கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வேல்முருகன் திரையரங்க வணிக வளாகத்தை அகற்றுவோம்! கடலூர் ஆர்ப்பாட்டம்.
கடந்த ஆண்டு இறுதி மாதம் நவம்பர், டிசம்பரில் பெய்த கனமழையால் கடலூர் மாடட்டம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த பாதிப்புகளுக்கு கெடிலம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் உட்பட தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளியதும், வீராணம் ஏரியை அறிவிப்பின்றி திறந்ததும் தான் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு முக்கிய காரணங்கள் என்பதை ஆதார பூர்வமாக வினவில் எழுதியிருந்தோம்.
கனமழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களில் பேசிய அறிவுஜீவிகளும் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்றும் அதனை அகற்றுவது தான் தீர்வு என்றும் பேசினர். உயர்நீதி மன்றமும் ஆறு, ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் , சென்னையில் மட்டும் ஏழை மக்கள் வசிக்க கூடிய குடிசைகளை மட்டும் தீவிரமாக அகற்றியது, அரசு. ஆனால் ஏரி, குளம் ஆறுகள் என அனைத்தையும் வரைமுறை இல்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கார்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனம், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் இவற்றை அகற்றாததோடு மட்டுமல்லாமல் அவற்றை பாதுகாத்தும் வருகிறது.
இந்த அரசு ஆக்கிரமிப்பை அகற்றாது மக்களாகிய நாமே ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் போராடங்களை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக, “கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வேல்முருகன் திரையரங்க வணிக வளாகத்தை அகற்றுவோம்” என்ற முழக்கத்தின் கீழ் 11-01-2016 அன்று போராட்டம் அறிவித்து 7 நாட்களுக்கும் மேலாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பேருந்து, ரயில், குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
பிரச்சாரத்தின் போது மக்களின் மனங்களில் குமுறிக் கொண்டிருந்த எரிமலைக் கனல் வெடிப்பதை பார்க்க முடிந்தது. தங்கள் கோபங்களை கொட்டி தீர்த்து நமது பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தனர்.
11-01-2016 அன்று காலை 8 எட்டு மணி முதல் வேல்முருகன் திரையரங்கத்தின் முன் நூற்றுக்கணக்கான போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்கள் குவிந்து காத்திருந்தனர். திரையரங்கை கடந்து செல்லும் எவரும் என்ன நடக்கிறது என்று நின்று கேட்காமல் போகவில்லை. திரையரங்கை சுற்றியுள்ள சந்து பொந்து என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போட்டிருந்தனர். டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி என அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் திரையரங்கை பாதுகாக்க வந்திருந்தனர். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது தமிழக காவல்துறை.
சரியாக 11.30 மணியளவில் “கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வணிகவளாகத்தை அகற்றிடுவோம்” என்று விண்ணதிரும் முழக்கங்கள் போட்டவாறு பேரணியாக வந்த தோழர்களை பாதியிலேயே கைது செய்து வேனில் அடைத்தது, போலீஸ்.
மக்கள் மத்தியில் தோழர்களை தாக்க திராணியற்ற போலிசு வேனில் வைத்து தோழர்களை தாக்கியது . இந்த தாக்குதலை நடத்தியது காக்கி உடை அணியாத பொறுக்கிகளான “கியூ பிரிவு” போலிசு தான்.
தொடர்ந்து, உழவர் சந்தை அருகே உள்ள தெரு வழியாக முழக்கமிட்டவாறு தோழர்கள் வந்ததை சற்றும் எதிர்பார்காத போலிசு திகைத்து போனதோடு மட்டுமல்லாமல் கோபத்தில் சக கீழ்நிலை காவலர்களை கீழ்த்தரமாக திட்டினார் இன்ஸ்பெக்டர். பிறகு தோழர்களை கைது செய்து மற்றொரு வேனில் ஏற்றியது, போலீஸ்.
அடுத்தடுத்து பரபரப்பாக காட்சியளித்தது கடலூர் நகரம்; அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் படபடப்பாகவே இருந்தது காவல் துறை. அவ்வழியாக வருகிற போகிற அனைத்து மக்களையும் மிரட்டி விரட்டியது.
பிறகு உழவர் சந்தைக்கு எதிரே உள்ள தெருவில் இருந்து முழக்கமிட்டவாறே வந்த தோழர்களை பாதியிலேயே கைது செய்து வேறொரு வேனில் ஏற்றி பெரிய நாயகி திருமண மண்டபத்தில் வைத்து மாலை 5 மணிக்கு விடுவித்தது. தொடர்ந்து மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டம் மக்கள் மத்தியில் போராட வேண்டும் என்ற சிந்தனையை விதித்துள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய போலிசு, அரசு அதனை செய்யாமல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று போராடியவர்களை கைது செய்து ஆக்கிரமிப்பை பாதுகாத்து வருகிறது. தாங்கள் ஆள்வதற்கு தகுதி இல்லாதவர்கள் தான் என்பதை நடைமுறையில் நிருபித்து காட்டியுள்ளது. இனியும் இந்த அரசு ஆக்கிரமிப்பை அகற்றும் என நம்பிகொண்டிருப்பவர்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டும்.
வினவு செய்தியாளர்கள்,
கடலூர்.