privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்விடியும் வரை கொண்டாட்டம் ! விடிந்த பிறகு சொர்க்கம் !

விடியும் வரை கொண்டாட்டம் ! விடிந்த பிறகு சொர்க்கம் !

-

வ்வொரு பதினாறு வருடமும் ஹேப்பி நியுஇயரும் வைகுண்ட ஏகாதேசியும் ஒன்றாக வருகின்றன! இந்தவகையில் 2015, விடிய விடியக் கொண்டாட்டம்! விடிஞ்ச பிறகு சொர்க்கவாசல்! என்று டபுள் டமாக்காவாக இருந்தது.

கர்நாடக சங்கீதம்
நாரத கான சபாவில் இருந்து மியுசிக் அகடமி வரைக்கும் ஒரே கூட்டம்!

வைகுண்ட பெருமாளின் சொர்க்க வாசலும் ஈசிஆர் பாற்கடலும் பக்த கோடிகளுக்கும் பல்வேறு ரிசார்ட்டுகளுக்கும் ஒரு சேர அருள் பாலித்தன. இதில் உள்ள சிறப்பு அம்சங்களை அனுபவிக்கிற பல்வேறு சமூகக் கூட்டங்களின் உற்சாகத்தைப் பரிசீலிப்பது அவசியமானதாகும்.

பொதுவாக மார்கழி என்றாலே மகா உற்சவமாக இருக்கும்! போன வாரம் கூட பாம்பே ஜெயஸ்ரீ ராகமாலிகாவில் பிருகாக்களையும் சங்கதிகளையும் அள்ளி வீசினார். நாரத கான சபாவில் இருந்து மியுசிக் அகடமி வரைக்கும் ஒரே கூட்டம்! மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ‘மார்கழி’ என்று காலம் போட்டு காலம் காலமா எழுதிட்டு வர்றா!

ஒவ்வொரு வருடமும் இஷை தாகத்தை புதுமையான முறையில் வழங்கி வரும் சபாக்கள் இந்த முறை கேண்டின் பலகாரங்களிலும் பல புதுமைகளைப் புகுத்தியுள்ள அரிய தகவலை மவுண்ட் ரோடு ஒரு பக்கத்துக்கு எழுதியிருந்தது. இந்த முறை ராகி தோசையும் கோதுமை இடியாப்பமும் உலர் பழங்களில் (கிஸ்மிஸ் என்று கெஸ்) செய்யப்பட்ட போளியும், மியுசிக் அகடமி கேண்டினில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். புதினா இடியாப்பம், ஆப்பிள்-ஆனியன் சேவையும் ரசிக சிகாமணிகளுக்காக கொண்டு வந்திருக்கிறார்களாம்.

இப்படிப்பட்ட இந்த சங்கீதக் கூட்டம் ஹேப்பி நியுஇயரை இரவு 10 மணி ஸ்பெசல் கச்சேரியுடன் கொண்டாடியிருக்கிறார்கள்! இந்த முறை கச்சேரியின் தீம், பன்னிரெண்டு ராசிகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு ராகங்களை, ஆலாபனம் செய்வதாகும்.

புத்தாண்டு கச்சேரியில் பாரம்பரிய (!!) சிற்றுண்டிகளும் மசாலா டீயும் பானகமும் வழங்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் 3% உயர்ந்த அடுக்கான இவர்களின் புதுவருடக் கொண்டாட்டம் இவ்விதம் இருக்கிறது.

இவ்விடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது அவசியமாகும். ‘தானே’ புயல் கடலூர் மாவட்டங்கள் முழுவதையும் முற்றிலும் உருக்குலைந்த சமயம் ஒரு மார்கழி மாதம் தான் என்று நினைக்கிறேன். அன்று விழுந்த முந்திரி விவசாயம் இன்றளவும் எந்திரிக்கவில்லை. காற்றாலும் மழையாலும் வேரோடு பிடுங்கெறியப்பட்ட அக்காலத்தில் நடுத்தரவர்க்கமாக இருந்த பல விவசாயக் குடும்பங்கள் கடனாளியாக உரிய நிவாரணமின்றி இன்றளவும் சின்னபின்னமாகி சிதறிப் போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையிலும் கூட ஹம்சர்வர்தினி ராகம் பாடியதால் தான் ‘தானே’ புயல்-மழை வந்திருக்கிறது என்று அன்றைய காலகட்டத்தில் உச்சி முகர்ந்து உவமை பாடிய இசைக்கூட்டத்திற்கு புயல் மழையே ராக தாள விளைவாக இருக்கிறதென்றால் ஹேப்பி நியுஇயரை சும்மா விட்டுவிடுவார்களா? நிற்க.

புத்தாண்டு உணவு
ஒரு வேளை மழை வரவில்லையென்றால்உங்கள் இரவு உணவை , மாடியில் சில அலங்கரிக்கப்பட்ட விளக்குகளோடு நட்சத்திரங்களுக்கு கீழே உண்ணலாம்

இவ்விதம் இசை ஞானம் உள்ளவர்களுக்கு புதுவருடம் பத்து மணி கச்சேரியோடு ஆரம்பிக்கிறது என்றால் அது இல்லாதவர்கள் என்ன செய்ய? அதற்கும் 15 வழிகளில் வழக்கத்திற்கு மாறான முறையில் புத்தாண்டைக் கொண்டாட மவுண்ட் ரோடு கீழ்க்கண்ட விதம் அறிவுறுத்தியிருக்கிறது. முதலில் அங்கே சொடுக்கி படித்துவிட்டு இங்கு வந்து படிக்கவும்.

  1. ஒரு வேளை மழை வரவில்லையென்றால்உங்கள் இரவு உணவை , மாடியில் சில அலங்கரிக்கப்பட்ட விளக்குகளோடு நட்சத்திரங்களுக்கு கீழே உண்ணலாம். (மாடியே இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் இவ்விதம் ஆணவத்தோடு ச்சீ ஆவணத்தோடு பாடியிருக்கிறார் “கிராமத்து குடிசையிலே கொஞ்சம் காலம் தங்கிப் பாருலே! கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப் பாருலே!”)
  2. 2015-ல் சாதிக்க வேண்டியதை பேப்பர் லாந்தரில் எழுதி, நட்ட நடுராத்திரியில் பறக்கவிடலாம்.
  3. பாத் டப்பில் அதிக நுரையுடன் வாசனைத் திரவியங்கள் ஒரு பக்கம்! வைன் ஒரு பக்கம்! படிக்க புத்தகம் ஒரு பக்கம்! என்று புத்தாண்டைக் கொண்டாடலாம். (ஏற்கனவே ஜெயமோகன் சுந்தர ராமசாமிக்கு பாத் டப்பில் குளிப்பது மிகவும் பிடிக்கும் என்று இரங்கல் உரையில் எழுதியதாக ஞாபகம்!)
  4. நடுநிசியில் டிவிடி பிளேயரில் சினிமா போட்டு பார்க்கலாம். கிராவிட்டி, பெர்சி ஜாக்சன், சீ ஆப் மான்ஸ்டர்ஸ் மற்றும் ராசி போன்ற படங்கள்.
  5. மாலை நேரத்தை குடும்பத்துடன் பெற்றொர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களுடன் செலவிடலாம். முதலாளித்துவம் கூட்டுக்குடும்பத்திற்கு வேட்டுவைத்து அழித்தது கூட தெரியாமல் இப்படியொரு அட்வைசு. ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் மென்பொருள் வேலை பார்ப்பவர்களே குழந்தைகளை விட்டு விட்டே வேலை பார்க்கிற பொழுது தாத்தா பாட்டிக்கு எங்க போக?
  6. ஒரு கேக்கை வாங்கிக்கொண்டு தெருவில் ஸ்ட்ரேஞ்சர்ஸுடன் (அதாவது முன்பின் தெரியாதவருடன்) கொண்டலாம். உங்களுக்கு நாய், நரி பிடிக்கும் என்றால் அவைகளுக்கு உணவளித்து கொண்டாடலாம். திரிஷாவெல்லாம் இப்படித்தான்!
  7. புத்தாண்டு உணவு
    ஒரு பீசா ஆர்டர் செய்தோ அல்லது நூடுல்ஸ் சமைத்தோ கொண்டாடிவிட்டு தூங்கச் செல்லலாம்

    குடிப்பதாக இருந்தால் உங்களுக்கு தெரியாதவர்களுடன் சேர்ந்து குடிக்கலாம். அதாவது உங்களின் நண்பர்களின் நண்பர்களுடன்.

  8. நீங்கள் வேலையில் இருந்தால் நைட் வீட்டிற்கு திரும்பும் பொழுது உங்களது வாட்ச் மேனுக்கு வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுங்கள். இதனால் அவர் திருப்தியாக உணர்வதோடு உங்களையும் எளிதில் விட்டுவிடுவார்.
  9. பன்னிரெண்டு பேப்பர்களை எடுத்து வைத்துக்கொண்டு 2014-ல் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நேர்ந்த மோசமான விசயங்களை எழுதி வீட்டிற்குள்ளேயோ அல்லது பால்கனியிலேயோ ஒவ்வொரு மாதத் தாளையும் ஒவ்வொன்றாக எரியுங்கள்! இது சிம்பாலிக்காக உங்களது மோசமானவைகளை அழித்து புது வாழ்வு தொடங்குவதை குறிக்கும்!
  10. ஒரு வேளை துரதிர்ஷ்டவசமாக இரவு வேலை பார்க்க நேர்ந்தால் உங்களை வெளிப்படுத்தும் விதத்தில் தீமாக உடையணிந்து கொள்ளலாம்!
  11. பார்டிக்கு செல்வதாக இருந்தால் காக்ரா, லெஹேனா மற்றும் ஒன்பது முழ சேலையை அணிந்து செல்லலாம். இதனால் அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும்!
  12. தனிமையில் புத்தாண்டைக் கொண்டாடுங்கள். ஒரு பீசா ஆர்டர் செய்தோ அல்லது நூடுல்ஸ் சமைத்தோ கொண்டாடிவிட்டு தூங்கச் செல்லலாம். அந்த இரவு உங்களுடையது!
  13. உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதிக்கொள்ளலாம். இந்த வருடம் என்ன நடந்தது? அடுத்த வருடம் என்ன நடக்க வேண்டும் என பல இத்யாதிகள். ஒரு வேளை யாரேனும் படித்துவிடுவார்கள் என்று பயந்தால் futureme.org என்ற தளத்திற்கு சென்று நீங்களே எழுதி உங்களது மெயிலுக்கு அனுப்பிக்கொள்ளலாம். முடிந்தால் கவிதை எழுதுங்கள்!
  14. டெக்னாலஜிக்கு நோ சொல்லுங்கள். இன்று செல்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்ளாய்டு, பேப்ளாய்டு (என்னென்னு தெரியலையே!) போன்றவைகளை அணைத்து வைத்துவிட்டு காலையில் வாழ்த்து சொல்லலாம்.
  15. யாருக்காவது கால் செய்து பேசலாம்! இந்த வருடத்தில் உங்களது நண்பர்களுடன் தொடர்பு அறுந்து போயிருந்தால் பலப்படுத்தலாம்!

மேலே உள்ள பதினைந்து அம்சக் கோட்பாடுகள் சொல்கிற செய்தி என்ன? எவ்வளவு நுகர முடியுமோ அவ்வளவு நுகருங்கள் என்பதே! அது மொட்டை மாடியிலே சாப்பிடு, பீசா ஆர்டர் பண்ணு! பாத் டப்பில் வைனோட குளி, வித்யாசமா குடி! டிரஸ் வாங்கு, பார்டிக்கு போ, டிவிடியில் படம் பாரு! அதுதவிர தனிநபராக மனிதர்கள் தங்களை அன்னியப்படுத்திக் கொள்ள கடிதம் எழுதி எரிக்கச் சொல்லிவிட்டு குடும்பத்தோடு பேசி மகிழ் என்று முரண்பட்டு நிற்கிறது. சமூகத்தின் லும்பன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு மேட்டுக்குடி உதிரி வர்க்கங்களின் புதுவருடம் இப்படித்தான் இருக்கப்போகிறது. இது இரண்டாவது வகை.

இதில் மூன்றாம் தரப்பாக சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்த இளைஞர் பிரிவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கணிசமான அளவு மதுவிற்கு பலியாகியிருக்கிறது. இவர்கள் யாரும் மேலே சொன்ன விதத்தில் புத்தாண்டை அறிந்தவர்கள் கிடையாது. கடின உடல் உழைப்பில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் உள்பட ஒவ்வொரு புத்தாண்டிற்கும் மதுவிற்கு அறிமுகப்படுத்தப்படுகிற கலாச்சாரம் பெருகி வந்திருக்கிறது.

திரைப்படங்களும், சின்னத்திரையும், பத்திரிக்கைகளும், இதை ஒரு கலச்சாரமாகவே நிறுவியிருக்கின்றன. ஆளும் வர்க்கம் புத்தாண்டு மது விற்பனையை டார்கெட் போட்டு விற்கின்றது!

இனி சமூகத்தின் மறுபக்கத்தைப் பார்ப்போம். மெரினா கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மதுவோடு ஆரம்பித்து 12 மணிக்கு உச்சநிலை அடைந்து சரியாக இரவு ஒருமணிக்கு நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளின் சுருதி குறைகிற அதே இரவு ஒரு மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட இருக்கிறது!

இந்த ஆண்டு பல இலட்சணக்கான பக்தர்கள் சொர்க்கம் போகும் பொருட்டு சொர்க்கவாசல் திறப்பிற்காக கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கின்றனராம். இப்படி இருந்தாலும் இரவு ஒரு மணியிலிருந்து காலை ஐந்து மணி வரை விஐபி தரிசனம் மட்டும் தான் திருப்பதியில் அனுமதிக்கப்படுமாம்.

ஐந்து மணிக்கு பிற்பாடுதான் ஏழை பக்தர்களால் மோட்சம் செல்ல முடியும்! இந்த நான்கு மணி நேரத்தில் இந்துப் பார்ப்பனியம் பணம் படைத்த வர்க்கங்களைத்தான் முதலில் மோட்சம் செல்ல அனுமதிக்கிறது. இதற்கும் ஆன்லைனில் டிக்கட் வாங்குவது முன் நிபந்தனையாகும்.

ஆளும் வர்க்கம் எப்படி ஏழைகளைச் சுரண்டி நிவாரணம் என்ற பெயரில் ரொட்டித்துண்டை வீசியெறிந்துவிட்டு தரகுமுதலாளிகளுக்கு பாய் விரிக்கிறதோ அதே போல வரிசையில் காத்திருக்கிற ஏழை பக்தர்களுக்கு காபி, டீ, பால் கொடுத்துவிட்டு பணம் படைத்தவர்களை முதலில் மோட்சம் செல்ல அனுமதிக்கிறது திருப்பதியின் வைகுண்ட ஏகாதேசி!

கோயிலும் கோலமும்
மக்கள் கோவிலுக்கும் போகிறார்கள், கோலமும் போடுகிறார்கள். இதில் மதம் எது, மார்கெட் எது என்று பிரித்து பார்ப்பது கடோபநிதத்தை புரிந்து கொள்வதை விட கஷ்டம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பார்த்த சாரதி கோயிலில் பக்தர்கள் மோட்சம் அடைந்த சம்பவமும் நடந்தேறியிருக்கிறது. கூட்ட நெரிசலில் பக்தர்கள் மிதிபட்டு இறந்திருக்கிறார்கள். இங்கு தான் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கும்பல் ஒரு தத்துவார்த்த கேள்வியை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் பெரியாரின் நாத்திக மரபு இருப்பது உண்மையென்றால் கோயிலில் ஏன் இத்தனைக் கூட்டம்?

இது போக புத்தாண்டு கிறித்தவ கொண்டாட்டம், அதை இந்துக்கள் கொண்டாட கூடாது, கோவில்களை நள்ளிரவில் திறக்க கூடாது என்று வருடா வருடம் இந்துமுன்னணியும், இத்துப் போன இராம கோபாலானும் அலறுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். என்ன பயன்?

மக்கள் கோவிலுக்கும் போகிறார்கள், கோலமும் போடுகிறார்கள். இதில் மதம் எது, மார்கெட் எது என்று பிரித்து பார்ப்பது கடோபநிதத்தை புரிந்து கொள்வதை விட கஷ்டம்.

இக்கும்பலின் பித்தலாட்டத்தை இனங்காணுவது எப்படி? இதற்குத்தான் இன்றைய முதலாளித்துவம் முன்னணியில் வைத்திருக்கிற புத்தாண்டு கொண்டாட்டங்களை முதலில் பரிசீலனை செய்தோம்.

கோயிலில் மட்டுமா கூட்டம்? ஈசிஆர் பீச்சில் ரிசார்ட்டுகளில் பப்புகளிலும் தான் ஒரே கூட்டம்! டாஸ்மாக்கில் எதைவிடவும் கூட்டம்! மறுகாலனியாதிக்கம் தனியார்மயம் தாராளமயம் வழங்கியிருக்கிற அதி உன்னத தரிசனங்களின் விளைவுகள் இவை!

கடவுளை நம்புவன் முட்டாள் என்றால் கடவுளை உருவாக்கியவன் அயோக்கியன் என்றார் பெரியார். அப்படி கடவுளை உருவாக்கி பார்ப்பனியத்திற்கு தலைமையேற்கிற 3% கூட்டம் கச்சேரி என்றும் பதினைந்து வழிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றும் வணிக உத்தியில் முதலாளித்துவத்தோடு இலட்சமண ரேகையாக நிற்கின்றன!

எஞ்சியிருக்கிற இடைநிலைச் சாதிகளும் தலித்துகளும் கூடையில் இட்ட நண்டுகளாக ஒருவரையொருவர் மேல் எழும்பா வண்ணம் பார்ப்பனியத்தின் படிநிலை அடுக்கில் சிக்குண்டு கிடக்கிறார்கள்!

இவ்விதம் ஆளும் வர்க்கம், மக்களை ‘ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’, ‘அரசியல் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’ வைத்திருப்பதன் அவசியம் தான் புத்தாண்டும் ஏகாதேசியும்.

நுகர்வுக் காலாச்சாரமும் ‘நூல்’ கலாச்சாரமும் பின்னிப் பிணைத்திருப்பதை பார்ப்பனிய எதிர்ப்பு, முதலாளித்துவ மறுப்பு கட்டியெழுப்புவதன் மூலமே முறியடிக்க இயலும்.

அதற்கு ரங்கநாதனையும் ரத்தன் டாடாவையும் கேள்வி கேட்கும் உரிமையை மக்களுக்கு கற்றுத் தருவது வேண்டும்.

– இளங்கோ.

செய்தி ஆதாரங்கள்

  1. காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில்: பரமபத வாசல் நாளை அதிகாலை 5 மணிக்கு திறப்பு
  2. Chennai Margazhi season
  3. A change of tune with healthy bites
  4. 15 unusual ways into 2015
  5. புத்தாண்டு வைகுண்ட ஏகாதசியை கொண்டாட திருமலை தயாராகிறது!
  6. Usher in the New Year, Carnatic style