
24.04.2026
2006 மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு:
நீதித்துறையின் இந்துராஷ்டிரத்திற்கான தீர்ப்பு!
பத்திரிகைச் செய்தி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாலேகானில், 2006 செப்டம்பர் 8 “ஷப்-இ-பராத்” எனும் இஸ்லாமியர்களின் புனித நாளன்று, இஸ்லாமியர்கள் தொழுகைக்காக கூடியிருந்த மூன்று இடங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 31 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதுடன், 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இப்படுபாதகச் செயல் மீதான விசாரணையானது மாநில பயங்கரவாதத் தடுப்புப் படை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. என சுமார் இருபது ஆண்டுகளாக இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22 அன்று (புதன்கிழமை) குற்றத்தை நிரூபிக்க நம்பகமான ஆதாரம் இல்லையென கூறி இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய நீதித்துறை இஸ்லாமிய மக்களுக்கு மீண்டுமொரு துரோகத்தை இழைத்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
2006 மாலேகான் குண்டுவெடிப்பு போன்று, 2008 இரமலான் மாதத்தில் செப்டம்பர் 29 அன்று மாலேகானிலுள்ள மசூதியருகே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு ஆறு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த பயங்கரவாதத் தடுப்புப் படை, 2006 மற்றும் 2008 மாலேகான் குண்டுவெடிப்புகள், 2007-இல் சம்ஜௌத்தா விரைவு ரயில் குண்டுவெடிப்பு, அதே ஆண்டு மே மாதத்தில் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, நவம்பரில் ராஜஸ்தானின் அஜ்மர் தர்கா குண்டுவெடிப்பு என பல குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்புடைய காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சிகர உண்மையை வெளிக்கொணர்ந்தது.
மேலும், மேற்குறிப்பிட்ட குண்டுவெடிப்புகளுக்கு இலக்குகளை தீர்மானித்துக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலமானது இக்குண்டுவெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்தியது. இது, “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற ஒருதலைபட்ச பார்வைக்கு மாறாக, இந்தியாவில் உருவெடுத்துள்ள “காவி பயங்கரவாதத்தை” தோலுரித்ததுடன், இதன் பின்னாலிருந்த சர்வதேச வலைப்பின்னலையும் இந்திய இராணுவ அதிகாரிகளின் கூட்டையும் அம்பலப்படுத்தியது.
இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் அம்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், இஸ்லாமிய வெறுப்பு தீவிரப்படுத்தப்பட்டு, எவ்வித ஆதாரமுமின்றி இஸ்லாமியர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையிலும் முதலில் இஸ்லாமிய இளைஞர்களே கைது செய்யப்பட்டனர். அசீமானந்த் அளித்த வாக்குமூலத்திற்கு பிறகே தற்போது விடுதலையாகியுள்ள நான்கு காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்திய இவ்வழக்கை விசாரித்துவந்த பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரி ஹேமந்த் கர்காரே, 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு காவி கும்பலின் ஆதிக்கத்தால் பயங்கரவாதத் தடுப்பு படையின் விசாரணை நிறுத்தப்பட்டு, 2011-இல் இவ்வழக்கு என்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்டது. 2014-இல் பாசிச பா.ஜ.க. கும்பல் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு குண்டுவெடிப்பு வழக்குகளிலும் போதிய ஆதாரம் இல்லையென கூறி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தாலும் பிற நீதிமன்றங்களாலும் காவி பயங்கரவாதிகள் ‘குற்றமற்றவர்களாக’ விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்தாண்டில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரும் “சந்தேகத்தின் பலனில்” விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்தான், 2006 மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பானது இக்குண்டுவெடிப்புகளை நடத்தி இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து இந்தியாவெங்கும் காலூன்றுவதற்கான சதியை அரங்கேற்றியது.
இந்த சதி பொதுவெளியில் வெட்டவெளிச்சமாகிவிட்ட போதிலும் இந்திய நீதித்துறை குற்றவாளிகளை விடுவித்து காவி பயங்கரவாதத்திற்கு பல்லக்குத் தூக்குகிறது. இது, இந்திய நீதித்துறை ‘இந்துராஷ்டிரத்திற்கான நீதித்துறை’யாக மறுவார்ப்பு செய்யப்பட்டு வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாசிச கும்பலை வீழ்த்தி அமைக்கப்படும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிலேயே காவி பயங்கரவாதிகளை தண்டித்து உண்மையான நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை நிரூபிக்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




