் மோடி கடைப்பிடிப்பது பாராட்ட வேண்டியதொன்று. அவர் இலங்கைக்கு முதலில் போயிருந்தால், இலங்கையைத் தனது நெருங்கிய நட்பு நாடாக மோடி கருதுவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்திருப்பர். இது கூடத் தெரியாமல், இப்படி ஒரு கட்டுரையை எழுதியது மிகவும் அபத்தம். 🙂
உதாரணம்:
1. ஜேர்மன்-பிரஞ்சு நட்புறவைக் கெளரவிக்கும் வகையில் பிரான்சின் ஜனாதிபதி Hollande பதிவியேற்ற சில மணி நேரங்களில் ஜேர்மனிக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
Hollande to meet Merkel just hours after inauguration
http://www.france24.com/en/20120510-francois-hollande-angela-merkel-eurozone-crisis-inauguration/
2. “German Chancellor Angela Merkel began her third term Wednesday by visiting neighboring France, just ahead of a two-day EU summit in Brussels. Talks were likely to focus on Ukraine’s EU-Russia wrangle and French military missions in Africa.Arriving for dinner in Paris with French President Francois Hollande and Foreign Minister Laurent Fabius, Merkel said both countries could “now begin a new epoch. ” Her first trip abroad in her new, third term emphasized the “SPECIAL IMPORTANCE OF FRANCO-GERMAN RELATIONS,” Merkel added.”
http://www.dw.de/merkel-visits-hollande-in-paris/a-17306866
OBAMA’S FIRST FOREIGN VISIT TO BE CANADA
WASHINGTON — Barack Obama will make his first foreign trip as president of the United States to Canada — restoring a long-standing tradition abandoned eight years ago by George W. Bush.
http://www.nationalpost.com/related/topics/Obama+first+foreign+visit+Canada/1164035/story.html
இந்தியா ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு வெண்கலம் வாங்கினால் அதுவே பெரிய சமாச்சாரம்.ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனா காரன் மொத்தமா அள்ளிக்கிட்டு போய் இந்தியாவை அம்பேல் ஆக்கிடுவான்.காமன் வெல்த் போட்டிகளில் தட்டுதடுமாறி பெயருக்கு தங்கபதக்கம் வாங்கும்.இந்தியாவின் வல்லரசு இமேஜை தூக்கிநிறுத்த தெற்காசிய விளையாட்டு போட்டி என்ற பெயரில் இலங்கை,நேபாள்,பூட்டான்,மாலத்தீவு போன்ற சோனி நாடுகளுடன் விளையாடி தங்கபதக்கம் குவிக்கும்.மோடியின் அடுத்த அதிரடி விசிட் மாலத்தீவாகத் தான் இருக்கும்.
எடுத்த எடுப்புலேயே சீனாவ ஒரு கலக்கு கலக்கிட்டாரு பாருன்னு எங்க பக்கத்துக்கு வீட்டு ஆடிட்டர் ரொம்ப சிலாகித்து பேசினார்….நான் வேற நம்பிட்டேன்…ச்சே.
நல்லதோர் அலசல்.
நம்மசொல் கேட்கிறதுக்கும் நாலு அடிமைகள் இருந்தால்தானே நானும் ரவுடிதான்னு (வல்லரசுன்னு) பீத்திக்கலாம்? சோகம் என்னண்ணா இரண்டு அடிமைகள் (பூட்டான், மாலைதீவு) மட்டும்தான் கிடைச்சிருக்காங்க. மீதிக்கு ஆபிரிக்கா பக்கத்தில யாராவது சிக்குறாங்களான்னு பார்க்கணும்.
Bhutan is not a full fledged sovereign country – Bhutan foreign policy is governed by India. Bhutan is more or less like a satellite state of India.
When India annexed Sikkim in 1975, not sure why it did not annex Bhutan.
இன்னும் 10 வருடங்களில் பூடான் பெரிய வளர்ச்சி அடைந்து
இந்தியாவின் வீடு&கடை வாசலில் காவல் காக்கும் வேலையில்,
நேபாளத்தை பின்னுக்கு தள்ளி…..
அதுவரைக்கும் நூடுல்ஸ் சீனா வாயில் விரலை வைத்து ஆட்டிகொண்டிருக்குமா?
[1]இந்தியாவின் வெளியுறவு துறை 1984 முதல் பெற்று வரும் தொடர் தோல்விகள் திரு மோடி அவர்களீன் அரசின் காலத்திலும் தொடரும்.
[2]1984 முதல் தமக்கு என்று ஒரு சுயமான வெளியுறவு துறை கொள்கைகளை வகுக்காத இந்தியா , அமெரிக்க வெளியுறவு துறை கொள்கைகளை நடைமுறை படுத்த அமெரிக்காவுக்கு அடியாள் வேலை செய்யும் போது , வெற்றிகள் அமெரிக்காவுக்கும், அடியாள் வேலைக்கு கூலி இந்தியாவுக்கும் கிடைக்கும்.
அனேகமாக நமது பிரதமர்ர்ர்ர்ர்ர்ர்,டாஸ்மாக் கேசாக இருப்பாரோ?
மோடி வரலாறு தெரியாமல் பேசுவதில் வியப்பு?..
டீக்கடையில் டீ ஆத்தின மனுசன் இப்படித்தான் இருப்பான் அப்பு!
முன்னெல்லாம் யானை மாலை போட்டு மன்னரை தேர்ந்தெடுக்கும்..
இப்ப…நான் ஏதாவது சொல்லப் போக,,,
வல்லரசு கலாம் பாய் கோவிச்சுக்கப் போரார்!