Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 629

விழி பிதுங்கிய மின்வாரியம் – HRPC சமர் – முழு அறிக்கை

3

மின்கட்டண உயர்வு பற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பாக நெல்லையில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் HRPC-யின் தலையீடு குறித்து நேற்று (அக்டோபர் 30, 2014)  சுருக்கமான செய்தி  வெளியிட்டிருந்தோம். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உண்மையான நோக்கங்கள் அவர்களிடமிருந்தே வெளிப்பட்ட இந்தக் கூட்டம் பற்றிய விரிவான அறிக்கையை தருகிறோம்.

மிழகத்தில் மின்கட்டண உயர்வை அமுல்படுத்தும்முன்பு நடத்தப்படும் கருத்துக்கேட்பு சடங்கை இம்முறை மொத்தம் மூன்றே இடங்களில் (சென்னை, நெல்லை, ஈரோடு) நடத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுத்திருந்தது.

திட்டமிட்டபடி நெல்லையில் கடந்த 27.10.2014 அன்று கூட்டம் நடந்தது. ஆனால் அதிகாரிகள் விரும்பியபடி வெற்றுச்சடங்காக நடத்தவோ, சுமுகமாக கூட்டத்தை முடிக்கவோ முடியவில்லை.

சுமார் 8 மாவட்டத்திற்கும் சேர்த்து நடத்தப்பட்ட இக்கூட்டம் நடக்கும் இடம், நேரம் பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் ஒரு நாள் முன்னதாகத்தான் வெளியிடப்பட்டது. அதுவும் ஒரு பெட்டிச் செய்தியாகத்தான். அதற்கேற்ப மொத்தம் 100 பேர் வந்தாலே அதிகம் என்று கருதி ஒரு சிறிய அரங்கையே ஏற்பாடு செய்திருந்தனர். கணக்குகாட்ட வசதியாக மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்களையும், காண்ட்ராக்டர்கள் உள்ளிட்ட அடியாட்களையும் முன்கூட்டியே அமரவைத்திருந்தனர். அரங்கிற்கு உள்ளும் வெள்ளேயும் உளவுத்துறையினரும் விரவி இருந்தனர்.

மின்கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டம்

கருத்து சொல்பவர்களும், பார்வையாளர்களும் தனித்தனி இடத்தில் பதிவுசெய்த பின்னரே அரங்கிற்குள் அனுமதித்தனர். இந்த அச்சுறுத்தலையும் தாண்டி 57 பேர் கருத்து சொல்பவர்களாக பதிவு செய்தனர். மக்களின் கருத்தையும் கேட்டு பேசும் விதமாக 10 பேர் பேசியபின் ஒருவர் வீதம் என நான்கு பெயரை நம் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சார்பாக (அமைப்பு பெயரை குறிப்பிடாமல்) நாம் பதிவு செய்தோம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நம் கருத்தை முழுமையாக சொல்ல வாய்ப்பு தராமலும், கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமலும் போகக்க்கூடும் என்று எதிர்பார்த்தோம். எனவே நமது கருத்தை கேள்வி பதில் பாணியில் ஒரு பிரசுரமாக தயார்செய்து 150 பிரதிகளை கொண்டு சென்றோம். கூட்டம் தொடங்கியவுடன் கருத்து சொல்ல வந்த பொதுமக்களுக்கும், ஏற்கனவே அமர்ந்திருந்த மின்வாரியத்தினருக்கும் மற்றும் ஊடகத்தினருக்கும் பிரசுரத்தை பரவலாக வினியோகித்தோம்.

நாங்கள் விநியோகித்த பிரசுரம்;

மின்கட்டண உயர்வு யாருக்காக?  எதற்காக கருத்து கேட்பு நடக்கிறது?

தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி. அந்த தீயசக்தியின் பெயர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். தனியார் மின் உற்பத்தி முதலாளிகளிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு செலவழிக்க வேண்டிய சுமார் ரூ 18,000 கோடி மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு வாங்கியதால் பட்ட கடனுக்கு வட்டி ரூ 2,000 கோடி கட்டுவதை உறுதி செய்வதற்குத்தான் இந்த ரூ 6,800 கோடி ரூபாய் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஆணையம். இதையெல்லாம் நம் நன்மைக்காக நம் ஒப்புதலுடன் செய்வதாக காட்டாவிட்டால் இது ஜனநாயகமாகாதல்லவா? அதற்க்குத்தான் கருத்துக் கேட்பு நாடகம் பெயரளவுக்கு மூன்றே ஊர்களில் நடத்தப்படுகிறது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது?

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உலக வங்கியின் ஆணைக்கேற்ப மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார் மயமாக்கும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பாகும். கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியற்றை மாநில அரசிடமிருந்து பிடுங்கி இந்த அமைப்புக்குக் கொடுப்பதற்கான சட்டம் 1998 பா.ஜ.க அரசினாலேயே இயற்றப்பட்டு விட்டது.

கட்டண உயர்வின் சுமையை அரசே ஏற்கும் என்று ‘அம்மா’ அறிவித்துள்ளார்களே?

ஏற்கனவே 2014-15 நிதி ஆண்டில் மின்கட்டண மானியம் வழங்க ரூ 10,575 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழ்நாடு அரசு. இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த மானியச் செலவும் அதிகரிக்கும். அந்தச் சுமையும் மறைமுக வரிகள் மூலம் மக்கள் தலையில் தான் விழும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் எப்பொழுதுமே நட்டத்திலா இயங்கிவந்துள்ளது?

இல்லை. காட் ஒப்பந்தம் கையெழுத்தாகும்வரை லாபத்தில்தான் இயங்கியது. 1994-95-ல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ 347 கோடி. 2007-08-ம் ஆண்டில் இது ரூ 3,512 கோடி பற்றாக்குறையாக மாறியது. அதாவது தனியார்மயக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நட்டமடைய வைத்தனர். மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04-ம் ஆண்டில் ரூ. 1,110 கோடியாகவும் 2008-09-ம் ஆண்டில் ரூ. 7,131 கோடியாகவும் அதிகரித்தது.

அப்படியானால் லாபமடைந்தது யார்?

தனியார் மின்னுற்பத்தி முதலாளிகள்தான். 1994-ல் தனது மின்சாரத் தேவையில் 0.4 % மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008-ல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது.

ஒப்பந்தங்கள் ஏதுமில்லாமல் சந்தையில் அன்றன்றைக்கு நிலவும் மின்சாரத் தேவையின் அடிப்படையில், மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்து வணிக மின் உற்பத்தியாளர்கள் பகற்கொள்ளையடிக்கின்றனர். இவர்கள் விற்கும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 17 ரூபாய்க்கும் மேல் கூடப் போவதுண்டு. இதற்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.  இத்தகைய தனியார் பிணந்தின்னிகளிடம் மின்சாரம் வாங்கித்தான் தமிழக மின்வாரியம் திவாலாகி இருக்கிறது.

2009-10-ல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின்தேவையில் வணிக மின் உற்பத்தி யாளர்களிடம் வாங்கியது வெறும் 19% மட்டுமே.   அதற்கு விலையாக கொடுத்ததோ தனது மொத்த வருவாயில் சரிபாதியை (49.45 %) . அதாவது புதிதாக வரும் கார்ப்பரேட் கம்பெனிக்கு தடையில்லாமல் மின்சாரம் தரவும், கார்ப்பரேட் மின் முதலாளிகள் கோடிகளை குவிக்கவும்தான் நம்மீது மின்கட்டண உயர்வு திணிக்கப்படுகிறது.

‘ஆணியே புடுங்காமல்’ ஆதாயமடைய முடியுமா?

அப்போலோ நிறுவனத்தால் முடியும். நம்மை கேட்காமல் யூனிட்டுக்கு ரூ 17.74 கொடுத்து மின்சாரம் வாங்குவதாக அப்போலோவின் PPN நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது மின்சார வாரியம். அநியாய விலைக்கு வாங்கி கட்டுப்படியாகவில்லை என ‘உன் மின்சாரமே வேண்டாம்’ என்று வாங்குவதை நிறுத்திக்கொண்டது. ஒப்பந்தப்படி மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06-ல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் ரூ 330 கோடி கொடுத்திருக்கிறது மின்வாரியம்.

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை என்ன?

நம் அணைகளின் மூலம் பெறப்படும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு வெறும் 21 காசு தான். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ 2.14 தான். இப்படி மலிவாக விற்கும் நமது நெய்வேலி NLC கோடிக்கணக்கில் நிகர லாபத்தையே தந்து வருகிறது. அப்படியிருக்க யூனிட் 17 ரூபாய் வரை விற்கும் தனியார் முதலாளிகளின் லாபம் எவ்வளவு இருக்கும்?

மின்சாரத்தை வைத்து சூதாடவும் முடியுமா?

முடியும். அக். 2008 முதல் ‘பவர் எக்ஸ்சேஞ்ஜ் ஆப் இந்தியா’ என்ற ஆன்லைன் சந்தை தொடங்கப்பட்டு, இதில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடங்கி மூன்றாவது ஆண்டிலேயே 1,000 கோடி யூனிட்டுகளுக்கு மேற்பட்ட மின்சாரம் இந்தச் சந்தையில் சூதாடப்பட்டிருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

மின் கட்டண உயர்வைத் தடுக்க வேண்டும் என்றால் அதற்குக் காரணமான தனியார் மயத்தை ஒழிக்க வேண்டும். கார்ப்பரேட் மின் முதலாளிகளை கொழுக்க வைக்கவே அவதாரம் எடுத்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ஒழிக்க வேண்டும்.

இன்று நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியே. வெற்றுச் சடங்காக அல்லாமல் உண்மையிலேயே மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் அரசுதான் நமக்கு தேவை. அதற்கு ஆட்சி அதிகாரம் உழைக்கும் மக்களிடமும் நாட்டுப்பற்று கொண்ட ஜனநாயக சக்திகளிடமும் வந்தாக வேண்டும்.

அக்டோபர் 2014.

மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள். 9443527613, 9442339260, 9486643116.

முதலில் பேசியவர்களில் ஒரு சிலர் தடையற்ற மின்சாரத்தை பெறுவதற்கு குறைந்த கட்டண உயர்வை அனுமதிக்கலாம் என்றும் கருத்துக்கூறினர். பெரும்பாலானவர்கள் கட்டண உயர்வை எதிர்த்தனர். எனினும் மின்கட்டண உயர்வுக்கான காரணம் என்ன என்பதையோ, மின்வாரியத்தின் வருவாய் இழப்பு, நட்டத்திற்கான காரணம் என்ன என்பதையோ கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அரசே விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சியை தந்துவிட்டு மின்கட்டணத்தை உயர்த்துவது எப்படி சரி என்று மென்மையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்க்குப்பிறகு நம் பெயரை அழைத்தனர். அங்கு மேடையின் நடுவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பாக மூவரும், பக்கவாட்டில் இக்கூட்டத்தை தலைமையேற்று நடத்திய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான அக்க்ஷய்குமாரும் அமர்ந்திருந்தனர். இவருக்கு எதிர்ப்புறமாக கருத்து சொல்பவர்கள் பேசுவதற்கு மைக் வைத்திருந்தனர்.

குளிர்பதன வசதியுடன் அரங்கு, மேடையில் நவநாகரீக உடையில் அமர்ந்திருந்த கனவான்கள், முன்வரிசைகளில் அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு, கேமராக்களுடன் மீடியாவினர் என அன்னியப்பட்ட சூழலில் நடத்தப்பட்ட கூட்டம் ஒரு சாதாரண குடிமகன் தன் கருத்தை சொல்ல வாய்ப்பளிப்பதாக இல்லை. அதுவும் மைக்கில் பேசுவது அனுபவமற்றவர்களுக்கு பதட்டத்தை தருவதாக இருந்தது. இந்தச் சூழலில்தான் நாம் களமிறங்கினோம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

முதலில் நம் சார்பாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலரும் வழக்குரைஞருமான ராமச்சந்திரன் பேசினார்.

மின்பற்றாக்குறைக்கும், மின்வாரியத்தின் நட்டத்திற்கும் யார் காரணம்? என்பதையும் மின்சார வாரியத்தின் வரலாற்றிலிருந்து அது முன்னர் லாபகரமாக இயங்கியதை பதிவு செய்துவிட்டு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டது? என்பதையும் காட் ஒப்பந்தமும் காட்ஸ் ஒப்பந்தமும் திணித்துள்ள தனியார்மயமே அனைத்துக்கும் அடிப்படை என்பதையும் அம்பலப்படுத்தினார். லாபத்தில் இயங்கிய மின்வாரியத்தின் நட்டத்திற்கு மின்னுற்பத்தியில் களம் இறங்கியுள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையே காரணம் என்றார். தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தர வலியுறுத்தினார். இந்த கருத்துக்கேட்பு ஒரு நாடகமாக நடக்கிறது என்று பதிவு செய்தார்.

தோழர் ராமச்சந்திரன்

இதன் பின் கருத்துக்கேட்பு கூட்டம் புதிய தன்மையை அடைந்தது. நம்மை பின்தொடர்ந்து பேசியவர்கள் ஆணையத்திடம் பணிந்து கோரிக்கை வைக்கும் தன்மையிலிருந்து விடுபட்டு கேள்வியை அழுத்தமாக பதிவு செய்யும் பாதையை தொடர்ந்தனர். ஒருவர் “எங்கள் கருத்தை கேட்டுவிட்டு, அதை மதிக்காமல் பெரும்பான்மைக்கு மாறாக முடிவெடுத்தீர்களானால் அது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்” என்று பதிவு செய்தார்.

மீண்டும் நமது பெயரை அழைத்தனர். நமது ஆதரவாளரும் நெல்லையிலுள்ள வழக்குரைஞருமான கோபால் மேடையேறினார். இதுவரை கூறப்பட்ட கருத்துக்களிலிருந்து தமது கேள்விகளாக வலிமையாக முன்வைத்தார். அவர் மக்களிடம் நேரடியாக கேள்வியெழுப்பினார்.

“தேனியிலிருந்து எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? கையை உயர்த்துங்கள்! திண்டுக்கல்லிருந்து எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? யாரும் வரவில்லை இல்லையா? இந்த ஆணையம் ஏன் பரவலாக விளம்பரம் செய்யவில்லை? இது கண்துடைப்பா இல்லையா?” என்றார்.

ஆணையத்தின் சார்பாக நேரடியாக பதில் சொல்லாமல், நீண்ட மழுப்பலான விளக்கத்தை தந்தனர். அது சம்பந்தமின்றி திசைதிருப்பும் விதமாகவும் இருக்கவே “கேட்ட கேள்விக்கு பதில் சொல்” என்று நாமும் பார்வையாளர்களும் முழக்கமிட்டோம். உடனே “இது விவாத மேடை அல்ல” என்று நழுவினர்.

“எங்களின் கேள்வி, சந்தேகங்களுக்கு பதில் தரமுடியாது என்றால் பிறகு நீங்கள் எதற்க்காக இங்கு வந்துள்ளீர்கள்? ஒரு பதிவு செய்யும் ரெக்கார்டு மெசினை வைத்து நடத்தியிருக்கலாமே?” என்று பதில் தந்தவுடன் ஆணைய அதிகாரிகள் பின்வாங்கினர். பதில் தரும்படி மின்சார வாரிய அதிகாரியை மேடைக்கு அழைத்தனர்.

இவ்வாறு மின்வாரிய அதிகாரி மைக்கில் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினோம். முக்கியமாக எப்போதிருந்து வாரியம் நட்டமடையத் தொடங்கியது? எவ்வளவு நட்டத்தை கடந்த ஆண்டுகளில் சந்தித்துள்ளது? அதற்கான காரணம் என்ன? ஆகிய கேள்விகளை மீண்டும் வலியுறுத்தினோம்.

“என்னிடம் கணக்கு இல்லை” என்று மின்வாரிய நிதித்துறை இயக்குனர் அருள்சாமி கைவிரித்தார். ஆணைய உறுப்பினர்கள் தமது தலைவர் அக்‌ஷய்குமாரிடம் விளக்கம் கேட்டனர். ஆணையத்தின் செயலர் தன்னிடமும் கணக்கு விபரம் இல்லை என்று பதில் தந்தார்.

“எந்த விவரங்களும் இல்லாமல் ஒரு கூட்டத்திற்கு வருகிறீர்கள் என்றால் மக்களை என்ன முட்டாள்கள் என்றா நினைத்துள்ளீர்கள்?” என்று நாம் எதிர்ப்பு தெரிவிக்கவே, பொதுமக்களும் நம்முடன் சேர்ந்து கண்டனக் குரலை உயர்த்தினர். அவர்களுடன் மேடையை நோக்கி முன்னேறினோம்.

கருத்துக் கேட்புக் கூட்டம்
அதிகாரிகள் கூட்டிய கண்துடைப்புக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தின் தலைமை மக்களிடம் வந்தது.

“உங்களிடம் விவரம் இல்லையென்றால் அதைக் கொண்டுவரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். அதுவரை மேற்கொண்டு எதையும் கருத்தாக சொல்ல முடியாது” என்று மக்கள் சார்பாக அறிவித்தோம்.

நாம் ஒத்துழைக்காமல் அவர்களின் கருத்துக்கேட்பு சடங்கு முடியாது என்பதை உணர்ந்து விவரங்களை தர மற்றொரு மின்வாரிய அதிகாரியை உதவிக்கு அழைத்தனர்.

இவ்வாறு, அவர்கள் பிடியிலிருந்த கூட்டத் தலைமையின் அதிகாரம் மக்களின் கைக்கு வந்தது. மக்களின் சார்பாக நாம் களத்தில் முன்வரிசையில் நின்றோம். மின்சார ஒழுங்குமுறை ஆணயம் ஏதோ நாட்டாமையைப்போல் நடத்திய கூட்டம் மக்களின் பங்கேற்பால் தலைகீழ் மாற்றத்தை அடைந்தது.

அதிகாரி ஆண்டு வாரியாக லாப நட்டக் கணக்கை தந்தார். அவர் 2000-2001 ல் 387 கோடி லாபம் என்றும், 2001-2002 ல் 4,851 கோடி நட்டம் என்றும் விளக்கினார். பட்டியலை குறித்துக்கொண்ட நாம் மக்கள் சார்பாக எழுந்து நின்று ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

“லாபத்திலிருந்த வாரியம் ஒரே ஆண்டில் 4,851 கோடி நட்டமடைந்ததற்கு என்ன காரணம்?” என்று கன்னியாகுமரி மாவட்ட தோழர் சிவராச பூபதி கேள்வியெழுப்பியபடி மேடையை நெருங்கினார். “அது கணக்கீட்டில் ஏற்பட்ட தவறு. உண்மையில் அவ்வளவு நட்டம் இல்லை. அதுதான் அடுத்த ஆண்டில் குறைவான நட்டமாக காட்டியுள்ளோம்” என்று சாதாரண கூட்டல் தவறாக நியாயப்படுத்தினார்.

“கூட்டல் கணக்குகூட தெறியாமல்தான் அதிகாரிகளாக இருக்கிறீர்களா?” என்று பூபதி குரலை உயர்த்தி அதிகாரிகள் அறிவு நாணயம் இல்லாமல் தவறை நியாயப்படுத்துவதை கண்டித்தார்.

மக்களின் எதிர்வினை காரணமாக வேறு வழியின்றி நட்டம் வந்துள்ளது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டனர். இப்பொழுது மீண்டும் நாம் எதனால் நட்டம் என்ற மையமான கேள்வியை முன்வைத்தோம். மக்களும் எழுந்து வந்து மைக்கில் நம் கேள்வியை ஆமோதித்தனர்.

கருத்துக் கேட்பு கூட்டம்
“கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்”

பரிதாபமாக நின்ற மின்சார வாரிய நிதித்துறை இயக்குனரை காப்பாற்றும் நோக்கில் தாமாக பதில் தந்தது ஆணையம். “தனியாரிடமிருந்து வாங்கிய மின்சாரத்தால்தான் நட்டம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வாயிலிருந்தே வரவழைக்கப்பட்டது.

மீண்டும் மின்சார வாரியத்தை சந்திக்கு இழுத்தோம். “உங்களுக்கு வந்த நட்டத்திற்கு காரணம் தனியாரிடமிருந்து வாங்கியதுதான் என்று ஆணையம் சொல்கிறது. நீங்களும் அதை ஆமோதிக்கிறீர்களா?” என்றோம். நாக்கில் சனி விளையாடுவதை உணர்ந்த அதிகாரி விக்கித்து நின்றார். பதில் தந்தால் ஆணையம் சிக்கலில் மாட்டும். பதில்தராமல் ஒப்பேத்துவதை அனுமதிக்க நாமும் தயாரில்லை என்பதை அதிகாரிகள் அனைவரும் உணர்ந்தனர். என்ன பதில் என்று மக்கள் நெருக்கவே “நட்டத்திற்கு தனியாரிடம் வாங்கியது காரணம் அல்ல” என்று ஆணையத்தை காப்பாற்றுவதாக நினைத்து வாரியத்தை சிக்கலில் தள்ளினார்.

நாம் நட்டத்திற்கு காரணம் எது என்பதை உறுதியான முடிவாக அறிவிக்காதவரை ஆணையத்தையும், வாரியத்தையும் விடுவதாக இல்லை. A/C யிலும் வேர்த்துக்கொட்டியது அதிகாரிகளுக்கு. ஏற்கனவே உணவு இடைவேளை விடமுடியாதபடி நாம் கூட்டத்தை கொண்டுசென்று கொண்டிருந்தோம். மக்களும், “பதில் சொல்லாமல் இவனுகள விடக்கூடாது” என்று கொந்தளித்தனர். ஒரு வழியாக 1.30 க்கு உணவு இடைவேளை என்று அறிவித்து வெளியேறியது அதிகார வர்க்கம்.

நாம் கேட்ட கேள்விக்கு பதில்தர வக்கற்ற ஆணையத்தையும், அதன் சதிகளுக்கு துணைபோகும் மின்வாரிய தலைமையையும் முழுமையாக அம்பலப்படுத்திவிட்ட நிலையில் மேற்கொண்டு கருத்துகூற எதுவும் இல்லாமல் போனது. இதனால் பலரும் வீட்டிற்க்கு சென்றுவிட்டனர். ஆனால் நாம் அப்படி விடுவதாக இல்லை. 2.15-க்கு மீண்டும் அரங்கினுள் நுழைந்தோம். மின்வாரியத்தினர் மட்டுமே அமர்ந்திருந்தனர். மக்களின் சார்பாக எண்ணி 10 பேர்கூட களத்தில் இல்லை.

2.30-க்குமேல் கூட்டத்தை மீண்டும் ஆரம்பித்தது ஆணையம். சடங்குத்தனமாக மனுதருவதுபோல் சிலர் கருத்தை முன்வைத்தனர். மீண்டும் எங்கள் பெயர் அழைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் ராமர் தன் கூர்மையான விமர்சனங்கள் மூலம் மீண்டும் அதிகார வர்க்கத்தை அலைக்கழித்தார்.

“மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டதற்க்கு காரணமே மின்சாரத்தை தனியார்மயமாக்குவதுதான். இந்த ஆணையத்திடம் கருத்துக்கூற நான் வரவில்லை. இதைப்பற்றி மக்களிடம் எங்கள் கருத்தை பதியவைக்கவே இப்பொழுது பேசுகிறேன். கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைப்பததைத்தவிர ஆணையத்திற்க்கு வேறு வேலை இல்லை. அப்போலா முதலாளியிடம் வாங்காத மின்சாரத்துக்கு நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய் என்று 350 கோடி ரூபாயை வருடத்துக்கு தூக்கித்தர வைத்துள்ள இதை ஒழிக்காமல் நமக்கு விடிவும் இல்லை. இவர்கள் நடத்தும் கருத்துக்கேட்பு நாடகத்தை அம்பலப்படுத்தி முறியடிப்போம்” என்றார்.

கருத்துக்கேட்பு கூட்டம்
புதிய தன்மையை அடைந்த கருத்துக்கேட்பு கூட்டம்

வேறு யாரும் கருத்து சொல்ல முன்வராத நிலையில் நாம் எழுப்பியுள்ள கேள்விகளும், முன்வைத்துள்ள விமர்சனங்களும் அனைவரிமும் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. தன் மீதான கூர்மையான விமர்சனங்களை – ‘கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியே ஆணையம்’ என்ற கேள்வியை ஆணையம் எதிர் கொண்டிருந்தது. பதிலுக்காக காத்திருந்தனர் பத்திரிக்கையாளர்கள். நேரமும் மணிக்கணக்கில் எஞ்சியிருந்தது.

மிக நீண்ட விளக்கம் தருவதன்மூலம் அனைத்து விமர்சனங்களையும் ஊத்திமூட எத்தனித்தது அதிகார வர்க்கம். அதற்கும் நாம் சளைக்கவில்லை. மின்சார வாரியம் ஒளிமயமான எதிர்காலத்திற்குள் நுழையப்போவதாகவும், மின்னுற்பத்தியை பெருக்கி லாபத்தை குவிக்கப் போவதாகவும், இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்பதாகவும், புதிதாக மின்னுற்பத்தியை தொடங்கவுள்ள பவர் பிளாண்ட்களை வரிசைப்படுத்தி நம்பிக்கையூட்டினர்.

நாம் மீண்டும் எழுந்தோம். “மின்வாரியமோ ஒரு பிரச்சினையும் இல்லை என்கிறது. அதுவே தன் பிரச்சனைகளை சமாளித்து லாபமீட்டப் போகிறது எனும்போது ஆணையமே கட்டண உயர்வை அறிவித்தது ஏன்?” என்றோம்.

“நாங்களாகத்தான் அறிவித்தோம்” என்றது ஆணையம்.

“மின்வாரியமே கேட்காதபோது யாருக்காக இந்த உயர்வை அறிவித்துள்ளீர்கள்?” என்று கேள்வி எழுப்பினோம். “எங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளோ சட்டமன்றமோ பாராளுமன்றமோ உங்களின் முடிவில் தலையிட முடியுமா? மக்கள் பிரதிநிகளுக்கு கட்டுப்படாததாக உள்ள இந்த அமைப்பு இப்படி சர்வாதிகாரமாக கட்டண உயர்வை திணிப்பதை அனுமதிக்கக்கூடாது” என்று வாதிட்டனர் தோழர்கள்.

“இல்லை. மின்வாரியமே கட்டண உயர்வை முன்வைப்பதாக இருந்தது. அதுவும் கூடுதலாக அறிவிக்க விரும்பியது.” என்று மின்வாரிய இயக்குனர் ஆணையத்திடமிருந்து நம் பார்வையை திருப்பினார். மீடியாக்களும் கேமராவை அடிக்கடி திருப்ப நேர்வதால் ஸ்டேண்டிலிருந்து கழட்டி தோளில் வைத்தனர். 20/20 மேட்ச் போல கேமராக்கள் ஃபோகஸ் செய்தன.

நாம் “மின் வாரியமே கட்டண உயர்வை முன்வைக்கிற முடிவில் இருந்தது என்பது உண்மையானால் உங்களுக்கு பொறுப்பான தமிழக அரசின் முடிவும் அதுதானே! பின் அம்மா ஏன் இந்த கட்டண உயர்வு ஆணையத்தால் சுமத்தப்படுவதாக கூற வேண்டும். பெருந்தன்மையோடு மானியம் தருவதாக நடிக்க வேண்டும். ஆணையம், அரசு, வாரியம் அனைவரும் ஒன்றுதான். எங்களிடம் நடிக்கிறீர்களா?” – என்றோம்.

“தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் சராசரி விலை எவ்வளவு? அதிகபட்சம் என்ன விலைக்கு வாங்குகிறீர்கள்?” என்று கேட்டோம்.

“8 – 10 ரூபாய் வரை ஆகலாம்” என்றனர் வாரியத்தினர்.

ஆணையத்திடம், “என்ன விலைக்கு ஹூண்டாய், ஃபோர்டு, நோக்கியாவுக்கு – கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்கிறீர்கள்?” என்றோம்.

“5 ரூபாய் வரை” என்று பதில் தந்தனர்.

“10 ரூபாய்க்கு வாங்கி 5 ரூபாய்க்கு விற்கவைப்பது எதனால்?” என்று மடக்கினோம்.

“ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது. சட்டம் அப்படி உள்ளது. மின்வாரிய அதிகாரிகளான நாங்கள் நாட்டுக்காக எப்படி உழைக்கிறோம் தெரியுமா? வேலை முடிந்து போகும்போது என் அலுவலக அறையின் A/C யை நானேதான் ஆஃப் செய்கிறேன்.” என்று நா தழுதழுக்க, நெஞ்சுருக தன்னிலை விளக்கமளித்தார் மின்வாரிய இயக்குனர்.

நாம் “நாங்கள் ஆணையத்தைத்தான் எதிர்க்கிறோம். மின்வாரியத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடந்தகால அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை நாங்கள் என்றுமே மதிக்கிறோம். உங்களின் உழைப்பையும், நாட்டு மக்களின் உழைப்பையும் சுரண்டிக்கொழுக்க வரும் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாளான ஆணையத்தையே ஒழிக்கவேண்டும். நாட்டுப்பற்றுள்ள வாரியத்தினரும் வாருங்கள்.” என்று அறைகூவினோம்.

மீண்டும் மையமான கேள்விக்கு – நட்டமடைய வைத்து மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க சதி செய்துவரும் ஆணையத்திடம் அதன் சர்வாதிகாரப்போக்கு குறித்து – பதில் கேட்டோம். பதில் வரும்வரை இந்த கண்துடைப்பு நாடகமான கருத்துக்கேட்பு கூட்டத்தை முடிக்க விடமாட்டோம் என்று மைக்கில் வலியுறுத்தினோம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை ஆஃப் செய்துவிட்டு தப்பியோட எழுந்தனர் ஆணையத்தினர்.

உடனே “பதில்சொல்! பதில் சொல்! ஒழுங்குமுறை ஆணையமே கேள்விகளுக்கு பதில் சொல்!” என்று முழக்கமிட்டோம்.

வெளியில் வந்தவுடன் பத்திரிகையாளர்கள், “மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடுகிறீர்களே இதுதான் பொறுப்பான தன்மையா?” என்று கேள்வி எழுப்பினர். ஆணையத்தினருடன் இருந்த காண்ட்ராக்டர் ரவுடிகளில் ஒருவன் கேள்விகேட்ட நிருபரை தாக்கவே அந்த இடமே கொந்தளித்தது. அனைத்து மீடியாவினரும் காருக்குள் ஏறிய ஆணைய அதிகாரிகளை காருடன் வழிமறித்து அடித்தவனை ஒப்படைக்க கோரினர்.

பத்திரிகையாளர் மறியல்
பத்திரிகையாளர் மறியல்

நேரம் போகப்போக அது முற்றுகையானது. காவல்துறையினர் கெஞ்சிக்கூத்தாடி கார் செல்ல வழி ஏற்படுத்தினர். 5.00 மணிவரை கருத்து கேட்பதாக நடக்க இருந்த நாடகம் இப்படி 4.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.

மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கூட்டத்தில் முன் வைத்த கருத்துக்களின் சாரம்

மக்களை மின்நுகர்வோர் என்று கூறாதீர்கள். தனியார் மயக் கொள்கையே மக்களை நுகர்வோராகக் கருதுவதற்கு பழக்கப்படுத்துகிறது. மின்சாரத்துறை சேவைத்துறை. மின்வாரியம் மக்களின் வரிப்பணத்தில் உருவான நிறுவனம். மின்சாரம் பெறுவது நாட்டின் குடிமக்களது உரிமை.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் அரசியல்வாதியின் கையில் இருந்தால் தேர்தல் போன்ற நேரங்களில் அவர்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க தயங்குவார்கள். அத்தகைய எவ்வித தடையும் இன்றி உயர்த்தவே இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த ஆணையம் பாராளுமன்றம், சட்டமன்றம், மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் மக்களாட்சி, ஜனநாயகம் என்பதெல்லாம் இல்லையா?

மின்சார ஒழுங்குமுறை ஆணையமே தனியார்மயத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையமே ஒழிக்கப்பட வேண்டியது. மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் பெருமுதலாளிகளின் இலாபத்தை உறுதி செய்து தடையின்றி வசூல் செய்து கொடுக்கவே இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக பெருமுதலாளிகளின் கைக்கூலிகளே அமர்த்தப்படுகிறார்கள். மக்களுக்கும், மின்வாரியத்திற்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்கும் நீதிபதிகள் போல் இங்கு அமர்ந்திருக்கும் ஆணைய அதிகாரிகள் முதலாளிகளின் கைக்கூலிகள். குற்றவாளியே இங்கு நீதிபதியாக அமர்ந்துள்ளான். இங்கு அமர்ந்திருக்கும் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி

ஆம் ஆத்மி : இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு

2

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம்! பகுதி 4 (இறுதிப் பகுதி)

டந்த ஆகஸ்டு (2014) புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றிருந்த “ஆம் ஆத்மி கட்சி: பிறப்பு இரகசியம்!” என்ற கட்டுரையில், பின்வருமாறு எழுதியிருந்தோம்:

ஸ்டீவன் சோல்னிக்
அரவிந்த் கேஜரிவால் நடத்திய கபீர் என்ற அரசுசாரா தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி அளித்ததை உறுதி செய்துள்ள ஃபோர்டு பவுண்டேசனின் பிரதிநிதியான ஸ்டீவன் சோல்னிக்.

“மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்திய அரசுக்கு எதிராக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வேலைசெய்வது உண்மையானால், இந்திய அரசு ஏன் அதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமாரன் தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் வாயடைக்கும் வகையிலான, வழமையான கேள்வியொன்றை வீசியிருக்கிறார். இதற்கு இந்திய அரசு பதில் கூறவில்லை.

இதே எதிர்வாதத்தை, உதயகுமாரன் தனது அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள அரவிந்த் கேஜரிவால் மூன்றாண்டுகளுக்கு முன்பே வைத்தார். தனது “கபீர்” என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் மூலம் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசனிடமிருந்து நாற்பதாயிரம் டாலர் நிதி பெற்றதாக அரவிந்த் கேஜரிவால் மீது அருந்ததி ராய் குற்றஞ்சாட்டியபோது அதை அவர் மறுக்கவில்லை. ஃபோர்டு ஃபவுண்டேசனின் இந்தியப் பிரதிநிதி ஸ்டீவன் சோல்னிக்குடன் சேர்ந்து ஒரு நேர்காணல் நடத்திய கேஜரிவால், “ஃபோர்டு ஃபவுண்டேசன் மோசமானதென்றால், பிறகு அதைத் தடை செய்யவேண்டியதுதானே!” என்ற அதே கேள்வியை வீசினார்.

“முதல் தவணையாக 2005-ம் ஆண்டு 1,72,000/- டாலரும், இரண்டாம் தவணையாக 2008-ம் ஆண்டு 1,97,000/- டாலரும் அந்த அரசுசாரா தொண்டு நிறுவனத்திற்கு அளித்தோம்; மூன்றாவது தவணையையும் அளிப்பதாக ஒப்புக்கொண்டோம்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக வேலைசெய்வதாக ஒப்புக்கொண்டு, அதைச் செய்யாததால் நிதி தரவில்லை” என்று ஸ்டீவன் சோல்னிக் உண்மையைச் சொல்லிவிட்டார்.

அது மட்டுமில்லை; அரவிந்த் கேஜரிவால், அன்னா ஹசாரே, அருணா ராய், கிரண் பேடி, இந்தியக் கடற்படை முன்னாள் துணை அட்மிரல் லட்சுமிநாராயண் ராமதாஸ், விவசாய விஞ்ஞானி என்று சொல்லிக்கொண்டு நமது நாட்டுப் பாரம்பரிய நெல் விதைகளைத் திருடி அமெரிக்க விதை கார்ப்பரேட் நிறுவங்களுக்கு விற்கும் எம். எஸ். சுவாமிநாதன் முதலான பலரும் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசனும் அதன் முன்னோடியான ராக்பெல்லர் ஃபவுண்டேசனும் இணைந்து தமது எடுபிடி பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர் ரமோன் மாகசேசே பெயரில் நடத்தும், தலா 50,000 டாலர் கொண்ட விருதை பெற்றவர்கள்தாம்; அது தவிர, அரசு சாரா தொண்டு நிறுவனங்களை நடத்தி அந்நிய நிதி உதவி பெறுபவர்கள்தாம். இந்த உண்மை அரசியல் அறிந்த அனைவரும் அறிவர்.

அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்திய அரசுக்கு எதிராகச் சதி செய்வதாக ஒருபுறம் குற்றஞ்சாட்டினாலும், மறுபுறம் அவற்றைத் தடைசெய்து தகுந்த நடவடிக்கைகளை (காங்கிரசு அல்லது பா.ஜ.க என்று எந்த அரசானாலும்) மேற்கொள்வதில்லை. அது மட்டுமல்ல, அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் தடையின்றிப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்காக இந்திய அரசு தனது எஜமானர்களான மேலைநாடுகளுக்கு உத்திரவாதமளித்துள்ளதோடு, அதற்குரிய ஐ.நா. ஒப்பந்தத்திலும் கைச்சாத்தளித்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை நிலை? தனக்கு எதிராகச் சதிவேலைகள் செய்வதாகக் கருதும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் தடையின்றிப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்கு இந்திய அரசு ஏன் உத்திரவாதமளிக்க வேண்டும்?

ஆம் ஆத்மி உருவாக்குனர்கள்
அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் அளித்த நிதியில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை நடத்தி, அதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கிய அதன் நிறுவனர்கள் (இடமிருந்து) அரவிந்த் கேஜரிவால், மனீஷ் சிசோதியா, யோகேந்திர யாதவ்.

ஐ.நா. அவை நிறைவேற்றிய சர்வதேசக் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை என்ற ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்துக்கு இந்திய அரசு முறைப்படி ஒப்புதல் அளித்திருக்கிறது. பொதுவிலானதாக வரையறுக்கப்பட்டுள்ள இந்தக் குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கும் பொருத்தி, சர்வதேசச்சட்டத்தில் பதிக்கப்படுள்ளது; அது குடிமைச் சமூகங்களில் அரசு தலையீடுகளிலிருந்து பாதுகாத்து நெறிப்படுத்தும் விதிகளையும் நெறிமுறைகளையும் உள்ளடக்கியது.

ஆம் ஆத்மி பிறப்பு இரகசியம்அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (வெவ்வேறு) நாடுகளில் பங்கேற்கும் உரிமை (அதாவது அரசுசாரா தொண்டு நிறுவனங்களை அமைத்துக்கொள்ளவும் அதில் இணையவும் தனிநபர்கள் உரிமை); அரசின் தலையீடின்றி அவற்றின் சட்டபூர்வ நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் உரிமை; அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கருத்துரிமை; அவை தமது உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கூட்டாளிகளுடன் தகவல்,தொடர்புகொள்ளும் உரிமை; அவர்கள் தமது நாடுகளின் எல்லை கடந்து நிதிப் பரிமாற்றம் உட்பட நிதி ஆதாரங்களைக்கோரவும் பெறவுமான உரிமை; அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசுக்கடமை – ஆகிய வழிகாட்டும் நெறிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.

உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தகக் கழகம், ஏகாதிபத்திய நிதி வர்த்தக அமைப்புகளின் நிபந்தனைகளையும், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கைளைத் தலைவணங்கி ஒப்புக்கொண்டதோடு, மேற்படி சட்ட திட்டங்களையும் இந்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டது; அவற்றுக்குக் கட்டுப்படவும் கடமைப்பட்டுவிட்டது.

கடந்த ஆகஸ்டு (2014) இதழில் பின்வருமாறு எழுதியிருந்தோம்: “முதலாளியத்துக்கு எப்போதும் சந்தை விரிவாக்கமும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. ஆனால், தற்போதைய சந்தை சுருங்கிவிட்டதால் கார்ப்பரேட் முதலாளிகள் தனிப்பட்ட தேசங்களில் இருந்து உலக அளவில் விரிவாக்கிக் கொள்ள விழைகிறார்கள். இதற்கு முன்பு சந்தைப் பொருளாக இல்லாத தனிப்பட்ட வாழ்க்கை, சமூக உறவுகள் மட்டுமல்ல; வழமையாகச் சந்தைக்கு வெளியிலுள்ளதாகக் கருதப்பட்ட அரசாங்க நடவடிக்கைகள், பொறுப்புகள், கடைமைகள்கூட விற்பனைச் சரக்குகளாக, இலாபமீட்டும் சந்தைப் பொருட்களாக மாற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிதண்ணீர், அடிப்படைக் கல்வி, பொதுச்சுகாதாரம், பொதுப் பாதுகாப்பு, சாலைப்போக்குவரத்து, முன்னேறிய வேலை நிலைமைகள் போன்றவைகூட சேவைச் சரக்குகளாக, வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டன. பொதுநலன்களுக்காகத் தனிமனிதத் திறமையையும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் நெறிப்படுத்துவதுதான் ஜனநாயகம் என்பதுபோய், கார்ப்பரேட் முதலாளிகளின் தொழில், சந்தை, வியாபார நலன்களுக்காக அரசாங்கக் கட்டுமானங்களையும், சமூகத்தையும் சட்டதிட்டங்களையும் நெறிப்படுத்துவதாக மாற்றப்படுகின்றன.”

இந்த மாற்றங்களைக் கொண்டுவரும் கார்ப்பரேட் (கூட்டுப்பங்கு) நிறுவனங்களின் கூட்டுச்சதியில் சிந்தனைக் குழாம்களும் குடிமைச் சமூகங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. அதுமட்டுமல்ல, உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய நிதி, வர்த்தக அமைப்புகளின் உலகமயமாக்கம் மற்றும் மறுகாலனியாக்கப் பொதுத் திட்டத்திலும் அவற்றின் நிதி ஒதுக்கீட்டிலும் அரசுசாரா தொண்டு அமைப்புகளும் குடிமைச் சமூகங்களும் முக்கிய இடம் பெற்றுள்ளன. உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தகக் கழகம், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் முதலாளிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல், பொருளாதாரம் முதல் சுற்றுச்சூழல் குறித்த முக்கிய அரை ஆண்டு, ஆண்டுக் கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் அரசுசாரா தொண்டு அமைப்புகள், குடிமைச் சமூங்களின் பிரதிநிதிகள் அதிகாரபூர்வமாக இடம் பெறுகின்றனர். இவை உருவாக்கும் பல்வேறு அரங்குகள், கூட்டமைப்புகளில் அவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுகிறார்கள். உலக நாடுகளின் அரசுத் தலைவர்கள், அமைச்சர்களுக்கும் நிகரான ஊதியமும் வசதிகளும் பாதுகாப்புகளும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மகசேசே விருது பெற்ற இந்தியர்கள்
அரவிந்த் கேஜரிவால், அன்னா ஹசாரே, அருணா ராய், கிரண் பேடி, முன்னாள் அட்மிரல் ராமதாஸ், எம்.எஸ் சுவாமிநாதன் : அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசனும் அதன் முன்னோடியான ராக்பெல்லர் பவுண்டேசனும் இணைந்து தமது எடுபிடியான பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் அளிக்கும் 50,000 டாலர் கொண்ட விருதைப் பெற்ற இந்தியர்கள்.

இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, தொழிற்துறை, அரசுத்துறை ஆகியவற்றுக்கு நிகராக அதிகாரபூர்வமான ஏகாதிபத்திய எஜமானர்களால் மூன்றாவது துறையாக அரசுசாரா தொண்டு அமைப்புகளையும் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு காரணம், அரசுசாரா தொண்டு அமைப்புகளையும் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்களை வளர்ச்சிகான திட்டங்களில் பங்காளிகளாக கார்ப்பரேட் (கூட்டுப்பங்கு) நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆம் ஆத்மி பிறப்பு இரகசியம்கடந்த ஆகஸ்டு புதிய ஜனநாயகம் இதழில் பின்வருமாறு எழுதியிருந்தோம், “பொதுவில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு முதலான சில விவகாரங்கள் தவிர சமூகம், மதம், கல்வி-மருத்துவம், பண்பாடு போன்றவற்றிலோ, குறிப்பாக மக்கள் நலன், திட்டமிடுதல், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதார விவகாரங்களில் அரசு தலையீடு செய்யக்கூடாது. இந்த விவகாரங்களைச் சந்தையும் சமூகமும் மூலதன நிர்வாகிகளும் (அதாவது கார்ப்பரேட் முதலாளிகளும்) கவனித்துக் கொள்வார்கள். சாரமாகச் சொல்வதானால், கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டு தொழிற் கழகங்களின் நலன்களுக்கேற்ப செயல்படும் எலும்புக் கூடு போன்ற அரசு அமைப்பு மட்டுமே இருக்க வேண்டும். இந்த வரம்பைத் தாண்டி அவற்றின் செயல்பாடுகளில் தலையிடுவது குடிமைச் சமூகத்தின் பொருளாதார-தொழில் உரிமைகளை மறுப்பதும் எதேச்சதிகாரமும் ஆகும். இவைதாம் அரசின், கடமைகள், பணிகள், வரம்புகள் குறித்த ஏகாதிபத்திய கைக்கூலிகளது பிரச்சாரம்.

அரசியல் கட்சிகளின், தலைவர்களின் இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், நம்பிக்கை துரோகங்கள், கிரிமினல் குற்றங்கள் முதலான சீரழிவுகள், அவர்களுக்கெதிரான மக்கள் வெறுப்பு ஆகியன மேற்படிப் பிரச்சாரத்துக்கு சாதகமாக அமைகின்றன. இவ்வாறு அரசும், அரசியல் தலைவர்களும் இழிவுற்று, சிறுமைப்பட்டுப் போகும் நிலையில், நாட்டின் அரசியல், பொருளாதார வாழ்வில் சிந்தனைக் குழாம்கள் – குடிமைச் சமூகங்களின் பங்கு பாத்திரம் முன்தள்ளப்படுவதையும் முக்கியத்துவம் பெறுவதையும் புரிந்து கொள்ள முடியும்.”

மேற்கண்ட அடிப்படையில் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகார வர்க்கத்தினரின் இடத்தில் சிந்தனைக் குழாம்களையும் குடிமைச் சமூகங்களையும் வைப்பதுதான் ஏகாதிபத்திய எஜமானர்களின் திட்டமாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்களில் நேர்ந்துள்ள எல்லாக் கேடுகளுக்கும் வரப்பிரசாதமாக அரசுசாரா தொண்டு அமைப்புகளையும் குடிமைச் சமூகங்களையும் கார்ப்பரேட் கழகங்கள் நம்புகின்றன. “இலஞ்ச -ஊழல், அதிகாரமுறைகேடுகளுக்கு இடமில்லாதவை. தமது கட்டுப்பாட்டில் தாமே பொறுப்பேற்று செயல்படுத்துவன என்று மக்கள் நம்பக்கூடியவை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்களிடையே எழும் எதிர்ப்புகளைத் திசைதிருப்பிவிட்டு, எளிதில் சமாளிக்கக்கூடியவை. அதைவிட முக்கியமாக, தற்போதைய அரசியல் கட்டமைப்பின் மீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்திகள் மாபெரும் தன்னியல்பான போராட்டங்களாகவும் கட்டுப்படுத்த முடியாத எழுச்சிகளாகவும் வெடித்து விடும் அபாயத்தில் இருந்து அரசையும், ஆட்சியாளர்களையும் ஆளும்வர்க்கங்களையும் காக்கக் கூடியன” என்று கார்ப்பரேட் கழகங்கள் நம்புகின்றன. இந்த உண்மை ஏராளமான சிந்தனைக் குழாம்கள், குடிமைச் சமூகங்களின் சர்வதேச ஆய்வுகளில் நிறைந்திருக்கின்றன.

பல ஆண்டுகளாக மாறிமாறி நாட்டை ஆண்டுகொண்டிருந்த காங்கிரசு, பா.ஜ.க. மீது மட்டுமல்ல, ‘இடதுசாரிகள்’ உட்பட பலவண்ணக் கூட்டணி அரசுகள் மீதும் இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே இந்திய மக்கள் குமுறிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருந்து. ஓட்டுக்கட்சிகள், அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, செயலிழந்துவரும் அரசு, அதிகரித்து வரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்து வரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது. பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆம் ஆத்மி பிறப்பு இரகசியம்

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசன் நிறுவனம் நிதியளித்து இயக்கிவரும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை நடத்தும் அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோதியா, யோகேந்திர யாதவ் முதலானவர்கள் ஆம் ஆத்மி கட்சியைத் தோற்றுவித்தார்கள். பின்னாளில் நாடுமுழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் – இப்போது அவற்றில் பலவும் தம்மைக் குடிமைச் சமூகம் என்று சொல்லிக்கொள்கின்றன – இந்தக் கட்சியில் இணைந்து கொண்டன.

காங்கிரசு, பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகள் உட்பட பலவண்ணக் கூட்டணிகளுக்கும் ஒரு அரசியல் மாற்றுச் சக்தியாகக் காட்டிக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களோடு தனது முதல் சுற்று வரலாற்றுக் கடமையை முடித்துக்கொண்டது. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு நம்பிக்கையளிப்பதாக மோடி தலைமையிலான ஆட்சி ஏற்பட்டுவிட்டது. என்றாலும், பனிப்போர் முடிவுக்கு வந்தாலும் உலகின் பலநாடுகளிலும் பயங்கரவாத ஆபத்துக்களும் சர்வாதிகார, எதேச்சதிகார, அரை எதேச்சதிகார ஆட்சிகளும் நீடிப்பதால் அந்நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகப் போர்த் தந்திரத்தின்படி தனக்குக் கீழ்ப்படியாத நாடுகளில் மனிதாபிமானத் தலையீடுகள் செய்வதற்கும் ஆட்சி மாற்றம் (Regime Changes) ,ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்வதற்கும் குடிமைச் சமூகங்கள் முக்கிய அரசியல் – அமைப்புக் கருவிகளாக உள்ளன. அவை ஏகாதிபத்தியங்களின் செல்லப்பிள்ளைகளாகவே கருதப்படுகின்றன. அந்த வகையிலான அரசியல்-அமைப்புக் கருவிகளாக ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உட்பட குடிமைச் சமூகங்கள் ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கின்றன.

– ஆர்.கே.
(முற்றும்)
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

‘ஆ’வின் குரல்…

6
ஆவினுக்கே மொட்டை
கடைசியாய் போட்டுவிட்டீர்கள்
ஆவினுக்கே மொட்டை!

ம்மாவுக்கு நேர்த்திக்கடனாக
ஆரம்பத்தில் நீங்கள்,
மொட்டையடித்தபோதே
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
கடைசியாய் போட்டுவிட்டீர்கள்
ஆவினுக்கே மொட்டை!

ஊழலின்பால் ஊறிய
உங்கள் மூஞ்சியைப் பார்த்தாலே
அடிமடி சுரக்காமல்
வெறுப்பில் ஆகுது மரக்கட்டை!

எனக்கு,
புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும்
மானியத்தில் தந்ததால் – ஆவின்
அழிந்ததென்று
அவிழ்க்கும் பொய்நாக்கைப் போல ஒரு
அருவருப்பை
என் சாணிப் புழுவிலும்
சத்தியமாய் நான் பார்த்ததில்லை!

மடிசுரந்து நீ கவர
எனக்களித்த மானியம்
நான் அளித்த
எருவுக்கு ஈடாகுமா?

பசுக்கள்
காம்பால் அழுதோம்…
கண்களால் துப்பினோம்…
கொம்புகளால் தவித்தோம்…

எங்கள் கன்றுக் குட்டிக்கென்றும்
பாலை எடுத்து வைக்காமல்
மக்கள் புள்ள குட்டிக்காக
நாங்கள் தந்த தாய்ப்பாலில்
நஞ்சு கலந்து
கொள்ளையடித்ததைப் பார்த்து,

காம்பால் அழுதோம்…
கண்களால் துப்பினோம்…
கொம்புகளால் தவித்தோம்…
அசைபோட மறந்து
நா பேச துடித்தோம்…

இப்படியொரு கொடுமையை தாங்கிக்கொள்ள
எங்களிடம் தோல் இல்லை
ஒரு வேளை
மனிதத்தோலாய் இருந்தால்
மரத்துப் போகலாம்!

வாயில்லா ஜீவன் நாங்கள்
யாரையும்
வயிற்றிலடித்து பிழைத்ததில்லை.

தனியார் பால்
ஆவின் அழிவு
பசுக்களால் இல்லை,
ஆநிரைக் கவரும் – உங்கள்
தனியார்மயத் திசுக்களால் தான்!

உயிர்களின்
வயிற்றிலடிக்கும் பாதகனே,
அமைச்சே, அதிகாரியே
வா! யாரால் நட்டம்?
யாரால் கேடு?
காலால் விவாதிக்க
கால்நடைகள் நாங்கள் தயார்!

ஆவின் அழிவு
பசுக்களால் இல்லை,
ஆநிரை கவரும் – உங்கள்
தனியார்மயத் திசுக்களால் தான்!

வறண்ட நிலத்திலும்
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
நாங்கள் வழங்கிய பாலின்
கொள்முதலுக்கு,
வழங்கவேண்டிய தொகையை தராமல்
இழுத்தடித்து, இழுத்தடித்தே
எங்களை, தனியார் கொள்ளை பக்கம்
ஓட்டி விட்டது, உங்கள் அரசு!

கொம்பிருந்தால்தான்
கோபம் வரவேண்டுமென்றில்லை,
இணையதளம், டுவிட்டர், வாட்ஸ் அப்… என
ரொம்பத் தெரிந்த ‘பால’கர்களே
பாலுக்காகவாவது கொஞ்சம் பொங்குங்களேன்!

மாடு பராமரிப்பு
அசைபோடும் நினைவுகளில்
ஆயிரமாம் முகங்கள்…

எத்தனை மனிதர் உழைப்போடு
இணைந்து சுரந்தோம் நாங்கள்,
அசைபோடும் நினைவுகளில்
ஆயிரமாம் முகங்கள்…

கன்று ஈனும் பருவத்தில்
காப்பாளர் குடும்பமே
என்னை கண் சுமக்கும்.
உடல் மாறுபாடின்
கணநேர நுண்குறிப்பின் இனமறிந்து
பிரசவப்பொழுதுக்கு காத்திருக்கும்

வயிற்றில் வலி எடுத்து
வரும் என் குரலின் பொருள் புரிந்து
ஓடிவந்து உடனிருந்து வீடே பதபதைக்கும்,
பீறிடும் என் குரலின்
பெரு வலி பொறுக்காமல்,
தன் மகளின் பிரசவம் போல்
” த்தா… த்தா… த்தா… ” என
தாய் வந்து தாடை, தலையை
நீவி விட்டு பதபதைப்பாள்,

cow-5அவள் கணவனோ,
வைக்கோல் பரப்பி
கன்று வரும் வழியின்
ஈரப்பசையில் கவனம் காத்திருப்பான்,

பனிக்குடம் உடைய…
தொப்பூழ் கொடி துடிக்க…
ஈன்ற கன்றை
என் நாவால் துடைக்க,
என் மட்டற்ற மகிழ்ச்சி
அந்த மனைக்கே பரவும்!
சீம்பால் என் பிள்ளைக்கு மட்டுமா?
அண்டை வீட்டுக்கும் சுரக்கும்!

நல்லெண்ணெய் ஊற்றி
பிரசவித்த வாயின் புண் ஆற்றி,
பிரசவ வயிற்றின்
பெருஞ்சூடு அடங்க
அகத்திக்கீரையும்,
அச்சுவெல்ல பச்சரிசி உருண்டையும்
வழங்கி,
தாய்வீட்டு அரவணைப்பை தந்தவர்கள்
பால்மாடு வளர்ப்பாளர்கள்!

பால் கறவை
கறக்கும் ஒவ்வொரு இழுப்பிலும்
சுரக்கும் என் செய்நன்றி!

கழுத்து மணி ஓசையில்
ஒரு மாறுபாடானாலும்
உடனே வந்து கவனிப்பர்,
கத்தும் குரலில்
உணர்ச்சி வேறுபாடானால்
கொட்டும் மழையிலும் வந்து
கொட்டகையில் விளக்கடிப்பர்,
பாம்பு அண்டாமல்
பாழும் ஈக்கள் அண்டாமல்
மஞ்சள் தெளித்து
மாடுகள் காத்தனர்.

என்னை
மேய்ச்சலுக்கு விட்டு
தானும் மேல் வயிறு காய்ந்து,
நானருந்தும் நீர் நிலையில்
தானும் அருந்தி,
மார் வலிக்க
மாட்டுக் கொட்டாய் சாணி அள்ளி,
கால்நடையாய் நடந்து
தடுப்பூசி போட்டு,
மடிகழுவி, வால்முடி கழுவி
பால் காம்புகள் நீர் தெளித்து,
முழங்காலிட்டு
முட்டிகளின் இடுக்கில்
பால் சொம்பு செருகி,
பக்குவமாய் விளக்கெண்ணெயில்
விரல் தேய்த்து
கறக்கும் ஒவ்வொரு இழுப்பிலும்
சுரக்கும் என் செய்நன்றி!

தனியார் பால்
சுரண்டும் தனியாருக்கு
சுரப்பை திருப்பிவிட்டும்
சுரணையில்லாமல் இருப்போருக்காகவா
பாலைக் கொடுத்தோம்!

மனித உழைப்பை
மாடுகள் உணர்ந்தோம்
எங்கள் ரத்தம்
பாலாய் பொழிந்தோம்,

சுரண்டும் தனியாருக்கு
சுரப்பை திருப்பிவிட்டும்
சுரணையில்லாமல் இருப்போருக்காகவா
பாலைக் கொடுத்தோம்!

எங்களின் அழிவில்
நீங்களும் அழிவீர்!
இதை எடுத்துச் சொல்லவே
வாயைத் திறந்தோம்.

அடிப்புல் அழிக்காமல்
நுனிப்புல் மேய்ந்து
இயற்கைச் சூழலை
இனிமையாய் பழகினோம்,
ஒரு புல்லும் முளைக்காத
கட்டாந்தரையாக்கி
பூமியை கார் கம்பெனிகளுக்கும், கால்சென்டர்களுக்கும்
ரியல் எஸ்டேட்டுக்கும்
இரையாய் ஆக்கவா
உங்களுக்கு கால்சியம் வழங்கினோம்?

ஆவின் பார்லர்
பூமியை கார் கம்பெனிகளுக்கும், கால்சென்டர்களுக்கும்
ரியல் எஸ்டேட்டுக்கும்
இரையாய் ஆக்கவா
உங்களுக்கு கால்சியம் வழங்கினோம்?

பால் உணர்ச்சி இல்லாத போதும்
உங்களுக்கு பால் தருவதற்காகவே
நீங்கள் காளைக்குப் போடவும்
கட்டுப்பட்டு நின்றோம்,

வாழ் உணர்ச்சியே இன்றி
இயற்கையை தரிசாக்கும்
உங்கள் வக்கிர நுகர்வைப் பார்க்கையில்
பால் கொடுத்த குற்றத்திற்காய்
தாழ்வுணர்ச்சி கொள்கிறோம்!

இரட்டை இலைகளால்
பசுக்களை மேய்ந்த பாவிகளை
உங்களுக்கு அடையாளம் காட்டவே
” அம்மா… அம்..மா.. ” என்கிறோம்!

குடும்பமே
காம்புகளை பிடித்து தொங்கினாலும்
ஒரு டம்ளர் பாலுக்கு
வழி இல்லாதபடி
எங்களையும் ஆளாக்கிவிட்டு
‘விலையில்லா கறவைமாடு’
எனும் வீண்பழிவேறு எங்கள் மீது!

ஆவின் பொருட்கள்
தவிக்கும் எங்கள் குரலுக்கு
தண்ணீரில்லை…
உங்களுக்கு தயிர் கேட்குதா?

மேய்ச்சலுக்கு நிலமில்லை…
உங்களுக்கு மேலான பால் வேண்டுமா?

தவிக்கும் எங்கள் குரலுக்கு
தண்ணீரில்லை…
உங்களுக்கு தயிர் கேட்குதா?

கழனிகளை அழித்த ஊரில்
கழனித் தண்ணிக்கே வழியில்லை…
உங்கள் கைக்கு நெய் கேட்குதா?

விலை நிலங்களை அழித்து,
கால்நடைகளை அழித்து,
உயிரினச் சூழலையே அழிப்பவர்களுக்கு
‘பால்ஊத்தாமல்’
இனி வாழ்வில்லை என
என் ஐந்தறிவுக்கு தோன்றுது!

ஆறறிவு படைத்த உங்களுக்கு?

– துரை.சண்முகம்

ஆவின் விலை உயர்வு புமாஇமு சுவரொட்டி
ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக பு மா இ மு தோதோழர்கள் ஒட்டிய சுவரொட்டி – தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

மின்கட்டண உயர்வு கருத்துக் கேட்பு கூட்டத்தில் HRPC

1

மின்கட்டண உயர்வு தொடர்பாக அக்டோபர் 29-ம் தேதி திருநெல்வேலியில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், நாகர்கோவில் மாவட்டத் தலைவர் பூபதி, திருநெல்வேலி மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மின்வாரியத்தில் எந்த ஆண்டு வரை லாபம் ஏற்பட்டது, எந்த ஆண்டு வரை நஷ்டம் ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்ப்பபட்டது. இதற்கு பதில் அளித்த நிதித்துறை இயக்குனர் புள்ளிவிபரங்களை தவறாக கூறினார். பதிலை கேட்டுச் சொல்வதாகக் கூறினார். பதில் தெரியாமல் ஏன் கூட்டத்திற்கு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு 2001-ம் ஆண்டு முதல் மின்துறை ஒவ்வொரு ஆண்டிலும் சந்தித்த லாப, நஷ்ட விபரங்களை தெரிவித்தார். அதன்படி 2001-02ம் ஆண்டில் ரூ 183 கோடி லாபம் சம்பாதித்ததாகவும், அடுத்த ஆண்டில் ரூ 4,851 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரே ஆண்டில் லாபம் நஷ்டமாக மாறியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆணையத்தின் உறுப்பினர் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததும் நஷ்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றார். மின்வாரிய அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.

தூத்துக்குடி அனல்மின்நிலையம் தொடர்பான புகார் கேள்விக்கு மின்வாரிய செயலாளர் தற்சமயம் பதில் இல்லை என்றதால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரினர்.

மாலை 5 மணிக்கு கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. கேட்ட பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்காத நிலையில் கூட்டத்தை முடித்ததை கண்டித்து மைடையின் முன் முழக்கம் போடப்பட்டது. ஆணைய தலைவரும் உறுப்பினர்களும் வெளியில் வந்த போது அவர்களிடம் பேட்டி எடுக்க முற்பட்ட செய்தியாளர்களை ஒரு நபர் தள்ளி விட்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் – புகைப்படங்கள்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி

பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!

17

த்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் ஆக மாற்றுதல், பல்கலைக்கழகங்களில் இந்தித் திணிப்பு… என்று மோடி அரசின் இந்துத்துவ வெறி நடவடிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமலாகிக் கொண்டிருக்கும் சூழலில், உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் என்ற பாரதிய ஜனதாக் கட்சி எம்.பி, தமிழின் மேன்மை பற்றி பொளந்து கட்டி வருகிறார்.

தருண் விஜய்
ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த பார்ப்பனக் குள்ள நரி தருண் விஜய்.

“வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக்கி, தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்!” இவையெல்லாம் சென்ற ஆண்டு (மன்மோகன் ஆட்சியில்) மாநிலங்களவையில் தருண் விஜய் பேசியவை.

உடனே அவரைப் பாராட்டி ஆனந்த விகடனில் (2, அக். 2013) ஒரு பேட்டி வெளியானது. “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்- என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ… தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!” என்று அதில் உருக்கமாகப் பேசுகிறார் தருண் விஜய்.

ஆனால், மேற்படி யோக்கியர் தற்போதைய மோடி அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. இருந்தபோதிலும், “தமிழுக்குக் கொடி பிடித்த பஞ்சாபி” என்ற தலைப்பில் ஜு.வி.-யில் மறுபடியும் ஒரு பேட்டி; “நானும் தமிழைக் காதலிக்கிறேன்” என்று தமிழ் இந்து நாளேட்டில் இன்னொரு பேட்டி.

“திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடவேண்டும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி வட இந்திய மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது” என்று இந்தப் பேட்டிகளில் சரம் சரமாக அடித்து விடுகிறார் தருண் விஜய். “இதையெல்லாம் மோடியிடமும் ராஜ்நாத் சிங்கிடமும் சொன்னீர்களா?” என்று யாரும் கேட்கவில்லை.

இப்பேட்டிகள் வெளியானதைத் தொடர்ந்து தருண் விஜய்க்கு கருணாநிதி, வைகோ, ராமதாசு போன்றோரின் பாராட்டுகள்! மறுபடியும் ஊடக விளம்பரம். மேற்படி தமிழர் தலைவர்களும் இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் தமிழகத்தின் தனிச்சிறப்பு! இன அழிப்பை நடத்தி வரும் ராஜபக்சே, அதிகாரப் பரவல், முன்னேற்றம் பற்றி அளந்து விடுவதைப் போன்றதுதான் தருண் விஜய்யின் பேச்சு.

இந்தி படிக்கும் அரசு ஊழியர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை தருகிறது மோடி அரசு. தமிழ் படிக்கும் வட இந்திய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தரவேண்டும் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்குத் தைரியமாகப் பேட்டி கொடுக்கிறார் அவருடைய கட்சி எம்.பி. தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை !

tarun-vijay-1உண்மை நிலை என்ன? வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த்துறைகளே இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளன. ஆக்ரா, மீரட், கான்பூர், அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இத்துறைகள் மூடப்பட்டுவிட்டன. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1945-ல் தொடங்கப்பட்ட தமிழ்த் துறையில், இரு பேராசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்குக் காரணம் தமிழ்மொழியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அருண் பாரதி. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நிதி அளித்த போதிலும், காசியின் சம்பூர்ணானந்தா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் காசி வித்யா பீடத்தில் தமிழுக்காக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கவுகாத்தி, அலிகார், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இதுதான் தமிழ்த்துறையின் நிலை.

இவையெல்லாம் தருண் விஜய்க்கு தெரியாத உண்மைகள் அல்ல. இந்து – இந்தி – இந்தியா என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய உணர்ச்சிதான் தமிழுக்கு எதிராக நிலவும் இந்த விசேட காழ்ப்புணர்வுக்கு காரணம். இந்த உணர்வு பொதுவாக பெரும்பாலான வட இந்தியக் கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது என்ற போதிலும், சமஸ்கிருத-இந்தி ஆதிக்க வெறி என்ற பார்ப்பன பாசிச அரசியல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கே உரியது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பத்திரிகையான “பாஞ்சஜன்ய”வின் ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்தான் தருண் விஜய். இவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் சிந்தனைக் குழாமான சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின் இயக்குநர். தொகாடியாவின் வெறிப்பேச்சையே நாசூக்கான நாகரிகமான மொழியில் பேசத் தெரிந்த வித்தகர். இந்து தேசிய அரசியலைத் தீவிரமாகக் கொண்டு செல்லும் நோக்கத்துக்காகவே ஆர்.எஸ்.எஸ். தலைமையால் பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டிருப்பவர்.

இங்ஙனம் பார்ப்பனப் பாசிசக் கும்பலின் மூளையாக முன்நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு நபர் தமிழுக்கு ஆதரவாக வலிந்து பேசுவதற்கு காரணம் என்ன? தமிழின் தனித்துவத்தையும் தமிழகத்தின் வரலாற்றையும் பற்றி இதற்கு முன் எதுவுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்து கொண்டது போலவும் அவர் நடத்தும் இந்த நயவஞ்சக நாடகத்தை ஊடகங்களும் கடைவிரிக்கக் காரணம் என்ன? மோடி அரசின் சமஸ்கிருத / இந்தி திணிப்பு தோற்றுவிக்கும் எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்வதும், தமிழையும் தமிழ் மரபையும் பார்ப்பனியத்தின் நோக்கத்திற்கேற்ப திசைதிருப்பி நிறுவனமயமாக்கிக் கொள்வதும்தான் இதன் நோக்கம்.

சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட, சுயேச்சையான, தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற, மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கின்ற திராவிட மொழி என்ற பெருமையைப் பெற்றது தமிழ். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனக் கும்பலால் கிட்டத்தட்ட கொன்று புதைக்கப்பட்டிருந்த தமிழை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல். ஆரிய – சமஸ்கிருதச் சதியை அம்பலமாக்கியது மட்டுமின்றி, தமிழின் சுயேச்சையான திராவிட மரபை எடுத்துக் காட்டிய காரணத்தினாலேயே, கால்டுவெல்லைக் கயவன் என்று தூற்றுபவர்கள் இந்துத்துவவாதிகள்.

தருண் விஜய், சென்ற ஆண்டு மாநிலங்களவையில் தமிழ்த்துதி பாடிய அதே மாதத்தில், சமஸ்கிருதத்தை காங்கிரசு அரசு அழித்து வருவதாக குற்றம் சாட்டி பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரையில் காணப்படும் வரிகள் இவை.

“சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்து விடும்… பிறப்பு முதல் இறப்பு வரை, குழந்தைக்குப் பெயர் வைப்பது, திருமணம் ஆகியவற்றில் தொடங்கி, மரணத்துக்குப் பின் சோர்க்கத்திற்கு நுழைவுச்சீட்டு பெறுவது வரையிலான அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை. சமஸ்கிருதம்தான் இந்தியா. இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே, அதனை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும்.” (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)

தருண் விஜய் கூறுகின்ற அந்த நிலைமைதான் பார்ப்பனக் கொடுங்கோன்மை. அதனை எதிர்த்துப் போராடியதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி பெற முடிந்தது. தங்களுடைய பழைய பொற்காலத்தை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து கொள்வதுதான் இந்துத்துவ சக்திகளின் நோக்கம்.

“வேத-உபநிடதம் மட்டுமின்றி திருக்குறளும் படிக்க வேண்டும்” என்று தருண் விஜய் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார். பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரித்து விழுங்க முயன்றதைப் போலவே, வள்ளுவரையும் ஒரு ரிஷி ஆக்கி, திருக்குறளை தர்ம சாத்திரப் பட்டியலில் சேர்த்து நிறுவனமயப் படுத்துவதுதான் இதன் நோக்கம். தன்னை எதிர்த்து நின்ற பழங்குடிகளையும், மொழிகளையும், இனங்களையும் நசுக்கி அழித்தது மட்டுமல்ல, அரவணைத்தும் அழித்திருக்கிறது பார்ப்பனியம் என்பதே வரலாறு. அத்தகைய அரவணைப்புதான் தருண் விஜயின் தற்போதைய தமிழ்க் காதல்.

தமிழகத்தை மட்டுமல்ல, பாரதிய ஜனதாக் கட்சி கால்பதிக்க முடியாத வட கிழக்கிந்திய மாநிலங்களையும் வழிக்கு கொண்டுவரும் பொறுப்பு தருண் விஜய்க்கு தரப்பட்டிருக்கிறது என்பது அவரது வலைத்தளத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.

– அஜித்.
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

கருப்பு பணம் : வெளியானது பட்டியலா ஒப்பாரியா ?

6

ருப்பு பண விவகாரத்தில் குரங்குகளே வெட்கப்படும் அளவுக்கு பல்டி மேல் பல்டி அடித்து வருகிறது பாரதிய ஜனதா கும்பல். தேர்தல் பிரச்சார காலத்தில் தாங்கள் வென்று ஆட்சிக்கு வந்து நூறே நாட்களில் மொத்த கருப்பு பண குவியலையும் வாரி வந்து கொட்டுவோம் என்று பீற்றினார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளைந்து நெளிந்து நெம்பி குனிந்து – பதஞ்சலி முனிவரே யோசித்திராத கோணத்தில் தலை எது வால் எது என்று தெரியாத ஒரு ’ஸ்திதியில்’ காட்சி தந்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கும்பல்.

கருப்புப் பணம்கருப்பு பணம் தொடர்பான வழக்கில் சில நாட்களுக்கு முன் தங்கள் தரப்பை முன்வைத்த பாரதிய ஜனதா அரசு, அவ்வாறு பெயர்களை வெளியிடுவது தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், இந்தியா செய்து கொண்டிருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

இணையவாசிகள் ஒருபக்கம் காரி உமிந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம், காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் காவி பிளேடு பக்கிரிகளின் பேச்சு மாத்து செயலை கழுவி ஊற்றினர். பிள்ளைப் பூச்சி காங்கிரசே ஏறி அடித்ததில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயிற்சி பெற்ற பாரதிய ஜனதாவுக்கு மகா கேவலமாக போய் விட்டது (எருமை மாதிரி இருந்துகிட்டு… இதெல்லாம் அடிவாங்கற பாடியா பாஸ்?)

லேசாக சொரணை வந்ததும் “கருப்பு பணத்தைப் பதுக்கியவர்கள் பெயர்களை வெளியிடுவோம்…. ஆனால் இரகசியமாகத் தான் வெளியிடுவோம்” என்றார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ’இது சரியான போங்காட்டமாக இருக்கிறதே’ என்று அடுத்த சுற்று கொந்தளிப்புகளுக்குப் பின் மீண்டும் வாயைத் திறந்த அருண் ஜேட்லி, “பெயர்களை வெளியிட்டால் காங்கிரசுக்குத் தான் தர்ம சங்கடம் ஏற்படும்” என்றார். அதாவது காவியும் கதரும் வேறு வேறல்ல என்பதை மோடியை நம்பிய நடுத்தர வர்க்க அப்பாவிகளின் பொடனியில் தட்டி உணர வைத்தார்.

இந்த மொத்த விளையாட்டின் விதிகளையும், போக்குகளையும் நன்கு உணர்ந்திருந்த பரம்பரை திருடனான காங்கிரசு களத்தில் இறங்கி விழி பிதுங்கிக் கிடக்கும் புது திருடன் பாரதிய ஜனதாவை போட்டு சாத்த தொடங்கியது. ”சொம்மா பூச்சி காட்டாத மாமூ.. நெஞ்சுல கீறது மஞ்சா சோறா இருந்தா, தில்லு இருந்தா பேரைச் சொல்லு நைனா” என்று லோக்கலாக இறங்கி அடித்தார் திக் விஜய் சிங். அதே கருத்தை கொஞ்சம் ‘மானே தேனே பொன் மானே’ சேர்த்து அறிவுஜீவி மொழியில் உரைத்தார் ப.சிதம்பரம்.

கருப்புப் பணம் - காங்கிரஸ், பாஜக
“ஸ்விஸ் வங்கியிலிருந்து எல்லா கருப்புப் பணத்தையும் கொண்டு வருவோம்”
“என்னோட பணத்தை எல்லாம் ஒதுக்குவதற்கு போதுமான நேரம் கொடுப்பீங்கன்னு சொல்லுங்க, பிளீஸ்”

கரடியே காறி துப்பி விட்ட துர்பாக்கிய நிலைக்கு ஆளான பாரதிய ஜனதா, தற்போது இறுதியாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. மேற்படி பிரமாண பத்திரத்தில் சுமார் எட்டு பேர்களின் பெயர்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. டாபர் குழுமத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் பர்மன், ராஜ்கோட்டைச் சேர்ந்த தங்க வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோதியா மற்றும் கோவாவைச் சேர்ந்த டிம்ப்ளோ என்கிற சுரங்க குழுமத்தைச் சேர்ந்த ஐவரின் பெயர்களும் இந்தப் பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

பிரமாணப் பத்திரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள டாபர் குழுமம், தங்கள் குழுமத்தின் முன்னாள் செயல் அலுவலர் ப்ரதீப் பர்மன் முன்னர் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்த போது சட்டபூர்வமான நடைமுறைகளுக்கும் வருமான வரித்துறையினரின் விதிகளுக்கும் உட்பட்டே மேற்படி சுவிஸ் வங்கி கணக்கைத் துவங்கியதாகவும், அதன் வரவு செலவு விவரங்கள் அவரால் சொந்த முறையில் முன்வந்து முன்னரே வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேற்படி நடவடிக்கைகளில் தாங்கள் எந்த விதத்திலும் சட்டவிரோதமாக செயல்படவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

பங்கஜ் லோதியாவோ தனக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கே இல்லை என்று சொல்லி விட்டார். மற்றொரு நிறுவனமான டிம்ப்ளோவுக்கு பாரதிய ஜனதாவுடனும் காங்கிரசுடனும் நெருக்கமான தொடர்புகள் இருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் பாரதிய ஜனதாவுக்கு ஒன்பது முறைகளுக்கும் காங்கிரசுக்கு மூன்று முறையும் இந்நிறுவனம் தேர்தல் நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கிறது தேர்தல் கண்காணிப்பகம் (Election Watchdog) என்கிற தன்னார்வ குழு.

இவ்வளவு அளப்பறைகளுக்குப் பின்னும் பாரதிய ஜனதா அளித்துள்ள பெயர் பட்டியலில் பெரிய முதலாளிகளின் பெயர்களோ அரசியல்வாதிகளின் பெயர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தில் மதிப்பு என்னவென்பதைப் பற்றி அதிகாரப்பூர்வமான மதிப்பீடுகள் ஏதும் இல்லாத நிலையில், வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச நிதி ஒருங்கிணைவு (Global Financial Integrity) என்கிற சிந்தனைக் குழாமின் கணிப்புப் படி 1948-ல் இருந்து 2008 வரையிலான காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள வரியில்லாச் சொர்க்கங்களில் சுமார் 462 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செல்வம் பதுக்கப்பட்டிருக்கிறதாம்.

ஏழை இந்தியாவும் - கருப்புப் பணமும்இந்நிலையில் சுவிஸ் வங்கியில் இரகசிய கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் ஒன்று இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. கணக்கு வைத்துள்ளவர் பெயர், அவரது கடவுச்சீட்டு எண், மொத்த முதலீடு உள்ளிட்ட விவரங்கள் தற்போது அரசிடம் உள்ளன. ஆனால் இந்த விவரங்கள் உண்மை என்றோ அது கருப்புப் பணம் தான் என்றோ அந்த வங்கியோ, அந்நாட்டு அரசோ சாட்சியமளிக்காது. திருட்டு உண்மை என்றானால், திருடிய பொருளை மறைத்து வைக்க உதவியவனும் குற்றவாளி என்றல்லவா முடிவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, நீதிமன்றத்தில் ”சட்டப்படி” குற்றத்தை நிரூபிக்க முடியாது.

சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துக் கொள்வதே கிரிமினல் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை. சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வருமானவரி கட்டவில்லை என்பதுதான், அந்தக் கறுப்புப் பணம் தொடர்பாக இந்திய அரசு சாட்டுகின்ற குற்றம். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுடைய சுவிஸ் வங்கிக் கணக்கை இந்திய அரசால் முடக்க முடியாது. ஏனென்றால் சுவிஸ் நாட்டின் சட்டப்படி, வரிஏய்ப்பு என்பது குற்றமல்ல. அது மட்டுமல்ல, உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான மோசடிகளை கிரிமினல் குற்றமாகக் கருதிய இந்தியாவின் பெரா (FERA) சட்டத்துடைய பல்லைப் பிடுங்கி, அதனை 1999-ல் பெமா (FEMA) என்ற உரிமையியல் சட்டமாக மாற்றிவிட்டது பா.ஜ.க அரசு. எனவே, அதை வைத்தும் எதுவும் செய்ய இயலாது.

ஆக, செய்யக் கூடியதெல்லாம் பெயர்களின் பட்டியலை வைத்து நாக்கு வழிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்டவர்களுடைய கையில் காலில் விழுந்து கழிவு பெறலாம். ஒருவேளை பெரிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் மேற்படி பட்டியலில் இருந்தால் அதை வைத்து அரசியல் கொடுக்கல் வாங்கல்களில் பிளாக் மெயில் செய்து கொள்ளலாம். ஆனால் இதை அப்படி சுலபமாக செய்யமுடியாபடிக்கு காங்கிரசு, பாஜக இரண்டு கட்சிகளுமே கருப்புப் பணத்தில்தான் அரசியல் செலவுகளை மேற்கொள்கின்றன.

கருப்புப் பணம் - அரசியல்வாதிகள்இது ஒருபக்கம் இருக்க, தற்போது வெளிவந்துள்ள பெயர்களே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கிறது. இருப்பதிலேயே அப்பாவி கோயிந்துகளின் பெயர்களாக பார்த்து நேர்த்தியாக தயாரிக்கப் பட்ட ஒரு டுபாக்கூர் பட்டியலை இந்தியாவின் கையில் சுவிஸ் வங்கி கொடுத்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு அது அரசியல் அரங்கில் பாரிய தாக்கங்களை செய்யத் துவங்கியிருந்த ஒரு காலகட்டத்தின் பின்னணியிலேயே சுவிஸ் வங்கி தனது இரகசியத் தன்மையை தளர்த்திக் கொள்வதாக காட்டிக் கொண்டது.

சூதாட்டக் குமிழிப் பொருளாதாரத்தின் விளைவாக உலகம் முழுவதும் முதலாளித்துவ கட்டமைவு உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்த நிலையில், மொத்த அமைப்பு முறையின் மேலும் மக்கள் பரவலாக அதிருப்தியுற்றிருந்த சமயம் மக்களின் கோபாவேசத்தை தனிப்பட்ட ஆளும் வர்க்க ஊழல் பேர்வழிகளின் மேல் திருப்பி விடும் வண்ணப் புரட்சிகள் சமீபத்தில் தான் நடந்தேறின. அதே காலகட்டத்தில் தான் இந்தியாவிலும் ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் கிளைக்கத் துவங்கின. இடையில் புகுந்த பாரதிய ஜனதா தனது சவடால் முழக்கங்களால் அதிருப்தியுற்ற மக்களில் கணிசமானோரை கவர்ந்திழுக்க முடிந்ததை நாம் சென்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கண்டோம். தடுப்பணைகளை உடைத்தெறியும் ஆவேசத்திற்கான வடிகாலாக அமைந்தார் மோடி. முதலாளித்துவ உலகம் தகுந்த சமயத்தில் குப்பையை கோபுரத்தில் ஏற்றியது.

ஆக, அரசிடம் “இரகசியமாக” இருப்பதாகச் சொல்லப்படும் பெயர்களும் தற்போது வெளியானதை ஒத்த கோயிந்துகளின் பெயர்களாக இருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம். ஏற்கனவே முதலாளித்துவ ஊடகங்கள் மற்ற பெயர்களைப் பற்றி “அதில் காங்கிரசின் துணை அமைச்சர் ஒருவர் பெயர் இருக்கிறதாம், மகாராஷ்டிரத்தின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பெயரும் இருக்கிறதாம்” என்று கிசுகிசுக்கத் துவங்கி விட்டன. ஏனெனில், பலரும் சொல்வதைப் போல் கருப்புப் பணம் என்பது சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட செல்வம் மட்டுமில்லை – அதில் பெரும் பகுதி சட்டப்பூர்வமான முறையிலேயே முதலீடுகளாக வரியில்லா சொர்க்கத் தீவுகளுக்குச் சென்று திரும்புகிறது. நாட்டின் உள்ளும் வெளியும் சென்று திரும்பிப் புழங்கும் ஊக பேர வர்த்தகச் சூதாட்ட சந்தையின் பணத்தில் எது வெள்ளை எது கருப்பு என்பது அந்த ’ஆண்டவனுக்கே’ தெரியாது என்பதே உண்மை. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் பாலில் வெண்ணை போல் ஒன்று கலந்து ஓருடலாகி பல பத்தாண்டுகளாகின்றன.

மோடி மற்றும் காவி கும்பலின் சவடால்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே என்பதை தாமதமாகவேனும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை ஏமாறுவதை அப்பாவித்தனம் எனலாம், தெரிந்தே எப்போதும் ஏமாந்து கொண்டிருப்பதை அயோக்கியத்தனம் என்றல்லவா சொல்ல வேண்டும்?

கருப்பு பணம் குறித்து விரிவாக புரிந்து கொள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள புதிய ஜனநாயக கட்டுரைகள் உதவும். இவற்றைப் படித்து நாம் தெளிவு பெறுவதோடு நமது நட்பு வட்டத்தில் இருக்கும் அப்பாவி மோடி பக்தர்களையும் தெளிவடையச் செய்வது நம் கடமை.

கார்ட்டூன்கள் : இணையத்திலிருந்து

இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்!

12

இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்!

நாம் அன்றாடம் பார்க்கும் சுற்றுப்புறம்தான், அதையே ஒரு பொழுது மழைக்குப் பிறகு பாருங்கள், மறைந்து மங்கிக்கிடந்த இயற்கைக் காட்சிகள் உயிர்ப்பித்தது போலத் தெரியும். மழைநீர் கழுவிய இலை முகங்கள், மணம் விரிந்து நிறம் பொழியும் பல பூக்கள், மழை நனைந்து கிளையமர்ந்து தலை துவட்டும் பறவைகள், வேற்றிடம் தேடி செவ்வரிக்கோடாய் பேரணி தொடங்கும் எறும்புகள், கார் நிலையாலே நீர் நிலை நிரம்பி ஊர்விழி கவரும் ஆம்பல்கள்… என ஒட்டுமொத்த உயிரினச் சூழலே விழித்துக் கொள்கிறது, (இந்த இடத்தில் நகரத்துக் கோலங்கள் நாம் ஏற்படுத்திக் கொண்ட கழிவுகள் என்பதை நினைவில் நிறுத்துக) இப்படியொரு இயற்கை நம்மைச் சுற்றி இருப்பதையே மறந்துபோய், இல்லை கூலி உழைப்பின் கொடுமையால் மறக்கடிக்கப்பட்டு, முழுநேரமும் முதலாளித்துவத்துக்கு உழைத்துக்கொட்டி உழைப்புச் சக்தி, உயிரினச் சக்தியை மட்டுமல்ல பல கோடி மக்கள், உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இயற்கையையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஐந்திணைநாம் வாழும் இந்த நிலப்பகுதி, குறிப்பாக தமிழகம் ஐவகை நிலங்களையும், அதற்கேற்ற வளங்களையும் கொண்டது என்பது ஏடறிந்தவர்களுக்கு தெரியும், இல்லை, நம் பாட்டி, தாத்தா பழங்கதைகள் வழி, அனுபவங்கள் வழி அறிந்திருக்கலாம், இப்படித் தலைமுறை தலைமுறையாக பல்லுயிரிகளையும் வாழ வைத்த இயற்கை, உழைக்கும் மக்கள் பேணிக்காத்த இயற்கை வளங்கள் இன்று ஏன் இல்லை, தானாக அழிந்தனவா? இல்லை. இயற்கை வளங்கள், ஆதாரங்கள் இவைகளின் இயங்கியல் சுழற்சியால் மண்ணுக்கு கிடைத்துவந்த மழை, மாறி மாறி வந்த சீரான பருவங்கள், புல் பூண்டு, பச்சையோடு, மனித மனங்களையும் மலர்வித்த இயற்கை அமைப்பை ஒரு சில தனிப்பட்ட முதலாளிகளின் லாப வெறிக்கு இரையாக்கியதால், அனைவருக்குமான இயற்கை அழிந்து வருகிறது.

மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட சமூக அமைப்பால், குறிப்பாக சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சியிலான முதலாளித்துவ சமூக அமைப்பால் தங்களை மட்டும் பாதித்துக் கொள்ளவில்லை, இயற்கை அமைப்பையும் சீரழித்து, சிதைத்து வருகிறோம் என்பதை அறிவோமா? கோழியையும், ஆடுகளையும், ஆலமரத்தையும் குழந்தைகளுக்கு பாடப் புத்தகத்தில் மட்டுமே காட்டி வளர்க்கும் அளவுக்கு இயற்கையைத் தொலைத்துவிட்டு எதைப் பெறப்போகிறோம் புறத்தில்! இன்னும் சில தலைமுறைக்கு இப்போது மிச்சமிருப்பதுதான் இயற்கை என நம்பும் அளவுக்கு நிலைமையை கேவலமாக்கிவிட்டோம், யார் குற்றம்? நாம் இழந்து வரும் இயற்கை எத்துனை வளமானது என்பதை அறிந்தால்தான், இழப்பின் வலி உணர்ந்தால்தான் பெறுவதற்கான போராட்டத்தின் உணர்ச்சி கொஞ்சமாவது நம் தோலில் உரைக்கும்.

நம் முன்னோர்களின் அனுபவத்தின் வழி, இலக்கியக் காட்சிகள் வழி கொஞ்சம் நம் இயற்கை வளத்தைப் பாருங்கள். அன்றைய இயற்கையை நமக்கு அறியத்தருகிற இந்த இலக்கியக் காட்சிகளில் எழுதியவர்களின் கற்பனையும், உவமைகளும் கலந்தும், மிகுந்தும் இருந்தாலும் தனித்தனியாக தொடர்பற்றது போல நாம் காணும் இயற்கையின் இயக்கத்தை ஒருங்கே நம் மனக்கண் முன் நிறுத்தும் காட்சிப் படிமங்களில் அக்காலத்திய மனிதனின் இயற்கை அறிவும், உணர்வும் நம்மிடம் கற்றலையும், இயற்கையை பேணுதலையும் வேண்டுகின்றன. முதலாளித்துவ வணிகக் கொள்ளைக்காக ஊட்டியில் சூட்டிங் வைத்தாலும் உயர்ந்து நிற்கும் இயற்கை வனப்பை அவுட் ஆஃப் போக்கசிலும், திறந்து கிடக்கும் பெண்களின் சதைகளை குளோசப்பிலும் காட்டுவதிலேயே குறியாய் இருக்கும் இன்றைய ‘வளர்ந்த’ நவீன கலைஞர்களைப் பார்க்கையில் அன்றைய அக ஒழுக்க விழுமியங்களை இயற்கையை துணைக்கழைத்துக் கொண்டு மாந்தனை உலகத்தின் ஒரு பகுதியாக நினைவுறுத்தும், அந்த இயற்கையின் தூண்டுதலைப் பெற படித்துதான் பாருங்களேன்.

இயற்கையின் தூண்டுதல்
இயற்கையின் தூண்டுதலைப் பெற படித்துதான் பாருங்களேன்.

சங்க இலக்கியம் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் ஒரு காட்சி, மலைப்பகுதியில் பாயும் ஆற்றின் வரவில் விரவும் காட்சிகள் எத்தனை? “மருதத்துறையின் அழகு” எனும் தலைப்பிலான அப்பாடல், “வரையன புன்னாகமும் கரையன சுரபுன்னையும்…” என நீள்கிறது. அதில் பாய்ந்து வரும் நீரானது மலைப் பகுதியிலுள்ள புன்னையின் மலர்களையும், ஆற்றங்கரை பகுதியிலுள்ள சுரபுன்னை மலர்களையும், வாள் வீர மரத்து மலர்களையும், வேங்கையின் பூக்களையும், அலரிப் பூக்களையும், காந்தட் பூக்களையும், உதிர்ந்த தோன்றிப் பூக்களையும், தீயென்று எண்ணுமாறு மலர்ந்து, காற்று மோதுவதால் கட்டவிழ்ந்த இதழ்களைக் கொண்ட ஒள்ளிய நீலப் பூக்களையும், மூங்கில்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள சோலைப் புறங்களிலே அருவி நீரானது நிரப்பிற்று. மேலும் அலை நுரைகளாகிய மென் குமிழிகளையும், இனிய மணமுடன் கூடிய சந்தனக் குழம்பினையும் உடையதாக வையை நீர்பெருக்கு விளங்கிற்றாம். நமக்குத் தெரிந்த பூக்களின் பெயரைக் கேட்டால் ஒரு நான்கினைச் சொல்வதே அபூர்வம், இந்தக் காட்சிகளைப் பாடிய நல்லந்துவனார் எந்தக் கல்லூரியிலும் ‘எம்டெக்’ படித்து தன்நிலம் மறந்தவர் அல்ல, தன்நிலம் அறிந்து இயற்கையின் ஈடுபாட்டால் எத்தனைப் பூக்களை அடுக்குவதன் வழி, ஒரு ஆற்றின் வழி அப்பகுதி உயிரினச் சூழலையே காலம் கடந்தும் நம் கண்முன் நிறுத்துகிறார்.

இப்படி பலவும் தழுவிய இயற்கையின் நீரை விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் பாட்டிலில் அடைத்து “சிறுவாணி”, “இமாலயா”, “அக்குவா”, “கின்லே” என விற்று தீர்ப்பதை சகிக்கும் நம் “தோலின் இயற்கையைப்” பார்த்து இயற்கை வருந்தும்.

‘எந்த இயற்கை எப்படி போனால் எனக்கென்ன? எத்தனை தண்ணி கேன் வேண்டுமானாலும் வாங்கும் வசதி எனக்கிருக்கிறது!’ என்று நியாயம் பேசி சாரம் போனவர்களுக்கு மத்தியில் சங்க இலக்கியத்தின் “ஐங்குறுநூறு” – இல் மருத நிலத்தைப் பாடிய ஓரம்போகியார் எனும் புலவர் “கண் பசப்படைந்தது” எனும் பாடலில் ஒரு வாழ்வியல் காட்சியை விளக்குமிடத்தில் கூட “கூதிர் ஆயின் தன்கலித்தந்து, வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்…” அதாவது கூதிர்காலமாகிய அய்ப்பசி, கார்த்திகை மாதங்களானால் கலங்கியும், வேனிற்காலமாகிய வைகாசி, ஆனி மாதங்களில் நீல மணிபோல தெளிந்தும் நீர் விளங்கும் ஊரனே! எனப் பாடிச் செல்கிறார்.

சாக்கடையான நீர்நிலைகள்
நகரமயமாக்கத்தினால் சாக்கடையான நீர்நிலைகள்

நீர் நிலையெல்லாம் நகரமயமாக்கத்தினால் சாக்கடையாக்கி, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புமளவுக்கு ‘வல்லரசாகப் பீற்றும்’ நாட்டில் இன்னும் சாக்கடைக்கு ரூட்டு போட முடியாத இந்த முதலாளித்துவத்தின் இயற்கைச் சீரழிப்பில் வாழும் நம்மை “கூதிர் ஆயின் ட்ரைனேஜ் கலித்து, வேனில் ஆயின் கூவம் நாறும் மகனே!” என்று இன்றிருந்தால் ஓரம்போகியார் பாடியிருப்பார். தண்ணீரை தனியாராக்கி விற்பது மட்டுமல்ல, தனது மூலதன வளர்ச்சிக்காக, லாபத்திற்காக நீர் நிலைகளை மாசுபடுத்தி இயற்கையை சீரழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகளை எதிர்க்காமல் எப்படி கிடைக்கும் இயற்கையின் அழகு?!

குறிஞ்சி எனும் மலைநிலப்பகுதியில் பன்றி ஒன்று தினைப்பயிரை மேய்ந்ததாக பாடல் ஒன்றில் பதிவு செய்கிறார் கபிலர். “மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி…” அதாவது மென்மையான தன்மையுள்ள தினையை யாரும் அடித்து விரட்டாத சூழலில் அஞ்சாமல் மேய்ந்ததாம் பன்றி. வளமிக்க இயற்கையில் பன்றியும் பசியாறியிருக்கிறது. இன்றோ ‘வளர்ந்த’ நிலையில் ஒரு ரூபா இட்லிக்கு உழைக்கும் மக்கள் ஏங்குவதும், ‘வளர்ச்சியின்’ அடையாளமாம். முதலாளித்துவக் கழிவுகளான பீசா, பர்கர், கோக், பெப்சி என்று பன்றிகளைப் போல ஒரு கூட்டம் மேய்வதும் காலத்தின் கோலம். பன்றிக்கு தினையும், சுனையும் கிடைக்குமளவுக்கு இயற்கையை விட்டு வைத்திருந்தது. ஒரு காலம் பன்றிக்கு கிடைத்தது கூட கிடைக்காமல், மனிதனை ‘சுகரிலும்’, ‘கஞ்சியிலும்’ குடியிருக்க சாக்கடையிலும் தள்ளியிருக்கிறது முதலாளித்துவ முன்னேற்றம்!

தேன் உண்டாகும் ஒரு மலை, அதனிடத்தே தெளிந்த நீர் சூழ்ந்துள்ள ஒரு வட்டக்கற்பாறை, அந்தப் பாறைக்கு வெளியே தூய மணல்பரப்பு, அதிலும் ஓரிடம் தென்றல் வீசுவதால் வரிவரியாய் கரு மணல் கோடுகள்… இப்படி காட்சி நீள்வது எங்கு தெரியுமா? வெம்மை கொண்ட பாலை நிலத்தில், “நற்றிணையில்” நப்பசலையார் எனும் புலவர் காட்டும் நிலைமை இது, இயற்கை வளங்களுக்கு வேதாந்தாவும், அம்பானியும் விலை வைக்காத காலம் அது, ஆகையால் வெப்பம் மிகுந்த பாலையிலும் மிச்சமிருந்தது பச்சையும், நீரும். நாடு முன்னேறுவதாய் சொல்லப்படும் இன்றோ, மருத நிலத்திலேயே அதாவது வயல் பகுதிகளிலேயே நீருமில்லை, பச்சையும் பார்க்க அரிதாய் வருகிறது. ஏன்? இயற்கை பொய்த்ததோ? இல்லை, கொடிய முதலாளிகளின் வக்கிரச்சுரண்டலால் காடுகளை அழித்து மழை பொய்த்து, நீராதாரங்களை ரியல் எஸ்டேட்டாக்கி, வயல்களை ‘பிளாட்’ போட்டு முதலாளித்துவ லாபத்தில் இயற்கை மூர்ச்சையாகிக்கிடக்கிறது. நாமோ கணினியில் அருவியை ‘லோட்’ செய்து ஐ…! நாடு முன்னேறியிருச்சின்னு கண் பசை காய்கிறோம்.

குளம்
இப்படி ஒரு குளத்தை நாம் பார்த்ததுண்டா

மலைவளத்தின் அழகுக் காட்சியை நாம் தள்ளி நின்று பார்த்து ரசித்திருப்போம், அதன் அழகின் ஊடே குறிஞ்சி வளத்தின் பன்முகங்களைப் பார்த்துக் கூறுகிறார் நற்றிணையில் நல்வேட்டனார் என்ற உழைப்புக் கவிஞர், “நெடிய கணுக்களை உடைய சந்தன மரத்தின் அசையும் கிளைகளிலே, பச்சை நிறம் கொண்ட மணம் வீசும் கொடியான தமாலம் சுற்றிப் படர்ந்திருக்கும். தேன் எடுக்கும் குறவர்கள் அக்கொடியை தேவைக்கு அறுத்து எடுத்துச்செல்வர். அத்தகு கொடிகள் அறுக்கப்பட்டு அவ்விடம் அது இல்லாததால் இது காடுதானோ என களிறுகள் (யானை) தமக்குள் குழம்புமாம். செம்பொன், வெள்ளை பளிங்குபோல மின்னும் கருங்கற்களிடையே ஓடும் காட்டாற்றின் சுழிதோறும் முதலைகள் இயங்கியபடி இருக்குமாம்… “யாணர் வைப்பின் கானம்” எனும் பாடலில் ஒன்றுக்கொன்று உயிரினச் சுழற்சியாய் விளங்கும் இயற்கை வளம் இன்றும் நெஞ்சத்தே புகும் ஆற்றலோடு பாய்கிறது. காட்டாற்று வெள்ளமும், வெண்பளிங்கு கற்களும் இன்று கார்ப்பரேட்டுகளின் சொத்தாகி, மலைகளிலும் மரங்கள் வெட்டப்பட்டு, கார்ப்பரேட் டூரிசம், வீக்கென்ட் ஜாலி, ஆன்மீகச் சுற்றுலா எனும் பெயரில் உத்தர்கான்ட் போன்ற மலைகளில் இயற்கை விதிகளுக்கு மீறி அளவற்ற, வரம்பற்ற கட்டிடங்களைக் கட்டி சிவனைப் பார்க்கப் போனவர்களை சிவலோகத்திற்கே அனுப்புகிறது முதலாளித்துவ கார்ப்பரேட் கொலைக்களம். யானை, முதலை, வாழை, சந்தன மரங்கள், கொடிகள் என லாபநோக்கற்று அனைவருக்குமான இயற்கையாய் நம் கண்ணில் விரிகிறது களவாடப்படாத குறிஞ்சிநிலம்.

ஆலங்குடி வங்கனார் என்பவர் பார்த்த இப்படி ஒரு குளத்தை நாம் பார்த்ததுண்டா? “வயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக் கயக்கணக் கொக்கின் கூம்புமு கையன்ன…” எனும் பாடல் காட்சியில், இளம் யானையினது காதுகளைப்போல பசுமையான இலைகள் விரிந்து விளங்கினவாம், கூட்டமாய் இருக்கும் கொக்குகளைக் போல குவிந்த மொக்கள், அவற்றுக்கு ஏற்ப அமைந்த திரட்சியான தண்டினைக் கொண்ட நீராம்பல், விடிவெள்ளிபோல இருளை போக்கியபடி கீழ்த்திசை நோக்கி மலர்ந்திருந்த குளமாம்…” அடடா! இயற்கையில் ஒன்றைச் சொல்கையில் இன்னொரு இயற்கையை விரும்பும் வாழ்வியல் விருப்பம் லாபம் பார்க்கும் மனத்திடம் வருமா?

எதைப் பார்த்தாலும் இதை தோண்டி விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதற்காகவே இயற்கையை ஆராயும் கார்ப்பரேட் வணிக வக்கிரம் மெல்ல மெல்ல மேலிருந்து கீழிறங்கி சாதாரண மனிதர்கள் மத்தியிலும் படிந்துவிடுவதால், இயல்பிலேயே பொது நலனுக்குரியதாய் இருக்கும் இயற்கை வளங்களை ரசிப்பதன் வழி போற்றிப் பாதுகாப்பதற்குப்பதில் சாதாரண மனிதன் வரை அதில் நமக்கும் ஏதும் ஆதாயம் உண்டா? என அம்மா குடிநீருக்கும், அடுக்குமுறை காண்ட்ராக்ட்டுக்கும் மனம் அலைகிறது. பல பத்து செலவழித்து எந்தப் பல்கலைக்கழகத்திலும் போய் படித்து பட்டம் பெறாத அந்தக் கால மனிதர்கள் இயற்கையை தம் உயிரினச் சூழலின் ஒரு பகுதியாக பார்த்துக் காத்தார்கள். கேவலம் ஒரு தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தரும் பிச்சைக் காசுக்காக அவனோடு கூட்டு சேரும் இந்தகால ஊடகப் பிறவிகள் முன்னேறியவர்களா? இயற்கையைப் பொதுவில் வைத்துப் பார்த்து, நம்மையும் பார்க்க வைக்க பாடிய அந்தக்கால மனிதர்கள் முன்னேறியவர்களா?!

தாது மணல் கொள்ளை
கடற்கரை மக்களும், மான்களும், பூக்களும், வண்டுகளும், வெள்ளுப்பும் விளைகின்ற பலபடித்தான நிலத்தை, தனி ஒரு முதலாளி தன் லாபவெறிக்காக கொள்ளை அடிக்கிறான்.

நெய்தல் எனும் கடலும் கடல் சார்ந்த நிலத்தையும் பாடவந்த உலோச்சனார் எனும் புலவர், “பெயினே! விடுமான் உழையினும்… இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்…” எனும் பாடலில், “அழியாத மரபினை உடைய நம் பழைய ஊர், மழை பெய்தால் உலவும் உழை எனும் மானினங்கள், பெரும்கதிர் கொண்ட நெல்லினங்கள் கொழுத்த மீன்களைச் சுடுவதால் எழும் புகை ஊரெல்லாம் சூழும். சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களின் இனிமே…” என கடலோர வளம் பாடியும், ஒரு இடத்தில் “கடல்சார்ந்த பகுதியில் இரும்பைப் போன்று விளங்கும் கரிய கிளைகளை உடைய புன்னை மரம், அதன் பசும் இலைகளை நீலம் போலத் தோன்றும் இலைகள் இடையே வெண்ணிற வெள்ளிப் பூக்கள் அதன் நறுமணத் தாது மணலில் விழுந்து, மணலிடம் புகுந்த வண்டுகள் விரையும்…” என்று ஒரு கடல் பகுதியோரம் இயற்கை வளத்தின் கவினுறு காட்சிகளை பயனுற விளக்குகிறார். இப்படி கடற்கரை மக்களும், மான்களும், பூக்களும், வண்டுகளும், வெள்ளுப்பும் விளைகின்ற பலபடித்தான நிலத்தை, தனி ஒரு முதலாளி தன் லாபவெறிக்காக தாது மணலை அள்ளி கடலையே தூர்வாரி இயற்கை வளங்களை நாசம் செய்து இதை நாட்டின் தொழில் முன்னேற்றம் என்று அரசும், அதிகார வர்க்கமும் சூழ நடக்கும் இந்த இயற்கை வளக் கொள்ளையை, கொலையை தடுக்க வேண்டுமெனில் முதலில் நமக்கு இயற்கையின் மதிப்பும், அதன் எல்லையில்லா பொதுப்பயனும், தெரிய வேண்டும். தன் உடலின் இயற்கையால் உருவான ஒரு ‘கருவை’ ஸ்கேன் எடுத்து, மருந்து கொடுத்து பார்த்து, பார்த்து கொஞ்சி ஒரு பிள்ளை பெற்றதையே பெருமையாக கூத்தாடி மகிழும் மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருக்கொண்டு, தன்னைவிட தன்னைச் சூழ்ந்திருக்கும் மனித இனத்துக்கு அளப்பிரிய நன்மைகளை பிரசவிக்கும் இயற்கையை நாம் எப்படி பொதுவில் வைத்து போற்றிப்பாதுகாக்க வேண்டும். இந்தச் சுரணைக்காவது கொஞ்சம் பழம்பாடல் காட்சிகளைப் பாருங்களேன்.

எருமையைக் கட்டிப் போட்டது போல, எவனோ ஒரு முதலாளிக்காக ரா முழுக்க விழித்திருந்து, வெயிலே படாமல் வைட்டமின் டி குறைபாட்டால் மூட்டுபோயி, எலும்பு தேய்ந்து வாங்கும் வெயிட்டான கூலிக்காக ஐ.டி. துறையால் நாடு வளர்ச்சியடைந்து வல்லரசாகப் போகிறது என்பவர்கள், ஓரம்போகியார் எனும் பழையகாலத்துப் புலவர் பார்த்தக் காட்சியைப் பார்த்தால், எருமை நடை முன்னேற்றமா? இழவெடுத்த இந்தக் கூலிக்கான என்ஜினியர் நடை அழகா என்பது தெரிந்துவிடும், “துறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை… எருமைச் சுவல்படு முதுபோத்து…” எனும் அகநானூறு பாடலில், “தள தள வென்று கண்ணுக்கு குளிர்ச்சி தரும் ஒரு எருமைக்கடா, நீர்த்துறை ஓரங்களில் மீன்கள் மேயும் பொய்கையிலே செழித்து ஆம்பல் மலர்களை மேய்ந்து, திளைப்பில் சேற்றில் உறங்கி, எழுந்து நடந்த கால்கள் மிதிபட்டு வரால் மீன்கள் சிதைந்தும், வந்த வழியில் அதன் மேனியில் களைப்பு தீர பகன்றைக் கொடியும் உடலில், கொம்பில் சூடியபடி ஊருக்குள் புகுந்ததாம்…” சேறு தூங்கிய எருமைக்குள்ள இயற்கையும், உறக்கமும் கூட வாய்க்காமல், நமது இயற்கை வனப்பையும், உடலின் இயற்கையையும் கூட சுரண்டும் முதலாளிகளுக்கு பணிந்து சேவை செய்து உடலில் உயிரணுவும் மிஞ்சப்போவதில்லை.

இயற்கைப் பெருமிதம்
இயற்கைப் பெருமிதம் இழந்து நிற்கும் நம் அவலத்திற்கு பெயர் உலகமய வளர்ச்சியா? உலகளாவிய இகழ்ச்சியா?

தனித்தனியாக இயற்கையையும், மனிதனையும் பிரித்து மேயும் கார்ப்பரேட் பயங்கரத்தை விலங்குகள்கூட சகிப்பதில்லை, தமது வாழ்விடங்கள் பறிக்கப்படும் போது, தமது இயற்கையின் நியதி மறுக்கப்படும் போது ஊருக்குள் புகுந்து கலகம் செய்கின்றன பாம்புகளும், யானைகளும். ஆறறிவு படைத்த மனிதனோ சதா சம்பள பயத்தில் சகலமும் இழந்தால் கடைசியில் மண்புழு உன்னை இயற்கையில் சேர்க்காது, உன்னை ஒரு உயிராகவும் மதிக்காது. எத்தனை மரங்கள், எத்தனை விலங்குகள், எத்தனைப் பூச்சிகள், எத்தனைப் பறவைகள், எத்தனை நிறங்கள், ஆற்றுநீர், மழைநீர், கடல்நீர், பனிநீர், இது போதாதென மாந்தர்கள் உணர்வு காட்டும் விழிநீர், என இயற்கையின் நிலைகளை, தான் வாழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களுக்கு ஏற்ப அனைத்தையும் வகைப்படுத்தி, வாழும் மக்கள் மனங்களில் நிலைநிறுத்தி இது நம் மண், நம்நிலம், இத்தகு சிறப்பு வாய்ந்தது எனும் குறிப்புகாட்டி வயல்களில் உழன்று, மலைகளில் ஏறி, பாலையில் அலைந்து, நெய்தலில் கிடந்து, முல்லையில் நடந்து உழைக்கும் மக்கள் உணர்வூட்டிய இயற்கைப் பெருமிதம் இழந்து நிற்கும் நம் அவலத்திற்கு பெயர் உலகமய வளர்ச்சியா? உலகளாவிய இகழ்ச்சியா?

இயற்கையை ஊடுருவி உணரும் திறனும், அதை நமக்கு உணர்த்தும் திறனும், இத்தனை நுணுக்கமாக இயற்கை வளங்களை, பன்முகங்களை அறிந்து விளங்கச் செய்யும் அந்தக் காலத்து மனிதர்களின் அறிவில் ஒரு சதவிதமாவது இயற்கையைப் பற்றியதில் இன்று நமக்கு உண்டா? விதவிதமான கார்களின் பெயரும், செல்போன்களின் பெயரும், கணினிகளின் பெயரும் தெரிந்த நம் பிள்ளைகளுக்கு நம்மைச் சுற்றியிலுள்ள இயற்கையின் வகைகளை எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எளிய உதாரணம், தொலைக்காட்சியில் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்தும் “சொல்லுங்கண்ணே… சொல்லுங்க” நிகழ்ச்சியில் ஒரு பட்டதாரி பையனிடம் கரும்பு எங்கிருந்து வெட்டுவார்கள் என்று கேட்டதற்கு, “மரத்திலிருந்து” என்றார். மறுகாலனிய அடிமைத்தனக் கல்வி நம்மிடமிருந்து மண்ணை மட்டுமல்ல, மனிதத் தேடலையே பறித்துவிட்டது. “நான் பாக்குற வேலைக்கு இந்த அறிவு போதும், நான் சம்பாதிக்கறதுக்கு இந்த வேலை ஓ.கே.” என்பதோடு அவனுடைய சமூகத் தொடர்பை அறுத்துவிடுகிறது.

மலைநிலம் போனால் என்ன? விளைநிலம் போனால் என்ன? எந்தக் கார்ப்பரேட்டாவது ஆற்றையும், மலையையும், காட்டையும் கொள்ளையடித்தாலென்ன? கொலை செய்தாலென்ன? இயற்கையாலான தன்னையும் ஒரு நல்ல விலைக்கு எடுத்துக் கொண்டால் போதும், அதற்கேற்ற ஒரு சிலை நிலமாய் நான் கிடக்கத் தயார் என்ற இயற்கைக்கு விரோதமான மனிதனாகவும், மறுகாலனிய சிந்தனை மனிதனை மாற்றியிருப்பதுதான் ஆகப்பெரிய கொடூரம். முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடாக இங்கிலாந்தில் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு முதலாளிகளின் கம்பளிக்காகவும், கறிக்காகவும் செம்மறியாடுகள் வளர்க்க மேய்ச்சல் நிலமாக மாற்றப்பட்டது. ஸ்காட்லாந்தில் 15,000 பழங்குடி மக்கள் வாழ்விடத்தை 1,31,000 ஆடுகள் பிடித்துக்கொண்டன என்று எழுதிய ‘கற்பனா உலகம்’ என்ற நூலின் ஆசிரியர் தாமஸ்மூர் “இங்கிலாந்து ஒரு விநோதமான பூமி, அங்கு செம்மறியாடுகள் மனிதர்களை விழுங்குகின்றன” என்றார். இங்கு சேவைத்துறை ‘வளர்ச்சியில்’ கணினிகள் மனிதர்களை விழுங்குவதைப் பார்க்கிறோம்.

ஆட்டுக் கிடைகள்
“இங்கிலாந்து ஒரு விநோதமான பூமி, அங்கு செம்மறியாடுகள் மனிதர்களை விழுங்குகின்றன”

முதலாளித்துவத்தின் மூலதன வளர்ச்சியைக் குறிப்பிட வந்த கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூல் தொகுதி ஒன்றில், நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களைப் பற்றி “தாம் பாலுண்டு வளர்ந்த மார்பகத்திலிருந்து புவியின் குழந்தைகள் பிடுங்கப்படுகின்றனர். இவ்வாறு மண்ணின் மீதான உழைப்பையும் மாற்றியமைத்து, அவனுடைய இயங்கியல் உயிர்வாழ்வின் ஊற்றான மண்ணையும் மாற்றுகிறது” என இயற்கை உறவை மாற்றியமைக்கும் முதலாளித்துவ வளர்ச்சி, அதன் லாப நோக்கங்களைச் சுட்டிக்காட்டுவார். மேலும் இயற்கை வளங்களும், இயற்கை அமைப்பும் முதலாளிகளின் தனிமனித லாபவெறிக்கு இரையாவதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் அவர் சொல்லும்போது, “ஒரு உயர்ந்த சமூகப் – பொருளாதார உருவாக்கத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பிற மனிதர்களை உடமையாகக் கொண்டிருப்பது எவ்வாறு அபத்தமானதாக தோன்றுகிறதோ? அது போன்றே, ஒரு நாடோ, ஒட்டுமொத்த சமூகமோ புவியின் உடமையாளர்கள் அல்ல” என்று சரியாகவே பூமியை பொதுவில் வைக்கும் கண்ணோட்டத்தை வலியுறுத்தினார்.

நம் அனைவருக்குமான இயற்கையை இழப்பதைப்பற்றி கவலைப்படாமல், இப்போதைக்கு எனக்கு எல்லா வசதிகளும் தரக்கூடிய நுகர்பொருள் கிடைக்கிறது என மனிதன் வாளாவிருந்தால் வெகு விரைவில் வாழ்வையும் இழப்பான். பல்லுயிரிகளையும், மனிதனின் புற மற்றும் அக உலகினையும் வாழவைக்கும் இயற்கையைக் பேணிக்காக்க இயற்கையை நம் தலைமுறைகள் ரசிக்கக் கற்றுத்தருவோம், அதன் மூலம் அதை காப்பதற்கான பொது உணர்வை மேம்படுத்தலாம். இழந்த இயற்கையை மட்டுமல்ல, இருக்கும் இயற்கை வளத்தையும் காத்திட வேண்டுமெனில், மனித விழுமியங்களுக்கு மட்டுமல்ல, இயற்கைக்கும் விரோதமான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை, சுரண்டும் வர்க்க அரசியலைத் தூக்கி எறிய வேண்டும், அதற்கு முதல் தேவை, இயற்கையைப் போற்றும், இயற்கையை பொதுவில் வைத்துக்காக்கும் கம்யூனிச அரசியல் கண்ணோட்டம். ஒரு வகையில் வரலாற்று விதிப்படி இயற்கை தெரிவு செய்யும் பெருவிருப்பும் கம்யூனிசம்தான். கம்யூனிசமே புவியின் கருப்பொருளாய் அமைகையில் ஐவகை நிலமும் மீண்டும் அழகுற மிளிரும், அங்கே கம்யூனிச அரசியலின் அழகியல் பார்த்து இயற்கை சிலிர்க்கும்!

– துரை.சண்முகம்

‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை

0

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 3

(1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் வெளியான தொடர் கட்டுரையின் நூல் வடிவத்திலிருந்து)

பொது சிவில் சட்டத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? இக்கேள்விக்கு மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் பதில் சொல்லியிருக்கிறார்; “நீதிமன்றம் யார் மீதும் தேச பக்தியைத் திணிக்க முடியாது.” நீதிபதி குல்தீப்சிங்கிற்கு அமைச்சர் வழங்கிய பதிலடி இது. ஆனால் ஒரு காங்கிரசு அமைச்சர் என்ற முறையில் காசுமீர் மக்கள் மீது தேசபக்தியைத் திணிப்பது குறித்து அவர் வெட்கப்படவில்லை.

இரட்டை நாக்கு என்பது காங்கிரசுக்கு மட்டும் உரியதல்ல; பாரதீய ஜனதாவும் காங்கிரசின் உடன் பிறப்புதான். பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதவாத அரசியல் கட்சிகளைத் தடை செய்வதாகக் கூறிக்கொண்டு அரசியல் சட்டத்தின் 35 – ஏ பிரிவிற்கு திருத்தம் ஒன்றை (80-வது அரசியல் சட்டத் திருத்தம்) நரசிம்மராவ் அரசு கொண்டு வந்தது. அதனைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியில் அங்கம் வகித்த பாரதீய ஜனதா தனது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது. “வெறும் சட்டத்தினால் ஒரு துடிப்பான தேசத்தை உருவாக்கிவிட முடியாது.”

சிவில் ஒருமைப்பாடும் கிரிமினல் ஒருமைப்பாடும்

அத்வானி
பொது கிரிமினல் சட்டங்களாலும், ‘தடா’ போன்ற ‘உயிர் துடிப்புள்ள ‘கிரிமினல் சட்டங்களாலும் கூட உருவாக்க முடியாத ஒருமைப்பாட்டையா ‘பொது சிவில் சட்டம் ‘உருவாக்கிவிடும்?” என்று நாம் திருப்பிக் கேட்டால் அந்தக் கணமே அத்வானி தனது இரண்டாவது நாக்கினால் பேசத் தொடங்குவார்.

உண்மைதான். பொது கிரிமினல் சட்டங்களாலும், ‘தடா’ போன்ற ‘உயிர் துடிப்புள்ள ‘கிரிமினல் சட்டங்களாலும் கூட உருவாக்க முடியாத ஒருமைப்பாட்டையா பொது சிவில் சட்டம் உருவாக்கிவிடும்?’ என்று நாம் திருப்பிக் கேட்டால் அந்தக் கணமே அத்வானி தனது இரண்டாவது நாக்கினால் பேசத் தொடங்குவார்.

“அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கின்ற சட்டம் இருக்கிறதை, அந்தச் சட்டம் மட்டும் தான் துடிப்பான தேசத்தை உருவாக்காது என்று நாங்கள் கூறினோம்” என்பார் அத்வானி. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிப்பதென்பது “வேரற்ற, ஒழுக்கமற்ற, ஒழுக்கக் கேடான இந்தியாவைத்தான் உருவாக்கும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்ட பாரதீய ஜனதா, “அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கும் முயற்சிகளை சட்டரீதியாக எதிர்த்துப் போராடுவோம்” என்றும் தனது அறிக்கையில் எச்சரித்தது.

அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்தால் தேசமே ஒழுக்கம் கெட்டுச் சீரழிந்து விடும் என்று கவலைப்படும் ஒரு கட்சி, குடும்பத்திலிருந்து மதத்தைப் பிரிக்கும் பொது சிவில் சட்டத்தைத் தீவிரமாகக் கோருவது ஏன் ? குடும்பத்தின் ஒழுக்கம் என்ன ஆவது ?

இந்தக் கேள்விக்கு பாரதீய ஜனதா ஒருக்காலும் பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒரே சிவில் சட்டத்திற்கான பாரதீய ஜனதாவின் கோரிக்கை “பிற மதத்தினர் மீது இந்துச் சட்டத்தைத் திணிப்பதற்கான சதியே” என்று குற்றம் சாட்டும்போது மட்டும் அதை மறுத்து, தாங்கள் ஒரு சீரான சிவில் சட்டத்தை மட்டுமே கோருவதாக மழுப்புகிறது.

சரியான கேள்வி !

“மேலை நாடுகளில் பொது சிவில் சட்டத்தின் கீழ்தான் முசுலீம்களும் வாழ்கிறார்கள். அங்கே இல்லாத மத அடையாளம் குறித்த பிரச்சனை இந்தியாவில் மட்டும் எப்படி வந்தது ?” என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா.

காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான யாரும் பாரதீய ஜனதாவின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. ஆனால், இந்தக் கேள்வியை எழுப்பியதன் மூலம் அடிப்படையான பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்ள பாரதீய ஜனதா நமக்கு பெரிதும் உதவியுள்ளது.

பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் ஆகிய அனைவருமே அது ‘மதச்சார்பற்றது’ என்று பொருளில்தான் பெரும்பாலும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இச்சட்டம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் 44 – வது பிரிவு கூறவில்லை. ஒரு சீரான உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) நாடு முழுவதற்கும் கொண்டு வருவதை மட்டுமே அதில் சிபாரிசு செய்கிறது.

பொது சிவில் சட்டம் (Common Civil Code) என்பது மதச்சார்பற்ற சிவில் சட்டம் (Secular Civil Code) என்ற பொருளில்தான் மேலை நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் ‘பொது’ என்ற சொல்லையோ, ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லையோ பயன்படுத்தாமல், ‘ஒரு சீரான’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. மத அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை தற்போதுள்ளது போலவே வைத்துக் கொண்டு அவற்றின் உள்ளடக்கத்தை மட்டும் ‘ஒரு சீராக’ இருக்கும்படி மாற்றியமைப்பது என்றும் இதற்குப் பொருள் கூற முடியும். அவ்வாறு கூறியும் வருகின்றனர்.

அரசியல் சட்ட மோசடி

அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நோக்கம் இதுவல்ல என்றால் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லைத் தெளிவாக அது குறிப்பிட்டிருக்கலாம். அவ்வாறு குறிப்பிடத் தவறியது கவனக்குறைவால் நடந்த பிழை அல்ல; கவனமாகச் செய்யப்பட்ட மோசடி.

1950 -ல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசு என்று கூறவில்லை. 1976-ல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியல் சட்டத் திருத்தத்தையொட்டி இந்திய அரசியல் சட்டத்தின் முன்னுரையில் “இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதிபூணுவதாக”க் குறிப்பிடப்பட்டது.

மதச்சார்பின்மை – லட்சியம் மதவெறி – நிச்சயம் !

இந்திய அரசியலமைப்பு சபை
அரசியல் நிர்ணய சபை : மதச்சார்பின்மை – லட்சியம் மதவெறி – நிச்சயம் !

இது வெறும் “லட்சியம்” தானேயொழிய இதற்கு எந்தவிதச் சட்ட உத்திரவாதமும் கிடையாது. சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களின் பொருளை வரையறுப்பதற்கான முயற்சி பின்னர் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் இன்று வரை இச்சொற்களுக்கான பொருள் சட்டமொழியில் விளக்கப்படவில்லை.

எனவே அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல நமது நாட்டில் மதச்சார்பின்மை நிலவுவது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்பவர்கள், சோசலிசம் நிலவுவதும் உண்மை என்பதை ஏற்க வேண்டியிருக்கும்.

இருப்பினும் ‘சர்வ தர்ம சம பாவ’ (அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல்) என்று காந்தி கூறி வந்த விளக்கத்தைத்தான் இந்திய மதசார்பின்மையின் விளக்கமாக அனைவரும் கூறி வருகின்றனர். இதன் அடிப்படையில்தான், அவ்வப்போது எழும் பிரச்சினைகளில் மதசார்பின்மைக்கான விளக்கத்தை உச்சநீதி மன்றம் கூறி வருகிறது. இதுதான் மதசார்பின்மைக்கான விளக்கம் என்றால், இதிலிருந்து மேலை நாடுகளில் உள்ளதைப் போன்ற மதசார்பற்ற சிவில் சட்டத்தை எங்ஙனம் உருவாக்க முடியும் ?

தாயில்லாமல் பிள்ளையா ?

மதச்சார்பற்ற அரசு ஒன்று நிலவாமல் மதச்சார்பற்ற சிவில் சட்டம் மட்டும் எப்படிக் கொண்டு வரமுடியும் என்பதுதான் உயிராதாரமான கேள்வி.

மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், ஒழுக்கத்தை வரையறுக்கவும் மதம் பெற்றிருக்கின்ற அனைத்து சட்டபூர்வமான அதிகாரங்களையும் பறிப்பது; மதத்துடனான அனைத்து உறவுகளிலிருந்தும் அரசு தன்னைத் தூண்டித்துக் கொள்வது; மதம் என்பது ஒரு தனிநபரின் நம்பிக்கை சார்ந்த சொந்த விவகாரம் என்று வரையறுப்பது – ஆகியவை மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் அடிப்படைகள்.

இது மேற்கத்திய மதச்சார்பின்மைக் கோட்பாடு என்றும், நமது விசேடமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான் “அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்தல்” என்ற இந்திய மதசார்பின்மைக் கோட்பாடு என்றும் பாரதீய ஜனதா முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரை அனைவரும் வாதிடுகின்றனர்.

அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கும் மேற்கத்திய மதச்சார்பின்மையைக் காலனியச்சிந்தனை என்று சாடுகிறது பாரதீய ஜனதா.

‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’

மதச்சார்பின்மை
Secular என்றால் மதச்சார்பற்றது என்று பொருள் அல்ல – எல்லா மதங்களையும் ஒன்று போல் கருத வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்துப் பெரியார் கூறிய கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது;

“இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து, எந்த எந்த மொழியில் Secular, State என்று குறிப்பிட்டிருக்கிறார்களோ, அந்த நாட்டில் அந்த மொழியில் Secular என்பதற்கு என்ன பொருள் இருக்கிறதோ, அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தி இருக்கிறார்களோ, அந்தப் பொருளில் தானே நாமும் பயன்படுத்த வேண்டும் ? அதை விட்டு விட்டு, அந்தச் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, Secular என்றால் மதச்சார்பற்றது என்று பொருள் அல்ல – எல்லா மதங்களையும் ஒன்று போல் கருத வேண்டும் என்பதுதான் பொருள் – என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்… .பத்தினி என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவன் போலக் கருதி நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பத்தினித்தன்மை என்று அர்த்தம் கொள்வது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ அதைவிட அயோக்கியத்தனமானதாகும், மதச் சார்பற்றது என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்று போல் கருதுவது என்பது” என்று கூறுகிறார்.

சிறுபான்மைத்தலைவர்கள் ஆதரிப்பது ஏன்?

அரசியல் சட்டத்தின் பிரிவு – 26 மத நிறுவனங்கள் கோடிக் கணக்கில் சொத்து வைத்துக் கொள்ளவும், புதிதாகச் சேர்க்கவும் உரிமை தருகிறது; எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் அரசு தனது பணத்தைச் செலவிடலாகாது என்று கூறுகிறது சட்டப்பிரிவு – 27; ஆனால் கேரளத்திலும் தமிழகத்திலும் உள்ள திருவிதாங்கூர் தேவாஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களுக்கு கேரள, தமிழக அரசுகள் ஆண்டுதோறும் சில லட்சம் ரூபாய்களை அளிக்க வேண்டுமென சட்டப்பிரிவு 290 – ஏ கட்டளையிடுகிறது. சட்டப் பிரிவு -28 (2) அரசு உதவியும், அங்கீகாரமும் பெறுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் மதபோதனை செய்வதை அனுமதிக்கிறது; சட்டப்பிரிவு – 48 (வழிகாட்டும் கோட்பாடு) பசுவதையைத் தடை செய்வதைத் தனது லட்சியமாகக் கூறுகிறது; சட்டப்பிரிவு – 30 சிறுபான்மை மதத்தினர் கல்வி நிறுவனம் நடத்திக் கொள்வதற்கான உரிமையை அளிக்கிறது. இதுதான் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தின் அழகு.

ஆனால் சிறுபான்மை மதத்தினருக்கு அளிக்கப்படும் ‘சலுகை’ களை மட்டும் சுட்டிக் காட்டி அதன் காரணமாக இது போலி மதச்சார்பின்மை என்று பாரதீய ஜனதா வாதிடுகிறது. அவற்றை மட்டும் நீக்கிவிட்டால் உண்மையான மதச்சார்பின்மை நிலை நாட்டப்பட்டுவிடும் என்று கூறுகிறது.

பிறநாடுகளில்…….

ரசிய புரட்சி
முன்னாள் சோசலிச நாடுகளில் சமூக வாழ்க்கையின் அங்கம் என்ற தகுதியிலிருந்து மதம் சட்டபூர்வமாக நீக்கப்பட்டது.

பிற நாடுகள் சிலவற்றில் இக்கொள்கை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது.

  • சீனா, ரசியா மற்றும் பிற முன்னாள் சோசலிச நாடுகளில் சமூக வாழ்க்கையின் அங்கம் என்ற தகுதியிலிருந்து மதம் சட்டபூர்வமாக நீக்கப்பட்டது. அமெரிக்காவிலும் பிரான்சிலும் அரசு விவகாரங்களிலிருந்து மதம் தெளிவாக விலக்கி வைக்கப்படுள்ளது. கல்வித் துறையில் கிறித்தவ மதம் தலைகாட்டக் கூடாது என்ற கொள்கையைப் பிரான்சு கறாராகக் கடைப்பிடிக்கிறது.
  • மெக்சிகோ இன்னும் ஒருபடி மேலே சென்று மத குருமார்களுக்கு தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் ஓட்டுரிமையைச் கூட ரத்து செய்திருக்கிறது.
  • துருக்கி, எகிப்து, துனீசியா போன்ற முசுலீம்கள் அதிகம் வாழும் நாடுகள் இசுலாமை அரசு மதமாக் கொள்ளவில்லை என்பதுடன், அரசியலில் மதம் கலப்பதை மொராக்கோ தடை செய்துள்ளது.
  • இங்கிலாந்து, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற ‘ஜனநாயக’ நாடுகள் குடிமக்களிடையே மதப்பாகுபாடு காட்டவில்லையென்றாலும் அரசு மதம் என கிறித்துவத்தை அறிவித்துள்ளன.
  • வங்காள தேசத்தில் அரச மதமாக இசுலாம் உள்ள போதும், பிற மதத்தினருக்கு மத உரிமை தரப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இசுலாமியர் தவிர்த்த பிற மதத்தினர்க்கு மத உரிமை கிடையாது.
  • மலேசியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், குவைத், பக்ரீன் போன்ற நாடுகளில் இசுலாமே அரசு மதம்.

மேற்கூறிய விவரங்களைப் பரிசீலிக்கும்போது கறாரான, இலக்கணப் பொருளிலான மதச்சார்பின்மைக் கோட்பாடு, முன்னாள் சோசலிச நாடிகளிலும், அமெரிக்கா, பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

மெக்சிகோ போன்ற பின் தங்கிய நாடுகளில் மதகுருமார்களின் வாக்குரிமையை ரத்து செய்யுமளவுக்குத் தீவிரமாகவும், இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் கூட கிறித்தவம் அரசு மதமாக அங்கீகரிக்கப்பட்டுருப்பதும் ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுச் சூழலுக்கேற்ப நடைபெற்றுள்ளன.

பெரும்பான்மையான இசுலாமிய நாடுகளில் மதச்சார்பின்மைக் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, இந்தியாவில் தற்போது கடைப்பிடிக்கப்படும் மதச்சார்பின்மையே முசுலீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெரும் சலுகை என்று அவர்களை மிரட்டுகிறது பாரதீய ஜனதா. இந்தியர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை அந்நியர்கள் என்ற முறையில் பரிசீலித்துத் தீர்ப்பு கூறுகிறது.

அவ்வாறிருக்க, சிறுபான்மைத் தலைவர்கள் ஏன் இந்தப் போலி மதச்சார்பின்மையை ஆதரிக்க வேண்டும் ? கோடிக்கணக்கில் சொத்து வைத்துக் கொள்வதற்கும், கல்வி நிறுவனங்கள் நடத்திக் கொள்ளையடிப்பதற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 26 மற்றும் 30 ஆகியவை வகை செய்வதாலும், தத்தம் மதத்தைச் சேர்ந்த மக்களை அடிமைத்தனத்திலும் மடமையிலும் தொடர்ந்து இருத்தி வைத்துக் கொள்ள தனிநபர் சட்டங்கள் உதவுவதாலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும், பழமைவாதிகளும் இந்தப் போலி மதச்சார்பின்மையை முழுமனதாக ஆதரிக்கிறார்கள்.

மதச்சார்பின்மைக் கோட்பாடு அதன் சரியான பொருளில் அமல்படுத்தப்படவேண்டும் என்று புரட்சியாளர்களும், பகுத்தறிவாளர்களும் கோரினால், இந்தியாவின் விசேடமான சூழ்நிலைகளைக் கணக்கில் கொள்ளாத ‘வறட்டுத் தனம்’ என்று கூறி மதச் சீர்திருத்தவாதிகளும் போலி கம்யூனிஸ்டுகளும் நம்மை நிராகரிக்கிறார்கள். நிலவுகின்ற மோசடி மதச்சார்பின்மையை நியாயப்படுத்துவதில் இந்து மதவெறியர்களைக் காட்டிலும் இவர்களே முன் நிற்பதால் இப்போக்கினை அம்பல்ப்படுத்துவது அவசியமாகிறது.

சிவில் சட்டத்தின் வரலாறு

பொது சிவில் சட்ட வரலாறு
மன்னராட்சியை மட்டுமல்ல, மதகுருமார்களின் அதிகாரத்தையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பிரான்சில் தான் உலகிலேயே முதன்முறையாக மதத்திற்கு அப்பாற்பட்ட சிவில் சட்டத்தை நெப்போலியன் அறிமுகப்படுத்தினான்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஜரோப்பா முழுவதும் மன்னராட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை நிறுவுவதற்காக நடைபெற்ற புரட்சிகளில் தலையாயது பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியை மட்டுமல்ல, மதகுருமார்களின் அதிகாரத்தையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பிரான்சில் தான் உலகிலேயே முதன்முறையாக மதத்திற்கு அப்பாற்பட்ட சிவில் சட்டத்தை நெப்போலியன் அறிமுகப்படுத்தினான். அதுவரை எல்லா நாட்டு நீதிமன்றங்களிலும் கையில் பைபிளுடன் பாதிரியார்கள் அமர்ந்து ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருந்தனர்.

பிரெஞ்சுப் புரட்சியில் ஈடுபட்ட மக்களின் தீவிரத்தைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய முதலாளி வர்க்கம், ‘நாளை நமக்கும் இதே கதிதான்‘ என்பதைப் புரிந்து கொண்டதால் பிரிட்டீஷ் அரியணையுடன் சமரசம் செய்து கொண்டது; மக்களைத் தார்மீகரீதியில் ஒடுக்கி வைக்கும் ஆற்றல் கொண்ட மதம், பிரான்சில் செயலிழந்து போனதைக் கண்டவுடன் ஆங்கிலேயத் திருச்சபையுடனும் சமரசம் செய்து கொண்டது. இங்கிலாந்தின் ‘விசேசமான’ இந்த சூழ்நிலையை ஏங்கெல்ஸ் விவரித்துள்ளார்.

இந்த விசேசமான சூழ்நிலையின் விளைவாகத்தான், உலகிற்கே ‘நாகரிகத்தை’ அறிமுகப்படுத்திய பிரிட்டீஷ் அரசாங்கம், இன்னமும் தங்களது நாட்டில் ‘மன்னர் குடும்பம்’ என்றொரு அநாகரிகக் கும்பலுக்கு மக்களின் வரிப்பணத்தில் சோறு போட்டு வருகிறது; கிறித்துவை அவரது சிலுவையுடன் சேர்த்துத் தலையில் சுமந்து கொண்டிருக்கிறது.

பிரான்சில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதைக் கண்டவுடன், வரலாற்றின் விதியைப் புரிந்து கொண்டு, ஜனநாயக உரிமைகளைத் தத்தம் நாட்டு மக்களுக்கு முதலாளித்துவம் பெட்டியைத் திறந்து விநியோகித்து விடவில்லை. ஐரோப்பியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் கடுமையாகப் போராடித்தான் ஒவ்வொரு ஜனநாயக உரிமையையும் பெற்றார்கள்.

எனவே, ஒவ்வொரு நாட்டுன் விசேசமான வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்வது, அதை மாற்றியமைக்கத்தானே ஒழிய ஏற்று நடப்பதற்கு அல்ல.

ஈசுவர அல்லா தேரே நாம் – ஏமாந்தவனே இந்தியனாம் !

பாரத மாதா
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான கட்டபொம்மனோ, மருது சகோதரர்களோ கொண்டிருந்த இறை நம்பிக்கைக்கும், 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் திலகர் வகையறாவால் உருவாக்கப்பட்ட பாரதமாதா வழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிறந்த இந்திய தேசியம், பனியா – தரகு முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ற, பார்ப்பன – இந்து தேசியமாகவே தோன்றியது. அதற்கு முந்தைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான கட்டபொம்மனோ, மருது சகோதரர்களோ கொண்டிருந்த இறை நம்பிக்கைக்கும், 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் திலகர் வகையறாவால் உருவாக்கப்பட்ட பாரதமாதா வழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை. ‘காந்தி – இந்து மகாசபை பிராண்டு இந்து தேசியம்.’ இதை பிரிட்டீஷார் பயன்படுத்திக் கொண்டனர் என்பது வேறு விசயம்.

காங்கிரசின் இந்து தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு அஞ்சிய முசுலீம் மக்களுக்கு தம்மீது நம்பிக்கையை உருவாக்குவதற்காக காந்தி உருவாக்கிய ‘சுதேசி’ கோட்பாடுதான் ‘சர்வதர்ம சமபாவ’ அல்லது ‘ஈசுவர அல்லா தேரே நாம்’. அரசியல் சட்ட மொழியில் கூறினால் இந்திய மதச்சார்பின்மைக் கோட்பாடு !

இந்தக் கோட்பாடுதான் மதத் தனிநபர் சட்டங்களுக்கு அடிப்படையானது. இச்சட்டங்களோ நிலவுடைமை ஆதிக்கம், தந்தை வழி ஆணாதிக்கம், சாதி, மத ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்து ரீதியாகவும், சொத்துடைமை உறவுகளிலும் நிலைநாட்டுகின்றன. ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற பால், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், மொழி, இன உணர்வுகளையும் பின்னுக்குத் தள்ளி நாடு முழுவதும் அவர்களை மதத்தின் அடிப்படையில் மறுசேர்க்கை செய்கின்றன.

அரசியல் சட்டத்தின் முன்னுரையில் கண்டுள்ளபடியே கூறுவதென்றாலும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல; மதச் சார்பற்றதாக மாறும் லட்சியத்தைக் கொண்டுருக்கும் நாடு, அவ்வளவுதான்.

கறாராகச் சொன்னால், இந்த மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு ‘அடிப்படை உரிமை’ என்ற தகுதியோ, ‘வழிகாட்டும் கோட்பாடு’ என்ற கவுரவமோ கூடக் கிடையாது. அரசியல் நிர்ணயச் சட்ட நூலின் முதல் பக்கத்தில் வழுவழுப்பான தாளில் வண்ணத்தில் அச்சிடப்பட்டிருப்பதுதான் இந்தச் சொல்லுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகபட்ச மரியாதை!

முந்தைய பகுதிகள்

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

மோடியின் துடைப்பக் கட்டை மறைக்கும் கார்ப்பரேட் கழிவுகள்

6
Clean-India-Mission
பொருளாதாரத்தை கிளீன் பண்ணி, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் சதி!
Clean-India-Mission
பொருளாதாரத்தை கிளீன் பண்ணி, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் சதி!

மொத்த இந்தியாவும் துடைப்பக் கட்டையும் கையுமாக தெருவில் இறங்கி விட்டதாக நம்மை நம்பச் சொல்கின்றன முதலாளித்துவ பத்திரிகைகள். காந்தி ஜெயந்தி அன்று தில்லியில் உரையாற்றிய மோடி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் (அதாவது 2019 காந்தி ஜெயந்தி நாளுக்குள்) இந்தியாவை மொத்தமாக துடைத்து சுத்தமாக்கி விடுவதே லட்சியம் என்று முழங்கியிருக்கிறார்.

மோடி வழக்கமான பிரதமர் இல்லை என்பதால், இந்த வேலையை வித்தியாசமான கோணத்திலிருந்து யோசித்திருக்கிறார். அதாவது, உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் பாரதமாதவுக்கு பொட்டு வைத்து பூவைத்து சிங்காரிக்கும் வேலையை தான் மட்டும் செய்தால் பத்தாது என்று சிந்தித்திருக்கிறார். இது அவரது கிச்சன் கேபினட் எழுதிக் கொடுத்த விளம்பரப் படம் என்றாலும் அவரது லட்சியத்தில் அதாவது விளம்பர படத்தில் மொத்த நாடும் பங்கேற்க வேண்டும் என்று வேறு விரும்பியிருக்கிறார். எப்படி பங்கேற்க வைப்பது?

தீவிர விளம்பர சிந்தனை காரணமாக இந்த லட்சியத்தை ’வைரல்’ ஆக்கும் யோசனை அவருக்குத் தோன்றியிருக்க கூடும். அதன்படி சச்சின் தெண்டுல்கர், அனில் அம்பானி, சஷி தரூர், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் தங்கள் துடைப்பக்கட்டை கடைமையை ஆற்றிவிட்டு தங்கள் நட்புப் பட்டியலில் உள்ள வேறு ஒன்பது பேருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது தான் சுத்தப்படுத்தும் தொடர் விளையாட்டின் விதி. மல்டிலெவல் மார்க்கெட்டில் அடிபட்ட வர்க்கம் அடியை மறந்திருந்தாலும் இந்த சங்கிலி தொடர்பை மறந்திருக்காது.

modi-broom
பூனைப்படை பாதுகாப்புடன் புதுத்தணி கலையாமல் போஸ்!

போகட்டும். தனது காந்தி ஜெயந்தி உரையை முடித்த கையோடு விளக்குமாறோடு நேராக தில்லி ராஜபாதையை அடுத்த வால்மீகி காலனி என்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் சேரிக்கு திக்விஜயம் செய்த மோடி, அங்கே தெருப்பெருக்குவது போல் புகைப்படம் எடுத்து தனது வலைத்தளத்தில் வெளியிட்டுக் கொண்டார். அசுத்தம் என்றாலே அது தலித்துகளின் சேரியில்தான் இருந்தாக வேண்டும் என்பதே இதன் உள்ளர்த்தம்.

இது ஒரு பக்கம் இருக்க, தனது தூய்மை இயக்கத்திற்கு முதல் கட்டமாக மோடி தெரிவு செய்த முகரைகளின் யோக்கியதையை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். விளையாட்டை கார்ப்பரேட்மயமாகவும், விளம்பரக்காடாகவும் விளையாட்டு வீரனின் உடலையே ப்ளெக்ஸ் பேனராகவும் மாற்றி விளையாட்டை மாசுபடுத்திய சச்சின் தெண்டுல்கர், சுற்றுச் சூழல் சீர்கேடுகள் விளைவித்தது தொடர்பாக சுமார் 77 வழக்குகளை சந்திக்கும் தரகு முதலாளியான அனில் அம்பானி, காங்கிபசின் மேட்டுக்குடி மைனர் சசிதரூர், பாக்கின் ஐஎஸ்ஐயை எதிர்த்து போராடும் புதிய இந்திய ஜேம்ஸ்பாண்டு கமல், பாலிவுட் பொறுக்கி சல்மான் கான், மக்களின் மூளையை மாசுபடுத்தும் பாபா ராம்தேவ் போன்ற கலங்’கறை’ விளக்குகள் தான் மோடியோடு சேர்ந்து நாட்டை சுத்தம் செய்யப் போகிறார்களாம்.

“அட எப்பம் பார்த்தாலும் உங்களுக்கு அந்தாளோட ஒரண்டை இழுக்கறதே பொழப்பா போச்சி.. வேணும்னா நீங்களே சொல்லுங்களேன் அவர் எங்கே போயி எதைத் தான் சுத்தம் செய்யட்டும்?” என்று அப்துல் கலாம், அண்ணா ஹசாரே வகையறாக்கள் சலித்துக் கொள்ளக் கூடும். அது அத்தனை நியாயமான சலிப்பு அல்ல.

smriti3
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி குப்பையில்லாத இடத்தில் பெருக்கி அவதிப்படுகிறார்!

ஏனெனில், ஒருவேளை மோடி வண்டியைக் கொஞ்சம் நேராக விட்டிருந்தால் அவர் தில்லியில் உள்ள சீலம்பூருக்குச் சென்றிருக்கக் கூடும். யோக்கியனாக இருந்தால் அங்கே தான் சென்றிருக்க வேண்டும் – ஆனால், அவர் செல்ல மாட்டார். ஏன் என்பதை பின்னர் பார்ப்போம். அதற்கு முன், ”சேரின்னாலே சுத்த கப்பு பாஸ். முதல்ல அங்க சுத்தம் பண்ணனும் இல்லேண்ணாக்க அவங்களை காலி பண்ணனும் பாஸ்” என்று சடைந்து கொள்வோர் சீலம்பூரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வடகிழக்கு தில்லியில் அமைந்துள்ள சீலம்பூரில் தான் மாபெரும் மின்னணுக் குப்பைத் தொட்டிகள் அமைந்துள்ளன. இந்தியாவெங்கும் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்படும் கனிணிகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தில்லியை வந்தடைகின்றன. தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய கள ஆய்வு ஒன்றின் படி, 2007-ம் ஆண்டு வாக்கில் தில்லியில் மட்டும் சுமார் 11594 டன் அளவாக இருந்த மின்னணுக் கழிவுகளின் அளவு, தற்போது 30,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் நாடெங்கிலும் சுமார் 13 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் சேர்வதாகவும் இவையனைத்தும் தில்லிக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அசோசெம்மின் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் தெரிவிக்கிறது என்.டி.டிவி. இது தவிர உலகெங்கும் இருந்து மின்னணுக் கழிவுகள் தில்லிக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறன.

மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பிரம்மாண்டமான இந்த தொழில் ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கிறதே – அதாவது, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இதில் பங்கு கிடைக்கவில்லையே என்கிற கவலையில் இருந்து தான் அசோசெம் மேற்படி அறிக்கையை முன்வைத்துள்ளது என்பது இந்த பதிவுக்குத் தொடர்பில்லாத, ஆனால் அவசியம் மனதில் கொள்ள வேண்டிய உபதகவல்.

uma bharathi
உமா பாரதி மேடையில் மட்டுமல்ல, தெருவிலும் சண்டை போடுவார்!

இவ்வாறாக சீலம்பூர் வந்து சேரும் மின்னணுக் கழிவுகளை தரம் பிரித்து, உடைத்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்தியவற்றைத் தவிர எஞ்சிய கழிவுகள் அப்படியே எரிக்கப்படுகின்றன. இந்தப் பணியில் சுமார் 25,000 பேர் ஈடுபட்டுள்ளனர் – இதில் சுமார் 6,000 பேர் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் என்கிறது டாக்ஸிக் லிங்க் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு ஒன்று. இத்தனை கழிவுகளையும் போட்டு குப்பைக் காடுகளை உருவாக்குவது சாட்சாத் சேரிகளுக்கு முகம் சுளிக்கும் அதே மேட்டுக்குடி வர்க்க இந்தியர்கள் தான்.

மின்னணுக் கழிவுகளில் இருந்து வெளியேறும் பாதரசம், காட்மியம், ஈயம், போன்ற ஆபத்தான இராசாயனங்களால் பணியாளர்கள் மட்டுமின்றி சீலம்பூர் பகுதியே பாதிக்கப்பட்டுள்ளது. சீலம்பூர் பகுதியை அடுத்த ப்ரேம் நகரில் மட்டும் கணினிகளில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் இருந்து ஈயத்தைப் பிரித்து எடுக்கும் குடிசைத் தொழில்கள்  சுமார் 110 இடங்களில் நடப்பதாக டாக்ஸிக் லிங்க் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பேட்டரிகளை அப்படியே நெருப்பில் பொசுக்கி அதில் உருகும் ஈயத்தை பிரிக்கும் ஆபத்தான வேலைகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருவதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

plateform
சுத்தப்படுத்துவதாக போஸ் கொடுக்கும் மோடி அன் கோ, ரயில்வே நிலைய திடக்கழிவுகளை எடுக்க செல்லாதது ஏன்?

மோடி ஏன் சீலம்பூர் செல்ல மாட்டார்? அவருக்கு சீலம்பூரோடு வாய்க்கா வரப்புத் தகராறு ஏதும் இல்லை, அதற்கு வேறு அடிப்படை இருக்கிறது.

இந்தியாவில் குவியும் மின்னணுக் கழிவுகள் ஆகப் பெரும்பான்மையாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைங்கரியம் தான். இங்கே செயல்பட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் மின்னணுப் பொருட்களை கழித்துக் கட்டுவதற்கு உருப்படியான வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏதும் கிடையாது. ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில், மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதற்கென்றே சிறப்பான சட்டங்கள் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக கணிசமான தொகையைச் செலவிட்டு வருகின்றன. அதாவது அந்த கழிவுகளை ஒரே அடியாக ஏழை நாடுகளில் கொட்டுவதற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படும் கழிவுகளை துண்டேந்தி மேற்கத்திய எஜமான்களுக்கு முகம் துடைக்கும் வேலையை ‘தேசபக்தர்’ மோடி போன்ற உள்ளூர் ஆண்டைகள் முகம் சுளிக்காமல் செய்கிறார்கள்.

மேலும் திறந்த மடமான இந்தியாவில் அவ்வாறான வலுவான சட்டங்கள் ஏதும் இல்லை. மோடி சீலம்பூர் சென்று மின்னணுக் கழிவுகளை அகற்ற அவருக்கு ஜே.சி.பி இயந்திரங்களை இயக்கும் அறிவு இல்லாதது காரணமல்ல – கார்ப்பரேட் நிறுவனங்களின் டார்லிங்காக உருவகிக்கப்படும் அவர் தனது எஜமானர்களின் லாபத்தில் கைவைக்க விரும்ப மாட்டார். நமது வீடுகளில் கக்கூசு கட்டாமல் வயல்வரப்புகளில் ஆய் போவதால் தான் எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்கள் உருவாவதாக பூச்சி காட்டும் சுகாதாரத் துறையும், சுற்றுச் சூழல் துறையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பாரத மாதாவின் மூஞ்சில் ஆய் போவதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் இருப்பதன் அடிப்படை இதுதான்.

e waste
தலைநகரத்தில் மின்னணு கழிவு மலை! மோடி கண்டுகொள்ளாமல் ஓடுவது ஏன்?

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்தே படிப்படியாக இந்தியாவை தொழில்களுக்கு உகந்த இலக்காக மாற்றும் பொருட்டு தொடர்ந்து பெயரளவிலாவது இருந்து வரும் சுற்றுசூழல் சட்டம், மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டம் போன்றவற்றின் முதுகெலும்பை உடைத்தே வந்தனர் – இதில் பாரதிய ஜனதாவும் காங்கிரசும் எந்தக் கொள்கை வேறுபாடும் இன்றி கைகோர்த்துக் கொண்டனர்.

தற்போது மோடியின் வருகைக்குப் பின் பாரத மாதாவைப் அலேக்காக பிடித்து மலத்தொட்டிக்குள் அமிழ்த்தும் இந்த ”தொழில் முன்னேற்ற” நடவடிக்கைகள் வெறிகொண்ட வேகத்தில் பாய்ந்து முன்செல்கிறது.

சுற்றுப்புறச் சூழல் என்பதைக் காட்டி எந்தவொரு பெருந்தொழில் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைத்திருக்கிறது, மோடி அரசு. வன விலங்கு சரணாலயங்களிலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்தான் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அந்த வரம்பை ஐந்து கிலோமீட்டர் எனச் சட்டப்படியே மாற்றிவிட்டது, மோடி அரசு.

இது தவிர,

1) காடுகளை தாயகமாக கொண்ட பழங்குடிகள், தமது நிலங்களை ஆக்கிரமித்து தொழில் துவங்குவதை எதிர்ப்பதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. வனவாசி கிராம சபைகளின் கருத்துக்கள் கேட்கப்பட தேவையில்லை என்பதை வன உரிமைச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் சாதிக்க உத்தேசித்துள்ளது மோடி அரசு

2) மலைகள் மற்றும் வனப் பிரதேசங்களில் பெருந்தொழில் நிறுவனங்கள் துவங்க தடைகள் இல்லாதவாறு வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

3) நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்க கட்டுப்பாடுகள் தளர்த்துவது

4) தொழிற்சாலைகளால் மாசடைந்த தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகள் துவங்க இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தடைகளை அகற்றுவது

5) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை நீர்த்துப் போகச் செய்வது

மேலும், அவ்வப்போது பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் புதிது புதிதாக எழும் தேவைகளை ஒட்டி சட்டத்தை நெம்பி வளைக்கவும், அடித்து திருத்தவும் ஆவன செய்வதற்கான நிரந்தர கமிட்டி ஒன்றை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. (Modi government has launched a silent war on the environment)

child labour
புது தில்லி குப்பை அகற்றும் சிறாரை காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை காப்பாற்றுவது எப்படி?

தென் தமிழகத்தின் கிரானைட் மலைகளை விழுங்கிய பி.ஆர்.பி மற்றும் மணல் திருடன் வைகுண்டராஜனை நாம் அறிந்திருப்போம். ஆனால், இவர்களையெல்லாம் விட அளவிலும், பரிமாணத்திலும் பிரம்மாண்டமான திருடர்கள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளாகவும், தேசங்கடந்த தொழிற் கழகங்களாகவும் இந்தியாவெங்கும் கால்பதித்து நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் இயற்கையை வல்லுறவு கொண்டு அடிக்கும் லாப வேட்டைக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்று மொத்த இந்திய ஆளும் வர்க்கமும் பாதுகாப்பாக விளக்குப் பிடித்து நிற்கிறது.

தண்டகாரண்யா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு இடையூறாக இருப்பதால் அவர்களை துடைத்தொழிக்க காங்கிரசின் காலத்தில் பச்சை வேட்டை என்கிற பெயரில் இராணுவத்தையே இறக்கினர். அதே காலத்தில் குஜராத் என்கிற எலி வளைக்குள் பதுங்கிக் கிடந்த சுண்டெலியான மோடி, தனது வரம்பிற்கு உட்பட்டு தனது மாநிலத்தை கார்ப்பரேட் நிறுவன்ங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மோடின் ஆளுகைக்கு உட்பட்ட குஜராத்தின் அஹமதாபாத் நகரின் கியாஸ்பூரில் தொழிற்சாலைகளின் திடக் கழிவுகள் பெரும் மலைச் சிகரத்தைப் போல் எழுந்து நின்றது. குஜராத்தின் வாபி நகரம் தொழிற்சாலைக் கழிவுகளுக்குள் அமிழ்த்தப்பட்டு வாழத் தகுதியற்ற நகரம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது. குஜராத்தின் வாபி நகரத்தைப் போல் இந்தியாவெங்கும் சுமார் 88 தொழிற்பேட்டைகள் சுற்றுச் சூழலை நாசக்கேடாக்குவதாக கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மோடி பிரதமராக பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம் இந்த தடைகளை நீக்கியதே ஆகும்.

மேற்குலக நாடுகளில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதன் விளைவாக கடுமையான சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிருப்பதாலும், மனித உழைப்பின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் அந்நாடுகளில் உற்பத்திச் செலவுகள் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தேசம் கடந்த தொழிற்கழகங்களும் தங்களது உற்பத்தி அலகுகளை அங்கிருந்து இந்தியா போன்ற கீழ்த்திசை மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் பெயர்த்துள்ளன.

இன்னொரு புறம் மேற்கில் சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாக உலகப் பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி 2008-ம் ஆண்டு துவங்கி இன்றைய தேதி வரை அமுக்குப் பேய் போல் முதலாளித்துவ நாடுகளைப் போட்டு அமுக்கி வருகிறது. தங்களது மூலதனத்தின் சுழற்சிக்கு புதிய சந்தைகளைத் தேடுவது, மேலும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது – கட்டுப்படுத்துவது என்ற நோக்கத்திற்காக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளை நோக்கி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுக்கின்றன.

இந்தப் படையெடுப்பில் அவர்கள் இரும்பாக, வெள்ளியாக, தங்கமாக, நிலக்கரியாக, பெட்ரோலிய பொருட்களாக, வன வளங்களாக, மனித வளங்களாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிச் செல்லும் தேட்டை மதிப்பின் அளவு தான் இந்தியப் பொருளாதாரக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி என்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். அவ்வாறு அவர்கள் அள்ளிச் செல்ல உதவும் இந்தியர்களுக்கு அவன் போடும் எலும்புத் துண்டுகளைத் தான் புதிய வேலைவாய்ப்புகள் என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்களின் வாந்தியைத் தின்று பிழைக்கும் உள்ளூர் அறிஞர் பெருமக்கள். மேற்குலகத்தின் உள்ளூர் எடுபிடியாக  தரகுத்தனத்தில் திளைத்துக் கிடப்பதே தொழில் வளர்ச்சி என்கின்றனர் தரகு முதலாளிகள்  – இந்த மொத்த மனித குல விரோதிகளின் டார்லிங்கு டம்பக்கு தான் நரேந்திர மோடி.

எனவே தான் துடைப்பக் கட்டையை நமது கையில் கொடுத்து விட்டு பூவைக் காதில் சொருகிச் செல்கிறார். பாரதமாதாவை நம்மை விட்டு அலங்கரிக்கச் செய்த கையோடு வாயில் தாம்பூலத்தோடும் கக்கத்தில் லெதர் பேகோடும் ‘கஸ்டமரை’ வரவேற்கச் செல்கிறார் மோடி – இதைத் தொழில் வளர்ச்சி என்று விதந்தோதுகின்றனர் தினமணி வைத்தி வகையறாக்கள்.

பித்தளைச் செம்பை புளி போட்டு விளக்கி நீங்கள் கொடுப்பீர்கள் – அதில் அமெரிக்க பண்ணையார் வந்து புளிச் புளிச்சென்று துப்பிச் செல்வான். இதற்குப் பெயர் தான் சுவஷ் பாரத்.

இந்த மோ(ச)டிக்கு நீங்களும் உடந்தையாகப் போகிறீர்களா என்ன?

–    தமிழரசன்

மேலும் படிக்க:

Children at risk in e-waste sites

Independence Day speech: Modi’s art of doublespeak

India: Mr. Modi Preaches a Clean India, But His Record on Waste management and Pollution in Gujarat is Dirty

66 cases filed against Anil Ambani’s Company

 

விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?

0

சிறையிடப்பட்டுள்ள ஒரு விசாரணைக் கைதி, அவர் செய்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு சட்டப் புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தில் பாதியளவுக் காலத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அத்தகையோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும் சிறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையிடப்பட்டுள்ள ஏறத்தாழ 3,000 விசாரணைக் கைதிகள் உள்ளிட்டு, நாடெங்கும் ஒரு இலட்சத்துக்கும் மேலான விசாரணைக் கைதிகள் அக்டோபருக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இது இந்திய நீதித்துறை ஓசையின்றி செய்துள்ள புரட்சி என்றும் ஊடகங்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.

விசாரணைக் கைதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் சட்டப் புத்தகங்களின்படி குற்றவாளிகள் அல்லர்; குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதாவது, குற்றம் புரிந்ததாக அளிக்கப்படும் புகார் அல்லது தகவலின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள்.

trial-prisoners-1

ஏறத்தாழ 3.23 இலட்சம் பேரை அடைத்துவைக்குமளவுக்குத்தான் நாட்டிலுள்ள 1382 சிறைச்சாலைகளில் இடவசதி உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும், தற்போது இச்சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமாக – ஏறத்தாழ 3.81 இலட்சம் பேர் கைதிகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றவியல் ஆணையம் கூறுகிறது. இவர்களில் 2.54 இலட்சம் பேர் – அதாவது, சிறைக்கைதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் விசாரணைக் கைதிகளாவர். இந்த அளவுக்கு விசாரணைக் கைதிகளால் இந்தியச் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்குக் காரணம் என்ன?

இன்றைய அரசியலமைப்பு முறையில் போலீசார் எந்தவொரு குடிமகனையும் பிடித்து பொய்வழக்கைச் சோடித்து சிறையிலடைக்க முடியும். குற்றவியல் சட்டப்படி போலீசுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டாலும், யாரையும் பிடித்து சிறையில் தள்ளுவதற்கான வாய்ப்பும் அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை விரைந்து தடுப்பதாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் போலீசார் பல்வேறு சிறு குற்ற வழக்குகளில் அப்பாவிகளைப் பிடித்து வருவதென்பதும், தங்களது பதவி உயர்வுக்காகவும், சம்பளம்-சலுகைகளுக்காகவும், மிரட்டிப் பணம் பறிப்பதற்காகவும் இப்படி பல பொய்வழக்குகளைச் சோடிப்பதென்பதும் போலீசாரின் வாடிக்கையாகவே உள்ளது. இவையெல்லாம் நீதிபதிகளுக்குத் தெரியாத இரகசியமல்ல.

உதாரணமாக, ஒரு சிறு திருட்டுக் குற்றத்திற்கு அதிகபட்சத் தண்டனையாக மூன்றாண்டு சிறை என சட்டம் பரிந்துரைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பல நேரங்களில் ஒரு விசாரணைக் கைதியின் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதாகக் கூறிக் கொண்டு போலீசார் இழுத்தடிப்பதாலும், நீதிபதிகள் வழக்கு விசாரணையைத் தள்ளிப்போட்டு அலட்சியப்படுத்துவதாலும் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைக் காலத்துக்கும் மேலாக – நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்குச் சிறையில் வதைபடுகின்றனர். அதேசமயம், அரசியல் பலமும் சாதிய பலமும் குண்டர் பலமும் கொண்ட மேட்டுக்குடியினரும் தொழில்முறை கிரிமினல்களும், சமூகத் தொடர்புள்ளவர்களும் விரைவில் பிணையில் வெளியேவர முடிகிறது. அல்லது சிறையிலேயே அவர்கள் அனைத்து வசதிகளோடு பாதுகாப்பாக ஓய்வெடுக்கின்றனர். இத்தகைய பலம் ஏதுமில்லாத சாமானிய மக்கள்தான் பிணை கிடைக்காமல் தொடர்ந்து விசாரணைக் கைதிகளாகச் சிறையில் வதைபடுவதோடு, சட்டவிரோதமாக நீதிபதிகள் வீடுகளில் எடுபிடி வேலைகளைச் செய்யுமாறு பயன்படுத்தப்படுகிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் இந்த வழக்கைச் சீர்குலைப்பார், சாட்சிகளைக் கலைப்பார் என்ற நியாயமான அச்சம் நீதிபதிக்கு ஏற்பட்டால், அவர் ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்றக் காவலில் வைக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இப்படி எந்த அச்சத்தையும் தெரிவிக்காமல், போலீசார் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு, ஒரு விசாரணைக் கைதியை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உடனடியாக உத்தரவிடுகின்றனர். தாங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று ஒருவர் நீதிமன்றத்தில் கதறியழுதாலும், அது நீதிபதிகளின் காதுகளில் விழுவதில்லை. சுருக்கமாகச் சொன்னால், போலீசு நிலையத்தின் விரிவாக்கப்பட்ட நிலையமாகவே கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

trial-prisoners-2

இப்படி இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப்படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். பலரது வாழ்க்கையும், பல குடும்பங்களும் நாசமாக்கப்பட்டதற்கு இந்நீதிபதிகள்தான் காரணம். குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டவர் மீது 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல், அந்த விசாரணைக் கைதியை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க வேண்டுமென சட்டம் கூறினாலும், ஆண்டுக்கணக்கில் சிறையில் விசாரணைக் கைதிகள் வதைபடுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான்.

கடந்த மார்ச் 24 அன்று புழல் சிறையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள், போலீசார் தங்கள் மீது போட்டுள்ள பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும், நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்பாக தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கோடைவிடுமுறையைக் கழிக்க குடும்பத்தோடு உல்லாசமாகக் கிளம்பும் நீதிபதிகள், இக்காலத்தில் தேவையில்லாமல் அப்பாவிகள் சிறையில் விசாரணைக் கைதிகளாக வதைபடுவது அவர்களை உறுத்தவில்லையா? அல்லது போலீசார் சோடித்திருப்பது பொய்வழக்கு என்பது அவர்களுக்குத் தெரியாதா? இந்த அநீதியைத் தெரிந்தே செயல்படுத்திய முதன்மைக் குற்றவாளிகளான இந்நீதிபதிகளுக்கு என்ன தண்டனை? பொய்வழக்கு போட்டு சாமானியர்களை வதைக்கும் போலீசுக்கு என்ன தண்டனை? மாதமொருமுறை கீழமை நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்களுடன் சிறைச்சாலைக்கு நேரில் வந்து சிறைக்கைதிகளிடம் விசாரணை நடத்தி, நிலைமைகளைப் பரிசீலித்து அறிக்கை தரவேண்டுமென விதிகள் இருந்தபோதிலும், அவற்றை அவர்கள் தெரிந்தே புறக்கணித்து அலட்சியப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?

ஒருவரைப் பொய்வழக்கில் போலீசு பிடித்துச் செல்வதும், பின்னர் கைதானவரை விடுவிக்க அவரது உறவினர்களும் நண்பர்களும் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்வதும், அதன் பிறகு நீதிபதிகள் விசாரணை நாடகமாடி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து அந்த நிரபராதியை பிணையில் விடுவிப்பதும்தான் போலீசு மற்றும் நீதித்துறையின் அன்றாட நடைமுறையாக இருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட போலீசு ஆட்சேபிக்காவிட்டால்தான் ஒருவருக்குப் பிணை வழங்கிறார்கள். ஒரே நாளில் பல வழக்குகளில் பொய்சாட்சி கூறுவதற்காகவே சிலரை போலீசார் உருவாக்கி வைத்திருப்பதை தங்கள் கண்ணெதிரே கண்ட போதிலும், நீதிபதிகள் இதை எதிர்த்து வாய்திறப்பதில்லை. இது நீதித்துறைக்கும் போலீசுத்துறைக்குமிடையிலான எழுதப்படாத உடன்பாடாக நீடிக்கிறது. பொய்வழக்கு போடுவதைத் தங்களது உரிமையாக போலீசு செயல்படுத்தி வருவதை கண்டுகொள்ளாமல், அதனை அங்கீகரிப்பது நீதிபதிகள்தான்.

இப்படி நிரபராதிகளான ஏழைகளை வதைத்துக் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன. இந்தத்தொழில்தான் அவர்களை வாழ வைக்கிறது. இந்த கூட்டுக் களவாணிகளின் வலைப்பின்னல்தான் சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்தப் பொவழக்கிலாவது தங்களைப் போலீசார் சிக்கவைத்து விடுவார்களோ என்று நாளும் அச்சத்துடன்தான் சாமானிய மக்கள் வாழவேண்டியிருக்கிறது.

இந்தியச் சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பி வழிவதையும், அதனால் அடிப்படை வசதிகளின்றி நோய்வாய்ப்பட்டு கைதிகள் மரணமடைவதையும் பற்றி 1979-ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர். கன்னா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, அப்போதைய சட்ட அமைச்சரிடம் அறிக்கையும் பரிந்துரைகளும் அளிக்கப்பட்டன. ஆனாலும் அவை கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1996-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, விசாரணைக் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய 9 கட்டளைகளைப் பிறப்பித்தார்கள். அதன்பின்னர், 2005-ல் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிணை வழங்கும் பகுதியில் 436-ஏ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ள ஒரு விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்கான சிறைத் தண்டனையில் பாதிக் காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை சொந்தப் பிணையில் விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்படாமல் நீதிபதிகளாலேயே புறக்கணிக்கப்பட்டது. இப்போது மீண்டும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்து பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாலேயே, இந்தச் சட்டப்பிரிவை நினைவுபடுத்தி விசாரணைக் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை அவசரமாகப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இறுதியில், விசாரணைக் கைதிகளான நிரபராதிகள் குற்றவாளிகளாகிவிட்டார்கள்! நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கும் அயோக்கியத்தனத்தைச் செய்யும் முதன்மைக் குற்றவாளிகளான நீதிபதிகள் கருணாமூர்த்திகளாகிவிட்டார்கள்! இதுதான் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் நீதித்துறையின் புரட்சி!

– குமார்.
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை

2

bangalore-dalit-boy-temple-entry-1

படம் : ஓவியர் முகிலன்

பெங்களூரு நகரத்தில் உள்ள நெலமங்களா பகுதியில் ருத்ரேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. அருகாமையில் சந்தோஸ் எனும் எட்டு வயது தலித் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோவிலின் பார்ப்பனப் பூசாரி பிரசாதத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார். அதை வாங்க விரும்பிய சிறுவன் பூசாரியைப் பின் தொடர்ந்து கோவிலின் கருவறைக்குள் நுழைந்து விட்டான்.

பார்ப்பன பூசாரிகள் அல்லாதோர் கருவறைக்குள் நுழைவதற்கு பார்ப்பனியத்தின் ஆகமவிதி மற்றும் அரசியல் சட்டப்படியே தடை உள்ளது. அத்துடன் இங்கே ஒரு தலித் சிறுவனே நுழைந்து விட்டபடியால் கோவில் மற்றும் மூல விக்ரகங்களின் புனிதம் எவ்வளவு ‘கெட்டுப்’ போயிருக்கும் என்பதை ஒரு பார்ப்பனராக இருந்து பார்த்தால்தான் புரியும்.

மருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்
மருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்.
படம் நன்றி: The Hindu

நம்மவா ஆட்சி நடக்கும் போதே இப்படி இந்து தர்மத்திற்கு சோதனையா என்று எகிறிய அந்த பார்ப்பனப் பூசாரி சிறுவனை கடுமையாக தாக்கியிருக்கிறார். குறிப்பாக கோவில் தூணில் அவன் தலையை மோதவைத்திருக்கிறார். ரத்தம் வழிய வீடு திரும்பினான் சந்தோஷ்.

செருப்பு தைக்கும் தொழிலாளிகளான அவனது பெற்றோர் உடன் கோவில் சென்று பார்ப்பன பூசாரிகளிடம் பேசியிருக்கிறார்கள்.  பூசாரிகளோ அதை மறந்து விடுமாறு கோரியதோடு வெற்று தாளில் கைநாட்டு கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன விளக்கப்படி சிறுவனை திருடன் என நினைத்து தாக்கிவிட்டார்களாம். தீண்டாமை கொடுமைகள் அனைத்தோடும் இத்தகைய திருட்டு பட்டம் கூடவே திணிக்கப்படும். எனினும் சிறுவன் என்ன திருடினான் அல்லது எதை திருட முயன்றான் என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை. திரைக்கதையில் ஏதோ குழப்பம் போல.

பிறகு உள்ளூர் தலித் இயக்கங்கள் மூலம் இந்த பிரச்சினை செய்தியாக ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. தாக்கிய பார்ப்பனர்கள் இதை மறக்கச் சொல்கிறார்கள். நாமோ இதை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் கூடாது.

ஆவின் பால் விலை உயர்வு : மக்கள் மீது விழுந்தது இடி!

8

ஆவின் பால் விலை உயர்வு : ஏழை, நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஆவின்

“தாய்ப்பால் இல்லையா, ஆவின் பால் கொடுங்க” என மருத்துவர்கள் நம்பிக்கையோடு பரிந்துரைக்கும் அளவுக்கு பெயர் பெற்றது ஆவின் பால். இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. பல லட்சம் குழந்தைகளின் தாய்ப்பாலாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் ஆவின் பாலில்தான் விசத்தைபோல் தண்ணீரைக் கலந்து கொள்ளையடித்தனர் அ.தி.மு.க கிரிமினல்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து தமிழகம் மீளும் முன்பே, இதோ ஆவின் பால் விலையை திடீரென 10 ரூபாய் உயர்த்தி பச்சிளம் குழந்தைகளைப் பட்டினி போட்டு கொல்லத் துடிக்கிறது அ.தி.மு.க அரசு.

இதை வெறும் பால்விலை உயர்வு என்று மட்டும் பார்க்க முடியுமா? முடியாது. இதோடு சேர்ந்து ஆவின் பாலில் இருந்து தயாரித்து விற்பனை செய்யப்படும் நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாதாம் பவுடர், மோர், லஸ்ஸி என 17 வகையான பொருட்களுக்கும் நிச்சயம் விலை ஏறும். மிக முக்கியமாக கூலித் தொழிலாளிகளின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்கமுடியாத டீ, காபி விலையும் கடுமையாக உயர்ந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏன் இந்த விலை உயர்வு?

’ பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் கூடுதலாகக் கொடுப்பதால்தான் வாங்குவோர்க்கு 10 ரூபாய் விலை ஏறுகிறது என ஆவின்பால் விலை ஏற்றத்திற்கு நியாயம் கற்பிக்கிறது தமிழக அரசு.

உழைக்கும் மக்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். மாட்டுத் தீவனமான பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை. அவற்றை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணமான இந்த அரசுதான் இன்று விவசாயிகளுடைய நலனுக்காகத்தான் பால் விலையேற்றம் என்று அபாண்டமாக புளுகுகிறது.


[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்]

உண்மை என்ன தெரியுமா?

தனியார் பால் நிறுவனக் கொள்ளைக்கு வழி வகுக்கவும், ஆவினை அடியோடு ஒழிக்கவும் தான், இந்த விலை ஏற்றம். இன்று வரை ஆவின் பாலுக்கும் – தனியார் பாலுக்கும் உள்ள வித்தியாசம் லிட்டருக்கு 13 ரூபாய். ஆவின் விலை ஏற்றத்திற்குப் பிறகு இது வெறும் 3 ரூபாயாகத்தான் இருக்கும். இதனால் ஆவின் வாங்கியவர்கள் தனியார் பால் வாங்கும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். அடுத்து, ஆவின் விலையே ஏறும் போது எங்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று கூறி தனியார்கள் 50 ரூபாய் வரை விலை ஏற்றுவார்கள். இது கற்பனையல்ல, கடந்த கால உண்மை. 2012-ம் ஆண்டில் ஆவின் விலை ஏறிய பிறகு 2, 3 முறை தனியார் நிறுவனங்கள் விலையை ஏற்றி கொளையடித்து வருகின்றன. இன்றும் அதுதான் நடக்கப்போகிறது.

எப்படியிருந்தாலும் ஆவின்பால் விலை குறைவுதான், மக்கள் அதைத்தானே வாங்குவார்கள் என நீங்கள் நினைக்கலாம். மளிகைக்கடைக்காரரிடம் கேட்டு பாருங்கள் அவர் உண்மையை போட்டு உடைப்பார். “முதலில் தினமும் 20 பாக்கெட் ஆவின் வரும், பிறகு 15, 10, 8 எனக் குறைத்து விட்டார்கள். மக்களே விரும்பிக் கேட்டாலும் ஆவின் பால் கிடைக்கவில்லை, வேறு வழியே இல்லாமல் தனியார் பாலைத் தான் தருகிறோம்’’ என்கிறார் ஒரு மளிகைக் கடைக்காரர். இப்போது தெரிகிறதா எப்படி இருந்தாலும் தனியார் பால் நிறுவனங்களுக்குத்தான் கொள்ளை லாபம்.

புமாஇமு சுவரொட்டி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒட்டிய சுவரொட்டி

இன்னொரு பக்கம் தினந்தோறும் 2 லட்சம் லிட்டர் ஆவின் பாலைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட்டு, அதே அளவு கெமிக்கல் தண்ணீரைக் கலந்து 12 வருடமாக, ஆண்டுக்கு 150 கோடிக்கு மேல் சுருட்டி, சுமார் 2000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க எனும் கொள்ளை கூட்டத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியும், வைத்தியநாதனும். அதிகாரிகள் துணையோடு அடித்த இந்தக் கொள்ளையை ஈடுகட்ட இன்று நம் தலையில் விலையேற்றத்தை திணிக்கிறார்கள். இது தான் ஆவின்பால் விலை உயர்வின் பின்னணி.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு – ஆவினுக்கு வேட்டு

மக்களுக்கு, தரமாகவும் மலிவாகவும் பால் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1981-ம் வருடம் தொடங்கப்பட்டதுதான் ஆவின் நிறுவனம். 12000-க்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள், 20 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் என குறுகிய காலத்தில் ஆலமரம் போல் வளர்ந்தது. கறந்தது கறந்தபடி, சொட்டுத் தண்ணீர் கூடக் கலக்காமல் கூட்டுறவு சொசைட்டிகளுக்கு பாலைக் கொண்டு வந்தார்கள் விவசாயிகள். அந்தப் பாலை அதே தூய்மை – தரத்துடன், வீடுவரை கொண்டு வந்து சேர்த்தனர். இப்படித்தான் தாய்ப்பாலுக்கு நிகரான மதிப்பைப் பெற்றது ஆவின் பால்.

1991-ல் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உருவான தனியார் பால் நிறுவனங்கள் ஆவினோடு போட்டி போட முடியாமல் விழி பிதுங்கின. லாப வெறிகொண்டு அலையும் தனியார் பால் நிறுவன முதலாளிகள் விடுவார்களா? அவர்களுக்கு சேவை செய்யும் அரசுதான் விட்டுவிடுமா?

முதலில் விவசாயிகளுக்கு வழங்கிய மலிவு விலை தீவனம், பருத்திக் கொட்டை ஆகியவற்றை நிறுத்தினார்கள். பாலுக்குரிய பணத்தை மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்து விவசாயிகளை நோகடித்தார்கள். தொடர்ந்து நட்டமடைந்து வந்த விவசாயிகள் வேறுவழியின்றி தனியார் பால் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்படித்தான் ஆரோக்கியா, திருமலா, ஹெரிடேஜ், கெவின்ஸ் போன்ற தனியார் கொள்ளையர்கள் அரசின் துணையோடு வளர்ந்தார்கள். இன்று ஆவினுக்கு மூடு விழா நடத்த முயன்றும் வருகிறார்கள்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ரயில் பிரச்சாரம்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படி ஆவின் நிறுவனம் சீரழிக்கப்படுவதற்கெதிராக, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கெதிராகத்தான் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு பால் உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கையின்படி விலை ஏற்றப்படுவதாகக் கூறி ஒவ்வொரு முறையும் போராடும் விவசாயிகளை வில்லன்களைப் போல சித்தரிக்கும் சதி வேலையை செய்து வருகிறது இந்த அரசு. இதை எதிர்த்துப் போராடி மக்கள் சொத்தான ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டியதும், ஆவின் விலை ஏற்றத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை.

ஏற்கனவே காய்கறி முதல் மளிகை வரை விலைவாசி விசம்போல் ஏறி வருகிறது;. பொட்ரோல் – டீசல் விலை திடீர் திடீரென உயர்த்தப்படுகிறது; மாத பட்ஜெட்டில் குடிக்கும் தண்ணீருக்கும் சுமார் 2000 ஆயிரம் வரை ஒதுக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்; வெளியில் சென்றால் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போகும் கக்கூசுக்கும் விலை ஏற்றம்; கல்வி – மருத்துவம் காசு இல்லாமல் இல்லை என்பதால் அது நமக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது; இதோ ஆவினை அடுத்து மின்கட்டண உயர்வு எனும் ஏவுகணை நம்மை தாக்குவதற்கு தயாராகி வருகிறது.

வருமானம் உயரவில்லை, வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாம் என்ன செய்யப்போகிறோம். இனி பால் பயன்படுத்தும் அளவைக் குறைக்கலாம் என்று கருதுவதோ, அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப கூடுதலாக உழைக்கலாம் என நினைப்பதோ, இதெல்லாம் நம் தலைவிதி எதுவும் செய்யமுடியாது என சகித்துக்கொண்டு அமைதியாக வாழ்வதோ, நாம் என்ன செய்யமுடியும் என புலம்புவதோ, மனுகொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் – அதிகாரிகளிடம் மன்றாடுவதோ உண்மையில் தீர்வைத் தராது. ஆவின் பால் விலையை சகித்துக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

ஆவின் நட்டத்தை ஈடுகட்டி விவசாயிகளுக்கு வாழ்வுதர ஆவின் பாலில் ஊழல் செய்த அ.தி.மு.க கிரிமினல்கள் – அதிகாரிகளின் சொத்துக்களை மொத்தமாகப் பறிமுதல் செய்யப் வேண்டும். அதற்கு பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம் அணிதிரண்டு வாரீர்.

aavin-price-hike-banner

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.
வெளியிட்ட பிரசுரம்.

விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை

25
mohan-bhagwat
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்: மாட்டுக்கறி பிரியாணியை மறுக்கும் பார்ப்பனியத்தின் ரவுடி!

தெருவில் சினிமா போஸ்டரை மேய்ந்து கொண்டும், எப்போதடா பிரியாணியாகும் பாக்கியம் தனக்கு வாய்க்கும் என்று வயதான காலத்தில் ஏக்கத்தோடு சாவை எதிர்பார்த்தும், திரிந்து கொண்டிருக்கும் கோமாதாவை வம்படியாக பிடித்து சித்திரவதை செய்கிறது சங்கப்பரிவார கும்பல்.

மாடு புனிதம், மாடு பேண்ட சாணி புனிதம், மாடு மோண்ட மூத்திரம் புனிதம் என்று ”இந்து புனிதங்களுக்கு” விதவிதமான விளக்கங்களை காவி கும்பல் வழங்கி வந்த நிலையில் தற்போது புதிய விளக்கங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். அதாவது மாடு மட்டுமல்ல, மாட்டை ஒத்த எருமை, ஆடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளும் புனிதம் என்கிறார்கள்.

2014-ம் ஆண்டு விஜயதசமியன்று உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், மாடுகள் ’கடத்தப்படுவது’ உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென்றும் கூறியிருந்தார். மோகன் பாகவத்தின் உரைக்கு பொழிப்புரை எழுத வந்த பிரதமரின் ஆலோசகரும் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசரின் முன்னால் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி, பசு மட்டுமின்றி ஒட்டு மொத்த கோ வம்சத்தையும் இறைச்சிக்காக கொல்வது தடை செய்யப்பட வேண்டும் என்று பாகவத் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த மாதம் 14-ம் தேதி ஜெய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேனகா காந்தி, இறைச்சி வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் பணமெல்லாம் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டு இந்தியர்கள் கொல்லப்படுவதில் முடிகிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை என்னவோ மேனகா காந்தி சொல்வதில் இருந்து நேர்மாறானதாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களும் ‘இந்துக்களுக்கே’ சொந்தமானதாக இருக்கிறது. இல்லை இந்தியாவில் உள்ள பயங்கரவாதங்களுக்கு இந்த ‘இந்துக்களே’ காரணமென்று ஆகிறது.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் புரவலர்கள் பனியாக்கள் என்பதால் மேனகா காந்தியின் கூற்று உணமையாக இருப்பதற்கான சாத்தியங்களையும் நாம் மறுத்து விட முடியாது என்பது வேறு விசயம்.

பார்ப்பனிய கலாச்சாரத்தையே பொதுவான ‘இந்துக்கள்’ கலாச்சாரமாக சித்தரிப்பது, அதனடிப்படையில் சமூகத்தை மதவாத அடிப்படையில் குறுக்கு நெடுக்காக பிளப்பது என்கிற தமது செயல் தந்திரத்தை காவி கும்பலின் உயர்மட்டம் தெளிவாக முன்னெடுக்கத் துவங்கியுள்ளது. கூடவே அதை அமல்படுத்தும் வண்ணம் வன்முறை வெறியாட்டத்தையும் துவங்கியுள்ளது.

இந்தாண்டு ஈத் பண்டிகையின் போது குஜராத்தின் அகமதாபாத் நகரெங்கும் சிறிதும் பெரிதுமான கலவரங்கள் நடந்துள்ளன. குஜராத்தின் பல இடங்களில் இசுலாமியர்கள் குர்பானிக்காக கொண்டு சென்ற ஆடுகளை போலீசின் துணையோடு பஜ்ரங் தள் குண்டர் படைதடுத்து நிறுத்தியுள்ளது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், கோலிகள் மற்றும் சித்திகள் உள்ளிட்டு சுமார் 60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.

menka
கறி வியாபார காசுதான் பயங்கரவாதிகளுக்கு வசூலாம்.- மேனகா காந்தி. அசுர குல நாட்டில் தேவர் குல அடக்குமுறை!

சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட தில்லி புறநகர் பகுதியான பாவனாவில் 70 சதவீதமானோர் இசுலாமியர்கள் ஆவர். சுமார் 200 குண்டர்களோடு அப்பகுதியில் ஊடுருவிய இந்துத்துவ குண்டர்கள் அங்கே மூன்று பசுக்களை கடத்தி ஒளித்து வைக்கப்பட்டிருப்பதால், அதை மீட்கப் போவதாகவும் போலீசின் உதவியோடு வெறியாட்டம் போட்டுள்ளனர். கடைசியில் அவர்களால் ஒரே ஒரு பசுவைத்தான் கண்டு பிடிக்க முடிந்துள்ளது, அதுவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து பால்காரர் ஒருவருக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தானில் ஒட்டகங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வசுந்தரா ராஜேவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவ உணவுப் பழக்கமே மேலானது என்றும் அதுவே ’இந்து’ அடையாளம் என்பதாகவும் நிலைநாட்டத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். என்றாலும், இதைக் கீழ்மட்டத்திலிருந்து மக்களின் ஆதரவோடு நிலைநாட்டுவதிலும் சிக்கல் உள்ளது. தம்மை ’இந்துக்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வோரில் பார்ப்பனர்கள் மற்றும் பட்டேல்கள், ஜெயின்கள் உள்ளிட்ட ஒருசில ஆதிக்க சாதியினர் தவிர பெரும்பான்மையானோர் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

பெங்காலி பார்ப்பனர்களோ சூத்திரர்களே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் மீன் உணவுப் பிரியர்களாக இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களின் ”சத்திரிய” சாதியினரிடையே தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு எருதையும் எருமையையும் பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவிர தெற்கே தமது வளர்ச்சிக்கான இலக்காக ஆர்.எஸ்.எஸ் இனங்கண்டுள்ள கேரளத்தில் நம்பூதிரி தவிர்த்த அனைத்து ‘இந்துக்களும்’ மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்களே. தமிழகத்திலும் இதுவே நிலைமை.

ஆக, கீழ்மட்டத்தில் சைவ உணவுக்கு ஆதரவான அணிதிரட்டலோ கலவரங்களோ முழுமையான அளவில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ், மேலிருந்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலமும் கலாச்சார ரீதியில் அசைவத்தை இழிந்த உணவாக நிலைநாட்டுவதன் மூலமும் தனது நோக்கங்களை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்துமதவெறியின் கோட்டையான இந்தி பேசும் மாநிலங்களில் அதை அமல்படுத்த துவங்கியிருக்கிறது. இது குறித்து ‘கருவாடு’ ஆவணப்படத்தில் விரிவாக பேசுகிறது.

முதலில் பசுவை தெய்வம் என்பது, பின்னர் பசுவதையை தடுக்க கோருவது, அடுத்த கட்டமாக பசு மாமிசம் உண்பது இசுலாமியர்கள் மட்டும் தானென்பதை நிலைநாட்டுவது, அடுத்த கட்டமாக எல்லா மாமிச உணவையும் மாட்டிறைச்சியோடு தொடர்புபடுத்துவது என்கிற பாதையை தெரிவு செய்துள்ளது.

Hyderabadi biryani
பிரியாணிக்கு எதிரான பார்ப்பனியத்திற்கு பாடை கட்டுவது எப்போது?

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12 சதவீத பங்கு வகிக்கும் இறைச்சி ஏற்றுமதியின் மொத்த மதிப்பு சுமார் 500 கோடி டாலராகும் (சுமார் ரூ 30,000 கோடி). இதில் சுமார் 440 கோடி டாலர் (சுமார் ரூ 26,400 கோடி) எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது. மாட்டிறைச்சி மற்றும் எருமை மாட்டிறைச்சி ஆகியவற்றின் உள்நாட்டு நுகர்வும் அதிகமாகவே இருக்கிறது.

பெரும்பான்மையான ஏழை மக்களின் புரதம் மற்றும் ஊட்டச்சத்து தேவையை மாட்டிறைச்சியே பூர்த்தி செய்து வருகிறது. முன்பு பாரதிய ஜனதா பசுவதைத் தடைச்சட்டத்தை தனிநபர் மசோதாவாக கொண்டு வர முயன்ற போது அதை எதிர்த்துப் பேசிய பி.ஏ சங்மா, ஒரு வேளை பசுவதை தடை சட்டப்பூர்வமானதாக ஆகும் பட்சத்தில் வடகிழக்கு மாநில மக்கள் பெரியஅளவில் பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இசுலாமியர்களின் வேலையே மாட்டைக் கொன்று தின்பது தான் என்கிற ரீதியில் இந்துத்துவ கும்பல் அடித்து விடுவது முதலில் அடிப்படையற்றதாகும். மாட்டிறைச்சி என்பது மலிவாக (கிலோ 140 ரூ) கிடைக்கக் கூடிய அசைவ உணவாக இருப்பதால், சமூகத்தின் கீழ் அடுக்கில் உள்ள தலித்துகள், பழங்குடியினரின் மற்றும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் இதர பிரிவு உழைக்கும் மக்களின் உணவாகவே எதார்த்தத்தில் உள்ளது. வசதியான இசுலாமியர்கள் மாட்டிறைச்சியை விட மென்மையான ஆட்டிறைச்சியையே விரும்புவர். தவிர வடகிழக்கு மாநில மக்களிடையேயும் மாட்டிறைச்சி உண்பது கலாச்சார ரீதியில் சகஜமானதாக உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ள இந்தியாவை சைவ நாடாக மாற்றுவதன் மூலம் பெரும்பான்மை மக்களை கொன்று போடத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். இது ஆர்.எஸ்.எஸ் – இசுலாமியர்கள் பிரச்சினையல்ல; பெரும்பான்மை உழைக்கும் மக்களை கேவலப்படுத்தும் நேரடியான உணவுத் தீண்டாமை. பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கத்தை கொச்சைப் படுத்துவதன் பின்னிருக்கும் பார்ப்பனியத் திமிரை நாம் இனங்கண்டு கொள்வதோடு நேரிட்டு மோதி ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியம்.

மானமும் சொரணையும் உள்ளவர்கள் செய்யக்கூடிய காரியமும் அதுதான்.

–    தமிழரசன்