ராஷ்டிரிய கோகுல் மிஷன் என்ற மத்திய பி.ஜே.பி அரசின் கால்நடை வளர்ப்புத் திட்டத்திற்காக மாடுகள் வாங்க தமிழக அரசு அதிகாரிகள் ராஜஸ்தான் சென்றனர். இந்த திட்டத்திற்காக ராஜஸ்தான் ஜெய்சல்மார் மாவட்டத்தில் வெவ்வேறு நபர்களிடமிருந்து நாட்டு மாடுகள் தமிழக அரசால் வாங்கப்பட்டு ஐந்து லாரிகளில் 80 மாடுகள் ஏற்றப்பட்டன. இந்த மாடுகள் தமிழகத்தி உள்ள கால்நடை வளர்ப்பு மையத்திற்கு கொண்டு செல்வதற்காக பயணத்தை துவக்கின.தமிழகத்தை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவரும் அவரது ஐந்து உதவியாளர்களும் அந்த லாரிகளோடு வந்து கொண்டு இருந்தனர்.
முறையான ஆவணங்களுடன் இந்த மாடுகள் எடுத்துச் செல்லப்பட்டாலும் கூட ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைச் சேர்ந்த பாசுப்பாதுகாப்பு இயக்க ரவுடிகள், அதிகாரிகளுக்கு விளக்குவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் அந்த ஐந்து லாரிகளை தாக்கியுள்ளனர். அதோடு பத்து மாடுகள் இருந்த ஒரு லாரியை கால்நடைகளுடன் எரிக்கவும் முயன்றுள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் பி.ஜே.பி ஆட்சி நடக்கும் தைரியத்தில் சும்மாவே வெறியாட்டம் போடும் பசுப்பாதுகாப்பு காவிக் குரங்குகள் இப்போது அரசு உத்திரவும் வந்திருப்பதால் கள் வெறியோடு மாடுகளை எங்கே பார்த்தாலும் ஊளையிட்டவாறு ஓடுகின்றன. விட்டால் இங்கே அவர்கள் மாடுகளோடு லாரிகளையும் எரித்திருப்பார்கள்.
எங்களை தாக்கிய கூட்டத்தினரிடம் ஆவணங்களை காட்டி நாங்கள் அனுமதி பெற்றிருப்பதை எடுத்துச் சொன்னோம், ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. மேலும் அவர்களில் பெரும்பாலானோர் குடித்திருந்தனர் என்று கேவர் ராம் என்ற லாரி ஓட்டுனர் தெரிவித்துள்ளார். புனிதத்திற்கு கோமாதா மூத்திரத்தை குடிக்கும் கூட்டம் கொலை வெறிக்கு சோம்பானத்தை உள்ளே தள்ளியிருக்கிறது.
லாரிகள் பார்மர் நகரைக் கடந்தவுடன் 15- 20 பேர் கொண்ட கும்பல் லாரியை மடக்கி தாக்கியுள்ளது. இத்தனைக்கும் லாரியில் “தமிழக அரசுப் பணிக்காக (ON DUTY GOVERNMENT OF TAMILNADU)” என்று ஒட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ராஜஸ்தான் காவல்துறை இதுவரை 7 பேரை கைது செய்துள்ளது.
ஒரு மாநில அரசு சட்டப்பூர்வமாக வாங்கிய மாடுகளைக் கூட வாங்கி கொண்டு வர முடியவில்லை என்றால் என்ன சொல்ல? போகிற போக்கைப் பார்த்தால் தென்னிந்தியா கூட இந்துத்துவா கூட்டத்திற்கு பாகிஸ்தான் ஆகிவிடும் போல. இவ்வளவு நடந்தும் சொரணையற்ற எடப்பாடி அரசு கம்மென்று இருக்கிறது.
ஏற்கனவே மாடு விற்பனை தடை உத்திரவு வந்த போது அதை முழுக்க படித்துவிட்டு கருத்து தெரிவிப்பதாக கூசாமல் கழண்டுகொண்ட கூட்டம் இப்போது மட்டும் என்ன செய்து விடப் போகிறது?