எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், தீ விபத்துகள், திடீர் மாரடைப்பு முதலானவற்றால் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. (அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகம்) என்ற தனியார் நிறுவனம் இயக்கி வருகிறது.
அரசு சின்னத்தைப் பொறித்துக் கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை நடத்திவரும் இத்தனியார் நிறுவனத்தில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வீதம் இரண்டு ஷிப்டுகளில் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் ஊழியர்கள், மாதம் ரூ.7000 சம்பளத்தில் வாரத்தில் ஏழு நாட்களிலும் வேலை செய்யுமாறும், பணியாளர்களுக்கு தங்குமிடமோ, ஓய்வறையோ இல்லாமல் வெட்டவெளியில் பணியாற்றுமாறும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதுபற்றி வாய்திறந்தால், ஊழியர்களை இடமாற்றம் செய்து பழிவாங்குவதும், மிரட்டுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.
இக்கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகக் குமுறிய சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வின் வழிகாட்டுதலில் தமக்கென “108 தொழிலாளர் சங்கம்” என்ற பெயரில் தொழிற்சங்கத்தைக் கட்டியமைத்து போராடி வருகின்றனர். கடந்த 28.2.2012 அன்று இராமநாதபுரம் நகரின் கேணிக்கரையில் உள்ள டி.எஸ். திருமண மண்டபத்தில் ஜி.வி.கே. ஈ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றபோது, இந்நிறுவனம் அரசு நிறுவனமல்ல என்பதையும், இது அரசு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாமும் அல்ல என்பதையும் உணர்த்தி, இத்தனியார் நிறுவனம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவருவதையும், சட்டவிரோதமாக வாரத்தின் ஏழு நாட்களிலும் 12 மணி நேரம் வேலை வாங்குவதையும், ஆம்புலன்ஸ் வண்டியில் மைலேஜ் கணக்கு, பஞ்சர் கணக்கு கேட்பதையும், வண்டியில் உயிர்காக்கும் மருந்துகள்உபகரணங்கள் இல்லாததையும் விளக்கி, இத்தனியார் நிறுவனத்தின் கொள்ளையையும் அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடமும், பகுதிவாழ் உழைக்கும் மக்களிடமும் 108 தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சாரம் செய்தனர். விவரம் தெரியாமல் நேர்முகத் தேர்வுக்கு வந்த இளைஞர்களிடம் இப்பிரச்சாரம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
இப்பிரச்சாரத்தாலும், இந்நிறுவனத்தால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட இரு தொழிலாளர்களுக்காக தொழிலாளர் நல அலுவலகத்தில் 108 தொழிலாளர் சங்கம் முறையிட்டதன் பேரில் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாலும் ஜி.வி.கே. நிறுவனம் அரண்டு போயுள்ளது. சங்கத்தின் செயல்பாடுகளால் உற்சாகமும் புதிய நம்பிக்கையும் பெற்றுள்ள தொழிலாளர்கள், தமிழகமெங்குமுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அமைப்பாக்கிப் போராட ஆயத்தமாகி வருகின்றனர்.
______________________________________________________
– புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012
______________________________________________________
பு.ஜ.தொ.மு.வின் துண்டு பிரசுரங்களை படித்துவிட்டு வேலைக்கு சேரவந்த இளைஞர்கள் திரும்பி சென்றுவிட்டார்களா?
ராஜா,
நீங்கள் வேண்டுமானால் பிரசுரங்களை படிக்காமல் விட்டு EMRIயில் வேலைக்கு சேர்ந்து சேவகம் செய்து, EMRIக்கு சேவை செய்யலாமே?
தகவல் கேட்டதற்காக தண்டனையா?
வினவில் வினவக்கூடாதோ?
in EB also privatisation has been done hence the power cut problem in TN.In maharastra ENRON is fixing high tariffss.
தங்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? உங்களின் கருத்து என்ன?
108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் பணியாளர்களின்நிலை தண்டணை போன்றதுதான் குறிப்பாக பெண் பணியாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. ஆனால் புஜதொமு வின் போராட்டத்திற்கு உண்மையான பலன் என்ன? அதற்கு காரணம் என்ன எனறு அறிய விரும்பினேன்.