privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு !

போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு !

-

மிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சுமார் 22 ஆயிரம் பேருந்துகளை இயக்கி வருகின்றன. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மிக அதிகமாக  போக்குவரத்து சேவையை மக்களுக்கு அளிப்பதில் தமிழக போக்குவரத்துக் கழகங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.

தமிழக மக்களின் நலன் கருதி நஷ்டமான வழித்தடங்கள் என்ற போதிலும் கிராமப்புறங்களுக்கு பேருந்து இயக்கம், நகரப்பேருந்துகளாக 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு இலவச பயணச்சேவை அளிக்கப்பட்டு சேவைத்துறை என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் இழப்பீட்டை அரசு ஈடுகட்டவேண்டும். ஆனால் அரசு போதுமான நிதியுதவி வழங்காத காரணத்தால் போக்குவரத்துக் கழகங்களின் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் காலாவதியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் போக்குவரத்துக் கழகங்களின் நிதிபற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை நிதி போன்றவற்றை செலவு செய்வதுடன் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் ஆயுள் காப்பீடு, அஞ்சல் காப்பீடு, கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடிக்கப்படும் பணம் போன்றவற்றையும் செலவு செய்துவிட்டது அரசு.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்கவேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை உரிய கணக்கில் சேர்க்கவேண்டும் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசிடம் கடந்த 2016 அக்டோபர் முதல்  தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் இந்த கோரிக்கையை ஏற்று  உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 2017 மே மாதம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இவ்வேலைநிறுத்தத்தையொட்டி மே மாதம் 16-ம் தேதியன்று கல்வித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு 2017 செப்டம்பர் மாத இறுதிக்குள் நிலுவைத்தொகைகள் முழுமையாக வழங்கப்படும் என்றும், பணியாளர்களின் சம்பளத்தில் சட்டப்பூர்வமாக பிடித்தம் செய்யப்பட்ட  தொகையை சம்பந்தப்பட்ட துறைகளில் செலுத்துவது குறித்து கொள்கை ரீதியான முடிவெடுத்து 3 மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும், போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்ததால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தன.

கடந்த 2017 மே மாதம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த போது அரசு செலுத்தவேண்டிய நிலுவைப் பணத்தின் விவரங்கள்.

இதற்கு பின்பு பலகட்ட பேச்சு வார்த்தைகள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வேலைநிறுத்தத்தின் போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி 3 மாத காலம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும் கூட போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான நிதியை வழங்கவோ, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தை செலவழிப்பதை நிறுத்திடவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி பணம் ரூ.2200 கோடி, பங்களிப்பு ஓய்வூதிய பணம் ரூ.1700 கோடி, பணிக்கொடை நிதி ரூ.750 கோடி, கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணம் ரூ.300 கோடி, விடுப்பு சம்பளம் ரூ.300 கோடி என சுமார் ரூ.5500 கோடி தொழிலாளர்களின் பணம் சட்டவிரோதமாக செலவு செய்யப்பட்டுவிட்டது. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பணம் சுமார் ரூ.1200 கோடி நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் நடந்த வேலைநிறுத்தத்தின் போது அரசு ரூ.1250 கோடி நிதி வழங்கியது. அதன் பிறகு நிர்வாகச் செலவிற்காக தொழிலாளர்கள் பணம் ரூ.600 கோடி உரிய கணக்கில் செலுத்தப்படாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் இது சம்பந்தமாக எவ்வித உத்தரவாதமும் கொடுக்க அரசோ, கழக அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஊதிய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் ஊதியம் மற்ற அரசுத்துறை ஊழியர்களை விட குறைவாக உள்ளது. அதை உயர்த்த வேண்டுமென  வலியுறுத்திய போதும், பழைய ஊதியத்தை தான் வழங்குவோம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.  இது மிகப்பெறும் சுரண்டலாகும்.

தொழிலாளர்களின் முக்கியமான கோரிக்கைகளான 01.04.2003க்குப் பின் பணிநியமனம் செய்யப்பட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் அனைத்தும் மறுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தினக்கூலி ஊதியம், மிகைநேர ஊதியம் சம்பந்தமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் அமலாக்க மறுத்து வருகிறது அரசு.

இந்த  தொழிலாளர்களுக்கு பழைய பென்சன் பொருந்தாது. பி.எப், கிராஜூட்டி பொருந்தாது என்று மறுக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பி.எப், கிராஜூட்டி இல்லை என்று மறுப்பது சட்ட விரோதம். எனவே இந்த இரண்டு பிரச்சனைகளில் உடனடியாக தீர்வு காணவேண்டும் என்ற  பிரதான கோரிக்கையும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.

தொழிற்சங்கங்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக அரசு, தான் விரும்பும் வகையிலான ஒப்பந்தத்தை உருவாக்க, பல ’லெட்டர் பேட்’ சங்கங்களைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக, அத்தகைய சங்கத்தவர்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாக வேலை பார்க்காமல் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள்.

ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியாமல் ஊதியம் பெற்று வருகின்றனர். இது தவறு என சுட்டிக்காட்டி வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலனை மறுப்பதற்காக மேலும் சில சங்கங்களுக்கு அனுமதி கொடுத்து மிக மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது அரசு.

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நிதியால் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நிதியில் செயல்படும் இம்மருத்துவக் கல்லூரியை அரசு எடுத்துக் கொள்வதாக முதலமைச்சர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.

மேற்கண்ட சூழ்நிலையில் போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும், தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளை தீர்க்கவும் அரசை வலியுறுத்தி 09.09.2017 அன்று வேலைநிறுத்த அறிவிப்பு விடுத்து பிறகு போராட்டத்தை தள்ளி வைத்தன தொழிற்சங்கங்கள். மீண்டும் தங்களுக்கு சாதகமான சங்கங்கள் மூலமாக  பிரச்சினையை முடித்துக்கொள்ள நினைத்தது  அரசு.

இந்நிலையில் தொழிற்சங்கங்கள்  போராட்டம் என அறிவித்தவுடன்  25.09.2017 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அரசு. பேச்சுவார்த்தையில் 46 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. இது குறித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் கூறுகையில், ஊதிய உயர்வு பற்றி நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு முடிவெடுக்கலாம் என்றும், இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1200 தருவதாகவும், ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய தொழிலாளர்கள் வைப்பு நிதி, ஓய்வூதிய நிதி ஆகியவை குறித்து  வரும் அக்டோபர் 9ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பித்துகொள்வதாகவும் அரசு கூறியுள்ளது.

தற்போது பண்டிகை காலம் என்பதால் தற்போது வேலை நிறுத்தப் போராட்டம் செய்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், மக்களின் நலன் கருதி போராட்டத்தை தள்ளி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

நீட் மற்றும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்  போராட்டத்தில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு, முழுக்க முழுக்க அரசின் பக்கம் தான். இந்தநிலையில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று தொழிற்சங்கங்கள் எதிர்பார்ப்பது பகல் கனவே.  அரசிடம் கோரிக்கை வைத்து பயனில்லை. தொழிலாளர்கள் மக்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைக்காகவும், தங்களின் உரிமைக்காகவும் போராடுவது ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும்.

– வினவு செய்தியாளர்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க