Friday, June 9, 2023
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வைகோ - ஒரு அரசியல் அனாதையின் கதை!

வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!

-

வைகோ-ஒரு அரசியல் அனாதையின் கதை!

ரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை என்பதறியலாம். என்ன, இந்த நகைச்சுவையை பார்த்து யாரும் வாய்விட்டு சிரிக்க முடியாது என்பதுதான் சோகம்.

வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விடயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் நவரசத்தில் வைகோதான் சோகத்தின் நாயகனோ?

சில வருடங்களுக்கு முன்பு அநேகமாக 2007 என்று நினைவு. சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம். நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முகமன் சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இனி அவர்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் என்றும் சொன்னார். ஆனால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அந்த வரைக்கும் கொஞ்சம் அடக்கம் இருந்தது உண்மை.

அப்போதே யோசித்தேன். இந்த வனவாசம் இன்னும் 20,25,50 ஆண்டுகள் என்று போனால் நாஞ்சில் சம்பத் வாயில் உலக வரலாறும், உலக கட்டிடங்களும் என்ன பாடுபடும் என்று நினைத்தேன். அதனால்தான் வைகோவின் விசயத்தில் சோகமல்ல, நகைச்சுவையே மேலோங்கி இருக்கிறது என்று மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.

வைகோ குறித்து நடுநிலைமையாளர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. “அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்” என்று அவரை போற்றுகிறார்கள். வைகோவின் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமரிசப்பவர்கள்கூட இந்த விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள். எனினும் இது மிகவும் பிழையான சென்டிமெண்டான மதிப்பீடு என்கிறோம். ஒருவேளை சென்டிமெண்டாக உணர்ச்சிவசப்பட்டு, படுத்தி பேசும் வைகோ குறித்து இப்படித்தான் எண்ணுவார்களோ தெரியாது.

சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை ம.தி.மு.க வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றமில்லை என்றாலும் வைகோவிற்கு இரட்டை இலக்கில் இடங்கள் கிடைக்காது என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 41, சி.பி.எம்முக்கு 12, சி.பி.ஐக்கு 10 பிறகு சின்ன கட்சிகளுக்கு ஒரிரு இடங்களெல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ம.தி.மு.கவின் இடம் குறித்து மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தே.மு.க.தி.க வந்திருப்பதால் அதிக இடம் கொடுக்க முடியாது என்கிறது அ.தி.மு.க. வைகோ இதை உணராமல் இல்லை. எனினும் அவர் 25இல் ஆரம்பித்து 20இல் நின்று இறுதியாக 15வது கொடுங்கள் என்கிறாராம். அம்மாவோ 5இல் ஆரம்பித்து 7,8 என்று நிற்பதாக தகவல். இதனால்தான் புரட்சிப் புயல், புரட்சித் தலைவியை பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாமல் அண்ணாநகர் வீட்டில் முடங்கி கிடக்கிறது.

ஆனாலும் நண்பர்களே இந்தக்காட்சி இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இரு வருடங்களுக்கு முன்னர் கூட அட்சர சுத்தமாக இப்படித்தான் நடந்தது. அதை கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கில் சென்று பார்ப்போம்.

2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் ம.தி.மு.கவைத் தவிர மற்ற கட்சிகள் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தன. அவர்களுக்குரிய தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டாலும் வைகோவுக்கு ஒதுக்கீடு முடியவில்லை. அ.தி.மு.க நான்கு தருவதாக சொன்னது. வைகோ கராராக ஆறு என்று கேட்டார். அப்போதும் இதே நிலைதான். சோகம்தான்.

அப்போது ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தென்மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவர்கள் ஈழத்தமிழருக்காக சென்னையில் வந்து போராடுவதற்கு இரயிலில் வந்தனர். அவர்களை வரவேற்க வைகோ நிலையம் சென்றார். “ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” என்று மாணவர்கள் முழக்கமிட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த வைகோ செய்வதறியாது திரும்பினார். வெளியே நிருபர்கள் இன்னமும் தொகுதி உடன்பாடு முடியாதது குறித்து கேட்டார்கள். ” அது குறித்து பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று வைகோ வெருட்டென்று போய்விட்டார்.

இந்த மனநிலை ஈழத்தின் சோகத்தினால் வந்ததென்று நீங்கள் தவறாக கருதிவிடக்கூடாது. உண்மையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த வருத்தம்.

ஒரு வழியாக ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் விருதுநகர், தஞ்சை, நீலகிரி, ஈரோடு முடிவாகி வைகோவும் சிரிக்காத முகத்துடன் உம்மென்று ஜெயா அருகில் போஸ் கொடுத்து ஒப்பந்தத்தை காட்டினார். இந்த தொகுதிகளெல்லாம் அ.தி.மு.கவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதது என்பதால் இதில் வெல்ல முடியாதென்பது வைகோவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?

அப்போதும் ஏன் இப்போதும் கூட அவர் தனியாக தேர்தலில் நின்று பார்க்க முடியாது. அத்தகைய வெற்று சவடால் அடிப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை.

ஆனால் அப்படி தனியாக வென்று காட்டுவதற்கென்றுதான் கட்சி ஆரம்பித்தார்.

1944-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.

தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.

தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.

மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்பது தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.

உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.

அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.

அந்த வகையில் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசியல் செய்யும் தலைவராக கூட அவர் இருந்ததில்லை. தி.மு.கவை வேறு வழியின்றி அந்த எதிர்ப்பு அலை ஆட்சியில் அமர்த்தியது.

இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.

பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.

தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.

இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.

ஈழப் பிரச்சினையில் கூட வைகோ எப்போதும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாதித்து விடலாம் என்ற அணுகுமுறையையே கொண்டிருந்தார். ஒரு சில லாபி வேலைகள் செய்தால் ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பதுதான் அவரது நிலை. முக்கியமாக இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக ஈழப்பிரச்சினைக்கு வில்லனாக இருக்கிறது என்ற முறையில் அவரது அணுகுமுறை என்றும் இருந்ததில்லை.

மேலும் 2009ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை முன்னணிக்கு வந்த போதும் அதை வைத்து மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதில் அதை தேர்தல் முழக்கமாக்கி ஆதாயம் அடைய நினைத்தார். அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வென்றுவிட்டால் ஈழப்போர் முடிவுக்கு வரும் என்று புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவறாக வழிநடத்தியதில் வைகோவுக்கும் பெரும் பங்குண்டு.

முத்துக்குமார் இறந்த பிரச்சினையிலும் அது பெரிய போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக அணிமாறிய வைகோ இந்த தேர்தலில் கிட்டத்தட்ட27 சீட்டுகள் கிடைக்காது என்றாலும் அணிமாற இயலாது என்ற இழிவான நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதில் ஆறு சதவீதம் வாக்குகளும், இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தால்தான் மாநிலக் கட்சி என்ற தேர்தல் க மிஷன் அங்கீகாரம் கிடைக்கும். சென்ற தேர்தலில் பறி போன அந்த அங்கீகாரம் இனி எப்போதும் திரும்பாது என்பதுதான் களநிலவரம். மக்கள் நலன் என்ற அங்கீகாரத்திற்கு துரோகமிழைத்தவருக்கு இந்த டெக்னிக்கல் அங்கீகாரம்தான் தற்போது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாம். எனினும் அவர் இதையும் கடந்து வருவார்.

க கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோவின் இலக்குதான் என்ன? அவர் தமிழகத்தில் ஒரு தலைவராக உலா வர வேண்டும். ஊடகங்களில் அவரது கருப்பு மையடித்த மீசை கொண்ட படங்கள் வெளிவர வேண்டும். அவரது அறிக்கைகள் தினசரிகளில் இடம்பெறவேண்டும். சமீபத்தில் கூட உலக மகளிர் தினம், ஜப்பான் சுனாமி குறித்தெல்லாம் அறிக்கை வெளியிட்டார். அதே நேரம் உள்ளுக்குள் அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றை எண் தொகுதிகள்தானா என்று அவர் கொஞ்சமேனும் அழுதிருக்க வேண்டும்.

இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.

மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது இன்று அவர் அரசியல் அனாதையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கும் நாம் வருந்தத் தேவையில்லை. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் எல்லா வகை சீரழிவுகளோடும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவர்களது நிழலில் தங்கி வேலை செய்த வைகோ அவர்களது செல்வாக்கை மிஞ்ச முடியுமா என்ன?

ஆக இந்த இடம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் புறநிலையான காரணங்களும், அகநிலையான காரணங்களும் உண்டு. அதில் வைகோ விரும்பி செய்த பணிகளையே மேலே விமரிசித்திருக்கிறோம். ஆக வைகோ வாய்ப்பு கிடைக்காததால் ஒருபெரிய தலைவராக முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ம.தி.மு.க கட்சியில் சேரும் தகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அதாவது அவரும் அரசியல் அனாதையாக முடிவு செய்து விட்டார். நாமும் நமது அனுதாபங்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.

 

inner_design400x300

  1. வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை ! | வினவு!…

    ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம்….

  2. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.ஒருவரின் துயரத்தை கொண்டாடுவது என்ன மன நிலை ?

    • வரலாற்றுத் தவறுகளை இம்மி பிசகாமல் செய்து வந்த வைகோவின் நிலை குறித்து பரிதாபப்படவா முடியும்.

    • அரசியல் கட்சிகளை, அதன் தலைமையை விமர்சனம் செய்வது என்பது பொதுவாக செய்தி ஊடகங்களின் பணிகளில் ஒன்றே. அந்த வகையில் மேற்படி விமர்சனக் கட்டுரையை படித்ததில் எவ்வித தவறும் இருப்பதாக தெரியவில்லை. கடந்த 4 இதழ்களாக ஜூனியர் விகடன் பத்திரிகையில் தமிழருவி மணியன் கருணாநிதிக்கு, ஜெயலலிதாவிற்கு, ராகுல்காந்திக்கு என பகிரங்க கடிதம் ஒவ்வொன்றாக பிரசுரமாகி அதில் ஒவ்வொருவரின் குறைகளையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அது போலதான் வைகோ மற்றும் அவர் கட்சியின் தவறுகளை மிகச்சரியான நேரத்தில், மிகச் சரியாக சுட்டிக்காண்பித்துள்ளது வினவு.

  3. உங்களுடைய கருத்துக்களில் நான் முரண்படுகிறேன். நீங்கள் எழுதுவது, சிந்திப்பதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் அது தவறு. சமகாலத்தில் ஒரளவேனும் மதிக்கதக்க மனிதர் திரு வைகோ. உங்கள் எழுத்துக்களை படிப்பவர்கள் எல்லாம் உங்கள் கருத்துகளில் உடன்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல.

  4. வினவின் கட்டுரைகளிலே மிக மிக கேவலமான கட்டுரை இது.. கோமாளி தேர்தல் ரேசில் நோண்டும் ஒரு குதிரையை பார்த்து சிரிக்கும் (அதற்க்கு வரலாறு வேறு) ஒரு சாடிஸ்ட் வெறி.. இந்த கட்டுரையில் மக்களுக்காக என்ன சொல்ல முனைகிறிர்கள்?? .. விழிப்புணர்வா ?.. அப்படி என்றால் நீர் தேர்தல் ஏமாற்று வேலையே பற்றி சொல்லிருக்கலாம்.. 49 O வை பற்றி எழுதி இருக்கலாம்.. சாடிஸ்ட் வினவு..

  5. பொடாவில் போட்டும் ஜெயலலிதாவின் குலாவியது மட்டும் வை.கோவின் சறுக்கல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    மற்றபடி பி.ஜே.பி,பார்வதி அம்மாள் வருகைக்கு கூட்டம் கூட்டவில்லை,ஏனைய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவில்லையென்பதெல்லாம் அரசியல் நோக்கோடுப் பார்க்கப்பட்டு சறுக்கிய அபத்தமான கட்டுரை.

  6. இது ஒரு முட்டாள் தனமான கட்டுரை. வைகோ ஒரு நல்ல மனிதர். அரசியலில் அவர் சோபிக்காததற்கு காரணம் கலைஞரின் தந்திரங்களே தவிர அவர் இல்லை.

  7. வை.கோ,ஈழத்தமிழர்களுக்கு மட்டும்தான் கவலைப்பட்டார் ,இங்கேயும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்ததால்,அரசியல் அனாதை யாக நிற்கிறார். பாவம் நல்ல மனிதர்.இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும்.

  8. False sentiment-.., dear reader do you think ‘Eelam issue’ a false sentiment?. Then ‘communism’ is what type of sentiment in a globalized world? Where is real communism in our present world? …. We aware all major party give respect to caste ( VCK, PMK,.. Ete.) , glamour( Vijayakant, saratkumar), minorities(muslim leugue, MMK) and money. MDMK not have above eligebility, so MDMK in a political orphan stage. In Tamil nadu communist also done caste politics ( Uthapuram issue… Ete. And more importantly what is the stage of the socalled ‘ real communist’ MA.KA.E.KA.

  9. In our Present potical situation , what is the stage (orphan or any other suitable name) of Ma.KA.E.KA in Tamil Nadu?. Fisrt you worried abou your organisation. Why wont we worried about caste, mofia, money, minority, etc. In our political system?

  10. நண்பர்கள் சிலர் வைக்கோ நெம்ப நல்லருன்ன்னு சொல்லி பீல் பண்ணியிருக்கிறார்கள். ஆனால், மிக கவனமாக அந்த “நல்லவரு” எடுத்த கேடுகெட்ட பிழைப்புவாத முடிவுகள் பற்றி
    கட்டுரையில் எழுப்பியிருக்கும் கேள்வியைக் கடந்து போகிறார்கள். இது கோலங்கள் சீரியலில் கண்ணீர் விட்டுக் கதறியழுத அபியைப் பார்த்து நடிகை தேவையாணி பற்றி முடிவெடுக்கும் நடுத்தரவர்க்க அரைவேக்காட்டுத்தனம் போல் தோன்றினாலும் உண்மையில் காரியவாத அரைவேக்காட்டுத்தனம் தான். இல்லையென்றால் கட்டுரை நெடூக வைக்கோவின் வரலாற்றைப் புட்டு புட்டு வைத்திருப்பதை இவர்கள் கண்கள் காண மறுப்பதன் காரணம் என்னவாக இருக்க முடியும்?

    இன்றைக்கு வரை வைக்கோ ஒரு அடிமை நாயைப் போல போயஸ் தோட்டத்தைச் சுற்றி சுற்றி வந்து வாலாட்டும் சொரனைகெட்டதனமாகட்டும் – பார்ப்பன பயங்கரவாதிகளான பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் களம் அமைத்துக் கொடுத்த துரோகத்தனமாகட்டும் – இதெல்லாமே வைக்கோ மேடையில் விடும் கண்ணீரால் கழுவப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுமா? திமுகவில் இருந்து பிரிந்து வந்ததற்கோ மீண்டும் சேர்ந்ததற்கோ – பாசிஸ்டு ஜெயாவால் சிறையில் அடைக்கப்பட்டும் அவர் காலை நக்கிக் கிடக்கும் சுயமரியாதையற்ற நிலைக்கோ வைக்கோவால் எதாவது தத்துவார்த்த விளக்கம் அளிக்க முடிந்திருக்கிறதா?

    அட, இந்தத் தமிழினவாதிகளின் நிலை சன் டிவியின் மத்தியான சீரியலைப் பார்த்து மூக்கு சிந்தும் மயிலாப்பூர் மாமிகளின் ரேஞ்சு தானா? ஸோ சேட் 🙁

    • இங்கு யாருக்குத்தான், கொள்கை இருக்கிறது?
      அரசியல்வாதிகளனைவரும் ஓட்டு விரும்பிகள்!
      தீவிரவாதிகளனைவரும் மக்களைக் கேடயமாகக் கொண்டு,தங்கள் வெறியைத் தீர்க்கும் வேட்டு விரும்பிகள்!
      சுயநல, ஆடம்பர, நுகர் பொருள் மோகம் கொண்ட மக்கள்!
      இதில் யார் மேல்? யார் கீழ்?

  11. no i am not agree with u.situvation is wrost rightnow thatsall.may be this situvation make vaiko to move in another dimension which will have a chance to create history in 2016

    • On what basis you are making statistics for future? When people like Vijayakanth and other caste-based political small time parties are booming this time you still believe he will come up AFTER 5 years? This is what political analysts were telling for PAST 15 YEARS

  12. கொள்கையில் நிலை இல்லை என்றால் இப்படித்தான் அனாதையாக வேண்டி வரும். இந்த நிலை விஜயகாந்துக்கும் விரைவில் வரும்.

  13. கருணாநிதி நல்லவரா கெட்டவரா என்பதல்ல.அவர் காலடியிலிருந்து ஏமாற்றி அவராலே செலவில்லாமல் மூன்று தடவை எம்பியாகி அவரே ஸ்டாலினை தலைவாராக பேசி ,செய்த துரோகம் அதிகமான இவர்,கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு யாரும் கோவை பிரச்சாரத்துக்கு யாரும் செல்லாத நிலையில் பீஜெபிக்கு ஆதரவாக சுற்று பயணம் செய்தார். ஆகவே இப்போது அவர்களுடன் கூட்டணி வைக்க ஆள் இல்லாத நிலையில் வைக்கோ கூட்டணி வைக்கலாம்.

  14. வை.கோ வின் கதை, தீவிரவாதத்தை ஆதரிக்கும், எந்நேரமும் உணர்ச்சிவசப்படும், எலிவளை ஆனாலும் தன்வளை : தானே அதற்குத் தலைவன் எனும் குறுகிய வட்டத்தில் சிந்திக்கும், துரோகிகளை தொண்டர்களாகக் கொண்டிருக்கும், அரசியல் வாதிகளுக்கெல்லாம் ஒரு பாடம்!

    கம்யூனிஸ்ட்களுக்கு அடுத்து, மக்கள் பிரச்சனைக்கு, ஓடோடிச் சென்று குரல் கொடுக்கும், ஒரு சில தமிழகத் தலைவர்களில், வைகோவே முதலிடம்!

    அதிகாரம், பணபலம், பகட்டு, புரட்டு, இலவசம் – இவையே இன்று, தமிழக மக்கள் விரும்பும்,ரசிக்கும் பாங்குகள்! இவைகளின் பிரதிபலிப்பு, மக்கள் தெரிவு செய்யும் தலைவர்களின், தகுதியில் தெரியும்!

    தமிழக மக்கள் ரசிக்காத ஈழப் பிரச்சனைக்கு,ஓவராக குரல் கொடுத்து அன்னியப்பட்டுவிட்டார்! உணர்ச்சி வசப்பட்டு, அவசரத்தில் எடுக்கும் முடிவுகளால்,தன்னையே அழித்துக் கொள்ளுகிறார்!

    மிதவாதகம்யூனிஸ்டுகளின், நிழலில் வளர்ந்து, இன்று வளர்த்தவர்களையே முட்டும், மாவோ தீவிரவாதிகளுக்கும், நாளை இதே கதி தான்!

    • //தீவிரவாதத்தை ஆதரிக்கும்//

      ரம்மி அவர்கள் இந்தியாவைத்தான் மேற்படி தீவிரவாதம் என்று குறிப்பிடுகிறார். சரியாகச் சொன்னீர்கள் ரம்மி.

  15. What u have wrote is my voice! Each and every line I accept with u for Vaiko. Naanjil sampath will come out now from Jaya like how he did for 1 seat for Karunanidhi last time? Spineless fellows.

  16. வினாவை தொடர்ந்து படித்து வருவதாலும் அவர்கள் நடத்திய சில கூட்டங்களில் கலந்து கொண்டவன் என்ற முறையிலும் இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறேன். கொள்கை ரீதியிலான தாக்குதல்கள் மீறி இதில் காழ்புணர்ச்சி இருப்பதும் புலிகள் பற்றிய உங்கள் பார்வையை திணிப்பதாகவும் உள்ளது.

    அவருக்கு ஈழம் பற்றிய அக்கறை இல்லை/ பார்வதி அம்மாள் திருப்பி அனுப்ப பட்டர்தற்கு வெறும் அறிக்கையோடு முடித்து கொண்டார் // இது தவறான கருத்து. தினமும் ஐந்து பத்து என்று செத்துகொண்டிருகும் மாவோ களுக்கு வினவு, ம க இ க என்ன செய்ய முடிந்தது. இப்படியான சில சந்தர்பங்களில் நாமும் சிக்கி கொண்டிருப்பதால் மற்றவர்களை விமர்சனம் செய்யும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    • //வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை //

      தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலை எதிர்ப்பில் தீவிரமாக இருந்த அன்னார் வைகோ அவர்கள் பின்பு அமைதியான மர்மம் என்ன?

      சிவகாசி தீப்பெட்டி எந்திரமயமாக்கத்தை தடுப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி கதைவிட்டவர் அதை மறந்து போன மர்மம் என்ன?

      இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. அண்ணன் கறை படியாதவர் என்பதெல்லாம் சும்ம லுலுவாய்க்கி. போதியளவு கறை படிய வாய்ப்புக் கிடைக்காதவர் என்பதே சரி.

      • புயல் தலைவரின் கட்சியின், இன்றைய நிலைக்கு,உலோக ஆலை நிர்வாகமும், அந்நிய நாட்டு” அரசப் பறவை”யுமே, காரணம் என்று, அந்தக் கட்சி தொண்டர்கள், பேசி வருகின்றனர்!

      • ச்டெர்லிக்க்ட் ஆலை எதிராக வைகோ தனியாக போரதுவது தெரியுமா நன்பரே

  17. வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

    ——————-
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் – மார்ச் ‘2011)

  18. “நண்பர்கள் சிலர் வைக்கோ நெம்ப நல்லருன்ன்னு சொல்லி பீல் பண்ணியிருக்கிறார்கள். ஆனால், மிக கவனமாக அந்த “நல்லவரு” எடுத்த கேடுகெட்ட பிழைப்புவாத முடிவுகள் பற்றி
    கட்டுரையில் எழுப்பியிருக்கும் கேள்வியைக் கடந்து போகிறார்கள். இது கோலங்கள் சீரியலில் கண்ணீர் விட்டுக் கதறியழுத அபியைப் பார்த்து நடிகை தேவையாணி பற்றி முடிவெடுக்கும் நடுத்தரவர்க்க அரைவேக்காட்டுத்தனம் போல் தோன்றினாலும் உண்மையில் காரியவாத அரைவேக்காட்டுத்தனம் தான். இல்லையென்றால் கட்டுரை நெடூக வைக்கோவின் வரலாற்றைப் புட்டு புட்டு வைத்திருப்பதை இவர்கள் கண்கள் காண மறுப்பதன் காரணம் என்னவாக இருக்க முடியும்?

    இன்றைக்கு வரை வைக்கோ ஒரு அடிமை நாயைப் போல போயஸ் தோட்டத்தைச் சுற்றி சுற்றி வந்து வாலாட்டும் சொரனைகெட்டதனமாகட்டும் – பார்ப்பன பயங்கரவாதிகளான பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் களம் அமைத்துக் கொடுத்த துரோகத்தனமாகட்டும் – இதெல்லாமே வைக்கோ மேடையில் விடும் கண்ணீரால் கழுவப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுமா? திமுகவில் இருந்து பிரிந்து வந்ததற்கோ மீண்டும் சேர்ந்ததற்கோ – பாசிஸ்டு ஜெயாவால் சிறையில் அடைக்கப்பட்டும் அவர் காலை நக்கிக் கிடக்கும் சுயமரியாதையற்ற நிலைக்கோ வைக்கோவால் எதாவது தத்துவார்த்த விளக்கம் அளிக்க முடிந்திருக்கிறதா?

    அட, இந்தத் தமிழினவாதிகளின் நிலை சன் டிவியின் மத்தியான சீரியலைப் பார்த்து மூக்கு சிந்தும் மயிலாப்பூர் மாமிகளின் ரேஞ்சு தானா? ஸோ சேட் ”
    சரியாக சொன்னீர்கள்.கடந்த சட்டம்ன்ற தேர்தலில் அரசியல் திருப்பு முனையே(அப்படினா என்னா)என்றெல்லாம் பட்டம் பெற்றவர் இன்று அரசியல் அனாதையாக நிற்க்கிறார் பாவம்.

  19. இது ஒரு முட்டாள் தனமான கட்டுரை. வைகோ ஒரு நல்ல மனிதர். அரசியலில் அவர் சோபிக்காததற்கு காரணம் கலைஞரின் தந்திரங்களே தவிர அவர் இல்லை.

  20. தவறான அனுகுமுறையால் தலைமைக்கு எதிரியானார்
    தரங்கெட்ட ஜெயா மடிப்பிச்சையால் தன்மானத்திற்கு எதிரியானார்
    கூடுவிட்டு கூடு பாய்ந்து இனத்திற்கு எதிரியானார்
    மத வெறி கும்பலின் புகலிடத்தால் மனிதநேயத்துக்கு எதிரியானார்
    தாயகத்தைக் காக்க தமிழகத்தை மறந்து தேர்தல் தனிக்கை செய்யப்பட்ட
    தனிமரமானார்.

  21. why all the fake communist like u hate bjp ? dmk ,admk ,congress all the frauds are also not a secularist all the parties given seats in the based of religion and caste then why flame only bjp. karuna go to ifthar for muslim community but he is not accept vinayagar sathurthi??? what is the secularism here. bjp openly given voice for majorities.why all other parties not given mla or mp seat to a minority in majority community people living area???they nevr given a seat to a common area.

  22. why you people are not wrinting anything about communist pary in Tamil nadu…

    shameless communist. they dont have sense.. some time back they were talking about siruthavoor… now there is no issue for communist ??????????????

  23. நீங்கள் எழுதிய இந்த கதை நல்ல கதைகளில் ஓன்று அதுவும் உங்கள் கருத்தை பாராட்டி சன் டிவியின் தொடர்கள் உவமையாக காட்டப்பட்டு இருப்பதே போதும் ……அடுத்து யாரின் கதை ….

  24. வினவு அவர்களுக்கு, உங்கள் கட்டுரை வைகோவின் கடந்த கால அரசியல் கூட்டணி நிலைபாடுகளில் ஏற்பட்ட நிலவரங்களை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. ஆனால் நீங்கள் கடைசியில் விமரிசித்துள்ள ” மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது ” தவறானது என்பது எனது கருத்து.

    மாடத்தில் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் செய்வதற்கு ஒரு நாற்காலியும், ஒரு கப் டீயும் போதுமானது. அதை தான் நீங்கள் இங்கே செய்து கொண்டிருக்கிறீர்கள். இடதுசாரிகளாவது உங்கள் வார்த்தையில் சொல்லப்போனால் ‘போலி ஜனநாயகத்தில்’ ‘போலி தேர்தலில் ‘ கலந்து கொண்டு இந்தியாவின் சில மாநிலங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்கள்.

    அங்கு அவர்கள் இந்திய போலி ஓட்டை சட்டங்களை வைத்து ஓரளவு மக்களுக்கு பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் மாடத்தை விட்டு எப்போதுஇறங்கி வரப்போகிறீர்கள், அல்லது பொட்டி எழுத்து ‘புரட்சி’ செய்து இந்தியாவை வாழும் சொர்க்கமாக மாற்ற போகிறீர்கள் ?

    • Time will come like tunisia, egipt, libya, baharin, yemon, you will participate on that revolution not yourself, your family will push you but you should careful the bramins will make a cast broblem, not directly in some ways, otherwise how thay are being as vegitable family without working under sunlight and direct cutivation.

  25. ஒரு ஆய்விற்கும் உட்படுத்தாமல் சராசரி தினத்தந்தியில் வரும் தரவுகளை மட்டும் மேர்கோள் காட்டி எழுதப்பட்ட சாதாரண கட்டுரை. கொஞ்சம் கூட உழைப்பில்லாமல் எழுதும்பொழுது, குறைந்தபட்சம் வார்த்தைகளில் நாகரிகத்தையாவது கடைபிடிக்கலாம்.

    ஓட்டுப் போடும் அரசியலில் கூட்டணி மாற்றம் பிழைப்புவாதம் என்றால் அடிப்படை எதார்த்தத்தையே புரிந்துகொள்ளாத காகிதப் புரட்சி காணும் கனவு நிலை. இந்தக் கனவு நிலையிலிருந்து மீளாத வரையில் இங்கு புரட்சி ஏற்படப்போவதில்லை. குழப்பம்தான் மிஞ்சும்.

    ஓட்டுப் போடும் அரசியல்தான் தீர்வு என்று எடுக்கப்பட்ட வழியில் மதிமுக தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக கூட்டணிகள் மாறியதில் தவறொன்றும் இல்லை. ஓட்டுக்கள் சந்தையாகிப்போன சூழலில் 17 ஆண்டுகளுக்கு மேலாக பரவலான கட்டமைப்புடன் ஒரு இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருப்பதுவே அந்த இயக்கம் இன்னும் அநாதையாகிப்போகவில்லை என்பதற்கு சாட்சி. புரட்சி வருகிறது..புரட்சி வருகிறது என்று காகிதங்களில் சொல்லிக்கொண்டு, வளர்ந்து வரும் சந்தையையும், கார்ப்பரேட்டுகளையும் தடுக்க முடியாதவர்களின் நிலைதான் இரக்கப்பட வேண்டிய நிலையைவிட மதிமுக மோசமாகிவிடவில்லை.

    சாத்தான்களுக்கு மத்தியில் வாழும் பொழுது சில நேரம் சாத்தான்களின் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் மதிமுகவின் நிலை. சோசலிச புரட்சி நடந்தவுடன் அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்கிற எங்கெல்சின் நிலையிலிருந்து மாறி வலிமை கொண்ட ராணுவத்தை உடைய அரசு இருந்தால்தான் சுற்றியிருக்கிற முதலாளித்துவ அரசுகளிடமிருந்து பாட்டாளிகள் அரசைக் காக்க முடியும் என்கிற நிலையும் அதே சாத்தான்களிடமிருந்து காத்துக்கொள்வதற்காக செய்த சாத்தானிய வேலைதான்.

    மதிமுக ஓட்டு வாங்கும் அரசியல்தான் தீர்வு என்ற பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட அமைப்பு. இருக்கிற புறச்சூழல்கள், சவால்கள், இடர்கள், தந்திரங்கள் இவைகளுக்கு மத்தியில் 17 ஆண்டுகளாக இயக்கம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது, ஏற்றமா, இறக்கமா என்று உழைப்பைச் செலுத்தி ஆய்வு நோக்குடன் எழுதினால் உபயோகமாக இருக்கும்.

      • Till now what did you study , we(people) understand, you have come from the way of harappa to India or support of arya. please change your character for innocent people.

    • அறிவைக் கழட்டி வைத்து விட்டு தான் ஒரு கட்டுரையை வாசிப்போம் என்று முடிவு செய்து விட்டபின் வருவதெல்லாம் விவாதங்கள் அல்ல – மட்டையடி தான். அதற்கு எடுப்பான உதாரணம் உங்கள் பின்னூட்டம் தான்.

      அதற்கு முன் ஒன்றே ஒன்று –
      கார்ப்பரேட்டுகளைத் தடுக்க முடியவில்லை என்பது குறித்து நீங்கள் ஒன்றும் அக்கறை கொள்ளத் தேவையில்லை. நீங்கள்
      நினைத்துக் கொண்டிருப்பது போல் புரட்சியென்பது ஹாலிவுட் படத்தின் க்ளைமேக்ஸ் அல்ல.

      இப்போது உங்கள் தத்துவ முத்துக்கள்

      //ஓட்டுப் போடும் அரசியல்தான் தீர்வு என்று எடுக்கப்பட்ட வழியில் மதிமுக தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக கூட்டணிகள் மாறியதில் தவறொன்றும் இல்லை.//

      ஓட்டுப்போடும் அரசியல் தான் தீர்வு என்று அடித்து விடும் தாங்கள், இதுவரை இருந்த எந்தப் பிரச்சினையை ஓட்டுப்
      போடும் அரசியல் தீர்த்து வைத்துள்ளது என்பதை ஐம்பதாண்டுகால “ஓட்டு” ஜனநாயாகத்தை அடிப்படையாக வைத்து சில
      தரவுகள் மூலம் விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் என்பது சதவீத
      மக்கள் நாளுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக வாழும் நிலைக்கு உயர்த்தியிருப்பதோ – அல்லது சப்-சஹாரா
      பாலைவனக் குழந்தைகளை விட ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் அதிகம் கொண்ட நாடாக இந்தியாவை
      மேம்படுத்தியிருப்பதோ – அல்லது ஆப்ரிக்க நாடுகளின் ஏழைகளின் எண்ணிக்கையை விட எட்டு இந்திய மாநிலங்களின்
      ஏழைகளின் எண்ணைகையை அதிகப்படுத்தி சாதனை புரிந்திருப்பதோ தான் “ஒட்டு” ஜனநாயகத்தின் தீர்வு என்று சொல்ல வருகிறீர்களா?

      “ம.தி.மு.க தன்னைத் தற்காத்துக் கொள்ள கூட்டணிகள் மாறியதில் தவறொன்றும் இல்லை” என்றும் சொன்ன நீங்கள் அதில் தமது பெயர் நாறியதை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறியது குறித்து ஒன்றும் சொல்லவே இல்லையே.
      ஓட்டு வாங்கும் அரசியல் தான் தீர்வு என்ற பாதையை ம.தி.மு.க தேர்ந்தெடுத்துக் கொண்டது – அதை இப்படித் தான்
      “வாங்க” வேண்டும் என்று அழகிரி திருமங்கலத்தில் தேர்ந்தெடுத்துக் கொண்டார். ஓட்டு வாங்க வேண்டுமென்றால் இந்து பயங்கரவாதிகளின் மூத்திரத்தில் முகம் கழுவலாம் என்று வைகோ தீர்மானித்தார் – ஓட்டு வாங்கி ஜெயித்த பின் அமைச்சரவைப் பதவிகளுக்காக கார்பொரேட் முதலாளிகளின் காலில் விழலாம் என்று கருணாநிதி தீர்மானித்தார். இதில் ஒன்று கழுதையின் முன் விட்டையென்றால் இன்னொன்று பின் விட்டை. பின் விட்டை மட்டும் மணக்கும் என்கிறீர்களா?

      அதென்னது ஏங்கெல்ஸ் சோசலிச புரட்சி முடிந்ததும் அமைப்பைக் கலைத்து விடலாம் என்று சொன்னாரா? நீங்கள் என்ன
      காந்தியின் சத்தியசோதனை படித்துக் கொண்டே பின்னூட்டம் அடித்தீர்களா? தமாசு பண்ணாதீங்க சார்.

    • Indra Gandhi was attacked by MK after emergency and alliance was forged in next election.
      Vajpayee attended Marans death ceremony. His flight left from Chennai. Next hour MK talked with Congress for alliance.This was the situation even for the big parties

    • மிக்க நன்றி அன்பரே “வைகோ ஒரு பிதாமகன்”. நிர்வாண ஊரில் கோவணம