சென்னை நேரு பூங்கா குடியிருப்பில் மாட்டுக்கறி திருவிழா !
சென்னை நேரு பார்க்கில் 4.5.17 அன்று மாட்டிறைச்சி விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காலை 9:00 மணி முதலே குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மதியம் 3:00 மணிக்கெல்லாம் அப்பகுதியைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
4.30 மணிக்கு பகுதியில் புகுந்த போலீசு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று மக்களை மிரட்ட ஆரம்பித்தது. அத்துடன் சமையலுக்காக வைத்திருந்த காலி கறிப்பானையை ‘கைப்பற்றிக்கொண்டு’ ஓடியது. பகுதியில் ஒட்டப்பட்டிருந்த மக்கள் அதிகாரம் சுவரொட்டியை கிழித்து அட்டகாசம் செய்தது. எனினும் திட்டமிட்டபடி மாலை 5:00 மணிக்கு விருந்து துவங்கியது. தயாரித்து வைத்திருந்த இறைச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது இதனை போலீசின் மிரட்டல்களைத் தாண்டி மக்கள் விருப்பத்தோடு வாங்கி உண்டனர்.
மாட்டிறைச்சி சாப்பிட்ட குற்றத்திற்காக 16 தோழர்களை கைது செய்து போலீசு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். நடந்துகொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த பகுதி மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடவிடாமல் தடுக்கும் போலீசையும், மாட்டுக்கறிக்கு தடை போட முயலும் மோடியையும் கடுமையான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. தொடர்புக்கு – 95518 69588.
_____
மாட்டுக்கறிக்குத் தடை: விழுப்புரம் கண்டன ஆர்ப்பாட்டம்.
பார்ப்பன பாசிஸ்ட் மோடி அரசு மாடுகளை விற்க தடை என்பதன் மூலமாக மறைமுகமாக மாட்டுக்கறிக்கு தடை விதித்து தனது இந்துத்துவ கொள்கையை அனைத்து தரப்பு மக்கள் மீது திணித்துள்ளது. மற்றொரு புறம் விவசாயிகளை ஒழித்துக்கட்டி கார்பரேட்டுகளிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி உள்ளது. இதனை எதிர்த்து தமிழகமெங்கும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது.
விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சார்பில் கடந்த 03.06.2016 சனி, மாலை 5:00 மணிக்கு ஜல்லிக்கட்டுத் திடல், புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பாளர், தோழர் ஞானவேல்ராஜா அவர்கள் தலைமை தாங்கினார் அவர் தனது தலைமையுரையில், மோடி அரசின் இந்த இந்த உத்தரவால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றது. மாட்டை பாதுகாப்பது இந்த அரசின் நோக்கமல்ல, ஐரோப்பிய நாடுகளில் குவிந்து கிடக்கும் கறிக்கு சந்தையை ஏற்படுத்தி கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வழிவகுப்பது தான் இந்த திட்டம் என்பதை அம்பலப்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளை பொருளாளர் தோழர் E.K சங்கர் பேசுகையில், போராடும் மக்களை தேசவிரோதி என்று சித்தரிப்பதும், அவர்களுக்கு ஆதரவாக போலிசு செயல்படுவதையும் அம்பலப்படுத்தினார்.
அவரை தொடர்ந்து பெரியார் சிந்தனை இயக்கத்தின் தோழர் தீனா அவர்கள், இந்தியா ஒரு நாடா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பல்வேறு அடக்குமுறைகள் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. தற்பொழுது நிலவி வரும் பாசிச அரசுக்கு எதிராக உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
இறுதியாக கண்டனயுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர், புதுச்சேரி. தோழர் லோகநாதன் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் 68 % பேர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடியவர்கள். மோடி அரசின் இந்த உத்தரவை ஏற்றுகொள்ளக் கூடியவர்களை எளிமையாக அடையாளம் கண்டு விடலாம். ஒன்று RSS சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மற்றொன்று சாதி வெறியர்கள். இவர்களை தாண்டி மற்ற அனைவரும் எதிர்க்கிறார்கள்.
அம்பேத்கர் சித்தாந்த ரீதியாக இந்த உச்சிக்குமியை உலுக்கி எடுத்தார். இன்று தமிழகமே எதிர்க்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதைத்தான் சாதித்தேன் என்று சொல்வதற்கு மோடி அரசிடம் ஒன்றுமில்லை. மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துப்பில்லாத இவர்கள் மாட்டை பாதுகாக்கிறார்களாம். விவசாயிகளையும் விவசாயத்தையும் ஒழித்துக்கட்டும் சதி வேலையை தான் மோடி செய்கிறார். இதனை முறியடிக்க வேண்டுமென்றால், RSS-BJP யை ஒழித்துக் கட்ட வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நாம் நிலைநாட்ட வேண்டும் என்று கூறி முடித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே மகஇகவின் புரட்சிகர பாடல் பாடப்பட்டது. இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி வழங்கப்பட்டது. மாட்டுக்கறியை சாப்பிடக் கூடாது என்று மறுத்தது போலிசு. மீறி சாப்பிட்டால் கைது செய்வோம் என்று மிரட்டியது. நீங்கள் கைது செய்யுங்கள் என்று தோழர்கள் உறுதியாக நின்றதும் வேறு வழியில்லாமல் அமைதியாகிவிட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு – 99650 97801.
_____
தஞ்சையில் மாட்டுக்கறி திருவிழா !
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சார்ந்த, சென்னை ஐ.ஐ.டி. மாணவர்
சுராஜ், RSS காலிகளால் கொடூரமாக தாக்கப்பட்டத்தை கண்டித்தும், அவர்களை
கைது செய்ய கோரியம், பி.ஜே.பி. கும்பலின் சதிதனமான மாட்டுக்கறி தடையை
கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க மக்கள் அதிகாரம் சார்பாக மாட்டுக்கறி
உணவுத்திருவிழா நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தஞ்சையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக 01.06.2017 காலை 10 மணிக்கு ரயிலடியில் மக்கள் அதிகார தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில் தோழர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதை முன்கூட்டியே அறிந்திருந்த காவல்துறை தோழர்களை கைதுசெய்ய தயாராக காத்திருந்தது. குறித்த நேரத்தில் தோழர்கள் திரண்டு மோடி அரசை கண்டித்து
முழக்கமிட்டனர். சிறிது நேரம்கூட தோழர்களை முழக்கமிட அனுமதிக்காமல்
வெறித்தனமாக தரதரவென்று இழுத்து சென்று வண்டியில் ஏற்றிச்சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றிம் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.
_____
புதுச்சேரியில் : மாட்டுக்கறி திருவிழா – ஆர்ப்பாட்டம்
மாடுவிற்பதற்கு தடை, மாட்டுகறிக்கு தடை என தொடர்ந்து இந்திய விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் கொடுமைபடுத்தி வருகின்றது பாஜக அரசு. காவிரியில் தண்ணீர் மறுத்து டெல்டா மாவட்டத்தில் விவாசாயிகளை கொன்ற காவி கும்பல் பாஜக தேசிய ஒற்றுமைக்கும் மதசார்பின்மைக்கும் எதிராக நடக்கின்றது.
பாசிச மோடி அரசு – ஆர்.எஸ்.எஸ். மாட்டுக்கறிக்கு தடைபோட்ட மத்திய அரசை கண்டித்து சென்னை ஐ.ஐ.டி -யில் மாணவர்கள் மாட்டுக்கறி உணவு திருவிழா நடத்தினார்கள். அதற்கு எதிராக மதவெறி கொண்ட பாசிச ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த காவிக்கும்பல் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர்களை அடித்து, சூரஜ் என்ற மாணவரின் கண்ணை படுகாயமாக்கியுள்ளனர். இந்த காட்டு மிராண்டி செயலை கண்டித்து புதுச்சேரியில் திருவாண்டார்கோவில் பகுதியில் ஜீன் – 1 அன்று மாலை: 5.00 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மக்களை திரட்டி மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. முதலில் பறை முழக்கத்துடன் தொடங்கப்பட்டு, பிறகு விண்ணதிரும் முழக்கங்களுடன் வந்திருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி சமைத்து வழங்கப்பட்டது. அனைவரும் கேட்டு வாங்கி விரும்பி உண்டனர். அங்கு கூடி இருந்த மக்களும் தொழிலாளர்களும் விருப்பமுடன் வாங்கி உண்டார்கள். இதில் ஒரு சிறப்பு என்ன என்றால் கறியை வறுத்து கொடுத்த குண்டானில் அதன் சாந்துகூட மிஞ்சவில்லை. அந்த அளவிற்கு மாட்டுக்கறி அற்புதமாக இருந்ததாக மக்கள் சொன்னார்கள். எனவே இப்போராட்டம் உழைக்கும் மக்களுக்கான உண்மையான உணவுத் திருவிழாவாகவே இருந்தது. இத்திருவிழாவை நாடு முழுதும் தினமும் நடத்த வேண்டும் என்று அப்பகுதியில் வாழும் தொழிலாளி ஒருவர் சொன்னார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.
_____
மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! – தருமபுரி மாட்டுக்கறி திருவிழா !
சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஆதரவாக பென்னாகரத்தில் மாட்டுக்கறி திருவிழா. நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவந்த ஆர்எஸ்எஸ் -மோடி கும்பல் பார்ப்பன கலாச்சாரத்தை நாடு முழுவதும் திணித்து வருகிறது. இதற்கு எதிராக சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் சார்பில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது.
அதில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை நடத்திய பிஜேபி மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்ந்த மணீஸ் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஆதரவாகவும் புமாஇமு, மக்கள் அதிகாரம் சார்பாக மாட்டுக்கறி திருவிழா ஏற்பாடு செய்து கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி, பென்னாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு 02.06.2017 அன்று மாலை 3 மணி அளவில் இத்திருவிழாவை நடத்தினர்.
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்ந்த தோழர் சத்தியநாதன் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்த உடன் நீட்தேர்வு, சமஸ்கிருத திணிப்பு, ஐல்லிக்கட்டுக்கு தடை, மாட்டிறைச்சிக்கு தடை ,என நீதிமன்றமும் மோடியும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகத்தை இழைத்து வருகிறார்கள். இன்றைக்கு மாடு வெட்ட தடை, நாளைக்கு கோழி, மீனுக்கும் தடை வரும். எனவே வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். அதனை முன்கூட்டிதயே தடுக்க மக்கள் அணைவருக்கும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சார்ந்த வழக்குரைஞர் ஜானகிராமன் பேசுகையில், சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் மீதான தாக்குதலால் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக சித்தரிக்கபடுகிறது. இந்நிலையில் இந்திய சுற்று சூழல் அமைச்சகம் பசுமாடுகளை விற்க வேண்டுமென்றால் தாசில்தார் முதல் முனிசீப் வரை அனுமதி வாங்கிதான் விற்கவேண்டும் என்று கூறியுள்ளது.
இதனை எதிர்த்து போராட கூடியவர்களை மாடு வியாபாரிகளை, முஸ்லீம்களை கடுமையாக தாக்கி வருகின்றனர். மதவெறி பாசிச தாக்குதலுக்கான சட்டத்தை ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதுதான் ஐ.ஐ.டி மாணவர் சூரஜுக்கு ஏற்பட்டது. எனவே மாட்டிறைச்சி சாப்பிடும் தலித்துக்கள், முஸ்லீம்களுக்குகான பிரச்சினை மட்டும் அல்ல , காவிரியில் தண்ணீரை தடுத்து இன்றைக்கு 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள், விவசாயம் பொய்த்து போய் விவசாய நிலத்தை விட்டு பிரிந்து நகரங்களுக்கு வேலையை தேடி அலையும் சூழ்நிலையில்தான் பசுமாட்டை பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் கலவரத்தை நடத்தி வருகிறார்கள்.
இப்படி விவசாயிகளுக்கு எதிராக, விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கும் பார்ப்பன பாசிச மோடிக்கும்பலுக்கு எதிராக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதின் வாயிலாகத்தான் பிரச்சினையை தீர்க்கமுடியும்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில், மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பதுதான் பிஜேபி-யின் நிலைபாடு, கொள்கையாக இருக்கிறது. இதன்மூலம் மக்களை மோதவிட்டு இரத்தம் குடிக்கும் கொலைவெறி கட்சிதான் பிஜேபி. 2000 முஸ்லீம்களை கொலை செய்து கொலைகார கட்சிதான் பிஜேபி. இக்கட்சியின் பின்னால் பார்ப்பன கலாச்சாரத்தை நிறுவுவது அதற்கு ஏற்றவாறு சட்டம் இயற்றுவது என்று செய்து வருகிறார்கள். மாட்டு மூத்திரத்தை, குடிக்கும் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால் மாட்டு தொடையை சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என்று எச்சரித்தார்.
ஜெயா ஆட்சியில் இருக்கும் போது கிடா வெட்டும் தடைச்சட்டம் கொண்டுவந்த போது ஆடு, கோழியை கழுத்திலே போட்டு போராட்டம் நடத்திய ம.க.இ.க அந்த சட்டத்தை துரத்தி அடித்தது. எனவே காவிரியில் தண்ணீரை தடுத்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கொலை செய்தவர்கள் மாட்டை பாதுகாக்கிறார்களாம் . இப்படிப்பட்ட துரோகிகளை ,கொலைகாரர்களை செருப்பால் அடித்து தமிழகத்தில் இருந்து ஓட,ஓட விரட்டியடிக்க வேண்டும். அதற்கு அணைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இத்திருவிழாவில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் பறிமாறப்பட்டது. அப்போது கடைவீதியில் நின்று கவனித்த பொது மக்கள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று அச்சத்தோடும், ஆர்வத்தோடும் நின்று கவனித்தனர். நான்கு சுவருக்குள் சாப்பிட்டவர்களை தெருவுக்கு இழுத்து விட்டிருக்கிறான் என்று அவர்களும் மோடி திட்டுவதை பார்க்கமுடிந்தது.
மாட்டுக்கறி சாப்பிடுவது என்னுடைய உரிமை, அதில் கை வைப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது. அரசாங்கம் நடத்த வந்தால் அதை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று பலரும் பலவாறு மோடி கும்பலை திட்டி தீர்த்தனர். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் வௌக்கமாறு, செருப்போடு தெருவுக்கு வந்து இச்சட்டத்தை கூட்டி குப்பையில் வீசுவோம் என்று ஆவேசமாக பெண்கள் வெளிப்படுத்தியது நாங்கள் பெரியாரின் வாரிசுகள் ஆகவே பார்ப்பன விச பாம்புகளை தமிழமகத்திலிருந்து அடித்து விரட்டுவோம் என்பதை பறைச்சாற்றும் விதமாக அமைந்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
புரட்சிகர- மாணவர் இளைஞர் முன்னணி
தொடர்புக்கு; 81485 73417.