“விவசாயியை வாழவிடு” என சீர்காழியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என நான்காவது முறையாக தமிழக காவல் துறை அனுமதி மறுத்திருக்கிறது.
விவசாயியை வாழவிடு! விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு!! என்ற உண்மையை எச்சரிக்கை முழக்கமாக தமிழகம் முழுவதும் சுவரெழுத்து, பிரசுரம், பேருந்து பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் என மக்கள் அதிகரம் சார்பில் பிரச்சாரம் செய்து வருகிறோம். தஞ்சையில் ஆகஸ்ட் 5, 2017 அன்று மாநாடு – கருத்தரங்கம் நடத்த உள்ளோம்.
சீர்காழியில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த கடந்த மே மாதம் மாதம் 10 , 22, 28 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கடைசி நேரத்தில் போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அனுமதி மறுத்தார்கள். பிற அமைப்புகள் கூட்டம் நடத்துகிறார்கள் எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை? என்றால் “சார் மேலிடம் சொல்கிறது நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்கிறது சீர்காழி காவல் துறை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பேச்சுரிமையை மறுக்கிறார்கள் நியாயமா என முறையிட்டோம். கூட்டத் தேதி முடிந்து விட்டது. மீண்டும் போலீசாரிடம் மனுதாக்கல் செய்யுங்கள் என நீதிமன்றம் திருப்பி அனுப்புகிறது.
தற்போது 17-6-2017 பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகேட்டு மீண்டும் மனு கொடுத்தோம். ஆனால் இம்முறை கடைசி நேரத்தில் மறுக்காமல் ஒருவாரம் முன்பாக போலீசு மறுத்திருக்கிறது. விவசாயியை வாழ விடு என மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் போட்டு பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என சொல்கிறது போலீசு. மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம்.
மக்களுக்கு சட்டப்படியான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால், மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக போவதை தவிர வேறு வழியில்லை என்பது அரசுக்கு தெரியும். சட்டத்தின் ஆட்சியை, ஜனநாயகத்தை உறுதி செய்வது ஆள்பவர்களின் கடமை. ஆனால் அதில் மீண்டும் மீண்டும் தோற்று கொண்டிருக்கிறார்கள் என்பது தொடரும் அரசியல் நிகழ்வுகள் உறுதி செய்கிறது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.