privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கபா.ஜ.க.வின் பாகிஸ்தானா தமிழ்நாடு ?

பா.ஜ.க.வின் பாகிஸ்தானா தமிழ்நாடு ?

-

“பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொடரப் போவதில்லை” என்று சொன்ன மோடி அரசுக்கு உடனே பதிலடி கொடுத்தார், பாக். அரசின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஸ் அஜீஸ். “ஒருதலைப்பட்சமாக நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாகச் சொல்வதே போர்ப் பிரகடனம் ஆகும். கார்கில், சியாச்சின் போர்களின்போதுகூட சிந்து தடுக்கப்பட்டதில்லை. எனவே, இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் பாக். முறையிடும்” என்றார்.

“போரிடும் பகை நாடாக இருப்பினும், நதிநீரைத் தடுப்பதென்பது அந்நாட்டு குடிமக்களைப் பட்டினிக்குத் தள்ளும் போர்க் குற்றம் என்று கூறுகிறது ஜெனிவா ஒப்பந்தத்தின் 54 பிரிவு. காவிரியைச் சார்ந்திருக்கும் 25 இலட்சம் ஏக்கர் விவசாயத்தை, 40 இலட்சம் தஞ்சை விவசாயிகளை, குடிநீருக்குச் சார்ந்திருக்கும் 19 மாவட்ட மக்களை மரணத்துக்குத் தள்ளும் பாரதிய ஜனதா, தமிழகத்தை பாகிஸ்தானைவிடக் கொடிய பகைநாடாக நடத்ததுகிறதென நீங்கள் கருதவில்லையா?

பாகிஸ்தானுக்கு எதிரான போர்ப் பதற்றம் நிலவுகின்ற சூழலிலும் வாகா எல்லை வழியாக சுமார் 185 லாரிகளில் சரக்குகள் வந்து போகின்றன; பேருந்துகள் செல்கின்றன. ஆனால், கர்நாடக எல்லைக்குள் தமிழகப் பேருந்துகளோ, லாரிகளோ அனுமதிக்கப்படுவதில்லை. தடுப்பவர்கள் கன்னட அமைப்பு என்ற போர்வையில் உலவும் பாரதிய ஜனதா காலிகள். ஒருமைப்பாடு பேசும் இந்தப் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானைக் காட்டிலும் கேவலமாகத் தமிழகத்தை நடத்துவதை நீங்கள் காணவில்லையா?

தமிழர்கள் கட்டிய கோவிலில் எந்தப் பார்ப்பான் மணியாட்ட வேண்டும் எனத் தீர்ப்பு கூறவும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தின் மருத்துவ இடங்களைத் ‘தேசியமயமாக்கவும், பேரழிவு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைக்கவும், சேதுக்கால்வாய்க்காக நடைபெற்ற கடையடைப்பைக் காட்டி, தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிடுவதாக மிரட்டவும் நாக்கைச் சுழற்றிக் கொண்டு பேசிய உச்சநீதி மன்றம், காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தைத் தொடர்ந்து அவமதித்துவரும் கர்நாடக அரசிடம் வாலைக் குழைக்கிறதே, சட்டம், நீதி என்ற இந்தப் பித்தலாட்டத்தை இனிமேலும் நாம் நம்புவதும், கட்டுப்படுவதும் மடமையில்லையா?

எல்லா நெறிமுறைகளையும் மீறி சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், வெங்கய்யா நாயுடு என ஒரு கும்பல், கர்நாடகத்துடன் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்கு எதிராகச் சதி செய்கிறது. மோடி தங்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகிறார் கர்நாடக பா.ஜ.க.வின் ஜெகதீஷ் ஷெட்டர். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் உத்தரவிட உச்சநீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை; அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் மத்திய அரசின் விருப்பம் என்று உச்சநீதி மன்றத்தில் பேசுகிறது மோடி அரசு. “இதைவிட காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு கிடையாது என்று மைய அரசு நேரடியாகச் சொல்லியிருக்கலாம் என்று பா.ஜ.க. அபிமானியான தினமணியே புலம்புகிறது. இது தமிழ்நாட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் நடத்தும் போர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?

பா.ஜ.க.வும் காங்கிரசும் தமிழகத்தில் தலையெடுக்கவே இயலாததுதான், இந்த தேசியக் கட்சிகளின் ஓரவஞ்சனைக்கு காரணம் என்பது பகுதியளவே உண்மை. தமிழகத்தின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு, திராவிட இயக்க மரபுதான் இந்த மதவெறியர்கள் இங்கே காலூன்ற முடியாததற்குக் காரணம். இவர்களை இந்துக்களின் பிரதிநிதிகளாக எண்ணியிருந்தவர்களும் கோவையில் அவர்கள் நடத்திய காலித்தனத்தைப் பார்த்தபின் தெளிந்து விட்டார்கள். ஆர்.எஸ். எஸ். பா.ஜ.க. கும்பல்தான் தமிழ்ச் சமூகத்தின் கொடிய எதிரி. இந்தச் செய்தியைத் தமிழகம் முழுதும் கொண்டு செல்வோம். எதிரிக்குரிய இடத்தை அவர்களுக்குக் காட்டுவோம்.
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க