“கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லை” என்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?
– ராஜன்
__________________________________________
அன்புள்ள ராஜன்,
கடவுள் நம்பிக்கை குறித்து பார்க்கும் முன் – இந்த ‘தனி’ விருப்பம், ‘தனிப்பட்ட’ நம்பிக்கை, ‘தனிப்பட்ட’ வாழ்க்கை என்பதைக் குறித்து பார்த்து விடுவோம். கடவுளை விடுங்கள், நாம் நமது வாழ்வில் கற்றுக் கொள்ளும் நல்லது – கெட்டது, புனிதமானது – புனிதமற்றது, சரி – தவறு என்பதை நாம் எங்கேயிருந்து கற்கிறோம்? நமது வாழ்வை வழிநடத்திச் செல்லும் ‘தனிப்பட்ட’ அறம் சார்ந்த விழுமியங்களை எப்படி கட்டமைத்துக் கொள்கிறோம்? இவையனைத்தும் ‘தனிப்பட்ட’ / ‘சொந்த’ முறையில் என்று நம்புகிறீர்களா?
கருத்துக்களும், உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் நமது மனதின் அடியாழத்திலிருந்து சுயம்புவாய்த் தோன்றி விடுகிறதா என்ன? ஆப்கானிலும், ஈராக்கிலும், போஸ்னியாவிலும், ஈழத்திலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக வீசப்படும் குண்டுகளால் உடல் கிழிந்து பிய்த்து எரியப்படும் மனித உடல்கள் நமக்கும் ஒரு அமெரிக்கனுக்கும் ஒரே விதமான உணர்ச்சியையா உண்டாக்குகிறது? செங்கொடி தீக்குளித்து இறந்தாள் என்பதைக் கேட்ட மாத்திரத்தில் நமக்குள் கையறு நிலையால் உந்தப்பட்ட ஒரு சோகம் எழவில்லையா? அந்தச் சாவு நம் மனதைப் பிசையவில்லையா? ஆனால், அதே சம்பவத்தை தினமலரால் காதல் தோல்வி என்று கொச்சைப்படுத்த முடிகிறதே?
நமது இந்தக் கருத்தும் தினமலரின் அந்தக் கருத்தும் சொந்த/தனிப்பட்ட முறையில் தான் உண்டானதென்று நம்புகிறீர்களா? இல்லை.
நாம் வாழும் சூழல், நமது வர்க்கப் பின்புலம் போன்றவற்றின் அடிப்படையிலேயே நமது கருத்துக்களும் பிறக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் நமக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்கிறது. நல்லது-கெட்டது, சரி – தவறு என்பதையெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நமது இதயம் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாயின் சிதறிய ரத்தத் துளிகளைக் கண்டு கூட பதறுகிறது. தினமலரின் இதயமோ ஈழத்தில் ஆயிரக்கணக்கில் செத்துச் சிதறிய அப்பாவி மனித உடல்களைக் கண்டு குதூகலிக்கிறது. சேனல் 4ன் வீடியோவைப் பற்றி ‘இன்ட்ரெஸ்டிங்கா ஏதும் இல்லை’ என்று கொக்கரிக்க வைக்கிறது. ராஜபக்சே கும்பலும் இது பொய் என்று ஊளையிட்டு விட்டு எளிதில் கடந்து செல்கிறது.
ஆக ஒரு விசயத்தை பார்த்து பதறுவதிலும், திமிரடைவதிலும் இரு வேறான போக்குகள் உள்ளிட்டு பல கருத்துக்கள் தோன்றுவதை பார்க்கிறோம். இவை எதுவும் சம்பந்தப்பட்டவர் சுயம்பாய் கண்டடைந்த கருத்து அல்ல. சமூகத்தில் பால் அவர் கொண்டிருக்கும் உறவே அந்தக் கருத்துக்களை கட்டியமைக்கிறது. எனினும் அநேகர் இத்தகைய கருத்துக்களை தானே யோசித்து வந்தடைந்த ஒன்று என்று கருதுகிறார்கள். வர்க்க ரீதியாக மேல் நோக்கி செல்லச் செல்ல இது மேலும் வலுவடையும்.
கடவுள் பற்றிய நமது கருத்துக்களையும் கூட அவ்வாறே நாம் ‘வெளியில்’ இருந்து தான் ‘உள்ளே’ இறக்கிக் கொள்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ, முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. அதன் பெற்றோரும், அதனைச் சுற்றியமையும் சமூகமுமே அதற்கு ‘கடவுளை’ அறிமுகம் செய்து வைக்கின்றனர். அச்சமற்ற இயல்பையும், அளவற்ற ஆற்றலையும் கொண்ட குழந்தைகளை அதனைச் சுற்றியிருப்போர் தான் கடவுள் பூச்சாண்டி காட்டி அஞ்சி நடுங்கும் கோழைகளாக்குகின்றனர்.
ஆக, கடவுளை உங்கள் நண்பர் கண்டடைந்ததே தனிப்பட்ட முறையில் அல்ல எனும் போதே அதில் விருப்பம் மட்டும் ‘தனிப்பட்டு’ இருக்க முடியாது. இருப்பினும் அந்த ‘தனிப்பட்ட’ கடவுள் நம்பிக்கை நான்கு சுவர்களுக்குள் மட்டும் பதுங்கிக் கொள்ளும் வரை, எவரையும் துன்புறுத்தாத வரை யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால், அவ்வாறு பதுங்கிக் கொள்வதில் கடவுள் நம்பிக்கைக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒரு நம்பிக்கை என்பது எதார்த்த அனுபவத்தில் சோதித்தறியப்பட்டு அதன் மூலம் பட்டை தீட்டப்பட்டு நமக்குள் உண்டாகும் பட்சத்தில் அதன் மேலான பற்றுறுதி கேள்விக்கிடமற்று இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.
வட / தென் துருவங்களில் கடலில் மிதக்கும் ஐஸ் மலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் சிறிய முனை மட்டுமே கடல் மட்டத்துக்கு மேலே கண்ணுக்குத் தெரியும் விதமாய் மிதந்து கொண்டிருக்கும். கடவுள் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறானதே. அது தனது கால்களின் கீழே ஆழமான அவநம்பிக்கையைக் கொண்டிருக்கிறது – அதன் மேல் தான் நிலை கொண்டுமிருக்கிறது. சுற்றிலும் சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வுகளும், அப்பாவி மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களும் கடவுள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை நித்தம் நித்தம் அசைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.
வாழ்க்கை நெடுக தம்மோடு சுக துக்கங்களில் சேர்ந்து பயணிக்கப் போகும் காதலியிடம் கூட ஒரு சில முறைகள் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருப்பார் – ஆனால், கடவுளைத் துதிக்கும் போது மட்டும் ஒருவர் தினசரி திரும்பத் திரும்ப தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கிளிப்பிள்ளையைப் போல் ஓதிக் கொண்டேயிருக்கிறார். அதுவும் போதாமல், தனக்குள்ள கடவுள் சித்திரத்தை ஒத்திராத நம்பிக்கை கொண்டவர்களிடம் முரண்பட்டு உரசிப் பார்த்து தனக்குத்தானே திருப்தி கொள்கிறார்..
‘தனிப்பட்ட’ நம்பிக்கை என்பதே இப்படி வெளியே நடக்கும் உரசிப் பார்த்தல்களின் அறியாமை பலத்தில் தான் உயிர்வாழ்கிறது எனும் போது அதில் ‘தனிப்பட்டு’ மிஞ்சுவது தான் என்ன? இதைப் பார்க்கும் முன், இதற்கு நேர் எதிரான ‘நம்பிக்கையற்ற’ நிலையைப் பற்றியும் பார்த்து விடலாம். இவையிரண்டும் தம்மளவில் நேரெதிர் துருவங்களாக இருந்தாலும், ஒரு மனிதனின் ஆளுமையையும் அவனது சமூகப் பொறுப்பையும் இவை மட்டுமே தீர்மானிப்பவைகளாக இல்லை.
நாத்திகவாதியாகவோ பகுத்தறிவுவாதியாகவோ இருப்பது மட்டுமே மாபெரும் தகுதி அல்ல. ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.
இந்து பாஸிச பயங்கரவாத அமைப்பான ஆர். எஸ். எஸ் கும்பலுக்கு தத்துவார்த்த அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுத்தவரும், இந்து மகாசபையின் தலைவரும், காந்தி கொலையைத் திட்டமிட்டுக் கொடுத்தவருமான வி.டி சாவர்க்கரும் அவரது ஞான குருவான இத்தாலி பாசிஸ்ட் கட்சி தலைவர் பெனிட்டோ முசோலினியும் கூட கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகள் தான். சாவர்க்கர் கடவுளை நம்பாத அதே நேரம் வேதத்தையும், பார்ப்பனிய வருண தர்மத்தையும் நம்பினார். எனினும் அவர் நாத்திகர்தான். ஆனால் சிதம்பரம் சிவனடியார் ஆறுமுகசாமியோ கடவுளை நம்பும் ஒரு பக்தர். ஆனால் அவரது பக்தி, இந்து மதத்தில் நிலவும் பார்ப்பன மேலாதிக்கம், மொழித் தீண்டாமை போன்ற இழிவுகளை சகித்துக் கொண்டிராமல் எதிர்த்துப் போராடும் நேர்மையான தன்மான உணர்ச்சிக்குத் தடையாய் நிற்கவில்லை. கடவுளை நம்பிய சித்தர்கள் கூட அதன் பெயரில் விளங்கிய ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பனிய இழிவையும் இடித்துரைத்துள்ளனர்.
ஆக, ஒருவர் சமூக அளவில் வகிக்கும் பாத்திரம் என்னவென்பதிலிருந்து தான் அவரை மதிப்பீடு செய்ய முடியுமேயொழிய கடவுளை நம்புகிறாரா இல்லையா என்பதைக் கொண்டல்ல. நாத்திராய் இருப்பது எப்படி மாபெரும் தகுதியாய் இல்லையோ அதே போல் ஆத்திகராய் இருப்பது ஒன்றே இழிவானதும் அல்ல – போற்றத்தக்கதுமல்ல. கடவுள் நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதற்கு ‘தனிப்பட்ட’ விருப்பங்கள் காரணமல்ல. அதன் காரணம் சமூக இயக்கத்தில் உள்ளது. நிலவும் சமூக அமைப்பில் பொருளாதாய வாழ்கையின் ஒவ்வொரு அழைக்கழிப்பிற்கும் முகங்கொடுத்து நாளும் நாளும் நொறுங்குண்டு போனவர்கள் தற்காலிகத் தேறுதலை இல்லாத ஆண்டவனிடம் தேடி ஓடுகிறார்கள். வீட்டினுள் தொலைத்ததை தெருவிலே தேடியலையும் மக்களின் அந்தக் கையறு நிலை ஒரு அவலம். அந்த அவலத்தை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமானது. அதனால் தான் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்று குறிப்பிட்டு விட்டு, அது “இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது” என்றார்.
வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி, கல்யாணம் முடிய, குழந்தை பிறக்க, குழந்தையின் பள்ளிக்கூட சீட், படிப்பு, வேலை, அதற்கு ஒரு திருமணம், அதன் வாழ்க்கை…. என்று நீளும் வாழ்க்கைத் தேவைகளும் அது நிறைவேறாமல் போகும் சமூக எதார்த்தமும், உறைந்து போய் நிற்கும் ஏற்றத்தாழ்வுகளும் அப்பாவி மக்களை ‘ஆறுதலுடன்’ அணிதிரட்டி கோவில்களையும், ஆன்மீக நிறுவனங்களையும் நோக்கி விரட்டி விடுகிறது. தீர்வு அங்கேயில்லை என்பதையும் எங்கே உள்ளது என்பதையும் நேர்மறையில் உணர்த்த வேண்டியது நமது கடமை – வறட்டு நாத்திகத்தை மட்டும் பேசிக்கொண்டு மக்களுக்கு மேலாக நம்மைக் கருதிக் கொள்வதல்ல. அதே நேரம், தீர்வுக்கான பாதையை நந்தி போல் மறைத்துக் கொண்டு கடவுள் நம்பிக்கை வரும் போது இடித்துரைப்பதும் நேர்மறையில் விமர்சிப்பதும் அவசியம்.
நமது விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, இந்த ‘ தனிப்பட்ட நம்பிக்கைகள்’ உதிர்ந்து ஒழிந்து போக வேண்டிய ஒரு சந்தர்பத்தை நேர்மையாக சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டே ஆக வேண்டும். அது எப்போது?
சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோயிலின் கருவறையினுள் பல நூற்றாண்டுகளாக மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் சிற்பங்களிலும், புனித நூல்களிலும், புராணங்களிலும், ஹதீஸ்களிலும், இறைவன் அருளிய வேத்திலும் இல்லையென்பதையும், அந்தப் பிரச்சினைகளின் தோற்றுவாயாக இருக்கும் இந்த வர்க்க சமூகத்தை மாற்றியமைப்பதே தீர்வு என்பதையும் யாரொருவர் தமது சொந்த அனுபவத்தில் நேர்மறையில் உணர்ந்து வினையாற்றத் துவங்குகிறாரோ அப்போது அந்தப் போராட்டத்தின் உப விளைவாக கடவுள் இறந்து போகிறார். அந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருக்கும் அஸ்திவாரக் கல் ஆட்டம் காண்கிறது. சமூக மாற்றத்திற்கான போராட்டம் வென்று ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்ட பின் கடவுளுக்கான தேவையே காலாவதியாகி விடுகிறது. துன்பங்களின் தோற்றுவாய்கள் அடைக்கப்பட்டு விட்ட தேறுதல் தர யாரும் தேவையில்லை அல்லவா?
இங்கே நாம் கையறு நிலையில் ஏற்பட்ட கடவுள் பக்தியையும் காரியவாதக் கடவுள் பக்தியையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் – இரண்டையும் இருவேறு விதமாய் அணுக வேண்டியுள்ளது.
வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு, அதன் சகல இன்பங்களையும் நுகர்ந்து கொண்டு இடையிடையே எப்போதாவது எழும் குற்றவுணர்வைத் தவிர்த்துக் கொள்ள கோயில் உண்டியல்கள் முன்பும் கார்ப்பரேட் குரு பீடங்களின் முன்பும் திரளும் மேட்டுக்குடி கனவான்களின் நம்பிக்கையும் சாதாரண மக்களின் நம்பிக்கையும் ஒன்றல்ல.
வயதான மனைவியின் மருத்துவத்துக்கு சல்லிக்காசு கூட இல்லாமல், தாமதமாகி இழுத்துக் கொண்டேயிருக்கும் ஓய்வூதிய செட்டில்மெண்டு பாஸ் ஆக வேண்டுமே என்கிற பதைப்போடு வந்தவரும் – கறுப்புப் பணக் குவியலில் இருந்து ஒரு சிறிய துணுக்கை கிள்ளி உண்டியலில் போட்டு விட்டால் ரெய்டிலிருந்து தப்பலாமோவென்கிற ‘பதைபதைப்போடும்’ வந்தவரும் ஒன்றாகத் திருப்பதி ஏழுமலையான் முன் வரிசை கட்டி நிற்கிறார்களே, இவர்களின் பக்தி ஒன்றா?
இரண்டும் வேறுவேறானது என்றாலும் நாம் இரண்டிலும் தலையிட்டுத் தான் தீர வேண்டும் – ஆனால், அணுகுமுறையில் பாரிய வேறுபாடு இருக்கும். முந்தையவர் நம்மோடு ஒரே அணியில் நின்று போராட வேண்டியவர்; பிந்தையவரோ நமக்கு நேர் எதிரணியில் நிற்பவர் – எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்.
ஆக, கடவுள் நம்பிக்கையில் தனிப்பட்டது என்று எதுவுமில்லை. உங்கள் நண்பரால் தனது மூக்கு நுனியைத் தாண்டி எட்டிப்பார்க்காமல் அவரது நம்பிக்கையைக் கட்டி வைத்துக் கொள்ள முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அயோக்கியத்தனங்களையும், சமூக விடுதலைக்கு குறுக்கே கடவுள் நிற்பதையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிகிறதா என்று கவனியுங்கள். முடிகிறது என்றால், கவலையை விடுங்கள் கூடிய சீக்கிரம் கடவுள் பெட்டி சட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.
_________________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!
- திருப்பதி ஏழுமலையானை கைது செய்!
- சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்!
__________________________________________
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
- செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?
- கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !
__________________________________________
- யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?
- சமயபுரம் மாரியாத்தா ! இந்த பிராடு வேலை எதுக்காத்தா?
- நெரிசல் பலிகளை நிறுத்த முடியாத கடவுள்! பக்தர்கள் சிந்திப்பார்களா?
__________________________________________
- 5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!
- தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?
- பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!
- ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
__________________________________________
- தவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்!
- பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
- ‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
- பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!
- திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
- செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம்
- ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி
ஆத்திகவாதி,நாத்திகவாதி, கம்யூனிஸ்ட் என்று கூரிக்கொள்ளும் /நினைத்துக்கொள்ளும் பலரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான்…எந்த ‘வாதமும்’ / ‘இசமும்’ இங்கு பிரச்சினை இல்லை….
முரன்பாடு தான் பிரச்சினை…
//ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ, முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. //
வினவையே எடுத்துக்கொள்ளுங்கள்…
விஜய் டீ வி விமரிசனம் என்று ஜாதியை இழுப்பார்கள்….
மதவாதிகள் / ஜாதிவெறியர்கள் மட்டுமல்ல….வினவும் இதைத்தான் செய்கிறது…அப்போ என்ன நாத்திகம், கம்யூனிசம்….ஒரே குட்டை..ஒரே மட்டை…..
மிகவும்நன்ட்ரு
ஒருவரின் நம்பிக்கையில் தலையிடுவது தவறு தான் ஆனால் ஒருவரின் மூடநம்பிக்கையை தவறு என்று சொல்லவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, அவசியமும் கூட தானே?
வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் சரிஆகிவிடும் என்பது அனைவரின் நம்பிக்கை அது தவறு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இருந்தாலும் புரியவைப்பது நம் கடமைதானே?
‘கடவுள் நம்பிக்கை’ என்று சொல்வதே தவறு. ‘கடவுள் மூடநம்பிக்கை’ என்று சொல்வதே சரி என்று நினைக்கிறேன்.
//வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் சரிஆகிவிடும் என்பது அனைவரின் நம்பிக்கை அது தவறு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இருந்தாலும் புரியவைப்பது நம் கடமைதானே?//
வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் வேலைக்கு ஆகாதா? இப்ப தான் எனக்கு தெரியுது. ஒரு முறை சாலையில் மூன்று சக்கர வாகனத்தில் இருந்து ஒரு physically challenged நபர் ஒருவர் மயங்கி கீழே விழுந்து வலிப்பு வந்து கிடந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. கையில் இருந்த சாவிக்கொத்தை கொடுத்தேன். பின்னால் வந்தவர் அவர் கையில் இருந்த பெரிய இரும்பு ராடை கொடுத்தார். கொஞ்ச நேரம் கழித்து அவரின் வலிப்பு நின்றது. அது தானாக நின்றிருக்கவேண்டும் என்று இப்போது தெரிகிறது. (அவர் கதை பெரிய சோகக்கதை. யாரோ ஒரு திருடன் அவரின் மூன்று சக்கர ஸ்கூட்டியை திருடிவிட்டான். இப்போது தான் கடனில் வண்டி வாங்கி ட்யூ கட்டிக்கொண்டிருக்கிறார். காவல் நிலையத்துக்கு செல்ல, ரொம்ப நாள் கழித்து, வெறும் வயிற்றில், கீழ் கட்டளையில் இருந்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சைக்கிளை மித்தித்தவாறு சென்றுகொண்டிருந்தார். ஸ்கூட்டி அவருக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை)
//வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் வேலைக்கு ஆகாதா? இப்ப தான் எனக்கு தெரியுது.// எப்பேர்பட்ட வலிப்பாக இருந்தாலும் அதிக பட்சம் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். கையில் இரும்பை கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி. உண்மையில் வலிப்பு வந்தவர்களுக்கு செய்யும் முதலிவி ‘கையில் இருமபினை கொடுப்பது’ அல்ல. அது வேறு சமாச்சாரம். இதற்கு முறையாக முதலுதவி கல்வி பயின்றிருக்க வேண்டும். எப்போதாவது நேரம் கிடைத்தால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
நான் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும்போது இதேபோல் ஒருவருக்கு வலிப்பு என்று அழைப்பு வந்தது அங்கே சென்று பார்க்கும்போது இருவர் இரும்போ, சாவியோ தேடிக்கொண்டிருந்தனர் பின்பு இருவரும் கிட்டதட்ட 50மீ தொலைவிலுள்ள பூட்டப்பட்டிருந்த ஒரு பைக்கை மல்லுக்கட்டாக தூக்கிகொண்டுவந்து கீழே தள்ளி அவர்கையில் தினித்து அவர்கள் கையையும் சேர்த்து பிடித்தனர். வலிப்போடு இருந்ததை இரத்தகாயம் ஏற்படுத்திவிட்டனர், எவ்வளவு தடுத்தும் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு சில நிமிடத்தல் வழிப்பு நின்றது, பின் அந்த ‘குடி’மகன்கள் சென்றுவிட்டனர்.
ஆனால் யாரும் மறந்துக்கூட இரும்பால் ஆன சில்லரைகாசை கொடுப்பதில்லை.
இன்னும் சற்று விளக்கமாக உதாரணத்துடன் கூறுங்கள்.,
எவ்வாறு கடவுள் இல்லை என்று மக்களை நம்ப வைப்பது. அவ்வாறு அவர்கள் உணர்ந்தால் தான் உண்மையான பிரச்சனைகள் மற்றும் அதன் பின்னணி பற்றி புரிந்து நம்முடன் இணைந்து போராடுவார்க்ள்.
கடவுள் இல்லை என்று தனியே வலியுறுத்துவதை விட, வாழ்க்கை பிரச்சினைகளுக்கு யார் காரணம், எது தீர்வு என்று எளிமையாக புரிய வைப்பதன்மூலம் ஒரு ஆத்திகரிடம் கடவுள் குறித்த அலசலை ஏற்படுத்த முடியும். நீங்கள் கூறியிருக்கும் கருத்தை திருப்பி போட்டு பாருங்கள அதுவே சரியாக இருக்கும். கடவுள் இல்லை என்று உணர்த்துவதன் மூலம் ஒருவருக்கு சமூகக் கல்வி அளித்து விட முடியாது. சமூகக் கல்வியை நடைமுறையுடன் கடைபிடிக்க வைப்பதன் மூலமே கடவுள் நம்பிக்கையை அவரது சொந்தட அனுபவத்தில் கேள்வி கேட்க வைக்க முடியும்.
வினவு,
பாட்டாளி வர்க்க புரட்சிக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம்தான் பிரதானமானது என்பதாக சில இடதுசாரிகள் கூறுகிறார்கள் இது சரியா?
இப்படி எந்த கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது? அப்படி கூறியிருந்தால் தவறு. அதே நேரம் நாத்திகப் பிரச்சாரம் என்பது வர்க்க போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டு செய்யவும் வேண்டும். இந்தியாவில் அதன் தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது. ஏனெனில் இங்கு பார்ப்பனிய இந்து மதம் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை என்பதைத் தாண்டி சாதி, மொழி, பண்பாட்டு ஆதிக்கமாகவும் உள்ளது. அதனுடைய தொடர் விளைவாக பெரும்பாலான மக்கள் விதிவசம் என்று எண்ணியவாறு தமது வாழ்க்கைப் பிரச்சினைகளை சகித்துக் கொண்டு வாழ்வதும் இருக்கிறது. இத்தகைய பார்வை போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளிடம் இல்லை என்பதால் அவர்கள் எப்போதும் நாத்திகப் பிரச்சாரமோ, பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டமோ செய்வதில்லை. அதே நேரம் வர்க்க போராட்டத்தின் அடிப்படை இன்றி தி.க பாணியிலானா வறட்டு நாத்திகப் பிரச்சாரமும் பெரும்பான்மை மக்களை கவராமல் தனிமைப்படுவதையும் பார்க்கிறோம். இதுவும் தவறுதான். இவையிரண்டும் தவிர்க்கப்படவேண்டிய இரு துருவங்கள்.
நன்றி வினவு.
அதே நேரம் வர்க்க போராட்டத்தின் அடிப்படை இன்றி தி.க பாணியிலானா வறட்டு நாத்திகப் பிரச்சாரமும் பெரும்பான்மை மக்களை கவராமல் தனிமைப்படுவதையும் பார்க்கிறோம்.
தி.க வோடு சேர்ந்து அனைத்து முற்போக்கு இயக்கங்களும் அந்த வறட்டு நாத்திகப் பிரசாரம் செய்தால் பெரும்பான்மை மக்களை சென்றடையும் , அதன் மூலம் சாதி ஒழிப்பு வேகபடுத்தபட்டு சமூகத்தில் சமத்துவம் நிலவும். வெறும் வர்க்க போராட்டம் ஏழை தாழ்த்தப்பட்டவனை பணக்கார தாழ்த்தபட்டவன் கூட மதிக்காத நிலை தான் உருவாகும்.இதுதான் நடை முறையில் நாம் காண்பது.
அருமையான விளக்கம். சில நாத்திகவாதிகள் இருக்கிறார்கள், இவர்கள் தாங்கள் நாத்திகம் பேசுவாதலேயே தங்களை மக்களை விட எல்லாம் அறிந்த பகுத்தறிவுவாதிகளாக எண்ணிக்கொள்கின்றனர். இவர்கள் சகட்டுமேனிக்கு கடவுளை நம்பும் மக்களை இழிவுபடுத்த தயங்குவதில்லை. இவர்களைப் போன்றோர் நிச்சயம் படிக்கவேண்டிய பதிவு.
Perfect article. Very indepth practical analysis. a MUST READ for ALL.
அன்புள்ள GV,
வினவு மின்னஞ்சலுக்கோ அல்லது அலைபேசிக்கோ தொடர்பு கொள்க
தோழமையுடன்
வினவு
கடவுள் நம்பிக்கை, மதம் பற்றிய உங்கள் கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும், தன்னளவில் இந்தக் கட்டுரை கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சமூக அறிவியல் அடிப்படையிலான கம்யூனிஸ்ட் அறிக்கை போன்று இருக்கிறது.
நான் கடவுளைப் பார்த்தேன். உலகத்திலேயே முதன் முறையாக, அதுவும் நேரடியாக. நேருக்கு நேர் நின்று பேசினேன். நான் மட்டுமல்ல. சாட்சிகளாக என்னுடன் இன்னும் இரண்டுபேர். இது நடந்தது சென்ற வாரம் வியாழக்கிழமை, காலை ஆறு பத்துக்கு. அண்ணாச்சி மளிகைக் கடையில் வைத்து கடவுளை நேருக்கு நேராக நாங்கள் பார்த்தோம்.
நான் ஏதோ கதை புனைவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இட்டுக்கட்டி சொல்வதாகவும் கருதவேண்டாம். அல்லது இந்த ஆள் எப்பவும் நாத்திகம் பேசுகிற ஆள்தானே, சும்மா புருடா விட்டு கலாட்டா செய்கிறான் என்றும் நினைக்கவேண்டாம். ஏனெனில் இந்தச் செய்தி உங்களுக்கு அண்டப்புளுகாகத் தெரியலாம். ஆனால் பார்த்ததற்கான சாட்சிகள் இருப்பதால், மற்ற கடவுளைப் பார்த்த ‘கதைகள்’ போல, இதை நீங்கள் ஒரேயொரு சதவிகிதம் கூட மறுக்க முடியாது. நான் கடவுளை நேரில் பார்த்தேன் என்பதனால் சிரிக்கவோ, கோபப்படவோ, அல்லது நிதானம் தவறிவிடவோ வேண்டாம். நம்புங்கள்.
http://puthiyapaaamaran.blogspot.in/2011/11/blog-post_18.html
சரியான பாமரன் !!!!!
அடுத்த கண்ணதாசன்
கருப்பு, வெள்ளைக்கு நடுவிலும் இரு வண்ணங்களும் இணைந்த வண்ணப்பிரிவுகள் நிறைய உண்டு. கடவுள் உண்டு, இல்லை எனும் இரு விஷயங்களுக்குமிடையில் பல்வேறு தளங்களில் நிற்கும் மக்கள் பலருண்டு.
//நாத்திகவாதியாகவோ பகுத்தறிவுவாதியாகவோ இருப்பது மட்டுமே மாபெரும் தகுதி அல்ல. ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.//
உண்மையான வரிகள்… மிகவும் அருமை.
கடவுள் நம்பிக்கையின் அடிப்படை பாதுகாப்பின்மையில் தான் தொடங்குகிறது, தன்னை சுற்றீ பல வட்டங்களை போட்டு கொண்டுள்ள மனிதன் அந்த வட்டங்களே தனக்கு பாதுகாப்பு என நினைக்கிறான், எனது குடும்பம், எனது ஊர், எனது சமூகம், எனது நாடு, எனது மதம் என வட்டம் பெரிதாகி கொன்டே போகிறது, ஆனால் உலகமே சிறு கிராமமாக மாறிக்கொன்டிருக்கும் இக்காலத்தில் தனி மனிதன் தானே உலகம் என சுயநலம் கொண்டாடும் போது வட்டங்கள் வலு இழப்பதும் நடக்கும்
விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை… மேலும் ஆத்திகர்கள் சொன்ன நாத்திகர்கள் என்ற வார்த்தையை கடவுள் மறுப்பவர்களும் கூறுவது மறைமுகமாக அவர்களை ஆதரிப்பதாக தான் எனக்கு தோன்றுகின்றது. மேலும் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன் பகுத்தறிவாளன் என்பதும் வேடிக்கையானது. பகுத்து ஆராய்வதை கடவுள் எனும் கருத்திலும் பயன் படுத்துங்கள் என்பது தான் சரியானதாய் இருக்கும்மென நினைக்கின்றேன்.
கடவுள் நம்பிக்கையில் குழர்ப்பத்துடன், ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை.
//ஆத்திகவாதியை ஒரு நாத்திகன் கேள்வி கேட்கலாமா?//
வேற யார் கேட்பாங்களாம்?
மிக மிக சிறந்த கட்டுரை
நான் படித்த வரையில் “கடவுள் நம்பிக்கை” குறித்த மிக தெளிவான பார்வை
நன்றி வினவு
இன்னிக்கு எப்ரல் ஒன்னு,எல்லா கரணட்,பத்திரபதிவு,செல்போன் வரி,இப்படி எல்லா உத்திரவும் அமுலாகும் நாளுல்ல,புது கணக்கு தொடங்குற நாளும் வேற.
தனிப்பட்ட விருப்பம்,கடவுள் நம்பிக்கை போன்றவை அனைத்தும் சமூக உறவின் மீது எப்படி கட்டியமைப்படுகிறது என தெளிவாக கட்டுரை விளக்குகிறது.
மிக சிறந்த கட்டுரை.
நன்றி வினவு.
இறைவன் இருக்கிறான் என்று சொல்ல ஒரு ஆத்திகனுக்கு உரிமை இருப்பது போல்,இல்லை என மறுக்கும் உரிமை ஒரு நாத்திகனுக்கு உண்டு.
இங்கு கடவுள் இல்லை என்று சொல்லுபவர் பலர் ..நானும் அவ்வாறுதான் சொல்லிகொடு இருதேன் ….ஆனாலும் என்னிடம் ஒரு ஜாதி சான்றுதல் இருத்தது..
இங்கு பதில் தந்த எல்லோரும் அப்படிதானா!!!!!!….
யாரு சொன்னது நாத்திகவாதி அறிவாளி என்று ? ஒன்றும் இல்லாமல் சூனியத்திலிருந்து தானாகவே இந்த பிரபஞ்ச அதிசியங்கள் தோன்றியது என்று சொல்லிக்கொண்டு திரியும் நாத்திகவாதிகளைவிட இவை எல்லாம் படைக்கப்பட்டவையே இவற்றுக்கெல்லாம் வடிவமைப்பாளர் ஒருவன் இருக்கிறான் என்று நம்பும் ஆத்திகவாதிகள் அறிவாளிகளே… அதாவது… படைப்புகளுக்கும் படைத்தவனுக்கும் வித்தியாசம் தெரிந்த ஆத்திகவாதியே அறிவானவன். இவனால் சமுதாயத்திற்கு எந்த கேடும் விளைவதில்லை.
எல்லா தரப்பிலும் அயோக்கியனும் இருக்கிறான், நல்லவனும் இருக்கிறான். தமிழர்கள் என்றால் அனைவரும் யோக்கியர்கள் என்று சொல்பவனும், அயோக்கியன் என்றும் சொல்பவனும் முட்டாள்களே… விடுதலை புலிகள் உயிரின் மதிப்பு தெரியாது அப்பாவிகளை கொன்றால் அது வீரம், தியாகம் என்று போற்றப்படும்.இதை சிங்களன் செய்தால் அது சிங்கள பயங்கரவாதம். இப்படி நீங்கள் (வினவு)கூறுவது கூட உங்களின் சுற்றங்களின் சூழலில் உங்களை வார்த்த முறையை தான் காட்டுகிறது. இதை தான் அமெரிக்கனும் செய்கிறான். அவனுக்கு வேண்டியவர்கள் செய்தால் நியாயம் வேண்டாதவர்கள் செய்தால் அநியாயம்.சிங்கள இன மக்களால் அடக்குமுறைக்கு ஆளான மக்கள், சிங்கள இன மக்களால் கலவர பாதிப்புக்குள்ளான மக்கள் தனி ஈழம் கேட்டு போராடினால் அது நியாயம். இதையே இதே நிலை அடைந்த ஒரு குஜராத் முஸ்லீமோ அல்லது காஷ்மீரியோ இப்படி போராடினால் ஏற்றுகொள்வோமா ?
ஆக பிரச்சனைகள் என்பது நியாய அநியாயத்தை வைத்தே முடிவெடுக்கணும். நீங்கள் கேட்ட கேள்வி நாத்திகர்களிடமும் பொருந்தும். பிறகு எதற்கு ஆத்திக வாதிகளால் மட்டும் சமுதாய கேடு என்று வினவு தன மேதாவித்தனத்தால் சுற்றி வளைக்கிறீர்கள்? நீங்களும் உங்கள் சுற்றத்தால் வார்க்கப்பட்ட அடுத்தவர்களை நொட்டை சொல்லும் சராசரி மனிதர்களே ..
யார் ஆத்திகன்?, யார் நாத்திகன்?
நுட்பமாக பார்த்தால், இயற்கையின் விதிகளே கடவுள். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டவன் கடவுளை புரிந்து கொண்டவன் ஆகிறான். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு மீறாமல் ஒத்திசைந்து வாழ்பவன் கடவுளை வணங்குபவனாகிரான். இதற்கு எந்த மதமோ,ஆலயமோ தேவை இல்லை.
அந்த வகையில் (கடவுளை)இயற்கையை , அதன் விதிகளை அல்லது புதிர்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது என்பதே பகுத்தறிவு.
இயற்கைக்கு எதிராக இயங்குபவர்கள் எல்லோரும் கடவுளை மிதிப்பவர்கள் அல்லது இழிப்பவர்கள் ஆகிறார்கள்.இயற்கைக்கு எதிராக இயங்குவதன் மூலம் (eg, global warming)நாம் அனைவரும் (ஒரு சமுகமாக) கடவுளை வணங்க மறுக்கிறோம் என்பதே உண்மை.
“வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது” என்கிற மேற்கோளையும், “அறியாமையும் இயலாமையும்தான் மூடநம்பிக்கைகளுக்கு அடிப்படை” என்கிற மேற்கோளையும் நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கோள்ள வேண்டும்.
தெளிவான மிகச் சிறந்த படைப்பு. இது போன்ற படைப்புகள் அதிகம் வரவேண்டும் என்பதே எனது அவா. வினவுக்கு வாழ்த்துகள்!
அறிதல் முறை குறித்த மேலும் சில விவரங்களுக்கு…
அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_15.html
மிகவும் அருமையான கேள்வி பதில். ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் சமூக நடைமுறையில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான சரியான வழிகாட்டல். எனக்கு புரியும் படியும், உதவியாகவும் இருந்தது.
கடவுள் , மதம் குறித்து மேலும் அறிய ” மதம்- ஒரு மார்க்சியப் பார்வை” என்னும் நூலைப் படிக்கலாம். இந்நூல் கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும். இந்நூலில் முற்போக்கு, ஜனநாயகவாதிகள் மத்தை எப்படிப் பார்க்க வேண்டும் எனபது குறிததும், மதம் குறித்து ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுளளது.
”மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைப் புறவுகைச் சேர்ந்த பல சக்திகள் கட்டப்படுத்துகின்றன. இந்தச் சக்திகள் மனிதனின் மனங்களில் பல கற்பனைகளாக, மாயத் தோற்றங்களாகப் பிரதிபலிக்கின்றன. எல்லாச் சமயங்களும் இந்தப் பிரதிபலிப்பேயன்றி வேறெதுவும் இல்லை. இந்தப்பிரதிபலிப்பில் மண்ணுலகச் சக்திகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளாக வடிவெடுக்கின்றன……….வெறும் அறிவால் மட்டுமே சமுதாயத்தின் கட்டுப்பாட்டிற்குள் சமுதாயச்சக்திகளை கொணர முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக இதற்குத் தேவைப்படுவது ஒரு சமுதாயச் செயலே………..அப்பொழுதுதான் சமயவடிவில் பிரதிபலித்து நிற்கும் கடைசிப் புறம்பான சக்தி மறையும்; பிரதிபலிப்புக்கு எதுவுமே மீந்து இராது என்கிற எளிய காரணத்தால், சமய வடிவப் பிரதிபலிப்பும் அதனுடன் மறையும்.”
“சமயம் பற்றி” என்கிற நூலில் ஜார்ஜ் தாம்சன் அவர்கள் கையாண்டுள்ள எங்கெல்ஸ் மேற்கோளின் ஒரு பகுதி இது. இந்த நூல் சமயம் பற்றி மேலும் பல விவரங்களைத் தருகிறது.
இலங்கைப் பிரச்சினைக்கும், அமெரிக்காக் காரன் வெவ்வேறு நாடுகளிலும் புகுந்து அட்டகாசம் செய்வதற்கும், இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்……… இடத்தை நிரப்ப வேண்டுமென்பதற்க்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா??? என்ன கொடுமை வினவு இது??
தாஸ் எப்படி இருக்கீக்கங்க? நீங்கள் மேற்கோளிட்ட கருத்து எந்தக்கருத்தும் தனிப்பட்ட முறையில் சுயம்புவாக ஒரு மனிதனிடம் தோன்றவில்லை என்பதற்க்காக சொல்லப்பட்டது. அதன்படி இறை நம்பிக்கையும் சுயம்புவாக வராது.வெளியிலிருந்தே ஒருவருக்கு வருகிறது – இதில் என்ன பிரச்சினை?
\\ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ, முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. அதன் பெற்றோரும், அதனைச் சுற்றியமையும் சமூகமுமே அதற்கு ‘கடவுளை’ அறிமுகம் செய்து வைக்கின்றனர்.\\ அது சரி, மதங்கள் எல்லாமே தப்புன்னே வச்சுகிடுவோம், நீங்க கண்டு பிடிச்ச நாத்தீகம் மட்டும் என்ன தாயின் கருவறையிலேயே கத்துகிட்டு வெளியில வந்து போதிச்சிட்டு இருக்கீங்களா? மதவாதிகள் கடவுள் இருக்கார்னு நிரூபிக்கவில்லை என்றால், கடவுள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீரோ? நீரும் ஒரு சாமானிய மனிதர்தானே உமது கொள்கைகள் மட்டும் பிழையே இல்லாமல் இருக்கும் என்று என்ன உத்திரவாதம்?
என்ன தாஸ் இவ்வளவு பதட்டமடைகிறீர்கள்? நீங்கள் சொன்னது என்னவெனில் நாங்கள் மட்டும் பிழை செய்யவில்லை, நீங்களும்தான் என்று எழுதுவதன் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டது போலல்லவா ஆகிறது. நீங்கள் தோல்வியடையாமல் விவாதிக்கவே விரும்புகிறோம்.
\\நாங்கள் மட்டும் பிழை செய்யவில்லை, நீங்களும்தான் என்று எழுதுவதன் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டது போலல்லவா ஆகிறது. \\ஆன்மிகம், இறை நம்பிக்கை மனிதன் கண்டுபிடித்தது, அதனால் அது பிழையானது என்றால், நாத்தீகமும் உங்களைப் போல உண்ட உணவு செரிக்க வில்லை என்று எவனோ வேலையற்றவன் கண்டுபிடித்தது தானே, அது பிழையற்றது என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும்? [தயவு செய்து தவறான அர்த்தம் கற்ப்பிப்பதை நிறுத்துங்கள் வினவு.]
\\ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.\\ நாத்தீகத்தின் மூலம் கடவுள் இல்லை என்று டெஸ்டு பண்ணி முடிவு கொடுத்திட்டீங்களா? எல்லா அறிவியலாளர்களும் நாத்தீகர்கள் இல்லை. சொல்லப் போனால் அறிவியல் மூலம் இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதை நிரூபிக்கவே முடியாது. வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர் ஐன்ஸ்டீன், அவரே இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.
இது மிகவும் எளிமையான விசயம் தாஸ். கடவுள் மனிதனை படைக்கவில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்தான். இதை புரிந்து கொண்டால் அறிவியலை எல்லாம் ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்?
\\ஆனால், கடவுளைத் துதிக்கும் போது மட்டும் ஒருவர் தினசரி திரும்பத் திரும்ப தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கிளிப்பிள்ளையைப் போல் ஓதிக் கொண்டேயிருக்கிறார்.\\ அதிலென்ன தப்பு?
எனக்கு எப்போதும் சந்தேகமோ, கேள்விகளோ, ஐயமோ வரக்கூடாது என்பதை நிபந்தனையாக வைத்து விட்டு ஓதுவதுதான் பிரச்சினை.
\\எனக்கு எப்போதும் சந்தேகமோ, கேள்விகளோ, ஐயமோ வரக்கூடாது என்பதை நிபந்தனையாக வைத்து விட்டு ஓதுவதுதான் பிரச்சினை.\\ அறிவியலில் எல்லாத்தையும் நீங்க விளக்கிட்டீங்கலாக்கும். காமடி பண்ணாதீங்க பாஸ்….. ஆற்றல் அழிவின்மை விதி உண்மை [Energy can neither be destroyed, nor created, one form of energy can be converted into another form] என்றால் பிரபஞ்சத்தின் ஆற்றல் எப்படி வந்தது…??? கேமராவைப் படைக்க டிசைனர் வேண்டுமென்றால் நம் கண்கள் தானாக உருவாகியிருக்குமா? டயாலிசிஸ் செய்ய ஒரு பெரிய அறை சைசுக்கு எந்திரங்களும் அறை டசன் டாக்டர்களும் மூணு டசன் நர்சுகளும் வேண்டுமென்றால் அதே வேலையை கைபிடிக்குள் அடங்கும் கிட்னி செய்கிறதே, அது தானாக உருவாகியிருக்குமா? உங்கள் வீட்டில் தண்ணீரை மொட்டை மாடித் தொட்டிக்கு அனுப்பும் மோட்டாரை உருவாகியது ஒரு தொழிற்ச்சாலை என்றால் இதயம் என்ற நூறு வருஷத்துக்கும் மேலாக பழுதாகாமல் வேலை செய்யும் பம்பு சும்மா உருவாகியிருக்குமா? இந்த மாதிரி கேள்வி கேட்டால் வாயை மூடு என்பதைத் தவிர வேறு எந்த பதிலையும் இந்த ஈர வெங்காய விஞ்ஞானிகள் சொல்வதே இல்லையே அது ஏன்? சங்கதி இப்படி இருக்க, இறை நம்பிக்கையாளனுக்கு ஒண்ணுமே தெரியாது, நாங்க எல்லாத்தையும் வெளக்கோ வெளக்குன்னு வேலகிட்டோம்னு புருடா விடுவது எதற்கு?
தாஸ், மீண்டும் பதட்டமடைகிறீர்கள். இன்றைய வாழ்க்கை எல்லாம் உழைக்கும் மக்களும் அறிவியலாளர்களும் உருவாக்கியது. கடவுளை மனிதன் தோற்றுவித்த காலத்தில் பசி,பஞ்சம், பட்டினி, கொள்ளை நோய் என்று அதற்கு தீர்வு காண முடியாமல்தான் கடவுளை தோற்றுவித்தான். இன்றும் இத்தகைய வாழ்க்கை பிரச்சினைகளுக்கு காரணம் அநீதியான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு. நீங்களே ஒத்துக் கொள்ளும் இந்த அநீதியான சமூக அமைப்பை மாற்றுவதற்கு ஒரு பக்தன் முறையில் என்ன செய்ய முடியும்? அநீதிகளை காணாமல், அதை நிறுத்த வழியில்லாமல் கண்மூடி இல்லாத கடவுளை பிராத்திப்பது ஒன்றைத் தவிர வேறு வழி இருக்கிறதா அருமை தாஸ்?
\\கடவுளை மனிதன் தோற்றுவித்த காலத்தில் பசி,பஞ்சம், பட்டினி, கொள்ளை நோய் என்று அதற்கு தீர்வு காண முடியாமல்தான் கடவுளை தோற்றுவித்தான்.\\ இயற்கையின் படைப்பில் எந்த ஒரு இனமும் அளவுக்கு அதிகமாகப் பெருகும் போது அதன் எண்ணிக்கையைக் குறைக்க சில கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன. அவைதான் இவை. அப்படியே கூண்டு கூண்டாகச் செத்தாலும் ஐம்பது வருடத்துக்கு முன்பு வரை கூட எண்ணற்ற உயிரினங்கள் காப்பற்றப் பட்டுத்தான் வந்திருக்கின்றன. ஆனால் உங்கள் விஞ்ஞானம் வளர்ந்து சாதித்தது என்ன? இன்றைக்கு நாட்டில் காங்கேயம் காளைகள் கூட “Endangered Species” -ல் சேர்ந்ததுதான் மிச்சம். வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க சார்.
இந்த உலகம் இயற்கையில் படைப்பில் தோன்றியிருக்கிறது என்ற அளவுக்கு புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி. நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் இது குறித்து நேரில் சந்தித்து பேசலாமே? எழுதித் தீருகின்ற விசயமா இது?
\\இந்த உலகம் இயற்கையில் படைப்பில் தோன்றியிருக்கிறது என்ற அளவுக்கு புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.\\ இயற்க்கை என்றால் யாரோடது? இறைவனால் உருவாக்கப் பட்டது. படைப்பு என்று இருந்தால் படைத்தவன் இருப்பான் என்பது பாமரனுக்கும் புரியும், ஆனால் மெத்தப் படித்த உங்களுக்கு புரியாதது என்? மனசாட்சிக்கு விரோதமாக நீங்களாக உருவாக்கிக் கொண்ட நியாயமற்ற நாத்தீகம். உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் நீங்கள் உங்களுக்கென்று ஒரு கற்பனையை உருவாக்கி இல்லாத வழியை உருவாக்கி கொண்டு விட்டீர்கள், யார் சொல்லியும் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. சந்திப்பதால் என்ன பயன் இருக்கப் போகிறது?
அப்படி இல்லை, தாஸ். நாம் சந்திப்பதின் மூலம் இந்த விசயத்தை விரிவாக பகிர்ந்து கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் இறைநம்பிக்கைதான் சமூகப் பிரச்சினையை தோற்றுவித்தது என்று எங்கும் கூறவில்லை. ஒரு நபரிடம் இருக்கும் சமூக உணர்வே பிரதானமன்றி அவரது மத நம்பிக்கை இரண்டாம் பட்சமானதுதான் என்றுதான் கட்டுரை கூறுகிறது. அதே போல சமூகப்பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அந்த நம்பிக்கை இடையூறாக இருக்க கூடாது இருந்தால் அது விமரிசிக்கப்படக்கூடியது என்றுதான் சொல்கிறோம். அதனால் சமூக அக்கறை கொண்ட ஆத்திகரையும், சமூக விரோதமான நாத்திகர்களையும் இந்தக் கட்டுரை சான்றுகளாக கூறுகிறது. அது உங்களுக்கு புரியவில்லையா?
“ஆனால் நீங்கள் உங்களுக்கென்று ஒரு கற்பனையை உருவாக்கி இல்லாத வழியை உருவாக்கி கொண்டு விட்டீர்கள், யார் சொல்லியும் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை”…….
உங்களுக்கான பதில் உங்களிடத்திலேயே ….தயவு செய்து இதுவும் கடவுள் செயல் என்று சொல்லாதிர்கள்
\\ இன்றும் இத்தகைய வாழ்க்கை பிரச்சினைகளுக்கு காரணம் அநீதியான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு. நீங்களே ஒத்துக் கொள்ளும் இந்த அநீà ��ியான சமூக அமைப்பை மாற்றுவதற்கு ஒரு பக்தன் முறையில் என்ன செய்ய முடியும்? அநீதிகளை காணாமல், அதை நிறுத்த வழியில்லாமல் கண்மூடி இல்லாத கடவுளை பிராத்திப்பது ஒன்றைத் தவிர வேறு வழி இருக்கிறதா அருமை தாஸ்?\\ நீங்கள் இரண்டு வெவ்வேறான விஷயங்களை போட்டு படிப்பவர்களைக் குழப்புகிறீர்கள். இறை நம்பிக்கையால்தான் இந்தியாவில் சமூகப் பிரச்சினைகள் நிலவுகின்றன என்பது உங்கள் தியரி என்றால், உலகில் இன்னின்ன நாடுகள் நாத்தீகத்தை கடை பிடித்து சுபிட்சமாக வாழ்கின்றன என்றும், இன்னின்ன நாடுகள் இறை நம்பிக்கையால் நாசமாகிப் போயின என்றும் ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டு. நீங்கள் அவ்வாறு செய்ய வில்லை. வெறுமனே இறை நம்பிக்கை மீது எல்லா பழியையும் போடுவது எவ்விதத்தில் நியாயம் ஐயா? இந்தியாவில் நடப்பது மக்களாட்சி, ஆட்சி செய்பவர்கள் கூடுமான வரை மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி வருகிறார்கள். கொள்ளையடிக்கப் படுவது நமது பணம் தான் என்று கூட யாருக்கும் தெரியவில்லை. ஒரு வேலை உணவும், கொஞ்சம் காசும் கொடுத்தால் எந்தக் கழுதைக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போட ரெடியாக உள்ளார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு வந்தாலே போதும் எல்லா பிரச்சினைகளும் தீரும், அது நடக்காத மாதிரி பார்த்துக் கொள்வதில்தான் இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் வெற்றியாக இருக்கிறது. மற்றபடி, இறை நம்பிக்கைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஐன்ஸ்டீன் போன்ற விஞாநிகளிடமே இறை நம்பிக்கை இருந்தது, உலகில் பணக்கார நாடுகளிலும் இறை நம்பிக்கை இருக்கிறது, பிரச்சினைக்கு தீர்வு வேறு எங்கோ இருக்கிறது, வீணாக இறை நம்பிக்கையின் மேல் குற்றம் சட்டி மக்களின் இருக்கும் நிம்மதியையும் கெடுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
தாஸண்ணா,
இதெல்லாம் ஏற்கெனவே முன்பொரு கட்டுரையில் நாம் பேசியதுதானே! மறுபடியும் அதையே பேச போரடிக்கலையா? 🙂
\\இதெல்லாம் ஏற்கெனவே முன்பொரு கட்டுரையில் நாம் பேசியதுதானே!\\ அப்போது தோற்கடிக்கப் பட்ட அதே கருத்துகளை திரும்பவும் பதிவாக போடும்போது, மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மேலும் நாம் பதிவுகளைப் படித்து அதற்க்கு தகுந்தவாறு பின்னூட்டம் போடுகிறோம், யாருக்கு என்னென்ன எழுதுகிறோம் என்று Track செய்வதில்லை. அதனால் தான்.
தோற்கடிக்கப்பட்ட கருத்துகளா!!!! ஹா..ஹா.. நல்ல நகைச்சுவை.
நாம் வேறுபடுகிறோம் என்பதை ஒத்துக்கொள்வோம் என்று கூறிவிட்டு நம் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஏனெனில் லூப் போன்று சுற்றிக்கொண்டே இருந்த தர்க்கம் அது. இந்தப் பதிவிற்கான உங்களது பதில்களும் அப்படித்தானிருக்கின்றன.
\\ஒரு