privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு ! - மதுரையில் கருத்தரங்கம்

கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு ! – மதுரையில் கருத்தரங்கம்

-

பேராசிரியர் சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய் ! கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு !

நாள் : ஏப்ரல் 02, 2017, ஞாயிறு மாலை 4.30 மணி.
இடம் : வேலாயுத நாடார் திருமண மகால், கே.கே நகர், மதுரை.

தலைமை : சே. வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர். ம.உ.பா.மையம்
சிறப்புரை : வழக்கறிஞர் பாலன், பெங்களூரு
நன்றியுரை : ம.லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்டச் செயலர். ம.உ.பா.மையம்

அன்பார்ந்த நண்பர்களே…

கடந்த மார்ச் 7, 2017 அன்று பேராசிரியர் தோழர் சாய்பாபா உள்ளிட்ட அய்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகாராஷ்டிரா மாநில, கட்ஜ்ரோலி மாவட்ட நீதிமன்றம். மின்னணு, கணினி சாட்சியங்களை மட்டுமே வைத்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவியல் நீதிபரிபாலன முறை மீதான நம்பகத்தன்மையைத் தகர்த்திருக்கிறது. அரசின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோரை மிரட்டும் இத்தீர்ப்பு குறித்து நாடுதழுவிய விவாதமும்,எதிர்ப்பும் அவசியம். இல்லையேல் நாளை அணு உலை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீனவர் படுகொலை, கோக் எதிர்ப்பு எனப் போராடும் மக்கள் அனைவருக்கு எதிராகவும் இது போன்ற தீர்ப்புகள் விரிவாக்கப்படும். டாஸ்மாக்கை எதிர்த்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதையும், நீதித்துறை ஊழலை எதிர்த்ததற்காக 7 தமிழக வழக்கறிஞர்களுக்கு மின்னணு சாட்சியங்கள் அடிப்படையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருப்பதையும் நாம் மறக்கமுடியாது.

பேராசிரியர் சாய்பாபா யார்?

டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்த சாய்பாபா, அரசின் பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடி வந்தார். மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்ற இந்திய அரசு, அதற்குத் தடையாய் இருந்த பழங்குடி மக்களைக் காட்டைவிட்டு அகற்றும் நோக்குடன் மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்ற பெயரில் “காட்டு வேட்டை” என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது. துணை இராணுவப் படைகள் மூலம் 600 பழங்குடி கிராமங்களைக் கொளுத்தியது. 50,000 பழங்குடி மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏராளமானோர் கொல்லப்பட்டு, பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். அரசின் இந்த அநீதிகளை எதிர்த்து காந்தியவாதி ஹிமன்சு குமார் உள்ளிட்ட பலரும் களம் இறங்கினர். அதில் முன்னணியாய் இருந்தவர் சாய்பாபா. இவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கால் அரசின் அத்துமீறல்கள் அம்பலமாயின. தொடர் போராட்டங்களால் இன்றுவரை கனிம வளங்களை எடுக்கமுடியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே சாய்பாபா போலீசால் கடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 90% உடல் ஊனமுற்றவரான சாய்பாபா, சக்கர நாற்காலியில் மட்டுமே செல்ல முடிந்த மாற்றுத் திறனாளி. சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலையிலும், மக்களின் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அரியதொரு போராளி.

அரசு தரப்பு வழக்கு

“சாய்பாபா தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் அமைப்பான புரட்சிகர ஜனநாயக முன்னணியின் நிர்வாகி. அரசுக்கு எதிரான வெறுப்பை, வன்முறையைத் தூண்டும் நோக்கோடு பிரச்சாரம் செய்தார். மாவோயிஸ்டுகளின் புத்தகங்களை வைத்திருந்தார், கடிதம், இ-மெயில் தொடர்பும் இருந்தது. இதற்கு அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட சி.டி, மெமரி கார்டு, துண்டறிக்கைகள், பென் டிரைவ், லேப்டாப் ஆகியவை ஆதாரங்கள். மாவோயிஸ்டுகள் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள். எனவே சாய்பாபாவின் இந்த நடவடிக்கைகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்,1967 பிரிவுகள் 13,18,20,38,39-ன் கீழ் குற்றம்” -இவைதான் சாய்பாபாவுக்கு எதிராக அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள்.

விசாரணையும், சாட்சியமும்

வழக்கில் நேரடி சாட்சி யாரும் இல்லை. மாறாக, “சாய்பாபா வீட்டில் கைப்பற்றப்பட்ட சி.டி, பென் டிரைவ், லேப்டாப் ஆகியவை உண்மையானவை” என்று காட்டுவதற்கான சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டனர். விசாரிக்கப்பட்ட 23 சாட்சிகளில் 10 பேர் காவல்துறையினர்; 8 பேர் அரசு அதிகாரிகள்; 4 பேர் போலீசார் அழைத்துச் சென்ற மகஜர் சாட்சிகள்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில் மட்டும் தண்டனை தருவது சரியா?

சாய்பாபா வீட்டில் சோதனை செய்யும்போது அவர் வீட்டில் இல்லை. அரசு சாட்சிகள் 2,4,5,15-ன் படிசாய்பாபா வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது சாட்சிகளுக்குப் படித்துக் காட்டப்படவில்லை; கைப்பற்றப்பட்ட பொருட்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பாக்ஸ் நீதிமன்றத்தில் இல்லை; நீதிமன்றத்தில் உள்ள பாக்ஸை சாட்சி பார்த்ததில்லை; சீலும், கையெழுத்தும் இல்லை. சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்கள் தடயவியல் துறைக்குச் செல்லும் முன் போலீஸ் பாதுகாப்பில் பல நாட்கள் இருந்துள்ளன. 26.02.2014-ல் சர்ச் வாரண்ட் வாங்கி ஏழு மாதங்கள் கழித்து சோதனை நடத்தியுள்ளனர். இது தவிர சாய்பாபா வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் மாவோயிஸ்ட் கட்சித் தீர்மானங்கள் உள்ளிட்ட எவையும் ரகசிய ஆவணங்கள் அல்ல. அவற்றில் பலவும் மாவோயிஸ்டு கட்சியின் வெப்சைட்டில் உள்ளவை தான் என்பதை விசாரணை அதிகாரி குறுக்கு விசாரணையில் ஒத்துக் கொண்டுள்ளார். மேற்கண்ட சாட்சியத்தைப் படிக்கும் எவரும் டிஜிட்டல் ஆவணங்களைத் திருத்துவது, மாற்றுவது எளிது என்பதை ஏற்பார்கள்.

மாவோயிஸ்டு என்பதற்காக ஆயுள் தண்டனை விதிக்கலாமா?

ஒரு வாதத்திற்காக, சாய்பாபாவிற்கு மாவோயிஸ்ட்டுகளுடனான தொடர்பு நிரூபிக்கப்பட்டதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியுமா? தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருப்பதோ, அதை ஆதரிப்பதோ குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. மாவோயிஸ்டு என்பதற்காக மட்டும் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. சாய்பாபாவின் நடவடிக்கையால் குறிப்பிட்ட வன்முறை சம்பவம் நிகழ்ந்தது என்பது அரசு தரப்பு வழக்கே அல்ல. அவர் மாவோயிஸ்டுகளைக் கருத்து ரீதியாக ஆதரித்தார் என்பதற்காக, அதாவது, அவரது சிந்தனைக்காக ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம். உடல் ஊனமுற்றாலும் சிந்தனை ரீதியாக சாய்பாபா வலுவானவர் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி. மேலும் “மாவோயிஸ்டு அமைப்பு உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொல்லியுள்ளார். மாவோயிஸ்ட் அமைப்பு இன்று நகரத்திலும் வளர்ந்து வருகிறது.அதைத் தடுக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்ஜ்ரோலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததற்கு மாவோயிஸ்ட் அமைப்பே காரணம். எனவே சாய்பாபா உள்ளிட்டோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். சட்டப்படி ஆயுள் மட்டுமே விதிக்க முடியும் என்பதால், ஆயுள் தண்டனை விதிக்கிறேன்” என்கிறார் நீதிபதி. துப்பாக்கி எடுத்துச் சுடாததுதான் பாக்கி!

கொடூர UAPA சட்டம்

சாய்பாபா மீது புனையப்பட்ட வழக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழானது. இந்தக் கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.1967-லிருந்து இன்றுவரை “ஊபா” சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள்,மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊபா சட்டப்படி “நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரான செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றம். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு. இச்சட்டத்தில்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆஜரான மதுரை வழக்கறிஞர் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இயற்கை வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் மக்கள், மக்களை ஆதரிக்கும் அமைப்புகள், அறிவுத்துறையினர் ஆகியோரை குறிவைத்துப் பாய்கிறது ஊபா சட்டம். நேற்று பிநாயக் சென், இன்று சாய்பாபா எனத் தொடர்கிறது. பாசிசத்தின் கரங்கள் அரசைத் தாண்டி நீதிமன்றங்களை நோக்கி நீள்கின்றன!

எனவே, நாட்டை, மக்களை, ஜனநாயகத்தை, உரிமைகளை நேசிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் இது. இணைந்து சிந்திப்போம், விவாதிப்போம். சாய்பாபா விடுதலைக்குக் குரல் எழுப்புவோம் ! அநீதிகளுக்கு எதிரான போரை உறுதியுடன் தொடர்வோம் !

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 94434 71003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க