டெல்லி JNU மீது மோடி அரசின் பாசிசத் தாக்குதல் : திருச்சியில் இந்திய அரசின் நிதி அமைச்சகம் முற்றுகை – புமாஇமு தோழர்கள் கைது!
சென்னை ஐ.ஐ.டி, ஐதராபாத் பல்கலைகழகத்தை தொடர்ந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தையும் ஆக்கிரமிக்கும் வெறியுடன் களமிறங்கியுள்ள RSS, ABVP கும்பலை எதிர்த்து தீரமுடன் JNU மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாணவர் பேரவைத்தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே பேராசிரியர், மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய BJP எம்.எல்.ஏ தலைமையிலான ரவுடிக்கும்பலை கைது செய்யக்கோரியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 13,14 ஆகிய இரு நாட்கள் ABVPன் மாநில மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருட்டினன் உள்ளிட்ட RSS அரை டவுசர் கும்பல் தமிழகத்தில் காலூன்றுவது குறித்து, ABVP என்கிற பெயரில் தாங்கள் வளர்த்து வரும் காலிக்கும்பலை உசுப்பேற்றி விட்டு சென்றுள்ளனர். மாநாடு நடைபெற்ற அன்றே ABVP காலிகளை அம்பலப்படுத்தி மாவட்டம் தழுவிய அளவில் சுவரொட்டி இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பல்வேறு பெயர்களில் தொடர்ச்சியாக போனில் மிரட்டல் விடுத்தனர். அதற்குரிய முறையில் புமாஇமு தோழர்கள் எதிர் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளனர். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத அவர்கள் நம்மை தேச விரோதிகளாக சித்தரித்து பதில் சுவரொட்டி போட்டனர். இதன் தொடர்ச்சியாக டெல்லி JNU மாணவர்கள் விடுத்த போராட்ட அறைகூவலை ஏற்று மீண்டும் சுவரொட்டி பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
18.02.2016 காலை 11 மணியளவில் மோடி அரசை கண்டித்தும், மாணவர் பேரவை தலைவர் கன்னையாவை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் சாலையில் உள்ள இந்திய அரசின் நிதியமைச்சகம், சுங்கம் மற்றும் சேவை வரி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கும் மத்திய அரசு அலுவலகத்தை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் மணிமாறன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மனசாட்சிக்கு அப்சல் குருவை பலியிடமுடியும் என்றால் கொல்லப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் மனசாட்சிக்கு மோடியையும், அமித்சா வையும் தூக்கிலிடலாமா? என்பன போன்ற கேள்விகளை முழக்கங்களாக்கி போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் முழக்கமிட்டனர். அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் முற்றுகை போராட்ட நோக்கத்தை விளக்கி செயலர் மணிமாறன் பேட்டி அளித்தார். பின்னர் அங்கு வந்த கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து வேனிலேற்றி சென்று மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர்.
தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
திருச்சி.
99431 76246.