கர்நாட முதலமைச்சரின் சொந்த ஊரான தவரகட்டி கிராமத்தில் ஒரு துப்புரவுத் தொழிலாளி சாக்கடைக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் சாக்கடைக் குழிக்குள் இருந்து வெளி வருகிறார். வெளிவந்து தன் முகத்தை துடைத்துக் கொண்டு, சில நொடிகளில் இழுத்து மூச்சை பிடித்துக் கொண்டு சாக்கடைக் குழிக்குள் மீண்டும் இறங்குகிறார். அந்த துப்புரவுத் தொழிலாளியின் பெயர் கணேஷ்.
அவரை சாமுண்டி ஹில்ஸ் பஞ்சாயத்து தலைவி கீதாவும், பி.டி.ஓ ஆனந்தும் சாக்கடைக் குழாயின் துவாரத்துக்குள் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இது போன்ற வேலையில் ஒருவரை ஈடுபடுத்துவது என்பது சட்டவிரோதம், மனிதநேயமற்ற செயல் இவ்வாறு கட்டாயப்படுத்தப் படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், என பல முறை நீதி மன்றங்கள் சொல்லி இருந்தாலும் அவை மதிக்கப்படுவதில்லை. காரணம் துப்புறவுத் தொழிலாளிகள் குறித்த அரசு – சமூகத்தின் பார்வையே அவர்களை விலங்குகள் போல நடத்துவதாக இருக்கிறது.
இந்த வீடியோ வெளியானதால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் செய்தி வெளியாகாமல் தினமும் பல தொழிலாளிகள் கழிவுக் குழாயினுள்ளே தங்கள் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
துப்புறவு தொழிலாளிகள் கடவுளின் பணியைச் செய்கிறார்கள் என்று நியாயப்படுத்திய மோடி தனது மேட்டுக்கடி பரிவாரங்களோடு ஸ்வச்ச பாரத் சீன் போட்டு விளம்பரப்படுத்தினார்.
குப்பைகளை கொண்டு வந்து அள்ளுவது போல ஃபோட்டோ எடுக்கும் இக்கோமகன்களை இந்தக் குழியில் இறக்கி சுத்தப்படுத்தினால் என்ன?
தொடர்புடைய செய்திகள் :
- Gram panchayat president forces worker to enter manhole in Mysuru
- Mysuru panchayat official allegedly forced worker to enter blocked manhole