privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்தண்ணீரில் தள்ளாடும் தாமரை மக்களை வருடுமா வதைக்குமா ?

தண்ணீரில் தள்ளாடும் தாமரை மக்களை வருடுமா வதைக்குமா ?

-

“ஏ புள்ள மயிலத்தாச்சி! பஸ்சு போற ரோட்லேர்ந்தா வார, அங்க என்னமோ காருல ரேடியா கட்டிகிட்டு அலோன்ஸ்சு செஞ்சுகிட்டு போற மாறி சத்தம் கேட்டுதே, ஏதாச்சும் எழவு சேதியா, ஒரு தொளப்பும்(சேதி) காதுல விழமாட்டேங்குது. அவைங்க சொல்றது ஒன்னும் புரியவும் மாட்டேங்குது, அதனாலேயே போவ வேண்டிய எழவெல்லாம் போக முடியாம போயிருது.”

“எப்பப் பாரு, ஒனக்கு வாயில நல்ல வார்த்தையே வராதே! ஒப்பாரி வச்சு அழுவறதுக்குன்னே ரெடியா இருப்ப, போயி வாய கழுவு. ஏதோ கட்சிக் காரங்க நாளான்னைக்கி திருச்சில கூட்டம் போடறாங்களாம் அதப் பத்தி சொல்லிக்கிட்டு போறாங்க”

“யாரு செயலலிதா வருதா திருச்சிக்கி?”

“க்கும்… இது ஏதோ புதுசா இருக்கு. ஏதோ சொன்னானுவொளே ம்…… தாமர கட்சியாம், இங்கரே சீட்டெல்லாம் குடுத்துருக்கானுவொ.” என்று மோடி வருகை குறித்த விளம்பர நோட்டிசை காண்பித்தாள், மயிலு பாட்டி.

“என்னாது தாமரையா! அவைங்க யாருடி? புதுசு புதுசா வாராங்க” என்று நக்கலாக சிரித்தாள், மயிலு பாட்டியின் அண்ணியான மரகதப் பாட்டி.

“இந்திரா காந்தி மருமக ரெண்டு பேரு இருந்தாகள்ள, அடிச்சுகிட்டு பிரிச்சுருப்பாங்க போல, அந்தம்மா கையி, இந்தம்மா தாமரையா இருக்கும் நமக்கு என்னத்த தெரியுது”

“மருமகளா இருந்தா பொம்பளப் படமுல்ல போட்ருக்கும் இதுல ஆம்பள படம் போட்ருக்கு” என்று நாட்டு நிலமையை அக்கு வேறு ஆணி வேறா அலசி ஆராஞ்சுட்டு இருந்தாங்க இரண்டு பாட்டிங்களும்.

இதுக்கு இடையில வந்த மயிலு மருமக “ஒப்புறான! பிள்ள, மாட்டு சாணிய  கையில பெனைஞ்சுட்டு இருக்கு, பாத்துக்கன்னு விட்டுட்டு போனா கதை பேசிட்டு இருக்கிங்க, வரட்டும் ஒங்க மகனுட்டேயே ஒங்க அம்மா செய்றது நாயமான்னு கேப்போம்.” என்று எரிச்சலுடன் பேச்சுக்கு தடை போட்டாள்.

திருச்சியில் கடந்த 2013, செப்டம்பர் மாதம் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் நடந்த ‘இளம் தாமரை’ மாநாட்டை முன்னிட்டு பிரச்சாரம் செய்ததை ஒட்டி ஒரு கிராமத்தில் நடந்த உரையாடல் இது. அந்த சமயம் மோடிங்கறது யாருன்னே தெரியாத ஒரு நிலைய அங்கு பல பேருட்ட  பாத்தேன். இப்ப தேர்தல் முடிஞ்சுருச்சு. டிவி, பேப்பரு புண்ணியத்தால மோடி அலை அடிச்சு, அவரு பிரதமராவும் ஆயிட்டாரு! இப்ப எந்த அளவு பாரதிய ஜனதா கட்சியையும் மோடியையும் கிராமத்து மக்கள் தெரிஞ்சு வச்சுருக்காங்க பாப்போமுன்னு நாலைஞ்சு கிராமத்துல உள்ள தெரிஞ்சவங்க பழக்கப்பட்டவங்கக் கிட்ட ஒரு ரவுண்டு பேசிப்பாத்தேன்.

தண்ணியில தள்ளாடும் தாமரை 1காட்டூர் கோமதி:

“என்ன கோமதி அக்கா! சித்திர திருவிழாவும், தேர்தல் திருவிழாவும் உங்க ஊருல நல்லபடியா முடிஞ்சுதா? மோடி பா.ஜ.க, கட்சியப்பத்தி உங்க ஊருல என்ன சொல்லிக்கிறாங்க?”

“யாருக்குடி அதெல்லாம் தெரியுது. மோடி கேடின்னு இந்த பேர கேட்டாலே எனக்கு சிரிப்புதான் வருது போ. எங்கூட்டுக்காரு எப்பயுமே சூரியனுக்கு போட சொல்லுவாரு! போடுவேன். ஆனா இந்த தடவ இந்த ஊருல படிக்கிற நாலஞ்சு எழஞ்செட்டு பயளுவொல்லாம் சேந்துகிட்டு தாமரைக்கி போடுங்கன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க. எம்மகவனும் அதுல சேந்துக்கிட்டு செங்கல்லு கலருல துண்டு ஒன்னு கட்டிகிட்டு தாமரைக்கி போடுங்க, ரோசாவுக்கு போடுங்கன்னு அலஞ்சுட்டு கெடந்தான்.”

” தாமரைக்கி எதுக்கு போடனுன்னு ஒம்மவன் ஏதாச்சும் சொன்னானா?”

“சொன்னான் சொன்னான். ஏதோ அவரு ஊருல நெறையா கம்பெனியெல்லாம் கொண்டு வந்துருக்காராம், நெறையா பேருக்கு வேல கெடைக்கிதாம். அதுமாரி பெரிய பெரிய கம்பெனிங்க நம்மூருக்கும் வரும் வேலை கெடைக்கும் அப்டி இப்புடின்னு ஏதோதோ சொன்னான்”

“ஊருக்குள்ள இருக்குற மத்த கட்சிக்காரங்க ஓட்டு கேட்டு வர்றது போல தாமரைக்கி ஓட்டு கேட்டு வந்தாங்களா?”

“அப்டி யாரும் வரல. எம்மவனாட்டோ இருக்குற வயசுப் பசங்க இங்கனைக்குள்ள பேசுறதோட சரி”

“நீ உன்னோட வீட்டுக்காரரு சொன்ன கட்சிக்கு ஓட்டு போட்டியா, ஓம்புள்ள சொன்ன கட்சிக்கு ஓட்டு போட்டியா?

“நான் சூரியனுக்குதான் ஓட்டு போட்டேன். நான் புது பொண்ணா இருக்கும் போதே எலக்சன் செலவுக்கு காசு வேணுன்னு, எங்கப்பாரு வூட்ல போட்ட நகைய வித்து சூரியன் கட்சுக்கு செலவு பன்னவரு எங்க வீட்டுக்காரு! மாத்தி போட்டா குடி வக்க மாட்டான் அந்தாளு. ஓட்டு போட்றதுல கூட ஆம்பள சொல்றததான் கேட்டாகனும் பொம்பள.”

“புருசனுக்கு பயந்து சூரியனுக்கு போட்ட சரி. புள்ள கேக்க மாட்டானா?”

கட்சி கட்சின்னு குடிச்சு அழிச்சான் அப்பங்காரன். இப்ப புள்ள கெளம்பியிருக்கான். இவங்கெடக்குறான் சின்ன பய, புதுசா மீசை மொளச்சுருக்கு, பெரிய மனுசதனம் வந்துருக்கு, மொதமொதன்னு ஓட்டு போடப்போறான்ல்ல, இந்த வயசுல இப்படிதான் சுத்துவாங்க. இந்த கட்சிக்காரன் நல்லது செய்ய மாட்டானா அந்த கட்சிக்காரன் நல்லது செய்ய மாட்டானான்னு பத்து திருப்பம் ஓட்டு போட்டு பாத்தா, எல்லா கச்சிக்காரனும் திருட்டு பயலுவதான்னு புத்தி வரும். இப்ப சொன்னா மண்டையில ஏறாது. சரி பேசிட்டே இருக்கோம், மேயப் போன பசுமாடு வந்துரும். அதுக்குள்ள கன்னுகுட்டி எங்கெருக்குன்னு தேடி கட்டலன்னா, குடிச்சிட்டு போயிரும், நாளைக்கி தண்டல் கட்ட முடியாது” ன்னு பேச்சை முடித்தாள்.

இதுவரைக்கும் பேசுனதுல இருந்து இளைஞர்கள் சிலருட்ட, மோடி அலை அடிச்சுருக்குன்னு தோணுச்சு. அவங்களையும் விசாரிக்கலாங்கற முடிவோட முதல்ல படிச்ச பெண்கள்ட்ட பேச ஆரம்பிச்சேன்.

பள்ளத்தூர் சத்தியா:

மோடி அலை 3சத்தியா கிட்ட போனுல வழக்கம் போல நலம் விசாரிப்பெல்லாம் முடிச்சிக்கிட்டு மெதுவா ஆரம்பிச்சேன் “எப்பவுமே ஊரு கதையையே பேசுரோமே தேர்தல், கட்சி, அரசியல் இப்புடி ஏதாவது பேசலாமா?” என்றேன்.

“எங்க வீட்டுக்காரு இல்லையேக்கா வெளியே போயிருக்காரு, வரோட்டி பேச சொல்றேன்”

“ஓங்கிட்டதாண்டி பேசனும்”

“நான் என்னத்த அரசியல் பேச. எனக்கு அரசியல்னாலே ஒண்ணும் தெரியாது. அது பிடிக்கவும் பிடிக்காது. டி.வியில நியூசு ஓடும்போது காதுல கொஞ்சம் வாங்குவேன். பெறவு அது எதுக்கு நம்பளுக்குன்னு, சீரியல்லக்கு மாத்திருவேன்” என்றாள் சமீபத்தில் பி.பி.ஏ படித்த அந்த பொண்ணு.

தெரியாதுன்னவள் கிட்ட மோடின்னா யாருன்னு தெரியுமான்னு ஒரு கேள்விய போட்டேன்.

“ம்…. தெரியும்.”

“அவரு என்ன கட்சி? எந்த பதவியில இருக்காரு?”

“அவரு கம்யூனிஸ்ட் கட்சி. ஆனா எந்த பதவில இருக்காருன்னு தெரியலையே!”

“தூக்கி வாரி போட்டது. “மோடி கம்யூனிஸ்டு கட்சின்னு எப்புடி சொல்ற?”

“மோடிக்கி ஓட்டு போடுங்கன்னு ஒரு நாள் வேனுல விளம்பரம் பண்ணிட்டு வந்தாங்க. அப்ப எல்லாரும் செவப்பு துண்டு போட்ருந்தாங்க! எங்க அப்பா சொல்லிருக்காரு, கம்யூனிஸ்டுன்னா செவப்பு துண்டு போட்ருப்பாங்கன்னு அத வச்சு கண்டு புடிச்சேன்”

மோடிய கம்யூனிஸ்ட்டுன்னு கேட்ட அதிர்ச்சியில மீளாம “ சரிடி, மோடியப் பத்தி என்னத்த தெரிஞ்சுகிட்ட?” என்று கேட்டேன்.

“எங்க வீட்டுக்காரரு நியூசு பாக்கும் போது, மோடிய டி.வியில பாத்துருக்கேன். அதுக்கு மேல எனக்கு ஒன்னும் தெரியாது ஆள விடுக்கா” என்று பேச்சை துண்டித்தாள்.

பெறவு யோசிச்சுப் பாத்தேன். எங்க பக்கத்துல காவி, செவப்பு, செங்கல் கலரு எல்லாமே செவப்புன்னுதான் மக்கள் சொல்வாங்க. அதுக்கா இப்டியா?

ஆழிகுளம் விஜி:

சத்தியா சொன்ன பதில கேட்டதும், விஜிகிட்ட எப்புடி ஆரம்பிக்கிரதுங்கற கொழப்பத்தோடவே தொடங்குனேன்.

“உங்க ஊருல நடந்த தேர்தல் பத்தி எதாவது இருந்தா சொல்லேன்?”

“ம்… ஊருல சிறப்பா ஏதும் நடக்கல, வழக்கம் போலதான். ஆனா என்னோட போன்ல ஜெயலலிதா ஓட்டு கேட்டுச்சு அது ரெக்காடிங் பண்ணிதான், போன்ல வருதுன்னு தெரிஞ்சாலும், அந்த குரல கேட்ட உடனே ஒரு பயமும் படபடப்பும் வந்துச்சு. முதலமைச்சரே நேரடியா பேசுறது போல பாதில நிறுத்தவே பயமாருந்துச்சு” என்று பயம் மறக்காத பெண்ணாக பேசினாள்.

“சரி அது போகட்டும் அப்பறம் போசுவோம். இதசொல்லு நடக்குறது சட்டமன்ற தேர்தலா? நாடாளுமன்ற தேர்தலா?”

“இது பிரதமரை தேர்ந்தெடுக்கிற தேர்தல்”.

“நீ யாரு பிரதமராக வரணுமுன்னு ஓட்டு போட்ட?”

“எனக்கு ஒடம்பு சரியில்ல இதோட ஓட்டு போட போவனுமான்னு தோனுச்சு அதுனால ஓட்டு போட போகல.”

“மோடிங்கறது யாருன்னு தெரியுமா? அவர் எந்த கட்சி?”

“மோடியா? அவரு பாரதிய ஜனதா கட்சி. பிரதமருக்காக நிக்கிறாரு.”

“பாரதிய ஜனதா இந்து மதவெறிக் கட்சின்னு சொல்றாங்க, முஸ்லீம் மக்கள ஒடுக்குதுன்னு சொல்றாங்க இதப்பத்தி தெரியுமா?”

“இந்த கேள்விக்கி பதில் ‘பாஸ்’ன்னு வச்சுக்க! அடுத்த கேள்விக்கி போ”

“ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அப்டின்னு சொல்றாங்களே அதப்பத்தி பத்தி கேள்வி பட்றிக்கியா?”

“யம்மாடி…. மோடி யாரு, என்னா கட்சின்னு எங்க ஐயரு வாத்தியாரு சொல்லிதான் எனக்கு தெரியும். இதுக்கு மேல என்ன, கேள்வி கேப்ப நீ”

“உங்க ஐயரு வாத்தியாரு போக, வேற யாரெல்லாம் மோடி பத்தி என்ன பேசிகிட்டாங்க?”

“எல்லாம் ஐயர் சாரு சொன்னதுதான். மோடி குஜராத்துல வளர்ச்சி கொண்டாந்துருக்காரு கம்பெனிகள்லாம் நெறையா தொறந்துருக்காரு வேல கெடைக்கும் ஒனக்கும் வேல கெடைக்கும் நீயும் தாமரைக்கி போடுன்னு சொன்னாரு ஆள விடுப்பா”ன்னு முடிச்சுக்கிட்டா.

____________

மோடி அலை 2டுத்து மோடிய ஆதரிக்கிற சில கிராமத்து இளைஞர்கள வலை வீசி தேடிப்பிடிச்சு பேசிப்பாத்தேன். பொதுவா அவங்க சொன்னது ‘குஜராத்து வளர்ச்சி’ங்கற வார்தையத்தான். குஜராத்துல பல வெளிநாட்டு கம்பெனிங்க இருக்கு அதுபோல தமிழ் நாட்டுக்கும் வந்தா நம்மளுக்கு வேல கிடைக்கும்னு சொன்னாங்க. ஆர்.எஸ்.எஸ். பத்தி கேட்டா யாருக்கும் தெரியல. 2002 குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலை பத்தி  கேட்டா யாருக்கும் ஒன்னும் தெரியல. ஆனா பா.ஜ.கட்சி, முஸ்லீம்களுக்கு எதிரானதுதான் என்றும், குண்டு வெடிப்புக்கு சாயுபுகதான் காரணம், அதனால் அவங்களை ஒடுக்குறது சரின்னு பேசுனாங்க.

எதவச்சு அவங்கள தீவிரவாதின்னு சொல்றீங்கன்னா, பேப்பர்ல டிவியில எல்லாம் பாக்குறோம்லன்னு கண்ண மூடிட்டு சொல்றாங்க. கூட்டிக் கழிச்சிப் பாத்தா ஹமாம் சோப்பு ரொம்ப நல்ல சோப்புன்னு நம்ம ஜனங்கள எப்படி பேச வச்சாங்களோ அது மாதிரிதான் மோடின்னா வளர்ச்சி, பாய்ங்கன்னா குண்டுன்னு ஒரு கருத்த உருவாக்கிட்டாங்க.

ஒரு நாற்பது வயசுக்காரரு சொன்னாரு “வாஜ்பாயி காலத்துலேருந்து எனக்கு பா.ஜ.காவ தெரியும். இந்த கட்சிய ஆதரிக்கணும், ஓட்டுப் போடனுன்னு ஆசை. ஆனா பா.ஜ.க. கூட்டணி கட்சிக்குதான் எங்க தொகுதியில சீட்டு ஒதுக்குனாங்க. இப்பதான் பாரதிய ஜனதா கட்சியே நேரடியா நிக்குது அதுனால சந்தோசமா அதுக்கு ஓட்டு போட்டேன்.”

பாதிப் பய இது வடக்க உள்ள கட்சி, மதவாத கட்சின்னு சொல்றாங்களேன்னு கேட்டதுக்கு “மொதல்ல நாம நல்லாருப்போம் பிறகு பங்காளி, மாம மச்சானப் அப்பறம் பாத்துக்கலாம்னு நெனப்போம்ல, அதுபோலதான் இதுவும். பா.ஜ.க இந்து மதத்து மேல அக்கறையா இருக்காங்க. அதெத்தான்  மதவாதம்ன்னு சொல்றாய்ங்க, முஸ்லீம் மக்கள ஒடுக்குதுன்னு சொல்றாங்க. மதவாதம் இல்லன்னு சொல்ற காங்ரஸ்சு கட்சி ஆட்சியல மட்டும் குண்டு வெடிக்கலையா, முஸ்லீம்கள கைது பண்ணலையா.” என்று  அந்த வட்டாரத்து சாதிவெறிக்கு இதுவரை வக்காலத்து வாங்கியவரு, இப்ப இந்து மத வெறிக்கு ஆதரவா பேசுறாரு.

பாமக, கொங்கு வேளாள கவுண்டரு கட்சிங்கல்லாம் எப்படி ஆர்.எஸ்.எஸ் அரசியல இயல்பா பேசுறாங்கன்னு இப்ப புரியுது.

இவங்ககிட்ட பேசுனதுல இருந்து, இந்த தேர்தல்ல இருந்துதான் பாரதிய ஜனதா, மோடி, இந்து மதம் அப்புடிங்கற கோணமே கிராமத்துல பரவ ஆரம்பிச்சிருக்குன்னு தெரியுது.  கிராமங்களல்ல ஆதிக்க சாதி வாழ்க்கையில கூட விவசாயம் காரணமா மத்த சாதி மக்கள்கிட்ட கொஞ்சம் அனுசரணையாக இருக்கணும்கிறது விதி. இந்த கிராமத்துல கூட இப்ப பழைய தீண்டாமைங்க, தண்டனையெல்லாம் கிடையாது.

காலனி மக்கள் ஊருக்குள்ள எல்லா இடத்துக்கு போறதும், வாறதும், உண்டு. திருவிழா, தேர்தல்ன்னு எதுவும் சாதி பிரச்சினையா வாரது இல்ல. இதுனால ஆதிக்க சாதி ஆட்சி கிடையாதுன்னு இல்ல. ஆனா இப்போ அறிமுகமாயிருக்கிற முசுலீம் எதிர்ப்பு இப்படி இல்ல. இது முழுக்க முழுக்க பொய் பிரச்சாரத்துக்கு நம்ம மக்க பலியாயிருக்கங்கன்னுதான் தோணுது.

வட இந்தியாவுல ஜாட், குர்மி, ரஜபுத்திரர்னு ஆதிக்க சாதிங்கதான் பாஜகவோட அடித்தளமா இருக்கிற மாதிரி தமிழ்நாட்டுலயும் வன்னியர்,தேவர், கவுண்டர்னு மாத்திட்டாங்கன்னா என்ன செய்யப் போறோம்? இப்பவே தருமபுரியல அன்புமணி அப்பிடிதானே ஜெயிச்சாரு?

மோடி ஆட்சியில வளர்ச்சி வராதுங்கிறத மக்கள் கொஞ்ச நாளுல தெரிஞ்சிக்குவாங்க! ஆனா அது பிரிவினையை, துவேசத்தை, வெறிய கொண்டு வருதுங்கிறத நாமதான் புரியவைக்கணும்!

–    சரசம்மா