போராடும் மக்களின் மண்டையை பிளந்த கூடுதல் DSP பாண்டியராஜனை கைது செய்!
மக்களின் பிரச்சையை தீர்க்க வக்கற்ற எடப்பாடி இனியும் நீடிக்கக்கூடாது!
என்பதை முன் வைத்து மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தலைமையில் இன்று 13.4.2017 காலை 10.30 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய எழும்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்களை பார்த்து வெற்றிவேல் செழியன் “டாஸ்மாக்கை வேண்டாம் என்று போராடுவது மக்கள் உரிமை, அதற்கு பதில் சொல்லவேண்டியது டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடமை. இங்கு போலீசுக்கு என்ன வேலை? இந்தப் போலீசு மக்கள் வரிப்பணத்தில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகிறதா? அல்லது சாராய முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறதா? மக்கள் போராட்டங்களில் போலீசு தலையிடுவதற்கும், தாக்குவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இதை மீறி செய்கிறது என்றால் இந்த போலீசு மக்களுக்கு வேலை செய்யவில்லை. சாராய முதலாளிகளுக்கு மக்கள் பணத்தில் வேலை செய்கிறது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நிறுவுகிறது.
எனவே இத்தகைய போலீசு துறையை மக்கள் நம்பக் கூடாது போலீசைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் போராடினால்தான் டாஸ்மாக் கடையை மூட முடியும், இப்படி போராடும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்” என்று பேசினார்.
இந்தப் போராட்டத்தில் மக்கள் கலந்துவிடக்கூடாது என்று அச்சப்பட்ட போலீசார் அவர்களை விரட்டியடித்துக் கொண்டே இருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டம் நீடித்தது. பின்பு அனைவரையும் கைது செய்தது போலீசு.